புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும்
நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார்.
அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார்.
புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார்.
தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர்.
புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர்.
அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர்.
தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார்.
மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார்.
ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.