Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இராணுவத் தளபதியின் சீற்றம் "ராணுவத் தளபதி வீரதுங்கவுக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் கொழும்பிலிருந்து வந்திருந்தன.அவற்றுள் ஒன்று பாதுகாப்புச் செயலாளரிடமிருந்தும் இன்னொன்று ஜனாதிபதியிடமிருந்தும் வந்திருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி அவர் பேசுவது எங்களுக்குப் புரிந்தது. தனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிடம் மரணச் சடங்குகள் நடைபெறவேண்டிய விதம் குறித்த பணிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவர் மிகுந்த சீற்றத்துடன் யாரிடமோ பேசுவது கேட்டது. "எனது நாயைக்கூட யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ நான் புதைக்கமாட்டேன்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு பேசினார்". "பின்னர் எம்முடன் பேசிய அவர், அரச அதிகாரிகள் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை யாழ்ப்பாணாத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்தோ அல்லது புதைத்துவிடும்படி" தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். சேபால ஆட்டிகல கொழும்பு கனத்தை மயானத்திற்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து, அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவது கண்டு, மீண்டும் அலுவலகம் திரும்பியிருந்த பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவே உடல்களை யாழ்ப்பாணத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்து விடும்படி ராணுவத் தளபதியைக் கேட்டிருந்தார். கனத்தைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாக புலநாய்வுத்துறையினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுடன் கனத்தை மயானத்திற்கு மாலை 6 மணியளவில் நிலைமையினை ஆராயும் பொருட்டு செயலாளர் ஆட்டிகல சென்றிருந்தார். எனது ஆசிரியரான ஆரன் மாலை 4 மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் தெகிவளையில் அமைந்திருந்த எனது வீட்டில் இருந்தேன். கனத்தை மயானத்தில் மரணச் சடங்குகள் நடைபெறவிருப்பதால் என்னை உடனடியாக அலுவலகம் வரும்படி அவர் அழைத்தார். திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதல் பற்றி எனக்கு அப்போது தெரிந்தே இருந்தது. அன்று இரவு பணியில் நான் ஈடுபட்டிருந்ததால், மாலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதே வழமை. டெயிலிநியூஸ் பத்திரிக்கையின் உப ஆசிரியராக நான் அப்போது கடமையிலிருந்தேன். ஆரன் என்னுடன் பேசும்போது, "கனத்தையில் மரணச் சடங்கினை நடத்துவது எனும் முடிவு இன்னமும் இரகசியமாகவே இருக்கிறது. மாலை 5 மணிக்கு சடங்கினை நடத்தப்போவதாக செய்தி வந்திருக்கிறது. செய்தி நிருபர்களையும், புகைப்படப் பிடிபாளர்களையும் அங்கு வருமாறு அதிகாரிகள் கோரியிருக்கின்றனர். நான் பியதாசவையும் இன்னும் இரு நிருபர்களையும் அங்கே அனுப்பப்போகிறேன்" என்று கூறினார். பியதாச எமது செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய சிறந்த புகைப்படப் பிடிப்பாளர். இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் அனுப்பியிருந்தது. மாலை 5 மணிக்கு லேக் ஹவுஸ் நிலையத்திற்கு நான் சென்றபோது நிலைமை சுமூகமாக இருப்பதாகவே தெரிந்தது. மாகாணத் தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பதிப்புக்கள் ஓரளவுக்கு முற்றுப்பெற்ற நிலையில் புலிகளின் தாக்குதலை தலைப்புச் செய்தியாக அவை காவி இருந்தன. சுமார் மாலை 4:30 மணியளவில் பியதாசவும் செய்தியாளர்கள் இருவரும் கனத்தைக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களுடன் தினமின, தினகரன் ஆகிய சகோதரப் பத்திரிக்கைகளின் நிருபர்களும் சென்றனர். மாலை 5 மணிக்கு ரேமண்ட் மலர்ச்சாலையிலிருந்து எம்முடன் பேசிய எமது செய்தியாளர் மரணச் சடங்குகள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார். "சடலங்கள் இன்னமும் பலாலியை விட்டு நீங்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு கூடிவருகிறார்கள். மக்கள் கூட்டமொன்றும் அதிகரித்து வருகிறது" என்று கூறினார். மரணச் சடங்கிற்கான ஆயத்த வேலைப்பாடுகள் பூர்த்தியாகி விட்டதாகக் கூறிய அவர், சில ராணுவ வீரர்களும், பொலீஸாரும் மயானத்தினுள்ளும், வெளியேயும் காவலுக்கு நிற்கிறார்கள் என்றும் கூறினார். சடலங்களைப் புதைப்பத்கற்கான குழிகள் தோண்டப்பட்டு, ராணுவ பாண்ட் வாத்தியக் குழு வரவழைக்கப்பட்டு, பிரித் ஓதுவதற்கு பிக்குகள் கூட்டிவரப்பட்டு, தொலைக்காட்சிக் கமெராக்கள் ஒழுங்குசெய்யப்பட்டு, வளைவு வெளிச்சங்கள் ஏற்றப்பட்டு அப்பகுதி மரணச் சடங்கிற்கு ஆயத்தமாகி இருப்பதாக அவர் கூறினார். ஆனால், உயர் ராணுவ அதிகாரிகளோ அல்லது பொலீஸ் அதிகாரிகளோ அப்பகுதியில் காணப்படவில்லையென்றும் அவர் கூறினார். மேலும், கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு மரியாதை செய்யும் முகமாக சில அமைச்சர்கள் அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் எமக்குக் கூறப்பட்டது. ரேமண்ட் மலச்சாலை பலாலியிலிருந்து ராணுவத்தினரின் உடல்கள் வருவதற்கு ஏன் தாமதமடைகிறதென்பதற்கான காரணம் எவருக்குமே அங்கு தெரிந்திருக்கவில்லை. விமானப்படை விமானம் ஒன்றின்மூலம் பலாலியிலிருந்து கொழும்பு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு உடல்கள் கொண்டுவரப்படவிருந்த நிலையில், வீரதுங்க குருநகரிலிருந்து பலாலிக்கு உலகுவானூர்தி ஒன்றின்மூலம் சென்றடைந்தார். உடல்கள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றன என்று யாழ்த் தளபதி பல்த்தசார் வீரதுங்கவுக்குக் கூறியதையடுத்து, தானும் உடல்கள் கொண்டுசெல்லப்படுகையில் கொழும்பு செல்லும் நோக்குடன் அவர் பலாலிக்குக் கிளம்பிச் சென்றார். யாழ் வைத்தியசாலை சவ அறையிலிருந்து மாலை 5 மணிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் என்னிடம் கூறினர். மேலும், பலாலியில் இருப்பவர்களே அனைத்தையும் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். கொழும்பிலிருந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருப்பதால் பலாலியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் குழப்பமான நிலையில் காணப்படுவதாகவும் எமக்குக் கூறப்பட்டது. பலாலி ராணுவத் தளத்தில் அப்போதிருந்த உயர் அதிகாரியொருவர் இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஜெயவர்த்தனவின் கட்டளைகளே என்று கூறினார். தளபதி வீரதுங்கவை அன்றிரவு குருநகரில் இருக்குமாறு கட்டளையிட்டதன் மூலம் அனைத்து விடயங்களையும் தாமதித்துக் குழப்பியது ஜெயவர்த்தனவே என்று அவர் கூறினார். தினமினப் பத்திரிக்கையின் கல்கிஸ்ஸைப் பகுதி நிருபர் இரத்மலான விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்படுவதைச் செய்தியாக்கப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் பின்னர் பேசுகையில், "இரத்மாலனை விமான நிலையத்தில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்றே எவருக்கும் இங்கு தெரியவில்லை" என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார். கனத்தை மயானம் - பொரள்ளை, கொழும்பு கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உறவுகள் சிலர் குழுமியிருந்த பொரள்ளை ரேமண்ட் மலச்சாலையிலும் இதேவகையான குழப்பநிலை காணப்பட்டது. மேலும், அவ்வேளை உடல்கள் தாக்கப்படவிருக்கும் கனத்தை மயானத்திற்கு கூட்டம் கூட்டமாக பலர் வரத் தொடங்கியிருந்தார்கள். எவருமே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது நிதானத்துடன் நடந்துகொள்ளவோ முயலவில்லை. யாவுமே மிகவும் குழப்பகரமாகக் காணப்பட்டது. அப்பகுதிக்கு வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தாம் எண்ணிய வழியில் கூடியிருந்தவர்களை ஒவ்வொரு வகையில் வழிநடத்த, அப்பகுதி கலவர பூபியாகக் காட்சியளித்தது. நேரம் செல்லச் செல்ல, குழப்பமான சூழ்நிலை கலவரமாக மாற்றமெடுத்தது. குழப்பநிலையினை உருவாக்கும் நோக்கில் கூட்டம் ஒன்று மயானத்திற்குள் நுழைவதனை எமது நிருபர்கள் அவதானித்தார்கள். தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு, வெண்ணிற டீ சேர்ட்டுக்களும், கட்டைக் காற்சட்டைகளும் அணிந்த இக்கூட்டம் ஏலவே திட்டமிட்டது போன்று சவக் குழிகள் தோண்டப்பட்டிருந்த இடத்தினை நோக்கிச் சென்றது. முதலில் இக்கூட்டத்தினை ரஜரட்ட ரைபிள் படைப்பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இவர்கள் பொரள்ளை வீதியில் , நரஹேன்பிட்ட பகுதியில் இருக்கும் ராணுவ முகாமின் வீரர்கள் என்பது தெரியவந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ராணுவத்தினரால் பரிமாறப்பட்ட ரேடியோத் தகவல்கள் ஆடி 24 ஆம் நாள் பலாலிக்குச் சென்ற இராணுவத் தளபதி வீரதுங்க அங்கிருந்து உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் குருநகர் இராணுவ முகாமிற்குச் சென்றார். அவர் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் படுகொலைகள் அரங்கேறத் தொடங்கியிருந்தன. அன்று பிற்பகல் கவலையளிக்கும் சில ரேடியோத் தகவல்கள் பலாலி இராணுவப் படைத்தளத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன. இந்த ரேடியோத் தகவல்கள் இரண்டினைப்பற்றி தனது "ஒரு ராணுவ வீரனின் நாட்குறிப்பு" எனும் புத்தகத்தில் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். "மாதகல் முகாமிலிருந்தும், வல்வெட்டித்துறை முகாமிலிருந்தும் கிளம்பிச் சென்ற இராணுவ வீரர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்" என்று முதலாவது செய்திபற்றி அவரது புத்தகம் கூறுகிறது. அவரது இரண்டாவது ரேடியோத் தகவல் பின்வருமாறு கூறுகிறது, "டிரக் நிரம்பிய ராணுவ வீரர்கள் பலாலி இராணுவத் தளத்திலிருந்து கிளம்பி யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக்கொண்டு அவர்கள் செல்கிறார்கள்". ராணுவத் தளபதி குருநகரில் இறங்கியவேளையிலேயே இராணுவத்தினரின் அட்டூழியங்கள் ஆரம்பித்தன. யாழ்நகரே இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு எரிந்துகொண்டிருக்க, அம்மாவட்டத்தின் அனைத்து இராணுவ அதிகாரிகளும் திஸ்ஸ வீரதுங்கவை வரவேற்க குருநகர் முகாமிற்கு சமூகமளித்திருந்தனர். குருநகர் முகாமில் நடத்தப்பட்ட மாநாட்டினை திஸ்ஸ வீரதுங்க தலைமை தாங்க, யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசார் புலிகளின் தாக்குதல் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்தார்.கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் விடயங்களைக் கூறிய பல்த்தசார், ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்பிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் எடுத்திருப்பதாகவும் கூறினார். பலாலி ராணுவத் தளத்திலிருந்து வந்துகொண்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்த ரேடியோத் தகவல்கள் பற்றியும் வீரதுங்கவுக்குக் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ அதிகாரிகளிடம் பேசிய வீரதுங்க தனது முதலாவது கவலை கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்பிவைப்பதுதான் என்று கூறினார். அவரிடம் பேசிய பல்த்தசார் 10 சடலங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஏனைய மூன்று சடலங்களும் சற்று உருக்குலைந்த நிலையிலும் இருப்பதாக கூறினார். ஜீப்பில் பயணம் செய்த இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தனவும், பின்னால் அமர்ந்து பயணித்த இரு ராணுவ வீரர்களும் கண்ணிவெடித்தாக்குதலில் நேரடித் தாக்கத்திற்கு உள்ளானதாக அவர் கூறினார்.மேலும், விமானம் மூலம் இவ்வுடல்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், உறவினர்கள் ரேமண்ட் மலர்ச்சாலைக்குச் சென்று தமது ராணுவ வீரர்களை உடுத்த வேண்டிய உடைகளைக் கையளித்தால், தாம் அவர்களைத் தயார் செய்ய முடியும் என்று பொலீஸார் ஊடாகச் செய்தியனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ் வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகள் என்னுடன் பேசும்போது உடல்களில் எவையுமே உருக்குலைந்த நிலையில் இருக்கவில்லையென்றும், அவர்கள் யாருடையவை என்று அடையாளம் காண்பதில் தமக்குச் சிரமம் இருக்கவில்லையென்றும் கூறினர். மேலும், வெடிப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சடலம் என்று பலராலும் கூறப்பட்ட வாஸ் குணவர்த்தனவின் சடலத்தை முனசிங்க மிக இலகுவாகவே தாக்குதல் நடந்த இடத்தில் அடையாளம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பல்த்தசார் திறமையாகச் செயற்பட்டு பல விடயங்களை செய்திருப்பதாக திஸ்ஸ வீரதுங்க பாராட்டியிருந்தார். குருநகர் முகாமிலிருந்து மாலை 5 மணியளவில் கிளம்ப ஆயத்தமானார் வீரதுங்க. தன்னை வழியனுப்ப உலக்குவானூர்தி மேடைக்கு வந்த அதிகாரிகளிடம் பேசிய அவர், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழு இராணுவ மாரியாதை கொடுக்க ஜெயார் விரும்புவதாகக் கூறினார். மேலும், கொழும்பு பொரள்ளை கனத்தையில் அவர்களை அனைவரையும் புதைத்து, அவர்களுக்கென்று நினைவுத் தூபியொன்றினையும் நிறுவ ஜெயார் விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், ராணுவத்தினரின் உடல்கள் கொழும்பு கொண்டுசெல்லப்படும்போது, தானும் அவற்றுடன் செல்லவேண்டும் என்றும் வீரதுங்க கூறினார். ஆனால் கிளம்பிச் சென்ற 30 நிமிடங்களில் திரும்பி வந்தார் வீரதுங்க. அவர் திரும்பி வந்ததையடுத்து அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரை வரவேற்க மீண்டும் உலங்குவானூர்தி மேடைக்கு அரக்கப் பறக்க ஓடிச்சென்றனர். அவர்களிடம் பேசிய வீர்துங்க தான் பயணித்த உலங்குபானூர்தியின் தொலைபேசியில் அரசாங்க உயர்பீடத்துடன் தான் உரையாடியதாகவும், அதன்படி, அன்றிரவு தன்னை யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிடுமாறு ஜெயார் பணித்ததாகவும் கூறினார். பலாலி ராணுவத் தளத்தினூடாக வீரதுங்கவை அவசர அவசரமாக தொடர்புகொள்ள பலமுறை முயன்றதாகவும், ஈற்றில் வானூர்தியில் பயணித்தபோது அவருடன் தொடர்பினை கொழும்பிலிருந்தவர்கள் ஏற்படுத்திக்கொண்டதாகவும் அத்தொடர்பினை ஏற்படுத்திய அதிகாரி கூறினார். வீரதுங்க திருப்பி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது ஏன்? எனக்குத் தெரிந்த அதிகாரிகளிடமிருந்து இதற்கான பதிலை நான் தேட ஆரம்பித்தேன். எனக்குச் சொல்லப்பட்ட ஒரே காரணம் வீரதுங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இராணுவ வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஜெயார் பணித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வீரதுங்க பாதி வழியில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிவந்து மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் ஒருவருக்கு அவர் இராணுவ வீரர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக வரவில்லை என்பது தெளிவாகவே புரியும். அவரது செயற்பாடுகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவரின் மீள்வருகையின் காரணத்தை தெளிவாக எடுத்தியம்பின. யாழ்ப்பாண குருநகர் ராணுவ முகாமுக்குத் திரும்பிய வீரதுங்க செய்தது என்ன? வீரதுங்கவின் செயற்பாடுகளை முனசிங்க தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "தூக்கமற்ற இரவுகளால் நாம் அனைவரும் மிகவும் களைப்படைந்திருந்தோம். அப்படியிருந்தபோதும், நாம் அனைவரும், குறிப்பாக மூத்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராணுவ முகாமின் உணவு விடுதியில் ஆடி 24 ஆம் திகதி மாலை கூடியிருந்தோம். மது அருந்துவதற்காக திஸ்ஸ வீரதுங்கவும் எம்முடன் இணைந்து கொண்டார். இனிமேல் நடக்கவேண்டிய விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து வந்த பணிப்புரைகளின்படி இராணுவாத்தினரை விளிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் இராணுவத்தினரின் ஒழுக்கம் குறித்து கண்டிப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தது".
