Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஜி ஜி பொன்னம்பலம் தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள். தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர். "சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் . அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது. இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார். பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது. யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். 1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார். முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் மீது சிங்களத்தால் பிரயோகிக்கப்பட்ட பாகுபாடுகள் மக்கள் முன் பேசிய சிவசிதம்பரம் ஒன்பது விதமான பாகுபாடுகளை சிங்களவர்கள் சுதந்திரகாலத்திலிருந்து தமிழர்மேல் கட்டவிழ்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவையாவன, 1. தமிழ் மக்களின் ஒரு பிரிவினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன்மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்தது. 2. அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பலவந்தமான நிலப்பறிப்புக்கள் ஊடாக தமிழர் தாயகத்திலேயே தமிழரை சிறுபான்மையினராக மாற்றுவது. 3. சிங்கள மொழியை தனி ஆட்சி மொழியாக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழுக்கான அந்தஸ்த்து வெகுவாகக் குறைக்கப்பட்டு தமிழ் மக்களும் இரண்டாம்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டுள்ளமை. 4. பெளத்த மதத்திற்கு அரச யாப்பின்மூலம் உயரிய அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டமையானது நாட்டிலுள்ள ஏனைய மதங்களான சைவம், கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் இரண்டாம் நிலைக்கு இறக்கப்பட்டிருப்பது. 5. தமிழருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, காணிப்பங்கீடு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கான பங்கீடு ஆகியவற்றை வேண்டுமென்றே குறைத்ததன் மூலமும், தமிழ்ப் பிரதேசங்கள் வேண்டுமென்றே அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதும் இலங்கையில் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளமை. 6. தமிழ் கலாசாரம் செழித்தோங்கி வளரும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழரை முற்றாக தனிமைப்படுத்தியிருப்பதன் மூலமும், இலங்கையில் தமிழ் கலாசாரத்தை வளர்ப்பதற்கு முட்டுக்கட்டைகள் போட்டுவருவதன் மூலமும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் இனவழிப்பொன்றினை நடத்திவருவது. 7. தமிழ் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான அரச ஆதரவுடனான வன்முறைகள் 1956 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அம்பாறை (அழகிய பாறை) ஆகிய இடங்களிலும், 1958 ஆம் ஆண்டு நாடுமுழுவதிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் , 1961 ஆம் ஆண்டில் ராணுவத்தால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டில் பொலீஸார் மிருகத்தனமாக தமிழர்களைப் படுகொலை செய்தமையும், 1976 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லீம்கள் மீது புத்தளத்தில் பொலீஸார் நடத்திய தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களை தொடர்ச்சியான அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமக்கெதிரான இன அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் கிளர்ந்தெழாவண்ணம் இருக்கவே செய்யப்பட்டு வருகின்றன. 8. தமிழ் இளைஞர்களை சகட்டுமேனிக்குக் கைதுசெய்து, அடைத்துவைத்துச் சித்திரவதை செய்வதும், காரணமேயின்றி அவர்களை நீண்டநாட்கள தடுத்து வைத்திருப்பதும். 9. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், இனவாதிகளால் வரையப்பட்ட 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் மூலம் அதற்கு முன்னர் இருந்த சோல்பரி யாப்பினூடாக தமிழருக்குக் கிடைத்த மிகச்சொற்ப உரிமைகளைக் கூட முற்றாக இல்லாதொழித்து, தமிழ்த் தேசத்தின்மீது மிகக்கடுமையான சட்டங்களைப் பிரயோகித்தும், தமிழரின் ஒரு பகுதியினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழரின் அரசியல்ப் பலத்தைச் சிதைத்தும் பாராளுமன்றத்தில் சிங்களவர்களுக்கு மிகப்பெரும் பலத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை. அமிர்தலிங்கத்தின் உரையே மிகவும் கடுமையானதாகவும், சிங்களவர்களைச் சீண்டும் வகையிலும் அமைந்திருந்தது. இளைஞர்களை உணர்வேற்றக்கூடிய வகையிலேயே தனது உரையினை அவர் வடிவமைத்திருந்தார். தனது உரையின் முதலவாது பகுதியில் தமிழரின் பண்டைய புகழ்பற்றியும், வீரம் பற்றியும் பேசினார். தமிழர்கள் ஒரு இறையாண்மையுள்ள இனமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர தேசத்தில் வாழ்ந்தார்கள் என்று கூறினார். சரித்திர காலம்தொட்டே தமிழரும் சிங்களவரும் இந்த நாட்டினை பிரித்து தமக்கான ஆளுகைப் பிரதேசங்களை ஆண்டுவந்ததாக அவர் கூறினார். வடக்கும் கிழக்கும் தமிழரால் ஆளப்பட மேற்கும் தெற்கும் சிங்களவரால் ஆளப்பட்டதாக அவர் கூறினார். அவ்வப்போது தமது எல்லைகளை மீறி, தமிழரை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் எடுத்த முயற்சிகளையெல்லாம் தமிழர்கள் முறியடித்து, மீண்டும் சிங்களவர்களை தமது முன்னைய நிலைகளுக்கே தள்ளிவிட்டதாக அவர் கூறினார். யாழ்ப்பாண இராச்சியம் அதன் பலமான காலமான கி பி 1350 இலங்கையில் போர்த்துக்கீசர்கள் 1505 இல் வந்திறங்கியபோது தமிழர்கள் சுதந்திரமான நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். யாழ்ப்பாண இராச்சியம் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நாட்டின் தென்பகுதி கோட்டே இராச்சியத்தின் கட்டுப்பாட்டின்கீழும், மத்திய மலைநாட்டுப்பகுதி கண்டிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தது. 1619 ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசர்களிடம் வீழ்ந்தது. கோட்டே இராச்சியம் அதற்குமுன்னர் போர்த்துக்கீசர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கவில்லை. தம்மால் கைப்பற்றப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள தேசத்தின் இரு பகுதிகளையும் போர்த்துக்கீசர்கள் தனித்தனியாகவே ஆட்சிசெய்து வந்தார்கள். இதன்மூலம் இவ்விரு இனங்களினதும் தனித்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டிருந்தது. போர்த்துக்கீசரிடமிருந்த பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்ற, பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் அவற்றினைக் கைப்பற்றினர். ஆனால் ஒல்லாந்தர்கூட தமிழ் சிங்கள பிரதேசங்களைத் தனித்தனியாகவே ஆண்டு வந்தனர். ஆனால், 1833 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் கமிஷனின் ஆலோசனையின்படி ஆங்கிலேயர்கள் தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்தார்கள். நிர்வாகத்தினை இலகுவாக்குவதற்காக அவர்கள் இதனைச் செய்திருந்தார்கள். 