Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. மக்கள் ஆணையும் அமிர்தலிங்கத்தின் ஏமாற்றலும் மிதவாதியின் கொலை என்று நான் எழுதிய புத்தகத்தில் மிதவாதிகள் எவ்வாறு தமது தவறுகளாலும், சிங்கள இனவாதிகளின் அரசியல் சூழ்ச்சிகளாலும் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பது குறித்து எழுதியிருக்கிறேன். 1977 சித்திரை 5 ஆம் திகயன்று தந்தை செல்வா மரணைத்ததையடுத்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அவரது முதலாவது இலக்கு 1977 ஆம் ஆண்டின் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாக இருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மக்கள் ஆணையினை தமது தேர்தல் விஞ்ஞாபனமூடாக முன்வைத்து மக்களிடம் கோருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானமாக இருந்தது. இதன்மூலம் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதிய அரசியல் நகலை வரைந்துகொள்வதும் அவர்களது நோக்கமாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறியிருந்தது, "இத்தேர்தல் மூலம் தெரிவாகும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்படுவர். இவர்களூடாக தமிழீழத்திற்கான அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதோடு அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை முறை மூலமாகவோ அல்லது போராட்டங்கள் மூலமாகவோ நாம் முயற்சிப்போம்". தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொண்டவாறே தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமது ஆணையை வழங்கினர். கூட்டணி நிறுத்திய வேட்பாளர்களில் 17 பேர் அதிகூடிய வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். காங்கேசந்துறை தொகுதியில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் 31,155 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 5322 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். தனது தேர்தல் வெற்றி உரையில் பேசிய அமிர்தலிங்கம் தமது கட்சி கேட்ட ஆணையை மக்கள் வழங்கி விட்டார்கள் என்று கூறியதோடு, பின்வருவனவற்றைச் செய்யப்போவதாக சூளுரைத்தார், "இனிமேல் நாம் பின்நோக்கிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழீழத்தை அடையும் நோக்கில் நாம் முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்". ஆனால், தேதல் முடிவடைந்ததன் பின்னர், தான் கூறிய வாக்கிலிருந்து அமிர்தலிங்கம் பின்வாங்கினார். தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை அமைப்பதாகவும், அதற்கான அரசியல் யாப்பை வரைவதாகவும் கூறிக்கொண்டு தேர்தலில் மக்களின் ஆணையைக் கோரிய கூட்டணி, அதனைத் தேர்தலின் பின்னர் முற்றாகக் கைவிட்டிருந்தது. அதற்குப் பதிலாக வவுனியாவில் கூடிய கூட்டணியினர், அரசால் தமக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்றும், பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளப்போவதாகவும் முடிவெடுத்தனர். 1977 , ஆவணி 4 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது கூட்டணியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிரேமதாசவினால் சபாநாயகராக முன்மொழியப்பட்ட ஆனந்த தீச டி அல்விஸின் பெயரினை அமிர்தலிங்கமே வழிமொழிந்து ஏற்றுக்கொண்டார். புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "இந்த பாராளுமன்றத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களையும் கூட்டணி ஏற்றுக்கொள்வதோடு, பிரதம மந்திரியுடன் ஒரும்னித்துச் செயற்பட விரும்புகிறோம்" பாராளுமன்ற பதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை, பாராளுமன்றத்திற்குச் சமூகமளிக்கப்போவதில்லை என்று தாம் நடத்திவந்த 20 வருட கால எதிர்ப்பினைக் கைவிட்ட அமிர்தலிங்கமும் கூட்டணியும், பாராளுமன்றம் புதிதாகத் திறந்துவைக்கப்படும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், அரசுடன் சிநேகமான உறவினை உருவாக்கிக்கொள்வதற்காக பொறுமையுடன் செயற்படும் முடிவினையும் அது எடுத்துக்கொண்டது. இது தமிழ் இளைஞர்களுக்கும் கூட்டணிக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தியது. கூட்டணியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்திருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களினால் பெரிதும் விரும்பி மதிக்கப்பட்டு, "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் அவர்களால் வெறுக்கப்படும் நிலைக்கு இறங்கினார். தமிழ் இளைஞர்களுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் இடையில் உருவாகி வரும் பிளவினை நன்கு உணர்ந்துகொணட் ஜே ஆர் ஜெயவர்த்தன, அதனை மேலும் ஆளமாக்கும் கைங்கரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் இளைஞர்களை மேலும் வெறுப்பேற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஜே ஆர், அமிர்தலிங்கத்திற்கு உத்தியோக பூர்வ வாசஸ்த்தலம் ஒன்றினையும், சொகுசு வாகனமொன்றையும் வழங்கினார். அத்துடன் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணிக்கு அமர்த்தினார். அமிர் மட்டுமல்லாமல் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் அரசிடம் கேட்டுக்கொண்ட சொந்த வேண்டுகோள்கள் உட்பட அனைத்துச் சலுகைகளும் கிரமமாக அவர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்டது. அரசுடன் புதிதாக தாம் ஏற்படுத்திக்கொண்ட ஸ்நேகத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமிர்தலிங்கம் இறங்கினார். பாராளுமன்ற குழுக்களின் கூட்டங்களில் தாமாகவே பங்கேற்கத் தொடங்கிய கூட்டணியினர், மாதாந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட சபைகளுக்கான தேர்தல்களில் பங்கேற்கலாம் என்று எண்ணிய கூட்டணியினர், ஆனி 1981 இல் இடம்பெற்ற மாவட்டசபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த 10 இடங்களையும் வென்றனர். இத்தேர்தல்களில் கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 23,302 வாக்குகளையும், தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளையும் பெற்றன. ஆனால், தமிழ் மக்களிடையே கூட்டணியின் ஆதரவு மிகக்கடுமையான வீழ்ச்சியினை அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் சந்தித்தது. 1983 வைகாசி 18 இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் அதுகடுமையான பின்னடைவினைச் சந்தித்தது. 1983 இல் இடம்பெற்ற தேர்தல்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள், அத்தேர்தல்களைப் பகிஷ்கரித்திருந்ததுடன் கூட்டணியினை முழுமையாகவும் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 86 வீதமான வாக்காளர்கள் வாக்களிப்பினை புறக்கணித்திருந்தனர். அதேவேளை பருத்தித்துறையில் 99 வீதமானவர்களை தேர்தலைப் புறக்கணித்திருக்க, பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் 98 வீதமான வாக்களர்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கூட, புலிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகளை புறக்கணித்திருந்தனர்.
  2. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் ஐக்கிய முன்னணி தனது முதலாவது வருடாந்த மாநாட்டினை வட்டுக்கோட்டை பிரதேசத்திலுள்ள பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 அன்று நடத்தியது. இளைஞர்கள், குறிப்பாக ரகசிய ஆயுதக் குழுக்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர்களில் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்கள். தமிழருக்கான தனியான நாட்டிற்கான பிரகடனத்தையும், தனிநாட்டிற்கான அரசியல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கில் தமிழர் ஐக்கிய முன்னணியினை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் விடுதலைக்கான அமைப்பாக மாற்றும் நிகழ்வினையும் உறுதிப்படுத்தவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். இத்தீர்மானம் தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்டதோடு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் சரத்து பின்வருமாறு, தமிழர் ஐக்கிய முன்னணியின் முதலாவது வருடாந்த மாநாடு வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 இல் கூடி பிரகடனம் செய்வது என்னவெனில், இலங்கைத் தமிழர்கள் மிகப்பெருமை வாய்ந்த மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும் கொண்டிருப்பதுடன், அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறும்வரை பல நூற்றாண்டுகாலமாக தமக்கே உரித்தான சுதந்திரமான இறையாண்மையுள்ள தாயகத்தையும் கொண்டிருந்தார்கள். அத்துடன், தாம் சுதந்திரமாகவும், சிங்களவர்களின் அதிகாரத்தின் கீழ் அல்லாமலும், தமது சொந்தத் தாயகத்தில் வாழுதலுக்கான பூரண உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் இந்த உலகிற்கு கூறுவது என்னவெனில், 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு, சிங்களவர்களால் ஆளப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமது அரச அதிகாரத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவருவதோடு, தமிழரின் கலாசாரம், பொருளாதாரம், பிரஜாவுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் திட்டமிட்ட ரீதியில் அழித்து வருவதன் மூலம், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். ஆகவே இப்பிரகடனம் கூறுவது யாதெனில், இழக்கப்பட்ட தமிழரின் உரிமைகள் மீள பெறப்படுவதற்கும், சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச் சார்பற்ற சோசலிச தேசமான தமிழ் ஈழத்தை சுய நிர்ணய அடிப்படையில் உருவாக்குவதே இந்த நாட்டில் தமிழரின் இருப்பினைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஒரே வழியென்பதாகும்.
