Jump to content

போதி மர நிழல்..


Recommended Posts

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்:

1) குருவே கடவுள் என்றால் என்ன? அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ?

2) குருவே மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

3) குருவே ஆசையை எப்படி துறப்பது?

4) குருவே மதம் என்றால் என்ன?

5) குருவே மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

7) குருவே பெண்களை பற்றி நீங்கள் நினைப்பது?

8) திருமணம் என்றால் என்ன? அதற்கு ஏன் குருவே தாலி?

9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து?

10) குருவே நான் என்றால் என்ன?

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் விரைவில்..

பி/கு: இந்த கருத்தாடலிற்கு பதில் கருத்து எழுதுவதை தயவுசெய்து தவிர்க்கவும். இந்த கருத்தாடல் பற்றிய உங்கள் எண்ணங்களை தனிமடலில் தெரிவிக்கவும். இது நகைச்சுவைக்காக ஆரம்பிக்கப்படும் தலைப்பு அல்ல. குரு - சீடன் உரையாடலாக கேள்வி - பதில் வடிவத்தில் இங்கு வாழ்வின் தேடல்கள்.. பயணங்கள் பற்றி ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அலசப்படும்.. எனது வாழ்வியல் அனுபவங்கள், ஆன்மீக சிந்தனை ஓட்டங்களின் அடிப்படையில் யமுனாவினால் கேட்கப்படும் கேள்விகளிற்கு இப்போது நாம் வாழும் நவீன யுகத்திற்கு ஏற்றவகையில் - நடைமுறை அனுபவங்களுடன் ஒத்துவரக்கூடிய வகையில் என்னால் பதில்கள் கொடுக்கப்படும். நீங்கள் நகைச்சுவையாக இந்த உரையாடல் பற்றி ஏதாவது கூறவிரும்பினால் அதை இங்கே போய் எழுதவும்! உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

1) குருவே கடவுள் என்றால் என்ன?

அப்பனே, உன்னைக் கடந்து உன் உள்ளே செல், அதாவது உன்னையே நீ அறிவாய் எனும் கருத்திலேயே கடவுள் (கட + உள்) என்ற பதம் வந்ததாக அறிஞர்கள் சொல்வார்கள். பொதுப்படையில் God, இறைவன், ஆண்டவன் என்று கூறப்படும் சொற்களின் பதம் எம்மை ஆளுகின்ற சக்தியை குறிக்கின்றது. அப்பனே உனக்கு தெரியும், இந்த உலகத்தில் சக்தியின் துணையின்றி எதுவும் அசையாது, எதுவும் நடைபெறாது என்பது. சிற்றறிவு கொண்ட எம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த உலகத்தை இயக்குகின்ற, இந்த உலகத்தில் வியாபித்துள்ள, இந்த உலகத்தின் அடிநாதமாய் அமைந்துள்ள தோற்றம், முடிவு அற்ற சக்தியை கடவுள் என்று கூறலாம்.

அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ?

நிச்சயம் அப்படி ஒருவர் இருக்கின்றார். ஆனால், அது நீ எதிர்பார்க்கும் விதத்தில் அல்ல என்பதை விரைவில் தெரிந்துகொள்வாய். கடவுள் என்பது வெறும் கற்பனை அல்ல, அது நிஜம்! இதை ஞானக்கண் கொண்டு பார்க்கும் போது நீ உணர்ந்துகொள்வாய். ஆனால், ஊனக்கண்களிற்கு எல்லாம் கடவுள் என்பது வெறும் கற்பனை பொருளாகவும், கனவாகவுமே தென்படும்.

2) குருவே மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

கடவுள் அன்பு மயமானவன் என பல மதங்கள் கூறுகின்றன. நீ பிற உயிர்களில் உண்மையான அன்பு செலுத்தும்போது உனது மனம் தூய்மை பெறுகின்றது. தூய்மையான கலங்கமற்ற மனம் கொண்ட நீ ஒரு குழந்தை ஆகின்றாய். அதாவது கடவுளை உணர்வதின் முதற்படியை நீ பூர்த்தி செய்கின்றாய். இன்னொரு வகையில் சொல்வதானால், குழந்தையின் உள்ளத்தை கொண்டவனால் மட்டுமே கடவுளை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த வகையில் பார்த்தால், நீ ஒரு மனிதனை கடவுளாக கும்பிடும்போது உன்னில் குழந்தையின் உள்ளம் தோன்றுமாக இருந்தால், குழந்தையின் உள்ளம் உன்னுள் தோன்றுவதை இந்த செயல் ஊக்குவிக்குமாய் இருந்தால் அவ்வாறு நீ செய்வதில் தவறில்லை. ஆனால், இவ்வாறு நீ ஒருவரில் மாத்திரம் உண்மையான அன்பு வைத்து அவரை மட்டும் கும்பிட்டுக்கொண்டு மற்றையவர்களுடன் பக்கச்சார்பாக நடந்துகொண்டால் அந்த அன்பு போலியானது. அது கடவுளை நீ உணர்வதற்குரிய படிமுறை வளர்ச்சிக்கு உதவாது.

3) குருவே ஆசையை எப்படி துறப்பது?

அப்பனே, ஆசையை நீ ஏன் துறக்க நினைக்கின்றாய்? உன் குருநாதன்கூட பல்வேறு ஆசைகளை உள்ளத்தில் சுமக்கின்றேன். எனவே, ஆசையை துறக்கின்ற விபரீதமான வேலைகளில் நீ இறங்காதே! ஆசைகள் உனது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உன்னை ஒரு சுறுசுறுப்பு மிக்க மனிதனாக வைத்து இருக்கின்றது. ஆசையை துறந்த மனிதன் செத்த பிணத்திற்கு சமம் என்பதை நீ நினைவில் கொள்வாய். ஆசையை துறக்க நினைப்பது துறவிகளிற்கும் ஆகாது!

4) குருவே மதம் என்றால் என்ன?

மனிதன் தனது வாழ்வை இலகுவான முறையில் ஒழுங்கமைத்து குழப்பமற்ற முறையில் வாழ்வதற்கு பல்வேறு வழி வகைகளை உருவாக்கினான். இவற்றில் ஒன்றே மதமாகும். அடிப்படையில் மதம் என்பது உலகத்தை ஆளும் சக்தியை வழிபடும் முறையாகவும், அந்த சக்தியை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி தமது வாழ்வினை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதற்கு மனிதனுக்கு உதவுகின்ற கருவியாகவும் விளங்குகின்றது.

5) குருவே மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

அப்பனே, முக்கியமான ஒரு கேள்வியை கேட்டாய். நான் சொல்பவற்றை கவனமாகக் கேள். உனக்கு எம்.எஸ்.என் இல் அரட்டை அடிப்பதன் மூலம்தான் மனம் அமைதி அடையும் என்றால் முதலில் அதை செய்! உனக்கு ஒரு சினிமா படம் பார்த்தால் தான் உன் மனம் அமைதி அடையும் என்றால் முதலில் அதை செய்! உனக்கு யாழில் ஒருநாளைக்கு 100 கருத்துக்களை எழுதினால்தான் உனது மனம் அமைதி அடையும் என்றால் முதலில் அதை செய்! அதாவது உனது மனம் கேட்கின்ற நியாயபூர்வமான தேவைகளை முதலில் நீ பூர்த்தி செய்து கொள்! இதைவிட நீ தியானம் எனப்படுகின்ற செய்முறையை செய்வதன் மூலம் மனதில் அமைதியை பெற முடியும்.

ஆனால், மனம் அமைதியாக இருக்க வேண்டும் என உனக்குள் வரிந்துகட்டிக்கொண்டு உனது நியாபூர்வமான ஆசைகளையும், உணர்வுகளையும் அடக்கியபடி, உன்னையே நீ துன்புறுத்தியவாறு தியானம் செய்கின்ற அல்லது அடக்கி ஆளுகின்ற முட்டாள் தனமான வேலைகளில் இறங்காதே! உன்னையே நீ அடக்க வெளிக்கிடும்போது நீ உனது இயல்பான மன ஒழுங்கமைப்பை குழப்புகின்றாய் என்பதை அறிந்துகொள். இயல்பான மன ஒழுங்கமைப்பு குழம்பினால் இறுதியில் அது உன்னை பைத்தியக்காரனாக்கி விடும். மன அமைதிக்கு நீ நிச்சயம் செய்யவேண்டியது உன்னை நீ வெறுப்பது அல்ல என்பதை நினைவில் கொள்.

தியானத்தை பற்றி உனது குருநாதன் சமயம் வரும்போது விளக்கமளிப்பான்.

6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உனது குருநாதன் உனக்கு மட்டுமே அறிவுரை கூறவிரும்புகின்றேன். அப்பனே, நீ பழைய சித்தாந்த கோட்பாடுகளை தாராளமாக பின்பற்றலாம். இதேபோல் புதிய சித்தாந்த கோட்பாடுகளையும் தாராளமாக பின்பற்றலாம். எதை பின்பற்றினாலும்.. ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? போன்ற கேள்விகளை உன்னிடம் முதலில் கேட்டுவிடு. கும்பலில் இருந்து கோவிந்தா போடுவதன் மூலம் நீ உன்னை குழப்பிக்கொள்வது தவிர வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை.

எதிலும், மெய்ப்பொருளை காண முயற்சி செய்! மற்றவன் பின்பற்றுகின்றான் அல்லது உனது அப்பன் பின்பற்றுகின்றான் என்பதற்காக ஒரு கோட்பாட்டை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதே! தற்கால நவீன உலகத்திற்கும், அதன் சட்டதிட்டங்களிற்கும் பொருத்தமற்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பழைய சிந்தனைகளை, பழைய கோட்பாடுகளை பின்பற்றுவது உன்னை சிறைச்சாலையில் கம்பி எண்ணக்கூட வைத்துவிடலாம். எனவே, கவனமாக இரு!

7) குருவே பெண்களை பற்றி நீங்கள் நினைப்பது?

தாயை நினைக்கின்றேன். தமக்கையை நினைக்கின்றேன். தங்கையை நினைக்கின்றேன். காதலியை நினைக்கின்றேன். ஏன் கடவுளைக் கூட நினைக்கின்றேன். நான் இந்த உலகில் பிறந்ததும் எனக்கு பால் ஊட்டி எனது உடலிற்கு தேவையான சக்தியை முதலில் தாய் தந்தாள். எனது நாளாந்த வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதற்கு தேவையான உடல் + உள சக்தியை - Energy ஐ தாய், தமக்கை, தங்கை, காதலி, கடவுள் என பல ரூபங்களில் பெண்கள் எனக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

8) திருமணம் என்றால் என்ன?

இருமனம் இணைவதை திருமணம் என சிலர் சொல்வார்கள். அதாவது ஒரே மாதிரியான இரண்டு மனங்களே இணைய முடியும். வெவ்வேறு சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள், விறுப்பு, வெறுப்புக்கள், ரசனை மற்றும் சுவை உள்ள இரண்டு மனங்களால் பிரிய முடியுமே தவிர இணைய முடியாது. ஆனால், ஒரே மாதிரியான மனங்கள் திருமணத்தில் இணையும் போது அந்த மனதை கொண்ட ஆணும், பெண்னும் ஆண்டாண்டு காலமாக ஒன்றாகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழமுடிகின்றது.

இதனால் தான் உனது குருநாதன் காதல் திருமணத்திற்கு ஓ போடுகின்றான். ஏனென்றால், பேசி வைத்து செய்யப்படும் திருமணத்தில் (proposed marriage) இரண்டு ஒரே மாதிரியான மனங்கள் இணைக்கப்படுகின்றன எனும் கருத்தில் உனது குருநாதனுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அப்பனே நீ காதல் செய்து உனது மனதுடன் பொருந்தக்கூடிய ஒரு மனதை உடைய பெண்ணை கண்டுபிடித்து அவளுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஒருமனங்கொண்ட தம்பதியாய் வாழ்வாய்! இதற்கு உனது குருநாதனின் ஆசீர்வாதங்கள்!

அதற்கு ஏன் குருவே தாலி?

திருமணத்திற்கு தாலி தேவையில்லை. மேலும், தாலியை நீ உன் வருங்கால மனைவியின் கழுத்தில் கட்டுவதாலோ அல்லது தாலியை உனது வருங்கால பெண்டாட்டி கழுத்தில் சுமந்து செல்வதாலோ உனது வாழ்வு செழித்து விடும் என்றோ அல்லது நீ சந்தோசமாகவும், நிம்மதியாகவும் நீண்டகாலம் வாழ்வாய் என்றோ எதுவித உத்தரவாதமும் இல்லை. தாலி என்பது ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை மட்டும் அறிந்துகொள். ஆனால், எவரது பண்பாட்டு அடையாளம் என்பது உனக்கு தேவையில்லாத ஆராய்ச்சி.

உனக்கு விருப்பமானால், அல்லது உனது பெற்றோருக்கு விருப்பமாக இருந்தால் - அவர்களது ஆசையை நீ பூர்த்தி செய்ய விரும்பினால் நீ உனது வருங்கால மனைவிக்கு தாலியை கட்டி விடலாம். தெரிவு உன்னுடையது. எனினும், உனது குருநாதனை பொருத்தவரையில் அவனது மனைவி தாலியை அணிய வேண்டுமா அல்லது இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கும் முழுச் சுதந்திரத்தை அவனது எதிர்கால மனைவியாக வரக்கூடியவளின் கையிலேயே குருநாதன் கொடுத்துள்ளான். அவள் தாலியை விரும்பினால் மட்டுமே உன் குருநாதன் திருமணத்தின் போது தாலியை கட்டி விடுவான்.

9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து?

தூங்குவது போலும் சாக்காடு

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு

என வள்ளுவன் கூறியுள்ளான். அப்பனே, பிறப்பின் முன் நாம் எங்கே இருந்தோம், இறந்த பின் நாம் எங்கே போகப்போகின்றோம் என்றெல்லாம் தீவிர யோசனைகள் செய்து உனது வாழ்வின் அழகிய வாழ்நாட்களை வீண்செய்து விடாதே! இந்த நிமிடம் - இந்த செக்கன் நீ மூச்சு விடுகின்றாய்! இப்போது நீ உயிருடன் இருக்கின்றாய்! இதுதான் நிஜம்! தேவையற்ற தத்துவ ஆராய்ச்சிகள் உனது மனதின் இயல்பான அகச்சமநிலையை குழப்பி உன்னை ஒரு பைத்தியக்காரனாக்குவது தவிர வேறு ஒன்றினையும் உனக்கு தரப்போவதில்லை.

10) குருவே நான் என்றால் என்ன?

"நான் என்றால் அகங்காரம்! நான் என்ற வார்த்தயை உச்சரிக்கக்கூடாது!" என்றெல்லாம் சிலர் பேசிக்கொள்வார்கள். அப்பனே, நீ தான் இந்த உலகத்தின் ராஜா என்பதை முதலில் அறிந்துகொள். உன்னை பொருத்தவரை, உனது வாழ்வினை பொறுத்தளவில் என்று உனது உடல் பிணமாகின்றதோ - அன்றைய தினத்தில் இருந்து நீ இந்த பூமியில் இல்லாத ஒரு பொருள்! ஆனால், உன்னை, உனது வாழ்வை பொறுத்தளவில் உனது உடல் பிணமான பின் பூமி உனக்கு வேண்டாத ஒரு பொருள்!

நீ இல்லாத பூமியில் பூகம்பம் வந்தால் என்ன? சுனாமி அடித்தால் என்ன? இவை எதுவும் நீ இல்லாத உலகில் உன்னை பாதிக்கபோவதில்லை. எனவே, மீண்டும் இந்த உலகின் ராஜா நீ என்பதை அறிந்துகொள்.

இந்த நான் என்ற சொல் - பதம் உன்னை குறிக்கின்றது. இந்த உலகின் முதல்வன் நீ என்பதை குறிக்கின்றது. நீ ஆரம்பத்தில் கேட்டாயே ஒரு கேள்வி - குருவே கடவுள் என்றால் என்ன? என்று!.. இதற்குரிய விடை இந்த நான் உள் உள்ளது. பல்வேறு படிமுறை வளர்ச்சிகளின் பின் நான் என்பது யார் என்பதை நீ உணர்ந்து கொள்வாய்!

அப்பனே, உன்னை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ் ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்:

வணக்கம் குருவே!

1) குரு என்றால் என்ன? உலகில் எல்லாவற்றுக்கும் குரு அவசியமா? யாரை நாம் குருவாக கொள்ள முடியும்?

2) கோயில்களில் பூசை செய்வதற்கு ஏன் குருவே பூசகர் தேவை? நாம் நேரடியாக கோயிலில் கடவுளிற்கு பூசை செய்தால் என்ன? அத்தோடு குருவே கடவுளை கும்பிடுவதற்கு மந்திரங்கள் தேவையா குருவே?

3) குருவே நம் மக்கள் சாஸ்திரங்களில் மூழ்கிப்போய் தற்போது பிள்ளை பிரசவத்தை கூட தங்களிற்கு விருப்பமான நல்ல நாளில் சிசரியன் மூலம் பெறுகிறார்கள். இதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. குருவே இதை பற்றிய உங்கள் கருத்து என்ன? இப்படி செய்வது நல்லதா? அல்லது இது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல் ஆகிவிடுமா?

4) குருவே மனிதர்களை கடவுளாக கும்பிட்டு அதன் பெயரில் புதிய மதம் உருவாக்கபட்டு வருகிறது அதை பற்றி நீங்க என்ன சொல்கின்றீர்கள்? அவர்களின் தத்துவங்கள் போதனைகள் ஒன்றும் ஒரு சதத்திற்கு பயனற்று கிடந்தாலும் அவர்களை தூக்கி பிடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது குருவே?

5) குருவே உலகில் ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை என்று அவதிப்படுகின்றார்கள். ஏன் இப்படி எல்லாம் குருவே?

6) குருவே மறுபிறப்பில் தங்களிற்கு நம்மிக்கை உண்டா? அதைப்பற்றிய உங்கள் சிந்தனை என்ன?

7) குருவே யாகம் என்றால் என்ன? யாகம் செய்து மழை வருகின்றது என்று நம்மவர்கள் சொல்லுகின்றார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குருவே?

8) குருவே சமயங்களை நாங்கள் மற்றவர்களிடம் திணிக்கவேண்டுமா? அல்லது அதுவாக வளர்வது நல்லாதா குருவே?

9) குருவே இந்த உலகத்தையும் மனிதர்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இவற்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது குருவே?

10) "உள்ளம் தான் கோயில்" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை..

Link to comment
Share on other sites

1) குரு என்றால் என்ன?

குரு என்றால் ஆசிரியர் அல்லது வழிகாட்டி என கூறிக்கொள்ளலாம்.

உலகில் எல்லாவற்றுக்கும் குரு அவசியமா?

அது உன்னைப் பொறுத்தது. நீ எப்போது உனக்கு ஒரு விடயத்தில் வழிகாட்டுதல் - Guidance தேவைப்படுகின்றது என நினைக்கின்றாயோ அப்போதெல்லாம் உனக்கு ஒரு குரு தேவைப்படலாம்.

யாரை நாம் குருவாக கொள்ள முடியும்?

நீ தேடல் செய்கின்ற குறிப்பிட்ட துறையில் அதாவது உனக்கு சந்தேகம் வரும் விடயங்களில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ஒருவரை நீ குருவாக கொள்ளமுடியும். உனது அப்பன் உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். உனது அம்மா உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்க முடியும். உனது அண்ணா உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். ஏன் உனது காதலி கூட உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். நீண்ட தாடி வளர்த்த, காவியுடை தரித்தவர்கள் மாத்திரமே குரு என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதே.

