Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! 02 Oct, 2025 | 09:54 AM கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/226637
  2. முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள் 02 Oct, 2025 | 09:30 AM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் குளக்காணியில் உள்ள நீர்மரங்கள் பாரிய அளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளன. குறித்த வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளரினாலேயே இவ்வாறு நீர்மரங்கள் பாரியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்ததுடன், பிரச்சினை தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலைய பிரிவிற்குட்பட்ட வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் ஏற்கனவே குறித்த வெள்ளப்பள்ளம் குளத்திற்குரித்தான பெருமளவான பகுதிகளை ஆகிரமித்துள்ளதாக கிரமமக்களால் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தொடர்சியாகவே குறித்த ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் குளத்தின் எஞ்சியபகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இவ்வாறு மரங்களை வெட்டியிருக்கலாமெனவும் கிராமமக்களால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாறு குளத்தின் பகுதிகளிலுள்ள நீர் மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் அற்றுப்போகும் அபாயம் ஏற்படுமெனவும், அருகிலுள்ள கிணறுகளில் நீரின்றிப்போகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் எஞ்சிய குளத்தின் பகுதிகளும் தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டால் அப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீரில்லாமல் போகும் அபாயம் ஏற்படுமெனவும் மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. குளத்தின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் பாரிய அளவில் வெட்டி அழிக்கப்பட்டமைக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடும் செய்யப்பட்டது. அதேவேளை இவ்வாறு குளக்காணிக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக உடையார்கட்டு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெள்ளப்பள்ளம் பகுதிக்குரிய கிராம அலுவலர் ஆகியோரை குறித்த பகுதிக்கு அழைத்ததுடன், நிலைமைகளை காண்பித்து சட்டவிரோதமாக குளக்காணிக்குள் நீர்மரங்கள் வெட்டப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு சட்டவிரோதமாக குளக்காணிக்குள் பாரிய அளவில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர். அந்தவகையில் வெள்ளப்பள்ளம் குளத்தின் பகுதிக்குள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226635
  3. இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் 'எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை' என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது, வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மது பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையர்களில்-மதுவால்-தினமும்-50-பேர்-அகால-மரணம்/175-365626
  4. குழந்தை மீட்பு;17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். மேலும் 17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி பின்னணி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர். அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார். இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக் கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது. இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/குழந்தை-மீட்பு-17-வயதுடைய-பெற்றோருக்கு-விளக்கமறியல்/175-365630
  5. வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது. டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். https://newuthayan.com/article/வடக்கு,_கிழக்குப்_பாடசாலைகளை_நவீனமயப்படுத்த_'நிப்பொன்%60_உதவி!
  6. செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார். யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-2/
  7. மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு! மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் அடங்குவர். குறித்த நபர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்ட நிலையில் , ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. https://www.samakalam.com/மன்னார்-போராட்டக்காரர்க/
  8. யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்! adminOctober 2, 2025 மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது. https://globaltamilnews.net/2025/221065/
  9. வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா! adminOctober 2, 2025 திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும். அதேநேரம், 10 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 2 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும். நிரந்தர வதிவிட விசா https://globaltamilnews.net/2025/221068/
  10. காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார். பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார். இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. https://www.virakesari.lk/article/226574