  3. தந்தை செல்வாவின் வெற்றியும் "தம்பியின்" வெளிப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டில் சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட அரசிய சட்டத்திற்கு எதிராகவும், தரப்படுத்தல்களுக்கெதிராகவும் தமிழ் மாணவர் பேரவை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டணியான சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி என்பன இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தன. சமஷ்ட்டிக் கட்சியும் தனது பங்கிற்கு ஒரு அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு நகலின்படி இலங்கை ஒரு சமஷ்ட்டிக் குடியரசாக இருப்பதுடன் ஐந்து சுய அதிகாரம் பெற்ற பிரதேசங்களையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து சுயாட்சி பிரதேசங்களாவன, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஊவா, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள், வடமாகாணமும், கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களும், இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசமும் ஆகும். சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த யோசனைகளை பாராளுமன்றம் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பின்வரும் அரசியலமைப்பினை அது முன்வைத்தது, "சிறிலங்கா குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும். சிங்களமே இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்த மதம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் மேலானதாக போற்றிக் காக்கப்படும்" என்று கூறியது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு விலகுமாறு சமஷ்ட்டிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே, அக்கட்சியும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விலகிக் கொண்டது. இப்புதிய அரசியலமைப்புக் குறித்துப் பேசிய தந்தை செல்வா, "இது ஒரு அடிமைச் சாசனம்" என்று குறிப்பிட்டிருந்தார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றிற்கான போராட்டம் நோக்கித் தள்ளிவிட்டிருந்தது. புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படுவதற்கு சரியாக 8 நாட்களுக்கு முன்பு, வைகாசி 14, 1972 இல் தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கின. இதில் சமஷ்ட்டிக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாட்டுக் கட்சி மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பனவும் பங்குகொண்டிருந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி வைகாசி 22, 1972 இல் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. இளைஞர்கள் இப்போராட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றனர். கிராமங்கள் தோறும் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டதோடு சிங்கள பெளத்தத்தை பிரகடனப்படுத்தும் இலங்கைத் தேசியக்கொடியும், அரசியலமைப்பின் மாதிரிகளும் இளைஞர்களால் தமது எதிர்ப்பினைக் காட்டும் முகமாக எரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்குத் தமிழர்களிடத்திலிருந்த எதிர்ப்பினை அரசு புரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தந்தை செல்வா தனது பாராளுமன்ற பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார். செல்வாவின் தொகுதிக்கான இடைத்தேர்தலை 1975 வரை அரசு பின்போட்டுக்கொண்டே வந்தது. தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டத்தை அடக்க சிங்களத் தலைமை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்ட 70 இளைஞர்களை அது கைதுசெய்தது. இது அரச காவல்த்துறையுடனும், ராணுவத்துடனும் தமிழ் இளைஞர்கள் நேரடியாக மோதும் நிலையினை உருவாக்கியது. தரப்படுத்தலினால் மிகுந்த விரக்திக்கும், கோபத்திற்கும் உட்பட்டிருந்த இளைஞர்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறைக்கெதிராகத் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அத்துடன், அகிம்சை ரீதியிலான போராட்டமும், அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வழிமுறையும் முற்றாகத் தோற்றுவிட்டதனையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கத் தலைப்பட்டனர். வங்கதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியையும், தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதக் கிளர்ச்சியையும் முன்னுதாரணமாகக் காட்டி, ஆயுதப் போராட்டம் ஒன்றினாலன்றி தமிழருக்கான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ரகசிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் உருப்பெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே பிரபாகரனின் புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாடு மீது சிங்கள அரசு நடத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது. சிவகுமாரன் அடங்கலாக பெருமளவு இளைஞர்கள் இத்தாக்குதலை அரசு திட்டமிட்டே நடத்தியதாக வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்களை இளைஞர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பழிவாங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி சிவகுமாரன் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. அவரின் இலக்குகளாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர், யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர சந்திரசேகர ஆகியோரே இருந்தனர். ஆனால், 1974, ஆனி 4 ஆம் திகதி கோப்பாய் மக்கள் வங்கிக் கொள்ளையில் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்ப வழியின்றி சிவகுமாரன் தனது சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமாக வேண்டி ஏற்பட்டது. அவரது மரணம் வடபகுதி மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தையும், ஆத்திரத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. 1975, மாசி 6 ஆம் திகதி காங்கேசன் துறையில் நடந்த இடைத்தேர்தலில் தந்தை செல்வா அமோகமான வெற்றியடைந்ததையடுத்து, தனிநாட்டிற்கான கோரிக்கையும், விருப்பும் தமிழ் மக்களிடையே வெகுவாக அதிகரித்திருந்தது. தனது தேர்தல் வெற்றியினையடுத்து மக்களிடம் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், " சரித்திர கால்கம்தொட்டு இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இறையாண்மையுள்ள இன மக்களாக வாழ்ந்தே வந்தனர். அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டில் சிங்களவருக்கு நிகரான அரசியல் உரிமைகளை தமிழர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கிலேயே போராடி வருகிறோம். ஆனால், துரதிஷ்ட்டவசமாக ஆட்சிக்கு வரும் அனைத்துச் சிங்களத் தலைவர்களும் தமது பலத்தினைப் பாவித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றனர். எமது அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பதுடன், எமது உணர்வுகளையும் நசுக்கி வருகின்றனர். எனக்கு நீங்கள் இன்று தந்திருக்கும் மகத்தான வெற்றி கூறும் செய்தி ஒன்றுதான், அதாவது, தமிழ்மக்களுக்கு சரித்திரகாலம் தொட்டு இருந்துவரும் இறையாண்மையினைப் பாவித்து, எமக்கான தனியான நாடான தமிழீழத்தை உருவாக்கி, நம்மை மீண்டும் விடுதலைபெற்ற இனமாக உருவாக்க வேண்டும் என்பதுதான். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் சார்பாக நான் உங்களுக்குக் கூறும் உறுதிமொழி என்னவெனில், உங்களின் ஆணையான சுதந்திரத் தமிழீழத் தனிநாட்டினை உருவாக்கியே தீருவோம் என்பதுதான்". கூடியிருந்த இளைஞர் வெற்றிமுழக்கம் செய்ததோடு, தமிழீழம் மட்டுமே எமக்கு வேண்டும், வேறெதுவும் வேண்டாம்" என்று வானதிரக் கோஷமிட்டனர். ஒருசிலர் தமது சுட்டுவிரலை ஊசிகளால் துளைத்து, வெளிக்கசிந்த குருதியெடுத்து தந்தை செல்வாவின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு, தாம் தமது இலட்சியத்தை அடைய எத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர். இந்த ஒன்றுபட்ட விடுதலை உணர்வே 1976 இல் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது. 1976, வைகாசி 5 ஆம் நாளன்று, வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறுவதற்கு சரியாக 9 நாட்களுக்கு முன்னர், 21 வயதே நிரம்பிய, எல்லாராலும் தம்பி என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பிரபாகரன் தனது ஆயுத அமைப்பான புதிய தமிழ்ப் புலிகளுக்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் சூட்டி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிதர்சனமாவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று சபதமெடுத்தார்.
