Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பாதுகாப்புத் தருவதாக நகைவியாபாரிகளிடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றிய பிரேமதாசவும், தற்காப்பில் இறங்கிய நகைக்கடை ஊழியர்களும் - தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்த இனக்கொலை ஜூலை 1983 அன்று பிற்பகலுக்குப் பின்னரே நிலைமை ஓரளவிற்குத் தணிந்தது. நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டபின் எரிக்கப்பட்டிருந்தன. பல லொறிகள் எரிந்து போயிருந்தன. வீதிகளெங்கும் சாம்பல்த் துகள்கள் பறந்துகொண்டிருக்க, ஆங்காங்கே தமிழரின் எரிந்துபோன வாகனங்களிலிருந்து புகை இன்னமும் வெளிவந்துகொண்டிருந்தது. அன்றுமட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆவது இருக்கலாம் என்று பொலீஸார் கணக்கிட்டனர். இவர்களுள் சிலர் கொள்ளையில் ஈடுபட்ட காடையர்கள், பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள். வன்முறைகள் பரவலாக நடந்திருந்தன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ்களின் ஒலி நள்ளிரவு வரை கொழும்பின் வீதிகளில் பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது. சிங்களவர்களால் புனையப்பட்ட "புலிகளின் கொழும்பு வருகை" பலரின் உயிரைக் குடித்திருக்க, அந்நாளில் தேசத்தின் விதியும் மாறிப்போனது. எட்வேர்ட் குணவர்த்தன கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுத விரும்பவில்லை. உயர் பொலீஸ் அதிகாரி என்கிற வகையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து எழுதுவதைத்தவிர அவருக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. நான் அன்று காஸல் வீதியில் அமைந்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன். மறுநாள் காலை தெகிவளையில் எரிக்கப்பட்ட எமது வீட்டினைச் சென்று பார்த்து வரலாம் என்று எனது மகன்கள் என்னிடம் கேட்டனர். அத்துடன், அயல்வீட்டில் நாம் விட்டிவிட்டு வந்த எமது நாயைப்பற்றியும் அவர்களுக்குக் கவலை இருந்தது. நான் அவர்களைப் போக அனுமதிக்கவில்லை. எனது முடிவு அவர்களுக்கு வருத்தத்தை அளித்ததை என்னால் உணர முடிந்தது. தமது நண்பர்கள் தமது எரிந்த வீடுகளைப் பார்க்கச் செல்கிறார்கள் என்று என்னிடம் அவர்கள் கூறினார்கள். நானோ நிலைமை சீராகும்வரை பொறுத்திருக்கலாம் என்று கூறிவிட்டேன். காலை 10 மணியிருக்கும். நாம் இருந்த பம்பலப்பிட்டி, காலி வீதிப்பகுதியிலிருந்து கடுமையான இரைச்சல் எமக்குக் கேட்டது. வீதியில் வாகன நெர்சில ஏற்பட்டிருந்ததுடன், தமது வாகனங்களில் இருந்து சாரதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார்கள். வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வாகன நெரிசல் காணப்பட்டது. அவை அனைத்துமே கொழும்பிலிருந்து வெளியேறச் செல்ல எத்தனிப்பது தெரிந்தது. பம்பலப்பிட்டியில் எம்முடன் தங்கியிருந்த எனது மருமகன் மிகுந்த பதற்றத்தோடு வீடு நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தார். "மாமா, உடனே வீட்டிற்கு ஓடுங்கள், அவர்கள் தமிழர்களைக் கொன்றுகொன்டிருக்கிறார்கள்" என்று என்னைப்பார்த்துக் கூறினார்.டிக்மன்ஸ் வீதிக்கு அருகில் தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களவர்கள் தாக்கிக்கொண்டிருப்பதைத் தான் கண்டதாகவும், பொலீஸ் பார்க் பகுதியில் தமிழர் ஒருவரின் உடல் வீதியில் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அன்றும் தமிழர்கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார்கள். எனது மகனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதை நாம் அன்று காலை அறிந்துகொண்டோம். புலிகளின் வெள்ளிக்கிழமை தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாளாகப் பதியப்பட்டு விட்டது. படுகொலைகள் மீளத் தொடங்கியது எப்படி? சிங்கள ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் சிங்கள மக்களின் தன்னெழுச்சியான கோபமே கொலைகளுக்குக் காரணம் என்று நிறுவுவதில் பிடிவாதமாக இருந்தது தெரிந்தது. சிங்கள கெளரவத்திற்கு தமிழரால் ஏற்படுத்தப்பட்ட இழுக்கிற்கான பதிலடியே இந்தப் படுகொலைகள் என்று அவர்கள் வாதிட்டனர். "இழிவான தமிழர்கள் எம்மைத் தாக்குவது எங்கணம்?" என்பதே அவர்களின் ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்ததாக சிங்கள கல்விமான்களும், ஆராய்ச்சியாளர்களும் நிறுவுகின்றனர். ஆனால், தமிழ் செய்தியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை புலிகளின் வருகை தொடர்பான படுகொலைகளை வேறு கோணத்தில் இருந்து பார்க்கின்றனர். பெருமளவு தமிழ் நகைக்கடைகள் அமைந்திருக்கும் செட்டியார்த் தெருமீதான திட்டமிட்ட தாக்குதல்களும் கொள்ளைகளும் பின்னர் நாடு முழுவதற்குமான தமிழர் மீதான வன்முறையாக மாறியது என்பதே அவர்களின் வாதம். அதிகாரத்தின் மமதை எனும் தனது புத்தகத்தில் ராஜன் ஹூல் , புலிகளின் வெள்ளிக்கிழமைத் தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில் தமிழரின் வர்த்தகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறுகிறார். அன்றாடப் பொருட்களின் மொத்த வியாபாரமும், நகை வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புறக்கோட்டைப் பகுதி மொத்த வியாபாரத்திற்கான முக்கிய இடமாக அமைந்திருக்க செட்டியார்த் தெரு நகை வியாபாரத்திற்கான முக்கிய இடமாக இருந்துவருகிறது. திங்கட்கிழமை புறக்கோட்டையில் தமிழர்களின் மொத்த வியாப நிலையங்கள் இலக்குவைக்கப்பட்டபோதிலும், செட்டியார்த்தெரு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கான காரணத்தையும் ராஜன் ஹூல் விளக்குகிறார். "ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து, செட்டியார்த் தெருவில் இயங்கிவந்த பிரபலமான நகை வியாபாரங்களான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார், உதயா, அம்பிகா, லலிதா, நித்திய கல்யாணி உட்பட பல நகை வியாபாரங்கள் கொழும்பில் மிகுந்த செல்வாக்குள்ள முக்கிய புள்ளி ஒருவருக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து தமது வியாபாரங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டியிருந்தனர். முக்கியமான நகை வியாபாரிகள் பிரதமர் பிரேமதாசாவுக்கு நெருக்கமாகக் காணப்பட்டதுடன், உதயா நகை மாளிகை பிரேமதாசாவின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியாகப் பண உதவி செய்துவந்ததுடன் அவரின் அரசியல்ப் பிரச்சாரத்திற்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வந்திருந்தது. வன்முறைகள் ஆரம்பிக்க சில மணித்துளிகளுக்கு முன்னர், பிரேமதாசாவின் வலதுகரமாக இயங்கிய நெல்சன் எனும் நபர் செட்டியார்த்தெருவில் இருக்கும் நகைக்கடைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி கடற்படையும் பொலீஸாரும் இணைந்த காவல் அணிகள் செட்டியார்த்தெருவின் இரு அந்தங்களான பிரதான வீதி மற்றும் துறைமுக வீதி ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்தன. ஜூலை 25 முதல் 28 வரையான காலப்பகுதியில் நாட்டிலிருந்த தமிழர்களின் பொறுளாதார வளங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்க, இந்த வீதியில் இருந்த சில வியாபாரங்கள் மட்டும் தப்பவைக்கப்பட்டன". ஆனால், அரசியல்வாதிகளை முழுதுமாக நம்பமுடியாது என்று எண்ணிய நகைவியாபாரிகள், தம்பங்கிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். . தமது வியாபார நிலையங்களில் பணிபுரிந்து வந்த இளைஞர்களை தமது வியாபார நிலையங்களைப் பாதுகாக்கும் கடமையில் அமர்த்தினர். தற்காப்பிற்கென்று அமிலங்கள் நிரப்பட்ட கண்ணாடி பள்ப்புக்கள் மற்றும் தமது நகைத்தொழிலில் பயன்படுத்தும் ஏனைய இரசாயணங்களைக் கொண்டு ஆயுதங்களை அவர்கள் தயாரித்து வைத்துக்கொண்டனர். வெள்ளி காலை 10 மணியளவில் செட்டியார்த்தெருவிற்குப் பாதுகாப்பாளித்துக்கொண்டிருந்த கடற்படையினரும் பொலீஸாரும் திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டனர். உடனடியாக பிரதான வீதி ஊடாகவும், துறைமுக வீதியூடாகவும் சிங்களக் காடையர்கள் செட்டியார்த்தெருவில்க் கூட ஆரம்பித்தனர். பிரேமதாசாவைத் தொடர்புகொள்ள நகைவியாபாரிகள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. வேறு வழியின்றி, தம்மைத்தாமே காத்துக்கொள்ள தீர்மானித்தனர் செட்டியார்த்தெருவின் வியாபாரிகள். பிரதான வீதியில் அமைந்திருந்த தமது கடைகளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்த சிங்களவர்கள் மீது கடைகளின் கூரைகளின் மீது நிலையெடுத்திருந்த தமிழ் இளைஞர்கள் அசிட் போத்தல்களை விட்டெறிந்து தாக்கத் தொடங்கினர். தமிழர்கள் திருப்பித்தாக்குவார்கள் என்பதை எதிர்ப்பார்த்திருக்காத சிங்களவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு இது பழக்கமானதல்ல. கடந்த சில நாட்களாக தமிழர்கள் எவருமே தம்மைத் திருப்பித் தாக்கவில்லை எனும் உணர்வே அவர்களை தைரியமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த உந்தியிருந்தது. "புலிகளைத் தவிர தமிழர்கள் எவரும் எம்மை எதிர்க்கமுடியுமா?" என்பதே அவர்களுக்கிருந்த ஒரே கேள்வி. ஆகவே, இங்கிருந்துதான் புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி உருவெடுத்தது. உடனடியாக பொலீஸார் இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன், நகைக்கடைகளின் கூரைகள் மீது தற்காப்பிற்காகக் காத்து நின்ற நகைக்கடை ஊழியர்கள் மீது உலங்குவானூர்திகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. நகைக்கடைகளைப் பாதுகாக்க கூரை மீது காவலிருந்த பன்னிரண்டு அப்பாவித் தமிழ்த் தொழிலாளிகள் விமானப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் செட்டியார்த்தெருவில் இராணுவ அணியொன்று பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டது. இந்திய தலையீட்டின் மூலம் தமிழருக்குக் கிடைத்த முதலாவது உதவியென்று இதனைக் குறிப்பிட முடியும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கொழும்பிற்கு வந்த புலிகளும், பொலீஸ் நிலையங்களுக்குள் பதுங்கியிருந்த பொலீஸாரும் வெள்ளியன்று ராவ் உலங்குவானூர்தியொன்றில் கண்டிக்குச் சென்றார். இந்திய தூதரகத்திலிருந்து விமானப்படை முகாமிற்கு அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் அச்சத்துடன் நடமாடிய மக்களை அவர் கண்டார். உலங்குவானூர்தியிலிருந்து கொழும்புப் பகுதியில் தமிழர்கள் வீதிகளில் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் அவரால் பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை கொழும்பில் புலிகள் தாக்கப்போவதாக வந்த வதந்திகளையடுத்து காலை 9 மணியிலிருந்து மக்கள் அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிகள் வாகன நெரிசலால் ஸ்த்தம்பித்துப் போயிருக்க, வாகனச் சாரதிகள் தமது வாகனங்களின் ஹோர்ன்களை அழுத்திக்கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் அச்சமும், பதற்றமும் குடிகொண்டிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்பதே அனைவரினதும் பேச்சாகவிருந்தது. கலவரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அமைதியாகக் கிடந்த பொலீஸாரின் வானொலி வலையமைப்பு மறுபடியும் சுறுறுப்பாக இயங்கத் தொடங்கியது. "புறக்கோட்டையிலிருந்து பொலீஸ் ரோந்து அணி கட்டுப்பாட்டு நிலையத்தினை அழைக்கிறது" "கூறுங்கள் புறக்கோட்டை ரோந்து அணி" என்று கட்டுப்பாட்டு நிலையம் (Police radio network) பதிலளித்தது. "புறக்கோட்டைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. புலிகள் எல்லாப் பகுதிகளிலும் பதுங்கியிருந்து சிங்களவரைத் தாக்க ஆயத்தமாகி வருவதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. எம்மிடம் பேசிய பொதுமகன் ஒருவர் நீல நிறத்தில் சீருடை அணிந்த பல புலிகள் வீரா விடுதியில் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறினார். நாங்கள் அவ்விடம் நோக்கிச் செல்கிறோம்" என்று பொலீஸ் ரோந்து அணி கூறியது. அந்த நாள் நிலவிய குழப்பத்தினையும் பதற்றத்தினையும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "சிறிது சிறிதாக வதந்தி எல்லாவிடங்களிலும் பரவத் தொடங்கியது. மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடத் தொடங்கினர். "புலிகள் ,கொழும்பிற்கு வந்துவிட்டார்கள், அவர்கள்இராணுவத்தினரைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருந்து தப்பியோடுவோம்" என்று பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக தமது கடைகளை இழுத்துச் சாத்திக்கொண்டிருந்தார்கள். பஸ்கள் , லொறிகள், கார்கள் என்று அனைத்து வாகனங்களும் புறக்கோட்டைப் பகுதியிலிருந்து முண்டியடித்து வெளியேறிக்கொண்டிருந்தன. நகரப்பகுதிக்கு வந்த இராணுவக் கவச வாகனங்கள் ஆங்காங்கே நிலையெடுத்து நிற்கத் தொடங்கின. தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் என்று தாம் கருதிய இடங்கள் மீது இராணுவத்தினர் தாம் கொண்டுவந்த ரவைகள் தீரும்வரை சுட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கடைகள் எல்லாமே புலிகளின் மறைவிடங்களாக ராணுவத்தால் கருதப்பட்டு அவற்றின்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரப்பகுதியில் கேட்ட தானியங்கித் துப்பாக்கிகளின் ஒலி அப்பகுதியெங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்குவானூர்திகள் தமிழர்களின் வியாபார நிலையங்கள் மீது தொடர்ச்சியான துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் குண்டுவீச்சிலும் ஈடுபட்டன. ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த கட்டடங்களுக்கு அண்மையாக தாழ்வாகப் பறந்து அவை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த குழப்பத்தினையும் அச்சத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. ராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றமான சூழ்நிலை சிங்களக் காடையர்கள் மீள் ஒருங்கிணையவும், வன்முறைகளில் ஈடுபடவும் உகந்த சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. செட்டியார்த்தெருவிலிருந்த தமிழரின் வியாபார நிலையங்கள் நோக்கி வந்த காடையர் குழுவை இராணுவம் அப்பகுதியிலிருந்து விரட்டியது. டாம் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல லொறிகளை அக்கும்பல் எரியூட்டியது. அப்பகுதியில் தமிழ் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை புரட்டிப் போட்ட அக்கும்பல் அவற்றிற்கு தீவைத்தது. தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த "சிட்டி மிஷன்" எனும் தங்கும் விடுதியும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. அவ்விடுதியின் அருகில் சணல் நூற்ச் சாக்குகள் மற்றும் உரப்பைகளை சேமித்து வைக்கும் பாரிய சேமிப்பு நிலையத்திற்கு தீ பரவவே அது சுவாலை விட்டு எரியத் தொடங்கியது. அக்கட்டடத்திலிருந்து எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர்கள் தூரத்திற்குத் தெரிந்தது. பீடிகளை மொத்த வியாபாரமாகச் செய்துவந்த தமிழரான சங்கரசிவம் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது காரினுள் வைத்தே எரிக்கப்பட்டார். அவரது சிங்கள வாகனச் சாரதியை அக்காடையர் குழு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. அப்பகுதியில் வியாபாரங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் பொலீஸாரின் ட்ரக் வண்டிகளிலும், பஸ்வண்டிகளிலும் ஏற்றப்பட்டு அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். புறக்கோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த கிராண்ட்பாஸ் பகுதியில் தமிழர்களை சிங்களவர்கள் வாட்களால் வெட்டிக் கொல்லத் தொடங்கியிருந்தார்கள். அப்பகுதியில் இயங்கிவந்த பிரபல பலசரக்குக் கடையின் உரிமையாளரான திருப்பதி முதலாளி சிங்களவர்களால் கூட்டாக வாட்களாலும் கோடரிகளாலும் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் மோதிரங்களைத் திருடுவதற்காக அவரது விரல்களை அக்கும்பல் வெட்டி எடுத்திருந்தது. பேலியகொடைப் பகுதியில் அமைந்திருந்த பாற்பண்ணைப் பொருட்களை விற்கும் தமிழரின் உணவு விடுதியான அம்பாள் விடுதி முற்றாக எரிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பிற்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த பால்மாடுகள் இழுத்துச் செல்லப்பட்டு இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. அப்பகுதியில் இயங்கிவந்த தமிழருக்குச் சொந்தமான சினிமாத் திரையரங்குகளை அப்பகுதி வாழ் சிங்களவர்களுடன் காடையர்கள் சேர்ந்து எரித்தனர். காலை 11 மணியளவில் கொழும்பு நகர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பாரிய குழப்பம் நிலவியது. புலிகள் பெரும் எண்ணிக்கையில் நகரினுள் ஊடுருவி விட்டதாக எண்ணிய பொலீஸார் தமது வீதிக் கடமைகளைக் கைவிட்டு விட்டு நேரே தமது பொலீஸ் நிலையங்களுக்கு ஓடிவிட்டனர். நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த வாகனங்களையும், பாதசாரிகளையும் வீதி ஒழுங்குகளுக்கு அமைய வழிநடத்த பொலீஸார் இன்றி எங்கும் பாரிய சனநெரிசலும், வாகன நெரிசலும் காணப்பட்டது. வீதிகள் எங்கும் சனநெரிசலாகக் காணப்பட்டதுடன், பதற்றமும் தெரிந்தது. பெண்களும், சிறுவர் சிறுமியரும் கைகளில் தலையணைகளையும்,பைகளையும், சூட்கேஸுகளையும் எடுத்துக்கொண்டு வீதிகள் வழியே ஓடிக்கொண்டிருந்தனர். உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்த அப்பாவிகளுடன் சேர்ந்து திருடர்களும் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், டெக்குகள், வானொலிப் பெட்டிகள் போன்றவற்றைக் காவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இக்குழப்பமான சூழ்நிலையும் சனநெரிசலும் தங்குதடையற்ற சூறையாடல்களையும், உடமை எரிப்புக்களையும் ஊக்குவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, பொலீஸ் தலைமையகத்திலிருந்து அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியான, "உங்களின் பொலீஸ் நிலையங்களைப் பாதுகாக்க எதிர்த்துச் சண்டையிடுங்கள்" என்கிற செய்தியும் பொலீஸாரிடையே குழப்பத்தையும், பீதியினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொலீஸ் நிலையங்கள் புலிகளால் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்படும் நிலை காணப்படுகிறது" என்கிற பொலீஸ் செய்தியை பதற்றமடைந்திருந்த பொலீஸ் அதிகாரியொருவர் பொலீஸாரின் பிரதான செய்தி வலையமைப்பில் பரவ விடவே பொலீஸாரிடயே கடுமையான அச்சம் நிலவத் தொடங்கியது. வீதிகளில் துணிவுடன் கடமையிலிருந்த ஒரு சில பொலீஸ்காரர்களும் இச்செய்தியைக் கேள்விப்பட்டபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு தமது நிலையங்களுக்குத் திரும்பியிருந்தனர். வீதி ரோந்து அணிகளும் பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிக்கொண்டன. கொள்ளுப்பிட்டி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் நிலையத்தின் முன்னால் இருந்த அலங்காரக் கற்களினால் கட்டப்பட்ட சுவரில் தனது .303 துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து ஓட்டைகளை உருவாக்கினார். அவற்றினூடாக முன்னேறி வரும் புலிகள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குவதே அவரது திட்டம். கொழும்பிலிருந்த அனைத்துப் பொலீஸ் நிலையங்களும் தமது பிரதான நுழைவாயிலை அடைத்தன. மேலும், பொலீஸ் நிலையங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பொலீஸார் நிலையெடுத்துக் காத்திருந்தனர். தெகிவளைப் பொலீஸ் நிலையம் ஹில் வீதியின் இரு எல்லைகளையும் முற்றாகவே அடைத்துவிட்டிருந்தது. தெகிவளை சுற்றுவட்டத்திலிருந்து ஹில் வீதிக்கான நுழைவுவழி இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பொலீஸார் வீதியில் படுத்திருந்து முன்னேறி வரும் புலிகளுக்காகக் காத்திருந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சில பொலீஸ் அதிகாரிகளே துணிவாக வீதிகளில் வலம் வந்தனர். அல்பா 2 மற்றும் கொழும்பு வடக்குப் பிரிவு 2 ஆகிய அணிகளின் பொலீஸ் அதிகாரிகள் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்ததுடன் பொலீஸ் ரேடியோச் செய்தி வலையமைப்பில் உச்சஸ்த்தானியில் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். "அல்பா 2 பேசுகிறேன், அல்பா 2 பேசுகிறேன். நான் காஸ்வேர்க்ஸ் வீதியின் சுற்றுவட்டத்தினருகில் நிற்கிறேன். பயப்பட வேண்டும், வீதிக்கு வாருங்கள். நான் வெளியிலேயே நிற்கிறேன். இங்கே புலிகள் எவரும் இல்லை. துப்பாக்கிச் சண்டைகள் ஏதும் நடைபெறவில்லை". "கோழைகளே, பதுங்கியிருந்தது போதும், வெளியே வாருங்கள்" என்று ஆத்திரத்துடம் ரேடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் கட்டளையைக் கேட்டு சில பொலீஸார் வீதிகளில் எட்டிப் பார்க்கத் தொடங்கினர். சுற்றுப்புறங்களில் இருந்து கொழும்பு கோட்டைப் பகுதி மற்றும் பெட்டா நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களில் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகளும் சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் பயணம் செய்துவந்த வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டன. ஆனால், வன்முறைகளில் ஈடுபட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை முன்னைய இரு நாட்களுடன் ஒப்பிடும்பொழுது சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற சில நிகழ்வுகளையடுத்து பெரும்பாலான வன்முறைக் கும்பல்கள் அடங்கிப்போயிருந்தன. சிங்களத்தைச் சரளமாகப் பேச முடியாத முஸ்லீம்களும், சில சிங்களவர்களும் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டனர். புலிகள் கொழும்பிற்கு வந்திறங்கிவிட்டார்கள் என்கிற செய்தியின் தாக்கம் எப்படியிருந்ததென்றால், கொழும்பின் புறநகர்ப்பகுதிகளிலும் சிங்களவர்கள் வாட்கள், கோடரிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீடுகளின் முன்னால் புலிகளை எதிர்பார்த்துக் காவலிருக்கத் தொடங்கியிருந்தார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நாட்டு மக்களுக்கான தனது உரையில் தமிழர்களை அந்நியர்களாக விளித்த ஜெயவர்த்தன வியாழன் இரவு ஜெயவர்த்தன நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் உரையாற்றினார். அவரது பேச்சினை தொலைக்காட்சியில் நான் பார்த்தேன். மிகவும் நிதானமாகப் பேசினார். இனவாதம் கக்கும் பிக்குவான எல்லே குணவன்ச தேரவின் ஆலோசனைப்படி மிகவும் அவதானமாகப் பேசினார். 4 நிமிடங்களும் 50 செக்கன்களும் நீடித்த அவரது உரையின் சாராம்சம் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்ப்டுத்தியும், சிங்கள மக்களை சமாதானப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. தனது பேச்சின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதலுக்கான அடிப்படைக்காரணம் 13 இராணுவ வீரர்கள் புலிகளின் பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டமைதான் என்று கூறினார். "பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு சிங்கள மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்..." என்று வெகு சாதாரணமாக அவரால் கூற முடிந்தது. பின்னர் சிங்கள மக்களுக்கு அவர் வழங்கிய செய்தியில் அவர்களின் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்ற தான் உடனே ஆவண செய்வேன் என்று கூறினார். "சிங்கள மக்களின் தேசிய ரீதியிலான அழுகுரல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும் வேளை இப்போது வந்திருக்கிறது.." என்று அவர் கூறினார். பின்னர், தான் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். முதலாவதாக அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவருவதன் மூலம் பிரிவினைவாதம் பேசுவதைத் தடைசெய்யப்போவதாகக் கூறினார். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள் சட்டமாக்கப்பட்டதும், பிரிவினைவாதம் பேசுவோர் தண்டிக்கப்படுவர் என்று அவர் கூறினார். அவர்கள் பொது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதையோ இச்சட்டம் தடுக்கும் என்று கூறியதுடன் அவர்களது சோத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார். "எந்தவொரு நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்தோ இலங்கையினுள் தனியான நாடொன்றினை உருவாக்க உதவுவதை, உந்துவதை, அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதை, பண உதவிசெய்வதை முற்றாகத் தடைசெய்வேன்" என்று அவர் கூறினார். தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் சிங்கள மக்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்களின் பாதுகாப்பினையும் நலன்களையும் உறுதிசெய்ய தனது அரசாங்கம் சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தார். ஆனால், திட்டமட்ட ரீதியில் கொல்லப்பட்டும், சொத்துக்களை இழந்தும் நிர்க்கதியாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு சொல்லைத் தன்னும் அவர் உதிர்க்க விரும்பவில்லை. தமிழர்களை அச்சுருத்தும் தொனியிலும், அவர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்ப்டுத்தும் விதத்திலும்,சிங்களவர்களுக்கான நலன்களை உறுதிப்படுத்தும் முடிவிலும், தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களைப்பற்றி ஒரு வார்த்தைதன்னும் இரங்காது அவர் பேசியதை எனது வீட்டிலிருந்த 22 தமிழர்களும் முழுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். எரிந்துகொண்டிருந்த தனது வீட்டிலிருந்து சிங்களவர்களால் அடித்து விரட்டப்பட்டு எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த நண்பர் ஒருவர் ஜெயாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ,"ஜெயார் இப்போது சிங்களவர்களின் ஜனாதிபதியாக மாறிவிட்டான்" என்று மிகுந்த சினத்துடன் கூறினார். ஜெயாரின் நாட்டுமக்களுக்கான உரை தமிழர்களை வெறுப்படையவும் அதேவேளை ஆத்திரப்படவும் வைத்தது. சிங்களவர்களின் கைகளில் அவர்கள் பட்ட துன்பத்தினை விடவும் ஜெயாரின் பேச்சு அவர்களை விசனப்பட வைத்தது. தமிழர்களைப் பார்த்து நீங்கள் இலங்கையின் மக்கள் அல்ல என்பதை இவ்வுரையின் ஊடாக ஜெயார் தெளிவுபடுத்தியிருந்தார். தமிழ் இளைஞர்கள் தாம் மிகவும் கேவலமான முறையில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். இயல்பாகவே அவர்களுக்குள் ஆத்திரம் பற்றிக்கொண்டது. ஆகவே, இதற்காக நிச்சயம் பழிவாங்கியே தீர்வேண்டும் என்று அவர்கள் எண்ணத் தொடங்கினார்கள். மன்னாரைச் சேர்ந்த இளைஞன் இவ்வாறு கூறினார், "ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு ஒரு பாடத்தினைப் படிப்பிக்க முயல்கிறார் போலத் தெரிகிறது, நாம் அவருக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவோம்". பின்னாட்களில், அவர் தமிழ்ப் போராளி அமைப்பொன்றில் தன்னையும் இணைத்துக்கொண்டு இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்காகச் சென்றதாக நான் கேள்விப்பட்டேன். தெற்கில் வாழ்ந்துவந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் இவ்வாறே உணர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டார்கள். அக்காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே நிலவிய மநோநிலையினை நான் பிறிதொரு அத்தியாயத்தில் பதிவிடுகிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயவர்த்தனவுக்கு இந்திரா காந்தியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு 1983 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இலங்கையில் தமிழர்கள் மீது அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதாக செய்தி பரவியதும் தமிழகம் கொதிப்படைந்தது. சென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தெருக்களில் இறங்கி ஜெயவர்த்தன அரசைக் கண்டித்தும், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி ஆகியோர் கொழும்பு அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ராமச்சந்திரனின் அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது மில்லியன் தமிழ் இதயங்கள் இரத்தம் சிந்துகின்றன என்று கூறியிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதியின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளும் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஆத்திரத்துடன் எதிர்கொண்டன. தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் ராஜ் நரேன் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார். கலவரம் குறித்து ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வேதனை தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புது தில்லியைக் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ராமச்சந்திரனும், கருணாநிதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை அவையில் எழுப்புமாறு தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர். பிற்பகலில் அவை கூடியதும் உறுப்பினர்கள் இதையே முதல் விஷயமாக செய்தனர். லோக்சபாவில், உறுப்பினர்கள் ஜெயவர்த்தனே அரசாங்கம் செயலற்றதாகவும், கலவரக்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். கடும் நடவடிக்கை எடுத்து கொலைகளை தடுக்க வேண்டும் என இந்திரா காந்தியிடம் எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டிக்குமாறு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி புதுடெல்லியை கேட்டுக் கொண்டார். கொழும்பில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களின்போது இந்திய தொழில்கள் மற்றும் இந்திய வங்கிகள் எரிக்கப்பட்டதாக அவர் கூறினார். இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என திமுக எம்பி வி கோபாலசாமி (வைகோ) கேட்டுக் கொண்டார். இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று அவர் முன்மொழிந்தார், மேலும் இலங்கையின் உயர்ஸ்த்தானிகரை "இரத்த வெறி பிடித்த அரசாங்கத்தின் முகவர்" என்று அழைத்த அவர், அவரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். எம் கல்யாணசுந்தரம் பேசும்போது, “தமிழர்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதல்” என்றார். இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்குச் செல்வதற்கான வசதிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் - நரசிம்ம ராவ் ராஜ்யசபாவில், இலங்கையின் நிலைமையை அரசாங்கம் ஒரு கட்சி விஷயமாக கருதவில்லை என்று ராவ் கூறினார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது, இத்தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாக அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு நெருங்கிய அண்டை நாடான நமது சொந்த நாட்டிற்கு விரும்பத்தாகாத விளைவுகளை இத்தாக்குதல்கள் ஏற்படுத்தக் கூடும் என்பதனால், நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது" என்றும் கூறினார். இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிவி நரசிம்மராவ் பேசினார். லோக்சபாவில், இந்திய தூதரகத்தைச் சேர்ந்த சிலரும் தாக்கப்பட்டதாகக் கூறினார். "அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அவர் கூறினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சரிபார்க்க முயற்சிப்பதாக அவர் கூறினார். இந்திராவால் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அமைச்சரவைச் செயலாளர் அலெக்ஸான்டர், அங்கிருந்து பாராளுமன்றத்தில் நடப்பவற்றை அவர் தொடர்ச்சியாக இந்திராவுக்குத் தெரிவித்து வந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளை அடக்கும் வகையில் செயற்பட இந்திரா எண்ணினார். ஆகவே, தில்லியில் அப்பொழுது தங்கியிருந்த இலங்கைத் தூதர் சத்வாலை உடனடியாகக் கொழும்பு திரும்பப் பணித்தார். சென்னைக்கு தான் செய்யவிருந்த பயணத்தை இரத்துச் செய்த இந்திரா, உயர் மட்ட் அமைச்சரவை உபகுழு, அரசியல் நடவடிக்கைகள் குழு ஆகியவற்றை அன்று மாலை கூட்டி இலங்கையில் உருவாகியிருக்கும் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பின்னர், இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவன்முறைகளைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டார் இந்திரா. மிக அண்மையில் அமைந்திருக்கும் நாடான இலங்கையில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கவலைப்படாது இருக்கமுடியாது என்று அவர் கூறியிருந்தார். அரசியல் விவகாரக் குழு மாலையில் கூடி இரண்டு தெரிவுகளை பரிசீலித்தது. முதலாவது ஒரு அரசியல் தெரிவு - நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஜயவர்தனவிற்கு அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது இராணுவ நடவடிக்கை. இந்திரா முதலாவது தெரிவையே விரும்பினார். அதன்படி, முதலாவதாக இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் பேசுவது என்றும் , நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவதாக, ராவின் வருகைக்கு ஜெயவர்த்தனே சம்மதிக்க மறுத்தால், இராணுவ நடவடிக்கையினை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. உடனடியாக இலங்கை மீது படையெடுப்பதற்கான அவசரத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இந்திராவால் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறப்பட்டது. அந்த பணி செகுந்தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளைக்குப் படைப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. தில்லியில் தங்கியிருந்த அனைத்து மூத்த அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் உசார்ப்படுத்தப்பட்டதுடன், பராட்ரூப்பர்களை இறக்கி விமான நிலையங்களை கைப்பற்றி, செயலிழக்கப் பண்ணுவதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. இதன்மூலம் ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவரலாம் என்று இந்திரா நம்பினார். இந்திரா காந்தி மாலை 4 மணியளவில் ஜெயவர்த்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். புதன்கிழமை (ஜூலை 27). அந்த தொலைபேசி உரையாடலின் விபரங்கள் மறுநாள் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டது. உரையாடலின் உள்ளடக்கம் பின்வருமாறு: இந்திரா காந்தி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருவதாக எனக்கு இங்கு வந்துள்ள செய்திகள் குறித்து நான் வருந்துகிறேன், கவலையடைகிறேன். இப்போது நடைபெற்று வரும் மக்களவையில் இதுகுறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன . ஜயவர்தன: நானும் அதே அக்கறையுடன் இருக்கிறேன். கலவரத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். இந்திரா காந்தி: அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் நான் உதவ விரும்புகிறேன். ஜெயவர்தன: இந்த வகையான சலுகைக்கு மிக்க நன்றி. தேவைப்பட்டால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இந்திரா காந்தி: எனது வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ நரசிம்மராவ் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால், நீங்கள் அவருடன் கலந்துரையாட முடியுமா? ஜயவர்தன: உங்கள் வெளிவிவகார அமைச்சரை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதி ஜயவர்தன உடனடியாக சில அமைச்சர்களை, ஹமீட், அதுலத் முதலி, திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் இன்னும் சிலரை – அழைத்து இந்திராவுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து அவர்களுக்கு அறிவித்தார். அதுலத்முதலியும் திஸாநாயக்கவும் ராவை உபசரிப்பதை எதிர்த்தனர். இது எதிர்காலத்தில் இந்தியா தலையிட இடமளிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஹமீட் அவர்களை எச்சரித்தார். ராவை ஜெயார் வரவேற்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அந்த நிலைப்பாட்டிற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறினார். முதலாவதாக, ராவை வரவேற்க ஜெயார் ஒத்துக்கொண்டார். இரண்டாவது, அப்படி ராவை ஜெயார் வரவேற்க மறுக்கும் பட்சத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டினை எடுக்கும் என்று ஹமீட் எச்சரித்தார். அன்று மாலை கூடுதல் செயலாளர் சங்கர் பாஜ்பாயுடன் விமானப்படை விமானத்தில் ராவ் கொழும்பு சென்றார். ஹமீட் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். அன்று மாலையே லோக்சபாவில் ராவின் கொழும்புக்கான பணியை இந்திரா காந்தி அறிவித்தார். ராவின் இலங்கை வருகையை அகில இந்திய வானொலி புதன்கிழமை இரவு செய்தித் தொகுப்பில் அறிவித்தது. இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த ராவ் மற்றும் பாஜ்பாய், ஜெயவர்த்தனவை வார்ட் பிளேஸில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் காலை உணவின் போது சந்தித்தனர். 1983 ஜூலை 31 வார இறுதியில் சிங்க ரத்ணதுங்க தனது கட்டுரையில் விவாதங்கள் பற்றிய சில தகவல்களைத் தந்தார். ரத்ணதுங்க ஜெயவர்த்தனாவுடன் நெருக்கமாக இருந்ததால் இலங்கை அதிபருக்கு ஆதரவாக தகவல்களைச் சேகரித்திருந்தார். ஆனால், அவரது தகவல்கள் சரியானவைதான் என்று என்னுடன் அந்நாட்களில் தொடர்பில் இருந்த தூதர் சத்வால் உறுதிப்படுத்தினார். ஹமீதும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக அவர் கூறினார். ஜெயவர்த்தனா, ராவை அரவணைப்புடன் வரவேற்று, இந்தியா மற்றும் அதன் தலைவர்கள் மீதான அவரது அபிமானத்தையும் நெருக்கத்தையும் பற்றி அவரிடம் கூறி உரையாடலைத் தொடங்கினார். "இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் போற்றிய பல இலங்கையர்களில் நானும் ஒருவன்" என்று ஜெயவர்த்தனே கூறியதுடன், இந்தியர்களை விட தமிழ் மக்களின் உணர்வுகளை அவர் புரிந்துகொண்டதாக ராவிடம் பதிய முயன்றார். மேலும்,கலவரம் ஆரம்பித்ததற்கான காரணம் என்று அரசால் கூறப்பட்டதை ராவிடம் விளக்கிய ஜெயார், அதற்கான முழுக் காரணத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும், புலிகள் மீதும் சுமத்தினார். மேலும், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தேவையற்ற விதத்தில் தலையிடுவதாக இலங்கை உணர்வதாகவும் ராவிடம் ஜெயார் தெரிவித்தார். ராவ் ஜெயவர்த்தனாவை குறுக்கிட்டு, "இல்லை, இல்லை- அப்படி எதுவும் இல்லை" என்று மறுத்தார். இந்த கலவரம், அனைத்து இந்தியர்களினதும், குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டதாக ஜெயவர்த்தனாவிடம் ராவ் மிக உறுதியாக கூறினார். இலங்கையில் ஸ்திரமற்ற நிலை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார். இலங்கையில் உள்ள இந்தியர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீதான இந்தியாவின் உண்மையான கரிசணையினையும் அவர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், இந்தியர்களுக்குச் சொந்தமான 17 தொழிற்சாலைகளும் எரிக்கப்பட்டதாக ராவ் மேலும் ஜெயாரிடம் முறையிட்டார். ஜெயவர்த்தனே சாமர்த்தியமாக புது டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே விரிசல் ஒன்றினை ஏற்படுத்த முனைந்தார். இந்திரா காந்தி தமிழகத்தை அமைதிப்படுத்தவே முயல்கிறாரே அன்றி, இலங்கைத் தமிழர் குறித்து புதுதில்லி உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை என்று ஜெயார் ராவிடம் கூறினார். ஆனால், ஜெயாரின் தந்திரத்தைப் புரிந்துகொள்ளாத வாஜ்பாய், அப்பாவியாக ஜெயாரிடம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையான இலங்கைக்கு எப்படி உதவலாம் என்று கேட்டபோது, அதற்கு உடனடியாகவே பதிலளித்த ஜெயார், "அவர்கள் அங்கே தடுத்து வைத்திருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்களை இங்கே அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு உதவலாம்" என்று நறுக்கென்று பதிலளித்தார். பின்னர் சிறு இடைவெளிவிட்டு, "நாங்கள் அவர்களை எமது நீதிமன்றங்களில் விசாரிக்கிறோம்" என்று கூறினார். “திருமதி காந்திக்கு ஒரு சிறப்புச் செய்தியாக நான் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியுடன் கூட்டத்தை நிறைவு செய்ய விரும்பினார் ராவ். சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பேசிய ஜெயார், "அப்படியானால்....." என்று கூறத் தொடங்குமுன்னமே, "சொல்லுங்கள்" என்று ராவ் அவசரப்பட்டார். "எனது நட்பினை அவ்ரிடம் தெரிவித்து விடுவீர்களா?" என்று பவ்வியமாகக் கேட்டர் ஜெயார். அதிலிருந்த சூட்சுமத்தை உணர்ந்துகொண்ட ராவ், அதை அப்படியே இந்திராவிடம் தெரிவித்தார். பிரதமர் பிரேமதாசவும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விஷமச் செய்தியொன்றை வழங்கினார். பிரேமதாசாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு ராவ் கேட்டிருந்தார். . அவர் ராவை 20 நிமிடங்கள் அதிதிகள் அறையில் காத்திருக்க வைத்தார். பின்னர் அவர் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிட முயற்சிப்பதற்காக, கிட்டத்தட்ட திட்டும் வகையில் பேசினார். "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்வினையை சமாளிப்பது இந்திரா காந்தியின் வேலை" என்று அவர் ராவிடம் கூறினார். "அது அவருடைய பிரச்சினை, எங்களுடையது அல்ல" என்று பிரேமதாச ராவிடம் கூறினார். கலவரத்தை இலங்கையின் உள்விவகாரமாக இந்தியா பார்க்கவில்லை என்றும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக பார்க்கிறது என்றும் இந்திய அமைச்சர் பிரேமதாசாவிடம் உறுதியாக கூறினார். அன்றைய பிரேமதாசாவின் நடத்தை அவர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஜே.என்.தீட்சித் தனது அசைன்மென்ட் கொழும்பு என்ற புத்தகத்தில் பின்னாட்களில் எழுதியிருந்தார். அகதிகள் முகாம்களுக்குச் செல்லுமாறு ராவ் விடுத்த கோரிக்கை வெளியுறவு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து ஜெயவர்தனவிடம் ஆலோசனை நடத்தியதாக ஹமீட் என்னிடம் கூறினார். ராவை அகதிகள் முகாமுக்குச் செல்ல அனுமதிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என்று கூறி அதை நிராகரிக்குமாறு ஜெயார் ஹமீதிடம் கூறியிருந்தார். ஹமீட் கண்ணியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அகதிகள் முகாம்களை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அகதிகள் பதற்றத்தில் இருப்பதாகவும் கோரிக்கை விடுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் அவர் தெரிவித்தார். "சில நாட்களில் விஷயங்கள் தணிந்துவிடும்," என்று அவர் தனது இந்தியப் பிரதிநிதியிடம் கூறினார். மலையகத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டது. கண்டிக்குச் சென்று அங்குள்ள பிரதி இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்க மட்டுமே அவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தனது தொழிற்சங்கமான "லங்கா ஜாதிக எஸ்டேட் தொழிலாளர்கள்" செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்நாள் மகாவலி அபிவிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்க கூறியதைப் படியுங்கள், "உங்களைக் கொன்றது யார்? சிங்களவர்கள், உங்களைக் காப்பாற்றியது யார்? சிங்களவர்கள் உங்களைத் தாக்கியவர்களே உங்களைக் காத்தார்கள் அவர்கள் இந்தியாவிலிருந்து ஒரு ராணுவத்தைக் கொண்டுவரப்போகிறார்களாம், இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கு 14 மணித்தியாலங்கள் எடுக்கும் ஆனால், 14 நிமிடங்களில் இந்த நாட்டில் உள்ளை அனைத்துத் தமிழர்களின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்கு நாம் காணிக்கையாக்குவோம் ஒருவர் இந்தியத் தமிழரா, யாழ்ப்பாணத் தமிழரா, மட்டக்களப்புத் தமிழரா, மலையகத் தமிழரா அல்லது இந்துத் தமிழரா, கத்தோலிக்கத் தமிழரா என்று அவர்கள் நெற்றியில் எழுதப்படவில்லை, அவர்கள் எல்லோரும் தமிழர்களே" - இவன் கொல்லப்பட்டதற்காக எவராவது வருத்தப்படுகிறீர்களா?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
The Tamil prisoners who were massacred in Welikade in July 1983 were : 25th July 1983 1. Kuttimani Yogachandran 2. N. Thangathurai 3. Nadesathasan 4. Jegan 5. Alias Sivarasa 6. Sivan Anpalagan 7. A. Balasubramaniam 8. Surash Kumar 9. Arunthavarajah 10. Thanapalasingham 11. Arafat 30. Anpalagan Sunduran 12. P. Mahendran 31. Ramalingam Balachandran 13. K. Thillainathan 32. K. Thavarajasingham 1420. S. Subramaniam 21. Mylvaganam Sinnaiah 22. G. Mylvaganam 23. Ch. Sivanantharajah 24. T. Kandiah 25. S. Sathiyaseelan 26. Kathiravelpillai 27. Easvaranathan 28. K. Nagarajah 29. Gunapalan Ganeshalingam . S. Kularajasekaram 33. K. Krishnakumar 15. K. Uthaya Kumar 34. R. Yoganathan 16. S. Sivakumar 35. A. Uthayakumar 17. A. Rajan 36. G. Amirthalingam 18. S. Balachandran 37. V. Chandrakumar 19. Yogachandran Killi 38. Sittampalam Chandrakulam 39. Navaratnam Sivapatham (Master) 27th July 1983 1. Muthukumar Srikumar 10. Gnanamuthu Naveratnasingham 2. Philip Amirthanayagam 11. Kandiah Rajendran (Robert) 3. Kulasingam Kumar 12. Dr. Somasunderam Rajasunderam 4. Selachami Kumar 13. Somasunderam Manoranjan 5. Kandasamy Sarveswaran 14. Arumugam Seyan (Appu) 6. A. Marianpillai 15. Thamotharampillai Jegemogenandan 7. Sivapathan Neethirajah 16. Sinnathambi Sivasubramaniam 8. Devanayagam Paskaran 17. Sellay Rajeratnam 9. Ponnaiya Thurairajah 18. Kumarasamy Ganeshalingam 19. Ponnampalam Devakumar
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
காந்தியம் பேசி சமாதானம் செய்ய முயன்ற வைத்தியர் ராஜசுந்தரத்தை அடித்துக் கொன்ற சிங்களவர்கள் - தொடரும் இனக்கொலை ஜூலை 83 கட்டடத்தின் மேற்பகுதிக்குள் நுழைந்த கும்பல், சுவர்கள் மீது தாம் கொண்டுவந்த ஆயுதங்களை ஓங்கி அடித்தபடி, தாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை பறைசாற்றியபடியே வந்தது. தமிழர்களைக் கொல்லப்போவதாக அவர்கள் கூவினார்கள். தமிழர்களின் இரத்தத்தைக் குடிக்கப்போவதாக மிரட்டினார்கள். தமிழர்களின் மாமிசத்தைப் புசிக்கப்போவதாக சூளுரைத்தார்கள். "26 ஆம் திகதி எல்லாமே அமைதியாகவிருந்தது. 27 ஆம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு இளவயதுக் கைதிகளைத் தடுத்துவைக்கும் கட்டடத்தின் அருகில் பலர் இரைச்சலுடன் உள்நுழைவது எமக்குத் தெரிந்தது. அக்கட்டத்தைச் சுற்றியிருந்த மதிலின் மேலால் ஏறிய ஆயுதம் தரித்த கைதிகள், கட்டடத்தின் உள்ளே நுழையும் கதவினைக் கம்பிகளால் உடைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமார் 40 பேர் கொண்ட ஒரு கும்பல். அவர்களின் கைகளில் வாட்கள், கோடரிகள், அலவாங்குகள், இரும்புக் குழாய்கள், மரச்சட்டங்கள் போன்ற ஆயுதங்கள் காணப்பட்டன" என்று காந்தியம் அமைப்பின் ஸ்த்தாபகரான டேவிட் எழுதுகிறார். இந்தியாவில் வசித்துவரும் அவர் இந்த நிகழ்வை பலமுறை எழுதியிருக்கிறார். இந்த படுகொலைகள் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தன. இந்தப் படுகொலைகள் குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். நான் இதனைக் கதையாக எழுதுகிறேன். இந்த விடயங்களை நித்தியானந்தன் மற்றும் டேவிட் ஆகியோருடன் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்ற செய்தியாளர் ஒருவரூடாக நான் பெற்றுக்கொண்டேன். "நாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்று அறிந்த கணத்திலிருந்து , எதிர்த்துத் தாக்குவதென்று முடிவெடுத்தோம். ஆனால் வைத்தியர் ராஜசுந்தரம் அதனை எதிர்த்தார். நாங்கள் காந்தியவாதிகள் என்று அவர் கூறினார். ஆகவே காந்திய வழியிலேயே நாம் இப்பிரச்சினையினைக் கையாள வேண்டும் என்று அவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு பெரிய கூட்டத்தை எப்படி எதிர்த்துச் சண்டைசெய்யப்போகிறீர்கள் என்று அவர் எங்களிடம் வினவினார். ஆனால், மற்றையவர்கள் அவரின் கருத்துடன் ஒத்துப்போகவில்லை. வைத்தியர் தர்மலிங்கம் மிக்கடுமையாக ராஜசுந்தரத்தின் கருத்தை எதிர்த்தார். அவர் ராஜசுந்தரத்தைப் பார்த்துக் கோபமாக பின்வருமாறு கூறினார், "அவர்கள் கொலையாளிகள், எங்களைக் கொல்லவே அவர்கள் வருகிறார்கள். அவர்களின் முன்னால்ச் சென்று காந்தியம் பற்றிப் பேசினால் உங்களையே அவர்கள் முதலில் கொல்வார்கள். எங்கள் உயிரை நீங்கள் சொல்வதன்படி தியாகம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. நான் போராடியே மடிகிறோம்". வைத்தியர் தர்மலிங்கத்திற்கு அப்போது 70 வயதைத் தாண்டியிருந்தது. இதனையடுத்து வைத்தியர் ராஜசுந்தரம் அமைதியானார். மீதி எட்டுப்பேரும் எதிர்த்துத் தாக்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்க, ராஜசுந்தரமோ காந்திய வழியில் இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். அவர்கள் அறையிலிருந்த கதிரை மேசைகளை உடைத்து, அவற்றின் கால்களை ஆயுதங்களாக பாவிக்க ஆயத்தமானார்கள். அவற்றைக்கொண்டு கொலையாளிகளை திருப்பித் தாக்குவதே நோக்கம். அக்கட்டத்திற்குள் நுழைந்த சுமார் 40 பேர் அடங்கிய கும்பல், தாம் கொண்டுவந்த ஆயுதங்களால் கதவின் பூட்டினை உடைத்துக்கொண்டு அறைநோக்கி முன்னேறி வந்தது. அறையில் தமிழ்க் கைதிகள் கைகளில் மரச் சட்டங்களுடன் தம்மை எதிர்த்துத் தாக்க ஆயத்தமாக இருப்பார்கள் என்பதை அக்குழு சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே, தமிழர்களின் கைகளில் மரச் சட்டங்களைக் கண்டபோது ஒருகணம் அதிர்ந்துபோனது. ஆகவே, உள்ளே நுழைய முடியாமல் தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தது. கொலையாளிகளிடமிருந்து சில மீட்டர்கள் தொலைவில் தமிழர்கள் எதிர்த்துத் தாக்குவதற்கு ஆயத்தமாக நின்றார்கள். தம்மைக் கொல்ல வருபவர்கள் அருகில் வரும்வரை விட்டுவிட்டு பின்னர் அவர்கள் மீது தாக்குவதே தமிழர்களின் நோக்கம். அங்கே ஏற்பட்ட இழுபறிநிலையினைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க எண்ணினார் வைத்தியர் ராஜசுந்தரம். ஆகவே, தனது வலது கரத்தை அவர்களை நோக்கி நீட்டி, கைலாகு கொடுக்க முனைந்தார். ஆனால், கொலையாளிகள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. கொலையாளிகளைப் பார்த்து ராஜசுந்தரம் பின்வருமாறு பேசினார், "எனது நண்பர்களே, நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை. ஒருவரையொருவர் கொல்லவேண்டிய அவசியமும் இல்லை. நான் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவன். நான் இதுவரையில் உயிர்வாழும் எதனையும் கொன்றதில்லை. நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நாங்கள் கொள்ளைகளிலோ, கொலைகளிலோ ஈடுபட்டவர்கள் அல்லர். ஆகவே, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள்" என்று அவர்களுக்குள் இருக்கலாம் என்று அவர் எண்ணிய மனிதாபிமானத்தை எதிர்பார்த்து இரைஞ்சினார். கொலையாளிகள் முன்னோக்கி வருவதற்குத் தயங்குவதை உணர்ந்துகொண்ட வைத்தியர் ராஜசுந்தரம் கொலையாளிகளின் மத நம்பிக்கையினைக் குறிப்பிட்டுப் பேசினார். "நான் ஒரு இந்து, ஆகவே வன்முறையில் எனக்கு நம்பிக்கையில்லை. பெளத்தர்களைப் போலவே நாமும் எவரையும் கொல்லக்கூட்டது என்று நம்புகிறேன்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்க, கொலையாளிகளில் ஒருவன் திடீரென்று முன்னால்ப் பாய்ந்து அவரின் கையைப் பற்றி தம்பக்கம் இழுக்க, அருகில் நின்றவன் ராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி இரும்புக் கம்பியால் அடித்தான். அவர் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தார். இதனையடுத்து தமது வாசல் நோக்கி நகர்ந்த தமிழர்கள், எதிர்த்துத் தாக்குவதற்கு நிலையெடுத்தனர். இளவயதுத் தமிழர்களான நித்தியானந்தன், கோவை மகேசன், வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் முன்னால் நின்றுகொள்ள ஏனையோர் அவர்கள் பின்னால் நின்றுகொண்டனர். இரண்டாவது நிரலில் மதகுருக்களான ஜயதிலகராஜா, சின்னராசா மற்றும் டேவிட் ஆகியோர் நிலையெடுத்து நின்றார்கள். அவர்களுள் வயதானவரான வைத்தியர் தர்மலிங்கம் இவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அப்படியானால் எட்டாவது தமிழர் எங்கே? வைத்தியர் தர்மலிங்கம் அந்த நபர் குறித்துப் பேசும்போது, "அவர் ஒரு மூளையில்ப் போய் நின்றபடி இறைவனை வேண்டிக் கொண்டு நின்றார்" என்று நகைச்சுவையாகக் கூறினார். தமிழ்க் கைதிகள் தம்மைத் தாக்க நிலையெடுத்து நிற்பதைக் கண்ட கொலையாளிகள் ஓரடி பின்வாங்கினார்கள். பின்னர் தாம் கொண்டுவந்த நீண்ட கம்பிகளையும் மரச்சட்டங்களையும் பாவித்து தமிழ்க் கைதிகள் மீது தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அத்தாக்குதலைத் தமிழ்க் கைதிகள் இலகுவாக முறியடித்தார்கள். சில நிமிடங்களாக நடந்துகொண்டிருந்த இந்த தாக்குதல், முறியடிப்புக்கள் பற்றி வைத்தியர் தர்மலிங்கம் உற்சாகத்துடன் பேசுகிறார். "கொலையாளிகளின் ஒருவன் தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அடித்தபோது, அது கோவை மகேசன் மீது பலமாகப் படவே, அவர் நிலை குலைந்துபோனார். அவர் கீழே விழவும், இரண்டாம் நிலையிலிருந்து ஒருவரை நான் முன்னோக்கித் தள்ளினேன். பின்னர் கோவை மகேசனைப் பார்த்து எழுந்திருங்கள் என்று கத்தினேன். அவர் எழுந்துகொண்டார். பின்னர் எம்மில் இன்னொருவர் களைப்படைந்து சரிந்தார். மீண்டும் அந்த இடத்திற்கு பின்னால் இருந்த இன்னொருவர் சென்றார். நான் கீழே வீழ்ந்தவரை மீண்டும் எழுப்பினேன். அவரும் எழுதுகொண்டார்" என்று தர்மலிங்கம் அன்றைய சம்பவத்தை விபரிக்கிறார். முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த வை யோகேஸ்வரன், வைத்தியர் தர்மலிங்கத்தின் மருமகன் என்பது குறிப்பிடத் தக்கது. யோகேஸ்வரன் என்னுடன் பேசும்போது, இங்கிலாந்திற்குச் சென்ற வைத்தியர் தர்மலிங்கம், அங்கு தனது குடும்பத்தார் முன்னிலையில் இப்படுகொலைச் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், "நாம் அன்று எதிர்த்துத் தாக்கியதாலேயே உயிர் தப்பினோம்" என்று கூறியதாகச் சொன்னார். ஆறு இளவயதுத் தமிழர்களும், ஒரு வயோதிபரும் சுமார் 40 ஆயுதம் தரித்த கொலையாளிகளை 30 நிமிட நேரம் தடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேஜர் பீரிஸும் அவரது கொமாண்டோ அணியும் அரை மணிநேரத்தில் சிறைச்சாலையினை அடைந்தார்கள். தமது வாகனங்களை தேவாலயப் பகுதியில் நிறுத்திவிட்டு இளவயது கைதிகளை அடைத்துவைக்கும் கட்டடம் நோக்கி அவர்கள் ஓடிச் சென்றார்கள். கட்டடத்தின் அருகில் ஆபத்தான குற்றவாளியான சேபால எக்கநாயக்க நிற்பதை மேஜர் பீரிஸ் கண்டார். கீழ்த்தளத்தில் இருந்த தமிழர்களைக் கொன்றுவிட்டு மேல்த்தளத்திற்குச் செல்வதற்காகவே சேபால அங்கு நின்றிருந்தான். மேஜர் பீர்ஸைக் கண்டவுடன், "சேர், எப்ப்டி எங்கள் வேலை?" என்று பெருமிதத்துடன் கேட்டன் சேபால. ஒருகையில் துப்பாக்கியை வைத்திருந்த பீரிஸ், மறுகையால் சேபாலவின் முகத்தில் குத்தினார். சேபால கீழே வீழ்ந்தான். உடனடியாகத் தாம் வைத்திருந்த முகக்கவசங்களை அணிந்துகொண்ட பீரிஸின் அணியினர் கொலையாளிகளை நோக்கிக் கண்ணீர்ப் புகைக் குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள கொலையாளிகள் தப்பியோடினர். 