2) கோயில்களில் பூசை செய்வதற்கு ஏன் குருவே பூசகர் தேவை?

சமையல்கட்டில் சமைப்பதற்கு சமையல்காரர் தேவைதானே? இதுபோலவே கோயில்களிலும் பூசை செய்வதற்கு பூசகர்கள் தேவை.

நாம் நேரடியாக கோயிலில் கடவுளிற்கு பூசை செய்தால் என்ன?

சமையல்கட்டில் வேலை செய்ய ஒரு சமையல்காரனுக்கு அனுமதி கிடைப்பது போல உனக்கும் குறிப்பிட்ட கோயிலில் பூசை செய்வதற்கு பக்தர்கள், மற்றும் கோயில் நிருவாகம் அங்கீகாரம் தந்தால் நீயும் அங்கு பூசை செய்ய முடியும்.

அத்தோடு குருவே கடவுளை கும்பிடுவதற்கு மந்திரங்கள் தேவையா குருவே?

கடவுளை கும்பிடுதல் என்பது கடவுளை பிரார்த்தனை செய்வதுதானே? எனவே, கடவுளை பிரார்த்தனை செய்யும்போது நீ மந்திரங்களை உச்சரித்தால் அவை உனது மனதை பிரார்த்தனையை நோக்கி ஒருமுகப்படுத்துவற்கு உதவும்.

3) குருவே நம் மக்கள் சாஸ்திரங்களில் மூழ்கிப்போய் தற்போது பிள்ளை பிரசவத்தை கூட தங்களிற்கு விருப்பமான நல்ல நாளில் சிசரியன் மூலம் பெறுகிறார்கள். இதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. குருவே இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

தாம் எப்படி வாழவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. நீ இங்கு கூறும் மக்கள் பழைய சாத்திரங்கள், மற்றும் விஞ்ஞானம், இவை இரண்டிலும் நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள் போல இருக்கின்றது.

இப்படி செய்வது நல்லதா? அல்லது இது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல் ஆகிவிடுமா?

இப்படி செய்வதும், செய்யாததும் உனது விருப்பத்தை பொறுத்து உள்ளது. ஆனால் அப்பனே உனக்கு ஒவ்வொரு கணப்பொழுதுமே நல்ல கணப்பொழுது, ஒவ்வொரு நாளுமே நல்ல நாள் என்பதை நினைத்துக்கொள். கூடாத கணப்பொழுது, கூடாத நாள் என்று எதுவும் இல்லை. நீ ஒவ்வொரு கணப்பொழுதும் மூச்சு விடுகின்றாய், உயிருடன் இருக்கின்றாய், இதுவே நல்ல நேரம்! இதுவே பெரிய விடயம்!

4) குருவே மனிதர்களை கடவுளாக கும்பிட்டு அதன் பெயரில் புதிய மதம் உருவாக்கபட்டு வருகிறது அதை பற்றி நீங்க என்ன சொல்கின்றீர்கள்?

இதற்கு கடந்த வார போதிமர நிழலில் உனக்கு பதில்கூறிவிட்டேன் அப்பனே!

அவர்களின் தத்துவங்கள் போதனைகள் ஒன்றும் ஒரு சதத்திற்கு பயனற்று கிடந்தாலும் அவர்களை தூக்கி பிடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது குருவே?

தூக்கிப்பிடிப்பதும், தூக்கிப்பிடிக்காததும் அவரவர் சொந்த விருப்பம். உனது அறிவுக்கு அவை ஒரு சதத்திற்கு பயன்தர முடியாதவை என்று தோன்றினாலும், பிறருக்கு அவை மிகவும் பயனுள்ள விடயங்களாக தோன்றக்கூடும். உனக்கு அவை பிடிக்கவில்லையானால் அவற்றில் இருந்து தூர விலகி நில். துட்டரைக் கண்டால் தூர விலகு!

5) குருவே உலகில் ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை என்று அவதிப்படுகின்றார்கள். ஏன் இப்படி எல்லாம் குருவே?

நீ பணக்காரன் என்று இங்கு யாரை கருதுகின்றாய்? ஏழை என்று யாரை கருதுகின்றாய்? பணப்புழக்கம் என்பது உனது கையில் இல்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பணத்தை தமது பையில் வைத்து இருப்பார்கள் என்பது அவரவர் தலைவிதி. ஆனால், அவதிப்படுதல் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படக்கூடியது. பணப்புழக்கம் உனது நிம்மதியை குலைக்காதவகையில் நீ உன்னை பக்குவப்படுத்தி வாழமுடியும்.

6) குருவே மறுபிறப்பில் தங்களிற்கு நம்பிக்கை உண்டா? அதைப்பற்றிய உங்கள் சிந்தனை என்ன?

அப்பனே, இந்தப்பிறப்பிலேயே நாம் இன்னும் பூரண நம்பிக்கை கொள்ளாதபோது மறுபிறப்பை பற்றி யோசிப்பதில் என்ன பயன்?

7) குருவே யாகம் என்றால் என்ன? யாகம் செய்து மழை வருகின்றது என்று நம்மவர்கள் சொல்லுகின்றார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குருவே?

பயன்கருதி அல்லது பயன் கருதாது இந்த உலகில் வியாபித்துள்ள மாபெரும் சக்கியை நோக்கி செய்யப்படும் ஒருவிதமான பிராத்தனையை யாகம் என்று கூறலாம். மழை வருவதும், வராததும், வேண்டுதல்கள் நிறைவேறுவதும், நிறைவேறாததும் அவரவர் நம்பிக்கை. உனது குருநாதன் ஒருபோதும் யாகங்களில் ஈடுபடுவதோ அல்லது அவற்றை ஊக்குவிப்பதோ இல்லை.

8) குருவே சமயங்களை நாங்கள் மற்றவர்களிடம் திணிக்கவேண்டுமா? அல்லது அதுவாக வளர்வது நல்லாதா குருவே?

சமயம் என்பது மற்றவர் வாயில் நாம் திணிப்பதற்கு அது உண்ணுகின்ற ஒரு உணவுப்பதார்த்தம் அல்ல. மேலும் வளர்வதற்கு அது ஒரு உயிரினமும் அல்ல. சமயம் என்பது வேலை செய்வதற்கு பாவிக்கும் ஒரு கருவி - நெம்புகோல் போன்றது. சமயம்/ மதத்தை பற்றி நான் கடந்தவாரம் உனக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

9) குருவே இந்த உலகத்தையும் மனிதர்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இவற்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது குருவே?

இந்த உலகத்தையும், மனிதர்களையும் புரிந்துகொள்ளாததால் நீ இழக்கப்போவது ஒன்றும் இல்லை. ஆனால், உன்னை நீ புரிந்துகொள்ளாவிட்டால் நீ அனைத்தையும் இழந்துவிடுவாய். எனவே, உன்னையே நீ அறிந்துகொள்வாய்! உனது விம்பமே இந்த உலகம் என்பதை விரைவில் நீ அறிந்துகொள்வாய்!

10) "உள்ளம் தான் கோயில்" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மைதான்...

உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம்!

வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!

அப்பனே, உன்னை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ் ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்:

வணக்கம் குருவே!

1) குருவே கனவு என்றால் என்ன? இளையவர்கள் சினிமா நடிகரை கனவு காண்பார்கள், முதியவர்கள் இறைவனை கண்டேன் என்று சொல்லுவார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

2) காதல் என்றால் என்ன குருவே? ஆன்மிகத்திற்கும் காதலிற்கும் தொடர்பு உண்டா?அன்பிற்கும் காதலிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

3) விரதம் என்றால் என்ன? விரதம் அநுட்டிப்பது சிறந்தது என்று கூறுகின்றார்களே? அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

4) ஆணவம், கன்மம், மாயை என்றால் என்ன குருவே? இதை இல்லாமல் செய்ய என்ன செய்ய வேண்டும்?

5) பதி, பசு, பாசம் என்றால் என்ன? இவை யாவும் இறைவனை குறிக்கின்றது என்று கூறுகின்றார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

6) யேசுநாதர் கூறி இருக்கிறார். அதாவது ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லி, இன்றைய உலகில் அவ்வாறு செய்தால் ஆளையே முடித்துவிடுவார்கள். ஆகவே இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

7) "புத்தர் கூறி இருக்கிறார் அதாவது பிச்சை எடுத்து உண்ணும்படி!" என்று கூறுகின்றார்கள். அது உண்மையா குருவே? அது உண்மையாக இருக்குமிடத்து நீங்கள் என்ன சொல்லுவீங்கள் குருவே? அவ்வாறு செய்வது நல்லதா?

8) "எல்லாம் இறைவன்!" என்று கூறிவிட்டு அரசியல் ரீதியாக பெருபான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கி அதிகாரம் பண்ணி வருவதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

9) உலகில் எதுவும் நிரந்தரமில்லை. ஆனால், அதை உணராமல் நாங்கள் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

10) குருவே சிலர் திருமணம் கட்டிவிட்டு ஆன்மீகத்திற்கு செல்கிறோம் என்று பிள்ளைகள், மனைவியை விட்டு சென்றுவிடுவார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சிஷ்யை வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையாரின் கேள்வி:

கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் என சொல்லுவார்களே இது உண்மையா? ஆமெனில் உதாரணத்தோடு விளக்க முடியுமா?

சீடன் சுவீந்தானந்தாஜி சுவாமிகளின் கேள்வி:

பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி?

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை. நாளை பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆச்சிரமத்திற்கு வரும் அடியார்களிற்கு ஒரு சிறிய கதை கூறுவார். நன்றி!

Link to comment
Share on other sites

1) குருவே கனவு என்றால் என்ன? இளையவர்கள் சினிமா நடிகரை கனவு காண்பார்கள், முதியவர்கள் இறைவனை கண்டேன் என்று சொல்லுவார்கள் இவை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சிலர் இந்த உலகமே ஒரு கனவு என்று சொல்வார்கள். எமது மனதில் இருக்கும் எண்ணங்கள், ஆசைகள், தவிப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் நாம் தூங்கும்போது எமக்கு கனவுகளாக வருகின்றன.

2) காதல் என்றால் என்ன குருவே? ஆன்மிகத்திற்கும் காதலிற்கும் தொடர்பு உண்டா?அன்பிற்கும் காதலிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

அப்பனே உனக்கு ஒன்று சொல்வேன். அதாவது மொழியை வைத்து உணர்வுகளை குழப்பிக்கொள்ளாதே! ஆன்மீகத்தில் நீ இறங்கிவிட்டால் அங்கு மொழியை விட உணர்வுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. பல ஞானிகள் ஊமை பாசையின் மூலம்தான் தமது சீடர்களிற்கு ஞான உபதேசம் செய்து உள்ளார்கள். அதாவது ஆன்மீகம் என்பது நடைமுறை அனுபவங்கள்.

மனம், உள்ளம், இதயம், உயிர் இப்படி சொற்கள் இருக்கின்றன..

இதுபோலவே காதல், அன்பு, ஆசை, விருப்பம் இப்படியும் சொற்கள் இருக்கின்றன..

என்னைப் பொறுத்தவரை எனது சீடனான உனக்கு உனது நடைமுறை வாழ்வை வெற்றிகரமாக கொண்டுசெல்வதற்கு தேவையான முறையில் ஞான உபதேசம் தருவதற்கே விரும்புகின்றேன். தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் காலவிரயம் மாத்திரமே ஏற்படும்.

3) விரதம் என்றால் என்ன? விரதம் அநுட்டிப்பது சிறந்தது என்று கூறுகின்றார்களே? அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

உணவை குறைத்து இறைவழிபாடு செய்தல் என்று சுருக்கமாக சொல்லலாம். விரதம் அநுட்டிப்பது சிறந்ததே. ஆனால், அதை எப்படி அநுட்டிப்பது என்று உனக்கு தெரிந்திருக்க வேண்டும். உணவை குறைப்பது மட்டும் அல்லது உணவை குறைத்து இறைவழிபாடு செய்வது மட்டுமே விரதம் அல்ல. உனது வாழ்க்கையையே நீ விரதமாக அநுட்டித்துக் கொள்ள முடியும்.

4) ஆணவம், கன்மம், மாயை என்றால் என்ன குருவே? இதை இல்லாமல் செய்ய என்ன செய்ய வேண்டும்?

அப்பனே உனது இந்தக்கேள்விக்கான விடை கீழே உள்ளது.

5) பதி, பசு, பாசம் என்றால் என்ன? இவை யாவும் இறைவனை குறிக்கின்றது என்று கூறுகின்றார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அப்பனே உன்னைப்போலவே உனது குருநாதனுக்கும் பதி என்பது கடவுளை குறிக்கும். பசு என்பது உயிர்களைக் குறிக்கும். பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை எனப்படுகின்ற மும்மலங்களை குறிக்கும் என சிறுவயதில் கை விரல்களை காட்டி சமய பாடத்தில் சொல்லித்தந்துள்ளார்கள்.

இவை பற்றிய இந்த தத்துவங்கள் இப்போது உனக்கு தேவையற்றன என்பது உனது குருநாதனின் கணிப்பு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

6) யேசுநாதர் கூறி இருக்கிறார். அதாவது ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லி, இன்றைய உலகில் அவ்வாறு செய்தால் ஆளையே முடித்துவிடுவார்கள். ஆகவே இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதை யேசுநாதர்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? மேலும், ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு குறிப்பிட்ட காலநேரத்தில் அவர் கூறியதை எல்லா சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த வேண்டும், பிரயோகிக்க வேண்டும் என முயற்சி செய்வது முட்டாள்தனம். ஏன் யேசுநாதர் கூட சிலரை தண்டிக்கவில்லையா? அவர் அவ்வாறு தண்டித்ததன் காரணம் என்ன? அவர்கள் செய்த அக்கிரமங்களை பொறுத்துகொண்டு யேசுநாதர் பேசாமல் இருந்திருக்கலாம் தானே?

பைபிள் வேதாகமத்தை கையில் வைத்திருந்தால் அல்லது கரைத்துக் குடித்திருந்தால் மட்டும் போதாது. அங்கு கூறப்பட்ட அறிவுரைகளை எப்படி எமது நாளாந்த வாழ்வில் சரியான முறையில் கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டும். தத்துவங்களை, பொன்மொழிகளை, அறிவுரைகளை அறிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது. அவற்றை எப்படி சரியான நேரத்தில், சரியான சந்தர்ப்பத்தில், சரியான முறையில் பயன்படுத்துவது என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

7) "புத்தர் கூறி இருக்கிறார் அதாவது பிச்சை எடுத்து உண்ணும்படி!" என்று கூறுகின்றார்கள். அது உண்மையா குருவே? அது உண்மையாக இருக்குமிடத்து நீங்கள் என்ன சொல்லுவீங்கள் குருவே? அவ்வாறு செய்வது நல்லதா?

நான் புத்தர் இல்லை அப்பனே! புத்தருக்குத்தான் அவர் என்ன கூறினார் என்று தெரியும். புத்தரை வைத்து மதம் - வியாபாரம் செய்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இதனால்தான் உலகில் பிச்சை எடுத்து திரிகின்றார்கள்.

ஒரு நிறைஞானி சோம்பேறித்தனமான வழிமுறைகளை பின்பற்றுமாறு தனது சீடர்களிடம் கூறி இருப்பார் என நான் நினைக்கவில்லை. சிலவேளைகளில் அந்தக்காலத்தில் அது பொருத்தமான ஒரு வழிமுறையாக இருந்திருக்கலாம்.

8) "எல்லாம் இறைவன்!" என்று கூறிவிட்டு அரசியல் ரீதியாக பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கி அதிகாரம் பண்ணி வருவதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீ அடங்கிப் போபவனாய் இருப்பதால்தான் உன்னை மற்றவர்கள் அடக்க முயற்சிக்கின்றார்கள். நீ சுதந்திரமாக வாழ்வாயானால், நீ சுதந்திரமாக வாழ முயற்சிப்பாயானால் உன்னை மற்றவர்களால் தொடர்ந்தும் அடக்கமுடியாது போகும் அல்லது அடக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இதுபோலவே சிறுபான்மையினரும் சுதந்திரமாக வாழ முயற்சித்தால் அல்லது சுதந்திரமாக வாழ்ந்தால் அவர்களை பெரும்பான்மையினரால் அடக்கமுடியாது அல்லது அடக்குவது மிகவும் கடினமாக இருக்கும்.

இதற்கு முதலில் சிறுபான்மையினர் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்துகொள்ளவேண்டும். சிறையினுள் இருக்கும் ஒருவன் சிறையை விட்டு வெளியேற முயற்சிக்காதது யார் தவறு? சிறை வாழ்வை ஒருவன் மிகவும் விரும்பி பெற்றால், சிறை வாழ்வை ஒருவன் மிகவும் விரும்பி அனுபவித்தால் அதை என்னவென்று சொல்வது?

9) உலகில் எதுவும் நிரந்தரமில்லை. ஆனால், அதை உணராமல் நாங்கள் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அப்பனே, இன்று பூக்கும் பூக்கள் நாளை வாடிவிடும். ஆனால், தொடர்ந்தும் புதிது, புதிதாய் தினமும் பூக்கள் பூத்துக்கொண்டு இருக்கின்றன. பூக்க வேண்டும். இதுபோலவே, நீ புதிது, புதிதாக ஆசைப்பட்டு உன்னை ஒரு சுறுசுறுப்பான மனிதனாக தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

எனினும், உனது நியாயபூர்வமான பல ஆசைகளை அடைவதற்கு நீ முயற்சி செய்து உழைக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்வாய்! முயற்சி மூலம் கைகூடாது உன் காலடியில் தானாக வந்து விழுந்து நிறைவேறும் ஆசைகள் உன்னை ஒரு சோம்பேறியாக மாற்றிவிடும்.

மேலும், முயற்சி செய்வதன் மூலம் அடையப்படும் ஆசைகள் அளவுக்கு மிஞ்சி அதிகரித்துவிட்டால் அவை உனது அகச்சமநிலையை குழப்பிவிடும். ஏனெனில், உனது வாழ்வின் நேரம் - வாழ்நாள் மட்டுப்படுத்தப்பட்ட அளவை கொண்டது. பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு உனக்கு நேரம் கிடைக்காது போகலாம் அல்லது பற்றாக்குறையாக வரலாம்.

10) குருவே சிலர் திருமணம் கட்டிவிட்டு ஆன்மீகத்திற்கு செல்கிறோம் என்று பிள்ளைகள், மனைவியை விட்டு சென்றுவிடுவார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

வாழ்க்கை என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேர்வாகவும் இருக்கமுடியும். தனது வாழ்வு எப்படி அமையவேண்டும் என முடிவெடுப்பதற்கு அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு. ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாழ்வை தாம் விரும்பியபடி மாற்றி அமைப்பதால் மற்றவர்களிற்கு சாதகமான, பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

எனினும், ஆன்மீக வளர்ச்சிக்கு, ஆன்மீக விடுதலைக்கு குடும்பம், மனைவி, பிள்ளைகள் ஒருபோதும் தடையாக இருக்கமுடியாது. கலியாணம் கட்டி மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, சகோதரங்கள், நண்பர்கள், உறவினர்களுடன் வாழ்ந்தபடியே ஆன்மீக வளர்ச்சியை, விடுதலையை நீங்கள் அடைய முடியும்.

கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் என சொல்லுவார்களே இது உண்மையா? ஆமெனில் உதாரணத்தோடு விளக்க முடியுமா?

