Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கடிதம் மூலம் தனது அடுத்த காய்நகர்த்தலை உணர்த்தும் கருணாநிதி: காங்கிரசின் பலவீனத் தருணத்தில் வஞ்சம் தீர்க்கத் தயாராகிறாரா?

Featured Replies

அரசியலில் புத்திசாலிகள் காத்திருக்கும் அந்தத் தருணம் கருணாநிதிக்குக் கிடைக்கும் போல் தெரிகிறது. வஞ்சம் தீர்க்க வேண்டிய எதிரியாகக் கருதும் காங்கிரசுக்கும் வலிக்கும் இடத்தில் அடி கொடுக்கவும் தனது அரசியல் மீட்சிக்காகவும் அவர் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதில் கொள்கை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகளை, தனது கட்சியைக் கைவிட்ட” காங்கிரசின் காரியம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என அவர்கள் உணர்த்த நினைக்கிறார்கள். அதே சமயத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2014) காங்கிரஸ் சரிவைச் சந்திக்கும் சமயத்தில் அவர்களுடன் இருக்கவும் விரும்பவில்லை. வேறு ஏதாவது ஒரு வெற்றிக் கூட்டணியின் பக்கத்தில் அப்போது நிற்க வேண்டும் என்பதற்காக இப்போதிருந்தே காங்கிரசிடமிருந்து மெல்ல விலகத் தொடங்கியிருக்கிறார்கள்.

jayalalitha_0.jpg

உத்தரப் பிரதேசத்தில் பெரு வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் வெற்றி பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வெற்றி, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் கருணாநிதி. அப்படியானால் தி.மு.க. தலித் விரோதக் கட்சி என அவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சமூக நீதியை முன்னிறுத்தவில்லை என்று பொய் சொல்கிறாரா? தி.மு.க. என்றைக்குமே தலித் விரோதக் கட்சியாகத்தான் இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை (தி.மு.க. மட்டுமின்றி, அ.தி.மு.க. உள்ளிட்ட எல்லா திராவிடக் கட்சிகளும்). கீழ வெண்மணி முதல் தாமிரபரணி படுகொலை வரை அவர்கள் ஆட்சியில் நடந்த, மறைமுக ஆசீர்வாதம் வழங்கப்பட்ட தலித் அநீதிகள் ஏராளம். தேர்தல் அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே சமூக நீதியைத் தூக்கி எறிந்துவிட்டு ஜெயிப்பதற்கான குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள்: புதிய சாதி ஒடுக்குமுறை சக்திகளான பிற்படுத்தப்பட்டோரையும் பழைய மேல்சாதி ஒடுக்குமுறையாளர்களையும் வாக்கு வங்கியாக்குவது. ஆடு, புலி, புல்லுக் கட்டு கதையாக தலித்துகளை உள்ளே வைத்தால் பிற ஓட்டுகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் உத்தப்புரம் பிரச்சினை வரை அவர்கள் தலித் விரோத நிலைபாட்டினையே எடுத்தார்கள். மேலோட்டமான தலித் ஆதரவு பேச்சுக்களும் ஆ.இராசா போன்ற தலித் தலைவர்களை வளர்த்தற்கும் நடுவில் ஒளிந்திருக்கிறது இந்தப் பூனைக் குட்டி. அதனால் தலித் சக்தியை (மாயாவதில்) பிற்படுத்தப்பட்ட சக்திகள் (சமாஜ்வாதியின் யாதவர்கள்) வீழ்த்தியதில் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவிப்பதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அவரின் ஆழமான நோக்கம் தலித் சக்திகளை மட்டம் தட்டுவதல்ல, காங்கிரசின் மூக்கை அறுப்பது. சமாஜ்வாதி கட்சியின் புதிய வாரிசான அகிலேஷ் யாதவைப் புகழ்வதன் வழியாக அவர் ராகுல் காந்தியை திட்டுகிறார். தேசம் முழுவதும் காங்கிரசின் சரிவு மாநிலக் கட்சிகளின் ஆதரவுத் தளம் பெருகி வரும் சமயத்தில் வரும் தேர்தலில் மூன்றாவது குறித்த நம்பிக்கைகள் உயிர் பெறும் வாய்ப்புகள் உள்ளன என கருணாநிதி நம்புகிறார். அப்படி ஒன்று உருவானால்தான் அவர் நினைக்கும் வியூகங்களைச் செயல்படுத்த முடியும் என்பது தமிழகத்திற்கே உரிய அரசியல் நெருக்கடி.