1983 ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்த தமிழ் டைம்ஸ் எனும் சஞ்சிகையில் கொமாண்டோக்கள் வந்ததன் பின்னர் நடந்த விடயங்கள் குறித்து டேட்விட் அவர்கள் சில தகவல்களைக் கூறியிருந்தார். "கொலையாளிகள் சுமார் 30 நிமிடங்கள் வரை சமாளிக்க எம்மால் முடிந்தது. கண்ணீர்ப் புகைக் கவசங்களுடன் வந்த இராணுவத்தினர் கொலையாளிகளைக் கலைத்தனர். பின்னர் மேலே வந்த இரு இராணுவத்தினர் எம்மை நிரையாக நிற்கவைத்துச் சுடுவதற்கு ஆயத்தமானார்கள். அதேவேளை கீழ்த் தளத்திலிருந்து அவர்களின் அதிகாரியிருவர் அவர்களை கீழே வருமாறு அழைத்தார். ஆகவே, வேறு வழியின்றி எங்களை கீழ்த்தளத்திற்குச் செல்லுமாறு விரட்டினர் அந்த இரு இராணுவத்தினரும். கீழே, எங்களுடன் அன்று உயிர்தப்பிய அனைவரும் நடைபாதையில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். பின்னர் எங்களை சிறைச்சாலையின் முற்பகுதிக்கு இழுத்துச் சென்றார்கள். நடந்துசெல்லும்போது அப்பகுதியெங்கும் கொல்லப்பட்டுக் கிடந்த எமது நண்பர்களை நாம் பார்த்தோம். இராணுவத்தினர் அருகில் நடந்துவர, சற்றுத் தொலைவாக வந்த சிங்களக் கொலையாளிகள், "இவர்களையும் கொன்றிருக்க வேண்டும், தப்பிவிட்டார்களே" என்று நாங்கள் கேட்கத் தக்கதாக கூறிக்கொண்டிருந்தார்கள். அப்பகுதியில் நின்றிருந்த மினிவான் ஒன்றினுள் எம்மை அடைத்துக்கொண்டு சிறைச்சாலையின் முகப்பிற்குக் கொண்டுசென்றார்கள். அங்கிருந்து இராணுவ ட்ரக் வண்டியொன்றில் ஏற்றப்பட்ட எம்மை அதன் தரையில் படுக்கும்படி கட்டளையிட்டார்கள். எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையறிய தலையை உயர்த்திப் பார்த்த தமிழ்க் கைதிகளின் தலைகள் மீது இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களால் உதைந்து, மீண்டும் தரை நோக்கி அழுத்தினார்கள். அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும்வரை எம்மை சிங்களத்தில் தூஷண வார்த்தைகளால் திட்டிய இராணுவத்தினர் ஈழம் தொடர்பான எமது உணர்வினைச் சபித்துக்கொண்டே வந்தார்கள். மறுநாள் அதிகாலை வரை விமான நிலையத்திலேயே எம்மை அடைத்து வைத்திருந்தார்கள். எமக்குத் தண்ணீரைதன்னும் தர அவர்கள் விரும்பவில்லை. பின்னர் விமானப்படையின் விமானம் ஒன்றிற்குள் எம்மை ஏற்றி, இறங்கும்வரை தலைகளை மேலே தூக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள். மட்டக்களப்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், அங்கிருந்து மேற்பகுதி திறக்கப்பட்ட வான் ஒன்றில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு எம்மை எடுத்துச் சென்றார்கள். அப்போதுதான் எமது பாதுகாப்புப் பற்றி ஓரளவிற்கு எமக்கு நிம்மதி வந்தது. இச்சம்பவம் தொடர்பாகவும் விசாரணை ஒன்று நடைபெற்றது. வெளியில் ஏற்பட்ட கலவரங்களால் உந்தப்பட்டு நடந்த கொலைகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, பொரள்ளைப் பொலீஸாரை இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தன் முன் நிறுத்துமாறு பணித்தார். அன்று கொல்லப்பட்ட 18 தமிழ்க் கைதிகளின் உடல்களும் கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டன. அன்று பிற்பகல் இனவாதம் கக்கும் பெளத்த பிக்குவான எல்லே குணவன்ச தேரவை ஜனாதிபதி ஜெயார் சந்தித்தார். ஜெயாரிடம் பேசிய பிக்கு, சிங்கள மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும், அவர்களைச் சாந்தப்படுத்த ஜெயார் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பேசவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை உடன் அதிகரிக்குமாறும் அழுத்தம் கொடுத்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறைச்சாலைப் படுகொலைகளின்போது உயிர்தப்பியவர்களின் வாக்குமூலம் அக்கட்டத்தின் கீழ்ப்பகுதியிலும், மேற்பகுதியிலும் நடந்தவைகுறித்து அன்று உயிர்தப்பியவர்களிடமிருந்து பல விடயங்களை நாம் கேட்டறிந்துகொண்டோம்.லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து 90 களின் இறுதிப்பகுதியில் வெளிவந்த அமுது எனும் சஞ்சிகை, 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிறைச்சாலைப் படுகொலைகள் குறித்த விசாரணை அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. கீழ்த்தளத்தில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து இந்த அறிக்கை பேசுகிறது. இவ்வறிக்கையின்படி இரவு உணவு வழமைபோல மாலை 4 மணிக்குப் பரிமாறப்பட்டிருக்கிறது. தமிழ்க் கைதிகள் எவ்வேளையிலும் தம்மீது இன்னுமொரு தாக்குதல் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். ஆகவே, அதற்கு முகம்கொடுப்பதற்கு தம்மை ஆயத்தப்படுத்த அவர்கள் நினைத்தனர். தமது உணவு உண்ணும் கோப்பைகள், நீர் அருந்தும் கிண்ணிகள் என்பவற்றை மடித்துக், கூராக்கி ஆயுதம் போன்று மாற்றியமைத்தார்கள். அத்துடன் மிளகாய்த்தூள், சமைக்கப்பட்ட கறிகள் என்பவற்றையும் தம்முடன் எடுத்துவைத்திருந்தார்கள். தம்மைத் தாக்க வருவோர் முகங்களில் கறியனை ஊற்றி, தாக்குதலைத் தாமதிக்க வைப்பதன் மூலம் இராணுவத்தினரோ அல்லது பொலீஸாரோ வரும்வரை தாக்குப் பிடிப்பதுதான் அவர்களின் திட்டம். உயிர்தப்பியவர்களில் ஒருவரை அமுது பேட்டி கண்டிருந்தது. அதன் முழு வடிவமும் கீழே, "அன்று மாலை, நாம் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை நோக்கி கூட்டம் ஒன்று வருவதைக் கண்டோம். திங்கட்கிழமை அவர்கள் எழுப்பிய அதே கோஷங்களை எழுப்பியவாறு நாம் இருந்த பகுதி நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களைக் கொண்டு எமது கட்டடத்தை சுற்றியிருந்த சுற்று மதில் மீதும், வாயிற்கதவு மீதும் இடித்துத் தாக்கினார்கள். புலிகளின் குருதியைக் குடிக்கப்போகிறோம் என்று இடையிடையே கோஷமிட்டார்கள். சிறைக்கம்பிகளின் இடைவெளியூடாக நடப்பதைப் பார்த்துக்கொண்டேன். அக்கூட்டத்தின் முன்னால் தலைமையேற்று ஓடி வந்து கொண்டிருந்தவரை என்னால் அடையாளம் காண முடிந்தது. அவர்தான் அலி இடாலியா விமானத்தைக் கடத்திய சேபால எக்கநாயக்க. அவரின் கைகளின் எமது கட்டிடத்திற்கான சாவிகள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். எமது சிறைக்கதவு பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. முன்னால் வந்தவர் தான் வைத்திருந்த சாவிகளை ஒவ்வொன்றாக எடுத்து எமது கதவினைத் திறக்க முயன்றுகொண்டிருந்தார். அவரின் பின்னால் ஆர்ப்பரித்துக் கொண்டு நின்றவர்களிடம் கோடரிகள், நீண்ட வாட்கள், உலக்கைகள், அரிவாள்கள், கூர்மையான முனையினைக் கொண்ட இரும்புக் கம்பிகள் போன்றவை காணப்பட்டன. எம்முடன் அவ்வறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த துரைராஜா அவர்கள், தாக்க வருவோரின் முகத்தின்மீது கறியினை ஊற்றுவதற்கு ஆயத்தமாக நின்றார். நாங்கள அவரை கறியை அவர்கள் நோக்கி வீசுமாறு கூறினோம். அவசரத்தில் தான் வைத்திருந்த அவ்வளவு கறியையும் ஒரே தடவையில் அவர் எறிந்துமுடித்தார். முதலாவதாக நின்றவரின் முகத்தில் கறி படவே அவர் பின்வாங்கினார். அப்போது, பின்னால் நின்ற மற்றொருவர் தனது கோடரியால் பூட்டின் மீது ஓங்கி அடிக்கவே, அதுவும் உடைந்துகொண்டது. அக்கதவு அறைகளை இணைக்கும் நடைபாதைக்கானது. அதனை அவர்கள் இழுத்துத் திறக்க முயன்றார்கள். நாம் எமது பக்கமாக அதனை இழுத்துப் பிடித்து, அவர்களைத் திறக்கவிடாது தடுக்கப் பார்த்தோம். ஆனால், எம்மால் நீண்டநேரத்திற்கு அவர்களைச் சமாளிக்க முடியவில்லை. ஆகவே, படுக்கை விரிப்புக்களை சுருட்டி கதவினை இழுத்துப் பிடிக்க முனைந்தோம். அவர்கள் அவற்றையும் வெட்டி எறிந்தார்கள். இறுதியாக அவர்கள் கதவை இழுத்துத் திறந்துவிட, இரு காடையர்கள் எங்கள் அறையினுள் புகுந்தார்கள். முதலாவதாக அவர்கள் துரைராஜா மீது சரமாரியான தாக்குதலை ஆரம்பித்தார்கள். தாம் கொண்டுவந்த நீண்ட காட்டுக் கத்திகளால் அவரை வெட்டிச் சரித்தார்கள், அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். நான் அவர்கள் மீது கைகளாலும், கால்களாலும் தாக்கினேன். அவர்களில் ஒருவன் என்மீது கோடரியை வீசினான், நான் குனிந்து சுதாரித்துக்கொண்டேன். ஆனாலும் தலையில் கோடரி வெட்டி விட்டது. அவனை இறுகப் பிடித்துக்கொண்ட நான் அறையின் ஒரு மூலைக்குச் சென்றேன். எனது கவசம் போல அவனை முன்னால் பிடித்து வைத்துக்கொண்டேன். மற்றையவன் என்னைப் பிடிப்பதற்கு என்னை நோக்கி ஓடிவந்தான். அவன் அருகில் வருமுன்னர் அவனை உதைக்க முயன்றேன். அவன் பின்னால் நின்றிருந்த மற்றொருவன் எனது கால்கள் மீது கடுமையாகத் தாக்கினான். என்னால் வலியினைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பின்னர் என்னால் நிற்கமுடியாமற் போய்விட்டது. கீழே வீழ்ந்தேன். என்மீது கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள். நான் இறந்துவிட்டது போன்று நடித்து அசைவின்றிக் கிடந்தேன். ஆனால் அவர்கள் தாக்குவதை நிறுத்தவில்லை. திடீரென்று எம்மைத் தாக்குதவதை நிறுத்திவிட்டு அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். முகக்கவசம் அணிந்த இராணுவத்தினர் நாமிருந்த பகுதிநோக்கி வருவதைக் கண்டேன். சிலர் தமிழில் பேசுவது எனக்குக் கேட்டது. நான் பலம் கொண்ட மட்டும் கத்தினேன், "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன், என்னைக் காப்பற்றுங்கள்". டக்ளஸ் தேவானந்தா எனதருகில் வந்தார். அவருடன் மாணிக்கதாசன், அழகிரி, சுப்பிரமணியம் மற்றும் பாரூக் ஆகியோரும் இருந்தனர். என்னைத் தூக்கிச் சென்ற அவர்கள், விருந்தினர் காத்திருக்கும் பகுதியில் கிடத்தினர். அங்கே வைத்தியர் ராஜசுந்தரம் மற்றும் மரியாம்பிள்ளை ஆகியோரின் உடல்களைக் கண்டேன். மரியாம்பிள்ளையின் தலைப்பகுதி முற்றாக நசுக்கப்பட்டுக் கிடந்தது. தேவகுமாரையும் எனதருகில் அவர்கள் கிடத்தினார்கள். சிறைச்சாலை அத்தியட்சகர் அங்கே வந்தார். நான் அதிகளவு குருதியை இழந்துகொண்டிருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். "உன்னால் நடக்க முடியுமா?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார். உடனே ஆமென்று சொன்னேன். கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் பார்வையிடும்பகுதிக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உதவிய சில கைதிகள் நான் பேசுவதைக் கண்டார்கள். என்னைக் கொன்றிருக்க வேண்டும் என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டது எனக்குக் கேட்டது. நான் "சேர், சேர் " என்று கத்தினேன். என்னருகில் வந்த ராணுவ அதிகாரியொருவரிடம், "என்னை இங்கே விட்டுச் சென்றீர்களென்றால், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள், என்னைத் தயவுசெய்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறினேன். பின்னர் என்னையும், தேவக்குமாரையும் ட்ரக் வண்டியொன்றில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். வைத்தியசாலையில் என்னைப் பரிசோதித்த வைத்தியர்கள் என்னை எக்ஸ் ரே பகுதிக்கு அனுப்பவேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த பணியாளர்கள் என்னை எக்ஸ்ரே எடுக்க மறுத்துவிட்டார்கள். பணியாளர்கள் வரவு குறைவினால் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்று அவர்கள் கூறினார்கள். என்னை அங்கேயே ஒரு ஓரத்தில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதிசய விலங்கொன்றினைப் பார்க்க வருவது போல் மக்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். என்னைப் புலி என்று எள்ளிநகையாடி முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். என்னருகில் தாதி ஒருத்தி வந்தாள், அவளின் கைகளைப் பற்றிக்கொண்ட நான், "என்னைக் காப்பாற்று" என்று சிங்களத்தில் கெஞ்சினேன். அவளது கைகளில் எனக்குச் செலுத்தவென கொண்டுவரப்பட்ட சேலைன் போத்தல் ஒன்று இருந்தது, ஆனால் அதனைத் தொங்கவிடுவதற்கான காப்புக் கம்பி அவளிடம் இருக்கவில்லை. நானே ஒரு கையினால் அதனைத் தூக்கி வைத்திருக்க அவள் சேலைனை உட்செலுத்தினாள். சற்று நேரத்தின் பின் அங்குவந்த இன்னொரு தாதி சேலைன் போத்தலைக் கழற்றியெடுத்துக்கொண்டதோடு, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய குழாயையும் பிடுங்கியெறிந்தாள். இதனைக் கண்ட முதலாவது தாதி அவளைக் கடிந்துகொண்டே, மீண்டும் சேலைன் போத்தலை பூட்டினாள். எங்களை பின்னர் பெண்களின் பிரிவிற்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு பெண்வைத்தியர் எனது காயங்களுக்குத் தையல் போட்டார். சிறிது நேரத்தின் பின்னர் ஆண்கள் பிரிவிற்கு மாற்றப்பட்டோம். தேவகுமாருக்கு நினைவு திரும்பவில்லை. மயக்கத்தில் அவர் அனுங்குவது கேட்டது. எனது கால் ஒன்றினை நான் படுத்திருந்த கட்டிலுடன் சங்கிலியால் இணைத்துக் கட்டியிருந்தார்கள். பின்னர் தேவகுமார் இறந்துவிட்டதை அறிந்துகொண்டேன். மறுநாள் நீதிபதியொருவர் எனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அமைச்சரவைக் கூட்டம் கறுப்பு யூலை நடந்த பிரதேசங்கள் நாட்டில் தமிழர்கள் மீது தனது அமைச்சர்களினாலும், தனது கட்சிக் குண்டர்களாலும், அரச படைகளினாலும் நடத்தப்பட்டுவந்த வன்முறைகளைப் பற்றி கிஞ்சித்தும் கலவரப்படாத ஜெயவர்த்தன வழமைபோல தனது வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தை புதன்கிழமை காலை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் அனைவரும் அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் துரோகிகள் என்று வசைபாடியதுடன், கலவரங்களைத் தூண்டியவர்கள் என்றும் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கத்தைக் கைதுசெய்யவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைத் தடைசெய்யவும் வேண்டுமென்று சிறில் மத்தியு அங்கே கேட்டுக்கொண்டார். அமைச்சர்களான காமிணி ஜயசூரியவும் ரஞ்சித் அத்தப்பத்துவும் அவரை ஆதரித்துப் பேசினர். கலவரங்களினால் தனது சிங்கள மக்கள் எவ்வாறான அவலங்களை அனுபவிக்கிறார்கள் என்று இரக்கமாகப் பேசிய லலித் அதுலத் முதலி, தனது இன மக்கள் வரிசையாக தெருக்களில் பாண் வாங்குவதற்கு நின்ற காட்சி தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறினார். தனது அமைச்சினூடாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்களின் சேமிப்புக் கிட்டங்கிகளில் இருந்த உணவுப்பொருட்களை தான் கிரமமாக அனுப்பிவைத்து சிங்கள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது குறித்துத் தான் பெருமைப்படுவதாகக் கூறினார் லலித். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜெயார், நாட்டினைத் துண்டாட செயற்படும் அல்லது தூண்டும் எந்தவொரு தனிநபரையோ அல்லது கட்சியையோ தடைசெய்யும் சட்டத்தினை அரசியலமிப்பில் சேர்க்கப்போவதாகக் கூறினார். அரசியலமைப்பிற்கெதிராகச் செயற்படும் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படுவதோடு அவர்களின் அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இப்படிச் செய்வதனூடாக சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் எழுந்துவரும் ஆத்திரத்தினை அடக்கமுடியும் என்றும் அவர் நியாயப்படுத்தினார். ஆனால், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுப்போன தமிழ் மக்கள் குறித்த வருத்தத்தினை ஜெயாரோ அல்லது அவரின் சிங்கள அமைச்சர்களோ தெரிவிக்க விரும்பவில்லை. சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரு அமைச்சர்களான ஏ.சி. எஸ் ஹமீதும், தொண்டைமானும் ஜெயாரின் யோசனையினை எதிர்த்தனர். அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றம் விபரீதமாகவே முடியப்போகிறது என்று ஹமீத் அரசை எச்சரித்தார். தமிழர்களை இது மேலும் உறுதிப்படுத்தும், அவர்களை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று அவர் கூறினார். "நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை பாராளுமன்றத்திற்கு வெளியே தள்ளிவிட்டு யாருடன் பேசப்போகிறீர்கள்? உங்களின் செயல்களால் இந்தியாவை உள்ளே இழுத்துவிடப்போகிறீர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்வதனூடாக தமிழ் மக்களை ஒதுக்கிவிடப்போகிறீர்கள். இது ஆயுத அமைப்புக்களை மேலும் பலப்படுத்தப் போகிறது என்று தொண்டைமான் கூறினார். "தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்துவதனூடாக தமிழ் ஆயுத அமைப்புக்களைப் பலப்படுத்த விரும்புகிறீர்களா?" என்று அவர் அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்டார். மக்கள் விடுதலை முன்னணியினரின் பேரணி ஒன்று. இனவாதப் பிக்குவான எல்லே குணவன்ச தேரை உரையாற்ற அவரின் வலதுபுறத்தில் இன்னொரு பெயர்போன இனவாதியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச. ஆனால், ஜெயவர்த்தனவோ அல்லது அவரின் அமைச்சர்களோ தொண்டைமானினதும் ஹமீதினதும் கருத்துக்களைச் செவிசாய்க்கும் நிலையில் இருக்கவில்லை. தாம் செய்யவேண்டியது குறித்து அரசாங்கம் தீர்க்கமாக இருந்ததுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றியே அவர்களின் சிந்தனையெல்லாம் இருந்தது. தமிழர்களைப் பலவீனப்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தைத்தவிர வேறு எதுவும் அவர்களின் சிந்தனையில் இருக்கவில்லை. ஆகவே, தான் திட்டமிட்டது போலவே அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமைச்சர் லலித் அதுலத் முதலியையும், அமைச்சரவைச் செயலாளரான சமரசிங்கவையும், சட்ட வரைஞரான ரொட்றிகோவையும் ஜெயார் பணித்தார். பின்னர் காமிணியின் பக்கம் திரும்பி, பெளத்த பெரமுன எனும் அதிதீவிர சிங்கள பெளத்த கட்சியின் இனவாதப் பேச்சாளரான எல்லே குணவன்ச தேரவவுடன் சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார் . அதன்பின்னர் அமைச்சரவையில் பேசிய ஜெயார், சிறைச்சாலைப் படுகொலைகள் சர்வதேசத்தில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். ஆகவே, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று அவர் கூறினார். உடனடியாக இதனை மறுத்த அமைச்சர்களான அதுலத் முதலி, சிறில் மத்தியூ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், யாழ்ப்பாணத்திற்கு இவர்கள் மாற்றப்படும் பட்சத்தில் அவர்கள் தப்பியோடிவிடுவார்கள் என்று கூறினர். அதற்குப் பதிலளித்த ஜெயார், தனது உடனடியான கவலை என்னவென்றால் இரண்டாவது படுகொலையொன்றினைத் தடுப்பதுதான் என்று கூறினார். கூட்டத்தின் முடிவில் தமிழ்க் கைதிகளை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றலாம் என்று ஜெயார் முடிவெடுத்தார். அன்று பிற்பகல் கூடிய தேசிய பாதுகாப்புக் கூட்டம், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதென்று முடிவெடுத்தது. சிறைச்சாலை உதவி ஆணையாளர் ஜான்ஸும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். "இதுவரை நீங்கள் முகம்கொடுத்த பிரச்சினைகளினால் நிறையவே களைத்துப் போயிருப்பீர்கள்" என்று ஜான்ஸைப் பார்த்து ஜெயார் கூறினார். பின்னர் கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்து ஜான்ஸிற்கு குளிர்பானம் ஒன்றை வழங்குமாறு பணித்தார். ஜான்ஸுடன் பேசிய ஜெயார், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கொழும்பில் தமிழ்க் கைதிகளைத் தொடர்ந்தும் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதனால் அவர்களை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளைச் செய்யுமாறு கூறினார். இராணுவத்தின் பிரிகேடியர் மனோ மடவெலையுடன் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு அவரைப் பணித்தார். ஜான்ஸ் மாலை 4:15 மணிக்கு சிறைச்சாலைக்குத் திரும்பினார். தமிழக் கைதிகள் மீதான இரண்டாவது படுகொலைகள் அப்போது ஆரம்பித்திருந்தன. அவர் உடனடியாக பிரிகேடியர் மடவெலைக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அப்போது ஜெயாருடன் பேசிக்கொண்டிருந்த பிரிகேடியர் மடவெலை, நிலைமையினை விளக்கி ராணுவக் கொமாண்டோ அணியின் சிறந்த அதிகாரியான சுனில் பீரிஸை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி கொமாண்டோ அணி ஒன்றுடன் சுனில் பீரிஸ் சிறைச்சாலைக்குக் கிளம்பிச் சென்றார். வழமை போல சிறைக்கைதிகளுக்கு மாலை 4 மணிக்கு இரவுணவு பரிமாறப்பட்டது. தேவாலயப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கான உணவினை மேற்பார்வையாளர் டொன் அல்பிரெட் வழங்கினார். அல்பிரெட் தன்னுடன் ஒரு சாவிக் கொத்தை வைத்திருப்பது வழமையானது. சி 3, டி 3 ஆகிய பகுதிகள் வெறுமையாகிவிட்டதனால், ஏ 3 பிரிவின் வாயிலுக்கு அவர் உணவினைக் கொண்டு சென்றார். இப்பகுதியிலேயே மிகவும் ஆபத்தான கைதிகளும், தப்பியோட எத்தனித்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அப்பகுதியின் சிறைக்கதவினைத் திறந்துவிட்ட மேற்பார்வையாளர், கைதிகளை வந்து தமது உணவினைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். காவலுக்கு அருகில் ஒரு காவலாளியும் நின்றிருந்தார். இரண்டாவது விசாரணை நடைபெற்ற ஜூலி 28 ஆம் திகதி சாட்சியமளித்த மேற்பார்வையாளர் அல்பிரெட், தான் கதவினைத் திறந்தவுடன் வெளியே பாய்ந்துவந்த சிங்களக் கைதிகள் தன்னைப் பிடித்துக்கொண்டு சாவிக்கொத்தைப் பறித்ததாகவும், தொலைபேசியைப் பிடுங்கி எறிந்ததாகவும், தன்னுடன் காவலுக்கு நின்ற காவலாளையைத் தாக்கி கீழே வீழ்த்திவிட்டு மாடிநோக்கி ஓடியதாகவும் கூறினார். ஓடும்பொழுது ஏனைய சிங்களக் கைதிகளையும் தம்முடன் சேர்ந்துகொள்ளுமாறு அவர்கள் அழைத்ததாகவும் கூறப்பட்டது. சிறைச்சாலையில் தொழிநுட்ப வகுப்புக்களை நடத்திவந்த ஆசிரியர் திலகரட்ண பேசும்போது, அன்று தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர்கள் நேராக உபகரணங்கள் சேகரித்துவைக்கப்படும் அறைநோக்கிச் சென்று, கதவினை உடைத்து அங்கிருந்த இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள் மற்றும் தோட்டம் செய்வதற்கென்று பயன்படுத்தப்பட்டு வந்த கூரான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, 28 தமிழ்க் கைதிகளும் 9 தொழில்சார் வல்லுனர்களும் அடைக்கப்பட்டிருந்த கட்டடம் நோக்கி ஆவேசத்துடன் ஓடிச்சென்றதைக் கண்டதாகக் கூறினார். தேவாலயப் பகுதியிலிருந்துசுமார் 50 மீட்டர்கள் தொலைவிலேயே இளவயது கைதிகளுக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. அக்கட்டடத்தை சுற்றி இரண்டு மீட்டர்கள் உயரம் கொண்ட மதில் அமைக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு நேர் எதிராக இக்கட்டடத்தின் வாயில் அமைக்கப்பட்டிருந்ததோடு, அக்கதவினைத் தள்ளித் திறக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயிலில் காவலுக்கு நின்ற காவலாளி டொன் நிக்கொலஸ் பேசுகையில், ஆயுதம் தாங்கிய கைதிகள் சுற்றுமதிலினால் ஏறி உட்புறம் குதிக்க, அவர்களைத் தொடர்ந்து ஏனைய கைதிகளும் உள்ளே நுழைந்ததாகவும், அவர்கள் வாயிற்கதவினை உடைத்துத் திறந்ததாகவும் கூறினார். தன்னை இறுகப் பிடித்துக்கொண்ட சில கைதிகள், தான் வைத்திருந்த சாவிக்கொத்தினை பலவந்தமாகப் பறித்துக்கொண்டதாக அவர் மேலும் கூறினார். அந்தச் சாவிகளைக் கொண்டு அக்கட்டத்தின் பிரதான கதவினை திறந்த சிங்களக் கைதிகள் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைகள் நோக்கி ஓடிச்சென்றதைக் கண்டதாக அவர் கூறினார். முதலாவது தொகுதி சிங்களக் கைதிகள் அக்கட்டத்தின் கீழ்ப்பகுதியில் 28 தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைய இன்னொரு பகுதி சிங்களக் கைதிகள் கட்டடத்தின் மேற்பகுதிக்குள் நுழைந்தார்கள். தமிழர்களைக் கொல், தமிழர்களைக் கொல் என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி அப்பகுதியில் தமிழர்களைத் தேடத் தொடங்கியது அக்குழு. நடப்பது என்னவென்பதை உணர்ந்துகொண்ட 28 தமிழ்க் கைதிகளும் தமது சிறைக்கதவுகளை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார்கள். அப்பகுதியின் அறைகள் சிலவற்றில் ஒருகைதியும், இன்னும் சிலதில் மூன்று கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அந்தக் காவலாளி கூறுகையில் கீழ்த்தளத்திற்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்த தமிழர்களைக் கொல்லப்போவதாக அச்சுருத்திக்கொண்டதைத் தான் கண்டதாகவும் கூறினார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வாகனங்களில் தமிழர்களைக் கொழுத்திய சிங்களக் காடையர்கள் - தொடரும் இனக்கொலை ஜூலை 1983 கண்டியில் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமை காலையும் சுமூகமான நிலைமை நிலவியது.