இந்த உலகின் அடிநாதமாய் இருந்து, இந்த உலகை இயக்கும் சக்கி எங்கும் பரந்துள்ளது. உங்கள் புலன்களில், உங்கள் கற்பனைகளில், உங்கள் கனவுகளில் படுகின்ற, உணர்கின்ற அனைத்துமே சக்தியின் வடிவமே! இல்லாவிட்டால் அவை - அப்படி பொருட்கள் இருப்பதை உங்கள் புலன்களால், கற்பனைகளில், கனவுகளில் உணரமுடியாது போய் இருக்கும்.

பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி?

யம்முனானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளபடி பேய் என்று உலகில் எதுவும் இல்லை. ஆனால், மனிதர்களே - நாமே சில சமயம் பேய்களாக மாறுகின்றோம். எமது பிரமையே - எமக்குள் இருக்கும் பிரமையே எமக்கு பேய்களாக வருகின்றது, தெரிகின்றது.

சீடர்களே, உங்களை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ் ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆச்சிரமத்திற்கு வந்த அடியார்களிற்கு கூறுகின்ற கதை..

ஓர் ஊரில் ஒரு பாம்பு இருந்தது. அது தெருவால் செல்பவர்களை கொத்தி துன்புறுத்தி வந்தது. இதனால் அங்கே வாழ்ந்த மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அந்த வழியால் ஓர் நாள் முனிவர் வந்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்கள் பாம்பால் தாம் படும் துன்பங்களை அவருக்கு சொன்னார்கள். முனிவர் அந்த வழியால் பாம்பு இருக்கும் இடத்தை சென்றார். அங்கு சென்று பாம்பிடம் "ஏன் மக்களை நீ துன்புறுத்துகின்றாய்? நாம் வாழும் காலம் குறைவு, இந்தக்காலத்தில் ஏன் நாம் மற்றவரை கஷ்டப்படுத்த வேண்டும்? எனவே இனி கொத்தாதே!" என்று புத்திமதி சொல்ல பாம்பும் அதை கேட்டது. அன்றிலிருந்து பாம்பு ஒருவரையும் ஒன்றும் செய்யவில்லை. இதனால் அங்கிருந்த மக்கள் கற்களால் எறிந்து பாம்பிற்கு பல துன்பங்களை செய்து வந்தார்கள். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டது பாம்பு! ஒன்றும் செய்யவில்லை. காலங்கள் சென்றன. பாம்பு மெலிந்து வாடிப்போய் நோய் வாய்பட்டது. ஆனாலும், அவ்வூரில் உள்ள மக்கள் பாம்பிற்கு கொடுத்த துன்பம் இன்னும் நின்றபாடில்லை. ஓர் நாள் அந்த முனிவர் மறுபடியும் அந்த வழியால் வந்தார். பாம்பின் கோலத்தை பார்த்து "ஏன் இப்படி ஆகிவிட்டாய்?" என்று கேட்டார். பாம்பும் நடந்தவற்றை கூறியது. உடனே முனிவர் சொன்னார் "நான் உன்னை கொத்தாதே என்று தானே சொன்னேன்? சீறாதே என்று சொல்லவில்லையே? ஆகவே, உன்னைப் பாதுகாக்க நீ சீற வேண்டும்! ஆனால் மற்றவனை கொத்தாதே! இது உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் பொருந்தும்!" என்று கூறினார். ஆகவே நாங்கள் எங்களை பாதுகாக்க சீற வேண்டும். இல்லாவிடில் எங்களை மற்றவர்கள் வாழவே விடமாட்டார்கள்!

பி/கு: குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள் யாழ் இணையத்தில் இருந்து ஓய்வுபெற்றபின் பிரதம சீடனான யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்தும் இந்த போதி மரநிழல் ஞானஉபதேச நிகழ்ச்சியை இங்கு நடாத்திச் செல்வார் என்பதை அடியார்களிற்கு அன்புடன் அறியத்தருகின்றேன். நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்:

வணக்கம் குருவே!

1) குருவே சனி பெயர்ச்சி என்றால் என்ன? அதனால் சாதக, பாதக பலன்கள் வரும் என்று சொல்கின்றார்கள். இன்றைய நவீன உலகில் மக்கள் இதனை நம்புகின்றார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

2) ஆடி அமாவாசை என்றால் என்ன? தற்போது பலர் தந்தை இருக்கும் போது அவரை கவனிக்காமல் ஆடிஅமாவாசை தினத்தில் அப்பாவின் பெயரில் கோயில்களில் பூசை எல்லாம் செய்வார்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

3) சில மனித கடவுளர் உபயோகித்த பொருட்களை உதாரணமாக உடுப்புக்கள் போன்றவற்றை புனித பொருளாக வைத்து பூசை செய்கிறார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன குருவே?

4) குருவே மாமிசம் சாப்பிடுவது தவறா? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன? அத்துடன் சிலர் தாம் இளமையில் மாமிசம் சாப்பிட்டுவிட்டு பின் வயசு போனகாலத்தில் மரக்கறி சாப்பிட்டுக்கொண்டு மற்றவர்களிற்கும் அட்வைஸ் பண்ணுவார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

5) குருவே தானங்களிள் சிறந்த தானம் எது குருவே? அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

6) குருவே மாயை என்றால் என்ன? இந்த உலகே ஒரு மாயை என்று சொல்லுவார்கள் சிலர். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

7) குருவே மதம் மாறுதலை பற்றிய உங்கள் கருத்து என்ன? சிலர் வற்புறுத்தி மதம் மாற வைக்கும் சம்பவங்களை தற்போது அறிய கூடியதாக இருகிறது. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

8) குருவே சைவ சமயத்தில் பல நல்ல விசயங்கள் கூறபட்டாலும், அதில் அதே மாதிரி உலக நடைமுறைக்கு தேவையற்ற விடயங்கள் பலவும் கூறபட்டிருகின்றன. இதனை இனி வரும் சமுதாயத்திற்கு புகட்டுவது அவ்வளவு சிறந்தது இல்லை என்று நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

9) குருவே இந்த உலகத்தில் எது நிரந்தரம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

10) குருவே இந்த உலகத்தை ஒரு சக்தி இயக்கி கொண்டு தான் இருகிறது என்று நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அது தெய்வசக்தி என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறாயின் அதற்கு விளக்கம் தரமுடியுமா குருவே?

சீடன் சுவீந்தானந்தாஜி சுவாமிகளின் கேள்வி:

வணக்கம் குருஜி! ஒரு சந்தேகம்! ஆசைப்படு, ஆசையை அடக்காதே என உபதேசிக்கின்றீர்கள். ஆனால் ஆசைகள் விகாரமான, விவகாரமான, விபரீதமான ஆசைகளாகவிருந்தால் விமோட்சனம் கிடையாதே சுவாமி?

உ- ம்: பாகவதர்--- சிந்தாமனி--- தாசியர் இல்லம் செல்லுதல்!

சிவாஜிகனேசன்-- எதிர்பாராதது-- சகோதரிமீது மோகம் கொள்ளுதல்!

எஸ்.எஸ்.ஆர்--- மறக்கமுடியுமா-- அதே!

அஜித்--- வாலி----- சகோதரன் மனைவியை தான் ஆடைதல்!

ஆப+ர்வராகங்கள்--- கமல், சுந்தரராஜன், சிறிவித்யா, அவரது மகள் ஆகியோரின் உறவுகள்!

சமீபத்திய இரு படங்கள்--- 1) அண்ணியார் மைத்துனன்மீது காமம் கொள்ளுதல்.

2) மச்சாள் அத்தான்மீது காமம் கொள்ளுதல் போன்றவை. இவை போன்ற பலப்பல.

வேதத்தில் பஞ்ச தாய்மார் ஐவர்: தன் தாய்!

தன் அண்ணணின் மனைவி!

தன் மனைவியின் தாய்!

குருவின் பத்னி!

அரசனின் மனைவி.

இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் தொடரும். நன்றி!..

Link to comment
Share on other sites

1) குருவே சனி பெயர்ச்சி என்றால் என்ன? அதனால் சாதக, பாதக பலன்கள் வரும் என்று சொல்கின்றார்கள். இன்றைய நவீன உலகில் மக்கள் இதனை நம்புகின்றார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

உலகம் சக்தி மயமானது என்பதை நீ அறிவாய். சக்தியில் இருந்தே இயக்கம் தோன்றுகின்றது. சடப்பொருட்கள், உயிர்ப்பொருட்கள் இவை அனைத்தினுள்ளும் சக்தி உள்ளது. சோதிடத்தில் வலைப்பின்னல் சக்தியமைப்பு முறையில் ஒன்றை பாதிக்கும் இன்னொன்று பற்றி கூறப்படுகின்றது. ஆனால், அப்பனே இவை என்னைப்பொறுத்தவரை உனக்கு தேவையற்ற ஒன்று. உனக்குள் ஒரு மாபெரும் சக்தி உள்ளது. அதை நீ உசுப்பி எழுப்பிவிட்டால் பின் அந்த சக்தியை வேறு எந்த சக்தியாலும் ஆட்டி அசைக்கமுடியாது. அதன்பின் உனது சக்தியே இந்த உலகை ஆட்டிப்படைக்கும். மேலும், இந்த உலகம் ஒரு மிகத்திட்டமிட்ட ஒழுங்கமைப்பின்கீழ் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. நீ இந்த சூக்குமமான ஒழுங்கமைப்பை அறிந்து கொண்டுவிட்டால் உலகில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் உனக்கு சார்பாக நடப்பதை உணர்ந்துகொள்வாய்.

2) ஆடி அமாவாசை என்றால் என்ன? தற்போது பலர் தந்தை இருக்கும் போது அவரை கவனிக்காமல் ஆடிஅமாவாசை தினத்தில் அப்பாவின் பெயரில் கோயில்களில் பூசை எல்லாம் செய்வார்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆடி அமாவாசை, சித்திரா பெளர்ணமி, சந்திர கிரகணம், சூரிய கிரகணம் இவ்வாறு பல தினங்களை வருடந்தோறும் மக்கள் கொண்டாடுவார்கள், பூசிப்பார்கள், அனுட்டிப்பார்கள். இவை எல்லாம் ஒரு சம்பிரதாயம். உனக்கு விருப்பமானால் நீயும் இவற்றை பின்பற்றலாம். தேர்வு உன்னுடையது. பெற்றோருக்கு உயிருடன் இருக்கும்போது மதிப்பு கொடுத்து மரியாதை செய்யாமல் இறந்தபின்னர் அவர்களை பூசிப்பது அயோக்கியத்தனம். நீ இந்த தவறை உனது வாழ்க்கையில் செய்துவிடாதே! தினமும் நீ உனது பெற்றோரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் அது உனது பெற்றோருக்கு மனதில் மிகுந்த மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

3) சில மனித கடவுளர் உபயோகித்த பொருட்களை உதாரணமாக உடுப்புக்கள் போன்றவற்றை புனித பொருளாக வைத்து பூசை செய்கிறார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன குருவே?

தமது வாழ்க்கையை எப்படி வாழவேண்டும், தமது வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பது அவரவர் சொந்த விறுப்பு, வெறுப்பு. மற்றவர்களின் விறுப்பு, வெறுப்புக்கள் என்னுடைய விறுப்பு, வெறுப்புக்களுடன் ஒத்துவரவில்லை என்பதற்காக மற்றவர்களை நான் குறைகூற முடியாது. பலர் தமது வாழ்வில் மிகக்கடுமையான துன்பங்களிற்கும், வேதனைகளிற்கும் ஆளாகி நிலைகுலைந்துபோய் இருக்கின்றார்கள். இவர்கள் தமது வாழ்வினை எப்படி தொடர்ந்து கொண்டு செல்வது என்று தெரியாத நிலையில் மனிதகடவுளரிடம் போய் சரணாகதி அடைகின்றார்கள். இதுவே அவர்களை நீ மேற்கூறிய செயல்களை செய்யத் தூண்டுகின்றது.

4) குருவே மாமிசம் சாப்பிடுவது தவறா? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன? அத்துடன் சிலர் தாம் இளமையில் மாமிசம் சாப்பிட்டுவிட்டு பின் வயசு போனகாலத்தில் மரக்கறி சாப்பிட்டுக்கொண்டு மற்றவர்களிற்கும் அட்வைஸ் பண்ணுவார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

உனது குரு சுமார் 10 வருடங்கள் தூய தாவரப்போசணியாக இருந்தார். பின் மாமிசத்தையும் தனது உணவில் சேர்த்துக்கொண்டார். மாமிசம் உண்பதும், உண்ணாததும் அவரவர் விருப்பம். மாமிசம் உண்பவர்களை விட மாமிசம் உண்ணாதவர்கள் நல்லவர்கள் என்று ஒருபோதும் அர்த்தம் இல்லை. உலகில் பல கொடுமைகள் புரிந்தவர்களின் பட்டியலில் தாவரபோசணை பழக்கத்தை உடைய பலரும் அடங்குகின்றார்கள் என்பதை நீ அறிந்துகொள்.

மேலும், சரியா, தவறா என்பவை உனது தனிப்பட்ட கண்ணோட்டம், சமுதாயக்கண்ணோட்டம் என்பனவற்றில் தங்கியுள்ளது. உனக்கு சரியெனப்படுபவை சிலவேளைகளில் சமுதாயத்திற்கு பிழையாகத் தோன்றக்கூடும். இதேபோல் உனது சமூகத்திற்கு சரியெனப்படுபவை இன்னொரு சமூகத்திற்கு பிழையாக தோன்றக்கூடும். எனவே உனக்கு நான் கூறக்கூடியது புத்திசாதூரியமாக நடந்து உனது வாழ்வைச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றிக்கொள். சமுதாயம் பிழை என கூறும் ஒன்றை நீ உனது கண்ணோட்டத்தில் சரியெனக்கண்டால், நீ சமுதாயத்திற்கு அது சம்மந்தமாக உனது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். இல்லாவிடின் தேவையற்ற ஆபத்துக்களில் நீ மாட்டிக்கொள்ள நேரிடும்.

5) குருவே தானங்களில் சிறந்த தானம் எது குருவே? அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

தன்னை அறிந்து தானம் செய் என்று கூறுவார்கள். நீயே கேவலமான ஒரு நிலையில் இருந்துகொண்டு தானங்கள் செய்ய முயற்சிப்பது தற்கொலை செய்வதற்கு சமம். முதலில் உனது ஆற்றல்களை, சக்தியை பெருக்கி மிகவும் ஒரு வலுவான நிலைக்கு நீ வந்தபின்னரே தானங்கள் பற்றி யோசிக்கவேண்டும்.

உனது குருநாதன் ஆறுதடவைகள் இரத்ததானம் செய்து உள்ளான். ஆனால், தன்னிலை அறிந்து அந்த தானம் செய்வதை இப்போது நிறுத்திவிட்டான். இதேபோல் குருநாதன் இறந்தபின்னர் தனது உடலை, உடல் உறுப்புக்களை தானமாக வழங்க தீர்மானம் செய்து இருந்தான். ஆனால், இவ்வாறான முடிவுகள் மனித மனதில் ஒருவன் தான் அறியமுடியாதவகையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்களை மறைமுகமாக உருவாக்கி அவன் சாவதை ஊக்குவிக்ககூடும் என்பதை கண்டுபிடித்ததால் உனது குருநாதன் இந்த உடல், உறுப்பு தானங்கள் பற்றிய எண்ணங்களை மறந்துவிட்டான்.

உனது வசதிக்கு எது இலகுவாக இருக்கின்றதோ அந்த தானத்தை நீ செய்துகொள். தானங்களில் உயர்வு தாழ்வு என்று இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்பவே தானம் செய்ய முடியும். ஒருவருக்கு வசதிப்படும் ஒருவிதமான தானம் இன்னொருவருக்கு வசதி இல்லாமல் இருக்கலாம்.

6) குருவே மாயை என்றால் என்ன? இந்த உலகே ஒரு மாயை என்று சொல்லுவார்கள் சிலர். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நிலையற்ற தன்மையை மாயை என்று கூறுவார்கள். ஆனால் எல்லாம் மாயை என்று கூறிவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருப்பதில் உனது குருநாதனுக்கு இஸ்டம் இல்லை. வழமையாக வாழ்க்கையில் தோல்வி அடைந்து துன்பப்படும்போதே நாம் எல்லாம் மாயை என்று கூறிக்கொள்கின்றோம். வெற்றிபெற்று, சந்தோசப்படும் நேரங்களில் நாம் உலகம் மாயை என்று பொதுவாக கூறுவதில்லை. எனவே, எல்லாம் மாயை என்று கூறி உலகை வெறுப்பது ஒருவனின் இயலாமையையே, கையாளாகாத தன்மையையே காட்டி நிற்கின்றது.

7) குருவே மதம் மாறுதலை பற்றிய உங்கள் கருத்து என்ன? சிலர் வற்புறுத்தி மதம் மாற வைக்கும் சம்பவங்களை தற்போது அறிய கூடியதாக இருக்கின்றது. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மீண்டும் கூறுகின்றேன். இது அவரவர் சொந்தவிருப்பம். உனக்கும் விருப்பமானால் மதம் மாறிக்கொள்ளலாம். அல்லது பிறரை வற்புறுத்தி மதத்தை மாறவைக்கலாம். உனது குருநாதனைப் பொறுத்தவரை அவன் எல்லா மதங்களிலும் கூறப்படும் நல்ல கருத்துக்களை காதுகொடுத்து கேட்கின்றான். கோயில், தேவாலயம், விகாரை என எல்லா மதவழிபாட்டு தளங்களிற்கும் அவன் போய்வந்துள்ளான். சைவக் கோயிலில் நின்று வழிபடும்போதும் கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து வழிபடும்போதும் எதுவித வித்தியாசத்தையும் உனது குருநாதன் தனது உள்ளத்தில் காணவில்லை. கடவுள் ஒருவனே. உலகின் அடிநாதமாக விளங்கும் சக்தி அனைவருக்கும் ஒன்றே! தேவாரத்தை ஓதும் சைவனும், தோத்திரம் சொல்லும் கிறீஸ்தவனும் அடிப்படையில் தமது உள்ளங்களில் அடையும் உணர்வுகள் ஒன்றே!

8) குருவே சைவ சமயத்தில் பல நல்ல விசயங்கள் கூறபட்டாலும், அதில் அதே மாதிரி உலக நடைமுறைக்கு தேவையற்ற விடயங்கள் பலவும் கூறபட்டிருக்கின்றன. இதனை இனி வரும் சமுதாயத்திற்கு புகட்டுவது அவ்வளவு சிறந்தது இல்லை என்று நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

எல்லா மதங்களிலும் பல நல்ல விசயங்கள் கூறப்பட்டு இருந்தாலும், உலக நடைமுறைக்கு ஒவ்வாத பல தேவையற்ற விடயங்களும் கூறப்பட்டு இருக்கின்றன. எனவே, நீ நினைப்பது சரியே! அதாவது தேவையானவற்றை மட்டும் சேர்த்துக்கொண்டு தேவையில்லாத குப்பைகளை எறிந்துவிடவேண்டும்.

9) குருவே இந்த உலகத்தில் எது நிரந்தரம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

ஆம் இந்த உலகத்தில் நிரந்தரமான ஒரு பொருள் உள்ளது. அந்தப்பொருள் நீ (நான்) தான்!

10) குருவே இந்த உலகத்தை ஒரு சக்தி இயக்கி கொண்டு தான் இருக்கின்றது என்று நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அது தெய்வசக்தி என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறாயின் அதற்கு விளக்கம் தரமுடியுமா குருவே?