  4. தமிழர்கள் பொறுமையிழந்த காலம் 1961 இல் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் சிங்கள இனங்களிடையிலான உறவில் ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் என்பதும், அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டியது. அதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் தீவிரமான அரசியலில் ஈடுபட இந்த நிகழ்வு உந்தித் தள்ளியிருந்தது. அன்றிலிருந்து இளைஞர்கள் அரசியல் ரீதியான கேள்விகளைத் தமது தலைவர்களிடம் முன்வைக்கத் தொடங்கியதோடு, தமது கோரிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் தலைப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றுவிடலாம் என்கிற தந்தை செல்வாவின் முயற்சி தோற்றுப்போனதையடுத்து, தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும் என்கிற மனநிலைக்கு இளைஞர்கள் அபோது வந்திருந்தனர். 1970 இல் டட்லியின் அரசைத் தொடர்ந்து சிறிமாவின் அரசு ஆட்சிக்கு ஏறிய தருணமே தமிழர்கள் தமது போராட்ட வழிமுறையினை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழர்கள் வெகுவாகக் காயப்பட்டுப் போன உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறிமாவின் அரசு வேண்டுமென்றே தமிழர்களைக் மேலும் மேலும் காயப்படுத்தும் நோக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரச வேலைவாய்ப்பிற்கு கட்டாயமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் தமிழர்கள் தமது பிரதேசங்களில்க் கூட அரச வேலைகளைப் பெற்றுக்கொள்வதை சிறிமாவோ அரசு முற்றாகத் தடுத்தது. அதுமட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தல்களை பல்கலைக்கழக அனுமதிக்கு கட்டாயமாக்கியதன் மூலம் பெருமளவு தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக தகுதியினை இல்லாமலாக்கியது. தமது கல்வியில் பாரிய தாக்கத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியமை தமிழ் மாணவர்களை சிங்களவர்களிடமிருந்து அந்நியமாக்கியதுடன், தமது தமிழ் அரசியல்த் தலைமைகளிடமிடுந்து அந்நியப்பட வைத்தது. தரப்படுத்தலின் பாதிப்புப் பற்றி தமிழ் அரசியல்த் தலைமைகள் காட்டிய அசமந்தப்போக்கும், அதன் தாக்கம் குறித்த போதிய அறிவின்மையும் தமிழ்த் தலைமைகளை இளைஞர்களிடமிருந்து அந்நியப்படுத்தக் காரணமாகின. தமிழர்களில் பலர் சமஷ்ட்டிக் கட்சியின் ஆதரவுடன் அரச அதிகாரிகளாக, ஆசிரியர்களாக பதவிவகித்து வந்தனர். பல தமிழர்கள் சமஷ்ட்டிக் கட்சியில் இணைவதன் மூலம் தமது வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு தரப்படுத்தல்பற்றி அதிக்க அக்கறைப்படாமல் இருந்ததுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் அது ஆறில் ஒன்று மட்டுமே என்கிற நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமது அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு தமக்கான பிரச்சினைகளை தாமே தீர்க்கும் முடிவிற்கு வந்தனர். அதன் முதற்படியாக தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக பொன்னுத்துரை சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இவ்வமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் பிரபாகரன், சிறிசபாரட்ணம், சிவகுமாரன் ஆகியோரும் செயற்பட்டனர். பின்னர் இவ்வமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  5. பாதுகாப்பும் பந்தோபஸ்த்தும் 1968 ஆம் ஆண்டு, தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் மிகுந்த விரக்தியோடும், ஆத்திரத்தோடும், டட்லி சேனநாயக்கவின் அரசின் பங்காளிகள் எனும் நிலையிலிருந்து வெளியேறிச் சென்றனர். தந்தை செல்வாவின் கட்சி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமுமே தாம் தொடர்ச்சியாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுவருவது குறித்து இதே காலப்பகுதியில் மிகுந்த சினங்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது குறிப்பிடத்தக்களவு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு தமது அரச அதிகாரத்தையும், ராணுவ பலத்தையும், கூடவே சிங்களக் குண்டர்களையும் சிங்களத் தலைவர்கள் பாவிக்கத் தொடங்கியிருந்தனர். காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரக நிகழ்வினை குண்டர்களைக் கொண்டு அடித்து அழித்த சிங்களத் தலைவர்கள், அதனைத் தொடர்ந்து கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் வேலை செய்துவந்த தமிழ் அதிகாரிகள் மீதும், தமிழ் விவசாயிகள் மீதும் கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருந்தனர். இருவருடங்களுக்குப் பின்னர், 1958 இல் தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள் இலங்கையின் பல பாககங்களிலும் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலாவது பொலொன்னறுவையூடாகச் சென்றுகொண்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மீது பதவியா குடியேற்றத்தில் வசித்துவந்த சிங்களக் குண்டர்களால் நடத்தப்பட்டது. பின்னர் இத்தாக்குதல்கள் அநுராதபுரம், தலைநகர் கொழும்பு, கண்டி உட்பட பல மலையகத் தமிழ்ப்பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்பட்டதுடன், குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீபாய்க்களுக்குள் வீசிக் கொல்லப்பட்டனர். பலர் தாம் உடுத்திருந்த உடைகளுடன் அவர்களின் வீடுகளிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படித் தஞ்சம் புகுந்த தமிழர்களை அரசு கப்பல்கள் மூலமும், ரயிகள் மூலமும் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களும், அரச இயந்திரமும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்க, இந்த வன்முறைகளுக்கான காரணம் தமிழ் சமஷ்ட்டிக் கட்சியினர் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டதுதான் என்றும் குற்றஞ்சாட்டிய பண்டாரநாயக்கா, சிங்களவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்கு ஒரே வழி சமஷ்ட்டிக் கட்சியினரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் என்று கூறியதுடன் அவர்களை 1958 ஆனி 4 ஆம் திகதிலிருந்து 1958 புரட்டாதி 4 வரை சிறையில் அடைத்தார். அவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு சமஷ்ட்டிக் கட்சியினர் இலங்கையில் தமிழருக்கென்று தனியான நாடொன்றினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றஞ்சாட்டி 1961 ஆம் ஆண்டு சித்திரை 17 இல் மீண்டும் சிறையில் அடைத்தது. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட தருணத்தில் அரச வானொலியில் உரையாற்றிய சிறிமாவோ பின்வருமாறு கூறினார், "கடந்த வாரம் சமஷ்ட்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் தமிழர்களுக்கென்று தபால் சேவை ஒன்றினையும், காவல்த்துறை ஒன்றினையும், காணி கச்சேரியையும் உருவாக்கி, தமிழர்களுக்கு காணிகளுக்கான அதிகாரத்தினையும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது சட்டபூர்வமாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமத்திக்கின்ற, அதன் அதிகாரத்திற்குச் சவால் விடுகின்ற நடவடிக்கையாவதோடு, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்றினை இலங்கையில் உருவாக்குவதனை நோக்காகக் கொண்டே இது நடத்தப்பட்டுவருகின்றது என்பதும் தெளிவு". சிறிமாவின் முக்கிய மந்திரிகளில் இருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மற்றும் சி பி டி சில்வா ஆகியோர் டட்லியின் அரசைத் தோற்கடிக்க தந்தை செல்வாவின் உதவியினை முன்னர் நாடியிருந்தனர். பின்னர் 1960 இல் தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டத்தினை தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் அமுல்ப்படுத்த 1961 இல் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து, யாழ் கச்சேரிக்கு முன்பாக சமஷ்ட்டிக் கட்சியினர் இன்னொரு சத்தியாக்கிரக நிகழ்வினை 1961, மாசி 20 ஆம் நாள் ஒழுங்குசெய்தனர். ஆரம்பத்தில் சமஷ்ட்டிக் கட்சியினரால் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. யாழ் கச்சேரியின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் சிங்களத்தில் நிர்வாகம் நடத்தப்படுவதனை தடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் ராணுவச் சரித்திரத்தில் முதன்முறையாக பங்குனி 30 அன்று ஒரு தொகுதி கடற்படை வீரர்களை இலங்கையரசு வான்வழியாக யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியது. யாழ் கச்சேரியினைச் சுற்றிவளைத்து தமிழர்கள் இப்பகுதிக்கு வருவதனைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியார் காணிகளுக்கூடாகவும், சிறுவீதிகள், ஒழுங்கைகளுக்கூடாகவும் பெருமளவு தமிழர்கள் கச்சேரிநோக்கி திரள் திரளாக வந்துகொண்டிருந்ததால் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. அகிம்சை ரீதியிலான தமது ஆர்ப்பாட்டத்தை ராணுவ ரீதியில் அடக்க அரசு முனைந்ததற்குப் பதிலடியாக சமஷ்ட்டிக் கட்சி தமது சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளான வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த கச்சேரிகளுக்கு முன்னாலும் விஸ்த்தரித்துக் காட்டியது. தமது அகிம்சை ரீதியிலான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வலுத்துவரும் ஆதரவினை உணர்ந்துகொண்ட சமஷ்ட்டிக் கட்சியினர், சில குறிப்பிட்ட சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதன்மூலம் சிறை செல்ல எத்தனித்தனர். அதன்படி சித்திரை 14 இல் தமிழ் அரசு தபால்ச் சேவை எனும் நடவடிக்கையினை அவர்கள் ஆரம்பித்தனர். தபால் அதிபராக தன்னை அமர்த்திக்கொண்ட தந்தை செல்வா அவர்கள் ஆயிரக்கணக்கான தபால்த் தலைகளை விநியோகித்தார். மேலும் சித்திரை 16 ஆம் திகதி தமிழ் அரசு காணிக் கச்சேரியையும் அவர் ஆரம்பித்தார். இதன்மூலம் தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு அரச காணிகள் உரிமையாக்கப்பட்டன. சமஷ்ட்டிக் கட்சி தனது சத்தியாக்கிரக போராட்டத்தை, அரசுக்கு அடிபணியாமைப் போராட்டமாக முன்னெடுத்திருப்பதைக் கண்ட சிறிமா அரசு இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தது. உடனடியாக அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய சிறிமா, தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ராணுவத்திற்கு சகல அதிகாரங்களையும் வழங்கி அனுப்பிவைத்தார். இதன் முதற்படியாக சமஷ்ட்டிக் கட்சியின் சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்களையும், அதற்குத் துணையாக பணிபுரிந்த பல தொண்டர்களையும் ராணுவம் கைதுசெய்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அரச அடக்குமுறையினால் செயலிழக்க வைக்கப்பட்டாலும் கூட தமிழ் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை சிறிது சிறிதாக பற்றியெரிய இச்சத்தியாக்கிரக நடவடிக்கை காரணமாகியது. மேலும், தமது அகிம்சைவழிப் போராட்டத்தை கொடூரமாக அடக்க இறக்கப்பட்டிருக்கும் அரச ராணுவத்துடன் நேரடியாக மோதுவது எனும் மனநிலையினை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது.
