Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஒப்பந்த மீறல்களும் ஏமாற்றுதல்களும் ஜெயவர்த்தனவுடனான 11 மாதகாலப் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்பேச்சுக்களின் மூலம் சில நிவாரணங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 1977 மற்றும் 1981 அரச வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான நிவாரணம், தமிழ்பேசும் பொலீஸ்காரர்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றுதல், வவுனியா மாவட்டத்தில் எல்லைகளை மாற்ற அரசாங்கம் எடுத்துவந்த முயற்சிகளை தற்காலிகமாகவேனும் நிறுத்திவைத்தல் ஆகிய விடயங்களை முன்னணியினரால் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசாங்கம் ஒத்துக்கொண்டதுபோல மாவட்ட அதிகார சபைகளுக்கான அதிகாரங்களையோ அல்லது இச்சபைகள் இயங்குவதற்கான நிதியினையோ அரசு ஒருபோதுமே கொடுக்க விரும்பவில்லை. மேலும், அரசியலமைப்பில் கூறப்பட்ட தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, நிலங்களைப் பாவித்தல் மற்றும் நிலப் பங்கீடு, சட்ட அதிகாரங்கள் என்று எவற்றையுமே அரசு நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் கூறப்பட்ட தமிழர் தொடர்பான எந்தவிடயங்களையும் நடைமுறைப்படுத்த அரசு மறுத்துவருவது தொடர்பாக அமிர்தலிங்கம் பலமுறை ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்று இவ்வாறிருந்தது, "1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி உங்களது அரசாங்கம் தமிழ் மொழிக்கு சில ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகக் கூறியிருந்தது. ஆனால், இன்றுவரை உங்கள் அரசாங்கம் அதனைச் செயற்படுத்தத் தவறியுள்ளதுடன், உங்களின் அமைச்சர்களும் செயற்படுத்த முடியாமைக்கான காரணங்களைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.மிகவும் அடிப்படையான விடயங்களான தமிழில் தமிழர்களுடன் தொடர்புகொள்ளுதல் என்பதுகூட உங்களால் செயற்படுத்தமுடியாமல் இருக்கிறது". "அரசால் செய்துகொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது அடிப்படை மொழி உரிமைகளைக் கூட தமிழர்கள் பெறாதவிடத்து, அவர்கள் தமது மொழிதொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை எவராலும் குறைகூறமுடியுமா?" ஆர். சம்பந்தன் இவ்வாறே, 1980 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டமூலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பான அதிகாரங்களை வழங்க அரசு தயாராக இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஜெயவர்த்தனவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார், "1980 ஆம் ஆண்டு அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டத்தின் மூலம் காணிகளை உபயோகிக்கவும், அவற்றினைப் பங்கீடு செய்யவும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரையில் அமுல்ப்படுத்தப்படவில்லை. இன்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தச் சட்டம் வெறும் கடதாசியில் இறந்துபோய்க் கிடக்கிறது. இச்சட்டத்தில் குறிக்கப்பட்டதுபோல, காணிப் பாவனை மற்றும் பங்கீட்டில் அரசோ அல்லது அமைச்சர்களோ தலையீடு செய்யமுடியாது எனும் சரத்து தொடர்ச்சியாக மீறப்பட்டே வருகிறது. காணிவிடயம் தொடர்பாக அரச திணைக்களங்களினால் வெளியிடப்பட்டு வரும் சுற்றுநிருபங்களைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒருபோதுமே இச்சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தரப்போவதில்லை என்பது உறுதியாகிறது" சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்டமும் இவ்வாறே அரசால் செயற்படுத்தப்படாமல் விடப்பட்டது. பொலீஸார் மீதான மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் அதிகாரத்தினை சட்டத்தில் கூறப்பட்டதுபோல் நடைமுறைப்படுத்த அரசு விரும்பவில்லை. பொலீஸாரும் ராணுவமும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தவே அரசால் தொடர்ந்தும் பாவிக்கப்பட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலவிடயங்களைச் செய்யமறுத்த அரசாங்கம், தானே உருவாக்கிய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள், முன்னணி உறுப்பினர்கள் அடங்கிய உயர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களையும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது எட்ப்பட்ட விடயங்களையும் செய்ய மறுத்தது. அரசுக்கும் முன்னணியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 1981/1982 ஆகிய வருடங்களில் 11 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. "நம்பிக்கைத் துரோகங்களினதும் ஏமாற்றுக்களினதும் இழி சரித்திரம்" என்கிற பெயரில் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை 1983 ஆம் ஆண்டு ஆவணி 10 ஆம் திகதி, அதாவது அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தம் செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அரசாங்கம் செய்யத் தவறியிருந்த சில முக்கிய விடயங்கள் குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார், அக்கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறியது, "1981 ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று, தமிழ் மக்களுக்கெதிராக உங்கள் அமைச்சர்களாலும், கட்சி ஆதரவாளர்களினாலும் வன்முறைகள் ஏவிவிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமக்கு விடுக்கப்பட்ட அனைத்து அழைப்புக்களையும் ஏற்றுக்கொண்டு நாம் பேச வந்திருக்கிறோம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் செய்யப்படும் என்று நாம் வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் நாம் தவறாது செய்தே வந்திருக்கிறோம். எமது சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் நடைபெறும் விடயங்கள் குறித்து நாம் பொறுப்பெடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் எமக்குத் தரப்படவில்லை. ஆனால், கனம் ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் உயர்மட்டக் குழுவிலும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளிலும் எட்டப்பட்ட தீர்மானங்களை அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறதா என்பதுபற்றிக் கூறமுடியுமா? நான் சில விடயங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்", "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் - இச்சபைகள் திறம்பட செயற்படுவதற்கு வழங்கப்படுவதாக உறுதியளித்த எந்த விடயங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை". "தமிழ்பேசும் பொலீஸாரை பெரும்பான்மையாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பதவியில் அமர்த்துவது எனும் தீர்மானம் வடக்கில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய தமிழ் மாவட்டங்களில் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வவுனியா திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நாம் அண்மையில் சந்தித்த பல அசம்பாவிதங்கள் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலீஸாரை நாம் நிறுத்தியிருந்தால் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அது நடக்கவில்லை. பொலீஸ் சேவைக்கு தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம், இனப்பாகுபாடற்ற முறையில், குறிப்பாக இனங்களுக்கிடையிலான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் தருணங்களில் அவர்கள் சிறப்பாக நடந்துகொள்ளமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை". "1981 ஆம் ஆண்டு வைகாசி - ஆனி மாதங்களில் பொலீஸாரின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் ஒருசிலருக்கு மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கேசந்துறை, சுண்ணாகம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ் நூலக எரிப்பிற்கான நிவாரணமாக லயணல் பெர்ணாண்டோ தலைமையிலான ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாய்களில் இதுவரை ஜனாதிபதி நிதியம் இரண்டு மில்லியன் ரூபாய்களை மட்டுமே வழங்கியிருக்கிறது. சுண்ணாகம், காங்கேசந்துறை ஆகிய பகுதிகளில் தமிழர்களைக் கொன்றும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடியும் வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸார் அடையாளம் காணப்பட்டபோதும், இன்றுவரை அவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லையென்பதுடன், வன்முறைகள் நடைபெற்ற பகுதியில் அமைந்திருக்கும் மல்லாகம் நீதிமன்றுக்கும் இதுவரை அவர்கள் கொண்டுவரப்படவில்லை. மேலும், இந்த விசாரணைகளைச் சிக்கலாக்கும் நோக்கில், வழக்கினை கொழும்பிற்கு மாற்றியிருப்பதன் மூலம் பொலீஸ் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்புக் கருதி கொழும்பில் நடைபெறவிருக்கும் விசாரணைகளில் பங்குகொள்ள முடியா நிலைமையினையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது". "ஊர்காவற்படைக்கென்று தேர்வுசெய்து, பொலீஸாரினால் தகுதியானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பல இளைஞர்கள் இதுவரையில் ஊர்காவற்படையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊர்காவற்படை எனும் பிரிவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை". "மட்டக்களப்பின் பன்குடா மற்றும் கல்வியங்காடு ஆகிய பகுதிகளில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை". 1981 ஆம் ஆண்டு, ஆவணியில் இடம்பெற்ற முதலாவது உயர் மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கனம் ஜனாதிபதியான உங்களால் வழங்கப்பட்ட அறிவுருத்தலான வவுனியா நகரச் சந்தியில் அநீதியான முறையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையினை அகற்றுவது குறித்த செயற்பாடு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள அரச ஊழியர்களால் தமிழரை இம்சிக்கவென்று அமைக்கப்பட்ட ஒரு சிலையினை அகற்றுவதற்கே ஜனாதிபதியான உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், சிங்கள இனவாதத்தினால் உந்தப்பட்டு ஆட்சிநடக்கும் இந்த அரசிடமிருந்து தமிழர்கள் எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?" "அரச, பொதுச் சேவைகளில் தமிழருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அரசால் சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டபோதிலும், இத்திட்டத்தினை அமுல்ப்படுத்தும் அமைச்சரின் செயலாளர் இச்சுற்று நிருபங்களுக்கெதிராக நடந்துவருவதுடன், தமிழர்களை அரச பணிகளில் சேர்ப்பதையும் தடுத்தும் வருகிறார். இந்த இழிசெயல் குறித்து இக்கடிதத்தில் மேலும் விலாவாரியாக பேச நான் விரும்பவில்லை". "மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்களை மூன்று பேருக்கு மட்டுப்படுத்துவது என்ற இணக்கப்பாடு இதுவரை செயற்படுத்தப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை அபிவிருத்திச் சபைக்குள் கொண்டுவந்தமை, பின்னர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இந்த நியமனத்தை பலர் சுட்டிக்காட்டியபோது அந்த உறுப்பினரை பதவிவிலக்கிவிட்டு மீண்டும் அவரையே இச்சபைகளுக்கு உறுப்பினராக நிறுத்தியது போன்ற பல முறைகேடுகளில் அரசு தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கிறது". "அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் எதுவித பயனும் இல்லையென்பதைச் சுட்டிக்காட்டவே மேற்சொன்ன, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் இன்றுவரை நடைமுறைப்பத்தப்படாது தட்டிக் கழிக்கப்பட்டுவரும் விடயங்கள் சிலவற்றை பிரஸ்த்தாபித்திருந்தேன்". அரசியலமைப்பில் கூறப்பட்டதன்படி தமிழ மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகள் இதுவரையில் தரப்படாமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம் இணங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படாமை, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை இதுவரை நடைமுறைப்படுத்தாமை என்பவை மட்டுமே இன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்நோக்கும் பிரச்சினைகள் அல்ல. மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்பாக கண்காணித்து வந்த ஜெயரட்ணம் வில்சன், "அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் மிகவும் அற்பத்தனமாக நடந்துகொள்வதுடன், பெரும்பாலான நேரங்களில் அதிகாரப் பகிர்வினை முற்றாகவே நிராகரித்தும் வருகிறார்கள்" என்று கூறுகிறார். "ஒவ்வொரு அமைச்சரும் தனது சொந்த எண்ணத்தின்படி அதிகாரங்களைப் பகிரவோ அல்லது தம்முடனேயே வைத்துக்கொள்ளவோ விரும்புகிறார்கள். அதிகாரப்பகிர்வு தொடர்பாக பொதுவான நடைமுறை ஒன்று அவர்களிடத்தில் இல்லை. இதில் வருத்தமளிக்கும் விடயம் என்னவெனில், தமது அமைச்சுகளின் கீழான விடயங்களுக்கு நிதியொதுக்கீட்டினைச் செய்ய அமைச்சர்கள் முன்வருவதில்லை" என்றும் அவர் கூறினார். தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமது மாவட்ட சபைகளை அபிவிருத்திச் செய்வதற்கான நிதியினை அரசு வழங்காதது குறித்து இச்சபைகளின் அதிகாரிகள் விசனப்பட்டிருந்தார்கள். தமிழர்களின் மாவட்டங்களின் மீதான தனது அதிகாரத்தைத் தன் கையிலேயே தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற விடயங்களின் செயற்பாட்டினை அரசு தடுத்துவருவதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். யாழ்ப்பாண மாவட்ட சபையின் தலைவர் நடராஜா இரு விடயங்கள் தொடர்பாக நிதியினைத் திரட்ட நினைத்திருந்தார். முதலாவது விடயம், காங்கேசந்துறையிலிருந்து தமிழ்நாட்டின் நாகபட்டிணம் வரையான படகுச் சேவையொன்றினை ஆரம்பிப்பது. இப்படகுச்சேவையின் மூலம் யாழ்ப்பாண மாவட்ட சபைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று இச்சேவை தொடர்பான முன்னோடி ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இரண்டாவது, காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு சீமேந்துப் பையிற்கும் தலா ஒரு ரூபாய்ப்படி வரி அறவிடும் யோசனை. ஆனால், இந்த இரண்டு யோசனைகளையும் அரசு உடனடியாகவே நிராகரித்து விட்டது. இதனால், இச்சபைக்கு அரசால் ஒதுக்கப்படும் மிகச்சொற்ப நிதியைக்கொண்டே தனது செயற்பாடுகளை நடத்தவேண்டியதாயிற்று. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையினை நடத்துவதற்கு அரசு தொடர்ச்சியாக போட்டுவந்த முட்டுக்கட்டைகளால் விரக்தியடைந்த தலைவர் நடராஜா, தனது அதிருப்தியை வெளிக்காட்டும் முகமாக 1983 ஆம் ஆண்டு, ஆடி மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். ஜெயவர்த்தன அவரை சந்திக்க அழைத்திருந்தபோதும், 1983 ஆம் ஆண்டின் ஜூலைப் படுகொலைகள் ஆரம்பித்து விட்டமையினால் மாவட்ட அதிகார சபைகள் என்கிற திட்டமே அரசால் முற்றாகக் கைவிடப்பட்டு விட்டது. சுமார் ஒருவருட காலத்திற்கு முன்பதாக, 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதமளவில், கனடாவிலிருந்த தனது ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சனை வரவழைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான இன்னொரு சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். மேலும், தன்னைச்சுற்றியிருக்கும் இனவன்மம் கொண்ட அமைச்சர்களால், தன்னுடைய சுயாதீனம் தடுக்கப்பட்டு வருவதாகவும் வில்சனிடம் ஜெயார் தெரிவித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு பங்குனி 15 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதும் ஜெயரட்ணம் வில்சன், ஜெயார் தன்னுடம் பேசிய விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். "இனவன்மம் கொண்ட அமைச்சர்களால் நான் சூழப்பட்டிருக்கிறேன். இந்த நச்சு வட்டத்திலிருந்து நான் வெளியே பாய்ந்துவர உங்களின் நண்பர்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நீங்கள் பேசுவீர்களாகவிருந்தால், என்னால் சில விடயங்களைச் செய்யமுடியும்" என்று ஜெயார் கூறியதாக வில்சன் எழுதுகிறார். ஜெயாரின் வேண்டுகோளின்படியே வில்சன் அமிர்தலிங்கத்துடன் பேசினார். பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்துப் பேசிய ஜெயார், "அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை நீங்கள் எனக்குப் பெற்றுத்தரவேண்டும். ஆனால், இதனை நீங்கள் வெளியே பகிரங்கமாகப் பேசக் கூடாது. அப்படித் தெரிந்தால், பெளத்த சிங்களவர்களின் வாக்குகள் எனக்குக் கிடைக்காது போய்விடும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், என்ன நீங்கள் நம்பலாம்" என்று கூறவும், அமிர்தலிங்கமும் ஜெயார் வைத்த பொறியில் முற்றாக அகப்பட்டுப் போனார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் மக்களின் தளபதி எனும் ஸ்த்தானத்திலிருந்து துரோகி எனும் நிலைக்கு இறங்கிய அமிர்தலிங்கம் அரசை மகிழ்விக்க எண்ணிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், அரசாங்கத்துடன் இணைந்து பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் விருப்பத்தைத் தெரிவித்ததோடு, 1982 ஆம் ஆண்டு சித்திரை 29 ஆம் திகதி, ஜெயவர்த்தனபுற கோட்டேயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியினைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்விலும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டாம் என்று போராளிகள், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் எச்சரிக்கைகளையும் மீறி முன்னணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வழமைபோல அமிர்தலிங்கம் மிகச் சிறந்த பேச்சொன்றை வழங்கினார். தமிழர்களின் சரித்திரம் தொடர்பான சான்றுகளிலிருந்து ஆரம்பித்த அவர், தமிழர்களுக்கும், தொடந்ர்துவந்த அரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை அரசுகள் கைவிட்டு தமிழர்களை ஏமாற்றியது குறித்தும், தமிழர்களின் பூர்வீக தாயகம் எவ்வாறு சிங்களவர்களால் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தமிழர்கள் எவ்வாறும் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும், தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்திலேயே பாதுகாப்பற்றை நிலையில் வாழ்கிறார்கள் என்பதுபற்றியும், இவையனைத்தும் எவ்வாறு தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளியது என்பது குறித்தும் பேசினார். ஆனால், தனது பேச்சின் இறுதியில், "முன்னர் நடந்தவை எப்படி இருந்தபோதும், ஜனாதிபதி ஜெயாரின் நேர்மையிலும், நீதியிலும், இனங்களைச் சமமாக நடத்தும் விதத்திலும் தனது கட்சி அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக" கூறி முடித்தார். பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் நான் ஈடுபட்டிருக்காமையினால், அதன் உத்தியோகபூர்வ நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால், அமிர்தலிங்கத்தின் பேச்சினைக் கேட்டபின்னர் அவரை வாழ்த்துவதற்காகத் தொலைபேசியில் அவருடன் பேசினேன். "பல மக்கள் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாக இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நான் பாவித்துக்கொண்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்குகொள்ளவேண்டாம் என்று இளைஞர்கள் விடுத்த வேண்டுகோள் தவறானது என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். எமது பிரச்சாரத்திற்கு பாராளுமன்றத்தை ஒரு களமாக நாங்கள் பாவிக்கிறோம். இளைஞர்களுக்கு இது புரியுமாற்போல்த் தோன்றவில்லை" என்று என்னிடம் அமிர்தலிங்கம் கூறினார். இளைஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இச்செயற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். தமிழ் மக்கள் வழங்கிய ஆணையான தனிநாட்டிற்கான செயற்பாடுகளிலிருந்து விலகி, பாராளுமன்ற சுகபோகங்களில் திளைத்திருக்கவே முன்னணியினர் விரும்புகிறார்கள் என்று மக்கள் மத்தியில் இருந்துவந்த கருத்து மேலும் மேலும் வளரத் தொடங்கியது. 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 29 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழம் மாணவர் பொது மன்றம், யாழ் பலகலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் மாணவர் அமைப்பு, புரட்சிகர கம்மியூனிச அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த ஹர்த்தாலின் வெற்றியும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதைப் பறைசாற்றியிருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. திரையரங்குகள் தமது திரையிடல்களை இரத்துச் செய்திருந்ததுடன், போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. பாடசாலைகளுக்கான மாணவர் வரவு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்துத் தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. வைகாசி மாதத்தில் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, அவரைச் சுற்றிவளைத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அவரையும் அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் தாம் முற்றாகப் புறக்கணிப்பதாகக் கோஷமிட்டனர். தமது சக மாணவர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு வருகையில், அமிர்தலிங்கமும் அவரது கட்சியினரும் ஜெயாருடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவருடன் விருதுபசாரங்களில் கலந்துகொண்டு, ஜெயார் வழங்கும் தின்பண்டங்களையும் தேநீரையும் அருந்தி மகிழ்வதாகவும் அவர்கள் சாடினர். ஜெயாருடனும் அவரது அமைச்சர்களுடனும் விருந்துபசாரத்தில் ஈடுபடும் அமிர்தலிங்கம் அமிர்தலிங்கத்தை அவர்கள் "துரோகி" என்று விமர்சித்தனர். தமிழ் மக்களின் தளபதி எனும் நிலையிலிருந்து துரோகி எனும் நிலைக்கு அவர் கீழிறங்கியிருந்தார். அமிர்தலிங்கத்தினதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் சரிவு ஆரம்பித்திருந்தது. ஜெயவர்த்தனவின் திட்டம் வெற்றியளித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கால்களுக்குக் கீழே பாரிய குழியொன்றினை ஜெயார் வெட்டிக்கொண்டிருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்காக போராளிகளைக் கண்டித்த அமிர்தலிங்கமும் முன்னணியும் இராணுவத்தின் மீதான தாக்குதல் மற்றும் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகியவற்றினையடுத்து, ஐப்பசி 27 ஆம் திகதி தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். போராளிகளின் தாக்குதல்களுக்குப் பின்னர், ராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுக்கும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்படுவதாகவும் அமிர்தலிங்கத்திடம் கூறப்பட்டது. இக்கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ராணுவத் தளபதிகள் அமிர்தலிங்கத்திடம் பேசும்போது, பொதுமக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள் மீதும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று தமது ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், ராணுவத்தின்மீதோ அல்லது பொலீஸார் மீதோ நடத்தப்படும் எந்தத் தாக்குதல்களையும் தாம் ஆதரிக்கவில்லையென்றும், அவற்றைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினர். இதனை வெளிக்காட்டும் நோக்கத்துடன், அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இணைந்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டனர், "இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. வன்முறைகள் மூலம் தமிழ் மக்களின் இலட்சியத்தை எந்தவகையிலும் அடையமுடியாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். இவ்வாறான வன்முறைகள் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து இருந்துவரும் கரிசணையினை முற்றாக இல்லாதொழிக்கவே துணைபோகும்" என்று அந்த அறிக்கை கூறியது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே எப்படியாவது பிளவொன்றினை உருவாக்கி விடவேண்டும் என்று காத்திருந்த ஜெயாருக்கு இதன்மூலம் வெற்றி கிடைத்திருந்தது. இந்த இலக்கினை அடைவதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு அமைச்சர் சிறில் மத்தியூவை ஜெயார் பணித்திருந்தார். முன்னணி மீது மத்தியூவினால் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு, போராளி அமைப்புக்களின் வன்முறைகளின் பின்னால் இருப்பது முன்னணியினரே என்பதுடன், அதன் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தான் என்பதுமாக இருந்தது. பொலீஸார் மீதான தாக்குதல்களை முன்னணியினர் கண்டிக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களை சிறில் மத்தியூ முன்னணி மீது பிரயோகித்து வந்திருந்தார். அவரது விருப்பத்தின்படி, போராளிகளை கண்டித்து முன்னணியின் தலைமை அறிக்கையினை வெளியிட்டது. தனது வலையில் அமிர்தலிங்கமும் முன்னணியினரும் சிக்கிவிட்டதையடுத்து களிப்படைந்த ஜெயார், ஜெயரட்ணம் வில்சனை அமிர்தலிங்கத்திடம் தூதனுப்பி, உயர்மட்ட குழுவிற்கான கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தலாம் என்று கூறினார். அமிர்தலிங்கமும் உடனடியாகவே இதற்கு ஒத்துக்கொண்டார். ஜெயாரின் நம்பிக்கைக்குரியவரும், ராஜாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவை இன்னும் விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கினார். "மிதவாதிகளுக்கான கூட்டம்" என்கிற பெயரில் சிங்களவர்களையும் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழர்களையும் இணைத்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் தீவிரவாதிகளை முற்றாக ஓரங்கட்டி விடலாம் என்று எண்ணினார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம், சட்டம், ஒழுங்கு ஆகியவை தொடர்பாகவே இக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டங்கள் பற்றி அல்விஸ் பேசும்போது, அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து வன்முறைகளுக்கெதிரான மனோநிலையினை உருவாக்குவது, பயங்கரவாதத்தை நிராகரிப்பது, இன மத ரீதியிலான வன்முறைகளை தவிர்ப்பது ஆகியவையே தமது முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று கூறினார். இதன்மூலம், தமிழ் மக்களிடமிருந்து தம்மை முற்றாகவே அந்நியப்படுத்துவிடும் நடவடிக்கையிலேயே அரசு இறங்கியிருக்கிறது என்பதை போராளிகள் உணர்ந்துகொண்டனர். அரசியல்க் கட்சிகளுக்கிடையிலான மாதாந்தக் கூட்டங்கள் 1981 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதத்திலிருந்து ஆரம்பமாகின. ஒவ்வொரு கூட்டத்திலும் தான் எழுப்பவிருக்கும் கேள்விகள் குறித்த நகலை கூட்டத்திற்கு முன்பாகவே ஜெயாருக்கு அனுப்பிவைத்த அமிர்தலிங்கம், அக்கேள்விகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை இதன் மூலம் கூட்டத்திற்கு அழைக்கமுடியும் என்று நினைத்தார். இக்கூட்டங்களில் ஜெயார் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டதுடன், அமைச்சர்களும் கூட்டுறவுடன் செயற்பட விரும்புவது போலத் தெரிந்தனர். மேலும், முன்னணியினரால் எழுப்பப்பட்ட அனைத்து கரிசணைகள் தொடர்பாகவும் தாம் செயற்படப்போவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். பதிலுக்கு அரசை மகிழ்விக்க எண்ணிய முன்னணியினர், 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி குறிக்கட்டுவானில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தாம் கண்டிப்பதாக அறிக்கை விட்டனர். "எமது அரசியல்க் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்தவிதமான வன்முறைகளையும் ஆதரித்தது கிடையாது. இந்த கண்மூடித்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முன்னணியினரின் அறிக்கை கூறியது. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலை - 2015 முன்னணியினரின் இந்த அறிக்கையினை சிறில் மத்தியூ வரவேற்றார். காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலைக்குச் சென்றுகொண்டிருந்த அவர், அங்குவைத்தே இந்த அறிக்கையினை தான் வரவேற்பதாகக் கூற நினைத்தார். நானும் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். மத்தியூ தன்னுடன் விமானத்தில் காங்கேசந்துறைக்கு அழைத்துச்சென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். முன்னணியினரின் அறிக்கைக்குப் பதிலளித்து தான் வழங்கப்போகும் அறிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு தலைமை ஆசியரிடம் கூறுமாறு என்னை மத்தியூ பணித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தான் வழங்கப்போகும் அறிக்கையினால் முன்னணியினர் மீது போராளிகள் சினம் கொள்வார்கள் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. போராளிக் குழுக்கள், குறிப்பாக புளொட் அமைப்பு இதனால் அதிக சினங்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் அமைப்பு யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கியது. "ஜெயாரின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக இயங்கத் தொடங்கியிருக்கிறது" என்று அந்தச் சுவரொட்டிகள் விமர்சித்திருந்தன.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வைக்கப்பட்ட பொறி போராளிகளின் செயற்பாடுகள் நடந்துகொண்டிருந்த அதேவேளை, ஜெயரட்ணம் வில்சனின் உதவியுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு பொறியொன்றை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார் ஜெயவர்த்தன. ஜெயரட்ணம் வில்சன் , மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் வன்முறைகளின் காலம் கடந்துசென்றவுடன் அச்சபைகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை கலந்தாலோசித்து நிவர்த்திசெய்வதற்கு உயர்மட்ட அமைச்சர் குழுவுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் இணைத்து குழுவொன்றினை அமைக்கலாம் என்று ஜெயாரிடம் ஆலோசனை வழங்கினார். ஆனால், இந்த ஆலோசனையினை நிராகரித்த ஜெயார், தனது அமைச்சர்கள் இதற்கு ஒருபோதும் உடன்படமாட்டார்கள் என்று கூறினார். ஜெயவர்தன ஆனால், தமிழர் மீது அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணி வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட கையோடு கனடா திரும்பியிருந்த ஜெயரட்ணம் வில்சனை உடனடியாகக் கொழும்பு திரும்ப அழைத்த ஜெயவர்த்தன, வில்சன் முன்வைத்த உயர்மட்ட அமைச்சர்கள் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இணைந்த குழுவினை அமைக்க தான் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். தனது மொத்த அமைச்சரவையும் இந்த திட்டத்தை எதிர்த்தாலும்கூட, தான் இந்தக் குழுவை அமைத்தே தீருவேன் என்று கூறிய ஜெயார், தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இருந்துவரும் இனச்சிக்கலை இதன்மூலம் தீர்த்துவைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். ஆகவே, இதுதொடர்பான கலந்துரையாடல்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்று வில்சனிடம் கூறினார் ஜெயவர்தன. சில நாட்களுக்குப் பின்னர், அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஜெயாரை அவரது வீட்டில் சந்தித்தனர். அச்சந்திப்பில் அரச சார்பில் அமைச்சர்களான அத்துலத் முதலி, தொண்டைமான், நிசங்க விஜேரட்ண, ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம்.எச். முகம்மட் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜெயரட்ணம் வில்சன் ஜனாதிபதியின் ஆலோசகர் என்கிற ரீதியில் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று ஆவணி 31 ஆம் திகதி வெளியிடப்பட்டது, "ஜனாதிபதி ஜெயவர்த்தனா தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களும் , அண்மைய மாதங்களில் நாடுமுழுதும் அநியாயமான முறையில் இழக்கப்பட்ட உயிர்கள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன், இனங்களுக்கிடையிலான பதற்ற நிலையினை தளர்த்தி, ஒற்றுமையினையும் சமாதானத்தையும் உருவாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இணங்கியிருக்கிறார்கள். 1. ஜனாதிபதி தலைமையில் உயர்குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் பிரதம மந்திரி, அமைச்சர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்குத் தடையாக இருக்கும் அனைத்துக் காரணிகள் பற்றியும் இந்தக் குழு கலந்துரையாடும். 2.நாடு முழுவதிலும் இடம்பெறும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசியல்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமது பங்களிப்பினை வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். 3. மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் திறமையான செயற்பாட்டிற்கு தேவையான உதவியும் வழங்கப்படும். இப்படிக்கு, ஜே ஆர் ஜெயவர்த்தன, இலங்கையின் ஜனாதிபதி 31/08/1981 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் இக்குழுவின் முன்னால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்கு குழுவொன்றினை அமைக்கவிருப்பதாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாளான புரட்டாதி 13 ஆம் திகதி ஜெயார் ஒரு அறிவிப்பினை வழங்கினார். முன்னணியினரால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளாவன, 1. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். 2. பொலீஸ் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல். 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் தமிழ்பேசும் பொலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல். 4. வன்முறைகள் மீள் இடம்பெறுவதைத் தடுக்க ஊர்காவல்படையினை உருவாக்குதல். இக்குழுழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக நடைபெறுவதாக நம்பத் தொடங்கிய அமிர்தலிங்கம், ஊடகங்களிடம் பேசும்போது, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது பங்கிற்கு பாதித்தூரத்தைப் பயணிக்க விடும்புகிறது" என்று கூறியதுடன், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 3 மாதங்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது எனும் தனது முடிவையும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறினார். மொஹம்மட் ஹனீபா மொஹம்மட்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இராணுவத்தின் மீதான முதலாவது தாக்குதல் சீலனின் சரித்திரம் சீலன் தலைமையில் புலிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்கிற செய்தி யாழ் பல்கலைக் கழகத்திற்குள் பரவியபோது "புலிகள் எல்லையைக் கடந்துவிட்டார்கள்" என்று தான் நினைத்ததாக பேராசிரியர் கைலாசபதி நினைவுகூர்ந்தார். அதுவரையில், பொலீஸார் மீதும், காட்டிக்கொடுப்பவர்கள் மீதும், அரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கெதிராக இயங்குவோர் மீதும் மட்டுமே தமது தாக்குதல்களை புலிகள் மட்டுப்படுத்தியிருந்தார்கள். இரு ராணுவ வீரர்களைக் கொன்று, அவர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றிய நிகழ்வே இராணுவம் மீது புலிகள் நிகழ்த்திய முதலாவது தாக்குதலாகும். இலங்கை ராணுவத்தின் முதலாவது ராணுவத் தளபதியாக திஸ்ஸ வீரதுங்கவை பதவியில் அமர்த்தும் உத்தியோக பூர்வ நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நாளை புலிகள் இராணுவம் மீதான தமது முதலாவது தாக்குதலுக்குத் தெரிவுசெய்தார்கள். 1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15 ஆம் திகதி இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. திஸ்ஸ வீரதுங்க இராணுவத் தளபதியாக பதவியேற்றப்பட்டு, அவரது நிலையும் லெப்டிணன்ட் ஜெனரல் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் ஜெயாரினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாரிய சித்திரவதைகள், கொலைகள் காணாமற்போதல்கள் என்பவற்றிற்குக் காரணமாக இருந்தவர். புலிகளின் தாக்குதல் சீலன் தலைமையில் நடைபெற்றது. அவ்வருடம், ஆனி மாதத்தில் பிரபாகரனுடன் கூடவே தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த சீலன், இராணுவத்தின்மீது தாக்குதல்களை நடத்துவதற்கென்று யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தமது தாக்குதலின் மூலம் புலிகள் பற்றிய மதிப்பினை மக்கள் மத்தியிலிருந்து குறைத்துவிடலாம் என்று புளொட் அமைப்பினர் எண்ணியிருந்தனர். ஆனால், பிரபாகரன் அதனை அனுமதிக்க விரும்பவில்லை. ஆகவே, ஆனைக்கோட்டைத் தாக்குதலைக் காட்டிலும் துணிகரமான நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரன் திட்டமிட்டார். ஆகவேதான், தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட கொடூரமான ராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க பதவியேற்கும் நாளில் ராணுவத்தின்மீது தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டார். இத்தாக்குதலுக்குப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தது , திருகோணமலை ஆலய வீதியைச் சேர்ந்த, உயர்ந்த ஆணழகனான் சீலனைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. சீலனுடன் பிரபாகரன் சார்ள்ஸ் லூக்காஸ் அந்தணி எனும் இயற்பெயருடைய சீலன் இயக்கத்திற்குப் புதியவர். இயக்கத்தில் சேர்ந்து இருவருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. போராட்டத்தின் மீதான ஈடுபாடும், பிரபாகரனுக்கான விசுவாசமும் அவரை முக்கியமான இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. சீலன் ஒரு வறிய கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். குடிகாரரான தகப்பனார் குடும்பத்தின் பொறுப்புக்களை கைகழுவி விட்டிருந்த நிலையில், மருத்துவர் ஒருவரின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த சீலனின் தாயாரே வீட்டின் சுமைகளைத் தாங்கி வந்தார். படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தபோதும் சீலனும் அவரது சகோதரியும் பெரும்பாலான நாட்களில் தண்ணீரையே மதிய உணவாக பாடசாலை விட்டு வீடு திரும்போது அருந்திவந்தனர். இலங்கைக் கொடியினை எரித்தார் என்பதற்காக பொலீஸாரால் சீலன் ஒருமுறை கடுமையாகத் தக்கப்பட்டிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு வருடங்களில் சீலன் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். சீலனின் போரிடும் ஆற்றல் கண்டு அவர்கள் பெரிதும் அஞ்சியிருந்தார்கள். ஆகவேதான், 1983 ஆம் ஆண்டு மீசாலையில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சீலன் என்று அவர்கள் அறிந்தபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ் குருநகர் முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சீலனின் மரணத்தை களியாட்ட நிகழ்வொன்றை ஒழுங்குசெய்து கொண்டாடி மகிந்தனர். பிரபாகரனோடு தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமுன் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் சீலனும் ஈடுபட்டிருந்தார். ராணுவ வாகனங்களின் நடமாட்டத்தை அவர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தார். இந்த ராணுவ வாகனங்களின் வாடிக்கையான பயணிக்கும் தெருக்கள், நேரங்கள், அவை பயணிக்கும் ஒழுங்கு ஆகியவற்றை அவர் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். அதன்படி, ஒவ்வொருநாள் காலையிலும் பலாலியிலிருந்து கிளம்பும் ராணுவத்தின் பொறியியல்ப் பிரிவிற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று கட்டடப் பொருடக்ளைக் கொள்வனவு செய்துகொண்டு திரும்புவதை சீலன் அவதானித்தார். இந்த ஜீப் வண்டி யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திலேயே தனக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யத் தரித்து நிற்கும். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இந்த அரச கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் வழமைபோல தமக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்வதற்கு ஐப்பசி காலை 10:30 மணிக்கு அந்த ஜீப் வந்தது. ராணுவத்தின் கொள்வனவு அதிகாரியான சார்ஜண்ட் தனது மெய்ப்பாதுகாவலரான லான்ஸ் கோப்ரல் ஹேவாவசத்துடன் கடைக்குள் சென்றுவிட, ராணுவச் சாரதி ஜீப் வண்டியிலேயே தலையை வாகனத்தில் திசைமாற்றியின் மேல் சாய்த்துக்கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தார். வாகனத்திலிருந்த இன்னொரு ராணுவ வீரரான திஸ்ஸேரா வாகனத்தை விட்டிறங்கி அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய 0.303 ரைபிள் வண்டிக்குள் கிடந்தது. இந்தத் தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் சீலன். சீலனும் அவரது மூன்று தோழர்களும் ஜீப்பின் பின்புறம் நோக்கிச் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்களது சைக்கிள்கள் ஜீப் வண்டியை அண்மித்ததும், திடீரென்று சைக்கிள்களிலிருந்து குதித்த சீலனும் இன்னொரு தோழரும் அவ்விடத்தில் நின்ற ராணுவ வீரகளான திஸ்ஸேரா மற்றும் ஹேவாவசம் ஆகியோரை மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர். பின்னர் ஜீப் வண்டியிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்து சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். சிங்கள இராணுவத்தினரும், பொலீஸாரும் தம்மீதான தாக்குதல்களுக்கு எவ்வகையான பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்பதை அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள், அன்றைய தாக்குதல் குறித்த செய்தி பரவியதும், உடனடியாகக் கடைகளைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். அனைத்துப் போக்குவரத்துக்களும் முற்றாக நிறுத்தப்பட்டதோடு, நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆனால், இவை எதுவுமே இராணுவத்தினர் தமது பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதைத் தடுக்கவில்லை. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அருகிலிருந்த வீடுகள் மீது இராணுவத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதோடு கண்ணில்ப் பட்ட அப்பாவிகளை கண்மூடித்தனமாக இராணுவம் தாக்கியது. இத்தாக்குதல் அரசுக்குப் பெரிய தலையிடியாக மாறியது. மன உளைச்சலுக்கு ஆளான பொலீஸார் மீது மட்டுமே தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அதுவரை நம்பிவந்த அரசின் எண்ணத்தை இத்தாக்குதல் சிதறடித்திருந்தது. "அவர்கள் இப்போது ராணுவத்திமீதே கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்று அரச ஆதரவாளர்கள் பேசத் தொடங்கினர். இத்தாக்குதல் நடைபெற்று எட்டு நாட்களுக்குப் பின்னர் அரசிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. புலிகளின் இத்தாக்குதலால் தாம் பிந்தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிய புளொட் அமைப்பு, ஐப்பசி 23 ஆம் திகதி கிளிநொச்சி மக்கள் வங்கியைக் கொள்ளையிட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த வங்கிக்கொள்ளையில் ராணுவத்தின் கெமுணு படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் விஜேவீர புளொட் அமைப்பினரால் கொல்லப்பட்டார். வங்கியின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரையின் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ அணியினால் வங்கிக் கொள்ளையினைத் தடுக்க முடியவில்லை. புளொட் அமைப்பினர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதிலும், அவர்களால் 270 லட்சம் ரூபாய்கள் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கொள்ளையின் பின்னர் மக்கள் வங்கி கிராமப்புற கிளைகளை மூடிவிட்டதுடன், பிரதான வங்கிகளின் அலுவலக நேரத்தினையும் குறைத்துக்கொண்டது. புளொட் கொடி கிளிநொச்சி வங்கிக் கொள்ளையே புளொட் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட இறுதியான நடவடிக்கையாகும். அதன்பின்னர் அந்த அமைப்பு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு, தை மாதம் 2 ஆம் திகதி அந்த அமைப்பின் உயிர்நாடியான சுந்தரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் கடுமையாக விமர்சித்து வந்த புளொட் அமைப்பின் இதழான "புதிய பாதை" பிரதிகளை யாழ்ப்பாணம் சித்ரா அச்சகத்தில் சரிபார்த்துக்கொண்டிருக்கும் போது அவர் சுடப்பட்டார். மார்க்ஸிசச் சிந்தனையுள்ள செயற்பாட்டாளராக விளங்கிய சுந்தரம், பிரபாகரனுடனான உமா மகேஸ்வரைன் பிணக்கின்போது, உமாவை ஆதரித்து அவருடன் சேர்ந்து வெளியேறியவர். பொலீஸ் விசாரணைகளின்போது, திறந்திருந்த அச்சகத்தின் யன்னலினூடாக சீலனே சுந்தரத்தைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்பட்டது. இதனை சந்தர்ப்பவாத இலக்கு என்று ராணுவ பாஷையில் அழைப்பார்கள். ராணுவத்தின் கவச வாகனப் பிரிவின் சார்ஜண்ட் அப்புகாமி தனது குடும்பத்தை நகவிகாரைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆகவே, அவருக்கு ஒரு ஜீப் வண்டியும் காவலுக்கு ராணுவ வீரர்களும் வழங்கப்பட்டிருந்தது. குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு ஜீப்வண்டியில் சென்ற அவர்கள் அங்கிருந்து படகின்மூலம் நாகவிகாரைக்குச் சென்றனர். ஜீப்பினை ஓட்டிச் சென்ற ராணுவச் சாரதி, படகுதுறையின் அருகிலிருந்த தேநீர்க் கடையின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் திசைமாற்றியில் தலையைச் சாய்த்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். காவலுக்கு அனுப்பப்பட்ட இரு ராணுவ வீரர்களும், தமது ஆயுதங்களை வண்டியினுள் வைத்துவிட்டு, சற்றுத் தூரத்தில் நின்று அலவலாவிக்கொண்டு நின்றனர். காந்தனும் அவரது அணியும் அவ்விடத்தில் தற்செயலாக வந்தபோது, ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தைக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க எண்ணினர். ஆகவே, சாரதியைச் சுட்டுக் கொன்றுவிட்டு வாகனத்திற்குள்ளிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாயினர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கி நிரப்பும் துப்பாக்கிகள் இரண்டும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் அவற்றுக்கான ரவைகளும் அடக்கம். தாக்குதல் நடப்பதை சற்றுத் தொலைவில் நின்று அவதானித்த இரு ராணுவ வீரர்களும் நீர் ஏரிக்குள் பாய்ந்து மறுகரை நோக்கி நீந்தித் தப்பித்துக்கொண்டனர். கிளிநொச்சி வங்கிக்கொள்ளையினை அடுத்து, ராணுவத்தினரும், பொலீஸாரும் தமது தேடுதல் நடவடிக்கைகளை கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து காந்தீயம் பண்ணைகளும் தேடுதல் வேட்டைகளுக்கு இலக்காகின. 1982 ஆம் ஆண்டு தை மாத இறுதியில் புளொட் அமைப்பைச் சேர்ந்த சிவம், மரியநாயகம், ஞானசேகரம், டிரக்டர் சிறி, பாங்கர், கணேசலிங்கம், ரொபேர்ட், பாரூக், உதயகுமார் ஆகியோர் பொலீஸாரின் தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இக்கைதுகள் புளொட் அமைப்பினை பெரிதாகப் பாதிக்கவில்லை. 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி, காந்தன் தலைமையில் சென்ற புளொட் அமைப்பினர் புங்குடுதீவில் அமைந்திருந்த குறிக்கட்டுவான் படகுத்துறையில் ராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் சார்ஜண்ட் அபெயரட்ண பண்டாவைச் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் தமது அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்டுவந்த அழுத்தத்தினைச் சமாளிக்கமுடியாது தள்ளாடிய உமா மகேஸ்வரன், கண்ணன் (சோமசுந்தரம் ஜோதீஸ்வரன்), காக்கா (துரைராஜா சிவனேஸ்வரன்), அன்டன் (சிவனாயகம் அன்பழகன்) மற்றும் தாசன் ஆகிய புளொட் முக்கியஸ்த்தர்கள் 1982 ஆம் ஆண்டு, மாசி மாதம் 25 ஆம் திகதி படகுமூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். ஏனையவர்களை தமிழ்நாட்டுக் கரையில் இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அன்டனை கடற்படையினர் கைதுசெய்தனர். விசாரணைகளின்போது, கிளிநொச்சி வங்கியிலிருந்து கொள்ளையடித்த நகைகள் கொண்ட இருபது பைகளுடன் உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாக அன்டன் கூறினார். மேலும், உமா மகேஸ்வரனும் ஏனையவர்களும் தம்முடன் உப இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் மூன்று கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. உமா தப்பிச் சென்ற மூன்றாவது நாள் குருநகர் ராணுவ முகாமிலிருந்து கிளம்பிய ராணுவ அணியொன்று வவுனியாவில் இயங்கிவந்த உமாவின் மறைவிடம் ஒன்றைச் சுற்றிவளைத்துக்கொண்டது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சமரில் புளொட் அமைப்பின் காந்தன் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலின்போது குறிக்காட்டுவான் தாக்குதலில் காந்தனால் கைப்பற்றப்பட்ட இரு தானியங்கி குண்டேற்றும் துப்பாக்கிகளும் பெருமளவு ரவைகளும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1981 இனக்கலவரம் சிங்களக் காடையர்கூட்டங்களால் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகள் ஆகியவை கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டன . நகர்ப்பகுதிகளான இரத்திணபுரி, பலாங்கொடை, கஹவத்தை, கொழும்புக் கரையோரப்பகுதிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் ஆகியவை இந்த அரச ஆதரவுபெற்ற காடையர்களால் தாக்குதலுக்குள்ளாயின. கொள்ளைகளும், தீமூட்டல்களும், படுகொலைகளும் நாட்டின் உட்புறம் நோக்கியும் விரிவைடைய ஆரம்பித்தன. மலையகத் தோட்டப்பகுதிகளில் வீதிகளில் கத்திகள், வாட்கள், தடிகள், சைக்கிள்ச் சங்கிலிகளுடன் சுதந்திரமாக வலம் வந்த சிங்களக் காடையர் குழு தமிழர்களின் வீடுகளை கொள்ளையிட்டதுடன் தீமூட்டி அழித்தது. கையில் அகப்பட்ட தமிழர்களை வெட்டியும், அடித்தும் கொன்றது. காடையர்களுடன் வலம் வந்த பொலீஸாரும் இராணுவத்தினரும், காடையர்களின் செயலை ஊக்குவித்ததுடன், பலவிடங்களில் அவர்களுடன் சேர்ந்தே தாக்குதல்களில் இறங்கியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்கள் பல முற்றாகவே சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. பல தமிழர்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி அருகிலிருந்த காட்டுப் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இத்தாக்குதல்களில் குறைந்தது 25,000 மலையகத் தமிழர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகிய அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 10,000 தமிழர்கள் வீடுகளை இழந்திருந்தனர். மலையகத் தமிழர் மீது அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதலால் மிகவும் கோபமடைந்திருந்து காணப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமானும், செயலாளர் செல்லச்சாமியும் ஆவணி 17 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேசில் அமைந்திருந்த ஜெயாரின் வதிவிடத்திற்குச் சென்று, "ஒன்றில் எனது மக்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திவரும் தாக்குதலை உடனே நிறுத்துங்கள், அல்லது நான் அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டி வரும்" என்று கூறவும், தனது பாதுகாப்புப் பிரிவினரான உதவி பாதுகாப்பமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் செயலாளர் தர்மபால, ஒருங்கிணைப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல , பொலீஸ் மா அதிபர் அனா சென்விரட்ண ஆகியோருடன் உயர் பாதுகாப்பு மாநாட்டில் ஈடுபட்டிருந்த ஜெயவர்த்தன, தொண்டைமானைச் சாந்தப்படுத்தும் நோக்கில், "அதைத்தான் நாங்கள் அனைவரும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார். தனது மக்கள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துவதை உடனடியாகத் தடுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன உட்பட பல உயர் அதிகாரிகளுடன் தொண்டைமான் அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். அவர்களுடனான அவரது உரையாடல்கள் மென்மையாக இருக்கவில்லை, அவரது குரலில் கோபமும் அழுத்தமும் தெரிந்தது. "உங்கள் அனைவருக்கும் நான் பலமுறை தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இதுவரை நீங்கள எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. காடையர்கள் எமது தெருக்களில் வலம்வந்து எமது மக்களைத் தாக்குகிறார்கள். எனது மக்களை தனியாகப் பிரித்தெடுத்து கொலை செய்கிறார்கள். இந்தக் காடையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் உங்கள் அரசாங்கத்தில் இருக்கும் பலம்வாய்ந்த அமைச்சர்கள் ஆதரவு வழங்கிவருகிறார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். உங்களால் இந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கூறுங்கள். எனது மக்கள் தமது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தேவையானதைச் செய்வார்கள்" என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார். இதனையடுத்து தானே செயலில் இறங்கிய ஜெயவர்த்தன, உடனடியாக இராணுவத்தினரையும், பொலீஸாரையும் மலையகத்திற்கு அனுப்பி நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். மலையகத் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தமிழகத்திலும், இந்தியாவிலும் எதிரொலித்தது. 