Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளை முக்கியமான, தவிர்க்கமுடியாத சக்தியாக ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவதொரு பொதுவான தளம் ஒன்றினைக் கண்டறிவதே தனது தலையாய கடமை என்று பார்த்தசாரதி தீர்மானித்தார். இந்தப் பொதுவான தளத்தினைக் கண்டறியும் தனது முயற்சியில் சில அரசியல்வாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அமைச்சர்கள் தொண்டைமான், லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, பேர்னார்ட் சொய்சா, கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியுனுமென் ஆகியோரே அவர்கள். ஜெயவர்த்தனவுடனான மூன்றாவதும் இறுதியுமான சுற்றுப் பேச்சுக்களின்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவது குறித்து மட்டுமே அவர்கள் பேசினார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பலப்படுத்துவது குறித்தும் அப்போது ஆராயப்பட்டது. மேலதிகமாக சந்திப்புக்களை நீங்களே ஒழுங்குசெய்யுங்கள் என்று பார்த்தசாரதியிடம் கூறிய ஜெயார், அதற்கான கால எல்லையினையோ அல்லது திகதியினையோ வழங்குவதைச் சாதுரியமாக மறுத்துவிட்டார். தில்லி திரும்பும் வழியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ராமச்சந்திரைச் சென்று சந்தித்தார் பார்த்தசாரதி. அவ்வேளை பாரத்தசாரதியின் கொழும்பு விஜயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது சட்டசபைப் பதவியை சில வாரங்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்திருந்த தி.மு.க வின் கருநாநிதி, எம்.ஜி.ஆரின் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கிவிட்டிருந்தார். மக்கள் முன் பேசிய கருநாநிதி, ஜெயவர்த்தனவுடன் பேசுவதில் பயனில்லை, வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைத்ததைப் போன்று இலங்கையிலும் தலையிட்டு தீர்வொன்றினை வழங்குவதன்மூலமே தமிழரைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இப்பிரச்சினையில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்ற எம்.ஜி.ஆர், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டுக் காவல்த்துறையின் புலநாய்வுப்பிரிவான கியூ பிராஞ்ச் எனப்படும் அமைப்பினை கருநாநிதியின் செயற்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு பணித்த எம்.ஜி.ஆர், தமிழ் போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் பணித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பொலீஸாரும் செய்துகொடுத்தனர். சிறி சபாரட்ணம் இலங்கையில் தமிழர் மீதான வன்முறைகள் வெடித்துக் கிளம்பியபோது தமிழ் போராளி அமைப்புக்களின் பிரசன்னம் தமிழ்நாட்டில் இருந்தது. நெடுமாறனுக்கும் அவரது கட்சியான காமராஜர் காங்கிரஸுக்கும் புலிகள் நெருக்கமாக இருந்தனர். பிரபாகரன் உட்பட புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். சென்னையில் அவர்களுக்கென்று முறையான அலுவலகம் கூட அக்காலத்தில் இருக்கவில்லை. டெலோ அமைப்பு தி.மு.க கட்சிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர் சபாரட்ணம் கருநாநிதியை அடிக்கடி சந்தித்துவந்தார். புளொட் அமைப்பு அ.தி.மு.க அமைச்சரான எஸ் சோமசுந்தரத்தின் ஊடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அரசின் சலுகைகளை அனுபவித்து வந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக தமிழ்நாட்டில் புளொட் அமைப்பின் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க நிலங்களும் தமிழ்நாட்டு அரசினால் உமாமகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த நக்சலைட்டுக்களுடன் , குறிப்பாக கோதண்டராமனின் மக்கள் போர்ப் படையினருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. அவ்வமைப்பின் தலைவர் பத்நாபா யாழ்ப்பாணத்திலேயே அக்காலத்தில் தங்கியிருந்தார். ஆந்திராவின் நக்சலைட்டுக்கள் - மக்கள் போர்ப்படை பார்த்தசாரதி பின்னர் கருநாநிதியைச் சந்தித்தார். இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கிய பார்த்தசாரதி, இலங்கையின் இனங்களுக்கிடையே சுமூகமான நிலையினைத் தோற்றுவிப்பதென்பது மிகவும் சிக்கலான, உணர்வுரீதியான பிரச்சினை என்று கூறினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் இவ்விடயம் குறித்து பேசவும் செயற்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "இங்கு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் அங்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்றும் அவர் எச்சரித்தார். கொழும்பில் தான் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசிய பார்த்தசாரதி, பிரதமர் இந்திரா காந்தியுடனான பேச்சுக்களுக்காக அவர்களை தில்லி வருமாறு அழைத்தார். இந்தச் சந்திப்பு புரட்டாதி 5 ஆம் திகதி இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்த அமிர்தலிங்கம் என்னுடன் பேசும்போது, "அது ஒரு சுவாரசியமான, அறிவூட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது" என்று கூறியிருந்தார். இச்சந்திப்பின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையினை இந்திரா காந்தி மீளவும் உறுதிப்படுத்தியதாக அமிர் என்னிடம் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமையினைத் தான் பெற்றுத்தருவேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக அமிர் என்னிடம் கூறினார். "நீங்கள் உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாகவே கைவிட்டு விடுங்கள்" என்று தம்மிடம் இந்திரா உறுதியாக கூறியதாகவும் அமிர் குறிப்பிட்டார். சுமார் இரண்டுமணிநேரமாக த.ஐ.வி மு தலைவர்களுடன் கலந்துரையாடிய இந்திராவும் அவரது ஆலோசகர்களான பார்த்தசாரதியும், அலெக்ஸாண்டரும், உலகில் வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றி தமக்கு விளக்கமளித்ததாக அமிர் கூறினார். அந்த நாடுகளில் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இதன்போது அலெக்ஸாண்டர் இந்திய ஒன்றியப் பிராந்திய அமைப்புக் குறித்துப் பிரஸ்த்தாபித்திருக்கிறார். அதனை உடனடியாக நிராகரித்த இந்திரா, அது முடியாது, வேண்டுமென்றால் இந்தியாவின் மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களை நாம் உதாரணமாகக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். த.ஐ.வி. மு தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இந்திரா, அதற்கு முதல்நாள் கருநாநிதி சென்னையில் ஆற்றிய உரையொன்றினை மேற்கோள் காட்டி, "உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினால் இப்போது நடந்திருக்கும் விபரீதத்தைப் பார்த்தீர்களா? இனி, தி.மு.க வினரும் தனித்திராவிட நாடு கோரிப் போராடப் போகிறார்கள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். கருநாநிதி தனது பேச்சில், "தி.மு.க கட்சி தனித் தமிழ்நாட்டிற்கான கோரிக்கையினை 1962 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தாலும் கூட, தனிநாட்டிற்கான தேவை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்று பேசியிருந்தார். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திரா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர் விமர்சித்திருந்தார். "தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கு ஒரு நாய்கூட ஏன் என்று கேட்கவில்லை" என்று கருநாநிதி பேசியிருந்தார். இந்திராவுடனான பேச்சுக்களின் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம் தனது கட்சி இந்திய மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்தோடு பேசும் என்று கூறினார். "பார்த்தசாரதியின் முயற்சியினால் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்றும் அமிர் கூறினார். "பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணையாளர் எனும் நிலையிலிருந்து இந்தியா தன்னை செயற்பாடு மிக்க மத்தியஸ்த்தராக உயர்த்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் கொழும்பிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்திய மத்தியஸ்த்தத்தினை எப்படியாவது உதறிவிட ஜெயவர்த்தன உறுதிபூண்டிருந்தார். குறிப்பாக பார்த்தசாரதியின் முயற்சியைத் தடம்புரள வைப்பதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவே, வழமைபோல தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடகத்துறையினை அவர் இதற்காக முடுக்கிவிட்டார். பார்த்தசாரதி மீது இருவகையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். முதலாவது, அவர் ஒரு தமிழர் ஆதலால் தமிழர்களுக்குச் சார்பாகவே அவர் முன்வைக்கும் தீர்வு இருக்கப்போகிறது என்பதால், நடுநிலையான, ஹிந்திபேசும் வட இந்தியர் ஒருவரை இந்திரா மத்தியஸ்த்தராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்தார். இரண்டாவது, பார்த்தசாரதி முயன்றுவரும் தமிழர்களுக்கான சுயாட்சியுள்ள பிராந்தியசபைகளை சிங்களவர்கள் முற்றாக நிராகரித்துள்ளதனால் அதனைப் பற்றிப் பேச முடியாது என்று அவர் வாதிட்டார். சிங்களவர்கள் வழங்க தயாராக இருப்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்றும் அவர் ஊடகங்களூடாக சமிக்ஞைகளை வெளியிட்டு வந்தார். இதற்கு மேலதிகமாக, தனது பிரதமரான பிரேமதாசாவை களத்தில் இறக்கிய ஜெயார், "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும் கொடுக்கமாட்டோம்" என்கிற தொனியில் கடுமையான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார். இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினைத் தடுக்க ஜெயார் மூன்றுவழி தடத்தினைக் கையாண்டார். அவற்றுள் ஒன்றுதான் பார்த்தசாரதி மீதான தாக்குதல்கள். இதுகுறித்து பின்னர்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்தி கைக்கொண்டிருந்த இரட்டை வழிமுறை குறித்துப் பார்க்கலாம். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் ஆயுதம் தரித்த சிங்களவர்களுடன் குடியேற்றத்திட்டத்தின் பிதாமகன் திம்புலாகல பிக்கு - 1984 அதில் முதலாவது பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள். பார்த்தசாரதி மீதான ஜெயாரின் விஷமத்தனமான தாக்குதல்கள், மட்டக்களப்பு சிறையுடைப்பு, தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்தும் ஜெயாரின் நடவடிக்கைகள், மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் ஆகியவை பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள் குறித்த அரசாங்கத்தின் கவனத்தையும், இந்தியா மற்றும் தமிழ்த் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்பி விட்டிருந்தது.பார்த்தசாரதியின் முயற்சிகள் இவற்றினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. புரட்டாதி , ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அமிர்தலிங்கம் உட்பட த.ஐ.வி.மு யினருக்கு ஒரு உண்மையினை உணர்த்தியிருந்தன. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்துவருவதுடன், போராளிகளுக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்றது என்பதுமே அது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிருக்கும் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமான பாத்திரத்தினை அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஐப்பசி மாதத்தின் இறுதிப்பகுதியில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் போராளி அமைப்புக்கள் தொடர்பாக அமிர்தலிங்கம் அதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடு மாறத்தொடங்கியிருந்தது தெரிந்தது. இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுக்களில் ஈடுபட ஜெயவர்த்தன விரும்பாத பட்சத்தில் தான் போராளிகளுடன் பேச வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "தமிழருக்கான தீர்வு குறித்து ஜெயவர்த்தன த.ஐ.வி. மு யினருடன் பேச விரும்பினால், அவர் முன்வைக்கும் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார். இதுவே போராளி அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மையான அமைப்பாக அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமாகும். அக்காலத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் டெலோ அமைப்பு இந்தியாவுக்கு நெருக்கமானதாகவும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணி இயங்குசக்தியாக உருவெடுத்தது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு இந்தியாவும் இன்னொரு காரணம். இனிவரும் அத்தியாயத்தில் இந்திரா காந்தி செயற்படுத்தி வந்த இரண்டாவதும், மறைவானதுமான பாதையாகிய தமிழப் போராளி அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிபற்றிப் பேசலாம். தமிழர் மீதான கலவரங்களைத் தொடர்ந்து சில நாட்களில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ இந்திரா காந்தியிடம் இலங்கைச் சூழ்நிலை குறித்து விளக்கியபோதே தமிழ் போராளி அமைப்புக்களுக்கு உதவுவது என்னும் முடிவினை இந்திரா எடுத்திருந்தார். இந்திராவுக்கு ஜெயவர்த்தன அனுப்பிய "காதல்த் தூது" இந்திராவை உடனடியாக இந்த இரண்டாவது பாதையினை எடுக்கத் தூண்டியிருந்தது. "கிழட்டு நரி" என்று இந்திராவினாலும் அவரது ஆலோசகர்களாலும் அழைக்கப்பட்ட ஜெயவர்த்தனவை அடிபணிய வைக்க ஒரேவழி அவரது அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதுதான் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆகவே, ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயனபடுத்தலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு தான் வழங்கும் பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை அமிர்தலிங்கத்திற்கு இந்தியா மறைத்தே வந்திருந்தது. ஆனாலும், போராளிகள் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டுவருவதையும், ஜெயாரின் அரசாங்கம் தன்னையும் தனது கட்சியையும் பலவீனப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிந்துகொண்டார். ஆகவேதான், புரட்டாதி 5 ஆம் திகதி தில்லிச் சந்திப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம் போராளி அமைப்புக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் இனை ஒத்த பாகத்தினை அவர்கள் வகிப்பதாகவும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஜெயவர்த்தன குறிப்பிடுவதுபோல தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அவர் கூறினார். தமிழ் மிதவாதத் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களை அடிபணியவைப்பதும், தமிழ்ப் போராளி அமைப்புக்களை சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுவந்த ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த பதிலடியாகவே அவரின் இந்தக் கூற்று அமைந்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் எனால்த் தரமுடியாது பாரத்தசாரதியிடம் திட்டவட்டமாகக் கூறிய ஜெயார் தமிழர்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை, அவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வு நோக்கி ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அழுத்துவதற்காகப் பணிக்கப்பட்ட பார்த்தசாரதி உடனேயே செயலில் இறங்கினார். முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அவர்களின் பக்க நியாயங்களைக் கேட்டறிந்தார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமிர்தலிங்கம் தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தை வரவேற்பதாகக் கூறியதுடன் இந்திரா காந்தி இந்தியப் பாராளுமன்றத்தில் பாவித்த சொற்பிரயோகமான "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" எனும் பதத்தை ஏற்றுக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனைகள் ஏதும் இல்லையென்றும் கூறினார். பிரிவினைக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை தான் விளங்கிக்கொள்வதாகவும், ஆகவே இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் முன்வைக்கப்படும் மாற்றுத்தீர்வொன்றினைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதுவரையில் தனிநாட்டிற்கான கொள்கையினைக் கைவிடப்போவதில்ல என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்கள் மீது மேலும் தாக்குதல்கள நடப்பதைத் தடுக்க இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். "தமிழர்கள் இலங்கையைக் கூறுபோட விரும்பவில்லை. சிங்களக் காடையர்களின் அக்கிரமங்களும், அரசாங்கத்தின் கொள்கைகளுமே இலங்கையைக் கூறுபோட எத்தனிக்கின்றன" என்று அமிர்தலிங்கம் கூறினார். "நாம் கேட்பதெல்லாம் தமிழர்களையும் சமவுரிமை உள்ள பிரஜைகளாக வாழவிடுங்கள் என்பதைத்தான்" என்ற் அவர் மேலும் கூறினார். பின்னாட்களில் என்னுடன் பேசிய அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும் பார்த்தசாரதியுடனான தமது கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, "தற்போது தனிநாட்டிற்கான மாற்றுத்தீர்வுக்கு நீங்கள் இணங்கியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வின் அடிப்படைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்" என்று கேட்டார். "அதனை தெளிவாகச் சொல்லுங்கள், அதுவே உங்களின் பேரம்பேசலின் நிலையாக இருக்கவேண்டும்" என்றும் கூறினார். பார்த்தசாரதி பேரம்பேசலின் அடிப்படைகளை இவ்வாறு வரையறை செய்தார், 1. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு உள்நாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும், சூழ்நிலைகளின் உணர்வுகளால் உந்தப்பட்ட தீர்வாக அமையலாகாது. 2. தனிநாட்டுக் கோரிக்கையினைக் காட்டிலும் குறைவான நிலையினை அது கொண்டிருக்கும் அதேவேளை, தமிழர்களின் அபிலாஷைகளையும் அது பூர்த்திசெய்வதாக அமைதல் வேண்டும். 3. தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உணர்வுரீதியாக கட்டமைக்கப்படலாகாது என்பதுடன், அவை சிங்களவர்களின் உணர்வுகளையும் பாதிக்காது அமைதல் அவசியம். 4. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பூகோள உறுதிப்பாடு ஆகியவற்றினை எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது. பார்த்தசாரதியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட முன்னணியினர் இருநாட்களின் பின்னர் தமது தீர்வுடன் வந்து அவரை மீண்டும் சந்தித்தனர். ஆனாலும், அவர்கள் முன்வைத்த தீர்வு பார்த்தசாரதியைத் திருப்திப்படுத்தவில்லை. "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்று முன்னணியினர் பாவித்த சொற்பதத்தை பார்த்தசாரதி நிராகரித்தார். இச்சொற்பதம் முற்றான சமஷ்ட்டி அமைப்பொன்றினை நோக்கி செல்லும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதனால் சிங்களவர்கள் நிச்சயமாக இதனை எதிர்ப்பார்கள் என்று அவர் கூறினார். டட்லியுடனான செல்வாவின் பேச்சுக்களின்போது பிராந்தியங்கள் எனும் சொற்பதத்தினை டட்லி ஏற்றுக்கொண்டிருந்தமையினால், அதனையே முன்னணியினர் பாவிக்கவேண்டும் என்று அவர் கூறினார். பின்னர், முன்னணியினர் தமது உத்தேச தீர்வு நகலில் இருந்து "பிராந்தியங்களின் ஒன்றியம்" எனும் சொற்பதத்தினை நீக்க அழுத்தம்கொடுத்து அதனை நீக்கிவிட்டார். மேலும், இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றினை மீறமாட்டோம் எனும் கூற்றினையும் முன்னணியினரை அழுத்தி நகலில் சேர்த்துக்கொண்டார். மேலும், முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, தமிழர்கள் தமது பிராந்தியங்களின் விவகாரங்களில் மட்டுமே கரிச்ணை கொள்ளாது மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களிலும் பங்கெடுத்து தேசிய அபிவிருத்தியிலும் பங்களிப்பைச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இராணுவம், பொலீஸ் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றிலும் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரதிநிதுத்துவத்தைக் கோரலாம் என்றும் அறிவுரை வழங்கினார். தனது அழுத்தங்களுக்கமைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தயாரித்துக் கொடுத்திருந்த "தமிழர்களின் கோரிக்கை" நகலை எடுத்துக்கொண்டு ஆவணி 25 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் பார்த்தசாரதி. அன்று மாலையே அவர் ஜெயவர்த்தனவைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுகளின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தான் மேற்கொண்ட பேச்சுக்கள் குறித்து விளக்கிய பார்த்தசாரதி, முன்னணியினர் தன்னிடம் கொடுத்திருக்கும் தமிழர்களின் பேரம்பேசலின் நிலை குறித்த உத்தேச நகல் குறித்தும் விபரித்தார். மேலும், தான் கொண்டுவந்த நகலை ஜெயாரிடம் கையளித்த பார்த்தசாரதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தன்னிடம் அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார். பார்த்தசாரதியிடம் பேசிய ஜயவர்த்தன, தமிழர்களுக்கிருக்கும் பிரச்சினை குறித்து 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தொண்டைமானின் உதவியுடன் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுக்களின்போதே தனது அரசாங்கம் அறிந்துகொண்டுவிட்டதாகக் கூறினார். ஆகவே, இப்பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளினை தனது அரசாங்கம் நடமுறைப்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான ஜூலைக் கலவரத்தின் பின்னணியினை பார்த்தசாரதிக்கு விளக்கிய ஜெயார், இவற்றுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், தமிழ்ப் பயங்கரவாதிகளும், இடதுசாரிகளும்தான் என்று அவர் குற்றஞ்சாட்டினார். தானோ, தனது அரசாங்கமோ, நாட்டுமக்களோ நாடு பிரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதும், அவற்றினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அப்பால் வேறு எந்த விட்டுக் கொடுப்பினையும் செய்ய தனது அரசாங்கம் தயாரில்லை என்று கூறிய ஜெயவர்த்தன, தனது அரசின் பேரம் பேசலின் நிலைகூட அதுதான் என்று உறுதியாக பாரத்தசாரதியிடம் கூறினார். ஜெயாருடனான சந்திப்பினையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சிறிமாவைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. இலங்கையின் ஒருமைப்பாட்டை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய சிறிமா, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிற கருத்தையும் முற்றாக நிராகரித்தார். சிறிமாவைச் சந்தித்த பின்னர் இரண்டாவது முறையாகவும் ஜெயாரைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. அவர் சிறிமாவைச் சந்தித்ததையும், சிறிமா அவரிடம் கூறியதையும் அறிந்துவைத்திருந்த ஜெயார், பார்த்தசாரதியைப் பார்த்து, "இப்போது, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்த சிங்களவரின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பொறுத்தவரையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஒரே நிலைப்பாடிலேயே இருந்தார்கள். அதாவது, எக்காரணத்தைக் கொண்டும் இலங்கையின் ஒருமைப்பாட்டினை விட்டுக்கொடுக்க முடியாது என்பதே அது. இதுவே சிங்கள மக்களின் பேரம்பேசலின் அடிப்படையாகவும் இருந்தது. பார்த்தசாரதியிடம் பேசிய ஜெயார், "தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக வேறு எதனையும் நான் தரப்போவதில்லை, இதுவே எனது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு" என்று மீண்டும் உறுதியாகக் கூறினார். மேலும், "அரசியல் அமைப்பில் விசேட சரத்துக்களைச் சேர்ப்பதனூடாக தமிழர்களுக்குத் தீர்வெதனையும் வழங்குவதை சிங்கள மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான திட்டங்களினூடாக மட்டுமே தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும்" என்றும் ஜெயார் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பார்த்தசாரதி, ஆவணி 26 ஆம் திகதி தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பரான பீட்டர் கியுனுமென்னைச் சந்தித்தவேளை தமிழரும் சிங்களவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று தாம் கருதும் விடயங்களில் மிகவும் வேறுபாடான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், தத்தமது நிலைப்பாடுகள் குறித்து ஆளமான மனோவியாதியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார். "இவர்களுக்கிடையில் பொதுவான தளம் ஒன்றினை என்னால்க் காண முடியவில்லை" என்று தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பர்களான டி சாரம் மற்றும் ராஜு குமாரசாமி ஆகியோருடன் பேசும்போது சலித்துக்கொண்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கை தொடர்பான இந்திராவின் இரட்டை வழிக் கொள்கை 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் கடைசி 10 நாட்களும், ஆவணி மாதத்தின் முதல்ப் 17 நாட்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்ததோ அதேயளவு முக்கியத்துவத்தை ஆவணி மாதத்தின் இரண்டாவது பகுதியும் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில்த்தான் இந்திரா காந்தி இலங்கை தொடர்பான தனது இரட்டை வழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தார். வெளிப்படையான இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான மறைமுக ஆயுத உதவியும் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே தோற்றம்பெற்றன. இந்திராவின் இந்த இருவழி செயற்பாடுகளுக்கு எதிராக ஜெயாரும் தனது பாணியில் மூன்றுவழி காய்நகர்த்தல்களை இக்காலத்தில் செய்யத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகள் என்று காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் பலமான இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது. தமிழ் மிதவாதிகளை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவது. தமிழ்ப் போராளிக் குழுக்களை அந்நியப்படுத்துவது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கவாதப் போராட்டமாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்வது. இறுதியாக தமிழ் ஈழத்தின் அடிப்படை பலப்பிரதேசத்தை இல்லாமலாக்குவது என்பனவே இந்திராவின் காய்நகர்த்தல்களை முறியடிக்க ஜெயார் முன்னெடுத்த செயற்பாடுகள் என்றால் அது மிகையில்லை. இந்திரா காந்தி தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வினை ஆவணி 17 ஆம் திகதி தான் ஜெயாருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பினூடாக ஆரம்பித்துவைத்தார். பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் (Press trust of India) பத்திரிக்கையாளரான தர்மராஜா, ஜெயாரை செவ்விகாணும் குழுவில் அன்று இடம்பெற்றிருந்தார். இந்திரா, ஜெயாரை தொலைபேசியில் அழைத்தபோது ஜெயாரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, உணர்ச்சிகளை தம்மால் காணக்கூடியதாக இருந்ததாக அவர் கூறினார். "அந்த வயோதிபர் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார், ஆனால் இந்தியாவை அவரால் எதுவுமே செய்யமுடியாது என்கிற இயலாமை அவரின் முகத்தில் தெரிந்தது. தனது சினத்தையும், இயலாமையினையும் ஒன்றுகூட்டி பின்வருமாறு அவர் பேசினார், " நாம் ஒரு சிறிய நாடு. இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்துதான் ஆகவேண்டும். எங்களைப்போன்ற சிறிய நாடுகள் எல்லாமே இவ்வாறான அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதென்பதே அவர்களின் விதியாகிப் போய்விட்டது" என்று கூறினார்". அன்று அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, "இந்திரா என்னுடன் பேசிய விடயத்தை பாராளுமன்றத்தில் கூறுவேன் " என்று கூறினார். அதன்படி அடுத்தவாரம் , புதன்கிழமை, ஆவணி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். இந்தியா மத்தியஸ்த்தத்தில் ஈடுபடப்போகிறதென்று ஜெயார் கூறியவேளை அங்கிருந்த அமைச்சர்களான காமினி ஜயசூரிய, காமிணி திசாநாயக, பிரேமதாச மற்றும் ரஞ்சித் அத்தப்பத்து ஆகியோர் உடனடியாக அதனை எதிர்த்தார்கள். இவர்களுள் காமிணி ஜயசூரியவே மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார். "நாம் இந்தியாவின் நல்லெண்ண மத்தியஸ்த்தத்தினை ஏற்றுக்கொள்வோமென்றால், நாம் கெளரவத்துடன் வீதிகளில் நடமாட முடியாது" என்று அவர் சினங்கொண்டு கூறினார். ஜயசூரியவின் பேச்சு ஜெயாரை உசுப்பேற்றியிருக்க வேண்டும், "முன்னாள்ப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க இந்தியாவின் மத்தியஸ்த்தம் வேண்டும் என்று கோருகிறார். பயங்கரவாதிகளுடன் பேசுங்கள், பார்த்தசாரதியை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுங்கள் என்று அவர் கேட்கிறார். ஆனாலும் அவரால் வீதிகளில் தாராளமாக நடந்துசெல்ல முடிகிறதே?" என்று ஆவேசத்துடன் கேட்டார் ஜெயார். செல்லையா இராஜதுரை பிரேமதாதாச பேசும்போது தமிழரின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதனை தம்மால் பார்த்துக்கொள்ளமுடியும் என்றும், இந்தியாவின் தேவையற்ற மத்தியஸ்த்தம் இலங்கையின் இறையாண்மையினை மீறும் செயல் என்றும் கூறினார். "நாம் நேரடியாகத் தமிழர்களுடன் பேசலாம், அவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை நாமே கண்டறியலாம். இந்தியா தலையிடுவதற்கு இங்கே எதுவும் இல்லை, அவர்கள் இதற்கு வெளியே இருப்பதே நல்லது" என்று கூறினார். பின்னர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த அரசுத்தரப்பு தமிழர்களான தேவநாயகம் மற்றும் இராஜதுரை ஆகியோரைப் பார்த்து, "இங்கிருக்கும் இவர்களுடன் நாம் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்" என்று கூறினார். பிரேமதாசா தம்மைப் பார்த்துக் கூறியதற்கு வேடிக்கையாகப் பதிலளித்த தேவநாயகம், "அப்படியானால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கேட்பதைக் காட்டிலும் அதிகமாக நான் கேட்டுவிடுவேன்" என்று கூறினார். பாராளுமன்றத்தில் இந்திய மத்தியஸ்த்தத்திற்குத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினைச் செவிமடுத்துவிட்டு இறுதியாகப் பேசிய ஜெயார், தான் பாரத்தசாரதியின் விஜயத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக சபையில் அறிவித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகளை பார்த்தசாரதி இந்தியாவில் ஆரம்பித்துவிட்டார் என்று கூறிய ஜெயார், மறுநாள் அவர் இலங்கைக்கு வருகிறார் என்பதையும் கூறினார். பாரத்தசராதியை இந்திரா இந்த நடவடிக்கைகளுக்குத் தெரிவுசெய்வதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்திராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகர் என்பதைவிடவும், பேரம் பேசலில் மிகச் சிறந்த இராஜதந்திரியாகவும் அவர் திகழ்ந்தார். பிணக்குகளின்போது சிறந்த தீர்வுகளை வழங்கிய அனுபவம், அரசியலமைப்பில் அவருக்கு இருந்த தேர்ச்சி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழராக அவரால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயலாற்ற முடியும் என்பதுடன் தமிழகத் தலைவர்களும் அவரின் தீர்மானங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற காரணமும் இந்திராவுக்கு பார்த்தசாரதியே இதற்குப் பொறுத்தமானவர் என்று எண்ண வைத்திருந்தது. பார்த்தசாரதி இதற்கு முன்னர் காஷ்மீர், மிசோரம் மற்றும் வியட்நாமியப் பிணக்குகளின்போது தீர்வுகளை வழங்கும் அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார். கோபாலசாமி பார்த்தசாரதி தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால், இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார். இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள், "நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார். குப்தா மேலும் கூறுகையில், தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது. ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும். இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஈழத்தமிழரின் அவலங்களை தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார். அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார். தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது. பிரபாகரனுடன் நெடுமாறன் 80 களின் இறுதிப்பகுதியில் ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன் உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது. தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன். கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன. தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது. அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்திய சுதந்திரதின விழாவில் விசேட அதிதியாக வரவேற்பளிக்கப்பட்ட அமிர்தலிங்கம் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது ஏற்பட்ட தோல்விகளையடுத்தே தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அமிர்தலிங்கம். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்வதென்று முடிவெடுத்திருந்தபோதிலும், ஜெயாருடன் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் தீவிரமாக முயன்று வந்ததாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை ஏற்றுக்கொள்ள தாம் முன்வந்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரங்களோ, போதிய நிதிவளமோ அற்றநிலையில் மாவட்ட சபைகள் பிரியோசனமற்ற ஒரு தீர்வென்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.மாவட்ட சபைகளுக்கான அதிகாரத்தையும், நடத்துவதற்கான நிதியையும் கேட்டபோது நாம் தாக்கப்பட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியாவும், சர்வதேச சமூகமுமே இன்று எம்மைக் காக்கமுடியும் என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக் கூறினார் அமிர். ஜெயவர்த்தன மீதும் அவரது அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையினை முழுமையாக இழந்துவிட்டோம். அவர்களுடன் பேசுவதில் இனிப்பயனில்லை. தமிழர்களை அழிக்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆவணி 14 ஆம் திகதி அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் சம்பந்தனும் இந்திராகாந்தியைச் சென்று சந்தித்தனர். இந்திராவின் ஆலோசகர் கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும், இந்திராவின் செயலாளர் பி. சி. அலெக்ஸாண்டர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டுமணி நேரம் அவர்கள் பேசினார்கள். பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அத்தீர்வில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் குறித்தும் பேசப்பட்டது. தமிழர்களின் பிரச்சினை தொடர்பான சுருக்கமான சரித்திரத்தை இந்திராவுக்கு விளக்கினார் அமிர். அகிம்சை வழியில் தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதன் தோல்வியும் அவருக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதே இன்று அவர்கள் முன்னாலிருக்கும் உடனடித் தேவை என்று அவர் கூறினார். "சுய அதிகாரம் மிக்க சமஷ்ட்டிக் கட்டமைப்பு ஒன்றினையே நாம் கோரினோம். அது மறுக்கப்பட்டதனாலேயே தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தோம்" என்று அவர் கூறினார். தமிழரின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை இந்திரா முன்வைத்தார். இலங்கையைப் பிரிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார் . ஒன்றுபட்ட இலங்கைக்குள், தனிநாட்டிற்குக் குறைவான சுய ஆட்சி உள்ள பிராந்தியங்கள் எனும் அடிப்படையில் தமிழர்கள் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அவர்களிடம் கூறினார் இந்திரா. "உங்களின் முதலாவது கோரிக்கையான சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கே செல்லுங்கள், இந்தியா உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தெரிவித்தார். என்னுடன் பின்னர் பேசிய சம்பந்தன், இலங்கையின் தமிழர் - சிங்களவர் பிணக்கில் இந்தியா எத்தரப்பையும் ஆதரிக்காது என்று இந்திரா தம்மிடம் உறுதிபடக் கூறியதாகச் சொன்னார். சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காதவகையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்குவது மட்டுமே இந்தியாவால் செய்யக்கூடியதும், செய்யவிரும்புவதும் என்று இந்திரா அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் கூறியிருக்கிறார். இலங்கையில் சுய கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் தமிழர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த தன்னால் முயற்சியெடுக்க முடியும் என்றும் இந்திரா கூறியிருக்கிறார். பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே இதனைச் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் இப்பேச்சுக்களின்போது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த பரிந்துரைகளை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்பட்டாலே போதும் என்று இந்திராவிடம் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியினால் அறியப்பட்ட விடயங்களை 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறிய அமிர்தலிங்கம் அதுகுறித்து இந்திராவுக்கு விளங்கப்படுத்தினார், தமிழர்களுக்கான தேசம், தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விளங்கப்படுத்தினார். பின்னர் ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜயவர்த்தனவுடனான தனது பேச்சுக்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் விளங்கப்படுத்தினார் இந்திரா. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்த ஜெயவர்த்தன இணங்கியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் அவர். ஆனால், இத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது அல்ல என்று ஹெக்டரிடம் ஏற்கனவே இந்திரா தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஏனைய தீர்வுகள் குறித்து ஆராய ஜெயார் இணங்குவதாக இந்திராவிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அனைத்துக் கட்சி மாநாடொன்றினைக் கூட்டப்போவதாக ஜெயார் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், ஜெயார் உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று அமிர் தலைமையிலான தூதுக்குழுவினரைப் பார்த்துக் கேட்டார் இந்திரா. இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், மன்னாரில் நடைபெற்ற த.ஐ.