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் சொல்வது உண்மை. அமெரிக்காவுக்கு ரஸ்ஸியா சளைத்து அல்ல. அதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இச்சந்திப்பில் பிரிகோஷினும் கலந்துகொண்டார். ஆனால், இனிமேல் வாக்னர் குழுவை அன்ரே றெஷேவே வழிநடத்த முடியும் என்றும் புட்டின் கூறியிருக்கிறார். வாக்னர் குழு தமது புதிய தலைவரின் கீழ் வழமைபோல் செயற்பட முடியும் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் புதிய தலைவர் வாக்னர் குழுவினரை சிரியாவில் தற்போது வழிநடத்தி வருபவர் என்பதுடன் சிரிய அதிபர் ஆசாத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடக் தக்கது. சோவியத் ஆப்கான் போரில் பங்காற்றியிருந்த அன்ரே, பின்னாட்களில் ரஸ்ஸிய உள்ளக புலநாய்வுத்துறையிலும் சிறப்புப் படைகளிலும் பணிபுரிந்திருக்கிறார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வாக்னர் குழுவினரின் ஆயுதக் கிளர்ச்சி அடங்கிய 5 நாட்களில் அக்குழுவைச் சந்தித்தார் புட்டின்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாணப் படுகொலைகள் இராணுவத்தினரின் பொதுவான மரணச்சடங்கு கொழும்பில் நடப்பதை எதிர்த்த அதிகாரிகள், பிடிவாதமாக நின்ற ஜெயார் தாக்குதலினால் நிலைகுலைந்துபோன யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாரும் ஏனைய இராணுவ அதிகாரிகளும் திருநெல்வேலியிலிருந்து குருநகர் முகாம் திரும்பியவுடன் அவசரக் கூட்டம் ஒன்றினை நடத்தினர். இதேவேளை, 13 இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி குருநகர் ரேடியோ அறையிலிருந்து கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டது. முதலாவதாக பலாலியிலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் பல்த்தசாருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. கொழும்பு ராணுவத் தலைமையகத்திலிருந்து ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுக்கு தாக்குதல் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாருடன் பேசினார். "நான் ஜனாதிபதிக்கு உடனடியாக இதுபற்றி அறிவிக்க வேண்டும், இது ஒரு மிகப் பாரதூரமான சம்பவம்" என்று அதிர்ச்சியடைந்த நிலையில் ராணுவத் தளபதி யாழ்ப்பாணத் தளபதியிடம் கூறினார். பின்னர் திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதியை எழுப்பினார். தான் திருநெல்வேலித் தாக்குதல் குறித்து ஜெயாருக்குச் சொன்னபோது அவர் மிகுந்த கோபம் அடைந்ததாக தனது அதிகாரிகளுடன் பேசும்போது திஸ்ஸ வீரதுங்க கூறியிருந்தார். "நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்று ஜயவர்த்தன ஆவேசத்துடன் கூறினார். காலை விடிந்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் வீரதுங்கவைப் பணித்தார். குருநகரில் நடந்த கூட்டத்தில் மூன்று முக்கிய விடயங்கள் இராணுவ அதிகாரிகளால் ஆரயாப்பட்டிருந்தன. தாக்குதலினால் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களை சரியான வகையில் பராமரித்தல் மற்றும் யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் என்பனவே அவையாகும். லெப்டினன்ட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க (காளை மாட்டு வீரதுங்க) உருவாகியிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல் என்பதற்குள் கண்ணிவெடித் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதும் அடங்கியிருந்தது. முனசிங்கவும் அவரது ராணுவ புலநாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் அடுக்கப்பட்டிருந்தன. கொழும்பில் இயங்கிவந்த இறந்தவர்களை தூய்மைப்படுத்தி அலங்கரித்து உறவினர்களிடம் கையளிக்கும் ஏ. எப். ரேமண்ட் எனும் தனியார் நிறுவனத்திடம் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. யாழ்நகருக்கான பாதுகாப்பிற்கென்று மேலதிக இராணுவப் பிரிவுகள் கடமையில் அமர்த்தப்பட்டன. மறுநாள் காலை, வோர்ட் பிளேசில் அமைந்திருக்கும் ஜெயாரின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அதியுயர் பாதுகாப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. "என்ன நடந்தது?" என்று ஜெயார் இராணுவத் தளபதி வீரதுங்கவைப் பார்த்துக் கேட்டார்.அவரிடம் பதில் இருக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டதாக பிரகடனம் செய்த இராணுவ அதிகாரியும் இதே வீரதுங்கதான். இப்பிரகடனத்தைச் சிறப்பிக்க பாரிய களியாட்ட நிகழ்வொன்றினையும் வீரதுங்க நடத்தியதுடன், ஜனாதிபதி ஜெயாரையும் அதற்கு அழைத்திருந்தார். அன்று வோர்ட் பிளேசில் நடந்த கூட்டத்தில் பங்குகொண்ட இராணுவ அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில் கூட்டம் முழுவதிலும் ஜெயார் கடுங் கோபம் கொண்டு காணப்பட்டதாகக் கூறினார். "இது உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும், நாம் இதனை இப்படியே நடப்பதற்கு அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது" என்று மீண்டும் மீண்டும் ஜெயார் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியபோது அங்கிருந்த அனைவருக்கும் அவர் ஏதோ ஒரு விடயத்தை மனதில் வைத்தே இதனைக் கூறுகிறார் என்பது தெரிந்தது. கூட்டத்தின் முடிவில் இரு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலாவது விடயம் ராணுவத் தளபதி வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது. இரண்டாவது கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களுக்கும் கொழும்பில் அமைந்திருக்கும் பொது மயானமான பொரள்ளை கனத்தையில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது. கொழும்பில் பூரண இராணுவ மரியாதைகளுடன் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் மரணச் சடங்கினை நடத்துவதென்பது ஜெயாரினால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் இராணுவ மரியாதையுடன் சடங்குகள் நடப்பதே வழமையாக இருந்து வந்தது, ஆகவே ராணுவத் தளபதி இம்முறையும் அவ்வாறே செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். இக்கூட்டத்தில் பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் பங்குகொண்டிருக்கவில்லை, ஆகவே அவர் சார்பாக வேறு இரண்டு பொலீஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே சரியானது என்று கூறினர். 13 இராணுவத்தினருக்கும் ஒரே நேரத்தில் கொழும்பில் மரணச் சடங்கினை நடத்தும்போது அச்ம்பாவிதங்கள் நேரலாம் என்று அந்த பொலீஸ் அதிகாரிகள் தமது அச்சத்தைத் தெரியப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் பொலீஸார் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு செய்வதே சரியானது என்று கூறினர். அனால், இவர்கள் எவரினதும் கருத்துக்களையும் செவிமடுக்கும் நிலையில் ஜெயார் இருக்கவில்லை. கொல்லப்பட்ட 133 இராணுவத்தினருக்கும் கொழும்பிலேயே கூட்டு மரணச் சடங்கினை நடத்துவதென்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததுடன், "13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல, அவர்களுக்கு பூரண இராணுவ மரியாதைகளுடன் தகுந்த முறையில் வழியனுப்பி வைப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் சரியான வணக்கமாகும்" என்று காட்டமாகக் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
செல்லக்கிளியின் வீரமரணம் முனசிங்கவும் அவரது ராணுவமும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை அண்மித்தபோது புலிகள் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆயுதங்களும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. புலிகளைப்பொறுத்தவரை அது ஒரு வெற்றி அணிவகுப்பு. பிரபாகரன் முன்னே செல்ல, மற்றையவர்கள் ஒற்றை நிரலில் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கிச் சென்று பின்னர் வலதுபுறம் திரும்பி தமது மினிபஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பிரபாகரனும் அவரது போராளிகளும் இத்தாக்குதலை தாம் பரீட்சித்துப் பார்த்ததைப் போன்றே மிகவும் நேர்த்தியாக நடத்தி முடித்திருந்தார்கள். ஓவொருவரும் தமக்கு வழங்கப்பட்ட பணியினை திறம்படச் செயற்படுத்தியிருந்தார்கள். தாக்குதல் முடிந்தவுடன் தமது நேரத்தை விரயமாக்க அவர்கள் விரும்பவில்லை. அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவதே அவர்களின் எண்ணம். தாக்கப்பட்ட தமது ராணுவ அணியைத் தேடி மேலதிக ராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதிக்கு வருவார்கள் என்பதும், புலிகள் தப்பிச் செல்லக்கூடிய வழிகள் அனைத்தையும் அவர்கள் தடுக்க முனைவார்கள் என்பதும் புலிகள் அறியாதது அல்ல. மினிபஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் தாக்குதலில் பங்குகொண்ட அனைத்துப் போராளிகளுக்கும் பிரபாகரன் நன்றி கூறினார். தாக்குதலின் வெற்றி பிரபாகரனுக்கு மிகுந்த மனநிறைவினைத் தந்திருந்தது. அவர் உற்சாகமாகவும், உணர்வு மேலீட்டும் காணப்பட்டார். செல்லக்கிளியின் துணிகரச் செயலுக்காகவும், கண்ணிவெடிகளை இலக்குத் தவறாது இயக்கியமைக்காகவும் அவரின் பெயரை உச்சரித்து பிரபாகரன் பாராட்டிக்கொண்டிருந்தபோது , செல்லக்கிளி அங்கே இல்லையென்பதை கிட்டு உணர்ந்துகொண்டார். "செல்லக்கிளி அண்ணா எங்கே?" என்று கிட்டு ஆதங்கத்துடன் கத்தினார். மற்றைய எல்லோரைக் காட்டிலும் செல்லக்கிளி வயதில் மூத்தவர். அவரை போராளிகள் எல்லோரும் மிகுந்த மரியாதையுடனேயே நடத்தி வந்தனர். அவர் அண்ணை என்றே எல்லாராலும் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால், அவர் அங்கே இருக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட மளிகைக் கடை நோக்கி விக்டர் ஓடினார். கூரையின் மீது அவர் ஏறிப் பார்த்தபோது செல்லக்கிளியின் உடலை அவர் கண்டார். அவரது நெஞ்சுப்பகுதியைக் குண்டொன்று துளைத்துச் சென்றிருந்தது. செல்லக்கிளி இரத்த வெள்ளத்தில் உயிர்பிரிந்து கிடந்தார். இது எப்படி நடந்தது? எவருக்கும் தெரிந்திருக்கவில்லை, சில அனுமானங்களைத் தவிர. இராணுவ ட்ரக் வண்டி சடுதியாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்த ராணுவ வீரர்கள் வெளியே குதித்தபோது பெரும்பாலானோர் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பெரும்பாலான இராணுவ வீரர்களின் தலையிலேயே புலிகளின் சன்னங்கள் பாய்ந்திருந்தன.ஆனால், ஒரு ராணுவ வீரர் மட்டும் ட்ரக்கின் பின்னால் ஒளிந்துகொண்டு நாலாபுறம் நோக்கியும் துப்பாக்கியினால் சரமாரியாகச் சுட்டிருக்கிறார். தமது தாக்குதல் முடிந்துவிட்டது, இராணுவத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று எண்ணிய செல்லக்கிளி அதுவரை தான் ஒளிந்திருந்த சீமேந்துச் சுவரின் பின்னாலிருந்து எழுந்திருந்த வேளை, ட்ரக்கின் பின்னால் பதுங்கியிருந்த இராணுவ வீரனின் சூடு பட்டு அவ்விடத்திலேயே இறந்திருக்கிறார். செல்லக்கிளியின் உடலைத் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொண்ட விக்டர், அவரைச் சுமந்துகொண்டு மினிபஸ் நோக்கி ஓடினார். இந்தச் சம்பவம் குறித்து சந்தோசம் என்னிடம் பின்வருமாறு விபரித்தார். "செல்லக்கிளியின் உடலைச் சுமந்துகொண்டு விக்டர் மினிபஸ்ஸை வந்தடைந்த போது நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். செல்லக்கிளியின் மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. விக்டரின் சீருடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது". "அந்தச் சூழ்நிலை மிகவும் வேதனை மிகுந்திருந்தது. அதுவரை அங்கு நிலவிய வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் செல்லக்கிளியின் மறைவு முற்றாக மாற்றிப் போட்டது. அனைவரினதும் முகங்களில் இருந்த மகிழ்ச்சி முற்றாகப் போயிருந்தது. பிரபாகரன் மெளனமானார். அவரைப்போலவே எல்லோர் முகத்திலும் சோகமும் மெளனமும் குடிகொண்டன. விக்டர் செல்லக்கிளியின் உடலை மினிபஸ்ஸின் பின் இருக்கைக்குக் கொண்டு சென்றார். பின்னிருக்கையில் அவரை மெதுவாகக் கிடத்திய விக்டர், செல்லக்கிளியின் கண்களை மூடிவிட்டார். தாம் கைப்பற்றிய ஆயுதங்களை எல்லோரும் செல்லக்கிளியின் பாதங்களுக்கு அருகில், மினிபஸ்ஸின் தரையில் அடுக்கினர். வீரச்சவடைந்த வீரனுக்கு அவர்கள் கொடுக்கும் இறுதி வணக்கமாக அது அமைந்தது. அந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமானது" என்று சந்தோசம் கூறினார். செல்லக்கிளி நினைவாலயம் திருநெல்வேலி - 2003. மெதுவாக மழை தூறத் தொடங்கவே, மினிபஸ் அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் நோக்கி வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. பிரபாகரனே முதலாவதாக மினிபஸ்ஸிலிருந்து இறங்கினார். அவரது பாதம் தரையைத் தொட்டதும் அவர் அழத் தொடங்கினார். ஏனையவர்களும் அவரோடு இணைந்துகொண்டனர். அதுவரை தாம் அடக்கிவைத்திருந்த சோகமெல்லாம் பீறிட்டுவர அவர்கள் அழுதார்கள். தமிழ் பத்திரிக்கைகள் சிலவற்றில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கிட்டு பின்னாட்களில் பேசியிருந்தார். பிரபாகரன் மனமுடைந்து அழுததை அப்போதுதான் தான் முதன்முதலில் பார்த்ததாக அவர் கூறியிருந்தார். செல்லக்கிளியின் இழப்பென்பது புலிகளைப் பொறுத்தவரையில் வெறும் 9 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. சீலன் ஆடி 15 இலேயே உயிர்துறந்திருக்க இப்போது செல்லக்கிளி ஆடி 23 இல் வீரச்சாவடைந்திருந்தார். சீலன் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். செல்லக்கிளியோ சீலனுக்கு அடுத்த நிலையில் இயக்கத்தில் இருந்தவர். செல்லக்கிளியின் இயற்பெயர் சதாசிவம் செல்வநாயகம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த பழம்பெரும் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனசிங்கவையும் ஏனைய ராணுவ அதிகாரிகளையும் பொறுத்தவரை தாம் திருநெல்வேலியில் கண்ட கோரமான காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உருக்குலைந்திருந்த இராணுவ வாகனங்களைச் சுற்றி பன்னிரண்டு இராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. மூன்று உடல்கள் ஜீப்பின் அருகில் கிடந்தன. நான்காவது உடல் வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் தூக்கி வீசப்பட்டிருந்தது. அந்த உடல் தளபதி வாஸ் குணவர்த்தனவினதாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவ்வுடலின் முகத்தைத் திருப்பினார் முனசிங்க, அது வாஸினதுதான். வாஸின் வலது காதின் அருகில் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட ஓட்டையொன்று தெரிந்தது. அவர் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் பிறிஸ்ட்டல் சிகரெட் பக்கெட்டும் லயிட்டரும் ஜீப்பினுள் கிடந்தன. ஜீப்பிலிருந்து சுமார் 25 மீட்டர்கள் தூரத்தில் ட்ரக் நின்றிருந்தது. எட்டு உடல்கள் ட்ரக்கைச் சுற்றி வீழ்ந்துகிடந்தன. ட்ரக்கின் அடியிலிருந்து ராணுவ வீரர் ஒருவர் முனகுவதை அவர்கள் கேட்டனர். அங்கு வந்திருந்த இராணுவ வீரர்கள் அவரை வெளியே இழுத்து எடுத்தபோது அவரது கை ஒன்றும் காலும் முறிந்த நிலையில் கிடந்ததை அவதானித்தனர். அவர் சார்ஜன்ட் திகலரட்ண. யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அவரும் இறந்துபோனார். சிறிது நேரத்தின் பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் தோட்டத்தில் பதுங்கியிருந்த இன்னொரு ராணுவ வீரர் கால்கள் காயப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்துடன் ராணுவ வீரர்களை நோக்கி நடந்துவந்தார். ட்ரக்கிலிருந்து ஏனைய ராணுவத்தினருடன் தானும் குதித்ததாகவும், ஆனால் அருகிலிருந்த வீட்டின் கூரையில் உடனடியாக ஏறிக்கொண்டு, புலிகள் மேல் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ராணுவ அதிகாரிகளிடம் கூறினார், ஆனால் அவரின் விபரிப்பினை எவரும் நம்பவில்லை. புலிகளின் கடுமையான தாக்குதலில் இருந்து கோப்ரல் பெரேராவும் உயிர்தப்பியிருந்தார். கால்களில் காயம்பட்ட நிலையிலும் கோண்டாவிலில் அமைந்திருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய தலைமையகத்திற்குச் சென்று அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தமது இராணுவ அணிக்கு நடந்த விபரீதத்தை கூறினார். ஆனால், பெரேரா கோண்டாவிலில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முன்னரே முனசிங்கவும் பல்த்தசாரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்துவிட்டிருந்தனர். கொல்லப்பட்ட ஒரு அதிகாரி உட்பட பன்னிரு ராணுவத்தினரின் உடல்களை முனசிங்கவும் பல்த்தசாரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சேதமடைந்திருந்த இராணுவத்தினரின் ஜீப் வண்டியையும் ட்ரக்கையும் குருநகர் முகாமுக்கு இழுத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த இடத்தை மறித்து, சுற்றிவரத் தடைகளை ஏற்படுத்திவிட்டு முகாம் நோக்கிச் சென்றனர். திருநெல்வேலித் தாக்குதல் இலங்கையின் சரித்திரத்தை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தின் பாதையினை அது மாற்றிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் குணவியல்பையும் அது மாற்றிப்போட்டது. அது தமிழீழ விடுதலைப் புலிகளை போராட்டத்தின் முகப்பு நோக்கி முன்னோக்கித் தள்ளியிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
