வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி! நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகிய மாணவச் செல்வங்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள், "இது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது. கல்வி ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிருந்து ஒரு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது எமக்குக் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார். பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாட்ஸப் மூலம்
மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப் March 30, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2025 ஜனவரியில் இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்த பிறகு பத்து மாதகாலப் பகுதிக்குள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதாக பெருமையுடன் உரிமை கோரிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தன்னைத் தவிர, வேறு எவரினால் அவ்வாறு போர்களை நிறுத்த முடியும் என்று கேள்வியெழுப்பி கர்வம் காட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தான் தொடுத்த போரை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். போரைத் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மூன்று குறிக்கோள்கள் இருந்தன. அணுத் திட்டத்தை மூடுவதற்கு ஈரானை நிர்ப்பந்திப்பது, உயர்ந்தளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரானில் இருந்து வெளியே கொண்டு போக வைப்பது, மேற்காசியாவில் அரசு அல்லாத திரட்டல் படைகளுக்கு ஈரான் வழங்கிவரும் ஆதரவைத் துண்டிப்பதுடன் அதன் ஏவுகணை ஆற்றல்களை நிர்மூலம் செய்வது. ஆனால், சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டியிருப்பதே ட்ரம்பின் முக்கியமான முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. போர் வெடித்த பின்னர் ஈரான் மூடிய அந்த நீரிணையை திறப்பதற்கு அவருக்கு எளிதான தெரிவுகள் இல்லை. ஒன்றில் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி உடன்பாடொன்றுக்கு வேண்டியிருக்கிறது அல்லது தரையில் இராணுவ நடவடிக்கைக்கு அதிகாரமளிக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான துருப்புகளை ஏற்கெனவே அமெரிக்கா வளைகுடாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஈரானின் எரிசக்திவள உட்கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப அறிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் நாட்டம் இருப்பதாக உலகிற்கு காண்பித்துக்கொண்டு மறுபுறத்தில் ஈரான் மீதான தாக்குதல்களை கடுமையாக தீவிரப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு காலஅவகாசத்தைப் பெறும் ஒரு தந்திரோபாயமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் ஊடாக 15 அம்ச சமாதான யோசனையை கடந்த வாரம் ஈரானுக்கு அனுப்பியது. அதை நிராகரித்த தெஹ்ரான் அதன் சொந்த நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஈரான் அதன் அணுத் திட்டத்தைக் கைவிட்டு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால் அதற்கு பிரதியுபகாரமாக 30 நாட் களுக்கு போர்நிறுத்தம் செய்து தடைகளில் தளர்வுகளைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், பெப்ரவரி 28 அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனியையும் வேறுபல தலைவர்களையும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் படுகொலை செய்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஆக்கிரமிப்பையும் படுகொலைகளையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்; எதிர்காலத் தாக்குதல்களை தடுப்பதற்கு உறுதியான செயற்பாட்டு முறைகள் வகுக்கப்படவேண்டும்; போரின் விளைவான அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்; சகல முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ஹேரர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகள். அதியுயர் தலைவர் உட்பட தலைவர்களும் படைத்தளபதிகளும் கொல்லப்பட்ட பின்னரும் கூட தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாக நிலைகுலையாமல் இஸ்ரேலுக்கும் அமெரிக்கப் படைத் தளங்களைக் கொண்டிருக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மிலேச்சத்தனமான ஒரு மாதகாலக் குண்டு வீச்சுகளின் விளைவான முன்னென்றுமில்லாத அழிவுகளுக்கு மத்தியிலும் கூட அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்ற உறுதிப்பாட்டுடன் ஈரான் அடிபணியாமல் நிற்பது உலகை வியக்க வைக்கிறது. எந்த நேரத்தில் எந்த விதமாக நடந்து கொள்வார் என்றோ அல்லது பேசுவார் என்றோ கூறமுடியாத, தான்தோன்றித்தனமான பேர்வழியான ட்ரம்ப் போர் நிலைவரம் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை உலகினால் நம்ப முடியாமல் இருக்கிறது. போரில் அமெரிக்கா ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது என்று ஒரு தடவை கூறிய அவர் சில நாட்கள் கழித்து ஹோர்முஸ் நீரிணையைத் மீண்டும் திறப்பதற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு மற்றைய நாடுகளை குறிப்பாக, வட அத்திலாந்திக் ஒப்பந்த இராணுவக் கூட்டணியின் (நேட்டோ) உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் போரில் இணைந்து கொள்வதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டன. போர் தொடங்கியதற்கு பிறகு முதற்தடவையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்ப் தனது வேண்டுகோளை நிராகரித்தமைக்காக நேட்டோ நாடுகளை கடுமையாகக் கண்டனம் செய்தார். திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே போரில் அமெரிக்கா வெற்றியை நோக்கிச் செல்வதாக அமைச்சரவையில் கூறிய அவர் உடன்பாடொன்றுக்கு வருவதற்கு ஈரான் தன்னைக் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் . இதனிடையே, ஈரானுக்கு எதிரான போர் மாதங்களில் அல்ல வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அதன் இராஜாங்க அமைச்சர் மக்றோ ரூபியோ கடந்த வெள்ளக்கிழமை பிரான்சில் ஜி- 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின்போது கூறியிருக்கிறார். ஹோர்முஸ் நீரிணைபை் பயன்படுத்துவதற்கு கப்பல்களுக்கு கட்டணம் அறவிடும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஈரான் தீர்மானிக்கக்கூடும் என்று அவர் அங்கு செய்த எச்சரிக்கை அந்த நீரிணையை திறப்பதற்கு மற்றைய நாடுகளின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதை உண்ர்த்துகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது இன்னொரு பின்னடைவுப் போராக அமையப் போகிறது என்பதையே இதுவரையான நிகழ்வுப்போக்குகள் கட்டியம் கூறுகின்றன. அதனால், ஈரானை மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்காக அதன் இராணுவ மற்றும் பொருளாதாரக் கடமைப்புக்களை இயன்றவரை நிர்மூலம் செய்வதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைப்புக் காட்டக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதற்கு பதிலடியாக வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்ததில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளமே அழியப் போகிறது. போருக்காக இதுவரையில் அமெரிக்காவுக்கு 30 — 40 பில்லியன் டொலர்களும் இஸ்ரேலுக்கு 300 மில்லியன் டொலர்களும் நாளொன்றுக்கு செலவாகுவதாக ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு ஈரான் எந்தவிதமான உடனடி ஆபத்தையும் தோற்றுவித்திருக்கவில்லை என்றும் இன்றைய போர். இஸ்ரேலின் தயாரிப்பு என்றும் கூறி போர் தொடங்கிய மூன்று வாரங்களில் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு நிலையத்தின் பணிப்பாளரான ஜோ கென்ற் தனது பதவியை இராஜினாமா செய்தமை போரை தொடங்கியமைக்காக ட்ரம்ப் தனது நிருவாகத்திற்குள் எந்தளவுக்கு அதிருப்தியை எதிர்நோக்குகிறார் என்பதைக் காட்டுகிறது. 2025 ஜூலையில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட குடியரசு கட்சிக்காரரான கென்ற், “இஸ்ரேலிடமிருந்தும் அதற்கு ஆதரவான செல்வாக்குமிக்க யூத ஆதரவுக் குழுக்களிடமிருந்தும் வந்த நெருக்குதலின் விளைவாகவே இந்தப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவானது. இதை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் படைகளை தரைப் போரில் இறக்கியதன் விளைவாக அதன் வரலாற்றில் பெற்ற படுமோசமான அனுபவங்களில் இருந்து அமெரிக்கா இன்னமும் படிப்பினை எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாகுவை அவர் அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். https://arangamnews.com/?p=12792
கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும் குற்றமா? March 28, 2026 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை ‘கொழும்பு மைய அரசியல்’ பலவீனப்படுத்துகிறது என்ற பெருங்கவலை ‘தீவிரத் தமிழ்த்தேசிய அரசியல் விருப்பாளர்’களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தனும் அவரால் தமிழ் அரசியற் பரப்பிற்குள் கொண்டு வரப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும்தான் கொழும்பு மைய அரசியலுக்கான கதவைத் திறந்தவர்கள் என்ற அபிப்பிராயமும் கோபமும் இவர்களிடமுண்டு. தங்களுடைய இந்தக் கவலையையும் கோபத்தையும் பல்வேறு வழிகளில் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ‘கொழும்பு மைய அரசியல்’ என்று இப்பொழுது அடையாளப்படுத்துவது, சுமந்திரனை மனதில் கொண்டே. சுமந்திரனுக்கு முன்பு, சம்பந்தன் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனால்தான் சம்பந்தன் இறந்தபோது, ஒரு தலைவர் இறந்த உணர்வை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சம்பந்தனின் மறைவுக்கு மதிப்பளிக்கவும் இந்தத் தரப்பினர் பின்னின்றனர். மட்டுமல்ல, சம்பந்தனின் இறுதி நிகழ்வைப் புறக்கணித்து, தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர். சம்பந்தன் மறைந்த பிறகு, சுமந்திரன் மீது அந்தக் கோபம் மடைமாற்றம் செய்யப்படுகிறது. இவர்களுடைய கருத்தின்படி ‘கொழும்பு மைய அரசியல்’ என்பது, தமிழீழத்துக்கு எதிரானது; விடுதலைப்புலிகளுக்கு எதிரானது. ஒரு நாடு இரு தேசம் என்பதற்கு எதிரானது. தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது. சமஸ்டிக்கு எதிரானது… என்றெல்லாம் வியாக்கியானப் படுத்தப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், சம்பந்தனும் சுமந்திரனும் செய்து வருவது விட்டுக்கொடுப்பு அரசியல். மறுவளமாக அது ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள்ளும் அரசியல். அதாவது தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுத்தல். சிங்கள மேலாதிக்கத்தை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொள்ளல் என. இதனை இவர்கள் எங்கே இருந்து கண்டுபிடித்தார்கள் என்றால், ‘நல்லாட்சி’க் காலத்தில் (2015 – 2019) ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற அடிப்படையில் அரசியல் அமைப்புக்கான வரைபை இலங்கை அரசு முன்வைக்க முயன்றபோது, அதனை நியாயப்படுத்தும் வகையில் சம்பந்தனும் சுமந்திரனும் செயற்பட்டனர், அன்றைய ரணில் – மைத்திரிபால அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதவளித்தனர் என்பதிலிருந்தே. அப்பொழுது சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை நினைவிற் கொள்ளலாம். அப்பொழுதான் மேற்படி இருவரும் கொழும்பை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகின்றனர் என்ற அபிப்பிராயம் அல்லது சந்தேகம் தீவிர தமிழ்த்தேசியவாதிகளிடத்தில் உருவானது. அது பின்னர் அவர்கள் இருவருக்கும் எதிரான அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்டது. என்பதால் சம்பந்தனையும் சுமந்திரனையும் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் எதிர்கொள்ள முடியாதிருந்தோரும் அதனைப் பெரிதாக்கினர். இப்பொழுதும் இதுவே நிலைமை. இவர்களுடைய அபிப்பிராயத்தின்படி பார்த்தால் ‘கொழும்பு மைய அரசியலை’ச் செய்வதன் மூலம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கிடைத்த லாபங்கள் என்ன? இதன் மூலம் தொடர்ந்து சுமந்திரன் பெற்றுக் கொள்வதென்ன? அதை எவரும் இதுவரையில் முன்வைத்தில்லை. பதிலாக தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகத் தோற்றம் காட்டும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சிறிதரன் போன்றோர் பல