ஆனால், செவ்வாய் மதியத்திற்குப் பின்னர் அங்கும் சிங்களவர்களால் தமிழர் மீதான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. கண்டி மாவட்டத்தின் உதவிப் பொலீஸ் மா அதிபர் பிராங்க் டி சில்வா மேலதிகமான பொலீஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தினார். செவ்வாயன்று சந்தைப்பகுதியில் திடீரென்று கூட்டம் ஒன்று கூடுவதை அவர் அவதானித்தார். ஆகவே, அவர்களை கலைந்துபோகச் செய்வதற்கு அப்பகுதிக்கு பொலீஸார் சிலரை அவர் அனுப்பி வைத்தார். பொலீஸாரைக் கண்டதும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்ற அந்தக் கூட்டம் பிறிதொரு இடத்தில் மீண்டும் ஒன்றுகூடியது. அக்கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்டி நகரில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் சிங்க ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த ராணுவத்தினரே என்பதை அவர் உணர்ந்துகொண்டார். அன்று மாலை, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்களான ஜாதிக சேவக சங்கமயவின் உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் அங்கு பெரும் வன்முறைகள் வெடித்துக் கிளம்பின. கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் இந்தக் குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஏற்கனவே நகரில் கூடிநின்ற இராணுவ வீரர்களுடன் சேர்ந்துகொண்ட சிறில் மத்தியூவின் குண்டர்கள் கண்டிநகரின் வீதிகளில் சென்றுகொண்டிருந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கினர். வாகானங்களில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் வெளியே இழுத்துத் தாக்கப்பட்டு அவர்களின் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. நகரின் பெரும்பாலான இடங்களில் வசித்துவந்த தமிழர்களின் வீடுகளும், வியாபார நிலையங்களும் இராணுவத்தினராலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்களாலும் எரியூட்டப்பட்டன. கண்டியில் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனிதநேயத்திற்கெதிரான தாக்குதல்களின் சம்பவங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒல்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் அனுபவத்தினை இங்கு பகிர்கிறேன். கண்டியின் பிரதான வீதியில் தமிழர் ஒருவர் கடையொன்றினை நடத்தி வந்திருந்தார். அவரைத் தாக்குவதற்கு சிங்களக் காடையர் குழுவொன்று ஆயத்தமாகியது. முதலில் அவரது கடைக்குத் தீவைத்தது அந்தக் கும்பல். தப்பியோட எத்தனித்த அந்தத் தமிழரை அக்கும்பல் பிடித்துக்கொண்டது. எரிந்துகொண்டிருந்த அவரின் கடையின் தகரக் கூரையின் மீது அவரை வீசியெறிந்தது சிங்களக் குழு. அவர் இருமுறை எரிந்துகொண்டிருந்த கூரையிலிருந்து சறுக்கிக் கீழே விழுந்தார். அவரை மூன்றாம் முறை அந்தக் கும்பல் கூரையின் மீது எறிந்தது. இம்முறை அவர் கீழே உருண்டு விழவில்லை. அவரது உடலை எரிந்துகொண்டிருந்த கூரை பற்றிக்கொள்ள, அவரது உடல் கூரை மீதிருந்தே எரிய ஆரம்பித்தது. இதுபோன்ற மிலேச்சத்தனத்தை நான் உலகில் வேறு எங்கிலும் நான் அறியவில்லை என்று அந்த வெளிநாட்டவர் கூறுகிறார். தமிழர்களை அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்களில் வைத்தே எரித்துக் கொன்ற சிங்களவர்கள் இதேவகையான இரத்தத்தை உரைய வைக்கும் சம்பவம் ஒன்றினை நோர்வேயிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணியொருவர் விபரிக்கிறார். கொழும்பு நகருக்கு வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை சிங்களவர்கள் வீதியில் மறித்தனர். அதிலிருந்த தமிழர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் வாகனத்தை விட்டு கீழிறங்குமாறு சிங்களக் காடையர்கள் கட்டளையிட்டனர். அவர்கள் இறங்கியதும் தமிழர்கள் வாகனத்தில் இருக்க, அதன் கதவுகளை அடைத்துச் சாத்தியது அக்குழு. பின்னர் அவ்வாகனத்தின் மீது பெற்றோலினை ஊற்றிப் பற்றவைத்தது. உள்ளே குறைந்தது 20 தமிழர்கள் இருந்தார்கள். எரிந்துகொண்டிருந்தபோது அவர்கள் எழுப்பிய ஓலம் மிகவும் அவலமானது. சிலர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே பாய எத்தனித்தார்கள். ஆனால், அவர்களை மீண்டும் எரிந்துகொண்டிருந்த வாகனத்தினுள் தள்ளிவிட்டு அதனைச் சுற்றி நின்று எக்காளமிட்டு குதூகலித்தது அக்குழு. செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஆகிய பகுதிகளுக்கும் தமிழர்மீதான வன்முறைகள் பரவத் தொடங்கின. இப்பகுதிகளில் இருந்த தமிழரின் வீடுகளும், வியாபார நிலையங்களும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் எரியூட்டப்பட்டன. அப்பகுதியின் பிரதியமைச்சரும் அவரது செயலாளருமே இத்தாக்குதல்களை முன்னின்று வழிநடத்தினர். அமைச்சரின் செயலாளர் பின்னாட்களில் கண்துடைப்பிற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார். 2004 இல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட D.A.W. குணசேகர அமைச்சரின் செயலாளரை அந்நாட்களில் சிறையில் சந்தித்திருந்தார். இச்சந்திப்புப் பற்றி பிறிதாக ஆராயலாம். எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் வாகனம் ஒன்று, தமிழினக்கொலை ஜூலை 1983 1999, ஆடி 30 ஆம் திகதி குணசேகர டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் "கறுப்பு ஜூலை : மீள்பார்வை" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை கீழே, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவரின் செயலாளர் தமிழர் மீதான வன்முறைகளுக்காக எவ்வாறு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டார் என்பதைச் நான் சொல்வது அவசியமானது என்று கருதுகிறேன்.தன்னை விடுதலை செய்யக்கோரி மனுவொன்றினை ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு அனுப்புமாறு அவர் என்னைக் கோரியிருந்தார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபொழுதிலும் நான் மகிழ்வுடன் அவரின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டேன். இதில் உள்ள உண்மையென்னவென்றால், அமைச்சரினால் தனக்கு வழங்கப்பட்ட கட்டளையினையே தான் மேற்கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். நகரில் வரிசையாக இயங்கிவந்த தமிழர்களின் கடைகள் அனைத்தையும் எரிப்பதே அமைச்சர் அவருக்கு வழங்கியிருந்த பணி. அவர் கேட்டுக்கொண்டதன்படி நான் ஜெயாருக்கு அவரது விடுதலையைக் கோரி அனுப்பிய மனுவை மறுநாளே பெற்றுக்கொண்ட ஜெயார், அவரை உடனடியாக விடுதலை செய்தார். செயலாளரை உடன் வந்து பொறுப்பெடுத்துச் செல்லுமாறு அமைச்சர் பணிக்கப்பட்டார். இப்படித்தான் நீதி நிலைநாட்டப்பட்டது. கண்டியில் தமிழர்கள் மீது ராணுவத்தினராலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்களாலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறிது சிறிதாக மலையகமெங்கும் பரவத் தொடங்கின. புதன்கிழமை கம்பொல, நாவலப்பிட்டிய, பதுளை ஆகிய இடங்களுக்கும், வியாழக்கிழமை பசறைக்கும், வெள்ளியன்று நுவர எலியவுக்கும் வன்முறைகள் பரவின.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இரண்டாவது வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் - தொடரும் இனக்கொலை, ஜூலை 1983 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல்க் கைதிகள் சிங்கள சிறைக்கைதிகளாலும் சிறைக்காவலர்களாலும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையானது அச்சிறைச்சலையின் ஏனைய பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் மத்தியில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சி 3 பிரிவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 28 தமிழ்க் கைதிகள் தமக்கும் தமது சகாக்களுக்கு நேர்ந்த அநர்த்தமே நடக்கப்போகிறதென்று எண்ணத் தொடங்கினர். ஜூலை 25 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரான லியோ டி சில்வாவைச் சந்தித்த பனாகொடை மகேஸ்வரன், டக்கிளஸ் தேவானந்தா மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் தமது பாதுகாப்புக் குறித்த அச்சத்தினை அவருக்குத் தெரிவித்தனர். மேலும், தமது அறைகளைத் திறந்துவிடுமாறும், தம்மை ஒரு குழுவாக இருக்க விடுமாறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தம்மால் தம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் கோரினர். முதல்நாள் இரவு கொல்லப்பட்ட 35 தமிழ்க் கைதிகளினதும் படுகொலைகளை செவ்வாயன்று இரவு விசாரித்துக்கொண்டிருந்த கொழும்பு பிரதம நீதவான் விஜயவர்த்தன, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளைப் பணித்திருந்தார். சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளைப் பாதுகாக்குமாறு நீதிபதி பணித்தபோது அதனை நிறைவேற்றுவதைத்தவிர அமைச்சுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. பிரதான சிறைக்காவலரான கருணாரத்ன உதவி ஆணையாளரிடம் பேசும்போது, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளையும் கொன்றுவிட சிங்களக் கைதிகள் தயாராகி வருவதாக தனக்கு சிறைச்சாலையின் புலநாய்வுத்துறையினரூடாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார். உடனடியாக இத்தகவல் நீதியமைச்சின் செயலாளரான விஜேசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆகவே, ஜூலை 27 ஆம் திகதி, புதன்கிழமை, சி 3 இல் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் அனைவரையும் இளவயதுக் கைதிகளுக்கென்று தனியாகக் கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். அக்கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 9 தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட கைதிகளை கட்டடத்தின் மேற்பகுதிக்கு மாற்றிவிட்டு, அவர்கள் இருந்த பகுதியில் சி 3 பிரிவின் கைதிகளைத் தடுத்து வைத்தார்கள். செயவ்வாய்க்கிழமை தமிழ்க் கைதிகளைப் பொறுத்தவரையில் அமைதியாகக் கழிந்தது. சிறைச்சாலையில் எந்தவித அசம்பாவிதங்களும் அன்று நடக்கவில்லை. ஆனால், சிறைச்சாலைக்கு வெளியே, கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழருக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தபோதும், தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் பரவலாக நடந்துகொண்டேயிருந்தன. அரச அமைச்சர்களின் தலைமையின் கீழ் ஒருங்கமைக்கப்பட்டு நடாத்தாப்பாட்ட தாக்குதல்கள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் முற்றுப்பெற, சாதாரண சிங்களவர்கள் குழுக்களாக தமிழர்கள் மீது தாக்குதலை தொடர்ந்தும் நடத்திவந்தார்கள். சமூகத்தில் குற்றவாளிகளாக, தெருச்சண்டியர்களாக இழிவாழ்க்கை வாழ்ந்த சிங்களவர்கள் ஒரே இரவில் சிங்கள இனத்தின் காவலர்களாக தம்மை வரிந்துகொண்டு, தமிழ்மக்கள் மீதான தாக்குதல்களை வன்மத்துடனும், மூர்க்கத்தனத்துடனும் தலைமைதாங்கி நடத்தி வந்தார்கள். பாரவூர்திகளில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியபடி தமிழர்கள் வாழும் பகுதிகளூடாக வலம்வந்த பொலீஸார், அயலவர்கள் வீடுகளிலும், பாடசாலைகள், கோயில்கள் போன்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களை வெளியே வரச்சொல்லி அழைத்து, அவர்களை அகதிமுகாம்களுக்கு ஏற்றிச்சென்றனர். இது கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பொலீஸாரினால் நடத்தப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை, முதல்நாள் நடந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தினை ஆராய இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க இராணுவத் தலைமையகத்திலிருந்து காலிவீதியூடாகபயணம் செய்தார். கொல்லுப்பிட்டிய சந்தியை அண்மித்தபோது சிங்களக் காடையர் குழுவொன்று ஞானத்திற்குச் சொந்தமான கட்டடம் ஒன்றினை எரிப்பதற்குத் தயாராகி வருவதை அவர் கண்டார். கொழும்பில் பல தொழிற்சாலைகளை ஞானம் நடத்திவந்தார். இராணுவத் தளபதியின் வாகனத்திற்குப் பாதுகாப்பாக வந்த மற்றைய வாகனத்தில் மேஜர் சுனில் பீரிஸும் சில ராணுவ வீரர்களும் இருந்தனர். அந்தக் கும்பலின் அருகில் தமது வாகனத்தை நிறுத்திய அவர்கள், அக்கும்பலில் வயதானவர் போன்று தோற்றமளித்தவைக் கைதுசெய்தனர். கும்பலில் இருந்த சிலர் அந்த வயதானவரை "மரியாதைக்குரிய அமைச்சர்" என்று அழைத்தனர். ஆகவே, அவரை ஏதும் செய்யாது அங்கேயே விட்டுவிட்டு தனது இராணுவ வாகனத்தில் ஏறிக்கொண்டார் மேஜர் சுனில். அந்தக் கும்பலின் அருகில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேகக் காரும், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களும் நின்றிருந்ததை சுனில் கண்டுகொண்டார். இனவாத சிங்கள மிருகம் - சிறில் மத்தியூ அந்த மரியாதைக்குரிய அமைச்சர் வேறு யாருமல்ல, அவர் சிறில் மத்தியூ. இலங்கையின் கைத்தொழில் அமைச்சர். தன்னை சாதாரண இராணுவ மேஜர் ஒருவர் கைதுசெய்ய எத்தனித்ததனால் மிகுந்த சீற்றம் அடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, உடனடியாக ஜனாதிபதிச் செயலகத்திற்குச் சென்று இதுகுறித்து ஜெயாரிடம் முறைப்பாடு செய்தார். தன்னைக் கைது செய்ய எத்தனித்த மேஜர் சுனில் தன்னிடம் உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று சிறில் மத்தியூ பிடிவாதமாக இருந்தார். தன்னை அன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்த மேஜர் சுனிலிடம் பேசிய ஜெயார், அவரை உடனடியாக அமைச்சர் சிறில் மத்தியூவிடம் மன்னிப்புக் கோரும்படி பணித்தார். ஆனால், பீரிஸ் மறுத்துவிட்டார். தனது கடமையினையே தான் செய்ததாகவும், கும்பலில் இருந்தது அமைச்சர் மத்தியூ என்பது தனக்குத் தெரியாது என்றும் மேஜர் சுனில் ஜெயாரிடம் கூறினார். அதன்பிறகு அதுகுறித்துப் பேசுவதை ஜெயார் கைவிட்டு விட்டார். ஜெயாரின் நண்பராக இருந்த ஞானம், தனது கட்டடத்தை சிறில் மத்தியூ எரித்த விடயம் குறித்து பின்னாட்களில் ஜெயாரிடம் பேசியிருந்தார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
படுகொலையில் ஈடுபட்ட சிறைக்காவலர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றிய நீதிபதி - தொடரும் இனக்கொலை, ஜூலை 1983 ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் முன்னால் சிறைக்காவலர்களும் அதிகாரிகளும் தம் பக்கக் கதையினைச் சொல்லியிருந்தார்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் லியோ டி சில்வா பேசுகையில், அதிகாலை 2:15 மணிக்கு சிறைச்சாலையின் அபாய அலாரம் ஒலிக்கத்தொடங்கியதாகவும், இதனையடுத்து தேவாலயப் பகுதிநோக்கி தான் ஒடிச்சென்றதாகவும் கூறினான். சுமார் 300 முதல் 400 வரையான சிங்களக் கைதிகள் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எவரும் நுழைய விடாதவாறு மறித்து நிற்க, அவர்களின் பின்னால் இருந்த ஆயுதம் தாங்கிய சிறிய குழுவொன்று தமிழ்க் கைதிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்ததை தான் கண்டதாகவும் அவன் கூறினான். தன்னை உள்ளே செல்லவிடாது சிங்களக் கைதிகள் தடுத்துவிட்டதாகவும், ஆனால் பின்புலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் ஒலியும், அவர்கள் எழுப்பிய அவல ஓலங்களும் தனக்குத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் அவன் கூறினான். இதனையடுத்து, சிறைச்சாலைக்கு வெளியே முகாமிட்டிருந்த இராணுவத்தினரினரை உதவிக்கு அவன் அழைத்திருக்கிறான். உதவி ஆணையாளரான ஜான்ஸ் பேசும்போது, தானும் தேவாலயப் பகுதிக்கு உடனே ஓடிச்சென்றதாகவும், ஆனால் சிங்களக் கைதிகள் தன்னை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் கூறினான். இராணுவத்தினர் உள்ளே வந்தபோதும், அவர்களாலும் எதுவுமே செய்ய இயலாது போய்விட்டதாகவும் அவன் கூறினான். இராணுவத்தினராலும், சிறைக் காவலர்களாலும் நிலைமையினை அடக்கமுடியாமற் போகவே தான் பொரள்ளை பொலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டதாகக் கூறிய ஜான்ஸ், தனது வேண்டுகோளினை மறுதலித்த பொரள்ளைப் பொலீஸார், தம்மிடம் போதுமானளவு ஆட்கள் இல்லை என்று கூறியதாக அவன் கூறினான். பின்னர் உதவிப் பொலீஸ் அதிபரான சுந்தரலிங்கத்துடன் தான் தொடர்புகொண்டதாகவும், அவர் கூட தான் முக்கிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றிற்குச் செல்லவிருப்பதால், தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டதாக ஜான்ஸ் மேலும் கூறினான். தன்னிடம் பேசிய சுந்தரலிங்கம், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து தான் பேசுவதாகக் கூறினார் என்றும் அவன் சொன்னான். அதன்பின்னர், கொழும்பு வைத்தியசாலையுடன் தொடர்புகொண்ட ஜான்ஸ், காயப்பட்ட தமிழ்க் கைதிகளை எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்ததாகக் கூறினான். படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு ஜான்ஸ் வரமுன்னரே உதவி அத்தியட்சகரான் லியோ சென்றிருக்கிறான். தான் அப்பகுதிக்குச் செல்லும்போது, சிங்களக் கைதிகளின் கூட்டம் கலையத் தொடங்கியிருந்ததாக அவன் கூறுகிறான். மண்டபம் பகுதியில் இருந்து தான் பார்த்தபோது பி 3 மற்றும் டி 3 அறைகளில் பல தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டுக் கிடப்பதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினான். அங்கிருந்த சில கைதிகளின் உதவியுடனும், சிறைக் காவலர்கள் சிலரின் உடவியுடனும் காயப்பட்டுக்கிடந்தவர்களை மண்டபப் பகுதிக்குள் தான் கொண்டுவந்து சேர்த்ததாக லியோ கூறினான். தமிழ்க் கைதியான ரொபேர்ட் கூறும்போது, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ்க் கைதிகள், காவலாளிகளிடம் தம்மைக் காக்குமாறு மன்றாடியபோது, அக்காவலாளிகள் கைதிகளின் கழுத்துக்கள் மீது சப்பாத்துக் கால்களால் அழுத்திக் கொல்லமுயன்றதை தான் கண்டதாகக் கூறுகிறார். பின்னர் குற்றுயிராகக் கிடந்த தமிழர்களை இழுத்துவந்து புன்முறுவலுடன் வீற்றிருந்த புத்தனின் பாதங்களில் குவித்திருக்கிறது அவனை வணங்கும் காடைக்குழு. ரொபேர்ட்டைப் போன்றே சாட்சியமளித்த மாணிக்கதாசனும் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழர்கள் மீது ஏறி மிதித்த காவலர்கள் அவர்களைக் கொல்ல முயன்றுகொண்டிருந்ததை தான் பார்த்ததாகக் கூறுகிறார். ஜான்ஸ் சிறைச்சாலைக்கு திரும்பியிருந்தபோது, வாசலில் பொலீஸ் குழுவொன்று நிற்பதைக் கண்டான். அவர்களை உள்ளே செல்லவிடாமல் அங்கிருந்த இராணுவம் மறித்து வைத்திருந்தது. பொலீஸாரை உள்ளே வருமாறு ஜான்ஸ் வற்புறுத்தியபோதும், இராணுவத்தினரின் கட்டளைகளை மீறி தம்மால் உள்ளே வரமுடியாது என்று பொலீஸார் மறுத்துவிட்டனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பியிருந்த இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுடன் இதுகுறித்துப் பேசுவதற்காக தனது அலுவலகத்திற்குச் சென்றான் ஜான்ஸ். ஆனால், இறுதிவரை தளபதியுடனோ அல்லது ஏனைய ராணுவ அதிகாரிகளுடனோ அவன் இதுகுறித்துப் பேசவில்லை. அனைத்து இராணுவத் தளபதிகளும் ஜெயாருடன் உயர் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால் அவர்களைத் தான் தொடர்புகொள்ள முயலவில்லை என்று அவன் விளக்கமளித்தான். பின்னர் இன்னொரு உதவி பொலீஸ் அதிபரான ஏர்னெஸ்ட் பெரேராவுடன் ஜான்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் அவனை பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியிருக்கிறார். தமது உதவியாளர்களின் பொறுப்பில் சிறைச்சாலை நிர்வாகத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு ஜான்ஸும், லியோவும் பொலீஸ் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து தளபதி வீரதுங்கவை அவர்கள் தொடர்புகொண்டபோது, சிறைச்சாலையினுள் பொலீஸார் உட்புகுவதற்கான அனுமதியினை வீரதுங்க வழங்கியிருக்கிறார். ஜான்ஸ், பொலீஸ் தலைமைச் செயலகத்தில் நின்றவேளையில், உயர் பாதுகாப்பு கூட்டத்தை முடித்துக்கொண்டு பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கமும், உதவி அதிபர் சுந்தரலிங்கமும் அங்கு வந்திருக்கிறார்கள். ஜான்ஸிடம் பேசிய சுந்தரலிங்கம், சிறைச்சாலைப் படுகொலை குறித்து கூட்டத்தில் பிரஸ்த்தாபிக்கப்பட்டதாகக் கூறினார். ஜான்ஸ் பொலீஸ் தலைமைச் செயலகத்திலிருந்து சிறைச்சாலைக்குத் திரும்பிவந்தபோது மாலை 5 மணியாகியிருந்தது. காயப்பட்டும் கொல்லப்பட்டும் புத்தனின் பாதங்களில் குவிக்கப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை ட்ரக் வண்டிகளில் ஏற்றி கொழும்பு வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பியிருந்தார்கள். ட்ரக்குகளில் ஏற்றப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் உள்ளேயே வைத்துத் தாக்குவதைத் தான் கண்டதாக மாணிக்கதாசன் சாட்சியமளிக்கும்போது கூறினார். விசாரணைகளின்போது, ட்ரக்குகளில் ஏற்றப்படும்போது குற்றுயிராகக் கிடந்த ஒரு சில கைதிகளும் வைத்தியசாலையினை அடையும்போது கொல்லப்பட்டுவிட்டதாகவும், இவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டதனாலோ அல்லது மூச்சுக்குழல்கள் நசுக்கப்பட்டதனாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வைத்தியராகக் கடமையாற்றிய பேரின்பநாயகம், ஜான்ஸ் மாலை 5 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபின்னரே அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் அறையினுள் காயப்பட்ட தமிழ்க் கைதிகள் ஒவ்வொருவராக நோயாளர் காவுப் படுக்கைகளில் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டார்கள். இரவு 10 மணிவரை பரிசோதனைகளை பேரின்பநாயகம் நடத்திக்கொண்டிருந்தார். தன்னிடம் கொண்டுவரப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள் என்று அவர் கூறினார். தாக்குதலில் காயப்பட்டவர்கள் என்று ஜான்ஸ் கருதிய தமிழர்களை வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பிவைக்க ஜான்ஸ் முயன்றுகொண்டிருக்க, தன்னிடம் கொண்டுவரப்பட்ட 35 தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பேரின்பநாயகம் அவனிடம் கூறினார். ஆகவே, 35 தமிழர்களின் உடல்களையும் வைத்தியசாலையின் சவ அறைக்கு அனுப்புவதென்று அவன் முடிவெடுத்தான். அப்போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது எனும் சிக்கல் உருவானது. சிறைச்சாலைகள் நீதித்துறையின் கட்டுப்பாட்டினுள் வருவதால், இதுகுறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜான்ஸ் நீதியமைச்சின் செயலாளரான மேர்வின் விஜேசிங்கவிடம் கோரினான். பின்னர், நீதிபதியின் அணுசரணையுடன் உடல்கள் மீது பரிசோதனை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை விஜேசிங்க ஆரம்பித்தார். அதன்படி, கொழும்பு பிரதம நீதிபதி கீர்த்தி சிறிலால் விஜேவர்த்தனவை இக்கொலைகள் தொடர்பாக விசாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் பணிக்கவே, நீதிபதியும் சட்ட வைத்திய அதிகாரி சல்காடொவை கொல்லப்பட்ட தமிழர்கள் மீது பிரேதப் பரிசோதனையினை ஆரம்பிக்குமாறு பணித்தார். அதற்கமைய, பிரேதப் பரிசோதனையும், சட்ட வைத்திய விசாரணையும் செவ்வாய் இரவு நடைபெற்றன. மறுநாள், புதன் காலையில் இவை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டன. கொழும்பு நீதிபதிம் இந்த ஆட்கொலைகளை, "பொதுமக்களின் கலவர மனநிலையினால் உந்தப்பட்ட கொலைகள்" என்று தீர்ப்பளித்தார். தமது கடமைகளில் இருந்து நழுவினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைத்து சிறைக் காவலர்களையும், அதிகாரிகளையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலுமிருந்து விடுவித்து, குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தார். சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டதனால், சிறைக் காவலர்களால் எதுவுமே செய்ய முடியாது போய்விட்டது என்று அவர் வாதிட்டார். பின்னர், பொரள்ளைப் பொலீஸாரைப் பார்த்து, "விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாரென்பதைக் கண்டுபிடியுங்கள்" என்று கூறினார். இப்படுகொலைகள் குறித்து முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன, இப்படுகொலைகளுக்கு ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? இதற்குத் தலைமை தாங்கியவர்கள் யார்? சிறைக்காவலர்களும் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆகிய இக்கேள்விகள் எவையுமே சட்ட வைத்திய விசாரணையில் தவிர்க்கப்பட்டிருந்தன. தாக்குதலில் முன்னின்று செயற்பட்டவர்கள் குறித்த கேள்விகளோ அல்லது அவர்களின் பெயர் விபரங்களோ இந்த விசாரணைகளில் முற்றாகத் தவிர்க்கப்பட்டன. இப்படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்களான சி 3 பகுதி தமிழ்க் கைதிகளின் வாக்குமூலங்கள் வேண்டுமென்றே விசாரணைகளை நடத்திய நீதிபதியினால் தவிர்க்கப்பட்டிருந்தன. இப்படுகொலைகளின் முன்னின்று செயற்பட்டவர்களின் பெயர்களை சி 3 பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தம்முடன் நடந்துகொள்ளும் பல சிறைக்காவலர்களே இப்படுகொலைகளை ஆரம்பித்து வைத்தனர் என்பதையும் தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். நாடுமுழுதும் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டிருந்த படுகொலைகளின் தொடர்ச்சியே சிறைச்சாலைப் படுகொலைகளும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. படுகொலைகளை நடத்தியவர்களுடன் இராணுவம் நின்றிருந்தது. அக்கூட்டத்தைக் கலைக்க ஒரு வேட்டினைத்தன்னும் இராணுவம் தீர்க்கவில்லை. தமிழர்களின் சாட்சியங்களை உறுதிசெய்வதுபோலவே சிறைச்சாலை உதவி ஆணையாளர் ஜான்ஸின் வாக்குமூலம் அமைந்திருந்தது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக, அச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை புலநாய்வுத்துறையின் இயக்குநரிடம் வழக்கினை விசாரித்த நீதிபதி கையளித்து, அவற்றினை சட்டத்திற்கு அமைய எரித்துவிடும்படி கோரினார். ஜூலை 27 ஆம் திகதி, புதன் பிற்பகல் வேளையில்,வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட35 தமிழர்களின் உடல்கள் பொரள்ளை கனத்தை மயானத்திற்கு சிறைச்சாலை ட்ரக் வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்டன. அங்கு வெட்டப்பட்டிருந்த பாரிய குழி ஒன்றில் ட்ரக்குகளில் இருந்த சிறைக்காவலர்களினால் அவை தூக்கி வீசப்பட்டன. உடல்களின் மீது மரக்கட்டைகள் எறியப்பட்டு, அவற்றின்மீது பெற்றொல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டபோது அது பாரிய தீப்பிழம்பாக உருமாறியது. தமிழர்களின் சிதையிலிருந்து வெளிக்கிளம்பிய பாரிய தீப்பிழம்பு வான் நோக்கி எழுந்து சென்றது. அன்றிலிருந்து இலங்கை இரத்தம் சிந்திக்கொண்டே இருக்கிறது. அந்த மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அம்மொழியினை நான் கற்கவில்லை அண்ணா, பேசமட்டுமே என்னால் முடியும்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து அவரின் நாவினைச் சுவைத்த சிங்கள மிருகங்கள் - தொடரும் இனக்கொலை ஜூலை 1983 தம்மைக் கொல்லப்போகும் சிறைக் காவலர்களால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் குட்டிமணியும் தேவனும் சுமார் இரவு 8 மணியளவில் வெளியே நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து தமிழ்ச் சிறைக்கைதிகள் அறிந்துகொண்டனர். திருநெல்வேலித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற செய்தியை குட்டிமணியே தமிழ்க் கைதிகளுக்குத் தெரிவித்திருந்தார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு நாளாந்தம் செய்தித் தாள்களை வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசதாசன் ஆகியோர் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர். தமக்கெதிரான தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். தமிழ்க் கைதிகளின் கொலைக்களம் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை இரவு 10 மணியளவில் சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகிவருவதை தமிழ்க் கைதிகள் உணரத் தொடங்கினர். அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 72 தமிழ்க் கைதிகளில் பெரும்பாலானோர் சக ("+") அடையாளம் போன்ற வடிவில் கட்டப்பட்ட இரு மாடிக் கட்டடத்தினுள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சக அடையாளத்தினாலேயே அப்பகுதி தேவாலயப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடதிற்கு ஏ, பி, சி டி என்று நான்கு பிரிவுகள் இருந்தன. இவற்றுள் கீழ்த்தளத்தில் இருந்த பகுதிகள் ஏ3, பி3, சி3, டி3 என்று பெயரிடப்பட்டிருந்தன. குட்டிமணியும் ஏனைய ஐந்து கைதிகளான தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசுதாசன் ஆகியோரும் கீழ்ப்பகுதியின் முகப்பில் அமைந்திருந்த பி3 சிறையறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். டி 3 சிறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 29 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும், விரைவில் இவர்களை விடுவிக்க எண்ணியிருந்ததாகவும் ஜான்ஸ் கூறியிருந்தார். சி 3 பகுதியில் மேலும் 28 தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், ரொபேர்ட், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பாஸ்கரன், தேவகுமார், ஜயக்கொடி ஆகியோர் உட்பட மேலும் சில தமிழ்க் கைதிகளும் அங்கே தடுத்துவைக்கப்படிருந்தனர். ஏ3 பகுதியில் தீவிர கிரிமினல்க் குற்றவாளிகளும், தப்பிப் போக எத்தனித்தவர்களும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அலிடாலியா விமானத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட சேபால எக்கநாயக்கவும் அப்பகுதியிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தான். இந்த நான்கு பகுதிகளுக்கும் பொதுவான சந்திபோன்ற பகுதியில் மண்டபம் போன்றதொரு அறை அமைக்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவுக்கும் செல்லும் வாயில்ப் பகுதியில் தடித்த இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட பாரிய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு இரும்புக் கதவிற்கு அருகிலும் இரு ஆயுதம் தாங்கிய காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இப்பகுதிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த இரு பிரிவுகளிலும் சுமார் 800 வரையான கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனைவிடவும் மேலும் 9 இளவயது தமிழ் அரசியல்க் கைதிகள் தனியான பகுதியொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இளவயதுக் குற்றவாளிகளுக்கான கட்டடம் என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் வைத்தியர் வி. தர்மலிங்கம், கோவை மகேசன், வைத்தியர் ராஜசுந்தரம், ஏ. டேவிட், கே நித்தியானந்தன், பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சின்னராசா, பாதிரியார் ஜயதிலகராஜா மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் இப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், இவர்களினால் ஆபத்துக்கள் எதுவும் இருக்காது என்று கருதியதனாலும், அரசாங்கம் இவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தது. அதிகாலை 2 மணியிருக்கும், தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மிக அண்மையாக பலபேர் ஆர்ப்பரித்தவாறே வந்துகொண்டிருப்பதை தமிழ்க் கைதிகள் உணர்ந்துகொண்டனர். "தமிழர்களைக் கொல், குட்டிமணியைக் கொல்" என்று அவர்கள் ஆவேசமாகக் கத்திக்கொண்டுவருவதை அவர்கள் தெளிவாகக் கேட்டார்கள். இடையிடையே, "அவர்களின் இரத்தத்தை நாம் குடிப்போம்" என்றும் பலர் வெறிகொண்டு கத்தத் தொடங்கினார்கள். சிங்களக் கைதிக் கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தவனை குட்டிமணி நன்கு அறிந்திருந்தார். "தம்பி" பிரபாகரனின் உடல்ச் சாயலில் அவன் காணப்பட்டதால் அவனை "தம்பி" என்றே குட்டிமணி அன்புடன் அழைத்துவந்தார். குட்டிமணியைப் போலவே ஏனைய தமிழ்க் கைதிகளும் அந்தச் சிங்களக் கைதியை தம்பி என்றே அழைத்துவந்தனர். தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதில் அவனே ஈடுபட்டுமிருக்கிறான். அந்தத் தம்பியே வெறிகொண்ட சிங்களக் கைதிக் காடையர்களை குட்டிமணியின் அறைநோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். கைகளில் வாட்கள், கத்திகள், இரும்புக் கம்பிகள், சட்டங்கள், கூர்மையான முனையினைக் கொண்ட பல ஆயுதங்களை காவிக்கொண்டு சுமார் 25 பேர் அடங்கிய சிங்களக் கைதிகள் தலைமை தாங்க மீதிச் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாவதாக ஆறு டெலோ போராளிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பி 3 அறியினை தாம் கொண்டுவந்த திறப்புக்களைக் கொண்டு திறந்தார்கள். கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்த ஆறு தமிழ்க் கைதிகளின்மீதும் பாய்ந்தது சிங்களக் காடையர் குழு. சாவது உறுதியாகிய நிலையில் வெற்றுக்கைகளால் தம்மைத் தற்காத்துக்கொள்ள எதிர்த்தாக்குதலில் இறங்கினார்கள் தமிழர்கள். குட்டிமணிக்கு தற்காப்புக் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. அதனால், ஆரம்பத்தில் தன்னைத் தாக்கவந்த சிங்களவர்களை அவர் திருப்பித் தாக்கிக்கொண்டிருந்தார். தனது கைகளாலும், கால்களாலும் அவர்கள் மீது கடுமையாகத் தாக்கினார். ஆனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் ஈடுகொடுக்கமுடியவில்லை. பல சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஆயுதங்களால் தாக்கியபோது அவர் பலமிழந்து கீழே வீழ்ந்தார். கீழே வீழ்ந்த குட்டிமணியை இரும்புக் கம்பிகளால் தாக்கியபின்னர் வாட்களால் கடுமையாக வெட்டத் தொடங்கினர் சிங்களவர்கள். குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை சிறை அறையிலிருந்து நடுப்பகுதியில் அமைந்திருந்த மண்டபத்திற்கு அக்கூட்டம் இழுத்துவந்தது. பின்னர் அவரை முழங்காலில் இருத்திவிட்டு கூராக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை அவரின் கண்களுக்குள் செலுத்தி அவரின் கண்கள் இரண்டையும் பிடுங்கியெடுத்தார்கள். இந்தக் கொடூரத்தை முன்னால் நின்றவர்கள் செய்துகொண்டிருக்க மீதமாயிருந்த அனைத்துச் சிங்களக் காடையர்கள் வெற்றி ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவரின் கண்களைத் தோண்டியெடுத்தவர்கள் அவரைப் பார்த்து, "இந்தக் கண்களால்த்தானே ஈழம் மலர்வதைப் பார்க்கப்போகிறேன் என்று கூறினாய்? இனி எப்படிப் பார்க்கப் போகிறாய் என்று பார்க்கலாம்" என்று எள்ளி நகையாடினார்கள். குட்டிமணிக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவேளை அவர் ஒரு பேச்சினை தனது கூண்டிலிருந்து வழங்கியிருந்தார். அப்பேச்சின் போது, தான் இறந்ததன் பின்னர் தனது கண்களை பார்வையற்ற தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்குத் தானமாக வழங்கத் தான் விரும்புவதாகவும், அவன் கண்களூடாக மலரப்போகும் தமிழ் ஈழத்தைத் தான் கண்டு மகிழ்வேன் என்றும் கூறியிருந்தார். இப்பேச்சினையே சிங்களக் காடையர்கள் அந்தவேளயில் எள்ளி நகையாடி குட்டிமணியின் கண்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது குட்டிமணியின் தலை கீழே தொங்கத் தொடங்கியது. முழங்காலில் இருந்துகொண்டு கீழே வீழும் தறுவாயில் இருந்த குட்டிமணியின் அருகில் ஓடிச்சென்ற இன்னொரு காடையன், அவரின் தலைமயிரைப் பிடித்து, பின்னால் இழுத்து, வாய்க்குள் தனது கைய்யினை விட்டு அவரது நாவினை வெளியே இழுத்தெடுத்தான். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியினால் குட்டிமணியின் நாவினை வெட்டியெடுத்த அவன், தன் வாய்க்குள் அதனைப் புகுத்திக்கொண்டே, "புலியின் இரத்தத்தைக் குடித்துவிட்டேன்" என்று வெற்றிக்களிப்புடன் பாடத் தொடங்கினான். இதன் பின்னர் குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை அக்கும்பல் தமது வெறியடங்கும் வரையில் தாக்கிக் கொன்றுபோட்டது. முதலாவது அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு டெலோ போராளிகளைக் கொன்றபின்னர், சிங்களக் காடையர்கள் டி 3 ஆம் அறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படியில் கைதுசெய்து அடைத்துவைக்கப்படிருந்த தமிழ்க் கைதிகளின் அறை நோக்கி ஓடத் தொடங்கியது. அந்த அறையினுள் 29 தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தமது கைகளில் இருந்த திறப்புக்களைப் பாவித்து அந்த அறையினைத் திறந்துகொண்ட கும்பல், தமிழ்க் கைதிகளின்மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. தாக்குதல் நடந்துகொண்டிருந்தவேளை வெறும் 16 வயதே நிரம்பிய மயில்வாகனம் எனும் சிறுவன் அறையின் ஓரத்தில் குறுக்கிக்கொண்டே ஒளிந்துகொண்டார். சிங்களக் காடையர்களுடன் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சிறைக் காவலன் ஒருவன் சிறுவன் மயில்வாகனத்தைக் கண்டுகொண்டான். உடனே அச்சிறுவன் மீது பாய்ந்த காவலாளி தனது கத்தியால் அச்சிறுவனைச் சரமாரியாக் குத்திக் கொன்றான். டி 3 அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு தமிழ்க் கைதிகள் இந்த கொடூரத்தை மிகுந்த அச்சத்துடன் அனுபவித்துக்கொண்டிருந்தனர். காற்று உட்புகவென சுவர்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஓட்டைகளினூடாக அடுத்த அறைகளில் நடக்கும் அகோரத்தினை மாணிக்கதாசன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையிலும் கொல்லப்பட்ட தமிழர்களை வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள் அவ்வுடல்களை மண்டபத்தின் நடுப்பகுதியில் வீற்றிருந்த புத்தனின் சிலையின் முன்னால் குவிக்கத் தொடங்கினர்.புத்தனின் சிலைக்கு அருகில் இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் எனப்படும் கந்தையா ராஜேந்திரன் அங்கு நடந்துகொண்டிருந்த அகோரங்களை அறையில் இருந்த ஏனையவர்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாணிக்கதாசன் தான் அங்கே கண்ட அக்கிரமங்களை, படுகொலையின் அகோரத்தினை வெளியுலகிற்குச் சொல்ல உயிர்தப்பினார்.இரண்டாம் நாள்ப் படுகொலையில் ரொபேர்ட் கொல்லப்பட்டாலும் கூட, அவர் முதல் நாள் வழங்கிய படுகொலைகளின் தொடர்ச்சியான விவரணத்தை இன்னும் அங்கிருந்து உயிர் தப்பிய பலர் மறக்கவில்லை. திங்கட்கிழமை இரவு நடந்த படுகொலைகள் முடிந்தநிலையில், தாக்குதலை முன்னின்று நடத்திய சிங்களவர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் நின்று படுகொலைகளில் பங்கெடுத்துக்கொண்ட சிறைக்காவலர்களுக்கும் இடையே சிங்களத்தில் நடந்த சம்பாஷணையினை ரொபேர்ட் தனது சக தமிழ்க் கைதிகளுக்கு தமிழில் கூறிக்கொண்டிருந்தார். முதலாம் நாள் படுகொலைகளுக்குப் பின்னர் சி 3 அறையில் 28 கைதிகளும், இளவயதுப் பகுதியில் 9 பேரும் இன்னமும் மீதமிருந்தனர். தாக்குதல்க் கூட்டத்தில் பேசிய சிறைக் காவல் அதிகாரியொருவன், "இன்றைக்கு இது போதும்" என்று கூறினான்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறைச்சாலைப் படுகொலைகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கான வாசல் அன்று பிற்பகல் 2:45 மணிக்கே சிறைச்சாலையில் நடக்கும் கலகம் பற்றி பொலீஸார் அறிந்திருந்தனர். தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை பொலீஸ் ரேடியோ வலையமைப்பில் பின்வரும் தகவல்கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன. தெற்கு பிரிவு 2 இலிருந்து தெற்கு பிரிவு 1 இற்கான தகவல் : சிறைச்சாலையில் மிகவும் தீவிரமான சூழ்நிலை ஒன்று நிலவுகிறது. தமிழ்ச் சிறைக்கைதிகளை கொன்றுகொண்டிருக்கிறார்கள். திரு ஜான்ஸ் அவர்கள் பொலீஸாரின் உதவியைக் கோரியிருக்கிறார். ஆனால், எம்மால் அங்கு போக முடியாது. அவ்விடத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் இப்போது வைத்திருக்கிறது. தெற்கு பிரிவு 1 இலிருந்து பிரிவு 2 இற்கு : இராணுவம் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதென்றால், நாம் அப்பகுதியிலிருந்து விலகியிருப்பதே நல்லது. இராணுவத்தினருடன் மோதுப்படுவது அவ்வளவு நல்லதல்ல. தெற்குப் பிரிவு 2 இலிருந்து பிரிவு 1 இற்கு : புரிகிறது சேர், அப்படியே செய்யலாம். கிறிஸ்டோபர் தியடோர் ஜான்ஸ் எனும் அதிகாரியே உதவிச் சிறைச்சாலைகள் ஆணையாளராக அந்நாட்களில் கடமையாற்றி வந்தார். சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொட வெளிநாடொன்றிற்குப் போயிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் திட்டமிட்ட வகையில் கலவரங்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. சரியாக 2 மணி அடிக்க, முன்னர் திட்டமிட்டதுபோலவே சுமார் 300 இலிருந்து 400 வரையான சிங்களச் சிறைக்கைதிகள் ஆலயப் பிரிவு (Chapel Section) அமைந்திருக்கும் பகுதிநோக்கி திரளாக ஓடிக்கொண்டிருந்தனர். சிறைச்சாலையின் தேவாலயப் பகுதி என்றழைக்கப்படும் பகுதியிலேயே அதியுயர் பாதுகாப்புக் கொண்ட பகுதி அமைந்திருந்தது. அப்பகுதியை நோக்கி ஆவேசமாகக வந்துகொண்டிருந்த சிங்களச் சிறைக்கைதிகளின் கும்பல், "தமிழர்களைக் கொல்", "குட்டிமணியைக் கொல்" என்று உரக்கக் கோஷமிட்டவாறே அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை, சிங்களச் சிறைக்கைதிகளால் மனித நேயத்திற்கு முரணனான வகையில் கொடூரமாக தமிழ்ச் சிறைக்கைதிகளில் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய 19 தமிழர்களில் மூன்று பேருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடனான நேர்காணலின்போது, தாம் அனுபவித்த இக்கொடூர நிகழ்வினை அவர்களின் பார்வையிலேயே இங்கு எழுதுகிறேன். இதே சாட்சியத்தைத்தான் உயிர்தப்பிய தமிழர்கள் ஜனாதிபதியின் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையிலும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிங்களக் காடையர்களால் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியான பொரள்ளைச் சந்திக்கு அண்மையாகவே வெலிக்கடைச் சிறைச்சாலை அமைந்திருக்கிறது. வெளியில் நடந்துகொண்டிருந்த கலகம், தீவைப்புக்கள், கட்டட இடிப்புக்கள் போன்றவற்றை உள்ளேயிருந்த கைதிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கின்றனர். "வெளியே பாரிய அசம்பாவிதம் ஒன்று நடந்துகொண்டிருப்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் எதற்காக நடக்கிறதும என்பதுபற்றி எமக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை" என்று புளொட் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவர் மாணிக்கதாசன் என்னிடம் கூறினார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வேண்டுமென்றே தாமதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் - தொடரும் தமிழ் இனக்கொலை, ஜூலை 1983 தமிழரின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்களுடன் சாதாரணச் சிங்களப் பெண்மணிகள் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களின் கைகளில் இருந்த தமிழர்களின் வீடுகள் குறித்த விபரப் பட்டியல்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களே தமிழர்கள் மீதான தாக்குதலை தலைமையேற்று முன்னின்று நடத்தியமை ஆகியவை மட்டுமே அரச உயர்பீடம் இத்தாக்குதல்களை பின்னால் இருந்து இயக்கிவருகிறது என்பதை நிறுவதற்கான காரணங்களாக இருக்கவில்லை. தாக்குதல்கள் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்தவேளை அதனைத் தடுக்காது, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த இறுதிவரை ஜெயார் காட்டிய அசமந்தப் போக்கும் இத்தாக்குதல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அதியுயர் பீடமே நடத்துகிறது என்பதற்கு இன்னொரு காரணமாகிவிடுகிறது. ஜூலை 83 இனக்கொலையினைத் திட்டமிட்டு நடத்திய சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதி ஜே ஆர் ஜெயவர்த்தன தனது அலுவலகத்திற்கும், வாசஸ்த்தலத்திற்கும் வெளியே நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான தாக்குதல்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஜெயவர்த்தன சொல்லலாம். ஆனால், நடந்துவரும் அக்கிரமங்கள் குறித்து அவரது ஆலோசகர்களாலும், காவல்த்துறை அதிகாரிகளாலும் அவருக்குத் தொடர்ச்சியாகவே அறிவுருத்தப்பட்டு வந்தது. தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதும் அவர்களது சொத்துக்களும் உடைமைகளும் எரியூட்டப்பட்டு வருவதும் அவருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசின் அருகில்க் கூட கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் உடல் கிடப்பதை ஒரு பொலீஸ் அதிகாரியே ஜெயாருக்குச் சொல்லியிருந்தார். ஞாயிறு இரவு முதல் நிலைமை மோசமாகி வருவது குறித்து பொலீஸ் அதிகாரிகள் ஜெயாருக்கு எச்சரித்து வந்ததுடன் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறும் பலமுறை கேட்டிருந்தார்கள். மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் ஜெயாரின் அமைச்சர்கள் சிலரும் பொலீஸ் அதிகாரிகளும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு ஜெயாரிடம் மன்றாட்டமாக வேண்டிக்கொண்டிருந்தார்கள். கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பொலீஸாரின் தலைமைச் செயலகத்தில் திங்கள் காலை 6:30 மணிக்கு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதென்றும், பொலீஸ் மா அதிபரூடாக பொலீஸார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனும் தகவலை ஜனாதிபதிக்குச் சொல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பொலீஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு தமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தெரிவித்தார். ஆனால், பொலீஸ் மா அதிபர் பரிந்துரைத்த ஊரடங்கினை ஜெயார் அமுல்ப்படுத்த விரும்பவில்லை. அத்துடன், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பொலீஸாரையோ, இராணுவத்தையோ பணிப்பதையும் ஜெயார் முற்றாக நிராகரித்திருந்தார். தமிழரின் உடைமைகள் கடைகளிலிருந்து வெளியே வீசி எறியப்பட்டுத் தீமூட்டப்படுகின்றன அமைச்சர்களான தொண்டைமான், பெஸ்ட்டஸ் பெரேரா, ரொனி டி மெல் மற்றும் தேவநாயகம் ஆகியோர் தாம் ஜனாதிபதியை திங்கள் காலை சந்தித்தபோது ஊரடங்குச் சட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோரியதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால், ஜெயார் அவர்கள் கோரிக்கையினை நிராகரித்து விட்டார். என்னுடன் பின்னர் பேசிய அமைச்சர்களும், பொலீஸ் அதிகாரிகளும் நாட்டில் நடந்துகொண்டிருந்த அக்கிரமங்கள் குறித்து ஜெயார் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை என்று கூறினார்கள். தொண்டைமானும் இதனையே என்னிடம் கூறினார். ஆனால், அன்று காலை ஜெயாருடன் பேசிய சில பொலீஸ் அதிகாரிகள் எனக்கு வேறுவிதமான செய்தியைச் சொன்னார்கள். அதாவது பொலீஸ் உயரதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதிக்கும் தேவையான நேரத்தில் அறிவுரைகளை வழங்கிய ஜெயார், அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் பணித்ததாகக் கூறினர். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவெனில், இந்திய உதவி உயர்ஸ்த்தானிகரான அப்யங்கரின் மனைவிக்குப் பாதுகாப்பளிக்குமாறு ஜெயார் உதவிப் பொலீஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டபோது நடந்த சம்பவமாகும். இந்திய உயர்ஸ்த்தானிகர் சத்வால், தில்லியில் அப்போது நின்றதால், உதவி உயர்ஸ்த்தானிகர் அப்யங்கரே அப்பதவியை அப்போது வகித்துவந்தார். அவரது வாசஸ்த்தலம் பார்க் வீதியில் அமைந்திருந்தது. எட்வேர்ட் குணவர்த்தனவே கொழும்பு நகரின் உதவிப் பொலீஸ் மா அதிபராக அப்பொழுது பணியாற்றி வந்தார். அவர் ஜெயாருக்கு நன்கு விசுவாசமான ஒரு அதிகாரி. அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் எழுதிய இரத்தமும் சயனைட்டும் எனும் புத்தகத்தில் 1983 ஆம் ஆண்டு இனக்கொலையில் இடம்பெற்ற சில விடயங்கள் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறார். 256 ஆம் 257 ஆம் பக்கங்களில் அப்யங்கரின் மனைவியின் பாதுகாப்புக் குறித்த திகிலான பதிவுகளை அவர் சேர்த்திருக்கிறார். பொலீஸாரின் வானொலி வலையமைப்பில் தலைமைச் செயலகத்தின் பணிப்புரை வெளிவந்தபோது எட்வேர்ட் குணவர்த்தன நாரஹேன்பிட்டவில் இருந்தார். "அனைத்து அதிகாரிகளுக்கும், கொழும்பு தெற்குப் பிரிவில் நடமாடும் பிரிவுகளுக்கும் தலைமையகத்திலிருந்து விடுக்கப்படும் அறிவித்தல்: இந்திய உப உயர்ஸ்த்தானிகரின் இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். திருமதி அப்யங்கர் எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் அகப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மீண்டும் கூறுகிறேன், உடனடியாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக்கிய பணியாகும்" என்று கூறப்பட்டது. அதற்குப் பதிலளித்த குணவர்த்தன, "கொழும்பு தெற்குப் பிரிவிலிருந்து தலைமைஅயகத்திற்கான செய்தி : உங்கள் தகவல் கிடைக்கப்பெற்றது, நாம் உடனடியாக அங்கு செல்கிறோம்" நடமட்டும் தெற்குப் பிரிவிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு : "தகவல் கிடைத்தது, வெள்ளவத்தை நிலையத்தில் நிற்கிறோம், பார்க் வீதி நோக்கிப் பயணமாகிறோம். எல்லா வீதிகளும் மிகுந்த நெரிசலாகக் காணப்படுகிறது". கொழும்பு தெற்கு, பிரிவு 2 இலிருந்து தலைமையகத்திற்கான செய்தி : "நாம் பார்க் வீதிக்கு அருகில்த்தான் நிற்கிறோம். வாகன நெரிசலூடாகப் போக முடியவில்லை. கால்நடையாக இரு கொன்ஸ்டபிள்களுடன் அப்பகுதி நோக்கி ஓடிக்கொன்டிருக்கிறேன். பார்க் வீதியின் திசையிலிருந்து கரும்புகை மேலெழுந்து வருகிறது" தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து செய்தி: நான் பார்க் வீதிக்கு உப பொலீஸ் மா அதிபருடன் சென்றுகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அறிவியுங்கள்". கொழும்பு தெற்கு பிரிவு 2 இலிருந்து பொலீஸ் மா அதிபருக்கு : "நான் பேசுவது கேட்கிறதா சார்?" பொலீஸ் மா அதிபர் : "ஆம் கேட்கிறது". கொழும்பு தெற்கு பிரிவு 2 : "நான் பார்க் வீதியில் நிற்கிறேன், அங்கு புகை மண்டலம் எதனையும் காணவில்லை. உயர்ஸ்த்தானிகரின் வீட்டில் நெருப்பு எதனையும் காண முடியவில்லை. திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருக்கிறார். சற்றுத் தொலைவிலிருக்கும் ஜிம் ரட்ணத்தின் வீட்டிலிருந்தே புகைமண்டலம் எழுந்து வருகிறது சேர்". பொலீஸ் மா அதிபர் : "நன்றி தெற்கு பிரிவு 2, நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்". தெற்கு பிரிவு 2 : "அப்படியே செய்கிறோம் சேர்". திருமதி அப்யங்கரின் வீட்டினை பொலீஸ் மா அதிபர் அடைந்தபோது அவரை வரவேற்ற திருமதி அப்யங்கர், அவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். அப்போது கொழும்பு தெற்கின் பொலீஸ் அதிகாரியும் இரு கொன்ஸ்டபிள்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு தனது நன்றியை பொலீஸ் மா அதிபர் தெரிவித்தார். பொலீஸ் மா அதிபருக்கும் அவரது உதவியாளருக்கும் தேநீரை வழங்கியவாறே பேசிய திருமதி அப்யங்கர், தான் தனது வீட்டில் தீப்பிடித்ததாக எவருக்கும் சொல்லவில்லை, அயலில் தீப்பற்றியிருக்கிறது என்றுதான் வெள்ளவத்தை பொலீஸாருக்கு அறிவித்தேன் என்று கூறினார். உடனேயே அவ்விட்டிலிருந்து ஜனாதிபதிக்குத் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பொலீஸ் மா அதிபர், நிலைமையினை விளக்கி, திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருப்பதாகக் கூறினார். குணவர்த்தனவின் தகவல்கள் ஜெயார் நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தார் என்பதையே கூறுகின்றன. கொழும்பில் நிலைமை மிக மோசமாகக் காணப்பட்டது. வீதிகளில் பல அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள தொழிலாளர்கள் அத்திணைக்களங்களுக்குச் சொந்தமான பாரவூர்திகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சனமிகுதியால் பாரவூர்திகளின் பின் கதவினை கீழே இழுத்துவிட்டு அதன் மீதும் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவ்வாறு பயணித்துக்கொண்டே, "தமிழர்களை அடித்து விரட்டுங்கள், தமிழர்களைக் கொல்லுங்கள், சிங்களவர்களுக்கே வெற்றி" என்று கோஷமெழுப்பிக்கொண்டே சென்றனர். காலை 10 மணியளவில் சமூகத்திற்கும், மதத்திற்குமான மத்திய நிலையத்தின் இயக்குனர் பாதிரியார் திஸ்ஸ பாலசூரியர் டீன் வீதிக்குச் சென்று தனது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல வருமாறு வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டிக்கு சைகை காண்பித்தார். இதனை அவதானித்த நவ சம சமாஜக் கட்சியின் லீனஸ் ஜயதிலக்க தமிழ் அகதிகளை இராணுவத்தினரிடம் கையளிக்க வேண்டாம் என்று தடுத்தார். "அவர்கள் சாதாரண இராணுவத்தினர் இல்லை, இராணுவ சீருடையில் பவனிவரும் அரச காடையர்கள். அவர்களிடம் தமிழர்களைக் கையளித்தால் நிச்சயம் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார். லேக் ஹவுஸில் என்னுடன் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் என்னுடன் பேசும்போது பல அரச அமைச்சர்கள் தமது தொகுதிகளில் இருந்து காடையர்கள் பலரை அரச வாகனங்களிலேயே கொழும்பிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினர். இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களும் இத்தேவைக்காகப் பாவிக்கப்பட்டன. இலங்கை மின்சார சபையின் பல வாகனங்களும் காடையர்களை கொழும்பிற்கு ஏற்றிவந்தன. அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்களும் இத்தேவைக்காக அரச அமைச்சர்களால் பாவிக்கப்பட்டன. வீதிகளில் இராணுவ வாகனங்கள் தென்பட்ட போதெல்லாம், "சிங்கள் இராணுவத்திற்கு வெற்றி கிட்டட்டும்" என்று சிங்களக் காடையர்களும் மக்களும் உரக்கக் கோஷமிட்டனர். தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த காடையர்களுடன் பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்பட்டனர். பியதாச பின்வரும் சம்பவத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார், "காலி வீதியும், டிக்மன்ஸ் வீதியும் சந்திக்கும் சந்தியில் உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த ஆறு தமிழர்களைத் துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் மறித்து வைத்திருந்து அவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த காடையர்களிடம் அவர்களைக் கையளித்தபோது, அவர்கள் தமிழர்கள் ஆறு பேரையும் அடித்துக் கொன்றதோடு இராணுவத்தினருடன் சேர்ந்து உடல்களைத் தீமூட்டி எரித்தனர்" என்று கூறுகிறார். எரிக்கப்பட்ட மினிபஸ், இனக்கொலை ஜூலை 1983 தமிழ்மக்கள் மீதான படுகொலைகளும், அவர்களின் சொத்துக்களை சூறையாடுதலும், சொத்தெரிப்புக்களும் தெகிவளை, கொகுவளை, கோட்டே, நாவலை, பேலியகொட மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவின. இறுதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளை கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. இந்தியர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. உலக வங்கியிடமிருந்து கடன்பெற்ற ஒரே இலங்கையரான ஏ. வை ஞானம் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், மகராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், சுமார் 4,000 சிங்களத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த இந்திய புடவைத் தொழிற்சாலையான ஹிட்ரமணி உள்ளிட பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன.யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான கே குணர்டணம் என்பவருக்குச் சொந்தமான கே ஜி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது பல சினிமாக் கொட்டகைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கையின் மிகப்பெரிய ஆடையுற்பத்தி நிறுவனமான ஹென்ட்லி காமன்ட்ஸ் உட்பட பல ஆடைத் தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டன. இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் ஓமான் வங்கி என்பனவும் எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கொழும்பில் இயங்கிவந்த அனைத்து சினிமா அரங்குகளும் எரிக்கப்பட்டன. தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சர்வதேசச் செய்தியாளர்களின் கூற்றுப்படி இந்த வன்முறைகள் மிகக் கொடூரமாகவும், இரத்தக்களறி நிறைந்தும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனது விசாரணைகளின்படி, தாக்குதல் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தல் யாதெனில், "உங்களின் தாக்குதல்கள் வேகமாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்" என்பதுதான். தமிழர் மீதான இந்த திட்டமிட்ட இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு அரச உயர்பீடம் சிங்களக் காடையர்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான நான்குமணிநேர அவகாசத்தினையே வழங்கியிருந்தது. ஆகவே, சிங்களக் காடைக்குழுக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் சரியாக காலை 10 மணிக்குத் தாக்குதல்களை ஆரம்பித்ததுடன், சரியாக 2 மணிக்கு தாக்குதல்களை முடித்துக்கொண்டு பின்வாங்கத் தொடங்கினர். கொழும்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்தது இதுதான். 4 மணிநேரத்திற்கு தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதனால்த்தான் சில வீடுகள் தப்பிக்க முடிந்தது. குறிப்பாக தாக்குதல் ஆரம்பித்த இடங்களில் இருந்து தொலைவில் அமைந்திருந்த தமிழரின் வீடுகள் சில இதனால் தப்பிக்கொண்டன. திங்கள் காலை முதல் பிற்பகல் வரை ஜெயார் ஜனாதிபதி செயலகத்திலேயே தங்கியிருந்தார். பின்னர், மாலையாகியதும், இராணுவத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அக்கூட்டத்தில் பிரட்மண் வீரக்கோனும் சமூகமளித்திருந்தார். பொலீஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் சிறைச்சாலை ஒன்றில் படுகொலை ஒன்று நடந்திருப்பதாக செய்தி வந்திருப்பதாக பிரட்மன் வீரக்கோன் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் அரசியல்க் கைதிகள் படுகொலை - தொடரும் தமிழ் இனக்கொலை ஜூலை 1983 எரிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான புடைவைக் கடை ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் உறுப்பினராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் ஜெயார் தமிழருக்குக் கொடுக்கவிருந்த இறுதித் தீர்வு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அதன் அர்த்தம் எனக்கு முழுவதுமாகப் புரிந்திருக்கவில்லை. 1957 இல் இருந்து டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் அரசியல் நிருபராக வேலை செய்துவருபவன் என்கிற ரீதியிலும் இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளைப் பிந்தொடர்ந்து வருபவன் என்கிற ரீதியிலும் ஜெயாரின் தமிருக்கான தீர்வு என்பதுபற்றி எனக்கென்று ஒரு கருத்தினை அதுவரை நான் கொண்டிருந்தேன். ஆனால், இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தத்தினை ஜூலை 24 ஆம் திகதி இரவு நடைபெற்ற வன்முறைகளையடுத்தே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸில் நான் பணிபுரிந்த நாட்களில் பல முன்னணி ஆசிரியர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அப்படியான ஒருவர்தான் மேர்வின் டி சில்வா. இவர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பதவி வகித்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் லங்கா கார்டியன் எனும் பத்திரிக்கையினை வெளியிட்டு வந்ததுடன், ஞாயிறு ஐலண்ட் பத்திரிக்கையிலும் "மனிதர்களும் அவரது நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் பகுதியொன்றினை தொடர்ச்சியாக எழுதியும் வந்தார். 1992 ஆம் ஆண்டு மாசி மாதம் 2 ஆம் திகதி அவர் எழுதிய ஆக்கத்தில் "கொடூரமான வன்முறைகளை நடைபெறுவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பதாகவே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக கதைகள் உலாவத் தொடங்கின. தமிழர்களுக்கு பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்காக மிக மிலேச்சத்தனாமன அசம்பாவிதங்கள் நடைபெறப்போகின்றன என்கிற செய்தியே அது" என்று எழுதியிருந்தார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்த காரணத்தை எனது சிங்கள ஊடக நண்பர் ஒருவர் பின்வருமாறு விபரித்திருந்தார். "தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, கொழும்பில் மட்டுமல்ல, தெற்கில் மட்டுமல்ல, அவர்களின் யாழ்ப்பாணத்திலும் எரிக்கமுடியும் என்று காட்டவேண்டிய தேவை எமக்கு இருந்தது" என்று கூறினார். ஜெயவர்த்தனவையும் சிங்களவர்களையும் எதிர்த்தால் அல்லது அவர்களின் பலத்திற்குச் சவால் விட்டால் தமிழர்களுக்கு மிகக் கொடுமையான பாடம் ஒன்றினைப் படிப்பிக்க அவர்கள் முனைவார்கள் என்பதையும், அதுவே ஆடி 24 ஆம் திகதி, ஞாயிறு அன்று அவர்கள்மேல் கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதையும் நன்கு உணர்ந்துகொண்டேன். தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனுபவித்தவன் என்கிற வகையில் எனது அனுபவத்தினை முன்னர் பதிந்திருந்தேன். இத்தாக்குதல்களின் ஒற்றை இலக்கு தமிழர்களின் பலம் பொருந்திய வணிக, பொருளாதார, நிபுணத்துவ தளத்தை சிதைத்து, அவர்களைப் பலவீனமாக்கி, இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்குவதே என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறான நிபுணத்துவத் தளத்தைச் சிதைப்பது என்பதற்குள் குறிவைத்துத் தாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இவ்வாறு இலக்குவைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சிலரின் பெயர்களையும் நான் பட்டியலிட்டிருந்தேன். அவ்வாறனவர்களில் ஒருவர்தான் தினகரன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கையின் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவருமாகப் பணியாற்றிய ஆர் சிவகுருநாதன். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட பிரதம நீதியரசர் எஸ் சர்வானந்தா தலைமையில் இயங்கிவந்த ஜனாதிபதி உண்மைகளைக் கண்டறியும் கமிஷனின் முன்னால் சிவகுருநாதன் சாட்சியளித்திருந்தார். தனது ஆசிரியர் பணிக்கப்பால் கொழும்பு சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த சிவகுருநாதன், எரிக்கப்பட்ட தனது வீட்டிற்கும், களவாடப்பட்ட தனது உடைமைகளுக்கும் நட்ட ஈடு கேட்டிருந்தார். கமிஷனினால் தனக்கு வழங்கப்பட்ட 75,000 ரூபாய்கள் தனது இழப்பினை ஈடுசெய்ய எந்தவிதத்திலும் போதுமானதாக இருக்கவில்லை என்று என்னிடம் பின்னர் அவர் கூறியிருந்தார். இனக்கொலை அரங்கேற்றப்பட்ட வேளை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் அமைந்திருந்த ஒழுங்கையில், அக்கட்டிடத்தின் முன்னாலேயே அவரது வீடு அமைந்திருந்தது. பொரள்ளையில் கலவரம் வெடித்த நாளான ஞாயிறு மாலை அவர் லேக் ஹவுஸ் நிலையத்தில் என்னுடன் இருந்தார். நள்ளிரவானபோது நாரஹேன்பிட்டவில் அமைந்திருந்த அன்டேர்ஸன் தொடர்மாடி வீடுகளின் மீது சிங்களவர்கள் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்தது. ஜனாதிபதி உண்மையறியும் கமிஷன் முன்னிலையில் சிவகுருநாதன் வழங்கிய சாட்சியத்தைப் பார்க்கலாம், ஆர் சிவகுருநாதன் "இன்னொரு பத்திரிக்கையில் பணிபுரிந்துவந்த எனது நண்பரான திருச்செல்வத்தை நான் தொடர்புகொண்டேன். தனது அயலவரின் வீடு தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் அவரை நான் மீள அழைத்தபோது தனது வீடும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அதன் பின்னர் என்னால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்". "அன்றிரவு பல நண்பர்களுடன் நான் பேசினேன், அவர்கள் அனைவரும் தமக்கு நடந்த அநியாயங்கள் குறித்து என்னிடம் சொல்லி அழுதார்கள்". "மறுநாள், கொழும்பு சட்டக் கல்லூரிக்கு விரிவுரையாற்றச் சென்றேன். அன்று எனது வகுப்பில் வெறும் ஐந்து மாணவர்களே சமூகமளித்திருந்தார்கள். நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். அங்கிருந்து வங்கிக்குச் சென்ற நான், வீட்டிலிருந்து என்னுடன் எடுத்து வந்திருந்த நகை ஒன்றினை அங்கு பாதுகாப்பாக வைத்தேன். நான் வங்கியிலிருந்து வெளியே வந்தபோது பெட்டா (புறக்கோட்டை) பகுதி எரிந்துகொண்டிருந்தது. லேக் ஹவுஸிற்குச் சென்று அங்கிருந்து வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயன்றேன். ஆனால், வீட்டில் தொலைபேசி வேலை செய்யவில்லை". "ஆகவே அமைச்சர்களான ஏ சி எஸ் ஹமீட் மற்றும் எம் எச் மொகம்மட் ஆகியோரைத் தொடர்புகொண்டு எனக்கு உதவுமாறு கேட்டேன். வீட்டிற்குச் செல்லலாம் என்று எண்ணி வாகனம் ஒன்றினை ஒழுங்குசெய்யலாம் என்று முயன்றபோது, அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. லேக் ஹவுஸ் பத்திரிக்கையாளன் என்கிற வகையில் மாலை 5:30 மணிவரை பயணம் செய்வதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அலுவலக வாகனமொன்றை அமர்த்திக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சாரதி, என்னை ராமகிருஷ்ணா ஒழுங்கையின் முகப்பில் இறக்கிவிட்டார். சிங்கள சாரதியொருவர் தமிழர் ஒருவரை அவரது வீட்டிற்கு தனது வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் பார்த்தால் சிங்களவர்கள் தன்மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர் அஞ்சினார்". "ஆகவே, நான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். வீதியின் அருகே ஒரு கும்பல் அப்பகுதி வீடொன்றிலிருந்து பல பொருட்களை வெளியே இழுத்துவந்து எரித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் எனது வீட்டின் அருகில் செல்லும்போது அயலவரான குணதிலக்கவைக் கண்டேன். "இப்போதான் வருகிறீர்களா? எல்லாமே போய்விட்டது" என்று அவர் என்னைப் பார்த்துக் கூறினார்". "நான் எனது வீடு நோக்கி ஓடினேன். வீட்டின் கதவுகள் அனைத்தும் அகலத் திறந்துகிடக்க, வீட்டின் உட்புறத்தில் பல பூச்சாடிகள் வீசப்பட்டுக் கிடந்தன. வீட்டின் சில பகுதிகள் எரிந்துகொண்டிருந்தன. ஒரு அறையில் எமது உடைகள் அனைத்தும் கட்டில்மீது குவியலாகப் போடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கும்போது எமது வீணை அக்குவியலுக்குள் அமிழ்த்தப்பட்டுக் கிடந்தது". "எனது வீட்டின் அயலிலுள்ள திருமதி குணரட்ணவின் வீட்டிற்கு ஓடிச் சென்றேன். என்னைக் கண்டதும் கதவைத் திறந்த அவர், "சிவகுருநாதன் அவர்களே, பயப்பட வேண்டாம். அவர்கள் எல்லோரும் என்னுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று கூறினார். அதன்பின்னரே எனக்கு ஆறுதலாக இருந்தது". "எனது உடமைகள் அனைத்துமே எரிக்கப்பட்டு விட்டன. எனது மனைவியின் கல்யாணக் கூரைச் சேலையையும் இன்னும் ஒரு சில சேலைகளையும் தவிர வேறு எவையுமே மிஞ்சவில்லை". "எனது வீட்டிற்கு எதிரில் இருந்த ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திற்கு எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்றேன். திருமதி குணரட்ண நாம் போவதை விரும்பவில்லை. எமக்கு அடைக்கலம் தருவதால் அவர் கூட தாக்கப்படலாம் என்கிற காரணத்தினால் நாம் அங்கிருந்து கிளம்பி ராமகிருஷ்ண மிஷன் நோக்கிச் சென்றோம்". "நாம் இராமகிருஷ்ண மிஷனில் தங்கியிருக்கும்பொழுது அந்த மண்டபமும் தாக்கப்படப் போவதாக எமக்குச் செய்தி வந்தது. ஆகவே அங்கிருந்தும் வெளியேறி சரஸ்வதி மண்டபத்தில் இயங்கிவந்த அகதிகள் முகாமிற்குச் சென்றோம். பின்னர் இன்னொரு அகதி முகாம் இந்துக் கல்லூரியிலும் உருவாக்கப்பட்டிருந்தது". "இந்த இரு முகாம்களில் மட்டுமே குறைந்தது 5,000 தமிழர்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். அம்முகாம் மிகவும் சனநெரிசலுடன் காணப்பட்டது. சில நாட்கள் நான் மரமொன்றின் அடியிலேயே படுத்துறங்கினேன். முகாமிலிருந்து எனது வீட்டைப் பார்ப்பதற்கு வியாழக்கிழமை கிளம்பிச் சென்றேன். அது முற்றாக எரிந்துபோய்க் கிடந்தது". இவ்வாறான இனக்கொலையொன்று நடைபெற்றதன் பின்னர் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து வாழ்தல் என்பது சாத்தியம் என்று கருதுகிறீர்களா என்று விசாரணைக் கமிஷன் சிவகுருநாதனிடம் கேட்டது. அதற்கு ஆம் என்று பதிலளித்த அவர், இந்த வன்முறைகள் சிங்களவர்கள் தன்னியல்பாகத் தமிழர் மீது நடத்திய தாக்குதல்கள் இல்லையே என்று கூறினார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சில சக்திகள் இக்கலவரத்தைத் தூண்டிவிட்டதாக அவர் கூறினார். தமிழர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாம் தாக்கப்போகும் வீடுகளின் விலாசங்களின் பட்டியலினை தம்முடன் வைத்திருந்தமை, இத்தாக்குதல்கள் ஒரு பலம்பொருந்திய அரசியக் சக்தியாலேயே செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவே ஜூலை 83 இனக்கொலையின் சூத்திரதாரி ஒட்டுமொத்தச் சிங்கள மக்களினதும் கோபமே இந்த இனக்கலவரம் என்று ஜெயாரும் அவரது அரசாங்கமும் கூறிவந்ததை பொய்யென்று நிரூபிக்கவே இந்த சம்பவங்களை நாம் இங்கே பதிகிறேன். சில சந்தர்ப்பங்களில் நல்ல மனம் படைத்த சிங்களவர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது தமிழர்களைக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படியான சிங்களவர்களை ஏனைய சிங்களக் காடையர்கள் அச்சுருத்தியிருந்தனர். தமிழர்களைக் காப்பாற்ற நினைத்தால், தமிழர்களைப்போலவே அவர்களையும் கொன்று எரித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுருத்தப்பட்டனர். 1983 ஜூலை இனக்கொலையினையடுத்து பாரிய அகதிகள் முகாமாக மாறிய கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் பிரட்மண் வீரக்கோண் ஆறு பிரத மந்திரிகளுக்கு காரியாதிரிசியாகப் பணியாற்றிய உயர் அரச அதிகாரியான பிரட்மண் வீரக்கோண் ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவர் தனது அயலில் வசித்த தமிழர்களை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். தமிழர்களைப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக பல சிங்களவர்கள் அவருக்கு தொலைபேசியூடாக கொலைப் பயமுருத்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களைத் தான் பாதுகாப்பாக அகதிகள் முகாமிற்குக் கொண்டு சென்றதாக அவர் என்னிடம் கூறினார். "நான் பயத்திற்காக அவர்களை அகதிமுகாமிற்கு அழைத்துச் செல்லவில்லை. எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த தமிழர்களின் உயிரைக் காப்பது அவசியமானது. அவர்களைத் தொடர்ந்தும் எனது வீட்டில் வைத்திருந்தால், அவர்களையும் கொன்றுவிடுவார்கள், ஆகவேதான் அவர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றேன்" என்று கூறினார். http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2021/07/055B0D0A-3E4E-491A-8723-7D0444FB1205.jpeg எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வியாபார நிறுவனம் ஒன்று அந்த இனக்கொலையினை அனுபவித்தவன் என்கிற வகையிலும், இனக்கொலையில் அகப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டவன் என்கிற வகையிலும் இந்த இனக்கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்கிற முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கிறது. இலங்கையின் இனக்கொலையும் அதன் பின்னரும் எனும் நூலினை பியதாச எழுதியிருந்தார். அவர் ஆவணப்படுத்திய சாட்சியங்களினூடாக இந்த இனக்கொலையினை திருநெல்வேலித் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருந்தது என்பது தெளிவாகிறது. நான் சேகரித்த முக்கியமான சாட்சியங்களில் ஒன்றான வாக்களர் பட்டியலைப் பாவித்தே தமிழர்களின் வியாபா நிலையங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன என்பதனை பியதாசவும் தனது நூலில் சாட்சியங்களோடு குறிப்பிட்டிருக்கிறார். வியாபார நிறுவனங்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில், தனது திணைக்களத்திலிருந்தே வியாபா நிறுவனங்களின் பட்டியல் காடையர்களுக்கும், தலைமை தாங்கியவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது என்று கூறினார். தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் அரசாங்கத்தின் அதியுயர் பீடமே இத்தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றது என்பதற்கான ஆதாரத்தினை ஞாயிறு இரவும், திங்கள் காலையும் ஜெயார் நடந்துகொண்ட விதத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஞாயிறு மாலை அதிகாரிகளும், ஜெயாரின் ஆலோசகர்களும் பொரள்ளை மற்றும் மரதானை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த வேளை, ஜெயாரோ மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன குறிப்பிடுகிறார். இரத்தமும் சயனைட்டும் என்று தான் எழுதிய புத்தகத்தில் ஞாயிறு இரவு ஜெயார் நடந்துகொண்ட விதம் குறித்து எட்வேர்ட் குணவர்த்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், "ஜனாதிபதி குடும்பத்துடன் தனது நேரத்தைக் களித்தார். மிக விலைமதிப்பான ஊதாநிறத்திலான முழு ஆடையில் தனது ஆசனத்தில் வீற்றிருந்த அவர், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல அதிகாரிகள் தன்னிடம் கூறிய அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை மிகவும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவந்த வன்முறைகள் குறித்து அதிகாரிகளும் ஆலோசகர்களும் பதற்றதுடன் அவரிடம் கூறும்போது அவர் அதிர்ச்சியடையவில்லை, கலவரப்படவில்லை, நிதானம் தளரவில்லை. ஆனால், தனது இராணுவத்தினரும் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டபோது சற்றுக் கவலைப்பட்டார்" என்று கூறுகிறார். நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து ஜெயார் நன்கு அறிந்தே இருந்தார். அது அவருக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கலகத்தில் ஈடுபடலாம் என்பதே அவருக்கு இருந்த ஒரே கவலை. ஆனால், அவர் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவை அன்று நாள் முழுதும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். 13 கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கே வீரதுங்க கொழும்பிற்கு வந்தார். பொலீஸ் உயர் அதிகாரிகளும், மூத்த ஆலோசகர்களும் ஞாயிறு மாலையும், திங்கள் காலையும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்குமாறு ஜெயவர்த்தனவை அயராது வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் மசியவில்லை. அது ஏன்? பிரபாகரன் உட்பட பெரும்பாலான தமிழர்கள் ஜூலை 83 இனக்கொலையில் அரசாங்கமே முக்கிய சக்தியாக முன்னின்று செயற்பட்டதைக் கண்டுகொண்டனர்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடத்தப்பட்ட தமிழினக்கொலை - ஜூலை 83 திங்கட்கிழமை காலை, தமிழ் உட்டகவியலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு "தூய்மையாக்கப்பட்ட" 20 வீடுகளில் எனது வீடும் ஒன்று. அவற்றில் மூன்று வீடுகள் அரச பத்திரிக்கையான டெயிலி நியூஸில் வேலை பார்த்த தமிழர்களது. நான் அப்பத்திரிக்கையுன் துணை ஆசிரியர், கே நடராஜா என்பவர் விளம்பரங்களுக்கான ஆசிரியர், ப. பாலசிங்கம் அவர்கள் பிராந்திய ஆசிரியர். தினகரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவப்பிரகாசம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் ஆகியோரது வீடுகளும் அன்று காலை எரியூட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் கொழும்பின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தபோதும், அவை யாவுமே ஒரேநேரத்தில் எரிக்கப்பட்டன. காலை 11:30 முதல் மதியம் 12:30 வரையான ஒரு மணிநேரத்தில் இவை அனைத்தும் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் மட்டுமல்லாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வியாபார உரிமையாளர்கள் ஆகிய தமிழர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தமிழர்களின் வியாபாரங்களை, அவர்களின் பொருளாதாரத்தை, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை இலக்குவைத்து நன்கு திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் நடத்துப்பட்டுவருவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். மொன்டேகு ஜயவிக்கிரம 2001 மேலும், இத்தாக்குதல்களை அரசாங்கத்தின் மிக உயர் பதவியில் உள்ளவர்களே திட்டமிட்டு நடத்துவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். திருநெல்வேலியில் சிங்கள ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே சிங்கள மக்கள் தன்னிச்சையாக இத்தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்ற அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களை தமிழர்கள் முற்றாகப் புறக்கணித்தார்கள். திருநெல்வேலித் தாக்குதலை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட தமிழர் மீதான தாக்குதலுக்கான சாட்டாகப் பாவித்ததே அன்றி அதுவே காரணம் அல்ல என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழில்த்துறை அமைச்சராக கடமையாற்றிய மொன்டேகு ஜயவிக்கிரமவின் வீட்டிற்கு அயலில் வசித்துவந்தவர் எனது நண்பர். ஜயவிக்கிரம அந்த வார இறுதி முழுவதும் தனது மலையகத்து வாசஸ்த்தலத்தில் தங்கிவிட்டு திங்கட்கிழமை பிற்பகலே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார். தனது அயலில் இருந்த தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் உடனே செயலில் இறங்கினார். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களுடன் பேசிய ஜயவிக்கிரம, "ஜெயார் தனது வேட்டைநாய்களை தமிழர்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார், அவற்றினை இனிமேல் மீள அழைப்பது இயலாத காரியம்" என்று கூறினார். ஜயவர்த்தனவின் அமைச்சர்களும், அவர்களின் அடியாட்களும் கொழும்பு நகர் முழுவதிலும் தமது காடையர்களை வழிநடத்தி தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். தொழில்த்துறை அமைச்சர் சிறில் மத்தியூ தனது காடையர்களை கொழும்பு கோட்டைப்பகுதியில் அமைந்திருந்த தமிழர்களின் கடைகளைச் சூறையாடி எரிக்கும் நடவடிக்கைகளில் தலைமை தாங்கியிருந்தார். பிரேமதாசாவும் அவரது அடியாட்களும், கோட்டைப்பகுதி நடைபாதை வியாபாரிகளை அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டப் பகுதியில் இருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களையும், வீடுகளையும் எரித்துக்கொண்டு வந்தனர். கொழும்பு நகர மேயர் தனது மாநகர தொழிலாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபையின் அங்கத்தவர்களையும் அழைத்துக்கொண்டு மரதானைப் பகுதியிலிருந்த தமிழர்களின் சொத்துக்களை எரித்துக்கொண்டிருக்க, முஸ்லீமான போக்குவரத்து அமைச்சர் எம். எச். மொகம்மட் தனது அடியாட்களை பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மாவட்ட அமைச்சர் மல்லிமாராச்சி கொழும்பு வடக்கிலிருந்த தமிழர்களின் வீடுகளை எரிக்க, உதவியமைச்சர் அநுர பஸ்டியான் கொழும்பு தெற்கில் தமிழர்கள் மீது தாக்குதல்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். எமக்கு உதவியளிக்குமாறு நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவேளை மன்னாரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் எமது வீடு நோக்கி ஓடிவந்து எமதருகில் மயங்கிக் கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்து அவர் பேசும்போது, தானும், நண்பரும் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது வெறிபிடித்த சிங்களவர்களின் கூட்டம் ஒன்று தம்மைத் துரத்த ஆரம்பித்தது என்று கூறினார். "நாங்கள் ஓடத் தொடங்கினோம், ஆனால் எனது நண்பனை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நான் கட்டடம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன். எனது நண்பரை இரும்புக் கம்பிகளால் அவர்கள் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றார்கள். பின்னர் பழைய டயர் ஒன்றினை இழுத்துவந்து, அதன்மீது எனது நண்பனை தூக்கி எறிந்தார்கள். பெற்றோலினை நண்பன் மீது ஊற்றிப் பற்றவைத்தார்கள்" என்று அழுகையுடன் கூறினார். அவரால் அந்த கொடூரமான அனுபவத்தினை மறக்கமுடியவில்லை. பின்னாட்களில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதனை அறிந்துகொண்டேன். மறுநாள், செவ்வாய்க்கிழமை நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த இன்னொரு நண்பரான குமாரசாமியின் அனுபவம் வித்தியாசமானது. தெகிவளை, ரட்ணகார பிளேஸ் இல் அமைந்திருந்த அவரது வீட்டைச் சிங்களவர்கள் சூழ்ந்துகொண்டபோது அவர் தனது அறையிலேயே இருந்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட சிங்களவர்கள் வீதிக்கு இழுத்துவந்து அங்கே இருக்குமாறு பணித்திருக்கிறார்கள். சிலர் அவரைத் தாக்கியபோது அருகிலிருந்த சிலர் அவரைத் தாக்கவேண்டாம் என்று மறித்திருக்கிறார்கள். குமாரசாமியை என்ன செய்வது என்பதுபற்றி அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருபகுதியினர் அவரை உயிருடன் தீயிட்டுக் கொழுத்திவிடலாம் என்று கூறினர். அதன்படி இரு சிங்கள இளைஞர்கள் அருகிலிருந்து பெற்றோல் நிலையத்திற்குச் செல்ல, மீதிச் சிங்களவர்கள் அவர் தப்பிவிடாதவாறு சுற்றிக் காவல் நின்றுகொண்டனர். அங்கே நின்ற ஒரு சிங்கள இளைஞன், குமாரசாமியின் முகத்தினருகில் குனிந்து, அவரின் காதில், "மடையா, ஏன் இப்படி குந்தியிருக்கிறாய்? எழும்பி ஓடு" என்று ரகசியாமக் கூறியிருக்கிறார். அந்தச் சிங்கள இளைஞன் கூறியதன்படியே குமாரசாமி எழுந்து ஓடத் தொடங்கினார். வீதியின் முகப்பில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவரிடம் அவர் அடைக்கலமாக, அவரோ குமாரசாமியை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். மறுநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வீதியில் செல்லும் வாகனங்களை மறித்துத் தமிழர்களைத் தேடும் சிங்களக் காடையர்கள் - தமிழினக்கொலை ஜூலை 83- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயார் தமிழருக்குக் கொடுத்த இறுதித் தீர்வு - தொடரும் இனக்கொலை ஜூலை 83 தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் காப்பற்ற நினைத்த சிங்கள இனவாதிகள் ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் தமக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்னரே எடுத்திருந்தனர். தனது மகன் ரவியின் முதல்த்தாரமும் தமிழருமான சார்மெயின் வன்டர்க்கோன் மற்றும் அவரது மகள், தாயார் ஆகியோரைப் பாதுகாப்பாக தனது செயலகத்திற்கு அழைத்துவர ஆயுதம் தாங்கிய ராணுவப் பிரிவொன்றினை அனுப்பிவைத்தார் ஜெயார். தமிழரான சார்மெயின் சிங்களக் காடையர்களால் தாக்கப்படக் கூடும் என்று ஜெயார் கருதினார். தான் கொல்லப்படுவதற்கு முன்னர் சிங்களக் காடையர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழர் ஒருவர் - தமிழ் இனக்கொலை ஆடி 1983 சிங்களக் காடையர்களால் முன்னாள் அமைச்சர் குமாராசூரியர் அவஸ்த்தைக்குள்ளாகியுள்ளார் என்று கேள்விப்பட்டபோது அவரைப் பாதுகாப்பாக அழைத்துவர ராணுவ ஜீப் வண்டியொன்றினை ஜெயார் அனுப்பிவைத்தார். குமாராசூரியரை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள், அவரது கைகளைக் கட்டி அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் வரை இழுத்துச் சென்று கொல்வதற்கு முயற்சித்ததை தாம் கண்ணுற்றதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவரைக் கொல்வதற்கு வாட்களை வெளியே சிங்களவர்கள் எடுத்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த ஜெயார் அனுப்பிய ராணுவத்தினர் அவரை மீட்டிருக்கின்றனர். http://www.oferrceylon.com/wp-content/uploads/2017/01/chief.jpg செல்வாவின் மகனும், பின்னாட்களில் இந்தியாவின் முகவராகவும் மாறிய சந்திரஹாசன் காலஞ்சென்ற தந்த செல்வாவின் மகனான சந்திரகாசனையும் அவரது தாயாரையும் காப்பற்ற காமிணி திசாநாயக்கா தனது பாதுகாப்புப் பிரிவினை அனுப்பியிருந்தார். சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து காமிணியும் சந்திரகாசனும் நண்பர்களாக இருந்தவர்கள். தொண்டைமான் என்னுடன் பேசும்போது, தனது பேத்தியை பாதுகாப்பாகக் கூட்டிவர பிரேமதாசா தனது குண்டர்படையினர் சிலரை அனுப்பி காடையர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்ததாகக் கூறினார். வணிக மற்றும் கப்பற்றுரை அமைச்சரான லலித் அதுலத் முதலியை இனக்கொலை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் அவரது அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. "நான் வன்டேர்வட் பிளேசில் இருந்த எனது நண்பர்கள் சிலரைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அன்று ஈடுபட்டிருந்தேன், என்னிடம் நீங்கள் கேட்டிருந்தால் உங்களது வீட்டையும் என்னால் காப்பாற்றியிருக்க முடியும்" என்று அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அந்தவேளையில் நான் வேறு அமைச்சர்களுடன் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். எனது வீடு எரிந்துகொண்டிருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது, எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் எனது இரு மகன்களையும் காப்பற்றிக்கொள்வதுதான். எனது வீட்டைப்பற்றி எனக்குக் கவலை இருந்தது. நிச்சயம் எனது வீடு தாக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, வீடும் எரிக்கப்படும் என்று நான் ஊகித்திருந்தேன். நான் காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தபோது தொலைபேசி வேலை செய்தது. அரைமணித்தியாலம் சென்றபின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சித்தேன், இம்முறை தொலைபேசி மெளனமாகக் கிடந்தது. எனது அயலவரான சோமதாசவுடன் தொலைபேசியூடாகப் பேசினேன். எனது வீடு எரிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். மறுமுனையில் அவர் விசும்புவது எனக்குக் கேட்டது. "எமது பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளைப் பாதுகாக்க நாம் முயன்றோம், ஆனால் எம்மால் அது முடியாமற் போய்விட்டது" என்று சில வாரங்களுக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். "தமிழர்களின் வீடுகளைத் தேடி ஒரு கூட்டமொன்று எமது பகுதிக்குள் நுழைந்தது. நாம் இங்கு தமிழர்கள் எவரும் இல்லையென்று கூறவே அக்கூட்டம் சென்று விட்டது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே கூட்டம் தெகிவளைப் பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிங்களப் பொலீஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் எமது பகுதிக்குள் நுழைந்தார்கள். கையில் வக்காளர் அட்டையினை வைத்திருந்த பொலீஸ் அதிகாரி, "தமிழர்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேவலமாகத் திட்டிக்கொண்டே உங்கள் வீட்டிற்கு காடையர்களை அழைத்துக்கொண்டு போனார்" என்று கூறினார். 