அப்பனே, கடந்த போதிமர நிழல்களிலும் உனக்கு இதுபற்றிய விளக்கம் தந்துள்ளேன். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக்கொள். உன்னையே நீ உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த உலகத்தின் அடிநாதமாக விளங்கும் அந்த மாபெரும் சக்தியை - பேரறிவை நீ உணர்ந்து கொள்வாய்!

வணக்கம் குருஜி! ஒரு சந்தேகம்! ஆசைப்படு, ஆசையை அடக்காதே என உபதேசிக்கின்றீர்கள். ஆனால் ஆசைகள் விகாரமான, விவகாரமான, விபரீதமான ஆசைகளாகவிருந்தால் விமோட்சனம் கிடையாதே சுவாமி?

உ- ம்: பாகவதர்--- சிந்தாமனி--- தாசியர் இல்லம் செல்லுதல்!

சிவாஜிகனேசன்-- எதிர்பாராதது-- சகோதரிமீது மோகம் கொள்ளுதல்!

எஸ்.எஸ்.ஆர்--- மறக்கமுடியுமா-- அதே!

அஜித்--- வாலி----- சகோதரன் மனைவியை தான் ஆடைதல்!

ஆப+ர்வராகங்கள்--- கமல், சுந்தரராஜன், சிறிவித்யா, அவரது மகள் ஆகியோரின் உறவுகள்!

சமீபத்திய இரு படங்கள்--- 1) அண்ணியார் மைத்துனன்மீது காமம் கொள்ளுதல்.

2) மச்சாள் அத்தான்மீது காமம் கொள்ளுதல் போன்றவை. இவை போன்ற பலப்பல.

வேதத்தில் பஞ்ச தாய்மார் ஐவர்: தன் தாய்!

தன் அண்ணணின் மனைவி!

தன் மனைவியின் தாய்!

குருவின் பத்னி!

அரசனின் மனைவி.

இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?

ஆம்... கண்டதிலும் ஆசைப்படக்கூடாது. ஆசைகள் நியாயபூர்வமான ஆசைகளாக இருக்கவேண்டும். இதற்குரிய மேலதிக விடையை யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் கேட்ட கேள்வி நான்கின் - பதிலின் - இரண்டாவது பகுதியை பார்க்கவும். சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளே ஒருவனை விபரீதமான ஆசைகளில் விழுத்திவிடுகின்றன. விபரீதமான ஆசைகளினுள் ஒருவரும் தாமாக விரும்பிப்போய் விழுந்துகொள்வதாக நான் நினைக்கவில்லை.

[மேலும், சரியா, தவறா என்பவை உனது தனிப்பட்ட கண்ணோட்டம், சமுதாயக்கண்ணோட்டம் என்பனவற்றில் தங்கியுள்ளது. உனக்கு சரியெனப்படுபவை சிலவேளைகளில் சமுதாயத்திற்கு பிழையாகத் தோன்றக்கூடும். இதேபோல் உனது சமூகத்திற்கு சரியெனப்படுபவை இன்னொரு சமூகத்திற்கு பிழையாக தோன்றக்கூடும். எனவே உனக்கு நான் கூறக்கூடியது புத்திசாதூரியமாக நடந்து உனது வாழ்வைச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றிக்கொள். சமுதாயம் பிழை என கூறும் ஒன்றை நீ உனது கண்ணோட்டத்தில் சரியெனக்கண்டால், நீ சமுதாயத்திற்கு அது சம்மந்தமாக உனது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். இல்லாவிடின் தேவையற்ற ஆபத்துக்களில் நீ மாட்டிக்கொள்ள நேரிடும்.]

சீடர்களே, அடியார்களே உங்களை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ் ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்:

வணக்கம் குருவே!

1) குருவே, சந்தேகம் மனிதர்களில் தோன்றினால் வாழ்க்கை நரகமாகிடும் என்று கூறுவார்கள். இந்த உலகில் சந்தேகபடாமல் இருக்கமுடியுமா? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

2) குருவே, பிறரிடம் குறை கண்டுபிடிப்பது இலகு. அதை நாங்கள் செய்வது சிரமமான விடயம். அது தான் இப்ப கூடுதலாக நடந்து வருகின்றது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

3) குருவே, இறைவனை நாம் என்றும் கண்டதே இல்லை. ஆனாலும், கடவுளாக போற்றி வழிபடுகிறோம். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

4) குருவே, ஆன்மீகம் என்ற சொல் குறிப்பிடுவது எதனை என்பதை எங்களிற்கு விளங்கப்படுத்த முடியுமா?

5) சத்தியம் பேசுதல் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால், எல்லா சந்தர்பத்திலும் அதனை கடைபிடிக்க முடியாது தானே குருவே? இதனை பற்றி என்ன நினைக்கிறீங்க?

6) குருவே, திருவிழாக்களில் உடலை வருத்தி காவடி மற்றும் பல நேத்திகடன்களை நிறைவேற்றுவார்கள். இது சிறந்தது என்று நினைகிறீங்களா? இதனை பற்றிய உங்கள் கருத்து என்ன?

7) குருவே, இசையால உலகை வசைபடுத்தலாம். இசை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? மொழி தேவை இல்லை இசை இருக்கும் போது என்று நினைக்கின்றேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

8) சிலர் "நோய்கள் எல்லாம் முற்பிறவியில செய்த வினை!" என்று கூறுவார்கள். முற்பிறவியில செய்த வினை தொடருமா குருவே? முற்பிறவி என்று ஒன்று இருகிறதை நீங்கள் நம்புறீங்களா?

9) குருவே, அநாதைகள் என்று இந்த உலகில் யாரும் இருகின்றார்களா? அல்லது நாங்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அநாதைகள் என்று நினைக்கிறீங்களா?

10) குருவே, பல சாமியார்கள் இன்று தோற்றம் பெற்றுள்ளனர். நம்மன்ட சனமும் அவர் எல்லாம் செய்யிறார் என்று விழுந்து விழுந்து கும்பிடுகீனம். அந்த சாமியார்கள் ஏன் நமது ஈழப்பிரச்சினையை தமது விரல் அசைவால தீர்க்கமுடியாது குருவே?

சீடன் சுவீந்தானந்தாஜி சுவாமிகளின் கேள்வி:

குருஜி! நாம் பெண்களை பல நேரங்களில் பல கோணங்களில் பார்க்கின்றோம் அல்லது விமர்சிக்கின்றோம். இந்த முரண்பாடு ஏன்?

உ--ம்: காதலி --- தேவதையாகத் தெரிகிறாள். அவளே, சந்தர்ப்ப வசமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பிரிய நேரிடும் போது அவளை வேண்டிய மட்டும் வசவு கூறித் திட்டித் தீர்க்கின்றோம்.

மனைவி --- அவளது உடலுழைப்புகளை நம் குடும்பத்துக்கு என்று சொல்லிச்சொல்லியே வேண்டியமட்டும் அனுபவிக்கிறோம் (காலை 6.00 இல் இருந்து -- இரவு சுமார் 11.00 மணி வரை. ஏதோவொரு வேலை வீட்டில் செய்து கொண்டேயிருக்கிறார்கள்).

ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளைக் காலைவாரிவிடத் தவறுவதில்லை. சிறுதவறைக்கூட பெரிதாகக்கூறி அவள் மனசை நோகடிக்கிறோம்.

தாய் --- தெய்வம், சரி. ஆனால் எல்லாத் தாய்களுமே தெய்வம்தானா?

பெரும்பாலான தாய்மாரின் மறு பக்கத்தைப் பார்த்தீங்கலெண்டால் புரியும். பிள்ளைகளிடம் தந்தையை ஒரு கோபக்காரன், பார்த்தால் பேசுவார் தொட்டால் அடிப்பார் என்ற ரீதியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். உ -- ம்: பொறு அப்பா வரட்டும் சொல்லி அடி வாங்கித் தாறன்.

ஏன் அவவே அந்த அடியைக் கொடுக்க வேண்டியதுதானே?

தன் வீடு சார்ந்த உறவினர்களை சொல்லிச் சொல்லியே பிள்ளைகளுக்கு உருவேற்றி வைத்திருப்பார்கள். தந்தை வழி உறவினர்களை மறக்காமல் இருட்டடிப்புச் செய்து விடுவார்கள். மாமா பிளாஸ்டிக் காப்புப் போட்டாலும் கொண்டாடுவார்கள். சித்தப்பா தங்கச் சங்கிலி போட்டாலும் என்ன ஒரு அரைப்பவுன் இருக்கும். என்று நழுவுவார்கள்.

இம் முரண்பாடுகள் ஏன் குருஜி?

சிஷ்யை வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையாரின் கேள்வி:

குருவே, பெண் இன்பத்தின் அடக்கமா? அல்லது துன்பத்தின் தொடக்கமா?

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் தொடரும். நன்றி!..

Link to comment
Share on other sites

1) குருவே, சந்தேகம் மனிதர்களில் தோன்றினால் வாழ்க்கை நரகமாகிடும் என்று கூறுவார்கள். இந்த உலகில் சந்தேகப்படாமல் இருக்கமுடியுமா? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆம், உன்னையே நீ அறியாத நிலையில் சந்தேகம் தோன்றினால் வாழ்க்கை நரகமாகிவிடும். சில சமயங்களில் நாம் சந்தேகப்படுவது நியாயமானதாக அல்லது தேவைப்படுவதாக இருக்கலாம். சில சமயங்களில் அது தேவையற்றதாக இருக்கலாம். நாம் எம்மில் நம்பிக்கை வைக்காது வெளிப்பொருட்களில் மட்டும் நம்பிக்கை வைக்கும்போதே இந்த சந்தேகங்கள் எமக்கு மிகவும் துன்பம் விளைவிக்கின்றன. எனவே, முதலில் நீ உன்னில் நம்பிக்கையை வைத்துக்கொள், உன்னில் நம்பிக்கையை வளர்த்துக்கொள். நீயே இந்த உலகின் மூலாதாரம் என்பதை அறிந்துகொள், இதன்பின் எப்படியான சந்தேகங்கள் உனது மனதில் தோன்றினாலும் அவை உன்னை ஒன்றும் செய்துவிடாது.

2) குருவே, பிறரிடம் குறை கண்டுபிடிப்பது இலகு. அதை நாங்கள் செய்வது சிரமமான விடயம். அது தான் இப்ப கூடுதலாக நடந்து வருகின்றது. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அப்பனே, இங்கு உனக்கு ஒரு உத்தியை சொல்லித்தருகின்றேன். கடைப்பிடித்துப் பார். அதாவது பாதணிகள் அற்ற நிலையில் நீ நடக்கின்ற பாதை எங்கும் முட்கள் பரந்து இருப்பதாக நினைத்துக்கொள், ஆனால் சில பகுதிகளில் பாதை முட்களற்று தெளிவானதாக இருப்பதாக நினைத்துக்கொள். நீ இப்போது என்ன செய்வாய்? முட்களற்ற பகுதியில் கால்களை வைத்து தொடர்ந்து நடப்பாய். அப்படித்தானே? இதுபோலவே, நீ போகும் இடம் எங்கும் பிரச்சனைகளாலும், குழப்பங்களாலும், குறைகளாலும் நிறைந்தது இந்த உலகம்! நீ செய்யவேண்டியதெல்லாம் குழப்பமற்ற தெளிவான பகுதிகளை கண்டுபிடித்து அவற்றில் காலை பதித்து உனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்வதே. இந்த தத்துவத்தையே 'பூக்களை பறிக்க ஆயுதம் எதற்கு?' என்று ஒரு கவிஞன் பாடுகின்றான்.

3) குருவே, இறைவனை நாம் என்றும் கண்டதே இல்லை. ஆனாலும், கடவுளாக போற்றி வழிபடுகிறோம். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

ஒவ்வொருவரும் தமது மனம், உள்ளம் நிறைவடையும் வகையில் தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமது ஆன்மீக தாகங்களை பூர்த்தி செய்துகொள்கின்றார்கள். இதன் ஒரு வடிவமே கடவுளை போற்றி வழிபடுதல். ஆனால், உனது குருநாதன் உன்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அந்த கடவுளை நீ உணர்ந்து கொள்ளவேண்டும், நீ அந்த கடவுளின் ஒரு பகுதி என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!

4) குருவே, ஆன்மீகம் என்ற சொல் குறிப்பிடுவது எதனை என்பதை எங்களிற்கு விளங்கப்படுத்த முடியுமா?

ஆன்மீகம் என்பது எமது ஆத்துமா - உயிர் சம்மந்தமானது. உடலிற்கு பசிக்கின்றது. உணவு உண்கின்றோம். வயிறு திருப்தி அடைகின்றது. இதுபோலவே எமது உயிரும் - நாமும் - நீயும் - சில வேளைகளில் ஒரு தீவிரமான தாகத்துடன் இருக்கின்றோம். அது என்னவென்று சொற்களில் கூறமுடியாது. ஆனால் எமது உயிர் - நாம் - நீ - மிகவும் தாகமாய இருப்பாய் - இருப்போம். இந்த தாகமே ஆன்மீக தேடல்களாக - ஆன்மீக விடுதலைகளாக எம்மில் உருவெடுக்கின்றன. அதாவது எமது உயிருக்கு - எமக்கு - உனக்கு ஏதோ தேவைப்படுகின்றது. இந்த தாகம் - தேடல்களின் பகுதிகளாகவே கடவுளை கும்பிடுதல், கடவுளை போற்றுதல், கடவுளை தேடுதல், கடவுளை உணர்தல் போன்ற செயல்கள் அமைகின்றன.

5) சத்தியம் பேசுதல் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால், எல்லா சந்தர்பத்திலும் அதனை கடைபிடிக்க முடியாது தானே குருவே? இதனை பற்றி என்ன நினைக்கிறீங்க?

அப்பனே மீண்டும் நினைவில் கொள். கத்தியை வைத்து கத்தரிக்காயை வெட்ட வேண்டுமேயொழிய கையை வெட்டக்கூடாது. இதுபோலவே பொன்மொழிகளை எவ்வாறு, எச்சந்தர்ப்பதில், எப்படி சரியான முறையில் பிரயோகம் செய்வது என்பது உனக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். உனக்கு இதை தெளிவுபடுத்த இராமகிருஷ்ணர் கூறிய ஓர் கதையை கூறுகின்றேன்.. கேள்..

ஓர் குருவிடம் ஓர் சீடன் இருந்தான். அந்த குரு தனது சீடனிடம் "இந்த உலகம் எல்லாம் கடவுளால் நிறைந்தது!" என்று போதனை செய்தார். ஓர்நாள் ஓர் மதம் பிடித்த யானை அந்த சீடனை நோக்கி தாக்குவதற்காக ஓடிவந்தது. அப்போது ஒருவன் அந்த சீடனிடம் யானை வருகின்றது அவ்விடத்தைவிட்டு ஓடித்தப்புமாறு கூறினான். ஆனால், சீடனோ "குருதானே சொல்லி இருக்கிறார், இந்த உலகம் கடவுளால் நிறைந்தது என்று. அப்படியாயின் என்னிடம் ஓடிவரும் இந்த யானையும் கடவுள்தானே! அப்படியானால் நான் ஏன் இந்தக் கடவுளைக்கண்டு ஓடவேண்டும்?" இவ்வாறு தனக்குள் நினைத்துவிட்டு பேசாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டான். வந்த யானையோ இவனை நன்றாக தாக்கி காயப்படுத்தி விட்டது. குருநாதன் இவனிடம்போய் "அவன் ஒருவன் யானை வருகின்றது ஓடச்சொல்லி சொன்னானே! நீ ஏன் கேட்கவில்லை?" என்று கூறினார். அதற்கு பதில் அளித்த சீடன் தான் முன்பு மனதில் எண்ணி இருந்ததை கூறினான். அதைக்கேட்ட குருநாதன் "அடேய் முட்டாள், உன்னை ஓடித்தப்புமாறு கூறியதும் ஒரு கடவுள்தானே! அந்தக்கடவுள் சொன்னதை நீ ஏன் கேட்கவில்லை?" இவ்வாறு கேட்டார்.

நான் இந்தக்கதை மூலம் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை நீ இப்போது புரிந்து இருப்பாய் என்று நினைக்கின்றேன்.

6) குருவே, திருவிழாக்களில் உடலை வருத்தி காவடி மற்றும் பல நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இது சிறந்தது என்று நினைகிறீங்களா? இதனை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அப்பனே, ஆன்மீகம், அறிவு வளர்ச்சி என்பவை பல படிமுறைகளைக் கொண்டவை. நேர்த்திக் கடனை நிறைவேற்ற காவடி எடுத்தல் என்பது ஊரில் நாங்கள் ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சை எடுப்பது போன்றது. ஆனால், நாமே இந்த உலகின் முதல்வன் என உணர்ந்துகொள்வது பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெறுவது போன்றது. அதாவது அரிவரியில் இருந்து பல்கலைக்கழகம் வரை கல்வியில் பல படிநிலைகள் இருப்பதுபோல் ஆன்மிக தேடலிலும் உள்ளன. இவையே ஒருவனை காவடி தூக்க வைக்கின்றன, இன்னொருவனை கமண்டலம் தூக்கவைக்கின்றன.

7) குருவே, இசையால உலகை வசைபடுத்தலாம். இசை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? மொழி தேவை இல்லை இசை இருக்கும் போது என்று நினைக்கின்றேன். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இறைவன் நாதவடிவானவன் என்று கூறுவார்கள். "நாத விந்து கலாதி நமோநம" என்று ஓர் அழகிய பாடல் உள்ளது, கேட்டிருப்பாய் என நினைக்கின்றேன். இசை உனக்குள் உறைந்து கிடக்கும் அந்த மாபெரும் சக்தியை தட்டி எழுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது. அதற்காக ஐப்பொட்டை இருபத்துநாலு மணித்தியாலமும் காதுகளினுள் சொருகி சிவாஜி பட பாடல்களை கேட்காதே! அப்புறம் உனது காது ஜவ்வுகள் வெடித்து நீ செவிடனாகிவிடுவாய்!

8) சிலர் "நோய்கள் எல்லாம் முற்பிறவியில செய்த வினை!" என்று கூறுவார்கள். முற்பிறவியில செய்த வினை தொடருமா குருவே? முற்பிறவி என்று ஒன்று இருகிறதை நீங்கள் நம்புறீங்களா?

இப்பிறவியை மட்டும், இக்கணத்தை நீ நம்பு. மிகுதி எல்லாம் நல்லபடியாக அமையும். நாம் ஊகங்களின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாது. அவை நடைமுறை அனுபவங்களில் கைகூடுபவையாய் இருக்க வேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று நான் உனக்கு முன்பே கூறி இருக்கின்றேன்.

9) குருவே, அநாதைகள் என்று இந்த உலகில் யாரும் இருகின்றார்களா? அல்லது நாங்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அநாதைகள் என்று நினைக்கிறீங்களா?

ஒருவகையில் பார்த்தால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுமே அநாதைகள்! நாம் தனியாகப் பிறந்தோம். தனியாக இறக்கப்போகின்றோம். எம்முடன் கூட வந்தவர்களும் ஒருவரும் இல்லை. கூட வரப்போகின்றவர்களும் ஒருவரும் இல்லை. எனவே நாம் அநாதைகளே! ஆனால், உன்னையே நீ உணர்ந்து அறியும்போது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு துரும்பும் உனது சொந்தம் என்பதை உணர்ந்துகொள்வாய்! நீ இந்த உலகம் எங்கு வியாபித்து இருப்பதை உணர்ந்து கொள்வாய்!