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுந்தந்திரம் வழங்கியபோது தமிழர்களின் பிரதேசத்தை தமிழர்களிடமும், சிங்களவரின் பகுதிகளை சிங்களவர்களிடமும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் முழு நாட்டினையும் சிங்களவர்களிடமே கொடுத்தார்கள். இன்று, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தினைப் பாவித்து தமிழரின் தேசத்தை சிதைத்து, தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி, இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியிருக்கிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனது பேச்சின் இரண்டாம் பாகத்தினை தாம் முன்வைக்கும் தமிழருக்கான தமிழீழம் எனும் சுதந்திர தேசம் எப்படி அமையப்போகிறது என்பதுபற்றிப் பேசுவதற்காக வடிவமைத்திருந்தார். அந்தத் தேசம் வடக்குக் கிழக்கு மாகாணங்களைக் கொண்டிருக்கும். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் அத்தேசத்தின் குடிமக்களாக இருப்பார்கள். இலங்கையின் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களும், உலகில் எப்பகுதியில் வாழும் தமிழர்களும் இத்தேசத்தில் குடிமக்களாக விண்ணப்பிக்கும் தகமையுடையவர்கள் ஆகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்ற விரும்புபவர்களோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்புகிறவர்களோ வேறு எவரின் அழுத்தமும் இன்றி வாழும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தேசம் ஜனநாயகரீதியில் செயற்படுவதோடு அதிகாரம் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இத்தேசம் மதச்சார்பற்ற சோசலிச தேசமாக இயங்கும். இத்தேசத்தின் உத்தியோகபூர்வ மொழி தமிழாக இருக்கும். மேலும், இங்குவாழும் சிங்களவர்களுக்கான உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களுக்கிருக்கும் உரிமைகளுக்கு ஒத்ததாக இருக்கும். இறையாண்மையுள்ள தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கும் திட்டத்தினை தாம் உடனடியாக ஆரம்பிக்கப்போவதாகவும், தாயகத்தை மீடகப்போகும் போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெருந்தொகையான இளைஞர்கள் உச்சஸ்த்தானியின் பின்வருமாறு கோஷமிட்டனர், "நீங்களே எங்கள் தளபதி". "விடுதலைப் போராட்டத்திற்கான திகதியை அறிவியுங்கள்". "நாங்கள் எங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்". உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்ட இளைஞர்கள் ஓடிச்சென்று அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துகொண்டு, நீங்களே எங்கள் தளபதி, இப்போதே ஆணை வழங்குங்கள் என்று கோஷமிட்டனர். பிரபாகரன், உமாமகேஸ்வரன் உட்பட்ட பல ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தில் பிரசன்னமாகியிருந்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதிகளுக்கான கூட்டமாக அது ஒழுங்குசெய்யப்பட்டிருந்தாலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். பலர் ஊர்களுக்கு ஊர்வலமாகச் சென்ற இளைஞர்கள் தமிழ் ஈழம் கோரி கோஷமிட்டபடி சென்றனர். பிரகடணம் செய்யப்பட்ட இடத்திற்கு வாயிற்காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தபோதும்கூட, இளைஞர் கூட்டத்தை ஏதும் செய்யாது இருந்துவிட்டார்கள். அம்மைதானத்தைச் சுற்றிவந்த இளைஞர்கள், "எமக்குத் தமிழ் ஈழமே வேண்டும். அதனை மீட்டெடுக்க எமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர்கள் உணர்வுபொங்க உரக்கமிட்டனர். தமிழ் இன உணர்வெழுச்சி அப்பிரதேசங்கும் நிறைந்திருந்தது. இப்படியான நிகழ்வினை யாழ்ப்பாணக் குடாநாடு இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டிருந்ததில்லை. தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம் தனிநாட்டிற்கான ஆணையினை மக்கள் தந்துள்ளதனால், இப்போராட்டத்தினை முன்னெடுக்க தமது கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் என்று கூறினார். "நாம் இப்போது ஒரு விடுதலை அமைப்பு" என்று தளபதி அமிர்தலிங்கம் முழங்கினார். பதிலுக்கு உரத்த குரலில் கோஷமிட்ட இளைஞர்கள் "நாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராகி வீட்டோம், இப்போதே ஆரம்பியுங்கள்" என்று கூறினார். விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்குழு உடனடியாகச் செயற்பட்டு விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கான திட்டத்தினை வரையப்போகிறது என்று இளைஞர்கள் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கூடிய செயற்குழு நீண்டநேர ஆலோசனைகளுக்குப் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின விளங்கப்படுத்தி துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டதுடன் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறும் தமிழ் மக்களைக் கேட்டிருந்தது. இளைஞர்களுக்கு இது ஏமாற்றத்தினைக் கொடுத்தது. அமிர்தலிங்கத்தைச் சந்திக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் "நீங்கள் உறுதியளித்த விடுதலைப் போராட்டம் இதுதானோ?" என்றும் கேட்டனர். "பொறுமையாக இருங்கள், நாம் முதலில் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தவேண்டும்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த இளைஞர்களுக்கு பதிலளித்தார் அமிர்தலிங்கம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உறுதிசெய்யப்பட்ட மக்கள் ஆணை வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரபாகரன் தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஸ்த்தாபித்து சரியாக 9 நாட்களின் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணி தனது தேசிய மாநாட்டினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, பண்ணாகத்தில் நடத்தியது. 1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவுக்கு மக்கள் வழங்கிய ஆணையான தமிழருக்கான தனிநாடு எனும் முடிவினை, தமிழர் ஐக்கிய முன்னணியினர் 1976 ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் உறுதிப்படுத்தினர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் பின்வருமாறு பிரகடணம் செய்திருந்தது, "இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் உலகில் அனைத்து தேசங்களுக்கும் இருக்கும் உரிமையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழ் ஈழம் எனும் சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சுதந்திரமான தனிநாட்டினை உருவாக்குவோம்". சுமார் 21 பந்திகளைக் கொண்ட நீண்ட தீர்மானத்தின்படி தமிழர்கள் தனிநாட்டிற்குத் தேவையான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதால் தனிநாட்டினை அமைப்பதற்கான உரிமையுடையவர்கள் என்று கூறியிருந்தது 1976 ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் தனது வருடாந்த மாநாட்டினை நடத்திய தமிழர் ஐக்கிய முன்னணி இத்தால் பிரகடணம் செய்வது