  6. கூட்டணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கை 1. இலங்கைச் சமஷ்ட்டி ஒன்றியத்திற்குள் மொழி அடிப்படையில் தமிழர்க்கென்று தனியான அதிகாரம் மிக்க பிரதேசத்தையோ அல்லது பிரதேசங்களையோ உருவாக்க வேண்டும். 2. தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்து மீளவும் கொடுக்கப்படுவதுடன், அரச அகரும மொழியென்கிற அந்தஸ்த்தும் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் வழங்கப்படுதல் அவசியம். 3. நடைமுறையிலிருக்கும் அநீதியான பிரஜாவுரிமைச் சட்டத்தினை ரத்துச் செய்து, மலையகத் தமிழருக்கான பிரஜாவுரிமையினை மீளவும் வழங்க வேண்டும். 4. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சமஷ்ட்டிக் கட்சியினருடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று தொடர்பாக ஒருமித்துச் செயற்படப்போவதாக பண்டாரநாயக்க அறிவித்திருந்தார். மொழிப்பிரச்சினை தொடர்பான சிக்கலுக்கு பண்டாவின் தனிச் சிங்களக் கொள்கையினை விட்டுக் கொடுக்காமலும், செல்வாவின் இரு மொழிக் கொள்கையினை ஏற்றுக்கொண்டும் பொதுவான இணக்கப்பட்டிற்கூடான தீர்வொன்றை எட்டுவதென்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின்படி தமிழும் தேசிய மொழியாக்கப்படுவதுடன், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த உடன்பாடும் சிங்களவர்களால் கைவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1956 இல் டட்லியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்ற ஒப்புதலும் கைவிடப்பட்டது. மேலும், தமிழர்கள் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழில் உரையாடி தமது நாளாந்த அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற உடன்பாடும் கைவிடப்பட்டது.
  7. மொழி 1960 களின் பிற்பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் மொழியென்பது ஒவ்வொரு தமிழனைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஒரு விடயமாகும். தமது மொழியின் தொன்மை பற்றியும் செழுமை பற்றியும் தமிழர்கள் மிகவும் பெருமை கொண்டவர்கள். தமிழ் மொழி மூலம் தாம் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படுவதை தமிழர்கள் பெருமையாகவே கருதினர். ஆகவேதான் 1956 இல் பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தினை அமுலாக்கியது தமிழர்களைக் கடுஞ்சினம் கொள்ள வைத்தது. தமிழுக்குச் சம அந்தஸ்த்துத் தரப்படும் என்கிற சிங்களத் தலைமகளின் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பண்டாரநாயக்கவின் தனிச் சிங்களச் சட்டம் முற்றிலும் மாறுபட்டு தமிழர்மீது சிங்களத்தினைத் திணித்தது அவர்களை வெகுவாகக் காயப்படுத்தியிருந்தது. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா பாராளுமன்றத்திற்கு முன்பாக, காலிமுகத்திடலில் தந்தை செல்வா தலைமையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய சத்தியாக்கிரகம் தமிழர்களை வெகுவாக ஈர்த்திருந்ததுடன், அவர்கள் மேல் அனுதாபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனி 5 ஆம் நாள், 1956 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் செல்வாவினால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மேல் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தினர். சமஷ்ட்டிக் கட்சி தனிச் சிங்களச் சட்டத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டினைத் தமிழர்களிடத்தில் கொண்டுசென்றது. சித்திரை 1957 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி திருகோணமலைக்கான யாத்திரையினை ஆரம்பித்ததுடன், அதன் முடிவில் மூன்று மாநாடு ஒன்றினையும் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டின் முடிவில் அரசாங்கத்திடம் 4 அம்சக் கோரிக்கையினைக் கூட்டணி முன்வைத்து ஒருவருடத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் கோரியிருந்தது.
  8. டட்லியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழருக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை உருவாக்கும் வழியினையும் தந்தை செல்வா சேர்த்திருந்தார். இவ்வொப்பந்தத்தில் பிராந்திய சபைகள் மாவட்ட சபைகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இவ்வொப்பந்தத்தின் பிரிவு 3 இன்படி..... இரு தலைவர்களுக்கிடையே ஒருமித்து ஏற்படுத்தப்படும் இணக்கப்பட்டிற்கு அமைவாக அதிகாரம் மிக்க மாவட்ட சபைகள் இலங்கையில் உருவாக்கப்படும். ஆனால், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இம்மாவட்ட சபைகள் இயங்கவேண்டிய திசையினைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும்..... என்று கூறியிருந்தது. டட்லி சேனநாயக்க ஒரு கண்ணியவான், ஆகவே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையினை மட்டுமே அடிப்படியாகக் கொண்டே தந்தை செல்வா தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தனது நிலைப்பாட்டினை எடுத்திருந்தார். ஆனால், டட்லியோ குறைந்தது மூன்று வருடங்கள்வரை தமிழர்களையும் தந்தை செல்வாவையும் அலைக்கழித்துவிட்டு இறுதியில் சமஷ்ட்டிக் கட்சியுடனான தனது அரசியல்க் கூட்டையும் துண்டித்துக் கொண்டார். இதனால் விரக்தியடைந்த தந்தை செல்வா சிங்கள மக்கள் தூரநோக்குச் சிந்தனையுள்ள தலைவர்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். இதேவேளை தமிழ் இளைஞர்கள் சிங்களவர்களின் அரசியல் வஞ்சகத்தினால் ஆத்திரமடைந்து வந்ததுடன், இதற்கெதிரான தமது கடுமையான அதிருப்தியையும் வெளிக்காட்டத் தலைப்பட்டனர். தமிழர்களின் அரசியல்ப் பாதையின் திசையினை அவர்கள் மாற்றவேண்டிய காலத்தின் அழுத்தம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. சிங்களத் தலைமைகளின்மேல் தமக்கு நம்பிக்கையில்லை என்று தமிழ் அரசியல்த் தலைவர்களிடம் வெளிப்படையாகக் கூறிய தமிழ் இளைஞர்கள், தமிழர்களுக்கான தனியான நாட்டினை உருவாக்குவதே தமக்கிருக்கும் ஒரே தீர்வென்றும் கூறத் தலைப்பட்டனர்.
  9. சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்விற்கெதிரான சிங்கள பெளத்தர்களின் கடுமையான எதிர்ப்பினை அறிந்துவைத்திருந்த தந்தை செல்வா அவர்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கான அடித்தளத்தினை உருவாக்குவதில் 1957 ஆம் ஆண்டிலிருந்து 1968 வரையான தனது அரசியல்க் காலத்தினைச் செலவிட்டிருந்தார். பண்டாரநாயக்காவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகளின் உருவாக்கம் பற்றி அவர் கோரிக்கையினை முன்வைத்து அதற்கான சம்மதத்தினை பண்டாரநாயக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தின் மூலம் வடக்கிற்கென்று ஒரு பிராந்திய சபையும், கிழக்கிற்கென்று இரு பிராந்திய சபைகளும் உருவாக்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தேவையேற்படும் பட்சத்தில் மாகாண எல்லைகளைத் தாண்டி இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும் என்கிற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகம் தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்கிற கோரிக்கையும் அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான அடித்தளமும் இடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய சில பகுதிகள், 1. குறித்த கால அட்டவணையின்படி பிராந்திய சபைகளின் உருவாக்கம் நடத்தப்பட வேண்டும். 2. வட மகாணம் ஒரு பிராந்தியமாக மாற்றப்படும் அதேவேளை கிழக்கு மாகாணம் இருவேறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்படும். 3. ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ஏற்பாடுகள் மூலம் மாகாண எல்லைகளைக் கடந்துகூட இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும். அதேபோல ஒரு பிராந்தியம் இரண்டாகப் பிரிக்கப்படும் தேவையேற்படின் பாராளுமன்ற அதிகாரம் மூலம் அதனைச் செய்யமுடியும். அத்துடன், பொதுவான ஒரு நோக்கத்திற்காக இரு பிராந்தியங்கள் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட முடியும். 4. பிராந்தியங்களுக்கான தனியான தேர்தல்களை நேரடியாக நடத்த முடியும். ஆனால், தந்தை செல்வாவுடன் தான் செய்துகொண்ட இந்த உடன்படிக்கையினை 1958 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் நாளன்று ஒருத்லைப் பட்சமாக பண்டாரநாயக்கா கைவிட்டார். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தல்கம் அமைந்திருந்த ரோஸ்மீட் பிளேஸின் முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து தந்தை செல்வாவுடன் தான்செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அவர் முற்றாகக் கைவிட்டார். மேலும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை ஒன்றினையும் ஆரம்பித்திருந்தது. ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு சிங்களக் கட்சிகளும் சிங்களவர்களின் நலன்களைக் காப்பதில் தாமே மேலானவர்கள் என்று காட்டுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக தமிழர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை அன்றிலிருந்து முடுக்கிவிட்டிருந்தனர். பண்டாரநாயக்காவின் கொலையினையடுத்து இரு சிங்களத் தேசியக் கட்சிகளுக்கிடையேயும் ஆட்சியைக் கைப்பற்றும் கடுமையான போட்டியொன்று ஆரம்பித்திருந்தது. இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தந்தை செல்வா அவர்கள் அரசாங்கத்தினை அமைக்கவும், தேவையேற்படும்போது அதனைக் கலைக்கவும் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பலம் கிடைத்தது. 1960 பங்குனியில், பண்டாவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவோம் என்கிற சிறிமாவின் உறுதிமொழிக்கு அமைவாக அவருக்கு ஆதரவளித்ததன் மூலம், டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியினைத் தோற்கடித்து சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சியினை ஆட்சி ஆட்சியமைக்க தந்தை செல்வா உதவினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தான் கொடுத்த உறுதிமொழியை உதாசீனம் செய்த சிறிமாவோ, தொடர்ந்தும் தமிழர் விரோத நிலைப்பாட்டில் செயற்பட ஆரம்பித்தபோது தந்தை செல்வா, 1965 இல் சிறிமாவின் அரசிற்கு கொடுத்த ஆதரவினை விலத்தி, டட்லியுடன் சேர்ந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்தார்.