  11. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது! 01 Oct, 2025 | 12:46 PM இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/226569
  12. பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பணம் adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/220984/
  13. தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு! adminOctober 1, 2025 தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25) பிறப்பித்தார். மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார். 2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, காவற்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லொரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். சம்பத் மனம்பேரி மற்றும் நெரஞ்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கல்ப பெரேரா, தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அதனால் இன்று (30.09.25)நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறினார். அவர் சிறையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த அறிக்கையை வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார். நான்காவது குற்றவாளியான நெரஞ்சன் பெரேரா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராகுல் ஜெயதிலகே, தனது கட்சிக்காரர் ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். சம்பத் மனம்பேரி https://globaltamilnews.net/2025/221001/
  14. வீடியோ ரிலீஸ் செய்த விஜய்க்கு திமுகவின் 9 கேள்விகள் 30 Sep 2025, 8:24 PM கரூர் துயர சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு திமுக 9 கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டுள்ளது. விஜய் பிரசாரம் செய்த கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் துயரம் தொடர்பாக அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் @DMKNRIWing எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளதாவது: தான் நடத்திய ஒரு கூட்டத்தில் மாபெரும் துயரம் ஒன்று நடைபெறும்போது, அதற்கான பொறுப்பை முதலில் தான் ஏற்றுக்கொள்வதுதான் தலைமைக்கான பண்பு. அந்தப் பண்பு உங்களிடம் துளியும் இல்லை என்பது, முழுக்க முழுக்க அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெளிவாகிறது. சரி, நீங்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போங்கள். “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்லும் உங்களுக்கு சில கேள்விகள்: நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்வதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, சென்னையிலிருந்தே காலை 8:30 மணிக்கு கிளம்பியது ஏன்? மதியம் 12.30 மணிக்கு வரவேண்டிய கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தது ஏன்? உங்களைப் பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த உங்கள் ரசிகர்களுக்கு தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்காமல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது ஏன்? கூட்டம் அளவு கடந்து செல்வதால், பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி காவல்துறை அறிவுறுத்தியபோது, அதை மதிக்காதது ஏன்? காவல்துறையிடம் நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே குறுகலானவை என்று தெரிந்தும், காவல்துறை சரியான இடத்தை வழங்கவில்லை என்று பொய் கூறுவது ஏன்? நீங்கள் பரப்புரை செய்த பகுதியில் அரசாங்கம் மின் துண்டிப்பு செய்யவில்லை என்றும், ஜெனரேட்டர் இருக்கும் பகுதியின் மேல் உங்கள் ரசிகர்கள் சென்று விழுந்ததால், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ஜெனரேட்டரை அணைத்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ள சூழ்நிலையில், அரசாங்கம் மின் துண்டிப்பு செய்தது என்று பொய் பரப்பியது ஏன்? உங்களால் கரூர் செல்ல முடியாததற்கு காரணம் சொல்லும் நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகும் உங்கள் கட்சியினரைக் கூட அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லாதது ஏன்? கரூரில் மட்டும் ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்று விஷமத்தனமாக கேட்கும் நீங்கள், மற்ற ஊர்களிலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா? கரூரில் உங்களைப் பார்க்க வந்து இறந்த பலர் உங்கள் ரசிகர்களோ தொண்டர்களோ அல்ல என்று உங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது ஏன்? இதுதான் நீங்கள் இறந்த உங்களுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “எந்த ஒரு தலைவரும் தன்னைப் பார்க்க வந்தவர்கள் இறக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்” என்றார். ஆனால் நீங்களோ, எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல், பிரச்சனையை அரசின் பக்கம் திசைதிருப்பி விடும் வகையிலும், உங்களுடைய ரசிகர்களைத் தூண்டிவிடும் வகையிலும் சினிமா பாணியில் வீடியோவில் பேசியிருக்கிறீர்கள். ஒரு தலைவருக்கும் நடிகருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தொடர்ந்து நடியுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/karur-tragedy-dmk-poses-9-questions-to-vijay-after-his-video-release/#google_vignette