யாதெனில், இலங்கைத் தமிழராகிய நாம் எமது மேன்மையான மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும், சுதந்திரமான தேச வரலாற்றையும் கொண்டு நமக்கே உரித்தான பூர்வீகத் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம் என்றும், அந்நியரின் ஆயுதரீதியிலான ஆக்கிரமிப்பிற்கான காலம் வரைக்கும் நமது தாயகத்தில் நம்மை நாமே ஆண்டு வந்தோம் என்றும், எமது தேசம் சிங்கள தேசத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தேசம் என்றும் பிரகடணம் செய்வதோடு, 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் தமிழர்களாகிய எம்மை புதிய காலணித்துவம் ஆளும்வர்க்கமான சிங்களவர்கள் அடிமைப்படுத்த முயல்வதையும், தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழ் தேசத்திற்கு உரித்தான தாயகப் பரப்பு, தமிழ் மொழி, பிரஜாவுரிமை, பொருளாதார வாழ்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு ஆகியவற்றில் தமிழரை வஞ்சித்து வருவதையும் இத்தால் முழு உலகிற்கும் கூறிக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்தினை முன்மொழிய, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் உறுப்பினரான சிவசிதம்பரம் தீர்மானத்தினை வழிமொழிந்தார். மாநாட்டில் பேசிய செல்வா, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழருக்கான நீதியான தீர்வினைப் பெற்றிட அயராது உழைத்தவன் என்கிற ரீதியில் தான் இத்தீர்மானத்தினை சமர்ப்பிக்கும் தகுதியைப் பெற்றிருப்பதாகக் கூறினார். அதேவேளை, "நான் தோற்றுவிட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்ட்டி முறையிலான தீர்வின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல அரசியல் தீர்வுகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்து வந்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். இரு ஒப்பந்தங்கள் ஊடாகவும், பல தொடர்ச்சியான ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மூலமாகவும் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படைகளை நான் இட முயன்றேன். அதுகூட தோல்வியில் முடிவடைந்துவிட்டது. நமக்கு முன்னால் இப்போது இருக்கும் ஒரே தெரிவு இலங்கையிலிருந்து பிரிந்துசென்று எமக்கான தனிநாட்டினை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான்" என்றும் அவர் கூறினார் தந்தை செல்வா அவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். இரு பிரதம மந்திரிகளுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அவர் பேசினார். முதலாவதாக S W R D பண்டாரநாயக்காவுடன் 1957 இல் ஒரு ஒப்பந்தத்தினை அவர் கைச்சாத்திட்டிருந்தார். தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான முக்கியமான மூன்று விடயங்களை அது கொண்டிருந்தது. அவையாவன, 1. சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினைப் பாதிக்காத வண்ணம் தமிழ் மொழிக்கு தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை வழங்குதல். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தமிழ் மொழியினைப் பாவிப்பது. 2. வடக்கிற்கு ஒரு பிராந்தியசபையும், கிழக்கிற்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பிராந்தியசபைகளையும் உருவாக்குவது. மாகாண எல்லைகளுக்கு அப்பாற்சென்று இந்த பிராந்தியங்களை ஒன்றிணைப்பது. 3. குடியேற்றத்திட்டங்களை பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்படுவோர் மற்றும் இக்குடியேற்றத்திட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படுவோர் ஆகியவற்றை பிராந்திய சபைகளே தீர்மானிப்பது. என்பனவே அந்த மூன்று முக்கிய பகுதிகளாகும். பண்டாரநாயக்கா - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தினை பெளத்த துறவிகளினதும், சிங்கள அரசியல்வாதிகளினது அழுத்தத்திற்கு அடிபணிந்த பண்டாரநாயக்க சில காலத்திலேயே கிழித்தெறிந்துவிட்டார். இரண்டாவது ஒப்பந்தம் சேனநாயக்க - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. செல்வா அவர்கள் டட்லியுடன் 1965 ஆம் ஆண்டு இதனைக் கைச்சாத்திட்டார். பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களே இந்த ஒப்பந்தத்தினதும் அடிப்படையாக அமைந்திருந்தன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தந்தை செல்வா அவர்கள் இரு விடயங்களை வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதாவது, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிப்பதனை சிங்களவர்கள் விரும்பியிருக்கவில்லை. மேலும் குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றப்படுபவர்கள் தொடர்பான நடைமுறையும் அவர்களைப்பொறுத்தவரை பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. டட்லியுடனான செல்வாவின் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு, 1. வடக்குக் கிழக்கில் தமிழ் மொழியே நிர்வாகத்திற்கும், ஆவணப் பதிவிற்கும் பாவிக்கப்படும். அத்துடன் நீதிமன்றச் செயற்பாடுகளும் தமிழ் மொழியில் இடம்பெறுவதோடு, நீதிமன்ற செயற்பாடுகளின் ஆவணங்களும் தமிழில் பதியப்படும். 2. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடியேற்றப்படும் மக்கள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் குடியமர்த்தப்படுவார்கள், அ) முதலாவதாக, அந்த மாவட்டங்களில் காணியற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஆ) அடுத்தபடியாக அம்மாவட்டத்தில் வதியும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இ) மூன்றாவதாக, இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு, குறிப்பாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்காணிகள் வழங்கப்படும். S J V செல்வனாயகம் வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா பேசும்போது, பண்டாவுடனான அவரது ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை எதிர்கட்சியை ஆட்சியில் அமர்த்தியாவது பெற்றுக்கொள்ள முடியும் என்கிற எதிர்பார்ப்பில் அவர்களுடன் ஒத்துழைத்துப் பணியாற்றுவது எனும் தனது கொள்கையும் தவறானது என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 1960 இல் டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியரசை தோற்கடித்து, சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்குக் கொண்டுவருவதன் மூலம் மீண்டும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நினைத்தார். ஆனால், செல்வாவின் ஆதரவுடன் 1960 இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சி அவரை மீண்டுமொரு முறை ஏமாற்றியிருந்தது. அதுமட்டுமல்லாமல், சிங்கள இனவாதியாக தன்னை வெளிப்படுத்திய பண்டாரநாயக்கா, மிகக் கடுமையான தனிச் சிங்களச் சட்டத்தினையும் உருவாக்கினார். இதன் பிறகு 1965 இல், பண்டாரநாயக்காவின் அரசை பதவியிலிருந்து அகற்றி டட்லியை மீண்டும் பதவியில் அமர்த்துவதன் மூலம் டட்லியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நம்பியிருந்தபோதும், டட்லி