1981 ஆம் ஆன்டு ஆவணி 19 ஆம் திகதி தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இத்தாக்குதல்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் "கவனயீர்ப்பு நடவடிக்கை" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். இதுகுறித்து லோக்சபாவில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ, இந்த வன்முறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தல் வன்முறைகள், ஆனைக்கோட்டைத் தாக்குதல் ஆகியவற்றிற்குப் பிறகு கொழும்பிற்கும் மலையகப் பகுதிகளுக்கும் பரவியதாக இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். குறிப்பாக மலையகத் தோட்டங்களில் வேலைபார்ப்பவர்கள். பல தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். நரசிம்ம ராவோ "இலங்கையரசாங்கம் அவசரகால நிலைமையினைப் பிரகடணம் செய்திருக்கிறது. மேலும், நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அது செய்துவருகிறது. நாட்டின் இன்னமும் சுமூகமான நிலை திரும்பாதலால், மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் நிலவுகிறது. அதனால், இந்திய பிரஜைகளுக்கு உண்மையாகவே நடந்த அநர்த்தங்கள் பற்றி தெளிவான தகவல்கள் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார். "அங்கு நடப்பது நிச்சயமாக இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. ஆனாலும், இந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கே நடந்துவரும் அவலங்கள் குறித்த இந்தியாவின் கவலையினை இலங்கை அரசிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய பூர்விக்கத்தைக் கொண்டவர்கள், சிலர் இந்தியக் குடிமக்கள். ஆகவே, இந்த வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் இலங்கையரசின் நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தற்போது நடைபெற்றுவரும் சிக்கல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படுவதுடன் சரித்திர காலம் தொட்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் நட்புறவு மீது எழும் எந்தச் சந்தேகமும் முற்றாகக் களையப்பட்டு விடும் என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார். கதிர்காமம் - முழுச் சிங்கள பெளத்த மயமாக்கலின் பின்னால் இந்தியப் பிரஜைகள் மீதான முதலாவது தாக்குதல் சம்பவம் புரட்டாதி மாதம் முதலாம் வாரத்தில் இடம்பெற்றது. தென்னிந்திய யாத்திரீகர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருந்த பஸ்வண்டி திஸ்ஸமஹராம எனும் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. தனபதி எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உள்ளூர்த் தலைவர் ஒருவரும் அப்பேரூந்தில் பயணம் செய்திருந்தார். பேரூந்து இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டதையடுத்து, அருகிலிருக்கும் வாகனத் திருத்துமிடமொன்றிற்குச் சென்று உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். தம்மிடம் உதவிகேட்டு வந்திருப்பது தமிழர் என்பதை அறிந்துகொண்ட அங்குநின்ற சிங்களவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு வாட்களால் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்ததுடன், சென்னையில் ஒருநாள் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்ய சபாவில் (மேற்சபை) இந்தத் தாக்குதல் குறித்து புரட்டாதி 11 ஆம் திகதி விவாதித்திருந்தனர். மேற்சபையில் பேசிய நரசிம்ம ராராவோ, இலங்கையின் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் நடந்த வன்செயலுக்காக வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தமிழ்நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். "இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்செயல்கள் முழுக்க முழுக்க இலங்கையின் உள்விவகாரமாக இருந்தபோதும், நாம் இலங்கை அரசுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தற்போது இடம்பெற்றுவரும் வன்செயல்கள் குறித்த இந்தியாவின் கவலையினை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு தகவல்களை வழங்கிவரும் இலங்கையரசு, தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எமக்கு விளக்கமளித்திருக்கிறது. இவ்விடயங்கள் குறித்து தாம் அதியுச்ச கவனம் எடுத்திருப்பதாகவும், இவற்றினை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்துவருவதாகவும் இலங்கையரசு எமக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது" என்றும் அவர் கூறினார். தொண்டைமானின் வற்புருத்தலின் காரணமாக மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரத்திணபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார் ஜெயவர்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் பேசும்போது, தான் சிங்கள பெளத்த தீவிரவாதிகளின் நாசச் செயலினால் வெட்கப்படுவதாகக் கூறினார். "அவர்கள் மிருகங்கள். அவர்கள் மிருகங்களைக் காட்டிலும் கீழ்த்தரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் அவலங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார். ஆனால், ஜெயவர்த்தனவின் இந்த முதலைக் கண்ணீரை தமிழர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. இதுகூட அவரது சூழ்ச்சியின் ஒரு பகுதிதானோ என்று அவர்கள் எண்ணினார்கள். "தனது சிங்கள மக்கள் எம்மீது இந்த அக்கிரமங்களை நடத்தும்வரையில் அவர் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்?" என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நியூஸ் இன்டர்னஷனல் எனும் செய்திச்சேவை, ஜெயாரின் வேஷம் தொடர்பாகத் தமிழர் கொண்டிருந்த சந்தேகங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தது. "அவர்கள் உங்களை ஒரு ஏமாற்றூப்பேர்வழியென்றும், சூழ்ச்சிக்காரர் என்றும் அழைக்கிறார்களே?" என்று அச்செய்தியாளர் கேட்டதற்கு, "அவர்கள் என்னை ஏமாற்றுப்பேர்வழி என்றும் சூழ்ச்சி செய்பவர் என்றும் அழைப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஏமாற்றத் தெரியாதவராகவோ சூழ்ச்சி செய்யத் தெரியாதவராகவோ இருந்தால் , ஒரு நாட்டின் தலைவராக இருப்பதில் அர்த்தமில்லை. அரசியல் என்றாலும், போரென்றாலும் தனிமனித வாழ்வென்றாலும், சூழ்ச்சிகளின்றி வெற்றிபெற முடியாது. ஒரு குத்துச்சண்டை வீரர் கூட சூழ்ச்சி செய்யவேண்டும், எதிரியை ஏமாற்ற வேண்டும். நான் இளவயதினனாக இருக்கும்போது குத்துச்சண்டையில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் எதிரியின் முகத்தில் அடிப்பதுபோல் பாசாங்குசெய்துவிட்டு, வயிற்றில் குத்த வேண்டும். ஆமாம், நீங்கள் கட்டாயம் சூழ்ச்சி செய்யவே வேண்டும்" என்று சாதாரணமாகப் பதிலளித்தார். ஆவணியில் இடம்பெற்ற வன்முறைகள் இந்திய மேற்சபையில் மார்கழி 18 ஆம் திகதி மீண்டும் எதிரொலித்தன. நரசிம்ம ராவோ பேசும்போது, ஆவணி வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். பொலீஸாரின் கூற்றுப்படி 7 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, 196 எரிப்புச் சம்பவங்களும், 35 கொள்ளைச் சம்பவங்களும், 15 வழிப்பறிச் சம்பவங்களும், 7 காயப்படுத்தல்களும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதாக அவர் கூறினார். "இந்திய அரசு, இலங்கையரசுடன் நெருக்கமான தொடர்பாடல்களைப் பேணி வருவதுடன், எமது கவலையினை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட இலங்கையரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதிய பலனைத் தந்திருப்பதாக இந்தியா ஏற்றுக்கொள்கிறது" என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையரசால் உத்தியோகபூர்வமாக் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரசிம்ம ராவோ பேசிவருவதாக லண்டன் ஒப்சேர்வர் பத்திரிக்கையில் ப்றையன் ஏட்ஸ் எனும் பத்திரிக்கையாளர் 1981 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி இப்படி எழுதுகிறார், "இலங்கையில் தேற்கிலும், கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்களுக்கெதிராகவே ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் சிங்களவர்களால் திட்டமிட்ட முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவாகிறது. இத்தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட தாக்குதல்கள் என்பதும் தெளிவாகிறது. இந்த அமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய தோழர்கள். குறைந்தது 25 தமிழர்கள் கொல்லப்பட்டும், பல தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் வாழ்நாள் சொத்துக்களும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முழு முட்டாள்த்தனமான அக்கிரமங்களை நிகழ்த்தியவர்கள், சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும், தமிழர்களின் இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்கெதிரான தடுப்பு நடவடிக்கையாகக் காட்டவுமே இந்தப் பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். இலங்கை எனும் தீவு முகம்கொடுத்துவரும் பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது" என்று கூறுகிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஆனைக்கோட்டைத் தாக்குதல் தமிழ் மக்களின் சரித்திரத்தில் சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட இன்னொரு அவமானமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முடிவடைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பின் உதவித்தலைவர் சுந்தரம் தலைமையில் அவ்வமைப்பினர் யாழ்ப்பாணத்திலிருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு பொலீஸ் நிலையத்திலிருந்த அனைத்து ஆயுதங்களையும் புளொட் அமைப்பினர் எடுத்துச் சென்றிருந்தனர். சிங்கள அதிகார மமதைக்கு விழுந்த முதலாவது குறிப்பிடும்படியான அடியாக இத்தாக்குதலைக் குறிப்பிட முடியும். மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட இத்தாக்குதல் ஆடி மாதம் 27 ஆம் திகதி இரவு 10 மணிக்கு நடத்தப்பட்டது. வான் ஒன்றைக் கடத்திக்கொண்டு பொலீஸ் நிலையத்திற்குச் சென்ற புளொட் போராளிகள், வாயிற்கதவை தட்டினார்கள். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் கதவைத் திறக்கவே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட அவர் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். வாசலில் சூட்டுச் சத்தங்கள கேட்டதையடுத்து உள்ளேயிருந்த கொன்ஸ்டபிள்களான ஜயரத்ண, குருசாமி மற்றும் பந்துலசேன ஆகியோர் வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த பதினேழு 0.303 ரைபிள்கள், ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஐந்து ஷொட் கண்கள், சுமார் 1500 ரவைகள் என்பன புளொட் போராளிகளால் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்ததும் தாம் வந்த வாகனத்திலேயே அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். காயப்பட்ட நிலையிலிருந்த பொலீஸாரை யாழ் மருத்துவமனையில் அனுமதித்தபோது, கொன்ஸ்டபிள் ஜயரத்ண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1971 ஆம் ஆண்டில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பொலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெற்ற மிகவும் துணிகரமான இத்தாக்குதலால் ஜெயாரும், பொலீஸாரும் நிலைகுலைந்து போயினர். இலங்கைப் பாதுகாப்புத்தரப்பும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானது. தேசிய பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் டி.வி. வீரப்பிட்டிய இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். முதலாவதாக யாழ்ப்பாணத்தில் மீளவும் ராணுவத் தலைமைக் காரியாலயம் ஒன்றினை நிறுவுவது. இரண்டாவது சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடுவதுடன், ஓரளவு பெரிய பொலீஸ் நிலையங்களின் பாதுகாப்பினை அதிகப்படுத்துவது. ஜெயாருடன் சிறில் ரணதுங்க ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் நடைபெற்று சரியாக இரு நாட்களுக்குப் பின்னர், அதாவது ஆடி 29 ஆம் திகதி பிரிகேடியர் சிறில் ரணதுங்க வடமாகாணத்தின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதுடன், அவர் தனது தலைமைக் காரியாலயத்தை பலாலி இராணுவ முகாமில் உருவாக்கினார். அவருக்கு உதவியாக லெப்டினண்ட் ஜெனரல் டென்சில் கொப்பெக்கடுவ எனும் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆவணி 11 ஆம் திகதி குருநகரில் அமைந்திருந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. டென்சில் கொப்பெக்கடுவ பிரிகேடியர் சிறில் ரணதுங்க இராணுவப் புலநாய்வு அமைப்பை உருவாக்கியதுடன் ராணுவத்தினதும், பொலீஸாரினதும் புலநாய்வு வலையமைப்புக்களை ஒருங்கிணைந்து செயற்படப் பணித்தார். மேலும், பலவீனமான, சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடும் நடவடிக்கையும் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் 9 நிலையங்கள் மூடப்பட்டதோடு, மீதி 7 நிலையங்களினதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கால்நடையாகப் பொலீஸார் ரோந்துசெல்வதை நிறுத்திய சிறில் ரணதுங்க, வாகனங்களில் மட்டுமே குழுக்களாக ரோந்தில் ஈடுபடமுடியும் என்று பொலீஸாரைப் பணித்தார். பெரும்பாலான நேரங்களில் பொலீஸ் வாகனங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ வாகனங்களும் ரோந்துகளில் இணைந்துகொண்டன. பொலீஸாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்ணுற்ற வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பலர், பொலீஸார் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதைக் கைவிட்டு இராணுவ வீரர்கள் போல் செயற்படுகிறார்கள் என்று எழுதத் தொடங்கினர். ஆனைக்கோட்டைத் தாக்குதலால் கடுமையான சிற்றமடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, அதுபற்றிப் பேசுவதற்காக ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். "அதை என்னிடம் விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது. ஆனால், மத்தியூவிற்கோ அந்தப் பதிலினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, மறுநாள் காலை , 28 ஆம் திகதி, ஆவணி 1981 ஆம் ஆண்டு அவர் ஜெயாருக்குக் கடிதம் ஒன்றினை எழுதினார். கனம் ஜனாதிபதி அவர்களுக்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரை மகிழ்விக்க நீங்கள் தேவைக்கதிகமாக வளைந்து கொடுப்பதாக நான் உணர்கிறேன். இந்த வளைந்துகொடுத்தல்கள் இன்னும் அதிகமானால், நீங்கள் உங்களின் சமநிலையினை இழந்து கீழே மல்லாக்காக விழுந்துவிடப்போகிறீர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கப்போவதில்லை. அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்யச் சென்றுவிடுவார்கள். இப்படிக்கு சிறில் மத்தியூ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மகிழ்விப்பதையே ஜெயார் தனது தலையாய கடமையாகச் செய்துவருவதாக மத்தியூ குற்றஞ்சாட்டுவதற்கு அமிர்தலிங்கத்தின் மீதான தண்டனைக்கு தான் பரிந்துரை செய்தவற்றினை ஜெயார் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கோபமே காரணமாக இருந்தது. ஆனால், அரசியல் யாப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பின்பர் மீது கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அதிகாரம் அப்போது இருந்தது. மத்தியூவின் கடிதம் ஜெயவர்த்தனவுக்கு கடும் சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடம் எழுத்துமூலமாக சிறில் மத்தியூ மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜெயார் கோரினார். மத்தியூவும் அப்படியே செய்திருந்தார். தனது ஏவலாளிகளைத் தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான பணிகளை வழங்குவதிலும் ஜெயவர்த்தன மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வந்தார். ஜெயாரினால் மத்தியூவிற்கு வழங்கப்பட்ட பணி சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருப்பதே. மத்தியூவை ஜெயவர்த்தனா சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருக்கப் பணித்திருந்தபோதும், அவர் தன்னைக் காட்டிலும் மக்களிடையே பிரபலமாவதை அவர் விரும்பியிருக்கவில்லை. மத்தியூவின் குறைந்த குலத்தினால் அவரை ஒருபோதுமே பெளத்த மகாசங்கத்தினர் சிங்கள பெளத்தர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஜெயவர்த்தனா நன்கு அறிந்தே இருந்தார். இதனாலேயே அவரை பெளத்த சாசன அமைச்சராக ஆக்குவதை ஜெயவர்த்தன தவிர்த்து வந்தார். மத்தியூவும், ஏனைய சிங்கள இனவாதிகளும் நாட்டில் தமிழருக்கெதிரான வன்மத்தை உருவேற்றிக்கொண்டு வந்தனர். அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தான் நிகழ்த்திய பேச்சின் 20,000 பிரதிகளை அவர் பெளத்த விகாரைகள், பொலீஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரச கூட்டுத்தாபனங்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றிற்கு அனுப்பி வைத்தார். அவரது பேச்சின் பிரதிகளோடு, தமிழ் ஈழம் அமையும் பட்சத்தில் எத்தனை பெளத்த விகாரைகள் தமிழர்கள் வசமாகும் என்கிற விபரங்களோடு வரைபடங்களையும் அவர் அனுப்பிவைத்தார். நாடெங்கிலும் சிங்களவர்களை விழித்து, "சிங்கள மக்களே" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் மத்தியூவினால் ஒட்டப்பட்டு வந்தன. "திராவிடர்களுக்கெதிராக கிளர்ந்தெழுங்கள்" என்கிற வாசகங்கள் நாடெங்கிலும் ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்கள் கட்டாயம் குடியேறவேண்டும் என்றும், அதன்மூலமே பெளத்த சின்னங்களும், விகாரைகளும் பாதுகாக்கப்பட முடியும் என்றும் அவர் சிங்கள மக்களை வேண்டிக்கொண்டார். இவ்வாறான இனவாதத் தூண்டுதல்களின் ஒரு கட்டமாக தமிழர்களுக்கு கூட்டுத்தண்டனை ஒன்றினை நிச்சயம் வழங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி அரச அமைச்சர்களிடையே சுடர்விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. விமலா கன்னங்கர கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் விமலா கன்னங்கர ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, "நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்றால், நாமே ஆட்சி செய்ய வேண்டும். நாம் ஆளுகிறோம் என்றால், நாமே ஆள வேண்டும். சிறுபான்மையினத்தினருக்கு நாம் எதையுமே கொடுக்கக் கூடாது. நாம் சிங்கள பெளத்தர்களாக இந்நாட்டில் பிறந்திருக்கிறோம். நாம் பெரும்பான்மையின மக்களாக இருந்தபோதும் கூட, கடந்த நான்கு வருடங்களாக சிறுபான்மையினத்தவருக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறோம். நாம் மீண்டு பெரும்பான்மையின மக்களாக இந்த நாட்டினை ஆளவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். தமிழருக்கெதிரான வன்மம் மொத்தச் சிங்கள இனத்திற்குமே பற்றிக்கொண்டது. ஆங்காங்கே தமிழருக்கெதிரான வன்முறைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் உடனடியாகவே கண்டித்திருந்தனர். பொலீஸாரைக் கொல்வது உணர்வற்ற ஒரு நடவடிக்கை என்று அவர்கள் விமர்சித்திருந்தனர். ஆனால், நாட்டில் தமிழர்களுக்கெதிராக சூழ்கொண்டுவந்த வன்மத்தை அவர்களால் தணிக்க முடியவில்லை. ஆனைக்கோட்டைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கொன்ஸ்டபிள் ஜயரத்ணவின் உடல் அவரின் ஊரான இரத்திணபுரிக்குக் கொண்டுவரப்பட்டபோது வன்முறைகள் வெடித்துக் கிளம்பின.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அமிர்தலிங்கத்தைக் கொல்லும் வழிவகைகளை பாராளுமன்றத்தில் ஆராய்ந்த பேரினவாதிகள் கண்டுகொள்ளப்படாத செய்தி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் மூலம் தாம் இரு முக்கிய செய்திகளை சிங்கள அரசிற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கியதாக தமிழர்கள் நினைத்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு பெருவாரியாக வாக்களித்ததன் மூலம் தமிழர் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தார்கள். அதாவது, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்று வேண்டுமென்றும், அந்தச் சுதந்திரமான நாட்டை அடைவதன் மூலம் தமது இன உரிமைகள், சுயகெளரவம், பாதுகாப்பு, இருப்பிற்கான உத்தரவாதம், தமது நிலம் மீதான அதிகாரம் ஆகியவற்றை மீள தமதாக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும், இதனை வன்முறைகளற்ற வழியில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற மிதவாதத் தலைமைகளினூடாகவே அடைய விரும்புகிறார்கள் என்பதையும் உரத்துக் கூறியிருந்தார்கள். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் தலைவரான ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் தமிழர்கள் வழங்கிய செய்தியின் முதற்பகுதியினை மட்டுமே பார்க்க விரும்பினார்கள், அதாவது தமிழர்களுக்கான தனிநாடு என்பது. ஆகவே, பிரிவினைவாதத்தை தமிழர்களிடையே விதைத்துவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். ஆனால், தமிழர்கள் எதற்காககத் தனிநாடு நோக்கித் தள்ளப்பட்டார்கள் என்பதையோ அல்லது அவர்களை உந்தித்தள்ளிய பிரச்சினைகளை எங்கணம் கையாள்வது என்பதுபற்றியோ அவர்கள் கிஞ்சித்தும் ஏறெடுத்துப் பார்க்கத் தயாராக இருக்கவில்லை. கோபமும், வெறுப்பும் அவர்களின் கண்களை மறைக்க, அவர்கள் தமிழர்களின் இரண்டாவது செய்தியை முற்றாகப் பார்க்கத் தவறினார்கள். அதுதான், தமிழர்கள் தமது இல்ட்சியத்தை அடைய வன்முறைகளற்ற, ஜனநாயக வழிகளிலேயே போராடுவார்கள் என்பது. மேலும், தேர்தல்களில் பங்குகொள்ள வேண்டாம் என்று புளொட் அமைப்பின் கோரிக்கையினை முற்றாக புறக்கணித்த தமிழ் மக்கள், அவர்களின் அச்சுருத்தல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்பதையும் நிரூபித்திருந்தார்கள். இதனைக்கூட ஜெயாரின் இனவாத அரசு பார்க்க மறுத்துவிட்டது. தமிழர்கள் இத்தேர்தலின் மூலம் வழங்கிய செய்தியைத் தெளிவாகப் புரிந்திருந்தால், ஜெயாரின் அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் பங்கெடுப்பதென்று எடுத்த தீர்மானத்தை ஆதரித்து, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்ட இந்த தீர்வை வாழங்கியிருக்கும். ஆனால், ஜெயாரோ வடக்குக் கிழக்கில் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கு முட்டுக்கட்டைகளைப் போடுவதற்கு ஆரம்பித்தார். இந்த சபைகள் இயங்குவதற்கான அதிகாரங்கள் என்று தானே வரைந்தவற்றை வழங்குவதற்குப் பிடிவாதமாக மறுத்த ஜெயார், இச்சபைகளை இயக்குவதற்கான நிதியினை முற்றாகத் தடுத்துவிட்டதுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும், தமிழர்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை முடுக்கிவிட்டார். தமிழர்களின் தனிநாட்டிற்கான கோரிக்கையென்பது பாரிய தண்டனைக்குரிய குற்றம் என்று வரிந்துகொண்டு ஜெயாரும் அவரது அரசாங்கமும் செயலில் இறங்கின. ஜெயவர்தன ஒருபோதுமே ஒரு சிறந்த அரசியல்த் தலைவராகவோ, எதிர்காலம் குறித்து சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவராகவோ இருந்ததில்லை. பல அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை ஜெயார் ஒரு தூரநோக்குச் சிந்தனையற்ற, அரசியல் சூதாட்டங்களில் தேர்ச்சிபெற்ற, தனது எதிரிகளை சூழ்ச்சிகள் மூலம் பலவீனமாக்கி தனது அரசியல் ஸ்த்திரத்தன்மையினை எப்படியாவது உறுதிசெய்துகொள்ளத் துடிக்கும் அதிகார வெறிபிடித்தவர் என்றே கணிப்பிட்டிருந்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு இத்தேர்தலில் தமிழர்கள் வழங்கியிருந்த அமோக ஆதரவு தனது அரசியல் அதிகாரத்திற்கும், தனது இனமான சிங்களவர்களுக்கும் எதிராக தமிழர்கள் விட்ட சவால் என்று ஜெயார் எண்ணினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைமையினைப் பலவீனமாக்கியும், தமிழர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டும் அவர்களின் குரலை அடக்கிவிட முடியும் என்றும் ஜெயாரின் எதிர்பார்ப்பு, முன்னணிக்கு தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் மூலம் கடுமையாகச் சிதைவடைந்து போனது. அத்துடன், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதிலும், தமிழ் மக்களை போராளிகளை நோக்கித் தள்ளுவதிலுமே ஜெயாரின் செயற்பாடுகள் வந்து முடிந்திருந்தன. தமிழர்களின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தைத் தீக்கிரையாக்கியது, தமிழ் அறிஞர்கள், புலவர்கள் மற்றும் மூதாதையர்களான திருவள்ளுவர், ஒளவையார், ஆறுமுகநாவலர் ஆகியோரின் உருவச் சிலைகளை உடைத்தது, தமிழரின் பொக்கிஷமான யாழ் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் வீட்டைத் தீக்கிரையாக்கியது, அமிர்தலிங்கத்தைக் கைதுசெய்து அவமானப்படுத்தியது என்று ஜெயாரின் இனவாத அரசு செய்திருந்த காட்டுமிராண்டித்தனங்கள் தமிழர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தன. அப்படியிருந்தபோதிலும் கூட, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் மூலம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் ஜெயாரின் தீர்வுடன் தாம் சேர்ந்து பணிபுரிய தயார் எனும் செய்தியையும் அனுப்பியிருந்தனர். இதற்கு அரசால் வழங்கப்பட்ட பதில் யாதெனில், தமிழர்கள் மீது அரச பயங்கரவாதிகளான பொலீஸாரும், இராணுவத்தினரும் நடத்திய வன்முறைகளைச் சரியென்று நியாயப்படுத்தியதுதான். ஆகவேதான், ஜெயாரின் அடியாட்களில் ஒருவரான அமைச்சர் சிறில் மத்தியூ யோகேஸ்வரனின் வீட்டை பொலீஸார் எரியூட்டியதை பாராளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசினார். மேலும், அரசாங்கத்தின் தலைவரான ஜெயார் ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்திய வார இதழான இந்தியா டுடேக்கு வழங்கிய நேர்காணலில் இதனை மேலும் உறுதிப்படுத்தியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், யாழ் நூலகம் பொலீஸாரால் எரியூட்டப்பட்ட சம்பவம் உட்பட யாழ்நகரில் பொலீஸாரும், இராணுவத்தினரும் இணைந்துநடத்திய வன்முறைகளை "யாழ்ப்பாணச் சரித்திரத்தின் இருண்ட பக்கங்கள்" என்று வர்ணித்திருந்தார். யொகேஸ்வரன் பேசும்போது தனது வீட்டினை பொலீஸார் எரித்தபோது தான் எப்படி தனது உயிர்கைரைக் காத்துக்கொள்ள தப்பியோடினேன் என்று விபரித்தார். "சமாதான காலத்தில், எந்தவொரு நாகரீகமடைந்த நாட்டிலும் நாம் பார்க்கமுடியாத வன்முறைகளையும், கொடூரங்களையும் உங்களின் அரச இயந்திரத்தை கட்டவிழ்த்து விட்டு அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டீர்கள். தனிப்பட்ட ரீதியில் நானும் அனைத்தையும் இழந்திருக்கிறேன்" என்று அரசை விமர்சித்தார். பொலீஸாரின் வன்முறைகளை நியாயப்படுத்திய அமைச்சர் சிறில் மத்தியூ, பயங்கரவாதிகளுடன் யோகேஸ்வரன் கூட்டமொன்றினை தனது வீட்டில் நடத்திவந்ததாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால், சிறில் மத்தியூவின் கபடத்தனமான இக்கூற்றினை யோகேஸ்வரன் முற்றாக நிராகரித்தார். இதன்போது பேசிய மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம், "அமைச்சர் சிறில் மத்தியூவினால் வழங்கப்பட்ட அறிவுருத்தல்களின் அடிப்படையிலேயே பொலீஸார் யோகேஸ்வரனின் வீட்டைக் கொழுத்தினார்கள்" என்று கூறினார். எஸ்.