Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. முதலாம் ஈழ யுத்தம் 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. சென்னையில் பேசிய பிரபாகரன் இதுவரை காலமும் தாக்கிவிட்டு ஒளிந்துகொள்ளும் முறையில் இருந்து நிலையான போர்புரியும் கெரில்லாக்களாக தாம் மாற முடிவெடுத்திருப்பதாகக் கூறியதுடன், ஏனைய அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடி தாயகத்தையும் மக்களையும் காத்துக்கொள்ள உதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த பிரகடனத்தோடு தனது அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்திவிட்டிருந்த பிரபாகரன் அதற்கான தலைமையினையும் வழங்கினார். அக்காலத்தில் இருந்த போராளித் தலைவர்களில் பிரபாகரனே இவ்வகை படிநிலை மாற்றத்தினை முதன்முதலாக கைக்கொண்டவர் என்பது முக்கியமானது. மேலும், இந்த அறிவிப்போடு முதலாவது ஈழப்போர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது. முதலாவது ஈழப்போர் 1984 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதி பொலிகண்டியை அண்டிய கடலில் , வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் இடம்பெற்ற கடற்சமருடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு தனது ரேடரில் தெரிந்த புலிகளின் படகு நோக்கித் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தது. புலிகளும் திருப்பித் தாக்கினார்கள். சிறிதுநேரம் மட்டுமே நடைபெற்ற தீவிரச் சண்டையில் ஆறு கடற்படையினர் புலிகளால் கொல்லப்பட்டதுடன் இன்னும் சிலர் காயமடைந்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு பீரங்கிப்படகில் இருந்த 9 கடற்படையினர், சேதமடைந்த படகில் கிடந்த கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புலிகளின் படகில் பயணம் செய்த நான்கு போராளிகளும் காயமேதும் இன்றித் தப்பித்ததோடு, படகும் பாதுகாக்கப்பட்டது. புலிகளுடனான தனது முதலாவது கடற்சமரிலேயே கடுமையான இழப்புக்களைக் கடற்படை சந்தித்தது. இது அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாக மாறியது. அதுலத் முதலி கொதித்துப்போனார். மறுநாள் காலை பொலீஸாரும் இராணுவமும் இணைந்து வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதேவேளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மீது கடற்படையும் இராணுவமும் இணைந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். வல்வெட்டித்துறைக் கடற்கரைப்பகுதி தமது கண்காணிப்பிற்குட்பட்ட பகுதி என்று கடற்படையால் அறிவிக்கப்பட்டது. கரையில் கட்டப்பட்டிருந்த மீனவர்களின் குடிசைகள் பீரங்கிப் பாடகிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்து எரிய, வீதியால் வந்த கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குத் தீமூட்டினர். சுமார் 5000 பொதுமக்கள் ஊரைவிட்டு வெளியேறி அருகிலிருந்த பாடசாலையினுள் தஞ்சமடைந்திருந்தனர். நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் குழந்தைகளும் முதியவர்களும் அடங்கும். வல்வெட்டித்துறைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலீஸாரும் இராணுவத்தினரும், அவ்வூரில் இருந்த உடல்வலுக் கொண்ட ஆண்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் கூடுமாறு கட்டளையிட்டனர். குறைந்தது 300 ஆண்கள் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். குழுக்களாகச் சென்ற இராணுவத்தினர் அருகில் இருந்த கிராமங்களுக்குள் சென்று கண்களில் பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்தனர். இராஜாங்க அமைச்சகத்தின் பேச்சாளர் டக்ளஸ் லியனகே பத்திரிக்கையாளர்களின் மாநாட்டில் பேசும்போது சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இன்னும் 300 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகவும் கூறினார். இதுதொடர்பாக டெயிலி நியூஸ் வெளியிட்ட செய்தியின் முதலாவது பந்தி பின்வருமாறு கூறியது, "வல்வெட்டித்துறைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 300 பயங்கரவாதச் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர் என்று கொழும்பிற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது....." அன்றைய நாள் நகர்ந்தபொழுது வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற படுகொலைகள், கைதுகள், சொத்தழிப்புக்கள் குறித்த தகவல்கள் யாழ்க்குடாநாடெங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தில் கடுமையான பதற்றம் நிலவியதோடு, கடற்சமரில் கொல்லப்பட்ட கடற்படையினரின் உடல்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டு பலாலியூடாக கொழும்பிற்கு எடுத்துசெல்லப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவச வாகன‌ங்களில் வலம்வந்த இராணுவத்தினர் யாழ் வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டடங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திக்கொண்டு சென்றனர். பின்னர் அவ்வாகனம் யாழ்ச் சந்தைப்பகுதி நோக்கி நகர்ந்தபடி தாக்குதல் நடத்தியவேளை புலிகள் அதனை நோக்கி கிர்னேட்டுக்களாலும், பெற்றொல்க் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். புலிகளோடு இணைந்த பொதுமக்கள் கற்களாலும் ஏனைய பொருட்களாலும் கவசவாகனம் மீது எறியத் தொடங்கினர். உள்ளிருந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தச் சண்டை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் கவச வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டதுடன் ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து யாழ்நகர் முழுவதும் குண்டுத் தாக்குதல்களால் அதிர்ந்தது. பல பொதுமக்கள் இராணுவத்தால் சகட்டுமேனிக்குக் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். மிகப்பழமையானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான யாழ்நகரம் முதலாவது ஈழப்போரின் சண்டையினை அன்று தரிசித்தது. லியனகேயின் அலுவலகம் விடுத்த பத்திரிக்கையாளருக்கான குறிப்பில் யாழ்ப்பாணத்தில் பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள் என்று அவ்வறிக்கை கூறியதுடன், இராணுவத்தினருடனும், பொலீஸாருடனுமான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் கூறியது. அன்று இரவாகிய‌தும், யாழ்ப்பாண நகரில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது. இராணுவத்தினரும் பொலீஸாரும் குழுக்களாக யாழ்நகரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வலம் வந்தனர். அன்றிரவு முழுவதும் பொதுமக்களைக் கொன்றதுடன், சொத்துக்களுக்கும் தீமூட்டியபடி அவர்கள் வலம்வந்தனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியின் இருமரங்கிலும் இருந்த பெரும்பாலான கடைகளும், சில‌ வீடுகளும் இராணுவத்தால் எரிக்கப்பட்டன. பலாலிக்கு அருகில் அமைந்திருந்த அச்சுவேலிக் கிராமம் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டது. அங்கிருந்த பல கடைகளும் வீடுகளும் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட வீடுகளில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் வீடும் அடங்கும். அவ்வீட்டின் முன்னால் காவலுக்கு நின்ற‌ பொலீஸாரை கலைத்துவிட்டே இராணுவத்தினர் அதற்குத் தீமூட்டினர். புலிகள் பதில்த் தாக்குதலில் இறங்கினர். அன்றிரவு, ஆவணி 5 ஆம் திகதி, வல்வெட்டித்துறைக்கு அண்மையாக இருக்கும் நெடியகாடு எனும் பகுதியூடாக ரோந்துவந்த பொலீஸ் இராணுவ கூட்டு அணிமீது தாக்குதல் நடத்தினர். அன்று பின்னேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். அன்றிரவு முழுவதும் முதலாவது ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு ஆடியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இப்போர் தொடர்ந்து நடைபெற்றது. நெடியக்காடு எனும்பகுதியில் வீதியின் ஓரத்தில் பாரிய கண்ணிவெடி ஒன்றினைப் புதைத்த புலிகள், வீதியின் இருமருங்கிலும் பதுங்கியிருந்தவாறு இரவுநேர பொலீஸ் - இராணுவ கூட்டு ரோந்து அணியின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இந்த ரோந்து அணியில் மூன்று கவச வாகனங்கள், ஒரு ஜீப் வண்டி ஒரு ட்ரக் வண்டி என்று ஐந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் மீது கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு ஏனையவற்றின்மீது துப்பாக்கித் தாக்குதலை புலிகள் நடத்த ஆரம்பித்தனர். எட்டு பொலீஸ் அதிரடிப்படையினரும் அவர்களின் தளபதியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சிறீ ஜயசுந்தரவும் அவ்விடத்தில் பலியானார்கள். ஒட்டுசுட்டானில், இருள் சூழ்ந்த மாலை வேளையில் மாத்தையா தலைமையில் 60 புலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து நிலையெடுத்துக் காத்திருந்தனர். சுமார் 50 பொலீஸார் தங்கியிருந்த இருமாடிக் கட்டத்தின் பிற்பகுதிக்கு புலிகளின் குழுவொன்று சென்றது. இக்கட்டத்தில் இருந்த பொலீஸாரில் 30 பேர் இஸ்ரேலியக் கமாண்டோக்களினால் பயிற்றப்பட்ட கெரில்லா எதிர்ப்பு அதிரடிப்படை வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றைய குழு முகாமின் முற்பகுதியில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தது. கட்டடத்திற்குள் இருந்த பொலீஸார் முகாமினைக் காத்துக்கொள்ள முகாமின் முன்புறம் நோக்கி ஓடினர். அப்போது முகாமின் பிற்பகுதியில் நிலையெடுத்திருந்த இரண்டாவது குழு முகாமிற்குள் நுழைந்துகொண்டது. உள்ளே நுழைந்தவுடன் கிர்னேட்டுக்களை வீசியும், குண்டுகளை வெடிக்கவைத்தும் தாக்குதல் நடத்தி பொலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு கோரியது. பொலீஸார் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தப்பியோடினர். புலிகள் ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டதுடன், கட்டடத்தையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றனர். புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்களில் நான்கு இயந்திரத் துப்பாக்கிகள், மூன்று 0.303 ரைபிள்கள், நான்கு ரிப்பீட்டர் ரைபிள்கள்,இரண்டு 0.38 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அடங்கும். கொல்லப்பட்ட எட்டு பொலீஸ் கமாண்டோக்களில் பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லையும் ஒருவர்.
  2. மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பும் வீணடிக்கப்பட்ட ஒரு திறமையும் போராளிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் ஆவணியில் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், ஆவணி 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடத்த முயற்சிக்கப்பட்ட குண்டுவெடிப்பு தோல்வியில் முடிவடைந்தது. பனாகொடை மகேஸ்வரன் இதனைத் திட்டமிட்டிருந்தார். புங்குடுதீவைச் சேர்ந்த பிரபல வர்த்தகக் குடும்பம் ஒன்றில் 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரன் பிறந்தார். அவரது தந்தையாரான தம்பிள்ளைக்கு பல வர்த்தக நிலையங்கள் சொந்தமாக இருந்தன. அவற்றுள் ஒன்று மருதானையில் இயங்கிவந்த சைவ உணவகமான தவள‌கிரி ஹோட்டல். மகேஸ்வரனை கட்டிடப் பொறியியல்ப் படிப்பிற்காக இங்கிலாந்தின் குயீன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அவரது தந்தையார் அனுப்பிவைத்தார். 1980 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய மகேஸ்வரன் அக்காலத்தில் கெஸ் என்றழைக்கப்பட்ட பின்னை நாள் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். திருகோணமலையில் ஈரோஸ் அமைப்பினருடன் இயங்கியவேளை தோல்வியில் முடிவடைந்த கிண்ணியா வங்கிக்கொள்ளையிலும் அவர் பங்குபற்றியிருந்தார். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் பனாகொடை இராணுவத் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டார். தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையின் யன்னல்க் கம்பிகளை அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இந்தத் துணிகரச் செயலே அவருக்குப் "பனாகொடை" எனும் அடைமொழியினை பெற்றுக்கொடுத்ததுடன் இளைஞர்கள் மத்தியிலும் மரியாதையினை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றினால் பேலியகொடைப் பகுதியில் காட்டிக்கொடுக்கப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டார். 5 அடி 11 அங்குலம் உயரமும், திடகாத்திரமானவராகவும் இருந்த மகேஸ்வரன் ஆடி 25 வெலிக்கடைப் படுகொலைகளை நேரில்க் கண்டவர். ஆகவே, தன்னுடன் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ்க் கைதிகளை, காவலாளிகள் தம்மைத் தாக்க வரும்போது திருப்பித் தாக்க ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உலோகத்திலான பொருட்களை ஆயுதங்கள் போன்று உருமாற்றி, மிளகாய்த்தூள் போன்ற இலகுவாகக்,இடைக்கக்கூடிய பொருட்களைத் தற்காப்பிற்காக அவர்கள் எடுத்து வைத்திருந்தனர். ஆடி 27 ஆம் திகதி நடந்த இரண்டாவது படுகொலையின்போது உயிர்தப்பிய அவரது நண்பர்கள், அன்று அவர் மேற்கொண்ட தற்காப்புத் தாக்குதல் குறித்து கிலாகித்துப் பேசுகின்றனர். முதலாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பினைத் திட்டமிட்டவர்களில் மகேஸ்வரனும் ஒருவர். கைத்துப்பாக்கிகள் போன்று அவரால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தியே சிறைக்காவலர்களை மிரட்டி அவர் சிறையுடைப்பினை நடத்தினார். அவரால் பாவிக்கப்பட்ட பொம்மைத்துப்பாக்கிகளை உண்மையானவை என்றும், சிறைக்குள் அவரால் கடத்திவரப்பட்டவை என்றும் அதிகாரிகள் ஆரம்பத்தில் நினைத்திருந்தனர். சிறையுடைப்பின் பின்னர் மட்டக்களப்பிலேயே தங்கியிருந்த மகேஸ்வரன் தமிழ் ஈழ இராணுவம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1984 ஆம் ஆண்டு, அதுவரையில் இலங்கையில் நடத்தப்பட்ட வங்கிக்கொள்ளைகளில் மிகப்பெரிய‌ சம்பவமான காத்தான்குடி மக்கள் வங்கிக்கொள்ளையை அவர் திட்டமிட்டு நடத்தினார். காலை 9 மணிக்கு வங்கி அலுவல்கள் ஆரம்பித்தவேளை வங்கிக்குள் நுழைந்த ஆறு ஆயுதம் தரித்த இளைஞர்கள் வங்கி முகாமையாள்ரைத் துப்பாக்கிமுனையில் பணயக் கைதியாக வைத்திருந்து வங்கியில் இருந்த மொத்தப் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றார்கள். இரத்தம் சிந்தாத இந்தச் சம்பவத்தில் 36 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகளும், 240,000 பணமும் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பொலீஸார் நடத்திய தேடுதலின்போது மகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் பொலித்தீன் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி நகைகளும் பணமும் மீட்கப்பட்டிருந்தது. தான் கொள்ளையிட்ட பணத்தின் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற மகேஸ்வரன் பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். தமிழ்நாடு ‍- கேரளா எல்லையில் அமைந்திருந்த காட்டுப்பகுதியில் தனது அமைப்பிற்கான முகாம் ஒன்றினை உருவாக்கிய அவர், தனது அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து வந்து கரையேறும் வசதிக்காக வேதாரணியம் இடைத்தங்கல் முகாமையும் அமைத்தார். அவரது புகழினால் ஈர்க்கப்பட்ட சுமார் 400 இளைஞர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். பின்னாட்களில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியிலும் தமக்கான முகாம் ஒன்றிபை மகேஸ்வரன் அமைத்தார். பனாகொடைப் பையன்கள் என்று பரவலாக அறியப்பட்ட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்றினை அவர் உருவாக்கினார். சபாரி உடைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது அவர்களது வழக்கமாக இருந்தது. விசாலமானதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்பதே பனாகொடை மகேஸ்வரனின் எண்ணமாக இருந்தது. அதற்காக சென்னையில் நீலாங்கரை எனும் இடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்து, சென்னை விமானப் பயிற்சி நிலையத்தில் உறுப்பினராக இணைந்து விமனமோட்டக் கற்றுக்கொண்டார். அவரது நோக்கமெல்லாம் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, அதனை வெடிபொருட்களால் நிரப்பி கொழும்பின் முக்கிய இலக்குகள் மீது அவற்றினை வீசி வெடிக்கச் செய்வதுதான். ஆனால், விமானமோட்டும் பயிற்சியின்போது தனது நோக்கத்தையும், திட்டத்தையும் அவர் மாற்றிக்கொண்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தகர்ப்பதே அவரது புதிய நோக்கமாக மாறியது. இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியவர் மகேஸ்வரனின் விமானப் பயிற்சி நிலைய நண்பரான சரவணபவன் என்பவர். இலண்டன் மற்றும் பரீஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் எயர்லங்கா விமானங்களில் பயணப்பொதிகளில் குண்டுகளை மறைத்துவைத்து, அவை விமானத்தில் ஏற்றப்பட்டதன் பின்னர் வெடிக்கவைப்பதே அவர்களின் புதிய திட்டம். தனக்கு உதவக் கூடிய சிலரை மகேஸ்வரன் தெரிந்தெடுத்தார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான விக்னேஸ்வர ராஜா, மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிராஜா, சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் பொலீஸ் காவலராக பணியாற்றிய சந்திரக்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அலுவலக ஊழியராகப்பணியாற்றிய விஜயக்குமார் மற்றும் விமான நிலையத்தில் பயணப்பொதிகளை ஏற்றி இறக்கும் சிப்பந்தி லோகநாதன் ஆகியோர் பனாகொடை மகேஸ்வரனுக்கு உதவ முன்வந்தனர். நீலாங்கரையில் தான் தங்கியிருந்த வீட்டில் குண்டுகளை மகேஸ்வரன் தயாரித்தார். பின்னர் அவற்றினை இரு சூட்கேஸுகளில் அடைத்தார். ஆவணி 2 ஆம் திகதி சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பயணமாகும் விமானத்தில் தனக்கு ஒரு இருக்கையினை கட்டணம் செலுத்தி அமர்த்திக்கொண்டார். யு எல் 122 எனும் அந்த போயிங் 737 விமானத்தை அவர் தெரிவுசெய்தமைக்கான காரணம் சென்னையிலிருந்து இரவு 9:50 மணிக்குக் கிளம்பும் அவ்விமானம் கொழும்பை இரவு 10:50 மணிக்கு வந்தடையும். பின்னர் 11:50 மணிக்கு மாலைதீவின் தலைநகரான மாலேக்கு அது பயணிக்கும். இந்த விமானம் கொழும்பில் தரித்து நிற்கும் அதே வேளையில் இன்னும் இரு எயர் லங்கா விமானங்கள், ஒன்று இலண்டன் கட்விக் விமான நிலையம் நோக்கியும் மற்றையது பரீஸ் நோகியும் புறப்பட ஆயத்தமாக பொதிகளை ஏற்றியபடி நிற்கும். பரீஸ் நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:30 மணிக்கும், இங்கிலாந்து நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:50 கிளம்புவதும் வழமை. விமான நிலையத்துடன் விமானங்களை இணைக்கும் தொடர்புப் பகுதியில் மூன்று விமானங்களும் அருகருகே நிற்கும் நேரமான இரவு 11:00 மணிக்குக் குண்டுகளை வெடிக்கவைப்பதே மகேஸ்வரனின் திட்டம். மேலதிகமாக சிங்கப்பூர் எயர்லைன் விமானம் ஒன்றும் அதேவேளையில் விமானநிலையத்தில் தரித்து நிற்கும். மகேஸ்வரனின் திட்டத்தின்படி குண்டு வெடித்திருந்தால் மூன்று எயர்லங்கா விமானங்களும், சிங்கப்பூர் விமானமும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முற்றாகச் சேதமடைந்திருக்கும். ஆனால், துரதிஸ்ட்டவ்சமாக இரவு 10:52 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திலேயே குண்டு வெடித்துவிட்டது. கதிரேசன் எனும் பெயரிலேயே மகேஸ்வரன் விமானச் சீட்டினைக் கொள்வனவு செய்திருந்தார். இரவு 8:10 மணிக்கு எயர்லங்கா காரியாலயத்தில் விமானத்தில் தான் பயணிப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். விமானநிலையச் சிப்பந்தி லோகநாதன் சூட்கேஸுகள் இரண்டையும் சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றார். விக்னேஸ்வரராஜா இதற்கான ஒழுங்குகளை ஏற்கனவே செய்துவைத்திருந்தார். சுமார் 35 கிலோகிராம் கூடிய நிறையினை அவை கொண்டிருந்தமையினால் மகேஸ்வரன் 300 இந்திய ரூபாய்களை கட்டணமாகச் செலுத்தியிருந்தார். விமானத்தில் ஏற்றுவதற்காகப் பொதிகள் வைக்கப்படும் பகுதிக்கு தனது சூட்கேஸுகள் சென்றடைந்ததும் பனாகொடை மகேஸ்வரன் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றுவிட்டார். விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் விஜயகுமார் தனது பங்கைச் செய்யத் தொடங்கினார். கொழும்பிற்குக் கொண்டுசெல்வதற்காகவென்று அட்டைகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இரு சூட்கெசுகளையும் ஒன்று இங்கிலாந்திற்கும், மற்றையதை பரீசிற்கும் என்று மாற்றி புதிய‌ அட்டைகளை அவற்றில் மாட்டிவிட்டார். கட்டுநாயக்கவில் இருந்து இவ்விரு நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இவ்விரு சூட்கேஸுகளும் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தவே அவர் இதனைச் செய்தார். பொதிகள் விமானத்தில் ஏற்றப்பட ஆயத்தமாக இருந்தபோதிலும், மகேஸ்வரன் விமான நிலையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறவில்லை. மக்களோடு மக்களாக நின்றுகொண்ட அவர், நடப்பவற்றை அவதானிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த சூட்கேஸுகள் விமானங்கள் ஏற்றப்படவில்லை. பொதிகள் வைக்கப்படும் பகுதியிலேயே அவை கிடந்தன. பின்னர் விமான நிலைய ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு அவரை தூக்கிவாரிப்போட்டது. "பயணிகளின் கவனத்திற்கு, கொழும்பிற்குப் பயணமாகும் கதிரேஸன் அவர்கள் தனது பொதிகளை அடையாளம் காட்டுமாறு வேண்டப்படுகிறார்" என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பினை விமான நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், மகேஸ்வரன் தன்னை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து, இவ்விரு பொதிகளையும் ஏற்றாமலே விமானம் கொழும்பு நோக்கிப் பறக்க ஆரம்பித்த‌து. பின்னர், இவ்விரு சூட்கேஸுகளும் சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த எயர்லங்கா அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. இவர் கடத்தல்க்காரர்களின் பொருட்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த சுங்க இலாகாவினர் அவற்றினை இடதுபக்கத்தில் அமைந்திருந்த சுங்க அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இப்பகுதிக்கு மிக அருகிலேயே வெளிநாட்டுப் பயணிகள் இடைத்தங்கல் பகுதி இருந்தது. இலங்கையிலிருந்து மும்பாயிக்குச் செல்வதற்காக வந்திருந்த இலங்கைப் பெண்கள் பலர் இப்பகுதியில் தமது அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தனர். மும்பாயிலிருந்து அபுதாபி நோக்கிச் செல்வதே அவர்களது நோக்கம். நடக்கப்போகும் விபரீதம் மகேஸ்வரனுக்கு நன்கு புரிந்தது. பதற்றமடைந்த அவர், கிண்டியில் வசித்துவரும் தன் நண்பரிடம் சென்றார். அங்கிருந்து விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அங்கிருக்கும் இரு பொதிகளையும் உடனேயே அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவற்றிற்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர் தம்முடன் விளையாட்டாகப் பேசுவதாக அதிகாரிகள் நினைத்து, தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டனர். ஆனால் மகேஸ்வரன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இம்முறையும் நிலைமையின் தீவிரத்தை உணரத் தவறிய அதிகாரிகள், கடத்தல்க்காரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பாவிப்பதாக நினைத்து தமக்குள் விவாதப்பட ஆரம்பித்தனர். ஆனால், மகேஸ்வரன், அவர்களை மூன்றாவது தடவையும் அழைத்தபோது அவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இரு அதிகாரிகள் அப்பொதிகளை விமான நிலையத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல எத்தனித்தனர். அப்போது குண்டு வெடித்தது. நேரம் சரியாக இரவு 10:52 மணி. அக்குண்டு வெடிப்பு கடுமையான சேதத்தினை ஏற்படுத்தியது. 