Everything posted by கிருபன்
-
யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைக்கப்படவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறை written by admin October 3, 2025 யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி மற்றும் இறங்குதுறைக்கான வீதி மறுசீரமைப்பு பணிகள் நாளைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் , துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள் , போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சுமார் 299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறை சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். https://globaltamilnews.net/2025/221093/
-
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம் adminOctober 3, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினர். அதன் போது, தினசரி காவல்துறையினரின் உதவியுடனேயே இப்பகுதியில் இருந்து மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் , மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுடன் காவல்துறையினர் நல்லுறவில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் காவல்துறையினர். போதை பொருள் கடத்தல்காரர்களிடம், மணல் கடத்தல்காரர்களிடமும் லஞ்சம் வாங்கி விட்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள் காவல்துறையினர் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள் அவர்களுடன் சில காவல்துறையினரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் காவல்துறையினருடைய பெயர் விவரங்கள் யாவும் நாங்கள் எடுத்து, இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/221083/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
கரும்புக்காரன் எனும் தெய்வமும் வழிபாட்டுமுறைகளும் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனிதகுல வரலாற்றில் புதிய கற்காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு 9000 – 6000) விவசாய உற்பத்தி, ஆயர்வாழ்வு என்பன தோன்றிவிட்டன (Allchin, F.R. 1963, Neolithic Cattle Keepers of South India, Cambridge). தமிழ்ச்சமூகத்திலும் காடுசார் வாழ்வுடைய திணைக்குடிகளான முல்லைநில மக்கள், ஆரம்பத்தில் மேய்ச்சல் நிலத்துக்கான புலம்பெயர்வாளர்களாக இருந்தபோதிலும் நிலையான குடியிருப்புகள் உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். தரிசாக இருந்த கொல்லை நிலத்தில் (அகம்:89:17) பயிரிடல் மேற்கொள்ளப்பட்டது. காடழித்துக் களனியாக்கப்பட்டது (அகம், 394:3). முல்லைநில மக்கள் எருமை (கோட்டினத்தாயர்), மாடு (பசு ஆயர், கோவினத்தாயர்), ஆடு (புல்லினத்தாயர்) ஆகியனவற்றை மேய்த்துள்ளமையை அறியமுடிகிறது. இவர்களது பொருளாதாரம் கால்நடை வளர்ப்பு, விவசாய உற்பத்தி (வன்புல வேளாண்மை) என்பவற்றால் கட்டமைக்கப்பட்டது (நற்றிணை, 266:1-3). இந்த வாழ்வியலின் நீட்சியும் மருதநில, முல்லைநில வாழ்வியல் இணைவும் புதிய வர்க்கங்களையும் சமூகக்கட்டுமானங்களையும் தோற்றுவித்தன. கால்நடை, உழவு, உற்பத்தி எனக் கலப்புநிலையை ஏற்படுத்தின. ஈழத்துப்புலத்தில் விவசாயமும் கால்நடைவளர்ப்பும் இணைந்த வாழ்வமைவு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. நிலவுடமையாளரே கால்நடைப்பட்டியை உடையவராதலால் பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர் எனும் சாதிய அடுக்கமைவும், உழுவித்துண்போர், உழுதுண்போர் என்ற வர்க்கவமைவும் தவிர்க்கமுடியாதபடி உருவாயிற்று. அவற்றின்வழியே தெய்வங்களும் தெய்வநம்பிக்கைகளும் கட்டமைக்கப்பட்டன. புறப்பொருள் வெண்பாமாலை ஆதிகாலத் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த போர்களை எட்டாக வகுத்துரைக்கின்றது. அவற்றுள் ஆநிரை கவர்தல் – வெட்சி, ஆநிரை மீட்டல் – கரந்தை என்பன முதன்மை பெறுகின்றன. பூசல் எனும் போர் தொறுகோடல், மீட்டல் எனும் இரண்டையும் குறிக்கும் வண்ணம், தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை 5 இல் குறிக்கப்படுகிறது. தொறு – பசுக்கூட்டம், மாடுகள் எனவும்; தொறுப்பூசல் – மாடுபிடி, சண்டை எனவும் கூறப்படுகின்றது. ஆகவே பூசல் என்பது பெரும் போரைக் குறிக்காது. ஆநிரை கவர்தலையும் மீட்டலையும் வேறுபடுத்திக்காட்டப் பயன்பட்ட சொல்லாகவும் இது விளக்கப்படுகிறது (பக்தவத்சல பாரதி, 2020, பண்டைத்தமிழ்ப் பண்பாடு, அடையாளம், திருச்சி). முல்லைநிலக் கடவுளான மாயோனே கால்நடைகளின் தெய்வமாகச் சுட்டப்படினும் பிற்காலத்தில் மாயோன், திருமால் எனும் பெருந்தெய்வமானார். கால்நடைவளர்ப்போர் பிராந்திய மற்றும் முன்னோர் நம்பிக்கையின்வழி புதிய தெய்வங்களை தமக்கேற்றவகையில் உருவாக்கிக்கொண்டனர். அந்தவகையில் ஈழத்து வடபுல, கிளிநொச்சி மாவட்ட, பூநகரி வாழ்புலத்தில் நின்றிலங்கும் தெய்வமாக ‘கரும்புக்காரன்’ காணப்படுகின்றார். கரும்புக்காரன் கரும்புக்காரன் எனும் பெயர் அநேக ஊகங்களுக்கு இடமளிக்கின்றது. கருப்பு, கருப்புசாமி, கருப்பணசாமி எனப்பல பெயர்களால் குறிப்பிடப்படும் கருப்பன், கரும்புக்காரனாக விரிந்திருக்கலாம் எனக் கருதமுடிகிறது. ஆயினும் கருப்புசாமிக்குச் சொல்லப்படும் எந்த இலட்சணங்களும், வழிபடுமுறைகளும், கதைகளும் கரும்புக்காரனுடன் பொருந்துவதாயில்லை. விவசாய நடவடிக்கையில் கரும்பு, நெல் உற்பத்தி என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கரும்புத்தோட்டத்திற்குக் காவலாகக் கருதப்பட்ட தெய்வமாக இருக்கலாம் என அனுமானிப்பின், பூநகரியில் இத்தெய்வம் நின்றுநிலவும் பிரதேசங்களில் முன்போ தற்போதோ கரும்புப்பயிரிடல் இடம்பெற்றதாக அறியமுடியவில்லை. கரும்பைக் கையில் உடைய காமன், கரும்புக்காரன் எனப்பட்டான் எனக் கருதின், விவசாயத்துக்கும் கால்நடைவளர்ப்புக்கும், காதல் தெய்வமான காமனுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக அறியமுடியவில்லை. வடமராட்சியில் குறும்பன் எனும் தெய்வம் காணப்படுகிறது; தற்போது அது கருப்பன்சாமியாக வழிபடப்படுவது ஆய்வுக்குரியது என்ற ஒரு கருத்தை பா. இரகுவரனின் முகநூற்பதிவில் காணமுடிந்தது. பொதுவில் மலையகம் தவிர்ந்த, குறிப்பாக ஈழத்து வடபுலத்தில் கருப்பன்சாமி வழிபாடு அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. தமிழகச்சூழலிலோ ஈழத்தின் ஏனைய பிராந்தியங்களிலோ இத்தெய்வத்தையோ அல்லது இதனை ஒத்த தெய்வத்தையோ அடையாளப்படுத்த முடியவில்லை. ஆகவே பூநகரிப் பிராந்தியத்தின் கால்நடை, வேளாண்மைசார்ந்த தனித்துவமான தெய்வமாக கரும்புக்காரன் காணப்படுகின்றார். இத்தெய்வத்தைப் பற்றிய முதற்குறிப்பை வழங்கியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன் அவர்கள். இவரும், ஊடகவியல்துறை முகாமைத்துவ உதவியாளரும், ஆய்வு ஆர்வலருமான கோ. விஜிகரனும் எம்மோடு கள ஆய்வில் ஈடுபட்டனர். பூநகரியில் கரும்புக்காரன் பூநகரியின் கொடுதாவில் பிரதேசத்திலும், கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்குத் தனிக்கோயில்கள் உண்டு. பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பரிவாரத்தெய்வமாக தெற்குப்பக்கத்தில் கரும்புக்காரன் வீற்றிருக்கின்றார். இவற்றைவிட வேறெங்கும் கரும்புக்காரன் இருப்பதாக அறியமுடியவில்லை. வயலும் (மருதம்), காடும் (முல்லை) சேர்ந்திருக்கின்ற, நெல்விளைச்சலும் பட்டிகளுக்கான மேய்ச்சல் தரவைகளும் (விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி) இணைந்திருக்கின்ற இந்தப்பிரதேசத்தின் தனித்தெய்வமாக, கரும்புக்காரன் முக்கியத்துவம் பெறுகின்றார். கரும்புக்காரன் யார்? இத்தெய்வத்தின் தோற்றம் பற்றிய கதைகள், வரலாறுகள் எவை? போன்ற கேள்விகளுக்கான விடைகளை வாய்மொழி வழக்காறுகளாகவேனும் அறியமுடியவில்லை. கொடுதாவில் கரும்புக்காரன் கோயில் பூநகரிப் பிரதேசத்தில், மன்னார் செல்லும் பாதையினால் உள்நுழையும் கிராமங்களில் ஒன்று கொடுதாவில். காடாகிக்கிடக்கும் இப்பிரதேசத்தில் முன்பு தோட்டங்கள் இருந்தபோதும் இப்போது இல்லை. சில மரமுந்திரிகைத் தோட்டங்கள் உள்ளன. கோயில் உரித்தாளர்களுள் முக்கியமானவரான இராமன் நாகேஸ்வரன் (இராசன் – வயது – 64), தனது பூட்டன் காலத்துக்கு முன்னைய ஆலயமாக கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலைக் குறிப்பிடுகிறார். கும்பாபிக்ஷேகம் நடைபெற்று மேனிலையாக்கம் செய்யப்பட்ட பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமான பிள்ளையார் கோயிலில், குறித்த சமூகத்தையும், தெளிகரை எனும் ஊரையும் சேர்ந்த தம்பையா பொன்னம்பலம் பூசாரி (வயது, 70) அவர்களால் தொடர்ந்தும் பூசை செய்யப்பட்டு வருகிறது. இப்பல்லாய் பிள்ளையார் கோயிலில் இருந்தே ஏறத்தாழ இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படுகிறது. பல்லாய் மிகவும் செழிப்பான மருதநிலம்; பனைவளம் நிறைந்த ஊர். ஆயினும் ஈழப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டபின் வெள்ளப்பெருக்கு நிலையை அடிப்படையாகக்கொண்டு குள அபிவிருத்திக்காக இடப்பெயர்விக்கப்பட்ட நிலமாக அது மாறிவிட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் தெளிகரை, பூநகரி எனச் சிதறி வாழ்கின்றனர். இன்றும் குள அபிவிருத்தி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிலிருந்து வெள்ளம் கடந்தே கொடுதாவிலுக்குச் செல்லும் சூழல் இவ் ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பாடசாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. பல்லாய் வாழ்விழந்த ஊராயிற்று. பிள்ளையார் மட்டும் நிமிர்ந்து நிற்கின்றார். பட்டிமாடுகளும் மேய்ச்சல் தரவைகளும் வயல்வெளியும் நிறைந்த இப்பூமியின் சிறுகுடி வேளாள சமூகத்தின் (பள்ளர்) குலதெய்வமான கரும்புக்காரனின் கோயில், இன்றும் நாட்டார் மரபு சிறிதேனும்மாறாத பண்பியலோடு காணப்படுகிறது. ஆயினும் சீமெந்தாலான கட்டடச்சுவர் உடையதாக தற்போது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாய் பிள்ளையார் கோயிலிலும் கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலிலும் கல்ரூபத்தோடு இரும்பாலான ரூபத்தில் கரும்புக்காரன் காட்சியளிக்கின்றார். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் கல், முச்சூலம் (திரிசூலம்) வடிவங்களிலேயே காட்சி தருகின்றனர். ஆனால் கரும்புக்காரனின் இரும்பாலான ரூபம் தனித்துவமானது. குறித்த இரும்புக்கம்பியின் நுனியில் இருந்து 4-5 இஞ்ச் இடைவெளியில் மொட்டுப்போன்ற வடிவில் மூன்று வளைவு கம்பிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவை தாமரைமலர் மொட்டுப்போலக் காணப்படுகின்றன. நுனியில் வெள்ளி, தகரம் ஒட்டப்பட்டிருக்கின்றது. இன்னொன்றின் நுனி, இலை அல்லது வேல் போன்ற வடிவம் உடையதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாடுகளைக் கட்டும் கம்பியின் வடிவம் எனில் நுனியின் வட்டம் அல்லது வளைவே அதில் காணப்படும். இது மலர் மொட்டுப்போலவே காட்சியளிப்பது தனித்துவமும் அழகியலும் உடையதாக உள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை யாராலும் சொல்லமுடியவில்லை. கிராஞ்சி கரும்புக்காரன் கோயில் பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி, விளாத்திமோட்டை, உறக்கிணறு பகுதியில் இக்கரும்புக்காரன் கோயில் காணப்படுகிறது. அப்பிரதேசத்தில் வாழும் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் குலதெய்வமாக இத்தெய்வம் விளங்குகிறது. ஆரம்பத்தில் இத்தெய்வம் பிருந்தாவனக் கரைகடல் எனும் இலவங்குடாவில் இருந்ததாகவும், பின்னர் கிராஞ்சி, சிவபுரம் ஊர்மனையுள் இருந்ததாகவும், பின் அதன்மீதான அச்சத்தினால் கிராமத்தின் வடதிசையில் தற்போது உள்ள இடத்தில் கோயிலமைத்து வழிபட்டுவருவதாகவும் பூசாரி பழனி செல்லதுரை (வயது, 72) கூறுகின்றார். இந்த ஆலயத்தில் கரும்புக்காரன் ‘கல்’ வடிவத்திலேயே வணங்கப்படுகின்றார். இந்த ஆலயத்தின் பூசாரி தெரிவுமுறை மிகச் சுவாரசியமானது. நாற்பது வருடங்களுக்குமேல் பூசாரியாகத் தெய்வமாடிப் பூசை செய்துவந்த கணபதி சின்னத்தம்பி இறந்ததன்பின் பூசாரி இன்றி ஆலயவழிபாடு தடைப்பட்டது. உரிய விசேட காலத்தில் பானை வைத்துப் பொங்கும்போது, கரும்புக்காரன் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை உரியநேரத்தில் அள்ளுபவர் யாரோ அவரே பூசாரி என்ற சம்பிரதாயம் உண்டு. அதன்படி எல்லாத் தெய்வங்களுக்கும் பொங்கலிடப்பட்டது. கரும்புக்காரன் பானை பொங்கிவரும் நேரத்தில் எங்கோவொரு மூலையில் மரத்தடியில் நண்பர்களோடு பொழுது போக்கிக்கொண்டிருந்த செல்லத்துரை அவர்கள் உருவேறி வேகமாகவந்து யாரும் எதிர்பாராதவகையில் நுரையை அள்ளியதோடு, அன்றிரவு முழுவதும் கலையாடி, காலையிலேயே தெய்வமிறங்கியதாக திரு. செல்வம் (வயது, 77) தெரிவித்தார். இருபது வருடங்களுக்குமேலாக பழனி செல்லத்துரையே பூசாரியாக இருந்துவருகிறார். மழைநீர் தேங்கும் நிலம் கடந்தே இந்த ஆலயத்திற்கும் செல்ல வேண்டும். காட்டினில் இக்கோயில் எந்தவகையிலும் நாட்டார்மரபு மாறாதவகையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலும் மருதமும், முல்லையும் – பட்டி வளர்ப்பும், விவசாயமும் இணைந்த பாரம்பரிய நிலமாகவே காட்சியளிக்கின்றது. விசேட தினங்கள் இவ்விரு கோயில்களிலும் தைப்பொங்கல், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் விசேட தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயினும் கிராஞ்சிக் கோயிலின் சிறப்பு வழிபாடாக வைகாசி, ஆனி மாதங்களுக்கிடையில், ஏனைய ஆலயங்களின் பட்சங்களையும் அனுசரித்து வருடாந்தப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறு வழி வெட்டப்படும். கொடுதாவில் கோயிலில் ஆனிப் பௌர்ணமியை மையமாக வைத்து வருடாந்தப் பொங்கல் இடம்பெற்று வருகின்றது. வழிபாட்டு முறைகள் பிராந்திய, சமூகத்தேவைகள் சார்ந்து இவ்விரு கோயில்களிலும் சிலசில வேறுபாடுகள் காணப்படினும், வழிபாட்டுமுறைகள் ஒத்ததன்மையுடையனவாகவே பெரிதும் காணப்படுகின்றன. கொடுதாவில் கரும்புக்காரனுக்கு பல்லாய் பிள்ளையார் கோயிலிலிருந்தும், கிராஞ்சி விளாத்திமோட்டை கோயிலுக்கு, வாண்டையான் பள்ளத்தில் உள்ள புளியமரத்தடியிலிருந்தும் மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்படும். வெள்ளிக்கிழமை காலையில் கிராஞ்சியில் காட்டுப்பிள்ளையாருக்கும், கொடுதாவிலிலுள்ள பல்லாய் பிள்ளையாருக்கும் பொங்கல் நடைபெறும். பிள்ளையார் பொங்கல் இடம்பெறும் அதேவேளை பல்லாய் பிள்ளையார் ஆலயத்திலிருந்து செல்லையாத்தீவு அம்மனுக்கு பண்டம் அனுப்பப்படும். அவ்வாலயப் பூசாரி அதனைப் பொங்கிக் கொடுத்தனுப்புவார் (அவ்வாலய மரபு உயர்குடி வேளாளருக்கானது). அப்படையல் பிள்ளையார் கோயிலில் விரதகாரருக்கு வழங்கப்பட்டபின், அன்னதானம் வழங்கப்படும். பின் அவ்வளந்துப்பானை கழுவப்பட்டு அம்மன் வளந்துடன், கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு அவ்வளந்துப்பானையில் மீளவும் பொங்கும் மரபு உண்டு. அப்பானையின் பொங்கல் படைக்கப்படுவதில்லை. அதனோடு, ஏனைய தெய்வங்களின் மூன்று படையல்களையும் இணைத்து சலவைத் தொழிலாளிக்கு வழங்கும் வழக்கமும் காணப்படுகின்றது. இம்மரபு கிராஞ்சி கரும்புக்காரன் கோயிலில் இடம்பெறுவதில்லை. கிராஞ்சியில் மடைப்பண்டம் எடுக்கமுன், ஐயனார் மடையை மரத்தின் அடியில் படைத்தபின்பு அன்னதானம் இடம்பெறும். அதன்பின் ‘கயிறு நேருதல்’ எனும் நிகழ்வு இடம்பெறும். கிராஞ்சியில் ஆத்திமரநாரைக் கிழித்து முப்புரியாகத் திரித்து நான்கு கயிறுகள் செய்வர். கொடுதாவிலில் உவரி மரநாரைப் பயன்படுத்துவதாக இ. நாகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கயிற்றை அடுத்த வருடம் பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் புதிதாகத் தயாரித்தே இருகோயில்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வெள்ளிக்கிழமை மாலை வெற்றிலை, பழம், பாக்கு, தேசிக்காய் உள்ளிட்ட ‘வெற்றிலை மடை’யை கரும்புக்காரன் கோயிலுக்குக் கொண்டுசெல்வர். ஆலயத்தை நீரால் கழுவுவதோடு சுற்றுப்புறச்சூழலையும் துப்புரவு செய்வர். அதன்பின் சலவைத் தொழிலாளியால் ‘வெள்ளை’ கட்டப்படும். பூசாரியால் விளக்கு வைக்கப்பட்டு, தெய்வமாடி, பூசையின் தன்மை பற்றியும் நிறைகுறைகள் பற்றியும் கூறப்படும். அதற்கேற்றபடி பூசைகள் முன்னெடுக்கப்படும். கிராஞ்சிக் கோயிலில் கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான பூசாரிகள் தெய்வமாடுவர் (செல்லத்துரை பகீரதன், வயது – 30). கொடுதாவில் கோயிலில் கரும்புக்காரனோடு நாச்சியார், பூவாளிப் பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் போன்ற ஒன்பது தெய்வங்கள் காணப்பட்டாலும் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, நாச்சிமார் போன்றவற்றின் பூசாரிகளே தெய்வமேறியாடுவர். இப்பூசாரிகளுக்கு வேளநூல் (கும்பத்துக்குச் சுற்றும் நூல்) கொண்டு பூணூல் போடப்படுகிறது. நூற்பந்திலிருந்து நூலை முழங்கையாற் சுற்றி பூசாரியின் இரண்டு பக்கமும் போடும் மரபு காணப்படுகின்றது (பிராமணர் ஒரு பக்கமாகப் பூணூல் போடுதல் நினைவுகூரத்தக்கது). நாச்சிமார் தெய்வமேறி ஆடுபவர் பெண்பூசாரி; அவருக்குப் பூணூல் இடப்படுவதில்லை. பூசாரிகளுக்கு திருநீறு, சந்தனம் இட்டு பன்னீர் தெளிக்கும் வழக்கமும் காணப்படுகிறது. கிராஞ்சி கரும்புக்காரன் கோயில் பூசாரி கறுப்புநிற ஆடை அணிவார். அது சுருக்கு வைத்த பாவாடையாக இருக்கும். காலில் சலங்கை, வெள்ளியாலான நெத்திப்பட்டம், பூட்டுக்காப்பு, வெண்டயம், அரையில் ஒட்டியாணம் என்பனவற்றையும், வெள்ளியாலான பூணூலையும் அணிவார். கொடுதாவில் பூசாரி வெள்ளி அணிகலன்களை இவ்வண்ணமே அணிகின்ற அதேவேளை, வெள்ளாடை அணிவார். அச்சுருக்குப் பாவாடையில் மூவர்ணக் கோடுகள் காணப்படும். கொடுதாவில் ஐயன் இளந்தாரி நெத்திப்பட்டம், வெண்டயம், பித்தளைப்பூணூல், வெள்ளாடை என்பனவற்றை அணிவார். சிங்கள இளந்தாரி வெள்ளாடை மட்டும் அணிவார். கிராஞ்சியில் சிங்கள இளந்தாரிக்கான பூசாரி வெள்ளை, சிவப்பு கலந்த ஆடையை அணிவார். கால்நடையும் கரும்புக்காரனும் கரும்புக்காரன் வழிபாட்டுச்சடங்கில் ‘பலகாலத்துக்கு’ முன்பு மாடுகளை வெட்டிப்பலியிட்டு வழிபடும் மரபு காணப்பட்டுள்ளது. பொங்கலோடு இவ்விறைச்சியைப் படைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது (வெட்டிப்பலியிடப்படும் மாடுகளின் எண்ணிக்கை 200க்கு மேல், 108, 60 என மாறுபட்டவகையில் பலவாறு கூறப்படுகிறது). படையல் சடங்கு முடிவடைந்ததன்பின் யாவரும் ஆலயத்தில் இருந்து வெளியேறிய பிறகே பூசாரி வீடு திரும்புவார். அதன்பின் ஆலயத்தில் நிற்பவருக்கு மரணம் நேரும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆயினும் குறித்த ஒரு வருடப் பூசை முடிந்து யாவரும் வெளியேறிய பிறகு, பூசாரியும் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரது சிறிய வயது மகன் ஆலயத்திலேயே விடப்பட்டுவிட்டது பின்பே அவருக்குத் தெரிந்தது. ஆலயத்துக்குச் செல்ல