மாநிலங்களில் என்னதான் காங்கிரஸ் தோற்றாலும் நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது காங்கிரஸ் கூடுதல் பலம் பெற்றுவிடும். ஏனெனில் மாநிலத் தேர்தல்களும் மத்திய அரசுக்கான தேர்தல்களும் முற்றிலும் வேறுபட்டவை. மத்தியை ஆள காங்கிரஸ், மாநிலங்களை ஆள அந்தந்த மாநிலங்களில் இருக்கும் சக்திமிக்க கட்சிகள் என்ற ஃபார்முலாவையே பல தசாப்தங்களாக இந்தியா பின்பற்றி வருவதை துல்லியமாகக் சுட்டிக் காட்டுகிறார் மிகவும் மதிக்கப்படும் பத்திரிகை ஆசிரியரான எம்.ஜே.அக்பர். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அடையாளம் கொண்ட ஏதாவது ஒரு சக்தியுடன் கூட்டணியில் இல்லாதது தற்கொலைக்குச் சமம். இது கருணாநிதிக்குத் தெரியாதது அல்ல. ஆனால் இப்போதைக்கு காங்கிரசுக்கு மாற்றாக இருப்பது பா.ஜ.க. மட்டுமே. ஆனால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் சொற்பம் 2 சதவீதம் வாக்குகள் கூடுதலாக கிடைக்கும். ஆனால் சுமார் 20 சதவீதம் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும். அந்த சிறுபான்மையினரின் தீர்மானிக்கும் வாக்குகள் பா.ஜ.க. கூட்டணிக்கு நேர் முகாமுக்குச் சென்றுவிடும் என்பதால்தான் வலதுசாரி பிரியரான ஜெயலலிதாகூட பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில்லை; ஒருவேளை பா.ஜ.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால் பிரபல அரசியல் புரோக்கர்களாக இருக்கும் ‘அவாள்’களைப் பிடித்து பிறகு சேர்ந்துகொள்ளலாம் என அவர் திண்ணமாக நம்புகிறார். அதனால், கருணாநிதி காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவதும் புகட்டாததும் மூன்றாவது அணி அமைவதைப் பொருத்தது. இப்போதுள்ள சூழலைப் பார்த்தால் 1990களின் பலவீனமான முயற்சியைவிட இப்போது ஒரு பலமான மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு தெரிகிறது.

m-karunanidhi_35.jpg

தி.மு.க. மட்டுமின்றி சமாஜ்வாதி, திருணாமூல் காங்கிரஸ் போன்ற ஏராளமான மாநிலக் கட்சிகள் சிறுபான்மை வாக்குகளை இழக்க வேண்டும் என்ற பயத்தினாலேயே பா.ஜ.க. பக்கம் போகத் தயங்குகின்றன. ஆனால் ஊழல், செயல்பாடின்மை, விலைவாசி போன்ற காரணிகளால் காங்கிரசுடன் இருப்பது வெற்றியைப் பாதிக்கும் என்றும் நினைக்கிறார்கள். அதனால் இரண்டிற்கும் மாற்றாக ஒரு அணியை அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என அவர்கள் யோசிக்க நியாயம் இருக்கிறது. ஆனால் அதுவே ஆட்சி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, காங்கிரசுக்கு சாதகமாகத் திரும்பும் என்பதையும் அவர்கள் கணக்கில் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். காங்கிரசின் பெயர் இன்னும் எவ்வளவு கெடப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் மூன்றாவது அணி என்ற கானல் நீரின் தேடலும் அமையப் போகிறது.

கருணாநிதி அளவுக்கு வியூகம் வகுக்கத் தெரியாது என்றாலும் ஜெயலலிதாவும் இந்த அரசியல் கணக்குகளை அறிந்தே இருக்கிறார். அதனால்தான் மாநிலத் தேர்தல்களுக்கு முன்பு காங்கிரஸ் கெஞ்சி அழைத்துக்கொண்டிருந்தவர் இப்போது காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் வாய்ப்புக்களைத் தவற விடுவதில்லை. பா.ஜ.க.வுடன் நெருங்கினாலும் ஒரு ‘பாதுகாப்பான’ இடைவெளியை ஜெயலலிதா கடைபிடிக்கிறார். கருணாநிதியுடன் அவருக்கு அரசியல் சாணக்கியத்தனத்தில் உள்ள இடைவெளியைப் பூணூல் ஆலோசகர்கள் இட்டு நிரப்பிவிடுகிறார்கள் என்பதால் அ.தி.மு.க.வும் திட்டமிடலில் சோடை போகாது என்றே தோன்றுகிறது. எனினும் அரசியல் போக்குகளை ஆராய்பவர்கள் கருணாநிதியின் ஒவ்வொரு அறிக்கையிலும் கடிதத்திலும் திருமண உரைகளிலும் சுவாரசியமான சமிக்ஞைகளைக் கண்டுபிடிக்கலாம்.

தனது காய் நகர்த்தல்களைப் பொதுத் தளத்தில் போட்டு உடைப்பது கருணாநிதியின் துணிச்சலைக் காட்டுகிறது. அதையே தனது சகாவுக்கான எச்சரிக்கையாக்கி வழிக்குக் கொண்டு வர பயன்படுத்துவதன் மூலம் தனது புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறார். மக்கள் நலத்திற்கும் அவர் அடிக்கடி பிரயோகிக்கும் சமூக நீதி என்ற தத்துவத்திற்கும் அவரின் இந்த சாதுர்யங்கள் அதிகம் பயன்படவில்லை என்ற ஆதங்கத்திற்கு நடுவில், 88 வயதில் கருணாநிதியின் காலத்திற்குப் பிறகு ஒரு சிறிய அறிக்கையை வைத்து நடக்கும் இவ்வளவு நுண்ணிய அரசியல் அலசல்களுக்குப் பெரிய வேலை இருக்காது என்பது ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கப் போகிறது.

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5369

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.