வி. மு யினரின் வருடாந்த மாநாட்டில் இலங்கையரசாங்கத்துடன் இனிமேல் பேசுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர் ஒவ்வொரு முறையும் கூறுவார், ஆனால் அவற்றினை ஒருபோதுமே அவர் நடைமுறைப்படுத்த மாட்டார் என்று ஜெயார் குறித்து இந்திராவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவுடன் 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தன எப்படி தனக்குச் சார்பாகக் கையாண்டார் எனும் விடயத்தை இந்திராவுக்குத் தெரியப்படுத்தினார் அமிர். "கடந்த காலத்தில் இலங்கையரசுடன் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினை நாம் முற்றாக இழந்துவிட்டோம்" என்று அமிர் கூறினார். பதிலளித்த இந்திரா, தானும் ஜெயவர்த்தனவை நம்புவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்காக ஜெயார் விடுக்கும் அழைப்பினை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். "நான் முன்னர் கூறியதுபோல, இப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மேசையினூடாகவே எட்டப்பட முடியும்" என்று மீண்டும் கூறினார் இந்திரா. இந்திராவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய அமிர்தலிங்கம், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான இணக்கத்தினைத் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் திடீர் மனமாற்றத்தையும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் இணக்கத்தையும் இந்திரா பாராட்டினார். மறுநாளான ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அப்படியில்லை அண்ணா, இந்திரா கூட சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்த்தான் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அமிர்தலிங்கத்திற்குக் கூறியிருக்கிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்க விரும்பிய இந்திரா ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜெயவர்த்தனவின் விஜயத்தின் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவாகியது. இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட இந்திய அதிகாரிகள், "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" தமிழருக்கான தீர்வொன்றையே பிரதமர் இந்திரா கோருவதாக குறிப்பிடச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்ட இலங்கையதிகாரிகள், "ஒன்றுபட்ட" இலங்கை எனும் பதத்தினை நிராகரித்து "ஓற்றை நாடான" எனும் பதத்தினை பாவிக்கக் கோரினர். நிலைமை சிக்கலடைவதை அவதானித்த இலங்கைக் குழுவின் தலைவர் ஹெக்டர், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அடக்கி வாசியுங்கள், இந்திராவின் வாயால் நாம் விரும்பாத சொற்களை வரப்பண்ணாதீர்கள் என்று கட்டுப்படுத்தினார். இந்திரா தனது எண்ணத்தை கூறும் அதிகாரத்தை நாம் கேள்விகேட்கக் கூடாது என்று கூறினார் அவர். இதனை ஜெயாரின் ஆலோசகரான பேர்ணாட் திலகரட்ணவும் ஆதரித்தார். அன்று மாலை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திரா உரையாற்றினார். ஜெயாரின் விசேட பிரதிநிதி ஹெக்டர் இந்தியா வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவருடனான பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்த இந்திய மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கரிசணை குறித்து தான் தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆராய ஜெயவர்த்தன ஆடி மாதத்தில் கூட்டவிருந்த சர்வகட்சி மாநாடு குறித்தும் பேசிய இந்திரா, அம்மாநாடு நடவாது போனமை குறித்தும் குறிப்பிட்டார். "அவர்கள் என்னிடம் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய இலங்கை ஆயத்தமாக இருப்பதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தி "பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களும் அரசாங்கம் சுமூகமான தீர்வுகுறித்துக் கலந்துரையாட முன்வரவேண்டும் என்று நான் எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யக் காத்திருப்பதாகவும் அவர்களிடம் கூறினேன். இரு நாடுகளுக்கும் இருக்கும் பாரம்பரிய உறவு முறையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செய்ய விரும்பு உதவிகள் குறித்த நன்றியை இலங்கை ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருக்கிறார். எமது உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்" என்றும் தெரிவித்தார் ஆவணி 12 ஆம் திகதி லோக்சபாவில் இந்திரா வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையினைத் தெளிவாகக் காட்டியிருந்தது. இந்திராவின் அறிக்கயில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை இலக்கணங்கள் இவ்வாறு இருந்தன, 1. பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழருக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். 2. வழங்கப்படும் தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துபவையாக இருக்க வேண்டும். மேலும், வெளி மத்தியஸ்த்தத்தின் உதவியினூடாகவே தீர்வு எட்டப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு காணப்படல் வேண்டும் என்றே இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஜெயார் அனுப்பிய பிரதிநிதி இலங்கை மீண்டபோது பல அமைச்சர்கள் இந்திராவினால் பாவிக்கப்பட்ட "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்திற்கெதிரான தமது கடுமையான ஆட்சேபணையினை வெளியிட்டார்கள். குறைந்தது "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்தினைப் பாவிக்கும்போது இலங்கையின் கரிசணைகளையாவது அறிக்கையினுள் உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், தனது முடிவில் தீர்க்கமாக நின்ற ஹெக்டர், இந்தியாவின் கொள்கைகளை அவர்கள்தான் முடிவெடுக்கமுடியும், இலங்கையர்கள் அல்ல என்று கூறிவிட்டார். தமிழர் மீதான அரச ஆதரவுடனான தாக்குதல் முடுக்கிவிடப்பட்ட நாளான ஆடி 25 ஆம் திகதி அமிர்தலிங்கமும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் நின்றிருந்தார்கள். மன்னாரில் நடைபெற்ற தமது வருடாந்த மாநாட்டில் இலங்கையரசுடன் பேரம்பேசலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். வவுனியாவில் இருக்கும்போது ஆவணி 29 ஆம் திகதி இந்திராவிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்று வந்திருந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்பதே இந்திராவிடமிருந்து வந்த அந்தச் செய்தி. ஆனால், அமிர்தலிங்கத்தால் வவுனியாவை விட்டு வெளியேற முடியவில்லை. வழியில் சிங்களவர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டால் அவர் கொல்லப்படுவது உறுதி எனும் நிலைமை காணப்பட்டது. ஆகவே, இந்தியத் தூதர் சத்வால் ஊடாக தான் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் மட்டுமல்லாமல் அவருடன் சிவசிதம்பரமும், சம்பந்தனும் கூடவே தில்லிக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சத்வால் செய்துகொடுத்தார். ஆவணி 6 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறாவது திருத்ததினூடான இலங்கைக்குள் தனியான நாடொன்றினை உருவாக்க முயலமாட்டோம் என்கிற சத்தியப்பிரமாணத்தை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால், அரச அதிகாரிகளான தமிழர்கள் இச்சத்தியப்பிரமாணம் குறித்து தமது விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டனர். இந்த விடயம் புலிகளின் உயர்பீடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்று பிரபாகரன் கருதினார். இச்சத்தியப்பிரமாணம் எந்த அர்த்தமும் கொண்டிருப்பதாக அவர் நினைக்கவில்லை. புதிய அரசியலமைப்பின் மேல் சத்தியப்பிரமாணம் செய்யும் தமிழ் அதிகாரிகள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இச்சத்தியப்பிரமாணத்தை ஒரு பிரச்சினையாக்குவதன் மூலம் அரச அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்கனவே முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இன்னொரு பிரச்சினையாக இதனை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறினார். தெற்கில் பணிபுரிந்துவந்திருந்த பல தமிழ் அதிகாரிகள் கலவரத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "எமது முடிவுகள் மூலம் அவர்களை வீதியில் நாம் எறிந்துவிடக் கூடாது" என்று அவர் உறுதியாகக் கூறினார். கந்தசாமி பத்மநாபா ஆனால், பத்மாநாபாவின் அமைப்பான ஈ.பி.ஆர்.எல் எப் வித்தியாசமான நிலைப்பாட்டினை எடுத்தது. சிங்கள அதிகாரத்துக்கெதிரான தமிழரின் நிலைப்பாட்டை அடையாள வழியிலாவது தமிழர்கள் காட்டவேண்டும் என்று பத்மநாபா கூறினார். அரசின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்மேல் சத்தியப்பிரமாணம் செய்து பதவியை நீடிக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் வாதிட்டார். ஈரோஸ் மற்றும் புளொட் அமைப்புக்கள் இதுகுறித்து எந்த முடிவினையும் எடுக்க மறுத்துவிட்டன. இவ்வமைப்புக்களின் தலைவர்கள் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். பத்மநாபாவின் முடிவினை ரமேஷ் தலைமையில் சிறிய போராளிக் குழுவொன்று நடைமுறைப்படுத்தியது. இந்தக் குழுவில் இருந்த ஏனையவர்களின் பெயர்கள், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன் மற்றும் இளங்கோ. அரச அலுவலகங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள். ஒரு பொலீஸ் ஜீப் உடபட சில அரச வாகனங்களை அவர்கள் எரியூட்டினார்கள். ஆனால், ஈ.பி.ஆர். எல். எப் இன் அரசுக்கெதிரான இந்தச் செயற்பாடுகள் எந்த விளைவினையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தமது பணிகளைத் தக்கவைப்பதே முக்கிய கரிசணையாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனமும் தமது ஊழியர்களை ஆறாவது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும்படி கேட்டிருந்தது. எனது படிவத்தில் கையொப்பமிட்டு எனது ஆசிரியரிடம் கையளித்தேன். கையொப்பமிட்ட எவருமே அதன்பின்னர் இந்த சத்தியப்பிரமாணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மிகக்கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அமிர்தலிங்கம் கொழும்பை வந்தடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்தே அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பில், இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அவர் பொறுப்பெடுக்கப்பட்டார். ஆவணி 11 ஆம் திகதி அவர் சென்னைக்குப் பயணமானார். அமிர்தலிங்கத்தை வரவேற்கவென தில்லியிலிருந்து வந்திருந்த இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் பி.வெங்கடசுப்பையா மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே. எஸ். பாஜ்பாய் ஆகியோர் சென்னையில் அமிரைச் சந்தித்தனர். எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியின் இரா செழியனும் அங்கு இருந்தார். சென்னையில் அன்றிரவு தங்கிய அமிர்தலிங்கம் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் தி.மு.க வின் தலைவர் மு கருநாநிதியையும் சென்று சந்தித்தார். மறுநாளான ஆவணி 12 ஆம் திகதி சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றார். ஹைதரபாத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவும் அமிருடன் பயணத்தில் இணைந்துகொண்டார். விமானத்தில் பயணித்தவாறே அமிரும் நரசிம்மராவும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். தில்லியில் விமான நிலைய கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நரசிம்மராவோ, அமிரை அங்கே அழைத்துச் சென்றார். கூடிநின்ற பத்திரிகையாளர் முன்னிலையில் அமிர் பேசினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயார் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கையினை நிராகரித்த இந்திரா அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைக்கவிருப்பதாக ஹெக்டர் கூறிய ஐந்து விடயங்களும் பின்வருமாறு இருந்தன, 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்துச் சட்டங்களும் முழுமையாக வழங்கப்படும். 2. அரசியலமைப்பில் தமிழும் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும் 3. வன்முறைகளைக் கவிடுவதாக தமிழர்கள் உறுதியளிக்குமிடத்து அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் 4. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தமிழர்கள் நிறுத்திக்கொள்ளுமிடத்து அவர்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்திக்கொள்ளப்படும். 5. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக விலக்கிக்கொள்ளப்படும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக, தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடுமிடத்து அவர்களுடன் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஹெக்டர், சிறைச்சாலைகளில் தடுத்துவைகப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அவர் விரும்புவதாவும் குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு பேசத் தொடங்கிய இந்திரா, அரசாங்கம் முன்வைத்த ஐந்து அம்சத் திட்டங்கள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திசெய்யப் போதுமானவையாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேம்படுத்த முன்வைக்கப்படும் ஆலோசனைகளை செவிமடுப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திராவிடம் கூறினார். ஹெக்டரிடம் பேசிய இந்திரா, தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பேசுவது அவசியம் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், தனிநாடு எனும் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிடாதவரை அவர்களுடன் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தமது அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த இந்திரா, தமிழர்களுடன் பேசும் விடயத்தை தம்மால் செய்யமுடியும் என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஹெக்டர், தான் ஜனாதிபதி ஜெயாருடன் இதுகுறித்துப் பேசிய பின்னரே கருத்துக் கூற முடியும் என்று கூறினார். பேச்சுக்களின் முடிவில் இந்திராவின் ஆலோசகர் நரசிம்மராவ் மற்றும் கோபாலசாமி பார்த்தசாரதி ஆகியோருடன் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவதுகுறித்து ஹெக்டர் ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆவணி 12 ஆம் திகதி இந்திராவுடன் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், இந்தியா பரிந்துரைத்த ஆலோசனை உதவிகளை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி ஜெயார் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். சரித்திர காலம் தொட்டு இரு நாடுகளுக்கு இடையே இருக்கின்ற நெருங்கிய உறவின் அடிப்படியில் இந்திரா செய்ய முன்வந்திருக்கும் உதவிகளுக்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஜெயவர்த்தன தன்னிடம் தெரிவித்ததாக ஹெக்டர் இந்திராவிடம் கூறினார். மேலும், இந்தியாவின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டும் என்கிற ஜெயாரின் கோரிக்கையினை இந்திராவிடம் முன்வைத்தார் ஹெக்டர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திரா பின்வருமாறு கூறினார், "தற்போது மிகவும் அவசியாமானது என்னவென்றால் பதற்றத்தினைத் தணித்து, நம்பிக்கையினை ஏற்படுத்துவதுதான். சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எவ்வித அச்சமும் இன்றி, ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் தமக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையொன்று உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று கூறினார். மேலும், ஹெக்டருடனான பேச்சுவார்த்தைகள் குறித்து தனது பாராளுமன்றத்தில் தான் பேசவிருப்பதாகவும், இலங்கை ஏதாவது விடயம் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றத்திற்கு கூறவிரும்பின், அதுகுறித்தும் தன்னால் பேசமுடியும் என்றும் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தனது தம்பியை இந்திராவிடம் தூதனுப்பிய ஜெயார் ஜெயாருடன் தொலைபேசியில் பேசிய இந்திரா, ஆவணி 5 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக்கிய ஆறாவது திருத்தம் குறித்துப் பேசினார். இத்திருத்தச் சட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழர்கள் பங்குபற்றுவதே கடிணமாகிவிட்டிருப்பதாகக் கூறிய அவர், தீர்வுதொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் இலங்கையரசு பேசுவதற்கான ஒழுங்குகளை இந்தியா செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்குச் சம்மதித்த ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு தனது விசேட பிரதிநிதியாக தனது இளைய சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவை ஓரிரு வாரங்களில் அனுப்புவதாக உறுதியளித்தார். மேலும், தனது சகோதரர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர் என்றும், அரசியல் யாப்பில் வித்தகர் என்றும் புகழுரைத்தார். அன்று மாலை இந்திய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் கலையும் மாலை வேளையின்போது ஜெயாருடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து இந்திரா உறுப்பினர்களுக்கு அறியத் தந்தார். அங்கு பேசிய இந்திரா, இலங்கையின் ஜனாதிபதி ஒரு வார காலத்திற்குள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் சமாதானம் ஆகியவற்றை தமிழருக்கான தீர்வினூடாக அடைவது குறித்து ஆராய விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாகக் கூறினார். ஆவணி 11 ஆம் திகதி தில்லியைச் சென்றடைந்த ஹெக்டர் ஜெயவர்த்தன, இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆவணி 11 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பொழுது, அண்மையில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இந்திய மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக இந்திரா காந்தி ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியா எப்போதும் இவ்வாறான வன்முறைகள், படுகொலைகள், பாகுபாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் என்று எடுத்துரைத்த இந்திரா, தம்மைக் காக்க வழியின்றி இருக்கும் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். பின்னர், இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாடு போன்றவற்றை இந்தியா மதிக்கிறது என்று இந்திரா ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் உறுதியளித்தார். "இந்தியா இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை. ஆனாலும், இரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் சரித்திர காலம் தொட்டு கலாசார தொடர்புகளைக் கொண்டுள்ளதனால், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருப்பதனால், அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறினார் இந்திரா. இதற்குப் பதிலளித்த ஹெக்டர், நிலைமைகள் வேகமாக வழமைக்குத் திரும்பிவருவதாகவும், பெரும்பாலான அகதிகள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும் கூறினார். மேலும், வீடுகளை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வன்முறைகளின்போது அழிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்களை கைய்யகப்படுத்தவென அரசு அமைத்த அதிகார சபையினை தமிழரின் சொத்துக்களை மீள கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று இந்திராவிடம் கூறினார் ஹெக்டர். தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தி சிங்களவர்களுக்குக் கொடுத்துவருவதாக வந்த செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறக்கணித்தார் அவர். தொடர்ந்து பேசிய இந்திரா, பிரதமரின் தேசிய துயர் துடைப்பு நிதியத்தின் ஊடாக பத்து மில்லியன் ரூபாய்களை இந்திய அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க விரும்புவதாக ஹெக்டரிடம் கூறினார் . மேலும், இதற்கு மேலதிகமாக பொதுமக்களின் நன்கொடைகளும் வந்து குவிந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "தற்போதிருக்கும் அவலநிலைக்கான உடனடி நிவாரணங்களை வழங்கும் அதேவேளை, தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்ய, நிரந்தரமான தீர்வுபற்றிப் பேசுவதை கால தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஜனாதிபதி ஜெயார் இதுதொடர்பாக ஏற்கனவே செயலில் இறங்கியிருப்பதாகக் கூறினார். இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு, அனைத்து மக்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் அரவணைத்துச் செல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். அதன்பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை எட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெயார் முன்வைக்கவிருக்கும் ஐந்து அமசத் திட்டம் குறித்து இந்திராவிடம் விபரித்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நிச்சயமாக நொச்சி, சேமித்து வைத்திருக்கிறேன். உங்களின் ஆதரவிற்கு நன்றி
