Everything posted by கிருபன்
-
நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு
நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு 15 Feb, 2026 | 12:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 1979இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய கால கடத்தில் காணப்பட்ட மிகப் பயங்கரமான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது அந்த காலகட்டத்துக்கு அவசியமாக இருந்தது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே ஆட்சியாளர்களுக்கு அன்று விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டுப்படுத்தி யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது. எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆட்சியாளர்களால் அந்த சட்டம் ஊடகங்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளையேமுன்னெடுத்துள்ளது. யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற வரை இந்த சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு அதில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றமையால் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டது. அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட்டது. அந்த சட்ட மூலத்துக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. அவற்றைக் கருத்திற் கொண்டு அந்த சட்ட மூலம் இரத்து செய்யப்பட்டு, மற்றொரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. நிறைவேற்றதிகாரத்தால் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாதவாறு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டதால், சகல தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடனும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யினரால் அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்த நிலைமை இல்லை என்பதால் இந்த சட்டம் தேவையற்றது என ஜே.வி.பி. எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. இவ்வாறு எம்மால் உருவாக்கப்பட்ட சட்ட மூலம் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளது. அதனை நிறைவேற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அதற்கு அப்பால் ஆட்சியாளர்களுக்கு அதி உச்ச அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தற்போதைய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மக்கள் கருத்தாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டத்துறையில் நிபுணர்களும் அதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. யாரோ ஒருவரால் எழுதப்பட்ட சட்ட மூலமாகவே அது காணப்படுகிறது. மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதில் முதலாவது இலக்கு ஊடகங்களாகும். முதலில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட பின்னரே ஏனையோர் தாக்கப்படுவர். ஊடகங்களை முடக்கினால் ஏனையோரை முடக்குவது இலகுவானதாகும். அதற்கான ஏற்பாடுகள் அந்தசட்ட மூலத்தில் காணப்படுகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட வேண்டும். அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாத ஜனநாயகமற்ற சூழல் ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/238692
-
வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்
வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் 15 Feb, 2026 | 11:38 AM யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம். வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238691
-
சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு
சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு 15 Feb, 2026 | 11:29 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைவிடுத்து கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதனையடுத்த இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்ட ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர். இச்சந்திப்பு தொடர்பான விபரங்களை தனது மனைவி ஊடாக எழுத்துமூலம் வெளிப்படுத்திய சோமரத்ன ராஜபக்ஷ, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, கைகழுவி விடுவதற்கே முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அதேவேளை இச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றும் சோமரத்ன ராஜபக்ஷவினால் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சோமரத்ன ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருப்பதாக அறியமுடிகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் அக்கடிதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238685
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன் 15 Feb, 2026 | 12:06 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்தினார். அதேபோன்று நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் இயலுமையை விட பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதாகவும், அதன் விளைவாக சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அதேவேளை மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக்கொண்டுவருவதாக அரசாங்கங்கள் வாக்குறுதி அளித்த போதிலும், அது இன்னமும் தொடர்வதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் அதிருப்தி வெளியிட்ட அம்பிகா சற்குணநாதன், போதைப்பொருள் பாவனை சார்ந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தார். https://www.virakesari.lk/article/238697
-
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிவராத்திரி வாழ்த்து செய்தி
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது. இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது. அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன். அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம். மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்து-மக்களின்-நல்லெண்ணங்கள்-நிறைவேறும்/175-372517
-
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! adminFebruary 14, 2026 உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு பகுதியாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது. உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வாங் யீ-யிடம் ஆண்ட்ரி சிபிஹா விளக்கமளித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர்காலச் சூழலில், மின் தடையால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சீனாவின் இந்த உதவி பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Global Tamil Newsஉக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவி...உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்…
-
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு.