சந்தர்ப்பங்களில் அரசுடன் இணங்கி சில பல சலுகைகளைப் பெற்றுள்ளனர் என்பது பலராலும் கூறப்பட்டு வருவதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஒருவரோ அல்லது ஒரு தரப்பினரோ எடுப்பதன் மூலம் நன்மைகளும் தீமைகளும் நிகழ்வதுண்டு. ஒன்று, அந்த நபருக்கு அல்லது அவருடைய அணிக்கு நன்மைகள் கிட்டும். அல்லது அந்தக் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். அதைப்போலவே தீமைகளும் ஏற்படும். சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் எதிரானதா? அப்படியென்றால் அது எந்த வகையில் எதிரானது? என்பதை குற்றச்சாட்டை முன்வைப்போர் சொல்ல வேண்டும். பதிலாக அதற்கு மாற்றான அரசியல் நிலைப்பாட்டையும் அதனுடைய சாத்தியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் அவர்கள் தெளிவுறுத்துவது அவசியமாகும். ஜனநாயக அரசியற் களத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அது தவிர்க்க முடியாதது. இந்தப் புரிதலற்று, இந்த அடிப்படையை மறுதலிப்பதும் மாற்று அபிப்பிராயத்தை அல்லது மாற்று நிலைப்பாட்டை துரோகமாக – எதிராகப் பார்ப்பது ஜனநாயக விரோதமாகும். அது பாசிச உணர்வின் அடிப்படையைச் சேரும். நான் மட்டும் சரி, என்னுடைய நிலைப்பாடு மட்டுமே உண்மையானது, மற்றதெல்லாம் தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது பாசிசமே. சம்மந்தனும் சுமந்திரனும் மேற்கொண்டது ‘கொழும்பு மைய அரசியல்’ அல்ல. அவர்கள் இருவரும் யதார்த்த நிலை அரசியலையே மேற்கொண்டனர். போருக்குப் பிந்திய சூழல், சர்வதேச, பிராந்திய நிலைப்பாடுகள், நடைமுறை அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிநேகபூர்வமான அரசியல். விட்டுக் கொடுப்புகளற்ற, அதேவேளை முரண்பிடிக்காத ஒரு மென்னிலை அரசியல். இன்னொரு விதமாகச் சொன்னால், சிங்களத் தரப்பை வளைத்துப் பிடிக்கும் ஒருவகையான தந்திரோபாய அரசியலை முயற்சித்தனர். அதில் போதாமைகளும் குறைபாடுகளும் இருந்தன. ஆகவே, அதில் விமர்சனத்துக்கும் கவனத்திற்கும் உரிய இடங்கள் உண்டு. இந்தக் கட்டுரையாளர் அதைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். இப்பொழுதும் விமர்சனத்துக்குரிய இடங்கள் இருக்கிறது. ஆனால், விட்டுக் கொடுப்புகள் ஏதும் அதில் இல்லை என்பது கவனத்திற்குரியது. சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தலைவர்களுடனான சந்திப்புகளின்போது சம்பந்தன் தெரிவித்த விடயங்களும் வெளியிட்ட அறிக்கைகளும் இதற்கு ஆதாரம். என்பதால்தான் சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இலங்கையில் சிங்கள, மலையக, முஸ்லிம் அரசியற் தரப்புகளிடத்திலும் அந்தச் சமூகங்களிடத்திலும் மதிப்பு உண்டாகியது. மட்டுமல்ல, சர்வதேச ரீதியான மதிப்பும் (கவனிப்பும்) தமிழ் அரசியற்பரப்பில் இவர்கள் இருவருக்குமே இருந்தது. இப்பொழுது சுமந்திரனையே அவர்கள் தமிழ்ப் பரப்பின் பிரதிநிதியாக நோக்கும் – கருதும் நிலை உண்டு. இவ்வளவுக்கும் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஒரு கட்சியின் செயலாளர் மட்டுமே. இதற்கு அப்பால், கடந்த கால ஆட்சித்தரப்புகளோடும் எதிரணிகளோடும் சம்பந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நடந்து கொண்ட முறைமைகள், உடன்பாடுகள் (இரகசிய – வெளிப்படையான) பற்றி விவாதிப்பதற்கு நிறைய உண்டு. எளிய உதாரணங்கள் இரண்டு. 1. யுத்தத்தைத் தலைமையேற்று நடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தது. 2. ‘நல்லாட்சி’ என்ற பேரில் ரணில் – மைத்திரிபால சேனநாயக்க ஆட்சிக்காலத்தில் அந்த ஆட்சியுடன் நெருக்கிச் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டிய, செயற்படுத்தியிருக்க வேண்டிய பல விடயங்களைச் செய்யத் தவறியமை. இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் மீதான தனியான குற்றச்சாட்டு மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியினுடைய இயல்பின் மீதும் அதனுடைய அரசியல் நிலைப்பாட்டின் மீதும் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டாகும். தமிழரசுக் கட்சி தலைமை தாங்கியதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் ஆகிறது. அப்படையில் தமிழரசுக் கட்சியானது, கொழும்புடன் (ஐக்கிய தேசியக் கட்சியுடன்)நெருக்கமான உள நிலையையும் உறவையும் கொண்டது. இது அதனுடைய தொடக்க காலத் தலைவரான எஸ். ஜே. வி. செல்வநாயம் காலத்திலிருந்து வழிவழியாக வருகின்ற ஒரு நிலையாகும். செல்வநாயகத்துக்குப் பின்னர் தமிழர்களின் அரசியலுக்குத் தலைமை தாங்கிய அல்லது தமிழர்களால் தலைவராகக் கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இதே வழிமுறையைப் பின்பற்றினார். அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கொழும்புடன் இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்டது இதற்கு உதாரணம். இதனை அன்றைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன என்பது வரலாறு. ஆகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டின் மீதும் அதனுடைய இயல்பின் மீதுமே விமர்சனத்தை வைக்க முடியுமே தவிர, அதைத் தவிர்த்து, அதில் உள்ள தனியான (தலைமை) உறுப்பினர்களின் மீது விமர்சனங்களை வைப்பது பொருத்தமானதல்ல. அது பயனுடையதும் அல்ல. தமிழரசுக் கட்சியில் சம்பந்தன், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சாணக்கியன் போன்றோர் மென்போக்கிலான அரசியலை மேற்கொள்கின்றனர். கொழும்பில் உள்ள சிங்களக் கட்சிகளோடும் தலைவர்களோடும் நெருக்கமான உறவில் உள்ளனர். அதைப்போல முஸ்லிம், மலையகக் கட்சிகளோடும் அவற்றின் தலைவர்களோடும் நெருக்கமாக அல்லது புரிந்துணர்வுடன் கூடிய உறவில் உள்ளனர். அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கு வெளியே உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், சமத்துவக் கட்சி, ரெலோ, ஜனநாயகப்போராளிகள் போன்ற கட்சிகளோடும் உறவைப் பேணுகின்றனர். ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையில் தமது தரப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிமனைக்குச் சென்று, அதனுடைய தலைவரான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்தார். இதெல்லாம் யதார்த்த அரசியலின்பாற்பட்ட விளைவுகள் – நடவடிக்கைகளாகும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, தனியே நின்று ‘அடைந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி’என வீம்புக்குக் கம்பு சுத்தலாம். அப்படித்தான் தீவிரத் தமிழ்த் தேசியவாத தரப்புகள் கற்பனையில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைக்கின்ற ஒரு நாடு இரு தேசம் என்பதற்கும் சமஸ்டிக்கு மேலான தீர்வுக்கும் சாத்தியமென்ன? அதற்கான வழிமுறை என்ன? அதற்கான பிராந்திய – சர்வதேச ஆதரவு அல்லது மதிப்பு என்ன? என்று இதுவரையில் எவரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அல்லது தாம் கருதுகின்ற – சொல்கின்ற அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் அதற்கான வழியில் செயற்படுவதாகவும் இல்லை. இதற்காக அவ்வப்போது புதிய புதிய அமைப்புகளை உருவாக்குவது, அறிக்கைகளை வெளியிடுவது, ஊடகச் சந்திப்புகளை நடத்துவது. ஊடகங்களில் பிரகடனங்களைச் செய்வது, ‘கருத்துருவாக்கம்’ என்ற கற்பனையில் புனைவுக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களுடைய மேலான புரட்சிகரப் பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மிகவும் வலுப்பெற்றிருக்கும் இனவாதத்தையும் அந்த இனவாதத்தை மீறிச் செயற்பட முடியாமல் தடுமாறும் ஆட்சித் தரப்புகளையும் சிங்களக் கட்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று புரிதலற்றிருக்கும் வரையில் தமிழ் அரசியலில் முன்னேற்றத்தையோ மாற்றத்தையோ காண முடியாது. இன்றைய யதார்த்தம், மாகாணசபைகளை இயங்க வைக்கவே முடியாத நிலையாகும். இன்றைய உண்மை, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியாத சூழலாகும். இந்த நிலையில் ‘தாயகக் கோட்பாடு’என்பதை 1970, 1980, 1990, 2000 போன்ற காலகட்டத்தில் கருதியதைப்போல இப்பொழுதும் கொள்ள முடியுமா? கொழும்பு மைய அரசியலும் தமிழீழ தாயகக் கோட்பாடும் என்று இரண்டு வேறு கொள்கை நிலைகள் உள்ளதாக சுவாரசியத்துக்காகப் பட்டிமன்ற விவாதங்களை நடத்திக் கொள்ளலாம். நடைமுறை அரசியலில் சாத்தியமானவற்றுக்கே வலிமை அதிகம். வரலாறும் உண்டு. கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை. அப்படியான குதிரைகளை ஓட்டிக் கொள்வோர் சுய இன்பம் காண்பதன்றி வேறொன்றும் நிகழ்வதில்லை. https://arangamnews.com/?p=12784
இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் March 28, 2026 — அ. வரதராஜா பெருமாள் — (இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. அது ஒருபுறமிருக்க, மாகாண ஆட்சி அமைப்பானது அரசியல் யாப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும கொண்டதாக ஆளுநர் ஆட்சியின் போதும் செயற்பட முடியும் – செயற்பட வேண்டும். இங்கே அது பற்றி சில விடயங்களை அவதானிக்கலாம். ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராயிருப்பினும் அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது எந்தக் கட்சியினதும் பிரதிநிதியாக, எந்தக் கட்சிக்கும் சார்பானவராக, எந்தக் கட்சியினது நலன்களையும் பிரதிபலிப்பவராக அல்லது எந்தக் கட்சியினதும் செல்வாக்குக்கு வெளிப்படையாக உட்பட்டவராக இருக்க முடியாது – இருக்கக் கூடாது. மாகாண ஆட்சியின் ஆளுநராக இருக்கும் ஒருவர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதோ அரசாங்கத்தின் எந்த உத்தியோக பதவியில் இருந்தார் என்பதோ முக்கியமில்லை. ஆளுநராக அமர்ந்திருக்கும் காலகட்டத்தில் அவர் எந்தக் கட்சியையும் சாராதவரராக இருக்க வேண்டும்.– எந்தக் கட்சிக்கும் சார்பானவராக இருக்க கூடாது. 1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் உருவாக்கிய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை என்பது அமெரிக்க அரசியல் முறையையும் பிரெஞ்சு அரசியல் முறையையும் கலந்து ஆக்கப்பட்ட கலவையே என அரசியல் விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இலங்கையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள மாகாண ஆட்சி முறை அவ்வாறானதல்ல இந்திய அரசியலமைப்பு முறைப்படி – இங்கிலாந்து பாராளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் செயற்பட வகுக்கப்பட்டதாகும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் இருக்கும்போது ஆளுநர் என்பவர் மாகாண ஆட்சியின் பெயரளவிலான தலைவரே. மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்தை தவறான முறையிலும் தீய நோக்கங்களோடும் பிரயோகித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் அரசாங்கத்தைக் கொண்டதான மாகாண ஆட்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைக்கு வர முடியாமல் ஆக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசாங்கத்தினர் தங்களது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழானதாக மாகாண ஆட்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மாகாணங்களின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லாத போது மாகாண ஆட்சிக்கான அரசாங்கமாக இருக்கும் ஆளுநர் ஜனாதிபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று மாகாண ஆட்சிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இங்கு மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியை கபளீகரம் செய்து விட்டதாகவே உள்ளது. மாகாண ஆட்சியின் அமைச்சு நிர்வாக கட்டமைப்புகளை மத்திய அமைச்சர்கள் தமது அமைச்சுகளின் நிர்வாக கட்டமைப்புகளின் பகுதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாவட்டச் செயலாளர்களுக்கு சற்று மேலான தரம் கொண்ட ஓர் அரச அதிகாரியாகவே ஆக்கப்பட்டிருக்கிறார். இது மாகாண ஆட்சி முறையையே சிறுமைப் படுத்திவிடுகிற – அர்த்தமிழக்கச் செய்கிற வேலையே. இதனையே ராஜபக்சாக்களும், விக்கிரமசிங்காக்களும் செய்தார்கள் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும் அதனையே செய்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் அமைச்சர்களே முதற் பிரஜைகளாக – தலைவர்களாக அமர்கிறார்கள். எந்தவொரு மாவட்டத்தினதும் ஒட்டுமொத்த அபிவிருத்தி தொடர்பாக உறுதி செய்யவோ, உத்தரவாதம் வழங்கவோ அல்லது ஆணையிடவோ எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் சட்டரீதியான அதிகாரம் கிடையாது. இப்போதுள்ள