10) குருவே, பல சாமியார்கள் இன்று தோற்றம் பெற்றுள்ளனர். நம்மன்ட சனமும் அவர் எல்லாம் செய்யிறார் என்று விழுந்து விழுந்து கும்பிடுகீனம். அந்த சாமியார்கள் ஏன் நமது ஈழப்பிரச்சினையை தமது விரல் அசைவால தீர்க்கமுடியாது குருவே?

அப்பனே நீ யாரைச் சொல்கின்றாய்?? விரல் அசைவினால் ஏதாவது சாதிப்பவன் சாமி அல்ல - ஆசாமி! உண்மையான ஞானியிற்கு - இந்த உலகின் முதல்வன் தான் என உணர்ந்த ஒருவனுக்கு விரல்களை அசைக்கவேண்டிய தேவை இருக்காது. அவனைச்சுற்றி நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் அவனுக்காக, தாமாகவே நடைபெறுவதை அவன் உணர்ந்துகொள்வான். ஓர் பிரயாணியாக இருந்து நடைபெறும் சம்பவங்களை அமைதியாக அவதானித்துக்கொண்டு இருப்பான்! அதாவது இந்த உலகின் முதல்வன் நீ என உணர்ந்த நிலையில் உனக்கு கைவிரல்கள் மூலம் சித்துவேலைகள் செய்யும் வேலை தேவைப்படாது.

குருஜி! நாம் பெண்களை பல நேரங்களில் பல கோணங்களில் பார்க்கின்றோம் அல்லது விமர்சிக்கின்றோம். இந்த முரண்பாடு ஏன்?

உ--ம்: காதலி --- தேவதையாகத் தெரிகிறாள். அவளே, சந்தர்ப்ப வசமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பிரிய நேரிடும் போது அவளை வேண்டிய மட்டும் வசவு கூறித் திட்டித் தீர்க்கின்றோம்.

மனைவி --- அவளது உடலுழைப்புகளை நம் குடும்பத்துக்கு என்று சொல்லிச்சொல்லியே வேண்டியமட்டும் அனுபவிக்கிறோம் (காலை 6.00 இல் இருந்து -- இரவு சுமார் 11.00 மணி வரை. ஏதோவொரு வேலை வீட்டில் செய்து கொண்டேயிருக்கிறார்கள்).

ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளைக் காலைவாரிவிடத் தவறுவதில்லை. சிறுதவறைக்கூட பெரிதாகக்கூறி அவள் மனசை நோகடிக்கிறோம்.

தாய் --- தெய்வம், சரி. ஆனால் எல்லாத் தாய்களுமே தெய்வம்தானா?

பெரும்பாலான தாய்மாரின் மறு பக்கத்தைப் பார்த்தீங்கலெண்டால் புரியும். பிள்ளைகளிடம் தந்தையை ஒரு கோபக்காரன், பார்த்தால் பேசுவார் தொட்டால் அடிப்பார் என்ற ரீதியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். உ -- ம்: பொறு அப்பா வரட்டும் சொல்லி அடி வாங்கித் தாறன்.

ஏன் அவவே அந்த அடியைக் கொடுக்க வேண்டியதுதானே?

தன் வீடு சார்ந்த உறவினர்களை சொல்லிச் சொல்லியே பிள்ளைகளுக்கு உருவேற்றி வைத்திருப்பார்கள். தந்தை வழி உறவினர்களை மறக்காமல் இருட்டடிப்புச் செய்து விடுவார்கள். மாமா பிளாஸ்டிக் காப்புப் போட்டாலும் கொண்டாடுவார்கள். சித்தப்பா தங்கச் சங்கிலி போட்டாலும் என்ன ஒரு அரைப்பவுன் இருக்கும். என்று நழுவுவார்கள்.

இம் முரண்பாடுகள் ஏன் குருஜி?

குறைகுடம் தழும்பும். நிறைகுடம் தழும்பாது. எமக்குள் உள்ள குறைகளே இந்த முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றன. எம்மில் நாங்கள் நம்பிக்கையை வளர்த்தால், எமக்குள் உள்ள மாபெரும் சக்தியை நாம் அறிந்துகொண்டால் எமது காதலி பிரிந்து செல்லும்போது அவளுக்காக நாம் பரிதாபப்படுவோமே தவிர, அவள் எம்மைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாளே என்று நினைத்து கோபப்பட்டு அவளை தூற்றமாட்டோம்! எதனையும் அடக்கி ஆளும் கடிவாளம் உனது கையில் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு! இதுவே நீ வெற்றியாளனாக வாழ்க்கையில் உன்னை வாழவைக்கும்!

நீ இன்னொருவனை நோகடிக்கின்றாய் என்றால், அதன் உண்மையான அர்த்தம் நீ உன்னை நோகடிக்கின்றாய் என்பதுதான்! உனக்குள் உள்ள பேரழகை நீ கண்டுகொண்டால் - தரிசித்துக்கொண்டால் மற்றவனை நீ நோகடிக்கமாட்டாய்!

தாய்போன்றதொரு உறவை நீ விலை கொடுத்தும் வாங்கமுடியாது. ஆனாலும், தாயும் உன்னைப்போன்ற ஓர் ஜீவன் என்பதை அறிந்துகொள். உனது விம்பங்களையே நீ உனது தாயிலும் காண்கின்றாய். எனவேதான், இப்படியான கேள்விகளை கேட்கின்றாய்.

குருவே, பெண் இன்பத்தின் அடக்கமா? அல்லது துன்பத்தின் தொடக்கமா?

நீங்கள் இன்பத்தின் அடக்கமாக இருந்தால் பெண்/ஆண் இன்பத்தின் அடக்கமாக இருப்பார்கள். நீங்கள் துன்பத்தின் தொடக்கமாக இருந்தால் பெண்/ஆண் துன்பத்தின் தொடக்கமாக இருப்பார்கள். அதாவது இன்பமும், துன்பமும் உங்களுக்குள் இருந்து தோன்றுகின்றன. அவை வெளியில் இருந்து வருவதில்லை.

சீடர்களே, அடியார்களே உங்களை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ் ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

இந்த முறை வழமை போல் அல்லாது குரு கேட்கும் கீழ்வரும் கேள்விகளிற்கு சீடர்கள் வந்து பதில் கூறுவார்கள்...

1. வாழ்க்கையில் எது முக்கியம்? எது முக்கியம் இல்லை?

2. துறவியாக ஒருவன் தனது வாழ்க்கையில் மாறுவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

3. தோல்விக்கும், வெற்றிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை?

4. உங்கள் உடலிற்கு நீங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

5. விஞ்ஞானம், மெஞ்ஞானம் இவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை?

6. ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகள் உங்கள் வாழ்வில் எப்படியான நன்மைகளை அல்லது தீமைகளை ஏற்படுத்தக்கூடும்?

7. காலம் விரயம் செய்யப்படுதல் என்றால் என்ன? வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதவது ஒரு பலனை எதிர்பாத்து வாழமுடியுமா?

8. தம்மை கடவுள் என்று கூறுபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இவர்களிற்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்ன?

9. மதங்களால் உலகில் மனிதன் பிரிந்து இருப்பதை எவ்வாறு தடுக்க முடியும்?

10. உண்மையான மகிழ்ச்சி, சந்தோசம், மனநிறைவு எங்கே தங்கி இருக்கின்றது?

நன்றி!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

01). வாழ்க்கையில் எது முக்கியம்? எது முக்கியமில்லை?

முக்கியமானது காலம். முக்கியமற்றது செயல்களின் விளைவு.

02). துறவியாக ஒருவன் தன் வாழ்க்கையில் மாறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துறவியாக மாறுவது வேறு! துறவியாக வாழ்வது வேறு!

ஜனக மகாராஜா ஆரசனாக இருந்த போதிலும் துறவியாகவே வாழ்ந்தார். சமயத்தில் நாரதர் போன்ற மகா ரிஷிகளுக்குக்கூட போதனை செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03).தோல்விக்கும் வெற்றிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை?

தோல்வி : சிந்தனையை மேம்படுத்தும். செயலை ஆராயும். மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி உந்தித் தள்ளும்.

வெற்றி: நின்று நிதானித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும். கொஞ்சம் ஆணவத்தையும், கர்வத்தையும் அழைத்துக் கொண்டு வரும்.(ஒரு மொட்டு பூரணமாக மலர்ந்து இருப்பதற்கும் பின் வாட ஆரம்பிப்பதற்கும் இடையே உள்ள சில நிமிடங்கள்.)

04. உங்கள் உடலிற்கு நீங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறீங்கள்?

நாம் அஞ்ஞானத்தில் வாழும்வரை உடலானது மிக நன்றாகப் பேணப்பட வேண்டும்.

நல்ல எண்ணங்களாலும் தியானத்தினாலும் அகவுடலையும், உடற்பயிற்சி மற்றும் சுத்தத்தினால் புற உடலையும் பேனுதல் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05). விஞ்ஞானம், மெய்ஞானம் இவற்றிற்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகள் எவை?

மெய்ஞானம்: பரிபூரணத்திலிருந்து எல்லாம் ஏற்கனவே பரிபூரணமாகப் படைக்கப் பட்டுள்ளது.

விஞ்ஞானம்: ஏற்கனவே உள்ளதை அப்படியே எடுத்து சிலதை அங்குமிங்குமாக மாற்றிப் போட்டு, சில திராவகங்களை அளவுப் பிரமானமாக கூட்டியும் குறைத்தும் கலந்தும் புதிய வடிவங்களிளும், புதிய திரவங்களையும் உருவாக்குதலும்.

மெய்ஞானத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

விஞ் ஞானத்தில் சிறிது சிறிதாக வெளிக்கொண்டுவரப் படுகிறது.

06). ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகள் உங்கள் வாழ்வில் எப்படியான நன்மைகளை , அல்லது தீமைகளை ஏற்படுத்தக்கூடும்?

இகவாழ்வில் திட்டமிட்ட செயற்பாடுகள்தான் தேவை.

ஒரு கடைக்குச் சாமான் வாங்கப் போகும்போதுகூட தேவையானவற்றை எழுதிக்கொண்டுபோய் அவற்றை மட்டுமே வாங்கிவருவதுதான் நல்லது. இல்லாவிட்டால் தேவையில்லாதவற்றையும் அள்ளிக் கொண்டுவந்து பணத்தையும் செலவுசெய்து வீட்டையும் நெருக்கடிக்குள்ளாக்குவோம். இதுமட்டுமன்றி வேறு பெரியபெரிய விடயங்களிலும் திட்டமிடுதலே சிறந்தது.

அதையும்மீறித் துன்பமோ அன்றி கஷ்டமோ வந்தால் அதற்காக மனமொடிந்துபோய் மூலையில் உட்காந்துவிடக்கூடாது. நிலைமையை ஆராய்ந்து அடுத்து செய்ய வேண்டியவற்றைக் கவனிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07). காலவிரயம் செய்யப்படுதல் என்றால் என்ன? வாழ்வில்நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிளும் ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து வாழ முடியுமா?

அடுத்தவரைப்பற்றி புறங்கூறித்திரிதலை காலவிரையம் செய்வதாகக் கொள்ள முடியும்.

நாம் எப்போதும் பலனை நோக்கித்தான் வாழ்ந்து வருகிறோம். ஞானிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. என்ன! தேடிக்கொண்ட இலட்சியத்திலும் நோக்கத்திலும்தான் வித்தியாசம்.

08). (அ) தம்மை கடவுள் என்று கூறுபவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர்கள் அப்படியே ஏனையோரும் கடவுள் என்பதை கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்! (அத்வைதமும் அதையே சொல்கிறது)

(ஆ) இவர்களுக்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்ன?

இதற்கான காலவிரையம் தவிர்க்கப் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09). மதங்களால் மனிதன் பிரிந்து இருப்பதை எவ்வாறு தடுக்க முடியும்?

இதை யாரும் தடுக்கத் தேவையில்லை! அது தானாகவே தனது முடிவைத் தேடிக் கொள்ளும். இன்றைய புதுப்புது மதங்களும் அவை சார்ந்த மனித சமுதாய அலைகளும் அதைத்தான் செம்மையாகச் செய்து வருகின்றன.

10). உண்மையான மகிழ்ச்சி, சந்தோசம், மனநிறைவு எங்கே தங்கியிருக்கின்றது?

தம்முள் இருக்கும் ஆசைகளைப் பகுத்தறிந்து வேண்டாதவற்றை ஒதுக்கி விட்டாலே நாம் இந்த மகிழ்ச்சி, சந்தோசம், மனநிறைவுக்கு அருகே சென்றுவிடுவோம்.

இக்கனத்தில்: அடியேனின் அதிகப்பிரசங்கித்தனத்தை அனுமதித்த யாழ் மகிழ்ச்சி!

சந்தர்ப்பம் தந்த குரு ஜி. சந்தோசம்.

(ஏன்டா குடுத்தோம் என இப்ப அவர் யோசிப்பது புரிகிறது.)

கொஞ்சம் தாமதமானாலும் செய்து முடித்தது மனநிறைவு.

Link to comment
Share on other sites

1. வாழ்க்கையில் எது முக்கியம்? எது முக்கியம் இல்லை?

வாழ்க்கையில் முக்கியம் நிதானமான பேச்சும் செயலும்.

வாழ்க்கையில் முக்கியமற்றது வீணாண பேச்சும் தன்னம்பிகையற்ற செய்கையும்

2. துறவியாக ஒருவன் தனது வாழ்க்கையில் மாறுவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

துறவியாக மாறுவதில் தப்பில்லை. ஆனால் மனித ஆசாபாசங்களான ஊணாசை, உடையாசை, பெண்ணாசை, மண், பொண்ணாசை, புகழாசை இவையனைத்தையும் துறந்தவனாக இருப்பானானால் அவன் துறவி என்பதி ஜயமில்லை. :P

3. தோல்விக்கும், வெற்றிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை?

வெற்றி தோல்வி என்பது எப்போதும் தொடராது. ஒரு காலகட்டத்தில் வெற்றி வரலாம். இன்னொரு காலத்தில் தோல்வியும் வரலாம். தோல்வி வருகையில் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் தோற்க கூடாது என்ற ஆர்வத்தால் வெற்றியை அடைய முடியும். தோல்வியின் போது ஒரு ஆர்வம் வெறித்தனமான முயற்சியுடன் கூடவே இறைநம்பிக்கையும் வரலாம்.

வெற்றியை பெற்றுவிட்டால் தன்னை விட மேலோன் யாருளர் என்ற ஆணவமும் அகங்காரமும் கொம்பு முளைத்த போல் மேலோங்கி நிற்கும். இவ் ஆணவமே சிலவேளைகளில் அடுத்த தடவை தோல்விக்கு வழிகோலாகவும் அமையலாம். எனவே தோல்வியும் வெற்றியும் சமம் அதனால் பெருமைப்படுதலாலோ இல்லை முடங்குவதாலோ ஒரு பயனுமிலை என்பதை உணரணும்.

யானையும் அடி சறுக்கும் என்று பழமொழி நினைவுக்கு வருகுது குருவே.

4. உங்கள் உடலிற்கு நீங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

உடலால் இயன்றளவு ஏனையோருக்கு உதவி செய்ய நினைக்கிறேன். அளவாக புசித்து சிந்தனையுடன் கூடிய இறை வழிபாட்டோடு மனதை கட்டுப்படுத்தி யோகாசனத்தையும் கற்று உடலை உடலாக வைத்துக்கொண்டுள்ளோம். :P

5. விஞ்ஞானம், மெஞ்ஞானம் இவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை?

விஞ்ஞானத்தால் மெய்ஞ்ஞானத்தை

அஞ்ஞானமாய் அறியாமல் விட்டிருக்கின்ற இக்காலத்தில்

விஞ்ஞானம் என்பது செயற்கையாக உருவாக்கப்படினும்

எவ்வளவோ மக்கள் மெய்ஞ்ஞானத்தை இன்றும் நம்புக்கின்றனர்.

இயற்கைகள் யாவும் இறைவனாலே இயக்கப்படுகின்றன. இதை ஆராயவே இன்றைய விஞ்ஞானம் முயல்கின்றது.

இருப்பினும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் நமக்குள் கலந்திருப்பின் நிச்சயம் வாழ்க்கை சந்தோசமாகவே அமையும். அதைவிட்டு விஞ்ஞானத்தை மிஞ்சியதா மெய்ஞ்ஞானம் என வாதாடினால் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ எனக்கு தெரியாதுங்கோ

6. ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகள் உங்கள் வாழ்வில் எப்படியான நன்மைகளை அல்லது தீமைகளை ஏற்படுத்தக்கூடும்?

எந்தவொரு காரியத்துக்கும் திட்டமிடல் என்பது அவசியம். திட்டமிடலால் நம் வாழ்வில் பல நன்மைகளையும் சில தீமைகளையும் எதிர்நோக்கலாம்.

நன்மைகளென ஆராயும் போது திட்டமிடலால் நாம் ஒரு குறித்த காரியத்துக்கான திட்டமிடலை மேற்கொண்டால் அக்காரியத்தின் போது நேரத்தை மிச்சப்படுத்தலாம். செலவைக் கட்டுப்படுத்தலாம். மன நிம்மதியடையலாம்.

தீமைகளென ஆராயும் பட்சத்தில் ஒரு காரியத்தை திட்டமின்றி செய்ய காலை வைத்த பின்னர் ஐயோ நம்மால் செய்ய முடியவில்லையே என்று அரைகுறையில் நிறுத்துவதனால் அதை நிறைவேற்றவில்லையே என்று நினைத்து நினைத்து மனம் வெம்பும். அதுவே கவலைக்கு வழிகோலாகும். கோவத்தை உண்டுபண்ணலாம். சில காரியங்களால் கெளரவப்பிரச்சினை கூட வரலாம். அதனால் தற்கொலைக்கு முயலலாம். :lol:

7. காலம் விரயம் செய்யப்படுதல் என்றால் என்ன? வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதவது ஒரு பலனை எதிர்பாத்து வாழமுடியுமா?

நமக்கு தேவையற்ற விடயங்களை ஆராய முயலுதலே காலவிரயத்துக்கு முக்கிய காரணம். குரு நீங்கள் சொன்ன போல தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் காலவிரயம் மாத்திரமே ஏற்படும். காலவிரயம் என்பது நமக்கு பயனுள்ள சொற்ப காலத்தையும் வீணாண செய்கைகளுக்காக பயன்படுத்துதலே.

காற்றுள்ள போது தூற்றிக்கொள்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?

மேற்சொன்ன பழமொழிகள் காலவிரயம் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என நினைக்கிறேன்.

வாழ்வில் நாம் அன்றாடம் எவ்வளவோ செயல்களை செய்கின்றோம் எல்லாவற்றுக்கும் பலனை எதிர்பார்க்க முடியுமா?

செய் பலனை எதிர்பாராதே " இதன் அடிப்படையில் நாம் வாழ்ந்தால் நமக்கு கிடப்பதை அவ் இறைவனே ஏதோ ஒரு வழியில் நமக்கு சேர வேண்டியதை தருவான் என நம்புகிறேன் :P

8. தம்மை கடவுள் என்று கூறுபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இவர்களிற்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்ன?