33 மக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 27 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பெண் ஒருவரின் தலை தனியே துண்டிக்கப்பட்டு விமான நிலையத்தின் கூரையின் இடுக்கில் சென்று மாட்டிக்கொண்டது. பயணிகள் வந்திறங்கும் பகுதியின் மொத்தக் கூரையுமே இடிந்து வீழ்ந்தது. அப்பகுதியில் காத்துநின்றவர்களை நசுக்கியவாறே அப்பாரிய கூரை நிலம்நோக்கி இடிந்து வீழ்ந்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் 24 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு கடுமையாகச் சேதமடைந்திருந்தன. 18 பெண்களும், 6 ஆன்களுமாக மொத்தம் 24 பேர். கொல்லப்பட்டவர்களுள் இருவர் சுங்க இலாகா அதிகாரிகள். குண்டுவெடித்த செய்தி அன்றிரவே கொழும்பை வந்தடைந்தது. ஜெயார்ர், அதுலத் முதலி மற்றும் அவர்களின் பிரச்சார இயந்திரம் என்று அனைவருமே துரித கதியில் இயங்கத் தொடங்கினார்கள். நடந்த அநர்த்தத்தினை தமது பிரச்சாரத்திற்கான துரும்பாக பாவிக்க அவர்கள் எண்ணினார்கள். இந்தியாவை தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க முயன்றார்கள். இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்கள் அமைத்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கிவருவது தொடர்பாக இலங்கையின் புலநாய்வுத்துறை அதுவரை காலமும் சேகரித்து வந்த விபரங்களைத் இதற்காக அவர்கள் பாவித்தார்கள். பல கொழும்புப் பத்திரிக்கைகள் நடைபெற்ற அநர்த்தத்தினை இந்தியாவின் தலையிலேயே சுமத்தின. "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள், இன்று அதனாலேயே தாக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று பல பத்திரிக்கைகள் இந்தியாவிற்குச் சுட்டிக் காட்டுவதுபோல ஆசிரியர்த் தலையங்களை வெளியிட்டு மகிழ்ந்தன. நடத்தப்பட்ட அநர்த்தத்தினை சுட்டிக்காட்டி இந்திராவுக்கு இரங்கல்க் கடிதம் ஒன்றினை ஜெயார் அனுப்பினார். அக்கடிதத்தில் இந்தியாவைச் சீண்டும் விதமாக பின்வருமாறு எழுதினார். "இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இரங்கும் அதேவேளை, ஜனநாயக விழுமியங்களைக் கடைக்கொண்டும், ஜனநாயகவழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகளையும் கொண்ட அனைவரும் உலகின் ஜனநாயக விழுமியங்களையும் மனிதநாகரீகத்தின் அடிப்படைகளையும் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டிநிற்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதை இக்குண்டுவெடிப்பு காட்டி நிற்கிறது" . இதற்குப் பதிலளித்த இந்திரா, "இக்குண்டுவெடிப்பினை உங்களைப் போல் நானும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்திசுயாதீனமற்ற இவ்வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கு இரு அரசாங்கங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதனால் மிகவும் கோபமடைந்தார். "குரூர மனம் படைத்தவர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவம்" என்று அவர் இதனைக் கண்டித்தார். எந்தவொரு அமைப்புமே இதற்கு உரிமைகோர முன்வரவில்லை. இக்குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அவமானத்தையடுத்து இதனை அடக்கிவாசிக்க இந்தியாவும் போராளி அமைப்புக்களும் முயன்றன. ஆகவே, இக்குண்டுவெடிப்பு இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் கைவண்ணம் என்று அவர் குற்றஞ்சாட்டின. ஆனால் தமிழ்நாடு பொலீஸ் தன் கடமையைச் செய்தது. மகேஸ்வரன் தங்கியிருந்த நீலாங்கரை வீட்டைச் சோதனையிட்ட பொலீஸார் அங்கிருந்து வெடித்த குண்டினை ஒத்த இன்னொரு குண்டிணை மீட்டனர். மகேஸ்வரனைக் கைதுசெய்ததோடு பின்னர் விக்னேஸ்வர ராஜா, தம்பிராஜா ஆகியோரையும் இன்னும் ஏழு தமிழ்நாட்டுத் தமிழர்களையும் கைதுசெய்தனர். 1985 ஆம் ஆண்டு அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று இலங்கையர்களான மகேஸ்வரன், தம்பிராஜா மற்றும் விக்னேஸ்வர ராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட ஏனைய அனைவருக்கும் ஆயுள்த்தண்டனை வழங்கப்பட்டது. பிணையில் வந்த மூன்று இலங்கைத் தமிழர்களும் பின்னாட்களில் பிணையினை முறித்துத் தப்பிச் சென்றனர். பெங்களூருக்குத் தப்பிச்சென்று மறைந்துவாழ்ந்த மகேஸ்வரன் 1998 ஆம் ஆண்டு மீண்டும் கைதானார். அவரதும், அவரது இயக்கமான தமிழ் ஈழ இராணுவத்தினதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பங்களிப்பென்பது மிகவும் சொற்பமானது. அவரது திறமையும், முயற்சியும் வீணாக்கப்பட்டுப்போனது. மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பிலிருந்து அதியுச்ச பிரச்சார பெறுபேற்றினை பெற்றுவிட ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் முயன்றனர். ஆனால் இந்த பிரச்சார உத்திகள் அதிக காலம் நிலைக்கவில்லை. அடுத்துவந்த சில நாட்கள் நிலைமையினை மாற்றிப்போட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆவணிமாதம் தமிழர் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த மாதத்திலேயே பிரபாகரன் தனது அமைப்பின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஒன்றினைச் செய்வதாக அறிவித்தார். இனிமேல் தனது அமைப்பு தாக்கிவிட்டு ஒழியும் உத்தியினைக் கடைப்பிடிக்காது என்றும், நிலையான கெரில்லா தாக்குதல் உத்தியினைக் கைக்கொள்ளும் என்றும் கூறினார். "நாங்கள் தாக்கிவிட்டு மறையும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து நிலையான கெரில்லா தாக்குதல் பாணிக்கு மாறவிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
  3. புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும் நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார். அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர். புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற‌ கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர். அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார். மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார். ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
  4. திருப்பித் தாக்குதலின் ஆரம்பம் தம்மீதான தாக்குதல்களுக்குத் தமிழர்கள் பதிலளிக்க ஆரம்பித்தது 1984 ஆம் ஆண்டின் வைகாசியில் நடந்தது. பொலீஸ் புலநாய்வாளர்கள் சிலரைக் கொல்வதுடன் இது ஆரம்பமாகியது. வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் புலநாய்வாளர் சார்ஜண்ட் நவரட்ணம் இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் புலநாய்வு செய்துவந்தார். இரு நாட்களுக்குப் பின்னர் பொலீஸ் கொன்ஸ்டபிள் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். சீலனின் மறைவிடம் குறித்த தகவல்களை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இவரே. பிரபாகரனின் துணைத் தளபதியாக சீலன் செயற்பட்டுவந்தார். இராணுவத்தினரிடம் அகப்படப் போகும் நிலையில் தன்னைச் சுடும்படி தனது தோழர்களிடம் வற்புறுத்தி மரணமுற்றிருந்தார். சீலனின் துணிவை பிரபாகரன் மெச்சினார், அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிட்டார். "திருப்பித் தாக்கும்" நடவடிக்கைகள் ஆனியில் இன்னும் வேகம் பெற்றன. இராணுவம் மற்றும் பொலீஸார் மீதான தாக்குதல்கள், சமூக விரோதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள், உளவாளிகளை களையெடுத்தல், ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றுதல் ஆகிய வடிவங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்த மாதத்திலேயே இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு, லலித் அதுலத் முதலி மீது காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டடத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முயற்சி என்பன இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவங்களை முக்கியமானவையாகக் கருதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சின் செயலாளரான டக்கிளஸ் லியனகேயயை உடனடியாக விசேட பத்திரிக்கை மாநாடொன்றினைக் கூட்டுமாறு கோரியது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் இயங்கிவந்த இலங்கை வங்கிக் கிளையின் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வைகாசி 31 ஆம் திகதி டொயோடா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆயுதம் தரித்த நான்கு இளைஞர்கள் சீமேந்துப் பைகளைக் கொள்வனவு செய்யப்போவதாக பாசாங்குசெய்துகொண்டே காசாளரின் அறைக்குள் நுழைந்தனர். காசோலையொன்றினைக் காசாக்குவது போல அவர் அருகில் சென்று அவரது நெஞ்சுப் பகுதியில், ஆயுதத்தை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனம் அவ்விடத்திற்கருகில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதே நாள் இரவு, உடுவிலைச் சேர்ந்த ராமலிங்கம் பாலசிங்கம் என்பவர் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் கிடந்த காகிதத் துண்டொன்றில் "இவர் ஒரு சமூக விரோதி" என்று எழுதப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த‌ செய்தியொன்றினை வெளியிட்ட டெயிலி நியூஸ் பத்திரிக்கை 4 இலிருந்து 5 வாரங்களில் நிகழ்த்தப்பட்ட 30 ஆவது மின்கம்பத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மறுநாளான ஆனி 1 ஆம் திகதி கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சென்ற இரு ஆயுதம் தரித்த இளைஞர்கள் அங்கிருந்த 75,000 ரூபாய்கள் பணம் மற்றும் பருவகாலச் சீட்டுக்களை எடுத்துச் சென்றனர். ஆனி 2 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குச் சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த 25,000 ரூபாய்கள் பணத்தினை எடுத்துச் சென்றனர். இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு மற்றையவர்கள் இவ்வாறான சிறிய கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதனூடாக ஜெயவர்த்தனவுக்கும் அவரது இராணுவத்திற்கும் தலையிடியினை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை தனது நன்றிக்கடன் ஒன்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் அவர் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலையினை இரண்டாவது முறை உடைத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நிர்மலா நித்தியானந்தனை மீட்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டு, புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சிறையுடைப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பெண்கைதிகளின் கட்டடத்தில் தடுத்து வைக்கப்படிருந்தார். தந்தை செல்வாவின் சாரதியான வாமதேவனிடம் நிர்மலாவை பத்திரமாக வெளியே அழைத்துவரும் பணி அன்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாமதேவனோ அவசரத்தில் அதனை மறந்துவிட்டு, தனியாகத் தப்பி வந்திருந்தார். நிர்மலாவின் கணவரான நித்தியானந்தன் முதலாவது சிறையுடைப்பில் தப்பி வெளியேறி, சென்னைக்கு வந்து புலிகளுடன் இணைந்திருந்தார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையான "விடுதலைப் புலிகள்" இற்கு ஆசிரியராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பல்க்லைக்கழகத்தில் பொருளியற்றுரை விரிவுரையாளராக இணைந்துகொள்வதற்கு முன்னர் அவர் தினகரன் தமிழ்ப் பத்திரிக்கையின் நிருபராகச் செயற்பட்டு வந்தார். நித்தியானந்தன் தம்பதிகளை மீள ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். நிர்மலாவுக்கு அவர் மிகவும் கடமைப்பட்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு உதவியது, அடைக்கலம் கொடுத்தது, ஊக்கம் அளித்தது, தகவல்களை மறைத்தது உட்பட பல குற்றங்களுக்காக நிர்மலா நித்தியானந்தன் 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக இராணுவ அதிகாரி சரத் முனசிங்கவினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டுப் படுகாயமடைந்தவரும், பிரபாகரனின் நெருங்கிய தோழருமான சீலனுக்கு தனது இல்லத்தில் வைத்து சிகிச்சையளித்தமையே அவர் செய்த குற்றமாகும். ஆகவே, இதற்கான பிரதியுபகாரமாக எப்படுபட்டவாது நிர்மலாவை சிறையிலிருந்து மீட்பதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனியின் மூன்றாவது வாரத்திற்குள் நிர்மலாவை மீட்கவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்தது. நிர்மலாவுக்கெதிரான வழக்கு ஆனி மாத்தத்தின் மூன்றாம் வாரத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை கொழும்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஆகவே, முதலாவது சிறையுடைப்பில் செயற்பட்ட பரமதேவை இம்முறையும் தன்னுடன் செயற்படுமாறு பிரபாகரன் பணித்தார். முதலாவது சிறையுடப்பு நிகழ்ந்தபோது பரமதேவா புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனாலும், முதலாவது சிறையுடைப்பில் தப்பிச் சென்ற புலிகளுக்கு ஆதரவானவர்களான நித்தியானந்தன், மதகுரு சிங்கராயர், மதகுரு சின்னராசா, ஜயகுலராஜா மற்றும் ஜயதிலகராஜா ஆகிய அணியினருடன் இவரும் ஒன்றாகவே தப்பிச் சென்றிருந்தார். சென்னைக்குச் சென்றவுடன் அவரும் புலிகளுடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ராமலிங்கம் பரமதேவாவும் ஒருவர். 1975 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவிருந்த குடியரசு தினத்திற்கான கொடியேற்றலினைப் பகிஷ்கரித்து, அந்நாளினை கரிநாளாகவும், இரங்கல் நாளாகவும் கடைப்பிடிக்குமாறு தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி கோரியபோது பரமதேவா ஒரு மாணவனாக இருந்தார். ஆகவே, தான் கல்விகற்ற பாடசாலையில் கொடியேற்றல் நிகழ்வைப் பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதற்காக பாடசாலையிலிருந்து அவர் நிர்வாகத்தினரால் விலக்கப்பட்டார். வன்முறையற்ற, ஜனநாயகவழிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட எத்தனித்த பரமதேவாவை அதிகாரம் வெளியே தள்ளியபோது, அவர் வன்முறையுடன் கூடிய பகிஷ்கரிப்பினைச் செய்யத் திட்டமிட்டார். இருவருடங்களுக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு அவர் குண்டுத் தாக்குதல் ஒன்றினை முன்னின்று நடத்தினார். இதனையடுத்து அவரை பொலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தலைமறைவான பரமதேவா மட்டக்களப்பின் முதலாவது ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலை நாகங்கள் என்றும் பின்னாட்களில் நாகங்கள் என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டார்கள். இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கியது. நாகங்கள், குண்டெறிதல், கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டு பரமதேவாவும் அவரது தோழர்களும் செங்கலடியில் அமைந்திருந்த மக்கள் வங்கிக் கிளையினைக் கொள்ளையிட்டார்கள். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பரமதேவாவைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பொதுவீதியில் கட்டிப் புரண்டனர். இரண்டாவது பொலீஸ்காரர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் அவரது வலதுகரத்தைத் துளைத்துச் சென்றன. கைதுசெய்யப்பட்ட பரமதேவா 1981 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய பரமதேவா மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே அவர் தப்பிச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிர்மலாவை சிறையிலிருந்து மீட்டுவரும் பிரபாகரனின் திட்டத்திற்கு பரமதேவா பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி பரமதேவாவும் அவரது சகாக்களும் இரு வாகனங்களில் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்களுள் இருவர் சிறைக்காவலர்கள் அணியும் சீருடையில் இருந்தனர். இன்னுமொருவர் கைதிகள் அணியும் ஆடையினை அணிந்திருந்தார். மீதிப்பேர் இராணுவச் சீருடையில் இருந்தனர். மாலை 7:15 மணியளவில் அவர்கள் சிறைச்சாலையினை அடைந்தார்கள். சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலில் காவலாளிகளின் சீருடையில் இருந்தவர்கள் தட்டினர். கொழும்பிலிருந்து கைதியொருவரைத் தாம் கொண்டுவந்திருப்பதாகவும், அவரை உள்வாங்கிக்கொள்வதற்காக கதவினைத் திறக்குமாறும் கோரினர். இதனையடுத்து உள்ளிருந்த காவலாளிகள் கதவினைத் திறக்க, சீருடையில் இருந்த புலிகளும், கைதிபோன்று காட்சியளித்த உறுப்பினரும் உள்ளே நுழைந்தனர். நடப்பதுபற்றிச் சந்தேகம் கொண்ட சிறைக் காவலாளி ஒருவர் உடனேயே வாயிற்கதவினைப் பூட்டினார். ஆனால், புலிகள் உள்ளேயிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டனர். சிறையறைகளின் திறப்புக்களை வைத்திருக்கும் காவலாளியைப் புலிகள் தேடியபோது, அவர் ஓடி ஒளித்துக்கொண்டார். ஆகவே உள்ளிருந்த இரண்டாவது கதவினை உடைத்துக்கொண்டு பெண்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி புலிகள் ஓடிச் சென்றனர். இவர்களுக்காகக் காத்திருந்த நிர்மலாவும், இவர்கள் ஓடிவருவதைக் கண்டதும், "நான் இங்கிருக்கிறேன்" என்று கூச்சலிட்டார். அவரது சிறைக்கதவினை உடைத்த புலிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அரசாங்கம் அதிர்ந்துபோனது. ஆறு மாதங்களில் ஒரே சிறைச்சாலை இருமுறை போராளிகளால் உடைக்கப்பட்டிருந்தது. மறுநாள் மாலை, 1984 ஆம் ஆண்டு ஆனி 11 ஆம் திகதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்கிளஸ் லியனகே பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். தப்பிச் சென்றவர்களை மீளக் கைதுசெய்வதற்காக முப்படைகளும் இணைந்த பாரிய தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் தரை மற்றும் கடல்வழி மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் சல்லடை போட்டுத் தேடிவருவதாகவும் கூறினார். ஆனால் அவர்களின் தேடுதல்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இரு வெளியக இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று அதிவிரைவாக நிர்மலாவை தமிழ்நாட்டிற்குக் காவிச் சென்றது. தமது முதலாவது பத்திரிக்கையளர் நிகழ்வில் புலிகள் தாம் பாதுகாப்பாக விடுவித்துக் கொண்டுவந்த நிர்மலாவை பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னையில் காண்பித்தனர். தான் தப்பிவந்த விபரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விபரித்த நிர்மலா, திகில் நிறைந்த கடல்வழிப் பயணம் குறித்தும் பேசத் தவறவில்லை.
  5. ஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர். தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, த‌னியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன். செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது. தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும் கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன. என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார். சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும். தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும் தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர் இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும். ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும் 1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன. அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர். போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன. "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார். பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார். மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர். உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது. ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.