விதமான மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் எந்தவகையிலும் உருப்படியான செயற்பாடுகளுக்கான அரச கட்டமைப்பாக அமைய மாட்டாது என்பதோடு, இவ்வகையான கூட்டங்கள் ஆளுநர்களின் தராதரங்களை குறைக்கின்றன -அவர்களின் பெறுமதிகளையும் அர்த்தமற்றதாக்குகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களின் கீழ்:- ● சுமார் 80000 அரச உத்தியேகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவை செய்கிறார்கள், ● இதை விட 1800 க்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என கல்வி நிலையங்கள் உள்ளன, ● போதனா வைத்திய சாலைகள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைகள் கொண்ட விசேட வைத்திய சாலைகள் என்பவை தவிர ஏனைய வகைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அத்தனை வைத்திய சாலைகளினதும் ஆட்சி மாகாண ஆட்சியிடமே உள்ளன. ● அரசியல் யாப்பின்படி மாகாணத்திலுள்ள பொலிஸ் அமைப்பானது ஆளுநருக்கு கட்டுப்பட்டது – மாகாண பொலிஸ் மாகாண ஆளுநருக்கு பொறுப்புக் கூற வேண்டியது: ● தனியார் உடைமைகளாக உள்ள காணிகள் அனைத்தினதும் மீதான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிக்கே உண்டு: ● மது விற்பனைகளை, போக்குவரத்துக்களை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவுமான அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. ● அத்தனை கூட்டுறவு அமைப்புகளையும் அத்தனை உள்ளுராட்சி சபைகளையும் நெறிப்படுத்தவும் வழிப்படுத்தவும் அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. இப்படியாக மாகாணங்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள அதிகாரங்களை அடுக்கினால் நீண்டு போகும். ஆனால் இவ்வளவு விடயங்கள் இப்போதும் நடைமுறையில் மாகாண ஆட்சியின் கீழ் – ஆளுநரின் கீழ் உள்ளனவா? தமக்குரிய அதிகாரங்களை பிரயோகித்து தமது பொறுப்புகளையும் கடமைகளையும் ஆளுநர்கள் நிறைவேற்றுகிறார்களா? நிறைவேற்றுவதை ஜனாதிபதி உறுதிபபடுத்துகிறாரா? ஆளுநருக்கு என்ன தடை? அமைச்சர்கள் தடையா? அதிகாரங்கள் இல்லாமை தடையா? இலங்கையின் அரசமைப்பில் ஜனாதிபதிதானே அனைத்துமாக இருக்கிறார். அப்படியிருக்கையில் அவரது விருப்பத்துக்கும் அரவணைப்புக்கும் உரிய ஆளுநருக்கு ஏது பிரச்சினைகள்? அபிவிருத்திக் கூட்டங்கள் நடக்கின்றன! ஆலோசனைக் கூட்டங்கள் நாழும் பொழுதும் நடக்கின்றன! அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டல்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. ஆனால் உருப்படியாக நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளின் பட்டியலை இன்னமும் காணமுடியவில்லை. அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒரே கால அளவு தேவைப்படுபவதில்லை. ஒரே வாரத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன ஒரே மாதத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன! ஒரே வருடத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன. மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும். இலங்கைவாழ் சிறுபான்மையான தேசிய இனங்களின் அடிப்படையான அரசியல் பொருளாதார அபிலாஸைகள் தொடர்பான குறைந்த பட்ச அரசியல் ஏற்பாடாக இந்த மாகாண ஆட்சி முறையே சாத்தியமாக உள்ளது. சிங்கள பேரினவாத சகதியில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி வெளியே வந்துவிட்டதா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு இந்த மாகாண ஆட்சி முறையில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களே சாட்சியாகும். பல்லினங்கள் வாழும் இலங்கை ஒரு நாடாக – அழகான நாடாக – வளமான நாடாக வளர்ச்சி அடைவதை உண்மையாக்குவதற்கு மாகாண ஆட்சி அமைப்பின் பயன்பாட்டையும், அதன் காத்திரமான செயற் திறன்களையும் உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதும், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பில் அமர்ந்திருக்கும் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதியின் பொறுப்பும் கடமையும் ஆகும். https://arangamnews.com/?p=12781
மத்திய கிழக்கு போர்: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியம் விலை அதிகரித்தது 31 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது. இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா - உக்ரேன் போரின் போது ஒரு தொன் அலுமினியம் 4,073.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அலுமினியத்தைத் தொடர்ந்து செம்பு ஒரு தொன் 12,231 டொலராகவும், துத்தநாகம் 3,168 டொலராகவும் விலை அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கின் இரு பெரும் உற்பத்தி நிறுவனங்கள் ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான பஹ்ரைனிலுள்ள அல்பா நிறுவனம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. ஏற்கனவே தனது உற்பத்தித் திறனில் 19 சதவீதத்தை மூடுவதாக அல்பா நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம், தனது ஆலை சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அலுமினிய ஏற்றுமதியை முடக்கியுள்ளது. லண்டன் உலோகச் சந்தையின் களஞ்சியங்களில் உள்ள அலுமினிய கையிருப்பு கடந்த மே மாதத்திலிருந்து 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பொதியிடல் துறைகளில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை அதிகரிப்பு சர்வதேச ரீதியில் பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். https://www.virakesari.lk/article/242380
மட்டக்களப்பு கடத்தல் விவகாரம்: மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல் மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழாவது சந்தேக நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், கொழும்பு - வத்தளைப் பகுதியில் வைத்து இந்த 7ஆவது சந்தேக நபரை கைது செய்தனர். குறித்த நபர் இந்த கடத்தல் கும்பலுக்கு மயக்க மருந்துகளை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் சந்தேக நபர்கள் நேற்று மாலை (30) மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாவது மற்றும் ஏழாவது சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஏழாவது சந்தேக நபரை ஏப்ரல் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 7ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmne27vza0007356p5d6v6mnr
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு adminMarch 30, 2026 அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன. அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர். தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற காவல்துறையினரை இடித்துக் கொலை செய்கின்றனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. இவை எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன. எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது. அண்மையிலே காவல்துறைஅதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரர், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்? உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது. இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231269/
ஏப்ரல் முதல் பெற்றோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 11:30 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து, ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தடையானது ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பித்து ஜூலை 31 ஆம் திகதி வரை நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிகிறது. ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், இது தொடர்பான தீர்மானத்தை உருவாக்குமாறு எரிசக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதும், விலையை நிலைப்படுத்துவதும் இந்த அதிரடி முடிவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உலகளாவிய எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவில் வசந்த கால விவசாயப் பணிகள் ஆரம்பிக் உள்ளதாலும், சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாலும் உள்நாட்டு பெற்றோல் தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சில பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மசகு எண்ணெய் சுத்திகரிப்பு அளவு கடந்த ஆண்டைப் போலவே நிலையாக இருப்பதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 50 இலட்சம் மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தத் தடையானது சீனா, பிரேசில் மற்றும் துருக்கி போன்ற ரஷ்ய எரிபொருளை நம்பியிருக்கும் நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். "மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகச் சந்தையில் நிலவும் குழப்பம் விலை மாற்றங்களுக்குக் காரணமாகிறது. அதேசமயம், ரஷ்ய எரிசக்திக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை இருப்பது சாதகமான விடயம்" என அலெக்சாண்டர் நோவாக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242289
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவிலுள்ள சிலர் நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். அந்த கேள்வி முட்டாள் தனமானது என்றும் அவர் கூறியுள்ளார். கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது செய்யாமல் விடலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. இதன் பொருள் நாம் சில காலம் கார்க் தீவில் இருக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார். அத்தீவின் ஈரானியப் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோது, அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றார். மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மேலதிகமாக 3,500 அமெரிக்கப் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். ஒரு ஒப்பந்தத்தை மிக விரைவாகச் செய்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார். ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம் 29 Mar, 2026 | 09:58 PM வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. வலுசக்தி வளங்களை மிகவும் அவதானத்துடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய "எல்-நினோ" வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். இதற்கமைய, இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு அங்கமாக, "இலங்கையைக் காப்போம் - ஒன்றிணைவோம் - ஒளியேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. இதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான அதிக பயன்பாட்டு நேரத்தில் (Peak Hours) மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தல் ‘’இலங்கையைக் காப்போம் ‘’ திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. எனினும், நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த சிக்கனம் தேவை என்பதை இது வலியுறுத்துகிறது. வலுசக்திப் பயன்பாடு குறித்து மக்களிடையே ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தானாக முன்வந்து ஒத்துழைக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/242258
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில் 29 மார்ச் 2026 03:06 PM நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் https://jaffnazone.com/news/55916