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. adminFebruary 14, 2026 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229059/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை ஞாயிறு 15 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் வாத்தியார் இப்போட்டியில் போட்டியில் @வாத்தியார் க்கு புள்ளிகள் எடுக்க யோகம் உள்ளதா? 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 13 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் 10 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா ஏராளன் வசீ புலவர் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் கறுப்பி வாதவூரான் கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் நியாயம் எப்போதும் தமிழன் நந்தன் ஐக்கிய அமெரிக்கா செம்பாட்டான் சுவைப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கந்தப்பு ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20 பேர் இந்தியா அணி வெல்வதாகவும் மூன்று பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் புலவர் ஈழப்பிரியன் பிரபா இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத விளாசலான 35 (09 பந்துகள்) ஓட்டங்களோடும் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இதுவே அணியொன்றின் தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் ஆமிர் கலீம் அதிரடியாக 50 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஹம்மாட் மிர்ஸா 46 (37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்றையோர் வேகமாகப் பின்தொடர நிலைத்து ஆடமுடியாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. முடிவு: அயர்லாந்து அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் அதிரடியான 49 (32 பந்துகள்), மைக்கல் ஜோன்ஸின் விரைவான 33 (20 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேக்கப் பெத்தெல்லின் நிதானமான 32 (28 பந்துகள்) ஓட்டங்களோடும் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, மார்க் சப்மனின் அதிரடியான 48 (26 பந்துகள்) ஓட்டங்கள், டரைல் மிற்செல்லின் விரைவான 32 (24 பந்துகள்) ஓட்டங்கள், பின் அலெனின் வேகமான 31 (17 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்கோ ஜன்சன் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்கம் முதலில் இருந்தே பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தொடர்ச்சியாக அடித்தவண்ணம் இருந்ததாலும், மற்றையோரும் தமது பங்களிப்பாக விரைவாக அடித்ததாலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர். இறுதியில் எய்டன் மார்க்கத்தின் மரண அடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 86 (44 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,
- IMG_5040.png
- IMG_5148.jpeg
-
திசை ஒன்பது - எனது வாசிப்பு - பா. ரவீந்திரன்
திசை ஒன்பது - எனது வாசிப்பு பா. ரவீந்திரன் சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதனாலோ என்னவோ நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுத்தாளரது எழுத்துக்குள் எள்ளல்கள் கிண்டல்கள் காணாமல் போய், பின்னர் அவை அவருக்கேயுரிய இயல்பான நடையாக வெளிப்படத் தொடங்கியிருப்பதாக எனது வாசிப்பில் தோன்றியது. அது அப்படியில்லை என இன்னொரு வாசகருக்குத் தோன்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டே எனது இந்த அவதானிப்பைச் சொல்கிறேன். எழுத்தாளனில்லாத ஓர் எழுத்தாளனாக கதையின் நாயகன் இளங்கோ வருகிறான். சிறுவயதில் அவன் எழுதிய கதை முயற்சிகள் கற்பனையோடு சேர்ந்து வளர்ச்சியடைந்து, இந்த நாவலுக்குள் ஒரு கிளைக் கதையாக அல்லது குறுநாவலாக இமையாவின் கதையை எழுதுவதில் ஊற்றெடுக்கிறது. இமையாவை சுவிசிலுள்ள சித்திரம் என்பவர் திருமணம் முடிக்க அழைத்துவிட்டு காத்திருப்பவர். அவளை