  15. விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை. சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை. உதாரணமாக, தமிழ்த் தேசிய அரசியலில் ஆசிரியர்கள் வரதராஜன்,ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக வரதராஜன் தேர்தல் கேட்ட பொழுது மற்றொரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் “அவருடைய மாணவர்கள் வாக்களித்தாலே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார். ஆனால் மாணவர்களாக இருப்பது வேறு வாக்காளர்களாக இருப்பது வேறு. எல்லா மாணவர்களும் ஆசிரியருக்கு வாக்களிப்பார்கள் என்று இல்லை” என்று. அப்படித்தான் இந்தியாவில் மணிப்பூரில் இரோம் ஷர்மிலா என்ற பெண் செயற்பாட்டாளர் அங்கு அமுலில் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 15 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிப்பூரின் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பார்கள். பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு 2017ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எந்த மக்களுக்காக அவர் 15 ஆண்டுகள் உண்ணாமல் போராடினாரோ,அதே மக்கள் அவரைக் குரூரமாக நிராகரித்தார்கள். அவருக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை. கட்டுப்பணமும் இல்லை. தமிழ் தேசியப் பரப்பில்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னர் தேர்தல் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். எனினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலம் ஈடுபட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளை பெற்றதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றபின் கட்சிகளைத் தொடங்கியவர்களும் வெற்றி பெறவில்ல்லை. ஏனைய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டவர்களுக்கும் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு பெண், போரில் காலை இழந்தவர்,வன்னியில் போட்டியிட்டார். அவரை வெற்றிபெற வைப்பதற்காக அவருடைய நண்பர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவருக்கு கிடைத்தது இரண்டு ஆயிரத்த்துச் சொச்சம் வாக்குகள்தான். தமிழ்த் தேசியப் பரப்பில் ஏனைய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எல்லாப் போராட்டங்களிலும் பொன் மாஸ்டர் காணப்படுவார். அவர் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்டிருக்கிறார். ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக வரத் தேவையான வாக்குகளைக் கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை கொள்கையில் விட்டுக் கொடுப்பற்ற ஒரு கட்சியாகக் கூறிக் கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியத்தை விட்டுக்கொடுப்பின்றி பின்பற்றும் ஒரு கட்சியாகவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் துயிலுமில்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாவும் அந்தக் கட்சிக்குத்தானே வாக்குகளாகத் திரள வேண்டும்? ஏன் அப்படி நடக்கவில்லை? முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களால் ஏன் தேர்தல்களில் பெரு வெற்றி பெற முடியவில்லை? அவர்களுக்கு தேர்தல் மொழியில் பேசத் தெரியவில்லையா? அல்லது அவர்களைச் சமூகம் போர்க்களத்துக்கு மட்டும் உரியவர்களாகப் பார்க்கின்றதா? தேர்தல் களத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுகின்றதா? இதே கேள்விகளைச் சிங்கள வாக்காளர்களை நோக்கியும் கேட்கலாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளமாக இருந்தவர்கள் என்று கருதப்படுகின்ற அமைப்புக்களில் ஒரு பகுதி ஒன்றாகத் திரண்டு குடைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஆனால் அவர்களுக்கு அற்பசொற்ப வாக்குகள்தான் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 30,000 வாக்குகள். அதேசமயம் போராட்டங்களின் விளைவுகளை தேர்தல் மொழியில் கவர்ச்சியாக மொழிபெயர்த்த ஜேவிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையப் பெற்று இப்பொழுது நாட்டை ஆட்சி செய்கின்றது. அப்படியென்றால் சிங்கள மக்கள் தங்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்களை அல்லது அந்தப் போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவித்தவர்களை ஏன் தோற்கடித்தார்கள் ? போராளிகள் வேறு அரசியல்வாதிகள் வேறு என்று மக்கள் கருதுகின்றார்களா? போராளிகள் அரசியல்வாதிகளாக மாறுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா ? அல்லது போராளிகளுக்கு தங்கள் போராட்டத்தை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லையா? அல்லது உண்மையான அர்ப்பணிப்புக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் தியாகத்துக்கும் தேர்தல் அகராதியில் இடமில்லையா ? ஆனால் ஜேவிபியும் முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் குரூரமாக நசுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அவர்கள் தேர்தல் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விட்டதனால்தான் இம்முறை ஆளுங்கட்சியாக வர முடிந்திருக்கின்றது. ஜேவிபி தன்னை எம்பிபியாக உருமாற்றிக் கொண்டது. அதன் விளைவாகத்தான் இப்பொழுது நாட்டை ஆள்கின்றது. ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தியாகங்கள்,இரோம் சர்மிளா போன்றவர்களின் தியாகம் என்பவற்றோடு நடிகர் விஜயின் செல்வாக்கை ஒப்பிட முடியாது. ஆனால் இங்கு இந்த கட்டுரையின் குவிமையம் என்னவென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தகமைகள் எவை எவை என்ற கேள்விதான். மிக உயர்வான தகமைகள் என்று கருதப்படும் தியாகம், அர்ப்பணிப்பு,நேர்மை போன்றவற்றைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியாத போராளிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறார்கள். அரசியலில் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் தொடர்ந்து பின் தள்ளப்படுவார்கள். மாறாக அரசியலை ஒரு பிழைப்பாக முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தமிழகத்தில் நல்லகண்ணு என்று ஒர் இடதுசாரி இருக்கிறார். நேர்மையானவர், கண்ணியமானவர், ஒரு சன்னியாசியைப் போன்றவர், அர்ப்பணிப்பு மிக்கவர். ஆனால் அவர் தேர்தலில் வென்றதில்லை. இது தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம். வாக்காளர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர்கள்,தேர்தல் அரசியலின் கள்ளத்தனங்களை விளங்கிக் கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்களின் அறியாமையா? அல்லது அறிவா? அல்லது விழிப்பற்ற பொதுப் புத்தியா ?அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அதிர்ஷ்டமா? ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய,அரசியல் செயற்பாட்டாளராகிய எம்மா கோல்ட்மன் கூறுவதுபோல, “”வாக்களிப்பு எதையாவது மாற்றுமாக இருந்தால்,அவர்கள் தேர்தலைச் சட்டவிரோதமாக்கி விடுவார்கள்” என்பதுதான் சரியா ? https://www.nillanthan.com/7802/
  16. இது போர்க்களமல்ல; அரசியற் களமே! September 29, 2025 — கருணாகரன் — மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்க் கட்சிகள் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்காமல், வழமையைப்போல “தனித்தவில்” வாசிக்கின்றன. இது ஏன்? குறைந்த பட்சம் தமிழ்பேசும் கட்சிகளாகக் கூட ஒருங்கிணைந்த கூட்டுக் கோரிக்கையாக இதனை மாற்ற முடியாமல் இருப்பது ஏன்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசை (NPP அரசாங்கத்தை) மட்டும் கேட்கவில்லை. இந்திய அரசையும் கேட்டுள்ளன. இதற்கான சந்திப்பு ஒன்றுகூட கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சந்தியின் எம்பிக்களுக்கும் இந்தியத்தூதுவருக்குமிடையில் நடந்துள்ளது. அப்பொழுது எல்லாக் கட்சிகளும் கூடி ஒன்றாக வாருங்கள். அப்போதுதான் இந்தக் கோரிக்கைக்கு வலுக் கூடும் என்று சொல்லியிருக்கிறார் இந்தியத் தூதர். இவ்வளவு காலமும் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்வதில் பின்னடித்த கட்சிகள் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்டவை) எல்லாம் மாகாணசபைகளைப் பற்றியே பேசுகின்ற – பேச வேண்டிய ஒரு காலம் வந்துள்ளது. அப்படியான ஒரு அரசியல் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. இதற்குக் காரணம், ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம் போன்ற அதிகார மையங்களை NPP கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஏனைய கட்சிகள் வரலாற்றில் முதற்தடவையாக அதிகாரமற்ற தரப்புகளாக மாறியுள்ளன. இதனால் மாகாணசபைகளிலாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக அதற்கான தேர்தலைக் கோருகின்றன. தேர்தலை நடத்தினால் எப்படியாவது மாகாணசபைகளைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையோடிருக்கின்றன. அப்படித் தேர்தலை நடத்தி மாகாணசபைகளைக் கைப்பற்றினால், பிறகு இந்தக் கட்சிகளால் அடுத்த கட்டப்போராட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரத்துக்காக நடத்தப்படும். ஏனென்றால், அதிகாரமற்ற மாகாணசபைகளை வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றுக்கு என்ன பயன்? எனவே சிங்களக் கட்சிகளே மாகாண அதிகாரத்தைக் கோருகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஒரு காலம் கனிந்துள்ளது. இவ்வாறு கனிந்துள்ள நல்வாய்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் சரி, தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்காத ஏனைய தமிழ்க்கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கிழக்குத் தமிழர் ஒன்றியம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி போன்றவை) சரி அக்கறையற்றே உள்ளன. அல்லது இதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றன. மாகாணசபைகளைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் முதற்கட்ட அனுகூலங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று மெய்யாகவே இந்தக் கட்சிகள் நம்பினால், இப்பொழுது உருவாகியிருக்கின்ற மாகாணசபைகளின் மீதான அனைத்துத் தரப்பின் கரிசனைச் சூழலைக் கையாளக் கூடிய கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க முயற்சித்திருக்கும். அதற்கான சந்திப்புகளையும் உரையாடல்களையும் வடக்குக் கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்துப் பரப்பிலுமுள்ள சக்திகளுடன் நடத்துவதற்கான தயாரிப்புகள் நடந்திருக்கும். மாகாணசபைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து தரப்பையும் ஒருங்கிணைந்த ஒரு Net Work இல் கொண்டு வந்திருக்கும். இதில் அரசியற் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துச் சூழலிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஜனநாயக விரும்பிகள், மாகாணசபைகளைப் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் சாதகமாகப் பேசி வரும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முன்னணியாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது ஒன்றும் கடினமே