  6. முக்கியமான சர்வதேசக் கடற்பாதையினை முடக்கி, அப்பாதையினூடாக வரும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியும், கடத்தியும் வந்த யெமெனின் ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. சர்வதேச வணிகக் கப்பல்களைத் தாக்குவதன் மூலம் பாலஸ்த்தினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகிறோம், இஸ்ரேலினைத் தாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு பலமுறை இப்பாதையினைப் பயன்படுத்திய சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா வானூர்திகள் மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும், உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கியும் ஈரானின் முழு ஆதரவு பெற்ற ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், "இஸ்ரேலுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களே இவ்வழியால் பயணிக்கின்றன, ஆகவே நாம் தாக்குவோம். எம்மீது அமெரிக்காவோ அல்லது வேறு யாராவதோ தாக்கினால், அவர்கள் மீது நாம் நடத்தும் தாக்குதல் அவர்கள் கனவில் கூட நினைக்க முடியாதளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்" என்று தமது தாக்குதல்களை நடத்திவிட்டு அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. US and UK carry out strikes against Iran-backed Houthis in Yemen | CNN Politics
  7. சர்வகட்சி மாநாட்டினைக் கலைத்துப் போட்ட ஜெயவர்த்தன‌ மார்கழி 26 ஆம் திகதி அமைச்சரவையில் பேசிய ஜெயார், தான் முன்வைத்த பரிந்துரைகளை முற்றாகக் கைவிடுவதாகவும், சர்வகட்சி மாநாட்டினைக் கலைக்கப்போவதாகவும் அறிவித்தார். சர்வக‌ட்சி மாநாட்டின் பேச்சாளரான அதுலத் முதலி இதனை அமைச்சரவை முடிவென்று அனைவருக்கும் அறிவிக்குமாறு ஜெயாரினால் பணிக்கப்பட்டார். அன்று மாலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த லலித்தும், ஜெயார் தன்னைப் பணித்தவாறே "இது அமைச்சரவையின் முடிவு" என்று கூறினார். மேலும், அரச அறிவிப்பொன்றையும் அன்றைய தினம் வெளியிட்டார், "சர்வகட்சி மாநாட்டின் பெரும்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள், மார்கழி 19 ஆம் திகதி அமைச்சரவையின் முன்னால் கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்பட்டிருந்தன. மீண்டும் அவை மார்கழி 26 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, மார்கழி 21 வரை அரச பிரதிநிதிகள் முன்வைத்த அரசாளும் பொறிமுறை மற்றும் அதிகாரப் பரவாலாக்கம் குறித்து தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்துவிட்டு தற்போது அவைகுறித்துப் பேசுவதில் பயனேதும் இல்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி திடீரென்று அறிவித்திருக்கிறது. ஆகவே, இக்கலந்துரையாடல்கள் மூலம் உருப்படியான தீர்வொன்றும் கிடைக்கப்பெறாது என்கிற முடிவிற்கு அமைச்சரவையும் வந்திருக்கிறது. மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினைத் தொடர்ந்தும் தேடும் அதேவேளை, பயங்கரவாதத்தினை இந்நாட்டிலிருந்து முற்றாக அழிக்க தேவையான அனைத்தையும் செய்யும்படி அமைச்சரவை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது" என்று லலித் வெளியிட்ட அறிக்கை கூறியது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வில் முற்றாக இறங்கிய ஜெயார் தனது இராணுவத்தைக் கட்டியெழுப்ப ஜெயாருக்குத் தேவைப்பட்ட ஒருவருட காலத்தினை எதுவித பயனுமற்ற சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி, அதனை ஒருவருட காலத்திற்கு அலைக்கழித்து, ஈற்றில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது முடித்துவைத்ததன் மூலம் ஜெயார் பெற்றுக்கொண்டார். இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின்னர், இந்தியாவால் தன்மீது பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தம் ஏறக்குறைய முற்றாகத் தளர்ந்துவிட்டிருந்த நிலையில், முழுமூச்சூடன் பயங்கரவாதத்தினை அழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார் ஜெயார். அன்றிரவே ஜெயாரின் இராணுவ ரீதியிலான தீர்வுக்கான முதற்படி எடுத்துவைக்கப்பட்டது. கொழும்பில் வசித்துவந்த சுமார் நான்காயிரம் தமிழ் இளைஞர்கள் அன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார்கள். நான்கு நாட்களுக்குப் பின்னர், மார்கழி 30 ஆம் திகதி தேசியப் பாதுகாப்பு அமைச்சரான லலித் அதுலத் முதலி வடக்கில் கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். வன்முறையற்ற வழியில் மீண்டும் போராடப்போவதாக தமிழ்நாட்டில் அறிவித்த அமிர் மனமுடைந்த மனிதராக அமிர்தலிங்கம் சென்னை திரும்பினார். ஆனாலும், தமிழ் மக்களால் கைவிடப்பட்ட அகிம்சை வழிப் போராட்டத்தை அவர் அப்போதுகூடக் கைவிட விரும்பவில்லை. தமிழ்நாடு, கரூரில் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அமிர்தலிங்கம் தனது கட்சி வெகுவிரைவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கவிருப்பதாகக் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பத்திரிக்கையான சுதந்திரனின் முன்னாள் ஆசிரியர், அமிர்தலிங்கத்தின் பேச்சினை கேலி செய்தார். மாதாந்தப் பத்திரிக்கையான "வீர வேங்கையில்" அவர் பின்வருமாறு எழுதினார், "அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இவ்வளவு காலமும் ஜெயவர்த்தனவுடன் பேசிய அமிர்தலிங்கம் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது சர்வகட்சி மாநாடு தோல்வியடைந்ததையடுத்து சத்தியாக்கிரகப் போராட்டம் பற்றிப் பேசுகிறார்". "இவ்வகையான சத்தியாக்கிரக போராட்டங்களை நம் பலமுறை பார்த்தாயிற்று. அவர்கள் ஒரு ஆலய முன்றலில் அமர்ந்துகொள்ள, மங்கையட்கரசி அமிர்தலிங்கம் பாடல்களைப் பாடுவார். மாலையில் பழச்சாற்றினை அருந்துவிட்டு தமது சத்தியாக்கிரகத்தை அவர்கள் முடித்துக்கொள்வார்கள். இது ஜெயவர்த்தனவின் செயற்பாட்டில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை" "ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்கள் கடந்த ஆவணியில் இருந்து ஜெயாரின் அரசின் மீது அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர். ஜெயவர்த்தன, வன்முறையற்ற அகிம்சா வழிப் போராட்டங்கள் கேலிக்கூத்தானவை என்பதை அமிர்தலிங்கத்திற்கு நன்கு விளக்கியிருக்கிறார்" என்று எழுதினார். ஜெயார் படைக்க விரும்பிய சரித்திரம் 1977 ஆம் ஆண்டு ஆட்சியில் ஏறியபோது ஜெயவர்த்தனவுக்கு இருந்த ஒற்றை நோக்கம் தான் சரித்திரம் படைக்கவேண்டும் என்பதுதான். ஆகையால், டெயிலிநியூஸ் பத்திரிகைக்கு அவர் கொடுத்த ஆணையின்படி அவரது பேச்சுக்கள் அனைத்தும் முழுவதுமாக, அவர் பேசிய விதத்தில் பிரசுரமாகியிருந்தன. அவை வரலாற்று ஆவணங்கள் என்று அவர் கூறிக்கொண்டார். ஆனால், இலங்கைக்கு அவர் வழங்கிய ஒற்றைச் சரித்திரம் : ஒரு சமூகம் தனது உரிமைகளுக்காக வன்முறையற்ற வழியில் போராட முடியாது என்பதுதான் !
  8. மாகாணசபை முறைமையினை வைத்து அரசியல் சித்துவிளையாட்டில் இறங்கிய ஜெயவர்த்தன‌ ஜெயவர்த்தன முன்வைத்த பரிந்துரைகள், இப்பரிந்துரைகள் மூலம் அவர் அடைய எத்தனிக்கும் இலக்குகள், அவற்றிற்கான காரணங்கள் என்பவற்றை சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரான அதுலத் முதலி உறுப்பினர்களுக்கு விளக்கினார். மேலும், ஜெயாரினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் சட்டமாக்கப்படுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுமுன்னர் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் மறுநாள் பேசிய பிரேமதாச ஜெயாரின் பரிந்துரைகளை மக்களுக்கு விளங்கப்படுத்தினார். மேலும், இப்பரிந்துரைகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியனவா இல்லையே என்பதை பொதுமக்கள் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் அரசிற்கு அறியத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரேமதாசவைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஜெயார், மாகாண சபைகள் முறையும், இரண்டாவது சபையும் சமஷ்ட்டி முறைமையினை அரசியல் அமைப்பிற்குள் கொண்டுவராது என்றும், இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏதும் ஏற்படப்போவதில்லையென்றும் கூறினார். தன்னால் முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகள் முறைமையானது மாவட்ட சபைகளைக் காட்டிலும் சற்று அதிகமான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறதென்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கொள்கையினைக் கைவிடச் செய்ய மாகாணசபை முறைமையினை தான் முன்வைக்கவேண்டியதாயிற்று என்றும் பேசினார். தமிழர்களுக்கு சிறிதளவேனும் அதிகாரங்கள் பகிரப்படுவதை மீண்டும் ஒருமுறை எதிர்த்த பெளத்த மாகா சங்கம் தமிழர்களுக்கு, மாவட்ட சபைகளைத் தாண்டி சிறிதளவேனும் அதிகாரங்கள் பகிரப்படுவதை பெளத்த மகாசங்கம் முற்றாக எதிர்த்தது. பெளத்த அடிப்படைவாத மதகுருவும், சிங்கள அரசியலில் பெருமளவு செல்வாக்கைச் செலுத்திவந்தவருமான மதிகே பண்ணசீக தேரை எனும் பிக்கு, சிறி-ஜயவர்த்தனபுர‌ பகுதியில் அமைந்திருக்கும் நாகவிகாரையில் அனைத்து பெளத்த பீடங்களினதும் பிக்குகளை அழைத்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். அங்கு பேசிய பண்ணசீக தேரை, ஜெயாரினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மாகாணசபை முறைமை நாட்டின் அரசியலமைப்பிற்கும், பெளத்த மதத்திற்கும், சிங்கள இனத்திற்கும், மொத்த நாட்டிற்கும் கடுமையான ஆபத்தினை ஏற்படுத்தப் போவதாகக் கூறி, இதனைத் தடுத்து நிறுத்த பெளத்த பிக்குகள் அனைவரும் சத்தியாக்கிரக நிகழ்வொன்றில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த ஜெயார் எதிர்ப்புத் தரப்பினரும் மாகாணசபை முறைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினர். முன்னணியில் இருந்த மிதவாதிகளும், தீவிரவாதிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல்க் குழு கொழும்பில் கூடி ஜெயவர்த்தன பரிந்துரை செய்திருக்கும் ஆலோசனைகள் பற்றி விவாதித்தது. சிவசிதம்பரமும், கட்சியில் இருந்த ஏனைய தீவிரவாத கருத்துக்கொண்டோரும் மாகாணசபை முறைமை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை அல்ல என்று கூறி, இந்த பரிந்துரைகளை கட்சி நிராகரிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அமிர்தலிங்கம் உட்பட கட்சியில் இருந்த மிதவாதிகள், ஜெயார் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் திருப்திகரமானவையாக இல்லாவிட்டாலும் கூட அவற்றினை நிராகரிக்கக் கூடாது என்று வாதிட்டனர். இப்பரிந்துரைகளை நிராகரிப்பதன்மூலம் எதிர்காலப் பேரம்பேசலுக்கான கதவுகளை முற்றாகவே அடைத்ததாகப் போய்விடும் என்றும் அவர்கள் தர்க்கித்தனர். மேலும், இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் அவற்றினை மெருகூட்ட ஜெயாருடன் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், முன்னணியினரின் மிதவாதிகள் குழாம் கொண்டிருந்த நம்பிக்கைகள் எல்லாம் சர்வகட்சி மாநாடு மீண்டு மார்கழி 21 ஆம் திகதி கூடியபோது தவிடுபொடியாகியது. கட்சிகளின் பிரதிநிகளிடம் பேசிய ஜெயார், தான் முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பான தத்தமது கருத்துக்களை எழுத்து வடிவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தனது பரிந்துரைகளை கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று பெளத்த மகாசங்கத்தினரை அவர் கோரினார். இப்பரிந்துரைகளுக்கு ஆதரவுகோரி சர்வஜன வாக்கெடுப்பையோ அல்லது தேர்தல் ஒன்றையோ நடத்த அரசு திட்டமிடுவதாகக் கூறியதோடு, இதுவரையில் நடைபெற்ற சர்வகட்சி அமர்வுகளூடாகக் கிடைக்கப்பெற்ற முடிவுகளைக் கொண்டு நாட்டிற்கு அமைதியையும், ஸ்திரத்தன்மையினையும், ஒற்றுமையினையும் கொண்டுவர முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். பின்னர் பிறிதொரு நாளுக்கு மாநாட்டினை அவர் ஒத்திவைத்தார். மாநாடு பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுவதை அமிர்தலிங்கம் எதிர்த்தார். பரிந்துரைகள் குறித்து தான் அறிக்கையொன்றினை வெளியிட அனுமதி தருமாறு கோரினார். ஆனால், அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது. தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஜெயார் வெளியேறிச் சென்றார். இது முன்னணியினரைப் பாதித்தது. அன்றிரவு முன்னணியின் அரசியற்குழு மீண்டும் கூடியது. ஜெயார் மீது நம்பிக்கை வைத்ததற்காக அமிர்தலிஙம் மீது கடுமையான விமர்சனங்களை தீவிரவாத எண்ணங்கொண்ட குழாமினர் முன்வைத்தனர். மேலும், கொழும்பில் தமிழர்கள் மீது கடுமையான கெடுபிடிகளை நடத்த இராணுவம் தயாராகி வருவதாகவும் கூட்டத்தில் அறிவித்தனர். மார்கழி 22 ஆம் திகதி இரண்டு பக்கம் கொண்ட தனது அறிக்கையினை அமிர்தலிங்கம் வெளியிட்டார். அவரது அறிக்கையின் இறுதிப்பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது, ".........சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மிகக் கவனமாகப் படித்தபின்பு, இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் எனும் ஆலோசனையினை விட மிகவும் குறுகிய அதிகாரங்களையே அது கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் 1980 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் முறையினை ஏற்றுக்கொண்டோம். அது தனிநாட்டிற்கு நிகரான தீர்வு இல்லையென்று நன்கு தெரிந்தும் நாம் அதனை ஏற்றுக்கொள்ள முன்வந்திருந்தோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிமா தனது ஐந்து பக்க அறிக்கையில் இப்பரிந்துரைகளை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டிருந்தார். "இந்நாட்டு மக்கள் ஜெயாரின் பரிந்துரைகளை முற்றாகவும், முழுமையாகவும் நிராகரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என்று கூறினார். சிறில் மத்தியூவை அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயவர்த்தன‌ கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியு, "வணக்கத்திற்குரிய மதகுருக்களே, மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களே, எனது நண்பர்களே..." என்று ஆரம்பித்து கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ஜெயார் முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும்படி எவரையும் தன்னால் கேட்டுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும், அரசாங்கம் இப்பரிந்துரைகளை முற்றாகக் கைவிட்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தனது அமைச்சரவையிலிருந்து சிறில் மத்தியூவை ஜெயார் உடனடியாக நீக்கினார். அமைச்சரவை கடப்பாடுகளை மீறிவிட்டார் என்று சிறில் மத்தியூ மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை நீக்கியதற்காக எவருமே வாய்திறக்கவில்லை. சிறில் மத்தியூ அனைவரினதும் எண்ணங்களில் இருந்து மறைந்துபோனார். அவரது பதவிநீக்கமும், முற்றான அகற்றலும் கூறிய விடயம் யாதெனில், அன்று ஜெயாரே சர்வ வல்லமை பொறுந்திய தனி மனிதராக அரசாங்கத்தில் இருந்தார் என்பதுதான். மற்றையவர்கள் எல்லோரும், குறிப்பாக சிறில் மத்தியூ, காமிணி திசாநாயக்க, லலித் அதுலத் முதலி ஆகிய எல்லோருமே ஜெயாரினால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால், தானே உருவாக்கிய அமைச்சர்களால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக நாட்டையும், சர்வதேசத்தையும் நம்பவைப்பதில் அவர் வெற்றிகண்டார். ஆனால், அது உண்மை கிடையாது. அவர் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான "சூழ்நிலையின் கைதி" கூடக் கிடையாது. ஏனென்றால் அவர் தனக்குத் தேவையான சூழ்நிலைகளை தானே உருவாக்கிக் கொண்டார்.
  9. இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் நடைபெற்றபோது இதே உன்னிக்கிரிஷ்ணன் இந்திய தரப்பால் முன்னெடுக்கப்பட்ட இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும், இதனாலேயே ஒப்பந்தத்தில் தான் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் இலங்கைக்கு அதிக விட்டுக்கொடுப்பினை இந்தியா செய்யவேண்டியதாயிற்று என்றும் ரோ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்திய உபகண்டத்தின் சரித்திரத்தையே மாற்றிப்போட்ட இந்த உளவுச் சதி வெறும் பெண்ணாசையினால் ஏற்பட்டதென்று அவர்கள் கூறுகிறார்கள். பான் அம் விமானச் சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரை வைத்தே உன்னிகிருஷ்ணனை சி.ஐ.ஏ மடக்கியிருக்கிறது. அப்பெண்ணும், உன்னியும் சல்லாபிக்கும் புகைப்படங்களை வைத்தே அவர் மிரட்டப்பட்டு அவரிடமிருந்த தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள், போராளிகளின் எண்ணிக்கை, முகாம்களின் வரைபடங்கள், பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வகைகள் ஆகிய விடயங்களும், இலங்கை தொடர்பான இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்கள் தொடர்பான விடயங்களையும் அமெரிக்கா கண்டறிந்து இலங்கைக்குச் சொல்லியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டின் தமிழ்ப் போராளிகளின் அனைத்துப் பயிற்சிகளுக்கும் இந்த உன்னிகிருஷ்ணனே பொறுப்பாக இருந்திருக்கிறார் என்பது. ஆக, ஒரு இனத்தின் வாழ்தலுக்கான போராட்டத்தை ஒரு தனிமனிதனின் பாலியல் உணர்வு எவ்வளவு தூரத்திற்கு பாதித்திருக்கிறது என்பதற்கு உன்னியும் ஈழத்தமிழர்களும் சாட்சி. இதுகுறித்து இன்னொரு திரியே திறக்கலாம். நேரம் போதாமையினால் விட்டுவிடுகிறேன்.