எல்லைகள் தடுத்து நிறுத்துகின்றன. அலைக்கழிக்கின்றன. அச்சமூட்டுகின்றன. இமையாவை இளங்கோ உக்ரைனில் சந்திக்கிறான். இமையாவின் கதையைத் தொடங்குகிறான். இளங்கோவின் காதலி அமுதி யாழ்ப்பாணத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள். காதலன் சுவிசிலிருந்து தன்னைக் கூப்பிடுவான் என்ற கனவு அவளுக்கு. அவனையும் எல்லைகள் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. எல்லை கடத்தல்காரனாக தேவாரம் இருக்கிறார். இளங்கோவுக்கும் உக்ரைன்காரி ஹன்னாவுக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது, அது எதுவாக மலர்ந்தது, இளங்கோ எங்கு போய்ச் சேர்ந்தான் என்பதெல்லாம் நாவலை வாசித்து அறியவேண்டியவை. மேற்குலகுப் புகலிட இலக்கியத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கவிதைகளும் கதைகளும் ஆரம்பகாலங்களில் மண்ணின் மீதான வாழ்வின் நினைவுகளையும் ஏக்கங்களையும் கொண்டிருந்ததற்கு ஒரு நியாயம் உண்டு. ஆனால் முப்பது நாற்பது வருடங்களாக தமது இளமைக் காலத்தையே புகலிடத்தில் ஒப்புக்கொடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அந்த வாழ்க்கையை எழுதியது குறைவானது என்றே சொல்ல முடியும். அதற்கான காரணங்கள் விரிவான கட்டுரை ஆக்கத்துக்கு உரியன. “திசை ஒன்பது” இந்த புகலிட வாழ்வை எல்லை கடத்தலிலிருந்து தொடங்கி, அந்தந்த நாடுகளில் எதிர்கொண்டவைகளையும், அலைக்கழிப்புகளையும், மனவுளைச்சல்களையும், அச் சூழல்களோடான தற்காலிகத் தகவமைதல்களையும் முன்வைக்கிறது. அகதிகள் எதிர்கொண்ட உண்மைகளை விட்டுவிலகி ஓடாத புனைவுகளால் எழுதிச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், எரித்திரியா, குர்திஸ்தான், ‘பலுசிஸ்தான்’, சிரியா என வேறு நாட்டு அகதிகளையும் அந்த வாழ்வு குறுக்கிட்டு கடக்க வைக்கிறது. “ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் ஒரு மொழிதானே” என்ற கதைசொல்லியின் கூற்றுக்கான ஊற்று இங்கிருந்துதான் பிறக்கிறது. சிரிய அகதி கூறியதுபோல “ அறிவுதான் வெளிச்சம். அந்த வெளிச்சத்துக்குப் பயந்தவர்கள் அவரை (தந்தையை) கொன்றனர்” என்பதையும் மேற்சொன்னதுடன் பொருத்திப் பார்க்க முடியும். அத்தோடு, இலங்கையிலிருந்து துரத்திய போரும் இந்த மற்ற நாட்டு அகதிகளைத் துரத்திய போர்களும், இளங்கோவை திரும்பவும் துரத்திய உக்ரைன் போரும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றன. மனித விழுமியங்களின் தளத்தில் இந்த எடுத்துரைப்புகள் இலக்கிய அழகியலாக இந் நாவலில் வந்தமர்கின்றன. எல்லை கடத்தல் என்பது ஒப்பீட்டு ரீதியில் எண்பதுகளைப் போல் தொண்ணூறுகளில் சுலபமாக இருக்கவில்லை. தொண்ணூறுகளைப் போல் மிலேனியத்துக்குப் பிறகான காலங்களில் சுலபமாக இருக்கவில்லை. இதுவும் உலக அகதிகளுக்கு பொதுவான ஒன்றுதான். நாடே அகதிகளாக பெருக்கெடுத்ததுபோல் சிரிய அகதிகள் கிரேக்கம், துருக்கி என எல்லைகளை தாண்டப் புறப்பட்டு மாதக் கணக்கில் நடந்த கொடுந் துயரமெல்லாம் ஐரோப்பிய தொலைக்காட்சிகளை நிரப்பி பெருக்கெடுத்த செய்திகள். ஆபிரிக்க அகதிகள் பாலைவனப் பயணத்தில் மட்டுமல்ல, இத்தாலியை நோக்கி காலாவதியான படகுகளிலும் கப்பல்களிலும் கடல்தாண்டப் பறப்பட்டு, கவிழ்ந்து கொட்டுண்டு நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில் செத்துமடிந்த துயரங்கள் சொல்லி மாளாதவை. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தளவில் குளிர் தின்று ஆறுகளில் பலியானோர், எல்லை தாண்ட அவர்களைக் கடத்திவந்த பவுசர்களுக்குள் அதன் மூடி மூடுண்டு மூச்சுத் திணறிப் பலியானோர், கைதாகி திருப்பி அனுப்பப்பட்டோர், கைதாகி சிறைசென்றோர், இடைத்தங்கல் நாடுகளில் நிரந்தரமாக தங்கவேண்டி வந்தோர், மாதக் கணக்காக, வருடக் கணக்காக என காலங்களைத் தின்று தீர்த்த இடைத்தங்கல்கள் என எல்லை கடப்பில் பல வாழ்க்கைச் சிதைப்புகள் நடந்திருக்கின்றன. இதில் சிலவற்றையாவது சொல்ல எத்தனித்திருக்கும் “திசை ஒன்பது” முக்கியமான