மறுபடியும் அவரையும் தமிழ் மக்களையும் ஏமாற்றினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கெரில்லாக்களும் மக்கள் போராட்டமும் பிரபாகரனால் முன்மொழியப்பட்ட அமைப்பின் சாசனம் 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மத்திய குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து புதிய தமிழ்ப் புலிகள் எனும் பிரபாகரனின் ஆரம்ப அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உத்தியோகபூர்வமாக் அழைக்கப்படலாயிற்று. பிரபாகரனே அமைப்பின் அரசியல்த் தலைவராகவும், இராணுவத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு, நாகராஜா, செல்லக்கிளி, ஐய்யர் மற்றும் விஸ்வேஸ்வரன். தனது ராணுவப் பிரிவினை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்திருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவும் பின்வரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டன. 1. பொலீஸாரின் உளவு வலையமைப்பினையும், பொலீஸாருக்கு தகவல் வழங்கும் துரோகிகளையும் இனங்கண்டு அழித்தல். 2. சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்கிப் போடல். 3. இராணுவ முகாம்களை தாக்கி அழிப்பதோடு, இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பகுதிகளை புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல். இவ்வாறு மீட்கப்படும் தமிழர் தாயகத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவுவதன் மூலம் சுய ஆட்சியுடைய தமிழ் ஈழத்திற்கான அத்திவாரத்தினை இடுதல். தான் முன்னெடுத்திருக்கும் தாயக விடுதலைப் போராட்டம் மிக நீண்டதாக இருக்கும் என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்து வைத்திருந்தார். அதற்கு ஏற்ற வகையிலேயே தனது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினர். சனத்தொகையில் மிகவும் சிறிய இனமான தமிழினத்திற்கு நகர்ப்புற கரந்தடிப்படையே சரியான போராட்ட முறையாக இருக்கும் என்று அவர் நம்பினார். மக்களை ஒரு போராட்ட சக்தியாக இயங்கவைப்பதன்மூலம் விடுதலையினைப் பெற்றுவிடமுடியும் என்று அவர் கருதினார். இதுபற்றி பேட்டியொன்றில் அவர் இவ்வாறு கூறியிருந்தார், "கெரில்லா முறையிலான கரந்தடிப் போர்முறையென்பது, உண்மையிலே ஒரு மக்கள் போராட்டமாகும். மக்கள் போராட்டத்தின் உச்சமே கெரில்லா போர்முறையாகும் என்றால் அது மிகையில்லை. ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் மனங்களிலும் போராட்ட உணர்வு வேரூன்றும்போது அது மக்கள் போராட்டமாக உருப்பெருகிறது. இந்த இலக்கினை நோக்கித்தான் நான் தேவையான அனைத்து விடயங்களையும் செய்துவருகிறேன்".
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம் துரையப்பா மீதான தாக்குதலின் வெற்றி மற்றும் புத்தூர் வங்கிக்கொள்ளையின் வெற்றி ஆகியவை கொடுத்திருந்த உற்சாகத்தினையடுத்து தனது நீண்டகாலக் கனவான நகர்ப்புர கரந்தடிப்படையொன்றினை செயற்படுத்தும் திட்டத்தினை முன்னெடுத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் சிறிதுகாலம் அவர் தங்கியிருந்த நாட்களிலேயே அவர் இதனைத் திட்டமிட்டு வந்தார். அவ்வமைப்பிற்கான பெயரைப்பற்றி அவர் சிந்தித்தபோது நிச்சயம் "தமிழ் ஈழம் " எனும் வார்த்தை தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். சுந்தரலிங்கம் 1960 களில் பிரேரித்த ஈழம் என்பது அல்ல பிரபாகரனின் ஈழம் என்பது. தமிழ் இலக்கியங்களில் ஈழம் எனும் சொல் மொத்த நாட்டையுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிரபாகரனின் கனவு தேசமான ஈழமோ தமிழ் மக்களின் வரலாற்றுத்தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களே என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அடுத்ததாக, புலிகள் எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இடம்பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். தமிழர்களின் பலமான மன்னர்களான சோழர்களின் சின்னம் புலியென்பது குறிப்பிடத் தக்கது. சோழர்களின் ஆட்சியிலேயே தமிழர்களின் நாகரீகம் பெருவளர்ச்சியடைந்ததோடு, பலமும் அதிகரித்திருந்தது. தமிழ் ஈழம், புலிகள் ஆகிய சொற்களோடு விடுதலை எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது, சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் விடுதலை பெறவே அவரது அமைப்பு போராட்டத்தினை நடத்தவேண்டியிருந்தது. ஆகவே, தனது அமைப்பிற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அவர் பெயரிட்டார். தனது புதிய அமைப்பிற்கான இலட்சினை ஒன்றை பிரபாகரன் முன்னமே தேர்வுசெய்திருந்தார். அவர் மதுரையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு ஓவியக் கலைஞரைக் கொண்டு அதனை அவர் வரைந்து வைத்திருந்தார். அந்த வரைஞரிடம் தனது இலட்சினை அமையவேண்டிய விதத்தினைக் கூறினார் பிரபாகரன். கர்ஜிக்கும் புலியின் தலை, புலியின் முன்னங்கால்கள் வெளியே பாயுமாற்போல் இருக்க, இரு தானியங்கித் துப்பாக்கிகளும் 33 துப்பாக்கிக் குண்டுகளும் வட்டவடிவில் புலியின் தலையினைச் சுற்றிவர அது வரையப்பட்டிருந்தது. தான் வரைந்த ஓவியத்தை அந்த ஓவியர், பிரபாகரனிடம் காட்டியபோது பிரபாகரன் மிகுந்த உற்சாகமடைந்தார். தனது அமைப்பிற்கான அரசியலமைப்பின் வரைவையும் பிரபாகரன் தயாரித்து வைத்திருந்தார். அவ்வரைபின்படி, அமைப்பின் குறிக்கோள்கள் பின்வருமாறு கூறப்பட்டன, 1. முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் 2. பூரண இறையாண்மை கொண்ட சோசலிச, ஜனநாயக மக்கள் அரசாங்கத்தை உருவாக்குதல். 3. அனைத்து விதமான சுரண்டல்களையும் இல்லாதொழித்தல், குறிப்பாக சாதி வேற்றுமைகளை முற்றாகக் களைதல். 4. சோசலிச உற்பத்தி முறையினைக் கைக்கொள்ளல். 5. விடுதலைக்கான போராட்ட வழியான அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொள்வது. 6. கெரில்லா ரீதியிலான போர்முறை படிப்படியான பரிணாம வளர்ச்சியின் மூலம் முழுவடிவிலான மக்கள் போராக மாற்றி விடுதலையினை வென்றெடுப்பது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட மத்திய குழ்வொன்றினால் தலைமை தாங்கி நடத்தப்படும் என்று வரையப்பட்டிருந்தது. இந்த அமைப்பில் அரசியல் மற்றும் ராணுவப் பிரிவுகள் அமைந்திருக்கும். அமைப்பின் உறுப்பினர்கள் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டதுடன் புகையிலை, மதுபானம், உறுப்பினர்களிடையே பாலுறவு, குடும்பங்களுடனான தொடர்பு, மாற்று அமைக்களுடன் இணைதல் , புதிய அமைப்புக்களை தோற்றுவித்தல், அமைப்பை விட்டு பிரிந்து போதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன .
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வங்கிக்கொள்ளைகள் அரசிலிருந்து வெளியேற்றப்பட்ட சமசமாஜக் கட்சி கடுமையான கோபத்துடன் இருந்ததுடன், அரசைத் தருணம் பார்த்து பழிவாங்கவும் காத்திருந்தது. சிறிமாவுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்த சமசமாஜக் கட்சி சிறிமா தனது அதிகாரத்தைத் தவராகப் பயன்படுத்துவதாகவும், அதிகாரத்தைப் பாவித்து செல்வமீட்டும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. காணி சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இச்சீர்திருத்த சட்டத்திற்கு முரணாக தன்னிடமிருந்த தென்னங்கணியொன்றினை தனியாருக்கு பெரும் விலையிற்கு விற்றதாகவும் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும்கூட, சிறிமாவின் செல்வாக்குக் கடுமையான சரிவினைச் சந்தித்தது. மேலும், நீதியமைச்சரான பீலிக்ஸ் ஆர் டி பண்டாரநாயக்காவுக்கெதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் சமசமாஜக் கட்சி ஆதரவளித்தது. இந்த அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களை அச்சுருத்திவருவதாகவே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. சிங்களத் தலைவர்களிடையே ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் அவர்களது நேரத்தின் பெரும்பகுதியினை விரயமாக்கிக்கொண்டிருக்க, பிரபாகரனோ ரகசியமாக வன்னி நோக்கிப் பயணித்தார். வவுனியா பகுதியில் தனது பயிற்சிமுகாம்களை உருவாக்கத் தொடங்கியதுடன், தனது பலப்பிரதேசமாகவும் அதனை மாற்றத் தொடங்கியிருந்தார். தனது தகப்பானாரான வேலுப்பிள்ளை காணி அதிகாரியாக இருந்தகாலத்தில் வன்னியின் பல பகுதிகளிலும் நடமட்டிய பிரபாகரனுக்கு வன்னியின் காடுகள் மிகவும் பரீட்சையமாக இருந்ததுடன், அவரைத்தேடி அரச படைகள் காடுகளுக்குள் நுழையும்போது தந்திரமாக அவர் தப்பிக்கொள்வதற்கும் அவரது காடுகள் பற்றிய பரீட்சயம் உதவியிருந்தது. பிரபாகரன் தனது முதலாவது பயிற்சிமுகாமை, வவுனியாவிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள, ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் ஆரம்பித்தார். அதற்கு பூந்த்தோட்டம் முகாம் என்று அவர் பெயரிட்டார். சுமார் 400 ஏக்கர்கள் விசாலமான அந்த பண்ணையில் பூங்கன்றுகள், மரக்கறித் தோட்டங்கள், வயல்வெளிகளும், அவற்றின் பின்புலத்தில் மிக அடர்ந்த காடும் காணப்பட்டது. காட்டின் மத்தியில் போராளிகள் தற்காப்புக் கலைகள் பயில்வதற்கும், குறிபார்த்துச் சுடும் பயிற்சியை மேற்கொள்ளவும் கொட்டில்களை அவர் அமைத்தார். இயக்கத்திற்கு புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள் பூந்தோட்டம் முகாமில் ஆரம்பத்தில் மரக்கறித் தோட்டங்கள் மற்றும் வயல்வெளியில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் முகாமிற்குத் தேவையான அரிசியும், மரக்கறி வகைகளும் கிடைக்கப்பெற்றது. போராளிகளுக்கு காலையிலும், மாலையிலும் போர்ப்பயிற்சி வழங்கப்பட்டது. குறிபார்த்துச் சுடுதலில் மிகுந்த அக்கறையினை பிரபாகரன் காண்பித்தார். மனிதர்களைப் போன்ற உருவங்கள் அட்டைகளிலும், மரங்களிலும் வரையப்பட்டு குறிபார்த்துச் சுடும் பயிற்சி நடத்தப்பட்டது. குறிபார்த்துச் சுடும் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்த பிரபாகரன் பயிற்சி கிரமமாக நடைபெறுவதை மேற்பார்வை செய்துவந்தார். பிரபாகரனின் முகாமில் குறிபார்த்துச் சுடுவதில் பயிற்சியாளராகக் கடமையாற்றியவரும், பின்னாட்களில் ஈரோஸ் அமைப்பில் இணைந்துகொண்டவருமான நபர் ஒருவர் பேசும்போது, "அவரது அரையில் கைத்துப்பாக்கி செருகியிருக்க, மெதுவாக அவர் நடந்துவருவார். திடீரென்று பின்னால் திரும்பி, மரத்தில் இடப்பட்டிருக்கும் சிவப்பு நிற பயிற்சிக் குறிமீது துப்பாக்கியால் சுடுவார். தனது குறி கச்சிதமாக இலக்கைத் தாக்கிய பெருமிதத்தில் புன்னகைப்பார்" என்று பிரபாகரனின் துப்பாக்கி சுடும் திறமை பற்றி என்னிடம் பகிர்ந்தார். "அதேவேளை, இலக்குத் தவறுவது அவருக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்திவிடும். ஒவ்வொருமுறையும் இலக்குத் தவறும்போது, எதிரி உங்களைக் கொன்றுவிடுவான் என்று எம்மிடம் அடிக்கடி கோபத்துடன் கூறியிருக்கிறார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சிமுகாமை நடத்துவதற்குப் பிரபாகரனுக்கு பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆகவே, முகாமிற்கான நிதியினை எப்படித் திரட்டலாம் என்கிற சம்பாஷணையினை அவர் இயக்கத்திற்குள் ஆரம்பித்து வைத்தார். வெளிப்படையாக பணத்தினைச் சம்பாதிக்க முடியவில்லை. பொலீஸார் எந்நேரமும் அவர்களைத் தேடித் திரிந்ததுடன், பொதுமக்கள் நேரடியாக அவர்களுக்கு பணம் கொடுத்துதவ அஞ்சினர். ஆகவே தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினர் கைக்கொண்ட வங்கிக்கொள்ளைகளில் தாமும் ஈடுபடுவதென அவர்கள் முடிவெடுத்தனர். "ஆனால், இது தவறல்லவா?" என்று மத்திய குழுவில் சிலர் கேள்வியெழுப்பவும் தவறவில்லை. பொதுமக்களின் பணத்தினையே வங்கிகள் கையாள்கின்றன. மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பு, அம்மக்களின் பணத்தினையே கொள்ளையடிப்பதென்பது தவறல்லவா?" என்று அவர்கள் கேட்டார்கள். பிரபாகரன் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். அரசிற்குச் சொந்தமான வங்கியைக் கொள்ளையடிக்கலாம் என்று அவர் கூறினார். அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கொள்ளையடிக்க பிரபாகரன் முன்வைத்த இன்னொரு காரணம், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் அரசு, தமிழர் தாயகத்தை முற்றாகப் புறக்கணித்து வருவதால், அவ்வங்கிகளைக் கொள்ளையடிப்பது தகுமே என்றும் அவர் வாதிட்டார். அதன்பிறகு பிரபாகரன் வங்கிக்கொள்ளையினை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார். சில போராளிகளைத் தேர்ந்தெடுத்து அத்திட்டத்தினை விளக்கினார். வங்கி திறக்கும் நேரத்தினை அவதானிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டார்கள். அலுவல்கள் ஆரம்பிக்கும் நேரம், பரபரப்பாக இயங்கும் நேரங்கள், மந்தமாக இயங்கும் நேரங்கள், பணமும் நகைகளும் வைக்கப்படும் இடங்கள், கொள்ளையில் ஈடுபடவேண்டிய போராளிகளின் எண்ணிக்கை, வங்கிக்குச் செல்லவும், தப்பி வரவும் பாவிக்கவேண்டிய வாகனம் போன்றவை விலாவாரியாக அலசப்பட்டன. ஒவ்வொரு தகவலும் அவதானிக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு, திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு, பரீட்சித்தும் பார்க்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு பங்குனி 5 ஆம் திகதி புத்தூரில் இயங்கிய மக்கள் வங்கிக்கு தான் தேர்ந்தெடுத்த போராளிகள் சிலரை அழைத்துக்கொண்டு சென்றார் பிரபாகரன். வங்கி அலுவல்கள் ஆரம்பித்திருந்த வேளை போராளிகளுடன் உள்நுழைந்த பிரபாகரன் கைத்துப்பாக்கியை மேலே உயர்த்திப் பிடித்துக்கொண்டு, வங்கி ஊழியர்கள் அனைவரையும் வங்கி முகாமையாளரின் அறையினுள் செல்லுமாறு பணித்தார். அதிர்ச்சியடைந்திருந்த ஊழியர்கள் அவர் கூறியதன்படி பணிந்தனர். கைகளை மேலே உயர்த்தியபடி நிற்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். காசாளரின் அறைக்கும், பாதுகாப்பாக பணம் வைக்கப்படும் அறைக்கும் இரு குழுக்கள் விரைந்தன. பணத்தையூம், நகைகளையும் இரு சாக்குகளில் சேர்த்துக் கட்டிய அவர்கள், "இந்த அசெளகரியத்திற்காக வருந்துகிறோம்" என்றுவிட்டுச் சென்றுவிட்டனர். அன்று சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்தின் முதலாவது வங்கிக்கொள்ளை வெறும் ஐந்தே நிமிடங்களில் நடந்தேறியது. இந்த வங்கிக்கொள்ளை அரசாங்கத்தையும் பொலீஸாரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்திய்ருந்தது. புதிய தமிழ்ப் புலிகளை முற்றாக அழிக்குமாறு பொலிசாருக்கு அரசு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுத அமைப்புக்களை அடக்குவதற்கு விசேட பொலீஸ் புலநாய்வுப் பிரிவொன்று பொலீஸ் தலைமைச் செயலகமான கொழும்பில் உருவாக்கப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் அரசியல் பேச்சுக்களை உன்னிப்பாக அவதானித்து வந்த பொலீஸ் புலநாய்வாளர்கள், ஆயுத அமைப்புக்களின் விபரங்களையும் திரட்டுமாறு பணிக்கப்பட்டனர். பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மநாதன் ஆகியோரிடம் இந்த பணி வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் தமக்குத் தகவல் வழங்கக்கூடிய தமிழ் உளவாளிகளைக் கொண்ட வலையமைப்பொன்றினை உருவாக்கத் தொடங்கினார்கள். புதிய தமிழ்ப் புலிகளின் புத்தூர் மக்கள் வங்கிக் கொள்ளையினால் உந்தப்பட்ட இன்னொரு ஆயுத அமைப்பான ஈழம் விடுதலை அமைப்பு, புலோலியில் அமைந்திருந்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியினைக் கொள்ளையடித்தது. மக்கள் வங்கியினைப் போன்று, கிராம அபிவிருத்தி வங்கி அரச வங்கியல்ல. மாறாக இது விவசாயிகளுக்கு கடன் வழங்கும் ஒரு வங்கி. ஆனால், சமூக முற்போக்குச் சிந்தனை குறித்துப் பேசிய ஈழம் விடுதலை அமைப்பு, வறிய விவசாயிகளின் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றது. இக்கொள்ளையின் பின்னர், இவ்வமைப்பின் தலைவரான வரதராஜப்பெருமாள் பொலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரது அமைப்புக் கொள்ளையடித்துச் சென்ற பணமும், நகைகளும் மீட்கப்பட்டது. வரதருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் ஹென்ஸ் மோகன், சந்திர மோகன் மற்றும் தங்க மகேந்திரன் ஆகியோர் ஆகும். வங்கி முகாமையாளரான வேலுப்பிள்ளை பாலகுமாரும் கொள்ளையில் உடந்தையாகச் செயற்பட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பொலீஸ் பரிசோதகர் பத்மானாதனே கைதுகளை நடத்தியிருந்தார். ஈழம் விடுதலை அமைப்பு முற்றாக ஒடுக்கப்பட்டதோடு அதன்பிறகு அவ்வமைப்பின் செயற்பாடே இல்லாமற்போனது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள், அமைப்பினையும், உறுப்பினர்களையும் விட்டு தலைமறைவாகியது இதுவே சரித்திரத்தில் முதன்முறையாகும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பேபி சுப்பிரமணியம் செஞ்சோலை பாடல் வெளியீட்டு நிகழ்வில் வி. பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் எம். தங்கன் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பிரபாகரன் எனும் பெயரை முன்னர் கேட்டிருந்தனர். ஆனால் தற்போது துரையப்பாவின் கொலைதொடர்பான பிரமிப்பு இளைஞர்கள் மத்தியில் பிரபாகரனை ஒரு வீரன் எனும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. புதிய தமிழ்ப் புலிகள் எனும் பெயருக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் தான் என்று மக்கள் பேச அரம்பித்திருந்தனர். ஆகவே, பிரபலமான அந்த அமைப்பில் தாமும் இணையவேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் தனியாக அதுவரை இயங்கிக்கொண்டிருந்த எஸ். சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட பேபி சுப்பிரமணியம். துரையப்பாவின் கொலை பேபி சுப்பிரமணியத்தை பிரபாகரனின் விசிறியாக மாற்றிவிட்டிருந்தது. அவர் தற்போதும்கூட பிரபாகரனின் விசிறிதான். வன்னி நிர்வாகத்தின் கல்வித்துறைப் பொறுப்பாளராக அவர் இன்று கடமையாற்றுகிறார். யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தனது நிலையினைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே வேளை தெற்கில் ஜெயவர்த்தனா தன்னை கட்டமைத்துக்கொண்டு வந்தார். குடியரசு யாப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாளான வைகாசி 22 , 1975 ஆம் ஆண்டு, கொழும்பு தெற்கின் தனது பாராளுமன்ற ஆசனத்திலிருந்து விலகிக்கொண்டார் ஜே அர். இதற்கான காரணமாக தேசிய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் தொடர்பான பிணக்கே இருந்தது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் அரசியலமைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஐந்து வருடங்களுக்குத் தொடரமுடியும் என்று இருந்தது. ஆனால், சிறிமாவின் அரசானது 1970 ஆண்டில் பதவிக்கு வந்ததுடன், அது 1975 ஆம் ஆண்டு தேர்தல்களை மீளவும் நடத்தவேண்டிய தேவையும் இருந்தது. ஆனால், சிறிமா அரசியலமைப்பினைப் பாவித்து 1977 வரை ஆட்சியை நீட்டிக்க நினைத்திருந்ததால், ஜே ஆர் இதற்கான தனது எதிர்ப்பினைக் காட்டவும், தேர்தலினை 1975 இலேயே நடத்தவேண்டும் என்றும் கோரியே தனது ஆசனத்திலிருந்து விலகியிருந்தார். ஆகவே, ஜே ஆரின் கொழும்பு தெற்கிற்கான இடைத் தேர்தல் ஆடி 18 ஆம் திகதி நடத்தப்பட்டபோது தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான தொண்டைமான் ஜே ஆர் இற்கு தனது முழு ஆதரவினையும் வழங்கினார். சமஷ்ட்டிக் கட்சி, மற்றும் தமிழர் ஐக்கிய முன்னணியின் ஏனைய கட்சிகளும் திரைமறைவில் ஜே ஆர் இன் வெற்றிக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. ஈற்றில் ஜே ஆர் 25,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். தொண்டைமான் பிரபாகரனும், ஜே ஆரும் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே காலப்பகுதியில் சிறிமாவின் அரசாங்கம் கட்சிக்குள் பல உட்கட்சிப் பிணக்குகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கா, லங்கா சமசமாஜக் கட்சி - கம்மியூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடான தேசியமயமாக்கும் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், ஈற்றில் லங்கா சமசமாஜக் கட்சியினை அரசிலிருந்து வெளியேற்றவும் காரணமானார். அதனைத் தொடர்ந்து கம்மியூனிஸ்ட் கட்சியும் அரசிலிருந்து விலகிக்கொண்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தளர்த்தப்பட்ட தடைகள் அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்டமை சிங்களவர்களிடையே அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. மிதவாதத் தமிழ்த் தலைமைகளை கடுமையாக விமர்சித்த சிங்களவர்கள் இளைஞர்களின் வன்முறைகளுக்கு பின்னால் இருந்து தூண்டுவது அவர்களே என்று குற்றஞ்சாட்டினர். குற்றப் புலநாய்வுத் துறையிடமிருந்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய முன்னணியினரை, குறிப்பாக அமிர்தலிங்கத்தை இந்த வன்முறைகளுக்கு தூபம் போட்டவராகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இன்னொரு அறிக்கையின்படி, அமிர்தலிங்கமே இந்த வன்முறைக் கும்பல்களுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், இந்த ஆயுத அமைப்புக்களின் தலைவர்களை