  10. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19870930-senior-raw-man-arrested-charged-with-spying-for-us-799359-1987-09-29 https://beyondheadlines.in/2014/01/sex-for-secrets-raw-agent-honey-trapped-by-cia-before-rajiv-gandhi-assassination/
  11. ரஜீவ் காந்தியையும், ரொமேஷ் பண்டாரியையும் இலகுவாகக் கையாள நினைத்த ஜெயவர்த்தன அரசு இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளான கார்த்திகை 3 ஆம் திகதியை இலங்கையரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது. இரங்கல்ப் புத்தகத்தில் கையொப்பம் இடுவதற்காக இந்திய தூதுவராலயம் அமைந்திருந்த பகுதியில் சிங்களவர்கள் உட்பட பல பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தமது இறுதி மரியாதையினைச் செலுத்திச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இந்திரா காந்தியின் இறுதி வணக்க நாளை ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒன்றென்று குண்டுகளை வெடிக்க வைத்து போராளிகள் தமது மரியாதையினைச் செலுத்தினர். அந்த நாள் முழுதும் யாழ்க்குடாநாடு குண்டுச் சத்தங்களால் அதிர்ந்துகொண்டிருந்தது. இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகளில் ஜெயவர்த்தனவும் கலந்துகொண்டார். அங்கிருந்தவேளையில் ரஜீவுடனும் சிறிய சந்திப்பொன்றை நிகழ்த்தினார். ரஜீவுடன் பேசும்போது, " இந்தியா தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவும், அதனாலேயே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கோரிக்கைகளை வழங்குவதற்காக தனது அரசாங்கத்தை இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சிங்கள மக்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார். மேலும், இந்தியாவினால் வழங்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உதவிகளைத் தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக புதிய வழிகளில் செயற்படுவதும் அவசியமாகும் என்றும் ரஜீவிடம் நாசுக்காகத் தெரிவித்தார் ஜெயார். ஜெயாரின் வேண்டுகோள்களை அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்த ரஜீவ் அதற்குச் சாதகமான முறையில் செயற்படச் சம்மதம் தெரிவித்தார். ஜெயாருக்குப் பதிலளித்த ரஜீவ், ஜெயார் கேட்டுக்கொண்டத்ற்கேற்ப இலங்கை தொடர்பான இந்தியாவின் மத்தியஸ்த்தத்தில் புதிய வழிமுறையினைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்தார். இதுவரை தமிழருக்குச் சார்பாக செயற்பட்டுவந்த இந்தியாவின் நிலைப்பாடு இனிமேல் பக்கச்சார்பின்றி இருக்கும் என்று கூறிய ரஜீவ் ஜெயவர்த்தன தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் கண்டறிவது அவசியம் என்றும் கூறினார். மேலும், தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யாத எந்தத் தீர்வும் நாட்டினை மேலும் மேலும் பிரச்சினைக்குள் இட்டுச் செல்வதுடன், ஈற்றில் நாடு பிளவுபடுவதற்கும் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, இந்தியா இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எப்போதும் காத்து நிற்கும் என்றும் உறுதியளித்தார். இந்திரா காந்தியின் இறுதிநிகழ்வில் பங்குபற்றிவிட்டு கொழும்பு திரும்பிய ஜெயார் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார். அங்கு பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாய் அமைந்ததாகக் கூறினார்."இளைய பிரதமர் புதிய ஆரம்பம் ஒன்றினை ஏற்படுத்த விரும்புகிறார்" என்று கூறியதுடன் "பிரிவினைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று உறுதியளித்தார்" என்றும் கூறினார். பின்னர் அமைச்சரவையில் பேசும்போது, ரஜீவ் தொடர்பான தனது கணிப்புப் பற்றி அமைச்சர்களுக்கு விளங்கப்படுத்தினார். "ரஜீவ் காந்தியுடன் மேம்பட்ட தொடர்பாடல்களை நாம் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அப்போது கொழும்பில் நிலவிய கணிப்பீடு என்னவெனில், "புதிய பிரதமர் ரஜீவும், அவரது ஆலோசகர் ரொமேஷ் பண்டாரியும் அனுபவம் இல்லாதவர்கள், ஆகவே இவர்கள் இருவரையும் எமக்கேற்றவழியில் கையாள்வது மிக இலகுவானது" என்பதுதான். இந்திராவின் மறைவிற்குப் பின்னர், சர்வகட்சி மாநாட்டினை சூழ்நிலைக்கேற்ப நடத்திச் செல்லவே ஜெயார் நினைத்தார். கார்த்திகை 14 அன்று கூடவிருந்த மாநாட்டினை மார்கழி 14 இற்கு ஒத்திவைத்த அவர், அரசாளும் பொறிமுறை குறித்த அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாநாடு பிற்போடப்படுவதாக அறிவித்தார். மார்கழி 14 இல் அறிக்கையினைச் சமர்ப்பித்த ஜெயார், மாநாட்டினை மீண்டும் மார்கழி 21 இற்கு ஒத்திவைத்ததுடன் அன்றே உறுப்பினர்கள் அறிக்கை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும் கூறினார். அரசாளும் பொறிமுறைக்கான உத்தேச சட்டம் ஐந்து நிலை நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அவையாவன, 1. கிராமோதய மண்டலங்கள் : தன்னார்வ மக்கள் அமைப்புக்களில் இருந்து 4500 கிராமோதய மண்டலங்கள் கிராமங்களில் உருவாக்கப்படும். 2. பிரதேச சபைகள்: இவை தற்போதிருக்கும் உதவி அரசாங்க பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்படும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் 250 சபைகள் பிரதானமாக உள்ளூராட்சி விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தும். 3. மாவட்ட சபைகள் : இவை அபிவிருத்திச் சபைகளைப்போன்று செயற்படும். மாவட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் இவற்றின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும். 25 மாவட்டங்களுக்கும் ஒவ்வொன்றாக உருவாக்கப்படும் இச்சபைகளுக்கான தலைவர்களும், உதவித் தலைவர்களும் அம்மாவட்ட வாக்களர்களாலும், அச்சபையின் உறுப்பினர்களிடையிலான வாக்களிப்புகள் ஊடாகவும் தெரிவுசெய்யப்படுவார்கள். அபிவிருத்திச் சபைகளைக் காட்டில் சற்று அதிகமான, பரந்துபட்ட‌ அதிகாரங்களையும் மாவட்ட சபைகள் கொண்டிருக்கும். 4. மாகாண சபைகள் : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக மாகாண சபைகள் அமையும். மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு அதே மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் இன்னொரு மாவட்ட சபையுடன் அம்மாவட்டங்களில் நடத்தப்படும் வாக்களிப்பின் ஊடாக‌ இணைந்துகொள்ளமுடியும். மாவட்ட சபைகளால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை அந்தந்த மாகாணசபைகள் பயன்படுத்தும். கலைக்கப்படும் மாவட்ட சபைகளில் இருக்கும் சபை உறுப்பினர்கள் மாகாணசபையில் இணைந்துகொள்ள முடியும். 5. மாகாண மற்றும் மாவட்ட அமைச்சர்கள் : பாராளுமன்றத்திற்கான அமைச்சர்களையோ அல்லது இராஜாங்க அமைச்சர்களையோ மாகாண சபை அமைச்சர்களாகவும், மாவட்ட சபை அமைச்சர்களாகவும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். ஒரு குறிப்பிட்ட மாகாண சபையின் ஆதரவினைக் கொண்டிருக்கும் ஒருவரை அந்த மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டிருப்பார். மாவட்டங்களின் சம்மேளனம் சுமார் 75 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டங்களின் சம்மேளனம் எனும் அமைப்பு உருவாக்கப்படும். இவர்களில் ஒவ்வொரு மாவட்ட சபையிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் தலைவரும், உப தலைவருமாக 50 பேர் இருப்பர். மேலும் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இருவர் என்கிற அடிப்படையில் 18 பேரும் (மாவட்ட சபைகளில் சனத்தொகை விகிதாசாரம் சரியான முறையில் பாவிக்கப்படாதுவிடத்து) அம்மாகாணங்களில் இருக்கும் சனத்தொகை அடர்த்திக்கேற்ப இச்சம்மேளனத்தில் இடம்பெறுவர். மீதி 7 பேரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். இந்தச் சம்மேளனத்தின் ஒரே பணி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது மட்டும்தான். பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்படும் எதனையும் நிராகரிக்கும் அதிகாரம் இச்சம்மேளனத்திற்கு இருக்காது. ஆனால், பாராளுமன்றத்தால் சட்டமாக உருவாக்கபடுவனவற்றை அமுல்ப்படுத்தும் அதிகாரமும், அடிப்படை மனிதவுரிமைகள், மொழியுரிமை, பிராந்திய உரிமைகள், தேசிய ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் பாராளுமன்றத்தில் கருத்துக்கூறும் அதிகாரமும் இச்சம்மேளனத்திற்கு வழங்கப்படும். மேலும் மாவட்டங்களுக்கிடையிலான பிணக்குகள், மாகாணங்களுக்கிடையிலான பிணக்குகள், தேசிய ஒற்றுமை, சமூக ‍ பொருளாதார விடயங்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்களை இச்சமேளனத்தினால் உருவாக்க முடியும். இச்சம்மேளனத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் தெரிவுசெய்யப்படவும் இயலும்.
  12. இந்திரா காந்தியின் கொலை புரட்டாதி 30 ஆம் திகதி ஜெயாருடனான தமது சந்திப்பின் பின்னர் தாம் பொறுமையிழந்துவிட்டதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்திராவிடம் தெரிவித்தனர். சர்வகட்சி மாநாட்டிலிருந்து தாம் வெளியேறப் போவதாக பார்த்தசாரதியிடமும் அவர்கள் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த பாரத்தசாரதி, நடக்கும் விடயங்கள் குறித்து இந்திரா காந்தி நன்கு அறிந்துவைத்திருப்பதாகவும் இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் உகந்த ஏனைய வழிமுறைகள் குறித்து அவர் கவனமெடுத்திருப்பதாகவும் கூறினார். பார்த்தசாரதியும், அவரது ஆலோசகர்களும் இலங்கை தொடர்பாக தமக்கு முன்னால் உள்ள ஏனைய தெரிவுகள் குறித்து சவுத் புளொக் எனப்படும் இலங்கை குறித்த தீர்மானங்களை எடுக்கும் ராஸ்ட்டரபதி பவனின் தென்பகுதி கட்டடத்தில் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் போதே இந்திரா காந்தியின் கொலை தொடர்பான செய்தி அவரை வந்தடைந்தது. 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி காலை தனது வாசஸ்த்தலத்திலிருந்து அதேபகுதியில் அமைந்திருக்கும் தனது வேலைத்தளத்திற்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வாசஸ்த்தலத்தையும் அலுவலகத்தையும் இணைக்கும் நடைபாதையில் நடந்துகொண்டிருக்கும்போதே அவர் சுடப்பட்டார். அப்போது காலை 8 மணி. அமெரிக்கச் செய்தியாளர் ஒருவருக்காக தொலைக்காட்சிச் செவ்வியொன்றினை வழங்குவதற்காகவே அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு உயர் அதிகாரியான திணேஷ் பட் உம் ஏனைய ஐந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவரின் முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவரது பிரத்தியேகச் செயலாளரான ஆர்.கே. தவான், இந்திராவின் பின்னால் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரது நடைபாதையின் அருகே அமைந்திருந்த செடிகளுக்குப் பின்னால் இரு சீக்கிய காவலாளிகளான உப பரிசோதகர் பியாந்த் சிங் மற்றும் கொன்ஸ்டபிள் சட்வாந்த் சிங் ஆகியோர் நின்றிருந்தனர். தான் நின்ற இடத்திற்கு இந்திரா வந்ததும் பியாந்த் சிங் தனது கைத்துப்பாக்கிய வெளியே உருவி அவர் மீது சுடத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து சட்வாந்த் சிங்கும் தன்னிடமிருந்த இயந்திரத் துப்பாக்கியினால் இந்திராமீது சரமாரியாகச் சுட்டார். அவ்விடத்திலேயே வீழ்ந்து இறந்தார் இந்திரா காந்தி. அன்று காலை 8:15 மணியளவில் அடிப்படைகளுக்கான கல்வியல் கல்லூரிக்கு லேக் ஹவுஸில் இருந்து நான் புறப்பட்டுச் சென்றேன். நிலையத்தின் வாயிலை அடைந்தபோது அங்கிருந்த காரியாதிரிசிப் பெண்மணி என்னைப் பார்த்து, "உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரியுமா?" என்று கேட்டார். "தெரியவில்லையே, என்ன செய்தி அது?" என்று நான் அவரிடம் கேட்டேன். "இந்திரா காந்தியைச் சுட்டுவிட்டார்கள்" என்று அவர் மகிழ்ச்சிபொங்க பதிலளித்தார். எனக்கு எதுவுமே சொல்லத் தெரியவில்லை. ஒருவாறு சுதாரித்தவாறே, "அவர் இறந்துவிட்டாரா?" என்று வினவினேன். "அவர் போயே விட்டார்" என்று பதில் வந்தது. இந்திரா காந்தியின் கொலையால் மகிழ்ச்சியுற்றது அந்த காரியாதிரிசிப் பெண் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சிங்கள மக்களுமே இக்கொலையினால் ஆனந்தப்பட்டார்கள். இராணுவத்தினர் வீதிகளில் நடனமாடிக்கொண்டிருப்பதை நான் கண்டேன். இந்திராவின் இறப்பினால் கவலை கொண்டிருந்த தமிழர்களைப் பார்த்து, "உங்கள் அம்மா எங்கே?" என்று கேட்டு எள்ளி நகையாடினார்கள். தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றினை வழங்குமாறு இதுவரை ஜெயவர்த்தனமீது செலுத்தப்பட்டு வந்த அழுத்தம் அழிந்துவிட்டது என்றே அவர்கள் அனைவரும் எண்ணிக் களிப்படைந்தார்கள். ஜெயவர்த்தனவின் மகனான ரவி ஜெயவர்த்தன இந்திராவின் கொலை தொடர்பான செய்தியை தனது தகப்பனாருக்கு அறிவித்தார். சில நேரத்திற்குப் பின்னர் லலித் அதுலத் முதலியும் ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி இந்திரா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்திராவின் மறைவு ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களையும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. பலர் அழுதனர். பொதுவிடங்களிலும், தனியார் கட்டடங்களிலும் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் கொடிகள் பறக்க விடப்பட்டன. கடைகளும் பாடசாலைகளும் இழுத்து மூடப்பட்டன. போக்குவரத்து முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்கில் இந்திராவின் மரணத்திற்காக அஞ்சலி அனுஸ்ட்டிக்கப்பட்டது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் மரண‌ங்களுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை அதிகப் பாதித்த மரணம் இந்திராவினுடையது. இந்திராவின் மரணத்தையடுத்து வந்த 5 நாட்களில் யாழ்ப்பாணத்தில் பிறந்த 12 பெண்குழந்தைகளுக்கு இந்திரா என்று பெயரிடப்பட்டது. இந்திராவின் மரணத்திற்கு பல தமிழ்த் தலைவர்கள் தமது இரங்கல்ச் செய்தியை அனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அவரை "அன்னை இந்திரா காந்தி" என்றே அழைத்தார்கள். அவரது மரணம் ஈடுசெய்யப்பட முடியாதது என்று அவர்கள் கருதினார்கள். தமிழ்ப் போராளித் தலைவர்கள் அனைவரும் அந்நாட்களில் சென்னையிலேயே தங்கியிருந்தார்கள். இந்திராவை "அன்னை" என்று அழைத்து அவர்களும் புகழஞ்சலி செலுத்தியிருந்தார்கள். "இனக்கொலையினை எதிர்நோக்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த ஒரே கவசம் தற்போது கழற்றப்பட்டு விட்டது" என்று அமிர்தலிங்கம் கூறினார். இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து பிரதமராகப் பதவியேற்ற அவரது புதல்வன் ரஜீவ் காந்திக்கு தமிழ்த் தலைவர்கள் தமது இரங்கல்ச் செய்தியினை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ரஜீவுக்கு அமிர்தலிங்கம் அனுப்பிய இரங்கல்த் தந்தியில் "இலங்கை மக்கள் தமது அன்னையை இழந்துவிட்டார்கள்" என்று எழுதியிருந்தார். பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையில் "தமது எதிர்காலம் குறித்து தெளிவற்றை நிலையில் வாழ்ந்துவந்த ஈழத் தமிழர்கள், அன்னையின் இறப்பினால் தமது எதிர்காலம் குறித்த உண்மையான கவலையினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். "அந்தக் கிழட்டு நரி தான் ஒத்துக்கொண்ட அனைத்து விடயங்களில் இருந்தும் இனிமேல் இலகுவாக கழன்று சென்றுவிடும்" என்று என்னிடம் தனிமையில் பேசும்போது அமிர் குறிப்பிட்டார். பிரபாகரனும் ரஜீவ் காந்திக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதன் தமிழாக்கம் கீழே, மதிப்பிற்குரிய ரஜீவ் காந்திக்கு, உங்களது தாயார் இந்திரா காந்தி அம்மையார் தனது காவலாளிகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். மனிதநேயத்திற்கு எதிரான இந்த குரூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமக்கு வழிகாட்டியாக இருந்த கலங்கரை விளக்கத்தை, உலகின் அடக்கப்பட்ட மக்களுக்கு உத்வேக ஒளியாகத் திகழ்ந்த மனிதரை, இந்தியாவின் சிறந்த அறிவாளியாகவிருந்த பிரதமரை நாம் இழந்திருக்கிறோம். ஈடுசெய்யப்பட முடியாத அவரது மறைவினால் துயருறும் உங்கள் குடும்பத்தினரோடும், இந்தியாவின் மக்களோடும், உலக மக்களோடும் நாமும் இத்தருணத்தில் இணைந்துகொள்கிறோம். உலகின் சமாதானத்திற்காகவும் , மனித விழுமியங்களுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் திருமதி இந்திரா காந்தி அயராது பாடுபட்டு வந்தார். அடக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் திகழ்ந்தார். இந்தியாவை சோசலிஷ பாதையில் வழிநடத்திச் செல்ல மிகுந்த அர்ப்பணிப்புடனும், உறுதியோடும் அவர் செயற்பட்டு வந்தார். நவீன இந்தியாவின் சிற்பி அவரே. கொடூரமான முதலாளித்துவவாதிகளையும், அவர்களது செயற்பாடுகளையும் எதிர்த்து அவர் போரிட்டார். உலகம் முழுவதும் சுயநிர்ணய உரிமைக்காக பல்வேறு தேசிய இன மக்கள் நடத்திய போராட்டங்களுக்கும் சுதந்திரத்திற்கும் அவர் ஆதரவு அளித்து வந்தார். ஆதரவற்ற, அடக்குமுறைக்கு முகம்கொடுத்துவரும் தமிழ் ஈழ மக்களை இந்திரா எப்போதுமே இரக்கத்துடன் பார்த்துவந்ததுடன் ஆதரவும் நல்கிவந்தார்.தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டிய அடிப்படை உரிமைகளைத் தன்னும் இலங்கை அரசாங்கம் வழங்கமறுத்தபோது அதற்கெதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வந்தார். தமிழ் மக்கள் மீது சிங்கள அரசாங்கங்கள் நடத்திவரும் இனவழிப்பை முறியடிக்க அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் அவர் அழுத்தம் கொடுத்து வந்தார். இந்தியாவின் மத்தியஸ்த்ததினூடாக கெளரவமான அரசியல்த் தீர்வொன்றினை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அழுத்தம் கொடுத்து வந்தார். ஒடுக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களின் காவலனாக அவர் உயர்ந்து நின்றார். இந்திராவின் தனிப்பட்ட முயற்சியினாலன்றி இன்று இலங்கையில் தமிழ் மக்கள் என்கிற இனமே இல்லாமல் அழிந்துபோயிருக்கும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவாக அவர் இருந்தார். அன்னை இந்திராவை தமிழ் மக்கள் தமது உயிர் இருக்கும்வரை அன்புடனும், மிகுந்த மதிப்புடனும், நன்றியுடனும் நினைவுகூர்வார்கள். அவரைப் பிந்தொடர்ந்து இன்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் நீங்கள் தேசிய, சர்வதேச தலைமைத்துவத்தை சரியாக வகிப்பீர்கள் என்றும், தான் கொண்ட உயரிய கொள்கைகளுக்காகவே வாழ்ந்தும், உழைத்தும், இறந்தும்போன உங்களது தாயாரின் வழித்தடத்தில் தவறாது பயணிப்பீர்கள் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். உங்களின் வெற்றிக்கு எங்களின் வாழ்த்துக்கள் இப்படிக்கு மதிப்புடன், வே. பிரபாகரன் தலைவர்,மத்திய குழு இராணுவத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகள்
  13. இராகுல தேரையூடாக போராளிகளுக்கு ஜெயார் வைத்த பேச்சுவார்த்தைப் பொறி ஐப்பசி மாதத்தின் ஆரம்பநாட்களில் அனைவரும் ஆச்சரியப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தேறியது. தீவிர இனவாதியாக அறியப்பட்ட ராகுல தேரை எனும் பெளத்த பிக்கு தன்னுடன் உயர் மட்ட பெளத்த மதகுருக்கள் சிலரை அழைத்துக்கொண்டு போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்திக்கச் சென்னைக்குச் செல்லவிருக்கிறார் எனும் அறிவிப்பே அது. ஆகவே, போராளி அமைப்புக்களின் தலைவர்களைத் தான் சந்திக்கவிருப்பதாக சென்னையில் இருந்த தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். வன்முறைகளையும், அனைத்துவிதமான சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இந்த அழைப்பினை மிகுந்த சந்தேகத்துடனேயே நோக்கினார்கள். பின்னாட்களில் என்னுடன் பேசிய பதம்நாபா "இது ஒரு பொறி என்று எமக்குப் புரிந்தது. இதன் பின்னால் ஜெயவர்த்தன இருக்கிறார் என்பதும் எமக்குத் தெரியும்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் இந்த அழைப்பினை நிராகரிப்பார்கள் என்று தெரிந்தே ஜெயாரினால் இந்தச் சதி முன்னெடுக்கப்பட்டது. பெளத்த மதகுருக்களால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை முயற்சிகளை போராளிகள் நிராகரித்துவிட்டார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டவே இதனை ஜெயார் செய்கிறார் என்று தமக்குப் புரிந்ததாக பத்மநாபா மேலும் கூறினார். "தனது இராணுவ முஸ்த்தீபினை நியாயப்படுத்தவே இதனை ஜெயவர்த்தன செய்கிறார் என்பதனை நாம் புரிந்துகொண்டோம்" என்று பத்மநாபா கூறினார். தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளில் நேரடியாக ஈடுபட்டவரும், தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான வன்மம் கலந்த பேச்சுக்களை உமிழ்ந்து வந்தவருமான அரசாங்க அமைச்சர் சிறில் மத்தியுவின் நெருங்கிய சகாவே ராகுல தேரை என்பதனை போராளிகள் நன்கு அறிந்தே இருந்தனர். டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் இந்தப் பொறியில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டாக இணைந்து தமது நிராகரிப்பினை வெளியிட்டன. ராகுல தேரைக்கு அவர்கள் எழுதிய பதிலில், "எங்களை மன்னித்துவிடுங்கள், பெளத்த மதகுருக்களின் குழுவுடன் பேச்சுக்களில் ஈடுபட நாம் தயாரில்லை. அவர்களுடன் பேசுவதால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வு கிடைக்கப்போவதில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுல தேரைக்கு பிரபாகரன் தனியான பதில் ஒன்றை அனுப்பினார். தனது பதிலை ஜெயவர்த்தன அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக அவர் பயன்படுத்தினார். அக்கடிதம் கீழே, வணக்கத்திற்குரிய மதகுருவிற்கு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளை பேச்சுவார்த்தைக்கு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக எம்முடன் பேச விரும்புவதாக நீங்கள் உங்களின் அழைப்பில் குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், உங்களின் கடிதத்தில் நிபந்தனை ஒன்றையும் நீங்கள் விடுத்திருந்தீர்கள். வன்முறையினைக் கைவிடுமாறும், சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுக்களுக்கு வருமாறு எம்மை அழைத்திருந்தீர்கள். ஆனால் உங்களின் அழைப்பு நகைப்பிற்கிடமானதாக எமக்குத் தெரிகிறது. நாம் வன்முறையாளர்கள் அல்ல. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அடிமைகளாக வாழ்வதில்லை என்பதே எமது ஒற்றை அபிலாஷையாகும். சுதந்திர மனிதர்களாக நாம் வாழ விரும்புகிறோம். நாம் அமைதியான வாழ்க்கையினை அடைய விரும்புகிறோம். அரச இராணுவ அடக்குமுறையிலிருந்து எம்மைக் காத்துக்கொள்ளவே நாம் ஆயுதங்களை ஏந்தியிருக்கிறோம். பெளத்த சமயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கும் ஒரு கொடுங்கோல் அரசாங்கத்தின் பிரதிநிதியாக உங்களைப் போன்ற ஒரு பெளத்த மதகுரு செயற்படுவது எமக்கு மிகுந்த வேதனையினை அளிக்கிறது. நீங்கள் உண்மையாகவே அமைதியை விரும்புபவராக இருந்தால், பெளத்த மதம் போதிக்கும் புத்த தர்மத்தைப் பின்பற்றுபவராக இருந்தால் அடக்குமுறையினைக் கையாண்டுவரும் உங்களது அரசின் அராஜகத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள். எமது மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஏனைய மக்களைப் போல் சுதந்திரமாக வாழும்வரை நாம் ஏந்தியிருக்கும் ஆயுதங்களை நாம் கீழே வைக்கப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எம்மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியினை உடைத்தெறிந்து, எம்மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காகவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். எமக்கு சமாதானம் வேண்டும். ஆனால், உங்களை ஏமாற்றி எம்முடன் பேச அனுப்பியிருக்கும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அடக்குமுறை அரசாங்கத்திடம் மண்டியிட்டு சமாதானத்திற்காக நாம் இரைஞ்சப்போவது கிடையாது. எமது விடுதலையினை ஆயுதப் போராட்டம் மூலமாக வென்றெடுக்க நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இப்படிக்கு வே . பிரபாகரன் இராணுவத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இராகுல தேரையூடாக விடுத்த பேச்சுக்களுக்கான அழைப்பினை போராளித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்துடன் நிராகரித்திருந்தமை ஜெயவர்த்தனவை ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் வழமைபோல தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட, இனவாத பெளத்த துறவியான ராகுல தேரையின் பேச்சுக்களுக்கான அழைப்பினை போராளிகள் நிராகரித்து விட்டார்கள் என்பதே அவரது பிரச்சாரத்தின் கருப்பொருளாக இருந்தது.