நாவல்தான். சூழல்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதன் ஒரு சாட்சியாக “திசை ஒன்பது” நாவலின் பாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஆசிரியர் காலமும் தூரமும் தீர்மானிக்கின்றன என இன்னொரு பரிணாமத்தில் சொல்கிறார். இளங்கோவினூடாக ஆசிரியர் பேசும் கொசுறுத் தத்துவத்தைவிட, அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரக் கட்டமைப்புகள் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் தளங்களில் நன்றாகவே பேசியிருக்கின்றன. எல்லை கடத்தும் வேலையில் பழம் தின்று கொட்டை போடத் தொடங்கிய தமிழர்களின் ஏமாற்று மொழிகளும் குழைவும் பசப்புகளும் தேவாரத்தினூடாக வெளிப்படுகிறது. இந்தக் கதைசொல்லலுக்குள் சமூக ஊடகங்களின் தாக்கமும் இருக்கிறது. அது தீண்டாமைக்கு உரியதல்ல. மாறாக அது நவீன வாழ்வோடு பிணைந்தது. உலகத்தை நொடிகளில் வைத்து, இற்றைப்படுத்துகிற தகவல்களையும் அறிவு உருவாக்கத்தையும் செழுமைப்படுத்தலையும், அதேநேரம் அதை பகுத்துணர வேண்டிய சவாலையும் மூளைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்த்துதலை அவை செய்கின்றன. அது நம்மை, நமது வாழ்வை பின்தொடர்கிறது. உக்ரைன் போர் இளங்கோவை நிலக்கீழ் பாதுகாப்பு அறைக்குள் துரத்திவிடுகிறபோது, ஒரு மூடுண்ட உலகம் உருவாகிறது. அந்த உலகத்தை துளைபோட்டு வருகின்றன தமிழ்யூரியூப் செய்திகள். கிசே துரையின் விண்ணாணச் செய்திகள் மூன்று நாளில் உக்ரைன் ரசியாவிடம் வீழ்ந்துவிடும் என அரசியல் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு உள்ளே வருகிறபோதும், அது சில தகவல்களையாவது அந்த குகைக்குள் வெளிச்சமாகத் தரவே செய்கிறது. அதை ஆசிரியர் எள்ளலாகச் சொல்லியிருப்பது இந்த முரண்களில் நன்றாக பொருந்திப் போகிறது. அதேபோல் இன்னொரு இடத்தில் “பன்றிக் குட்டிகள் போல் ஒவ்வொரு தை மாதமும் நாவல் எழுத முடியாது” என்ற எள்ளலும் இலக்கியத் தளத்தில் வைத்து ஒரு செய்தியை சொல்லவே செய்கிறது. “சுவிஸ் அண்ணை கட்டிய பதினாறு கோடி மாளிகை” என்பதும் பவுசின் மீதான எள்ளலாக இருக்கிறபோதும்கூட, ஒரு மாயைநிலை வாழ்வின் மீதான செய்தியை ஒவ்வாமையை சொல்லவே செய்கிறது. சயந்தனின் எள்ளலுடன் கூடிய மொழியாளுகையை குறிப்பிடாமல் செல்ல முடியாது. ஒரு ‘நேர்கோட்டின்மைக்’ கதையை செறிவாக பாத்திரங்களினூடாகக் கட்டமைப்பதில் கொண்டிருந்த அவதானத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புகலிட இலக்கியத்தின் பேசப்பட வேண்டிய இன்னொரு களத்துள் (அதாவது எல்லை கடப்பதின் துயரக் களத்துள்) இந்தக் கதைசொல்லலை தேர்வுசெய்தது குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதேநேரம் சில கொசுறு அரசியல் கருத்துகளும், வாழ்க்கைத் தத்தவங்களும், தலைவரின் மரணம் பற்றிய வலிந்த கதையாடலும், “வேசைப் பொம்பிளை” என்ற ஆணாதிக்கச் சொல்லாடலும் எனது வாசிப்பில் இடறவே செய்தன. அதேபோல் அத்தியாயங்களுக்கான (ஆங்கில எழுத்து) தலைப்புகள் இன்னும் எனது அறிதல் எல்லைக்குள் பிடிபடாதவையாக இப்போதும் இருக்கின்றன. அந்த புரியாமையானது அவற்றை கவனிக்காமல் கடக்கும் மனநிலையோடு வாசிப்பை நிகழ்த்தவே செய்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த நாவலின் எந்தப் பாத்திரத்தோடும் ஒன்றித்துச் செல்லும் மனநிலையோ அனுபவமோ எனக்கு வாய்க்கவில்லை. (மற்றவர்களுக்கும் அப்படி இருக்கும் என்பதல்ல அதன் அர்த்தம்). அதனால் எனது வாசிப்பு “தூரப்படுத்தல்” என்ற கலைக் கோட்பாட்டு நிலையில் நின்றே நிகழ்ந்தது. அதாவது மூன்றாவது மனிதனாக வெளியில் நின்று அவதானிப்பது, புரிந்துகொள்வது என்பது பொருளாகும். ஒரு கருத்து நிலைக்குள் அல்லது உணர்ச்சிசார் நிலைக்குள் அல்லது அமைப்புசார் நிலைக்குள் வைத்து அகநிலையாக புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், “தூரப்படுத்தல்” என்ற புறநிலையிலும் நின்று அவதானிக்கிறபோது, பல பரிமாணங்கள் உருவாகும். நியாயப்படுத்தல் அல்லது சார்புநிலை தகரும். கட்டுடைப்பு நிகழும். புதிய வெளிச்சங்களை அறிவு தரிசிக்கும். இந்த நாவல் வாசிப்பு என்னளவில் இவ்வாறே நிகழ்ந்தது. “திசை ஒன்பது” புகலிட இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவல்தான் என்பதை சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. https://sudumanal.com/2026/02/13/திசை-ஒன்பது/