களப்பிரர் காலத்து இலங்கை பாலா கருப்பசாமி March 11, 2026 வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை சமீபத்தில் வாசித்தேன். களப்பிரர் காலம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன என்று ஆரம்பத்தில் அவர் நூலைத் தொடங்கும்போது, இதெற்கெதற்கு 180 பக்கப் புத்தகம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் களப்பிரர் காலத்தில் அண்டை நாடுகள், சமயம், இலக்கியம், போர்கள் என விரிவாக இந்நூல் அலசிச் செல்வதன் மூலம் களப்பிரர் ஆட்சி குறித்து ஓரளவு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எத்தனை மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் சட்டென்று ஆதித்த கரிகாலன் மட்டுமே நினைவுக்கு வருகிறார். அதைத் தவிர்த்து நம்மிடம் முறையான வரலாறு இல்லை. எழுதப்பட்ட கல்வெட்டு, செப்பேடுகளிலும் ”துஞ்சினார்” என்று பொத்தாம்பொதுவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் பரவிய சீனம், இலங்கையில் எல்லாம் அவர்கள் வரலாற்றைத் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்தும் நம்மிடம் தரவுகள் இல்லை. காரணம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பௌத்த நூல்கள் அனைத்தும் இங்கே அழிக்கப்பட்டுவிட்டன. எனக்கு இந்த நூலில் களப்பிரர் காலத்தில் இலங்கை அரசர்கள் என்ற பகுதி ஆச்சரியமாக இருந்தது. இந்த மன்னர்களின் வரலாறு சூலவம்சம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலவம்சத்தை பௌத்தத் துறவிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர். இந்நூலை அவர்கள் பாலி மொழியில் எழுதி வந்துள்ளனர். ஓகாரிக திஸ்ஸன் (கி.பி. 209-231) ஹீனயான பௌத்தம் ஒருகட்டத்தில் 18 பிரிவுகளைக் கொண்டதாகப் பிரிந்து போயிருந்தது. அதிலொன்று தேரவாதம். இது இப்போதுவரை இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தமதப் பிரிவாக உள்ளது. திஸ்ஸனின் ஆட்சியில் மகாயானம் உள்ளே நுழைந்தது. அதை இம்மன்னன் வளரவிடாமல் தடுத்தான். அபயநாகன் (கி.பி. 231 – 239) இவர் திஸ்ஸனின் தம்பி. இவனுக்கும் பட்டத்து இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதும் தம்பி தமிழ்நாட்டுக்கு ஓடிவந்துவிட்டார். தமிழ்நாட்டிலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அண்ணன் மீது படையெடுக்க, அண்ணன் இராணியோடு இலங்கையின் மத்தியிலுள்ள மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். இவன் பின்னாலேயே விரட்டிச் சென்று அவனைக் கொன்று இராணியைக் கவர்ந்துவந்து தனது இராணியாக்கிக் கொண்டான். ஸ்ரீநாகன் II (கி.பி. 240 – 242) இவர் திஸ்ஸனின் மகன். அபயநாகன் இறந்தபின் இரண்டாண்டுகள் மட்டுமே நாட்டை ஆண்டிருக்கிறான். விஜயகுமரன் (கி.பி. 242 – 243) இவர் ஸ்ரீநாகன் II-இன் மகன். இவரது தாத்தா திஸ்ஸன் காலத்திலேயே அரண்மனையில் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. விஜயகுமாரன் அரியணை ஏறியபோது, லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த சங்க திஸ்ஸன், சங்கபோதி, கோதபய என்ற மூன்று நெருங்கிய நண்பர்கள் அவரிடம் அமைச்சர்களாகப் பணியாற்றி வந்தனர். இம்மூவரும் சதி செய்து கி.பி. 243ல் மன்னர் விஜயகுமரனைக் கொன்றனர். அத்துடன் திஸ்ஸனின் வம்சம் முடிவுக்கு வந்தது. சங்க திஸ்ஸன் (கி.பி. 243 – 252) இவரும் சதியில் கொல்லப்பட்டார். மாம்பழப் பிரியரான இவர் இலங்கையின் கிழக்குத் தீவு ஒன்றுக்குச் சென்றபோது அங்கே மாம்பழத்தில் நஞ்சூட்டிக் கொன்றிருக்கிறார்கள். சங்கபோதி (கி.பி. 252 – 254) இவர் காலத்தில் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார். இவர் எந்தளவு இரக்க குணமுள்ளவர் என்றால், ஒரு மரண தண்டனைக் கைதியைக் கொல்வதற்குப் பதில் போலியாக ஓர் உருவம் செய்து அவன்தான் இவன் என்பதுபோல ஏமாற்றி கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுவாராம். இதையெல்லாம் சகிக்காமல் இந்தக் கூட்டாளிகளில் ஒருவரான கோத்தபய என்னும் இலம்பகன்னன் இவருக்கு எதிராகக் கலகம் செய்தான். அரசருக்கு எதிராக அவன் போர்தொடுக்க, சங்கபோதி போர் புரியாமல் தப்பியோட, அவரைப் பிடித்த சேனாபதி ஒருவன் அவர் தலையை வெட்டி கோத்தபயவுக்கு அனுப்பினான். கோதபய ஆட்சியைப் பிடித்து மேகவண்ணாபயன் என்ற பெயரில் நாட்டை ஆண்டான். கோதபய (கி.பி. 254 – 267) இவனது காலத்திலும் மகாயானம் தலைதூக்கியிருக்கிறது. அதை அடக்கி தேரவாதத்தை ஓங்கச் செய்தார். மகாயான பிக்குகளை நாடுகடத்தினான். அப்படி நாடு கடத்தப்பட்ட பிக்குகள் தமிழகம் வந்து இங்கிருந்த மகாயான பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரர் இலங்கையில் மகாயானத்தைப் பரப்ப கங்கணம் கட்டிக் கொண்டார். அங்கே தேரவாத பிக்குகளுடன் வாதஞ்செய்து வென்றார். இதனால் மன்னனும் அவரை ஆதரித்தான். தன் பிள்ளைகளான ஜேட்ட திஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவரை அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். ஜேட்டதிஸ்ஸன் I (கி.பி. 267 – 277) சங்கமித்திரரின் மாணவனாக இருந்தாலும் இவனுக்கு குருவிடம் பகை இருந்தது. அதனால் இவன் அரியணை ஏறியதும் அவர் ஏரம் கட்டிக் கொண்டு சோழநாட்டுக்கு வந்துவிட்டார். சங்கமித்திரருக்கு கோதபயவின் இரண்டாவது மகன் மகாசேனனிடம்தான் அன்பு இருந்தது. இவர் காலத்தில் மணிமேகலைக்கு ஒரு விகாரை எழுப்பியுள்ளார். மகாசேனன் (கி.பி. 277 – 304) மகாசேனன் அரியணை ஏறியதும் சங்கமித்திரர் திரும்பி வந்து தன் கையாலேயே முடிசூட்டி அழகு பார்த்தார். மன்னன் ஆதரவுடன் மகாயானம் பரவ வழிவகுத்தார். தேரவாத மகாயானப் பூசல்கள் இவனது காலத்தில் அடிக்கடி நிகழ்ந்தன. ஸ்ரீ மேகவண்ணன் (கி.பி. 304 -332) இவனது ஆட்சிக்காலத்தில்தான் கலிங்கத்திலிருந்து புத்தரின் பல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது இந்தியாவில் வடக்கே சந்திரகுப்தன் ஆட்சி செய்துவந்தான். அவனிடம் புத்த பிக்குகளைத் தூது அனுப்பி புத்தகயாவுக்கு வருகைதரும் பிக்குகளுக்கு பாதுகாப்பு அளித்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332 – 341) இவன் ஸ்ரீ மேகவண்ணனின் தம்பி. நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தான். தந்தத்தில் சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவன் அரண்மனையிலேயே அதைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கவும் செய்தான். புத்ததாசன் (கி.பி. 341 – 370) ஜேட்டதிஸ்ஸனின் மகன். மருத்துவ நிபுணனாகவும் இருந்தான். பாம்புக்கே வைத்தியம் பார்த்து நோய் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். இவனது காலத்தில் வைத்தியசாலைகள் பெருகின. மருத்துவர்களுக்கு நிலங்களும் தானமளித்திருக்கிறான். பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இவனது காலத்தில் இலங்கையில் வந்து தங்கியிருக்கிறார். உபதிஸ்ஸன் (கி.பி. 370 – 412) புத்ததாசனின் மூத்த பிள்ளை. இவன் 42 ஆண்டுகள் அரசாண்டிருக்கிறான். தந்தையைப் போலவே மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவனது பட்டத்து இராணி உபதிஸ்ஸனின் தம்பி மகாநாமனோடு கள்ள உறவில் இருந்தாள். மகாநாமன் பிக்குவாகச் சேரவிருந்தான். இந்நிலையில் இராணி அரசனைக் குத்திக் கொன்றுவிட்டாள். அதனால் மகாநாமன் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். மகாநாமன் (கி.பி. 412 – 434) அண்ணனின் மனைவியும் பழைய இராணியுமானவளை புதிய இராணியாக்கிக் கொண்டான். இவனுக்கு ஆண் வாரிசு இல்லை. சங்கா என்றொரு பெண்பிள்ளை மட்டுமே. மகாநாமனுக்கு இன்னொரு தமிழினத்தைச் சேர்ந்த மனைவி இருந்தாள். தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்றொரு மகன் இருந்தான். சொத்தி சேனன் (கி.பி. 434) இலங்கையை ஆண்ட மன்னர்களிலேயே மிகவும் கெடுபேறுடையவன் இந்த மன்னன்தான். இவன் அரியணை ஏறிய அன்றே கொல்லப்பட்டான். முந்தைய அரசனின் மூத்த இராணிக்குப் பிறந்த சங்காவால் சொத்திசேனன் அரியணை ஏறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நஞ்சூட்டி அவனைக் கொன்றாள். சத்தக் காகசன் (கி.பி. 434) பிறகு சங்கா தன் கணவனான சத்தக் காகசனை அரியணை ஏறச் செய்தாள். சத்தக் காகசன் என்றால் குடை ஏந்துபவன் என்று அர்த்தம். மகாநாமனுக்கு கொற்றக்குடை ஏந்தியவனாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓராண்டுகாலமே இவன் அரசாண்டான். இவன் இறந்ததும் அமைச்சர் சடலத்தை அரண்மனையிலேயே கொளுத்திவிட்டு மித்தசேளன் என்பவனை மன்னராக்கினார். அத்துடன் லம்பகர்ண பரம்பரை முடிவுக்கு வந்தது. மித்தசேளன் (கி.பி. 435 – 436) இவன் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனாக இருந்திருக்கிறான். இவனை மன்னனாக்கிய அமைச்சரின் பெயர் தெரியவில்லை. அரசன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வெளியே வரமுடியவில்லை என்று சொல்லி காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். இவ்வாறாக இலங்கையில் தொடர்ந்து குழப்பங்கள் நிகழ, பாண்டிய மன்னன் படையெடுத்துவந்து மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். பாண்டியர் ஆட்சி (கி.பி. 436 – 463) அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இப்பாண்டிய மன்னனது பெயர் தெரியவில்லை. பாண்டு என்று பொதுவாக அழைக்கின்றனர். இக்காலகட்டத்தை ஆறு திராவிட மன்னர்களின் காலம் என்றழைக்கின்றனர். அந்த ஆறு மன்னர்கள், 1) பாண்டு, 2) பரிந்தன், 3) இளம்பரிந்தன், 4) தீர்த்தரன், 5) தாட்டியன், 6) பீடியன். பாண்டியர்கள் ஆட்சியின்போது இலங்கையின் தெற்குப் பகுதியான உரோகணத்தை ஆண்டுவந்த தாதுசேனன் என்பவனுடன் அடிக்கடி போர் நடந்தது. அத்தகைய போர்களில் தீர்த்தரன், தாட்டியன், பீடியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். கடைசியில் பீடியன் தாதுசேனனிடம் தோற்றுப்போய் தாதுசேனன் அரியணை ஏறினான். தாதுசேனன் (கி.பி. 463 – 479) பாண்டியர்களுக்கெதிராக 27 ஆண்டுகள் கலகம் செய்து ஒருவழியாக மன்னரானான் தாதுசேனன். இவன் வாழ்க்கை துயரமானது. இவனுக்கு இரண்டு மனைவியர். ஒரு மகளும் மொக்கல்லானன் என்ற மகனும் உண்டு. இரண்டாவது மனைவி குலத்தில் தாழ்த்தப்பட்டவள். அவள் மூலமாக கஸ்ஸபன் என்றொரு மகன் பிறந்தான். மகளை தன் தங்கை மகனுக்கு மணம் செய்வித்தான். மருமகனை தனது சேனாதிபதியாக்கிக் கொண்டான். மருமகனது பெயர் உபதிஸ்ஸன். அவன் அரசனின் மகளும் தனது மனைவியுமானவளை ஒருமுறை சவுக்கால் விளாச, காரணமே இல்லாமல் தன் மகளை அடித்திருக்கிறான் என்பதை அறிந்து மகள்மேல் பேரன்பு கொண்டிருந்த அரசன் கடுஞ்சினம் கொண்டான். அவனது அம்மாவும் தனது தங்கையுமானவளை உயிரோடு நெருப்பிலிட்டு எரித்துவிட்டான். இதனால் அரசன் மேல் தீராப்பகை கொண்ட சேனாதிபதி பழிதீர்க்கத் தீர்மானித்தான். அரசனின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த கஸ்ஸபனுக்கு அரசாளும் ஆசையைத் தூண்டிவிட்டான். தன் பக்கம் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அரசனைச் சிறையிலடைத்தான். அரசனின் இன்னொரு மகன் மொக்கல்லானனைக் கொல்ல முயல அவன் தமிழகத்துக்குத் தப்பியோடினான். அத்தோடு சேனாதிபதி நிற்கவில்லை. கஸ்ஸபனிடம் அவனது தந்தை பெருஞ்செல்வத்தை மொக்கல்லானனுக்குத் தருவதற்காக ஒளித்து வைத்திருப்பதாகவும் அந்த இடத்தைத் தெரிந்துகொள்ளுமாறும் தூண்டினான். பலமுறை ஆட்களை விட்டுக் கேட்டும் அரசன் பதில் சொல்லாதிருக்கவே, அவனைக் கொன்றுவிடும்படி கஸ்ஸபன் ஆணையிட்டான். சேனாதிபதி அரசனை நிர்வாணமாக்கி சுவரோடு சேர்த்துச் செங்கல்லால் சுவரெழுப்பிப் பூசிவிட்டான். கஸ்ஸபன் I (கி.பி. 479 – 497) இவன் பாதுகாப்புக்காக சீக்கிரி மலைமேல் கோட்டையமைத்து அரசாண்டான். இந்தக் கோட்டை மற்றும் அரண்மனைச் சிதிலங்கள் இன்னமும் இலங்கையில் உள்ளன. தமிழகத்தில் உதவிதேடிச் சென்ற மொக்கல்லானனுக்கு சாமானியமாக உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனக்குக் கிடைத்த போர் செய்வதில் திறன் பெர்ற பதினெட்டு தமிழ் நண்பர்களுடன் கஸ்ஸபன் மீது படையெடுத்தான். தோற்கும் நிலையில் இருந்தபோது யானை மீதிருந்தபடி வாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு கஸ்ஸபன் இறந்துபோனான். மொக்கல்லானன் (கி.பி 497 – 515) இவன் அரசனானதும் தன் தந்தையைக் கொல்ல கஸ்ஸபனுக்கு உதவியாக இருந்தவர்களைக் கொன்றுகுவித்தான். பலருக்கு மூக்கையும் காதையும் அரிந்து நாடுகடத்தினான். குமார தாதுசேனன் (கி.பி. 515 – 524) மொக்கல்லானனின் மகன். இவன் ஒரு கவிஞனும்கூட. இவன் எழுதிய ஜானகி ஹரணம் என்ற காவியம் பிரபலமானது. இவருக்கும் இந்தியாவின் காளிதாசருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அவர் இலங்கை வந்து தங்கியிருந்தபோது ஒரு சதியில் கொல்லப்பட அத்துயர் தாங்காது அவரை எரியூட்டிய நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு கதை உண்டு. இல்லை, இது மொக்கல்லானனின் அமைச்சரின் மகனான காளிதாசன். அவன் அரசனின் நெருங்கிய நண்பன், அவன் இறந்தபோதுதான் துயர் தாங்காமல் தானும் தீயில் குதித்து உயிர்விட்டான் என்றும் சொல்கிறார்கள். கீத்திசேனன் (கி.பி. 524) குமார தாதுசேனனின் மகன். ஆட்சிக்காலத்தில் 9 மாதங்கள் சென்ற நிலையில் இவனது தாய்மாமன் சிவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். சிவன் (கி.பி. 524) இவன் அரியணை ஏறிய இருபத்தைந்து நாட்களில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டான். உபதிஸ்ஸன் III (கி.பி. 