இல்லை. ஏனென்றால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப்போல, எல்லாத் தரப்பும் மாகாணசபைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது எளிதல்லவா! முதற்கட்டமாக கொழும்பில் இதற்கென ஒரு தொடர்பாடல் மையத்தையும் தொடர்பாடற் குழுவையும் உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடயங்களைக் கையாளலாம். இதில் கவனிக்க வேண்டியது, இந்த விடயத்தில் படிப்படியாகவே விடயங்களை நகர்த்த வேண்டும். முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசிடம் கூட்டாகக் கேட்பது, அழுத்தம் கொடுப்பது. குறிப்பாக கால எல்லையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துவது. இதற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்கவில்லை என்றால், போராட்டங்களை நடத்துவதைப் பற்றிச் சிந்திப்பது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய வேண்டும். அரசாங்கம் இணங்கியோ உடன்பட்டோ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி ஆராயலாம். இது ஒன்றும் முக்கியமானதல்ல. ஏனென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் வெவ்வேறு சூழலைக் கொண்ட பிராந்தியங்களின் தேர்தலாக இருப்பதால், அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறே தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனாலும் அதைக் குறித்தும் சிந்திக்கலாம். அடுத்தது முக்கியமானது. அதுதான் அதிகாரங்களை வலுப்படுத்துவதாகும். மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமாகும். இதற்கான கலந்துரையாடல்களு பொறிமுறையும் வேணும். ஆனால், அதை இப்பொழுது எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. அப்படி அவரசப்பட்டு அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேச முற்பட்டால், மாகாணசபைகளுக்கான தேர்தல் கோரிக்கையே விடுபட்டுப் போகக் கூடிய சூழல் உருவாகி விடும். மட்டுமல்ல, தொடக்கத்திலேயே தேவையற்ற விவாதங்கள் உருவாகி எல்லாமே பாழாகி விடும். அது அரசாங்கத்துக்கே நல்வாய்ப்பை அளிக்கும். ஆகவே இந்த விடயத்தை மிக நுட்பமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளது. தமிழ்த்தரப்பு அல்லது தமிழ் பேசும் சமூகங்கள்தான் இதனால் (மாகாணசபைகள் முடக்கப்பட்டதால்) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே கூடிய கரிசனையை எடுக்க வேண்டியது தமிழ் பேசும் தரப்பினரே. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடமிருந்து இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு அபிப்பிராயத்தையும் அல்லது நிலைப்பாட்டையும் காண முடியவில்லை. எனவே தமிழ்தரப்பு முக்கியமாக முஸ்லிம் கட்சிகளோடு பிரத்தியேகமாகப் பேச வேண்டும். தேர்தல் கூட்டுகளை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து இரவு பகலாகச் சிந்திக்கின்ற – சந்திப்புகளை நடத்துகின்ற, கூட்டுகளை உருவாக்குகின்ற அரசியற் கட்சிகள், அதை விட முக்கியமான மாகாணசபை விடயத்தில் ஆர்வமற்றிருப்பது ஏன்? மாகாணசபைகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். அப்படியிருக்கும்போது அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று சில கட்சியினர் கேட்கலாம். எதையும் பேசுவது வேறு. அவற்றைச் செயலாக்கமாக வெற்றியடையச் செய்வது வேறு. இப்பொழுது பேசுவதை விட செயற்படுவதற்கான சூழல் தானாகவே வந்திருப்பதால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாறாக எவரையும் குற்றப்படுத்தி நிந்திப்பதற்காக அல்ல. ஆனால், மந்த கதியில் எதையும் செய்ய முயற்சித்தால், அது எதிர்விளைவுகயே – பின்னடைவுகளையே தரக் கூடிய சாத்தியமுண்டு. அரசியலில் அபூர்வமாகவே வாய்ப்புகள ஏற்படுவது. அதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதே நிபுணத்துவமும் சாணக்கியமுமாகும். இப்போது உருவாகியிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல் குறித்த பல தரப்பின் குரல்களுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. ஆனால், அதற்கான கால எல்லையை அது சொல்லவில்லை. மந்த கதியில் அல்லது தனித்த நிலையில் இந்தக் கோரிக்கை இருக்குமாக இருந்தால், அரசாங்கம் இதை இழுத்தடித்து, வேறொரு சூழ்நிலைக்குத் தள்ளி விடவும் வாய்ப்புண்டு. அப்பொழுது இந்தக் கோரிக்கையைக் கை விட்டுத் தென்னிலங்கைக் கட்சிகள் வேறு பிரச்சினையில் தாவி விடவும் கூடும். ஆகவேதான் தாமதிக்காமல் விரைவில் இது தொடர்பாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மாகாண சபைகளை இயங்க வைப்பதற்காக வேலை செய்வதற்கு வாய்ப்பான சூழல். இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணமே! தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடக்கம் அனைத்துத் தமிழ் பேசும் தரப்பினரும் தங்களுடைய அடையாளத்துக்கு ஏற்பவும் மாகாணசபைகளைக் கொண்டு வருவதற்கு முன்னின்றவர்கள் என்ற அடிப்படிக் காரணத்துக்காகவும் விரைந்து களத்தில் இறங்க வேண்டும். இது ஒன்றும் போர்க்களமல்ல. அரசியற் களமே! https://arangamnews.com/?p=12343
  17. நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் 29 Sep 2025, 7:47 AM ராஜன் குறை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது. அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும் உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை. இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது. எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். விஜயின் பதவி மோக அரசியல் மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும். கூட்டக் காட்சி அரசியல் விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார். விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம். உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