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது. கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது. https://akkinikkunchu.com/359979/
-
பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து
பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங்களாதேஷின் 13வது பொதுத்தேர்தலாகும். 300 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கைப்பற்றல் 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில், பி.என்.பி கூட்டணிக்கும் அதன் முன்னாள் கூட்டுக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்துவந்த தாரிக் ரஹ்மான் அண்மையில் பங்களாஷே் திரும்பியிருந்தார். அவர் முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவின் மகனாவார். அமெரிக்கா வாழ்த்து பங்களாதேஷில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பி.என்.பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய தேர்தல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து நடைபெற்ற இந்தத் தேர்தல், பங்களாதேஷின் அரசியல் எதிர்காலத்தையும் பிராந்திய அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பி.என்.பி கூட்டணியின் வெற்றி, அந்நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238636
-
“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு
“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு 14 Feb, 2026 | 01:04 PM அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அந்நாட்டுக்கு அருகே அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு போர்க்கப்பல் பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா மேலும் ஒரு முன்னணி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் கப்பலை ஈரானை நோக்கி அனுப்ப ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ முன்னிலையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. டிரம்பின் எச்சரிக்கை இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் ஆட்சியை மாற்றும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் சூழலில், அந்நாட்டில் ஆட்சி, அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார். “அவர்கள் 47 ஆண்டுகளாக பேசி கொண்டே இருக்கிறார்கள். எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அமெரிக்காவுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் இரண்டாவது போர்க்கப்பலும் ஈரானை நோக்கி புறப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச கவலை இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம், உலக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது https://www.virakesari.lk/article/238640
-
ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை
ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை 14 February 2026 ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்திய கலாசார உறவுகளுக்கான நிலையத்தின் அழைப்பின் பேரில் கடந்த 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரின் இந்த இந்திய விஜயம் அமைந்திருந்தது. இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. இது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான நகர்வாகும் என குறிப்பிடப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலவருக்கு முதலிடம்' மற்றும் 'மஹாசாகர்' தொலைநோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு இங்கு உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/446337/jvp-india-rapprochement-consultations-with-jaishankar-on-provincial-council-elections