  10. அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு கல்லோயாக் குடியேற்றத்திட்டம் காரணமாயிருந்தது போல திருகோணமலை மாவட்டத்தின் அல்லை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மொறவெவ, மஹதுவுலுவெவ ஆகிய குடியேற்றங்களும் காரணமாய் அமைந்திருந்தன. வவுனியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகை வீதத்தை வெகுவாகக் குறைக்கவும், சிங்களவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் பதவிய எனும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கான தனியான சிங்களத் தேர்தல்த் தொகுதிகளையும் சிங்கள அரசு அறிவித்தது. தமிழரின் பாரம்பரிய வாழிடங்களான அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்லை எனும் புதிய தேர்தல் தொகுதியும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் புதிய தேர்தல் தொகுதியும் ஏற்படுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்தல் தொகுதிகள் மூலம் 1977 ஆம் பொதுதேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் இதனால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட வீதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் இச்சிங்கள ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுபோல் வவுனியா மாவட்டத்திலிருந்தும் மேலதிகமாக ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. 1977 இல் தந்தை செல்வா அவர்கள இறந்ததையடுத்து தமிழர் தாயகத்தில் அரச ஆதரவில் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரசியல் - ராணுவப் பின்புலத்துடன் அசுர கதியில் முடுக்கிவிடப்பட்டன.தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தொடர்பினைத் துண்டிப்பதன் மூலம் அவர்களைன் தாயக் கனவைக் சிதைக்கவும் , தமிழ்ப் போராளிகளை வடக்கிற்குள் முடக்கி முற்றாக அழிக்கும் நோக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பகுதியில் "வலிஓயா" எனும் பெயரில் முற்றான ராணுவப் பலத்துடன் சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுபற்றிப் பிரபாகரனின் கதையில் நாம் மேலும் பேசலாம். அதிகாரங்களைப் பகிர்தல் அரசாங்கத்தில் தமக்கு நீதியாகக் கிடைக்கவேண்டிய அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் முற்றாக இழக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருவதுபற்றி தந்தை செல்வா அச்சம் கொண்டிருந்தார். ஒற்றையாட்சியின் கீழ் மொத்த ஆளும் அதிகாரமும் எண்ணிக்கையில் பெரும்பானமையினரான சிங்களவர்களிடமே குவிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். தமது பெரும்பான்மைப் பலத்தினூடாக தமிழர்களை அடக்கவும், வஞ்சிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இதனால் ஏற்படுத்தப்பட்டது. தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியினூடாக அவர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறைமையினை நீக்கி, அதிகாரங்களைப் பகிரும் சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் திட்டமொன்றை முன்வைக்குமாறு அவர் அரசைக் கேட்டுக்கொண்டார். அவரது தீர்மானத்தின் சாராம்சம் கீழே..... தமிழருக்கான சுயாட்சி அதிகாரமுள்ள பிரதேசம் ஒன்றினை சமஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் பெற்றுக்கொள்ளுதல்...... சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951 ஆம் ஆண்டு சித்திரை 12 இலிருந்து 15 வரை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே தீர்வு சம்ஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் அவர்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதுதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழருக்கான சுயாட்சிப் பிரதேசம் எனூம் கோரிக்கையினை தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழரிடம் முன்வைத்ததோடு ஒற்றையாட்சி முறைமையினை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்தனர். ஆனால் இத்தேர்தலில் இந்தக் கோட்பாட்டினைக் கண்டுகொள்ள மறுத்த தமிழர்கள் தமது தவறை உணர்ந்து 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கோரிக்கைக்கான தமது ஆதரவினை நல்கினர். இத்தேர்தலில் வடக்குக் கிழக்கின் 14 இடங்களில் போட்டியிட்ட தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒற்றையாட்சிக்கெதிரான தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்பை பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களான பங்குனி 1960, ஆடி 1960 மற்றும் 1965, 1970 ஆகிய தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1977 ஆம் ஆண்டுப் பொதுதேர்தலில் தமிழருக்கென்று தனியான சுதந்திர நாடொன்றினை உருவாக்குவதற்கான தமது ஆணையினை தமிழ்மக்கள் வழங்கினர்.
  11. 1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10%
  12. அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் எனது இரண்டாவது சரிதை சமஷ்ட்டிக் கட்சியின் ஸ்த்தாபகரும், தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினுடையது. அவரது நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக இதனை எழுதிவந்தேன். இலங்கைத் தமிழரின் மிக முக்கியமான அரசியல்த் தலைவராகவிருந்த செல்வாவின் நூறாவது பிறந்தநாள் நினைவினை அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் அனுட்டிக்க அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி முயலவில்லை என்பது வேதனை. நான் எழுதிவந்த இத்தொடரில் தமிழர்களின் அவலங்களான அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளமை, தமிழ் மொழியினை திட்டமிட்டு புறக்கணித்தமை ஆகியவை தொடர்பாகவும் எழுதி வந்தேன். அத்துடன், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற ஜனநாயக வழிப் போராட்டங்கள் பற்றியும், அவை சிங்களத் தலைவர்களாலும், சிங்களக் குண்டர்களாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டன என்பது குறித்தும் விலாவாரியாகத் தேடி எழுதிவந்தேன். மேலும் தந்தை செல்வாவின் விட்டுக்கொடுக்கா மனோநிலைபற்றியும், இரு சிங்களப் பிரதமர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பற்றியும், அவ்வுடன்படிக்கைககளின் தோல்விபற்றியும், சிங்கள அரசுகளுடனான அவரது ஒத்துப்போதல்கள் பற்றியும் எழுதினேன். 1957 இலிருந்து 1968 வரையான 11 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுகளுடன் ஒத்துப்போதல் எனும் தந்தை செல்வாவின் பரீட்சாத்த நடவடிக்கையின் தோல்வி அவரை மிகக் கடுமையான அதிருப்திக்கும், விரக்திக்கும் உள்ளாகியதுடன், தமிழர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழம் எனும் தனியான நாட்டினை இலங்கையிலிருந்து பிரித்தெடுப்பதற்கான நடவடிக்கையின் முதற்படியான 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்யுமளவிற்கு தள்ளிச் சென்றது.
  13. உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது.
  14. பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.
  15. சிறு பிள்ளையாக பிரபாகரன் தொண்டைமான் பற்றி நான் முன்னர் பதியாத இன்னொரு முக்கியமான விடயம் அடுத்த வருடம் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. பலாலி வினாமப்படைத் தளத்தில் வந்திறங்கிய விமானங்களிலிருந்து இறக்கப்பட்ட டிரக் வண்டிகளில் இந்திய ராணுவத்தினர் வந்திறங்கினர். பலாலி யாழ்ப்பாண வீதியில் அவர்கள் பவணி வந்தபோது பலத்த ஆரவாரத்துடனான வரவேற்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பிரபாகரனை இந்திய அரசு தில்லியில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்திருக்கிறது என்கிற செய்தி பரவியபோது இந்திய ராணுவத்தை வரவேற்ற தமிழ் மக்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் இந்திய ராணுவத்தின்மீது தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தலைப்பட்டனர். இந்திய ராணுவ வாகனங்களை வீதிகளில் வழிமறித்தனர்.தமது தலைவர் மீளவும் பாதுகாப்பாக தம்மிடம் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பிரபாகரன் மீது தமிழர்கள் வைத்திருந்த பாசத்தினையும், நம்பிக்கையினையும் கொழும்பிலிருந்தே அவதானித்துக்கொண்டிருந்த தொண்டைமான் அதிசயித்துப் போனார். "பிரபாகரன் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். பிரபாகரன் தொடர்பாக தொண்டைமான் அதுவரை வைத்திருந்த கண்ணோட்டத்தில் இது மிகப்பெரிய வேறுபாட்டினைக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன். அதுவரை பிரபாகரனை ஒரு ராணுவ வல்லுனனாக, ஒரு சிறந்த ராணுவத் திட்டமிடலாளனாகவே அவர் எண்ணியிருந்தார். ஜெயவர்த்தனாவின் அரசையும் ராணுவத்தையும் ராணுவப் பலத்தின் மூலம் முடக்கி சமாதான மேசைக்குக் கொண்டுவருவதில் பிரபாகரன் முயலும் அதேவேளை, ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றே அவர் நம்பியிருந்தார். பிரபாகரன் தொடர்பாக நீங்கள் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறக் காரணம் என்ன என்று அவரிடம் வினவினேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், "மக்கள் அவருடன் இருக்கிறார்கள்". 1989 ஆம் ஆண்டிலிருந்து பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வரத் தொடங்கினார். தனது சரிதையினை விரிவாக்க அவர் என்னை இரண்டாவது முறை அழைத்தபோது பிரபாகரனுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவினை தனது வாழ்வின் மிக முக்கிய விடயமாகக் குறிப்பிடவேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
  16. அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது.