524 – 526) இந்த உபதிஸ்ஸன் யாரென்றால் தாதுசேனனின் மகளை மணந்து, அவன்மேல் வஞ்சம் கொண்டு கஸ்ஸபனைத் தூண்டி கடைசியில் உயிரோடு அரசனுக்குச் சமாதி கட்டியவன். அதாவது, மொக்கல்லானனின் தங்கையை மணந்தவன். மொக்கல்லானன் தன் தந்தையைக் கொல்ல உதவிய ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான். இவன் எப்படித் தப்பினானென்று தெரியவில்லை. உபதிஸ்ஸன் தன் மகளை சிலாகாலன் என்பவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். உபதிஸ்ஸனுக்கு கஸ்ஸபன் என்றொரு மகனுண்டு. சிலாகாலன் ஆளும் ஆசைகொண்டு மாமனாரோடு போர் செய்தான். உபதிஸ்ஸனுக்கு ஏற்கெனவே வயதாகிவிட்ட காரணத்தால் கஸ்ஸபன் போர் செய்துவந்தான். கடைசியில் கஸ்ஸபன் தோற்றுப்போய் களத்தில் தற்கொலை செய்துகொண்டான். அச்செய்தியறிந்து உபதிஸ்ஸனும் இறந்துபோனான். சிலாகாலன் (கி.பி. 526 – 539) இவனுக்கு மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என மூன்று மகன்கள். மூவருக்கும் ஆளுக்கொரு திக்கில் ஆட்சியைக் கொடுத்து ஆளச் செய்தான். மகாநாகன் என்ற கொள்ளைக்காரனை அரசு அலுவலில் உதவிக்கு வைத்துக்கொண்டு, உரோகணத்தில் அவனை வரி வசூலிப்பவனாக நியமித்தான். அவன் வரியை வாங்கித் தானே வைத்துக்கொண்டு உரோகணத்திலேயே தங்கிவிட்டான். தாட்டாபபூதி (கி.பி. 539 – 540) சிலாகாலன் இறந்தபின், இரண்டாவது மகன் தாட்டாபபூதி ஆட்சியைக் கைப்பற்றினான். மூத்த அண்ணனான மொக்கல்லானனுக்கு ஆட்சிப் பொறுப்பைத் தராமல் இரண்டாமவன் வந்ததை மூன்றாவது தம்பி உபதிஸ்ஸன் கண்டித்தான். அதனால் அவனைக் கொன்றுவிட்டான். மொக்கல்லானன் தாட்டாபபூதி மீது படையெடுத்தான். மொக்கல்லானன் எதற்கு தேவையில்லாமல் படைவீரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று சாக வேண்டும், ஒற்றைக்கு ஒற்றை போர்செய்து யார் ஆள்வது என்று முடிவு செய்வோம் என்று செய்தியனுப்பினான். இருவரும் யானை மீது அமர்ந்து போர்செய்ய, மொக்கல்லானனின் யானை தாட்டாபபூதியின் யானையைத் தந்தத்தால் குத்திவிட அது திரும்பி ஓடியது. தோற்றுப்போனதால் வாளெடுத்துக் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான், தாட்டாபபூதி. மொக்கல்லானன் II (கி.பி. 540 – 560) கீர்த்தி ஸ்ரீமேகன் (கி.பி. 560 – 561) மொக்கல்லானன் இறந்ததும் அவனது இராணி மற்ற உறவினர்களுக்கு நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு தன் மகனை அரசனாக்கினாள். ஆனால் பின்னாலிருந்து அவளே ஆண்டாள். இவளது ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தேறின. கீர்த்தி ஸ்ரீமேகனின் பாட்டனார் சிலாகாலனால் உரோகணத்தில் வரி வசூலிக்க அமர்த்தப்பட்டிருந்த மகாநாகன், இக்குழப்பத்தைப் பயன்படுத்தி படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் வெறும் பத்தொன்பதே நாட்கள் அரியணையிலிருந்தான். இலங்கையின் அரசியல் அப்போதிருந்தே ஓர் இரத்த சரித்திரமாக இருந்திருப்பது ஆச்சரியம்தான். https://mayir.in/essays/bala-karubbasamy/4523/ களப்பிரர்கள் AI உதவியுடன்.. Kalabhra Dynasty (களப்பிரர்கள்) என்பது தென் இந்திய வரலாற்றில் குறைவாக பதிவாகிய ஒரு ஆட்சிக் குழுவாகும். அவர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாக கிடைக்கின்றன. 1️⃣ களப்பிரர்கள் கி.பி. 3–6ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ததாக கருதப்படுகிறார்கள். 2️⃣ அவர்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய பாரம்பரிய அரசுகளை தற்காலிகமாக வீழ்த்தி ஆட்சி செய்தனர். 3️⃣ இந்த காலத்தை சில வரலாற்றாளர்கள் “தமிழகத்தின் இருண்ட காலம்” என்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் எழுத்து ஆதாரங்கள் குறைவு. 4️⃣ களப்பிரர்கள் பௌத்தம் மற்றும் ஜைனம் போன்ற மதங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 5️⃣ பின்னர் பாண்டியர் மற்றும் பல்லவர் போன்ற அரசுகள் அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பெற்றன. இலங்கையில் அவர்கள் பரவினார்களா? நேரடியான ஆதாரம் இல்லை. ஆனால் சில வரலாற்றாளர்கள் அவர்கள் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சில மக்கள் இடம்பெயர்ச்சியில் கலந்து இருக்கலாம் என்று மட்டும் கருதுகின்றனர். உறுதியான ஆதாரங்கள் இல்லை. களப்பிரர் தமிழரா? 1️⃣ சில வரலாற்றாளர்கள் களப்பிரர்கள் தமிழ் மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி அல்லது வீரக்குடிகள் (hill tribes) என்று கருதுகின்றனர். 2️⃣ மற்றொரு கருத்துப்படி அவர்கள் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த “களப்ர/கலவர” என்ற குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறது. 3️⃣ சில ஆய்வாளர்கள் அவர்கள் தமிழர்களே ஆனால் சங்க கால அரசுகளுக்கு எதிராக எழுந்த ஒரு புதிய அரசியல் சக்தி என்று கூறுகிறார்கள்.
ஒரு கொலையும் யாழ்ப்பாணத்தவரின் பயங்களும் - நிலாந்தன் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ? கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர், விரிவுரையாளர் என்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தச் சம்பவம் அதிகம் கவனிப்பைப் பெறக் காரணம். அவர் ஒரு படித்த தாய். பிள்ளையும் யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலையில் படித்திருக்கிறார். ஒரு படித்த தாய், பதின்ம வயதிலும் அதன் பின்னரும் பிள்ளையை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போனது அவருடைய தனிப்பட்ட தோல்வியா? அல்லது நடப்பில் உள்ள கல்வி முறையின் தோல்வியா? இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயல் மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நிகழ்ந்த குற்றச் செயல்களைத் தொகுத்து ஆராய வேண்டும். பொருத்தமான புள்ளி விபரங்களைத் தொகுத்தும் பகுத்தும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அது ஒரு சமூகப் பொதுத் தோறப்பாடா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். யாழ்ப்பாணத்தின் படித்த கல் வீட்டுக்காரர்கள் அதிகமாக சிசிடிவி கமராவை வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். குற்றச்செயல்களையும் திருடர்களையும் கண்காணிப்பதற்கு கமராவை பொருத்தும் ஒரு சமூகம், தங்கள் வீட்டுக்குள் தங்கள் கண் முன்னே வளரும் பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றதா? பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் பெற்றோரும் மூத்தவர்களும் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கண்டு கொள்வார்கள். பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தவறும் பெற்றோரே பிள்ளைகளைத் தவறவிடுகிறார்கள். பெரும்பாலான படித்த வசதியானவர்கள் வீடுகளில் கமராவைப் பொருத்தும் ஒரு சமூகத்தில் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியாமல் போவது ஏன்? பிள்ளைகளைக் கண்காணிப்பதற்கு கமராவைப் பொருத்தும் பெற்றோரும் உண்டு. ஆனால் கமராவால் மட்டும் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது. அன்பினால்தான், பாசத்தால்தான் ,அறிவினால்தான் பிள்ளைகளைப் பின்தொடரலாம்; கண்காணிக்கலாம். ஒரு பகுதி படித்த பெற்றோராலேயே ஏன் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாமல் போகிறது ? இக்கட்டுரையாளர் யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களில் நடக்கும் சந்திப்புகளின்போது ஒரு கேள்வி கேட்பார். உங்களில் எத்தனை பேரிடம் கைபேசிகள் உண்டு? எல்லாருமே உண்டு என்று கூறுவார்கள். அதில் எத்தனை ஸ்மார்ட் கைபேசிகள்? என்று கேட்டால்,அநேகமானவர்கள் தங்களிடம் இருப்பது அதுதான் என்று கூறுவார்கள். பின்னர் ஒரு கேள்வி “கைபேசியில் நீங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் செலவழிப்பீர்கள்?” அதற்குக் கிடைக்கும் பதில் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமும் ஆகக்கூடியது 5 மணித்தியாளங்களும் என்று பதில் கிடைக்கும். அதை வைத்து மீண்டும் ஒரு கேள்வி. “அப்படியென்றால் கடந்த வாரம் முழுவதும் நீங்கள் கைபேசியில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயத்தைச் சொல்லுங்கள்? அல்லது கைபேசியில் நீங்கள் பார்த்த, கேட்டவற்றுள் உங்களை மிகவும் பாதித்த, உங்களுடைய உணர்வில், சிந்தனையயில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு விடயத்தைச் சொல்லுங்கள் ? என்று கேட்டால், அநேகமானவர்கள் பொருத்தமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். அரிதாகத்தான் நல்ல பதில் வரும். இது கிராமப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது; நகர்ப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது. படிப்பறிவு மட்டம் குறைந்தவர்கள் மத்தியிலும் அவதானிக்கப்பட்டது; அரசு அலுவலகங்களிலும் அவதானிக்கப்பட்டது. எனவே தொகுத்துப் பார்த்தால் படித்தவர்,படிக்காதவர், வேலை செய்பவர்,வேலை செய்யாதவர்,வசதியானவர்,வசதி குறைந்தவர், என்ற வேறுபாடு இன்றி சமூகத்தில் அதிக தொகையினர் கைபேசிகளின் கைதிகளாகவே காணப்படுகிறார்கள். அவ்வாறு கைபேசிகளின் கைதிகளாகக் காணப்படுவோரிடம் மேலும் ஒரு கூர்மையான கேள்வி கேட்கப்படும்.” நீங்கள் சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் இருந்து ஐந்து மணித்தியாலங்கள் வரை கைபேசியோடு மினக்கெடுக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய வளரும் பிள்ளைகளின் கண்களைப் பார்த்து எத்தனை நிமிடங்கள் கதைக்கிறீர்கள்? உங்கள் வளரும் பிள்ளைகளைத் தொட்டு அரவணைத்து எவ்வளவு நேரம் உரையாடுகிறீர்கள்? உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் எத்தனை மணித்தியாளங்களைச் செலவழிக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் கூறும் பதில் பெரும்பாலும் கைபேசியோடு அவர்கள் செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரந்தான் தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் செலவழிக்கிறார்கள் என்பதாக இருக்கும். கைபேசி மட்டுமல்ல, தொலைக்காட்சியும் ஒரு நேரம் தின்னிதான். வீட்டில் இருப்பவர்கள், வயோதிபர்கள், குடும்பப் பெண்கள் தொலைக்காட்சியோடு கண்ணை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் கற்றுக் கொள்வது பெரும்பாலும் முற்போக்கானது அல்ல. பெரும்பாலான தொலைக்காட்சி சீரியல்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்கின்றன ? தொகுத்துப் பார்த்தால் பெரும்பாலான திரைத் தொடர்களில் பெண்கள்தான் சூழ்ச்சிகள், சதிகள் நிறைந்த தந்திரசாலிகள். மேலும், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் ஆசைப்படுவார்கள். அந்த ஆண் ஒரு நாகமாக இருந்தால் இரண்டு பெண் நாகங்கள் ஆசைப்படும். இப்படிப்பட்ட திரைத் தொடர்களில் இருந்து முற்போக்கான விடையங்களை,பெண் விடுதலையை, சமூக விடுதலையை, கற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் பெண்களுக்கு எதிராக எப்படிச் சூழ்ச்சிகள் செய்வது என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கைபேசிகளோடும் தொலைக்காட்சிகளோடும் தம் பொழுதைப் போக்கும் பெற்றோரும் முதியோரும் அதே அளவு நேரத்தை பிள்ளைகளோடு செலவழிக்கிறார்களா ? கிராம மட்ட சந்திப்புகளில் உங்கள் வளர்ந்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும் போது பிள்ளைகளோடு கதைத்துக் கதைத்து உணவு பரிமாறுவீர்களா? பிள்ளையின் கண்களைப் பார்த்து உரையாடுவீர்களா ? என்று கேட்டால், கணிசமான தாய்மார் கூறுவார்கள், இல்லை பிள்ளைகளோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் சந்தர்ப்பங்கள் குறைவு என்று. பிள்ளைக்கு சோலி அதிகம். பிள்ளையும் கைபேசியில் கண்ணை ஒட்டிக்கொண்டிருக்கும். மனிதர்கள் முன்னெப்பொழுதையும் விட பாரதூரமான விதத்தில் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முதியோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே பொழுதுபோக்குச் சாதனங்கள் பெருகிவிட்டன. கைபேசியின் கைதிகளும் தொலைக்காட்சியின் கைதிகளும் மெய்யான பொருளில் பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிப்பதில்லை . போதைப்பொருள் பாவனை தொடர்பான கருத்தரங்குகளில், துறைசார்ந்த மருத்துவர்களும் நிபுணர்களும் கூறுவார்கள், பிள்ளைகளின் கண்களை உற்றுக் கவனியுங்கள். அவை அசாதாரணமாகச் சிவந்திருக்கின்றனவா? பிள்ளையின் நடத்தைகளைப் பாருங்கள். அது எங்கே போகிறது? எப்பொழுது வருகிறது? யாரோடு சேர்க்கிறது? யாரோடும் சேர்வதில்லை? என்பவற்றைக் கவனியுங்கள். அது நித்திரை கொள்கிறதா? இல்லையா? ஒழுங்காகச் சாப்பிடுகிறதா? ஒழுங்காக மலம் கழிக்கிறதா? ஒழுங்காகக் குளிக்கிறதா? ஒழுங்காக ஆடை உடுத்துகிறதா? என்று கவனியுங்கள். பிள்ளைகளின் கண்களில் ,நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.