-
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில் 14 February 2026 இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர். "மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு வீதம் மொத்தம் 300,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 10,000 க்கும் குறைவான எண்ணிக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு அதிகப்படியான தேவை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தவறிய ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, தற்போது மேலதிக விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. https://hirunews.lk/tm/446352/players-in-crisis-as-condoms-run-out
-
கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்
யாழ்ப்பாணத்தில, கல்வி முறையில ஒரு விசித்திரமான மனப்பாங்கு வேரூன்றி பெருமரமாக வளர்ந்து வாறதை நான் அவதானிக்கிறன். என்னை போல நீங்களும் அவதானிச்சிருக்கலாம். அது என்னெண்டா, ஆங்கில ஊடகத்தில படிக்கிறது மேதாவிலாசத்தின்ர அடையாளம் எண்டும் தாய்மொழியில படிக்கிறது ஒருவித பின்தங்கிய நிலை என்றும் ஒரு மாயையான நினைப்பு. இந்த நினைப்பு மாணவர்கள் மத்தியில மட்டுமில்லாமல், சமூகத்தின்ர வழிகாட்டிகளாக இருக்கிற ஆசிரியர்கள் மத்தியிலும் ஆழ ஊடுருவியிருப்பது கவலையாக இருக்கு. சிந்திக்கிற மொழியில படிக்கிறது தான் அறிவை வினைத்திறனோட உள்வாங்க உதவும் எண்டதால என்ர இரண்டு பிள்ளைகளையும் தாய்மொழி மூலமாக தான் கல்வி கற்க தெரிவு செய்தன். பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். மொழிமூலத் தெரிவு எண்டது எங்கட தனிப்பட்ட விருப்பே தவிர அது பிறப்புடன் வந்த அறிவு வெளிப்பாடு இல்லை. அது மாணவர்களை மேல் கீழ் இடங்களில் வைப்பதற்கான அனுமதிச் சீட்டும் இல்லை. ஆசிரியர்களின் இந்த பாகுபாடான அணுகுமுறையால, பாவம் ஆங்கிலமொழி மூலமாக கல்வி கற்கும் மாணவர்களும் தங்களுக்கு பின்னால ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் இருக்குதெண்டு நம்பினம். அந்த நம்பிக்கையை தங்கட நடத்தையிலும் காட்டினம். தமிழ் மீடிய மாணவர்களோடு ஒட்டி உறவாடும் தன்மையை வலிந்து நிறுத்துகின்றார்கள் ( விதிவிலக்கான பிள்ளைகளும் இருக்கினம்) இது ஒருவிதமான சாதீய மனநிலையை பள்ளிக்கூடங்களில, ரியூசனுகளில உருவாக்குது. "நீங்கள் எவடம்?" எண்ட கேள்விக்கும் "நீங்கள் எந்த மீடியம்?" எண்டிற கேள்விக்கும் பின்னால இருக்கிற மனநிலை ஒண்டு தான். மகள் தன்ர பத்தாம் வகுப்பில ஆங்கில இலக்கியத்தை ஒரு விருப்புக்குரிய தொகுதிப்பாடமாக தெரிவு செய்தாள். அதற்கான தனியார் வகுப்புக்கு ஆசிரியை ஒருவரிடம் அனுமதி எடுக்க செல்லும் போது, அவர் நடத்திய "நேர்முகத்தேர்வில்" என்னிடம் கேட்ட கேள்வி "இவ எந்த மீடியம்?". தமிழ் எண்டதும், ஆசிரியையின் முகம் மாறி, "தமிழ்மீடிய பிள்ளைகள் இந்த பாடத்துக்கு கஷ்டப்படுவினம்" எண்டு ஒரே போடாக போட்டார். "இல்லை... இவ A எடுப்பா " எண்டு சிரித்தபடியே தான் சொன்னேன். அதை விட இன்னொரு படி மேல போய் ஒரு ஆசிரியப்பெருந்தகை சொல்லி இருக்கிறார், "இது சரியான கஷ்டமான பேப்பர் தான். இங்கிலீஷ் மீடிய பிள்ளைகளே இந்த கேள்விக்கு சரியா ஆன்ஸர் எழுதேல்ல" இதில பகிடி என்னெண்டா அவர் சொன்னது வரலாற்று சோதினை பேப்பரை. அவரும் படிப்பிக்கிறது வரலாறு தான். பாவம் வரலாறு அவருக்கு வழிகாட்டேல்ல 😜 இந்த மாயையான மனநிலை எங்க வரை கொண்டு வந்து விடுகின்றது என்றால், கற்பித்தலுக்கான ஆசிரிய வளங்களை வகுப்புகளிடையே பிரித்தளிக்கும் போது, ஆங்கில மொழிமூலமான வகுப்புகளுக்கு திறன் கூடிய ஆசிரியர்கள் வழங்கப்படுவது வரை. இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மொழிமூலமான வகுப்புகளும் பிள்ளைகளும் அணுகப்படுகின்றமை அனேகமான பாடசாலைகளில் தூலமாக அவதானிக்க முடிகின்றதை பலர் கூற கேட்டிருக்கிறேன். இதுக்கு என்ன வழி என்று கல்விசார் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான பரிந்துரையை மிக நிச்சயமாக கொடுக்க வேண்டும். அவை ஆய்வு செய்ய முதல், A/L க்கு வந்து பௌதீகவியலுக்கு ரியூசனுக்கு போகும் போது குமரன் சேர் செய்தது தான் thug life. 