  14. ஜெயவர்த்தனவின் ஆலோசனைகள் இந்திரா காந்தியுடனான தனது சந்திப்பு நிறைவுபெற்று மூன்று வாரங்களின் பின்னர் ஆடி 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றினை ஜெயார் நடத்தினார். இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத இரு விடயங்களினால் சர்வகட்சி மாநாட்டின் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருபகுதியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் கொடுக்கக் கூடாது எனும் வேளை, இன்னொரு பகுதியினர் அதிகாரம் மிக்க பிராந்தியங்களுக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவருகிறார்கள். ஆகவே, இவ்விரு பகுதியினரினதும் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காவண்ணம் இரு பகுதியினரும் சந்திக்கக் கூடிய சமரச நிலைப்பாடு ஒன்றிற்கு வருவது அவசியம் என்று அவர் கூறினார். பின்னர் "இரண்டாவது சபையினை" அமைக்கும் ஆலோசனையினை ஜெயார் முன்மொழிய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஏலவே அமைக்கப்பட்டிருந்த இரு குழுக்களும் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையினை அடுத்துவரும் அமர்வில் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஜெயார் முன்மொழிந்த இரண்டாவது சபை யோசனையினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உடனடியாகவே நிராகரித்தது. "அதனை கருத்திக் கொள்ளக் கூடத் தேவையில்லை" என்று சிறிமாவோ கூறினார். இரண்டாவது சபைக்கான முன்மொழிவை ஆரம்பத்தில் அமிர்தலிங்கமும் அதிகம் விரும்பவில்லை. "இந்த ஆலோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று நாம் நம்பவில்லை" என்று அமிர் கூறினார். ஆனால் லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் இந்த ஆலோசனையினை வரவேற்றிருந்ததுடன், நாட்டி வாழும் அனைத்து இனக் குழுமங்களினதும் கருத்துக்களும், விருப்பு வெறுப்புக்களும் இதற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன. ஆவணி மாதத்தின் முதலிரு வாரத்தில் இரண்டாவது சபை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஆவணி 17 ஆம் திகதி அரசியல் நடைமுறைபற்றிய குழுவின் அறிக்கையினை பிரேமதாச மாநாட்டில் முன்வைத்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கலந்துரையாடலினை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறப்போகும் அலகு மாவட்ட சபையா அல்லது மாகாணசபையா என்பதை மாநாட்டு உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரேமதாச முன்வைத்த அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களாக விவாதித்தனர். ஆவணி 21 ஆம் திகதி தான் வழங்கிய அறிக்கையில், மாவட்ட சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்பதை தான் நிராகரிப்பதாக அமிர்தலிங்கம் கூறியிருந்தார். உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பும், தமது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுதலுமே தமிழர்களின் தற்போதைய அதிமுக்கியமான பிரச்சினைகளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். அன்றைய நாளுக்கு ஒருநாள் முன்னதாகக் கூட கிளிநொச்சியில் இரு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ள இராணுவம் இன்னுமொருவரை படுகாயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முதல்வாரம் மன்னாரின் விவசாயக் கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களை அழித்து, அவர்களின் பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் (இப்படுகொலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில் விபரிக்கப்படும்). "தமிழர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தனித்தன்மையினையும் பாதுகாப்பதூடாகவே தமிழர்கள் தமது வாழ்தலுக்கான பாதுகாப்பையும், சொத்துக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்று அமிர்தலிங்கம் அங்கு கூறினார். "தமிழ் மக்கள் தமது தாயகத்தில் அரசியல் அதிகாரத்தையும், உள்ளக சட்டம் ஒழுங்கு மீதான அதிகாரத்தையும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய பொறிமுறையினை உள்ளடக்கிய ஆலோசனையொன்றினை சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பொறிமுறையினைக் கொண்டிராத எந்த அரசியல்த் தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அவர் மேலும் கூறினார். மேலும் இரண்டாவது சபைக்கான முன்மொழிவையும் இரு காரணங்களை முன்வைத்து அமிர்தலிங்கம் எதிர்த்திருந்தார். முதலாவது காரணம், இரண்டாவது சபை எனும் கருதுகோள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அடிப்படை நிர்வாக அலகான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், இரண்டாவது சபை உருவாக்கப்படுவதன் நோக்கமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதனை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதாகும். அமிர்தலிங்கம் கூறியதன்படி, இரண்டாவது சபையின் முன்மொழிவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், நடைமுறையில் இருக்கும் பொறிமுறையினை நீட்டிப்பதும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது சபை எனும் அமைப்பை வெறும் பிரச்சார அழகுப் பொருளாகவே அரசாங்கம் பாவிக்க விரும்பியது. சிங்கள மக்களுக்கு இருக்கும் முற்றான ஆட்சியதிகாரத்தினை பரவலாக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் மேலும் மத்திய அரசின் கைக்குள் இறுகச் செய்வதுதான் இதன் உண்மையான நோக்கம். மாவட்ட அதிகார சபைகளுக்கும் அப்பால் சென்று இலங்கையரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவே இரண்டாவது சபையினை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முயலும் அதேவேளை சிங்களவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நாடு முழுவதற்குமான ஆட்சியதிகாரத்தை மேலும் மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் இதனைப் பாவிக்க நினைத்தது. தன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் முன்வைத்த அறிக்கையினையும், இரண்டாவது சபைக்கான கருத்துக்கள் தொடர்பாகவும் ஆவணி 21, 29 மற்றும் புரட்டாதி 1, 3 ஆகிய நாட்களில் சர்வகட்சி மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகளுடன் ஜெயார் உரையாடினார். இறுதிநாளான புரட்டாதி 3 ஆம் திகதி அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய அலகு குறித்து சபை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது. மாவட்ட சபை மற்றும் மாகாண சபை நடைமுறையினை முற்றாக நிராகரித்த அமிர்தலிங்கம், அதிகாரம் மிக்க பிராந்திய அலகே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என்று கூறினார். "அதிகாரம் மிக்க பிராந்திய அலகு எனும் தமிழர்களின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்படுமிடத்து, தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, தனியான தமிழர்களின் தாயகத்தினை விடுவிப்பதற்கான சாத்வீக வழிப் போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வேறு தெரிவுகள் இல்லை" என்று அவர் மேலும் அரசை எச்சரித்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த பிராந்திய அலகுக் கோரிக்கையினை குமார் பொன்னம்பலமும் தொண்டைமானும் ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு புரட்டாதி 21 ஆம் திகதி இடம்பெற்றது. தனது அறிக்கையினை சபையில் முன்வைத்த ஜெயார், புரட்டாதி 30 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். எட்டுப் பக்கங்கள் அடங்கிய அவரது அறிக்கை கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் மாநாட்டில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. மேலும், நான்கு விடயங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவையாவன, 1. அடிமட்ட ஜனநாயக வழி அமைப்புக்களுக்கான அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2. நாடற்றவர்கள் எனும் நிலையினை ஒழிப்பது. 3. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முற்றாக அழிப்பது. 4. இரண்டாவது சபையினை உருவாக்குவது. ஒரு மாகாணத்திற்கு இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்டங்களாக செயற்பட முடியும் என்றும், இவ்வாறான மாவட்ட சபைகளுக்கு இரண்டாவது சபையினூடாக சட்டவாக்கல் அதிகாரங்கள் வழங்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சர்வகட்சி மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று இதனை அரச ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு குறித்து பேச்சுக்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக டெயிலி நியூஸ் எக்காளப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி அமிர்தலிங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியுமென்றாலும் கூட, அவை தற்போதும் வெறும் அடிப்படை அலகுகள்தான் என்று அவர் கூறினார். மாவட்டங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் அலகுகளுக்கு தனியான அதிகாரம் ஏதும் பகிரப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துவிடவும் அவர் விரும்பவில்லை. இவற்றினை முற்றாக நிராகரிக்காது இருப்பதன் மூலம் தொடர்ச்சியான பேரம்பேசலுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கலாம் என்று அவர் எண்ணினார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழ்பேசும் தனியான அதிகாரம் மிக்க அலகே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக விவாதித்தார். இதன்பின்னர் மாநாட்டினை கார்த்திகை 15 ஆம் திகதிவரை ஜெயார் ஒத்திவைத்தார். ஆனால், ஜெயார் எதிர்பார்த்ததற்கு மாறாக புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வன்முறை தலை விரித்தாடியது. குறிப்பாக கிழக்கிற்கும் வன்முறைகள் பரவத் தொடங்கியிருந்தன.
  15. இந்திராவின் வேண்டுகோள் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயவர்த்தன இந்தியாவுக்கும் சென்றார். அங்கு இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். ஜெயாருடன் பேசுகையில், இலங்கையில் இராணுவ ரீதியில் தலையிடும் நோக்கமோ, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கமோ இந்தியாவுக்குச் சற்றேனும் கிடையாது என்று இந்திரா கூறினார். தனது நிலைப்பாட்டினை முன்னணியினரிடம் தான் தெளிவாகக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார் அதன்பின்னர் பேசிய இந்திரா, சர்வக்ட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சிகொண்ட பிராந்தியங்களே அமையும் என்று இந்தியா எண்ணுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயார் சுயாட்சி கொண்ட பிராந்தியங்கள் எனும் தீர்வினை வழங்க எதிர்க்கட்சித் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க தடைபோட்டுவருவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய இந்திரா, அப்படியானால் மாகாணசபை முறையினை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், சிங்கள மக்கள் தற்போது இருக்கும் மனோநிலையில் மாகாணசபை முறையினையும் தன்னால் ஏற்படுத்த முடியாது என்று மறுத்தார். "எமக்கான ஆதரவுத் தளத்தினை நாம் இழந்துவிடுவோம், நாம் எல்லோரையும் இழந்துவிடுவோம்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள் குறித்த விடயங்களை இந்திராவிடம் காண்பித்த ஜெயவர்த்தன‌ தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறுவதை தனது அரசாங்கம் விரும்புகிறது என்று இந்திரா கூறினார். இச்சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த ஜெயார், "நான்கூட விரைவான தீர்வினையே விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்டு வருவோர் தீர்விற்கான முயற்சிகளுக்குத் தடங்கலாக இருக்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து,பயிற்சி முகாம்களை அமைத்து, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சிங்கள மக்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்" என்று பதிலளித்தார். தமிழ்நாட்டில் போராளிகளுக்கான பயிற்சிமுகாம்கள் இருக்கின்றன எனும் ஜெயாரின் கூற்றினை இந்திரா நிராகரித்தார். ஆனால், சுமார் முப்பதினாயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "உங்களுக்கு வேண்டுமென்றால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கோ இம்முகாம்கள் குறித்து அனைத்து விடயங்களும் தெரியும்" என்று கூறியதுடன் தன்னுடன் கொண்டுவந்திருந்த, முகாம்கள் அமைந்திருந்த இடங்களின் வரைபடங்கள், அவற்றின் பெயர்கள், ஒவ்வொரு போராளி அமைப்பிற்கும் பயிற்சி வழங்கப்பட்ட முகாம்களின் விபரங்கள், ஒவ்வொரு முகாமிலும் பயிற்றப்பட்டு வந்த போராளிகளின் எண்ணிக்கை, பயிற்சி முகாம்களில் பயிற்றுவாளர்களாகச் செயற்பட்டு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், தரங்கள் என்று அனைத்து விடயங்களையும் ஆவண வடிவில் இந்திராவிடம் கையளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த பயிற்சிமுகாம்கள் குறித்த விபரங்களைக் கண்ணுற்றபோது ஒருகணம் அதிர்ந்துபோன இந்திரா ஒருவாறு சமாளித்துக்கொண்டே அவ்விடயங்கள் குறித்து விசாரிப்பதாகப் பதிலளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த விடயங்கள் சரியானவைதான் என்பது இந்திராவுக்குத் தெரியும். அவரது ஆச்சரியமெல்லாம் இவற்றினை ஜெயாருக்கு வழங்கியது யாரென்பதுதான். போராளி அமைப்புகளுக்குள் ஊடுருவிய லலித்தும், விலைபோன மலையாளி அதிகாரியும் தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றதும் லலித் அதுலத் முதலி செய்த முக்கியமான விடயங்களில் ஒன்று தமிழ்ப் போராளி அமைப்புகளுக்குள்ளும், இந்திய உளவுத்துறையான ரோவிற்குள்ளும் தனக்கான உளவாளிகளை உட்புகுத்திக்கொண்டதுதான். சென்னையில் செயற்பட்டுவந்த ரோவின் அலுவலகத்திற்கு மலையாளி அதிகாரியான உன்னிகிருஷ்ணன் பொறுப்பாகவிருந்தார். சி.ஐ.ஏ இன் உதவியுடன் லலித் அதுலத் முதலி உன்னிகிருஷ்ணனை விலைக்கு வாங்கியிருந்தார். இவரே தமிழ்நாட்டில் இயங்கிவந்த போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களின் அமைவிடங்கள் , வரைபடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இலங்கையின் பொலீஸ் புலநாய்வுத்துறைக்கு வழங்கியிருந்தார். இவற்றினை அடிப்படையாக வைத்தே உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான சிறில் ஹேரத் ஜெயவர்த்தனவுக்கான ஆவணங்களை தொகுத்து வழங்கினார். இவரது அறிக்கையில் போராளிகள் பயிற்சிகளின்போது பாவித்த ஆயுதங்களின் வகைகள் முதல் பல விடயங்கள் குறிப்பிட‌ப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜெயாருடன் அதுலத் முதலியும் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இவர்கள் இருவரும் கடுமையான தொனியைப் பாவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் போது தமிழர்களின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று பிடிவாதமாக நின்றனர். மேலும், அரசியல் ரீதியிலான‌ தீர்வொன்றிற்கு இராணுவ ரீதியிலான வெற்றி தவிர்க்கமுடியாத அங்கமாகும் என்றும் வாதாடினர். "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்தி அழித்துவிடுவதூடாக அரசியல்த் தீர்விற்கான சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்" என்று லலித் அதுலத் முதலி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரித்து வந்த இந்துப் பத்திரிக்கை, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் 30,000 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்துள்ள நிலையில் இதனை இலங்கையின் உள்வீட்டு விவகாரம் என்று கருதமுடியாது என்று வாதாடியது. மேலும், இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினையல்ல என்றும் அது கூறியது. "தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துவருவதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றே பார்க்கபடுதல் அவசியம்" என்று அது மேலும் கூறியது.