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயாருடன் இரண்டாவது முறையாகவும் பேசிய இந்திரா ஆறாம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரண்டு உடனடி விளைவுகள் ஏற்பட்டன. முதலாவதாக, இந்திரா காந்தி தனது இரண்டாவது தொலைபேசி அழைப்பினை 6 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 12 மணித்தியாலங்களுக்குள் ஜெயாருடன் ஏற்படுத்தியிருந்தார். இரண்டாவது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆவணி 6 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தில் பாராளுமன்றத்தை விட்டு விலகி இந்தியாவில் அடைக்கலமாவது என்று தீர்மானித்தனர். இந்த விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடுமையான தாக்கத்தினையும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய திருப்பத்தையும் ஏற்படுத்தின. இந்த விளைவுகளும் ஜெயாரின் இளைய சகோதரரான ஹெக்டர் வோல்ட்டர் ஜெயவர்த்தன்வுடனான இந்திராவின் பேச்சுவார்த்தைகளும் தமிழர்களின் பிரச்சினைக்கான அடித்தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், இதன்மூலம் ஏற்படுத்தப்பட்ட தீர்வு தொடர்பாக இந்தியா இன்றுவரை உறுதியாகவே இருந்து வருகிறது (2005). ஹெக்டர் வோல்ட்டர் ஜெயவர்த்தன ஒரு வெள்ளிக்கிழமை, ஆவணி 5 ஆம் திகதி இந்திரா காந்தி ஜெயாரை இரண்டாவது முறை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரது தொலைபேசி அழைப்பிற்கு இரு நோக்கங்கள் இருந்தன. முதலாவது இந்தியாவே பிராந்தியந்தின் வல்லரசென்று ஜெயாரை உணரவைப்பது. இரண்டாவது, தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைத் தேடுவதில் இந்தியாவுக்கான பங்கினை உறுதிப்படுத்திக்கொள்வது. தனது வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவை ஒருவாரத்திற்கு முன்னர் வரவேற்று அவருடன் கலந்துரையாடியதற்காக ஜெயாருக்கு நன்றி தெரிவித்தார் இந்திரா. மேலும், இலங்கையில் மீண்டு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயார் எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும், பிராந்தியத்தில் அமைதியை பேணுவது அவசியம் என்று ஜெயாரிடம் கூறிய இந்திரா, தமிழருக்கான தீர்வினை வழங்குவதன் ஊடாகவே பிராந்தியத்தின் அமைதியினை உறுதிப்படுத்தவியலும் என்றும் கூறினார். தமிழருக்கான தீர்வினை உருவாக்குவதும், இலங்கையில் ஸ்திரத்தன்மையினை உருவாக்குவதுமெ இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அவசியமானது என்று அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இந்திராவிற்குப் பதிலளித்த ஜெயார் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டறியும் நோக்கத்தில் தான் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகவும் ஆடி 20 ஆம் திகதி தான் சர்வகட்சி கூட்டமொன்றினைக் கூட்ட எத்தனித்ததாகவும் பின்னர் அக்கூட்டம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கலவரங்கள் ஆரம்பித்துவிட்டதாகவும் கூறினார். ஆவணி 3 ஆம் திகதி அமைச்சரவையில் தனது உரையினை மேற்கோள் காட்டி ஜெயார் பேசினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஆறாம் திருத்தச் சட்டத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை பாராளுமன்றத்தில் இருந்து ஓரங்கட்ட முயன்ற ஜெயார் இந்த விவாதத்தின்போது அமிர்தலிங்கமோ அல்லது ஏனைய த.ஐ.வி.மு தலைவர்களோ பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்கள் அவ்வேளை வவுனியாவில் இருந்தார்கள். அவர்களது கட்சியின் வருடாந்த மாநாடு ஆடி 21 முதல் 23 வரை மன்னாரில் நடக்க ஏற்பாடாகியிருந்து. பின்னர் ஜூலை 25 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதென்று முடிவாகியிருந்தது. நாட்டில் தமிழர் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததையடுத்து அவர்கள் ஆவணி 10 ஆம் திகதிவரை வவுனியாவிலேயே தங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்திற்கோ அல்லது சிவசிதம்பரத்திற்கோ கொழும்பிற்குத் திரும்பிச் செல்வதற்கு வீடுகள் இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லம் ஜூலை 25 ஆம் திகதியும், சிவசிதம்பரத்தின் இல்லம் ஜூலை 24 ஆம் திகதி இரவும் எரியூட்டப்பட்டிருந்தன. சிவசிதம்பரத்தின் மனைவியும் பிள்ளைகளும் தமது வீட்டு மதிலினால் ஏறி அயலவர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்து பின்னர் அகதிகள் முகாமிற்குச் சென்றிருந்தனர். 10 ஆம் திகதி தனது நெருக்காமன நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் மறுநாளே சென்னைக்குக் கிளம்பிச் சென்றார். சென்னைக்குக் கிளம்பும் முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் இலங்கையில் தாக்கப்பட்டுவரும் தமிழரைக் காக்க ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினை அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரிவிட்டே விமானம் ஏறினார். ஜெயார் கொண்டுவந்த ஆறாவது திருத்தத்திற்கு எதிராகப் பேசிய ஒரே அமைச்சர் தொண்டைமான் மட்டுமே. அமிர்தலிங்கத்தையும் த.ஐ.வி.மு கட்சியையும் அவர் ஆதரித்துப் பேசினார். இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினை எட்டுவதற்கு அமிர்தலிங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். அவரின் முயற்சிகளைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தவறியமைக்காக சிங்களத் தலைமையினை அவர் கண்டித்தார். ஆறாவது திருத்தத்தினை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு கட்சியினர் அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டினை மேலும் தீவிரமாக்குவார்கள் என்றும் தொண்டைமான் அரசாங்கத்தை எச்சரித்தார். தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உண்மையாகவே விரும்பினால் தமிழ் மிதவாதிகளுடன், குறிப்பாக த.ஐ.வி.மு யினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "நீங்கள் த.ஐ.வி.மு கட்ட்சியினரைத் தடைசெய்து, அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து விலகும்படி அழுத்தம்கொடுத்தபின்னர் யாருடன் தமிழரின் பிரச்சினை குறித்துப் பேசபோகிறீர்கள்? த.ழி.வி.மு அணியினரைத் தடைசெய்வதும் தமிழரை தடைசெய்வதும் ஒன்றுதான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா?" என்றும் அரசாங்கத்தைப் பார்த்து தொண்டைமான் கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற ரீதியில் தொண்டைமான் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் தமிழர் மீதான தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட ரீதியிலேயே நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது, "எமது எண்ணத்தின்படி, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட காடையர் கும்பல்கள் வன் முறைகள், தாக்குதல்கள், கொள்ளையிடல்கள், தீவைப்புக்கள் ஆகிய நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. தமிழர்கள் மீது நாசகாரத் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இந்தக் கும்பல்கள் மிகவும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் தமது அக்கிரமங்களை செயற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்ததோடு, இக்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கினை கொண்டிருந்ததையும் காண் முடிந்தது". பாராளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த ஒரேயொரு கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத் முத்துட்டுவேகம பேசுகையில், தமிழர் மீதான தாக்குதல்கள் அனைத்தும் அரச ஆசீர்வாதத்துடனேயே நடத்தப்பட்டதாகக் கூறினார். "அரசாங்கத்தின் அனைத்துக் கருவிகளும் இந்த வன்முறைகளில் பாவிக்கப்பட்டன. நான் கெளரவ அமைச்சர் தொண்டைமானைப் பார்த்துக் கேட்கிறேன், இந்த அக்கிரமங்களில் ஈடுபட்ட கும்பல்கள் சுதந்திரமாகவும், தடுப்பாரின்றியும் வீதிகளில் வலம்வந்ததாகக் கூறினீர்களே, அவர்கள் இடதுசாரிக் கட்சியினரின் உறுப்பினர்களா என்பதைக் கூறமுடியுமா? அப்படியில்லையென்றால், அவர்கள் வேறு யாராவதா? அவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழிநடத்தியிருந்தார்களா? உங்களது அறிக்கையின் உண்மையான அர்த்தத்தினை இந்தச் சபையில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று உங்களைத் தாழ்மையுடன் கேடுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். சுமார் 13 மணிநேர விவாதத்திற்குப் பின்னர் ஆவணி 5 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஆறாம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு இரண்டாவது முறையாக இந்திரா காந்தி ஜெயாருடன் தொலைபேசியில் உரையாடினார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை எச்சரிக்கும்வகையில் வெளிவிவகார அமைச்சர் ஹமீத் அவர்கள் ஆடி 27 மற்றும் ஆவணி 3 ஆம் திகதிகளில் கூறிய விடயங்களை இந்திரா காந்தி ஜெயாருடனான தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டார். இவ்விரு நாட்களிலும் பாராளுமன்றத்தில் பேசிய ஹமீத் அவர்கள் ஆறாம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு அணியினரை பாராளுமன்றத்தை விட்டு வெளியே தள்ள அரசு முயல்வதாகவும், இது இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களில் இழுத்துவிட்டு தமிழருக்கான தீர்வினை வழங்குவதில் இந்தியாவின் அழுத்ததத்தினை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், த.ஐ.வி.மு யினர் ஆறாம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்கும் முன்பே இந்தியா தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கையில் தலையிட வேண்டியதாயிற்று. ஆறாம் திருத்தச் சட்டத்தினை ஒட்டி த.ஐ.வி.மு அணியினர் தமது தீர்மானத்தை ஆவணி 6 ஆம் திகதி எடுத்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரொனி டி மெல்லின் துரோகிகள் மத்தியூவின் பேச்சினைத் தொடர்ந்து ஜெயாரின் இன்னொரு இனவாத அமைச்சரான காமிணி ஜயசூரிய பேசினார். "அண்மையில் நடந்த வன்முறைகள் தன்னிச்சையாகவும், எழுந்தமானமாகவும் நடந்ததாகவும் நான் நம்பவில்லை. இது நீண்டகாலமாக வடக்குப் பயங்கரவாதிகள் எம்மீது தொடர்ச்சியாக திட்டமிட்ட ரீதியில் நடத்திவந்த அழிவுதரும் நாசகார தாக்குதல்களுக்கு பதிலடியாக சிங்கள மக்கள் நடத்திய தாக்குதல்களாகவே நான் பார்க்கிறேன்" என்று கூறினார். நிதியமைச்சர் ரொனி டி மெல்லின் பேச்சு இவர்களிடமிருந்து சற்று வேறுபட்டிருந்தது. வன்முறைகளினால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். வடக்கில் தனியான நாட்டிற்கு தூபமிடும் துரோகிகளுக்கும், வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லையென்று அவர் கூறினார். "இந்த நாட்டிற்கு அதிகமான அழிவினை ஏற்படுத்தியவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இந்த நாட்டைப் பிளவுபடுத்த முனைபவர்களா அல்லது இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர்களா என்று எனக்குப் புரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இவர்கள் இருவருமே துரோகிகள் தான், ஆகவே இவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார். ஒன்று இரண்டு தனித்து ஒலித்த குரல்களைத்தவிர 13 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்த விவாதங்களில் தொடர்ச்சியாகப் பேசிய ஜெயாரின் அமைச்சர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அதன் தலைவரையும் துரோகிகள் என்று குற்றஞ்சாட்டியதுடன் தமிழ் இளைஞர்களைத் தவறாக வழிநடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டினர். ஈழம் எனும் நச்சு விதையினை இளைய சமுதாயத்தின் மனங்களில் அவர்கள் விதைக்கிறார்கள் என்றும் கூறினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறுபான்மையினரை வன்முறைகள் ஊடாக வழிக்குக் கொண்டுவருவது பெரும்பானமையினரின் உரிமை - சிறில் மத்தியு ஆறாவது திருத்தத்தினை முன்வைத்து உரையாற்றினார் பிரதமர் பிரேமதாச. தமிழர்களைச் சீண்டும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. சிங்கள இனத்தின் சரித்திரம், அந்த இனத்தின் நாகரீக வளர்ச்சி, அதனூடாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி, இலங்கையில் பெளத்தத்தை வளர்க்கவும் அதனைக் காக்கவுமென்று கெளதம புத்தரே தமது இனத்திடம் கொடுத்திருக்கும் பாரிய பொறுப்பு என்று தனது இனத்தையும், மதத்தையும் மட்டுமே முன்னிறுத்தி அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனது பேச்சின் ஒரு இடத்தில் சிங்கள இனம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்களைத் தொடர்ச்சியாக முறியடித்து வெற்றிகொண்டு வருவதாகவும், சிங்களவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என்றும் கூறினார். 13 இராணுவத்தினரின் மரணத்திற்குப் பழிவாங்க சிங்கள மக்கள் தன்னெழுச்சியுடன் நடத்திய தமிழர்கள் மீதான படுகொலைகளை தான் புரிந்துகொள்வதாகவும் அது இயல்பானதுதான் என்றும் நியாயப்படுத்தினார். மேலும், தமிழர்கள் மீதான தாக்குதல்களின் பின்னர் சிங்கள மக்களின் கோபம் அடங்கியிருக்கும் என்று தான் கருதுவதாகவும், ஆகவே இனிமேல் அவர்கள் அமைதியடையலாம் என்றும் உரைத்தார். இறுதியாக, அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்போகும் புதிய மாற்றம் தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாகவே அழித்துவிடும் என்றும் சூளுரைத்தார். தனது உரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீது கடுமையான விமர்சனத்தை பிரேமதாச முன்வைத்தார். அக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் அரசாங்கத்துடன் இணங்கி நடக்கவேண்டும் என்றும், தனது இரட்டை முக நாடகத்தைக் கைவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தெற்கில் சிங்களவர்களுக்கு நல்லவர் என்கிற இனிய முகத்தையும், வடக்கே செல்லும்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகத்தையும் அவர் அணிவதைக் கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார். பிரேமதாசவின் உரையினை மேற்கோள் காட்டி டெயிலிநியூஸ் பின்வருமாறு தலைப்பிட்டிருந்தது, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கான பாதை இனி மூடப்படும் - பிரதமர்". பிரேமதாசவைத் தொடர்ந்து பேசிய சிறில் மத்தியு, அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, காமிணி ஜயசூரிய ஆகியோர் தமது பங்கிற்கு தமிழர்கள் மீதான தமது வெறுப்பினை தமது பேச்சுக்களில் கொப்பழித்து உமிழ்ந்தனர். ஆனால், அவர்கள் அனைவரினதும் பேச்சுக்களின் சாராம்சம் ஒன்றுதான், அதாவது தமது இராணுவத்தினரில் 13 பேரைப் புலிகள் கொனறதற்காக சிங்கள மக்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு நடத்திய எதிர்வினையே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் என்பதும், அது நடத்தப்பட்டது இயல்பானது தான் என்பதும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்வதற்கான இரண்டு காரணங்களை முன்வைத்து சிறில் மத்தியூ பேசினார். முதலாவது காரணம், சிங்களவர்கள் நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதனால், அவர்களுக்கே நாட்டினை ஆளும் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது என்று வாதாடினார். தனது வாதத்திற்கு ஆதரவாக மலேசியாவின் மகதிர் மொகம்மட்டின் பூமி புத்திர கட்சியினரை உதாரணமாகக் காட்டிப் பேசினார். மலேசியாவில் மலே முஸ்லீம்கள் மட்டுமே நாட்டினை ஆளமுடியும் என்கிற கொள்கையினை மகதீர் மொகம்மட்டின் பூமி புத்ர (மண்ணின் மைந்தர்கள் மட்டுமே அந்த மண்ணை ஆள முடியும்) எனும் இனவாதக் கட்சி தனது பிரதான கொள்கையாகக் கொண்டு இயங்கிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழர்களும் சீனர்களும் மலேசியாவை விட்டு நீங்க நேர்ந்தால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் மலேசியர்களுக்கு நாடென்று வேறு எதுவும் இல்லையென்று மகதீர் மொகம்மட் வாதாடி வந்தார். எந்த இனம் ஒன்று தான் வாழும் நாட்டை விட்டால் வேறு வாழ்வதற்காக நாடொன்றினைக் கொண்டிருக்கவில்லையோ, அந்த இனமே தான் வாழும் நாட்டின் உண்மையான மைந்தர்கள் என்றும், அந்த நாட்டின் பெரும்பான்மையினரான அம்மக்கள் கூட்டமே அந்நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கும் உரிமைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் மகதிர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். தொடர்ந்து பேசிய மத்தியு, வெறும் 53 வீதம் மட்டுமே உள்ள மலேசிய முஸ்லீம்கள் அந்த நாட்டினை ஆளவும், அனுபவிக்கவும் முடியுமென்றால் 70 வீதம் சனத்தொகையினைக் கொண்டிருக்கும் இலங்கையின் சிங்களவர்களே இந்நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கும் உரிமையினையும் ஏன் பெற முடியாது என்று கேள்வி எழுப்பினார். நாட்டின் பெரும்பான்மையின மக்களே மொத்த நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கவும் முடியும் என்கிற நிலையில், பெரும்பான்மையின மக்களின் நாட்டின் மீதான அதிகாரத்தினை சிறுபான்மையின மக்கள் கூட்டங்கள் ஏற்க மறுக்கும்போது அவர்களை அடிபணிய வைத்து வழிக்குக் கொண்டுவர வன்முறையினைப் பாவிப்பது எந்தவிதத்திலும் குற்றமாகாது என்று அவர் வாதாடினார். சிறுபான்மையினரை வழிக்குக் கொண்டுவர பெரும்பான்மையினம் வன்முறையில் ஈடுபடுவது அவர்களுக்கு இருக்கும் தடுக்க முடியாத உரிமை என்று அவர் கூறினார். தனது வாதத்திற்கு வலுச்சேர்க்க மலேசியாவில் சீன இனத்தவர் மீது மகதீர் மொகம்மட்டின் பூமி புத்ர கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்ட மத்தியு, "சீனர்களின் ஆதிக்கத்தை அடித்து உடைப்பதற்கு மலேசிய முஸ்லீம்களுக்கு ஆறுநாட்கள் தேவைப்பட்டது. சீனர்களின் செல்வாக்கினை ஆறு நாட்களின் பின்னர் பொறுமையிழந்தே முஸ்லீம்கள் அடக்கினார்கள். ஆனால், இங்கே தமிழர்களின் அட்டகாசத்தினை 10 வருடங்களாக சிங்கள மக்கள் பொறுமையாக சகித்து வந்திருக்கிறார்கள். அதன்பின்னரே, தமது உரிமையினைப் பாவித்து தமிழர்களுக்குப் பாடத்தைப் புகட்ட எண்ணினார்கள்" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிதவாதத் தமிழ்த் தலைமையினையும், போராளி அமைப்புக்களையும் ஒரே நேரத்தில் அழித்துவிடக் கங்கணம் கட்டிய ஜெயார் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான பத்திரிக்கையாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக பிற்பகல் நடைபெற்ற இக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். இதற்கு முதல்வாரத்தில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர் மீதான வன்முறைகளையடுத்து என்னால் கலந்துகொள்ள முடியாமற் போயிருந்தது. 