😜 "நீ இங்கிலீஷ் மீடியமோ தமிழ் மீடியமோ என்னவாவெண்டாலும் இரு. இப்ப தலையங்கம் போடு, திருகாணி நுண்மானியில் பூச்சியவழு" சமரசம் உலாவும் இடம் இப்ப அவற்ர ரியூசன் தான் 😜 https://www.facebook.com/share/18K5RsDhag/?mibextid=wwXIfr
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை. இந்தியா நமீபியாவுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டதால் பலருக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை சனி 14 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA அனைவரும் அயர்லாந்து அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறப்படுமா? 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG ஒரே ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி இப்போட்டியில் @suvy ஐயாவுக்கு புள்ளிகள் கிடைக்க குருபார்வை உள்ளதா? 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 16 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து வசீ புலவர் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே நியாயம் நந்தன் தென்னாபிரிக்கா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சரி.. சரி.. சில்லறையை உண்டியலில் போட்டுவிட்டுப் போங்கோ 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆
- IMG_5144.jpeg
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
முடிசூட்டப்படாத ஆட்சியாளர் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் தாயைப் பிரிந்து தந்தையிடம் வந்து நான்கு வருடங்களே ஆகியிருந்தன. இருபது வயதியிலேயே ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள் அனைத்தையும் பெற்றிருந்தான். ஆயுத பயிற்சியை சத்ரியர்களின் காலன் எனப் பெயர் பெற்றிருந்த பரசுராமிடம் பயின்றான். வேத வேதாந்தங்களை வஸிஷ்டரிடமும் சுக்ரரிடமும் கற்றான். தந்தையிடம் வந்தவுடன் இளவரசனாக அடுத்த அரசனாக அறியப்பட்டான். இருந்தும், அவனது தந்தை சத்யவதியை திருமணம் செய்துகொள்ள வேண்டி அரியணையும் திருமணமும் தேவையில்லை என சபதம் பூண்டு “பீஷ்மர்” என பெயர் பெற்றான். அவனது தந்தை சந்தனு இறந்தபொழுது, அவனது தம்பிகளான சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் இருவரும் வயதில் மிக சிறியவர்களாக இருந்ததால் பல வருடங்கள் அவர்களுக்கு பதில் பீஷ்மரே அரசாண்டார். சித்ராங்கதனுக்கு உரிய வயது வந்தவுடன் அவனை அரசனாக்கினார். ஆனால் , கந்தர்வர்களுடனான போரில் அவன் இறக்க, விசித்திரவீர்யன் மன்னன் ஆனான். ஆனால், அவனும் விரைவில் இறந்துவிட வாரிசு இல்லாமல் தவித்தது இராஜ்ஜியம். எதிரிகளிடம் இருந்து அரசை காப்பாற்ற, பீஷ்மர் மீண்டும் அரசாங்கத்தை வழி நடத்தினார். அவர் யோசனைப்படியே, குழந்தை இல்லா இரு விதவைகளும் வியாசர் மூலம் பாண்டு மற்றும் திருதராஷ்டிரனை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் பட்டம் கட்டும் வயது வரும்வரை பீஷ்மரே ஆட்சியை வழிநடத்தினார். அரியணையில் அமராமலே பல வருடம் ஆட்சி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. திருதராஷ்டிரன் பார்வையற்றவனாய் இருந்ததால், இளையவனான பாண்டு அரியணை ஏறினான். இருந்தும், அவன் பெற்ற சாபத்தினால், அரச பதவியை துறந்து, தனது மனைவியர் குந்தி மற்றும் மாத்ரியுடன் கானகத்தில் குடியேறினான். இந்த நேரத்தில், அரசை வழி நடத்தும் பொறுப்பு மீண்டும் பீஷ்மரின் தோள் மேலே. அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை. எப்படி