பிள்ளைகளின் கைபேசிகளில் யார் யார் இருக்கிறார்கள்? யாரோடு கதைக்கும்போது பிள்ளை தனியே போகிறது? பிள்ளை அதிகம் தனிமையில் இருக்கிறதா? இல்லையா? என்று உற்றுக் கவனியுங்கள். தனிமையில் இருக்கும்பொழுது பிள்ளை என்ன செய்கிறது? என்று பாருங்கள். அதாவது ஒரு சிசிடிவி கமராவானது நடக்கும் சம்பவங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுபோல பெற்றோரும் பிள்ளைகளை இடையறாது கவனிப்பார்களாக இருந்தால் ஒரு பிள்ளையும் பெற்றோரிடம் இருந்து தவறிப்போகாது. பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குப் பெரிய சவாலாகவும் இராது. எனவே கைப்பேசிகளின் காலத்தில்,பொழுதுபோக்குகளின் யுகத்தில், பெற்றோருடைய குடும்ப முகாமைத்துவத் திறன்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளை வளர்ப்புக்கான அறிவு சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் கொள்ளளவை அறிவுபூர்வமாக,விஞ்ஞானபூர்வமாக,அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அரசுசார்பற்ற நிறுவனங்கள் கிராம மட்டத்திலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் திறன்களைக் கட்டியெழுப்பும் கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதுண்டு. ஆனால் அரசுசார்பற்ற நிறுவனங்களால் அழைத்து வரப்படுகின்ற வளவாளர்களில் அநேகமானவர்கள் யாந்திரீகமானவர்கள். சமூகத்தை அதன் பண்பாட்டு அம்சங்களின் ஊடாக அணுக முடியாதவர்கள். பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒரே மாதிரியானவை. அங்கேயே ஒரு யாந்திரீகப் பண்பு வந்து விடுகிறது. படைப்புத்திறன் இருக்காது. எனவே சமூகத்தின், குடும்பங்களின், தனிநபர்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் விடயத்தை அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டும் கையாள முடியாது. அது ஓர் அரசியல், பண்பாட்டுச் செயல்திட்டம்.குடும்பங்களின் கொள்ளளவைக் கட்டி எழுப்புவது,பிள்ளை வளர்ப்புத் திறனைக் கட்டியெழுப்புவது,சமூக முகமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது,முரண்பாடுகள் மோதல்களாக வராமல் தடுப்பதற்குரிய திறன்களைக் கட்டியெழுப்புவது, உள்முரண்பாடுகள் குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்குரிய அறிவு சார் திறன்களைக் கட்டியெழுப்புவது…..போன்ற எல்லாமே அரசியல் செயற் திட்டங்கள்தான். அது முழுக்கமுழுக்க அரசியல் பண்பாட்டு மறுமலர்ச்சி. அதற்கு ஒரு அரசியல் தரிசனமும் அதன் வழிவந்த பண்பாட்டு தரிசனமும் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் தலைமைத்துவம் வேண்டும் பண்பாட்டுத் தலைமைத்துவம் வேண்டும். ஆனால் கொடுமை என்னவென்றால், நமது அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்குள் வரும் விவகாரங்களையே தீர்க்க முடியாதவர்களாக, தங்களுடைய கட்சிக்காரனுக்கு எதிராகவே வழக்குப் போடுகிறவர்களாக, தங்கள் கட்சியைக் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துகிறவர்களாகக் காணப்படும் ஒரு சமூகத்தில், குடும்பங்களுக்குள் வரும் முரண்பாடுகள்,குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் விதத்தில் குடும்பத் தலைமைத்துவத்தின் முகாமைத்துவத் திறன்களைக் கட்டியெழுப்புவது யார்? https://www.nillanthan.com/8224/
வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள். நல்லூரில் அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக அர்ஜுனா என்று சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும் என்று ஒருபகுதி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் தாங்கள் அர்ஜுனாவை மட்டும் அவ்வாறு குற்றம் சாட்டவில்லை என்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் வேறு அரசியல்வாதிகளும் அவ்வாறு வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றார்கள். அதில் உண்மை உண்டு. வெறுப்புப் பேச்சு அர்ஜுனாவில் இருந்து தொடங்கவில்லை. அவருக்கு முன்னரே அது இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய் வாய்ப்படும்போது, தமிழ்த் தேசிய அரசியலில் பகை முரண்பாடு எது? நேசமுரண்பாடு எது? என்பதை பிரித்தறியத் தேவையான முதிர்ச்சியும் பண்பாடும் குறையும்போது வெறுப்பர்கள் வேட்டைப் பற்கள் துருத்திக் கொண்டு தெரிய மேலெழுகிறார்கள். நல்லூரில் நடந்த அந்தப் போராட்டத்தின் பின் ஏறக்குறைய அதே காலப்பகுதியில், வெவ்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இணைந்து அர்ஜுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு முறைப்பாட்டை செய்து இருக்கிறார்கள். அண்மையில் அர்ஜுனா கிளிநொச்சி மக்களுக்கு எதிராகவும் மலையக மக்களுக்கு எதிராகவும் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளின் கீழ் அர்ஜுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது வேறு. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக அல்லது நபர்களுக்கு எதிராக அல்லது அமைப்புகளுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை சட்ட ரீதியாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவர்கள் கருத்துவதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியப் பரப்பில், கட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அதே கட்சிக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தொடங்கி இப்பொழுது வெறுப்பைக் கக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறதா? உள்நாட்டு நீதி போதாது என்று கூறி அனைத்துலக விசாரணையைக் கோரி நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடும் நிலைமை அதிகரித்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தன் சொந்தக் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்குப் போடும் ஒரு நிலையை அடைந்து விட்டது. இப்பொழுது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் போகிறது? அதேசமயம் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும் அரசியல் அவதூறுகளுக்கு எதிராகவும் மேற்கண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனாவும் கஜேந்திரனும் மோதியிருக்கிறார்கள். அது ஒரு தரக்குறைவான, அருவருப்பான மோதல். மோதலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனா, கஜேந்திரனை நோக்கித் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு சபையில் அமர்ந்திருந்த ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள். அவ்வாறு கைதட்டியவர்கள் அரசாங்கக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கூறினார். தமிழ் அரசியல்வாதிகள் எதை ரசிக்கிறார்கள் ? எதற்குக் கைதட்டுகிறார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் அதிகமாக மினக்கெடும் தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் அல்லது அதிகளவு தொகையினர் எதை ரசிக்கிறார்கள்? எதை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்? மேற்கண்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளோடு சம்பந்தப்பட்ட காணொளிகளோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் காணொளிதான் அதிகமாகப் பகிரப்பட்டது; அதிகமாக பார்க்கப்பட்டது. வெறுப்புப் பேச்சு மற்றும் அரசியல் அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விடவும் வெறுப்பு பேச்சுகளையும் ஒருவர் மற்றவரை கீழ்மைப்படுத்தும் அருவருப்பான மோதல்களையும் ரசிக்கும் அளவுக்கு தமிழ்ப் பொதுப் புத்தி விகாரமடைந்து வருகிறதா? கடந்த பெப்ரவரி மாதம் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் ஒரு மருத்துவர் முகநூலில் ஒரு குறிப்புப் போட்டிருந்தார். அக்குறிப்பில் அவர் கனடாவில் வசிக்கும் தமிழ் அரசியல் விமர்சகர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய விடயத்தை ஆங்கிலத்திலும் தமிழில் மொழிபெயர்த்தும் பகிர்ந்திருந்தார். மேற்படி கனடாவில் வசிக்கும் அரசியல் விமர்சகர் அர்ஜுனாவை ஏன் தான் ஆதரிக்கிறார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்திருந்தார்… “ராமநாதன் அர்ஜூனா எம்.பி.யை நான் மதிக்கிறேன். காரணங்கள்: 1) அவர் தமிழ்த் தேசியவாதத்தை நகைச்சுவைப் பொருளாக்கினார், 2) அவர் நாடாளுமன்றத்தை சாதாரணமான அவையாக்கினார், 3) மருத்துவத் தொழிலை வேறு எந்தத் தொழிலையும் போல சாதாரண தொழிலாக எளிமைப்படுத்தினார் – யாழ்ப்பாணத்தில் அது உயர்ந்த தொழில் என நினைக்கும் இடத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனை, 4) அவர் அரசியலை சாதாரண மனிதனின் நிலையில் அணுகினார். வக்கீல்களுக்கு மட்டும் பாராளமன்றம் என்பதை நாளை ஒரு விவசாயியால் பாராளுமன்றத்தில் பேசமுடியும் என்பதை உறுதிபடுத்தினார்…..” மேற்கண்ட முகநூல் குறிப்பின் மீது பலரும் பலவிதமாக பதில்வினை ஆற்றியிருந்தார்கள். அதைத் தனியாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் மேற்படி முகநூல் குறிப்பு எழுதிய அந்த மருத்துவர், சில நாட்கள் கழித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பில், ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தான் வழமையாக எழுதும் பதிவுகளை நுகர்பவர்களின் எண்ணிக்கை 500 ஐக் கடப்பதில்லை என்றும் ஆனால் அர்ஜுனாவைப் பற்றிய தன்னுடைய பதிவை நுகர்ந்தவர்கள் 35,000க்கும் அதிகம் என்று. அதாவது வழமையை விட 70 மடங்கு அதிகம். இது எதைக் காட்டுகிறது? ஒன்றில் அவருடைய குறிப்பை சமூக வலைத்தளப் பரப்பில் யாரோ காசு கொடுத்துத் திட்டமிட்டுப் பரவலாக்குகிறார்கள். அல்லது அதுபோன்ற குறிப்புகளை ரசிப்பவர்களின் அல்லது நுகர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பொருள். இது தமிழ்க் கூட்டு உளவியல் தொடர்பான, தமிழ்ப் பொதுப் புத்தி தொடர்பான ஒரு பண்பாட்டுப் பிரச்சினை. இதனை சட்டரீதியாக மட்டும் அணுக முடியாது தீர்க்கவும் முடியாது. இதற்கு ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. சீரழிந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதத்தில் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. அது ஒரு கூட்டு முயற்சி. அது ஒரு கூட்டு உழைப்பு. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. ஒரு சமூகத்தில் கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் அரசியல் தளத்தில்தான் சாத்தியம். அதாவது அரசியல் தலைமைதான் இதுபோன்ற கூட்டு முயற்சிகளில் வெவ்வேறு தரப்புகளைய ஒரு மையத்தில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் துயரம் என்னவென்றால், தமிழில் அதே அரசியல் தரப்புகள்தான் இந்தச் சீரழிந்த பண்பாட்டை உற்பத்தி செய்கின்றன, ஊக்குவிக்கின்றன, காசு கொடுத்து வளர்த்து விடுகின்றன. அவர்கள் பெற்றெடுத்த ஒன்றை,அவர்களே காசு கொடுத்து, அணி திரட்டி வளர்த்துவிட்ட குருட்டு விசுவாசத்தை, அழிப்பதற்கு அவர்களாக முன்வருவார்களா? ஆனால் அப்படி ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படவில்லையென்றால் தமிழ்ச் சமூகம் அவிழ்த்துவிட்ட பாக்கு முட்டைபோல சிதறிப் போய்விடும். அதன் பின் தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. https://www.nillanthan.com/8222/
இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை? ஞாயிறு, 29 மார்ச் 2026 05:22 AM இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல காரணிகள் ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு அலகு டீசல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு சுமார் 90 ரூபா செலவாகிறது. மாலை நேர உச்சப்பயன்பாட்டு நேரத்தில் நிலவும் 150 மெகாவாட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினசரி 36 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் முறிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது ஒரு இறுதி முயற்சியாகவே எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் 21 வீதம் சூரிய சக்தி, 14 வீதம் நீர்மின்மற்றும் 26 வீதம் அனல் மின் என மின்சாரம் பெறப்படுகிறது. இருப்பினும், இலங்கையிடம் போதிய மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் 1,500 மெகாவாட் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரவு வேளையில் நீர்மின்சாரத்தின் தேவை 42 சதவீதமாக உயர்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடு செய்ய இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/55910