1983 இனக்கொலையில் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட தமிழரின் வீடு ஒன்று எனது அயலவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள அனைவரையும் நாம் அடித்துக் கலைக்கவேண்டும், அவர்கள் இங்கே வாழக்கூடாது என்று அந்தப் பொலீஸ் அதிகாரி எம்மைப் பார்த்துக் கத்தினார். எமது வீதியில் (பி டி டி சில்வா மாவத்தை, தெகிவளை) இருந்த மூன்று தமிழர்களின் வீடுகளைக் கொழுத்திவிட்டு வெளியே வந்த அந்தப் பொலீஸ் அதிகாரி தன்னுடன் வந்த சிங்களவர்களைப் பார்த்து, "அப்பி சுத்த கரா" ( நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்) என்று சிங்களத்தில் கோஷமிட்டார்" என்று கூறினார். அதாவது அப்பகுதியை தமிழர் எனும் கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தி விட்டோம் என்பதே பொருள். எனது வீடு மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததாக அயலவர் கூறினார். எமக்கு ஒவ்வொருநாளும் மீன் வழங்கும் மீனவரான சைமன் எமது வீட்டினை எரித்த சிங்களக் காடையர் குழுவில் தானும் இருந்ததாகக் கூறினார். "அவர்கள் முதலில் உங்களின் வீட்டுக்கதவை உடைத்துத் திறந்தார்கள். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள் விருந்தினர் தங்கும் அறையில் இருந்த ஷோகேஸ் (காட்சிப்படுத்தும் அலுமாரி) இனை அடித்து நொறுக்கினார்கள். வீட்டினுள் இருந்த உங்களின் புத்தகங்களை வெளியே எடுத்துவந்து இருக்கைகளில் பரப்பினார்கள். பின்னர் புத்தகங்கள் மீது கொண்டுவந்த பெற்றொலினை ஊற்றினார்கள்" என்று கூறினார். சைமன் மேலும் கூறும்போது, "கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பொலீஸ் அதிகாரி கூட்டத்தைப் பார்த்து, "உங்களுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறவும் வெறும் 10 நிமிடத்தில் அங்கிருந்தவற்றை அவர்கள் சூறையாடினார்கள். பின்னர் உங்கள் வீட்டிற்கு அவர்கள் நெருப்பு மூட்டினார்கள்" என்று கூறினார். எனது காட்சிப்படுத்தும் அலுமாரியில் நூதணப் பொருட்கள் எவற்றையும் நான் வைத்திருந்ததில்லை. அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவையே அதில் அடுக்கப்பட்டிருந்தன. 1957 இல் நான் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தபோது இலங்கை சமூக கலாசார மாற்றம் ஒன்றிற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடர்பாடல் மொழியாக அதுவரை இருந்துவந்த ஆங்கில மொழியினை சிங்களமும், தமிழ் மொழியும் பிரதியீடு செய்துவந்தன. இதனாலேயே அகராதிகள், சொற்களஞ்சியங்கள் ஆகியவற்றின் தேவை அந்நாட்களில் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எனக்கிருந்த புலமை காரணமாக கல்வியமைச்சினூடாக வெளியிடப்பட்டு வந்த அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல்கலைக்கழக நூட்களை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான எனது மனைவிய மணந்துகொண்டதன் பின்னர் பாடசாலைப் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். எமது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பெருமளவு ஆங்கிலம் - தமிழ் அகராதிகளை, சொற்களஞ்சியங்களை நாம் வாங்கிச் சேகரித்து வந்தோம். நாம் காலம் காலமாகச் சேகரித்து வைத்திருந்த தடித்த அட்டையிலான அகராதிகள் சிங்களக் காடையர்கள் தமது நாசகார வேலையினைச் செய்ய வரப்பிரசாதமாக அமைந்தன. ஆகவேதான் தொடர்ந்து இருநாட்களாக எரிந்த வீட்டிலிருந்து அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனது வீட்டிற்கு வெளிப்புறமாக எனது படிக்கும் அறையினை நான் அமைத்திருந்தேன். அதற்குள் நான் சேகரித்து வந்த அரசியல் புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய பத்திரிக்கைச் செய்திகள், நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்க்கள், பெறுமதியான நூட்கள் என்று பல சேமிக்கப்பட்டிருந்தன. அங்கும் சென்ற சிங்களவர்கள் அவற்றின் மீது பெற்றோலினை ஊற்றி பற்றவைத்திருந்தனர். எனது புத்தகங்களில் எவையுமே மிஞ்சியிருக்கவில்லை.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - ஜூலை 83, தொடரும் இனக்கொலை டெயிலிநியூஸ் ஆசிரியர் ஆரனை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார். "தாற்போதைக்கு வரை" என்று நான் பதிலளித்தேன். முழுக் கொழும்பு நகரமே எரிந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைப் போலல்லாது இம்முறை தமிழரின் வீடுகள் மட்டுமே இலக்குவைக்கப்பட்டு எரியூட்டப்படுவதாக அவர் கூறினார். பின்னர், கவனமாக இருந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். மதியம் ஆகிக்கொண்டிருக்க ஆரன் சொல்வதன் அர்த்தத்தை நான் உணரத் தொடங்கினேன். நாங்கள் தங்கிருந்த வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் கடைசியாக அமைந்திருந்த வீடு தமிழர் ஒருவருடையது. அவ்வீட்டின் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் கடற்கரையோரமாக வந்திருக்க வேண்டும். வேறு சில தமிழர்களும் நாம் தங்கியிருந்த வீட்டில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். எனது மருமகனின் மூத்த சகோதரரும் பல்வைத்தியருமான எஸ் அருளம்பலம் அவர்கள் வேலைநிமித்தம் கொழும்பிற்கு வந்திருந்தார். அன்று வெளியில்ச் சென்ற அவரும் மிகுந்த பதற்றத்துடனும், களைப்புடனும் வீடு வந்து சேர்ந்தார். கொழும்பு மாநகரசபை அமைந்திருந்த பகுதியிலிருந்து கால்நடையாகவே பம்பலப்பிட்டி வரை அவர் நடந்து வந்திருக்கிறார்.வீதியில் பல தமிழர்களை அடித்தே கொன்ற சிங்களவர்கள், அவர்களை அவ்விடத்திலேயே எரித்துக்கொண்டிருப்பதைத் தான் பார்த்ததாகக் கூறினார் . எனது ஒழுங்கையின் முடிவிலிருந்து இரண்டாவது மூன்றாவது வீடுகளும் இபோது தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நான் வீட்டிலிருந்த அனைவரையும் வீட்டின் மதிலைத் தாண்டி அயலவரின் காணிக்குள் குதிக்குமாறு கூறினேன். அயலவர் ஒரு இஸ்லாமியர், எம்மைத் தமது கழிவறையில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினார். வைத்தியர் உடற்பருமன் கொண்டவர், ஆகவே ஐந்தடி மதிலைத் தாவிக் குதிப்பதென்பது அவருக்கு மிகவும் கடிணமாக இருந்தது. ஆகவே, இந்தப்பக்கம் இருந்து இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கி மதில் மேலால் எறிந்துவிட, அடுத்த பக்கம் நின்ற சிலர் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது இரு மகன்களையும் அன்று எம்முடன் வீட்டில் இருந்தவர்களையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆகவே மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அவரது மனைவி, "தனது நண்பர்களில் ஒருவருக்கு உதவுவதற்காக அவர் வெளியே சென்றுவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். அவருடன் பேசி எனது நேரத்தை மேலும் வீணடிக்க நான் விரும்பவில்லை. ஆகவே நான் நிதியமைச்சர் ரொனி டி மெல்லுக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் கூட்டம் ஒன்றில் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்ட்டஸ் பெரேராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரும் ஜெயவர்த்தனவுடன் அச்சமயம் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது. ஆனால், என்னுடன் பேசியவர் பெஸ்ட்டஸ் பெரேராவுக்கு ஏதும் தகவலை வழங்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அப்போது தங்கியிருந்த வீட்டின் முகவரியை அவரிடம் கொடுத்து, எனக்குப் பாதுகாப்பு தரமுடியுமா என்று அமைச்சரைக் கேளுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன். ஜெயார் காலை 8 மணியிலிருந்து ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்திருக்கிறார். பின்னாட்களில் ரொனி டி மெல் என்னிடம் பேசும்போது அன்று காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஜெயாருடன் தான் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினார். தமிழ் மக்களின் சொத்துக்களைக் குறிவைத்து சிங்களவர்கள் காலை 10 மணிக்கு அன்று தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்தே தான் ஜெயாரைச் சந்திக்க காலை 11 மணியளவில் அவரது செயலகத்திற்குச் சென்றதாக ரொனி டி மெல் கூறினார். பெஸ்ட்டஸ் பெரேரா பேசும்போது தான் அன்று நாள் முழுதும் ஜெயாருடன் இருந்ததாகக் கூறினார். ஜெயாரை அன்று தொண்டைமானும் சந்தித்ததாகக் கூறினார். அவரது சுயசரிதையினை எழுதியவன் என்கிற முறையிலும், அவருடன் சுமார் 30 வருடங்களாக நட்பில் இருந்துவருபவன் என்கிற வகையிலும் அவரை எனக்கு நன்றாகப் பரீட்சயமாகியிருந்தது. அன்று தான் ஜெயாரைச் சந்தித்தபோது ஜெயார் மகிழ்வாகவும், நிதானத்துடனும் காணப்பட்டதாக தொண்டைமான் என்னிடம் கூறினார்.தன்னைச் சந்திக்க வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியே தாம் கண்ட பயங்கரங்கள் குறித்து கூறும்போது ஜெயார் அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் என்று தொண்டைமான் கூறுகிறார். "என்னை கோபம் ஆட்கொண்டிருந்தது. நான் அப்போதுதான் எனது பேத்தியை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எனது வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்து வர முடிந்திருந்தது.எனது வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துகொண்டிருக்கும்போது வீதிகளில் தமிழர்களை சிங்களவர்கள் அடித்துக் கொல்வதையும், அவரது சொத்துக்களை சூறையாடி எரித்துக்கொண்டிருப்பதையும் கண்டேன். "நீங்கள் கட்டாயம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ஆத்திரம் கொண்டு ஜெயாரைப் பார்த்துக் கத்தினேன். அதற்கு அமைதியாகப் பதிலளித்த ஜெயார், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று அலட்சியமாக என்னைப் பார்த்துக் கேட்டார். "உடனேயே ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்துங்கள்" என்று நான் பதிலளித்தேன். "ஊரடங்குச் சட்டமா? அதை அமுல்ப்படுத்தப்போவது யார்?" என்று ஜெயார் என்னைப் பார்த்து மீண்டும் கேட்டார். அதன்பின்னர் அவரோடு பேசுவதில் பயனில்லை என்று எனக்குப் புரிந்தது, எனக்குத் தேவையானதெல்லாம் தமிழர் மீதான வன்முறைகளை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்பது மட்டும்தான்" என்று தொண்டைமான் கூறினார். நான் வேண்டிக்கொண்டதற்கேற்ப பெஸ்ட்டஸ் பெரேரா எனக்குப் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தார். நான் தங்கியிருந்த பம்பலப்பிட்டி காஸல் ஒழுங்கைக்கு பொலீஸ் ரோந்து அணியொன்று வந்துசென்றதுடன், எனது ஒழுங்கையின் முகப்பிலும் பொலீஸ் காவல் இடப்பட்டது. ஏற்கனவே ஒழுங்கையின் பின்புறத்தால் தமிழர்களின் வீடுகளைத் தாக்கிக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பொலீஸாரின் பிரசன்னத்தைக் கண்டதும் அங்கிருந்து விலகி மற்றைய பகுதிகள் நோக்கிச் சென்றது.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - தொடரும் ஜூலை 83 இனக்கொலை நள்ளிரவு வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. எமது செய்திப்பிரிவிற்கு வந்துகொண்டிருந்த அறிக்கைகள் மிகவும் கவலையளித்தன. பொரள்ளையில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான இனவன்முறைகள் கொழும்பில் தமிழர்கள் கணிசமானளவில் வாழ்ந்து வந்த பகுதிகளான மரதானை, தெமட்டகொடை, திம்பிரிகஸ்யாயை, கிருலப்பொனை ஆகிய பகுதிகளுக்கும் பரவிவிட்டிருந்தன. எனது இரு மகன்கள் குறித்தும் எனக்குக் கவலை ஏற்படலாயிற்று. வீட்டில் அவர்கள் தனியாக இருந்தனர். எனது மனைவி நைஜீரியாவுக்கு கல்விச்சேவை ஒன்றிற்காக அவ்வேளை சென்றிருந்தார், மகள் யாழ்ப்பாணம் வைத்திய பீடத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். நான் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோது மூத்த மகன் பேசினார். வீட்டின் அருகில் அசம்பாவிதம் எதனையும் பார்க்க முடியவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். அதிகாலை 1 மணிக்கு லேக் ஹவுஸின் போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்ற நான் என்னை வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடும்படி அங்கிருந்த சாரதிகளைக் கேட்டேன். "தமிழர்களைக் கொன்று எரித்துக்கொண்டிருக்கிறார்கள், இந்தவேளையில் நீங்கள் எங்கும் போகவேண்டாம்" என்று கூறி என்னைச் செல்லவிடாமல்த் தடுத்தனர். ஆரியரட்ண எனது நிலையினைக் கண்டு என்னை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொண்டார். தெகிவளை நோக்கி காலி வீதியூடாக சென்றுகொண்டிருந்தவேளை அசம்பாவிதங்களை நான் காணவில்லை, தெகிவளை அமைதியாக இருந்தது. காலை 5 மணியிருக்கும், எனது சிங்கள நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். "சபா, உங்களின் பிள்ளைகளை இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், காலை 9 மணிக்கு முதல் பாதுகாப்பான பகுதியொன்றிற்குச் சென்றுவிடுங்கள்" என்று என்னை எச்சரித்தார். "ஊரடங்குச் சட்டத்தினைப் பிறப்பித்து விட்டார்களா?" என்று அவரிடம் கேட்டேன். "இன்னும் இல்லை"என்று அவர் பதிலளித்தார். "ஏன், நேற்று இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்போவதாக பொலீஸார் கூறினார்களே?" என்று நான் மீண்டும் கேட்டேன். எரிச்சலடைந்த அவர், "என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம், சொன்னதை மட்டும் செய்யுங்கள்" என்று சறுக்கென்று கூறினார். எங்களுடன் பேசிய பொலீஸ் அதிகாரிகள் தாம் ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி வலியுறுத்தப் போவதாகவே கூறியிருந்தனர். ஆனால் ஜனாதிபதியோ, "ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது பற்றி ஆறுதலாகச் சிந்திக்கலாம்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த பொலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஊரடங்குச் சட்டத்தினை ஜெயார் அமுல்ப்படுத்தவில்லை. ரொனி டி மெல் 2002 என்னுடன் பின்னர் பேசிய நிதியமைச்சர் ரொனி டி மெல், ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். தன்னுடன் பேசுகையில் ஜெயார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தும் உத்தேசத்தில்த்தான் இருந்தார் என்று கூறினார். ஜூலை இனக்கொலை நடந்துகொண்டிருந்த நாட்களில் ஜெயாரின் ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சன் கொழும்பிலேயே இருந்தார். அவர் லங்கா கார்டியன் பத்திரிக்கையில் இதுகுறித்து எழுதியிருந்தார். "அன்று நள்ளிரவு ஜெயாருடன் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ல்படுத்துமாறு தொலைபேசியூடாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது குறித்து பேச மறுத்துவிட்டார். வீட்டிலேயே இருங்கள், வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்" என்று வில்சன் எழுதுகிறார். எனது சிங்கள நண்பர் கூறியதன்படியே நடக்க நான் முடிவெடுத்தேன். வீட்டில் அன்று காலையுணவை உட்கொண்டோம். எனது மகன்களிடம் சில உடைகளையும் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனது மூத்த மகன் அவ்வருடம் ஆவணி உயர்தரப் பரீட்சைக்கும் இளைய மகன் அவ்வருடம் மார்கழியில் இடம்பெறவிருந்த சாதாரண தரப் பரீட்சைக்கும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். எமது வீட்டுத் திறப்பினை அயல்வீட்டுச் சிங்களப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, கலவரங்கள் அடங்கியபின்னர் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். காலை 8 மணியளவில் பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், காஸ்ட்டல் வீதியில் அமைந்திருந்த எனது மருமகனின் வீட்டிற்கு வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றோம். போகும் வழியில் பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரி இயங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன், நகரின் அநேகமான பாடசாலைகள் இயங்குவதாகவே எனக்குச் சொல்லப்பட்டது. கடைகள் திறந்திருந்தன, வீதியில் போக்குவரத்தும் வழமைபோன்றே காணப்பட்டது. காலை 10 மணியளவில் மதிய உணவை வாங்கிவர மகனை அனுப்பினேன். அவரும் உணவினை வாங்கிக்கொண்டு வந்தார், மீண்டும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன என்கிற செய்தி எமக்குக் கிட்டியது. மகன் வீட்டிற்கு வரும் வழியில் பலர் கடைகளைப் பூட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும், காலி வீதியில் உள்ள தமிழர்களின் கடைகளை இலக்குவைத்து ஆயுதம் தரித்த சிங்களவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். காலி வீதி முடிவடையும் இடமான காலி முகத் திடலில் இருந்தே தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. காலை 10:30 மணியிருக்கும், எனது மருமகனின் வீட்டில் தங்கியிருந்து கொழும்பில் வேலை பார்த்து வந்த துரைரட்ணம் மிகுந்த பதற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார். மிகுந்த வேடிக்கையாகவே எப்போதும் பேசும் அவரை அவ்வளவு பதற்றமாக அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பம்பலப்பிட்டிச் சந்தியை அடைந்தபோது தான் அப்பகுதியில் இருந்ததாகக் கூறினார் அவர். அப்பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகளை உடைத்துச் சூறையாடிவிட்டு பின்னர் அவற்றிற்குத் தீவைத்ததை தான் கண்டதாகக் கூறினார். அப்பகுதியில் அவரைப்போலவே வந்திருந்த தமிழர்களை அந்தச் சிங்களக் காடையர்கள் தெருவுக்கு இழுத்துவந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தெய்வாதீனமாக காடையர்களின் கண்களில் படாமல் தப்பி வீடு வந்து சேர்ந்திருந்தார். சீருடையணிந்த பொலீஸார் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் துரைரட்ணம் மேலும் தான் கண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும்போது, ட்ரக் ஒன்றில் வந்திறங்கிய இரு வாட்டசாட்டமான சிங்களவர்கள் வீதியில் குதித்து தமிழர்களின் கடைகளை உடைக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்க்கும்போது இராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ பயிற்சியெடுத்தவர்கள் போலக் கணப்பட்டனர். அவர்களின் கைகளில் ஒரு பெயர்ப் பட்டியல் இருந்தது. ஒவ்வொரு கடையினையும் உடைக்குமுன்னர் அக்கடைகளின் பெயர்ப்பலகையில் இருந்த பெயர்களைத் தாம் கொண்டுவந்திருந்த பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தபின்பே உடைக்க ஆரம்பித்தனர். இந்த இரு ஆயுததாரிகளில் ஒருவரின் கையில் கோடரியும் மற்றையவரின் கையில் அலவாங்கும் காணப்பட்டன. கோடரியை வைத்திருந்த சிங்களக் காடையன் முதலில் கோடரியின் பின்புறத்தால் கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டினை உடைக்க, அலவாங்கினை வைத்திருந்தவன் கதவிடுக்கினுள் அதனை செருகி கதவுகளை அகலத் திறந்துவிட்டான். அதன்பின்னர் அவர்களோடு வந்திருந்த மீதிச் சிங்களக் காடையர்கள் கடையினுள் புகுந்து அதனைச் சூறையாடினர். ஒரு கடை முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அடுத்த கடைக்குச் சென்றது அக்காடையர் கூட்டம். இப்படியே அவ்வீதியெங்கும் இருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகள் உடைத்துச் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. சிங்கள் கட்டட உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகளில் நடத்தப்பட்டு வந்த தமிழரின் வியாபாரங்கள் சூறையாடப்பட்டதுடன், அக்கடைகள் அமைந்திருந்த கட்டடங்களை எரிக்காது விட்டுச் சென்றது காடையர் குழு. துரைரட்ணம் தொடர்ந்தும் அப்பகுதியில் நிற்க விரும்பவில்லை. தமிழர் ஒருவரை வீதியில் துரத்தித் துரைத்தி சிங்களவர்கள் தாக்குவதைக் கண்டதும் துரைரட்ணம் வேகமாக நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் நாம் அன்று தங்கியிருந்த பம்பலப்பிட்டி வீட்டின் அருகில், காலி வீதியில் ஏதோ களேபரம் நடக்கும் சத்தம் கேட்டது. யன்னலின் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த எனது மகன்கள் பிள்ளையார் கோயிலைச் சுற்றியிருந்த கடைகள் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினர். அப்பகுதியில் தங்கியிருந்த இரு இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நன்கு பயிற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் கோயில்ப் பகுதியை அடைந்தபோது அந்த இரு தமிழ் இளைஞர்களும் அங்கே நின்றிருக்கிறார்கள். அப்பகுதியில் இருந்த தமிழரின் கடைகளும் அதேவகையில் இரு பயிற்றப்பட்ட ராணுவ வீரர்களால் உடைக்கப்பட, பின்னால் வந்த சிங்களக் காடையர் கூட்டம் கடைகளைச் சூறையாடிவிட்டு ஆர்ப்பரித்தவாறே அவற்றிற்குத் தீமூட்டிக்கொண்டிருந்தது. தம்முடன் கொண்டுவந்திருந்த பெற்றோலினைக் கடைகள் மீது ஊற்றிவிட்டு சிகெரெட்டைப் பற்றவைக்கும் லைட்டர்களைப் பற்றவைத்து கடைகளினுள் எறிந்தது சிங்களக் காடைக் கூட்டம். அக்கடையும், கட்டடமும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமானது.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயாரினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்வு பொரள்ளைப் பகுதியிலிருந்து தீயின் நாக்குகள் மேலெழுந்துவருவதைப் பார்த்தபோது நான் கலக்கமடைந்தேன். அந்த நெருப்பு நானிருந்த திசைநோக்கி நகர்ந்துவரவே நான் மிகுந்த துயரமடையத் தொடங்கினேன். பியதாச என்னிடம் சிலநேரத்திற்கு முன்னர் கூறிய விடயங்கள் உண்மைதானோ? இதற்கு மேலதிகமாக எனது அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்த தொலைபேசி அழைப்புக்கள் மேலும் கவலையைக் கொடுத்தன. எனது அலுவலகத்திற்குப் பதற்றத்துடன் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய பல தமிழர்கள் தம்மீது இன்னொரு இனக்கலவரத்தினை சிங்களவர்கள் ஆரம்பித்துவிட்டார்களா என்று கேட்டபோது என்னால் பேசமுடியாது போய்விட்டது. அவ்வாறு என்னுடன் பேசிய பல தமிழர்களில் ஒருவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர். "ஜெயவர்த்தனா தமிழர்கள் மேல் தனது குண்டர்களை இன்னுமொருமுறை ஏவி விட்டாரா?" என்று அவர் என்னைக் கேட்டார்.நான் அவரிடம் பியதாச என்னிடம் கூறிய விடயங்களைக் கூறி, அரசுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஜெயார் தமிழர்கள் மீது திருப்பிவிட்டிருக்கிறார் என்று கூறினேன். "நான் மடத்துடன் பேசியிருக்கிறேன் (சிறிமாவைக் குறிப்பிட்டுக் கூறினார்), அந்த ராஸ்க்கல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்னவும் செய்யக்கூடியவர் என்று மடம் என்னிடம் கூறினார்" என்று குமாரசூரியர் கூறினார். சிறிமாவின் ஆட்சியில் குமாரசூரியர் அமைச்சராகப் பதவி வகித்தவர், அதனாலேயே சிறிமாவை அவர் "மடம்" என்று விளித்திருந்தார். ராஜன் ஹூல் பொரள்ளைச் சம்பவத்தை தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" என்பதில் பின்வருமாறு விபரிக்கிறார், "என்னிடம் பேசியவர்கள் அனைவரும் பொரள்ளை மயானத்திலிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிச்சென்ற மக்களிடம் அரசுக்கெத்கிரான உணர்வே இருந்தது என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் மேலும் கூறும்போது இரவு 10 மணியளவில் புதிதாக காடையர் குழுக்கள் அப்பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இவர்களே அக்கூட்டத்தின் அரசுக்கெதிரான ஆத்திரத்தினை தமிழருக்கெதிரான கோபமாக மாற்றினார்கள். அவர்கள் அனைவரும் அரசின் காடையர் குழுக்கள். ஆரம்பத்தில் இவ்வாறு அரசால் இறக்கப்பட்ட காடையர் குழுவுக்கும் மயானத்தில் இருந்து வெளியேறி பொரள்ளைச் சந்தி நோக்கி வந்துகொண்டிருந்த ஆத்திரப்பட்ட மக்கள் கூட்டத்திற்கும் இடையே முறுகல் ஏற்பட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அரசுக்கெதிரான தமது கோஷங்களைக் கைவிட்ட மொத்தக் கூட்டமும் தமிழருக்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையினைப் பாவித்தே அரச காடையர் குழு தனது நோக்கத்தினை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பொரள்ளைப் பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான சொத்துக்களைக் குறிவைத்து தான் ஏலவே திட்டமிட்டதன்படி தாக்குதலை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து மொத்தக் கூட்டமும் தமது கைகளில் அகப்பட்ட தமிழர்களை அடித்துக் கொல்லத் தொடங்கியது". தமிழரின் கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, அவர்களின் வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டன, தமிழரின் கடைகளில் இருந்து பொருட்களைச் சிங்களவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர். அன்றிரவு எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்களுடன் ராஜன் ஹூலின் பதிவுகளும் ஒத்துப் போவதால் அவற்றினை இங்கே பாவித்திருக்கிறேன். பொரள்ளையிலிருந்து கொழும்பு நகர் நோக்கிய பாதையில் அமைந்திருக்கும் புஞ்சி பொரள்ளைப் பகுதிக்கு பியதாசவும் இன்னும் சில நிருபர்களும் நிலவரத்தை ஆராயச் சென்றிருந்தனர். அங்கே அரசின் தொழிற்சங்கக் காடையர் குழுவான ஜாதிக சேவக சங்கமய கலவரங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பதைக் கண்டனர். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஜாதிக சேவக சங்கமயவில் நானும் ஒரு உறுப்பினராக அப்போது இருந்தேன். அன்றிரவு நிறுவனத்தில் சாரதியாகக் கடமையில் இருந்த வாகனச் சாரதி ஆரியரட்ண ஜாதிக சேவக சங்கமயவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.அவரே பியதாசவையும் ஏனையவர்களையும் புஞ்சி பொரள்ளைச் சந்திக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆரியரட்ண என்னுடன் பேசும் போது புஞ்சி பொரள்ளைப் பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தனது தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அமைப்பாளர்களும்தான் என்று கூறினார். அவர் குறிப்பிட்டுக் கூறியவர்களில் முக்கியமானவர் கொழும்பு மாநகரசபையின் கவுன்சிலர் சங்கதாச, இவர் பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அன்றிரவு 11 மணிக்கு பியதாசவும் ஏனையோரும் நிலையத்திற்குத் திரும்பினர். அவர்கள் அங்குநடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கின்ஸி வீதி, பார்ன்ஸ் வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், ரோஸ்மீட் பிளேஸ், காஸ்ட்டல் பிளேஸ், மற்றும் கொட்டா வீதி ரயில்வே நிலையத்தின் அருகிலிருந்த பிரதேசங்கள் அனைத்திலுமிருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் இக்காடையர் குழு இலக்குவைத்து தாக்கி எரித்து வருவதாகப் பதற்றத்துடன் கூறினர். வீதி விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழரின் கடைகளிலிருந்து வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகள் அப்பிரதேசத்தை இரவு வேளையிலும் வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. எரிந்துகொண்டிருந்த தமிழர்களின் கடைகள் வீடுகளிலிருந்த கூரைகளும், கன்னார்த் தகடுகளும் தீயின் வெப்பத்தில் வெடித்துச் சிதறியபோது துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று தமக்குக் கேட்டதாக அவர்கள் கூறினர். சிங்களவர்கள் தங்கு தடையின்றி தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடிக்கொண்டிருந்தனர்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் இக்கட்டத்தில் யாழ்நகர் எரியத் தொடங்கியிருந்தது. பலாலி முகாமிலிருந்து பல ட்ரக்குகளில் கிளம்பிய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த திருநெல்வேலிப் பகுதியை வந்தடைந்தனர். பலாலியிலிருந்து திருநெல்வேலி வரையான வீதியெங்கும் இருந்த கடைகளை சேதப்படுத்தியவாறே அவர்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிச் சந்தியை அடைந்ததும், தமது ட்ரக்குகளை சந்தியில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்தனர். செல்லக்கிளி மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய கடையினை உடைத்ததிலிருந்து அவர்களின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. அப்பகுதியின் அருகில் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டதாக அவர்கள் கருதிய மதில்களை உடைத்தனர். பின்னர், வீதியின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தத் தொடங்கினர். வீதியில் தாம் எதிர்கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். அன்று தமது வெறியாட்டம் முடிந்து முகாம் திரும்பிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மீண்டும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கல்வியங்காட்டுப் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சைக்கிள் ஒன்றில் வந்துகொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கண்ட இராணுவத்தினர் அவனை நிற்குமாறு உத்தரவிட்டனர். ஒரு கையில் பாண் ஒன்றை ஏந்தியபடி சைக்கிளை மிதித்துவந்த அந்தச் சிறுவனும் உடனடியாக சைக்கிளை விட்டு கீழிறங்கவே, அவனருகில் சென்ற இராணுவ வீரன் ஒருவன் அச்சிறுவனின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். அச்சிறுவன் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தான். சிறுவனது உடலும், அவன் மிதித்துவந்த சைக்கிளும், காவி வந்த பாணும் அவ்விடத்திலேயே மாலைவரை கிடந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன. "அவனது மூளைப்பகுதி சிதறி தலையின் வெளியே கசிந்துகொண்டிருந்தது" என்று தனது புத்தகத்தின் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுவனைத் தான் பார்த்தபோது நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தவிர வேறு எதுவும் தன்னால் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார். வீதியின் இருபக்கத்திலும் இருந்த பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்தனர். அங்கிருந்த வீடுகளை அவர்கள் எரித்துக்கொண்டே சென்றதுடன் கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றபடி சென்றனர். இவ்வாறான வீடொன்றில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதைப்பார்த்த ராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதுடன் வீட்டிற்கும் தீமூட்டினர். மாதகல் முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற ராணுவத்தினரும் இதேவகையான படுகொலைகளில் ஈடுபட்டனர். மானிப்பாய் நகர்ப்பகுதிக்குச் சென்ற அவர்கள் வீதியால் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியொன்றினை மறித்து, அதிலிருந்தவர்கள் கீழே இறங்குமாறு பணித்தனர். பஸ்ஸினுள் இருந்து கீழே இறங்கிய ஒன்பது பாடசாலை மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கட்டளையிட்டனர். பின்னர் அம்மாணவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆறு மாணவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிழ, ஏனைய மூவரும் கடுமையாகக் காயப்பட்டனர். இவ்வாறே வல்வெட்டித்துறை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற இராணுவத்தினரும் கடைகளையும் வீடுகளையும் எரிக்க ஆரம்பித்தனர். ஒரு நாளில் மட்டும் இந்த மூன்று இடங்களிலும் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. குறைந்தது நூறு வீடுகளும் கடைகளும் அன்று இராணுவத்தால் எரியூட்டப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் ஆடி 24 ஆம் நாளன்று இரவு ராணுவத் தளபதி வீரதுங்க குருநகர் முகாமிலேயே தங்கியிருந்தார். அவர் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் நடக்கும் கலவரம் குறித்த அறிக்கைகள் அவருக்கு வந்துகொனண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்குப் பின்னரே பார்க்கச் சம்மதித்தார். திருநெல்வேலிப் பகுதிக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து முனசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார், "1983 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் நாள், காலை 10 மணியிருக்கும். நாம் எமது வாகனங்களில் ஏறி திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தளபதி வீரதுங்கவும் எம்முடன் இணைந்துகொண்டார். எல்லாத்திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் கேட்டோம். திருநெல்வேலியை அடைந்த நாம், சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திக்கில் நடக்கத் தொடங்கினோம். வீதியின் இரு பகுதியிலும் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக வீதியை நோக்கி வருமாறு உரக்கக் கத்தினோம்". "இலங்கை இலகு கலாட்படையின் தளபதி லெப்டினன்ட் ரஜீவ் வீரசிங்க என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனது உடலைக் கண்டபோது பெருமூச்சொன்றினை விடுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. அவன் ஓட்டிவந்த சைக்கிளும், காவிவந்த ஒரு இறாத்தல் பாணும் அவனது சடலத்திற்கருகில் அப்படியே கிடந்தன. அவனது தலைப்பகுதி சிதறிக் கிடக்க மூளை வழிந்து வீதியில் ஓடிக் கிடந்தது. அவனை மிக அருகில் வந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது". "அதேவேளை, நாம் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் ராணுவ வீரர் ஒருவர் பதுங்கியிருந்து எம்மை நோக்கித் தனது துப்பாக்கியை திருப்புவதை நான் கண்டேன். என்னிடம் பிஸ்ட்டல் ஒன்று மாத்திரமே இருந்தது. லெப்டினன்ட் வீரசிங்கவிடம் அவரது பிரத்தியேக துப்பாக்கி இருந்தது. ஒருகணம் அந்த ராணுவ வீரன் எம்மைக் கொல்வதற்காகவே பதுங்குவதாக நான் நினைத்தேன். தெய்வாதீனமாக வீரசிங்கவுக்கு அந்த ராணுவ வீரனை நன்கு தெரிந்திருந்தது. ஆகவே, வீரசிங்க அவனைப் பார்த்து "வீதிக்கு வா" என்று கட்டளையிட, அவனும் வெளியே வந்தான். திருநெல்வேலிச் சந்திப்பகுதியில் அக்கிரமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரை மீள வெளியே இழுத்துவர எமக்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது எடுத்திருக்கும். தளபதி வீரதுங்க மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். படுகொலைகளிலும், சொத்தழிப்புக்களிலும் ஈடுபட்ட ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை சில இடைநிலை அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன. அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை அநுராதபுரம் தடுப்புச் சிறைச்சாலைக்கு நாம் அனுப்பி வைத்தோம்". "இதேவகையான படுகொலைகள் வல்வெட்டித்துரை மற்றும் மாதகல் முகாம்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அரங்கேறின. பின்னர், மாதகல் முகாம் அதிகாரியான மேஜரும் அவரது ராணுவத்தினரும் தம்மை வேறு முகாம்களுக்கு மாற்றவேண்டாம் என்றும், தாம் மாதகல் முகாமிலேயே தங்கியிருப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டிக்கொண்டதாகவும் நாம் அறிந்தோம். மாதகல் முகாமின் பொறுப்பதிகாரியான ராணுவ மேஜர் முகாமை விட்டு ராணுவத்தினர் வெளியே செல்லக்கூடாது என்று வாயிலின் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டதாகவும், ஆனால் அவரைத் தூக்கி வாயிலின் வெளியே எறிந்துவிட்டு தமது ட்ரக்குகளில் ஏறிச்சென்ற ராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் எமக்குக் கூறப்பட்டது". இராணுவத் தளபதி இந்த நாட்களில் நடந்துகொண்ட விதம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அப்பாவித் தமிழர்களை தனது இராணுவத்தினர் படுகொலை செய்துவருகிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மீண்டும் மீண்டும் ரேடியோ அறையிலிருந்து அறிவிக்கப்பட்டே வந்தது. ஆனால், மறுநாள் காலை 10 மணிவரை அவர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஏன்? மேலும், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுமார் இருவாரங்கள் முடிந்தபின்னரே தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் டேவிட் பெரெஸ்ஃபபோர்ட் ஜெயாரிடம் யாழ்ப்பாணப் படுகொலைகள் குறித்து ஆவணி 7 ஆம் திகதி வினவுகையில், "யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினரை இதுவரை நீங்கள் விசாரிக்காதது ஏன்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரியவந்தது. இப்போது நாட்கள் சென்றுவிட்டன, இனிமேல் விசாரிப்பதில் பயனில்லை" என்று வெகு சாதாரணமாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்து வீடு 2001 ஜெயாரிடம் பேசிய பெரெஸ்போர்ட், "யாழ்ப்பாணதில் சிறுவர்கள் வயோதிபர்கள் உட்பட 51 பொதுமக்களை உங்கள் இராணுவத்தினர் படுகொலை செய்திருக்கின்றனரே?" என்று கேட்டபோது, "அத்தனை பேர் சாகவில்லை சுமார் இருபது வரையிலான மக்கள் இறந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார். மேலும், யாழ்ப்பாணத்துப்படுகொலைகள் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப்பின்னரே தான் அதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகக் கூறிய ஜெயார், இராணுவத்தினர் தன்னிடமிருந்து இவ்விடயத்தை மறைத்துவிட்டார்கள் என்றும் கூறினார். அப்படியானால், ஜனாதிபதி ஜெயாரிடமிருந்து இந்த படுகொலைகளை இராணுவத் தளபதி வீரதுங்க மறைத்தது ஏன்? யாழ்ப்பாணத்துப் படுகொலைகளும், தெற்கில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளும் உண்மையாகவே ஜெயாரினால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட "தமிழருக்கான இறுதித் தீர்வு" எனும் திட்டமிட்ட இனக்கொலைக்குள் அடக்கமா என்கிற கேள்வி எழுகிறது. இந்த வினாக்களும், சந்தேகங்களும் இன்றுவரை தமிழர்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த சந்தேகங்களே பிரபாகரனை போராடும்படி முந்தள்ளி விட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதம், தமிழினக்கொலை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகும் நிலையில் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிடம் பேசிய பிரபாகரன், "எமது பார்வையில் 1983 ஆடியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையானது நன்கு திட்டமிட்ட ரீதியில், ஒருமித்த வழிநடத்துதலில், அதிகாரத்திலிருந்த கட்சியின் இனவாத முக்கியஸ்த்தர்களால் நடத்தப்பட்டதாகவே உணர்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனை உருவமைத்த அவரது சிந்தனையின் வெளிப்பாடான இந்தக் கேள்வி பதில் பகுதியை இங்கே இணைக்கிறேன், அனித்தா பிரதாப் : 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இலங்கை இராணுவத்தின் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்துவதற்கு உங்களின் தாக்குதல் காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பாரிய பழிவாங்கும் தாக்குதல்கள் நீங்கள் நஎதிர்பார்த்தீர்களா? பிரபாகரன் : ஜூலை இனக்கொலையினை தமிழ்ப் போராளிகளின் பதுங்கித் தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கலாக நீங்கள் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்ப்பது நடத்தப்பட்ட இனக்கொலையினை மிக இலகுவாக கடந்துசெல்லக் காரணமாகிவிடும். ஆண்டாண்டு காலமாக தமிழருக்கெதிரான இன வன்முறைகளை இந்த நாடு தொடர்ச்சியாக அரங்கேற்றியே வந்திருக்கிறது. எமது போராளி இயக்கம் ஆரம்பிக்கும் முதலே தமிழர் மீதான இனக்கொலைகள் நடந்தே வந்திருக்கின்றன. எமது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் திருகோணமலயில் தமிழர்கள் மீது திட்டமீட ரீதியில் படுகொலைகளும், சொத்தழிப்புக்களும் நடந்திருந்தன. ஆகவே, தமிழர் மீதான திட்டமிட்ட இனவன்முறைகளை ஒரு தாக்குதல் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட நெடிய கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை நாம் நடத்தி பல சிங்கள இராணுவத்தினரையும், பொலீஸாரையும் கொன்றிருக்கிறோம். ஆடியில் எம்மால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல்கூட எமது போரட்டத்தின் இன்னொரு சம்பவமே அன்றி வேறில்லை. ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் ஒரு தாக்குதல் நிகழ்வே காரணமானது என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஆடியில் எம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது, அவை எம் மக்களை கொல்வதற்காக மட்டுமே நடத்தப்படவில்லையென்பதும், கொழும்பில் எம்மக்களின் பொருளாதாரப் பலத்தினைச் சிதைக்கவும், வாழ்வாதாரத்தை அழிக்கவும் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்கள். எமது பார்வையில் ஆடியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையென்பது மிகவும் திட்டமிட்ட வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த இனவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்ட இனக்கொலையாகவே பார்க்கிறோம். ஆரம்பத்தில் இப்படுகொலைகளுக்கான ஒட்டுமொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்திவிடவே சிங்கள இனவாத அதிகார மையம் முயன்றது. பின்னர் திடீரென்று இடதுசாரி கட்சிகளை நோக்கி இனவாதிகள் தமது விரலை நீட்டினர். ஆனால், இன்றும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் இனவாத தலைமைப்பீடமே இப்படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயாருக்கெதிராகத் திரும்பிய சிங்களவரின் கோபம் http://ahfesl.free.fr/Images/Image_blak_july_1983_04.jpg ஆத்திரத்துடனும், உணர்வு மேலீட்டுடனும் கனத்தைப் பகுதியில் குழுமியிருந்த சிங்களவர்களுக்கு முதன்முதலாக கட்டளைகளைப் பிறப்பித்துத் தலைமை தாங்கியவர்கள் நாரஹேன்பிட்ட ராணுவ முகாமிலிருந்து வந்த ராணுவத்தினரே. தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கருகில் சென்ற அவர்கள், அருகிலிருந்த மண்ணை அக்குழிகளுக்குள் தள்ளி அவற்றினை மூடினார்கள். பின்னர், "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் எம்மிடம் தரப்பட வேண்டும், அவர்களை நாய்களைப் போல்ப் புதைக்க விடமாட்டோம்' என்று உரக்கக் கோஷமிடத் தொடங்கினார்கள். இந்தக் கோஷங்கள் அங்கே குழுமியிருந்த சிங்களவர் கூட்டத்தின் உணர்ச்சி நரம்புகளை உசுப்பிவிட, அவர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து கோஷமிடவும் கலகத்தில் ஈடுபடவும் தொடங்கினர். "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை அவர்களிடம் உறவினர்களிடம் கொடுத்துவிடு" என்று அரசாங்கத்தை நோக்கிக் கோஷமிடத் தொடங்கினர். மரணச் சடங்கினை மேற்பார்வையிட அங்கு அனுப்பப்பட்டிருந்த உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர், மயானத்தின் ஒரு பகுதியில் மக்கள் கோஷமிட ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்றார். அவர் அப்பகுதியை அடைந்தபோது, கூட்டத்திலிருந்தவர்கள் மரப்பலகை ஒன்றினால் அவரை இடிக்கவே அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அதிஷ்ட்டவசமாக, தோண்டப்பட்ட குழிகளுக்குள் அவரைத் தள்ளி வீழ்த்த அவர்கள் எடுத்த முயற்சியை அவரால் தடுக்க முடிந்தது. கனத்தை மயானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களைத் துரத்தும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர் 24, ஆடி, 1983 அங்கு குழுமியிருந்த சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களின் கலகம் கட்டுக்கடங்காமல்ப் போனது. ரேமண்ட் மலர்ச்சாலையின் ஊழியர்களால் மரணச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பித்தளையிலான கட்டமைப்புக்களும், வளைவுகளும் கலவரக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மயானத்தின் அப்பகுதியிலிருந்த ஏனையவர்களின் கல்லறைகளை அவர்கள் உடைத்து நாசம் செய்தார்கள். பல கல்லறைகளின் நினைவுக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டன. கலவரக்காரர்கள் வந்திருப்பது தமது கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்துகொண்ட கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிட, அவர்களுடன் பிரித் ஓதவென்று அழைக்கப்பட்டிருந்த பிக்குகளும் அச்சத்தில் மெல்லக் கழன்றுகொண்டனர். மாலை 7 மணி ஆகிக்கொண்டிருந்தது. உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவும், பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவும் மீண்டும் கனத்தை மயானத்திற்கு வருகை தந்தனர். தனது நுவரெலிய விடுமுறையினைப் பாதியில் கலைத்துவிட்டு கனத்தைக்கு வந்திருந்த பொலீஸ் அத்தியட்சகர் ருத்ரா ராஜசிங்கத்திடம் அவர்கள் நேராகச் சென்றனர். மயானத்தில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று அவர்கள் கேட்கவும், நிலைமை சிறிது சிறிதாக மோசமாகிக்கொண்டு வருகிறது என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து, "நீங்கள் இங்கேயே இருந்து நிலைமையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நாங்கள் உடனடியாக ஜனாதிபதிக்கு தற்போதைய நிலைமையினை நேரடியாகச் சென்று அறிவிக்கிறோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசுக்குச் சென்றனர். சுமார் மாலை 7:30 மணியளவில் எமது புகைப்பிடிப்பாளர் பியதாசவும் ஊடகவியலாளர் ஒருவரும் லேக் ஹவுஸ் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர் வரும்போது கனத்தைப் பகுதியில் தன்னால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைக் காண்பித்தார். கலவரபூமியாகக் காட்சியளித்த கனத்தை மயானத்தை அவர் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். இரண்டாவது பதிப்பிற்குச் செல்லும் பத்திரிக்கைகளில் அப்புகைப்படங்களை உள்ளடக்குவதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தலைவர் ரணபால போதினாகொட, டெயிலி நியூஸின் ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஜெயாரின் வீட்டிற்கும் இடையே தொடர்ச்சியாகப் போய்வந்துகொண்டிருந்ததுடன், கனத்தைக் கலவரத்தை பெரிதாகப் பிரசுரிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதுடன், டெயிலி நியூஸ் ஆசிரியர் மணிக் டி சில்வாவிடம், "அபாயகரமான சூழ்நிலையொன்று வலுப்பெற்று வருகிறது" என்று தலைப்பிட்டால்ப் போதும் என்று பணித்தார். ஆனால், பியதாசவுக்கோ நிறுவனத்தின் தலைவரின் செயல் அமைதியைத் தரவில்லை. தான் எடுத்துவந்த புகைப்படங்களை போதினாகொடவிடம் காட்டிய அவர், "நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது" என்று ஆவேசத்துடன் கூறினார். பின்னர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார், "சபா, கவனமாக இருங்கள். இப்போது சிங்களவர்களின் கோபம் அரசாங்கத்தின் மீதே இருக்கிறது. ஆனால், இந்த கோபத்தை தமிழர்களின் மீது திருப்பிவிட முக்கியமான சிலர் முயற்சித்து வருகிறார்கள்". பியதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அரசியல்த் தலைமைப் பீடத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்தன. அவற்றினூடாகவே நிலைமையினை அறிந்துகொண்ட அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். மேலும் என்னுடன் பேசும்போது, "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் அவர்கள்" என்றும் கூறினார். ராணுவத்தினரின் உடல்களைத் தம்மிடம் தருமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளைக் கேட்டுவந்ததனால், அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம் என்று அதிகாரிகள் பதிலளித்தைத் தான் பார்த்ததாக பியதாச கூறினார். மேலும், கனத்தை மயானத்தில் கூட்டு மரணச் சடங்கினை அரசு நடத்தத் தீர்மானித்தன் நோக்கம், தாக்குதலில் அகப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் முற்றாகச் சிதைந்து சேதமடைந்து விட்டதனால், அவற்றினைத் தனித்தனியாக அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது கடிணம், ஆகவேதான் கூட்டு மரணச்சடங்கினை அரசு நடத்த முடிவெடுத்தது என்றும் அவர்கள் உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர். லேக் ஹவுஸின் இரண்டாவது நிருபரும், அவரது உதவியாளரும் இரவு 8:30 மணிக்கு நிலையத்திற்குத் திரும்பினர். கனத்தையில் நடக்கவிருந்த மரணச் சடங்குகள் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மயானம் முழுவதிலும் ஒலிபெருக்கியால் அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் கடுமையான கலவரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். "மக்கள் ஜனாதிபதிக்கெதிராகவும், அரசாங்கத்திற்கெதிராகவும் கோஷமிட்டபடி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அவர்கள் கூறினர். நாம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கூட்டமொன்று இரவு 8:30 மணியளவில் மயானத்திற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் கம்மியூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்கள். அந்த மாணவர் கூட்டத்திலிருந்த இருவர் அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது , "ராணுவத்தினரின் மரணங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஆவேஷமாகக் கூறினர். பின்னர் ஆத்திரத்துடனும் உணர்வு மேலீட்டுடனும் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை ஜனாதிபதியின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேஸ் நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஆனால், ஜனாதிபதியின் இல்லம் நோக்கிய சிங்களவரின் பேரணியை பொலீஸார் இடைமறித்தனர். அரசுக்கெதிரான உணர்வு மேலீட்டு வருவதை உணர்ந்துகொண்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன, ஜனாதிபதியில் இல்லத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடைவதைத் தடுக்கும் நோக்கில் வேர்ட் பிளேசுக்கான தொடக்கப் பகுதியிலும், கின்ஸி வீதியிலும் தடைகளை ஏற்படுத்தி பொலீஸாரை காவலுக்கு அமர்த்தினார். உணர்வு மேலீட்டுடன் ஆவேசமாக கணத்தையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு, தம்மை எதிர்கொள்ள பொலீஸார் தயாராகி வருவதை அறிந்ததும், கூட்டத்திலிருந்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். இவர்களுள் பலர் தமது வீடுகளுக்கே திரும்பியிருந்தனர். சுமார் இரவு 10 மணியிருக்கும். லேக் ஹவுஸில் அந்நேரம் பணிபுரிந்துகொண்டிருந்த எல்லோரும் பொரள்ளைப் பகுதியிலிருந்து ஆகாயம் நோக்கிப் புகைமண்டலம் மேலெழுந்துவருவதைக் கண்ணுற்றோம். நான் உடனடியாக தீயணைப்புப் படையினருடன் தொடர்புகொண்டேன். மறுமுனையில் பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி, கனத்தையிலிருந்து வெளியேறி வந்த ஆர்ப்பாட்டர்க் காரர்கள் பொரள்ளைச் சந்தியிலிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை எரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து பாரிய தீச்சுவாலைகள் மேலெழுந்துவருவதை எம்மால் காண முடிந்தது. டெயிலிநியூஸ் ஆசிரியர் அறையிலிருந்து பார்க்கும்போது, கோட்டைப் புகையிரத நிலையம், புறக்கோட்டை சந்தைப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை எம்மால் தெளிவாகப் பார்க்கமுடியும். கொழும்பு எரியத் தொடங்கியிருந்தது ! - பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.