  18. கரூர் சம்பவம்: சமூக வலைதளங்களில் வதந்தி- பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உட்பட 4 பேர் கைது 30 Sep 2025, 8:25 AM கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் வழக்கு முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அத்துடன் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://minnambalam.com/karur-tragedy-bjp-and-tvk-members-arrested-for-spreading-rumors-on-social-media-investigation-underway/#google_vignette
  19. ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்! 30 Sep, 2025 | 12:04 PM ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை , பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226478
  20. ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு 30 September 2025 காசா மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். காசா போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், இது பரபரப்பாகப் பார்க்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 4 ஆவது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவர், ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியைத் தன்வசம் எடுத்துக் கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனச் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் கூறினார். இந்த சூழலில், காசா போர் முடிவுக்காக, ட்ரம்ப் மேற்கொள்ளும் முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதேபோன்று ட்ரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், அதற்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் வெளியிட்டார். ட்ரம்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. அவற்றுடன் கூட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உலகின் இரு பெரும் முஸ்லிம் நாடுகளும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ அவற்றை மேற்கொள்ள ட்ரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. https://hirunews.lk/tm/422883/muslim-countries-support-trumps-gaza-peace-plan
  21. அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகல் 30 September 2025 அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்த நாட்டு அரசு ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் பதவி விலகவுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பாண்டின் இறுதிக்குள், 12 சதவீதம் பேர் வெளியேறிவிடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் கொள்கைகளால், கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/422891/one-hundred-thousand-government-employees-resign-today-in-the-us
  22. நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும் லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது. இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார். அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஜனாதிபதியின் இந்த உரையானது மக்கள் மத்தியில், குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கவலையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நோக்கம், திசைமாறுதல் என்பது சாதாரணமானதுதான், ஆனால், நம்பிக்கை கொண்டவர்களின் நோக்கம் திசை மாறுவது கவலையானது. இலங்கையில் தமிழ் மக்களின் நோக்கம் ஒரு இடது சாரிச் சிந்தனையுள்ள அரசாங்கமானது நீண்டகாலமாக இருந்து வருகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வினை வழங்கும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், நடப்பதென்னவோ பழையதைப் போலவே இருப்பது அவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகின்ற வேளைகளில், தமிழ் மக்கள் தம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவே நினைத்துக் கொள்வர். ஆனால், அது நிறைவுக்கு வருகையில் ஏமாற்றமாகிப்போவதே வழமையானது. இம்முறை நடைபெறுகின்ற 60ஆவது கூட்டத் தொடரிலும்கூட பொறுப்புக்கூறலின் அவசியமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசரமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஏதுமற்று நிறைவுக்கு வரும். இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்துமாறும், உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தாமதமும் இன்றி நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் தமிழர் தரப்பு, சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கோரி வருகிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ரோம் சாசனத்தில் கையொப்பமிடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர இனப்படுகொலை, இனப் படுகொலைக்கான நோக்கம் ஆகியவற்றினைக் குறிக்கும் ஆதாரங்களைக் குறிப்பாக சேகரிக்க வேண்டும். இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தில் இந்த ஆதார சேகரிப்பு முக்கியமான விடயமாகும். இந்தச் செயற்றிட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். என்று பல கடிதங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அனுப்பப்பட்டன.இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றன. இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு மனித உரிமைப் போரவையிலும் கொண்டுவரப்படும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் காணாமல் போகின்றன. இம்முறையிலும் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட 30-1 பிரேரணைக்கு அன்றைய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவின் முன்மொழிவுடன் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. அதிலிருந்து தொடங்கப்பட்ட பொறுப்புக்கூறல் விவகாரம் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை. ஆனால், காலம் கடத்தல் மாத்திரம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாட்டின் அவசியத்தை தமிழர் தரப்பு வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் நடைபெறுவது ஒன்றுமில்லை என்றே ஆகிப்போகின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்தப் போக்கானது முன்னைய அரசாங்கங்களின் செயற்பாட்டைப் போன்றதாகவே இருக்கிறது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்த போதும் இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விவகாரத்திலோ உரிய அக்கறை காண்பிக்கப்படவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, என்றிருந்த தமிழ் மக்கள் ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் சபை உரையுடன் முழுவதுமாக ஏமாந்திருப்பர் என்றே கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்குப் பயணமாவதற்கு முன்னர் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை அந்த திட்டத்திற்கெதிராகப் போராடியவர்கள் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது நாட்டில் மக்களாட்சி உறுதிப்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்க முனைவது “இவர்களும் அவர்கள்” தானா என்று கேட்கத் தோன்றுகின்றது என்கிற விமர்சனத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நடவடிக்கை வன்மையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. காற்றாலை செயற்திட்டத்திற்கெதிராக மக்கள் மேற்கொண்ட ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்கள், மத குருக்கள் உட்பட சகலரையும் பொலிஸார் அடித்துக் கலைத்தது காற்றாலை இயந்திர பாகங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததிருக்கின்றனர். மக்களின் உணர்வுகளை காவல்துறையினரின் ‘பூட்ஸ்’களால் நசுக்கியிருக்கின்றமையானது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாமல் செய்கிறோம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிகளைக் குறைக்கிறோம், நாட்டில் ஊழலை ஒழிக்கிறோம் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துகிறோம். நிலைபேறான அபிவிருத்திகளுக்கு முயற்சிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில், மக்களின் உரிமைகளை மறந்து செயற்படுவதானது ஒருபோதும் நற்போக்காக பார்க்கப்படாது.கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்களால் தங்களது நலன் சார்ந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை என்ற உணர்வு மேலோங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கேற்ற வகையிலேயே அரசாங்கத்தின் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன. இந்த இடத்தில்தான், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் நன்கு அறிந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னைய அரசாங்கங்களைப் போன்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதான அபிப்பிராயத்துக்குள் அடக்கப்படும் நிலைமை நிலைப்பாடாக மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தொடக்கம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினை அதிகரிப்பதோடு, எதிர்மறையான சிந்தனைகளையும் உருவாக்கும் எனலாம். கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது வெறுப்புக்கொண்டிருந்த மக்கள், தேசிய மக்கள் சக்தியைக் கடந்த தேர்தல்களில் ஒரு மாற்றுச் சக்தியாகவே கருதினர். ஜனாதிபதித் தேர்தலைவிட, பாராளுமன்றத் தேர்தலில் பேராதரவு கிடைத்திருந்தது. இந்தப் பேராதரவைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது ஆதிக்கப் பிரயோகத்துக்கான ஆணையாகக் கொள்வது தவறாகும். மொத்தத்தில், தங்களது நோக்கம் வேறாக இருந்தாலும் மக்களது நோக்கத்தினை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது நோக்கத்தின் பாதையில் ஆட்சியின் நகர்த்தலை மேற்கொள்வதே சிறப்பானது என்பதனையே அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இருந்தாலும், நோக்கம் திசைமாறாமலிருக்கட்டும் என்று எண்ணிக்கொள்வோம. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நோக்கம்-திசை-மாறாமல்-இருக்கட்டும்/91-365485