வெங்கட் நாராயணன் ஒருமாத காலத்திற்குப் பின்னர் இந்தியா டுடேயின் செய்தியாளர் வெங்கட் நாராயணனுக்கு ஜெயார் வழங்கிய செவ்வியில் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டினை மேலும் உறுதிப்படுத்தியிருந்தார். வெங்கட் நாராயணன் : யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள். சுமார் 50 வருடங்கள் பழமைவாய்ந்ததும், 96,000 விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொண்டிருந்ததுமான அவர்களின் நூலகத்தை பொலீஸார் எரித்தது மற்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டை பொலீஸாரே எரித்ததும் தமிழர்களுக்கு கடுமையான மனவேதனையைக் கொடுத்திருக்கிறதே? ஜெயவர்த்தன : ஏனென்றால், யோகேஸ்வரன் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்று பொலீஸார் நினைக்கிறார்கள். அதனால்த்தான் அவரது வீட்டை அவர்கள் எரித்தார்கள். வெங்கட் நாராயணன் : அன்றிரவு பொலீஸார் நடந்துகொண்ட முறையினைப் பார்க்கும்போது, யோகேஸ்வரனைக் கைதுசெய்து கொல்லும் நோக்கத்துடன் செயற்பட்டிருப்பதாகத் தெரிகிறதே? ஜெயவர்தனா: பயங்கரவாதிகள் கூட இதனைத்தானே செய்கிறார்கள்? டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் புரட்டாதி 7 ஆம் திகதி இந்த செவ்வி மீள்பிரசுரமாகியது. அந்தக் காலத்தில் ஜெயவர்த்தனவின் தமிழர் மீதான மனோநிலை எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது குறித்தோ அல்லது யோகேஸ்வரனின் வீடு எரிக்கப்பட்டது குறித்தோ ஜெயவர்த்தன எந்தவித அனுதாபமும் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், இவை இரண்டையுமே பொலீஸார்தான் செய்தார்கள் என்பதனையும் அவர் மறுக்கவில்லை. தனது அடுத்தகேள்வி குறித்து வெங்கட் நாராயணன் விவரிக்கும்போது, ஜெயாரின் நிலைப்பாடு "பழிக்குப் பழி வாங்குவது" போன்றே இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், ஜெயாரின் "பழிக்குப் பழி வாங்கும்" விளையாட்டு கடுமையான சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்தில் அரசால் நடத்தப்பட்ட வன்முறைகளைக் காட்டி, தமிழர்கள் தமது சொந்த வாழிடங்களிலேயே வாழ்வதற்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லையென்பதை தெளிவாகக் விளக்கியிருந்தார். மேலும், 1956, 1958 ஆம் ஆண்டு சிங்களப் பகுதிகளிலும், கிழக்கில் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு அண்மையிலும் வசித்த தமிழர்கள் மீது அரசும் சிங்கள மக்களும் நடத்திய தாக்குதல்கள் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், 1979 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழர்களுக்கு அவர்களின் சொந்தத் தாயகத்தில்க் கூட பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாடுகளில் அமிர்தலிங்கம் மேற்கொண்ட பேச்சுக்களால் கடுஞ்சீற்றம் கொண்ட அரசாங்கம், அரச ஊடகத்துறையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முடுக்கிவிட்டது. இதற்குச் சமாந்தரமாக தமிழர்களுக்கெதிரான வெறுப்பை உமிழும் பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அமிர்தலிங்கம் நாடு திரும்பியதுடன் அரசுக்கெதிரான நம்பீகையில்லாப் பிரேரணையொன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. அதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின்மீது ஜெயாரின் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைத்தது. இந்தப் பிரேரணை 36 ஐக்கிய தேசியக் கட்சி பா. உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் முன்வைக்கப்பட்டிருந்தது. உலகப் பாராளுமன்றச் சரித்திரத்தில் அதுவரை கண்டிராத, பகுத்தறிவற்ற பாராளுமன்ற நிகழ்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் பிரேரணையைக் குறிப்பிடலாம். இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில், அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையினையே முதலில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்று அரசு முடிவெடுத்தது. அதன்படி ஆடி 23 , 24 ஆகிய நாட்களில் இந்த விவாதம் நடந்தது. பாணதுறை பா.உ நெவில் பெர்ணான்டோ இந்த பிரேரணையினை கொண்டுவந்தார். பிற்காலத்தில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் இந்த பிரேரணை குறித்துப் பேசும்போது ஜெயாரின் அழுத்ததினாலேயே தான் இந்தப் பிரேரணையினை முன்வைக்கவேண்டி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பாக்கீர் மாக்கார் தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பதிலளித்து பேச அமிர்தலிங்கம் எழுந்தார். அவரை மிகவும் தரக்குறைவாகவும் ஏளனமாகவும் விழித்தபடி ஆளும்கட்சி பா. உ க்கள் கோஷமிட அரம்பித்தனர். அவரை ஒரு பொய்யர் என்றும், துரோகியென்றும், கொலைகாரப் புலிகளின் ஆதரவாளர் என்றும் விமர்சித்தனர். அமிர்தலிங்கத்தைப் பேசவிடாது தடுக்க முயன்ற நெவில் பெர்ணான்டோ, அமிரின் தன்னிலை விளக்கம் பாராளுமன்ற அனுமதியுடன் மட்டுமே நடத்தப்பட முடியும் என்று கூறினார். பெர்ணான்டோவின் கோரிக்கைக்கு அடிபணிந்த சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அமிர்தலிங்கம் பேசமுடியாது என்று தீர்ப்பிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பா. உ க்களும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். சுதந்திரக் கட்சியின் உபதலைவர் மைத்திரிபால சேனநாயக்க ஒரு கேள்விய இதன்போது எழுப்பினார். அமிருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் நிராகரிக்கப்படவேண்டும் என்பதற்காக மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். முதலாவதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், உலகில் வேறெந்தப் பாராளுமன்றத்திலும் இவ்வாறு நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். இரண்டாவது, எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றப் பாரம்பரியங்களுக்கு அமைவாகவே தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், அவரின் செயற்பாடுகள் மீது மொத்த எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வைத்திருக்கின்றன என்றும் கூறினார். மூன்றாவது, அரசால் கொண்டுவரப்பட்ட இந்த நகைப்பிற்கிடமான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அமிர்தலிங்கத்திற்கு இது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராகப் பணிபுரியலாம் என்றும் அவர் விளக்கினார். மைத்திரிபால சேனநாயக்க ஆனால், மைத்திரிபால சேனநாயக்கவின் இந்த கூற்றினை சமயோசிதமாக நிராகரித்த சபாநாயகர், மிகவும் தாமதமாக இக்கேள்வி எழுப்பப்பட்டதால், தனது முடிவினை தன்னால் மாற்றமுடியாது என்று மழுப்பிவிட்டதுடன், அமிருக்கெதிரான பிரேரணை தொடரட்டும் என்றும் கட்டளையிட்டார். இதனால் வெறுப்படைந்த கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம, சபாநாயகர் பாராளுமன்றத்தை நடத்துகிறாரா அல்லது ஆளுங்கட்சியினை நடத்துகிறாரா என்று கேள்வி கேட்டார். பின்னர் ஆளுங்கட்சி பா. உ க்களின் பலத்த கூச்சல்களுக்கு மத்தியில் சரத் முத்தெட்டுவே கமவும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இதன்மூலம், பாராளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் அமிர்தலிங்கத்திற்கு இருந்ததென்பது உறுதியாகிறது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுடன், அமிருக்கெதிரான பிரேரணைக்கு அரச ஊடகத்துறை முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் ஜெயார் பணித்திருந்தார். அமிருக்கெதிரான பிரேரணையின் உண்மையான் நோக்கமே தமிழ் மக்களுக்கதிரான வெறுப்பினை நாடுமுழுவதற்கும் கொண்டு செல்வதுதான். அமிர்தலிங்கமும், அவரது உறுப்பினர்களும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக அரச பா. உ க்கள் கூச்சலிட்டார்கள். தெற்கில் அகிம்சை குறித்தும், காந்தீயம் குறித்தும் பேசும் முன்னணியினர், வடக்கில் பிரிவினைவாதம் குறித்தும், வன்முறைகள் குறித்தும் இளைஞர்களுக்கு உணர்வூட்டிவருவதாகவும், இளைஞர்களின் வன்முறைகளின் மூளையாகச் செயற்படுவதே அவர்கள்தான் என்றும் அரச உறுப்பினர்கள் முன்னணியினரைக் குற்றஞ்சாட்டினர். மேலும், அரசுடன் சேர்ந்து செயற்படப்போவதாக உள்நாட்டில் கூறும் முன்னணியினர், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அரசுமீதும் சிங்கள மக்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதாகவும் அவர்கள் விமர்சித்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் முன்னணியினரை இரட்டை முகம்கொண்ட பொய்யர்கள், துரோகிகள் என்று ஆளும்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். புலிகளுக்கான வங்கிக்கணக்குகளை முன்னணியினர் நடத்துவதாக அநுராதபுர உறுப்பினர் யஸபல கேரத் விவாதத்தின் இரண்டாம் நாளன்று கூறினார். இங்கிலாந்து, அமெரிக்கா, நோர்வே, டென்மாக் ஆகிய நாடுகளிலிருந்து புலிகளுக்கு அனுப்பப்பட்ட பணமான 400 மில்லியன் ரூபாய்கள் சிவசிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியபோது சிவசிதமபரம் அதனை முற்றாக மறுத்தார். அதன்பின்னர், அமிர்தலிங்கமும் அவரது உறுப்பினர்களும் அவர்கள் செய்துவரும் துரோகங்களுக்குத் தண்டனையாக எந்தவகைகளில் தண்டிக்கப்படவேண்டும் என்று ஆளும்கட்சி உறுப்பினர் விவாதிக்கத் தொடங்கினர். குண்டசாலா உறுப்பினர் சந்திரபால பேசும்போது, "எனக்கு அதிகாரம் இருந்தால், அமிர்தலிங்கத்தை அருகிலிருக்கும் கொங்கிறீட் தூணுடன் கட்டி, அவருக்குப் புத்தி வரும்வரை குதிரைகளுக்கு அடிக்கும் சவுக்கினால் அடிப்பேன். அதன்பின்னர், எவரும் தமக்கு விரும்பியதை அவருக்குச் செய்யலாம். அவரை பேரா ஆற்றிலோ அல்லது கடலிலோ தூக்கி எறிந்துவிடலாம். அவரது உடல் முற்றாக குதறப்பட்ட நிலையில் அவர் உயிர்தப்பி வருவதென்பது நடவாத காரியம்" என்று தனது விருப்பத்தினைத் தெரிவித்தார். இரத்திணபுரி உறுப்பினர் புஞ்சிநிலமே பேசும்போது, "நேற்றுக் காலையிலிருந்து இந்த கெளரவமான சபையில் அமிர்தலிங்கத்திற்கு வழங்கவேண்டிய தண்டனைகள் குறித்துப் பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். பாணதுறை உறுப்பினர் பேசும்போது சிங்கள மன்னர் காலத்தில் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்துப் பேசினார். சிறிய இடைவெளியில் நடப்படும் இரு கமுக மரக் குற்றிகளை வளைத்து, அவற்றின் நுனிகளில் துரோகிகளின் கைகால்களைக் கட்டி, பின்னர் கயிறுகளை வெட்டிவிடும்போது அவர்களது உடல் இரண்டாகச் சிதறும். அவ்வாறே அமிர்தலிங்கமும் அவரது கட்சியினரும் கொல்லப்படவேண்டும் என்று கூறுகிறேன். சில உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் உடனடியாகக் கொல்லப்படவேண்டும் என்று கேட்கிறார்கள். சிலர் இவர்களது கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை காலிமுகத்திடலில் கட்டிவைத்துச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த நாட்டின் மக்களும், இந்த அரசாங்கமும் அமிர்தலிங்கம் மீதும், அவரது கட்சியினர் மீதும் இந்தவகையில் ஏதாவதொரு தண்டனை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்" என்று அவர் கூறினார். "ஜெயார் - மனிதனும் அரசியல்வாதியும்" எனும் தனது புத்தகத்தில் ஜெயரட்ணம் வில்சன் எழுதுகையில், உறுப்பினர் புஞ்சிநிலமே கமுக மரத் தண்டனை குறித்து ஜெயாரிடம் பேசும்போது, பழங்காலத் தண்டனைகள் தற்காலத்திற்கு உகந்தது அல்ல என்று ஜெயார் கூறியதாக எழுதுகிறார். 1981 ஆம் ஆண்டு, ஆடி 24 ஆம் திகதி, 121 ஆதரவு வக்குகளினால் அமிருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றது. இரு அரச உறுப்பினர்களான தொண்டைமானும், ஷெல்ட்டன் ரணராஜாவும் வக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பிரேரணைக்கெதிராகப் பேசிய தொண்டைமான் அமிர்தலிங்கத்திற்கெதிரான நடவடிக்கைகள் தமிழர்களை ஜனநாயக வழிமுறைகளிலிருந்து விரட்டி தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தூண்டிவிடும் என்று எச்சரித்தார். ஆனால், தொண்டைமானின் எச்சரிக்கையினை ஜெயாரோ அவரது ஆலோசகர்களோ செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்தி, தமிழ்ப் போராளிகளை இராணுவ ரீதியாக அழித்து, தமிழர்களை மண்டியிட வைத்து, தாம் விரும்பிக்கொடுக்கும் தீர்வினை இரைஞ்சிப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவருவது மட்டுமாகவே இருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் நீர்வேலி வங்கிக்கொள்ளை, தங்கத்துரை குட்டிமணியின் கைதுகள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது இடம்பெற்ற அரச பயங்கரவாதம் ஆகியவை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது அரச இராணுவம் பாரிய தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்திருந்தது. இதனால், யாழ்க்குடாநாட்டில் தனது இரகசிய மறைவிடங்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பது உகந்ததல்ல என்பதனை பிரபாகரன் உணரத் தொடங்கினார். மிகுந்த களைப்படைந்த நிலையிலும், பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்பட்ட பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தும் பொறுப்பினை மாத்தையாவிடம் அப்போதைக்குக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குப் பயணமானார். பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குரிய சில இளைஞர்களும் 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் திகதி அதிகாலை படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியத்திற்குத் தப்பிச் சென்றனர். வேதாரணியத்தின் வரைபடம் ஆனால் அந்தக் கடற்பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையான எம். கே. சிவாஜிலிங்கத்தினூடாக (டெலோ உறுப்பினர்) தனது பயணத்திற்கு படகு ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு பிரபாகரன் கேட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தமது தேர்தல் வெற்றியை வெடிகொழுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும்வேளை, பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 10 இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த வீடொன்றிற்கு இரகசியமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஒரு ஜி - 3 ரைபிள், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஒரு ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கி மற்று சில கைத்துப்பாக்கிகள் ஆகிய ஆயுதங்கள் இருந்தன. திடீரென்று ஒரு துப்பாக்கி வெடித்துவிட்டது, ஆனால் அவர்களின் அதிஷ்ட்டமாக கட்டிலின் மெத்தையொன்றிற்குள் சன்னம் புகுந்துகொண்டதனால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மறுநாள் , ஆனி 6 ஆம் திகதி, முழுநாளும் அவர்கள் அந்த வீட்டிலேயே ஒளிந்திருந்தனர். அன்று இரவு, படகுப் பயண்த்திற்காக கடற்கரை நோக்கி அவர்கள் மெதுவாக நகர்ந்து செல்கையில் இராணுவ ஜீப் வண்டியின் விளக்கு வெளிச்சத்தினைக் கண்ணுற்றார்கள். உடனேயே கடற்கரை மணலில் வீழ்ந்து படுத்துக்கொண்ட அவர்கள், தாம் கிடந்த பகுதியினை அந்த ஜீப் வண்டி கடந்து செல்லும்வரை அசையாது கிடந்தார்கள். "படகில் பயணிக்கும்போது பிரபாகரன் சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னால் தொலைவில் மறைந்துகொண்டிருக்கும் கடற்கரையினைப் பார்த்துக்கொண்டு இருந்த அவர், தமிழ் மக்கள் மீது ஜெயார் நிகழ்த்திவரும் அட்டூழியங்களுக்குப் பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக்கொண்டார்" என்று அன்றிரவு அவருடன் படகில் தமிழ்நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கிட்டு பின்னர் எழுதியிருந்தார். வைகாசி 31 ஆம் திகதியிலிருந்து ஆனி 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழ் மக்களின் உரிமைகளையும், சுய கெளரவத்தையும், கண்ணியத்தையும் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவாவினை அவருள் அதிகரித்திருந்தது. "தம்மிடமிருக்கும் அதிகார மமதையிலும், தமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்கிற அகம்பாவத்திலும் சிங்களவர்கள், தமிழர்களின் கலாசாரத் தலைநகரையும், தமிழர்களின் பொக்கிஷமான நூலகத்தையும் எரித்தார்கள். தமிழர்கள், அவர்கள் நினைப்பதுபோல அக்கிரமங்களுக்கு அடங்கிக் கிடக்கும் இனமல்ல என்பதை சிங்களவர்களுக்கு நிச்சயம் புரியவைப்போம்" என்று அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டு, எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சைவ மதகுரு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், 1974 ஆம் ஆன்டு சிறிமாவின் ஆட்சியில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது அப்பாவிகளின் படுகொலைச் சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் யாழ்நகரும், யாழ் நூலகமும் எரியூட்டப்பட்ட சம்பவம் ஆகியவையே பிரபாகரனை ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் ஒன்றினை உருவாக்கவும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்திறங்கிய பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான விடயங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து தனது இலட்சியத்தின்மீது தான் கொண்டிருந்த உறுதியிலும், அர்ப்பணிப்பிலும் எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி செயற்பட்டு வரலானார். தமிழ்நாட்டின் சிறுமலை காட்டுப்பகுதியில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரனும் புலிகளும் தனது இயக்கத்திற்கென்று சிறுமலை, பொள்ளாச்சி மற்றும் மேட்டூர் ஆகிய காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான வாழ்விடங்களை அவர் உருவாக்கினார். இந்த மறைவிடங்களிலேயே புலிகள் இயக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதப் பயிற்சியிலும், தொலைத் தொடர்புக் கருவிகளை உபயோகிப்பதிலும் பயிற்றப்பட்டனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தேர்தலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் எரிக்கப்பட்ட யோகேஸ்வரனின் வீடு அன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்துத் வாக்குச் சாவடிகளுக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், வீதிச் சோதனைச் சாவடிகளும் பொலீஸாரால் அமைக்கப்பட்டிருந்தன. வீதி ரோந்துகளில் பொலீஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பவனி வந்தனர். வாக்குப் பெட்டிகளும், சிங்கள தேர்தல் அதிகாரிகளும் இராணுவப் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். வக்களிப்பு முடிவடையும்வரை வாக்களிப்பு நிலையங்களிலேயே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்ட இராணுவத்தினர், வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவற்றைப் பாதுகாப்பாக வாக்கு எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தேர்தல் விதிமுறைகளின்படி வாக்களிப்பு காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் நடைபெறவேண்டும் என்றும், அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்குகள் எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டதன் பின்னரே வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாண வாக்குச் சாவடிக்குப் பொறுப்பாகவிருந்த சரத் முனசிங்க கூறும்போது, "நாங்கள் அதிகாலையே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றுவிட்டோம். ஆனால், காலை 10 மணிக்குப் பின்னரே வாக்குப் பெட்டிகளைத் தாங்கிவந்த பஸ்கள் வக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தன. மாலை 6 மணியளவில் நாம் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம்" என்றார். தேர்தல் நாளன்றும் பொலீஸார் மூன்று தலைவர்களைத் தடுத்து வைத்தனர். அவர்கள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம், நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான எம்.சிவசிதம்பரமும் ஆகும். தேர்தல் அதிகாரிகளின்படி, வக்களிப்பு நிலையங்களில் குழப்பமான சூழ்நிலையும், வாக்குவாதங்களும், ஒருவரையொருவர் தூற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றதாகக் கூறினர். தேர்தல் முடிந்த கையோடு சிங்கள தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தெற்கிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்குகளை எண்ணும் நிலையத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. சில வாக்குப் பெட்டிகள் கணக்கெடுக்கும் நிலையத்திற்கு வராததால் அங்கே குழப்பம் நிலவியது. அனைத்து வாக்குப் பெட்டிகளும் வராமல் கணக்கெடுப்பை ஆரம்பிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரி துரைசாமி மறுத்துவிட்டார். இதனால் கொதிப்படைந்த அமைச்சர் சிறில் மத்தியூ துரைசாமியைப் பார்த்து கோபத்துடன் கத்தினார். சிங்கள அதிகாரியான பியசேகர அரச தலைமை சட்ட அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கினார். அதற்குப் பதிலளித்த சட்ட அதிகாரி, தேர்தலினை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்குக் கிடையாது என்றும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியான துரைசாமி வாக்குகளை எண்ணமுடியும் என்றும் கூறினார். யோகேந்திர துரைசாமி யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் குறித்து தேர்தல் திணைக்களத்திற்கு தனது அறிக்கையை அனுப்பிய துரைசாமி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், சில வாக்குப் பெட்டிகள் தாமதமாகவே வாக்குகளை எண்ணும் நிலையத்தை வந்தடைந்தன. தேர்தல்க் கடமைகளில் ஈடுபட்ட பெருமளவு சிங்கள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இடப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கை பற்றி தேர்தலில் பங்கெடுத்த அரசியல்க் கட்சிகள், சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு எழுத்துமூல அறிக்கையொன்ம்றினைச் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற அடிப்படை தெளிவு கூட இருக்கவில்லை. இத்தேர்தல் சரியான முறையில் நடத்தப்படவில்லை. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறைகளும், சதிகளுமே தேர்தல் குழப்பமான முறையில் நடைபெறுவதற்குக் காரணமாகின என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வெறும் 23,302 வாக்குகளுக்குப் பதிலாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 263,369 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜெயாரினால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தைத் தன்னும் கைப்பற்ற் முடியாது போய்விட்டது. அதேவேளை தமிழ்க் காங்கிரஸின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாகக் காணப்பட்டது. அதற்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,369 மட்டுமே. ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும்பான்மையானவை ஆள்மாறாட்டம் மூலமும், பொலீஸாரும் ராணுவத்தினரும் வாக்குப் பெட்டிகளை கள்ள வாக்குகளைக் கொண்டு நிரப்பியதாலும் பெறப்பட்டவை. ஒரு வாக்குப் பெட்டியில் 59 வாக்கட்டைகள் காணப்பட்டன. அவை அனைத்துமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடப்பட்டிருந்ததோடு, சேர்த்து ஒன்றாகக் கட்டப்பட்டும் இருந்தன. தேர்தலில் அரசு முறைகேடுகளில் ஈடுபட்டதனால் அதிருப்தியடைந்த தேர்தல் அதிகாரி பியசேகர, தனது அதிருப்தியைக் காண்பிக்க பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக ஜெயாருக்கு அறிவித்தார். அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜெயார், அவரை அமைதியாக வைத்திருப்பதற்காக ரோமிலிருக்கும் இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு தூதுவராக நியமனம் செய்து அனுப்பிவைத்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழர்கள் இன்னமும் வன்முறையற்ற, மிதவாத அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது. போராளிகளின் அரச படைகள் மீதான தாக்குதல்களை வரவேற்றும், அவர்களின் அர்ப்பணிப்பின் மீதும், அசாத்திய துணிச்சல் மீதும் பெருமரியாதை வைத்திருந்தபோதும், அவர்கள் மீது தமது அரசியல் எதிர்காலத்தைக் கையளிக்கும் நிலைமைக்கு தமிழர்கள் இதுவரை வரவில்லையென்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டின. இந்த சிறிய புரிதலைக் கூட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் முடிவுகளின்மூலம் ஜெயார் புரிந்துகொள்ளத் தவறினார். அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஜெயாருடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆயத்தமாகியதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான பதவிகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயினர். அரச நிர்வாகத்துறையில் பரீட்சயமும், அனுபவமும், திறமையும் மிகுந்த தமிழர்களை தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்வு செய்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியம் நடராஜா யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தேர்தல் முறைகேடுகளில் இறங்கிய அரசாங்கம் யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திச் சபைத் தேர்தலில் எப்படியாவது சில ஆசனங்களைப் பெற்றுவிடவேண்டும் என்று ஜெயார் உறுதிபூண்டிருந்தார். அதற்காக பலம்வாய்ந்த அமைச்சர்களான காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கேணல் தர்மபால, மேலதிக பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல, அமைச்சரவை செயலாளர் சமரசிங்க மற்றும் ராணுவ அதிகாரிகளின் பிரதானி திஸ்ஸ வீரதுங்க ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு ஜெயார் அனுப்பி வைத்தார். இந்தக் குழுவிற்கு ஜெயாரினால் வழங்கப்பட்ட பணிகள் இவைதான், 1. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வெற்றிவாய்ப்பை எப்படியாவது சிதைப்பது, 2. தமிழ்ப் போராளி அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவது. 3. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு உடனடியான முடிவுகளை எடுத்து மேற்சொன்ன இரண்டையும் செய்துமுடிப்பது. ஜெயாரின் விருப்பத்தின்படி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த அதிகாரம் மிக்க அணி, தமிழர்களை அச்சுருத்தி வந்ததுடன், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபட்டு வந்தது. தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென்று 500 பொலீஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். இன்னொரு 200 சிறப்புப் பொலீஸார், உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தனவின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விசேட பொலீஸ் பிரிவே யாழ் நூலகத்திற்கு அருகில் அமைந்திருந்த துரையப்பா விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டது. மீதிப் பொலீஸார் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அமைந்திருந்த பொலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்க்குடாநாட்டிலிருந்து போராளிகளின் பிரசன்னத்தை ஒழிப்பதே பொலீஸாருக்கு வழங்கப்பட்ட பிரதான பணி. ஆகவே, யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலீஸார் சுமார் 30 இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர். இந்த இளைஞர்கள் பற்றிய எந்தவிபரமும் வெளியில் தெரிந்திருக்கவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த இளைஞர்களின் பாதுகாப்புக் குறித்து அரசிடம் முறைப்பாடு செய்ததுடன், அவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. மேலும், கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் பொலீஸாரினால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுவருவதாகவும் அது குற்றஞ்சாட்டியிருந்தது. கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் நால்வர் தாம் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக வழக்குகளைப் பதிவுசெய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் குறைந்தது இரு இளைஞர்களாவது சித்திரவதைக்கும், முறைகேடாக நடத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியது. யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதி இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பொறுப்பெடுப்பதற்கு பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் தன்னுடன் சேர்ந்து தமிழ் இளைஞர்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுபாஸ் விடுதி இராணுவ தலைமைக் காரியாலயமாக ஆக்கப்பட்டது. வைகாசி 31 ஆம் திகதி நடைபெற்ற நாச்சிமார் கோயிலடி வன்முறைகள், அன்றிரவு பொலீஸார் மேற்கொண்ட பழிவாங்கல்த் தாக்குதல்கள், ஆனி 1 ஆம் திகதி யாழ் நூலகம் தீக்கிரையான சம்பவம், ஆனி 2 இல் இடம்பெற்ற சுன்னாகம் மற்றும் காங்கேசந்துறைச் சந்தைப்பகுதிகளின் அழிப்பு ஆகியவை யாழ்க்குடாநாட்டில் மிகவும் பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே, ஆனி 3 ஆம் திகதியிலிருந்து மாலை 6 மணிமுதல் காலை 5 மணிவரை தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் யாழ்க்குடாநாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி பிற்பகல் மேலதிகமாக 250 சிங்கள அதிகாரிகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களை அரசு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தங்கவைத்தது. ஆனி 3 ஆம் திகதி இரவு இரு மர்மமான விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் செயலகத்தில் தேர்தல் ஆணையாளர் எம்.ஏ.பியசேகரவும், தேர்தல் கண்காணிப்பாளர் யோகேந்திரா துரைசாமியும் சுமார் 150 வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுருத்தல்களை வழங்கிக்கொண்டிருந்தவேளை காமிணி திஸாநாயக்கவும், சிறில் மத்தியூவும் அங்கே திடீரென்று சென்றிருந்தனர். அங்கு கடமையிலிருந்த துரைசாமியைப் பார்த்து சிறில் மத்தியூ பின்வருமாறு கூறினார், "எங்களுக்கு தமிழ் வாக்குச் சாவடி அதிகாரிகள் மீது நம்பிக்கயில்லை. அவர்களை அனுப்பிவிட்டு சிங்கள அதிகாரிகளை நாம் நிறுத்தப்போகிறோம்" . துரைசாமி இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, அங்கு வந்த பாதுகாப்புச் செயலாளர் தர்மபால எழுத்துமூல கட்டளை ஒன்றை துரைசாமிக்கு வழங்கி, ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கொழும்பிலிருந்து கூட்டிவரப்பட்ட சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்தினார். ஜனாதிபதியிடமிருந்து வந்த நேரடிப் பணிப்பின் பேரிலேயே தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி, சிங்களவர்களை நியமித்ததாக தர்மபால துரைசாமியிடம் கூறினார். எஸ் நடேசன் மாவட்ட அபிவிருத்திச் சபை அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட எஸ் நடேசன், தேர்தல்கள் நடைபெற்று ஒருவருடத்திற்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் எனும் தலைப்பில் பேசும்போது ,"தேர்தலுக்கு முதல் நாள் இரவு, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில், பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் அதிகாரியான துரைசாமிக்கு சில கட்டளைகளை வழங்கினார். நூற்றைம்பது தமிழ் தேர்தல் அதிகாரிகள் அவர்களது பணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிங்கள அதிகாரிகள் அப்பதவிகளை நிரப்பினர். இந்தச் சிங்கள அதிகாரிகளில் பலர் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் பியோனாக வேலை பார்த்து வந்தவர்கள், அவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவே இருந்திருக்கவில்லை. தேர்தல் முடிந்த வேளை 6 வாக்குப் பெட்டிகள் காணாமற் போயிருந்தன" என்று கூறினார். அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தேர்தல் அதிகாரிகள் நடேசனின் கூற்றை ஆமோதித்தனர். இரண்டாவது சம்பவமான அமிர்தலிங்கத்தின் கைது ஆனி 4 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றது. ஆனி 4 ஆம் திகதி அதிகாலை 2:45 மணிக்கு பண்ணாகத்திலிருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றிவளைத்த சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழு அவரைக் கைதுசெய்தது. பொலீஸ் குழுவின் தலைவராக வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், யாழ் மாவட்ட ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் உருவாக்கப்பட்ட கைதுசெய்யும் அதிகாரப் பத்திரத்தை அமிர்தலிங்கத்திடம் கையளித்தார். அந்த பத்திரத்தின்படி, ஜனநாயகச் செயற்பாடான தேர்தலினை குழப்புவதற்கு அமிர்தலிங்கம் எத்தனிப்பதால் அவர் கைதுசெய்யப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டிய அமிர்தலிங்கம், தான் ஜனநாயகச் செயற்பாடான தேர்தலைப் பாதுகாக்கவே முயல்வதாக பொலீஸ் அதிகாரியிடம் கூறினார். தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட பொலீஸ் அதிகாரி, தனக்கு இடப்பட்ட கட்டளையினையே தான் நிறைவேற்றுவதாக அமிர்தலிங்கத்திடம் கூறினார். தனது வீட்டின் வரவேற்பறையில் கதிரையொன்றில் அமிர்தலிங்கத்தை இருத்திவைத்துவிட்டு, அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர் பொலீஸார். ஆனி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் அவரது வீட்டுக் குப்பைக் கூடையினைக் கூட பொலீஸார் விட்டுவைக்கவில்லையென்றும், ஒவ்வொரு துண்டுக் குப்பைக் கடதாசியும் அவர்களால் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். தனது வீட்டில் பொலீஸார் நடந்துகொண்ட முறையினைப் பார்த்தபோது பெரிய கெரில்லாத் தலைவனையோ அல்லது போராளிகளின் பாரிய முகாமையோ கண்டுபிடித்தது போன்றே பொலீஸார் அன்று காலை செயற்பட்டதாகக் கூறினார். குருநகர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளித்தொடர்புகள் ஏதுமின்றி அடைத்துவைக்கப்பட்டார். அன்றிரவு அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அவரது கைது ஆள்மாறாட்டம் ஒன்றினால் ஏற்பட்ட தவறு என்றும், அவர் வீடு திரும்பலாம் என்றும் கூறினார். தனது கைது தனக்கு மர்மமாக இருந்ததாக அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். "சிலவேளை ஜெயார் என்னைக் காப்பாற்ற நினைத்தே கைதுசெய்திருக்கலாம்" என்று நகைச்சுவையாகக் கூறிச் சிரித்தார். ஆனால், அவரது கைது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இதன் காரணமாகவே தமிழர்கள் பெருவாரியாக அன்று காலைமுதல் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அமிரின் கைதிற்கான காரணம் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அரச தரப்பு அமைச்சர்கள் மத்தியில் உலாவிய செய்திகளின்படி, திஸ்ஸ வீரதுங்கவை சிறில் மத்தியுவே வற்புறுத்தி கைதுசெய்யும் ஆணையினைப் பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. சிங்கள இனவாதி - சிறில் மத்தியூ இராணுவ திகாரிகளிடம் நான் அமிரின் கைது குறித்து வினவியபோது, அது காமிணி மற்றும் சிறில் மத்தியூ இணைந்து எடுத்த முடிவு என்று கூறினார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாணத்தில் தேர்தலில் பங்கேற்பதென்று தீர்மானித்த ஐ.தே.க ரணசிங்க பிரேமதாசா தனது செயற்பாடுகளை நுணுக்கமாகவும், சூட்சுமத்துடனும், சமயோசிதத்துடனும் ஜெயவர்த்தன எப்போதும் திட்டமிட்டு வந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அவரது திட்டமும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும், தமிழர்களையும் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதன் மூலம் சிங்களவர்கள் மத்தியிலும், சர்வதேசத்திலும் தனது அதிகாரத்தினை நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆகவே, அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும், தமிழர்களையும் பலவீனப்படுத்தும் தனது நோக்கத்தை அவர் இரு முனைகளில் செயற்படுத்தினார். முதலாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தனது சதி வலைக்குள் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை விழ வைப்பதன் மூலம், ஏற்கனவே அவர்களுக்கும் அரசுக்கெதிரான இராணுவப் புரட்சியில் இறங்கியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வந்த பிளவினை இன்னும் பெரிதாக்குவது. அவர் எதிர்பார்த்ததுபோலவே அதுவும் நடந்தது. இரண்டாவது, வடகிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வென்றுவிட்டால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பேரம் பேசும் பலத்தைச் சிதைப்பதுடன், தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்கிருக்கும் ஆதரவினையும் குலைப்பது. இதன்மூலம், தமிழர்கள் உட்பட இலங்கை நாடெங்கிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று காட்டுவது. ஆகவே, இதனை சாத்தியப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூடிக் கலந்தாலோசித்து, சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதிபூண்டார்கள். அதன்படி வடக்கிற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து தமக்குச் சாதகமான சூழ்நிலையினை அங்கு உருவாக்குவதே அவர்கள்து திட்டம். இதன் பிரகாரம் பிரதமரான ரணசிங்க பிரேமதாசா முதலாவதாக யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார். யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த 4 நாட்களிலும் செய்தியாளன் என்கிற வகையில் நானும் அவருடன் கூடப் பயணித்தேன். அவருக்குக் கூட்டப்பட்ட கூட்டங்கள் எல்லாவற்றிலும் மக்கள் அதிகளவில் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பிரேமதாசவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் அளித்த வரவேற்பினைப்பார்த்து உற்சாகமடைந்த ஜெயார் லலித் அத்துலத் முதலி, காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ ஆகிய அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த அமைச்சர்களின் பயணங்களையும் நான் பதிவுசெய்திருந்தேன். இதே காலப்பகுதியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே தேர்தல்களினூடாக உறவுப்பாலமொன்றினை அமைப்பதுபற்றி ஜெயார் பேச ஆரம்பித்திருந்தார். வேட்பாளர்களைப் பதிவுசெய்யும் நாளுக்கு அண்மையாக யாழ்ப்பாணத்தில் நிலவும் சூநிலையினை அறிந்துவர சில அதிகாரிகளை ஜெயார் அனுப்பிவைத்தார். இந்த அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் பயணில்லை என்று அவரிடம் கூறினர். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்த அனேகமானோர் சுயநலவாதிகளாக இருந்ததுடன், அவர்களுக்கு மக்கள் மத்தியில் கடுகளவும் செல்வாக்கில்லை என்பதை அவர்கள் ஜெயாரிடன் கூறியிருந்தார். இதேவகையான கருத்தையே தொண்டைமானும் ஜெயரட்ணம் வில்சனும் ஜெயாரிடம் தெரிவித்தனர். ஆனால், இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவசரகாலச் சட்ட விதிகளைப் பாவித்து யாழ்ப்பாணத்தில் தேர்தலை ஜெயார் நடத்தியதுடன் தனது கட்சியையும் அதில் போட்டியிட வைத்தார். இது மிகத் தவறான கணிப்பீடு என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல சவால்களை எதிர்கொண்டது. பல சிரமங்களுக்கு மத்தியிலேயே தனது வேட்பாளர் பட்டியலை அதனால் பூர்த்தி செய்ய முடிந்தது. 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்திருந்த ஏ.தியாகராஜாவே ஐ.தே.க வின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்தார். அக்காலத்தில், காரைநகர் இந்துக் கல்லூரியின் புகழ்மிக்க அதிபராகத் திகழ்ந்தவர் தியாகராஜா. காரைநகர் வணிகர் சமூகத்திலும் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால், 1970 ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் பலரையும் ஏமாற்றியிருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினூடாகப் பாராளுமன்றம் சென்ற தியாகராஜா, பாராளுமன்றத்தில் கட்சி மாறி, சிறிமாவின் கட்சியில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களால் "அடிமைச் சாசனம்" என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட சிறிமாவின் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பிற்கும் தனது ஆதரவினை வழங்கினார். ஏ.தியாகராஜா பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக புளொட் எனும் அமைப்பை உருவாக்கியிருந்த உமா மகேஸ்வரன், ஐ.தே. க சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக தேர்தலிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையினை தியாகராஜா முற்றாகப் புறக்கணித்திருந்தார். வைகாசி 24 ஆம் திகதி, தனது ஜீப் வண்டியில் தியாகராஜா ஏற முற்படும்போது அவர் அருகில் சைக்கிளில் வந்த இரு புளொட் உறுப்பினர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தியாகராஜ உயிரிழந்தார். பின்னர், ஐ.தே.க வின் யாழ் ஒருங்கிணைப்பாளரான நடராஜாவும் புளொட் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிதவாதிகளுக்கும் தமது ஆதரவை வெளிக்காட்டிய தமிழர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் 1981 ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் வக்களிப்பதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்டு வரும் தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டமுடியும் என்று ஜெயார் நம்பியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததற்கு எதிர்மாறாகவே அது நடந்து முடிந்தது. நாடு தழுவிய ரீதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடந்தபோதிலும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது. ஏனென்றால், அங்குதான் இத்தேர்தல் தொடர்பாக பெருவாரியான முறைகேடுகளை அரசும், அதன் படைகளும் செய்திருந்தன. ஆனால், தெற்கிலோ இத்தேர்தல் மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், சிங்கள மக்கள் இத்தேர்தலில் அதிகம் அக்கறை காட்டவில்லை. விளைவு, ஐக்கிய தேசியக் கட்சி போட்டியின்றி சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றது. ஆனால், வட கிழக்கு மாகாணங்களில் கதை வேறாக இருந்தது. இந்த மாகாணங்களில் இருந்த 7 மாவட்டங்களில் ஒரேயொரு மாவட்டமான அம்பாறையை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்ற முடிந்தது. சுமார் 41 வீதம் முஸ்லீம்களையும், 37 வீதம் சிங்களவர்களையும், வெறும் 20 வீதம் மட்டுமே தமிழர்களையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், ஏனைய 6 மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே வெற்றிபெற்றிருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் 33.9 வீதமாகவும், சிங்களவர்கள் 33 வீதமாகவும், முஸ்லீம்கள் 29 வீதமாகவும் காணப்பட்டபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 44,692 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 42,388 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் 70 வீதமானவர்கள் தமிழர்களாகவும், 24 வீதம் முஸ்லீம்களாகவும், 3 வீதம் சிங்களவர்களாகவும் காணப்பட்டமையினால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இலகுவாக வெற்றிபெற்று மாவட்ட சபையினைக் கைப்பற்றியிருந்தது. மேலும், வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெருவெற்றி பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தனிநாட்டிற்காகத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினை மீளவும் உறுதிப்படுத்துவதாகவே இந்தத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வெற்றி அமைந்திருந்தது. இத்தேர்தலைக் கொண்டு தமிழர்கள் தனிநாட்டிற்கு ஆதரவளிக்கவில்லை என்று ஜெயார் சர்வதேசத்திற்குக் காட்ட முனைந்தபோதும், தமிழ் மக்கள் தனிநாட்டையே விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசம் உணரும்படி தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த விரும்பிய ஜெயார், தன்னால் ஆட்டுவிக்கக்கூடிய மாற்றுத் தமிழ்க் கட்சிகளை பலப்படுத்த விரும்பினார். இந்த மாற்றுத்தலைமைகளூடாக தான் விரும்பும் தீர்வைத் தமிழ் மக்கள் மேல் திணித்துவிடலாம் என்று ஜெயார் நம்பினார். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக உதவி வழங்கும் நாடுகளை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும் எப்தற்காகவாவது தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்துவைய்யுங்கள் என்கிற குரல்கள் சர்வதேச மட்டத்தில் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் போலித் தீர்வை ஜெயார் அவித்துக் கொட்டியதன் நோக்கமே, சர்வதேசத்திற்கு தான் தமிழரின் அபிலாஷைகளை தீர்த்துவைக்கப்போகிறேன் என்று காட்டுவதற்காகவே என்றால் அது மிகையில்லை. 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இரு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. தமிழ் மக்களின் அவலங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்த ஐக்கிய தேசியக் கட்சி, கல்வி, குடியேற்றம், தமிழ் மொழிப் பயன்பாடு, அரச கூட்டுத்தாபனங்களில் வேலைவாய்ப்பு, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி நிரந்தரமான தீர்வுபற்றி கலந்துரையாடுவது ஆகிய வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தது. இவற்றுள் சில நடவடிக்கைகளை ஜெயார் எடுத்துக்கொண்டாலும்கூட, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்ட விரும்பவில்லை. தனது பரம வைரியான சிறிமாவை அரசியலில் இருந்து முற்றாகவே ஒதுக்கிவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜெயாருக்கு, சர்வகட்சி மாநாட்டில் சிறிமா கலந்துகொள்வது அவருக்கு ஒரு அரசியல் மீள்வருகையினைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆகவேதான், சர்வகட்சி மாநாட்டினக் கூட்டுவதை ஜெயார் தவிர்த்து வந்தார். பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் ஆகவே, சிறிமாவுக்கு அரசியல் மீள்வருகையினை ஏற்படுத்திக் கொடுப்பதைக் காட்டிலும், 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் நேரடியாகப் பேசலாம் என்று ஜெயார் விரும்பினார். இதற்கு ஏதுவாக இரு தமிழர்களை ஜெயார் தன் சார்பாக நியமித்தார். ஒருவர், நியூ பிரண்ஸ்விக் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தந்தை செல்வாவின் மருமகனுமான ஜெயரட்ணம் வில்சன். இரண்டாமவர், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமஷ்ட்டிக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்திய அமைச்சர் ஒருவரின் மகனான நீலன் திருச்செல்வம். நீலன் திருச்செல்வம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தன்னுடன் பேசும்போது ஜெயவர்த்தனா பெரிதும் கவலையடைந்து காணப்பட்டதாக ஜெயரட்ணம் வில்சன் என்னிடம் தெரிவித்தார். "நாம் இனப்பிரச்சினை மேலும் மோசமாவதை அனுமதிக்க முடியாது. அது இந்த நாட்டின் இருப்பையே ஆபத்திற்குள் தள்ளிவிடும். தற்போது அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்ற அரசியலையும் ஏற்றுகொண்டுள்ளதனாலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடித்தளத்தினை இட்டுக்கொள்ளலாம்" என்று ஜெயார் ஜெயரட்ணம் வில்சனிடம் கூறியிருக்கிறார். ஆகவே, தான் எண்ணிவைத்திருந்த அடிப்படைத் திட்டத்தை ஜெயார் வில்சனிடம் தெரிவித்தார். "அவர்கள் தமது மாவட்டங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இதனை ஆரம்பிக்கட்டும். நாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சபைகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அம்மாவட்டங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கலாம். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையும், நிதியையும் நாம் கொடுக்கலாம். யாழ்ப்பாணத்து மனிதர்கள் வேண்டுவது இதைத்தான். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் பேசும் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்" என்று ஜெயவர்த்தனா வில்சனிடம் கூறினார். ஜெயரட்ணம் வில்சனும், நீலன் திருச்செல்வமும் ஜெயாரின் எண்ணக்கருவை அமிர்தலிங்கம் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் திணித்து, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். இதனையடுத்து காரியத்தில் இறங்கிய ஜெயார், 1979 ஆம் ஆண்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான 10 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கி அக்குழுவிற்கு விக்டர் தென்னக்கோனை தலைவராக நியமித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை பிராந்திய சுயாட்சி தீர்வுக்கான அடிப்படை என்று எண்ணிய வில்சனும், நீலனும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியிருந்தனர். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அரசத் தலைமையினாலும், அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்று விக்டர் தென்னக்கோனும் ஏனைய ஆணைக்குழு உறுப்பினர்களும் செயற்பட்டு வந்தமை வில்சனுக்கும் நீலனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்றார்போல், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான சட்டம் உருவாக்கப்பட்டபோது, இச்சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இறுதி நகலைப் பார்த்த வில்சன் பெரிதும் விரக்தியடைந்ததுடன், மிகத் தாமதாமதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள மிகச்சொற்ப அதிகாரங்கள் என்று மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை விமர்சித்திருந்தார். பாராளுமன்றத்தில் இச்சட்டம் முன்வைக்கப்படு முன்னமே, வழமைபோல சிங்கள இனவாதிகளால் மாற்றப்பட்டு, உப்புச் சப்பற்ற திட்டமே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்திட்டத்தினை எதிர்த்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும், பெளத்த பிக்குகளும் மாவட்ட அபிவிருத்திச் சபை நகல்களை கிழித்து எரித்ததுடன், ஜெயாரின் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நாட்டை விற்க முனைவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தின் மூலம் தமிழர்களின் தனிநாட்டிற்கான அடித்தளம் இடப்பட்டு விட்டது என்று பெளத்த பிக்குகள் இத்திட்டத்திற்கெதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி வந்தனர். ஆகவே பெளத்த பிக்குகளை சமாதானப்படுத்த நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது முழு நாட்டிற்குமான பொதுவான ஒரு திட்டமேயன்றி, தமிழர்களுக்கு இதனால் தனியான அதிகாரம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். பின்னர், இத்திட்டத்தை தான் கொண்டுவந்ததன் உண்மையான நோக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டதும், அவர்களும் எமது அரசியல் விளையாட்டினுள் அகப்பட்டு விடுவார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்திருக்கும்போது, தனிநாட்டிற்கான அவர்களின் கோரிக்கை சிறிது சிறிதாக மறைந்துவிடும். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணையினரையும், தமிழ் மக்களையும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிற்குள் உள்வாங்கி விடமுடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது மாவட்டங்கள் சிலவற்றில் பெரும் அபிவிருத்திகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு காலத்தைக் கழிக்கும் நிலை உருவாக, தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினை அவர்கள் சிறிது சிறிதாக மறந்துவிடுவார்கள்" என்று பிக்குகளிடம் ஜெயவர்த்தனா கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உண்மை அண்ணா. இன்றுமட்டுமே 6 மணித்தியாலங்கள்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நூலக எரிப்பின் பின்னாலிருக்கும் மர்மமும் யாழ் நூலகத்தை எரித்த பொலீஸ் காடையர்களைக் காப்பாற்ற ஜெயார் ஆடிய நாடகமும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட இராணுவப் பிரிவின் உண்மையான நோக்கம் யாழ் நூலத்தை எரிப்பதும், ஏற்கனவே தம்மால் அடையாளம் காணப்பட்ட யாழ்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை எரிப்பதும் தான் என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தன. இதேவகையான விமர்சனங்களையே அமிர்தலிங்கமும் தான் ஜனாதிபதிக்கு ஆனி 2 இல் எழுதிய கடிதத்திலும், ஆனி 9 அன்று பாராளுமன்றத்தில் தனது பேச்சிலும் குறிப்பிட்டிருந்தார். இக்குற்றச்சாட்டுக்களை மறுக்க அரசு ஒருபோதுமே முயன்றிருக்கவில்லை என்பதன் மூலம், இக்குற்றச்சாட்டுக்களை அரசு ஆமோதித்திருந்தது என்பது தெளிவாகிறது. இக்குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயாரும், ஏனைய ஆளும்கட்சி உறுப்பினர்களும் அரச படைகள் இத்தாக்குதல்களில் ஈடுபடவில்லையென்றும், தமது சகாக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற பொலீஸாரே வன்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறி இத்திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்தில் இந்த அக்கிரமங்கள் நடந்தவேளை முக்கிய அமைச்சர்களும், பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த வன்செயல்களை ஊக்குவித்திருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறியிருந்தன. இந்த வன்முறைகளின் பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு முக்கிய அமைச்சர்களும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவும், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேவேளை பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளாக வன்முறைகளின்போது அரச காடையர்களுக்குத் தலைமை தாங்கியோர் பாதுகாப்புச் செயலாளர் கேணல் சி.ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஆனா செனிவிரட்ண, இராணுவத்தின் அதிகாரிகளின் பிரதானி பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க மற்றும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன ஆகியோராகும். வன்முறைகளின்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு அமைச்சர்களும் ஜெயாரின் அரசாங்கத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டதுடன், ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்டவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை தலைமையேற்று வழிநடத்தவென்று ஜெயாரினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொழிற்சங்கக் காடையர்கள் என்று பெயர்பெற்ற ஜாதிக சேவக சங்கமய எனும் குண்டர் பிரிவை சிறில் மத்தியூ வழிநடத்த, லங்கா ஜாதிக எஸ்டேட் சேவக சங்கமய எனப்படும் சிங்கள மலையகத் தொழிற்சங்கக் காடையர்களை காமிணி திஸாநாயக்கா வழிநடத்தி வந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதிகளுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்று இவ்விரு காடையர் கூட்டங்களும் அரசால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தன. இந்த அமைச்சர்கள் இருவரும் தம்முடன் இக்காடையர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். ஜெயாரின் ஆலோசகராக கடமையாற்றிய தமிழரான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இலங்கைத் தமிழர்களும்" எனும் புத்தகத்திலிருந்து ஒரு கூற்று , "யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் காமிணி திஸாநாயக்கா அங்கு நடந்த விடயங்கள் குறித்து சில தகவல்களை தொலைபேசியூடாக என்னுடன் பகிர்ந்துகொண்டார். காமிணி, எனது சகலையான செல்வநாயகம் சந்திரகாசனின் நெருங்கிய நண்பர் என்கிற முறையில்க் கூட இத்தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்ததெல்லாம், காமிணி என்னுடன் தொலைபேசியில் பேசும்பொழுது, அவருக்கருகில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இருந்திருக்கிறார் என்பதுதான். அருகிலிருந்து ஜெயார் காமிணிக்குச் சொன்ன இரகசியங்களை காமிணி இன்று மறந்திருக்கலாம்". சிங்களக் காடையர்களான ஜெயவர்த்தனவும் காமிணி திஸாநாயக்கவும் காமிணி திஸாநாயக்க என்னுடன் பேசுகையில், "பொலீஸார் தமது சகாக்கள் கொல்லப்பட்டதால் மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நூலகம் எரிக்கப்பட்ட இரவில் கோபம் தலைக்கேறிய நிலையில் பொலீஸார் வன்முறையில் ஈடுபட்டனர். தமது சகாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று அவர்கள் சபதம் எடுத்திருந்தனர். ஆனால், யாழ்ப்பாணத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சிறில் மத்தியூ எதற்காகத் தலையிட்டார் என்பதுபற்றி காமிணி வாயே திறக்கவில்லை. அவர் என்னிடம் சிறில் மத்தியூ தொடர்பாகக் கூறிய ஒரே விடயம், "நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும்போது என்னையழைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ பல பஸ்களில் ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போகிறார், அவர் மீது ஒரு கண் இருக்கட்டும்" என்று கூறினார் என்பது மட்டும்தான். ஆனால், இதில் எனக்குப் புரியாத விடயம் என்னவென்றால், தனது அடியாட்களை பஸ்களில் கூட்டிக்கொண்டு சிறில் மத்தியூ யாழ்ப்பாணம் போகிறார் என்று தெரிந்தும் அவரை ஜெயவர்த்தனா ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான். காமிணி என்னுடன் மேலும் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் இயங்கிய மதுபான விற்பனை நிலையங்களை உடைத்துச் சூறையாடிய பொலீஸாரும், இராணுவத்தினரும் போதை ஏற்றிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறினார். பொலீஸாரும், இராணுவத்தினரும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காமிணியும் முன்னணியில் நின்று இவற்றினை ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து மேற்பார்வை செய்துகொண்டிருந்திருக்கிறார். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. "அவர்கள் போதை தலைக்கேறி, ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனது வாழ்நாளில் மரணத்திற்கு மிக அருகில் நான் அதுவரை சென்றிருக்கவில்லை. வன்முறைகளில் ஆவேசத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து ஒருவார்த்தைதன்னும் நான் பேசியிருந்தால், அவர்கள் தங்கள் கோபம் அனைத்தையும் என்மீது திருப்பி, எந்தத் தயக்கமும் இன்றி என்னையும் கொன்றிருப்பார்கள். அவர்களின் வன்முறைகளை மெளனமாக ஆமோதித்து அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும் நாசச்செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று காமிணி என்னிடம் கூறினார். தான் கூறியதெல்லாம் உண்மையே என்று கூறி தனது தொலைபேசித் தொடர்பை அவர் முடித்துக்கொண்டார். மறுநாள் என்னைச் சந்தித்த ஜனாதிபதி ஜெயார், நடந்தவற்றை அப்படியே காமிணி என்னிடம் கூறியிருப்பதாகக் கூறினார். கீழுள்ள காமிணியின் அறிக்கை சில விடயங்களை ஏற்றுக்கொள்கிறது, பொலீஸாரே யாழ் நூலகத்தை எரித்தனர். "எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ஆகவே அவர்கள் செய்வதை நான் அனுமதித்தேன்" - இந்தக் கூற்றைக் கவனியுங்கள். காமிணி வன்முறைகளின்பொழுது முன்னால் இருந்திருக்கிறார். பொலீஸாரின் அளவிற்கு மீறிய ஆவேசமும், கோபமும், பழிவாங்கும் உணர்வுமே நூலகம் எரிக்கப்படக் காரணமாகியிருந்தன என்று காமிணி கூறுகிறார். இலங்கையின் இந்தியத் தலையீடு எனும் புத்தகத்தினை எழுதிய சிங்கள இனவாதியான ரொகான் குணவர்த்தன ஒரு அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார், " பொலீஸ் மா அதிபரான ஆனா செனிவிரட்ன என்னுடன் பேசும்போது யாழ்ப்பாணத்திற்கு அப்போது வந்திருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரும், ஒரு முக்கிய அமைச்சரும் பொலீஸாரின் கோபத்தை விஸ்வரூபமாக்கி, அவர்களை உணர்ச்சியூட்டி ஆவேசப்படுத்தினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து யாழ் நூலகத்தை எரித்தனர் என்று கூறினார்" - பக்கம் 72 இல் இது பதியப்பட்டிருக்கிறது. நூலகம் எரிக்கப்பட்ட கொடுஞ்செயலில் தனது பெயரும் தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டு செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் காமிணி திசாநாயக்கா, தான் பொலீஸாரைத் தூண்டிவிட்டு நூலகத்தை அவர்களுடன் சேர்ந்து எரிக்கவில்லையென்றும், அவர்களைச் சமாதானப்படுத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்தவே முயன்றதாகவும் பிடிவாதமாகக் கூறிவந்தார். ஜெயவர்த்தனாவும் தனது பங்கிற்கு நூலக எரிப்பு விடயத்திலிருந்து எப்படியாவது தனது அடிவருடியான காமிணியின் பெயரைத் துடைத்துவிட பகீரதப் பிரயத்தனம் செய்துவந்தார். ஆனால், காமிணியே ஒரு கட்டத்தில் இச்செயலுக்கான அவமானத்துடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டியிருக்கிறது என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட பல தமிழர்களிடம் வாய்விட்டுக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1991 ஆம் ஆண்டு, இன்னொரு சிங்கள இனவாதியான லலித் அதுலத் முதலியுடன் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை காமிணி திஸாநாயக்கா கொண்டுவந்தபோது, பிரேமதாசா யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மீளவும் பேசுபொருளாகக் கொண்டுவந்தார். 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி புத்தளம் சகிராக் கல்லூரியின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமதாச பின்வருமாறு கூறினார், "1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது, எமது கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து திரட்டிய தமது அடியாட்களையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் இவர்கள் ஈடுபட்டதோடு தேர்தல்களையும் குழப்பியிருந்தனர். அன்று யாழ்ப்பாணத்தில் கலகம் விளைவித்த அதே ஆட்கள்தான் இன்றும் கலகம் ஒன்றை உருவாக்க முயல்கின்றனர். அன்று விலைமதிப்பற்ற வரலாற்றுப் புத்தகங்களை நூலகத்துடன் எரித்தவர்கள் யாரென்று நீங்கள் தேடினால் இன்று எனக்கெதிராக கலகம் செய்யக் காத்திருப்பவர்களின் முகங்களே அவை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்" என்று வெளிப்படையாகவே யாழ் நூலக எரிப்பிற்கும் காமிணி திசாநாயவுக்கும் இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியிருந்தார். . மூன்று நாட்களுக்குப் பின்னர், 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19 ஆம் திகதி கண்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரேமதாச யாழ் நூலகத்தை முன்னால் நின்று எரித்தது காமிணி திஸாநாயக்கதான் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். கொல்லப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் கருத்துப்படி ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தை எரித்தது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திஸாநாயக்கதான் என்று உறுதியாக நம்பியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனியில் நான்குநாள் பயணமாக அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் பயணிக்கும் ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். யாழ் நூலகத்திற்கு அருகாமையிலிருந்த திறந்த வெளி அரங்கில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரேமதாசவின் செயலாளரான பிரட்மன் வீரக்கோனுடன் அரங்கின் முன்வரிசயில் நானும் அமர்ந்திருந்தேன். அங்கு பேசிய பிரேமதாச, யாழ் நூலகத்தின் பக்கம் தனது கையைக் காட்டி, " "அந்த கம்பீரமான கட்டடத்தைப் பாருங்கள். அது யாழ்ப்பாணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று என்னிடம் கூறினார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் இந்தப் பொக்கிஷம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறார்களாம். அது இலங்கையின் நூலகம் என்பதால் நாமும் இதுகுறித்துப் பெருமைப்பட வேண்டும். இது உங்களின் பொக்கிஷம் மட்டும் அல்ல, எங்களதும் தான். ஏனென்றால் நாம் எல்லோரும் இலங்கையர்கள்" என்று அவர் பேசினார். 1991 இல் கண்டியில் தன்மீது பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு காமிணி திஸாநாயக்க பதிலளித்திருந்தார். சுமார் 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதமொன்றினை ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எழுதிய காமிணி, அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார். அந்த வகையில் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கும் காமிணியின் கடிதத்தின் பிரதியொன்று கிடைத்திருந்தது. அதனை ஆசிரியர் என்னிடம் கொடுத்திருந்தார். பிரேமதாசா மீதான காமிணி மற்றும் லலித் அத்துலத் முதலியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகச் செய்திகளைத் தயாரித்து வந்ததினால், இந்தக் கடிதமும் எனக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, நான் இக்கடிதம்பற்றிய செய்தியை பத்திரிக்கையில் பதிந்துவிட்டு, கடிதத்தின் மூலப்பிரதியை என்னுடனேயே வைத்திருக்கிறேன். தனது கடிதத்தில் காமிணி மூன்று விவாதங்களை முன்வைத்து, யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நிறுவுவதற்கு முயன்றிருந்தார். அவையாவன, 1. தான் நூலகம் எரிக்கப்பட்ட நாளில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையென்றும், தான் பண்டாரவளையின் வெலிமடைப்பகுதியில் இருந்ததற்கான பயண ஒழுங்குப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் காமிணி கூறினார். 2. பாராளுமன்றத்தில் நூலக எரிப்புப் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம், காமிணி நூலக எரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் சொல்லவில்லையென்று அவர் வாதாடினார். 3. 1981 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சிகள் தன்மீது நூலக எரிப்பிற்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசவே தனக்குச் சார்பாக வாதாடியிருந்தார் என்றும் காமிணி கூறியிருந்தார். ஆனால், காமிணியின் காரணங்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிய பிரேமதாச, யாழ் நூலகத்தை எரித்தது காமிணி திஸாநாயக்கவே என்றும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அத்துடன், அவர் இன்னொரு ரகசியத்தையும் கூறினார். அதாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது காமிணி திஸாநாயக்க அதனை முழுதாக எதிர்த்தார் என்றும் பிரேமதாச கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை காமிணியோடு சேர்ந்து இன்னும் இரு அமைச்சர்கள் எதிர்த்திருந்தனர். அவர்கள் யாரெனில், அமைச்சர் சிறில் மத்தியூவும், அமைச்சர் காமிணி ஜயசூரியவுமாகும். "தமிழர்களுக்கென்று எந்த அதிகாரமும் கொடுக்கப்படலாகாது" என்பதே காமிணி திஸாநாயாக்க உட்பட்ட மூன்று அமைச்சர்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இனங்களுக்கிடையிலான நீதிக்கும், சமத்துவத்திற்குமான இயக்கம் எனும் அமைப்பு யாழ் நூலக எரிப்புப் பற்றி விசாரிப்பதற்கு தூதுக்குழு ஒன்றினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. அதன் அறிக்கையின் படி, "மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளும், நூலக எரிப்பும் மிகவும் திட்டமிட்ட வகையில் நூறிலிருந்து 175 பொலீஸாரைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது". அந்த அமைப்பு பின்வரும் சம்பவத்தையும் பதிவுசெய்திருந்தது, கண்டியிலிருந்து காங்கேசந்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சிங்களப் பாதிரியார் ஒருவரை சுமார் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற பெனியன்களும் அணிந்திருந்த மூன்று நபர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலாளிகளுடன் முற்றான சீருடையில் ஒரு பொலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்தில் நின்றிருக்கிறார். வாகனத்தின் முன் கண்ணாடியை இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கிய பொலீஸார், வாகனத்தின் சாரதியையும் கடுமையாகத் தாக்கியபோது அவர் நினைவிழந்து வீழ்ந்திருக்கிறார். வாகனத்தின் நடத்துனரான சிங்களவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தம்மால் தாக்கப்பட்ட மூவரும் சிங்களவர்கள்தான் என்பதை உணர்ந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பொலீஸார், அவர்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஜீப் வண்டியில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். யாழ் பொலீஸ் நிலையத்திற்கு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சிங்களப் பாதிரியார் முறையிடச் சென்றவேளை, அங்கிருந்த பொலீஸார் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூன்று சிங்களவர்களையும் அங்கு பணிபுரிந்த தமிழ் வைத்தியர்களும், தாதிமாரும் மிகவும் அன்புடனும், கனிவுடனும் பராமரித்திருக்கிறார்கள். யாழ் வைத்தியசாலையின் கட்டிலில் படுத்திருந்தபடியே பற்றியெரியும் யாழ்நகரை அந்தச் சிங்களப் பாதிரியார் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். லயனல் பெர்ணான்டோ பொலீஸாரின் திட்டமிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வன்முறைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்ட பொலீஸாரையும் அதிகாரிகளையும் விசாரித்துத் தண்டனை வழங்கவேண்டும் என்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து அரசு மீது கடுமையான அழுத்தங்கள் எழுந்து வந்தன. இந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்ய ஜெயார் ஒரு சூழ்ச்சியைச் செய்தார். அதுதான், பொலீசாரின் வன்முறைகளை விசாரிக்க பொலீஸ் திணைக்களத்தில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். விசாரணைகளின் அதிகாரியாக கிங்ஸ்லி விக்கிரமிசிங்க நியமிக்கப்பட்டதுடன், அவர் சாட்சிகளைப் பதிவுசெய்ததோடு, அடையாள அணிவகுப்புக்களினூடாக 187 பொலீஸார் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் தடுத்தும் வைக்கப்பட்டனர். அதன்பிறகு இதுகுறித்து அரசோ, பொலீஸாரோ எதனையும் செய்ய முற்படவில்லை. விசாரணையும் அத்துடன் முற்றுப்பெற்று விட்டது. ஜெயாரின் அடக்குமுறை அரசின் இலக்கணமான "தமிழரைத் தாக்குவோரைக் கெளரவிப்பது" என்பதற்கமைய அத்தனை பொலீஸாரும் பதவியுயர்வு வழங்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்களப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து அனுப்பிவைக்கப்பட்டனர். நிவாரணத்திற்கான வேண்டுகோள்களை அடக்குவதற்கு முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான லயனல் பெர்ணான்டோவை நிவாரணங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரியாக ஜெயவர்த்தன நியமித்தார். லயனல் பெர்ணான்டோவும் ஜெயாரின் விருப்பத்தின்பேரில் யாழ் நூலக எரிப்பிற்கு நிவாரணமாக பத்து லட்சம் ரூபாய்களைக் கொடுக்கலாம் என்று மதிப்பிட்டார். நிவாரணக் கொடுப்பனவை ஒருவருடம் வரை தாமதித்து மெளனம் காத்த ஜெயார், 1982 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி யாழ் நூலகத்தை மிளக் கட்டுவதற்கான தேசிய நிதி எனும் திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், லயனல் பெர்ணான்டோ மதிப்பிட்ட பத்து லட்சம் ரூபாய்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு பணத்தையே ஜெயவர்த்தனா நூலகப் புணரமைப்பிற்குக் கொடுத்திருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நூலகம் எரியும் செய்தி பரவுவதைத் தடுக்க ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்திற்கும் தீமூட்டிய பொலீஸ் காடையர்கள் தமது நாசகாரச் சதிச்செயல் சர்வதேசத்தின் கண்களில் தெரிந்துவிடக்கூடாதென்பதில் இதனைச் செய்தவர்கள் மிகவும் அவதானமாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருந்தனர். இக்கொடுஞ்செயலினை மறைக்க அவர்கள் யாழ்நகரிலிருந்து மாநிலச் செய்திகளைக் காவிவரும் நாளிதழான ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்தையும், நூலகம் எரிந்துகொண்டிருந்த அதே கணப்பொழுதுகளில் எரித்தனர். ஈழநாட்டு அச்சகத்தை எரிப்பதற்காக சென்ற இன்னொரு பொலீஸ் குழு, உள்ளிருந்தவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டது. எஸ்.எம். கோபாலரட்ணம் ஈழநாட்டு பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலரட்ணம் என்னிடம் பேசுகையில், "ஞாயிற்றுக்கிழமை யாழ்நகரில் பொலீஸார் ஆடிய கோரத் தாண்டவத்தைக் கண்டித்து நான் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை இறுதியாக சரிபார்த்துவிட்டு அச்சகத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியர் செய்திப்பிரிவில் கடமையாற்றியோர் சில மணிநேரத்திற்கு முன்னர்வரை பொலீஸார் நடத்திவந்த கொடூரங்களை செய்தியாக்கும் அவசரத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கலாசாரத் தொன்மையினையும், பெருமையினையும் வெளிக்காட்டும் முகமாக யாழ்நகரின் வீதிகளெங்கும் நிறுவப்பட்டிருந்த சரித்திரப் பெருமைவாய்ந்த பெரியார்களினதும் சமயப் பெரியார்களினதும் சிலைகளை பொலீஸார் அடித்து நொறுக்கும் காட்சிகளை நாம் ஒளிப்படங்களாகப் பதிந்து, அவற்றினை அச்சிடும் பணியினையும் அப்போதுதான் நிறைவுசெய்திருந்தோம். எமது அலுவலகத்திலிருந்தே தூரத்தில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் எம்மால் கேட்க முடிந்தது. அதனைச் செய்வது அமைச்சர்கள் சிலரும், அவர்களோடு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஆதரவாளர்களும்தான் என்கிற செய்தி யாழ்ப்பாணமெங்கும் அப்போது பரவிவந்தது. அப்போதுதான் எமது அச்சகத்தைச் சூழ்ந்து ஒரு பொலீஸ் பிரிவொன்று நிற்பதை நாம் உணர்ந்தோம். திடு திடுப்பென்று உள்ளே நுழைந்த பொலீஸார் எம்மை அங்கிருந்து அடித்து விரட்டினர். எமது அச்சக இயந்திரங்கள் மீதும், காரியாலயம் மீதும் பெற்றோலினை ஊற்றி எம் கண்முன்னே அவற்ரைக் கொழுத்தினர்" என்று கூறினார். "சிங்களத்தில் தூஷண வார்த்தைகளால் எம்மை வைத பொலீஸார், முன்னிரவு நடந்த பொலீஸ் கலவரங்கள் குறித்து நாம் அளவுக்கதிகமாக செய்தி வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினர். இப்போது உங்கள் நூலகத்தையும் எரித்துவிட்டோம், அதை எப்படி செய்தியாக வெளியிடப்போகிறீர்கள் என்று பார்க்கலாம் என்று வந்திருந்த பொலீஸ் அதிகாரி ஏளனமாக எம்மைப் பார்த்துக் கேட்டார்" என்று ஈழநாட்டு செய்தியாளர் ஒருவர் என்னிடம் கூறினார். நூலகம் எரிக்கப்படும்போது, அச்செய்தி வேறிடங்களுக்குப் பரவாதிருக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தொலைபேசி இணைப்புக்களையும் பொலீஸார் துண்டித்துவிட்டிருந்தனர். தமிழினத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலாசாரப் பேரழிவுபற்றி சர்வதேசம் முதன்முதலில் அறிந்துகொண்டது "அத்த" எனும் சிங்கள பத்திரிக்கையில் வந்த செய்தியின் ஊடாகத்தான். இதற்குப் பின்னர் தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் இந்தக் கொடூரம் பற்றி தெரியப்படுத்தியிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நூலகம் எரியும் காட்சிகளைக் கொண்ட பல புகைப்படங்களை அவர் செய்தியாளர்களுக்குக் காண்பித்தார். சர்வதேசச் செய்திச் சேவைகளில் இப்புகைப்படங்கள் பின்னர் பெருமளவில் செய்தியாகப் பாவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த நாசகாரச் செயல் குறித்து விமர்சித்திருந்தன. ஆனி இரண்டாம் வாரம் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு அறிக்கையினை யாழ் நூலக எரிப்புப் பற்றி வெளியிட்டிருந்தன, "நூற்றிற்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு, களவாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த சந்தைக் கட்டடத் தொகுதிகள் போர்க்காலத்தில் அகப்பட்ட நகரங்கள் போன்று அழிக்கப்பட்டுக் காட்சி தருகின்றன. மக்களின் பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டபின் இடிக்கப்பட்டு, எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லம் அடையாளம் தெரியாது எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. அரச இராணுவத்தாலும், பொலீஸாரினாலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாழ்நகரின் இதயப்பகுதியில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகமும் அடித்து நிறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமும், 90,000 இற்கும் அதிகமான விலைமதிப்பற்ற புத்தகங்களையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது". "இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் யாதெனில் இந்த அட்டூழியங்கள் யாழ்நகரில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தவேளை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு உயரதிகாரிகளும் யாழ்நகரில் தங்கியிருந்து இந்த கொடுஞ்செயல்களை முடுக்கி விட்டிருந்ததும், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டவென்று அனுப்பப்பட்ட பாதுகாப்புப் படைகளும் பொலீஸாரும் நேரடியாக இந்த அழிவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததும் தான்" என்று அந்த அறிக்கை கூறியது. சுண்ணாகம் சந்தைப்பகுதியிம், கடைகளும் வைகாசி 31 ஆம் திகதி இரவே பொலீஸாரினால் நாசமாக்கப்பட்டிருந்தன. சுண்ணாகம் பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்கள், சுண்ணாகம் சந்தைப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்து, உள்ளிருந்த பொருட்களைச் சூறையாடிவிட்டு தீமூட்டினர். பின்னர், அருகிலிருந்த பொதுமக்கள் வீடுகளும் அவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன. இதேவகையான நாசகார செயல்களை காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்களும் செய்திருந்தனர். சிவசிதம்பரத்தின் அலுவலகத்தைச் சூழ்ந்துகொண்ட இராணுவப் பிரிவொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதலினை மேற்கொண்டது. அலுவலகத்தினருகில் இருந்த பொதுமகன் ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நாட்களில் ஐந்து தமிழர்கள் கொல்லப்பட்டதாக பொலீஸார் அறிவித்திருந்தனர், ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது மக்களின் கருத்தாக இருந்தது. நன்றியண்ணா உங்களின் கருத்திற்கு. நானெல்லாம் போராளியில்லை. எனக்காக எனது சகோதரங்களை போராடச் சொல்லிவிட்டு வேறுநாட்டில் தங்கியிருக்கும் ஒரு அகதி, அவ்வளவுதான்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நூலகம் எவ்வாறு எரியூட்டப்பட்டது? தமிழரின் கலாசார பொக்கிஷத்தை முற்றாக எரியூட்டி, கட்டிடத்தை அழிக்கும் இந்த நாசகாரச் செயல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு சுமார் 10 மணியளவில் குட்டையாக தலைமுடி வெட்டப்பட்டு, காக்கி நிற காற்சட்டைகளும் வெண்ணிற பெனியன்களும் அணிந்திந்திருந்த வாட்டசாட்டமான பொலீஸ் காடையர்கள் கைகளில் பெற்றொல் கொள்கலன்களும், இரும்புத் தடிகளும், கோடரிகள் மற்றும் வாட்கள் என்பவற்றுடன் அல்பிரெட் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீதிக்கு மறுபுறத்தில் அமைந்திருந்த யாழ் நூலகம் நோக்கிய தமது நாசகார பயணத்தை ஆரம்பித்தனர். நூலகத்தின் வாயிலுக்குச் சென்ற பொலீஸ் காடையர்கள், வாயிலின் உட்புறமாக சரஸ்வதிச் சிலையின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ஒற்றைக் காவலாளியையும் அடித்துத் துரத்தினர். பின்னர் தாம் கொண்டுவந்திருந்த கோடரிகளால் நூலகத்தின் கதவுகளைக் கொத்தித் திறந்தனர். "அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்த்தபோது, இந்த நாசகாரச் செயலினை அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்தச் செயலுக்காகப் பயிற்றப்பட்டு வந்தது போலத் தெரிந்தது" என்று பொலீஸாரால் திரத்தப்பட்டபின்னரும், அருகில் ஒளிந்திருந்து இந்த அக்கிரமத்தைக் கண்ணுற்ற அந்தக் காவலாளி கூறினார். நூலகத்தை எரிக்கவந்த குழு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டது. முதலாவது குழு, புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கும் பிரிவினுள் நுழைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குத் தட்டுக்களூடாக நடந்துகொண்டே இருபுறமும் இருந்த புத்தகங்கள் மேல் தாம் கொண்டுவந்த பெற்றோலினை ஊற்றிக்கொண்டே சென்றது. இரண்டாவது குழு, செய்தித்தாள்களும், பருவப் புத்தககங்களும் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, மரத்தாலான தளபாடங்கள் அனைத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் இழுத்துவந்து குவித்து அவற்றின்மேல் பெற்றோலினை ஊற்றியது. மூன்றாவது குழு குறிப்புப் புத்தகங்களும், ஈடுசெய்யப்பட முடியாத, புராதன ஓலைச் சுவடிகளும் பாதுக்கக்கப்பட்டு வந்த பகுதிக்குச் சென்று அவற்றின் மேல் பெற்றோலினை ஊற்றியது. இன்னொரு குழு சிறுவர் பகுதி உட்பட நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று தமது திட்டத்தின் முதலாவது கட்டத்தை நிறைவுசெய்தன. "ஒரேநேரத்தில் முழுக் கட்டடமும் தீப்பற்றிக் கொண்டது" என்று நூலகக் காவலாளி நகர மேயர் சிவஞானத்திடம் கூறினார். "இந்த நாசகாரச் செயலினை அவர்கள் எதற்காக எங்களுக்குச் செய்தார்கள்?" என்று விம்மி அழுதுகொண்டே விசாரணைகளை மேற்கொண்ட பீட்டர் கியுனுமென்னைப் பார்த்துக் கேட்டார் தலைமை நூலகரான ஆர் நடராஜா. அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிகொள்ள முடியவில்லை. அவரால் பொங்கிவரும் அழுகையினையும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாழ் நூலகத்தின் பிரதான நூலகர் திருமதி ரூபா நடராசா இடிந்துபோன நிலையில் நூலகத்தின் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி ஆனால், சொற்பிறப்பியல் நிபுணரான பாதிரியார் டேவிட்டிற்கு இந்த அதிர்ச்சி இலகுவானதாக இருக்கவில்லை. புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர் விடுதியில் இருந்த தனது அறையிலிருந்து வானத்தில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த யாழ் நூலகத்தைப் பார்த்த கணம் அவர் நடுக்கத்துடன் கீழே விழுந்தார், சில கணங்களில் அவரது உயிரும் பிரிந்தது. பாதிரியார் டேவிட் "அத்த" எனும் சிங்கள மொழி பத்திரிக்கை இந்த நாசகாரச் செயல் பற்றி எழுதும்போது, பீட்டர் கியுனுமென் நூலகத்தைப் பார்வையிடச் சென்றவேளை நூலகத்திலிருந்து இன்னமும் வெப்பமும் கரிய புகையும் வெளியேறிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. "நூலகத்தின் சில பாகங்கள் இன்னும் வெப்பத்தால் தகதகத்துக்கொண்டிருந்தன, எம்மால் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை" என்று அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். ஆடி 17 ஆம் திகதி, பிரான்ஸிஸ் வீலன் எனப்படும் ப்சர்வதேசப் பத்திரிக்கையாளர் எரிந்த நூலகத்தை சில தினங்களுக்குப் பின்னர் சென்று பார்வையிட்டார். தான் அங்கு பார்த்ததை பின்வருமாறு தனது பத்திரிக்கையில் எழுதுகிறார், "இன்று நான் நூலகத்தினுள் சென்றபோது அதன் நிலம் முழுவதும் எரிந்து சாமபலான புத்தகங்களால் மெழுகப்பட்டிருந்தது. அருகிலிருந்த உடைந்த யன்னல்களுடாக உள்ளே வீசிய மெல்லிய காற்றில் பாதி எரிந்த புத்தகத் தாள்கள் காற்றில் பறந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த சுவர்களின் சுண்ணாம்புப் பூச்சுக்கள் புத்தகங்கள் எரிந்து வெளியிட்ட வெப்பத்தால் வலுவிழந்து நொறுங்கத் தொடங்கிவிட்டன. எரிந்த நூலகத்தைச் சுற்றி நான் நடந்துவந்துகொண்டிருந்தபொழுது, ஆசிரியர் கலாசாலையில் பயிற்றுனராகக் கடைமையாற்றும் ஒருவர் மனமுடைந்து என்னைப்பார்த்துக் கேட்டார், "ஏன் இப்படிச் செய்தார்கள்? நிச்சயமாக சிங்களவர்கள் எமது நூலகத்தின் மீது பொறாமைப்பாடிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனது விரிவுரைகளுக்காகவும், குறிப்புகளுக்காகவும் நான் இந்த நூலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருவேன். ஆனால், இனி என்னால் இங்கு வரமுடியாது. எனக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள நான் இனிமேல் கொழும்பிற்குச் செல்லவேண்டும், ஆனால் அங்கு எனக்குத் தேவையான புத்தகங்கள் இருப்பது சந்தேகமே என்று கூறினார்". செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய யாழ்நகர மேயர், "பொறாமையே இந்த நாசகாரச் செயலுக்குக் காரணமாக இருந்தது என்பதை நான் நம்பவில்லை. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, சிறுமைப்படுத்தவேண்டும் என்கிற நோக்கம் சிங்களவர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் தமது நாகரீகத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, தனித்துவமான அடையாளத்தை பறைசாற்றிப் பெருமைப்படும் எந்த சின்னத்தையும் கொண்டிருக்கக் கூடாதென்பதே சிங்களவர்களின் நோக்கம்" என்று அவர் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிக்க நன்றியும், மட்டற்ற மகிழ்ச்சியும் வசி.இந்தத் தொடர் பெரும்பாலும் வரலாற்றுத் தொடர் போன்றே செல்வதனால் வாசகர்களின் கவனத்தை ஈர்க்காது என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், தமிழில் இது பதியப்படவேண்டும் என்பதற்காகவும், எனது தேடலுக்காகவும் இதனைச் செய்யலாம் என்றே ஆரம்பித்தேன். உங்கள் போன்றவர்களின் ஆதரவு புத்துணர்ச்சியைத் தருகிறது. நன்றி ! உண்மை