அவர் மனம் துணியவில்லை. தன் மகனைக் காக்குமாறு கரும்புக்காரனையே அவர் வேண்டிநின்றார். அச்சிறுவன் வீடு வந்து சேர்ந்தான். யாருடன் வந்தாய் என்ற கேள்விக்கு, தன்னை ஒரு மாமா கொண்டுவந்து விட்டதாகவும், கையில் ஓர் இறைச்சித்துண்டும் சிறுசோறும் தந்து ‘மாடுகளை வெட்டிப் படைக்க வேண்டாம்’ என்று கூறியதாகவும், பசுக்கன்றின் செவிகளில் இருந்து இரு சிறுதுண்டுகளையும், நாகு கன்றின் செவியில் இருந்து ஒரு சிறுபகுதியையும் வெட்டிப் படைக்குமாறு கூறியதாகவும் பதில் சொல்லி, கையிலிருந்த சோற்றையும் ஓர் இறைச்சித்துண்டையும் அவன் காட்டினான். அன்றிலிருந்து கரும்புக்காரனுக்கான பலியிடல் நிறுத்தப்பட்டு கன்றின் செவியில் சிறுதுண்டு வெட்டிப்படைத்தல் இரு ஆலயங்களிலும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் இது கால்நடை வளர்ப்பாளர்களின் தெய்வம் எனலாம். மாட்டுக்கன்று பிடித்தல் கிராஞ்சியில் ஐயனார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கொடுதாவிலில் பிள்ளையார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கன்று பிடிக்கப் போவர். பிடிக்கப்போகும் மாட்டுக்கன்றுகள் நிற்கும் திசை, குறிப்பு என்பவற்றை, கிராஞ்சி சிங்கள இளந்தாரி, கொடுதாவில் ஐயன் இளந்தாரிப் பூசாரிகள் கலையாடிக் கூறுவர். கொடுதாவில் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி பூசாரிகளும், மாடு பிடிக்கும் உரித்துடையோரும் கன்று பிடிக்கச்செல்வர். தனிக்கறுப்புநிற, மறை ஏதும் இல்லாத (அடையாளம்), குறிசுடப்படாத ஒரு பசுக்கன்றும் ஒரு நாம்பன் கன்றும் பிடித்துவரப்படும். மரநாரில் திரிக்கப்பட்ட கயிறுகள் கொண்டே இக்கன்றுகள் பிடிக்கப்படுகின்றன. இதன்பின்பு முன்னோடித் தெய்வமேறிய பூசாரி முன்னேசெல்ல, மடைப்பண்டங்களோடு கன்றுகளையும் கொண்டு, கால்நடையாக, பறை முதலிய வாத்தியங்கள் இசைக்கப்பட, கரும்புக்காரன் கோயிலுக்குச் செல்வர். அங்கு பூசை ஏற்பாடுகள் யாவும் நடைபெறும். ஆலயத்தின் முன்னே சற்றுத்தூரத்தில் உள்ள மரத்தில் குடை போன்ற முக்காடு போடப்பட்டு, சுற்றிவர வெள்ளை கட்டப்படும். அம்மரத்தடியில் கன்று கட்டப்படும். அது கன்றுக்கட்டை அல்லது கன்றுக்கொல்லை அல்லது கன்றுகட்டும் பாலை என்று கூறப்படுகிறது. முன்பு, பன்னைக் குழையினாலேயே கொல்லை வேயப்பட்டு வந்துள்ளது. பின்பு வெள்ளை கட்டும் மரபு உருவானது. இன்றும் இயற்கையோடு இணைந்த குலதெய்வ வழிபாடாகவே கரும்புக்காரன் வழிபாடு திகழ்கின்றது. மடை பரவுதல் கரும்புக்காரன் கோயிலில் கரும்புக்காரனுக்கும் பரிகலன்களுக்குமான வளந்துப்பானைகளை வைத்துப் பொங்கல் இடம்பெறும். தனிப்பசும்பாலே பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும். பால் கொதித்து வரும்போது மடை பரவப்படும். குலைகுலையாக பல்வேறு வகை வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றைச் சீப்புச்சீப்பாக வெட்டி அடுக்குவர். வெற்றிலை, பாக்கு என்பனவும் சிறப்பாக அடுக்கப்பட்டிருக்கும். பலாப்பழம், மாம்பழம் போன்றனவும் மடையில் இடம்பெறும். முறுக்கு, பால்றொட்டி (வெள்றொட்டி) போன்ற பலகாரங்கள் நிறைவாகச் செய்யப்பட்டு படைக்கப்படும். கிராஞ்சியில் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை, பூசாரி தெய்வமேறி ஆடி, கைகளால் சுடச்சுட அள்ளிக்கொண்டுபோய் மடையில் தெளித்தல் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கொடுதாவிலில் மடையை ‘துலங்கல் மடை’ என்பர். கரும்புக்காரனோடு நாச்சிமார், பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களுக்கும் வெள்ளைவிரித்து வாழைப்பழம் சீப்புச்சீப்பாக அடுக்கி மடை வைக்கப்படும். பொங்கல் பொங்கி முடிந்ததன்பின் அவையாவும் படையல் செய்யப்படும். பூசாரிகள் தெய்வமேறிக் கலையாடுவர். அப்போது முன்னோடியின் கையில் மூன்று பூண்கள் (வெள்ளி) இடப்பட்ட கருங்காலிப்பொல்லும், கரும்புக்காரன் கையில் தனித்தடி அல்லது இரும்பாலான பொல்லு அல்லது முக்காலிப் பொல்லும் காணப்படும். மடை பரவி முடிந்ததன்பின் கன்றின் காதறுப்போருக்கு திருநீறு, சந்தனம் வழங்கப்பட்டு ஒருவர் கையில் வெற்றிலையும் மற்றவர் கையில் சிறுகத்தியும் வழங்கப்படும். மரத்தின் அடியில் கட்டப்பட்ட கன்றுகளுக்கு தீருநீறு, சந்தனம் இடப்பட்டு மாலை போடப்படும். நாகுவின் செவியொன்றின் சிறுபகுதியும், பசுக்கன்றின் இரு செவிகளிலிருந்து இரு சிறுதுண்டுகளும் வெட்டப்பட்டு, வெற்றிலையில் வைக்கப்பட்டு வழங்கப்பட, கரும்புக்காரன் பூசாரி அதைப் பெற்றுக்கொண்டு கலையாடியபடி ஓடிச்சென்று மடையின் மீது அதனை வைப்பார். ஆயினும் அச்செவித்துண்டுகளை, பின்பு மடையின் மீது காணமுடியாது எனத் தகவலாளிகள் யாவரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வழிவெட்டல் சடங்கு முடிந்ததும், கன்றுகள் அவிழ்த்துவிடப்படும். அவை தத்தம் பட்டியைத் தவறாமல் சென்றடையும் என்றும், கரும்புக்காரனுக்கு செவிப்பலி வழங்கிய கன்றுகள் உள்ள பட்டிகள் நன்றே பெருகும் என்றும் நம்பப்படுகின்றது. பன்றி குத்தும் நிகழ்வு வழிவெட்டல் நிகழ்வுக்குமுன் பன்றி குத்தும் நிகழ்வு என்னும் சடங்கு நடைபெறும். ஒரு இளநீரைக் குறித்த இடத்தில் மண்ணுக்குள் (இளநீரின் அளவுக்கு ஏற்ப) கிடங்கு வெட்டிப் புதைப்பர். அவ்வாறு புதைக்கும்போது மரநாரில் திரிக்கப்பட்ட கயிறைத் தடம்போட்டு மண்ணில் மறைத்து கயிற்றின் நுனியினை சற்றுத் தள்ளிப்பிடித்தபடி நிற்பர். இளநீரை மண்ணுக்குள் புதைக்கும் சடங்கினை இளந்தாரி தெய்வத்துக்கான பூசாரி நிகழ்த்துவார். இவ்விடத்தின் மேல் பன்னைக்குழை போடப்படும். கரும்புக்காரன் பூசாரி கலையாடியபடி வர, பறை உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கப்பட, பாடல்கள் பாடப்பட, இச்சடங்கு நிகழும். பல்வேறு இடங்களுக்கு ஆடியாடிச்சென்று, இறுதியில் இளநீர் புதைக்கப்பட்ட இடத்திற்கு கரும்புக்காரன் பூசாரி சென்று, கையில் உள்ள இரும்பால் குத்தி இளநீரைத் தூக்க, தடக்கயிறு இழுக்கப்பட்டு இளநீர் இறுக்கிப்பிடிக்கப்படும். பின்பு அதனை கயிற்றோடு இழுத்துச்சென்று ஆலயத்துக்குப் புறத்தில் வீசிவிடுவர். கொடுதாவிலில் சூலத்தால் இளநீர் குத்தப்பட்டு எறியப்படும். யானையேற்றம் பூசாரி, பலம் பொருந்திய மனிதர்கள்மீது ஏறி வலம்வருதலே யானை ஏற்றம் எனப்படுகிறது. இவ்வாறு யானையேறி தெய்வத்தைச் சுற்றி வந்ததன்பின் வெள்ளை வேட்டியை நால்வர் ஏந்திப்பிடிக்க, பூசாரியின் ஆபரணங்கள், பொல், பிரம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் அவ்வேட்டியில் இடப்படும். அதன்பின் அவ்வேட்டியினால் அவற்றைச் சுற்றிக்கட்டி கோயில் வாசலின்மேல் வைக்கும் வழக்கம் கொடுதாவிலில் காணப்படுகின்றது. மேலும் யானையேற்றத்தின் போது வெள்ளிப்பூண் போடப்பட்ட கருங்காலிப் பொல்லில் துணியைக்கட்டி எண்ணையில் நனைத்துத் தீயிட்டு, பந்தமாக்கிக் கொண்டு செல்லுகின்ற மரபும் அங்கு உண்டு. வழிவெட்டல் சடங்கு பூசைகளில் யாவும் முடிந்ததன்பின் வழிவெட்டல் சடங்கு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து சிறிதுதூரத்தில் சூலம் குத்தப்பட்டு, இளநீர் வெட்டப்பட்டு இச்சடங்கு செய்யப்படுவதோடு கரும்புக்காரனுக்கான பூசை நிறைவுபெறும். வழிவெட்டியபின் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை அடியவர்களுக்கு வழங்குவார். அவரால் திருநீறு இடப்பட்டவர்களுக்கு நோய் நீக்கம் உள்ளிட்டவை ஏற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. நேர்த்தி வைத்தவர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி, தீச்சட்டி, பாற்செம்பு எடுத்தல் முதலிய செயற்பாடுகளைச் செய்வர். ஆலய முன்றலில் தீ மிதித்தல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. கொடுதாவில் கோயிலில் பேய்விரட்டும் சடங்கும் நடைபெறுகின்றது. பேய்பிடித்த நபரின் தலைமயிரை ஓர் ஆணியில் சுற்றி ஆலயத்தின் முன்னே இருக்கின்ற மரத்தில் அடித்துவிட்டால் அவர் சுகம் பெறுவார் என நம்பப்படுகின்றது. வைத்தியர்களால் கைவிடப்பட்ட, தீரா நோயுடையவர்களுக்கும், படுக்கையில் நீண்டகாலம் மரணத்தை எதிர்பார்த்து (இழுத்துக்கொண்டு கிடப்பவர்கள்) இருப்பவர்களுக்கும் திருநீறிட்டு, பிரம்பால் அடித்து, தலைமையிரை ஆணியில் சுற்றி வெட்டிவிழுத்த சுகம்வரும் என கொடுதாவில் கோயிலைச் சேர்ந்த இராமன் நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார். கிராஞ்சி சரிமொந்தன் தெய்வம் கிராஞ்சி சிவபுரம் குளத்துக்கருகே உள்ள மருதமரத்தடியில் இத்தெய்வத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அக்காலத்தில் அவ்வழியில் செல்பவர்கள் மீது ஏறிச் ‘சேட்டைகள்’ புரிவதாகவும், நோய்நொடிகளை ஏற்படுத்துவதாகவும், மொத்தத்தில் மக்களுக்குத் துன்பம் தருவதாகவும் இத்தெய்வம் இருந்து வந்துள்ளது. கிராஞ்சிக்குவந்த பூசாரி ஒருவர், இத்தெய்வத்தை தெய்வமாடி அடக்கமுடியாது, இதனை இரு கோயில்களுக்கு நடுவே வைத்தால்தான் அமைதிபெறும், மக்களுக்குத் துன்பம் தராது என்று கூறியதாகவும், அதன்படி கரும்புக்காரனுக்கும் அதன் அருகே உள்ள முறிகண்டிப் பிள்ளையாருக்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த சரிமொந்தன் தெய்வத்தை வைத்ததாகவும், அதன்பின் இத்தெய்வம் அமைதி கொண்டதாகவும் கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இத்தெய்வத்திற்கும் உருவமில்லை. வேறுகதைகள் இருப்பதாகவும் தெரியவில்லை. வேறு இடங்களில் இத்தெய்வம் வழிபடப்படுவதாகவும் அறிய முடியவில்லை. கரும்புக்காரன் பூசையின்பின் மூன்றாம் நாள் சரிமொந்தனுக்குப் பொங்கலிடப்படும். பானை