சிலர் துறவறம் பூண்டு சாமி வேடம் தரித்து தாம் கடவுள் என சொல்லி பல பக்தர்களை தம்பக்கம் வைத்திருப்பதை இன்று நாம் காணக்கூடியதாக இருப்பினும் அவர்கள் கடவுள் இல்லை. அவர்களிடம் கடவுளின் சக்தி சிறிதளவு இருக்கலாம். சாமியார்கள் இறையருள் கொண்டு அற்புதங்கள் காட்டுவதாக மக்களை மயக்குவதும் ஒரு ஏமாற்று வித்தைதான். கண்கட்டி வித்தைதான் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கடவுள் தன்னால் எல்லோரையும் கவனிக்க முடியாது என நினைத்து சில புனிதமான மனித உள்ளத்தில் குடிகொண்டு அவர்களுக்கு தமது அருளைக் கொடுத்து இப்பூமியில் உலா வர விட்டிருக்கலாம் ;)

இப்படியானவர்களுக்கு நான் சொல்லி கொள்வது நீங்கள் தான் கடவுள் என சொல்லாதிர்கள். கடவுளின் சேவகன் தூதுவன் கடவுள் மீது அதீத பற்றுள்லவன் கடவுளின் சக்திகள் மூலம் நீங்கள் இயங்குகிறீங்க என்பதை மறவாது இருங்கள் என்பதே :lol:

9. மதங்களால் உலகில் மனிதன் பிரிந்து இருப்பதை எவ்வாறு தடுக்க முடியும்?

மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டிருப்பினும் அவர்கள் தத்தமக்கு ஏற்ற போல மதங்களைப் பின்பற்றுகின்றனர். இதை தடுப்பது எப்படி என்பதை ஆராய முற்படுகையில் அது காலவிரயம் ஆகிடுமே. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் உண்டு. அதற்கேற்ப அவர்களின் மனம் எம்மதத்தை பின்பற்ற நினைக்குதோ அதன்ப்டி செயற்படலாம். ;) ஒரு மதத்தில் இருப்பதும், இல்லாதுவிடுவதும், மாறுவதும் அவரவர் விருப்பம்

10. உண்மையான மகிழ்ச்சி, சந்தோசம், மனநிறைவு எங்கே தங்கி இருக்கின்றது?

சந்தோசமும் மகிழ்ச்சியும் ஒன்று தானே. இல்லையா? :lol:

மகிழ்ச்சியாக இருந்தாலே அது மனநிறைவைத் தரும் தானே. எல்லாம் நம் மனசிலேயே இருக்கின்றது. நம் சிந்தனை நல்லதாக இருப்பின் இவைகள் நம் கூடவே கூடாரம் போட்டு உட்கார்ந்திடுவினம். எதை செய்யினும் இறை நம்பிக்கையோடு சந்தோசமாக செய்ய நினைக்கையில் அது மனநிறைவை தரும் என்பதில் ஐயமில்லை. சந்தோசம் மனநிறைவு இவற்ரை நாமாக உருவாக்கணுமே தவிர அவற்றை எங்கும் விலை கொடுத்து வாங்கிட முடியாது. :lol:

ஓம் பூர்புவஸ்ஸவ

தர் ஸவி துர்வரேன்யம்

பர்வோ தேவர்ஸ தீமகி

துயோயோனப் பிரஸோதய

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! :lol:

Link to comment
Share on other sites

1. வாழ்க்கையில் எது முக்கியம்? எது முக்கியம் இல்லை?

குருவே

"வாழ்கை என்றால் அது ஒரு துணிச்சல் நிறைந்த விடாமுயற்சி என்று பொருள்படும்"

இப்படியான துணிச்சல் மிக்க வாழ்கையில் வாழ்வை இரசித்து வாழ்வதே தான் முக்கியம்............எவன் ஒருவன் வாழ்கையை இரசிக்க தொடங்குகிறானோ அவனிடத்தில் எல்லாம் வந்தும் சேரும் என்பது சிஷ்யனின் கருத்து......... :D

வாழ்கையில் முக்கியமில்லாதது பிறறை பார்த்து வாழ்கையை வாழ முயற்சிப்பதே ஆகும்.......எமக்கு என்று ஒரு வாழ்கை தரபட்டிருக்குது அதை ரசித்து வாழமுற்படமால பிறரை பார்த்து ஏங்குவது மற்றும் பொறாமைபடல் வாழ்கையில் முக்கியமில்லை......

இதை இந்த ஆச்சிரமத்தில் பல ஆண்டுகளிற்கு முன் கொண்டு நடத்திய எங்கள் திருவள்ளுவர் தாத்தா தன் திருகுறளிள் இவ்வாறு கூறி இருகிறார்......... :P

குறள்-

பொறி இன்மை யார்க்கும் பழிஅன்று;அறிவு அறிந்து

ஆள்வினை இன்மை பழி.

பொருள்-

உடல் உறுப்பு செயற்படாமல் இருபது குறை இல்லை,தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொண்டு முயற்சி குன்றி இருபதே பழியாகும்......

2. துறவியாக ஒருவன் தனது வாழ்க்கையில் மாறுவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

நான்கு பேருக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு தீமை செய்யாமல் சாதாரண வாழ்கை வாழ்ந்து பிறறை மகிழ்ச்சியாக வைத்திருபதோவு பெற்றெடுத்த தாய்,உன்னை நம்பி வந்த மனைவி,உன் பிள்ளைகள் என்பவர்களை சந்தோசமாக வைத்து கொண்டால் அதுவே சிறந்த துறவி........எந்த சமயத்திலையும் கூறவில்லை தாடி வளர்த்து கையில் கமண்டலம் வைத்து கொண்டு காட்டில் சென்று தவம் இருந்தால் தான் துறவி என்று இவ்வாறு இருப்பவர்களும் துறவிகள் தான்...... :D

இதனை தான் திருவள்ளுவர் தாத்தா தன் குரலில் இவ்வாறு கூறுகிறார்.........

குறள்-

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

பொருள்-

உலகு பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டுவிட்டால்,மொட்டை அடித்தல்,சடை வளர்த்தல் ஆகிய புறகோலங்களும் வேண்டா............

துறவறத்தை பற்றி நான் பலநாட்களிற்கு முன் வாசித்த புத்தகத்தில் இவ்வாறு குறிபிட்டு இருந்தார்கள் புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது...........அதில் கூறிய சில விடயங்கள்......

வெய்யிலில் நின்றவனுக்கு நிழல் தரும் சுகத்தை போல,லெளகியத்தில் இருந்து துறவறதிற்கு வரும் ஒருவனுக்கு துறவு தரும் இன்பம்,இளமைத் துறவிற்கு இது கிடையாது.......எல்லாரும் லெளகியத்தில் ஈடுபடுங்கள் அதுவே உங்களுக்கு சுகமாக அமைந்துவிட்டால்,உலக் இயக்கத்தை உங்கள் இல்லறத்தின் மூலம் நடத்துங்கள்,அதை தாங்க முடியாதவர்கள் மட்டும் வெளியே வாருங்கள்,அதிகம் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டும் தான் அப்படி வருவீர்கள்.அப்போது போதிப்பவர்கள் குறைவாகும்.கேட்பவர்கள் அதிகமாகவும் இருபீர்கள்.

எல்லாரும் பல்லகில் அமர்ந்தால் தூக்குவது யார்?எல்லாரும் துறவி ஆகிவிட்டால் போதனைகேன்ன அவசியம் என்று வாசித்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் குருவே!!!

துறவறம் பற்றி பட்டினத்தார் தாத்தா இவ்வாறு கூறுகிறார் அதில பல விசயங்கல் இருகிறது........

"காதி விளையாடி இருகை வீசி வந்தாலும்

தாதி மனம் நீர்குடத்தே தான்"

பொருள் -அனைத்தும் துறந்து கூட,கூட வந்த நாயைத் துறக்க முடியாதது போல,எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனசு செய்கின்ற வேலையைத் துறக்கமுடியாமல் நாம் அவதிபடுகிறோம்........ :D

3. தோல்விக்கும், வெற்றிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை?

குருவே!!

தோல்வி,வெற்றிக்கு இடையில் வித்தியாசங்கள் இல்லை அவை எமக்கு எடுத்து தரும் பாடங்களாகவே இருகின்றன.............எப்படி இரவு,பகல் என்பது நியதி போல.................ஒர் இருள் மிகுந்த இரவின் பின் வெளிச்சமான பகல் வருவது போல..........தோல்வி என்ற ஊக்க மருந்து மூலம் வெற்றி என்ற இலக்கை அடையும் ஒரு வழியாகவே தான் இதனை நான் பார்கிறேன்......

இதை தான் யமுனாந்தசரஸ்வதி சாமிகள் என்ற ஒரு பெரிய சாமி :P கூறி இருகிறார் வாழ்கை என்பது ஒரு வட்டம் மாறி அதில வெற்றி,தோல்வி மாறி மாறி வரும் என்று அதற்கு நிலை இல்லை என்று.....

தோல்விகளை வெற்றிகளின் படிகட்டாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்..........தோல்விகளை கண்டு துவண்டுவிட கூடாது வெற்றிகளை கண்டு கர்வம் அடைய கூடாது.............வாழ்கையில் இரவு,பகல் எவ்வாறோ அதே மாதிரி இந்த வெற்றி,தோல்வியையும் எடுத்து செல்வதே வாழ்கை........

அத்துடன் போட்டியில் வெற்றிபெற்றவனையும்,தோல்வியு?றவனையும் பாராட்டலாம் ஆனால் போட்டியில பங்குபற்றாம விமர்சனம் கூற வருவார்களே அவர்களின் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் விடுவதே சிறந்தது.........

யமுனாந்தசரஸ்வதி சாமிகள் சொல்லுகிறார் எனக்கு வெற்றிபெற்றவனையும் பிடிக்கும்,தோல்வியுற்றவனையு?் பிடிக்கும் நடுவில இருந்து கைதட்டுறவனை எனக்கு பிடிகாது என்று :angry: ...............

4. உங்கள் உடலிற்கு நீங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

திருமூலர் கூறி இருகிறார்

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா நென்று

உடம்பினை யாழ்னிருந்து ஒம்புகிறேனே.

ஆற்றலின் செயல் நிலையாகிய உயிர் இயங்குவது உடலின் வழியே தான்..............நீண்ட நாள் உயிர் வாழ உடல் நலமாக இருக்க வேண்டும்........."தெளிவான அறிவிற்கும் உடல் நலம் இன்றியமையாதது" இவ்வாறான உடலை நாம் பேணிகாக்க வேண்டும்.

சித்தருக்கும்,ஞானியருக்கும் கூட உடல் நலம் இன்றியமையாதது என்றால்,உலகியலில் இருந்து முன்னேற துடிபவருக்கு உடல் நலம் கட்டாயம் தேவை!கவனாமாக இருக்க வேண்டும் உடலில்!

இவ்வாறான உடம்பை கவனிக்க நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கு சில வழிகளை சொல்லுகிறேன் கேளுங்கள்.........

1)உடலிற்கு சக்தி அளிபது உணவு.."அளவிற்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு" பெருமாபாலும் நோயிற்கு இடம் அளிபது பொருந்தாத அதிக அளவு உணவே ஆகவே உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

2)உணர்ச்சி வசபடகூடாது,குறிப்பாக அடிகடி கோபபடகூடாது இது என்னுடை கல்விகற்கும் வெண்ணிலாடேஸ்வரி அம்மையாருக்கும் பொருந்தும்......... :P

3)மது,விபசார மாது ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது.......அதற்காக ஜமுனாந்தசரஸ்வது ஸ்வாமிகள் முற்றிலும் தவிர்க்கும் படி சொல்லவில்லை...........அது உங்கள் விருப்பம்......நான் உடம்பை பேண வழி தான் சொன்னனான்...

இவற்றை எல்லாம் புரிந்து உடல் நலம் காத்து,மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் வாழ்வீர்!!!!

5. விஞ்ஞானம், மெஞ்ஞானம் இவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை?

குருவே!!

விஞ்ஞானம் பற்றி எல்லாரும் அறிந்திருப்பார்கள் மெஞ்ஞானம் பற்றி சிலருக்கு தான் தெரியும் சிலர் அதை உணராமலே அதை பற்றி கதைப்பது வேடிக்கை.......

விஞ்ஞானதிற்கும் மெஞ்ஞானதிற்கும் உள்ள ஒற்றுமை இரண்டிலும் ஞானம் இருக்கு விஞ்ஞான ஞானத்தை குரு வைத்து பெற்று கொள்ளாம் ஆனால் மெஞ்ஞானத்தை குரு கொண்டு பெற்று கொள்ள முடியாது அதனை தாமாகவே உணர வேண்டும் அதுவரை மெஞ்ஞானத்தை உணர்வது கடினம் தான்............அதற்காக மெஞ்ஞானத்தை உணர வேண்டியது கட்டாயம் என்று இல்லை விரும்பினா அதனை உணரலாம்........ஆனால் இன்றைய உலகில் விஞ்ஞானத்தை பற்றி அறியாம இருக்க முடியாது........

குருவே எனது பார்வையில் இரண்டிலும் மூலபொருளாக "அணு" இருகிறது.........அந்த அணுவை கண்ணால் பார்க்க முடியாது...........எனி மேலும் நான் பார்க்க முயற்சியும் செய்ய மாட்டேன்.......

6. ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகள் உங்கள் வாழ்வில் எப்படியான நன்மைகளை அல்லது தீமைகளை ஏற்படுத்தக்கூடும்?

குருவே!!

மேலாண்மையில் முதற் கூறு திட்டமிடல்.கொடுத்துள்ள செயலை அல்லது செயல்திட்டத்தை எப்படி திறமையுடனும்,நோக்கம் நிறைவேறும் வகையிலும் செய்வது என்பதிற்கு திட்டமிடல் அவசியம்....திட்டமிடல் எல்லாம் துறைகளிளும் காணபடும் முக்கிய கூறாகவே எடுத்து கொள்ளமுடியும்

நெப்போலியன் கூறுகிறார்

"நன்றாக வாழ வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிடுங்கள் என்று"

இந்த கருத்துடன் நானும் ஒத்து போகிறேன் திட்டமிடல் மூலம் நன்மையை தான் அடைமுடியும் அவ்வாறு தோல்வியை தழுவுகிறோம் என்றால் திட்டமிடல் தவறு என்று தானே பொருள்படும் குருவே.........அவ்வாறான திட்டமிடல்களாள் பிரயோசனம் இல்லை என்றே கூறலாம்.......எந்த விடயத்திலும் இரு பக்கங்கள் உண்டு பூமிக்கு துருவம் இரண்டு,நாணயதிற்கு பக்கம் இரண்டு என்பது போல எந்த விடயத்திலும் நன்மை,தீமை என்ற இரு வெவ்வேறுபட்ட பக்கங்கள் உண்டு அந்த நன்மையும்,தீமையும் சரியாக நடைமுறைபடுத்துவது நாம் சரியாக கணிக்கும் திட்டமிடலில் தான் தங்கி இருகிறது.......

இதனை ஆச்சிரமத்தின் பழைய தாத்தாவான திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார் தனது குறளிள்.........

குறள்-

வருமுன்னர் காவாதான் வாழ்கை ஏரிமுன்னர்

வைத்தாறு போலக் கெடும்

பொருள்-

வரபோகின்ற குற்றங்களை,தவறுகளை,வருவதிற்க

முன்பே காத்து கொள்ளாதவர் வாழ்கை எரியும் நெருப்பின் முன்வைக்கபட்ட வைகோல் போல் அழியும்.

ஆகவே இதில் இருந்து திட்டமிடல் மேலாண்மையின் அடிதளம்,எதிரிகாலத்தில்.நம் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான நுணுக்கங்களை செயல்திட்டங்களை திட்டமிடுவதில் அடங்கும்.......

வாழ்கையின் இலக்கை திட்டமிடாவிட்டால் காற்று வழிச் செல்லும் கப்பல் கதையாகிவிடும் குருவே..........இது தான் அடியேனின் கருத்து..............

இதை உலகபுகழ் பெற்ற ஜமுனாந்தசரஸ்வதிஸ்வாமிகள் இப்படி சொல்லுகிறார் "துணி சிறிது கிழிந்துள்ளது என்று தெரிந்தவுடன் தைத்துவிட வேண்டும்,பெரிதாக கிழிந்தா அதற்கு பின் உதவாது என்று..... :P

7. காலம் விரயம் செய்யப்படுதல் என்றால் என்ன? வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதவது ஒரு பலனை எதிர்பாத்து வாழமுடியுமா?

குருவே!!

ஒரு விதத்தில் நாம் யாவருமே காலத்தை விரயமாக்கிறோம் என்று சொல்ல முடியாது ஏதோ செய்கிறோம்.........மது அருந்தும் நிலையதிற்கு செல்பவன் தனது சந்தோசதிற்காக அங்கே செல்கிறான் அந்த நேரத்தை விரயமாக்கி அதில் ஒரு சந்தோசம் பெருகிறான்..........இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம்......மனிதனாக பிறந்த எல்லாருமே ஒரு வகையில் காலத்தை விரயமாக்கிறோம் எங்களுக்கே தெரியாமலே என்று கூறலாம் அந்த மது அருந்துபவன் மதுவிடுதிக்கு சென்று மது அருந்துவதில் தப்பில்லை ஏன் எனின் அவன் பணம் அவன் சந்தோசம் என்று கூறலாம்...........ஆனால் செய்ய வேண்டிய செயல்களை கால விரயம் இன்றி செயற்படுத்த வேண்டும் என்ற எடுகோளுடன் நான் ஒத்து போகிறேன்.......

இதனை தான் திருவள்ளுவர் தாத்தா இவ்வாறு கூறுகிறார்...........

குறள்-

நாளேன ஒன்றுபோல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

பொருள்-

நாள் ஒவ்வொன்றும் சிறந்ததாக தெரிகின்றது:ஆனாலது உயிரை அறுக்கும் வாள் என்று உணரவேண்டும்..........

*குறிப்பாக நான் 21 வருடம் வாழ்கையை ஓட்டி விட்டேன் இந்த காலத்தில் நான் ஒரு 6 வருடம் குழந்தை அந்த பருவத்தில் நான் எதையோ இரசித்து செய்தேன் அதை விரயம் என்று சொல்ல முடியுமா என் வாழ்கையில்..........பிறகு அவ்வாறு வளர்ந்து இன்று யாழில் உங்களுடன் உரையாடுறேன் இது காலவிரயம் அல்ல ஒரு செயல் செயற்படும் போது அது விரயமாக ஏற்று கொள்ள முடியாது..........எல்லா மனிதர்களும் ஏதோ ஒன்றை நிறைவேற்ற இங்கே படைக்கபட்டிருகிறார்கள் அந்தந்த பணியை அவர்கள் செய்வார்கள் என்றும் கூறமுடியும் ஆனால் அதற்காக சோம்பேறிகளாக இருக்க சொல்லவில்லை இந்த ஜமுனாந்த ஸ்ரஸ்வதி சாமிகள்.....

காலவிரயதிற்கு ஜமுனாந்தஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் போதிப்பது பந்தயத்தொல் ஒரு நொடி அதிகம் எடுத்டுக் கொண்டால்,தங்கபதக்கம் ஒலிம்பிக்கில் கிடைக்காமல் போகலாம்.......ஆகவே உங்கள் ஆசைகேற்ப என்னவும் செய்யுங்கோ ஆனால் செய்ய வேண்டியதை காலநேரத்தோடா செய்யுங்கோ என்பதே ஆகும்............ :lol:

*குருவே!!