அமிர்தலிங்கம் அடிக்கடிச் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகவும் கூறியிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. தமிழ் இளைஞர் பேரவை நாட்களில், பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபாரட்ணம், சத்தியசீலன், முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோர் அமிர்தலிங்கத்தை அடிக்கடி சந்தித்தே வந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. புரட்சி செய்ய விரும்பும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கும்படி தந்தை செல்வாவே அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். அமிர்தலிங்கத்தின் மூலம் இளைஞர்களின் கொதிநிலையினைக் கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது அதற்கு தடுப்பொன்றினைப் போட்டுவைத்திருப்பதே செல்வாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத சிங்கள அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், பல இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அமிர்தலிங்கத்தைத் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்தது நாளடைவில் இந்த இளைஞர் அமைப்புக்கள் மீது அமிர்தலிங்கம் வைத்திருந்த பிடி தளர்ந்துபோகக் காரணமாகியது. துரையப்பாவின் மரணம் சிறிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரும் அதிர்ச்சியினை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆகவே, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கெதிராக கடுமையான பொலீஸ் நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டார். துரையப்பாவின் மரணச்சடங்கின் முன்னர் கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டவேண்டும் என்ற கட்டளை பொலீஸாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து பொலீஸாரின் கண்காணிப்பிலிருந்துவந்த பல தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு சிறியில் அடைக்கப்பட்டார்கள்.ஆடி 28 முதல் ஆவணி 4 வரையான ஒருவார காலப்பகுதியில் பின்வரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பாட்டர்கள். கே. சிவானந்தன், ஏ. மகேந்திரா, நமசிவாயம் ஆனந்தவிநாயகம், சோமசுந்தரம் சேனாதிராஜா, எம். சின்னையா குவேந்திரராஜா, ஏ. மயில்வாகனம் ராஜகுலசூரியர், ஆனந்தப் பூபதி பாலவடிவேற்கரசன், சிவராமலிங்கம் சூரியகுமார், தம்பித்துரை முத்துக்குமாரசாமி, ஆசீர்வாதம் தாசன், கே.சுந்தரம்பிள்ளை சபாரட்ணம், அண்ணாமலை வரதராஜா, எஸ். அப்பாத்துரை நித்தியானந்தன், சிதம்பரம் புஷ்ப்பராஜா, ராமலிங்கம் கலேந்திரன், பொன்னுத்துரை சற்குணலிங்கம், டி. ஜீவராஜா, குருகுலசிங்கம், எம். பாலரட்ணம், பி. வீரவாகு, கே. உதர்சன், கே. சிவஜெயம், தம்பிப்பிள்ளை சந்ததியார், அமிர்தலிங்கம் ஆனந்தகுமார், வைத்திலிங்கம் சிறிதரன் மற்றும் சிலரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களுள் அடக்கம். ஆனால், இவர்களுள் எவருமே துரையப்பாவின் கொலைபற்றி அறிந்திருக்கவில்லை. இவர்கள் எவருக்குமே புதிய தமிழ்ப் புலிகள் அமைப்புப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், இவர்கள் கைதுசெய்யப்பட்ட நிக்ழவினை, கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று சிங்கள பத்திரிக்கைகள் கொண்டாடின. ஆனால், துரையப்பாவின் கொலையுடன் தொடர்புபட்டிருந்த ஒரு சிலர் ஆவணி மற்றும் புரட்டாதி மாதங்களின் இறுதிப்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அதுகூட தமிழ் இளைஞர் பேரவையின் கீழ்மட்ட உறுப்பினர்களைத் தேடித்தேடி பொலீஸார் கைதுசெய்துவந்தபோதே நடைபெற்றது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலரின் பெயர் விபரங்கள் வருமாறு, வி. சதாசிவம் சதானந்தசிவம், சோமு குலசிங்கம், செல்வரட்ணம் செல்வகுமார், ரட்ணபாலா, கொகா சந்திரன், ராஜேந்திரம் ஜெயராஜா, விஸ்வஜோதி ரட்ணம், பி. கலபதி, எஸ்.லோகனாதன், ஆறுமுகம் கிருபாகரன், ரஞ்சன், வாரித்தம்பி சிவராஜா, முத்துத்தம்பி வசந்தகுமார் மற்றும் மேரி அல்போன்ஸ் ஆகியோர். இவர்களுள், ஆறுமுகம் கிருபாகரன் ஆவணி 21 ஆம் திகதியும், கலபதி புரட்டாதி 19 இலும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை எதிர்நோக்கியபோது இவர்கள் தமக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் பொலீஸாரிடம் கூறிவிட்டனர். இவர்கள் மூலமே புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டி வந்தது. பிரபாகரனால் தமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளான "உங்களின் வீடுகளில் உறங்கவேண்டாம், எப்போதுமே ஒரு ஆயுதத்தினை உங்களுடன் வைத்திருங்கள்" என்பனவற்றைக் கடைப்பிடிக்கத் தவறியமையே கிருபாகரனும் கலபதியும் பொலீஸாரிடம் அகப்படவேண்டிய நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது. அவர்களைத் தேடி பொலீஸார் வந்தபோது அவர்கள் தமது வீடுகளில் ஆயுதம் ஏதுமின்றி காணப்பட்டார்கள். ஆனால், இதற்கு அவர்களால் கூறப்பட்ட காரணம் இயக்கத்திடம் அன்று இருந்தது வெறும் இரண்டு கைத்துப்பாக்கிகளே என்றும், அதனாலேயே தம்மால் ஆயுதம் ஒன்றினை வைத்திருக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இயக்கத்திலிருந்த இரு துப்பாகிகளில் ஒன்றினை பிரபாகரனும், மற்றையதை பற்குணராஜாவும் வைத்திருந்தனர். தன்னிடமிருந்த துருப்பிடித்த துப்பாக்கியின் மூலமே துரையப்பாவை பிரபாகரன் சுட்டிருந்தார். ஆனால், துப்பாக்கிகள் இல்லாவிட்டாலும்கூட கத்தி, மிளகாய்த்தூள் போன்றவற்றை தனது போராளிகள் எப்படிப் பயன்படுத்துவது என்று பிரபாகரன் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தார். குறைந்தது சமையலறைக் கத்தியையாவது உங்களுடன் வைத்திருங்கள் என்று தனது போராளிகளுக்கு அவர் சொல்லியிருந்தார். துரையப்பாவைச் சுட்டுவிட்டு அவரது காரில் நீர்வேலிவரை பயணித்த பிரபாகரனும் அவரது தோழர்களும், காரினை நீர்வேலியில் கைவிட்டு விட்டு ஒவ்வொரு திக்கில் சென்றார்கள். பிரபாகரன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அன்றிரவு அங்கு தான் தூங்கவிரும்புவதாகக் கேட்டார். அவரது நண்பருக்கோ துரையாப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரபாகரன் கூட துரையப்பாவின் கொலைபற்றி நண்பரிடம் மூச்சுவிடவில்லை. தனது காற்சட்டையிலிருந்த கைத்துப்பாக்கியினை எடுத்து தலையணையின் கீழ்வைத்துக்கொண்டே அவர் உறங்கிப் போனார். காலையில் நண்பர் கண்விழித்துப் பார்க்கும்போது பிரபாகரன் எழுந்து போயிருந்தது தெரிந்தது. சிறிதுநேரத்தின் பின்னர் அப்பகுதியெங்கும் துரையப்பாவின் கொலைபற்றி மக்கள் பேசத் தொடங்கினர். அக்கொலை தமிழரின் அண்மைய சரித்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அரசியற் கொலை என்பதுடன், அது இலங்கையின் வரலாற்றையும் புதிய பாதையில் பயணிக்கவைத்தது. பிரபாகரனுக்கு தனது திட்டங்கள் பற்றியோ, நடவடிக்கைகள் பற்றியோ இரகசியம் பேணும் இயல்பு இருந்தது. அவைகுறித்து சிறிய தகவல்கள் கசிவதைக்கூட அவர் விரும்பவில்லை. மேலும், தனது