பொங்கிவரும் போது கோழியின் கழுத்தை அறுத்து அல்லது முறித்து பலியிடும் வழக்கம் காணப்படுகின்றது. அத்தோடு அக்கோழியை அப்படியே நெருப்பில் இட்டுச் சுடுவர். தெய்வத்துக்கு மடைபரவும்போது இதனையும் வைத்துப் படைப்பர். இச்சடங்கு ‘எச்சில் மாத்தல்’ (எச்சில் மாற்றல்) எனப்படுகின்றது. இந்த மடை முழுவதும் சலவைத் தொழிலாளிகளுக்கு உரியதாகும். எட்டாம் மடை நாட்டார் தெய்வங்களுக்கு எட்டாம் மடை எனப்படுகின்ற சடங்கு பொதுவில் நிகழ்த்தப்படுதல்போல, கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்கு எட்டாம்நாள் விளக்கு வைத்து, பொங்கி மடை பரவுவர். இத்தோடு கரும்புக்காரனுக்கான வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படும். கொடுதாவில் கோயிலில் இச்சடங்கு இடம்பெறுவதில்லை. மூன்றாம் நாளே கோயில் பூசாரி, உரித்துடையோர் ஆகியோர் வருகை தந்து கோயிலைச் சுத்தப்படுத்தி, விளக்கு வைத்தலோடு வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படுகின்றது. இவ்விரு ஆலயங்களிலும் விசேட தினங்களில் மட்டுமே விளக்கு வைக்கப்பட்டு வருகின்றது. ஏனையவை நேர்த்தி வைத்தவர்களுக்காக சிறப்புப் பூசைகளும் நடைபெற்றுவருகின்றன. அதேவேளை கொடுதாவில் கோயிலில் விசேட பூசைகளின்போது, கோயிலின் உள்ளே மடை பரவாது வாசலில் வைத்தே மடை பரவப்படுவது குறிப்பிடத்தக்கது. கிராஞ்சியில் வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான பூசை அவரவர் வீட்டில் இடம்பெற்று வருகிறது. கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் நான்கு தெய்வங்களின் பூசாரிகளும் குறித்த நோயாளியின் வீட்டுக்குச் செல்வர். அப்பூசாரிகள் நால்வருக்கும் அவ்வீட்டவர் பச்சை அரிசி, பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், மரக்கறிகள் என்பனவற்றைத் தானமாக வழங்குவர். அப்போது கரும்புக்காரனுக்கான பாடல், திருமுறைகள் என்பன பாடகரால் இசைக்கப்படும். அந்த இசையின்வழி கரும்புக்காரன் பூசாரியின்மீது தெய்வமேறி ஆடி, வழங்கப்பட்ட அரிசியைக் கிள்ளி எறிந்து அடங்க, நோயாளி தெளிந்துவிடுவார். அதன்பின் எட்டாம்நாள் கரும்புக்காரனுக்கு விளக்குவைத்துப் பொங்கலிட அந்த நோயாளி முழுச்சுகம் பெற்று விடுவார் என கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இந்த நம்பிக்கை இன்றும் அவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது. சில குறிப்புகள் இது கால்நடை – குறிப்பாக மாடுவளர்ப்புத் தொழிலுடன் இணைந்த வழிபாட்டுமரபு என்பது தெளிவாகின்றது. முக்காலிக்கம்பி, கரும்புக்கார தெய்வத்தின் குறியாக, அடையாளமாக அமைந்திருப்பதும் அதனை மக்கள் வழிபட்டுவருவதும் தனித்துவமான ஒரு விடயமாகின்றது. அண்ணமார், குறிப்பன், கரும்புக்காரன் உள்ளிட்ட சிறுவேளாண் குடி மக்களின் குலதெய்வங்கள், குறிப்பாக கால்நடைவளர்ப்புடன் தொடர்புபட்ட இத்தெய்வங்கள் யாவும் பிரம்பு அல்லது பொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாடுகள் பலவற்றை ஒன்றாகப் பலியிடல் சமய நம்பிக்கை எனினும், அது பெரும் பொருளாதார இழப்பாகவும் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை ஒன்றாகப் பலியிடல் ‘பட்டியழித்தல்’ ஆகவும் அமைந்தது. ஆகவே ‘இறைக்கட்டளை’யாக கூறுதல் சமய நம்பிக்கை இழப்பாகவோ, நம்பிக்கை மீறலாகவோ கருதப்படமாட்டாது எனும் எண்ணத்தின்வழி இக்கதை உரைக்கப்பட்டிருக்கலாம். பட்டி மாடுகளை ஏதோவொரு சூழலில் பலியிட விரும்பாத – பட்டி தொலைந்து போன – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் இவ்வாறான கதை உருவாக்கப்பட்டிருக்கலாம். வேளாண்மை – கால்நடைவளர்ப்பு இருநிலப் பண்பாடாக இருந்தகாலத்தில் விவசாயத்தை அழித்த மேய்ச்சல் மாடுகளைப் பலி செய்திருக்கலாம். பின் இரண்டும் ஒன்றான வேளாண்மை வந்தகாலத்தில், பட்டியைப் பலியிட விரும்பாதநிலையில் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கலாம். பட்டியைக் காக்க உயிர் கொடுத்த தலைவனின் வேண்டுகோளாக, இப்பலியிடல் மரபு நிறுத்தப்பட்டு இருக்கலாம். சரிமொந்தன் கிராஞ்சிக்கு உரிய தனித்துவமாகின்றது. இத்தெய்வம் தனித்து ஆராயப்பட வேண்டியதாயினும் இத்தெய்வம் குறித்த தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. சரிமொந்தன் – சாரி பொத்தன் – சாரி புத்தன் என்பவற்றை ‘சாரிபுத்தன்’ என்பதன் திரிபாகக் கருதினால், அது பௌத்தத்துடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகின்றது (சம்பந்தர் வரலாற்றில் சாரிபுத்தன் தலையில் இடிவிழச் செய்யப்பட்டுக் கொல்லப்பட, அவருடன் வந்த ஏனைய பௌத்தர்களுடன் சம்மந்தர் வாதிட்டு வென்று அவர்களைச் சைவத்தில் சேர்த்த வரலாறு பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் கிராஞ்சிக்கு அருகில் உள்ள மன்னார் மாதோட்டத்தை, அங்குள்ள திருக்கேதீஸ்வரத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும்.) கரும்புக்காரன் சிறுகுடி வேளாளரின் குலதெய்வம் எனினும், இவ்விரு கோயில்களும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மடைப்பங்கை வழங்கி வருகின்றன. கிராஞ்சியில் பங்குனி மாதத்தில் ‘பால் காய்ச்சுதல்’ எனும் சிறப்பு வழிபாடு கரும்புக்காரனுக்கு நிகழ்த்தப்படுகிறது. பச்சைப் பாலைக் கடைந்து நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, மடை வைத்து வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. பன்றி குத்தும் நிகழ்வு என்பது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வயலை நாசம் செய்யவரும் பன்றியைக் குத்திக் கொல்லுதலும், தடம் வைத்துப் பிடித்தலுமான செயல்முறை இத்தெய்வத்தின்முன் சடங்காக, ஒருவகைக் கூத்தாக நிகழ்த்தப்படுகின்றது. பன்றியை உணவாகவோ தெய்வத்துக்கான படையலாகவோ எடுப்பதில்லை என்பது இங்கு கவனத்துக்குரியது. அதேவேளை இந்தச்சடங்கு வன்னிப் பிராந்தியத்தின் ‘பன்றிப் பள்ளு’ இலக்கியத்தையும் கூத்தையும் ஞாபகமூட்டி நிற்கின்றது. முடிவுரை கிராஞ்சி, கொடுதாவில் கிராமங்களில் காடுகளை அண்மித்தும், பல்லாய் பிள்ளையாரில் பண்டமெடுக்கும் இடத்திலும் கரும்புக்காரன் தெய்வம் வழிபடப்பட்டு வருகின்றது. மாடுவளர்ப்புத் தொழிலுடன் முழுமையாகத் தொடர்புபட்ட வழிபாடு இதுவாகும். ஆயினும் விவசாயநிலத்தோடும் இது தொடர்புறுத்தப்படுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குலதெய்வமான கரும்புக்காரன் வழிபாட்டை வேறு எங்கும் காண முடியாதுள்ளது. சிறுகுடி வேளாளரின் அனைத்துக் குலதெய்வங்களும் பிரம்பு, பொல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. வேத வேள்வி மரபில் காணப்பட்ட ‘மாட்டைப் பலியிடல்’ எனும் கருத்துரு பிற்காலத்தில் பல்வேறு காரணங்களால் வேத வேள்வி மரபினரான வைதிக மதத்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இயற்கை தெய்வவழிபாட்டில், குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச்சூழலில் ‘மாடு பலியிடல்’ எனும் மரபு கரும்புக்காரனோடு பின்னிப்பிணைந்துள்ளது. இன்று முழுமையான பலியிடல் இல்லையாயினும், கன்றுகளுடைய காதுகளின் சிறுபகுதிகளை அறுத்துப்படைத்தல் என்பது அதன் நீட்சியே. கரும்புக்காரன் பற்றிய கதையாடல்கள், வாய்மொழிவழக்காறுகள் என்பவற்றை இன்று அறிவது சிரமமாக இருப்பினும், இவ்வழிபாடு இந்த நிலத்தோடும், அதன் பண்பாட்டோடும், பொருளாதாரத்தோடும் இரண்டறக்கலந்த இயற்கை வழிபாடாக இன்றும் திகழ்தல் குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/the-god-of-karumpukkaran-and-its-rituals/
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதாகத் தாக்கப்பட்ட அந்த நாவல், சிறந்த அறிவியல் புனைவுகளின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் இங்கிலாந்தின் மேரி ஷெல்லி (Mary Shelley) (1797–1851) எழுதிய, 1818ஆம் ஆண்டில் வெளியான ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ (Frankenstein) என்ற நாவல் தான் இப்படி விமர்சனத் தடைகளைத் தாண்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய எதிர்ப்புகளால் மிகக் குறைவாகவே விற்பனையாகிய புத்தகம், பின்னர் உலக அளவிலேயே அதிகமாகப் பரவிய அறிவியல் புனைவாக அடையாளம் பெற்றது. 