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம் 29 Mar, 2026 | 01:08 PM (நா.தனுஜா) இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்குமென இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன. அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று சனிக்கிழமை மு.ப 10.00 - பி.ப 12.30 மணி வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் என மொத்தமாக ஒன்பது பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவர். அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன், அதில் இரு கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதப்படுத்தி, 'பிரஜாசக்தி' எனும் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துவருவது பற்றியும், இத்தகைய பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் நாட்டின் சமகால அரசியல் மற்றும் பூகோள அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/242220
யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம் adminMarch 29, 2026 சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. அவையாவன, சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மணல் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை விதிப்பதற்கும், பகல் நேரங்களில் மாத்திரம் மணல் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய பொறிமுறையூடாக நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், காவல்துறையினரும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிச்சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று மணலை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது. குளத்து மணலைக் கழுவி உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விநியோகிப்பதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மணலைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது மணல் மாபியாக்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களில் செயற்பாட்டு நிலையிலுள்ளவை தொடர்பான விவரங்களைப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் காவல்துறையினர், மாவட்டச் செயலாளர்கள், ஆளுநர் செயலகம் இணைந்த குழுவில் அதனை இற்றைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் ஊடாக மணல் அகழப்படும் இடங்கள் காவல்துறையினருக்குத் தெரியவருவதுடன், அகழப்படும் மணல் கொண்டு செல்லும் பாதைகளை அறியமுடிவதன் மூலம் ஏனைய மார்க்கங்களில் செல்லும் மணல் வாகனங்களைப் பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், மணல் விநியோக வாகனத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது எவ்வளவு மணி நேரத்துள் அதனை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது. கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகத் தண்டப்பணங்களை விதிப்பதை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. எதிர்காலத்தில் கனியவளங்கள் தேவைப்படுபவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதற்கும், அதன் ஊடாகத் தேவைப்படும் மணலின் அளவு கணிக்கப்பட்டு ஒரு நாளில் எவ்வளவு மணல் விநியோகம், எந்த மார்க்கம் ஊடாக நடைபெறும் என்ற விவரங்கள் துல்லியப்படுத்தப்படுவதன் ஊடாக மணல் மாபியாக்களைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் மாறப்பன, யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெயமஹா, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடபிராந்திய முகாமையாளர் டி.மயூரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிரதி காவல்துறைமா அதிபர்கள் நிகழ்நிலை காணொளி ஊடாக கலந்து கொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2026/231208/
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS எதிர் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR எதிர் RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS எதிர் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI எதிர் RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB எதிர் LSG 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI எதிர் PBKS 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT எதிர் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH எதிர் CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG எதிர் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC எதிர் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR எதிர் SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG எதிர் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC எதிர் RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT எதிர் RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR எதிர் DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC எதிர் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG எதிர் RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK எதிர் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB எதிர் MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS எதிர் RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR எதிர் MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK எதிர் GT 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH எதிர் RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI எதிர் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR எதிர் DC கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? அணி? அணி? அணி? 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 31 மே 2025 அன்று பெங்களூரு மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
ஈரான் போர் - நிம்மதி கிடைக்குமா? - பா.ரவீந்திரன் sudumanal image:VictorStock அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீண்டகாலப் போருக்கு தயார் பண்ணிவிட்டே இறங்கியது. அதன் விளைவாக உக்ரைன்-ரசியா போர் தொடர்கிறது. சென்ற ஆண்டு பொருளாதாரப் போரை அமெரிக்கா இதே வகைப்பட்ட தவறான மதிப்பீட்டோடு தொடங்கியது. “எல்லோரும் சமனற்ற வரி விதிப்பால் அமெரிக்காவை இதுவரை ஏமாற்றிவிட்டார்கள். எமது முன்னைய தலைவர்கள் முட்டாள்களாக இருந்துவிட்டார்கள். நான் அப்படி அல்ல. இனியும் அமெரிக்காவை மற்றைய நாடுகள் ஏமாற்ற முடியாது” என ட்றம்ப் ஒரு கதையாடலை உருவாக்கினார். ஆனால் அதன் உள்நோக்கம் அமெரிக்காவை மேவும் விதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சீனாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவது என்பதே. அதனால் மற்ற நாடுகளை விட சீனாவுக்கு வரம்பு மீறிய வரியை விதித்து அந்தப் போரை நடத்தினார். இன்னும் முடியவில்லை. சீனாவோ இந்தப் போரை நீண்டகாலத்துக்கு உரியதாக மாற்றி அமெரிக்க பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்போ ஈரானிடம் வந்திருக்கிறது அமெரிக்கா. “அணுவாயுதம் செய்யும் நிலைக்கு ஈரான் வந்துவிட்டது. உலகுக்கு ஆபத்து” என கதையாடலை முன்வைத்தது. ஆனால் அதன் உள்நோக்கம் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பிராந்திய வல்லரசுக் கனவுக்கு சவாலாக வேகமாக வளரும் ஈரானை அடித்து வீழ்த்துவது என்பதே. அத்தோடு G7 க்கு சவாலாக மேவி வரும் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் ஒரு முக்கிய தூணாக இருப்பதால், அமெரிக்க நலன் அடிப்படையில் ஈரானை ஒரு வழி பார்த்துவிட வேண்டும் என்ற இரண்டாவது கள்ள நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருந்தது. இந்த இரு கள்ள நோக்கங்களையும் மனதில் வைத்து ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை செய்ய இறங்கியது. ஆனால் ஈரான் ஒரு நீண்டகாலப் போருக்கான தயாரிப்பை கடந்த 40 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என்பதையும், தலைமைகள் வீழ்ந்தால் உடனுக்குடன் பிரதியிடக் கூடிய அரச மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை பலமாக நிறுவி வைத்திருந்தது என்பதையும் அமெரிக்கா அறியாமலிருந்தது. மறுபுறத்தில் தனது 40 ஆண்டுகால கனவை ட்றம்ப் சாத்தியப்படுத்த வந்திருப்பதாக நெத்தன்யாகு புகழாரம் சூட்டினார். ஏதோ ஓரிரு வாரங்களில் ஈரானை மண்டியிடச் செய்யலாம் என நினைத்த அமெரிக்கா ஆழமறியாமல் இன்னொரு சேற்றுள் கால்வைத்திருக்கிறது. நிலைமை எதிர்பார்த்ததுபோல் சுலபமாக அமையவில்லை. மாட்டிக்கொண்டிருக்கிறது. இப்போ தனது உலக மேலாதிக்க பவுசுக்கு பங்கம் ஏற்படாதபடி இந்தப் போரிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தத்தளிக்கிறது. அமெரிக்க மக்களில் 70 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போருக்கு எதிராக நிற்பதாக தரவுகள் சொல்கின்றன. இஸ்ரேலில் 80 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போரை ஆதரிக்கிறார்கள் என்பது மற்றொரு தரவு. இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவு சரியானது என சொல்ல முடியாவிட்டாலும், அதிகமான அமெரிக்க மக்கள் போரை விரும்பவில்லை என்பதும் அதிகமான இஸ்ரேலிய மக்கள் போரை விரும்புகிறார்கள் என்பதும் இதற்குள்ளால் பெறப்படுகிற முடிவு ஆகும். “இந்தப் போர் எமது போரல்ல. இஸ்ரேலின் போர். எதற்கான எமது இராணுவம் பலியாக வேண்டும்” என அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள். அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் வீதிக்கு வந்து குரல்கொடுக்கிறார்கள். “அமெரிக்கா ஒரு சரியான திட்டமிடலுடன் இந்தப் போரை தொடங்கவுமில்லை. எவ்வாறு இதிலிருந்து வெளியேறுவது என திட்மிடவுமில்லை” என இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காரணம் “இது அமெரிக்காவினது போர் அல்ல” என்கிறார்கள் அவர்கள். ஆப்கான் போரையும் ஈராக் போரையும் தவறானது, தேவையில்லாமல் எமது இராணுவத்தை பலிகொள்ள வைத்த முட்டாள்தனம் வாய்ந்தது என்றும், பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தின என்றும் ட்றம்ப் இந்தப் போர் தொடங்கும் வரை விமர்சித்துக் கொண்டிருந்தவர். இப்போ தவிர்க்க முடியாமல் அதே வழிமுறையில் ஈரானை அணுக விழைகிறாரா என்ற கேள்வி எழும்புகிறது. ஈரான் க்குள் அல்லது அதன் எரிசக்தி இதயமான கார்க் தீவுக்குள் அமெரிக்க இராணுவம் கால்வைக்கப் போகிறதான சாத்தியப்பாடுகள் பற்றி பலமாக விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில் மத்திய கிழக்கு அடிவருடி நாடுகளுடன் சேர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. எது எப்படியோ இந்த அணுகுமுறை எல்லாமே ஈரானுள் காலடி வைப்பதாகவே அர்த்தப்படும். அப்படி கால்வைத்தால் நீண்ட காலத்துக்கு மீள முடியாத சேற்றுள் அமெரிக்கா அகப்பட்டதாகவே அமையும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் சவாலை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் பலமான அடியை சந்திக்க நேரும். 