  16. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைக் குழிதோண்டிப் புதைத்தல் யாழ்ப்பாணத்தில் ஆடி 25 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நடத்தப்பட்ட‌ சத்தியாக்கிரக நிகழ்வு பற்றிய செய்தி லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குக் கிடைத்தபோது அங்கிருந்தோர் அனைவரும் மிகவும் அகமகிழ்ந்தனர். பின்னர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக இச்செய்தி சிங்கள மக்களிடையே பரவியபோது அந்த மகிழ்ச்சி அவர்களையும் பற்றிக்கொண்டது. இச்செய்தி வெளிவந்தபோது வாராந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்காக தகவல்த் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அமைச்சரவைப் பேச்சாளரும், அரசாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மிகுந்த அக்களிப்புடன் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காலம் முடிவடைந்துவிட்டது" என்று அவர் கூறினார். "இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது" என்று அவர் மேலும் கூறினார். டெயிலி நியூஸ் பத்திரிகைக்காக சத்தியாக்கிரகம் தொடர்பான செய்தியை நான் எழுதினேன். ஆனந்த திஸ்ஸ தி அல்விஸின் கேள்வியைத் தலைப்பாக இட்டு நான் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து எமது நிருபர்கள் தொலைபேசியூடாக தொடர்ச்சியாக வழங்கிவந்த உடனடிச் செய்திகளையும் கோர்த்து எழுதினேன். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாதை முடிந்துவிட்டது" என்கிற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. லலித் அதுலத் முதலி உடனடியாக செயலில் இறங்கினார். டெயிலி நியுஸ் மற்றும் சண் பத்திரிக்கைகளில் அவர் ஒரு செய்தியை விதைத்தார். " தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் என்ன பலன் இருக்கப்போகிறது என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அரச தரப்புத் தகவல்கள் கருத்துத் தெரிவிக்கின்றன" என்பதே அவர் விதைத்த செய்தி. அப்படியானால், அவர்கள் யாரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? என்கிற கேள்வியையும் அச்செய்தி கேட்டிருந்தது. தலைப்புச் செய்தியாக தாம் இட்டதையே ஆசிரியர்த் தலையங்கமாகவும் சண், டெயிலிநியூஸ் உட்பட்ட ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன. இந்தச் செய்திகள், குறிப்புக்கள், தலையங்கங்கள் அனைத்தினதும் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை குழி தோண்டிப் புதைத்து விடுவது. தமிழர்களே அக்கட்சியை நிராகரித்துவிட்டார்கள். சிங்கள மக்கள் அதனைத் தூக்கிச் சுமக்கவேண்டிய தேவை என்ன? ஆகவே புதைத்துவிடலாம் என்பதே அவர்களின் செய்தி. முன்னணியினரின் நம்பகத்தன்மையினைக் கேள்விகேட்கும் முடிவு ஜெயவர்த்தனவினாலேயே எடுக்கப்பட்டது. இந்த முடிவினை அவர் எடுப்பதற்கான காரணம் இந்தியாவும் சர்வதேசமும் முன்னணியினருடன் பேசுவதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காணுமாறு அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்திருந்தன. மேலும், தில்லியில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடான இணைப்பு "சி" இற்கு அமைவாகவே தீர்வு அமையவேண்டும் என்று முன்னணியினரும் தொடர்ச்சியாக் கோரிவந்திருந்தனர். ஆனால், இணைப்பு "சி" இன் அடிப்படையில் ஓரளவிற்கேனும் அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதை அரசாங்கம் சிறிதும் விரும்பவில்லை. ஆகவேதான், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசாங்கம், முன்னணியினரைத் தமிழர்களே நிராகரித்து விட்டதனால், அவர்களுடன் தொடர்ந்து பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது எனும் கேள்வியை முன்வைக்கத் தொடங்கியது. ஆனாலும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு யாருடன் அரசாங்கம் இனிமேல் பேசப்போகிறது எனும் கேள்வி தொடர்ந்தது. இதற்கான ஜெயவர்த்தனவின் பதில், "அர‌சாங்கம் யாருடனும் பேச வேண்டிய தேவையில்லை, எதற்காகப் பேசவேண்டும்?" என்பதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் முன்னணியினரால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தோல்வியில் முடிவடைந்தமை அக்கட்சியினைத் தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதனையே காட்டியது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல், தம்மை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியோடு பேச்சுக்களில் ஈடுபடுவதில பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்காகப் போராடிவரும் ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் பேசவேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும், சுய கெளரவம் கொண்ட எந்த அரசும் பயங்கரவாதிகளுடன் பேசாது என்பதும் திண்ணம். அப்படியானால் நடக்கப்போவது என்ன? தமிழர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுங்கள் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்கள் இனிமேல் செயல் இழக்கப்போகின்றன. குறிப்பாக இந்தியாவினால் இராஜதந்திர ரீதியில் இதுவரை கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கான அடிப்படை இனிமேல் இருக்கப்போவதில்லை. அரசியல் ரீதியிலான இணக்கப்பாடு ஒன்றிற்கான அழுத்தங்கள் இனிமேல் இல்லாது போகுமிடத்து அரசாங்கம் செய்யவேண்டியதெல்லாம் தமிழர்களின் கவலைகளைப் போக்குவது மட்டும்தான் என்கிற ரீதியில் அரசதரப்பிலிருந்து நியாயங்கள் பேசப்பட்டு வந்தன. அதனையே ஜெயவர்த்தனவும் செய்ய முடிவெடுத்தார். மேலும், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழரின் விடுதலைக்கான ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் முற்றாக தன்னால் அழித்துவிடமுடியும் என்றும் அவர் உறுதிபூண்டார். பேச்சுவார்த்தையிலிருந்து போர்க்களத்திற்கு களம் மாற்றப்பட்டிருப்பதற்கான நியாயப்படுத்தல்கள் இவ்வாறு அமைந்திருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த அரசியல் அமைப்பொன்றினை முற்றாக நிராகரித்திருக்கும் ஒரு சமூகத்துடன் எப்படி தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட‌ முடியும்? அச்சமூகம் ஜனநாயக அரசியலைக் கைவிட்டு போராளிகளுக்கு தமது விசுவாசத்தை தற்போது காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், போராளிகளோ ஆயுதத்தின் மூலமாக மட்டுமே பேசலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடன் ஆயுத மூலமாகப் பேசுவதைத் தவிர அரசாங்கமான எமக்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதே அந்த நியாயப்படுத்தல்களின் சாராம்சம். ஜெயவர்த்தனவின் போருக்கான நியாயப்படுத்தலை அனைத்துச் சிங்கள ஊடகங்களும் பிரதிபலித்ததோடு அதற்கான முழு ஆதரவினையும் வழங்கத் தொடங்கின. ஆனால், ஒற்றைச் சிங்கள ஊடகவியலாளரான லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வா மட்டும் இதனால் வரப்போகும் ஆபத்தினை உணர்ந்திருந்தார். தனது செய்தி ஆய்வில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் புதைத்தது யார்?" என்கிற தலைப்பில் 1984 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி கட்டுரை ஒன்றை அவர் வரைந்தார். "இது ஒரு தூரநோக்கற்ற, முட்டாள்த்தனமான நடவடிக்கை" என்று அதனைக் குறிப்பிட்டார். முன்னணியினரின் அரசியலைப் புதைப்பதன் ஊடாக ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் வெறுமனே அக்கட்சியை மட்டும் புதைக்கவில்லை, மாறாக வன்முறையற்ற - ஜனநாயக வழி இணக்கப்பட்டிற்கான வழியையும் முற்றாகவே புதைத்துவிட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். "முன்னணியினரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவிடும் கைங்கரியம் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனால் யாரின் இலாபத்திற்காக இது செய்யப்பட்டது? யாரின் திட்டமிடலின் கீழ் இது செய்யப்பட்டது? சரித்திரமே இதற்கான பதிலை வழங்கட்டும்" என்று தன‌து செய்தி ஆய்வினை அவர் முடித்திருந்தார். சரித்திரம் அதற்கான பதிலை வழங்கியது. மேர்வின் எதிர்வுகூறியது போன்றே தமிழ்ப் போராளிகள் இதனால் இலாபமடைந்தார்கள். மிகச் சிறந்த அரசியல் அவதானியாகவும், இராணுவ திட்டமிடலாளராகவும் வளர்ந்துவிட்டிருந்த பிரபாகரன் தனது அமைப்பிற்காக ஜெயார் உருவாக்கித் தந்திருந்த இந்த அரிய சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டார். மேர்வின் டி சில்வாவின் எச்சரிக்கையினைச் சற்றேனும் சட்டைசெய்திராத ஜெயவர்த்தன, தனது தூரநோக்கற்ற அரசியல் முன்னெடுப்பில் முற்றாகக் காலெடுத்துவைத்தார். அவரைச் சுற்றி துதிபாடும் குழு ஒன்றிருந்தது. அதுலத் முதலி, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மற்றும் காமிணி திஸாநாயக்க என்று அக்குழு அவர் செய்யும் விடயங்களைத் தொடர்ச்சியாக ஆதரித்து, முண்டுகொடுத்து வந்தது. அன்றிலிருந்து சர்வகட்சி மாநாடு என்பது தமிழரின் கவலைகளுக்கு தீர்வு வழங்குவோம் என்கிற போர்வையில், நடைமுறையில் இருந்துவந்த அரசியல் பொறிமுறைக்கான மெருகூட்டலினை மட்டுமே செய்யத் தொடங்கியது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் வெறுமனே இந்த நோக்கத்திற்காக அவரால் பாவிக்கப்பட்டன.
  17. இராணுவ முஸ்த்தீபு இந்தியாவிற்கெதிராக தனது சகாவான பிரேமதாசவைக் களமிறக்கிய ஜெயார் அக்கால கட்டத்தில் ஜெயாருக்கு இருந்த ஒரே நோக்கம் இந்தியாவின் அழுத்தத்தை நிர்மூலமாக்கி இந்தியாவையும், இந்திராவையும் தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதுதான். இந்தியாவைச் சீண்டுவதில் பெயர்பெற்றவராக விளங்கிய பிரேமதாச, ஜெயாரின் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டார். இருமுனை நடவடிக்கையினை பிரேமதாச மேற்கொண்டார். முதலாவது, இந்தியாவின் அனுசரணையின் ஊடாக முன்வைக்கப்பட்ட பிராந்திய சபைகளினூடான தீர்வினை உள்ளடக்கிய இணைப்பு "சி" யின் அடித்தளத்தைச் சிதைப்பது. இதனைச் செய்வதற்கு பாராளுமன்றத்தையும், ஊடகத்துறையினையும் அவர் களமாகப் பாவித்தார். பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட பேச்சுக்களில் தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான எந்தத் தீர்வையும் வழங்க அரசாங்கம் தயாராக இல்லையென்று கூறத் தொடங்கினார். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தவிர வேறு எதனையும் தமிழர்கள் கோரக் கூடாது என்றும் பேசி வந்தார். பிரேமதாசவின் இரண்டாவது முனை தமிழர்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவினைப் பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அகற்றிவிடுவது என்பதாக இருந்தது. அதற்காக இந்தியாவிற்கு தொடர்ச்சியான தலைவலியைக் கொடுக்க அவர் முயன்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. ஆகவே, தனக்குத் தேவையானவற்றை தான் விரும்பும் நாடுகளில் இருந்து, தனக்கு உகந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளும் உரிமை அதற்கு இருக்கிறது" என்று இந்தியாவின் அழுத்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை எனும் தொனியில் பேசினார். பின்னர், பங்குனி மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசும்போது, " நாம் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இந்தியா எம்மை அச்சுருத்துவதை அனுமதிக்கப்போவதில்லை. இதனை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பேசினார். மேலும், இந்தியா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு இயங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தியாவில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும், இலங்கையில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் விமர்சித்தார். காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பயங்கரவாதத்தினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவரும் இந்தியா, இலங்கையை அவ்வாறு செய்யவேண்டாம் என்று போதித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். "எமது குற்றச்சாட்டு என்னவென்றால், எமது நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தினரை தமது நாட்டிற்குள் வரவழைத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயிற்றுவித்து, எமக்கெதிராகச் செயற்பட மீண்டும் எமது நாட்டிற்குள் இந்தியா அனுப்பிவைக்கிறது. இதுதான் எமது பிரச்சினை. இந்திய அரசாங்கத்திற்கெதிராகப் போராடிவரும் சீக்கியப் பிரிவினைவாதிகளை நாம் இலங்கைக்கு அழைத்து, பயிற்சியளித்து மீளவும் இந்தியாவிற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அனுப்பினால் இந்தியா என்ன செய்யும்? எங்களை இந்தியா அப்போது குற்றஞ்சாட்டியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதனைச் செய்யப்போவதில்லை. எமது நாட்டையோ அல்லது அல்லது எமக்குச் சொந்தமான எதனையோ பாவித்து எவரும் இந்த உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் எதிராகப் போரிடவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாம் அனுமதிக்கப்போவதில்லை. அதுதான் எமது கொள்கை. அதேபோல், எந்தவொரு நாடும் எமக்கெதிராகச் செயற்படுவதை நாம் வெறுக்கிறோம். எமது கொள்கையினை மற்றையவர்களும் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார். சித்திரை மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாச, " தமிழ்ப் பயங்கரவாதிகளை எதற்காக இந்தியாவிற்கு வரவழைத்து ஆதரிக்கிறீர்கள்? எமது நாட்டை ஆக்கிரமித்து, கபளீகரம் செய்ய நீங்கள் விரும்பினால் அதை நேரடியாகச் செய்யுங்கள், பயங்கரவாதிகளின் பின்னால் ஒளிந்திருந்து செய்யாதீர்கள்" என்று அவர் இந்தியாவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார். பிரேமதாசவின் இந்தியாவுக்கெதிரான தாக்குதலும், இணைப்பு "சி" இற்கெதிரான விமர்சனமும் வைகாசி, ஆனி மாதங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. இதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கெதிரான தாக்குதலையும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்தி வந்த விதமும், தம்மீதான தொடர்ச்சியாக அரச ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சன‌ங்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அரசாங்கத்துடன் ஒத்துழையாமை எனும் நிலைப்பாட்டினை தாம் எடுக்கப்போவதாக அமிர்தலிங்கம் ஊடகங்களுக்கு அறிவித்தார். இதனால் ஜெயார் கடுங்கோபமுற்றார். ஜெயாருக்கும் முன்னணியினருக்கு வளரத் தொடங்கிய கசப்புணர்வை உள்ளூர ஆதரித்த புலிகள் ஆனி 28 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழர் தொடர்பான விடயங்களுக்குத் தாமே பொறுப்பானவர்கள் என்று தொனிப்பட அறிவித்தார்கள். "எம்மைப் புற‌க்கணித்திவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சமரசத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எமது இலட்சியத்தை அடையும் வகையில் தீர்வு அமையப்பெறாத விடத்து எமது ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது. புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையான விடுதலைப் புலிகள் ஆடி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் "சர்வகட்சி மாநாடு தமிழர் பிரச்சினைக்கான தீர்வெதனையும் தரப்போவதில்லை. கடந்த 17 வருட கால சரித்திரம் அதனையே உறுதிப்படுத்துகிறது. சிங்களத் தலைவர்களுடன் பேசிவந்த பழைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகள் தமது தலைமுடியினை இழந்ததுதான் கண்ட மிச்சம். ஆனால், அப்படியிருந்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழருக்கான தீர்வினை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையினை மட்டும் அவர்கள் கைவிடத் தயாரில்லை". "புரட்சிகரமான புதிய தலைமுறை ஒன்று அரசியல் களத்திற்குள் வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தாலோ, அரசியல் நடிகர்களாலோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்துவிட முடியாது. தமிழர்களுக்கும் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இனி இருக்கப்போவதில்லை. ஆகவே, தமீழிழ விடுதலைப் போராளிகளின் சரித்திரம் படைக்கப்போகும் சாகசக் களங்களை நாம் இனிமேல் தரிசிக்கப் போகிறோம். தமிழர்களின் புதிய பிரதிநிதிகள் அவர்களே. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அல்லாமல், போராளி இளைஞர்களே இனிமேல் தமிழர்களின் கதாநாயர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறப்பட்டிருந்தது. தமது இறுதி முயற்சியாக சத்தியாகக் கிரகப் போராட்டத்தை கையிலெடுத்த முன்னணியினர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அரசியல்க் களத்தில் தாமே இன்னமும் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்பதை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நிகழ்வின் முதலாம் வருட நினைவு தினத்தினை ஆடி 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மண் கோயிலின் முன்பாக சத்தியாக்கிரக நிகழ்வு மூலம் அனுஸ்ட்டிப்பது என்று முடிவெடுத்தார்கள். இதுதொடர்பாக அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "1983 ஆடி தமிழினக் கொலையினை துயருருதல், உண்ணாவிரதம் இருத்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக அனுட்டிக்கப்போகிறோம். தமிழர்களுக்கான உரிமைகளை வன்முறையற்ற வழிகள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாட்டில் நடத்தப்படவிருக்கும் போராட்டங்களின் ஆரம்பமாக இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வு அமையும்" என்று கூறியிருந்தார். இதுதொடர்பான விபரமான செய்திக்குறிப்பினை சிவசிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டார். "தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வுத் திட்டம் ஒன்றினை சர்வகட்சி மாநாடு தரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமே இன்னமும் கையளித்திருக்கிறார்கள். எம்மைப்பொறுத்தவரை இந்தப் பொறுப்பென்பது மிகவும் உன்னதமானது. இதனை அடைவதற்கு நாம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், இருதரப்புச் சமரசங்கள் மூலமாகவும் பாராளுமன்றத்தில் பேசுவதன் ஊடாகவும் சர்வதேச அளவில் எமது மக்களின் பிரச்சினைகளை அறியச் செய்திருக்கிறோம். ஆனால், இவை எதுவுமே எமக்கான தீர்வினைத் தரவில்லை. உலகில் பலவீனமானவர்கள் முன்னெடுக்கவேண்டிய போராட்ட வழிமுறை குறித்து மகாத்மா காந்தி கற்பித்துச் சென்றிருக்கிறார். ஆடி 25 ஆம் திகதி நாமும் அவ்வழியில் பயணிப்போம். உண்மையான சத்தியாக்கிரகிகளாக நாம் மாறுவோம். இச்சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்துமாக இருந்தால், நாமே அந்த அவலங்களுக்கு முதலில் முகம் கொடுப்போம்" என்று அவரின் அறிக்கை கூறியது. முன்னணியினரின் சத்தியாக்கிரகத்தைக் கலைத்துப்போட்ட போராளிகள் 1984 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரகாளியம்மண் ஆலய முன்றலில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான சுமார் 200 பேர் அடங்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், ஆதவாளர்களும் நிலத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மங்கையட்கரசி சுலோகங்களை பாடினார். புலிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். "இவ்வளவு காலமும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? மக்களுடன் நிற்கவேண்டிய தருணத்தில், அவர்களைக் கைவிட்டு ஓடி ஒளிந்துவிட்டு இப்போது வந்து அவர்களின் முன்னால் வந்து உங்களைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா?" என்கிற கேள்விகளும், கேலிகளும் முன்னணியினரை நோக்கி அங்கு எழுப்பப்பட்டன. உண்ணாவிரதம் இருந்து உரிமைகளை வெல்லும் காலம் முடிவடைந்துவிட்டது என்று இளைஞர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினைக் காணமுடியும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? என்று அவர்கள் முன்னணியினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்கள். இப்போது துப்பாக்கிகள் சுடத் தொடங்கிவிட்டன என்பதை மறக்கவேண்டாம் என்று நினைவுபடுத்தினார்கள். தமிழர்களின் போராட்டம் இளைஞர்களின் கைகளுக்கு தற்போது வந்துவிட்டது என்று அவர்கள் எச்சரித்தார்கள். "தயவுசெய்து உங்களின் சத்தியாக்கிரகத்தை முடித்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லுங்கள்" என்று அவர்கள் அறிவுருத்தினார்கள். சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்ட பலர் அங்கிருந்து விலகிச் சென்றார்கள். வெறும் 20 பேரே அங்கு தொடர்ந்தும் நின்றிருந்தார்கள். அவர்களை சூழ்ந்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. புலிகளின் போராளிகளில் ஒருவரான திலீபன் மதியவேளை, 12 உணவுப் பொதிகளுடன் அங்கு வந்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் முன்னால் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டன. அவர்களின் அருகில் அமர்ந்துகொண்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்களை திறந்து அருந்த ஆரம்பித்தார்கள். இதனையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வருவதாக அறிவித்துவிட்டு, தோல்வியுற்றவராய் அங்கிருந்து அகன்று சென்றார் அமிர்தலிங்கம். சமாதான வழிகளிலான போராட்டம் முடிவிற்கு வர, ஆயுதங்கள் மூலமான போராட்டம் களத்திற்கு வந்துவிட்டிருந்தது.