1978 ஆம் ஆண்டு ஆனந்த திஸ்ஸ டி அல்விஸினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான வாராந்த பத்திரிக்கையாளர் மாநாடுகளில் ஒன்றைத்தவிர அனைத்து மாநாடுகளிலும், 1997 இல் நான் இளைப்பறும் வரை கலந்துகொண்டே வந்திருந்தேன். அங்கு பேசிய ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஆறாம் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மறுநாளே வக்களிப்பிற்கு விடப்படும் என்று கூறினார். அனைத்துக் கட்சி பாராளுமன்ற வட்டமேசை மாநாடு குறித்த ஜெயவர்த்தனவின் அறிக்கை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதனை தனது பின்னேரச் சேவையில் ஒலிபரப்ப, பத்திரிக்கைகள் மறுநாள் காலை செய்தியாக அதனை வெளியிட்டிருந்தன. ஆவணி 4 ஆம் திகதி காலை அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவின் முன்னால் உத்தேச ஆறாம் திருத்தத்தைச் சமர்ப்பித்தார். இரு காரணங்களை முன்வைத்து ஜெயாரினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. முதலாவதாக நக்சலைட்டுக்களின் சதியே தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம் என்கிற தனது புனைவினை ஒரு செய்தியாக தனது அரச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. இரண்டாவதாக மிதவாதாத் தமிழ்த் தலைவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிட்டு தமிழ்ப் போராளிகளை இராணுவ பலத்தைக் கொண்டு அழித்துவிடுவது குறித்து தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் பேசிய ஜெயார் ஆறாம் திருத்தச் சட்டத்ததின் அடிப்படையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சத்தியப்பிரமாணம் செய்து பேச்சுக்கு வந்தால் ஒழிய அவர்களுடன் பேசபோவதில்லை என்று கூறினார். மேலும், மிக விரைவில் தமிழ்ப் போராளிகளை தான் அழித்துவிடுவதாகவும் சூளுரைத்தார். ஆவணி 4 ஆம் திகதி, வியாழன் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. சம்பிரதாய கேள்வி பதில் நேரம் முடிந்தவுடன், வழமையான பாராளுமன்ற விதிமுறைகளை மீறி, 6 ஆம் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து உடனடியாகவே அதனை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஜெயாரின் அரசு இறங்கியது. வழமையான பாராளுமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்றக் கூட்டங்கள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத் தக்கது. பிரதமர் ரணசிங்க பிரேமதாச பின்வரும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார், "இலங்கை ஒரு சுதந்திரமான, இறையாண்மையுள்ள, ஒருமித்த நாடாக இருக்கும் நிலையில் அதன் சுதந்திரத்தையும், இறையாண்மையினையும், நில உறுதிப்பாட்டையும், ஒற்றுமையினையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். இந்நிலையில், இலங்கையின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், நில உறுதிப்பாட்டிற்கும் தனிநபர்களோ, அரசியற்கட்சிகளோ, அமைப்புக்களோ சவால் விடும் தறுவாயில், அவற்றினைத் தடுக்கவும், இச்செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும், அதன்படி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று தெரிவிக்கிறேன்", 1. இலங்கையினுள் தனியான நாட்டினை உருவாக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ, இலங்கையினுள்ளோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ உதவும், பணம் வழங்கும், பிரச்சாரம் செய்யும், ஊக்குவிக்கும் தனிநபரோ அல்லது அமைப்போ முற்றாகத் தடைசெய்யப்படுவர். 2. எந்தவொரு அரசியற்கட்சியோ அல்லது அமைப்போ இலங்கையினுள் தனியான நாடொன்றினை உருவாக்குவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்க முடியாது. 3. மேலே பகுதி 1 இல் குறிப்பிட்டுள்ளதன்படி நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர், தனது சிவில் உரிமைகள் முடக்கப்பட்டு 7 வருடங்கள் சிறைத்தண்டனையினை அனுபவிக்க நேரிடும். மேலும், நீதிமன்றத்தினால் குற்றவாளியென்று அடையாளம் காணப்படுபவரினதும், அவரது குடும்பத்தினது அசையும் , அசையா சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும் பகுதி 1 இன் படி குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அல்லது அதற்கு நிகரான பதவியில் இருப்பவராக இருந்தால் அவரது பதவி பறிக்கப்படும். 4. இப்பகுதி 12 உப பகுதிகளைக் கொண்டிருந்ததுடன், அவற்றில் அரசியற் கட்சிகளைத் தடைசெய்வது, அவர்களின் சிவில் உரிமைகளை முடக்குவது உட்பட பல தண்டனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆறாவது திருத்தச் சட்டம் கீழ்க்கண்டவாறான "உறுதிமொழி" கூற்றினைக் கொண்டிருந்தது, "..........ஆகிய நான், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனைக் காத்து நிற்பேன் என்று உண்மையாகவும் நேர்மையாகவும் உறுதிமொழி வழங்குகிறேன். மேலும், இலங்கை எனும் நாட்டினுள் இன்னொரு தனிநாட்டினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையினுள் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ உதவவோ, பணம் வழங்கவோ, பிரச்சாரம் செய்யவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன் என்றும் உறுதி வழங்குகிறேன்”.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1983 ஜூலை இனவழிப்பின் பின்னரும் தமிழரைத் தொடர்ச்சியாக வஞ்சித்துவந்த ஜெயவர்த்தன தமிழர் மீதான தனது அரசாங்கத்தின் தாக்குதல்களை மூடிமறைக்க முயன்றுவந்த அதேவேளை, தமிழர்களை தொடர்ந்து ஒடுக்கும் கைங்கரியத்திலும் ஜெயார் இறங்கியிருந்தார். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் தமிழர்களை அவர் வஞ்சித்து வந்தார். பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் பொருளாதார ரீதியில் மூன்று வழிகளில் தமிழர்களை அடக்க அவர் எண்ணினார். முதலாவது புறக்கோட்டை மொத்த வியாபாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழர்களை புறந்தள்ளி வியாபரங்களைச் சிங்களவர்களின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது.இரண்டாவது, அழிக்கப்பட்ட தமிழர்களின் வியாபார நிறுவனங்களின் பங்குகளைச் சிங்களவர்களுக்குக் கையளிப்பது. மூன்றாவது தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களை கையேற்று சிங்களவர்களுக்கு வழங்குவது. இலங்கையின் வர்த்த செயற்பாடுகளில் பெட்டா எனப்படும் புறக்கோட்டைப் பகுதியே முக்கிய இடமாக விளங்கியது. ஒடுங்கிய, சனநெரிசல் மிகுந்த 4 ஆம் 5 ஆம் குறுக்குத்தெருக்கள் மற்றும் கெய்ஸர் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த மொத்த வியாபார நிலையங்களிலேயே இலங்கையின் பெரும்பாலான நுகர்வுத் தானியமான அரிசி உட்பட பல தானிய வகைகள் பெருமளவில் விற்கப்பட்டு வந்தன. இந்த வர்த்தகம் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதியைக் குறிவைத்துத்தான் ஜூலை 25 ஆம் திகதி காலை தாக்குதல்களை ஜெயவர்த்தனவின் குண்டர்கள் நடத்தினார்கள். அப்பகுதியெங்கும் நெருப்பாறு போலக் காட்சியளித்ததாக அங்கிருந்து உயிர்தப்பிய தமிழ் அரிசி வர்த்தகர் ஒருவர் அச்சத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இப்பகுதிக்கு அண்மையாக அமைந்திருந்த பிரதான வீதியும், ஏனைய குறுக்கு வீதிகளும் புடவை வியாபாரத்திற்குப் பெயர்பெற்றவை. இந்த வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதி மீது இரண்டாவது தாக்குதலை ஜெயாரின் குண்டர்கள் நடத்தினார்கள். இப்பகுதியில் இருந்த 442 தமிழருக்குச் சொந்தமான கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டதுடன், இப்பகுதியில் தங்கி பணிபுரிந்த பல தமிழர்களை சிங்களவர்கள் கொன்றார்கள். பிற்காலத்தில் டுப்லிகேஷன் வீதியில் அரிசி மொத்த விற்பனை நிலையம் ஒன்றினை லலித் அதுலத் முதலி திறந்துவைத்தார். சுமார் 50 மொத்த வியாபார நிலையங்களைக் கொண்டிருந்த இந்த புதிய கட்டடத் தொகுதியைத் திறந்துவைத்ததன் நோக்கமே தமிழர்களின் கைகளிலிருந்த அரிசி வர்த்தகத்தைக் கைப்பற்றி சிங்களவர்களின் கைகளில் ஒப்படைப்பதுதான். ஆவணி 3 ஆம் திகதி இத்தொகுதியைத் திறந்துவைத்த அதுலத் முதலி, தமிழர்கள் அரிசி வர்த்தகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் விலை நிர்ணயம் செய்துவருகிறார்கள் என்றும் பெரும் லாபமீட்டலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், பெரும்பாலான பெட்டா பகுதி தமிழ் வியாபாரிகள் தமது வர்த்தகத்தை மீள நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சுமார் 70 முதல் 80 வீதமான வர்த்தகம் மீண்டும் தமிழர்களின் கைகளுக்குள் வந்திருந்தது. மீதியில் பெரும்பகுதியை முஸ்லீம் வர்த்தகர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். லலித்தின் அரிசி மொத்த விற்பனை நிலையத் திறப்பின் பின்னர், இன்னொரு அமைச்சரான அனந்த திஸ்ஸ் டி அல்விஸ் தமிழர்களுக்குச் சொந்தமான தொழிற்றுரைகளை சீரமைக்கும் யோசனைபற்றி அறிவித்தார். "வர்த்தக அமைச்சர் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் அரிசி வர்த்தகத்தை உடைப்பதற்கான மார்க்கங்களை மேற்கொண்டு வருகிறார். ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடம் அரிசி விற்பனை கட்டுப்பாட்டில் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல" என்று அல்விஸ் கூறினார். அதன் பின்னர், தமிழர்களின் வியாபாரங்களை சீரமைப்பது குறித்த செய்தியை வெளியிட்ட அல்விஸ், வியாபார நிறுவனங்களில் தமிழர்கள் வாங்கும் பங்குகளின் அளவு மட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், தமிழர்களின் வியாபாரங்களைக் கைப்பற்றவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் அல்விஸ் எடுத்த முயற்சிகள் இந்தியாவின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டின் ஜூலை தமிழினக் கொலையின்போது அரசாங்கத்தின் ஆசியுடன் அழிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான வியாபாரங்களையும், வீடுகளையும் அபகரிக்கவென்று ஜெயாரின் அரசு "வியாபார நிலையங்களையும் வீடுகளையும் புணரமைக்கும் அதிகார சபை" எனும் அமைப்பை உருவாக்கியது. அரசின் எண்ணப்படி, இந்த நிறுவனம் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளையும், வியாபார நிலையங்களையும் தனது உரிமையாக்கிக்கொள்ளும் அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அமிர்தலிங்கமும், இந்தியாவும் இந்த பொறுப்பேற்றல் முயற்சிக்கெதிராக கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். தமிழர்களின் சொத்துக்களைக் களவாட ஜெயார் முனைவதாக அவர்கள் நம்புகிறார்கள் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கூறியிருந்தார். அமிர்தலிங்கம் தம்பதிகள் அமிர்தலிங்கம் ஜெயாருக்கு எழுதிய கடிதத்தில் சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற மீதியை ஜெயார் கொள்ளையிடப் பார்க்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் ஆட்சேபணையும் இலங்கை தனது நடவடிக்கையைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளியிருந்தது. ஜெயாரின் அரசு வெளியிட்ட அறிக்கையில், அழிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான வியாபாரங்களையும், வீடுகளையும் தமிழர்கள் சார்பாக அதிகார சபை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்தது. இச்சொத்துக்கள் பிறரால் அபகரிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது கூறியது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டினால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். இடிக்கப்பட்ட எனது வீட்டினை மீளக் கட்ட நான் விரும்பினேன். ஆகவே, சொத்துக்களைப் புணரமைக்கும் அதிகார சபையிடம் எனது வீட்டினை எனக்கே தருமாறு நான் விண்ணப்பித்தேன். நான் விண்ணப்பித்தவாறே எனது வீடும் எனக்குக் கிடைத்தது. அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் தமிழர்களைச் சேர்த்துக்கொள்வதை ஜெயார் முற்றாகத் தவிர்க்க விரும்பினார். இதனைச் செய்வதற்காக பொலீஸாரினால் குற்றமற்றவர் என்று சான்றிதழ் ஒன்றினைத் தமிழர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை அறிமுகப்படுத்தினார். அரச திணைக்களம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிக்கும் தமிழர் ஒருவர் எந்தவொரு போராளி அமைப்புடனும் தொடர்பற்றவர் என்று அப்பகுதிப் பொலீஸாரிடமிருந்து நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்று கோரப்பட்டது. தனியார்த்துறையும் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தங்களை விதித்தது. கல்வித்துறையில், தமிழ்ப் பாடசாலைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்ப் பாடசாலைகளுக்கு புதிதாக ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவதை கல்வியமைச்சு நிறுத்திவைத்தது. தமிழ்ப் பாடசாலைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களை சிங்கள ஆசிரியர்களைக் கொண்டு அது நிரப்பியது. சில தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்கள அதிபர்கள் கல்வியமைச்சால் அமர்த்தப்பட்டனர். குருநாகலை தமிழ் வித்தியாலயம் இன்றுவரை சிங்கள அதிபர் ஒருவரின் கீழேயே இயங்கி வருகிறது (2004). அரசியலில் தமிழர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் அரசியல் யாப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் மூலம் முடுக்கிவிடப்பட்டன. தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஜெயாரின் பதிலடியாக இது இருந்தது. தமிழர்களின் உணர்வுகளை, எதிர்வினையினை ஜெயவர்த்தனவோ அல்லது வேறு எந்தச் சிங்களத் தலைவரோ ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. பெரும்பான்மையினரான சிங்களவர்களின் விருப்பங்களை மட்டுமே முன்னிறுத்திச் செயற்பட்ட இவர்கள், இந்த விருப்புக்களைத் தொடர்ச்சியாக தமிழர்கள் மீது பலவந்தமாகத் திணித்து வந்தனர். அமைச்சர் லலித் அதுலத் முதலி தலைமையிலான ஒரு குழு ஆறாம் திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகத் தயாரித்து வந்தது. உத்தேச அரசியல் அமைப்பின் திருத்தச் சட்டம் உடனடியாகவே அரசியலமைப்பு நீதிமன்றுக்குப் பரிசீலிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆவணி 2 ஆம் திகதி இந்த உத்தேசத் திருத்தத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், அதில் இரு பகுதிகள் அரசியலமைப்புடன் ஒத்துப் போகாமையினால் திருத்தப்பட வேண்டும் என்று திருப்பியனுப்பியது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவை ஆவணி 3 ஆம் திகதி ஆராய்ந்தது. இதன்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தான் எண்ணியிருப்பதாக அமைச்சரவையில் அறிவித்தார் ஜெயார். ஆறாம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க விரும்புவதாக அவர் அறிவித்தார். "ஆடி 20 ஆம் திகதி, அனைத்துக் கட்சி வட்டமேசை மாநாடு ஒன்றிற்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். இக்கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதே எனது நோக்கம். வடக்கிலிருந்து இராணுவத்தை மீளப்பெறுதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்தத் தீர்வு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், துரதிஷ்ட்டவசமாக அனைத்து அரசியற்கட்சிகளும் இக்கூட்டத்தை புறக்கணித்ததோடு தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் சந்தர்ப்பத்தினையும் நிராகரித்துவிட்டார்கள்" என்று கூறினார். லலித் அதுலத் முதலி அரசியலமைப்பு நீதிமன்றம் 6 ஆம் திருத்தச் சட்டத்தின் இரு பகுதிகளை மாற்றுமாறு பரிந்துரை செய்தபோதிலும் அதனை மாற்றாது அப்படியே ஏற்றுக்கொள்வது என அமைச்சரவை தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து இதனைச் சட்டமாக்க அது நினைத்தது. அதற்கேற்ப 6 ஆம் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆவணி 4 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதென்று முடிவுசெய்யப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களிடையே அடிபட்டுப் போன ஜெயாரின் இடதுசாரிகளின் சதி எனும் புனைவு ஜெயாரின் இடதுசாரிகளின் சதிப்புரட்சி எனும் புனைவை எவருமே நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்கள், சிங்கள எதிர்க்கட்சிகள், வெளிநாட்டு நிருபர்கள், சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் என்று அனைவருமே ஜெயாரின் சூழ்ச்சியை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டனர். பினான்சியல் டைம்ஸ் நிருபர் ஜோன் எலியட் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "மிகக் கொடூரமான சமாளிப்பு" என்று விவரித்திருந்தார். சென்னையில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அமிர்தலிங்கம் ஜெயாருக்கு எழுதிய கடிதத்தில், "தம்மீதான தாக்குதல்களின் பின்னால் இருந்தது இடதுசாரிகள் என்பதை தமிழர்கள் சிறிதும் நம்பவில்லை. உங்கள் அரசு மீது மேற்குலகிலிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளித்து, அனுதாபம் தேடவே நீங்கள் இடதுசாரிப் புரட்சி குறித்து பேசுகிறீர்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்" என்று எழுதினார். 1983 ஆவணி 12 ஆம் திகதி ஏசியா வீக் சஞ்சிகைக்குப் பேட்டியளித்த சிறிமா இடதுசாரிகளின் சதி எனும் ஜெயாரின் புனைவை முற்றாக நிராகரித்தார். "இது நிச்சயமாக இனரீதியிலான வன்முறைகள் தான். எவராவது இது இனவாதம் அல்ல, மாறாக வேறு ஒரு காரணத்தால் நடத்தப்பட்டது என்று கூறுவார்களாயின் அவர்கள் கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள் என்பதே பொருள் " என்று கூறினார். மேலும், இந்த வன்முறைகளின் பின்னால் இருந்தது ஜெயவர்த்தனவின் அரசே என்றும் அவர் கூறினார். சர்வதேச ஜூரிகளின் அமைப்பு ஜெயாரின் இடதுசாரிகளின் சதி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஜெயாரின் அரசாங்கம் கூறுவதை உறுதிப்படுத்த எதுவிதமான சாட்சியங்களும் காணப்படவில்லை என்று கூறியிருந்தது. மேலும் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கமே தம்மீதான தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்புகிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. அத்துடன், தம்மீது நடத்தப்பட்ட இனரீதியிலான தாக்குதல்களுக்காக மொத்த சிங்கள இனத்தையும் தமிழர்கள் பொறுப்பாளிகளாகக் கருதவில்லை என்றும் அது தெரிவித்திருந்தது. அரசியல் வன்முறைகளும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் என்கிற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் கனனாத் ஒபயசேகர கூறுகையில், "நான் சந்தித்த ஒவ்வொரு தமிழரும் தம்மீதான தாக்குதலை ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கமே நடத்தியதை உறுதியாக நம்புகிறார்கள்" என்று கூறுகிறார். ஜெயாரின் இடதுசாரிகளின் சதிப் புனைவு விசாரணைகளின் முடிவு பூச்சியமாக இருந்தது. கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சி தலைவர்களுக்கும் நக்சலைட் சதிக்கும் இடையே தொடர்புகள் எதனையும் கண்டுபிடிக்க முடியாமையினால் அவர்கள அனைவரையும் இரு மாதாகத்திற்குள் அரசு விடுதலை செய்திருந்தது. அக்கட்சிகள் மீதான தடையும் இருமாத காலத்தின் பின்னர் நீக்கப்பட்டது. ஜே வி பி யினருக்கெதிரான தடையினை ஜெயார் வேண்டுமென்றே நீட்டித்து வைத்திருந்ததாக லயனல் போபகே கூறுகிறார். தனது அரசாங்கத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க ஜெயார் செய்த சர்வஜன வாக்கெடுப்பு முறைகேடுகளுக்கெதிராக ஜே வி பி யின் ரோகண விஜேவீர கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். ஆகவே, அவரையும் அவரது கட்சியினையும் தடைசெய்வதன் மூலம் நீதிமன்ற நகர்வுகளில் ரோகண விஜேவீர கலந்துகொள்வதை ஜெயாரால் தடுக்க முடிந்தது. ஈற்றில் வழக்கைத் தாக்கல் செய்த ரோகண வழக்கிற்குச் சமூகமளிக்காததால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ரோகண விஜேவீர வழக்கிற்குச் சமூகமளிக்க மறுப்பதால் அவரது அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுவதாகவும் அரசாங்கம் நியாயம் கற்பித்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தனது அரசைக் கவிழ்க்க இடதுசாரிகள் செய்த சூழ்ச்சியே இனக்கலவரம் என்று பொய்யுரைத்த ஜெயார் இடதுசாரிகளின் சதியே தாக்குதல்களின் மூலகாரணம் என்கிற ஜெயாரின் சூழ்ச்சியினை பல ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தி ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பயங்கரவாதத்தின் அரசியல் எனும் புத்தகத்தை எழுதிய சிங்க ரணதுங்க எனும் ஆய்வாளர் இடதுசாரிகளின் சதிபற்றிய யோசனையினை ஜெயாருக்குக் கொடுத்தவர் உதவிப் பொலீஸ் மா அதிபராகவிருந்த ஏர்னெஸ்ட் பெரேராவே என்று கூறுகிறார். வியாழன் அன்று பொலீஸ் மாதிபர் ருத்ரா ராஜசிங்கத்துடன் ஜெயாரைச் சந்திக்கச் சென்றவேளையே ஏர்னெஸ்ட் பெரேரா இந்த இடதுசாரிகளின் சதி எனும் சூழ்ச்சியை ஜெயாருக்கு வழங்கியிருக்கிறார். ஏர்னெஸ்ட் பெரேரா ராஜன் ஹூலின் தகவல்களின்படி, அன்றிரவு ஜெயார் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையினை அவரது வாசஸ்த்தலத்திலிருந்து பார்த்துவிட்டு இரவு 9 மணியளவிலேயே ருத்ரா ராஜசிங்கமும், ஏர்னெஸ்ட் பெரேராவும் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. வெள்ளி காலை 6 மணிக்கு ஏர்னெஸ்ட் பெரேராவை தனது வாசஸ்த்தலத்திற்கு அழைத்த ஜெயார், இடதுசாரிகளின் சதிபற்றிய அறிக்கையினை ஏர்னெஸ்ட் பெரேரா பேச தனது பிரத்தியேக் காரியாதிரிசி மூலமாக அதனைத் தட்டச்சுச் செய்துகொண்டார். பின்னர், அதனைப் பல பிரதிகள் எடுத்துக்கொண்ட ஜெயார், தனது முப்படைப் பிரதானிகளுக்கு வழங்கியதோடு அதன் ஒரு பிரதியை தன்னை அன்று காலை உணவின்போது சந்திக்க வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவிடமும் கையளித்தார். ராவிடம் இடதுசாரிகளின் சதியென்று தான் புனைந்த சூழ்ச்சியின் பிரதியொன்றை ஜெயார் கையளித்ததன் மூலம் தாக்குதலுக்கும் தனது அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று நிரூபிக்க முயன்றிருந்தார். சனிக்கிழமை அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஊடாக இடதுசாரிகளே தமிழர் மீதான தாக்குதல்களின் பின்னால் இருந்தார்கள் என்று அறிவித்ததன் மூலம் மேற்குநாடுகளின் அழுத்தங்களை குறைக்க ஜெயார் முயன்றார். நக்சலைட்டுக்கள் தொடர்பான தனது புனைவினை ஜெயார் சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தியதன் மூலம் தானோ தனது அரசோ தாக்குதலில் ஈடுபடவில்லையென்றும், தனது அரசுமீதே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் காட்ட முனைந்தார். தனது அரசாங்கம் கவிழ்க்கப்படப்போகிறது, தனது இராணுவத்தின் ஒருபகுதியினர் தனது அரசுக்கெதிரான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனங்கள் தோன்றியிருப்பதாக நாடகமாடிய ஜெயார், தான் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரை இவற்றின் காரணமாகவே நான்கு நாட்கள் தாமதத்திற்குப் பின்னர் வழங்கவேண்டியதாயிற்று என்றும் கூறியிருந்தார். நக்சலைட்டுக்களின் சதி என்கிற ஜெயாரின் சூழ்சிக்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான லயனல் போபகே விசாரணையாளர்களிடம் பேசும்போது தமது அமைப்பின் தலைவரான ரோகண விஜேவீரவை தலைமறைவாக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்ததாகவும், அதனை இச்சூழ்ச்சியின் மூலம் அவர் நிறைவேற்றிக்கொண்டதாகவும் கூறினார். 