2003 ஈராக் போரில் மட்டும் அமெரிக்கா 4 திரில்லியன் டொலரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஈராக்கைவிட பல மடங்கு பலம் பொருந்திய ஈரானின் இராணுவக் கட்டைப்பும், ஏவுகணை மற்றும் ட்றோண் தொழில் நுட்பமும், பெருநிலப் பரப்பும், மலைகள் கொண்ட நில அமைவும் அமெரிக்க இராணுவத்துக்கு இன்னும் கடினமான காலங்களையும் இழப்பையும் பரிசளிக்கும். அதேநேரம் பலம்பொருந்திய அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு ஈரான் மக்கள் பெருமளவு விலைகொடுக்கவும் நேரும். அழிவுகள்தான் எஞ்சும். உலகப் பொருளாதார கட்டமைவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தளவில் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கான், லிபியா, உக்ரைன் போர்களைப் போலல்ல ஈரான் போர். உலக இயக்கத்தின் இதயமான எண்ணெய் மற்றும் எரிசக்தி வளத்தை மோசமாக பாதிக்கக் கூடிய போர் இது. இந்த 26 நாட்களுக்குள்ளேயே அந்த நெருக்கடி பல்வேறு வடிவில் உலக மக்களின் வாசல்படிவரை வந்துள்ளது. எனவே இந்தப் போரை நீண்ட நாட்கள் இழுத்தடிக்க முடியுமா என்ற கேள்வி பலமானதாக உள்ளது. அமெரிக்கா ஈரானுக்குள் கால் பதித்தால் இந்த கால முரணுக்குள் அகப்பட்டு நசிபடும். எதிர்காலத்தில் தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வெளியேற நேரும். அதையும்விட இப்போது “நாம் போரில் வென்றுவிட்டோம்” என அமெரிக்கா ஒரு கதையாடலை உருவாக்கி வெளியேறுவது சுலபம். “எல்லா தலைவர்களையும் கொன்றுவிட்டோம், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு நிலையங்களை அழித்தொழித்து விட்டோம், யூரேனியம் செறிவூட்டும் அணுசக்தி நிலைகளை இயங்கமுடியாதபடி புதைத்துவிட்டோம், எமது எரிசக்தி தேவைக்கு ஹோமோஸ் நீரிணை முக்கியமானதல்ல. அதற்குரியவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்றவாறான கதையாடலை உருவாக்கிவிட்டு தப்பிச் செல்வது எல்லோருக்கும் நல்லது. இவையெல்லாவற்றையும் ட்றம்ப் ஏற்கனவே பேசிப் பேசி மறந்து மறந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். நெத்தன்யாகுவோ தனது கனவு மெய்ய்பட கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் ட்றம்ப் இந்தப் போரிலிருந்து வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகவே இருக்கிறார். மறுபுறத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்பது மீண்டும் தமக்கெதிரான தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்காது எனவும், அதனால் நிரந்தரமாக ஈரான் மீது போர் தொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா தர வேண்டும், அன்றேல் பேசிப் பயனில்லை என்கிறது ஈரான். தனது இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பது அதன் அர்த்தம். இந்தப் போரில் ஐரோப்பியர்கள் மற்றும் நேச பாச நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா என்பன இதுவரை பங்குபெற மறுத்துள்ள நிலைதான் உள்ளது. ஸ்பானியாவைத் தவிர, இவர்களை நம்ப முடியாது. இவர்கள் ஏற்கனவே நேட்டோ பெயர்ப்பலகையின் கீழ் நிகழ்த்திக் காட்டிய போர் வரலாறுகளிலிருந்து பெறப்படக்கூடிய பாடம் இதுவாகும். யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது. அவை முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டன. ஏற்கனவே ட்றம்ப் ஐரோப்பாவை கைவிட்டது போன்ற தோற்றம் என்பது அவர்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமான நிரந்தர விரிசலாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் இரு தரப்புக்கும் நேட்டோ என்ற இராணுவ வல்லாதிக்க கருவியாக செயற்படுபவை. அடிப்படையிலேயே இந்தப் போர்களுக்கான மனநிலையை பேணிவைத்திருப்பது காலனிய மனோபாவமும், வெள்ளை மேலாதிக்கமும்தான். அதை காக்கும் கருவி நேட்டோ அமைப்பு. அவைகளுக்கு வெளியில் எந்த நாடும் வல்லரசாக வருவதையோ, பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் மேவுவதையோ, வேறு எந்த வடிவிலும் ஆதிக்கம் செலுத்துவதையோ அந்த மனநிலை சகிப்பதில்லை. எனவே ஐரோப்பா இந்தப் போருக்கு எதிராக நிற்கிறது என்பதற்கோ, தேவைப்படும்போது அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை சேறாட மாட்டார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. உயர் நாகரிகம் அடைந்தவர்கள் தாம் என்ற கதையாடலை உருவாக்கி இப்போதுவரை அதைப் பேணும் காலனிய மனநிலை அவர்களிடம் இன்றும் தொடர்கிறது. மனிதநீக்கம் (dehumanisation) செய்கிற கதையாடல்களை உக்ரைன் போரின் போதும் கேட்டோம். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா கொடுமைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கமாஸ் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதை முன்தள்ளிய கதையாடலின் போதும் அதைக் கேட்டோம். ஆனால் ஈரானில் 168 பள்ளிச் சிறுவர்கள் மீது அமெரிக்கா வேண்டுமென்றே குண்டுவீசிக் கொன்றபோதும், இருபதினாயிரம் சிறுவர்கள் உட்பட 70000 க்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொல்லப்பட்டபோதும் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ யாரும் ‘மனிதநீக்கம்’ செய்து பேசுவதில்லை. இந்தப் போரில் இதுவரை ஈடுபடாத ஐரோப்பிய நாடுகளும் அப்படிப் பேசுவதில்லை. குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிப்பதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களை குற்றப்படுத்துவதையே தொடர்ந்து செய்கிறார்கள். இஸ்ரேல் அணுவாயுதம் வைத்திருப்பதையோ, அதை IAEA பரிசோதிக்க அனுமதிக்காமல் இருப்பதையோ பேசாத நாடுகள் மேடைக்கு வந்து “ஈரான் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது” என பேச என்ன அறம் இருக்கிறது. அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் அதைப் பேசுவது இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது. இப்போது அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கேட்டா செய்தன. அல்லது ஐநாவைத் தன்னும் கேட்டா செய்தன. அணுவாயுதம் செய்யக் கூடிய எல்லா வளத்தையும் தொழில்நுட்பத்தையும் எட்டிய ஈரான் இதுவரை அதை செய்யாமலிருந்தது. இந்தப் போரும் அதன் பின்னான கெடுபிடிகளும் ஈரானின் இருப்பு மீது தொடர்ந்து அச்சுறுத்தலலாக மாறினால், எதிர்காலத்தில் ஈரான் அணுவாயுத தயாரிப்பை நோக்கி தள்ளப்பட சாத்தியம் உண்டு. “பலமற்ற நாடுகளின் பலம்” அணுவாயுதம் என வடகொரிய அதிபர் சொல்வது ஒன்றும் பயமுறுத்தல் அல்ல. பாதுகாப்பு! கடந்த வருடம் 2025 ஆனி மாதமும் மற்றும் இவ் வருடம் பெப்ரவரி கடைசியிலும் நடந்த இரு வெவ்வேறு பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படும் நிலை கனிந்து வரும்போது, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா -இரண்டு சந்தர்ப்பங்களிலும்- ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. முதுகில் குத்திய சம்பவங்கள் இவை என ஈரான் வெளிநாட்டமைச்சர் இதை விபரித்திருந்தார். பெப்ரவரி கடைசி பேச்சுவார்த்தையில் எல்லாம் பேசி ஒரு தீர்வுக்கு அருகில் வந்துவிட்டதான திருப்தியில் இருந்தபோது, மறுநாள் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என -பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்து நடத்திய- ஓமான் வெளிநாட்டமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். ஆக அமெரிக்கா விரும்பியது தீர்வை அல்ல. இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்தவே என்பதுதான் அதன் அர்த்தம். அதனால் “சீனா, ரசியா, இந்தியா போன்ற பலம்பொருந்திய நாடுகள் ட்றம்ப் உடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு கறாராக ஒன்றைத் தெரிவித்துவிட வேண்டும்” என்கிறார் உலகின் முன்னணி அரசியல் விமர்சகர் ஜெப்ரி ஸாக்ஸ். “இந்தப் போர் உலகத்தில் எல்லோரையும் பாதிக்கிற விடயம். அதைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது எம்மையும் பாதிக்கிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பாதிக்கிறது. இன்னொரு உலகப் போரில் போய் முடிவடையக் கூடிய ஆபத்தும் கொண்டது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அழுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார் அவர். இது அவர்களின் கடமை. மவுனமாக இருக்கக் கூடாது என்கிறார். பதவியேற்ற நாளிலிருந்து ஈரான் போர் வரை மாத்தி மாத்தி கதைக்கும் ட்றம்ப் இன் கோமாளித்தனம் உலகம் அறிந்தது. அவரது நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் ஆதாரமாக கொண்டு, அவை டிமென்ஸியா நோயின் அறிகுறிகள் என உளவியல் நிபுணர்கள் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெப்ரி ஸக்ஸ் இத் தகவலை சில பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். கோமாளித்தனமோ டிமென்ஸியாவோ என்ன கோதாரியோ அவையாவது இந்தப் போரை நிறுத்தச் சொல்லி ட்றம்ப்பின் மண்டைக்குள் சொல்லிவிட்டால் பெரும் உதவியாக இருக்கும். உலகம் நிம்மதியாக இருக்கும்! https://sudumanal.com/2026/03/27/நிம்மதி-கிடைக்குமா/
மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும் March 28, 2026 11:59 am ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில், இனங்களைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் உண்டென்றால் அவர் நடராஜா ரவிராஜ். 2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பின் இதயப்பகுதியில் கேட்கப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள், ஒரு தனிமனிதனை மட்டும் வீழ்த்தவில்லை; மாறாக, இனங்களுக்கு இடையே பாலமாக இருந்த ஒரு பலமான ஜனநாயகக் குரலையே மௌனிக்கச் செய்தன. 1962 இல் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், ஒரு சிறந்த சட்டத்தரணியாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், வெறும் வருமானத்திற்காக வாதிடுபவராக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். மனித உரிமைகள் ஊடாக அவர் ஆற்றிய பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘நீதியின் காவலன்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது. யாழ். மாநகர முதல்வராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உயர்ந்தபோது, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாக வாதிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பேசுவதோடு நிறுத்திவிடாமல், முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல், அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வலிகளை அவர்களின் மொழியிலேயே புரியவைத்த ஆற்றல் ரவிராஜுக்கு மட்டுமே இருந்தது. கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஊடக நேர்காணல் ஒன்றை முடித்துவிட்டுப் புறப்பட்ட அந்தச் காலை வேளை (காலை 8.15), மரணம் மோட்டார் சைக்கிள் வடிவில் வந்தது. நாரஹேன்பிட்டி மார்தா வீதி வழியாகத் தனது வாகனத்தில் எல்விட்டிகல மாவத்தைக்குள் அவர் பிரவேசித்தபோது, இனந்தெரியாத நபர்களால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள் 44 வயதேயான அந்த இளம் தலைவரையும், அவரது மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மனையும் சிதைத்தன. தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது. படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட, வாகரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கொழும்பில் ஐநா அலுவலகம் முன் நின்றுகொண்டு, “எங்கள் மக்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக முழங்கியவர் அவர். இந்தக் கொலையின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. உளவுப்பிரிவு அதிகாரி Liyanarachchige Abayaratne அளித்த சாட்சியத்தில், இந்தக் கொலைக்காக ‘கருணா குழு’ சார்ந்த பிரிவினருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். கங்காராம கடற்படை புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகளே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகச் சாட்சியங்கள் தெரிவித்தன. பத்து ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2016 டிசம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, நள்ளிரவு 12:25 மணிக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் கோரிக்கைப்படி, ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் ‘சிறப்பு ஜுரர் சபை’ இந்த வழக்கை விசாரித்தது. சாட்சிகள் அடையாளம் காட்டிய போதிலும், மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேரையும் ஜுரர் சபை ஏகமனதாக விடுதலை செய்தது. “தமிழர் குரலை நசுக்க இராணுவத்துடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் முயற்சி இது” என அப்போது சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகச் சாடினர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட அந்த நள்ளிரவு நேரம், இலங்கையின் நீதித்துறையில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. நீண்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2026 மார்ச் 26 அன்று இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஐந்து பேரையும் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நள்ளிரவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முறையை “அசாதாரணமானது” என நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா சுட்டிக்காட்டினர். குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் மறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ள நிலையில், இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்து உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். https://oruvan.com/the-great-man-nataraja-raviraj-the-fall-of-a-democratic-voice-and-the-long-journey-to-justice/