பலன் மீது பற்றி இன்றி ,முடிந்த அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பகவத் கீதை சொல்கிறது ஆனால் தொழில் செய்கிறோம் அங்கே போய் பலனை எதிர்பாராமல் செய்ய முடியுமா இந்த உலகில் எல்லா பொருளும் ஒரு பலனை எதிர்பார்த்து தான் இயங்குது.......ஒரு அப்பிளை மேலே எரிந்தா மறுபடி அது கீழே வந்து நிற்கிறது அதை போல் இன்றைய உலகில் அல்ல அந்த காலத்திலும் எல்லாம் ஒரு பலனை எதிர்பார்த்து தான் நடைபெறுகிறது இதை யாராலும் மறுக்கமுடியாது என்றே கூறலாம்............ஒரு தொண்டர் நிறுவனத்தை ஒருவர் ஒரு பலனும் இல்லாம இயக்கினாலும் அவர் உள்மனதில் என்னை நாலு பேர் புகழ்வார்கள் என்ற ஒரு நினைப்பு இருக்க தான் செய்யும் அப்படி இல்லாதவர்கள் ஒரு சிலரே.........ஆகவே என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் இந்த பூமி சுற்றுகிறது அதில் நாங்கள் ஒட்டி கொண்டு இருகிறோம்......

குருவே விரதம் இருகிறோம் அதற்கு கூட ஒன்றை எதிர்பார்தல்லவா இருகிறோம் ஒரு பலனை ஆகவே ஏதோ வகையில் ஒரு பலனை எதிர்பார்கிறோம் நம்மை அறியாமலே.......

அதற்காக எல்லாவற்றையும் இதனுள் அடக்கவும் முடியாது ஒரு தாய் எந்தவித பலனையும் எதிர்பாராம தான் பிள்ளை மீது அன்பு வைக்கிறாள்..............வரும் தாரம் பொக்கட்டில் எவ்வளவு இருக்கும் என்று பார்தல்லவா வருகிறாள் குருவே!!!

*இன்றைய சமூகம் தான் பலனை எதிர்பார்த்து செய்கிறது என்று இல்லை அந்த காலம் முதல் இப்படி தான் என்று காட்டுவதிற்கு இந்த கதை உதாரணம் ஆகும்.......

பட்டினத்தார் தமக்கையின் இல்லதிற்கு பிச்சை எடுக்க போறார்,இவரின் குரல் கேட்டதும் தான் தாமதம் கதவு அகல திறந்து கொண்டது,இவருக்காகவே காத்திருந்தது போல தோற்றமளித்தா தமக்கை

"உள்ளே வா தம்பி அக்காவின் கையால் பிச்சையிடும் போது,வாசற்படி தாண்டி நிற்ககூடாது;ஒரு வேளை சாப்பிட்டுவிட்டுப் போ ! என்றார்கள்.

அந்த பந்தத்தில் நான் உருகிவிட்டேன்;விட்ட குறை தொட்ட குறை.உள்ளே போனா இலை விரித்து,காய்கறி வைத்தாள்,அன்னம் படைத்தாள்,அள்ளி உண்ண போகும் போது தம்பி! என்றால்.

என்ன?என்றேன்

"நானும் நீயும் பெற்றோர்களுக்கு ஒரு மகள்,ஒரு மகனாகப் பிறந்தோம்,உன் மனம் ஏனோ இப்படி மாறிவிட்டது,அதற்காகப் கோடிகணக்கான நம் பூர்வீகச் சொத்தை நாய் பேய்கள் தின்னக் கூடாது தம்பி.என்னுடைய சொத்துகளேள்ளாம் என் ஆச்சி மக்களை சேர வேண்டும் என்று ஒரு தரம் ஊர் பெரியவர்களிடம் சாட்சி கைஎழுத்து வாங்கி கொடுக்க கூடாதோ என்றாள்.

நான் சிரிக்கவில்லை;அவள் அள்ளிவிட்ட்ட அன்னம் சிரித்தது,பிச்சைகாரனுக்கு அள்ளி இட்டாலும்,பிரதிபலனை பார்கின்ற சமூகம்.நான் என்ன பதிலை சொல்வேன் என்கிறார்!!

இதில் இருந்து உங்களுக்கே புரிந்து இருக்கு மல்லவா!!!

8. தம்மை கடவுள் என்று கூறுபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இவர்களிற்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்ன?

குருவே!!

பைத்தியகாரன் தன்னை பைத்தியம் என்பதை ஒத்து கொள்வானோ அதை போல் இவர்களை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை........."திருடனா பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்கமுடியாது என்பது போல" இவர்களாக திருந்தாதுவிடில் இவர்களை பற்றி பேசுவது காலவிரயம் என்றே நினைக்கிறேன் குருவே!!

எமகுள் நாம் கடவுளை உணரமுடியுமே தவிர நாம் கடவுளாக மாறி சேவை செய்யமுடியாது என்பது என்னுடைய கருத்து..........கடவுளை தன்னுள் உணர்ந்தவன் கதைக்கமாட்டான் உணராதவன் கதைக்காம இருக்க மாட்டான் என்பது அடியேனின் கருத்து......

இவர்களை சொல்லி தவறில்லை "ஏமாறுகிறவன் இருக்க மட்டும் ஏமாற்றுகிறவன் இருந்து கொண்டே இருப்பான் அல்லவா" எப்ப ஏமாறுகிறவர்கள் திருந்த போகிறார்களே அன்றேன் இதற்கு ஒரு முடிவும் வரும்.........!!!

9. மதங்களால் உலகில் மனிதன் பிரிந்து இருப்பதை எவ்வாறு தடுக்க முடியும்?

குருவே!!

முதலில் மதம் என்றால் என்னவென்று பார்த்தால் அது ஒரு காந்தம் போல ஒரு காந்தம் பல காந்தங்களை சக்தி ஊட்டி செயல்படச் செய்யும்,ஆனால்,சக்தி ஊட்டிய காந்தம் தன் சக்தியை இழப்பதில்லை,எல்லா மதங்களும் எல்லையற்ற சக்தியாகிய ஆண்டவரை போற்றும்....

ஆனால் அவைகள் இறைவனை பின்பற்ற சொல்லும் விதிமுறைகளும்,சம்பிரதாயங்கள?ம் தான் வித்தியாசமானவை.........இதில் மனிதன் நன்கு ஊறிவிட்டான் ,கடவுளை அடைய மதம் அவசியம் என்று இல்லை அது நல்வழியை காட்டும் ஒரு ஆசானாக தான் இருந்தது காலபோக்கில் அதுவே மனிதன் பிரிந்து நிற்க வழி வகுத்துவிட்டது........

இதனை தடுக்கமுடியாது.......ஒரு அறிஞர் பெயர் தெரியவில்லை கூறுகிறார் "மதம் வந்து புற்றுநோயை போல பரப்பிவிட்டார்கள்" அதில் இருந்து மீட்பது கடினம் என்று........அந்த கூற்றுடன் நானும் ஒத்து போகிறேன் குருவே!!

மனிதன் மதத்தை பின்பற்றுவது தவறில்லை அவனை ஒழுங்குபடுத்த மதம் என்ற ஒரு கருவி தான் ஆயுதம் ஆனா அதை ஆயுதமே மனிதனை அழிக்கும் ஆயுதமாக மாறகூடாது என்பது என்னுடைய கருத்து!!

10. உண்மையான மகிழ்ச்சி, சந்தோசம், மனநிறைவு எங்கே தங்கி இருக்கின்றது?

குருவே!!

உண்மையான மகிழ்ச்சி,சந்தோசம்,மனநிறைவு யாவும் தமகுள் இருப்பதை அறியாது மக்கள் அதை தேடி திரிகிறார்கள்.......... இவை யாவும் நம்முள் தான் இருகிறது அதை பாவிக்க தெரியாம அலைகிறோம்,மற்றவனை ஒரு நிமிடம் மகிழ்ச்சி பண்ணி பாரு அந்த ஒரு நிமிடம் உன்னுள் மகிழ்ச்சி,மனநிறைவு எல்லாவற்றையும் காண்பாய்!!

இதனை அவர்களாக உணர்ந்து வாழ்கையில் ஆனந்தமாக வாழ்கையை கழிப்பது அவர்களின் கையில் தான் இருகிறது பெரியவர்கள் சொல்லி இருகிறார்கள் "மனசு ஒரு குரங்கு" என்று குரங்கு என்ன செய்யும் நீங்கள் செய்ததை திருப்பி செய்யும் அதை போல் தான் உங்களின் மனசும் அதை முதலில் உணரவேண்டும்.....

இதனை இந்த ஆச்சிரமத்தில் இன்னொரு பழைய தாத்தாவன திருமூலர் தாத்தா திருமந்திரத்தில் இவ்வாறு சொல்கிறார்

"தன்னை அறியத் தனகொரு கேடில்லை;

தன்னை அறியாமற் தானெ கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே,அர்சிக்கத் தானிருந் தானே!"

"தானே தனக்கு பகைவனும்,நண்பணும்

தானே தனக்கு மறுமையும்,இம்மையும்

தானே தான்செய்த வினைபயன் துய்பானும்

தானே தனகுத் தலைவனும் ஆமே!

தன்னை அவன் அறிந்துவிட்டால் பிறகு மகிழ்ச்சி,மனநிறைவு யாவும் அவனிடம் வந்துவிடும்......

குருவே அடியேனின் கருத்தில் ஏதாவது பிழை இருப்பீன் மன்னித்து அருள்வீராக மீண்டும் அடுத்த போதிமர நிழல் பரிட்சையில் உங்களை சந்திகிறேன் குருவே..........சிஷ்யன் தேர்ச்சி பெறவில்லை எனின் தண்டனை தரவேண்டம் குருவே!!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்.

' திரு வாக்கும் செய் கருமம் கைகூட்டும்

பெருவாக்கும் பீடும் பெருக்கும்--- ஆதலால்

வானோரும் யானை முகத்தானைக்

காதலால் கூப்புவர் தம் கை."

' இது ஒரு வில்லங்கமான கதை"

ஒருநாள் தேவசிற்பியான விச்வகர்மாவுக்கு ஒரு வில்லங்கமான எண்ணம் தோன்றியது. மும்மூர்த்திகளான சிவன், விஷ்னு, பிரம்மாவுக்கு ஏதாவது சிறப்பான பரிசு கொடுக்க விரும்பினார். அதனால் அவர்களுக்கு தனது தவவலிமையினால் உயர்வான விற்களைச் சிருஷ்டித்து பரிசளித்தார். அவ் விற்களின் வலிமையைச் சோதித்துப் பார்க்குமாறு பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் சிவபெருமானையும், திருமாலையும் கேட்டுக் கொண்டார்கள். அதை ஏற்று சிவனும், விஷ்னுவும் ஒரு சினேகபூர்வமான யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த விச்வகர்மாவின் மனதில்சிறு ஆணவம் தலைதூக்கியது. தனது வில்லைக் கொண்டுதான் இனிமேல் இவர்கள் போர் செய்வார்கள் என்றெல்லாம் எண்ணினார். இதைதனக்குள் உணர்ந்த சிவன் அவரது ஆணவத்தை முளையிலேயே களைந்துவிட திருவுளம் கொண்டார். பின்னாளில் அந்த வில்லுக்கு வில்லங்கம் இருக்கு என்பதைத் தனது ஞானதிருஷ்டியால் தெரிந்து கொண்ட அவர் வில்லைப் பிடித்திருந்த இடது கரத்தை சிறிது இறுக்கினார். உடனே அவ் வில்லின் நடுப்பகுதி கொஞ்சம் நொருக்குண்டு சேதமுற்றது. அவ்வளவில் அப் போர் நிறுத்தப் பட்டது.

சிவன் தனது வில்லை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த வில்லை ஜனக மகாராசாவின் முன்னோர்களில் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு ஒப்படைத்து விட்டார். அவ் வில் ஜனகரின் அரன்மனையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு தினமும் பூஜிக்கப் பட்டு வந்தது.

திருமால் தனது வில்லை இரிசிகர் என்ற முனிவரிடம் கொடுத்து வைக்க அம் முனிவர் அவ் விஷ்னு தனுசை எடுத்துச் சென்று ரேனுகாதேவியின் கணவரும் பரசுராமரின் தந்தையுமான ஜமதக்னி முனிவரிடம் கொடுத்து வைத்தார். அவ் வில்லானது அவரது பர்ணசாலையில் வைத்துப் பூஜிக்கப் பட்டு வந்தது.

இதனால் விச்வகர்மாவின் ஆணவத்தால் அவருக்கு வரவிருந்த வில்லங்கம், வில் பங்கமானதால் ஒரு முடிவுக்கு வந்தது.

" வரும் வாரத்தில் மீன்டும் வில் வளையும்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் அயோத்தி மகாநகரத்தில் தசரத மகாராஜனின் அரசசபை கூடியிருக்கிறது. அப்போது அவையில் ஒரு ராஜரிஷி கம்பீரமாக உள்ளே வருகிறார். உடனே எல்லோரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை தருகின்றனர். மன்னன் தசரதன் சிம்மாசனத்தினின்றும் இறங்கிவந்து அவரை எதிர்கொண்டழைத்து தகுந்த ஆசனம் கொடுத்து உபசரிக்கிறார். சிரம பரிகாரம் செய்தபின் மன்னன் தசரதன் சுவாமி தாங்கள் வந்த காரியம் யாது? என வினாவுகிறார்.

அப்போது அந்த ரிஷியானவர் கூறுகிறார், மன்னா தசரதா நீ நீடு வாழ்க. உனது அதிகாரத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் நானும் இன்னும் பல முனிவர்களுமாக ஓர் யாகம் செய்கின்றோம். அங்கே சில அசுரர்கள் வந்து மாமிசத் துன்டங்களையும், வேறு பல அசுத்தமான பொருட்களையும் வேள்விச்சாலையில் வீசி யாகத்தைக் குழப்புகின்றார்கள். அதனால் அந்த வேள்வி முடியும்வரை ஒரு வீரன் கூடவே இருந்து அந்த அசுரர்களிடமிருந்து பாதுகாத்துத் தர வேண்டும். அதற்கென்ன சுவாமி! நானே வந்து கூடவேயிருந்து யாகத்தைச் செவ்வனே முடித்துத் தருகின்றேன் என்றார் மன்னன் தசரதன்.

மன்னா நீ வேண்டாம். உனது மகன் இராமனை என்னுடன் அனுப்பு. யாகத்தை இனிதே முடித்துவிட்டு அவனைப் பத்திரமாக உன்னிடம் கொண்டுவந்து விடுகிறேன்.

மன்னன்: சுவாமி! அவன் பாலகன். அசுரர்களின் மாயங்கள் இன்னும் அவனுக்குத் தெரியாது. அதுதான்..... .

தசரதா! உனக்கு என்மீத நம்பிக்கையில்லையா? அதற்கில்லை சுவாமி! என்ற தசரதன் தங்களுக்குத் தெரியாததல்ல எனக்கூறி சிலகாலத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூருகிறார்.

(இந்த இடத்தில் ஒரு சிறுவனிடம் வில்லங்கம் செய்த ஒரு வில்லைப்பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. இந்த வில் அன்று செய்த விவகாரத்தால்தான் பின்னாளில் பெரிய, பெரிய வில்லுகள் எல்லாம் முட்டி மோதிக் கொண்டன.)

குடிமக்கள் ஒருநாள் அரசசபையில் வந்து முறையிடுகின்றனர். அரசே! கொடிய காட்டு விலங்குகள் எல்லாம் ஊருக்குள் நுழைந்து தொல்லை தருகின்றன. எமது வயல்கள், பயிர்கள் எல்லாவற்றையும் நாசம் செய்கின்றன. ஆட்களையும் அடித்துக் கொல்கின்றன. அதனால் தாங்கள்தான் அவற்றிடமிருந்து எங்களைக் காத்தருள வேண்டும்.

நன்று! நீங்கள் சென்று வாருங்கள். என்று சொன்ன மன்னன் தசரதன் அமைச்சரிடம் காட்டில் வேட்டையாடுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி கூறினார்.

மன்னன் தசரதனிடம் ஒரு விசேடமான திறமைஒன்றுன்டு. ஒரு சத்தம் கேட்டால் அதன் உருவத்தைப் பாராமலே அச் சத்தம் வந்த திசையில் அம்பால் அடித்து விடுவார். அப்படியே அன்றும் வேட்டையாடும்போது ஒரு மிருகம் தண்ணீர் அருந்தும் சத்தம் கேட்கிறது. உடனே அத்திசையைக் கூர்ந்து கவனித்து அந்த இலக்கை நோக்கி அம்பை விடுகிறார். அப்போது அங்கேயிருந்து அம்மா, அப்பா என்ற கூக்குரல் கேட்டு திகைத்துப்போய் ஓடிச்சென்று பார்த்தால், ஒரு சிறுவன் அம்பு பட்டு முக்கி முனகிக் கொண்டு விழுந்து கிடந்தான். ஆ..ஆ.. என்ன காரியம் செய்து விட்டோம். விலங்கு என நினைத்து அநியாயமாக ஒரு சிறுவனைக் காயப்படுத்தி விட்டோமே. எனக் கலங்கி அவனை அப்படியே தூக்கித் தன் மடியில் போட்டு மகனே! நீ யார்? இந்த அடர்ந்த கானகத்திற்கு நீ ஏன் வந்தாய்? என்று கேட்டான்.

அதற்கு அச் சிறுவன் உங்களைப் பார்த்தால் நல்லவர்போல் தெரிகிறது. தாங்கள் யார்? என வினாவினான். மகனே! நான் ஒரு பாவி. நான்தான் இந் நாட்டு மன்னன் தசரதன்.

ஆ. அரசனா? அரசே தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அருகில் உள்ள குடிசையில் எனது தாய், தந்தையர் தாகத்தினால் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் கண் தெரியாது.அவர்களிடம் இந்தக் குடத்திலுள்ள தண்ணீரைக் கொடுத்து நடந்த விபரத்தைப் பக்குவமாக அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கண் மூடினான். மன்னனும் மிகுந்த கவலையுடன் அச் சிறுவனின் உடலைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நீர்க் குடத்தையும் மறு கையில் தூக்கிக் கொண்டு அந்த வயோதிபத் தம்பதியரின் குடிசையை அடைந்தான். காலடிச் சத்தம் கேட்ட அத் தம்பதிகள் மகனே! வந்து விட்டாயா? ஒரே தாகமாக இருக்கிறது. தண்ணீரைக் கொடு எனக் கேட்டனர்.

அப்போது மன்னன் தசரதன் அவர்களிடம் தண்ணீர்க் குடத்தைக் கொடுத்துக் கொண்டே நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறி, பெரியோர்களே! நான் வேண்டுமென்று இதைச் செய்யவில்லை. காட்டு விலங்கு என நினைத்துத்தான் அம்பு போட்டேன், அது இப்படியாயிற்று எனக் கவலையுடன் கூறி அடியேனைப் பொறுத்தருள வேண்டும் என இறைஞ்சி நி;ன்றான்.

அதற்கு அப் பெரியவர்கள்: எங்களுக்கோ பார்வை கிடையாது. எங்கள் மகன்தான் எங்களுக்குச் சகலமுமாகவிருந்தான். அவனை அநியாயமாகக் கொன்று விட்டாயே எனக் கதறி அழுது கொண்டே ' நீயும் எங்களைப்போல் உனது புத்திரனைப் பிரிந்து புத்திர சோகத்தால் இறந்து போவாய்" எனக் கூறியபடி உயிரை மாய்த்துக் கொண்டனர். மன்னன் தசரதனும் மூன்று உடல்களையும் தகனம் செய்து விட்டு, அவற்றிற்குரிய ஈமக் கிரியைகளையும் செய்து அரன்மனை திரும்பினான்.

இப்போது அவரது மனதிலே மெல்லியதாக ஒரு விடயம் புலப்பட்டது. அவருக்கு இதுநாள்வரை பிள்ளைகள் கிடையாது. இப்போது இத் தம்பதியர் தனக்கு ஒரு நன்மை செய்துவிட்டுப் போனதாகவே அவருக்குப் பட்டது. அவர்கள் இட்ட 'சாபமே வரமானது" போல் உணர்ந்தார்.