  17. மிக்க நன்றி இணையவன், தமிழ்ச் சங்கம் ஆசிரியருடன் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன். அவரது பதில் வந்தவுடன் நான் இதனை எழுத ஆரம்பிக்கலாம். மிக்க நன்றி அண்ணா, எனக்கும் எழுதவே விருப்பம். அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி சிறி, அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கலாம்.
  18. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  19. கணிணி யுகத்தில் ரஸ்ஸியப் பொய்ப்பிரச்சாரம் உக்ரேனில் தான் புரிந்துவருகிற இனவழிப்பினை மறைக்க புட்டின் மேற்கொண்டுவரும் பொய்ப்பிரச்சாரம் ஒன்றும் புதியது அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களால் கடைப்பிடிக்கப்பட்ட உத்திதான் என்று, உளவியல்ப் போர் வகையென்றும் அவர்கள் இதனைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், நவீன யுகத்தில் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவோர் தமது குற்றங்களையே, தற்போதிருக்கும் தொழிநுட்பத்தினைப் பாவித்து தமக்குச் சார்பான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வசதியினைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது வெளிப்படையாகக் கிடைக்கும் சாட்சியங்களையே தகவல் தொழிநுட்பம் ஊடாக, மாற்றியமைத்து, படிப்போரின் சிந்தனையில், சந்தேகத்தினையும், அதனூடான மாற்றத்தினையும் கொன்டுவருவதன் மூலம், தமது சொந்தக் குற்றங்களை, தம்மால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே திருப்பிவிடும் உத்திகளை அவர்கள் பாவிக்கிறார்கள். இன்று சமூக வெளியில் பரவிக் கிடக்கும் ஏராளமான தகவல்களை ஒருவரால் முழுவதுமாக அலசுவதென்பது இயலாத காரியம். ஆகவேதான், தனக்குப் பிடித்த சில தகவல்களை மட்டுமே அவர் படிப்பதோடு, ஒரு கட்டத்தில் இதனையே உண்மையென்றும் நம்பத் தலைப்பட்டு விடுகிறார். இவ்வாறானவர்களையே புட்டினின் ஆதரவாளர்களும், பிரச்சாரகர்களும் இலக்குவைத்து தமது நடவடிக்கையினை முடுக்கிவிடுகின்றனர். கணிணி வலையமைப்பு மூலம் பல எண்ணிக்கையானவர்களை இவர்களால் எட்ட முடிவதால், இப்பொய்ப் பிரச்சாரங்கள் பலராலும் உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடுகிறது.
  20. பாலியல் வன்புணர்வை ஆயுதமாகப் பாவிக்கும் புட்டின் தாம் ஆக்கிரமித்து நின்ற பூச்சா பகுதியில் இயங்கிவந்த சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றினை ரஸ்ஸியர்கள் சித்திரவதைக் கூடமாகப் பாவித்தார்கள் என்பதற்கான சாட்சிகள் வெளித்தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அத்துடன் தம்மால் படுகொலை செய்யப்படும் பல நூற்றுக்கணக்கான உக்ரேனியர்களைப் புதைப்பதற்கென்று ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள் அப்பகுதியெங்கும் தோண்டிவரும் பாரிய புதைகுழிகள் செய்மதிகளூடாகத் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் அரைகுறையாக எரித்துக்கொல்லப்பட்ட பல உக்ரேன் பெண்களின் வெற்றுடல்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக் கிடப்பதை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட பல உக்ரேனியப் பெண்களும், சிறுமிகளும் இறுதியில் கொல்லப்பட்டும் எரிக்கப்பட்டும் வீதிகளில் தூக்கியெறியப்படுவது பல இடங்களிலும் ரஸ்ஸியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. உக்ரேனின் அரச ஊழியர்களைக் குறிவைத்துக் கொன்றுவரும் புட்டினின் இனக்கொலையாளர்கள் மொடிஸின் பகுதியின் நகர மேயரையும் அவரது குடும்பத்தில் இருந்த அனைவரையும் கைகளைப் பின்னால் கட்டி, தலையில் சுட்டுக்கொன்றுவிட்டு, தலைகள் வெளியே தெரியும்படி புதைத்துவிட்டுச் சென்ற அகோரமும் வெளிவந்திருக்க, இவை எல்லாமே நாடகங்கள் என்றும், உக்ரேனிய - இங்கிலாந்து ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கைங்கரியங்கள் என்றும் புட்டினை - நம்புவோர் எனும் பிரச்சாரப் பிரிவு நிறுவ முயற்சிப்பது, புட்டினை வெளியே இருந்து ஆதரிக்கும் சிலருக்குக் கூட தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. எதிரியின் பெண்களை இலக்குவைத்து பாலியல் வன்கொடுமை புரிதல், இழுத்துச் சென்று துன்புறுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் எதிரி மீதான வெற்றியெனும் மநோநிலை எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் இருக்கிறது. ஈழத்தில் தமிழ்ப்பெண்களை இலக்குவைத்து சிங்கள இனக்கொலையாளர்கள் நடத்திய அனைத்து வெறியாட்டங்களும் , ஒன்றில் எமதினத்தைக் கொச்சைப்படுத்தவோ, தமிழினத்தின் பொக்கிஷங்களான எமது பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திக் கொல்வதை ஒரு பெரு வெற்றியாகவோ எண்ணித்தான் செய்யப்பட்டு வருகின்றன. அதே பாணியிலான பெண்கள் மீதான அக்கிரமங்களையே உக்ரேனிலும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளி புட்டினும் செய்துவருகிறான் என்பது கண்கூடு. உக்ரேனில் இனவழிப்பை நடத்திவரும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகள் 3 வயது சிறுமியொருத்தியை வன்புணர்ந்தது, அவளை வன்புணர்ந்த ரஸ்ஸிய வீரர்களாலேயே வீடியோவாகப் படமாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. பல தாய்மார்கள் அவர்களது பிள்ளைகள் பார்த்திருக்க ரஸ்ஸிய மிருகங்களால் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட பல பெண்களை ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள், ஏனைய கிராமத்தவர்கள் பார்த்திருக்க மீண்டும் மீண்டு கூட்டாக வன்புணர்ந்தது அவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில், தமது இச்சை தீரும்வரை கூட்டாகப் பாலியல் வன்புணர்வு புரிந்து, கொல்லப்பட்ட பெண்களின் முகங்கள் மீது மலங்கழித்து தனது வெற்றியை சர்வாதிகாரி புட்டினின் படைகள் நிறுவியிருக்கின்றன.
  21. சர்வாதிகாரி புட்டினின் பொய்களை விளக்குதல் சர்வாதிகாரி புட்டினை நியாயப்படுத்தியும், அவனது படுகொலைகளை நடக்கவில்லையென்று அடியோடு மறுத்தும், அவனுக்கு ஆதரவாக இணையத்தில் பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் அவனது ஆதரவாளர்களான "புட்டின் - வெஸ்டகர் , தமிழில் புட்டினைப் புரிந்துகொண்டோர் " எனும் கூட்டம் மிகவும் பரிதாபத்திற்குரிய பொய்களைப் பரப்பி வருவது தெரிகிறது. இந்த பிரச்சாரகர்கள் கூட்டம் அடிப்படையிலேயே மிகவும் தவறான, சாத்தியமில்லாத பொய்களைக்கொண்டே தமது புனைவுகளை கட்டி வருகின்றன. உதாரணத்திற்கு மேற்குலக ராணுவ வல்லுனர்களே இப்படுகொலைகளைச் செய்தார்கள் எனும் இவர்களின் கூப்பாடு உண்மையிலேயே எப்படிச் சாத்தியமாகும் என்பது இவர்களுக்கே வெளிச்சம். ஒரு பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டு, அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆக்கிரமிப்பாளர்களைக் குவித்துவைத்திருக்கும் நிலையில் ஒரு மேற்குலக ராணுவத்தால், அப்பகுதியெங்கும் சுற்றித்திருந்து மக்களைக் கொல்வது எங்கனம் சாத்தியம்? அதுவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு? உக்ரேனிய பாஸிஸ்ட்டுக்களே இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள் என்றால், அதனை அவர்கள் செய்ததற்கான சாட்சிகளை எப்படி இலகுவாக, அதுவும் ரஸ்ஸியர்களின் கண்களில் படுமளவிற்கு விட்டுச் சென்றார்கள்? ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்து நின்ற இடங்களிலெல்லாம் நடிகர்களையும், நடிகைகளையும் எப்படி அவ்வளவு சுலபமாக கொண்டுசென்று ஒரு முற்றான நாடகத்தினை உக்ரேனியர்களால் மேடையேற்ற முடிந்தது? அதுவும் ரஸ்ஸியர்கள் பிரசன்னம் அதிகமாக இருந்த இடங்களில்? சரி, இவையெல்லாம் இருக்கட்டும். ரஸ்ஸிய இனவழிப்பு ராணுவம் இப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலத்திலேயே செய்மதிப் படங்களூடாக கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக் கிடந்ததை இந்த உலகம் பார்த்ததே? உக்ரேனும், மேற்குலக நண்பர்களுமே இதனைச் செய்தார்கள் என்றால், எப்படி அவர்களால் ரஸ்ஸிய தாங்கிகளுக்கு அண்மையாகச் சென்று இம்மக்களைக் கொல்லவோ அல்லது நடிகர்களை வீதிகளில் கிடத்தி நாடகம் ஆடவோ முடிந்தது? ஆக்கிரமிப்பிலும், அழித்தொழிப்பிலும், இனவழிப்பிலும் ஈடுபடும் ரஸ்ஸியா போன்றதொரு ராணுவம் இவற்றைச் செய்யாது என்பதற்கும், இதுவரை இப்படியான படுகொலைகளைச் செய்யவில்லையென்பதற்கும் சரித்திரத்தில் சாட்சிகள் இருந்திருக்கிறதா? இல்லையே. அப்படியானால், இப்போதுமட்டும் ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள் இக்கொலைகளைச் செய்யவில்லையென்பதற்கும், ஐ நா மனிதவுரிமை சாசனத்தை ஒரு கையிலும், இன்னொரு கையில் ஒலிவ மரக்கிளையினையும் ஏந்திக்கொண்டு "நாஜிகளிடமிருந்து உக்ரேனியர்களை மீட்கும் விசேட நடவடிக்கை" ஒன்றினை தான் மேற்கொள்வதாக சர்வாதிகாரி புட்டின் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? 1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் செச்னியாவை ஆக்கிரமித்த போர்க்குற்றவாளி புட்டினின் கொலையாளிகள் அப்பகுதியெங்கும் தாம் சகட்டுமேனிக்குக் கொன்றுகுவித்த லட்சக்கணக்கான அப்பாவிகளின் உடல்களை தாம் வெளியேறியபோது அப்படியே வீதிகளிலும், ,அரைகுறையான பாரிய மனிதப் புதைகுழிகளிலும் விட்டுச் சென்ற அதே செயற்பாடுகளையே இன்று சர்வாதிகாரி புட்டின் உக்ரேனிலும் செய்துவருகிறான் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சாடியிருக்கிறது. குறிப்பாக அப்பாவிகளை வரிசையில் நிற்கவைத்து பின்னாலிருந்து தலையில் சுட்டுக் கொல்லும் கொடூரத்தை சர்வாதிகாரி புட்டினின் படைகள் செச்னியாவிலும் உக்ரேனிலும் ஒரேவிதத்திலேயே அரங்கேற்றி வந்திருக்கின்றன என்று அது கூறுகிறது.