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கையின் முதன்மை நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் யாழ்ப்பாணம் பல விடயங்களில் இலங்கையின் முன்னணி மாவட்டமாகத் திகழந்தது போல் நூலகத்துறையும் சிறந்து விளங்கியிருந்தது. முதலாவது வாசகர் அறையினை யாழ் நூலகமே கீரிமலையில் 1915 ஆம் ஆண்டு நகுலேஸ்வரா வாசக அறை என்ற பெயரில் உருவாக்கியிருந்தது. அதேபோல் இலங்கையின் முதலாவது பொது நூலகம் யாழ்ப்பாணத்திலேயே 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டது. யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குப் பின்னரே கொழும்பு பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் சர்வதேச நூலகத்துறையில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றினை தானும் நடைமுறைப்படுத்தி வந்தது. அந்தவகையில் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்கள் புத்தக இயக்கம் எனும் செயற்பாட்டினை யாழ்ப்பாண நூலகம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இயக்கத்தின் மூலம் 1930 களில் மக்களுக்கு மலிவான விலையில் பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்திருந்தது. இதற்கு முதல், புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், செல்வம் படைத்தவர்களின் இல்லங்களில் மட்டுமே காணப்பட்ட அரிய பொருளாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் புத்தகங்கள் கம்பளியில் எழுதப்பட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டு, மினுங்கும் மைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழ் நூலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவப் பாதிரியார் லோங்கின் உருவச் சிலை யாழ் நூலகத்தின் முதலாவது கட்டிடம் 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் எப். சி. கிரெய்னரின் வாசிப்பு அறையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 1848 இல் இந்த வாசிப்பு அறை முறையான பொது நூலகமாக உதவி அரசாங்க அதிபர் வில்லியம் டியுனத்தினால் மேம்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நீதிமன்ற செயலாளராகக் கடமையாற்றிய கே. எம். செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி யாழ்ப்பாண நூலகத்திற்காக புத்தகங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தார். மேலும், அவ்வருடம் மார்கழி 11 ஆம் திகதி தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்களுக்கான வேண்டுகோள் ஒன்றினை அவர் விடுத்திருந்தார். "யாழ்ப்பாணத்தில் இயங்கப்போகும் இலவச மத்திய நூலகம்" என்கிற தலைப்பில் அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்புக் கிடைத்தது. 1934 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் மாவட்ட நீதிபதி சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை அமைக்கும் நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்படி நூலக நிர்வாக சபையின் தலைவராக நீதிபதி குமாரசாமியும், உதவித் தலைவராக பாதிரியார் ஐசக் தம்பையாவும், இணைந்த செயலாளர்களாக வழக்கறிஞர் சி பொன்னம்பலமும், செல்லப்பாவும் தெரிவுசெய்யப்பட்டனர். கே. எம். செல்லப்பா யாழ்ப்பாண நூலகம் முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு, ஆவணி முதலாம் திகதி 844 புத்தகங்களுடனும், 30 செய்தித் தாள்களுடனும், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக் கட்டடத்தின் முன்னாலிருந்த தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மாநகரசபையின் பிரிவான யாழ்நகர அபிவிருத்திச் சபை 1935 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த நூலகத்தினை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. யாழ் நூலகம் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. 1952 ஆம் ஆண்டு நூலகத்தின் செயற்பாடுகள் விஸ்த்தரித்து மக்களின் அபிமானத்தை பெருவாரியாகப் பெற்றுவந்த நிலையில் அதற்கென்று தனியான கட்டடம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்த அன்றைய யாழ் நகர மேயர் சாம் சபாபதி கட்டடம் ஒன்றினைக் கட்டுவதென்று முடிவெடுத்தார். கட்டடத்திற்கான அமைவிடம் நகர அபிவிருத்தி அதிகாரியான வீரதுங்கவினால் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி மேயர் ஆர். விஸ்வநாதனின் மற்றும் பாதிரியார் லோங்கினாலும் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில் பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இருந்திருக்கின்றனர். கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் இரு இந்தியர்களான நூலக விஞ்ஞானத்தின் நிபுணர் கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் திராவிட கட்டிடக் கலையின் விற்பன்னரான கே. எஸ். நரசிம்மன் ஆகியோர் நூலகக் கட்டிடத்தின் வடிவமைப்பையும், நூலகத்தின் பிரிவுகள் அமைக்கப்படவேண்டிய ஒழுங்கினையும் வரைந்து கொடுத்திருந்தனர். நூலகத்தின் முதலாவது கட்டம் பூர்த்தியாக்கப்பட்டபோது அன்றைய யாழ் மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவினால் 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளும் பூர்த்திசெய்யப்பட்டு வந்தன. இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாக யாழ் நூலகம் திகழ்ந்ததோடு 15,910 சதுர அடிகள் நிலப்பரப்பையும் கொண்டிருந்தது. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தில் ஏழு முக்கிய பகுதிகள் இருந்தன. புத்தகங்களை வாசிப்பதற்குக் கொடுக்கும் பகுதி, புதினப் பத்திரிக்கைகள் மற்றும் பருவப் புத்தகங்கள் பகுதி, சிறுவர் பிரிவு, கேட்போர் கூடம், குறிப்புப் புத்தகங்கள் பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கற்றல் பிரிவு ஆகியவையே அவை. நூலகம் எரிக்கப்பட்டபோது அங்கு 96,000 நூல்கள் இருந்தன. புத்தகங்களைப் பாவனைக்கு வழங்கும் பகுதியிலேயே அதிகளவான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்புப் பகுதியில் 29,000 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததுடன் இவற்றுள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமையான நினைவுக் குறிப்புக்கள், பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள், நாடகக் குறிப்புகள், அரசியல்க் குறிப்புகள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல வரலாற்று ஆவணங்கள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. இறுதியாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதியும் அங்கிருந்தது. இலங்கையின் பெரிய சிறுவர் பகுதியைக் கொண்டிருந்த யாழ் நூலகம் 8,995 சிறுவர்களுக்கான புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. இக் கொடூரமான நூலக எரிப்பினை விசாரித்த பிரபல நூலகரான எம்.கமால்டீன் தனது விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு கூறியிருந்தார். "அந்தப் பயங்கரமான இரவில் யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தவர்களின் ஒரே நோக்கம் அங்குள்ள புத்தகங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு புத்தகத்தையாவது விட்டுவைக்க விரும்பவில்லை. பாதி எரிந்த நிலையில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே எம்மால் அங்கிருந்து மீட்க முடிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும்படி உத்தரவு வழங்கியது யார்? நூலகத்தை எரித்தது யார்? யாழ்ப்பாண நூலகம் தமிழரின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான மூன்று கேள்விகள் எழுந்தன. நூலகத்தை எரித்தது யார்? எவ்வாறு அதனை எரித்தார்கள்? எரிக்கும்படி உத்தரவிட்டது யார்? என்பனவே அம்மூன்று கேள்விகளும். யாழ்ப்பாண தமிழர்களின் கலாசாரப் பொக்கிஷமான நூலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரன் மிகுந்த வேதனையும், அதேநேரம் ஆத்திரமும் கொண்டார். இந்த நாசகாரச் செயலினால் தமிழினம் "கலாசாரப் பேரிழப்பொன்றினை அடைந்திருக்கிறது" என்று அவரது வாய் முணுமுணுத்தது. தென்னாசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை இன்னும் பலர் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றார்கள். சரித்திரத்தில் ஒரு இனத்தின் கலாசார அடையாளத்தைப் பேணும் நூலகங்கள் எரிக்கப்படுவது இதுவே முதல்முறையுமல்ல. இதற்கு முன்னர் இரு தடவைகள் இவ்வாறான் நூலக எரிப்புக்கள் சரித்திரத்தில் நடைபெற்றிருக்கிறன. முதலாவது 12 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசிய காடையர் கூட்டமான கில்ஜி எனப்படும் கொடூரனின் படைகள் நாலந்த என்றழைக்கப்பட்ட பெளத்த பல்கலைக் கழகத்தையும், அதனோடிணைந்த நூலகத்தையும் எரித்தது. இரண்டாவதாக 1619 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ் ராஜதானியைக் கைப்பற்றிய போர்த்துக்கேய படைகளின் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா என்பவன் தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த நூலகமும், தமிழர்களின் சரித்திரம், திராவிடப் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலங்களையும் கொண்ட சரஸ்வதி மகால் எனும் நூலகத்தை எரித்தான். மேலும், 500 சைவக் கோயில்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் தமிழரின் தொன்மையின் அடையாளங்களை இல்லாமப் போகச் செய்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. மூன்றாவதாக பாரம்பரிய நூலகம் ஒன்றும் பெளத்த நாடு என்று அறியப்பட்ட, பெளத்த ஜனாதிபதியினால் ஆளப்படும் இலங்கையில் எரிக்கப்பட்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரான சி.வி. சிவஞானம் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தி யாழ் நூலகம் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். உடனேயே சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகேந்திரா துரைசாமிக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த, அவரது மனவி மறுமுனையில் பேசினார். நூலகம் எரிவதுபற்றி தனக்கெதுவும் தெரியாது என்று கூறிய அவர், விடயங்களை அறிந்துகொண்டு மீளவும் அழைப்பதாகக் கூறினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சிவஞானத்தை மீள அழைத்த அரசாங்க அதிபரின் மனைவி நூலகம் எரிவது உண்மைதான் என்பதனை உறுதிப்படுத்தினார். உடனேயே சிவஞானம் நகரசபையின் காவலர் அறைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி நூலகம் எரிவது உண்மையா என்று கேட்டார். காவலர்களும் அதனை உறுதிப்படுத்தினர். நூலகத்தைச் சுற்றி நிற்கும் பொலீஸாரே நூலகத்திற்கு தீவைப்பதாக காவலர்கள் சிவஞானத்திடம் கூறினர். சி.வி. சிவஞானம் கடமையிலிருந்து ஆறு காவலர்களை தீயணைக்கும் இரு வாகனங்களை எடுத்துக்கொண்டு நூலகத்தை தீயிலிருந்து காக்குமாறு சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், யாழ்ப்பாண நகரசபையிடம் அன்றிரவு தீயணைப்பு வாகனங்கள் இருக்கவில்லை, "குறைந்தது நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதையாவது தடுத்து நிறுத்துங்கள்" என்று தனது காவலாளிகளிடம் கத்திவிட்டு, தானும் நூலகப் பகுதிக்குச் சென்றார். ஆனால் நூலகத்திற்கு அருகில் செல்வதிலிருந்தும், யாழ் நகரசபை கட்டடத்திற்குள் செல்வதிலுமிருந்து அவர் தடுக்கப்பட்டார். அவரை வழிமறித்த பொலீஸார், "நீ உள்ளே போகமுடியாது , திரும்பி சென்றுவிடு" என்று திருப்பியனுப்பினர். மேலும், மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் எப்படியாவது நூலகத்தினுள் சென்று தீயை அணைக்க முயற்சியெடுத்த வேளை, "வீதிக்கு வந்தீர்கள் என்றால் சுட்டுக் கொல்வோம்" என்று மாநகரசபையின் வாயிலுக்கு முன்னாலிருந்த் பொலீஸ் காவலரனில் கடமையிலிருந்த பொலீஸ் காடையர்கள் ஊழியர்களைப் பார்த்துக் குரைத்தனர். பீட்டர் கியூனுமென் கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியூனுமென் நூலகம் எரிந்த பின்னர் அதனை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே "அத்த" (உண்மை) எனும் சிங்களப் பத்திரிக்கையும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தது. அப்பத்திரிக்கைக்கு அழுதுகொண்டே பேட்டியளித்த நகரசபை ஊழியர் ஒருவர், "எங்களை உள்ளே செல்ல விடுங்கள் என்று பொலீஸாரிடம் நாங்கள் மன்றாடினோம். அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் எம்மைப்பார்த்து, நூலகம் முற்றாக எரியவேண்டும்" என்று கத்தினார்" என்று கூறினார். கியூனுமெனின் விசாரணைகளின்போது, நூலகம் எரிக்கப்பட்ட அன்றிரவு, அதனைச் சூழவுள்ள வீதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்திக் காவலுக்கு நின்ற பொலீஸார் அப்பகுதியினூடாக நூலகத்தை நோக்கி செல்லும் அனைவரையும் தடுக்கும் நோக்குடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. நூலகத்தின் பிரதான வாயில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, அவற்றின் முன்னால் பழைய டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. ஊர்காவற்றுரையில் இருந்த இலங்கை கப்பற்படையின் தளபதியுடன் தொடர்புகொண்ட சிவஞானம் உடனடியாகச் செயற்பட்டு தமிழரின் கலாசார சின்னமான நூலகம் முற்றாக எரிந்து சாம்பலாவதைத் தடுக்க உதவுமாறு கெஞ்சினார். தயக்கத்துடன் கடற்படைத் தளபதி சில வீரர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் நூலகம் முற்றாக எரிக்கப்பட்டுவிட்டது. நூலகத்தின் முழுக் கட்டிடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தமிழரின் வரலாற்றுப் பெருமையான யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாக மாறிக்கொண்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழரின் பொக்கிஷத்தை எரித்த சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாணத்தில் அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு வன்னியில் மறைந்திருந்த நாட்களிலும் கூட, இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றார் பிரபாகரன். ஆனால், அவரும், மீதமாக இருந்த டெலோ தலைவர்களும் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தனர். டெலோ இயக்கம் 1981 ஆம் ஆண்டு சித்திரை 26 ஆம் திகதி தனது தலைவர்களில் ஒருவரான ஜெகன் எனப்படும் கணேசநாதன் ஜெகநாதனை காட்டிக்கொடுத்தல் ஒன்றின் மூலம் பொலீஸாரிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தமிழ் மக்களின் மனங்களில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எதிர்பாத்திருந்த உமா மகேஸ்வரனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சுந்தரம் எனப்படும் சிவஞானமூர்த்தியுடன் இணைந்து மாவட்ட அபிவிருந்திச்சபைகளுக்கான தேர்தல்களைக் குழப்புவதென்று உமா முடிவெடுத்தார். அதன்படி, வைகாசி 24 ஆம் திகதி, காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஏ. தியகாராஜா புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏ. தியகாராஜா தொண்டைமானும், 1978 ஆம் ஆண்டிலிருந்து ஜெயாருக்கு ஆலோசகராகக் கடமையாற்றி வந்தவரான ஏ.ஜே. வில்சனும் வட மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்று ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். "தமிழர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு ஒருவரைத் தெரிவு செய்யட்டும்" என்று வில்சன் ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், ஜெயாரோ வடக்கில் தனது விசுவாசிகளாக இருந்த கணேசலிங்கம், புலேந்திரன் போன்றோரின் ஆலோசனைகளையே நடைமுறைப்படுத்த விரும்பினார். 10 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் குறைந்தது இரு உறுப்பினர்களையாவது வெல்லவைப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தன்னுடன் இருப்பதாகக் காட்டலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். இதனைச் செய்வதற்கு தேர்தலில் எந்தவகையான முறைகேடுகளையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஏ.ஜெயரட்ணம் வில்சன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும், தேர்தல்களை நடத்துவதற்கும் உதவியாக தனது இரு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்தியூவையும், காமிணி திசாநாயக்கவையும் ஜெயவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். முதலில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிறில் மத்தியூ, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில் தனது காடையர்களை ஏற்றிக்கொண்டு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் தங்கிக்கொண்டார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற காமிணி திசாநாயக்க யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கிக்கொண்டார். வில்சனின் கூற்றுப்படி, காமிணி யாழ்ப்பாணத்திற்குப் போகும், அவரை வழியனுப்பி வைத்த ஜெயார், "சிறில் மத்தியூ மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சிறில் மத்தியூ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றில் ஈடுபடப்போகிறார் என்பதை ஜெயார் அறிந்திருந்தார் என்பது உறுதியாகிறது. சிங்கள மிருகங்கள் - ஜெயவர்த்தன, சிறில் மத்தியூ இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்ப் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வந்தது. அக்கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் வைகாசி 31 ஆம் திகதி, காங்கேசந்துறை வீதியில், நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ் நகர மேயர் தலைமை தாங்கியிருந்தார். பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்க வந்திருந்த நான்கு பொலீஸார், கூட்டத்தின் பின்புறமாக அடுக்கப்பட்டிருந்த வாங்குகளில் அமர்ந்திருந்து கூட்டத்தை அவதானித்தானித்துக்கொண்டு இருந்தனர். பொலீஸாரின் பின்புறமாக வந்த புளொட் அமைப்பின் ஆயுததாரிகள் பொலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கொன்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகிய இரு பொலீஸ்காரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனைய இரு பொலீஸ்காரர்களான உஸ்மானும், குலசிங்கவும் காயப்பட்டனர். இச்சூட்டுச் சம்பவம் இன்னொரு வன்முறையினைத் தூண்டிவிட்டது. வெற்றிவேல் யோகேஸ்வரன் இச்சம்பவம் நடந்து சரியாக 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்த பொலீஸார், கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட தமது சகாக்களை எடுத்துச்சென்றதுடன், அவ்வாறு செல்லுமுன் நாச்சிமார் கோயிலுக்கும், அருகிலிருந்த சில வீடுகளுக்கும், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்களுக்கும் தீவைத்துவிட்டுச் சென்றனர். மேலும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இறுதி போக்குவரத்து பஸ்ஸை மறித்து, பயணிகளை அடித்து விரட்டிவிட்டு அதிலேறி யாழ்நகர் நோக்கிப் பயணித்தது ஒரு பொலீஸ் குழு. யாழ்நகரை அடைந்ததும், யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் இயங்கிவந்த பல வியாபார நிலையங்களை வரிசையாகக் கொழுத்திக்கொண்டே சென்றனர் பொலீஸார். பின்னர், யாழ்நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் பஸ்ஸை நிறுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகேஸ்வரனின் ஜீப் வண்டி, அவரது நண்பரின் கார் மற்றும் யோகேஸ்வரனின் வீடு ஆகியவற்றிற்கும் தீமூட்டினர். தாக்குதல் நடந்தவேளை யோகேஸ்வரனும், மனைவியும் வீட்டில் இருந்தபோதும், சமயோசிதமாக தமது வீட்டின்பின்புறத்தால் ஏறிக் குதித்து அயலவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்ததன் மூலம் உயிர்தப்பிக்கொண்டனர். யோகேஸ்வரனின் வீட்டிற்குத் தீமூட்டிய பொலீஸார் பின்னர் அங்கிருந்து, பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் நோக்கிச் சென்று அதற்கும் தீமூட்டினர். பொலீஸாரின் இந்த வன்முறைகள் நடந்தேறி சரியாக ஒருவாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட யோகேஸ்வரன், "என்னைக் கொல்வதற்காகவே அன்றிரவு பொலீஸார் எனது வீட்டிற்குத் தீவைத்தனர். நான் உயிருடன் இருப்பது அதிஷ்ட்டமே" என்று கூறினார். யோகேஸ்வரனின் பேச்சினை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறில் மத்தியூ, "யோகேஸ்வரனது வீட்டில், அவரும் பயங்கரவாதிகளும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறித்து பொலீஸாருக்குத் தகவல் வந்ததனாலேயே பொலீஸார் அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது" என்று கூறினார். மேலும், "யோகேஸ்வரனின் வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வீடு தீப்பற்றிக்கொண்டது" என்றும் பொலீஸாரின் அக்கிரமத்தை நியாயப்படுத்தினார் சிறில் மத்தியூ. கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், நீதிக்கான அமைப்பு இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் யோகேஸ்வரனைக் கொல்லும் நோக்கிலேயே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குத் தீவைத்தனர் என்று கூறியிருந்தது. "பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உயிர் தப்பியது அதிஷ்ட்டமே, ஏனென்றால், அவரைக் கொல்லும் ஒரே நோக்கத்திற்காகவே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குச் சென்றனர்" என்று அது கூறியிருந்தது. பொலீஸாரின் வெறியாட்டம் மறுநாளான, 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதியும் தொடர்ந்தது. அந்தச் சோகமான இரவில், தமிழர்களின் பெருமையான, விலைமதிப்பற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த நிசப்தமான இரவில், யாழ்ப்பாணத்தின் வானத்தை மறைத்துக்கொண்டு மேலெழுந்த கரிய புகையினை, உதவுவார் எவருமின்றி ஆதரவற்ற தமிழர்கள், செய்வதறியாது பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தமது பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்படுவது தெரிந்து உணர்வுமேலீட்டால் ஓடிச்சென்று அணைத்துவிடலாம் என்று எண்ணி, வீதிகளில் இறங்கி நூலகம் நோக்கிச் சென்ற தமிழர்களை நூலப்பகுதியில் நின்றிருந்த பொலீஸார் அடித்து விரட்டினர். பல தமிழர்கள் தம் கண்முன்னே தமது சொத்து எரிக்கப்படுவது கண்டு ஓவென்று அழ, மீதிப்பேர் அந்த அக்கிரமத்தைப் பார்க்க விரும்பாது கண்களை இறுக மூடிக்கொண்டனர். எரிக்கப்பட்டுக் கிடக்கும் எமது பொக்கிஷம் - யாழ்ப்பாண நூலகம் 1981 ஆனால், ஒரு இளைஞன் மட்டும் இதனை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உறுதிபூண்டான். வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகளை அவன் ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டான். கண்கள் வீங்கிச் செந்நிறமாக, முகத் தசைகள் இறுகத்தொடங்க அவனது இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. இதற்குப் பழிவாங்குவேன் என்று அவன் சபதம் பூண்டான். ஜெயவர்த்தனவின் காடையர்கள் எனது பணியை இலகுவாக்கி விட்டார்கள் என்று அவனது வாய் முணுமுணுத்துக்கொண்டது. உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பத்தை இந்த நூலக எரிப்பு அவர்களுக்குக் கொடுத்தது. அவர்கள் மனங்களில் என்றும் அழியாத வடுவை அது ஏற்படுத்தியது. இந்த சதிகார நாசச் செயலை எந்தவொரு தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, அவனே பிரபாகரன். எரிந்துகொண்டிருந்த தமிழரின் பொக்கிஷத்திற்கு வெகு அருகிலேயே அவன் அப்போது ஒளிந்திருந்தான். அவனது மனம் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீர்வேலி வங்கிக்கொள்ளை கடுமையான பணத்தட்டுப்பாடினை எதிர்நோக்கிய டெலோ அமைப்பு, தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தியான சூழ்நிலையினைப் பாவித்து, குறும்பசிட்டியில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான நகை அடைவுபிடிக்கும் நிலையம் ஒன்றினை 1981 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். பின்னர் நடைபெறவிருந்த வன்முறைகளுக்கு இது முன்னோடியாக அமைந்திருந்தது. தனது பணத்தினையும், நகைகளையும் கொள்ளையடிக்க வந்திருந்த குழுவைக் கண்டதும் உரத்துக் கூக்குரலிட்ட உறிமையாளர், அயலவர்களின் உதவியுடன் கொள்ளையிட வந்த குழுவினரைக் கலைத்துவிட்டார். ஆனால், அக்குழு ஒரு தமிழ்ப் போராளி அமைப்பென்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. தப்பியோடிய கொள்ளைக் குழு தம்மைத் துரத்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஐய்யாத்துரை, குலேந்திரன் ஆகிய இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பங்குனி 16 ஆம் திகதி, டெலோ அமைப்புடன் சேர்ந்து பிரபாகரன் தனது முதலவாது ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளியாக மாறியிருந்த முன்னாள் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவரான செட்டி தனபாலசிங்கத்தை யாழ்ப்பாண நகருக்குச் சற்று வெளியே இருந்த கல்வியங்காடு பகுதியில் சைக்கிளில் சென்ற பிரபாகரனும், குட்டிமணியும் சுட்டுக் கொன்றனர். வீதியில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த செட்டி, பிரபாகரனும், குட்டிமணியும் வருவதைக் கவனித்திருக்கவில்லை. செட்டி சுதாரித்து, இடுப்பில் செருகியிருந்த தனது கைத்துப்பாக்கியை எடுக்கும் முன்னரே நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 1981 ஆம் ஆண்டு, பங்குனி 25 ஆம் திகதி, இலங்கையில் அதுவரை நடைபெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் மிகவும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமான நீர்வேலி வங்கிக்கொள்ளையினை குட்டிமணி நடத்தியிருந்தார். நீர்வேலிக் கிளையில் தினமும் சேரும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தலைமைக் கிளைக்குக் கொண்டு சேர்க்கும் மக்கள் வங்கியின் செயற்பாட்டினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த குட்டிமணி இக்கொள்ளையினை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டார். நீர்வேலிச் சந்திக்கு அருகில், ஆளரவமற்ற பகுதியில், இராணுவச் சீருடையில் பதுங்கியிருந்த குட்டிமணியும் அவரது தோழர்களும் யாழ்ப்பாணக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டி வரும்வரை காத்திருந்தனர். பணத்தைக் காவிவந்த வாகனம் தமக்கருகில் வந்தவுடன், குட்டிமணியின் தோழர்களில் ஒருவர் வீதிக்குக் குறுக்கே, வாகனத்தின் முன்னால்ப் பாய்ந்து, "நிறுத்துங்கள்" என்று சிங்களத்தில் உரக்கக் கூவியிருக்கிறார். தம் முன்னால் நிற்பது இராணுவ வீரர்கள்தான் என்று எண்ணிய வாகனத்திலிருந்த பொலீஸார், வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு கீழிறங்கும்போது, அவர்கள் இருவரையும் குட்டிமணியும் தோழர்களும் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பொலீஸ்காரர்களின் பெயர்கள் முதுபண்டா மற்றும் ஆரியரட்ண என்பதுடன், வாகனத்தில் நேர்த்தியாக பணம் அடுக்கப்பட்டிருந்த ஐந்து சூட்கேஸுகளுடன் குட்டிமணியும், தோழர்களும் தப்பிச் சென்றனர். அன்று கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு 79 லட்சம் ரூபாய்கள். அரசாங்கம் அதிர்ந்து போனது. ஜெயவர்த்தன கலங்கிப் போனார். வீரதுங்கவின் ராணுவ நடவடிக்கையினால் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் செயலிழந்து போய்விட்டன என்று அவர் கட்டிவந்த கனவுக் கோட்டை கலைந்துபோனது. தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெயார், கொள்ளையிட்டவர்களை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறியதுடன், கொள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டார். மேலும், கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோரு பத்து லட்சம் ரூபாய்கள் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சித்திரை 5 ஆம் திகதி, பருத்தித்துறை கிழக்கில் அமைந்திருந்த கரையோரக் கிராமமான மணற்காடு பகுதியில் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல படகிற்காகக் காத்திருந்தவேளை குட்டிமணி, தங்கத்துரை, செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகிய மூவரும் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பில் வழக்கைச் சந்தித்த தங்கத்துரையுடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. என்னிடம் பேசிய தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "எங்களை சிறிசபாரட்ணமே கடற்கரையில் இறக்கிவிட்டார். படகு இரவு 11 மணிக்கு வரும் என்று எங்களிடம் அவர் கூறினார். ஆனால், அது வரவில்லை. பின்னர், துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியபடி வந்துகொண்டிருந்த பொலீஸ்காரரை நாங்கள் கண்டோம். "சரணடையுங்கள்" என்று அவர்கள் உரக்கக் கத்தினார்கள். தப்பியோடுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தோம், அப்போதுதான் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எம்மால் தப்பிச்செல்ல முடியவில்லை. நாம் கைகளை உயர்த்தியபடி சரணடைய முயலும்போது, குட்டிமணி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுக்க முனைந்தார். தன்னைத்தானே சுட்டுக்கொல்லவே அவர் முயன்றார். ஆனால், பொலீஸார் அவரை மடக்கிப் பிடித்துவிட்டனர். கைகலப்பில் துப்பாக்கி வெடித்து, சன்னம் அவரது காதினைத் துளைத்துச் சென்றது. எம்மைக் கைது செய்து, விலங்கிட்டு, சங்கிலிகளால் பிணைத்து வைத்தார்கள். பின்னர் கொழும்பிற்கு விமானத்தின்மூலம் கொண்டுவரப்பட்டு பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம்". "உங்களைப் பற்றி யாராவது பொலீஸாருக்கு அறிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் அவரைக் கேட்டேன். "நாமும் அந்த முடிவிற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். தனது சந்தேகத்திற்கான காரணங்களை தங்கத்துரை பின்வருமாறு கூறினார். அவர்களைக் கைதுசெய்ய வந்த பொலீஸ் பரிசோதகரும் அவரது படையும் தமது ஜீப் வண்டியை தொலைவில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவே சத்தமின்றி அவர்களை நோக்கி முன்னகர்ந்து வந்திருக்கின்றனர். ஆறுபேர் அடங்கிய அந்த பொலீஸ் குழுவினர் தாமிருந்த பகுதியை வட்டமாகச் சுற்றிவளைத்து முன்னேறியது தாம் தப்பிச்செல்வதைத் தடுத்துவிடவே என்று அவர்களுக்குப் புரிந்தது. பொலீஸார் தம்முடன் கைவிலங்குகளையும் எடுத்து வந்திருந்தது, குட்டிமணி குழுவினரைக் கைதுசெய்யும் திட்டத்துடனேயே என்பதைப் புலப்படுத்தியிருந்தது. மேலும், சிறி சபாரட்ணம் கூறியபடி இரவு 11 மணிக்கு படகு வராது போனது கூட, நேரம் வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்டதனால்த்தான் என்றும் அவர்கள் சந்தேகித்திருந்தனர். "நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டேன். அவர் பதில் கூறவில்லை. புன்னைகையே பதிலாக வந்தது. "நாங்கள் வெளியில் வந்ததன் பின்னர் நீங்களே அறிந்துகொள்வீர்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். "அப்படியானால், படகோட்டியைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று மீண்டும் அவரைக் கேட்டேன். அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. "படகினை ஒழுங்கு செய்தது யார்?" என்று நான் கேட்டேன். "பிரபாகரன்" என்று அவர் பதிலளித்தார். "அவரைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் மீண்டும் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசிய அவர், "நான் எனது சந்தேகங்களை ஒரு பத்திரிக்கையாளரிடம் சொல்ல முடியாது. நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி நானே விசாரிப்பேன்" என்று அவர் கூறினார். ஆனால், அவரால் வெளியில் வரமுடியாமலேயே போய்விட்டது. அவரும், குட்டிமணியும், தேவனும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நேர்காணல் நடந்து சரியாக ஒருவருடத்தின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாம் நாளன்று அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுப் போனார்கள். நீர்வேலி வங்கியைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றினை முடுக்கிவிட்டிருந்தனர். அதனைச் செய்தது டெலோ அமைப்பினரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்த தேடுதல் வேட்டை மீண்டும் ஒருமுறை பிரபாகரனின் சமயோசிதத்தை வெளிக்காட்டியிருந்தது. பொலீஸாரின் ஒவ்வொரு அசைவினையும் முன்னமே கணிப்பிட்டு , அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். தனது ஆயுதங்களை உடனடியாக புதிய மறைவிடங்களுக்கு அவர் மற்றிக்கொண்டார். பிரபாகரனின் பழைய மறைவிடங்களைப் பொலீஸார் சோதனையிட்டபோது எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் தேடுதல் நடவடிக்கை பிரபாகரனைத் தொடர்ந்தும் ஓட்டத்தில் விட்டிருந்தது. இதனால் வன்னிக்குத் தப்பியோடிய பிரபாகரன், காட்டில் வாழ்ந்து வந்ததுடன் முட்புதர்களுக்குள் தூங்கியும், உணவின்றியும் அவதிப்பட்டார். குட்டிமணியும், ஜெகனும் 1982 ஆம் ஆண்டில்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அரசியலில் பிரபாகரனுக்கு இருந்த ஆர்வம் எத்தனையோ சவால்களுக்கும், கஷ்ட்டங்களுக்கும் பின்னர் தான் மீளப் பெற்றெடுத்துக்கொண்ட தனது இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீளவும் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைப்பதில் மும்முரமாக பிரபாகரன் ஈடுபட்டிருந்தபோதும் கூட, அரசியலில் அப்போது நடைபெற்று வந்த நிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்தார். இயல்பில் அவர் ஒரு அரசியல்த் தீவிரவாதியாகத் திகழ்ந்தார். இதனை பலமுறை நேர்காணல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் மீதிருந்த தீவிர ஈடுபாடே தன்னை ஒரு போராளியாக மாற்றியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அனித்தா பிரதாப்பிற்கு அவர் 1984 இல் வழங்கிய முதலாவது நேர்காணலில் பின்வருமாறு கூறுகிறார், அனித்தா பிரதாப் : எந்தக் கட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகளில் நீங்கள் நம்பிக்கையிழந்தீர்கள்? அதன்மீதான உங்களிம் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது எது? பிரபாகரன் : இளைய சமுதாயம் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்த 70 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஆயுத ரீதியிலான போராட்டச் சிந்தனையுடனேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். தமிழ் மக்களின் அவலங்கள் மீது அடுத்தடுத்து ஆட்சி செய்த சிங்கள அரசுகள் காட்டிய அசமந்தமும், அலட்சியமும் மாற்றாந்தாய் மனப்பாங்குமே பாராளுமன்ற அரசியல் ஒரு ஏமாற்று நாடகம் எனும் நிலைக்கு என்னைத் தள்ளியது. பிரபாகரனைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களும், அந்த அவலங்களைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் முன்னெடுத்த போராட்டங்களின் முற்றான தோல்வியுமே ஆயுதம் ஏந்துவதற்குக் காரணமாக இருந்தது. அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் நெருக்கமாக அவதானித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்கள் குறித்த நுட்பங்களைத் தொடர்ச்சியாக அரசியல் அவதானிகளுடன் பேசிவந்திருக்கிறார். வி. தர்மலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்துடன் இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாக பிரச்சினைப்படுகையில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஒரு நாள் காலை வி தர்மலிங்கத்தின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன் அரசு முன்வைக்கும் யோசனைதான் என்ன என்று அறிய முயன்றார். தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தனினின் கூற்றுப்படி, அன்று காலை பிரபாகரனுக்கு தோசை உணவாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. அங்கு, தனது கைத்துப்பாக்கியை பிரபாகரன் சித்தார்த்தனுக்குக் காட்டியிருக்கிறார். "இது பஸ்டியாம்பிள்ளையிடம் முன்னர் இருந்தது" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இன்று புளொட் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் சித்தார்த்தன், அன்று பிரபாகரனுக்கு தனது தந்தையாரான தர்மலிங்கம், அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபை திட்டத்தினை விளக்கியதாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் சமஷ்ட்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு அடித்தளமிட முடியும் என்றும் தர்மலிங்கம் பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். "தமிழர்களுக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கட்டமைப்பு கொடுக்கக் கூடியது என்பதனால், இதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம் " என்று பிரபாகரனிடம் தனது தந்தையார் கூறியதாக சித்தார்த்தன் கூறுகிறார். தனது தந்தையாரிடம் மிகவும் தீவிரமாகப் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்ததை தான் அவதானித்ததாக சித்தார்த்தன் கூறுகிறார். மாவட்ட அபிவிருத்திச் சபையின் நிதி அதிகாரம், காணியதிகாரம், பொலீஸ் அதிகாரம் குறித்து பல கேள்விகளை பிரபாகரன் தர்மலிங்கத்திடம் கேட்டிருக்கிறார். பிரபாகரனின் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்துபோன தர்மலிங்கம், இறுதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இருக்கும் அதிகாரம் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்பதை ஒப்புக்கொண்டார். "பிரபாகரன் அதுகுறித்து எந்தவித அபிப்பிராயத்தையும் கூறவில்லை. ஆனால் அவரது கேள்விகளில் அவரது சிந்தனையின் வீச்சு தெளிவாகத் தெரிந்தது" என்று சித்தார்த்தன் அந்த நாளை நினைவுகூர்ந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் குறித்து பிரபாகரன் அதிகம் அலட்டிக்கொள்ளாதபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு தமது தலைமைக்கெதிரான தமது எதிர்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியிருந்தனர். இவ்வகையான முதலாவது சம்பவம் 1981 ஆம் ஆண்டு மாசி மாதம் நடந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அக்கூட்டத்திலேயே அமிர்தலிங்கம் அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். அடுத்த சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னணியினர் தீர்மானம் எடுத்தபோது நடந்தது. அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக அகிம்சை ரீதியில் தமது எதிர்ப்பினைக் காட்டி வந்த இளைஞர்கள் 1981 ஆம் ஆண்டு பங்குனி 16 ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். அன்றிரவு, அமிர்தலிங்கமும், தர்மலிங்கமும், ராஜலிங்கமும் வல்வெட்டித்துறையில் தமது இரவுணவை அருந்திக்கொண்டிருந்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை மூன்று இளைஞர்கள் சேதப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராஜலிங்கத்தின் ஜீப் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் மன்னாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அழுத்தத்திற்குப் பணிந்த உமா மகேஸ்வரன் தனக்கு விசுவாசமான , தனக்கும், இலட்சியத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும் கூட, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினை உமா மகேஸ்வரன் கைவிட வேண்டும் என்று பிரபாகரன் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தார். மேலும், தான் வேறு பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினைக் கைவிட்டு விட்டதாகவும் உலவி வந்த வதந்திகளை அவர் ஒதுக்கித் தள்ளினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சரித்திரத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வது இலகுவானது. எனது இயக்கம், தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்தியிருப்பதுடன், தமிழ் மக்களின் மனங்களிலும் அது குடிகொண்டுவிட்டது" என்று தன்னிடம் சமரசம் பேச வந்த சிலரிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார். இலங்கையிலும், லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வந்த கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை விட்டுக் கொடுக்க உமா மகேஸ்வரன் முன்வந்ததுடன், தனது அமைப்பிற்கு தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் என்றும் பெயர் சூட்டினார். இந்த அமைப்பினுள் உமாவுடன், மார்க்ஸிசச் சிந்தனையும், தத்துவார்த்த அடிப்படையில் காலம் காலமாக வீண் விவாதங்களில் ஈடுபட்டும் வந்த பல செயலற்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாகவிருந்த பல செயலற்ற சிந்தனாவாதிகள் தனது இயக்கத்தை விட்டுச் சென்றது குறித்து பிரபாகரன் நிம்மதி அடைந்திருந்தார். தமிழ் மக்களின் மனங்களில் தானும் ஒரு இடத்தினைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த உமா, அரசுக்கெதிராக அதிரடியான தாக்குதல்கள் சிலவற்றை நடத்தினார். மேலும், அரச சதியான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்கேற்கக் கூடாது என்று வன்மையாக எதிர்த்தும் வந்தார். இதேவேளை, தனது அரசியல் அதிகாரத்தை மேலும் பலப்படுத்த விரும்பிய ஜெயார். தனது அரசியல் வைரியான சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்குவதன் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிமா போட்டியிடுவதை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று திட்டம்போட்டார். இதற்காக, தனது பிரதமரான பிரேமதாசவூடாக சிறிமாவின் குடிமை உரிமைகளை 7 ஆண்டுகளுக்குப் பறித்துப்போடும் தீர்மானம் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறிமாவோ திட்டமிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஜெயாரின் இந்தப் பழிவாங்கும் செயலினை எதிர்த்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இரு தடவைகள் நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு பிரதமரின் குடிமை உரிமைகளைப் பறிப்பது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் செயல் என்று விமர்சித்திருந்தனர். இறுதியாக, இந்தப் பழிவாங்கும் செயலில் இறங்கவேண்டாம் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கோரினார். இது முன்னணியினர் மீது ஜெயார் கடுமையாகக் கோபம் கொள்ளக் காரணமாகியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா ! 1980 ஆம் ஆண்டு ஆவணி 8 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான பிரேரணையினை பிரதம மந்திரியான பிரேமதாசா பாராளுமன்றத்தின் முன்வைத்தபோது பிரச்சினை இன்னும் சிக்கலானது. அதனை உடனடியாகவே நிராகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பிரேரணையினை பாராளுமண்ரத்திலேயே நிராகரித்துவிட்டு, வெளியே வந்து தனிழ்நாட்டிற்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், இளைஞர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்னணி மறுத்துவிட்டது. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை பிரேரணையினை ஆதரிப்பதென்றும், அதனை நடைமுறைப்படுத்த ஜெயாருக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது. எரிக்கப்பட்டுக் காட்சிதரும் யாழ்ப்பாண நூலகம் சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பொதுச்சபை, அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான தமது தீர்மானத்தை கலந்தாலோசித்திருந்தது. சுமார் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் "இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்" என்று கூறியதுடன் தமது கட்சி இதனை முற்றாக ஆதரிக்கும் என்றும் கூறினார். இச்சட்டத்தை தானும், தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று காரணங்களை அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, இச்சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலை நாடு முழுவதற்கு விஸ்த்தரிக்க முடியும் என்று அவர் கூறினார். அபிவிருத்திப் பணிகளில் மக்களையும் இதன்மூலம் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இரண்டாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அரசாங்கம் நிச்சயம் அதனை நிறைவேற்றியே தீரும். ஆகவே, அதனை எதிர்த்து அரசுடன் பகைமையினை வளர்ப்பதைக் காட்டிலும், ஆதரித்து நட்புப் பாராட்டலாம் என்று அவர் கூறினார். மூன்றாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரித்து சட்டமாக்க உதவுவதன் மூலம், தமிழ் மாவட்டங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்றும், அவ்வாறில்லாமல் இதனை எதிர்த்தால் வடக்குக் கிழக்கில் இன்றுவரை அரசால் அபிவிருத்திப்பணிகளில் காட்டப்பட்டுவரும் மாற்றாந்தாய் மனப்பான்மை இனிமேலும் தொடரும் என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அமிர்தலிங்கத்தின் இந்த யோசனைக்குப் பலமான எதிர்ப்பு இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. அவரை விமர்சித்தவர்கள் இச்சட்டம் மிகவும் பலவீனமானதென்றும், இதனால் தமிழருக்கென்று நண்மைகள் ஏதும் இல்லையென்றும் வாதிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் டட்லி சேனநாயக்கவினால் வரையப்பட்ட பிராந்திய சபைகள் அடிப்படையிலான தீர்வினைக் காட்டிலும் ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மிகவும் பலவீனமானவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். டட்லியின் பிராந்திய சபைகளையே தமிழ் இளைஞர்கள் "மிகைப்படுத்தப்பட்ட நகர சபைத் தீர்வு" என்று ஏளனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தினை விமர்சித்தவர்களின் கருத்தின்படி சட்டவாக்கல் மற்றும் வரி அறவிடல் ஆகிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும், மத்திய அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே இவை தீர்மானிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், இந்த சட்டத்தினை தமிழர்களுக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்டுவதே ஜெயாரின் உண்மையான நோக்கம் என்றும், இச்சட்டத்தினை அவர் ஒருபோதும் உண்மையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஈழவேந்தன் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா நகர மண்டபத்திற்கு வெளியே இளைஞர் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் இறங்கியது. அந்த இளைஞர்கள் பதாகை ஒன்றினை ஏந்தியிருந்தனர். "எமது இலட்சியத்திலிருந்து எம்மை திசைதிருப்பும் இந்த சட்டத்தினை உடனடியாக நிராகரியுங்கள்" என்று அந்தப் பதாகை கூறியது. கூட்டத்தின் முடிவில் அச்சட்டத்தினை தமது கட்சி ஏற்கும் என்று அன்று இரவு 9 மணிக்கு முடிவெடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்த அமிர்தலிங்கத்தைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் "அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா, அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா" என்று ஆக்ரோஷமாகக் கூச்சலிடத் தொடங்கினர். அதாவது, அமிர்தலிங்கம் சிங்களவர்களுக்கான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் என்று பொருள். அந்தச் சத்தியாக்கிரகத்தை ஒழுங்குசெய்த ஈழவேந்தன் எழுந்துசென்று, அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசியின் முன்னால்ப் போய் அழுதுகொண்டே, "உங்களின் கணவர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்,உங்களுக்கு வணக்கம்" என்று கூறிவிட்டுச் சென்றார். கனகேந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈழவேந்தன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் பலகாலம் பணிபுரிந்தவர் என்பதுடன், செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய அமைப்பாளராக ஆரம்ப காலங்களில் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஈழவேந்தனின் அந்த இறுதி விடைபெறுதல் நிகழ்வு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் இருந்த பிளவை முழுமையாக்கியிருந்தது என்றால் அது மிகையில்லை. முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற கோவை மகேசனின் அமைப்பு தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பினை உருவாக்கியது. இப்புதிய அமைப்பின் தலைவராக கலாநிதி தர்மலிங்கமும், செயலாளராக ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். தனது அமைப்பை மீள உருவாக்கிக் கட்டமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தான் எப்படியாவது மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்று அவர் உறுதி பூண்டிருந்தார். தனக்கு விசுவாசமான, தனது நோக்கத்தினைச் செவ்வணே நிறைவேற்றும் கெரில்லா அமைப்பொன்றினை உருவாக்க அவர் விரும்பினார். தேவையற்ற விவாதங்களும், பலனற்ற தத்துவார்த்தச் சிந்தனைகளும், இயக்கம் எப்படி பயணிக்கவேண்டும் என்பது குறித்து காலவரையறையின்றி நடக்கும் கலந்துரையாடல்களும் ஒருபோதும் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப்போவதில்லை என்று அவர் திடமாக நம்பினார். ஆகவே, தந்தை செல்வாவைப்போன்று தானும் யதார்த்தமான வழிகளைப் பின்பற்ற விரும்பினார். ஒரே தலைவன், ஒருவனே தீர்மானம் எடுப்பது, தமிழ் மக்களின் விடுதலையினை வென்றெடுக்க ஒரே சிந்தனையுடன் இலட்சியத்தில் பயணிப்பது ஆகியவையே அவரைப்பொறுத்தவரை தனது இயக்கத்திற்குத் தேவையானதாக இருந்தது. பிரபாகரனின் தளபதிகளில் ஒருவராக கிட்டு அவர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இற்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தலைவர் தான் மட்டுமே என்ற காரத்தினால்த்தான் தந்தை செல்வாவினால் பிரதமர்களான பண்டாரநாயக்கவுடனோ அல்லது டட்லி சேனநாயக்கவுடனோ நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கிட்டு கூறுகிறார். தந்தை செல்வா தன்னுடன் G G பொன்னம்பலத்தையோ அல்லது சுந்தரலிங்கத்தையோ உடன் அழைத்துச் சென்றிருந்தால், தந்திரசாலிகளான சிங்களப் பிரதமர்கள் இருவரும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்குள் பிளவினை உருவாக்கி பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பினைப் பலவீனப்படுத்தியிருப்பார்கள் என்று பிரபாகரன் கிட்டுவிடம் கூறியிருக்கிறார்.