1818இல் வந்த இந்த நாவலுக்கு ‘தி மாடர்ன் புரோம்தியஸ்’ என்ற தலைப்பும் உண்டு. நாவலின் உள்ளடக்கம் சார்ந்து விமர்சித்தவர்கள் முன்வைத்த வாதங்கள்: மதம் கற்பித்து வந்துள்ள வாழ்க்கை நெறிகளை மீறுகிறது; கடவுளன்றி ஒரு புதிய உயிரினத்தைப் படைக்கிற மகத்துவம் மனிதனுக்குக் கிடையாது; பொறுப்பற்ற அறிவியல் ஆராய்ச்சியை உயர்த்திப் பிடிக்கிறது; பிசாச குணம், உயிரின உருவாக்கம் ஆகியவை குடும்ப இலக்கிய மரபுக்கு மாறானவை; கதையின் முடிவு உணர்வற்றதாக, தீர்வை முன்வைக்காததாக இருக்கிறது. கதை நடை சார்ந்து விமர்சித்தவர்கள் கூறிய கருத்துகள்: (அந்நாளைய வழக்கப்படி) கவிதை நடையில் இல்லாமல் நேரடி உரைநடையில் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது; முந்தைய இலக்கியங்கள் போன்ற மொழிச் சிறப்புகள் இல்லை; கதையோட்டம் ஒரே சீராக இல்லாமல் பயணியின் நடை, ஆராய்ச்சியாளரின் நடை, அமானுடப் பிறவியின் நடை என மாறிக்கொண்டே இருக்கிறது; கதையை விட அதிகமாகத் தத்துவத்தைப் பேசுகிறது. பாதுகாத்த திறனாய்வுகள் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley) பின்னர் வந்த இலக்கிய அன்பர்களும் திறனாய்வாளர்களும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நாவலைப் பாதுகாத்தனர். மிகச் சிறந்த அறிவியல் புனைவு கிடைத்திருக்கிறது, ஆங்கில இலக்கியத்திற்கு ஒரு புதிய எழுத்துநடை அறிமுகமாகியிருக்கிறது, அறிவியல் பயன்பாடு பற்றிய ஆழ்ந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது, பழமைச் சிந்தனைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்று பாராட்டினார்கள். இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்ற நாவலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, நாவலை எழுதிய மேரி ஒல்ஸ்டோன்கிராஃப்ட் ஷெல்லி பற்றித் தெரிந்துகொள்வோம். அன்றைய சமூக–இலக்கியச் சூழலில், பெண்களால் ஆழ்ந்த இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சிறுமைப்படுத்தும் ஆணாதிக்க மனநிலையிலிருந்தும் அவர் மீது விமர்சனக் கற்கள் வீசப்பட்டன. நாவலை எழுதியபோது மேரியின் வயது 19 மட்டுமே. அந்த வயதில் மனித வாழ்க்கையைப் பற்றியோ, சமூக மதிப்புகள் பற்றியோ, அறிவியலுக்கு உரிய இடம் பற்றியோ ஒரு பெண்ணுக்கு என்ன தெரிந்துவிடும் என்ற அலட்சியமும் விமர்சனங்களில் இருந்தது. உலகம் முழுவதுமே பெண் எழுத்தாளர்கள் இதைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது, இல்லையா? இத்தனைக்கும் மேரியின் தாய் பெண்களின் உரிமைகளுக்காக வாதாடியவர், எழுதியவர். தந்தை ஒரு தத்துவ அறிஞர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர். புதிய சிந்தனைக்கும் எழுத்தாக்க ஈடுபாட்டிற்கும் ஆதரவான குடும்பச் சூழலிருந்து வந்தவரானாலும் மேரி இந்த வேலிகளைக் கடக்க வேண்டியிருந்தது. புத்தகத்தின் தொடக்கப் பதிப்புகள் அவருடைய பெயர் இல்லாமல், “அனாமதேயர்” என்ற அடையாளத்துடன்தான் வெளியிடப்பட்டன! பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley) இன்னொரு முக்கியமான தகவல் – நீங்கள் பெயரை வைத்தே ஊகித்திருப்பீர்கள் – “ஷெல்லி” என்ற சுருக்கப் பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) (1792–1822) நாவலாசிரியரின் இணையர்தான். ஆங்கில இலக்கியத்தில் “ரொமாண்டிசிசம்” எனப்படும் உணர்ச்சிப் புனைவியல் வகை ஒன்று உண்டு. அதைக் கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் ஷெல்லி. மானுட விடுதலை, மனித நேயம், அரசியல் எழுச்சி, மதவெறி எதிர்ப்பு, இயற்கை மேன்மை, காதல் சுதந்திரம், மனித நேயம் ஆகியவற்றைத் தம் கவிதைகளின் உயிரோட்டமாக வைத்தவர். போட்டியில் பிறந்த நாவல் இளம் வயதிலேயே ஷெல்லி–மேரி இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஊர்களுக்குச் சுற்றினார்கள். அப்படியொரு பயணத்தின்போது 2016இல் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே, ஒரு முற்றிலும் புதுமையான, பயங்கரமான புனைவை யாரால் உருவாக்க முடியும் என்ற போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டிக்காக மேரி எழுதியதுதான் இந்த நாவல். அந்தப் புத்தகத்திற்கு ஷெல்லி முன்னுரை எழுதினார். 1822இல் ஒரு படகுப்பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் ஷெல்லி, தனது 30ஆவது வயதில் இறந்துவிட்டார். அவருடைய படைப்புகளைப் பின்னர் மேரி புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டார். ’வால்பெர்கா’ என்ற வரலாற்றுப் புனைவு (1823), ‘தி லாஸ்ட் மேன்’ என்ற எதிர்காலவியல் நாவல் (1826), ‘பெர்க்கின் வார்பெக்’ என்ற அரண்மனை வாழ்க்கை பற்றிய புதினம் (1830), ‘லோடோர்’ என்று பெண்ணின் கல்வி, மண வாழ்க்கை பற்றிப் பேசிய நெடுங்கதை (1835), ‘ஃபாக்னர்’ என்ற குடும்ப உறவுகளின் பின்னணியில் பெண்ணின் உள்ளுணர்வுகளில் வெளிச்சம் பாய்ச்சிய படைப்பு (1937) ஆகியவை மேரி ஷெல்லி எழுதியவையே. அத்துடன் மனித இயற்கை, சமூகச் சிக்கல்கள், பெண்களின் உரிமைகள், பயணக் குறிப்புகள் எனப் பல கட்டுரை நூல்களும் அவரிடமிருந்து வந்துள்ளன. ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். தன் சமகாலப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்த கடித வடிவிலான கட்டுரைகள் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. கடைசி ஆண்டுகளில் ஒரு தனிமை உணர்வால் தவித்து வந்தவர் 1851இல் 53 வயதில் புற்றுநோய் தன்னை விழுங்கக் கொடுத்தார். விமர்சனங்களால் விழுங்க முடியாத இலக்கியச் சிறப்பைப் பெற்ற நாவலின் கதைமாந்தர்களைச் சந்திப்போம். புதிய உயிர் தென் அமெரிக்காவின் அலாஸ்கா அருகே பயணம் செய்கிற கடற்படை அதிகாரி ராபர்ட் வால்டன் எழுதிய கடிதங்களிலிருந்து கதை தொடங்குகிறது. பயணத்தின்போது உறைபனிக்குள் சாகும் நிலையில் கிடக்கும் ஒரு மனிதனை மீட்கிறார். அவன் பெயர் விக்டர் ஃபிராங்கஸ்டைன் – சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்தவன். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமும் செயல்திறனும் உள்ளவன். விக்டர் தனக்கு நேர்ந்ததையும் தன்னால் நேர்ந்ததையும் அவரிடம் சொல்கிறான். கேப்டன் வால்டன் மூலம் நாம் விக்டரின் கதையைத் தெரிந்துகொள்கிறோம். மரணத்தை ஒரு முடிவாக அல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவனான விக்டர் ஃபிராங்கன்ஸ்டெய்ன், இறந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். புதிய உயிரை செயற்கையாக உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி. ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெறுகிறான். அந்த உடல்களிலிருந்து எடுத்த உறுப்புகளை இணைத்து, உயிரணுக்களைச் சேர்த்து ஒரு புதிய உயிரினத்தையே உருவாக்கிவிடுகிறான். மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத அந்த உயிரி அச்சமூட்டும் தோற்றத்துடன் கட்டுங்கடங்காத வலிமையைப் பெற்றிருக்கிறது. தான் உருவாக்கியதைப் பார்த்து தானே அஞ்சுகிற விக்டர், அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். பெயர் எதுவும் சூட்டப்படாத அந்த உருவம் தன் சொந்த முயற்சியில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. என்ன செய்தாலும் மனிதர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணர்கிறது. தன்னை நேசிக்கக்கூடிய ஒரு மனித உயிரையாவது காண முடியாதா என்று தேடுகிறது. பல இடங்களுக்கும் செல்கிறது, அங்கெல்லாம் அதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் அலறியடித்து ஓடுகிறார்கள். ஒரு விவசாயக் குடும்பத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் அந்த உயிரினம், அவர்களுடன் பழக முயல்கிறது. ஆனால் அவர்களும் அதைக் கண்டு ஓடிவிடுகிறார்கள். இப்படி எல்லோராலும் ஒதுக்கப்படுவதால் தனிமையாக உணரும் புதிய உயிரி தன்னுள் வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்துக்கொள்கிறது. பழிவாங்கும் செயல்களில் இறங்கும் அந்த உயிரி விக்டரின் ஒரு நண்பரைக் கொல்கிறது. தம்பியைக் கொல்கிறது. பின்னர் அவனுடைய மனைவியையும் கொல்கிறது. ஒரு புனிதச் சடங்கு நிகழ்விலும், ஒரு திருமண விழாவிலும் புகுந்து பலரையும் தாக்குகிறது, சேதங்களை ஏற்படுத்துகிறது. திரும்பி வரும் விக்டரிடம், தனக்குத் துணையாகத் தன்னையொத்த ஒரு பெண் உயிரியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது. அவன் மறுத்துவிடுகிறான். இது அதனுடைய ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. அவன் சார்ந்த எல்லோரையும் கொல்கிறது, கடைசியில் தன்னைப் படைத்தவனையும் கொன்றுவிடுகிறது. விக்டரின் மரணத்திற்குப் பிறகு, கப்பலுக்கு வரும் உயிரி, கேப்டன் வால்டனைச் சந்திக்கிறது அந்த உயிரி. ஏற்கெனவே அவனிடமிருந்து அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற வால்டனுக்கு அதைப் பார்த்ததும் பயம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகள் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் அதன் மீது பரிவும் ஏற்படுகிறது. அந்த “அசுரன்” பாவம் செய்கிற குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்கிறார். அதேவேளையில், அது செய்த கொலைகளையும் மற்ற கொடூரங்களையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவராகக் குழப்பத்தில் தவிக்கிறார். அவரிடம், தன்னைப் படைத்தவன் தனக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்திருப்பான் என்று கூறும் உயிரி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறது. “நான் இறந்துவிடுவேன், இப்போது நான் உணரும் எதுவும் இனி உணரப்பட மாட்டாது. இந்தத் துன்பத் தீ விரைவில் அணைந்துவிடும். என் சிதைக் குவியலின் மீது நான் வெற்றிகரமாக ஏறுவேன், வதைக்கும் தீப்பிழம்புகள் ஏற்படுத்தும் வேதனையில் மகிழ்வேன். அந்தப் பெரும் நெருப்பின் ஒளி மங்கிவிடும்; என் சாம்பலைக் காற்று கடலுக்குள் அடித்துச் சென்றுவிடும். என் ஆன்மா அமைதியாக உறங்கும், அல்லது அது சிந்திக்குமானால், நிச்சயம் இது போலச் சிந்திக்காது. விடைபெறுகிறேன்!” இவ்வாறு கூறிவிட்டு, காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. அது தற்கொலை செய்துகொண்டதாக நாம் முடிவுக்கு வருகிறோம். கேள்விகள் இணையத் தரவுகளில் கிடைக்கிற இந்தக் கதையும், தெரியவரும் பாத்திரங்களும் கற்பனை என்றாலும், உண்மை வாழ்க்கையில் அறிவியலைப் பொறுப்புடன் கையாளத் தவறினால் என்னாகும் என்ற வினாவை எழுப்புகின்றன. சிலர் இந்த நாவல் அறிவியலுக்கு எதிரானது என்றும் ஆராய்ச்சிகள் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்கள். ஆயினும், இது அறிவியல் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு ஆதரவான நாவல்தான் இது என்று