என்னிடம் இல்லை. ஆனால் எமது சமூகத்தின் முன்னால் இருக்கிறது. அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக அரசியலை விட்டு வெளியேறி வெகுஜன போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். அவையும் நசுக்கப்பட்டால் ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவாவதை எவராலும் தவிர்க்க முடியாதிருக்கும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இதற்கான எனது ஒற்றைப்பதில் பாராளுமன்ற ஜனநாயக அரசியனூடாக ஒரு துரும்பைத்தன்னும் இன்றிருக்கும் அரசியல்வாதிகளால் அசைக்க முடியாது என்பதுதான். செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் செய்யாத பாராளுமன்ற ஜனநாயக அரசியலையா இவர்கள் செய்யப்போகிறார்கள்? எமது விடுதலைக்கான ஒரே வழி எமது கைகளில் அதிகாரம் வருவதுதான். சுமார் 26 வருடங்கள் எம்மால் எமது தாயகத்தை ஆள முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். அத்துடன் ஆக்கிரமிப்பையும் சிங்கள மயமாக்கலையும் எட்டத்தில் வைத்திருக்கவும் எம்மால் முடிந்தது. இன்று என்ன நடக்கிறது? எமது பலத்தினால் கிடைக்கும் அதிகாரத்தினால் அன்றி சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை எம்மால் தடுக்க முடியாது. எமது இருப்பை தக்கவைக்க இதுவரை நாம் மேற்கொண்ட போராட்ட வழிகளில் எது வெற்றியளித்ததோ அல்லது எமக்கான வெற்றிக்கான வழியினைக் காட்டியதோ, அதேவழியில் நாம் மீளவும் பயணிக்க வேண்டும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இராணுவ ரோந்து அணி - நான்கு நான்கு பிராவோ நான்கு நான்கு பிராவோ என்று அழைக்கப்பட்ட ராணுவ ரோந்து அணி மாதகல் முகாமிலிருந்து வழமைபோல கிளம்பியது. இரவு 8 மணியளவில் குருநகர் இராணுவ முகாமை ரோந்து அணி வந்தடைந்தது. இலங்கை இலகு காலாட்படையின் முதலாவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அணிக்கு இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தன தலைமைதாங்கினார். சுமார் ஒரு வார காலத்திற்கு முன்னர்தான் அவரது அணி மாதகல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த இராணுவ அணி குருநகர் முகாமை வந்தடைந்ததும் வாஸ் குணவர்த்தனவைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்தின் ராணுவ புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் சரத் முனசிங்க காத்துநின்றார். வாஸ் அங்கு வந்து சேர்ந்ததும், செல்லக்கிளி தலைமையில் ராணுவ ரோந்து அணிமீது யாழ்ப்பாணத்தில், நள்ளிரவிற்குச் சற்றுப்பின் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் தயாராகி வருவதாக தனக்குச் செய்தி கிடைத்திருப்பதாக அவர் கூறினார். புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினைக் கொடுக்க முனசிங்க முடிவெடுத்தார். அதன்படி தன்னுடன் கொமாண்டோ அணியொன்றினை அழைத்துக்கொண்டு யாழ்நகரை ரோந்து சுற்றிவர அவர் தீர்மானித்தார். ஆகவே, வாஸ் குணவர்த்தனவின் ரோந்து அணி வழமைக்கு மாறாகா நள்ளிரவுக்கு முன்னரே யாழ்நகர எல்லையைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் பணித்தார். 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து பலமான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். யாழ் குருநகர் இராணுவ முகாமிலிருந்து இயங்கிவந்த இந்த கூட்டுப் புலநாய்வு அணியினர், போராளி இயக்கங்களிலிருந்து கழன்று வீழ்ந்தவர்களை பணத்தாசை காட்டி தம்முடன் இணைத்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் நிறைபோதையில் தடுமாறிக்கொண்டு நின்ற இளைஞர் ஒருவரை முனசிங்க பிடித்துவந்து குருநகர் முகாமில் அடைத்து வைத்திருந்தார். விசாரணைகளின்போது அந்த இளைஞர் முன்னர் புலிகள் அமைப்பில் இணைந்து இயங்கிவந்தவர் என்றும் பின்னர் இயக்கத்திலிருந்து கழன்று வந்திருந்தார் என்பதும் தெரியவந்தது.புலிகளின் மூத்த உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்கள் வசித்துவந்த வீடுகள் பற்றிய பல விடயங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். பிரபாகரன், ராகவன், ராஜன், பேபி சுப்பிரமணியம், ரகு, சங்கர் , பண்டிதர் ஆகியவர்களை அந்த இளைஞர் நன்றாக அறிந்துவைத்திருந்தார். அந்த இளைஞரின் பலவீனங்களான மதுபானம் மற்றும் பணம் ஆகியவற்றினைக் கொடுத்து தமது நலன்களுக்காக அவரை இராணுவப் புலநாய்வுத்துறையினர் பாவிக்கத் தொடங்கினர். புலநாய்வுத்துறையால் அவருக்கு "சேவியர்" என்கிற பெயரும் வழங்கப்பட்டது. சீலனின் உடலை யாழ் வைத்தியசாலையில் அடையாளம் காட்டியவரும் அவரே. ஆடி 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணிமீது செல்லக்கிளி தலைமையில் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார்கள் என்கிற தகவலை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இதே சேவியர்தான். முனசிங்கவின் தேடுதல் வேட்டைகளின்போது அவருக்கு உதவியாக இருந்த சேவியர், புலிகளின் முக்கியஸ்த்தர்களின் வீடுகளையும் ராணுவத்தினருக்குத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொடுத்து வந்தார். புலிகளால் நடத்தப்படவிருப்பதாக தான் அறிந்துகொண்ட தாக்குதல் குறித்து வாஸிடம் கூறிவிட்டு, அவரைத் தன்னுடன் மதுபானம் ஒன்றினை அருந்த வருமாறு முனசிங்க அழைத்தார். "மதுபானம் அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்கிற கேள்வியுடன் வாஸ் குணவர்த்தனவை அழைத்தார் முனசிங்க. "இல்லை, வேண்டாம். நான் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உடனடியாக மாதகல் முகாம் நோக்கிப் புறப்பட வேண்டும்" என்று வாஸ் பதிலளித்தார். பின்னர் வாஸும் அவரது ராணுவ அணியினரும் அவசர அவசரமாக தமது இரவுணவினை குருநகர் முகாமில் முடித்துக்கொண்டனர். பின்னர் முனசிங்கவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றார் வாஸ் குணவர்த்தன. தன்னுடன் வைத்திருந்த பிறிஸ்ட்டல் சிகரெட் ஒன்றினை முனசிங்கவிடம் கொடுத்து, அதனைப் பற்றவைத்துவிட்டார் வாஸ். தானும் ஒரு சிகரெட்டினை புகைத்துக்கொண்டே முனசிங்கவுக்கு, "இரவு வணக்கங்கள்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். தான் பயணிக்கும் ஜீப் வண்டியில் வாஸ் ஏறிக்கொள்ள மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் ஜீப்பின் பின் இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஜீப்பை இராணுவச் சாரதி மானதுங்க ஓட்டிச் சென்றார். பின்னால் வந்த இராணுவ ட்ரக்கில் பத்து இராணுவ வீரர்கள் ஏறிக்கொண்டனர். ட்ரக்கினை இராணுவக் கோப்ரல் பெரேரா ஓட்டிவந்தார். குருநகர் முகாமிலிருந்து கிளம்பிய இந்த ரோந்து அணி யாழ்நகர சந்தைப்பகுதியூடாக மெதுவாக ஊர்ந்து சென்று நாகவிகாரையினை அடைந்ததும் சில நிமிடங்கள் அங்கு தரித்து நின்றுவிட்டு பின்னர் நல்லூர், கோப்பாயூடாக உரும்பிராய் நோக்கித் தனது ரோந்தினை ஆரம்பித்தது. உரும்பிராயை அடைந்ததும், வாஸ் குணவர்த்தன குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு தனது அறிக்கையினைத் தாக்கல் செய்தார். "நான்கு நான்கு பிராவோ" என்று ஆரம்பித்த அவரது அறிக்கை, "எல்லாம் சாதாரணமாகவே இருக்கிறது. அமைதியாகக் காணப்படுகிறது. நாங்கள் எமது முகாம் நோக்கிச் செல்கிறோம்" என்று கூறியது. அதன்பின்னர் தனது வழமையான முகாம் திரும்பும் பாதையான கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பின்னர் மாதகல் எனும் ஒழுங்கில் தனது முகாம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. மளிகைக்கடையின் கூரையின் மேல் பதுங்கியிருந்த செல்லக்கிளியும் விக்டரும் வீதியை மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ராணுவ வாகனங்களின் இரைச்சலினை அவர்களால் கேட்க முடிந்தது. சிறிது நேரத்தின் ராணுவ வாகனங்களின் மின்விளக்குகளை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்லக்கிளி கண்ணிவெடியை இயக்குகம் கருவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் இருந்து சீலன் எடுத்துவந்த நான்கு கண்ணிவெடி இயக்கிகளில் ஒன்றையே செல்லக்கிளி அன்று தன்னுடன் வைத்திருந்தார். சீலன் இறுதியாகப் பங்குபற்றிய தீரமான சம்பவமும் காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளைக் கைப்பற்றிச் சென்றதுதான். சீலன் அன்று எடுத்துவந்திருந்த கண்ணிவெடிகளைப் பாவித்தே சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலை புலிகள் செய்ய முடிவெடுத்திருந்தனர். தமது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கும் மெல்லிய விசில் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். கண்ணிவெடியின் இயக்கியை செல்லக்கிளி அழுத்தினார். இரண்டு கண்ணிவெடிகளும் ஒரேநேரத்தில் வெடித்தன. மிகப் பலத்த சத்ததுடன் அவை முளங்கின. சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தவர்களும் அந்த வெடியோசையை அன்றிரவு கேட்டார்கள். குருநகர் முகாமிலிருந்த ராணுவத்தினரும் அந்த வெடியோசையினை மிகத் தெளிவாகக் கேட்டனர். முதலாவது கண்ணிவெடி, ஜீப் வண்டி அதன் மேலாகச் செல்லும்போது வெடித்தது. மேலே தூக்கியெறியப்பட்ட ஜீப் வண்டி வீதியின் ஓரத்தில் நொறுங்கி வீழ்ந்தது. இத்தாக்குதல் குறித்து பின்னாட்களில் தமிழ் இதழான தேவியில் பேட்டியளித்த கிட்டு, வெடிப்பின்போது ஜீப் வண்டி ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டதாகக் கூறியிருந்தார். இரண்டாவது கண்ணிவெடி, ட்ரக் வண்டியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில், வண்டியின் முன்னால் வெடித்தது. உடனடியாக ட்ரக் வண்டியை நிறுத்திய சாரதி, கண்ணிவெடியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தில் அது வீழ்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இரண்டு வெடிப்புக்களும் வீதியில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியிருந்தன. ஜீப்பில் பயணம் செய்து வந்த அனைவருமே அதிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர். சாரதி மானதுங்கவின் சடலம் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் வீழ்ந்து கிடந்தது. அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் உடல் வீதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. பின்னால் இருந்துவந்த இரு ராணுவ வீரர்களினதும் உடல்களும் வாகனத்தின் பிற்பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அவர்களது மரணங்கள் வெடிக்கும்போதே நிகழ்ந்துவிட்டன. பின்னர் பிரபாகரனும் ஏனைய போராளிகளும் ட்ரக்கில் இருந்த ராணுவத்தினர் மீது வீதியின் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். ட்ரக்கிலிருந்து வெளியே குதித்துத் தப்பிக்க முயன்ற பல ராணுவத்தினர் சூடுபட்டு இறந்து வீழ்ந்தனர். யாழ் மாவட்டத் தளபதி பிரிகேடியர் லைல் பல்த்தசாரும், மேஜர் முனசிங்கவும் வெடியோசையினைக் கேட்டனர். இதுகுறித்து பின்னாட்களில் என்னுடன் பேசிய முனசிங்க பின்வருமாறு கூறினார், "நான் எனது இரவுணவை முடித்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். உணவு உட்கொள்ளும் மண்டபத்திலிருந்து மிக அருகிலேயே எனது அறை இருந்தது. நான் தூங்குவதற்காக கட்டிலில் அமரும்போது அந்த பாரிய வெடியோசையினைக் கேட்டேன். நல்லூர் கோயில் இருக்கும் திசையிலிருந்தே அந்த வெடியோசை கேட்டது. அப்போது இரவு 11:20 ஆகியிருக்கும். நான் அவசர அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எனது அறையின் யன்னலில் தட்டி உடனடியாக என்னை வெளியில் வருமாறு தளபதி பல்த்தசார் அழைத்தார். நாங்கள் இருவரும் ரேடியோ அறைக்கு ஓடிச் சென்றோம். ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவ அணியுடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்பக்கத்திலிருந்து எவருமே எமது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை". "புலிகளுக்கெதிரான நள்ளிரவு நடவடிக்கை ஒன்றிற்காக நாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்றில் நாம் ஏறிக்கொண்டோம். நான் அதனை ஓட்டிச் செல்ல, பல்த்தசார் எனக்கருகில் தாவி ஏறிக்கொண்டார். சில கொமாண்டொ வீரர்களும் எமது ஜீப்பின் பின்புறத்தில் ஏறிக்கொண்டார்கள். எம்மைப் பின்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்களும் அவற்றின் பின்னால் உயர் பொலீஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஜீப் ரக வாகனமும் விரைந்து வந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நான் அசுர கதியில் எனது ஜீப்பைச் செலுத்திக்கொண்டு போனேன். திருநெல்வேலிச் சந்தியை அண்மிக்கும்போது ராணுவ ஜீப்வண்டியொன்று ஒரு பக்கமாக வீழ்ந்த நிலையில் நொறுங்கிப் போயிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திருநெல்வேலித் தாக்குதல் பலாலி வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியொன்றில் தான் ஒட்டிவந்த மினிபஸ்ஸை செல்லக்கிளி ஓரமாக நிறுத்தவும் உள்ளிருந்த பிரபாகரனும் ஏனைய தோழர்களும் இறங்கிக் கொண்டார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கி இருவர் கொண்ட சிறிய குழுக்களாகப் பிரிந்துகொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திசையில் திரும்பி சுமார் 200 மீட்டர்கள் நடந்தார்கள். அவ்விடத்திலிருந்த மளிகைக்கடை ஒன்றின் முன்னால் அவர்கள் மீண்டும் கூடினர். சீமேந்தினால் அமைக்கப்பட்ட கூரையும், அதன் முன்னால் அரைப்பங்கிற்குக் கட்டப்பட்ட சீமேந்துச் சுவரும் கொண்டு காணப்பட்டது அந்த மளிகைக்கடை. சுமார் இரவு 9 மணியிருக்கும் அப்போது. அநேகமான வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன. வீதியில் சப்பாத்துக் காலடி ஓசை கேட்க, அருகிலிருந்த வீடுகள் சிலவற்றிலிருந்து குடியானவர்கள் வீட்டு யன்னல்களூடாக வீதி நோக்கிப் பார்ப்பத் தெரிந்தது. தான் கொண்டுவந்திருந்த ஆயுதப் பையை வீதியில் போட்டுவிட்டு திறக்கப்பட்ட யன்னல்கள் அருகில் சென்ற விக்டர், "யன்னல்களைச் சாத்துங்கள்" என்று சிங்களத்தில் கத்தினார். பின்னர் மின்விளக்குகளையும் அணைக்குமாறு அவர் சிங்களத்திலேயே உத்தரவிட்டார். யன்னல்கள் சாத்தப்பட்டதுடன் மின்விளக்குகளும் உடனேயே அணைக்கப்பட்டுவிட்டன. சிங்கள ராணுவத்தின் கட்டளைகளுக்கு பணிந்துபோவதென்பது அப்போது தமிழருக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தது குறிப்பிடத் தக்கது. ராணுவத் தொடரணிகளின் பாதுகாப்பிற்காக கால்நடையாக வீதியில் ரோந்துவரும் சிங்கள ராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது இவ்வகையான கட்டளைகளை இட்டுக்கொண்டே செல்வது அக்காலத்தில் வழமையாக இருந்த ஒன்று. அன்றிரவு பிரபாகரனும் அவரது தோழர்களும் ராணுவச் சீருடையிலேயே காணப்பட்டதனால், அவர்களைச் சிங்கள ராணுவத்தினர் என்றே மக்களும் எண்ணிக்கொண்டார்கள். கடையின் அருகில், வீதியின் ஓரமாக தொலைத்தொடர்புச் சேவையின் ஊழியர்கள் கம்பிகளை புதைப்பதற்காக அகழிகளை வெட்டி வைதிருந்தார்கள். அந்த அகழிகளில் ஒன்றில் விக்டரும் செல்லக்கிளியும் தாம் கொண்டுவந்திருந்த கண்ணிவெடியினை புதைத்துக்கொண்டிருப்பதை பிரபாகரன் திருப்தியுடன் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களுடன் அவர் பேசவில்லை. பின்னர் அருகில் நின்றை ஏனைய தோழர்களிடம் சென்ற பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து, தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சாக்குப் பைகளிலிருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்தார். எச் கே ஜி 3 தான் கொண்டுவந்த ஜி 3 ரைபிளை வாஞ்சையுடன் வெளியே எடுத்த பிரபாகரன் அதன் மீது படிந்திருந்த தூசியினை மெதுவாகத் துடைத்தார். ஏனையவர்களிடம் எஸ் எம் ஜி இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டன. புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோசம், அப்பையா உட்பட வேறு சிலரும் அந்த இராப்பொழுதில் அங்கே ராணுவத்தின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்து நின்றனர். புலிகளின் தாக்குதல்க் குழுவில் மொத்தமாக 14 பேர் இருந்தார்கள். பிரபாகரன் திட்டமிட்டதைப் போலவே இரு குழுக்களாக அவர்கள் பிரிந்துகொண்டார்கள். ஒரு குழுவிற்குப் பிரபாகரன் தலைமை தாங்க, மற்றைய குழுவிற்கு கிட்டு தலைமை தாங்கினார். இத்தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் பிரபாகரனாலேயே வகுக்கப்பட்டது. சீலனைக் கொன்றதற்காக இராணுவம் மிகப்பெரிய விலையினைச் செலுத்தவேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் கூறியிருந்தார். "சீலனின் இழப்பென்பது ஈடுசெய்யப்பட முடியாதது. ஆனாலும், சீலனின் இழப்பிற்கு நாம் பெரிதாக ஒரு நடவடிக்கையினைச் செய்யவேண்டும். அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கும் வகையில் அது அமையவேண்டும்" என்று சீலன் கொல்லப்பட்ட நாளிலிருந்து தனது போராளிகளிடம் பிரபாகரன் இதனைச் சொல்லி வந்திருந்தார். திருநெல்வேலித் தாக்குதல் நடந்து சுமார் 8 மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு பங்குனியில் அனித்தா பிரதாப்பிற்கு செவ்வியளித்த பிரபாகரன், திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலாகவும், இராணுவத்தினருக்கான தண்டனையாகவுமே தன்னால் திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தார். கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அரசியல் வார இதழ் ஒன்றிற்காக அனித்தா பிரதாப் பிரபாகரனை சென்னையில் செவ்வி கண்டிருந்தார். அனித்தாவினால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியினை நான் இங்கே இணைத்திருக்கிறேன், கேள்வி : ஆடித் தாக்குதலை நீங்கள் ஏன் நடத்தினீர்கள்? இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? சிலரைப் பொறுத்தவரை, ராணுவத்தால் வன்புணர்வுசெய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கான பழிவாங்கலாகவே இதனை நீங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, உங்களின் நண்பனும், ராணுவப் பிரிவின் தளபதியாகவும் இருந்த சார்ள்ஸ் அன்டனியை ஆடி 15 இல் கொன்றுவிட்டோம் என்று கூதூகலித்திருந்த சிங்கள ராணுவத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவே நீங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நான் உணர்கிறேன். உண்மையென்னவென்றால், உங்கள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதி ஒருவரைச் சிங்கள ராணுவம் கொன்றுவிட்ட போதிலும், அவர்கள் மீது தீவிரமான தாக்குதல் ஒன்றினை நடத்தக்கூடிய இயலுமையும் பலமும் இன்னமும் உங்கள் இயக்கத்திடம் இருக்கின்றது என்பதைக் காட்டவே நீங்கள் இதனைச் செய்தீர்கள் என்று நான் நம்புகிறேன், இது சரிதானே? பிரபாகரன் : "சார்ள்ஸ் அன்டனி பற்றியும், திருநெல்வேலித் தாக்குதல் பற்றியும் நீங்கள் தேடி அறிந்துவைத்திருக்கும் விடயங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. இத்தாக்குதல் ஒரு வழியில் பழிவாங்கலாகவும், இன்னொரு வழியில் சிங்கள ராணுவத்திற்கான தண்டனையாகவுமே எம்மால் நடத்தப்பட்டது. ஆனாலும், 13 சாதாரணச் சிங்களச் சிப்பாய்களின் மரணம் ஒரு மாபெரும் புரட்சிகர விடுதலைப் போராளியான சார்ள்ஸ் அன்டனியின் மரணத்திற்கு ஒப்பாகி விடாது. எமது எதிரி மீதான எமது அமைப்பின் கெரில்லா ரீதியிலான தாக்குதலாகவுமே இதனை நாம் முன்னெடுத்தோம்". மேலும், அனித்தா குறிப்பிட்ட நான்கு தமிழ்ப் பெண்கள் மீதான சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்புணர்வும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். அக்காலத்தில் வந்திருந்த செய்திகளின்படி ஆடி 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்று இளம் தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்ற சிங்கள ராணுவத்தினர் அப்பெண்களை தமது முகாமிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இப்பெண்களில் ஒருவர் பிந்நாட்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சதாசிவம் கிருஸ்ணகுமார் கிட்டு திருநெல்வேலித் தாக்குதலைத் திட்டமிடும் பொறுப்பினை கிட்டுவிடமும் செல்லக்கிளியிடமுமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு ராணுவம் மீது தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதே சரியானது என்று பிரபாகரன் உள்ளகக் கலந்துரையாடல்களில் போராளிகளிடம் பேசியிருந்தார். ஆகவே, ராணுவத்தின் இரவு ரோந்து அணி மீது தாக்குதல் நடத்துவதே சீலனின் மரணத்திற்கு தாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும் என்று கிட்டுவும் செல்லக்கிளியும் முடிவெடுத்தனர்.இத்தாக்குதல் மூலம் ஆயுத ரீதியிலான பலமான அமைப்பொன்று உருவாகிவிட்டதை சிங்கள அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்பினர். வழமையான ராணுவ ரோந்தணி மாலை மங்கும் வேளையில் மாதகல் ராணுவ முகாமிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமை வந்தடையும். இந்த ரோந்து அணியில் ஜீப் வண்டி ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் இடம்பெற்றிருந்தன. குருநகர் முகாமில் தமது இரவு உணவை முடித்துக்கொண்ட அதிகாரியும் ராணுவ வீரர்களும் மீண்டும் மாதகல் முகாம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். திருநெல்வேலிச் சந்தி அண்மைய நாட்களில் ராணுவ ரோந்து அணி திரும்பிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த திருநெல்வேலிக் கிராமத்தை கிட்டுவும் செல்லக்கிளியும் தமது தாக்குதலுக்கான இடமாகத் தெரிவுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அதன் அமைவிடம். யாழ்ப்பாண நகரில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அப்பகுதி அமைந்திருந்ததுடன், சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. கட்டடங்களைக் கொண்டிருந்த பகுதியாதலால், மறைந்திருந்து தாக்குவதற்கு உகந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக தாக்குதலை முடித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகளையும் அப்பகுதி தன்னகத்தே கொண்டிருந்தது. இரண்டாவது நேரம். ராணுவ ரோந்து அணி திருநெல்வேலியை அடையும் நேரம் நள்ளிரவு வேளையை அடைந்திருக்கும். அவ்வேளையில் வீதியில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியே வீதி கணப்படும். மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம் வீதியின் அருகில் தோண்டப்பட்டிருந்த அகழிகள் தமது கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கு புலிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. அப்பகுதியில் அகழிகள் தோண்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்தமையினால், அவற்றினைச் சந்தேகம் கொண்டு சோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. அப்பகுதியைப் பார்வையிட்ட பிரபாகரன் மிகுந்த திருப்தியடைந்திருந்தார். இப்பகுதியைத் தெரிவுசெய்தமைக்காக கிட்டுவையும் செல்லக்கிளியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது தாக்குதலுக்கு மிகச் சரியான இடம் அதுவே என்று அவர்களிடம் பிரபாகரன் கூறினார். செல்லக்கிளி பதுங்கியிருந்து கண்ணிவெடியினை இயக்குவதற்கு உகந்த பாதுகாப்பினை சீமேந்துக் கூரையும், அரைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த சீமேந்துச் சுவரும் அவருக்குக் கொடுத்தன. அவருக்குத் துணையாக அருகே பதுங்கியிருந்த விக்டருக்கும் அப்பகுதி பாதுகாப்பு அளித்தது. கூரையிலிருந்த கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைக் கொடியினுள் கண்ணிவெடிக்கான வயர்களை அவர்களால் முழுமையாக மறைக்கக் கூடியதாக இருந்தது. மேலும், அயல் வீடுகளில் கட்டப்பட்டிருந்த சீமேந்து மதில்களுக்குப் பின்னால் தாக்குதல் அணி மறைந்துகொள்வதற்கான வசதியும் அங்கு காணப்பட்டது. எனது ஊரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தோசம் என்னுடன் சில வருடங்களுக்குப் பின்னர் பேசும்போது, "தாக்குதல் நடத்தப்பட்ட நாளன்று, அதிகாலையிலிருந்தே நாம் அனைவரும் பதட்டத்துடன் இருந்தோம்" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதியே தாக்குதலை நடத்துவதென்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார். "அதற்கு முதல்நாள் இரவு என்னால் தூங்க முடியவில்லை. எமது தாக்குதல் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார். புலிகள் நடத்திய மூன்றாவது கண்ணிவெடித் தாக்குதலே திருநெல்வேலித் தாக்குதல் என்பதோடு, கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலும் இதுவாகும். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதலை செல்லக்கிளியினால் வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கவில்லை. பொன்னாலைக் கரையோரச் சாலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கடற்படையினர் அப்பகுதிக்கு வரமுன்னரே வெடித்திருந்தன. கண்ணிவெடிகள் வெடித்தபோது கடற்படையினர் ரோந்து அணி சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் வந்துகொண்டிருந்தது. இரண்டாவது தாக்குதலான உமையாள்புரப் பகுதித் தாக்குதலில் கண்ணிவெடித் தாக்குதலுடன், துப்பாக்கித் தாக்குதலும் முதன்முறையாக நடத்தப்பட்டபோது, அதுவும் நேரம் தவறியிருந்தது. ராணுவத்தினரின் ட்ரக் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடிகள் வெடித்துவிட்டன. கண்ணிவெடி வெடிக்கவைக்கப்பட்டதையடுத்து ட்ரக் வண்டியைச் சாரதி நிறுத்திக்கொள்ள, வெளியே பாய்ந்த ராணுவத்தினர் புலிகள் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே ஓடத் தொடங்க, புலிகளும் அப்பகுதியை விட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. புலிகள் எதிர்பாராத விதமாக ராணுவத் தொடரணியொன்று அப்பகுதிக்கு வந்ததனால் ஏற்பட்ட குழப்பத்தில் புலிகளின் அணியிலிருந்த சிலர் தமது காலணிகளையும் விட்டுவிட்டே ஓடியிருந்தனர். ஆகவே, திருநெல்வேலித் தாக்குதல் எப்படியாவது வெற்றியளிக்க வேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் சொல்லிக்கொண்டிருந்தார். கிளேமோர்க் குண்டு அதிகாலையிலேயே துயில்விட்டெழும் பழக்கம் கொண்ட பிரபாகரன் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாளான ஆடி 23 ஆம் திகதி வழமைபோலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். தனக்குத் திருப்தியாகும் வரை செல்லக்கிளியுடனும் விக்டருடனும் தாக்குதல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பரீட்சித்துச் சரிபார்த்துக்கொண்டார். சுமார் இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அகழியினுள் கண்ணிவெடிகள் இரண்டினைப் புதைத்த செல்லக்கிளியும், விக்டரும் அவற்றிற்கான மிந்தொடுப்பினை இயக்கியுடன் இணைக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிவெடிகளையும் , வெளியே தெரிந்த வயர்களளையும் மண்கொண்டு மூடி மறைத்தனர். வயரின் மீதிப்பகுதியை கூரையிலிருந்து நிலம்வரை தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப் பந்தலினுள் லாவகமாக மறைத்துக்கொண்டு கூரையிலிருந்த இயக்கிவரை இழுத்துச் சென்றனர்.பின்னர் கூரையின் மீது ஏறி, மறைப்பாகக் கட்டப்பட்டிருந்த அரைச்சுவரின் பின்னால் பதுங்கிக் கொண்டு ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களின் பின்னர் நிலையெடுத்து நின்றனர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ஸிய அதிபரின் பிரத்தியே சொகுசு ரயில் வண்டி பற்றிய தகவல்களை சி என் என் வெளியிட்டிருக்கிறது. மக்களிடமிருந்தும், தனது அரசில் இருக்கும் பலரிடமிருந்தும் அந்நியமாகிக்கொண்டு வரும் புட்டின் அவர்கள், தனது பாதுகாப்புக் குறித்து அதிக கரிசணை கொண்டிருப்பதனால், இந்த அதிசொகுசு ரயிலில் இனி அடைக்கலம் தேடலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த நாளிலிலிருந்து இந்த ரயிலில் புட்டின் அதிக நேரம் செலவிட்டு வருகிறாராம். குண்டுகளும், பீரங்கிகளும் துளைக்காத கவசங்கள், நவீன தொலைத்தொடர்புக் கருவிகள், தற்காப்பு ஆயுதங்கள், அனைத்துச் சொகுசு வசதிகளையும் கொண்ட மாநாட்டு அறை, உடற்பயிற்சி செய்யும் அறை, மசாஜ் செய்யும் அறை, வெந்நீர் தடாகம் உள்ளிட்ட பல சொகுசு விடயங்கள் இந்த ரயிலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சுமார் 20 பெட்டிகளைக் கொண்டிருக்கும் இந்த சொகுசு ரயிலை வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண ரஸ்ஸிய ரயிலைப் போலவே இருக்கின்றதாம். இதனருகில் இன்னொரு ரயிலை நிறுத்தினால் எது புட்டினுடையது, எது பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாதாம். அதாவது, தான் இலக்குவைக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே புட்டின் இதனை ஏற்பாடு செய்திருக்கிறாராம். ஒரு வேடிக்கை என்னெவென்றால், இதிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட இத்தாலி நாட்டு உபகரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு அமெரிக்க உடற்பயிற்சி உபகரணங்களை புட்டின் இணைக்கக் கட்டளையிட்டிருக்கிறார். இந்த ரயிலை உருவாக்குவதில் ஈடுபட்டு, பின்னர் ரஸ்ஸியாவை விட்டுத் தப்பியோடிய இரு முன்னாள் பாதுகாப்பு அதிகரிகளே இதுபற்றிய விபரங்களை வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள். https://edition.cnn.com/videos/world/2023/07/10/putin-luxury-train-matthew-chance-pkg-ac360-intl-ldn-vpx.cnn 1. மேலும் ரஸ்ஸிய நீர்மூழ்கிக் கப்டன் அல்லது கட்டளையிடும் அதிகாரியொருவர் ரஸ்ஸியாவினுள் வைத்து இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று இடார்டாஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. https://edition.cnn.com/2023/07/11/europe/russian-submarine-commander-killed-krasnador-intl/index.html 2. இன்னொரு தகவல், உக்ரேனின் முறியடிப்புப் போர் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என்று மேற்குலகிலேயே கிசுகிசுக்கப்படுகிறதாம்! https://edition.cnn.com/2023/07/04/europe/ukraine-counteroffensive-slow-progress-intl/index.html