  18. பொது இணக்கப்பட்டிற்கான சாத்தியம் சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் இணைந்து தமது இறுதியறிக்கையினை பங்குனி 15 ஆம் திகதி ஜெயாரிடம் கையளித்தன. அதனை அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் பங்குனி 20 ஆம் திகதி ஜெயார் வெளியிட்டார். தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மூன்று முக்கிய விட‌யங்கள் மிக ஆளமாக கலந்தாலோசிக்கப்பட்டு, கட்சிகளுக்கிடையே நான்கு விடயங்கள் தொடர்பாக பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நான்கு விடயங்களையும் அவர் பின்வருமாறு விளக்கினார், 1. அரசை நடத்துவதற்கான பொறிமுறை. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதிசெய்வதற்காக மத்திய அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை பரவலாக்குவது. ஆனால், எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. 2. உள்ளூர் ஆட்சி மன்றங்களின் மீள் உருவாக்கம். ஐக்கிய தேசியக் கட்சி, கிராம அலுவலகர் மட்டத்தில் கிராம மண்டலங்களையும், உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் பிரதேச மண்டலங்களையும் தன்னிச்சையாக உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த மண்டலங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. 3. பிரஜாவுரிமையற்றவர்கள் எனும் நிலையினை இல்லாதொழிப்பது. மகா சங்கத்தினர் இதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றனர். 4. இனவன்முறைகளும் பயங்கரவாதமும். வன்முறைகளுக்கான காரணங்களும், அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளும் முற்றாக இல்லாதொழிக்கப்படுதல் அவசியம். ஜெயவர்த்தன குறிப்பிட்ட "பொது இணக்கப்பாடு" என்பதனை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அப்படியொரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக இதுவரையில் தாம் அறியவில்லை என்று அவர் கூறினார். இதற்கு ஜெயார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. "எனது தீர்மானமே பொது இணக்கப்பாடு" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார் ஜெயார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியையும் கொடுத்த ஜெயவர்த்தன, சர்வகட்சி மாநாட்டினை வைகாசி 9 ஆம் திகதிவரை தான் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தலிங்கம் மாநாட்டினை 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கான காரணத்தைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஜெயார், சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் தமது அறிக்கையினைத் தயாரிக்க 7 வாரங்கள் தேவைப்படுவதாகக் சர்வசாதாரணமாகக் கூறினார். இராணுவ நடவடிக்கைக்காக சர்வகட்சி மாநாட்டினை ஒத்திவைத்த ஜெயார் ஜெயார் சர்வகட்சி மாநாட்டினை வேண்டுமென்றே 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதை உணர்ந்த அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் , அதனை ஆட்சேபித்து கூட்டாக அவருக்கொரு கடிதத்தினை பங்குனி 23 ஆம் திகதி அனுப்பினார்கள். அக்கடிதத்தில் அரசாங்கம் மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தத் திட்டமிடுவதாக தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அக்கடிதம் பின்வருமாறு கூறுகிறது, "பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கிறோம் என்கிற போர்வையில் தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசாங்கம் நடத்தப்போகின்றது என்கிற அச்சம் தமிழர்களின் மனதில் உருவாகியிருக்கிறது. இந்த இராணுவ நடவடிக்கைகளில் பெருமளவு அப்பாவிகள் கொல்லப்படவிருக்கிறார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்". இந்தக் கூட்டுக் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அச்சம் நியாயமானது. ஜெயவர்த்தன உண்மையாகவே பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினைத் திட்டமிட்டு வந்தார். இஸ்ரேலில் இருந்து இராணுவ பயிற்சியாளர்களையும் , புலநாய்வு அதிகாரிகளையும் இந்த இராணுவ நடவடிக்கைக்காக அவர் தருவித்திருந்தார். தென்னாபிரிக்காவிலிருந்து இராணுவக் கவச வாகன‌ங்களும், நவீன ஆயுதங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இத்தாக்குதல் நடவடிக்கைக்கென்று புதிதாக கஜபா ரெஜிமெண்ட் எனும் படைப்பிரிவும் உருவாக்கப்பட்டு வந்தது. தேசியப் பாதுகாப்பு அமைச்சராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டதோடு பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற தெளிவான கட்டளையும், அதனை அடைவதற்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஜெயாரின் சவாலினை ஏற்ற புலிகள் அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட சவாலினை புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள். பங்குனி 24 ஆம் திகதி பருத்தித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். பங்குனி 26 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களைக் கொன்றார்கள். சித்திரை 9 ஆம் திகதி முதலாவது கார்க்குண்டுத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டார்கள். அரச அடக்குமுறைக்கெதிராக பொதுமக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொண்டார்கள். ஆத்திர மேலீட்டினால் ஆரியகுளத்தில் அமைந்திருந்த நாகவிகாரையும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இவை அனைத்தும் ஜெயாரை கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றிருந்தன. தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதைவிடவும் பலமாகத் திருப்பித் தாக்குவதே ஜெயாரின் நடைமுறையாக இருந்துவந்தது. பழிவாங்குதலை அரசியலில் ஒரு கொள்கையாகவே அவர் கைக்கொண்டு வந்திருந்தார். ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களை, குறிப்பாகப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது என்று அவர் கங்கணம் கட்டினார். தமிழ் மக்கள் மீதான தனது இராணுவப் பழிவாங்கல் நடவடிக்கைக்கான புறச் சூழலை அவர் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகத்துறையினைக் கொண்டு மிகக் கச்சிதமாக உருவாக்கத் தொடங்கினார். இதற்காக இரண்டுவகையான விடயங்களை அவர் மேற்கொண்டார். முதலாவது தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முற்றாக அழிப்பது. இதனைச் செய்வதற்கு மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் தேவையற்றவர்கள் எனும் நிலையினை மக்களிடையே உருவாக்குவது. ஏனென்றால், போராளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையினை முன்னணியினர் அப்போது இழந்திருந்தனர். இந்திய சஞ்சிகையான இந்தியா டுடேயிற்கு சித்திரை 30 ஆம் திகதி ஜெயார் வழங்கிய செவ்வியில் முன்னணியிர் தேவை அற்றுப் போய்விட்டது என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். தென்னிலங்கையின் பல ஊடகக்ங்களுக்கு தான் கொடுத்து வந்த செவ்விகளின் மூலமாகவும், தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் ஆற்றிய உரைகள் ஊடாகவும் ஜெயாரின் நிலைப்பாட்டினை நாட்டிற்கு நியாயப்படுத்தும் செயற்பாட்டில் லலித் அதுலத் முதலி ஈடுபட்டார். லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வாவுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பலன் இருக்கப் போகிறது?" என்ற கேள்வியை லலித் முன்வைத்தார். அதற்கான பதிலையும் தானே வழங்கினார், "அவர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தமிழ் மக்களை இப்போது பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஜெயாரின் திட்டத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் "பயங்கரவாத எதிர்ப்பு" நிலைப்பாட்டினை தனக்குச் சார்பாக ஜெயார் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். தனக்குச் சார்பான நாடுகளின் உதவியினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட ஜெயார் கங்க்கணம் கட்டியிருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. தான் பலமிழந்து போய்விட்டதை அமிர்தலிங்கம் உணரத் தலைப்பட்டார். சர்வகட்சி மாநாட்டில் பங்குனி 9 ஆம் திகதி சோபையிழந்து உரையாற்றிய அமிர்தலிங்கம் "எம்மை இந்த மாநாட்டிற்கு பேரம்பேசலில் ஈடுபட அழைத்தவரே எம்மீது வசைபாடி, எமது நம்பகத்தன்மையினை கேள்வி கேட்கும்போது, இம்மாநாடு கூட்டப்பட்டதற்கான உண்மை நோக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சமரசத் தீர்வு ஒன்றினைக் காண்பதல்ல என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் உறுதியாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மீண்டும் மீண்டும் குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்திய ஜெயார் ஜெயவர்த்தனா அரசியல்த் தீர்வில் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது வைகாசி மாதமளவில் இந்தியாவுக்கும், முன்னணியினருக்கும் தெளிவாகத் தெரிந்தது. சமாதான முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கத் தொடங்குகிறார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். வைகாசி 9 ஆம் திகதி பேசிய ஜெயவர்த்தனா தான் இரு குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். இதன்படி முதலாவது குழு அதிகாரப் பரவலாக்கத்திற்கான பொறிமுறை, வழங்கப்படும் அதிகாரங்கள் , அவற்றின் செயற்பாடுகள் குறித்து ஆராயும். இதற்கு பிரதமர் பிரேமதாச தலைவராக இருப்பார். இரண்டாவது குழு மக்களின் அவலங்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான சந்தர்ப்பங்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்வது, மொழி உரிமையினை நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து இக்குழு தீர்மானம் எடுக்கும். இதற்கு தேவநாயகம் தலைவராக இருப்பார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்க் காங்கிரஸ், கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இதற்கான தமது அதிருப்தியை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியதோடு, இந்தக் குழுக்களுக்கான அமர்வுகளில் தாம் பங்கெடுக்கப்போவதில்லையென்றும், சர்வகட்சி மாநாடு மீள ஆரம்பிக்கும் வேளையில் தாம் அதில் கலந்துகொள்வதாகவும் அறிவித்தன. சர்வதேசத்தை ஏமாற்றவே முன்னணியினரை ஜெயார் பாவிக்கிறார் ‍- போராளிகள் கூட்டத்தை ஒத்திவைத்துப் பேசிய ஜெயார், "இவ்விரு குழுக்களுக்கும் மிக முக்கியமான செயற்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் வாழும் பெருமளவு இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன தொடர்பாகச் செயற்படவிருக்கும் குழுமீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பது சில அரசியட் கட்சிகளில் இருக்கும் சிலருக்கான தேவை மட்டுமே. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்துவதென்பது எதிர்காலச் சந்ததியினரின் பெரும்பாலானவர்களுக்கு நாம் வழங்கும் உதவியாகும்" என்று கூறினார். ஜெயாரின் கருத்தினை தமிழ் இளைஞர்கள் எள்ளி நகையாடினார்கள். போராளி அமைப்புக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை ஏளனமாகப் பேசினார்கள். "சர்வதேச சமூகத்தையும், மனிதவுரிமை அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்காகவே உங்களை ஜெயவர்த்தனா பாவித்து வருகிறார் என்று நாம் உங்களுக்கு முன்னரே கூறியிருந்தோம்" என்று அவர்கள் அமிர்தலிங்கத்தை விமர்சித்தார்கள். இதனை முன்னணியினர் பார்த்தசாரதியின் கவனத்திற்குக் கொண்டுசென்றபோது, "பொறுமையாக இருங்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இக்குழுக்கள் வைகாசியில் ஐந்துமுறை கூடின. ஆனி 1 ஆம் திகதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னணியினரும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான இறுதியானதும் உறுதியானதுமான தீர்வினை உடனடியாக எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழர் தாயகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருந்த இராணுவ ஒடுக்குமுறைபற்றியும் சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஏறெடுத்தும் பார்க்கவும் ஜெயார் விரும்பவில்லை. அவர் அப்போதுதான் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இருவாரகால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்திற்கான நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களைக் கோரியிருந்த ஜெயார், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஜப்பானிடமும், தென்கொரியாவிடமும் கேட்டிருந்தார்.
  19. நன்றியண்ணா, நான் அந்த நேரத்தில் எதனையும் பதிவேற்றவில்லை என்று நினைக்கிறேன். பார்த்த அளவிற்கு எவையும் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
  20. சமாதானப் பேச்சுக்களை நீர்த்துப்போகச் செய்யும் ஜெயாரின் சூழ்ச்சி தான் அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிங்களப் பேரினவாதத்தின் வான்கதவுகளை அகலத் திறந்தார் ஜெயவர்த்தன. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று தமது பரிந்துரைகளை முன்வைக்க அரசியட் கட்சிகளுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை இனவாத, மதவாத அமைப்புக்களுக்கும் அவர் விஸ்த்தரித்தார். இதன்படி ஜெயார், மகா சங்கத்தின் உச்ச பீடத்தினையும், அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், அகில இலங்கை பெளத்த சம்மேளங்களின் ஒருங்கிணைப்பு, அகில இலங்கை இந்து காங்கிரஸ் மற்றும் கிறீஸ்த்தவ முஸ்லீம் மத அமைப்புக்களையும் தமது அரசியல்ப் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜெயாரின் இந்தச் செயலினை தமிழர்களும் இந்தியாவும் ஒரு சதியாகவே பார்த்தனர். சர்வகட்சி மாநாட்டின் நோக்கத்தை வலுவிழக்கப்பண்ணி, தமிழரின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தி, சிங்கள பெளத்த தேசியவாதத்தினை பலப்படுத்தும் கைங்கரியமாக இதனை அவர்கள் நோக்கினர். மகாசங்கத்தின் உச்ச பீடமும், ஏனைய பெளத்த சிங்கள அமைப்புக்களும் தமிழருக்கெதிரான கடும்போக்கு நிலையினைக் கைக்கொண்டன. சிங்களத் தீவிரவாதத்திற்கு பெளத்த பிக்குவான கலாநிதி ராகுல தேரை தலைமை தாங்கினார். இணைப்பு சி இயினை முற்றாக நிராகரித்த அவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நாம் இப்போது வழங்கினால், அவர்கள் அதனைக் கொண்டு தமது கனவான தமிழ் ஈழத்தை ஒருநாள் அமைத்துவிடுவார்கள். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் பிரகடனம் செய்தார். சிங்கள பெளத்த இனவாதிகளை சர்வகட்சி மாநாட்டிற்குள் இழுத்துவிட்டதன் மூலம் ஜெயார் எதிர்பார்த்த கால அவகாசத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய படையினரின் உதவியையும், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியையும் அவரால் பெற முடிந்தது. சர்வகட்சி மாநாட்டின் கால எல்லையைத் தொடர்ச்சியாக நீட்டித்துவந்த ஜெயார், ஒவ்வொரு அமர்விற்கும் இடையிலான கால இடைவெளியினையும் நீட்டித்துக்கொண்டார். சர்வகட்சி மாநாட்டினை இருகுழுக்களாகப் பிரித்து காலத்தை இழுத்தடித்த ஜெயார் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்த 7 ஆம் நளான தை 20 ஆம் திகதி பேசிய ஜெயார், இந்த மாநாடு இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவித்தார். முதலாவது குழு அரசாங்கத்தின் அமைப்புக்கள் தொடர்பாகச் செயறபடும் அதேவேளை மற்றைய குழு தீவிரவாதத்தினை முற்றாக அழிப்பதில் ஈடுபடும் என்றும், ஆகவே இந்தக் குழுக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து மாநாட்டு உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார். இக்குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் சில தின‌ங்கள் நீண்டு சென்றன. முடிவில் பேசிய ஜெயார், இக்குழுக்கள் இரண்டினதும் நோக்கங்கள் ஒருபுள்ளியில் இணையவேண்டும் என்று கூறினார். இக்குழுக்களுக்குள் உள்வாங்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிமனாதாகக் காணப்பட்டது. இவ்விரு குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இவ்வறிக்கை உள்ளடக்கப்படவேண்டிய 7 பிரிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. 1. நாட்டின் இறைமையினையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கும் பொறிமுறை. இப்பொறிமுறையூடாக அரசாங்கம் நாட்டின் அனைத்து இன மக்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் சமாதானமான முறையில் வாழக்கூடியதும், எப்பகுதியிலும் சுதந்திரமாக தொழில் புரியக்கூடியதுமான சூழ்நிலையினை உருவாக்குவது. 2. அனைவருக்கும் கல்வியில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 3. அனைவருக்கும் தொழில்வாய்ப்பில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 4. காணிப்பிரச்சினையினைத் தீர்த்துக்கொள்ள பொறிமுறை ஒன்றை வகுப்பது. 5. நாட்டின் எந்த மூலையிலும் வாழும் ஒருவருக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவது. 6. பொருளாதார வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை வழங்குவது. 7. ஏனைய விடயங்கள். சர்வகட்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை குலைத்து அதன் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஜெயார் தொடர்ந்து செயற்பட்டு வந்தார். சர்வக்ட்சி மாநாட்டின் இரு குழுக்களுக்கும் அவர் வழங்கிய பணிப்புரையில் தமிழர்களின் உரிமைகள் மிகச் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக தமிழர்களின் கவலைகள் குறித்துப் பேசலாம் என்கிற நிலையினை ஜெயார் ஏற்படுத்தியிருந்தார். இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியாவின் தலையீட்டினை முடக்கிய ஜெயார் சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழு தை மாதத்தில் இரு தடவைகளும், மாசி மாதத்தில் மூன்று தடவைகளும் பங்குனியில் இரு தடவைகளும் கூடிப் பேசியது. ஆனால், இந்தக் கலந்துரையாடல்கள் எல்லாமே இலக்கற்று , எழுந்தமானமாக நடந்துகொண்டிருந்தன. சாமர்த்தியசாலியான‌ தொண்டைமான், தமிழர்களின் அவலங்களில் முக்கியமானது அவர்கள் தமக்கென்று ஒரு தேசத்தைக் கொண்டிருக்காமைதான் என்று கூறியதோடு, முதலில் அதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வொன்றினைக் காணவேண்டும் என்று கோரினார். இச்சந்தர்ப்பத்திற்காக அதுவரையில் காத்திருந்த ஜெயாரும், இந்தியாவிற்கும், உலகிற்கும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக தான் சிலவிடயங்களைச் சாதித்துவிட்டதாகக் காட்ட இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், மகா சங்கத்தின் தலைவர்களை தன்னுடன் பிரத்தியே சந்திப்பொன்றிற்கு ஜெயார் அழைத்தார். இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் நலன்குறித்து மட்டுமே இந்தியா சட்ட ரீதியாக இலங்கையில் தலையீடு செய்ய முடியும் என்று மகா சங்கத்தினரைப் பார்த்து அவர் கூறினார். ஆகவே, நாடற்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையினை வழங்கிவிட்டால் இலங்கையில் இந்தியா தலையீடு செய்யும் உரிமை இல்லாதுபோய்விடும் என்று அவர் வாதிட்டார். மேலும், பிரஜாவுரிமையற்று வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான் என்று அவர் தெரிவித்தார். மகாசங்கத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களில் பெளத்த மகாசங்கம் செலுத்திய அதிகாரம் சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாநாட்டின் முடிவிலும் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இப்பத்திரிக்கையாளர் சந்திப்புக்களுக்கு நானும் போயிருந்தேன். அன்றைய அமர்வில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமையினைத் தீர்க்க மாநாட்டின் உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். இதனை மாநாட்டின் முதலாவது பெரிய வெற்றியென்றும் புகழ்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடந்துகொண்டிருந்த அறையின் கதவு மெல்லத் திறந்தது. மகாசங்கத்தின் மகாநாயக்கர்கள் வெளியே நின்றிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. சிங்கள பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கலாநிதி ராகுல தேரை எனும் பிக்கு பத்திரிக்கையாளர்களிடம் தாமும் பேச வேண்டும் என்று லலித் அதுலத் முதலியைப் பார்த்துக் கூறினார். லலித்தும் அதற்கு இணங்கினார். மகாசங்கத்தின் அதியுச்ச பீடத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வகட்சி மநாட்டு உறுப்பினர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க ஏகமனதாகச் சம்மதித்துவிட்டதாக அறிவித்தார். ஆகவே, இலங்கை விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையீடு செய்வதற்கு எந்த முகாந்திரங்களும் இல்லையென்றும் அவர் தீர்க்கமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல தேரை, இலங்கைத் தமிழர்களின் எமது நாட்டின் பிரஜைகள். ஆகவே, அவர்கள் சார்பாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றும் வாதிட்டார். மகா சங்கத்தின் அதியுச்ச அமைப்பினால் விடுக்கப்பட்ட பரிந்துரை பின்வருமாறு கூறியது, "தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ எமது நாட்டில் இருக்க முடியாது. சிறிமா சாஸ்த்திரி ஆகியோரிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்களை அவர்களின் தாய்நாடான இந்தியாவிற்குத் திருப்பியனுப்பிவிடுவதன் ஊடாகவும், மீதமிருப்போருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்குவதன் ஊடாகவும் இதனை நாம் நிவர்த்திசெய்துகொள்ள முடியும். பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மகாசங்கத்தினர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கி, பிரச்சினையினைத் தீர்த்துவைக்க மகாசங்கத்தினர் தடைவிதிக்கப்போவதில்லை" என்று கூறியிருந்தது. இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதற்காக அடையாளம் காணப்பட்டிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையினையும் மகாசங்கத்தினரின் இந்த பரிந்துரை கோடிட்டுக் காட்டியிருந்தது. 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் சிறிமாவுக்கும் சாஸ்த்திரிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் 600,000 பேரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இருந்ததுடன் மீதி 375,000 பேருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்க இலங்கை ஒத்துக்கொண்டிருந்தது. இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவென்று வழங்கப்பட்ட 15 வருட கால அவகாசத்தில் 504,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மீதி 96,000 பேரும் நாடற்றவர்களாகவே இருந்தனர். ஆகவே தொண்டைமான், இந்திய பிரஜாவுரிமையற்றிருந்த 96,000 பேருக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தார். மகாசங்கத்தினர் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க சம்மதித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இவர்கள் தான்.