திறனாய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை சுயநலமிகளும் சுரண்டல் வேட்கையர்களும் தவறாகப் பயன்படுத்துவதால் மனித இனத்திற்கே ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் அல்லவா? இன்று நாம் காணும் மரபணு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளுக்கான தொடக்கப் புள்ளிகளை அந்தக் காலத்திலேயே, அந்த வயதிலேயே ஒரு பெண் கற்பனை செய்து எழுதியிருப்பது எளிதாகக் கடந்துவிடக் கூடியதல்ல என்று இப்போது அந்த நாவல் பற்றிப் பேசுகிறவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வகையில் மேரி ஷெல்லி தன் காலத்தை மீறிச் சிந்தித்துக் கதை புனைந்தவர் என்ற பாராட்டையும் வழங்குகிறார்கள். விக்டரிடம் பேசும் உயிரி, “நான் உன் ஆதாமாக இருக்க வேண்டியவன். ஆனால் வீழ்ந்த தேவதூதனாகிவிட்டேன்,” என்று கூறுகிறது. பைபிள் கதைப்படி, கடவுளின் கட்டளைக்கு எதிராகப் போகிற தேவதூதர்களை வீழ்ந்த தேவதூதர்கள் என்று குறிப்பிடுவது மதமும் இலக்கியமும் சார்ந்த மரபு. நல்ல நோக்கங்களிலிருந்து விலகித் தன்னலத்திற்காகத் தரம் தாழ்கிறவர்களைக் குறிப்பிடவும் “வீழ்ந்த தேவதூதர்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு இடத்தில் விக்டர் இவ்வாறு கூறுகிறான்: “என்னிடமிருந்து கற்றுக்கொள், என் போதனைகளால் இல்லாவிட்டாலும், என்னை எடுத்துக்காட்டாகக் கொண்டாவது என்னிடமிருந்து கற்றுக்கொள் – அறிவைப் பெறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை.” நுட்பமான எச்சரிக்கை அறிவும் அறிவியலும் மனித மாண்புகளுக்காக அல்லாமல் சுய மோகங்களுக்கும் லாபத் தாகங்களுக்கும் கையாளப்படுமானால் அது அவ்வாறு கையாளுகிறவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக முடிந்துவிடும். இதை இந்த வரிகள் நுட்பமாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் மக்களுக்கே என்று சொல்லாமல் சொல்கிற இடம் இது. இந்தக் கருத்தாக்கம் இந்த நாவலைத் தொடர்ந்து பிற்காலத்தில் வந்த பல இலக்கியப் படைப்புகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியால் உருவாகும் ஆபத்தான உயிரிகளிடமிருந்து அல்லது ரோபோக்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் பற்றிய ஒற்றைக் கதைகளும் தொடர்களும் வலைத்தளத் திரைகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. உயிரினம் ஒன்று தனிமையில் விடப்படுவது எவ்வளவு அபாயகரமானது என்று சித்தரித்து, மனிதர்களும் என்றும் எங்கும் தனிமைப்பட்டுப் போகாமல் துணைகளோடு வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அந்தக் கதைகள் எடுத்துரைக்கின்றன. மனித உணர்வும், மானுட அக்கறையும் அனைத்தையும் விட மகத்தானவை என்று இலக்கியமும் கலையும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அப்படிச் சொல்வதற்கு “ஸ்டார்ட்” பட்டனை அழுத்தியது ‘ஃபிராங்கன்ஸ்டெய்ன்’ நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம். https://bookday.in/books-beyond-obstacles-16-mary-shelleys-frankenstein-novel-based-article-written-by-a-kumaresan/
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் அவர்களின் பசியையும் அவர்களை தேடி வருவோரின் பசியையும் போக்க அக்ஷயபாத்திரம் மிக உதவியாக இருந்தது. அது யுதிஷ்ட்டிரனுக்கு சூரியன் அன்பளிப்பாக வழங்கியது. ஆனால் , ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அது உணவை அளிக்கும். அன்றைய தேவை முடிந்து அதை தேய்த்து வைத்துவிட்டால் மறுநாளே அதன் மூலம் உணவை வரவழைக்க முடியும். ஒருமுறை, ஹஸ்தினாபுரத்தில் இருந்த கௌரவர்களின் அரண்மனைக்கு தனது சீடர்களுடன் வருகை தந்தார் ரிஷி துர்வாசர். மிக கோபக்காரர் என்று பெயர் பெற்றவர் அவர். அவரை மிக மரியாதையுடன் நடத்திய துரியோதனன், அவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கு சிறந்த விருந்தை அளித்தான். அதனால் மனமகிழ்ந்தார் துர்வாசர். அவர் கிளம்பும் சமயத்தில், அவரிடம் அவர்கள் வனத்தில் இருக்கும் பாண்டவர்களையும் சந்தித்து அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார். வனத்தில் இருக்கும் பாண்டவர்களால் அறுசுவை விருந்து அளிக்க இயலாது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பது துரியோதனின் எண்ணம். அவனுக்கு அளித்த வாக்குப்படியே ஒரு நாள் உச்சி பொழுது கடந்தபின், வனத்தில் இருந்தது பாண்டவர்களின் வசிப்பிடத்தை அடைந்தனர் துர்வாசரும் அவரது சீடர்களும். திரௌபதியை அழைத்த துர்வாசர் அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் நீராடி வருவதற்குள் உணவை தயார் செய்து வைக்குமாறும் கூறிவிட்டு அருகில் இருந்த நீர்நிலைக்கு சென்றனர். அன்று அனைவரும் உணவு அருந்திவிட்டக் காரணத்தினால் அக்ஷயபாத்திரத்தை தேய்த்து கழுவி வைத்து விட்டாள். என்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான். தானே உணவு இல்லாத பிரச்சனைக்கு அவனை அழைக்க அவனோ உணவு கேட்டால் எங்கே செல்ல என நடந்ததைக் கூறினாள் பாஞ்சாலி. அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணன் “கவலைப்படாதே! அந்த பாத்திரத்தைக் கொண்டு வா!” எனக் கூறினான். அவள் கொண்டு வந்த அக்ஷயபாத்திரத்தை கவனமாக பார்த்தவன் அதில் ஓரத்தில் ஒட்டியிருந்த ஒரு துணுக்கு சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “அனைவரின் பசியும் ஆறட்டும்” எனக் கூறினான். பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் கிருஷ்ணனுக்கு எச்சில் உணவை அளித்தமைக்கு தன்னையே நொந்துக் கொண்டாள் அவள். அந்த ஒரு துணுக்கை சாப்பிடப்பின் பீமனை அழைத்த கிருஷ்ணன் ஆற்றுக்கு சென்று ரிஷியையும் அவரது சீடர்களையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவன் ஆற்றுக்கு சென்றே அதே நேரம் குளித்துக் கரையேறிய சீடர்கள் அனைவரும் அப்பொழுதுதான் உணவருந்தியது போன்று உணர்ந்தனர். அதை அவர்கள் கூறியதை கேட்ட துர்வாசரும் தனக்கும் அவ்விதமே இருப்பதாக கூறி, இந்நிலையில் பாண்டவர்களை சந்திக்க வெட்கி, பீமனிடம் தங்கள் வயிறு நிறைந்து விட்டதாகாக் கூறி அங்கிருந்தே அனைவரையும் ஆசிர்வதித்து விடைபெற்றனர். கிருஷ்ணனின் அருளால் தங்களுக்கு வந்த ஆபத்தை வென்ற பாண்டவர்கள் அவனை வணங்கினர். அஷ்டவக்கிரர் பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பல ரிஷிகள் இருந்த தவம் செய்த இடங்களுக்கு சென்றனர். அவர்கள் சென்ற இடத்தின் புனிதத்தையும் அங்கிருந்த ரிஷிகளின் வரலாற்றையும் அவர்களுக்கு ரிஷி லோமேசர் உபதேசித்தார். அவர்கள் உத்தாலக்கரின் ஆசிரமத்துக்கு சென்ற பொழுது அவரின் வரலாற்றை கூறினார். உத்தாலக்கருக்கு இருந்த பல சிஷ்யர்களில் ஒருவர் ககோலா. காகோலா மிக அறிவு கூர்மை வாய்ந்தவர் எனக் கூற முடியாதெனினும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். அவரது நடவடிக்கைகளால் மகிழ்ந்த உத்தாலக்கர், தனது மகளை அவருக்கு மணமுடித்தார். ககோலாவின் வேத அறிவு எந்த அளவிற்கு மோசமானதென்றால், அவரின் தவறான உச்சரிப்பினைக் கேட்டு தாயின் வயிற்றில் கர்ப்பப்பையில் இருந்த கரு நெளியுமாம். அப்படி பல முறை நெளிந்ததால் பிறக்கும் பொழுதே உடல் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்தார். அதனால் ” அஷ்டவக்கிரர் ” என அழைக்கப்பட்டார். ஒருமுறை யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல். ஜனகரின் அரசவையை சேர்ந்த வந்தி என்ற அறிஞரிடம் வாதத்திற்கு சென்றார் ககோலா. அந்த வாதத்தில் தோற்பவர் கடலில் மூழ்கி உயிரிழக்க வேண்டும் என்பதே பந்தயம். அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே ககோலா தோல்வியுற்று தனது உயிரை நீத்தார். அவருக்கு முன் பல அறிஞர்கள் இவ்விதம் தங்கள் உயிரை நீத்துள்ளனர். உடலில் குறியுடன் பிறந்தாலும், அஷ்டவக்கிரர் மிகுந்த ஞானத்துடனும் அறிவுடனும் விளங்கினார். இளம் வயதிலேயே வேத, வேதாந்தங்களை கரைத்துக் குடித்து ஞானியாக விளங்கினார். இதற்கு இடையில், மிதிலாவின் அரசனான ஜனகர் மிகப் பெரிய யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். யாகம் நடைபெற்றக் காலத்தில் அவரது அரசவையில் பலவித விவாதங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார். தனது தருணத்தை உணர்ந்த அஷ்டவக்கிரரும் அங்கே சென்றார். அரசு ஊர்வலம் வந்துக் கொண்டிருந்த பாதைக்கு சென்றவர், அரச பரிவாரங்களுக்கு நடுவே நடக்க துவங்கினார். அதைக் கண்ட காவலாளிகள் அவரை ஒதுங்க சொல்ல “எளியவர்களுக்கும், முடியாதவர்களுக்கு வழி விட வேண்டியது அரச தர்மம் இல்லையா?” என வினவினார். ஜனகர் அந்த நாளின் மிகப் பெரிய ஞானிகளில் ஒருவர். இல்லற தர்மத்தில் இருந்தாலும் அதில் மூழ்கி விடமால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தவர். அஷ்டவக்கிரர் சொன்னதைக் கேட்டவுடன் அவரது சிறப்பை அறிந்துக் கொண்ட ஜனகர், அவருக்கு வழி விட்டார். மேலும், அவர் மிதிலைக்கு வந்ததன் காரணத்தை அறிந்துக் கொண்டே வந்தியுடன் விவாதத்திற்கு ஏற்பாடும் செய்தார். சில நாட்கள் நீடித்த அந்த விவாதத்தின் முடிவில் அஷ்டவக்கிரர் வந்தியை தோற்கடித்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட வந்தியும் நதியில் மூழ்கி தனது உயிரை நீத்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கிய அஷ்டவக்கிரர், பிற்காலத்தில் ஒரு முனிவரின் வரத்தால் தனது உடல் குறை நீங்கப் பெற்றார். https://solvanam.com/2025/05/11/பெரும்-பசியை-ஆற்றிய-ஒரு-ப/
-
விமர்சனம் : இட்லி கடை!