  22. உக்ரேனில் தனது படுகொலைகளின் கொடூரம் வெளித்தேரிய தொடங்கியிருப்பதையடுத்து, தனது பொய்ப்பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கும் சர்வாதிகாரி புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து நிற்கும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் கொடூரங்கள் வெளித்தெரிய ஆரம்பித்திருப்பதையடுத்து, இந்த மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை தனது மூலோபாய, அரசியல் நலன்களுக்காக நியாயப்படுத்தவோ அல்லது இவற்றைத் தனக்கெதிரான சதியென்று நிறுவுவதற்கோ ரஸ்ஸியப் போர்க்குற்றவாளியான சர்வாதிகாரி புட்டின் முயன்று வருகிறான் என்பது தெளிவாகிறது. கியிவின் புறநகர்ப்பகுதியான பூச்சாவிலிருந்து ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் ரஸ்ஸிய ராணுவத்தினர் புரிந்த மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. குறிப்பாக கைகள் பின்னால் கட்டப்பட்டு, அருகிலிருந்து பிடரியில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் பற்றிய விபரங்களை வெளியானதையடுத்து இப்படுகொலைகளை செய்தது உக்ரேனிய ராணுவமும் அதனது மேற்குலக அரசுகளும் தான் என்று பொய்யான பிரச்சாரத்தினை சர்வாதிகாரி புட்டினும் அவனது ஆதரவாளர்களும் முடுக்கி விட்டிருக்கின்றனர். இப்படுகொலைகளை மறைக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கிய ரஸ்ஸிய பொய்ப் பிரச்சாரகர்களும், ஆதரவாளர்களும் பின்வருமாறு கூறுகின்றனர், "இப்படுகொலைகளை நாம் செய்திருக்கமுடியாது, நாம் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டோமே? ", "நிச்சயமாக இது இங்கிலாந்து ராணூவத்தின் உளவியல் யுத்தம் தான்", "இல்லையில்லை, இது உக்ரேனிய பாஸிஸ்ட்டுக்களான அசோவ் பட்டாலியன் அமைப்பினால் நடத்தப்பட்டிருக்கிறது, அல்லது இங்கிலாந்து ராணுவமும், அசோவ் பட்டாலியனும் சேர்ந்தே இந்த மக்களைக் கைகளைக் கட்டிக் கொன்றுள்ளனர்", "இல்லையில்லை, இவை எல்லாமே சோடிக்கப்பட்ட நாடகம், சுடப்பட்டு வீதியில் கிடப்பவர்கள் எல்லாருமே நடிகர்கள், காலை அசைக்கிறார்கள், கையை உயர்த்துகிறார்கள், பாடல் பாடுகிறார்கள்......." என்று இப்படுகொலைகளை ஒன்றில் தனது ராணுவம் செய்யவில்லையென்றோ, அல்லது உக்ரேன் ராணுவமே செய்ததென்றோ, அல்லது முற்றான நாடகம் என்றோ கூறிவருகிறது. முள்லிவாய்க்கால் இனவழிப்பில் தமிழர்களை புலிகளே கொல்கிறார்கள், மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள், கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட தமிழர்களும், குண்டுவீச்சிலிருந்து தப்பியோடுவதாகக் காட்டும் சிறுமிகளும், அவர்களைத் தொடர்ந்துசென்று புகைப்படம் எடுக்கும் புலிகளும் செய்வது முற்றான நாடகம்" என்று சிங்கள இனவழிப்பாளர்கள் அன்று செய்த அதே பொய்ப்பிரச்சாரத்தினை சர்வாதிகாரி புட்டினும் அவனது ஆதரவாளர்களும் இன்று செய்துவருகிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் நாஜிகளால் படுகொலைசெய்யப்பட்ட பல லட்சம் மக்களின் கொலைகளை மேற்குலகே செய்ததாக கோயப்லஸ் எனும் பொய்ப்பிரச்சார மிருகத்தை வைத்து ஹிட்லர் நியாயப்படுத்தியதைப் போன்றே, சர்வாதிகாரி புட்டினும் இன்று வெளிவரத் தொடங்கியிருக்கும் தனது அக்கிரமங்களை பொய்யென்று பிரச்சாரப்படுத்தி வருகிறான். ரஸ்ஸிய அரச செய்திப்பிரிவிலிருந்து வெளிவரும் செய்திக்குறிப்புக்களை அப்படியே வெளியிட்டு வரும் ஏனைய ரஸ்ஸிய ஊடகங்களும், சர்வதேசத்தில் இயங்கிவரும் ரஸ்ஸிய தூதரகங்களும் தமது சர்வாதிகாரி புட்டினின் படுகொலைகளை மறைக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. சர்வாதிகாரி புட்டினின் ஊதுகுழலான டிமிட்ரி பெச்கோவ் மற்றும் ஐ நா வுக்கான ரஸ்ஸிய தூதுவர் ஆகியோர் வெளியிட்டு வரும் பொய்ப்பரப்புரைகளை இந்த ரஸ்ஸிய ஊதுகுழல்களும், ஆதரவாளர்களும் அப்படியே வழிமொழிந்தும், வேதவாக்காக வெளியிட்டும் வருகின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னெவென்றால், தான் உக்ரேனில் நடத்திவரும் மனிதநேயத்திற்கு எதிரான படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும், உக்ரேன் அரசே செய்தது என்றும் குற்றஞ்சாட்டிக்கொண்டு, அவற்றை விசாரிக்கவேண்டும் என்று ஐ நா வில் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டினின் எடுபிடிகள் அடம்பிடித்ததுதான் !