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1983 ஆடியில் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்த ஜெயார் உருவாக்கிய தொழிற்சங்க அக்கிரமப் படை தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட அரசாங்கமும் தயாராகி வந்தது. பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்காகத் தான் கூட்ட எண்ணியிருந்த அனைத்துக் கட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி நடவாமல்ப் போனது ஜெயாருக்குக் கடுமையான சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும், அவர்களின் நடவடிக்கைகள் தொடரபாகவும் செய்தி வெளியிடுவதில் கடுமையான தணிக்கைகளை அவர் கொண்டுவந்தார். தணிக்கையினைக் கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டக்ளஸ் லியனகே நியமிக்கப்பட்டார். ஆடி 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது. தமிழர்களைத் தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருவதால் இனிமேல் அரசுடன் பேசுவதில்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த் தலைமைப்பீடம் ஆடி 23 ஆம் திகதி மன்னார் நகரில் கூடியபோது முடிவெடுத்திருந்தது. மேலும், தம்மால் முன்வைக்கப்படும் 4 நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கச் சம்மதிக்கலாம் என்றும் அக்கட்சி முடிவெடுத்தது. அந்த 4 நிபந்தனைகளாவன, 1. சுதந்திரக் கட்சி அடங்கலாக, அனைத்துக் கட்சிகளும் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். 2. மாநாட்டில் பேசப்படும் விடயங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கான தன்னாட்சி அதிகாரம், மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவிடயங்களும் உள்ளடக்கப்படவேண்டும். 3. தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். 4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களைப் பற்றிச் சிந்தைக்கவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏறெடுத்துப் பார்க்கவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்தபோதிலும் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த தமிழர்களுடனான உறவினைத் தான் புதுப்பிக்க விரும்புவதாக பாசாங்கு செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே ஆடி 21 ஆம் திகதி, தன்னுடன் வந்து பேசுமாறு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் நடராஜாவை காமிணி திசாநாயக்கவூடாக ஜெயார் அழைத்தார். இந்தச் சந்திப்பு ஜெயாரின் இல்லத்தில் நடைபெற்றது. லலித் அதுலத் முதலியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். அன்று மாலை சிறிலங்கா பவுண்டேசன் மண்டபத்தில் இடம்பெற்ற புனிதம் திருச்செல்லவம் நினைவுப் பேருரை நிகழ்வில் நடராஜா கலந்துகொண்டபோது நான் அவரைச் சந்தித்தேன். முதலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை நடராஜா என்னிடம் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அச்சப்படுகிறது என்று தான் ஜனாதிபதியிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கான அதிகாரத்தையும், நிதியினையும் அரசாங்கம் தர மறுத்துவருவதாக அவர் ஜெயாரிடம் கூறியபோது குறுக்கிட்ட லலித் அதுலத் முதலி, "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதுமே தரப்போவதில்லை" என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதில் அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தற்போது இருக்கும் நிலைமை அதற்கு ஒருபோதுமே இடம் கொடுக்கப்போவதில்லை. ஆகவே, இங்குவந்து அதிகாரங்களைப் பகிர்ந்து தாருங்கள் என்று கேட்பதை நிறுத்துங்கள்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் காட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் நடராஜா விரக்தியடைந்திருக்கிறார். பின்னர் ஜெயாரின் பக்கம் திரும்பிய நடராஜா, அவரைப் பார்த்து "லலித் கூறுவது நீங்கள் எடுத்திருக்கும் முடிவைத்தானோ?" என்று கேட்டிருக்கிறார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜெயவர்த்தன, "நான் கூறச்சொன்னதை அப்படியே லலித் உங்களிடம் கூறினார், அவ்வளவுதான், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், நிலைமை சற்றுச் சீராகட்டும், அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை கொடுப்பது பற்றிச் சிந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இதனால் சற்றுச் சினமடைந்த நடராஜா, "அதுவரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எமது மேசைகளில் இருந்து கோப்புக்களை அங்கும் இங்குமாக அரக்கச் சொல்கிறீர்களா? " என்று வெறுப்புடன் கேட்டிருக்கிறார். நடராஜாவை ஆசுவாசப்படுத்த முயன்ற ஜெயார், நிலைமைகள் இப்போது நன்றாக இல்லை, ஓரளவுக்கு நிலைமைகள் சீரடைந்தவுடன் அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசலாம் என்று கூறியிருக்கிறார். ஜெயாரும் நடராஜாவும் பேசும்போது குறுக்கிட்ட லலித், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இக்கட்டான நிலை எனக்குப் புரிகிறது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளிலிருந்து சில நல்ல விடயங்களை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் அவர்களிடம் காட்டவேண்டும் என்பதே உங்கள் பிரச்சினை. விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நாம் உங்களுக்குப் பணம் தருவோம். இவ்வகையான நடவடிக்கைகள் உங்களை பரபரப்பாக வைத்திருப்பதுடன் உங்கள் மக்களையும் திருப்திப்பட வைக்கும்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் கூறினார். லலித் தன்னிடம் தருவதாகக் கூறிய வாக்குறுதியை தான் நிராகரித்துவிட்டதாக நடராஜா என்னிடம் கூறினார். அவர்களுக்குப் பதிலளித்த நடராஜா "நாம் எதிர்பார்ப்பது நிலையான தீர்வையே அன்றி நீங்கள் போட நினைக்கும் அற்பச் சலுகைகளை அல்ல" என்று கூறியிருக்கிறார். பின்னர் பேசிய ஜெயார் இந்த விடயங்களைப் பற்றி இன்னொரு கூட்டத்தில் பேசலாம் என்று கூறி அன்றைய சந்திப்பை முடித்துவைத்தார். இந்தச் சந்திப்பைப் பற்றி நடராஜா கூறியது இதைத்தான், ஜெயார் எனும் மனிதர் இனிமையாகப் பேசி தனக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டார்.அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் நடராஜா பதவி விலகுவதிலிருந்து தடுப்பது ஒன்றே. அதில் அவர் வெற்றியும் கண்டார். நான் இதனை டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செய்தியாக அனுப்பவில்லை. எனது ஆசிரியரை தர்மசங்கடத்தினுள் ஆள்த்த நான் விரும்பவில்லை. நாம் கொடுக்கவேண்டிய செய்திக்குப் பதிலாக லலித் ஒரு அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதுதான் நடராஜா தனது பதவி விலகலை இரத்துச் செய்தார் என்றும் மேலதிக கலந்துரையாடல்கள் தொடரும் என்பதும். ஜெயாருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது. அவரும் அவரது அடியாட்களும் பல்வேறு செயல்களைத் திட்டமிட்டிருந்தார்கள். சிறில் மத்தியுவும் அவரது இனவாத தொழிற்சங்கமுமான ஜாதிக சேவா சங்கமயவும் தெற்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரினதும் விலாசங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் பாரிய அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட படைப்பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு வந்தது. லேக் ஹவுஸ் அமைப்பில் இயங்கிவந்த ஜாதிக சேவா சங்கமய இல் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். என்னை ஓரளவிற்கு மரியாதையுடனேயே அவர்கள் நடத்தி வந்தனர். தமிழர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு 3 அல்லது நான்கு நாட்களுக்கு முன்பதாக என்னிடம் ரகசியமாகப் பேசிய சிங்கள உறுப்பினர் ஒருவர்,"அசம்பாவிதம் ஒன்று நடக்கப் போகிறது" என்று கூறிவிட்டு சில நொடி மெளனத்திற்குப் பின்னர் "அவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களினது பட்டியல் ஒன்றினையும் தயாரிக்கிறார்கள்" என்று கூறினார். ஏதோ அசம்பாவிதம் ஒன்று என்னைச் சுற்றி சூழ்கிறதென்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தமிழருக்கெதிரான வெறுப்புணர்வு வெளிப்படையாகவே அவர்களின் முகத்தில் படிந்துவருவதை நான் உணர்ந்துகொண்டேன். லங்கா கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவும் இந்தவகையான ரகசியப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறார். அதுபற்றி பல வருடங்களுக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டு மாசி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் அவர் "மனிதர்களும் அவர்களின் செயற்பாடுகளும்" என்கிற பதிவில் எழுதியிருந்தார். "கொடூரமான அவலங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்னராவது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாகச் செய்திகள் பரவி வந்தன. மிகக்கொடுமையான, ஒரு இனக் கூட்டத்திற்குப் பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்கான செயற்பாடுகளில் பரவலாக இறங்கப் போகிறார்கள் என்கிற அந்தச் செய்தி". ஆடி 23 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, "4 X 4 பிராவோ" என்று பெயரிடப்பட்ட ராணுவ ரோந்து அணியின் வருகைகையினை எதிர்பார்த்து பிரபாகரனும் அவரது தோழர்களும் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் காத்திருந்தார்கள். புலிகளின் மூத்த போராளிகளான கிட்டு, ஐயர், விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோசம் மற்றும் அப்பையா ஆகியோர் பரபரப்புடன் வீதியின் இருபுறத்திலும் நிலையெடுத்துக் காத்திருந்தார்கள். ராணுவ ரோந்து அணி மீது கண்ணிவெடித் தாக்குதலையும் அதன்பின்னர் பதுங்கித் தாக்குதலையும் நடத்துவதே அவர்களின் திட்டம். தான் ராணுவம் மீது அன்றிரவு நடத்தவிருக்கும் இத்தாக்குதல் இலங்கையின் மொத்தச் சரித்திரத்தையும் மாற்றிப்போடவிருக்கிறது என்பதுபற்றி பிரபாகரன் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மறுநாள் தமிழர்கள் மீது தனது அக்கிரமக்காரர்களின் படையினை ஏவிவிட்ட ஜெயார் கூட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தனது நடவடிக்கை முற்றாக உடைத்துப் போடப்போகிறதென்பதை அறிந்திருக்கவில்லை. மிகக்கொடுமையான இரவுகளான ஆடி 23 நள்ளிரவு தொடக்கம் ஆடி 24 நள்ளிரவு வரையான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை இன்றுவரை தோற்றே வருகிறது
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1980 களில் ரஸ்ஸியாவுக்கெதிராகப் போராடிய ஆப்கானிய முஜஹிதீன்களுக்கு அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளான ஸ்டிஞ்சர்களை வழங்கியது. பின்னர் அவை பயணிகள் விமானங்களைத் தாக்கப் பயன்படலாம் அல்லது கறுப்புச் சந்தையில் விற்கப்படலாம் என்பதால் தானே பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கியது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ஸியாவுடனான போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேனின் மனோநிலைக்கும், தர்ம நியாயங்களைக் கடைப்பிடிக்கும் அதன் நிலைப்பாட்டிற்கும், ரஸ்ஸியாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே அதிக வேறுபாடிருந்ததாக நான் நினைக்கவில்லை. அடிப்படையில் இரு நாடுகளும் அதே கம்மியூனிச, அடக்குமுறை கட்டமைப்புக்குள்ளிருந்து வந்தவைதான்.