விமர்சனம் : இட்லி கடை! 2 Oct 2025, 1:18 PM இது ‘பீல்குட் மூவி’யா?! தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. மூன்றாவது படம் தவிர மற்றனைத்திலும் அவர் நாயகனாக அல்லது ஒரு பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறார். ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஒருசேரத் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா? ’சிம்பிள்’ கதை! ‘இட்லி கடை’ படத்தின் கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி; மிக எளிய வார்ப்பில் அமைந்திருக்கின்றன. அமைதியும் இனிமையும் மிக்க கிராமத்திலேயே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வெளியூருக்குப் புறப்படுகிறார் ஒரு இளைஞன். சென்னை, பாங்காக் என்று அவரது பயணம் அமைகிறது. அந்த இளைஞனின் தாய் தந்தையோ ‘தாங்கள் நடத்தி வரும் இட்லிக்கடையைத் தங்களுக்குப் பின்னர் மகன் நடத்த வேண்டும்’ என்று பிரியப்படுகின்றனர். ஆனால், அவரோ அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார். பாங்காக்கில் அவர் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஒரு மகன், மகள். அந்தப் பெண் இந்த நபர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த இளைஞர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரது பெற்றோர் கிராமத்திலிருந்து விமானம் ஏறி பாங்காக்கில் நடைபெறுகிற திருமணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இல்லை. இந்த நிலையில், அவரது தந்தை திடீரென்று மரணமடைகிறார். அதனைக் கேட்டதும், ‘கல்யாணத்தை தள்ளி வைப்பது முடியாத காரியம். எப்படியாவது இறுதிச்சடங்குகளை முடிச்சுட்டி திரும்ப வந்துருங்க’ என்று மருமகனாக வரப் போகிறவரிடம் சொல்லி அனுப்புகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளர். தங்களிடம் வேலை செய்கிற நபரை அவருடன் அனுப்பி வைக்கிறார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபிறகு, அந்த இளைஞரை இன்னொரு இடி தாக்குகிறது. அவரது தாயும் மரணிக்கிறார். அடுத்தடுத்தாற்போல நிகழ்ந்த இரண்டு துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறபோது, ‘இப்போ பாங்காக் வரப்போறியா இல்லையா’ என அந்த நபரை அடித்து இழுத்துச் செல்லத் தயாராகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன். சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவருக்கு, இதர மனிதர்களைப் பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ துளியும் அக்கறை கிடையாது. அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞர் என்ன செய்தார்? தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அவர் வெளியேறினாரா? அந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகளும் இந்தியா வந்தனரா? அந்த கிராமத்தினர் அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்றார்களா என்று சொல்கிறது ‘இட்லி கடை’ படத்தின் மீதி. இந்தக் கதையில் பிரதான பாத்திரங்கள் அனைத்துமே தெளிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. நாயக பாத்திரம் மட்டுமே சிறிது குழப்பமானதாகக் காட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரொம்பவே சுயநலமானதாகத் தெரிகிறது. அதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருந்தால், இந்த ‘இட்லி கடை’ இன்னும் சுவையானதாக மாறியிருக்கும். இயக்குனராக ஜெயித்த தனுஷ்! தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் வழியே, ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’, ‘இதுதான் நானா’, ‘இவ்வளவு சகிப்புத்தன்மைக்குப் பின்னால் இருப்பது பணம் மீதுள்ள வேட்கையா’ என்கிற கேள்விகளைத் தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார் தனுஷ். ஆனால், படம் முடிந்தபிறகே அந்த பாவனைகளுக்கான பொருள் பிடிபடுகிறது. போலவே, நித்யா மெனனின் இருப்பு தொடக்கத்தில் செயற்கையாகத் தெரிகிறது. மெதுவாக, அவர் திரைக்கதையில் ஒரு அங்கமாக மாறுகிறார். திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி போன்ற படங்களில் தொடக்கம் முதலே தனது இருப்பை அவர் நிலைநாட்டியிருப்பார். இது போன்ற குறைகள் இப்படத்தின் நாயகன், நாயகி பாத்திரங்களில் தென்படுகின்றன. இன்னொரு நாயகியாக இதில் ஷாலினி பாண்டே வருகிறார். அவரது பாத்திர வார்ப்பில் குறைகள் இல்லை என்றபோதும், திரைக்கதையில் போதுமான இடம் அவருக்குத் தரப்படவில்லை. இந்த படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம் பாத்திரங்கள் மிக எளிமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர்களும் படத்தின் அங்கமாக மாறியிருக்கின்றனர். அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஓரம் கட்டுவது போன்று ‘கிளாஸ் பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார் சத்யராஜ். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் இதுவே ‘பெஸ்ட்’ . இவர்கள் போக இளவரசு, இந்துமதி, நரேன், சமுத்திரக்கனி, போலீஸ்காரராக வரும் பார்த்திபன், இட்லி கடைக்கு வரும் தாத்தா, ஊர்காரர்களாக வருபவர்கள் என்று பலர் இதிலுண்டு. கீதா கைலாசம், ராஜ்கிரண் பாத்திரங்களின் இளம்பிராயத்தைக் காட்ட பிரிகிடாவும் ஒரு இளைஞரும் நடித்துள்ளனர். அவர்களோடு வடிவுக்கரசியும் இடம்பிடித்திருக்கிறார். அவர்கள் வருகிற காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்டியிருக்கலாம். இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ். நீண்ட காலம் கழித்து தனது குடும்பத்தினரை இளவரசு பாத்திரம் சந்திக்கிற காட்சி, கன்றுகுட்டியாய் தந்தையே பிறந்திருப்பதாக தனுஷ் உணரும் காட்சி, வில்லனிடம் காசு வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பாத்திரம் தனுஷ் கடையை காலி செய்ததா இல்லையா என்பதைச் சொல்லும் காட்சி என ‘இட்லி கடை’யில் வரும் சில காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நம்மையும் அறியாமல் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. அந்த வகையில், சுமார் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிவைத்து ஒவ்வொரு பிரேமையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். வில்லன் வசிக்குமிடத்தைச் சுற்றி வளைத்த ஊர் மக்கள் ‘நாங்க உள்ள வந்தமா, உள்ள வந்தமா. அதே நேரத்துல நீங்களும் வெளியே போக முடியாது’ என வில்லனின் அடியாட்களை மிரட்டுகிற இடத்தில், தியேட்டரில் விசில் சத்தம் அள்ளுகிறது. இப்படித் தேவையான இடங்களில் ‘ஹீரோயிசம்’ புகுத்தியிருக்கிறார் இயக்குனர். பெரும்பாலான இடங்களில் ‘ட்ராமா’ தான் நல்லது என்று பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் காட்டியிருக்கிறார். அதனை ரசிப்பவர்களுக்கு ‘இட்லி கடை’ ரொம்பவே பிடிக்கும். அதனை ரசிக்காதவர்களுக்கு இது கேலி கிண்டலுக்கான ஒரு வஸ்து. படம் பார்ப்பவர்கள் திரையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு, ஒவ்வொரு பிரேமையும் எப்படி அளவெடுத்தாற்போல வடிக்க வேண்டும்; ஒவ்வொரு காட்சியையும் நூல் கோர்த்தாற் போலத் திரைக்கதையில் அடுக்க வேண்டுமென்பதில் ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் தனுஷ். பாங்காக்கின் பரபரப்பு, சங்கராபுரம் எனும் கிராமத்தின் நிதானம் இரண்டையும் திரையில் திறம்படக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக். பிரேமுக்குத் தேவையான பின்னணியை ‘செட்’ செய்து தருவதில் ‘ஜித்தன்’ஆக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி. இந்தக் கதையில் ராஜ்கிரண், கீதா கைலாசம், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலரது இருப்பு குறைவாகவே உள்ளது. அவற்றை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்ப்பதே திரைக்கதையைத் தொய்வானதாக ஆக்காமல் இருக்க உதவும் என்று நினைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா. அது சில இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை. ஆடை வடிவமைப்பு பெரிதாகக் கண்களை உறுத்தாவிட்டாலும், அந்தந்த காட்சிகளின் தன்மையோடு பொருந்தி நிற்கவில்லை. மற்றபடி ஒப்பனை, சண்டைக்காட்சி வடிவமைப்பு, நடனம், ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ‘எஞ்சாமி தந்தானே’, ‘என்ன சுகம்’, ‘என் பாட்டன் சாமி வரும்’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. திரைக்கதையோடும் பொருந்தி நிற்கின்றன. பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை அள்ளித் தந்திருக்கிறார் ஜி.வி.பி. உணர்வுமயமான காட்சிகளில் கண்களின் தளும்பும் நீரைக் கீழே தள்ளிவிடுவதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெல்டன்! ‘உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடும்’ என்று ’கவித்துவமாக’ ரசிகர்கள் உணர்கிற வகையில் பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார். ஒரு நாயகன் இயக்குனர் ஆகும்போது, தனது பாத்திரத்தை முன்னிறுத்துகிற கதையமைப்பையே தேர்வு செய்வார். ‘இட்லி கடை’யும் அப்படிப்பட்டதுதான். ஆனால், இதில் இதர பாத்திரங்கள் ‘ஸ்கோர்’ செய்ய நிறைய இடமிருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் அசத்தியிருக்கின்றனர். அனைத்துக்கும் மேலே, ஒரு எளிமையான உள்ளடக்கம் சிறப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. கூடவே, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வின் மாண்புகளைச் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு, ‘இட்லிக் கடை வச்சிட்டா அவங்க வாரிசுகளும் அதையே தான் பின்தொடரணுமா’ என்கிற விதமான கேள்விகள் எழக்கூடும். குலக்கல்வி போன்று குலத்தொழில் என்கிற முத்திரையைக் குத்த இது உதவுகிறதா என்ற சந்தேகம் எழலாம். அவற்றைத் தீர்க்க, இப்படத்தில் போதுமான விளக்கம் இல்லை. அது ஒரு பலவீனம் தான். ஆனால், அப்படியொரு காரண காரியத்தோடு இப்படம் உருவாக்கப்படவில்லை என்பதனை தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் உணர முடியும். அந்த ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டால், நல்லதொரு ‘பீல்குட் மூவி’ பார்த்த திருப்தியை ’இட்லி கடை’யில் நிறையவே தருகிறார் இயக்குனர் தனுஷ். https://minnambalam.com/dhanush-movie-idly-kadai-review/#google_vignette
-
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா?
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா? 3 Oct 2025, 9:04 AM தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புஸ்ஸி ஆனந்த்தும், நிர்மல் குமாரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி ஜோதிராமன் முன் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது அதிமுக, பாஜக வழக்குகளில் அதிகம் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் சார்பில் ஆஜராகி வாதாடவுள்ளார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவிடைக்குமார் ஆஜராகி வாதாடுகிறார், காலை 11 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது, 12 மணிக்குள் புஸ்ஸி ஆனந்துக்கு பெயில் கிடைக்குமா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிந்துவிடும். https://minnambalam.com/bussy-anand-anticipatory-bail-plea-today-trail/
-
மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன்
மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற 37 ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்; சமாதான காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைப் பற்றிய என் நீண்டகாலக் கவலைவை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கொடுங்கோண்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர். தற்போது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து நடைபெற்று வந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2013 முதல், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, 2009 மே மாத இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம். எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். இந்நடவடிக்கைக்கு சீர்மை இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம். ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் தங்களை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர். நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதிர்ந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர், சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது. உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=343176
-
பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்
பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன் October 3, 2025 உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை (01) கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில், இந்நிகழ்வுக்கு “பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. அத்தோடு, சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது “பாரம்பரியமான மனைவி ”(Traditional Wife) எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது. இளம் பெண்கள், வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள். இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் 74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர். பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, “Women Shot AI” எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர். இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது. இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு (content moderation) அவசியம் தான், ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவரின் வர்க்க நிலை அவருக்கு பாதுகாப்பையும் சிறப்பையும் தரலாம், ஆனால் அவரது மதம் அல்லது இனப்பெருக்கம் அவருக்கு அபாயத்தை உருவாக்கக்கூடும். பெண்கள் பல அடுக்குகளில் ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள். வன்முறையை நாம் திடீரென்று நிகழும் நிகழ்வாகக் கருதுகிறோம், ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் ஓர் தொடர்ச்சி. பாலியல் வன்முறை மிக அதிகம் பேசப்படும், ஆனால் அது தனியே நிகழ்வல்ல; அன்றாட வன்முறையின் ஓர் பகுதி. ஆசிரியர் மாணவனை அடிப்பது, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை அடிப்பது, அலுவலக அதிகாரிகளின் வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வது – இவை அனைத்தும் அன்றாட வன்முறைதான். கலாச்சார மதிப்புகள் பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் நடைமுறைகள், வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது சமூக பரிவு மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போரினால் கூட, மனிதாபிமானமற்ற கொடுமைகள் இயல்பானவை போலக் கருதப்படுகின்றன. சட்டமும் நீதி மன்றங்களும் சமூகமாக நாம் வன்முறைக்கு கடும் தண்டனைகளை (உதா: தூக்கு தண்டனை) கோருகிறோம். ஆனால், அத்தகைய தண்டனைகளுக்குப் பின்னரும் வன்முறை குறைவதில்லை. ஏனெனில் வேறுக்காரணம் – ஆண்மை பற்றிய சமூகக் கருத்தாக்கங்கள் கவனிக்கப்படுவதில்லை. சமூகத்தில் ஆண்களுக்கு வன்முறை, ஆணவம், ஆதிக்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. பெண்களை சம உரிமையுள்ள மனிதர்களாக பார்க்க மறுப்பதே, பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனப்போக்கையும், பாலியல் வன்முறையையும் உருவாக்குகிறது. சட்டமும், நீதி மன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவற்றும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது, வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால், நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும் வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது. பொருளாதாரம், பெண்ணியம், சமூகக் கண்ணோட்டங்கள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை மட்டும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யாது. ஏனெனில் அவை தற்போதைய சமத்துவமின்மைகளைப் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கும். உதாரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிந்தபின் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள், கடும் சுமைகளை ஏற்படுத்தின. பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்போது கூட, சமூக எதிர்பார்ப்புகள் அவர்களை “சமூகத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என நிர்பந்திக்கின்றன. “பெண்ணியம்” என்ற சொல்லையே பலர் பயன்படுத்த அச்சப்படுகிறார்கள். ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூட தன்னைப் பெண்ணியவாதி என்று சொல்லத் தயங்கினார். பெண்களின் கோபம் கூட “அவசியமற்றது” அல்லது “அதிகப்படுத்தல்” என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார். https://www.ilakku.org/women-are-being-erased-from-public-life-ambika-sarkunanathan/
-
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது. https://www.ilakku.org/terrorist-attack-on-jewish-synagogue-in-britain/
-
அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்
அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும் முருகானந்தன் தவம் தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான போராளிகளில் அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில் தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி திலீபன். 1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில் கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான உண்ணா விரதம் என்ற அகிம்சை வழி ஆயுதத்தைக் கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார். 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தார். திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல் கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் கடந்த 17ஆம் திகதி மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றனர். இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி. திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக இருக்கையில் திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியை நிர்மாணித்துப் பராமரித்தவர்கள். ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல் புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது. அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன் நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எந்த உரிமையும் இல்லை. அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் , திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை. தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று செயற்பட்டுள்ளனர். அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால் கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர். தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும் இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர். ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல் . திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனை உரிமை கொண்டாடி அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அசிங்க-அரசியலும்-அடாவடி-அரசியலும்/91-365653
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
32 ஓவரிலேயே வங்காளதேசம் வென்றுள்ளது! சமபலம் என்றால் 48 ஓவர் மட்டுமாவது மட்ச் போயிருக்கவேண்டும் 😬 RESULT 3rd Match (D/N), Colombo (RPS), October 02, 2025, ICC Women's World Cup PAK-W 129 BAN-W (31.1/50 ov, T:130) 131/3 BAN Women won by 7 wickets (with 113 balls remaining)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
PAK-W 129 BAN-W (3/50 ov, T:130) 7/0 BAN Women need 123 runs from 47 overs.