தன்னில் எந்த அசுத்தம் வந்து சேர்ந்தாலும் அவற்றால் களங்கமடையாமல் புனிதமாய் தூய்மையாய் அவரது அன்னை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாளோ அது போன்றே வாழ்ந்தார் பீஷ்மர். சமாதான தூது துருபதன், பாண்டவர்களின் சார்பாய் பேச தூதுவனாக ஒரு பிராமணனை அனுப்பினார். நன்கு கற்று தேர்ந்த அந்த பிராமணன், கௌரவர்களின் சபைக்கு வந்தபொழுது பீஷ்மர், விதுரர் மற்றும் திருதராஷ்டிரனால் வரவேற்க பட்டு கௌரவிக்கப்பட்டார். “இந்த அவை அறிவாளிகளாலும், சிறந்த மனிதர்களாலும் நிரம்பியுள்ளது. இந்த இராஜ்ஜியமானது கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவருக்கும் சொந்தமானது. பாண்டவர்கள் ஆட்சி செய்த சமயத்தில், தங்களது பிரதேசத்தை முன்னேற்ற கடுமையாக உழைத்தனர். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். சூதாட்டத்தின் மூலம் அநியாயமாக அவர்களது இராஜ்யம் பறிக்கப்பட்டது. இருந்தபொழுதும், நிபந்தனையை ஏற்று பதிமூன்று ஆண்டுகள் வனத்தில் கழித்தனர். இப்பொழுது, அந்த பதிமூன்று ஆண்டுகாலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய அவர்களது இராஜ்யத்தை உடனடியாக திருப்பித் தருமாறு அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போரில் விருப்பமில்லை என்றாலும் நீங்கள் யுத்தம்தான் வேண்டும் என்றால் அவர்கள் பக்கத்தில் பல பலசாலி அரசர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அர்ஜுனனுக்கு உதவியாய் பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அவர்கள் பக்கத்தில் உள்ளார். எனவே , இங்கே உள்ள சிந்திக்கத் தெரிந்த பெரியவர்கள் துரியோதனனுக்கு நல்லவற்றை எடுத்துக் கூறி பாண்டவர்களின் இராஜ்ஜியத்தை திருப்பித் தர செய்வீர்களாக!” என தான் வந்த காரியத்தை எடுத்துக் கூறினார் அந்த பிராமணர். “பாண்டவர்கள் நலமாக இருப்பதும், அவர்கள் பக்கத்தில் பலம் அதிகம் இருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இருப்பது அவர்களுக்கு நன்மையே. நீங்கள் தூதுவராக இங்கு வந்தாலும், உங்கள் பேச்சில் அது எதிரொலிக்கவில்லை. நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நேரடியாக, மிகக் கூர்மையாக இருந்தன. அதிகப்படியான கஷ்டத்திற்கு உள்ளானலும் தர்மத்தை பாண்டவர்கள் எந்த நாளும் கைவிடவில்லை. அவர்களுக்கு அவர்கள் இராஜ்யத்தை மீண்டும் அளிப்பதே…” என பீஷ்மர் பேசிக் கொண்டு இருக்கையிலேயே கர்ணன் இடைமறித்தான். “இதற்கு ஒரு முடிவே இல்லையா? துரியோதனனை மிரட்ட முயற்சிக்க வேண்டாம். அவர்கள் பக்கத்தில் மத்ஸ்ய மற்றும் பாஞ்சால அரசர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், அவர்கள் வனவாச நிபந்தனையை மீறினார்கள். அவர்கள் தலைமறைவு காலம் முடியும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் மீண்டும் வனவாசம் சென்று அதன்பின் சாதாரண பிரஜைகளாக வாழ வேண்டும்.” இதைக் கேட்ட பீஷ்மர் கோபத்துடன் “ராதேயா! உன் முட்டாள்தனமான பேச்சை நிறுத்து. இந்த பிராமணரின் பேச்சை கேக்காவிடில், துரியோதனனுக்கு அழிவு நிச்சயம்!” என்றார். இதைத் தொடர்ந்து அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட, திருதராஷ்டிரன் குறுக்கிட்டான். “ராதேயா! தூதுவரிடம் இப்படி பேசுவது முறையாகாது” என்று கர்ணனை பார்த்துக் கூறியவர், அந்த தூதூதுவரிடம் “ஓ தூதுவரே! அரசவையில் நாங்கள் கூடி பேசிய பிறகு எங்கள் முடிவை என் தூதுவனான சஞ்சயன் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என பாண்டவர்களிடம் தெரிவிப்பாயாக!” என கூறினான். மத்ஸ்ய தேசத்துக்கு திரும்பிய அந்த பிராமணர் நடந்ததை உள்ளபடி பாண்டவர்களுக்கு எடுத்துக் கூற, அவர்களும் சஞ்சயனுக்காக காத்திருக்கத் துவங்கினர். https://solvanam.com/2025/10/12/முடிசூட்டப்படாத-ஆட்சியா/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இன்று புள்ளிகள் கிட்டவில்லை. அமெரிக்காவின் தயவில் 2 கிட்டும் 😃