1982 ஆம் ஆண்டு தனது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க ஜெயார் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்ததனால் அந்த முடிவுகளை இரத்துச் செய்யக்கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ரோகண விஜேவீர வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் வெற்றிபெரும் வாய்ப்பு விஜேவீரவுக்குப் பலமாக இருந்தது. ஆனால், விசாரணையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க விஜேவீர மறுத்ததனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பையே கடைப்பிடித்தது. விசாரணைகளின்போது நக்சலைட்டுக்களின் புரட்சியை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்ற நிலையில் நவ சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் கட்சிகளின் மீதான தடையும் நீக்கப்பட்டது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருந்துவந்தது. கம்மியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய டியு குணசேக்கரவின் கட்டுரை ஒன்றின் பகுதியை இங்கே பதிவிடுகிறேன், குணசேக்கர "எங்களை நீர்கொழும்பு சிறைச்சாலையில் 56 நாட்கள் தடுத்து வைத்திருந்தபின் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தார்கள். ஆனால் மறுநாள் காலையிலேயே எமது கட்சியின் பீட்டர் கியுனுமன் மற்றும் கே பி டி சில்வா ஆகியோரை தொலைபேசியில் அழைத்த ஜெயார், இனப்பிரச்சினைக்கான தீர்விற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தார். ஜெயாரைத் தவிர வேறு எவராலும் இப்படி எம்மை நடத்த முடியாது". "கெளரவ ஜனாதிபதி அவர்கள் அன்று மிகவும் கண்ணியமாக, பெருமனதுடன் நடந்துகொண்டார். தனது வாசஸ்த்தலாமான வோர்ட் பிளேசில் இருந்து கிளம்பிச்சென்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருந்த எமது கட்சியின் தலைவர்களை நேரே சென்று சந்தித்தார். எந்தவித காரணங்களும் இன்றி எமது கட்சியைத் தடை செய்து, எமது தலைவர்களைச் சிறைப்படுத்திய அவரது சூழ்ச்சியை அவரது மனச்சாட்சியே தட்டிக் கேட்டிருக்கும். அதனாலேயே எதுவும் நடவாதது போல எம்மை அணுகி தீர்விற்கான ஆலோசனைகளை அவர் கேட்டிருந்தார். ஜெயாரின் ஆட்சி அப்படித்தான். ஜெயாரின் அனைத்துச் சதிகளிலும் மிகவும் கொடூரமான கறுப்பு ஜூலைக் கலவரங்கள். அதனால் நாடு இன்றுவரை துன்பத்தை அனுபவித்து வருகிறது" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழினக்கொலையின் பழியினை இடதுசாரிகள் மீது சுமத்திய ஜெயார் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளில் இருந்தும் மனிதவுரிமை அமைப்புக்களிடமிருந்தும் எழுந்து வந்த கண்டனங்களால் ஜெயார் கலவரமடைந்தார். மேலும், ஜூலை 27 ஆம் திகதி இந்திரா காந்தியிடமிருந்து அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவரது கவலையினை இரட்டிப்பாக்கியிருந்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக தனது முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் ஆகியோரை தன்னை வந்து உடனடியாகச் சந்திக்குமாறு பணித்தார். இரவிரவாக நடந்த நீண்ட ஆலோசனைகளின் பின்னர் அவர்கள் பின்வரும் முடிவுகளை எடுத்தார்கள். முதலாவது, இலங்கைக்கு நட்புப் பாராட்டும் நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது. இரண்டாவது நடந்த தாக்குதல்கள் குறித்து அடக்கி வாசிப்பது அல்லது மூடி மறைப்பது. இந்த ஆயுதக் கொள்வனவு குறித்து நான் விலாவாரியாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். நடத்தப்பட்ட தாக்குதல்களை மூடிமறைப்பதற்காக, அத்தாக்குதல்கள் அரச ஆதரவுபெற்ற குண்டர்களினால் அல்லாமல் வேறு ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டதாக காட்டவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, இத்தாக்குதல்களை இடதுசாரிகள், கம்மியூனிஸ்ட்டுக்கள், நக்சலைட்டுக்கள் ஆகியோரின் தலையில் போட்டுவிட்டால் மேற்குநாடுகள் அடங்கிவிடும் என்று ஜெயார் நினைத்தார். மனிதவுரிமை அமைப்புக்களின் விமர்சனம் குறித்து ஜெயார் ஒருபொழுதும் கவலைப்பட்டது கிடையாது. மனிதவுரிமைவாதிகளை அவர் இடதுசாரிகள் அல்லது கம்மியூனிஸ சித்தார்ந்தவாதிகள் என்றே அழைத்து வந்தார். இதேவகையான நடைமுறையினைத்தான் பிற்காலத்தில் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா குமாரதுங்கவும் செய்தார். புலிகளை இடதுசாரிப் பயங்கரவாதிகள் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தியதன் மூலம், தமிழர்மீது தான் நடத்திய இராணுவ அட்டூழியங்களுக்கெதிரான சர்வதேச அழுத்தத்தினை அவரால் எட்டத்தில் வைத்திருக்க முடிந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. தமது கைங்கரியத்தை மறைப்பதற்காக, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட மூலகாரணத்தை புதிதாக உருவாக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆனால், ஆரம்பமுதலே தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதல், தமது இராணுவ வீரர்களில் 13 பேர் திருநெல்வேலியில் புலிகளால் கொல்லப்பட்டமைக்கான தன்னெழுச்சியால் உந்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்றே அரசாங்கம் நியாயப்படுத்தி வந்திருந்தது. தற்போது, அதனை மாற்றவேண்டிய கட்டாயம் ஜெயாருக்கு ஏற்பட்டது. ஆகவேதான், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதலுக்கான மூலகாரணம் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இடதுசாரிகள் நடத்திய சதியே என்று நிறுவவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் அதன்படி, ஜூலை 27 ஆம் திகதி, முதலாவது வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கான மூலகாரணம் பற்றிக் குறிப்பிட்டார்.தமிழ்ப் பயங்கரவாதிகளால் சிங்களவர்கள் மீது நடத்தப்பட்ட பல படுகொலைகளுக்குப் பழிவாங்கும் தன்னெழுச்சியான நடவடிக்கையே இத்தாக்குதல்கள் என்று அவர் நியாயப்படுத்தினார். ஜூலை 28 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பேசிய ஜெயார் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகள், ராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமிழ்ப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகளுக்கான எதிர்வினையே என்று குறிப்பிட்டார். "எவரின் உந்துதலும் இல்லாமல் சிங்கள மக்கள் தாமாகவே தமிழர்களுக்கான தண்டனையினை வழங்கினார்கள்" என்று அவர் கூறினார். ஜூலை 29 ஆம் திகதி பேசிய பிரதமர் பிரேமதாச, தமிழர்கள் மீதான தாக்குதல்கள் காட்டுத்தீ போல் பரவிய வதந்திகளால் ஏற்பட்டவை என்று கூறினார். வெள்ளி மாலை வரை, அரசாங்கத்தைத் தூக்கியெறிய இடதுசாரிகள் நடத்திய சதிபற்றி எவருமே வாய்திறக்கவில்லை. ஆனால், மறுநாள் சனிக்கிழமை, ஜூலை 30 ஆம் திகதி இந்த இடதுசாரிச் சதி புனைவுகளை அரசு சிறிது சிறிதிதாக வெளிக்கொணர ஆரம்பித்தது. சனியன்று பேசிய அமைச்சர் ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ், தமிழர் மீதான தாக்குதல்களை மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தியவர்கள் மூன்று இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே என்று அடித்துக் கூறினார். அம்மூன்று கட்சிகளையும் பின்வருமாறு அவர் பெயரிட்டார், மக்கள் விடுதலை முன்னணி ( ஜே வி பி), கம்மியூனிஸ்ட் கட்சி, நவ சம சமாஜக் கட்சி ( என் எஸ் எஸ் பி). தொடர்ந்து பேசிய ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ், இடதுசாரிகளின் அரசைக் கவிழ்க்கும் சதி மூன்று பாகங்களைக் கொண்டிருந்தது என்று கூறினார். முதலாவது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே வன்முறைகளைத் தூண்டிவிடுவது. இரண்டாவது சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வன்முறைகளைத் தூண்டிவிடுவது. மூன்றாவது சிங்கள பெளத்தர்களுக்கும் சிங்களக் கிறீஸ்த்தவர்களுக்கும் இடையில் வன்முறைகளைத் தூண்டிவிடுவது. அன்றே அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியும் வானொலியும் இடதுசாரிகளின் சதிபற்றிச் செய்திகளைக் காவிவரத் தொடங்க அரசின் பத்திரிக்கைகள் மறுநாள், ஜூலை 31 ஆம் திகதி தமது தலைப்புச் செய்தியாக இதனை வெளியிட்டன. இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும் அவசரகாலச் சட்டட்த்திற்கூடாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் இக்கட்சிகளுடன் இணைவோர், ஆதரவு தருவோர் போன்றவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும், அவரது சொத்துக்களும், சிவில் உரிமைகளும் முற்றாகப் பறிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அல்விஸ் ஊடாக ஜெயார் புனைந்த இடதுசாரிகளின் அரசைக் கவிழ்க்கும் சதிபற்றிய விரிவான கதைகளை அரச ஊடகங்கள் தம் பங்கிற்குக் காவிவந்தன. ரோகண விஜேவீர இந்த அமைப்புக்களுக்கான தடை ஜூலை 30 ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் அதன் தலைவர்களும் அன்றே கைதுசெய்யப்பட்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனைத்து இடைநிலை தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்குப் பெயர் போன நான்காம் மாடியில் அடைத்துவைக்கப்பட்டனர். இதனையடுத்து அதன் தலைவர் ரோகண் விஜேவீர தலைமறைவானார். ஆவணி 4 ஆம் திகதி அரச பாராளுமன்றக் குழுவினரிடம் பேசிய ஜெயார், இடதுசாரிகளின் சதியினை நக்சலைட்டுக்களின் இரண்டாவது சதி என்று அழைத்தார். அவரே புனைந்த இச்சதிக்கு இன்னொரு பகுதியினையும் சேர்த்துக்கொண்ட ஜெயார், அதனை நான்கு படி சதிப்புரட்சி என்று அழைத்தார். ஜெயாரின் கூற்றுப்படி, சதியின் நான்காவது படி இராணுவத்தினர் சிலரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழினப் படுகொலை மூலம் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஜெயவர்த்தன தமிழர்கள் தம்மை ஒரு இனமாக உணர்ந்துகொள்வதற்கான இரண்டாவது காரணத்தையும் ஜெயாரே வழங்கினார். தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையும் கடைகளையும் எரித்ததன் மூலம், "நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? இது உங்களுக்கான நாடு இல்லை. உங்களது தாயகம் வடக்கும் கிழக்கும்தான், ஆகவே அங்கேயே உங்களை அனுப்புகிறேன்" எனும் செய்திதான் அவர் வழங்கிய இரண்டாவது காரணம். அகதிமுகாம்களில் அடைக்கலாகியிருந்த தமிழர்களை கப்பல்கள்கள் மூலமாகவும், பந்தோபஸ்த்துடனான புகையிரதங்கள் மூலமாகவும் அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து தமிழ் அகதிகளை ஏற்றிச்சென்ற விசேட புகையிரதங்கள் வவுனியா வரை இடையில் எங்கும் நிறுத்தப்படவில்லை. வவுனியாவை அடைந்தத பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் வரையான அனைத்து புகையிரத நிலையங்களிலும் அவை தரித்தே சென்றன. தமிழர்களை ஏற்றி அனுப்புவதற்காக கப்பல்களையும் புகையிரதங்களையும் ஒழுங்குசெய்துகொடுத்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரட்மன் வீரக்கோனை தமிழர்கள் நன்றியுடன் நினைவுகூர்வார்கள். இந்த விசேட தமிழ் அகதிகள் புகையிரதங்களில் தாயகம் நோக்கிப் பயணித்த பல நண்பர்களுடன் நான் பின்னாட்களில் பேசியபோது, வவுனியா நகரை அடைந்தபின்னரே தம்மால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்ததாகக் கூறினார்கள். "நாங்கள் எமது தாயகத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தோம்" என்று என்னிடம் கூறினார்கள். தமிழர்கள் மீதான ஜெயார் தலைமையிலான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தமிழர்கள் வடக்கும் கிழக்கும் தமது தாயகம் என்பதை உணர்ந்துகொள்ள உதவியிருந்தது. "சிங்களவர்கள் எம்மை அடித்துக் கலைத்தது அந்த நிலத்திற்கே, அந்த நிலத்திலேயே நாம் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்" என்று இன்று கனடாவில் வாழ்ந்துவரும் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். யாழ்ப்பாணத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் தமிழ் அகதிகள் 1983 தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வரலாற்றாசிரியர்கள் அப்போராட்டத்தினை வீச்சம்பெற வைக்க சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ஜெயவர்த்தனவும் செய்த பங்களிப்புக்கள் குரித்து அலசுவது அவசியமானது. என்னைப்பொறுத்தவரை, இவர்கள் இருவரினதும் பங்களிப்புக்களும் முக்கியமானவை என்பதுடன், போராட்டம் கூர்மையடைவதற்கு முக்கிய காரணங்களாகவும் அமைந்திருந்தவை. இவர்கள் இருவரினதும் ஆட்சிக்காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தது அதிஷ்ட்டம் என்றே கருதுகிறேன். சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவரால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்களையும் அதன்பின்னரான நிகழ்வுகளையும் நான் பதிவுசெய்திருக்கிறேன். அத்துடன், சிறிமாவின் தீர்மானங்களுக்கெதிராக தமிழ்த்தலைமைகள் அன்று எடுத்த நடவடிக்கைகளையும் நான் பதிவுசெய்திருக்கிறேன். சிறிமா தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்குத் தீவிரமாக முயன்றார். இதற்கு எதிர்வினையாக தமிழர் தரப்பால் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் ஒன்று நடத்தப்பட்டது. மொத்தத் தமிழினமும் உணர்வுரீதியாகத் திரண்டெழுந்து அரச அதிகாரத்தை எதிர்க்கமுடியும் என்கிற உணர்வினை இச்சத்தியாக்கிரக நிகழ்வு எடுத்தியம்பியது. சத்தியாக்கிரக போராட்டத்தை சிறிமாவோ ராணுவ அடக்குமுறை கொண்டு நசுக்கியபோது, அதனால் வெகுண்டெழுந்த சுமார் 20 தமிழ் இளைஞர்கள் தோல்வியடைந்த முதலாவது ஆயுதப் போராட்ட அமைப்பான "புலிப்படை" எனும் அமைப்பை உருவாக்க உந்தியிருந்தது. மேலும், சிறிமா தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த 1970 ஆண்டின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் முறை தமிழ் மாணவர் பேரவை எனும் புரட்சிகர மாணவர் அமைப்பினைத் தோற்றுவிக்க உதவியிருந்தது. 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்திய சிறிமாவின் நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்திருக்கிறேன். தரப்படுத்தலும், 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்புமே தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கிச் செல்வதற்கான முக்கியமான காரணங்களாக இருந்ததாக நான் நம்புகிறேன். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தன ஆட்சிப்பீடம் ஏறிய போது நான்கு சிறியளவிலான தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களே இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 30 போராளிகளே செயற்பட்டு வந்ததோடு சுமார் 200 ஆதரவாளர்களை அது கொண்டிருந்தது. புளொட் அமைப்பில் ஏறக்குறைய இதே அலவிலான போராளிகள் இருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் அமைப்புக்களில் இதனைக் காட்டிலும் குறைவான போராளிகளே அப்போது இருந்தார்கள். ஆனால், ஜெயார் தனது அரச தலைமையிலான வன்முறைகள், குறிப்பாக யாழ் நூலக எரிப்புப் போன்றவற்றின் ஊடாக இந்தச் சிறிய ஆயுத அமைப்புக்கள் தம்மை விரிவாக்கிக்கொள்ள அவசியமான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு பாடம் ஒன்றினைப் புகட்ட ஜெயாரும் அவரது அரசும் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் ஆயுதப் போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கொடுத்து உதவின. பெரும்பாலான இந்த தமிழ் இளைஞர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கியவர்களாக இருந்ததோடு, ஜெயாரின் இராணுவம் மற்றும் பொலீஸரைக் காட்டிலும் புத்திசாலிகளாகவும் திகழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ் மிதவாதிகளைத் தொடர்ச்சியாக அழித்துவந்ததன் மூலம் ஜெயவர்த்தனா ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தொடர்ந்து பலம்பெறவும், மக்களிடையே நன்மதிப்பைப் பெறவும் உதவியிருந்தார். இதுகுறித்து நாம் இனிவரும் அத்தியாயங்களில் பார்க்க முடியும். மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு முன்னர், த வீக் சஞ்சிகைக்கு ஜெயவர்த்தனா வழங்கிய குறிப்பு ஒன்றினைக் கூறிவிட்டுத் தொடர விரும்புகிறேன். நிருபர் : முன்னாள் பிரத மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க, தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடச் செய்வதற்கு தமிழர்களுக்குச் சில சலுகைகளை உங்களின் அரசாங்கம் வழங்கலாம் என்று கூறியிருப்பது குறித்து உங்களின் கருத்தென்ன? ஜெயவர்த்தன : தனிநாட்டிற்கான சிந்தனையே சிறிமாவின் ஆட்சிக்காலத்திலேயே முதன்முதலாக தமிழர்களால் முன்வைக்கப்பட்டது. அவர் தனது ஆட்சிக்காலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு எவ்வாறான சலுகைகப் பொதியினை வழங்க எண்ணியிருந்தார் என்பதை நாம் அறியோம். அன்றே அதனை அவர் வழங்கியிருந்தால் இன்று இப்பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு தீவிரமடைந்திருக்காது. ஜெயவர்த்தனா அரசியலில் எவ்வளவு தூரத்திற்குச் சூழ்ச்சியானவர் என்பதைக் காட்டவே அவரது மேற்சொன்ன அவரது கூற்றினை குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு சிறிமாவை குறைகூறுவதன் மூலம் அவரது ஆலோசனைகளை வெளிக்கொணரவைத்து, அவற்றை தான் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏற்படப்போகும் விளைவுகளை சிறிமாவின் மீது சுமத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஞாயிறுப் பத்திரிக்கைகளான சண்டே ஒப்சேர்வர் மற்றும் சிங்கள வார இறுதிப் பத்திரிக்கையான சிலுமின ஆகியவற்றில் த வீக் சஞ்சிகைக்குத் தான் வழங்கிய பேட்டியினை மீள்பிரசுரிக்குமாறு ஜெயார் பணித்தார். மேலும், இதனை மீள்பிரசுரிப்பதனூடாக பத்திரிக்கை வாயிலாக சிறிமா இதற்குப் பதில்தரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார். ஆனால், ஜெயாரின் பொறியில் சிக்குவதை சிறிமா சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்டார். ஜெயாருக்கு அவர் வழங்கிய பதிலில், "அவருக்குத் தேவையென்றால், தான் வைத்த பொறியில் இருந்து தானே மீள வெளியே வருவதுதான் அவர் செய்யவேண்டியது" என்று அவர் கூறினார். இந்த நேரத்திலேயே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா மீது இந்தியா அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் பார்த்தசாரதி இக்காலத்தில் தீர்வொன்றிற்காக உழைத்துக்கொண்டிருந்தார். அதுவே இணைப்பு "சி" என்று பின்னர் அறியப்பட்டது. அதுகுறித்து பின்னர் பேசலாம். புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலும் ஜூலை படுகொலைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. மூன்றுவகையான விளைவுகளை இத்தாக்குதல்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன. முதலாவதாக, அனைத்து இலங்கைத் தமிழர்களையும் அது ஒன்றாக இணைத்திருந்தது. இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித் தீவுகள், மொறீஷியஸ், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வாழ்ந்துவந்த ஏனைய தமிழர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பினையும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது. மூன்றாவதாக, புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பாரிய பிளவினை இது ஏற்படுத்தியிருந்தது. தமிழினப் படுகொலைகள் நடைபெற்று முடிந்த சில நாட்களின் பின்னர் லண்டனில் வாழ்ந்துவந்த எனது சகலர் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதியினை இங்கே இணைக்கிறேன். அங்கு வைத்தியராகப் பணிபுரிந்து வந்த அவர், படுகொலைகளின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் உணர்வினை தனது கடிதத்தில் எழுதியிருந்தார். "படுகொலைகள் பற்றிய செய்திகள் இங்கே பரவியபோது ஒட்டுமொத்த தமிழினமும் தாங்கொணாத் துயரினுள் மூழ்கியது. ஒவ்வொருவரும் தமக்கு முடிந்த வழிகளில் நடைபெற்றுவரும் அக்கிரமங்கள் குறித்து அறிய முயன்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தமது உறவுகளினதும், நண்பர்களினது பாதுகாப்புக் குறித்து மிகுந்த அச்சத்துடன் அவர்கள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்திருந்தனர். அவர்கள் எல்லோருமே மிகுந்த விரக்தியும், கோபமும் கொண்டிருந்தனர். தமது இன அடையாளமும், கெளரவமும் காயப்பட்டுப் போனதாக அவர்கள் உணர்கின்றனர். இளைஞர்கள் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்துப் பேசிவருகின்றனர். அவர்களுள் சிலர் நாடுதிரும்பி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்புகின்றனர். ஜெயவர்த்தனா தமிழர்களின் உணர்வு நரம்புகளைச் சீண்டிப்பார்த்திருக்கிறார் என்று நினைக்கின்றேன். அவர்கள் நிச்சயமாக அவருக்குத் திருப்பி அடிப்பார்கள்"என்று எழுதப்பட்டிருந்தது.