இன்று மேற்குலகைக் கவர மனிதாபிமான வேஷம் போடும் உக்ரேன் மிக அண்மைக் காலம்வரைக்கும் சோவியத் காலத்து நாசகார ஆயுதங்களை ஏற்றுமதி செய்தே வந்திருக்கிறது. இலங்கை கூட உக்ரேனிடமிருந்தும் ரஸ்ஸியாவிடமிருந்தும் பல ஆயுதங்களைத் தொடர்ச்சியாகவே கொள்வனவு செய்து வந்திருக்கிறது. எம்மை அழிக்க இந்த நாடுகள் இரண்டும் துணைபோனவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்தணிக்குண்டுகள் மக்கள் செறிவாக உள்ள இடங்களில் வீசப்படும்போது பெருமளவு உயிர்ச்சேதங்களை உடனடியாக உருவாக்கக் கூடியது. மேலும், கொத்தணிக் குண்டுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான குண்டுகளில் எல்லாமே ஒரே நேரத்தில் வெடிப்பதில்லை. சுமார் 30 - 40 வீதமானவை வெடிக்காமலேயே நிலத்தில் வீழ்ந்துவிடுகின்றன. பின்னர் இவற்றினைக் கையாளும்போது மீண்டும் வெடிக்கக் கூடியன. போர் இன்று நடக்கும் பகுதிகளில் ஒருகாலத்தில் மக்கள் மீளக் குடியேறும்போது இக்குண்டுகளை சிறுவர்கள் விளையாட்டுப்பொருள் என்று எண்ணி கையாளும்போது இவை வெடித்து அழிவுகளை ஏற்படுத்துவதென்பது இன்னொரு பிரச்சினை. உக்ரேன் மீதான் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே ரஸ்ஸியாவும் உக்ரேனும் கொத்தணிக்குண்டுகளைப் பாவித்தே வருகின்றன. இவ்விரு நாடுகளும் கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதுடன் வேறு நாடுகளுக்கும் அவற்றினை ஏற்றுமதி செய்தே வருகின்றன. ஆகவே, இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் கொத்தணிக் குண்டுகளை பாவிப்பதென்பது சாதாரண விடயம் தான். ஆனால், உலகிற்கு நியாயங்களைப் போதிக்கும் மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா, இக்குண்டுகளை உக்ரேனுக்கு வழங்க முடிவெடுத்திருப்பது இன்றுவரை அது பேசிவரும் நியாய தர்மங்களைக் கேள்விக்குள்ளாக்குவதுடன்,உக்ரேனுக்கு இதுவரை உதவிவரும் மேற்குலக நாடுகளுக்கிடையே பிளவினையும் இது உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா இன்றுவரை கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அவற்றினை பாவிக்கவும் விற்கவும் அதனால் முடிகிறது. ஆக்கிரமிப்பொன்றினை எதிர்த்து, தனது சொந்த மண்ணில் போராடும் ஒரு அமைப்போ, இனமோ, அல்லது நாடோ கொத்தணிக் குண்டுகளை தமது இறுதி ஆயுதமாகப் பாவிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. முன்னேறிவரும் ஆயிரக்கணக்கான எதிரி ராணுவம் மீது கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதன் மூலம் முன்னகர்வைத் தடுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதேகுண்டுகளைத் தம்மீது எதிரி பாவிப்பதைத் தவறென்று கோரும் தார்மீக நிலையினை அது இழந்துவிடுகிறது. அல்லது, இதேவகையான அழிவுகளை ஏற்படுத்தும் வேறு ஆயுதங்களை எதிரி தம்மீது பாவிப்பதற்கு இதுவே கதவுகளையும் திறந்து விடுகிறது. ஆனந்தபுரத்தில் எம்மிடம் கொத்தணிக் குண்டுகள் இருந்திருந்தால் நிச்சயம் பாவித்திருக்கவேண்டும். எதிரியைப் பின்வாக்கச் செய்யவும், ஆக்கிரமிப்பை உடைக்கவும் இது நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், எமது நிலத்தின் எதிரியின் மக்கள் வாழவில்லை. இருப்பது எம்மை அழிக்க முன்னேறி வரும் ஆயிரமாயிரம் எதிரிகளின் படைகள் தான். ஆனால், எம்மிடம் எதுவுமே இருக்கவில்லை. ஆகவேதான், எம்மால் இன்று கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதை தார்மீக நிலையிலிருந்து விமர்சிக்க முடிகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்தணிக்குண்டுகள் என்றவுடனேயே நினைவிற்கு வருவது சிங்கள வான்படை வன்னியில் எமது உறவுகள் மீது அதிகளவில் கொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக வீசியவவைதான். உலகில் பல நாடுகள் இதனைத் தடை செய்திருந்தாலும்கூட, அமெரிக்கா உட்பட இன்னும் பல நாடுகள் இவற்றினை உற்பத்திசெய்து விற்று வருகின்றன. உக்ரேன் கொத்தணிக்குண்டுகளை ரஸ்ஸிய ராணுவம் மீது பாவிக்கின்றதா அல்லது பரஸ்ஸியப் பொதுமக்கள் மீது பாவிக்கப் போகின்றதா என்பது கேள்விக்குறிதான். பரவலாகத் தடை செய்யப்பட்ட , பரந்தளாவில் அழிவைத் தரும் ஆயுதம் ஒன்றினை அமெரிக்கா கொடுக்க நினைப்பது தவறு என்பதே எனது கருத்து. நாம் ஒரு தவற்றினைச் செய்யும்போது, மற்றையவர்களின் தவற்றினைச் சுட்டிக்காட்டும் தார்மீக நிலையினை (Morale) இழந்துவிடுகிறோம். The US will provide cluster munitions to Ukraine as part of a new military aid package: AP sources - ABC News (go.com)
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனுக்குக் கொத்தணிக் குண்டுகளை (Cluster munitions) வழங்க அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. சுமார் 100 நாடுகளில் பாவிக்கத் தடைசெய்யப்பட்டுள்ள இந்த அழிவு ஆயுதத்தை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. உபயம் CNN
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திருநெல்வேலித் தாக்குதலைத் தீர்மானித்த பிரபாகரன் ராணுவத்தினர் அன்றிரவே தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். சூட்டுச் சத்தம் கேட்டவுடன் வீதிக்கு வந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை முனசிங்க தலைமையிலான ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர். அவரே புலிகளின் மறைவிடத்தை இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தார். வெள்ளம்பொக்கடிக்கும் கச்சாய்க்கும் இடையிலான பகுதியொன்றில் அந்த வீடு அமைந்திருந்தது. மீசாலையினைச் சேர்ந்த சின்னையா சந்திர மெளலீசன் என்பவரே அந்த வீட்டினை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். அவ்வீட்டில் பிரபகாரன் பல தடவைகள தங்கிச் சென்றிருக்கிறார். அவ்வீட்டைச் சோதனையிட்டபோது சில ஆவணங்களும், ஒரு கண்ண்டிக் குப்பியும் காணப்பட்டன. ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது சயனைட் குப்பி இதுவே. சீலனினதும், ஆனந்தனினதும் வித்துடல்கள் கடுமையான பொலீஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பழையில் எரியூட்டப்பட்டன. ஒரு ராணுவ வீரனின் பார்வையில் என்று தான் எழுதிய புத்தகத்தில் சீலனினதும் ஆனந்தனினதும் வித்துடல்களின் ஒளிப்படங்களை முனசிங்க இணைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 16 ஆம் திகதி தான் எடுத்த மாவீரர்கள் இருவரினதும் ஒளிப்படங்களின் மூலப்பிரதியை அவர் என்னிடம் காண்பித்தார். சீலனின் தலைப்பகுதியிலும், கண்ணுக்கு அருகிலும் காணப்பட்ட சூட்டுக் காயங்களைப் பார்க்கும்போது மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது புரியும் என்று அவர் கூறினார். சீலனின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டே என்னுடன் பேசிய முனசிங்க, "சீலனின் உடலினைக் காட்டும் ஒரே புகைப்படம் இதுதான், ஆகவே பிரபாகரன் நிச்சயம் எனது புத்தகத்தை வாங்குவார்" என்று கூறினார். பிரபாகரனின் நீண்ட மெளனமும், சிந்தனையும் கிட்டுவால் கலைக்கப்பட்டது. சீலனின் மரணத்திற்காகப் பழிவாங்கவே பிரபாகரன் மெளனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பதை கிட்டு பின்னர் உணர்ந்துகொண்டார். அனிதா பிரதாப், சொர்ணம் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் தேசியத் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்த சர்வதேசப் பத்திரிக்கையாளரும், அவரைத் தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து ஆய்வுகளை வெளியிட்டு வந்தவருமான அனிட்டா பிரதாப் தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் "பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் மூர்க்கத்தனமாகச் செயற்படுவார், ஒரு அடிபட்ட புலியைப் போல" என்று எழுதுகிறார். சீலனைக் கொன்றுவிட்டோம் ஏன்று ராணுவம் குகதூகலித்துக் கொண்டாடிய விதமே பிரபாகரனைத் திருநெல்வேலித் தாக்குதலைச் செய்யத் தூண்டியது என்று அனிட்டா கூறுகிறார். திருநெல்வேலியில் ராணுவம் மீது பிரபாகரன் நடத்திய தாக்குதலினைப் பார்க்கும்போது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்குவதற்காகவே அதனைச் செய்தார் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். தனது போராளிகளின் மரணத்தினை பிரபாகாரன் இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு. பிரபாகரனின் இந்தக் குணாதிசயத்தைக் காட்ட இரு நிகழ்வுகளை அனிட்டா விளக்குகிறார். http://www.eelamview.com/wp-content/uploads/2015/10/kumarappa-pulenthiran.jpg இந்தியச் சிங்களச் சதியால் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் முதலாவது நிகழவு 1987 ஆம் ஆண்டு பலாலி ராணுவத் தளத்தில் தனது மிக முக்கிய தளபதிகள் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணித்தபோது இடம்பெற்றது. "1987 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகி இருந்தது. இந்தியா அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றபோதும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து விசாரிப்பதில் பிடிவாதமாக நின்றார். கொழும்பிற்கு இழுத்துச் செல்லும் கணத்திற்குச் சற்று முன் புலிகளின் தளபதிகள் அனைவரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர். பிரபாகரனின் சினத்தின் மூடியை இச்சம்பவம் முற்றாகத் திறந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார். சீலனின் நினைவாலயம் மீசாலை - 2003 அனிட்டா குறிப்பிடும் இரண்டாவது சம்பவம் 1994 இல் இடம்பெற்றிருந்தது. வன்னிக்கு முக்கிய செய்தியொன்றுடன் வந்துகொண்டிருந்த புலிகளின் தளபதியான லெப்டினன்ட் கேணல் அமுதனை ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்றனர். அமுதனின் தலையினை தனியே வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது உடலினை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர் ராணுவத்தினர். "பிரபாகரன் கடுஞ்சினம் கொண்டிருந்தார்" என்று அனீட்டா எழுதுகிறார். அக்காலத்தில் சந்திரிக்காவுடன் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை விடவும் அமுதனின் படுகொலைக்கு பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அமுதனுக்கான தமது இறுதி மரியாதையினைச் செலுத்த அவரது தலையினை உடனடியாக இலங்கை ராணுவம் தம்மிடம் கையளிக்கவேண்டும் என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, அமுதனின் தலை நன்கு பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் நாமே அதனை எரித்துவிட்டோம், தேவையென்றால் அத்தலையின் சாம்பலைத் தருகிறோம் என்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபட பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார். சீலனின் மரணத்திற்கு பழிவாங்கலாக பாரிய தாக்குதல் ஒன்றினைச் செய்யட பிரபாகரன் தீர்மானித்தார். ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் யாழ் நகரையும் சுற்றுப்புறங்களையும் ரோந்து புரியும் ராணுவத் தொடரணி மீது பதுங்கித் தாக்குவதென்று அவர் முடிவெடுத்தார். செல்லக்கிளி இத்தாக்குதலை திட்டமிடும் பொறுப்பு செல்லக்கிளியிடமும் கிட்டுவிடமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, ராணுவ ரோந்து அணியின் பலம், அதன் பாதைகள், ரோந்து அணி வழமையாக ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் இருவரும் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூரண விபரங்களுடனான தாக்குதல் திட்டம் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தானே நேரில் சென்று பார்வையிட்ட பிரபாகரன் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். தேசியத் தலைவருடன் கிட்டண்ணா ஆடி 23 ஆம் திகதியை தமது தாக்குதலுக்கான நாளாக பிரபாகரன் தீர்மானித்தார். இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செல்லக்கிளியைத் தேடி ராணுவம் வலைவிரித்தது. இந்த நடவடிக்கைக்கு யாழ்த் தளபதி பல்த்தசார் உத்தரவிட்டார். தனது புலநாய்வு வலையமைப்பை இந்த நடவடிக்கைக்காக அவர் முடுக்கிவிட்டார். அவரக்குச் சில வெற்றிகளு கிடைத்திருந்தன. செல்லக்கிளியின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது ராணுவத்திற்கு தகவல்கள் வரத் தொடங்கின. ஆடி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செல்லக்கிளி தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார் என்கிற தகவலும் ராணுவத்தினருக்குக் கிடைத்திருந்தது. இதனையடுத்து ராணுவ ரோந்து அணியொன்றினை ஒழுங்கமைத்துக்கொண்டு யாழ்நகரை நள்ளிரவு வேளையில் சுற்றிவரும்படி முனசிங்கவைப் பணித்தார் பல்த்தசார். அதன்படி கொமாண்டோ படைப்பிரிவு ஒன்றினை நள்ளிரவு ரோந்திற்காக முனசிங்க ஒருங்கமைத்தார். வழமையாக நள்ளிரவு ரோந்தில் ஈடுபடும் சாதாரண ராணுவ அணியை அன்று நள்ளிரவுக்கு முன்னமே யாழ்நகரை விட்டு வந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம் "அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார். திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாடப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது. ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார். முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது. ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். எஸ் எம் ஜி யுடன் சீலன் "ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள். "எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. "என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது, "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார். சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர். "என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார். "சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார். வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார். நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார். சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு - சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சீலனின் வீரமரணம் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை வெடிக்கவைக்கும் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர், குறிப்பாக அதன் புலநாய்வுத்துறையினர் உசார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். வெடிக்கவைக்கும் கருவிகளை எடுத்துச் செல்லும் திட்டத்திற்குப் பொறுப்பாக சீலனே இருந்தார் என்பதை இராணுவத்தினை அறிந்துகொண்டனர். பாரிய தாக்குதல் ஒன்றிற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்பதை இராணுவத்தினர் அனுமானித்திருந்தனர். ஆகவே, புலிகள் தாக்குவதற்கு முன்னர் தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானித்த யாழ்ப்பாண ராணுவ - பொலீஸ் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளர் மேஜர் சரத் முனசிங்க யாழ்க்குடாநாட்டில் புலிகளின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். சீலன் நினைவேந்தல் - 2003 "மீசாலைப்பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக எமக்குச் செய்தி வந்திருந்தது. மீசாலை - கச்சாய் வீதியில் இருக்கும் அடர்ந்த தென்னந்தோப்பொன்றினுள் இந்த மறைவிடம் இருப்பதாக எமக்குச் சொல்லியிருந்தார்கள். ஆகவே இதுகுறித்த துல்லியமான தகவல்கள் எமக்குத் தேவைப்பட்டன" என்று சரத் முனசிங்க என்னிடம் கூறினார். கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு ஒருவரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல், குருநகர் ராணுவ முகாமில் இயங்கி வந்த ராணுவ பொலீஸ் கூட்டு புலநாய்வுத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடி 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் பொலீஸ் அதிகாரி ஒருவரால் இந்தத் தகவல் முனசிங்கவிடம் வழங்கப்பட்டது. இத்துடன் மேலதிகமாக இன்னொரு தகவலையும் அந்தப் பொலீஸ் அதிகாரி வழங்கியிருந்தார். அதுதான் அந்த மறைவிடத்திற்கு மிக அருகாக மலசல கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது என்கிற அடையாளம். ஆனாலும், இந்த தகவல்கள் தெளிவானதாக இருக்கவில்லை. துல்லியமாக புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே இருக்கப்போகிறதென்று ராணுவத்தினர் கருதினர். ஆனாலும் அப்பகுதியில் தேடுதல் நடத்துவதென்று முனசிங்க முடிவெடுத்தார். "புலிகளின் தாக்குதல் ஒன்றினை முறியடிப்பது மிக மிக அவசியமானது என்று நாம் நினைத்தோம்" என்று முனசிங்க கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான கட்டளை அதிகாரி, பிரிகேடியர் லைல் பல்த்தசாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார் முனசிங்க. தனக்குக் கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் பற்றி பல்த்தசாரிடம் விளக்கிய முனசிங்க, மீசாலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் புலிகளின் மறைவிடத்தை தேடிப் பார்ப்பது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பல்த்தசார், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 12 பேர் அடங்கிய கொமாண்டோ அணியையும், மேலதிகமாக ஒரு இளநிலை அதிகாரியுடன் 5 சாதாரண சிப்பாய்களையும் அனுப்பி வைத்தார். ராணுவ வண்டிகளில் புலிகளின் மறைவிடம் நோக்கிப் போகும்போது புலிகளின் ஆதரவாளர்களால் தமது பிரசன்னம் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, புலிகள் தப்பிச் சென்றுவிட வாய்ப்பிருப்பதாக முனசிங்க கருதினார். ஆகவே, பொதுமக்கள் பாவிக்கும் மினிபஸ் ஒன்றினை மடக்கிப் பிடிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளின் சீருடையணிந்த இரு ராணுவ வீரர்களை மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலிருக்கும் நீண்ட ஆளரவம் அற்ற சாலையில் மதியவேளை அனுப்பி வைத்தார். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை மறித்து, அதிலிருந்த சாரதியையும், நடத்துனரையும் கட்டிப்போட்டு விட்டு வாகனத்தை முகாமிற்கு ஓட்டிச் சென்றனர் ராணுவ வீரர்கள். முகாமை அடைந்ததும் சாரதியும், நடத்துனரும் முகாமின் அறை ஒன்றினுள் அடைத்துவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மணிக்கூடுக் கோபுரம் 2003 ஆனால், வாகனத்தை ஓட்டுவதற்கு சாரதி எவரும் முகாமில் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லாம் வேறு நடவடிக்கைகளுக்காகச் சென்றுவிட்டிருந்தனர். ஆகவே, தானே வாகனத்தை ஓட்டுவதென்று முனசிங்க முடிவெடுத்தார். நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தனர். "நாம் குருநகர் முகாமிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குக் கிளம்பினோம். தேவையேற்படின் வாகனத்தை ஓட்டுவதற்கு வசதியாக இளநிலை அதிகாரி எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். எவருமே பேசிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையின் பாரதூரம் பற்றி எல்லோரும் நன்கு அறிந்தே இருந்தோம். யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நான் சற்று வேகமாகவே ஓட்டிச்சென்றேன். பின்னல் சீருடை தரித்த ராணுவத்தினர் ஜீப் ஒன்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எம்மைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.மீசாலைச் சந்தியை அடைந்ததும், வாகனத்தை கச்சாய் நோக்கித் திருப்பினேன். அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவரை எமக்கு வழிகாட்ட ஏற்றிக்கொண்டோம். தென்னந்தோப்பின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மலசல கூடம் குறித்து அவர்களிடம் கேட்பதே எமது நோக்கம். ஆனால், எங்களால் புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது" என்று முனசிங்க என்னிடம் கூறினார். ஆகவே, மினிபஸ்ஸை கடற்கரை நோக்கிச் செலுத்தினார் முனசிங்க. பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி அவ்விடத்தை அடையுமட்டும் முனசிங்கவும் கொமாண்டோக்களும் அங்கு காத்து நின்றனர். மாலை 6 மணியாகிக்கொண்டிருந்தது, சூரியன் மெது மெதுவாக பட்டுக்கொண்டிருந்தான். மாலை நேரச் செவ்வானத்தின் அழகினை ரசிக்கும் நிலையின் முனசிங்கவோ படையினரோ அப்போது இருக்கவில்லை. முகாமிற்குத் திரும்புவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். முகாமிலிருந்து வந்தது போலவே, சாதாரண உடையணிந்த கொமாண்டோக்களுடன் மினிபஸ்ஸை முனசிங்க ஓட்டிச் செல்ல, சீருடையில் வந்த ராணுவத்தினர் பின்னால் ஜீப் வண்டியில் இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தனர். "கொண்டமூலாய் முடக்கினூடாக நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு செல்லும்போது, எமது வாகனத்தின் முன்னால் மூன்று இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை நாம் கண்டோம். மூன்று சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக ஓட்டிச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த சைக்கிளில் இன்னொருவர் அமர்ந்துவரக்கூடியதாக இருக்கை பூட்டப்பட்டிருந்தது. மற்றைய இருவரும் ராணுவ சீருடையினை ஒத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற இளைஞனிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை அவதானித்ததும் நான் மினிபஸ்ஸை உடனடியாக நிறுத்தினேன். பஸ்ஸும் கிரீச்சிட்ட சத்தத்துடன் அவர்களின் அருகில்ப் போய் நின்றது. வாகனத்தில் இருந்த இரு கொமாண்ட்டஓக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே வெளியில்க் குதித்தனர். இதனைக் கண்டதும் தாம் பயணித்த சைக்கிள்களை வீதியின் முன்னே விட்டெறிந்த அந்த மூன்று இளைஞர்களும் வேலியின் மீது பாய்ந்து ஏறித் தப்பியோடத் தொடங்கினர். பின்னர், பற்றை ஒன்றிற்குள் நிலையெடுத்து எம்மீது தாக்கத் தொடங்கினர். அவர்களைப் பிந்தொடர்ந்து துரத்தும் கொமாண்டோக்களைத் தாமதிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று இந்தச் சம்பவம் குறித்த நினைவுகளை முனசிங்க என்னுடன் பகிர்ந்துகொண்டார். தமக்கு முன்னால்த் தெரிந்த நெல்வயலினூடாக மூன்று இளைஞர்களும் ஓடிக்கொண்டிருந்தனர். "என்னுடன் வந்த கொமாண்டோக்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். கொமாண்டோக்கள் நிலையெடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த பற்றையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர்களில் ஒருவர் சூடுபட்டு விழுந்தார். மற்றையவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் சூடுபட்டு விழுந்தார். மூன்றாமவர், கீழே வீழ்ந்தவரை இழுத்துக்கொண்டு ஓட முயல்வதை நான் அவதானித்தேன். ஆனால், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார். அவருக்கும் சூடு பட்டிருந்தது, ஆனாலும் ஓடித் தப்பிவிட்டார்" என்று முனசிங்க கூறினார். அப்பகுதியை இருள் சூழத் தொடங்கியிருந்தது. தனது வீரர்களை அப்பகுதியில் இருட்டில் தேடுதல் நடத்தவேண்டாம் என்று முனசிங்க கூறிவிட்டு குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறு கேட்டார். மேஜர் அசோக ஜயவர்த்தனவின் தலைமையில் ராணுவ அணியொன்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்திறங்கியது. அவருடன் சில மூத்த பொலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவின் ஆட்சேபம் பயங்கரவாதத்தினை அழித்தே தீருவேன் என்றும், அதனால் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி தான் கவலைப்படப்போவதில்லை என்றும் டெயிலி டெலிகிராப் பத்திரிக்கைக்கு ஜெயார் கொடுத்திருந்த செவ்வி இந்திய வெளியுறவுத்துறையில் சிறிய சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தவிடயத்தை பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர்கள் கொண்டுசென்றபோது, இந்தியாவின் இது தொடர்பான கரிசணையினை இலங்கைத் தூதுவரான பேர்ணாட் திலகரத்ணவை அழைத்துத் தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளரான சங்கர் பாஜ்பாயை இந்திரா பணித்தார். ஏ.சி.எஸ்.ஹமீட் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்படுவோர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களை எரித்துவிடும் அதிகாரம் ராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இக்கொலைகளுக்கான தண்டனைகளில் இருந்து ராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் முற்றான விலக்கும், மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது பரேதப் பரிசோதனை செய்யவோ தேவையில்லை என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கரிசணை கொண்டிருந்தது. மிகக் கொடுமையான இந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக எழுதி வந்ததையடுத்து, கொழும்பிலிருந்து இந்திய உயர்ஸ்த்தானிகர் எஸ்.ஜே.ஜே. சாட்வாலை தனது வெளியுறவுத்துறை அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அமுலாக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் விளக்கவேண்டியதாயிற்று. ஹமீடின் விளக்கத்தினை ஷட்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றினை அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பிவைத்தார். பேர்ணாட் திலகரட்ண அன்று மாலையே தில்லியில் தங்கியிருந்த பேர்ணாட் திலகரட்ணவை தனது அலுவலகத்திற்கு அழைத்த இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளர் பாஜ்பாய், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த இந்தியாவின் கரிசணையினைத் தெரிவித்தார். இச்சட்டங்கள் தமிழர்களுக்கான அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியா இச்சட்டம் தொடர்பான தனது கருத்தினையே முன்வைக்கிறது, அழுத்தங்களையல்ல என்றும் மிகவும் பவ்வியமாக அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த திகரட்ண, "கடவுளே, இது எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அல்லவா?" என்று பாஜ்பாயைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார். பின்னர், அவரைப் பார்த்து, "இது தமிழ்நாட்டு அரசின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா?" என்று கேட்டர் திலகரட்ண. அதற்குப் பதிலளித்த பாஜ்பாய், "இது மத்திய அரசின் அதிமேலிடத்தில் உள்ளவரின் கருத்து" என்று கூறினார். உடனடியாக கொழும்புடன் தொடர்புகொண்ட திலகரட்ண, "இது எனக்கு அதிர்ச்சிதரும் ஒரு அறிக்கை" என்கிற தலைப்பில் இந்தியாவின் கரிசணையினை அனுப்பிவைத்தார். இந்தியாவின் கரிசணை பற்றி தனது தூதுவர் மூலம் அறிந்துகொண்டபோது கொழும்பு அரசாங்கம் கடும் எரிச்சலடைந்தது. டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் இதனைச் செய்தியாகப் போடுமாறு பணிக்கப்பட்டதுடன், ஆசிரியர்த் தலையங்கத்திலும் இந்தியாவின் கரிசணை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. செய்தியின் தலைப்பு இப்படிச் சொல்லியது, "எமது விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை இலங்கை வெறுப்புடன் நோக்குகிறது". மேலும் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், "இதனை எப்படிச் செய்தாய் பெரியண்ணா?" என்கிற கருத்தில் விமர்சித்திருந்தது. இனவாதப் பத்திரிக்கையான சண் ஒருபடி மேலே சென்று, "பெரிய சண்டியன் இந்தியா" என்று தலைப்பிட்டிருந்தது. சர்வகட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தினை ஒழிக்கும் சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், தோழமைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே சமூகமளித்திருந்ததனால், அம்மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தனர். பயங்கரவாதத்தினை அழிக்கும் தனது திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளியிடாததனால் தாம் இந்த மாநாட்டில் பங்குபெற்ற விரும்பவில்லை என்று சுதந்திரக் கட்சி கூறியது. அக்கட்சியின் பேச்சாளாரான லக்ஷ்மண் ஜயக்கொடி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது "ஜெயவர்த்தனா சதியில் இறங்கியிருக்கிறார், பயங்கரவாதத்தினை அழிப்பதற்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் ஏதும் தவறுகள் நடக்குமிடத்து சுதந்திரக் கட்சியே இவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று பழியினை எம்மீது போட்டுவிடுவார்" என்று கூறினார். "இந்த சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதை விடுத்து தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு முதலில் வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்றும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு அமிர்தலிங்கம் இரு காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, பிரச்சினைக்கான மூல காரணத்தை அறியாமலும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்வைக்காமலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மட்டுமே இந்த மாநாடு கூட்டப்படுவதால் தனது கடசி அதில் கலந்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமையினால், தமிழருக்கான தீர்வினைத் தருவதில் இக்கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த கொள்கை ஒன்று இல்லாமல்ப் போயிருயிப்பதாகவும், இதுவே தனது கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமைக்கான மற்றைய காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார். "இம்மாநாட்டில் மேசைகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கின்றன, வட்டமாகவா அல்லது சதுரமாகவா?" என்று லலித்திடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டமேசை மாநாடு என்றே நாம் பேசி வந்தோம், ஆகவே வட்டவடிவில்த்தான் அவை ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று கூறினார். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் எனக்கு அளித்த பதில் குறித்து அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். அன்று நான் அவரிடம் "தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று?" என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்திருந்த லலித், "வட்டமேசையா, அது என்ன? மக்களின் ஆணையுடன் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். நாங்களே மேசையைச் சுற்றி அமர்ந்துகொள்வோம். இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, அல்லது வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன, நாமே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்போம்" என்று கர்வத்துடன் கூறியிருந்தார். ஆகவே, நான் இன்று கேட்டபோது, "இன்றைக்கும் எமது முடிவு அப்படியே இருக்கிறது, நாமே முடிவுகளை எடுப்போம்" என்று மீண்டும் அதனை உறுதிப்படுத்தினார். மறுநாள், ஆடி 21 ஆம் திகதி, தனது கருத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பெளத்த சிங்களக் கட்சிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது போருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது ஜெயாரின் உணர்வுகளை அச்சொட்டாக அவர் விரும்புவதுபோலவே வெளியிட்டார். பாராளுமன்றத்தில் அதுலத் முதலி கூறியது இதைத்தான், "அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சினையினை எப்படித் தீர்க்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்தவகையில் நாம் தீர்த்துவைப்போம். நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டாலென்ன, விட்டாலென்ன அல்லது அதனை ஆதரித்தலேன்ன இல்லாவிட்டாலென்ன, நாம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை எமது திட்டத்தின்படி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட எது சரியான தீர்வென்று எமது அரசாங்கம் நினைக்கின்றதோ, அந்தவைழியில் சென்று நிச்சயம் அதனை முற்றாக நடத்தி முடிப்போம்". "பயங்கரவாதத்தை அழிக்கும் இந்த செயற்பாட்டில் அப்பாவிகள் பாதிக்கப்படலாம். அப்பாவிகளின் அழிவுகளை குறைக்க நாம் முயற்சி எடுப்போம். சுதந்திரக் கட்சிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் தற்போது எதற்காகப் பின்வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிங்கள பெளத்த கட்சியாக இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? பயங்கரவாதத்தை அழிக்க முன்வராது இருந்துவிட்டு எப்படி மக்களையும் தேர்தல்களையும் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பாஸிஸப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரில் உங்களை இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் கொலைஞன் ஒருவனுடன் உலங்குவானூர்தியில் இருந்துகொண்டு உரையாடும் சிங்கள பெளத்த கொலைஞன் லலித் அதுலத் முதலி ஜெயவர்த்தனவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் காமிணியை ஓரங்கட்டிவிட்டு ஜெயாருக்கு நெருக்கமாகலாம் என்று லலித் எண்ணினார். அவர் பிரேமதாசாவால் ஒதுக்கப்படும்வரைக்கும் அதுவே அவரது அரசியலாக இருந்தது. ஏனென்றால், பிரேமதாசா கூட ஜெயாரின் இனவாதத்தைத்தான் கைக்கொண்டு வந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சர்வதேச மன்னிப்புச் சபையுடன் முரண்பட்ட ஜெயார், ஜனாதிபதியாகத் துடித்த லலித் ஜெயவர்த்தன தனது இரண்டாவது தவணைக்காலத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவுசெய்யும்போது ஜனாதிபதிப் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை லலித் அதுலத் முதலி வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால், ஜெயாருடன் காமிணி திசாநாயக்க கொண்டிருந்த நெருக்கம் அவருக்கு கவலையைக் கொடுத்திருந்தது. அத்துடன் காமிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பல அமைச்சுக்களும், குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டமும் அதனுடன் இணைந்த பாரியளவிலான காணிகள் மீதான அதிகாரமும் லலித்திற்கு சங்கடத்தைக் கொடுத்திருந்தன. லலித்தின் கவலைகளை அவருடன் நெருங்கிப் பழகிய செய்தியாளன் என்கிற வகையில் நான் நன்கு அறிந்தே இருந்தேன். அவரின் கீழிருந்த வணிகம் மற்றும் கப்பற்றுரை அமைச்சுக்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த அதே காலத்தில் காமிணியின் கீழான அமைச்சுகக்கள் பற்றிய செய்திகளையும் சேகரித்து வந்திருந்தேன். ஜெயாரினதும், மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல நிதியுதவித் திட்டத்தினை லலித் பரிந்துரை செய்திருந்தார். ஜெயவர்த்தனவின் அரசியலின் அடிநாதமே "வடக்குப் பயங்கரவாதத்தை அழித்தல்" என்றாகியபோது, லலித்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டார். ஆகவேதான் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரேரித்ததுடன் நின்றுவிடாமல், அதனைச் சட்டமாக்கவும், நிறைவேற்றவும் கடுமையாக உழைத்து ஜெயாரின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான "தீர்வினை" சிரம் மேல் ஏற்று முன்னின்று உழைத்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஜெயார் கொண்டிருந்த நிலைப்பாட்டினை நாட்டினுள்ளும், வெளியிலும் நியாயப்படுத்தி, முன்கொண்டு செல்வதிலும் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வந்தார். லலித்தின் செயற்பாடுகள் பற்றி நான் தொடர்ந்து இங்கு பதிவிடுவேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அடக்குவது குறித்து கிரகம் வோர்ட்டிடம் பேசிய ஜெயார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தான் கூட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சிறிமா உட்பட பல அரசியல்த் தலைவர்களையும் அழைக்கப்போவதாகக் கூறிய ஜெயார், தனது திட்டத்தினை எவர் ஏற்றுக்கொண்டால் என்ன, இல்லாதுவிட்டால் என்ன தான் நிச்சயமாக பயங்கரவாதத்திற்கெதிரான தனது நடவடிக்கைகளை எடுத்தே தீருவேன் என்று தீர்க்கமாகக் கூறினார். இச்செவ்வியின்போது சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கிரகம் வோர்ட் வினவியபோது, அது இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரச்சாரம் என்று எள்ளி நகையாடினார் ஜெயார். இலங்கையின் கம்மியூனிசக் கட்சியின் ஸ்த்தாபகரான கலாநிதி விக்கிரமசிங்கவின் மகனான டெஸ்மண்ட் பெர்ணான்டோவே சர்வதேச மன்னிப்புச் சபையின் கொழும்புக் கிளைக்குப் பொறுப்பாக அக்காலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆகவே, அவரை மனதில் இருத்தியே "கம்மியூனிசஸ்ட்டுக்களின் பொய்ப் பிரச்சாரம்" என்று தனது ராணுவம் மற்றும் பொலீஸார் மீதான விமர்சனங்களை அவர் நிராகரித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 6 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து தமிழர்களை கைதுசெய்து, தடுத்துவைத்து, கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மேல் புரிந்து, நீதிமன்ற வழ்க்குகளின்றி கலவரையின்றி அடைத்துவைத்தல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தடுத்துவைத்தல் ஆகிய செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சட்டியிருந்தது. அத்துடன், இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை எழுந்தமானமாகக் கைதுசெய்து , சித்திரவதைகளின்பின்னர் அவர்களைக் கொன்று வீதிகளில் எறிந்துவருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. https://www.amnesty.org/fr/wp-content/uploads/2021/06/asa370051984en.pdf "பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்படும் அரசியல்ச் செயற்பாட்டாளர்களை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து இலங்கையரசு தடுத்துவைத்திருக்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பலர் சுமார் எட்டு மாத காலம்வரை ராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் கடுமையான சித்திரவதைகளை சந்தித்து வருகின்றனர். இச்சித்திரவதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு, அவர்களின் நக இடுக்குகளில் ஊசிகள் ஏற்றப்பட்டு, கண்கள் உட்பட உடலின் பல இடங்களில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது சர்வதேச மன்னிப்புச்சபை. மேலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களுக்கான வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வதையோ இலங்கையரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருவதாகவும் மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது, 1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது. 2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது. 3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல். 4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது. 5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல். 6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும். தனது அறிக்கைக்குப் பதிலாக இலங்கையரசாங்கம் வெளியிட்ட விமர்சனத்தை வெளியிடப்போவதாக மன்னிப்புச்சபை தெரிவித்தபோது ஜெயார் கடுமையாகக் கோபமடைந்திருந்தார். மன்னிப்புச்சபையின் அறிக்கைக்குப் பதிலளித்த அரசாங்கம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த விடயங்களில் ஒன்பது விடயங்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன் சில கைதிகள் வெளித்தொடர்பின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது. இதுகுறித்த முற்றான அறிக்கையினை அரசு ஆடி 22 ஆம் திகதி வெளியிட்டது. வி.என். நவரட்ணம் இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது மூன்றாவது வருடாந்த மாநாட்டினை மன்னாரில் ஆடி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதாகத் தீர்மானித்திருக்க, சாவகச்சேரி தேர்தல்த் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரட்ணம் தான் பதவி விலகுவதாக ஆடி 21 ஆம் திகதி அறிவித்தார். தனது விலகலுக்கான காரணத்தை அறிக்கை வடிவில் வெளியிட்ட நவரட்ணம், கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன் 1977 ஆம் ஆண்டு தன்னைத் தெரிவுசெய்து ஆறு ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாக்காளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் அறிக்கை முன்னணியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெயாருக்கும் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபபையின் தலைவர் எஸ்.நடராஜா தனது பதவி விலகல் அறிவிப்பினை ஆடி 15 இல் வெளியிட்டது ஜெயாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜா, மாவட்ட அபிவிருத்திச் சபைக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரங்கள் எவற்றினையும் அரசு தரமறுத்து வருவதாகவும், சபை இயங்குவதற்கான நிதியினை தடுத்துவைத்திருப்பதாகவும் கூறியதோடு, இச்சபைகளை அரசு உருவாக்கியதன் உண்மையான நோக்கம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கேயன்றி வேறு எதற்கும் அல்ல என்று கூறியதோடு, வெற்றுக்கோது என்றும் இச்சபையினை அவர் விளித்திருந்தார். "பொடியள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை. சபையினை இயக்குவதற்காக நான் முன்வைத்த நிதிக் கோரல்களை நிதியமைச்சு தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இப்பத்திரிக்கையாளர் மாநாட்டில் இரு விடயங்கள் குறித்து நடராஜா பேசியிருந்தார். முதலாவது, காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு பை சீமேந்திற்கும் தலா ஒரு ரூபாய் வீதம் வரியினை அறவிடுதல். இரண்டாவது, காங்கேசந்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையினை ஆரம்பிப்பது. இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிராகரித்த அரசு, மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்று முதலாவது கோரிக்கையினை உதாசீனம் செய்ததுடன், நாட்டில் நிலவும் பாதுகாப்புக் காரணங்களால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பற்சேவையினை ஆரம்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தது. ஆடி 17 ஆம் திகதி வெளிவந்த பத்திரிக்கைகள் அனைத்திற்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய சர்வகட்சி மாநாட்டினை அரசு கூட்டவிருப்பதான செய்தியினை ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்தது. அச்செய்தியில் பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வழிகள் பற்றி இந்த மாநாடு ஆராயும் என்றும் கூறியது. சுதந்திரக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் இச்செய்தி கூறியது. தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காது பயங்கரவாதத்தினை முறியடிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அமிர்தலிங்கம் கூறினார். உடனடியாக இதற்குப் பதிலளித்த ஜெயார், இம்மாநாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயலாம் என்று மாநாட்டின் நோக்கத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்தார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்பாலத்தின் கீழ் அரண்களை அமைத்திருந்த உக்ரேனிய வீரர்களை அகற்ற ரஸ்ஸியா 5 நாட்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ரஸ்ஸியப் படையினர் இப்பகுதியிலிருந்து திடீரென்று விலகியபோதே இப்பகுதி நோக்கி ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்படப்போவது உறுதியாகிவிட்டது. அதற்கு முன்னதாகவே உக்ரேன் தனது வீரர்களை அங்கிருந்து அகற்றிவிட்டதாக உரக்ரேன் ராணுவம் கூறுகிறது. பாலம் தகர்க்கப்பட்டது உண்மை, ஆனால் உக்ரேனின் இழப்பு பற்றி ரஸ்ஸியா கூறுவதை நம்ப முடியாது. போரில் முதலில் பலியாவது உண்மை. குறிப்பாக ஆக்கிரமிப்புப் போர் ஒன்றினை தர்மத்தைற்கு முரணாக நடத்தும் ரஸ்ஸிய மேலிடத்திற்கு பொய்ப் பிரச்சாரம் என்பது மிக அவசியமானது. உக்ரேனின் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கெதிரான ரஸ்ஸிய மக்களின் அதிருப்தியைப் பொய்களால்அழித்துவிட மேலிடம் விளைகிறது. நீங்கள் வரும்வரை ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் போர் பற்றிய கலந்துரையாடல்கள் (யார் கலந்துரையாடுகிறார், எல்லாமே நான் சரி, நீ பிழை என்கிற வாதம் மட்டும் தான்) மந்தமாகமாகவே நடந்துவந்தன. மறுபடி சூடு பிடித்துக்கொண்டது. இதற்குள் என்னை வேறு இழுத்துவிட்டீர்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாகி விடப்போகிறேனோ என்கிற நியாயமான கவலை எனக்கு!☹️
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ஸிய அதிபரின் பலவீனமான இன்றைய நிலையும், ரஸ்ஸிய ராணுவ மற்றும் உளவுத்துறைக்குள் தோன்றியிருக்கும் மேலிடம் மீதான அதிருப்தியும் தமக்குச் சாதகமாகப் பயன்படலாம் என்றும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தாம் உளவாளிகளை ரஸ்ஸிய கட்டமைப்புகளுக்குள் நிறுத்தலாம் என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ இன் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். கடந்த சில நாட்களாக உக்ரேனில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் பேர்ன்ஸ் இவ்விடயத்தினை அங்குவைத்துக் கூறியிருக்கிறார். இவ்வாறான உளவாளிகளை இவ்விரு நாடுகளும் பனிப்போர் காலத்திலிருந்தே இயக்கி வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இவர் இப்படிக் கூறுவது சீண்டும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பலவீனமான புட்டினை ஒரே அடியாக வீழ்த்தப் பார்க்கிறார்கள் அமெரிக்காவும் நேட்டொவும். அதிலும் ஒரு சிக்கல், புட்டினுக்குப் பின் யார்? இன்னொரு அதி தீவிர வலதுசாரி மூர்க்கன் பதவிக்கு வந்தால் நிலைமை என்னவென்பதை இவர்கள் நினைத்தே வேலை செய்கிறார்கள் என்று நம்புவோமாக. CIA director met Zelensky on trip to Ukraine, US official says 02:19 CNN — CIA Director William Burns recently traveled to Ukraine and met with President Volodymyr Zelensky and Ukrainian intelligence officials, according to a US official. “Director Burns recently traveled to Ukraine, as he has done regularly since the beginning of Russia’s recent aggression more than a year ago,” the official told CNN. “As with other trips, the director met with his Ukrainian intelligence counterparts and President Zelensky, reaffirming the US commitment to sharing intelligence to help Ukraine defend against Russian aggression.” The official noted that Burns traveled to Kyiv before Wagner Group chief Yevgeny Prigozhin’s rebellion, which was not a topic of discussion. Another official told CNN that Burns also spoke to his Russian counterpart, Sergey Naryshkin, after the rebellion and reiterated that the US had nothing to do with it. The Wall Street Journal first reported on the call. The Washington Post first reported on Burns’ most recent trip to Ukraine. “Disaffection with the war will continue to gnaw away at the Russian leadership, beneath the steady diet of state propaganda and practiced repression,” Burns said Saturday in remarks to the Ditchley Foundation in England, according to a transcript of his speech. “That disaffection creates a once-in-a-generation opportunity for us at CIA, at our core a human intelligence service. We’re not letting it go to waste,” he said. “That disaffection creates a once-in-a-generation opportunity for us at CIA, at our core a human intelligence service. We’re not letting it go to waste,” he said.