உடனே தகது குலகுருவாகிய பிரம்மரிஷி வசிட்டரிடம் சென்று ஆலோசனை செய்து அவர் சொற்படி ஒரு நல்ல நாளில் புத்திர காமோஷ்டி யாகம் செய்யலானார்.

மீண்டும் வில்லு வளையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ராமே ராமே ரமோதி ராமே ராமே ராமே மனோரமே. குலகுருவாகிய வஷிட்ட மகரிஷியின் சொற்படி மகா முனிவரான கலைக்கோட்டு மாமுனியின் தலைமையில் புத்திர காமோஷ்டி யாகத்தைத் தசரத மாமன்னர் செய்தார். அப்போது அவ் வேள்வியினின்றும் ஒரு பூதம் வெளிக்கிளம்பி தசரதரிடம் ஒரு பாத்திரத்தில் பாயாசம் போன்ற திரவத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தது. கலைக்கோட்டு மாமுனியின் சொற்படி மன்னன் அப்பாயாசத்தை இரு பங்காக கோசலையிடமும் கைகேகியிடமும் தருகிறார். கோசலையும் தான் சிறிது அருந்திவிட்டு மிகுதியை சுமித்திரையிடம் தருகிறாள்.சுமித்திரையும் அப் பாயாசத்தைப் பருகும்போது கைகேகியும் தனது பாயாசத்திலிருந்தும் பாதியை சுமித்திரைக்குத் தருகிறாள். சுமித்திராவும் மீன்டும் பாயாசத்தைக் குடித்துவிட்டு கிண்ணத்தை அருகிலுள்ள மாடத்தில் வைக்கிறாள். யாரும் கவனிக்காதபோது ஒரு பறவை வந்து அக் கிண்ணத்தைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. பின் சிலநாளில் மூவரும் கர்ப்பமடைந்து கோசலை ஸ்ரீ இராமனையும், கைகேகி பரதனையும், சுமித்திராதேவி இலக்குமனனையும் சத்துருக்கனையும் பெற்றெடுக்கின்றனர். தசரதமன்னன் தனது பட்டத்துராணிகளுடனும் பாலகர்களுடனும் மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும்போத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே".

இவ்வண்ணம் அரக்கர்களிடம் தனது கைவண்ணம் காட்டி யாகத்தை முடித்துவைக்க பேருதவி புரிந்த ஸ்ரீஇராமனும் தம்பி இலக்குவனும் பின்பு ராஜரிஷியும், ப்ரம்ம ரிஷியுமான விஸ்வாமித்திரரிடம் அவரைக் குருவாகக் கொண்டு பற்பல சிரேஷ்டமான மந்திரங்களையும் அஸ்திரப் பிரயோகங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். இந்நேரத்தில் மிதிலை மாநகரின் அரசரான ஜனகர் மகாராசா தனது செல்வி சீதாதேவியாருக்கு திருமண நிமித்தமாக ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்ற செய்தி இவர்களுக்குக் கிடைக்கிறது. அதற்கான ஓர் நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார். அதாவது தன்னிடமுள்ள சிவதனுசை யார் வளைத்து நாணேற்றுகிறார்களோ அவர்களுக்கே ஜானகி மாலையிடுவாள் என்பதுதான் அது.

முக்காலமும் உணர்ந்த முனிவர் விஸ்வாமித்திரர் இதற்காகவே காத்திருந்தது போல் இராம இலக்குமணர்களைக் கூட்டிக் கொண்டு மிதிலைக்குச் செல்கிறார்.அவருக்குத் தெரியும் தன்னுடன் வரும் மாணவர்கள் அசாதாரணமாணவர்கள் என்று. பாற்கடலில் இலக்குமிதேவி பாதசேவை செய்ய பாம்பனைமீது அறிதுயில் கொள்ளும் சாட்சாத் மகாவிஷ்னுவே ஸ்ரீஇராமன். பக்கத்திலே பவ்யமாக அண்ணனின் திருவடியை அடியொற்றி வருகிறாரே அவரென்ன ஒருதலையுடையவரா இல்லை ஓராயிரம் தலையுடைய ஆதிஷேச ஆழ்வார் அல்லவா?. பகவானே! இராவணனை அழிப்பதுதான் நின் அவதாரத்தின் நோக்கமென்றால் அதை வைகுந்தத்தில் இருந்து உன் மனசங்கல்ப்பத்தாலேயே செய்திருப்பாயே. மேலும் இராவண, கும்பகர்ணர்கள் யார்? வைகுந்தத்தில் உனதரன்மனையின் வாயிற்காப்போர்கள்தானே. ஆனால் பூமியிலே என்போன்ற பல முனிவர்கள், சபரிபோன்ற ஏராளமான பக்தர்கள், வாலிபோன்ற அழியாத வரம் பெற்றதுபோல் நினைத்து வாழ்வில் அல்லலுறும் ஜீவன்கள், அகலிகை போன்ற அபலைகள் எல்லோரிடமும் நீ கொண்டுள்ள அளப்பரிய கருணையினால் அல்லவா அவதாரமாக இறங்கி வந்திருக்கிறாய். இந்நிலையில் இந்த எளியவனுக்கும் ஒரு பாத்திரத்தைத் தந்து லோககுருவான உனக்கு ஒரு குருபோலும் நடிக்க வைத்துள்ளாய். எந்த ஜென்மத்தில் யான் செய்த புண்ணியமோ யானறியேன்.

இப்படியாக அவர் தன்னை மறந்து நடந்து வருகையில் வழியிலே ஒரு பாறை தென்படுகிறது. அதனருகே ஸ்ரீஇராமன் வருகிறார். அவர்நடந்து வரும்போது அவர் பாதத்திலிருந்து தெறித்த துகள் அப் பாறையின்மீதுபட அது ஒர் அழகிய ரிஷிபத்னியாக வடிவெடுத்து நிக்கிறது. சுவாமி இதோ நிற்கும் இப் பெண்மனி யார்?

இராமாகேள்! இவள் பெயர் அகலிகை. கௌதம முனிவரின் பத்னி. நீ பிறப்பதற்குப் பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. ஒரு சாபத்தால் இவள் கல்லானாள். அப்போது சாபவிமோசனம் வேண்ட அம் முனிவரும் சில வருடங்களுக்குப்பின் தசரதமன்னனுக்கு இராமன் எனும் ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த ஆசிரமத்துக்கு வந்ததும் அவன் திருவடி பட நீ பழையபடி உன் உருவையடைந்து மீண்டும் என்னை வந்தடைவாய் என்றார். இப்போது அப்படியேயாயிற்று. பின் அவர்கள் மூவரும் அவ்வன்னையின் உபசரிப்பையேற்று அவரை வணங்கி விடைபெற்று மிதிலையைச் சென்றடைந்தனர்.

அங்கேயும் ஒரு வில்லங்கம் வில்ரூபத்தில் அரசசபையில் வைக்கப் பட்டிருந்தது. அந்த வில்லைப்பற்றி அரன்மனைச் சேவகர் ஒருத்தர் கூறுகிறார். இந்த வில் தேவ சிற்பி விச்வகர்மாவால் செய்யப்பட்டது. பின்பு ஒருமுறை தட்சாயினியின் தந்தையாகிய தக்கனின் யாகத்தை அழிப்பதற்கு சிவனால் கொண்டுவரப்பட்டது. ஆனால் பின்பு சிவனின் அம்சமாகிய வீரபத்திரர் தோன்றி அவ் யாகத்தை அழித்தார். பின்பு மீன்டும் அது எமது மகாராசாவின் முன்னோர்வசம் ஒப்படைக்கப் பட்டது. இவ் வில்லை யார் வளைத்து நாணேற்றுகிறார்களோ அவர்களுக்கே எமது இளவரசியார் மாலையிடுவார் எனக் கூறினார்.

அங்கிருந்த பல அரசர்களாலும் அவ் வில்லைத் தூக்கவே முடியாதபோது அதை நாணேற்றுவது பற்றி என்ன சொல்வது. இந் நிலையில் விச்வாமித்திரரும் ஸ்ரீஇராமனிடம் கண்களால் சாடை காட்ட அதைப் புரிந்து கொண்ட இராமனும் எழுந்து அவ் வில்லினருகே சென்று சிவனை நினைத்து வில்லைத் தொட்டு வணங்கிவிட்டு அனாசயமாக அவ் வில்லை எடுத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் நாணேற்ற வளைத்தபோது அது பெரும் சத்தத்துடன் முறிந்து விழுந்தது. ஜானகியும் மிக மகிழ்ச்சியுடன் ஸ்ரீஇராமனுக்கு மாலையிட்டாள்.

(கம்பஇராமாயனத்தில்: 60.000 பேர் அவ்வில்லைப் பெட்டியில் வைத்து இழுத்து வந்ததாகச் சொல்வார்கள். சுயம்வரத்துக்கு வந்த அரசர்களில் பலரால் அதை அசைக்கவே முடியவில்லை. சிலர் அசைத்தனர் தூக்கவில்லை. சிலர் சிறிதளவு தூக்கவும் செய்தனர். இதுபோன்று அவரவரது சீலம், தபோபலம் போன்றவற்றிற்கேற்ப அவர்களால் அவ் வில்லைக் கையாள முடிந்தது. ஸ்ரீஇராமனால் மட்டுமே அவ்வில்லைத் தூக்கி வளைத்து ஒடிக்க முடிந்தது.)

KING ARTHAR. கிங் ஆதர்: இவர் ஒரு மேலைநாட்டு அரசர். இவரது வாழ்விலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. இவர் வாழ்ந்த இடத்தில் ஒரு தேவாலயத்தில் உள்ள ஒரு பீடத்தில் ஒரு வாள் வைக்கப் பட்டிருந்தது. அத்துடன் அவ் வாளை எடுப்பவர்தான் அங்கு அரசராவார் என்ற குறிப்பும் இருந்தது.' அசரீரியோ தெரியவில்லை. சிறுவயதில் பாடசாலையில் படித்தது." அவ்வூர், அயலூர் மக்களென பலரும் அதைத் தூக்க முயற்சித்து முடியாமல் அது அங்கேயே இருந்து வந்தது. அப்படி முயற்சித்தவர்களில் ஆதரின் தமையநாரும் ஒருவர். ஒருமுறை அவர் ஒரு இடத்துக்குப் போன போது தனது வாளைக் கொண்டுவர மறந்து போனார். உடனே தனதருகிலிருந்த ஆதரிடம் வீடு சென்று அதை எடுத்து வரும்படி கூறினார். ஆதரும் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த போது வழியில் இந்த தேவாலயத்தில் ஒரு வாள் இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே ஆர்தர் அங்கு சென்று அவ் வாளை எடுத்தபோது அது சுலபமாக அவர் கைக்கு வந்துவிட்டது. அதை அவர் தமையனாரிடம் கொடுத்தபோது தமையனாரும் ஆச்சரியப்பட்டு இது தேவாலயத்து வாளல்லவா? உனக்கு எப்படிக் கிடைத்தது எனக்கேட்டார். ஆதரும் அதை அங்கிருந்துதான் எடுத்து வந்ததாகக் கூறினார். அதை ஒருத்தரும் நம்பாமல் மீன்டும் அந்த வாளைப் பீடத்தில் வைத்தபோது ஏனையோர்களால் பழையபடி அதை எடுக்க முடியவில்லை.ஆனால் ஆதரால் சுலபமாக எடுக்க முடிந்தது. பின் அவர் அந்நாட்டு அரசரானார்.

குறிப்பு: இந்த மன்னர் ஆர்தர்தான் குதிரைப்படை வீரர்களுக்கு னைற் என்ற கௌரவப் பட்டத்தைக் கொண்டு வந்தவர். (KNIGHT)

இவர்தான் முதன்முதல் வட்டமேசை மகாநாட்டை உருவாக்கியவர். (ROUND TABLE CONFERENCE)

மீன்டும் வில் வளையும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

அன்பான அடியார் பெருமக்களே!

உலகத்தில் பல கள்ளச்சாமிகள் வந்து மக்களை பிழையான வழியில் வழிநடாத்திச் செல்வதால் அடியேன் எனது ஆச்சிரமத்திற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளேன்.

இவ்வாரத்திற்கு உரிய உபதேசம்:

வாழ்க்கையில் துன்பங்கள், பிரச்சனைகள் என்பன நிரந்தரமானவை. துன்பங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் உலகம் பொய், மாயை என்று சொல்லிவிட்டு கண்ணைமூடி நித்தா செய்துகொண்டு இருப்பார்கள்.

பிரச்சனைகள், துன்பங்கள் கண்ணைமூடி தியானம் செய்வதால் மட்டும் தீர்ந்துவிடாது. நாம் செயலில் இறங்கி போராட்டம் செய்யவேண்டும். அப்போதுதான் எமது வாழ்க்கையை நாம் அமைதியுடனும், மகிழ்வுடனும் கொண்டு செல்லமுடியும்.

உலகம் பொய், மாயை என்று சொல்லும் சாமியார்களின் பேச்சை நாம் தொலைக்காட்சி ஊடாகவும், சட்டலைட் ஊடாகவும் பார்க்கின்றோம். மனிதன் உலகம் பொய் என்று சொல்லிவிட்டு பேசாமல் சோம்பேறியாக இருந்து இருந்தால் மனிதவர்க்கம் இப்போதும் வளர்ச்சி அடையாது காடுகளில் குரங்குகள் மாதிரி வாழ்ந்து கொண்டிருந்து இருக்கும்.

ஆயிரம், ஆயிரம் விஞ்ஞானிகள், லட்சோப லட்சம் தொழிலாளர்களின் கடின உழைப்பின் காரணமாகவே மனிதன் இன்று பல்வேறு வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவித்து வருகின்றான்.

எனவே, நீங்களும் பிரச்சனைகளை, துன்பங்களை போராடி வென்று வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்வீர்!

அடியார்களிற்கு இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்!

நன்றி!

Link to comment
Share on other sites

அன்பான அடியார் பெருமக்களே!

மீண்டும் இன்னொரு ஞாயிறு உபதேசத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று நான் கூறவிரும்புகின்ற விடயம்..

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!

இது பற்றியது..

அறிவுரையை கூறுபவர் திருக்குறளை தந்த திருவள்ளுவராய் இருக்கட்டும்.. பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவானாக இருக்கட்டும்... புத்தனாய் இருக்கட்டும்.. அல்லது யாழ் களத்து கிறுக்கன் நெடுக்காலபோவானாய் இருக்கட்டும் அல்லது நானாக இருக்கட்டும்.. அது இந்துக்களின் வேதாகமமாக இருக்கட்டும். கிறிஸ்தவர்களின் பைபிளாக இருக்கட்டும்...

யார் எதைக்கூறினாலும், அதை உங்கள் வாழ்க்கையுடன்.. வாழ்க்கைச் சூழ்நிலையுடன்.. வாழ்க்கை அனுப்வங்களுடன் ஒப்பிட்டு, சீர்தூக்கி அலசிப்பார்த்து... இறுதியில் உங்களிற்கு அதில் உடன்பாடு இருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும்.

பல விடயங்கள் சரியாகவும், நல்லதாகவும் கூட இருக்கக்கூடும். ஆனால், எம்மால் முடியுமானதை, எமக்கு ஏற்றதைதான் நாம் செய்யமுடியும்.

உங்கள் அகச்சமநிலையே முதலில் முக்கியமானது. கண்டதையும் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, வாசித்துவிட்டு.. அவற்றின்போக்கில் வாழமுயற்சித்தால் இறுதியில் அது உங்களை எங்காவது இடக்கு முடக்காக கொண்டுபோய் மாட்டிவிடும். கடைசியில் துன்பப்படுவது, வேதனையை அனுபவிப்பது நீங்கள் மட்டுமே. அறிவுரையை கூறிய புத்தனோ அல்லது கிருஷ்ண பகவானோ, திருவள்ளுவரோ, நெடுக்காலபோவானோ அல்லது நானோ உங்களுடன் சேர்ந்து அழுவதற்கு வரப்போவதில்லை.

எனவே, உங்கள் சொந்த புத்தியை, அறிவை, ஆற்றலை பயன்படுத்தி மகிழ்ச்சிகரமாக வாழ்வீர்களாக!

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அன்பார்ந்த அடியார் பெருமக்களே!

இவ்வாரத்துக்குரிய சுருக்கமான தலைப்பு அன்பு செலுத்துதல் மற்றும் காதல் பற்றியது.

உலகம் அன்புவழியே இயங்குகின்றது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். நாமும் எமது வாழ்க்கையில் பல அன்பு உறவுகளை பெற்று இருப்பதால்தான் தொடர்ந்து சுறுசுறுப்பாக வாழக்கூடியதாக உள்ளது. ஆனால், பிரச்சனை எங்கு வருகின்றது என்றால்...

நாம் அன்புவைத்த உறவுகள் எம்மைவிட்டுப் பிரியும்போது சொல்லெணா துன்பத்திற்கு ஆளாகின்றோம். இந்தப்பிரிவு மரணம், மற்றும் காலசூழ்நிலைகள் காரணமாக - இயற்கை அல்லது செயற்கை காரணங்களால் ஏற்படுகின்றன.

அன்பான உறவுகள் அறுந்தநிலையில் எமது வாழ்க்கை கேள்விக்குரியாகின்றது. வாழ்க்கை வெறுக்கின்றது. தொடர்ந்து வாழ்வதற்கு எமக்கு பிடிப்பு இல்லாது போகின்றது. அப்படியானால் இதற்கு தீர்வு என்ன?

முதலில், எம்மில் நாம் அன்பு செலுத்த பழகிக்கொள்ள வேண்டும். எம்மை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மேலும்...

எமது முழு அன்பையும் குறிப்பிட்ட ஒருவர் மீது வைக்காது, எம்மைச் சுற்றி இருக்கும் சகல உறவுகளின்மீதும் செலுத்த முயற்சிக்கவேண்டும்.

தாயை, தந்தையை, தமது உடன்பிறப்புக்களை வெறுத்துவிட்டு நாம் ஒருவரை மட்டும் செய்யும் காதல், குறிப்பிட்ட ஒருவர்மீது மட்டும் செலுத்தும் அன்பு ஆபத்தானது. அந்த குறிப்பிட்ட ஒருவர் எம்மைப் பிரியும் கணத்தில் அந்த அன்பு - காதல் ஒரு விசமாக எம்மைக் கொன்றுவிடக்கூடியது.

எனவே, அடியார்களே நீங்கள் குறிப்பிட்ட ஒருவர் மீது மட்டும் அன்பு செலுத்தாது - காதல் செய்யாது, உங்களைப் பெற்ற அம்மா, அப்பா, சகோதரங்கள், உங்களை நம்பி இருப்பவர்கள் இவர்கள் மீதும் அன்பு செலுத்தி - அதேநேரம் உங்களிற்கு பிடித்தமான அந்த ஒருவர் மீதும் (காதலன்/ காதலி/ கணவன்/ மனைவி) அல்லது குறிப்பிட்ட ஒரு சிலர் மீதும் (காதலன்/ காதலி/ கணவன்/ மனைவி/ மற்றும் பிள்ளைகள்) காதல் செய்து அன்பு செலுத்துவதில் ஒரு சமநிலையை ஏற்படுத்தி சந்தோசமாக வாழுங்கள்!

மீண்டும் அடுத்தகிழமை போதிமரநிழலில் சந்திப்போம்! நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.