  21. பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் மூன்று படிப்பினைகள் 1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலிருந்து மூன்று முக்கிய படிப்பினைகளை தமிழ் மக்கள் கற்றுக்கொண்டார்கள். சிங்கள மக்களும், பெளத்த மத குருக்களும் ஒருபோதுமே தமிழர்களின் அபிலாஷைகளை வழங்க விரும்பப்போவதில்லை, சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கான எந்த விருப்பமும் இல்லை, தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலன்களும் தமிழ்ப் போராளிகளின் ஆயுத பலத்திலேயே தங்கியிருக்கிறது ஆகிய மூன்றுமே அந்தப் படிப்பினைகளாகும். 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெரும் எடுப்புடன் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ராணுவப் பாதுகாப்புடன் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மண்டப வாயிலில் நான் சந்தித்தேன். மாநாடு குறித்த அமிர்தலிங்கத்தின் எண்ணங்கள் குறித்து அவரிடம் வினவினேன். "சர்வகட்சி மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும், தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று மிகுந்த நம்பிக்கையோடு அவர் பதிலளித்தார். சர்வகட்சி மாநாட்டின் மீது அமிர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு முடிந்தபின்னர் என்னுடன் பேசிய அமிர், "ஜெயவர்த்தன விசாலாமான‌ புன்னகையோடு என்னை மாநாட்டிற்கு வரவேற்றார்" என்று மகிழ்வுடன் கூறினார். அருகிலிருந்த சிவசிதம்பரமோ, "அவ்வளவும் நஞ்சு" என்று விரக்தியுடன் கூறினார். ஆனால், மாநாட்டின் அரம்ப நாள் அன்றே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் எல்லோருமே சிவசிதம்பரத்தின் கூற்றையே பிரதிபலித்தனர். தமிழர்களை ஜெயார் முற்றாகக் கைவிட்டு விட்டதாக அவர்கள் உணர்ந்தனர். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்துவதே சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டனர். மாநாட்டினை ஆரம்பித்துவைத்து முதலாவதாகப் பேசிய ஜெயார், மாநாட்டின் உண்மையான குறிக்கோள் எதுவென்பதை தனது பேச்சில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டார். "முதலாவது நாம் எமது நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் எவ்விலை கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக நாட்டின் ஒருமைப்பாடு இதுவரை இருப்பதுபோல தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மூன்றாவதாக, பிரிவினைவாதத்தினையும் வன்முறையினையும் முற்றாக அழிக்க அனைத்து அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஒற்றையாட்சி நாட்டிற்குள் வாழ்வதை தமிழர்கள் முற்றாக எதிர்த்தே வந்திருந்தனர். ஆனால், நாட்டைத் தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் ஒன்றுபட்ட நாடாக வைத்திருப்பதுதான் மாநாட்டின் முக்கிய குறிக்கோள் என்று ஜெயார் கூறியதன் மூலம் வெளிப்படையாகவே தமிழரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார்.மேலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வாக எதனையும் அவர் முன்வைக்க விரும்பவில்லை. அத்துடன், இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே முன்னணியினை இந்த மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அது பற்றிப் பேசுவதையும் அவர் முற்றாகத் தவிர்த்தார். ஜெயாரரின் பேச்சைக் கேட்ட அமிர்தலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். பேச்சுவல்லமை கொண்ட தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினர் குமார் பொன்னம்பலமோ இணைப்பு "பி" மற்றும் இணைப்பு "சி" பற்றிக் கேள்வியெழுப்பியதுடன், "இந்த ஆவணங்களை தயாரித்தது யார்?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சாதுரியமாகப் பதிலளித்த ஜெயரவர்த்தன, "ஓ, அவையா? அவைதான் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருந்த ஆரம்ப ஆவணங்கள்" என்று கூறினார். "அப்படியானால், அவற்றினைத் தயாரித்தது யார்?" என்று குமார் பொன்னம்பலம் மீண்டும் கேட்டார். "மாநாட்டின் செயலாளரே அதனைத் தயாரித்தார்" என்று ஜெயார் பதிலளித்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த குமார் பொன்னம்பலம், "மாநாட்டிற்கென்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாமே பெற்றொர்கள் என்றால், இணைப்பு சி மட்டும் அநாதைப் பிள்ளையாக நிற்கிறது" என்று முணுமுணுத்தார். இடைமறித்த தொண்டைமானோ இணைப்பு "சி" இனை தான் இந்த மாநாட்டிற்கான ஆவணமாகக் கருதுவாதக‌த் தெரிவித்தார். மாநாட்டில் கூட்டாகப் பேச முன்வந்த தமிழ்த் தலைவர்கள் மாநாட்டின் முதல் சில நாட்கள் கட்சித் தலைவர்கள் தமது ஆரம்ப அறிக்கைகளை பேச ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தை மாதம் 18 ஆம் திகதி தாம் செயற்பட வேண்டிய முறைகுறித்து கூடிப் பேசினார்கள். அதன்படி அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டைமான் ஆகியோ இணைப்பு சி இயினை முற்றாக ஏற்றுக்கொள்வதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி பொறுந்திய பிராந்தியங்களை தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்து பேசி அழுத்தம் கொடுப்பதென்று முடிவாகியது. தை 19 ஆம் திகதி இந்த மூன்று தலைவர்களினாலும் அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்ட விடயங்கள் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை முற்றாக நடைமுறைப்படுத்துவதாகவே இருந்தது. அமிரின் மாநாட்டு உரை அமிர்தலிங்கமே முதலாவதாகப் பேசினார். "இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எமது அவலங்களையும், பிரச்சினைகளையும் முற்றாகத் தீர்க்கப் போதுமானவையாக இல்லாதபோதும், அதனை அடிப்படையாக வைத்து தொடர்ந்தும் பேரம்பேசலில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்திலேயே இங்கு வந்திருக்கிறோம்" என்று பேசினார். தனது ஆரம்ப உரையினை அமிர் இரு பாகங்களாக வகுத்திருந்தார். முதலாவது பகுதியில் தமிழர்கள் சரித்திர காலம் தொட்டு வடக்குக் கிழக்கில் தம்மைத்தாமே ஆண்டு வந்த தனித்தன்மையான தேசத்து மக்கள் என்று கூறினார். 1619 இல் போர்த்துக்கேயரினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தேசம் பின்னர் ஒல்லாந்தராலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது என்றும் அவர் கூறினார். அதுவரை தனித்தனியாக இருந்த தமிழ்த் தேசத்தையும், சிங்கள தேசங்களையும் 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத் தேவைக்காக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழர்களையும் சிங்களவர்களையும் சமமான இனங்களாக நடத்தினார்கள் என்றும் அவர் விளக்கினார். ஆனால், 1948 இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டதோடு, வஞ்சிப்பிற்கும் உள்ளானார்கள் என்று கூறினார். பின்னர் தமிழர் மீது நடத்தப்பட்ட சிங்களவர்களின் புறக்கணிப்பையும், வஞ்சகத்தையும் தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் கூறினார். தனது பேச்சின் இரண்டாவது பகுதியில் தமிழர்கள் இழக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக நடத்திய அகிம்சை வழி ஜனநாயகப் போரட்டங்களின் சரித்திரத்தைப் பட்டியலிட்டார் அமிர்தலிங்கம். மேலும், தமிழரின் ஜனநாயகவழிப் போராட்டங்களை அரசும், சிங்களக் காடையர்களும் வன்முறைகளைப் பாவித்து மிருகத்தனமாக அடக்கிய வரலாற்றையும் அவர் பட்டியலிட்டார்.தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறையே தமிழர்கள் தமது பாதுகாப்பினையும், நலன்களையும் இருப்பினையும் பாதுகாத்துக்கொள்ள தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை எனும் எண்ணும் நிலைக்குத் தள்ளிச் சென்றதாக அவர் கூறினார். தனிநாட்டிற்கு மாற்றீடான, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட தமிழர்கள் தயாராக இருப்பதாகக் கூறினார் அமிர்தலிங்கம். குமார் பொன்னம்பலத்தின் உரை குமார் பொன்னம்பலம் அடுத்ததாகப் பேசினார். தமிழர்களின் கோரிக்கை தனிநாடுதான் என்று அவர் கூறினார். மொத்தத் தமிழினமும் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் அணிதிரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், சிங்களவர்களைப் போன்று பாதுகாப்புடனும், நலன்கள் விட்டுக் கொடுக்கப்படாமலும், சுய கெளரவத்துடனும், சம பங்காளிகளாக‌ சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ‌ தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குமார் கூறினார். ஏனைய கட்சிகளிடமிருந்து இணைப்பு சி இற்குக் கிடைத்த ஆதரவு பின்னர் பேசிய தொண்டைமானும் அப்துள் அஸீஸும் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினர். இடதுசாரிகளான லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைப்பு சி இனை வரவேற்றிருந்தன. அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைகளை அமைப்பதை தமது கட்சி ஆதரிக்கும் என்று கூறியது. இணைப்பு சி இற்கு மாநாட்டில் பங்கெடுத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவளிக்க ஆரம்பித்ததையடுத்து ஜெயாரும் பிரேமதாசவும் கலக்கமடைந்தனர். இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வகையான அசெளகரியத்திற்கு முகம் கொடுத்தது என்பதனை தை மாதம் 25 ஆம் திகதி பிரேமதாச வழங்கிய உரை சுட்டிக் காட்டியிருந்தது. மேலுழுந்தவாரியாகப் பேசிய பிரேமதாச, எந்தவொரு முடிவிற்கு முன்வராதும் பிடிகொடுக்காத வகையிலும் பேசினார்.
  22. தானே அமைத்த சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப பெளத்த மகா சங்கத்தை நாடிய ஜெயவர்த்தன‌ தில்லியில் தான் ஒத்துக்கொண்ட பரிந்துரைகளை கைகழுவி விட ஜெயார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும், ஆனால் ஜெயாரை நிர்ப்பந்தித்து அவற்றை மீள சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்க பார்த்தசாரதி மேற்கொண்ட முயற்சியும் சர்வகட்சி மாநாட்டின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களை மாநாடு ஆரம்பிக்கு முன்னரே ஏற்படுத்தியிருந்தன. இதனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகுந்த வருத்தம் அடைந்திருந்தது. மேலும் எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சியான மகஜன‌ எக்சத் பெரமுன ஆகிய‌னவவும் இதுகுறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. தை மாதம் 7 ஆம் திகதி கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணைப்பு "சி" குறித்து ஜெயாரிடம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தது. பல மத்திய குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஜெயார் தம்மை ஏமாற்றவே முனைகிறார் என்று நம்பினர். கூட்டத்தின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிறிமா, "எனது கோரிக்கையின் பின்னரே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்த ஜெயார், தானே அதுபற்றி தீர்மானம் எடுத்ததாக கூறினார். தற்போது அனைத்துக் கட்சிகளும் தமது பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அவரது ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தனது பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. நாம் முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கிவிட்டு பின்னர் எதிர்க்கட்சியின் கோரிக்கையின்படியே நான் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினேன் என்று கூறப்போகிறார். ஆகவே, முதலில் ஜனாதிபதியும் அவரது கட்சியும் தமது பரிந்துரைகளை முன்வைக்கட்டும்" என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவரான அநுர பேசுகையில், "பார்த்தசாரதியுடன் தானே செய்துகொண்ட ஒப்பந்தத்தை பின்னர் செய்யவில்லை என்று ஜெயார் கூறியிருப்பதன் மூலம், அவர் பார்த்தசாரதியை மட்டும் முட்டாளாக்க எத்தனிக்கவில்லை, முழு நாட்டையுமே முட்டாளாக்க முனைந்திருக்கிறார்" என்று கூறினார். வழமை போலவே சுதந்திரக் கட்சியை வீழ்த்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார் ஜெயார். பெளத்த உச்ச பீடமான மகா சங்க‌த்துடன் கூட்டமொன்றினை தை 8 ஆம் திகதி ஜெயார் நடத்தினார். நாட்டிலுள்ள உயர் பெளத்த பிக்குகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அஸ்கிரிய பீடத்தின் பலிபானே சந்தானந்த மகா நாயக்க தேரை, மதிகே பன்னசீக தேரை, தெலெல்ல தம்மானந்த தேரை, வல்பொல ராகுல தேரை, கென்பிடிகெதர ஞானவன்ச தேரை, பெல்லாவில விமலரத்ண தேரை மற்றும் மாதுலுவே சோபித தேரை ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பெளத்த பிக்குகள் என்பதுடன் இவர்கள் அனைவரும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த இனவாதிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கூட்டத்தில் பேசிய தேரைகள் அனைவரும் தாம் இணைப்பு "சி" யினை எதிர்ப்பதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் தமிழர்களுக்கு வழங்க அரசாங்கம் முயலும் பட்சத்தில் தாம் அதனைத் தடுத்து நிறுத்திவிடப்போவதாகவும் எச்சரித்தனர். தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை எனும் அறிவிப்பினை சுதந்திரக் கட்சியும், மகஜன‌ எக்சத் பெரமுன கட்சியும் தை மாதம் 8 ஆம் திகதி அறிவித்தன. தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைப்பு "சி" குறித்த விபரங்களை ஜெயார் வழங்கத் தவறியமையை தமது பங்கேற்காமைக்கான காரணமாக அவை முன்வைத்திருந்தன. யாழ்ப்பாணம் சென்ற‌ அமிர் தலைமையிலான குழுவிற்கு நேர்ந்த அவமானம் சமாதான முயற்சிகளுக்கான ஒரு படிக்கல்லாக கருதப்பட்ட சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப சிங்கள கடும்போக்குவாதிகளை ஜெயார் உசுப்பிவிட்டிருக்க, ஏற்படவிருக்கும் வன்முறைகச் சுழலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தை மாதம் 8 ஆம் திகதி தமது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்றனர். சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுக்கக் கூடாது எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அவர்களை யாழ்ப்பாணத்தில் வரவேற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் சென்றபோது மாணவர்கள் அவர்களைநோக்கி கூச்சல் எழுப்பத் தொடங்கினர். அமிர்தலிங்கத்திற்கும் அவரது சகக்களுக்கும் யாழ்ப்பாணத்தில் கிடைத்த வரவேற்புப்பற்றி கொழும்பின் சிங்கள, ஆங்கில‌ ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டன. அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பிற்கு அவர் பொறுத்தமானவர்தான் என்று அவை எள்ளி நகையாடின. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எக்காரணத்திற்காக முன்னணியின் தலைவர்களை அவ்வாறு வரவேற்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இதுகுறித்த செய்தியொன்றினை வெளியிட்ட தி ஐலண்ட் பத்திரிக்கை தை மாதம் 10 ஆம் திகதி அமிர்தலிங்கம் சர்வக்ட்சி மாநாட்டில் பங்கேற்பது போன்ற கேலிச் சித்திரத்தையும் வரைந்திருந்தது. அக்கேலிச் சித்திரத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ஆயுதம் தரித்த போராளிகள் மாநாட்டு மண்டபத்தில் நுழைவது போன்று வரையப்பட்டிருந்தது. சென்னையில் அமிர்தலிங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்த போராளிகள், அவரை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தன. ஆனால் கொழும்பிலோ, சிங்களப் பத்திரிக்கைகள் போராளிகளை சர்வகட்சிக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி அழைத்துவருவதாக கேலிச் சித்திரம் வரைந்து மகிழ்ந்தன. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் விரும்பியமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர் மீது தமது அதிருப்தியைக் காண்பித்திருந்தார்கள். ஆனால், சிங்களவர்களின் பத்திரிக்கைகளோ அமிர்தலிங்கம் போராளிகளை கூட்டத்திற்கு அழைத்துவர யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக செய்தியும், கேலிச் சித்திரமும் வெளியிட்டிருந்தன. தமிழர்களின் பிரச்சினை குறித்து எவ்வகையான புரிதலினைச் சிங்களப் பத்திரிக்கைகள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். யாழ்ப்பாணத் தமிழர்கள் முன் நாயகனாகவிருந்து துரோகியாக மாறிய அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நான் அமிர்தலிங்கத்தைச் சந்தித்தேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக மாநாட்டு நிகழ்வை செய்தியாக்க நான் அங்கு சென்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் தமக்கு நேர்ந்த அவமானம் குறித்து அவர்கள் வருத்தத்துடன் காணப்பட்டனர். "எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கான நாயகனாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், தற்போது அவர்கள் என்னை துரோகி என்று அழைக்கிறார்கள். அவர்கள் போகவிருக்கும் பாதை எனது மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் கொண்டுவரப்போகிறது. அதைத் தடுக்கவே நான் முயல்கிறேன். இந்த முயற்சியில் ஜெயவர்த்தன எனக்கு உதவுவார் என்று நான் நம்பவில்லை. என்னைப் பலவீனப்படுத்தி, போராளிகளை பலமாக்கி, பின்னர் இராணுவ ரீதியில் அவர்களை முற்றாக அழித்துவிடவே அவர் கங்கணம் கட்டியிருக்கிறார்" என்று அமிர்தலிங்கம் என்னிடம் வருத்தத்துடன் கூறினார். ஜெயவர்த்தனவின் திட்டமும் அதுதான். தனது திட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ளவே சர்வகட்சி மாநாட்டினை அவர் பயன்படுத்த முடிவெடுத்தார். இத்திட்டத்திற்காக சுமார் ஒருவருட காலத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தை மாதம் 10 ஆம் திகதி முதல் மார்கழி 21 வரை சர்வகட்சி மாநாடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் வழங்காது அவரால் இழுத்துச் செல்லப்பட்டது. இக்காலத்தில் தனது இராணுவத்தை அவர் பலப்படுத்தினார். தமிழர் தாயகத்தில் பாரிய அளவில் சிங்கள‌ குடியேற்றங்களை முடுக்கிவிட்டார்.
  23. இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் ‍ இணைப்பு - சி தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது. தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன. 1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும். 2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம். 3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார். 4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும். 5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும். 6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும். 7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும். 9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். 11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். 12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும். 13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.
  24. அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கோரிய ஆயுத அமைப்புக்களும், பங்கெடுக்க அழுத்தம் கொடுத்த இந்தியாவும் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், ஜெயார் தான் வழங்கிய வாக்கிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார். தமது கட்சியைப் பொறுத்தவரையில் ஈழக் கோரிக்கை தொடர்பாக உறுதியாகவே இருப்பதாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றான , நிகரான தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தாம் தயாராக இருக்கிறோம் என்பதை ஆரம்பத்திலிருந்தே தமது கட்சி வலியுறுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் குறிப்பிடப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதனையும் தாம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார். சென்னையில் போராளிகளைச் சந்திப்பதற்காகக் கூட்டம் ஒன்றினை நடதத் திட்டமிட்டார் அமிர். சர்வகட்சி மாநாட்டில் தான் பேசிய விடயங்கள் குறித்து அவர்களுடன் தான் பேச விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், எந்த ஆயுத அமைப்பும் அமிரின் கோரிக்கைக்குப் பதில் வழங்கவில்லை. மூன்றாம் தரப்பினரூடாக அமிருக்குப் பதிலளித்த போராளி அமைப்புக்கள் அமிர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை தாம் எதிர்ப்பதாக மட்டும் கூறியிருந்தார்கள். "அங்கு போய் எந்த விடயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கப் போகிறீர்கள்? தனிநாட்டினை விட்டுக் கொடுக்கிறோம் என்பதனையா?" என்று அவர்கள் கோபத்துடன் கேட்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாட்டிறகுச் செல்லக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை அவர்கள் கோரினார்கள். பார்த்தசாரதியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ஜெயார் தை மாதம் 3 ஆம் திகதி கொழும்பு வந்திருந்த பார்த்தசாரதி அன்று மாலை ஜெயாரைச் சந்தித்தார். தில்லியில் இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சற்று அதிகாரம் மிக்க தொனியிலேயே பாரத்தசாரதி ஜெயாருடன் பேசினார். இந்திராவுடனான பேச்சுக்களில் ஜெயார் ஒத்துக்கொண்ட விடயங்களை அவர் பின்னர் கைவிட்டதற்கான காரணங்களாக அமெரிக்க ஜெனரலான வோல்ட்டர்ஸின் வருகை, புதிய ஆயுதக் கொள்வனவுகள், வெளிநாட்டுக் கூலிப்படையினரின் உதவிகள் ஆகியவையே அமைந்திருந்தனவா என்று பார்த்தசாரதி ஜெயாருடனான பேச்சுக்களின்போது வினவியிருந்தார். தமிழர்களின் பாதுகாப்பும், நலன்களும் பாதுகாக்கப்படும்வரை அவர்கள் தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடப்போவதில்லை என்று ஜெயாரிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி. ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மகாணங்களில் தமிழர்கள் சுயாட்சி அதிகாரத்தை கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே அவர்களின் பாதுகாப்பும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்றும், இப்பிரதேசத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார். பார்த்தசாரதியின் கடுமையான பேச்சுக்களின் பின்னர் விட்டுக் கொடுப்பினை மேற்கொள்ள முனைந்த ஜெயார், தனக்கும் பார்த்தசாரதிக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுக்களின் சாராம்சத்தை இணைப்பு "சி" எனும் தலைப்பில் வெளியிட்டார். மறுநாளான, தைமாதம் 4 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பார்த்தசாரதி அவரை உடனடியாக கொழும்பிற்கு வருமாறு அழைத்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் மற்றும் தங்கத்துரை ஆகிய முன்னணியின் தலைவர்கள் கொழும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து புறக்கோட்டையில் அமைந்திருந்த தப்ரொபேன் விடுதிக்கு ராணுவ அணியினரின் பாதுகாப்புடன் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதியில் இரண்டாவது மாடியில் அவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. அவர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ அணியொன்று அங்கு நிலை நிறுத்தப்பட்டது. கொழும்பை வந்தடைந்தவுடன் அவர்கள் பார்த்தசாரதியைச் சந்தித்து உரையாடினார்கள். அங்கு பேசிய பார்த்தசாரதி முன்னணியினர் கட்டாயம் சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தும் பங்கெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநாட்டில் தமக்குத் தேவையான அனைத்துக் கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்ப வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஜெயாரை இலங்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபம் என்று வர்ணித்த அமிர்தலிங்கம் முன்னணியின் தலைவர்களை நான் தப்ரொபேன் விடுதியில் சென்று சந்தித்தேன். அமிர்தலிங்கம் சோபையிழந்து காணப்பட்டார். தாம் கடும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது தமக்குக் கவலையினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். "இந்த நாடு எத்துணை கேவலாமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த நகரத்தின் வீதிகளில்த்தானே நாம் இரவு பகலாக நடந்து திரிந்தோம்?" என்று அவர் சோகத்துடன் கூறினார். பின்னர் என்னைப் பார்த்து, "எனக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராக வந்த அநுரா எப்படி இருக்கிறார்?" என்று வினவினார். மேலும், "சர்வகட்சி மாநாட்டில் சுதந்திரக் கட்சி பங்கெடுக்குமா?" என்றும் கேட்டார். நான் இதுகுறித்து அனுராவிடம் இரு தினங்களுக்கு முன்னர் கேட்டுக்கொண்டதாக அமிரிடம் கூறினேன். என்னிடம் பதிலளித்த அநுர, "தான் எடுக்கும் முடிவினை நடைமுறைப்படுத்த துணிவற்ற ஒரு மனிதரை நான் எப்படி நம்பமுடியும்?" என்று கேட்டிருந்தார். ஜெயாரை நம்ப முடியாமைக்கான காரணங்களை அநுரா மூன்று சம்பவங்களை முன்வைத்து விளக்கியிருந்தார். முதலாவது, பார்த்தசாரதியுடனான தனது ஒப்பந்தத்தை தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. இரண்டாவது, இணைப்பு இரண்டில் தானே வெளியிட்ட பரிந்துரைகளை இந்தியாவின் அழுத்தத்தினால் தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. மூன்றாவது, சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னணியினரை அழைக்க அச்சப்பட்டிருந்த ஜெயார், சிறிமா துணிவாக, "அவர்களை அழையுங்கள்" என்று கூறியபின்னரே உத்தியோகபூர்வமாக முன்னணியினரை அழைக்க முன்வந்தமை. நான் கூறிய கருத்தினைக் கேட்டுக்கொண்ட அமிர் சிரிக்கத் தொடங்கினார். "ஜெயார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. அவர் பார்த்தசாரதியை எப்படி ஏமாற்றினார் என்பதைப் பார்த்தீர்கள் தானே? பார்த்தசாரதியுடனான ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் இடுவதை சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்ட ஜெயார், பின்னர் அவ்வொப்பந்தத்தில் கையொப்பமிடவில்லையென்பதால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எனக்குக் கிடையாது என்று கூறினாரே? இந்த நாட்டின் மேல் விழுந்த மிகப்பெரிய சாபம் ஜெயவர்த்தன" என்று அமிர் கூறிமுடித்தார். சிங்கள மக்களிடையே இருந்து தமிழரின் அவலங்கள் குறித்த உண்மையான பிரக்ஞை ஏற்படும்வரை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது என்று அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். மேலும் இந்த நாடு எதிர்கொள்ளும் அடுத்த சாபம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே இருக்கும் போட்டிதான் என்றும் அவர் கூறினார். "இக்கட்சிகளுக்கிடையிலான எதிர்ப்புணர்வு இன்று ஒரு போட்டியாகவே மாறிவிட்டது. தமிழர்களின் விரக்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இக்கட்சிகள் இரண்டிற்கும் இடையே இருக்கும் போட்டி மனப்பான்மைதான்" என்றும் அவர் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.