-
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும் கூறி மக்கள் மத்தியில் மீண்டும் தனக்கு ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் (கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ) வைக்கப்பட்டிருந்தபோது அனேகமாக சகல எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாக குரலெழுப்பின. அவருடன் கடுமையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் கூட அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள். அந்தவேளையில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த உத்வேகத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் நம்பினார்கள். ஆனால், அந்த உத்வேகம் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே தணிந்துவிட்டது. அதற்கு பிறகு கடந்த வாரம் (செப்டெம்பர் 20) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79 வது வருடாந்த மகாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டினார். ஆளும் தேசிய மக்கள் சக்தியை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட சுமார் 40 கட்சிகள் மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டுக்கு வரவில்லை. ஆனால், பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் பலர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். பிரேமதாசவின் செய்தியை மத்தும பண்டார மகாநாட்டில் வாசித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவோ மகாநாட்டுக்கு வரவில்லை. பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் அணிசேர்ந்து நிற்கும் சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எவரும் பங்கேற்கவில்லை. வழமையாக ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாடுகளில் அதன் முன்னாள் தலைவர்களுக்கே அஞ்சலி செலுத்தி கௌரவம் அளிக்கப்படும். ஆனால் இந்த தடவை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மேலதிகமாக, முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களாக விளங்கிய என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், டி.ஏ. ராஜபக்ச, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம், சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் நினைவஞ்சலி செய்யப்பட்டது. மகாநாட்டில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு பொதுவெளியில் அவரின் முதன் முதலான உரையாக அமைந்தது. வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில் தனது கட்சியின் வருடாந்த மகாநாடு இந்த தடவை நடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் தனது கைது என்பதை அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். 2023 செப்டெம்பரில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பும் வழியில் ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றதும் கூட உத்தியோகபூர்வ விஜயமே என்று தனதுரையில் அவர் விளக்கினார். கட்சியைப் பற்றி பேசுவதை விடவும் நாட்டில் இன்று உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியமானது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மகாநாட்டில் பேசிய வேறு பல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கண்காணிப்பில் இன்று நாட்டில் அரசியலமைப்புச் சர்வாதிகாரம் ஒன்று உருவாகிவருவதாக குறிப்பிட்டனர். அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும் நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தக்கூடிய அளவுக்கு அவரது கட்சி பலம்பொருந்தியதாக இல்லை. தற்போதைய முக்கியமான எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றுமே பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியதாக வலுவான கட்டமைப்புக்களை கொண்டவையாக இல்லை. அதன் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அளவுக்கு பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை. மகாநாட்டில் உரையாற்றிய மற்றைய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்களுக்கு எந்தவிதமான இணக்கப்பாடும் கிடையாது என்றும் ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் மத்தும பண்டாரவும் பெ்துஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசமும் மகாநாட்டில் அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பழைய முக்கியமான கட்சிகள் எல்லாமே பல குழுக்களாக பிளவடைந்திருக்கின்றன. அவை இன்றைய சூழ்நிலையில் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக என்று கூறப்படுகின்ற முயற்சிகளில் வலிந்து பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அதன் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இரு முனைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஒருபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதும் மறுபுறத்தில், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதுமே அவர்களது நோக்கம். சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியின் இந்த பொறியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் பிரேமதாச இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு இணங்கக்கூடும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ விலகுவதற்கான அறிகுறி ஏதுவுமில்லை. அதனால் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காண்பிப்பார். அத்துடன் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூட அண்மையில் அறிவித்தார்.. மற்றைய எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்வது சாத்தியமில்லை. பலம்பொருந்திய ஒரு கட்சியை மையமாக வைத்து கூட்டணியை அமைத்தால் மாத்திரமே தேர்தலில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அத்தகைய ஒரு நிலையில் தற்போது இல்லை என்பது மாத்திரமல்ல, அண்மைய எதிர்காலத்திலும் அதன் மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் விக்கிரமசிங்கவின் கைது போன்ற விடயங்களை முன்னிறுத்தி ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்துக்கு ‘ எதிராக அணிதிரளுமாறு விடுக்கப்படும் அழைப்பு மக்களின் கவனத்தை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகள் இதுகாலவரை அனுபவித்துவந்த மட்டுமீறிய வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்காக பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையின் தங்காலைக்கு சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார். தங்காலை வாசஸ்தலத் துக்கு தினமும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, கொழும்பில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை சந்தித்து வருகிறார்கள். கொழும்பு மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல் போனதால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அரசாங்கம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டது என்றும் நாட்டு மக்கள் நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நம்புகிறார் போலும். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கும் குடும்பத்தவர்களுக்கும் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச ‘ அறகலய ‘ அனுபவத்துக்கு பின்னரும் கூட விடுபடவில்லை. இன்றைய அரசியல் நிலைவரத்தில் உள்ள விசித்திரம் என்ன வென்றால் ரணில் விக்கிரமசிக்கவும் மகிந்த ராஜபக்சவும் தங்களுக்கு அரசியலில் ஒரு ‘ மீட்சி’ இருக்கிறது என்று நம்புவதுதான்! https://arangamnews.com/?p=12346
-
ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி
ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி புதன், 01 அக்டோபர் 2025 06:51 PM யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த கடற்பாசி உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதொரு வலுவான வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். https://jaffnazone.com/news/50895
-
ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!
ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்! October 2, 2025 ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ்ப் புலம்பெயரிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். 32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் பரப்புரையில் ஈடுபடவும், கொடிகளைக் காட்சிப்படுத்தவும் இடமளிக்கக்கூடாது – என்றார். https://www.ilakku.org/the-tiger-flag-should-not-be-allowed-to-fly-in-geneva-k-p-dasanayake-urges-the-swiss-government/
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூர் சம்பவத்தால் நெருக்கடியில் தவெக: ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் டெல்லி பயணம் 1 Oct 2025, 10:55 PM கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 5 பேருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். முன்னதாக, கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஆதவ் அர்ஜூனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த பரபரப்பான- நெருக்கடியான சூழ்நிலையில் ஆதவ் அர்ஜூனா திடீரென டெல்லி சென்றுள்ளார் என்கின்றன தகவல்கள். சென்னையில் இருந்து தனி விமானத்தில் 5 பேருடன் ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. https://minnambalam.com/karur-tragedy-puts-tvk-in-crisis-aadhav-arjuna-flies-to-delhi-on-private-jet/
-
யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் 02 Oct, 2025 | 11:40 AM குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந்திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது. இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள். https://www.virakesari.lk/article/226658
-
முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!
முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! 02 Oct, 2025 | 09:54 AM கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/226637
-
முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள்
முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள் 02 Oct, 2025 | 09:30 AM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் குளக்காணியில் உள்ள நீர்மரங்கள் பாரிய அளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளன. குறித்த வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளரினாலேயே இவ்வாறு நீர்மரங்கள் பாரியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்ததுடன், பிரச்சினை தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலைய பிரிவிற்குட்பட்ட வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் ஏற்கனவே குறித்த வெள்ளப்பள்ளம் குளத்திற்குரித்தான பெருமளவான பகுதிகளை ஆகிரமித்துள்ளதாக கிரமமக்களால் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தொடர்சியாகவே குறித்த ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் குளத்தின் எஞ்சியபகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இவ்வாறு மரங்களை வெட்டியிருக்கலாமெனவும் கிராமமக்களால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாறு குளத்தின் பகுதிகளிலுள்ள நீர் மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் அற்றுப்போகும் அபாயம் ஏற்படுமெனவும், அருகிலுள்ள கிணறுகளில் நீரின்றிப்போகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் எஞ்சிய குளத்தின் பகுதிகளும் தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டால் அப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீரில்லாமல் போகும் அபாயம் ஏற்படுமெனவும் மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. குளத்தின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் பாரிய அளவில் வெட்டி அழிக்கப்பட்டமைக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடும் செய்யப்பட்டது. அதேவேளை இவ்வாறு குளக்காணிக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக உடையார்கட்டு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெள்ளப்பள்ளம் பகுதிக்குரிய கிராம அலுவலர் ஆகியோரை குறித்த பகுதிக்கு அழைத்ததுடன், நிலைமைகளை காண்பித்து சட்டவிரோதமாக குளக்காணிக்குள் நீர்மரங்கள் வெட்டப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு சட்டவிரோதமாக குளக்காணிக்குள் பாரிய அளவில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர். அந்தவகையில் வெள்ளப்பள்ளம் குளத்தின் பகுதிக்குள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226635
-
இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம்
இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் 'எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை' என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது, வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மது பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையர்களில்-மதுவால்-தினமும்-50-பேர்-அகால-மரணம்/175-365626
-
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது
குழந்தை மீட்பு;17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். மேலும் 17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி பின்னணி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர். அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார். இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக் கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது. இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/குழந்தை-மீட்பு-17-வயதுடைய-பெற்றோருக்கு-விளக்கமறியல்/175-365630
-
வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி!
வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது. டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். https://newuthayan.com/article/வடக்கு,_கிழக்குப்_பாடசாலைகளை_நவீனமயப்படுத்த_'நிப்பொன்%60_உதவி!
-
செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார். யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-2/
-
மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு!
மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு! மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் அடங்குவர். குறித்த நபர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்ட நிலையில் , ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. https://www.samakalam.com/மன்னார்-போராட்டக்காரர்க/