வெளியே மழை பெய்கிறது
ரெஜோ
இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்
சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது …
வாய் புகுந்து மீண்டால்
இன்னொரு தெரு
இன்னொரு வாசல்
தப்ப முடியாதென்றே தெரிகிறது …
உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது
மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது
இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி
தொலைந்து போகத் தோன்றுகிறது
பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்
மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது
மதில் மேல் பூனையாய் என் நிழல்
எந்தப் பக்கம் விழும் …
நிழலைத் துரத்திக் கொண்டு நானும்
என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்
ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
மதிலைச் சிதைத்த படி …
சில ரகசியங்கள் புரிகின்றன
சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன
அகோரங்கள் அழகாகின்றன
அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன …
எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை
எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை
வாசல் தேடி வர யாருமில்லை
கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை …
கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில்
புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும்
கசங்கிய ரேகைகள்
கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன …
மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து …
எழுத அமர்கிறேன்
வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன
நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன ..
தற்செயலாய் காயம் கண்டு
கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது ..
இன்னும் சில காயங்கள்
வலிகளே வரங்களென்கின்றன …
பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது
கண்களை மூடிக் கொண்டால்
உலகம் இருண்டுதான் போகிறது …
நள்ளிரவில் ஓலமிடுகிறேன்
நாய்களில் சில ஒத்திசைக்கின்றன …
சீக்கிரம் இறந்து போகப் போவதாய்
கற்பனை செய்து கொள்கிறேன் …
கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக்
கொலைகள் செய்கிறேன் …
பைகளில் சில்லறை கனக்கிறது
பசிக்கிறது
நினைவில் வருகிறது அம்மாவின் முகம்
பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது …
வெளியே மழை பெய்கிறது
அழத் தோன்றுகிறது .
http://www.rejovasan...aining-outside/