-
ஈழத்தமிழர் அரசியல்
தமிழர்கள் தமது இருப்பையும், மொழியையும், தாயகத்தையும், கலாசாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேவை இருக்கின்றதா என்பதே முதலாவது கேள்வியாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், அப்படியொரு தேவை இல்லையென்றால், தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதுபற்றி அலசி தமது நேரத்தை அநியாயமக்கவேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. சுமார் 35 வருடங்கள் நடைபெற்ற ஜனநாயக வழி, பாராளுமன்ற அரசியலின் தோல்வியும், அதன்பின்னரான 30 வருட ஆயுதப்போராட்டத்தின் கொடுமையான இழப்புக்களும், இன்று எவையுமே அற்று நிர்க்கதியாக்கப்பட்டிருக்கிற நிலையும், எமது தாயகம் முற்றான ராணுவ ஆக்கிரமிற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் அவலமும் எம்மை எதுவித போராட்டங்களிலும் ஈடுபடுவதைத் தடுத்து வைத்திருக்கிறது என்பதே எனது நிலைப்பாடு. நாம் இன்னொரு போராட்டம்பற்றிச் சிந்திப்பதை முற்றாகவே அழித்துவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் , தனக்கு எம்மீதிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயற்பட்டு வருகிறது. எனது கேள்விக்கு ஒரு சிலர் நகைப்புடன் பதிலளித்ததும், கேலிச் சித்திரம் வரைந்து கிண்டலடித்ததும் நடந்தது. ஆனால், இவர்கள் எவருக்குமே தமிழரின் அரசியல் இனிமேல் எத்திசையில் பயனிக்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவோ அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றீடான வழிகள் என்று எதுவுமே இவர்களிடத்தில் இல்லை. குறைந்தது, எனது கருத்திற்கு நேரடியான பதிலையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் பண்புகூடக் கிடையாது. அவர்களை விட்டு விடலாம், ஏனென்றால் இவர்கள் எக்காலத்திலும் தமிழர் போராட்டத்தில் தம்மை செயற்திறனுடன் ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது, இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆக, நாம் இன்று செய்யக்கூடியது இதுதான், இன்று ஒரு சிலர் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டங்களின் மேல் எமது இருப்பைச் சுமத்திவிட்டு நாம் ஒரு இனமாக ஓய்வெடுக்கலாம். அல்லது, அவர்களையும் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வெடுக்குமாறு நாம் கேட்கலாம். அப்படி எதுவுமே தேவையில்லை அல்லது சாத்தியமில்லையென்றால், நாம் எமது அடையாளங்களைத் திறக்கலாம். இனத்திலிருந்து ஆரம்பித்து, மொழி, மதம் என்று அனைத்திலும் சிங்களத்தின் இன்னொரு பகுதியாக விருப்புடன் உள்வாங்கப்படலாம். நேற்று நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் தமிழர்களாக இருந்து அடையாளம் திறந்து சிங்களவர்களாக மாறியிருக்கும் அவர்களைப் போன்று இன்று மீதமாயிருக்கும் வடக்குக் கிழக்கின் தமிழர்களும் மாறிப்போகலாம். அதன்பின்னர், இனக்கொலை என்றோ, போர்க்குற்றம் என்றோ, தாயக விடுதலை என்றோ எவரும் பேசவேண்டிய தேவை இருக்காது. உண்மை. ஆனால், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. எமது இளைய சமுதாயம் விடுதலைக்கான பாதையில் சிந்திப்பதையோ அல்லது செயற்படுவதையோ முற்றாகத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னாலிருப்பதே எம்மை எக்காலத்திற்கும் ஆக்கிரமித்து எமது இருப்பை சிறுகச் சிறுக அழிக்க கங்கணம் கட்டியிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் தான். ஆகவே, எமது மாற்றம் என்பது இதனை அடையாளம் கண்டு அங்கிருந்து எமது செயற்பாட்டினை ஆரம்பிப்பதுதான். வெறுமனே மக்கள் சலித்துவிட்டர்கள் என்றோ, இளைய சமுதாயம் வேறு திசையில் பயணிக்கிறது என்றோ நாம் இருந்துவிட்டால் எதுவுமே மாறப்போவது கிடையாது.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஈழத்தமிழர் விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே தனது தேசிய பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்திவந்த இந்தியா இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் இந்தியாவின் உணர்வு குறித்த விடயங்களையும் ராவின் கடிதம் விளக்கியிருந்தது. இந்தியாவின் கரிசணைக்கான நான்கு காரணங்கள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. முதலாவது, இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்கள் இந்தியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்பது. தமிழ்நாட்டில் இத்தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்ததோடு, இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இரண்டாவது இலங்கையில் காணப்படும் ஸ்த்திரமற்ற நிலமை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாக மாறும் என்பது. மூன்றாவது, இலங்கையில் ஏற்படும் ஸ்த்திரமற்ற நிலைமையினைப் பாவித்து வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையினுள் நுழைந்துவிடும் என்பது. நான்காவதாக, இலங்கையில் ஏற்படும் நிலைமைகளைப் பாவித்து இந்தியாவில் ஸ்த்திரமற்ற நிலைமையினை உருவாக்கி பலவீனப்படுத்த வெளிநாட்டுச் சக்திகள் முனையும் என்பது. இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்யவேண்டாம் என்று இந்தியா கேட்டுக்கொண்டதையடுத்து, அனைத்து நாடுகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தன. இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக ஏற்றுக்கொண்ட அந்த நாடுகள் அதன் கோரிக்கைக்கு இணங்க, இலங்கைக்கு உதவிசெய்யப்போவதில்லை என்று தெரிவித்தன. லோக்சபாவில் இந்திரா காந்தியினதும் ராவினதும் பேச்சுக்கள் மற்றும் ராவின் கடிதம் ஆகியவை இந்திராவின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பாக இந்தியா வரிந்துகொண்ட வெளிநாட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை தெளிவாகக் காட்டியிருந்தது. இதற்குப் பின்னர் வந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் அந்த வெளியுறவுக் கொள்கையினை வழிநடத்திச் செல்ல உதவியிருந்தன. இதுபற்றி பின்னர் ஆராயலாம். லோக் சபாவில் இந்திரா காந்தியும், ராவும் உரையாற்றுவதற்கு முதல்நாள், ஆவணி 1 ஆம் திகதி இலங்கையரசு வெளியிட்ட செய்தியொன்றில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை முற்றாக நிராகரித்திருந்தது. புது தில்லியில் இலங்கையின் தூதராக கடமையாற்றிவந்த பேர்ணாட் திலகரட்ண இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை அறிக்கை ஒன்றின் மூலம் மறுதலித்திருந்தார். இதேவகையான அறிக்கையொன்றினை கொழும்பில் இலங்கையரசும் வெளியிட்டிருந்தது. தில்லியில் வெளிநாட்டமைச்சர் ஹமீது மேற்கொண்டுவந்த பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு உடனடியாக அவரை நாடு திரும்புமாறு ஜெயார் பணித்தார். ஆவணி 1 ஆம் நாள் இரவும் ஹமீது தில்லியிலிருந்து கொழும்பிற்குப் பயணமானார். தில்லி விமான நிலையத்தில் அவரைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயலவில்லை எனும் இலங்கை அரசின் அறிக்கை பற்றிக் கேட்டபோது, "நாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முனைகிறோம் எனில், அது இந்தியாவாகத்தான் இருக்கும் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறிச் சமாளித்தார். இந்திய சஞ்சிகையான "த வீக்" இன் செய்தியாளர் பட்ரிக் மைக்கல் ஜெயாரை ஐப்பசி 1 ஆம் திகதி பேட்டி கண்டிருந்தார். "உங்கள் நாடு இந்தியாவைத் தவிர்த்து வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்வதாகப் பரவிய வதந்திகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?" என்று மைக்கல் கேட்டபோது, "இது வெறும் புரளியே அன்றி வேறில்லை என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன்" என்று காட்டமாகப் பதிலளித்தார். ஆனால் இலங்கையின் மறுதலிப்பை எவறுமே நம்பவில்லை, குறிப்பாக இந்தியா இலங்கையரசின் மறுதலிப்புக்களை எரிச்சலுடனேயே பார்த்தது. மேலும், ஜெயார் பின்னாட்களில் அவ்வப்போது வழங்கிய பேச்சுக்களில் தான் வெளிநாடுகள் சிலவற்றிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் திகதி சண்டே ஒப்சேர்வர் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில், "இந்தியாவின் அழுத்தம் அதிகமாக இருந்த அந்த நாட்களில் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவுகளுக்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டதாக" ஜெயார் கூறினார். தமிழர்களின் எதிர்ப்புணர்வு எதிர்வரும் அத்தியாயங்களில் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாடு பற்றியும், அதனூடாக வரியப்பட்ட இந்திய வெளிநாட்டுக்கொள்கை பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். தமிழர் மீதான வன்முறைகளும், அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் முயன்றதும் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாட்டையும், வெளியுறவுக் கொள்கையினையும் ஒரு திசையில் முன்னோக்கித் தள்ளியிருந்தது. அதேவேளை தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களை அதுகுறித்து ஒரு திசையில் எதிர்வினையாற்றவும் தூண்டியிருந்தன. இலங்கையில் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வீதியில் இறங்கிய தமிழர்கள், தமது சகோதரர்களைக் காப்பாற்ற இந்தியா உடனடியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கரிசணையும், ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற மனோநிலையும் இந்த ஆர்ப்பாட்டங்களை சுமார் ஒருவார காலம்வரை நீடிக்க வைத்தன. பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறத் தொடங்கின. தமிழ்நாட்டில் அன்று ஆட்சியிலிருந்த எம்.ஜி. ராமச்சந்திரனின் அ.தி.மு. க அரசும், எதிர்க்கட்சியாகவிருந்த மு. கருனாநிதியின் தி.மு.க கட்சியும் தமிழர்களுக்கு யார் அதிகளவு ஆதரவினை வழங்குவது என்பதனை மக்களுக்குக் காட்டும் போட்டியில் குதித்திருந்தன. ஆவணி 1 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்றிற்கு மு. கருனாநிதி அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அதே ஆவணி 1 ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவினைக் காட்ட பொதுமக்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்த திங்கட்கிழமை மொத்த தமிழ்நாடுமே முற்றான ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவொன்று அதே நாளான ஆவணி 1 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க இந்தியா உடனடியாக இலங்கையில் தலையீடு செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்தது. தமிழர்களைக் கொன்றுவரும் சிங்களக் காடையர்களை அடக்குவதற்கு ஜெயார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் இந்திரா காந்தியிடம் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும் தாக்குதல்களின் வீரியம் குறையத் தொடங்கியவேளை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பேசிய ஜெயவர்த்தன, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தி ஊக்குவித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஜெயார் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருவது குறித்து இந்திரா மெளனமாக இருந்துவிடமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், வெளிவிவகார அமைச்சர் ராவ் இலங்கைக்குச் சென்றிருக்காதுவிட்டால், இன்றுவரை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் என்றும் கூறினர். இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதான சூழ்நிலை அந்தத் திங்கட்கிழமை என்றுமில்லாதவாறு அதிகமாகவே தென்பட்டிருந்தது. சுமார் ஒருவார கால விடுமுறைக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பியிருந்த எனக்கு லேக் ஹவுஸ் நிலையத்தில் இச்செய்தியே பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது தெரிந்தது. டெயிலி நியூஸின் ஆசிரியர் பகுதிக்கு அன்று நான் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகுறித்து நாம் பேசவேண்டும். அங்கிருந்த ஆசிரியர் முதல், அலுவலக சிற்றூழியர்கள் வரை அனைவரும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்தியதுடன், "எங்களை மன்னித்துவிடுங்கள்" என்றும் கோரினர். ஆசிரியரான மணிக் டி சில்வா என்னிடம் வந்து, "உங்களுக்கு நடந்த அனைத்து இன்னல்களுக்காகவும் எங்களை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து இச்செயல்களுக்கான மொத்த சிங்கள இனத்தையும் எதிரிகளாகப் பார்க்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார். நான் உண்ர்ச்சிவசப்பட்டு அழத்தொடங்கினேன். "இல்லை மணிக், சிங்கள மக்களுக்கெதிராக எந்த பழிவாங்கும் உணர்வும் என்னிடம் இல்லை" என்று அவரிடம் நான் கூறினேன். நான் இந்தச் சம்பவத்தையும், இதுபோன்ற இன்னும் சில நிகழ்வுகளையும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் ஒரு இனமாகத் தாக்கவில்லை, மாறாக ஒரு சிறு பகுதியினரே அரசியல் ஆதாயத்திற்காக அதனைச் செய்தார்கள் என்று தமிழ் நண்பர்களுடன் பேசும்போது உதாரணங்களாக எடுத்துக் கூறியிருக்கிறேன். இத்தாக்குதல்கள் நிச்சயமாக சிங்கள மக்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு செய்த தன்னெழுச்சியான தாக்குதல்கள் இல்லை. தமது அரசியல் அதிகாரத்திற்கு சவால் விட்டார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து, அரசாங்கமும், அதிகாரத்தில் இருந்தவர்களும் தமிழர்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்ட செய்த திட்டமிட்ட வன்முறைகளே இவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆவணி முதலாம் வாரத்தில் சிங்கள மக்களிடையே கடுமையான அச்ச நிலையொன்று உருவாகியிருந்தது. இந்தியா தமது நாட்டின்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளப்போகிறது என்பதே அது. காமிணி திசாநாயக்கவின் தலைமையில் இயங்கிவந்த ஜாதிக எஸ்டேட் தொழிலாளிகள் தொழிற்சங்க செயற்கூட்டத்திலும் இது எதிரொலித்தது. கூட்டத்தில் நிலவிய அச்ச நிலையினைப் போக்க காமிணி திசாநாயக்க அக்கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், "நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், இந்தியா எம்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள முன்னர், 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் நாம் கொன்றுவிடுவோம்". இதன்பின்னர் கூட்டம் சலசலப்பின்றி நடந்தேறியது. தம்மீதான மிலேச்சதனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளும், அதன் பின்னரான அரசாங்கத்தின் தலைவர், அமைச்சர்கள், இனவாதிகள் கக்கிவந்த இனவாத நியாயப்படுத்தல்களும் தமிழர்கள் மனதில் ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாம் பல்லாண்டுகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து ஒரு இரவில் வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிமுகாம்களில் தஞ்சம் கோரியபோதுதான் தமிழர்கள் தம்மை ஒரு இனமாக உணர்ந்துகொணடனர். பிரதேச வேறுபாடுகள், மத வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார வேற்றுமைகள் ஆகிய தடைகள் எல்லாவற்றையும் களைந்து தமிழர்களாக ஒன்றாகும் நிலையினை சிங்களக் காடையர்கள் படுகொலைகள் ஊடாக தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். பிரபல தொழிற்சங்கவாதியான கே. சி. நித்தியானந்தா இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்தவேளை ஒரு விடயத்தைக் கூறியிருந்தார், "தமிழர்களின் விடுதைப் போராட்டத்திற்கு ஜெயார் செய்திருக்கும் மகத்தான சேவை என்னவெனில், தமிழர்கள் தம்மை தனியான இனமாகவும், தனியான தேசமாகவும் உணரவும் செயற்படவும் உந்தித் தள்ளியிருப்பதுதான்" , மேலும் உதட்டில் புன்னகையுடன் தொடர்ந்த அவர், "நாம் இதுவரை எம்மை ஒரு தேசிய இனமாகவும், எமக்கான தேசம் ஒன்றினை உருவாக்கவும் முயலாததற்கான தண்டனையே அவர் எம்மீது மேற்கொண்ட இந்தப் படுகொலைகள்" என்றும் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவுக்குப் பாடம்புகட்ட வெளிநாடுகளில் ஆயுதம் வாங்க முனைந்த ஜெயார் ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில், வெளிநாட்டுச் சக்தியொன்றிடமிருந்து தனக்கு வரவிருக்கும் இராணுவ அழுத்தத்தைச் சமாளிக்க இலங்கை அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மிகார எனும் புனைபெயரில் எழுதிவந்த ரணதுங்க, இலங்கைக்குச் சவாலாக இருக்கும் அந்த வெளிநாட்டுச் சக்தி "இந்தியா" தான் என்று எழுதியிருந்தார். கொழும்பில் தங்கியிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை, இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முனையும் செய்தியை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும், ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் இந்திராவின் தொலைபேசி அழைப்பையும், ராவின் திடீர் விஜயத்தையும் தேவையற்ற தலையீடாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்தச் செய்தி இந்தியாவுக்குத் தலையிடியாய் மாறியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். இந்திரா காந்தி கடும் சினம்கொண்டார். சிலகாலமாகவே அமெரிக்கா நோக்கிச் சாயும் ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆகவே, இந்தியாவின் நலன்களை மீறி ஜெயார் செயற்பட முடியாதென்பதை அவருக்கு உணர்த்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். இதற்கான அடித்தளத்தை உருவாக்க இந்திரா எண்ணினார். அதன்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு வெளிச்சக்தியும் இவ்விவகாரத்தில் இலங்கையில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு பகைமையான நாடுகள் என்று இந்தியா கருதிய சில நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தருவிப்பதைத் தடுப்பதற்கு இந்திராவின் அறிவுருத்தல்களின் பெயரில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இரு விடயங்களைச் செய்தது. முதலாவது, ராவின் வருகையின் இலங்கை உதாசீனம் செய்யும் பட்சத்தில் இலங்கைக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றினை இந்தியா ஆரம்பிக்கும் எனும் வதந்தியை வேண்டுமென்றே ஊடகங்கள் ஊடாகக் கசியவிடுவது. இரண்டாவது, ஜெயவர்த்தன ஆயுதங்கள் வாங்க எண்ணியிருக்கும் நாடுகள் அடங்கலாக அனைத்து சர்வதேச நாடுகளையும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் என்று கோருவது. வெளிவிவகார அமைச்சர் ஹமீத் நான் முன்னர் குறிப்பிட்டது போல, ஜெயவர்த்தனவைக் கையாள இந்தியா இரு முனைகளைப் பாவிக்க எண்ணியிருந்தது. முதலாவது இராணுவ நடவடிக்கை. இரண்டாவது இராஜதந்திர ரீதியிலான நெருக்குவாரம். இராஜதந்திர ரீதியிலான இந்தியாவின் அணுகுமுறை, ராவை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது. ராணுவ அணுகுமுறை என்பது பரா இராணுவத்தினரைத் தரையிறக்கி, விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயவர்த்தனவுக்கு அழுத்தம் கொடுப்பது. ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை மற்றும் இராணுவத் தலைமைப்பீடத்தினர் போன்றோரும் இந்தியாவின் இராணுவத் திட்டம் குறித்து அறிந்தே இருந்தனர். இந்தியாவின் இராணுவக் கலூரியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன இவ்விடயம் தொடர்பாக இந்தியாவில் பேசப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதிடம் அறியத் தந்தார். அக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சார்க் மாநாடு இந்தியாவின் தலைநகர் தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாட்டிற்கு ஹமீதை அனுப்பிய ஜெயவர்த்தன, இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் உத்தேச இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த இந்திராவுடன் பேசுமாறு கோரினார். ஆவணி 1 ஆம் திகதி இந்திராவைச் சந்தித்த ஹமீத் இதுகுறித்துக் கேட்டார். இதற்குப் பதிலளித்த இந்திரா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்திருப்பதாகக் கூறியதுடன் , இலங்கையினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் உறுதியளித்தார். இந்திராவின் இந்த உறுதியளித்தலை உடனடியாக ஜெயாருக்கு அறிவித்தார் ஹமீத். ராவ் தனக்கு பரிந்துரைத்ததன்படி தமிழ் அகதிகள் பிரச்சினையினைக் கையாள இலங்கைக்கு உதவ இந்திரா முடிவெடுத்தார். ஆவணி 2 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா இந்த உதவிகள் குறித்துப் பேசினார். அப்பேச்சின்போது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டினை இந்தியா முழுமையாக மதித்து ஏற்றுக்கொள்கிறதென்று கூறியதுடன் இலங்கைக்கான மனிதாபிமான உடவிகளைச் செய்ய இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார். தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தமிழ் அகதிகள் பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் மட்டும் 14 அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. திங்கட்கிழமை இரவிற்குள் சுமார் 20,000 அகதிகள் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர். நாடு முழுவதற்கும் வன்முறைகள் பரவியபோது மேலும் பல அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த அகதிமுகாம்களை யார் பொறுப்பெடுப்பது எனும் பிரச்சினை உருவாகியது. இதனையடுத்து வெள்ளியன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரட்மன் வீரக்கோனை அகதிமுகாம்களுக்கான நிவாரண வழங்கலை கண்காணிக்குமாறு ஜெயவர்த்தன பணித்தார். அகதி முகாம்களில் அடைக்கலமாகியிருந்த தமிழ் அகதிகளை அவர்களின் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரட்மன் வீரக்கோன் மேற்கொண்டார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலமாகவும், பின்னர் புகையிரதங்கள் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வார இறுதியில் சுமார் 300,000 தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் தாயகம் நோக்கிச் செல்ல கப்பலுக்காகக் காத்திருக்கும் தமிழ் அகதிகள், ஆவணி 1983 பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த தமிழர்களும், கொழும்பில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த தமிழர்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். இவர்களுள் சிலர் வடமாகாணத்திற்கு அவர்களின் உறவினர்களுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனையவர்கள் அகதிமுகாம்களிலேயே பல மாதங்கள் வாழவேண்டியதாயிற்று. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் நாடுமுழுதிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே என்று கூறிய அரசு, தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 100,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும் கூறியது. சுயாதீனமான தரவுகளின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று கூறின. தற்போது குறைந்தது 2,500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் என்கிற ரீதியில் இலங்கைக்குத் ராவ் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அவரையே பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு பணித்த இந்திரா, இலங்கை இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயல்வது குறித்த விபரங்களையும் அச்சபையில் தெரிவிக்குமாறு கோரினார். பாராளுமன்றத்தில் ராவ் ஆற்றிய உரை இருபகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி இலங்கையில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கரிசணை பற்றி விளக்கியது. பின்னர் அவர் பேசும்போது, "இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளுக்கப்பால், இந்தியாவைப் பூர்வீமகாகக் கொண்ட பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்த, குறிப்பாக நாடற்றவர்களாக்கப்பட்டுள்ள பல இந்திய உறவுகள் குறித்த ஒட்டுமொத்த இந்தியாவின் கவலையும் எமக்கிருக்கிறது. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. குடியுரிமையினால், நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு மிக அருகில் இருக்கும் நெருங்கிய கலாசார பிணைப்புடைய அயலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத் துயரங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறிய ராவ், . மேலும், கொழும்பில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்துவந்த தமிழர்களை அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைப்பதற்கான கப்பல்களை வழங்குமாறும், அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கான எரிபொருள், மருந்துவகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவிகளையும் வழங்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்தியக் கப்பல் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் ஆவணி 1983 இலங்கை கேட்டுக்கொண்டதற்கமைய இந்தியா எரிபொருள், மருந்துவகை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்தது. தமிழ் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்களையும் வழங்கியது. தனது பேச்சின் இரண்டாவது பாகத்தில் இலங்கையரசாங்கம் அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருகிறது என்கிற செய்தியை முன்வைத்தார். தனது விஜயத்தின் பின்னரே இந்த ஆயுதக் கொளவனவு முயற்சியில் இலங்கையரசு இறங்கியிருக்கிறது என்றும் கூறினார். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை தன்னால் வழங்கமுடியாது என்று கூறிய ராவ், பாராளுமன்றமும் நாட்டு மக்களும் இதுகுறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார். மேலும், வெளிநாட்டுச் சக்தியொன்று தமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதாலேயே இலங்கை வெளிநாடுகளிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்கிறதென்றும், அந்த வெளிநாட்டுச் சக்தி இந்தியாவே என்று இலங்கை அரசு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் பேசிய ராவ், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடப்போவதாகக் குறிப்பிடும் நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு தனது கரிசணையினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் அந்நாடுகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. நிலைமைகளின் ஏற்படப்போகும் மாற்றங்களையடுத்து வெளிநாட்டுத் தலையீடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியா கருதுகிறது என்றும் கூறினார். அதன் பின்னர் பேசிய ராவ், எச்சக்தியாக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக சர்வதேசம் கருதக் கூடாது என்றும் கூறினார். இந்தியாவின் தவிர்க்கமுடியாத அயல்நாடாக இலங்கை இருப்பதால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் இந்தியாவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது இருக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், நலனிலும் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தாக்கம் செலுத்துவதால், அவைகுறித்து இந்தியா வாளாவிருக்க முடியாது என்றும் ராவ் கூறினார். "எம்முடன் பேசிய இலங்கை அதிகாரிகள் எமக்குச் சார்பாகவே பேசினார்கள். இலங்கை தனக்குத் தேவையான உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது இரு அரசாங்கங்களுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் இலகுவாகச் செய்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்" என்று கூறினார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடத்திய விசாரணைகளின்போது இலங்கையரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்று வருவது உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இலங்கையின் இந்த வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முயற்சியை இந்திய வெளிவிவகாரத்துறை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. சர்வதேசமெங்கும் வியாப்பித்திருந்த இந்தியா இராஜதந்திர வலையமைப்பு இந்தப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக பணிபுரிந்தவர்களை வெளிநாட்டுவிவகார அமைச்சகத்திற்கு அழைத்துப் பேசிய அதிகாரிகள், ராவ் எழுதிய "இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என்கிற சாராம்சத்துடனான கடிதங்களை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குமாறு கோரினார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியக் காரணி தமிழர் மீதான வன்முறைகளையடுத்து தேவையற்ற வெளிநாட்டு தலையீடுகளை தனது அரசாங்கம் எதிர்கொள்ளப்போகிறதென்பதை இந்திரா காந்தியுடனான தொலைபேசி அழைப்பினையடுத்து ஜெயார் உணர்ந்துகொண்டார். முதலாவதாக, தமிழர்களை பலவீனப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் தனது அரசியல் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சிங்கள மக்களை இனமாகப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சர்வதேசத்தில் சிங்கள மக்களின் பெயரினைக் களங்கப்படுத்தியிருப்பதையும் அவர் உணர்ந்தார். இரண்டாவதாக தமிழர் மீதான தனது அரசின் வன்முறைகள் இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்தியாவுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பும், அதன்பின்னரான நரசிம்ம ராவின் விஜயமும் ஜெயாரின் சுதந்திரத்தையும் ஆட்சியதிகாரத்தையும் ஓரளவிற்குக் கட்டிப் போட்டதுடன், அவரைத் தற்காப்பு நிலைக்கும் தள்ளி விட்டது. மேலும், எந்த நடவடிக்கைகயினையும் எடுப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரம் தற்போது இந்தியாவின் தேசிய நலனினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் உணரத் தலைப்பட்டார். தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் படிப்பிப்பதற்கு அவர் முன்னெடுத்த தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் அவரையும் அவரது அரசாங்கத்தையும் "கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்" எனும் பட்டியலில் இணைத்துவிட்டிருந்தது. சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தமிழ்க் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இனக்கொலை 1983 வெள்ளிக்கிழமை தனது கண்டிநோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஹமீதுடன் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்தார். தான் பயணித்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் வீதிகளில் வைத்துச் சிங்களவர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்படுவதையும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுவதையும் தான் கண்ணுற்றதாக ஹமீதிடம் கூறினார். மேலும், மலையகப் பகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் மீண்டும் ஒருமுறை நடத்தத் தயாராவதாக தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக ராவ் கூறினார். "அரசாங்கத்தின் உறுப்பினர்கள், வன்முறைகளை ஒவ்வொரு நகருக்கும் பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது" என்று ஹமீதிடம் கூறிய ராவ், இந்திய உயர்ஸ்த்தானிகருக்கு காலை முதல் பல தொலைபேசி அழைப்புக்கள் மலையகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும், அவை நுவரெலியா பகுதியில் உள்ள தமிழர்களைக் குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பிக்க அப்பகுதியில் வசிக்கும் சிங்களவர்கள் ஒன்றுதிரண்டுவருவதாக முறையிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். ராவ் கூறியதன்படியே, நுவரெலியா நகரப்பகுதியில் வெள்ளி பிற்பகல் தமிழர் மீதான தாக்குதல்களை சிங்களவர்கள் ஆரம்பித்தனர். அதுவரைக்கும் நகரப்பகுதியை பொலீஸாரும், இராணுவத்தினரும் காவல்காத்து வந்தனர். நகருக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையின்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தமிழ்ப் பயணிகளை தமது பஸ்களில் ஏற்ற்வேண்டாம் என்று நடத்துனர்கள் சிங்களவர்களால் அறிவுருத்தப்பட்டனர். பொலீஸாரும் தம் பங்கிற்கு தமிழர்களை அடைந்து கிடக்குமாறு பணித்திருந்தனர். நுவரெலியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத்தின் அறிவுருத்தலின்படி நகரில் குழப்பங்களை உருவாக்கக் கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை பொலீஸார் தடுத்து வைத்திருந்தனர். மேலதிக பொலீஸ் ரோந்துகளும் நகர்ப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரேணுகா ஹேரத் மகாவலி அபிவிருத்தியமைச்சரும், ஜெயாரின் மிக முக்கிய சகாவுமான காமிணி திசாநாயக்க வெள்ளி காலை 10 மணிக்கு விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றின் மூலம் நுவரெலியா நகருக்குச் சென்றார். அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். காமிணி திசாநாயக்க நுவரெலியாவில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசிய காமிணி இனத்துவேஷம் மிக்க கருத்துக்களை வெளியிட்டார், "நீங்கள் நாட்டை நேசிக்கும் சிங்களவர்கள் இல்லையா? ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்?" நுவரெலியாவின் மிகப்பலமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளரை பொலீஸார் கைதுசெய்து வைத்திருப்பதாக ஏனைய உறுப்பினர்கள் காமிணியிடம் முறையிட்டதுடன், அவரின்றி தம்மால் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது கடிணம் என்றும் கூறினர். அதற்குப் பதிலளித்த காமிணி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். அவர் கூறியவாறே, பிற்பகலுக்குள் அவர்கள் அனைவரையும் பொலீஸார் விடுவித்தனர். பொலீஸாரினால் விடுவிக்கப்பட்ட காடையர்களின் முன்னணித்தலைவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். பெற்றொல் பரல்கள், இரும்புக் கம்பிகள், வாட்கள், வெட்டரிவாள்கள் என்பன துரித கதியில் சேகரிக்கப்பட்டன. அவர்களின் முதலாவது இலக்கு நுவரெலியாப் பகுதியில் அமைந்திருந்த சைவக் கோயிலும் அங்கே தங்கியிருந்த சைவக் குருக்களும்தான்.தாக்குதல் ஆரம்பித்தவேளை குருக்கள் தப்பிக்கொள்ள, கோவில் முற்றாக இடித்து எரிக்கப்பட்டது. காடையர்களுடன் பெருமளவு சிங்கள மக்களும் தாக்குதல்க் குழுவில் இணைந்துகொண்டனர். அதுவரையில் நகர்ப்பகுதியில் காவலில் இருந்த இராணுவத்தினரும், தமது நிலைகளைக் கைவிட்டு தமிழர்களைத் தாக்கிவரும் குழுவுடன் இணைந்துகொண்டனர். இராணுவ வாகனங்களுக்கு என்று சேமித்துவைக்கப்பட்ட பெற்றொல் பரல்கள் சிங்களக் காடையர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது. தாக்குதல் ஆரம்பித்து இரண்டு மணிநேரத்திற்குள் நுவரெலியா நகர்ப்பகுதியில் இயங்கிவந்த அனைத்துத் தமிழர்களின் கடைகளும் எரியூட்டப்பட்டன. நகர்ப்பகுதியில் தமிழர்கள் தாக்கப்பட்டு கடைகள் எரிக்கப்படுவதை அறிந்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரேணுக்கா ஹேரத்தை அக்கும்பல் விரட்டியடித்தது. மிகுந்த வேதனையோடு அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் நுவரெலியாவை விட்டே சென்றுவிட்டதாக அப்பகுதியின் எமது நிருபரான ராஜரட்ணம் கூறியிருந்தார். "நகரமே நெருப்புக்கடலில் மிதந்துகொண்டிருக்க, அவர் நகரை விட்டுச் சென்றார்" என்று அவர் கூறினார். ஹமீதிடம் பேசிய ராவ், "இந்தியத் துணைத் தூதர் மற்றும் அவரது அதிகாரிகள் எனக்கு கூறியிருக்கும் தகவல்களின்படி நுவரெலியாப் பகுதியில் தமிழர் மீதான தாக்குதல்களை உங்களின் அமைச்சரவை முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னின்று நடத்திவருவதாகக் கூறப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மாத்தளை சிறி முத்துமாரியம்மன் ஆலயம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய பகுதிகளில் தமிழர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் தொடர்பாக தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை ஹமீதிடம் கொடுத்த ராவ், இத்தாக்குதல்ப் பட்டியல்களில் தமிழர்களின் ஆலயங்களும் இணைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் சுட்டிக் காட்டினார். மேலும், மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை சிங்களவர்கள் முற்றாக எரித்ததை அவர் ஹமீதிடம் காண்பித்தார். அன்று மாலை சிறு எண்ணிக்கையிலான தமிழ்க் கல்விமான்கள் ராவைச் சந்தித்தார்கள். இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ராவிடம் கூறினர். தமிழர்களின் பொருளாதாரத்தை, கல்வித்தகமையுடனான செல்வாக்கினை, வர்த்தகத் தளத்தை சிதைத்து அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இத்தாக்குதல்களின் மூலம் தமிழர்கள் இந்நாட்டில் தமது இருப்புக் குறித்த அச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வெள்ளி இரவு கொழும்பிலிருந்து கிளம்பிய ராவ், சனிக்கிழமை இந்திராவைச் சந்தித்து தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் தமது இருப்புக் குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் பல அகதி முகாம்களின் நிலை மிக மோசமாகக் இருப்பதாகவும் கூறினார். ஆகவே, தமிழ் அகதிகளைக் கையாளும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், தமிழர்களைப் பாதுகாக்க இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.