  23. ரஸ்ஸிய ராணுவத்தால் இயக்கப்பட்ட சித்திரவதைக் கூடங்கள் சித்திரை 4 ஆம் திகதி அறிக்கையொன்றினை வெளியிட்ட உக்ரேனின் பிரதம வழக்குத் தொடுநர், பூச்சா பகுதியில் இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றினை ரஸ்ஸிய ராணுவத்தினர் சித்திரவதைக் கூடமாக பாவித்து வந்ததை கியிவ் பொலீஸார் கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார். இச்சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் நிலக்கீழ் அறையில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து ஆண்களின் உடல்கள் பின்னால் கட்டப்பட்டு, அவர்கள் தொங்கவைக்கப்பட்டுக் கிடந்ததை பொலீஸார் கண்டதாகவும், உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சித்திரை 5 ஆம் திகதி, பூச்சாவின் சிறுவர் மைதான வீதியில் எரியூட்டப்பட்ட பல பொதுமக்களின் உடல்கள் காணப்பட்டதை அஸோசியேட்டட் நியூஸ் பத்திரிக்கையாளர் ஆவணப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டவர்களுள் குழந்தை ஒன்றினதும் உடல் காணப்பட்டதையும், உடல்கள் சிலவற்றில் தலையில் சுடப்பட்டமைக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. சித்திரை 6 ஆம் திகதி கண்ணிவெடியில் அகப்பட்டுச் சிதறிய உடல் ஒன்றையும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனான உடல்கள் மூன்றையும் தாம் கண்டெடுத்ததாக உக்ரேனிய விசாரணையாளர்கள் தெரிவித்தனர். கியிவி இன்டிபென்டன்ட் எனும் பத்திரிக்கை செய்தி வெளியிடுகையில், தெருக்களில் நடந்துசென்ற உக்ரேனியப் பொதுமக்கள் ரஸ்ஸிய ராணுவம் சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கிறது. பங்குனி 4 ஆம் திகதி தெருவில் சென்ற மூவரை அருகிலிருந்து சுட்டுக் கொன்ற ரஸ்ஸியர்கள், கார்களில் தப்பிச் சென்ற குடும்பம் ஒன்றின் மீது கனரக வாகனம் ஒன்றிலிருந்து தாக்குதல் நடத்தியதில் இரு குழந்தைகள் அடங்கலாக காரில் பயணித்த நால்வர் ஸ்த்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது. புச்சா நகரை ஆக்கிரமித்த ரஸ்ஸிய ராணுவம் முதல் சில நாட்களில் தமது கனரக வாகனங்களில் நகரை வலம்வந்து தெருக்களில் காணப்பட்ட பொதுமக்கள் மீது சகட்டுமேனிக்குத் துப்பாக்கித் தாக்குதல் நடத்திக் கொன்றதை ஊர்மக்கள் சாட்சியப்படுத்தியதாகவும் கூறுகிறது. உக்ரேனின் பொதுமக்கள் கொல்லப்படும் விதத்தினை போர்க்குற்றம், இனவழிப்பு, படுகொலை என்று உக்ரேனிய அரசு கூறிவரும் நிலையில், ரஸ்ஸிய பாதுகாப்பு அமைச்சு இப்படுகொலைகள் சோடிக்கப்பட்டவை, நாடகங்கள் என்று கூறி நிராகரித்ததுடன், உக்ரேனிய ராணுவத்தினரே தமது பொதுமக்களைக் கொன்றுவிட்டு ரஸ்ஸிய ராணூவத்தினரின் மீது அபாண்டமாகப் பழிசுமத்துவதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஸ்ஸியாவின் மனிதவுரிமை மீறல்களைக் கண்டித்திருப்பதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ரஸ்ஸிய ராணுவத்தினர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கின்றன. சித்திரை 4 ஆம் திகதி கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், புட்டின் ஒரு போர்க்குற்றவாளி என்று கூறியிருப்பதுடன், இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புட்டினினின் ராணூவம் பூச்சா பகுதியில் புரிந்திருக்கும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்காக அவரை நீதியின் முன் நிறுத்த தனது அரசு ஆவணங்களைச் சேகரித்து வருகிறது என்றும் கூறியிருக்கிறார். சர்வதேச மன்னிப்புச்சபை பூச்சா படுகொலைகள் பற்றிக் கூறுகையில், " பூச்சா நகர் பொதுமக்கள் மீது ரஸ்ஸியா நடத்தியிருக்கும் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பான, அநீதியான படுகொலைகளாகும், ஆகவே இவை போர்க்குற்ற வரையறைக்குள் அடங்குகின்றன, இவை நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் கூறியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தலைவர் அக்னஸ் கலமார்ட் கூறும்போது, "ஆயுதம் ஏந்தாத அப்பாவி உக்ரேனியர்கள் அவர்களது வீடுகளிலும் தெருக்களிலும், தஞ்சமடைந்திருந்த இடங்களிலும் இருந்து ரஸ்ஸிய ராணுவத்தால் மிகவும் குரூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை மனித நேயத்திற்கெதிரான பாரிய குற்றங்களாகும்" என்று கூறியிருக்கிறார்.
  24. கியிவ் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் சித்திரை 15 ஆம் திகதி கியிவ் பிராந்தியப் பொலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கியிவினைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஸ்ஸிய ராணுவம் வெளியேறிச் சென்றுள்ளதையடுத்து அப்பகுதியில் குறைந்தது 900 பொதுமக்களின் உடல்களைக் கண்டெடுத்ததாகக் கூறுகின்றனர். இவர்களுள் 350 பொதுமக்கள் பூச்சா பகுதியில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாகக் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்களில் 95 வீதமானவர்கள் அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான தடயங்களைக் கொண்டிருந்ததாகக் கூறும் பொலீஸார், இன்னும் பல பொதுமக்களில் உடல்களை பாரிய மனிதப் புதைகுழிகளுக்குள் இருந்தும், கட்டிட இடிபாடுகளுக்கடியிலிருந்தும் தாம் கண்டெடுத்துவருவதாகவும் கூறுகின்றனர். பூச்சா படுகொலைகள் கியிவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பூச்சாவிலிருந்து ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த பங்குனியில் வெளியேறியபின்னர் அந்நகர்ப்பகுதியினைப் பார்வையிட்ட பொதுமக்கள் வீதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கிடந்ததை அவதானித்துள்ளனர். இதே நேரத்தில் இப்பகுதியில் பொதுமக்களின் குறைந்தது 20 உடல்களைத் தாம் கண்டதாகச் சர்வதேசச் செய்தியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவற்றுள் சில உடல்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் கிடந்ததை ஏ எf பி செய்தியாளர் ஆவணப்படுத்தியிருக்கிறார். பூச்சா நகர மேயர் அனடொலு பெடுரொக் கூறுகையில், தம்மால் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொதுமக்களினதும் உடல்களில் தலைகளின் பின்னாலேயே துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகக் கூறுகிறார். தம்மால் கண்டெடுக்கப்பட்ட 280 பொதுமக்களின் உடல்களை தாம் பாரிய குழிகளில் அடக்கம் செய்ததாகக் கூறும் இவர், இப்பகுதியில் இதுவரையில் 350 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்லதாகக் கூறினார். இதேவேளை இந்த உடல்களில் சில பெண்களின் உடல்களும் காணப்பட்டதாகவும், இப்பெண்களின் உடல்கள் நிர்வாணமாக்கப்பட்டும், அவர்களின் உடல்களை ரஸ்ஸிய ராணுவம் பாதியாக எரித்தும் சென்றிருப்பது இப்பெண்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, தடயங்களை அழிப்பதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூச்சா பிராந்தியத்தின், சபுச்சாயா பகுதியில் ஒரு வீட்டின் நிலக் கீழ் அறையொன்றில் முற்றாக எரிக்கப்பட்டிருந்த 20 ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், பல பொதுமக்களின் உடல்களிலிருந்து காதுகள் அறுக்கப்பட்டும், பற்கள் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டும் இருப்பது இப்பொதுமக்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்றும் அக்கட்டுரை கூறுகிறது. பல வீடுகளில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது ரஸ்ஸிய ராணூவம் கைய்யெறிகுண்டுகளை எறிந்துவிட்டுச் சென்றதாகவும் சாட்சிகள் கூறியிருப்பதுடன், புகைக்குண்டுகள் எறிந்த வீடுகளில் அகப்பட்டிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறி வெளியே ஓடிவரும்போது, ரஸ்ஸிய ராணூவம் அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பூச்சா பகுதியில் ரஸ்ஸிய ராணூவம் நிலைகொன்டிருந்த நாட்களில், நகரத்தின் உயர்வான கட்டிடங்களில் பதுங்கியிருந்த ரஸ்ஸிய குறிபார்த்துச் சுடும் வீரர்கள் வீதிகளால் சென்ற பொதுமக்கள் வேண்டுமென்றே தூரவிருந்து சுட்டுக் கொன்றதாக தெரியவந்திருக்கிறது. மேலும், பூச்சா நகரில் ரஸ்ஸிய ராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட சில இளம்பெண்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக நடத்திவந்ததாகவும், நகரை விட்டு ரஸ்ஸிய ராணுவம் தப்பியோடியபோது இப்பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான கொடூரம் பற்றி குறிப்பிடும் உக்ரேனின் நீதியமைச்சின் தலைமை வழக்குத் தொடுநரான லுட்மிலா லினிசோவா , பல பெண்களும் சிறுமிகளும் ரஸ்ஸிய ராணூவத்தால் பாலியல் அடிமைகளாக ஒரு மாதம் வரை அடைத்துவைக்கப்பட்டதாகவும், இவர்களுள் 9 சிறுமிகள் கர்ப்பமாக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதே வகையான கட்டாயக் கருத்தரிப்பினை பொஸ்னியப் பெண்கள் மீது சேர்பிய இனவழிப்பு ராணூவம் சிரெப்ரெனிக்காவில் நடத்தியதென்பதும், பலநூற்றுக்கணக்கான பொஸ்னியப் பெண்கள் இதனால் கட்டாயக் கருத்தரிப்பிற்கு உள்ளானார்கள் என்பதும், பொஸ்னிய இனத்தில் சேர்பிய இனம் கலப்பதன் மூலம் பொஸ்னியகளின் அடையாளம் அழிக்கப்படவே இதனை சேர்பியர்கள் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சேர்பியர்களின் நெருங்கிய உறவுகள் என்று கருதப்படும் ரஸ்ஸியர்களும் இதே பாணியினைக் கைக்கொள்வது ரஸ்ஸிய ராணுவம் இனவழிப்பில் ஈடுபடுகிறதென்பதையே காட்டுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.