  23. 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவு செய்யும் பாலம் உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. இரு மலைகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் மிகவும் அழகுடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரை இப்பகுதியைக் கடக்க 2 மணி நேரம் எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது பாலத்தின் உதவியால் இரண்டே நிமிடத்தில் இப்பகுதியைக் கடந்து விட முடியும். இதற்கு முன்பு பெய்பான்ஜியாங் பகுதியில் தரைமட்டத்திலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு இருந்த பாலமே உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. தற்போது இந்த ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் 625 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 2,900 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குய்சோ மாகாண போக்குவரத்து முதலீட்டு குழுமத்தின் திட்ட மேலாளர் வூ ஜாவோமிங் கூறும்போது, “625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் பொறியியலின் அற்புதமாக திகழ்கிறது. இந்தப் பாலத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக 207 மீட்டர் உயரத்தில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தையொட்டி உணவகங்கள், பாலத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிக விரைவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும்’’ என்றார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/2-மணி-நேரப்-பயணம்-2-நிமிடத்தில்-நிறைவு-செய்யும்-பாலம்/50-365514
  24. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைத்து முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தாலும், அரசாங்கத்தின் பழைய மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச செல்வாக்கு கொண்ட சித்தாந்தங்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் சந்தேகத்துடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. அத்துடன், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாகக் கூறும் அமெரிக்கா, இலங்கை முதலீட்டுச் சபை பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் என்ற போதிலும், அவர்களுடன் நிலையான மற்றும் வெளிப்படையான உரையாடலை பேணுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே,தேவையற்ற கட்டுப்பாடுகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளின் பலவீனமான பதிலளிப்பு போன்றவையும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு உள்ள ஏனைய பிரச்சினைகளாக அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இதேவேளை, இந்திய நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி (Adani Green Energy), இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து விலகியதை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குக் காரணம், முன்னர் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகளே என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் கையூட்டல் கோரிக்கைகள் குறைந்துள்ளதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பாக சில சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்பட்ட துறைகளில் நிறுவன ரீதியிலான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://www.samakalam.com/இலங்கை-மீது-அமெரிக்கா-கட-2/
  25. தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள் சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது. மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். மேலதிகமாக இன்னும்பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் மின்உற்பத்திக்கான மாற்றுவழி என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மக்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவதானது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. என்பதும் உண்மையானது. இவை ஒருபுறமிருக்கரூபவ் ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபதடிக்குமேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் வரக்கூடிய வாய்ப்பும் மழைநீர் மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிலத்தடிநீர் மாசுபடுவதென்பதும் கடல்நீர் உட்புகுவதும் வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல. அது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிலத்தடிநீரை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதற்கெதிராகத்தான் மன்னார் தீவுப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தேர்தலின் போது இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடரும்படி ஜனாதிபதி இப்பொழுது உத்தரவிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் அவை பாதித்துவிடக்கூடாது. இந்த விடயத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஏற்கனவே முப்பது காற்றாலைகளை நிறுவும்பொழுது மக்கள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனால் இன்று ஏற்படுத்தப்படும் இரைச்சலினால் நிகழும் ஒலி மாசுபாடானது மக்களுக்கு பெரும்பிரச்சினையாக இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே மேற்கொண்டு காற்றாலை மின்கோபுரங்களை அமைக்க வேண்டாம் என்பதுதான் மன்னார் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதனை அரசு கவனத்துடன் பரிசீலப்பதை விடுத்து இதற்கெதிராகப் போராடுபவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சிறையிலடைப்பதும் ஜனநாயக விரோதமானதும் சர்வாதிகார அணுகுமுறையுமாகும். அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம். அத்தகைய முடிவெடுப்பதானது மன்னார் மக்கள் அமைதியாகவும் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வாழவும் வழிவகுக்கும் எனக் கருதுகின்றோம் என தெரிவித்தார். https://www.samakalam.com/தமிழ்-மக்கள்-அபிவிருத்தி/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.