பாதுகாப்புக் குறித்தும் அவர் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். துரையப்பாவின் கொலையினையடுத்து தனது மூன்று தோழர்களுக்கும் தெரிந்திருந்த தனது மறைவிடங்களுக்கு மீண்டும் போவதை அவர் தவிர்த்து வந்தார். தனது தோழர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்படுமிடத்து, சித்திரவதைகளின்போது அவர்கள் தனது மறைவிடங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிய பிரபாகரன் அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். சில நண்பர்கள் அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை. தப்பியோடுவதற்கான தருணம் இதுவல்ல என்று அவர் தனது தோழர்களிடம் கூறினார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து துரையப்பாவின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியற் சூழ்நிலையினை தமக்குச் சாதகமாகப் பாவிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறினார் பிரபாகரன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழீழ விடுதலைப் புலிகளாக பரிணாம வளர்ச்சியடைந்த புதிய தமிழ்ப் புலிகள் ஒரு வீரனுக்கான தேவை துரையப்பாவின் கொலையின் மூலம் ஒரு செய்தியினை சிங்கள அரசுக்கு பிரபாகரன் தெரிவிக்க விரும்பினார். தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் புதிய சக்தியொன்று களத்தில் இறங்கியிருக்கிறது என்பதுதான் அது. இது மிகக் கடுமையான தாக்கத்தினை தமிழ் மக்களிடத்திலும் சிங்களவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டிருந்தது. சுபாஷ் சந்திரபோசுக்கு நிகரான தமிழ் வீரன் ஒருவனை தமிழ்ச் சமூகம் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஈழத்துக் காந்தியென்று மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தந்தை செல்வா தனது மக்களுக்கான தந்தை எனும் ஸ்த்தானத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அவராலும் மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. வன்முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழருக்கான விடுதலையினையும், உரிமைகளையும் பெற்றுவிடமுடியும் என்று தந்தை செல்வா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் முற்றான தோல்வியினையே தழுவியிருந்ததுடன், தமிழரின் இருப்புப் பற்றிய நம்பிக்கயீனத்தையும் தமிழரிடையே ஏற்படுத்திவிட்டிருந்தது. தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை சிங்கள அரசுகள் தமது அரச இயந்திரத்தினைப் பாவித்தும், காடையர்களை ஏவியும் மிகக் குரூரமாக அடக்கியிருந்தன. மனித விழுமியங்களை மதித்து முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் சிங்கள அரசுகளால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் பலமான, தம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக திருப்பித் தாக்கக்கூடிய சக்தியொன்றை எதிர்பார்த்தனர். சுருங்கக் கூறின், ஒரு வீரனை அவர்கள் எதிர்பார்த்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா. துரையப்பாவின் கொலையின் மூலம் தம்மீதான தாக்குதல்களுக்கு தமது உயிரைத் துச்சமென மதித்து, திருப்பியடிக்கக் கூடிய இளைஞர்கள் அமைப்பொன்று உருவாகிவருவதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டனர். துரையப்பாவின் கொலைக்கு தமிழர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அவர்களின் மனோநிலையினை மிகவும் தெளிவாகக் காட்டியது. மக்களுடன் நட்பாகப் பழகும் மேயர் ஒருவர் கொல்லப்பட்டதால் அவர்கள் கவலையடைந்திருந்தாலும், சிறிமாவின் அரசியலமைப்பின் மூலம் தமிழர்களை அடிமைகொள்ள அவர் எடுத்துவந்த நடவடிக்கைகளுக்கு தன்னாலான முழு ஆதரவினை வழங்கிவந்த ஒரு தமிழ்த் துரோகி கொல்லப்பட்டது அவர்களுக்கு மகிழ்வினையே கொடுத்திருந்தது. சிங்கள இனவாதத்தின் அரசி என்று தமிழ் மக்களால் முற்றாக வெறுக்கப்பட்ட சிறிமா மீதான அவர்களின் அதிருப்தி பிரபலமான தமிழ் அரசியல்வாதியான துரையப்பாவை அவர்கள் தியாகம் செய்யுமளவிற்கு அவர்களைத் தள்ளிவிட்டிருந்தது. துரையப்பாவின் மரணம் சாதாரண யாழ்ப்பாணத் தமிழனின் மனதில் இதனைச் செய்த தமிழ் இளைஞர்கள் மீது இனம்தெரியாத மரியாதையினையும், பாசத்தினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொடியள் செய்துபோட்டங்கள், எங்கட பொடியள் அவங்களுக்குச் சரியான பாடத்தைப் படிப்பித்திருக்கிறாங்கள். நாங்களும் திருப்பியடிக்க எங்களிட்டையும் பலமாக படையொண்டு வந்திருக்கு" என்று கூறியதுடன் தமது இளைஞர்களின் துணிவுபற்றி கெளரவத்துடன் பேசத் தொடங்கினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஒரு துரோகியின் முடிவு தலைவர் பிரபாகரன் துரையப்பா மீதான தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளை பிரபாகரனே பொறுப்பெடுத்தார். தனக்கு உதவுவதற்காக மூவரையும் தெரிவுசெய்தார். கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோரே அந்த மூவரும். தாக்குதலுக்கான ஆயுதத்தினைத் தயாரித்தல் மற்றும் துரையப்பாவைக் கொல்வது ஆகிய வேலைகளைத் தானே செய்வதாகத் அவர் தீர்மானித்தார். ஏனையவர்கள் துரையப்பாவின் நடமாட்டங்களை அவதானிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். துரையப்பா ஒரு கிறீஸ்த்தவராக இருந்தபோதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அவர் தவறாது பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதை புலிகள் அவதானித்தனர். தான் வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதற்கான காரணத்தை துரையப்பா தனது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் கோயிலின் அமைவிடமும் அதன் அமைதியான தன்மையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தனது நண்பரான யாழ்ப்பாண சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான ராஜசூரியரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், அவ்வாலயத்தினுள் சென்றவுடன் தனது மனம் அமைதியடைந்துவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்ட நாளான 1975 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதிக்கு முதல் நாள் பொன்னாலையிலிருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன், அங்கு தனது நண்பரின் தாயார் சமைத்த உணவினை உட்கொண்டுவிட்டு, வழக்கம் போலவே தனது நண்பருடன் பேசிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். அப்போது பிரபாகரன் குண்டுகள் ஏற்றப்படாத கைத்துப்பாகியொன்றை வெளியே எடுத்து தனது தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு தூங்குவதை நண்பர் அவதானித்தார். அவருக்கருகில் இரண்டு அல்லது மூன்று சிறிய பெட்டிகளும் இருந்தன. "உன்னால் ஒரு காகத்தைத் தன்னும் இத்துப்பாகியைக் கொண்டு சுடமுடியுமா?" என்று வேடிக்கையாக பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் நண்பர். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அமைதியாய் இரு, நாளைக்கு நடக்கப்போவதை மட்டும் பார்" என்று கூறினார். அந்த நண்பர் பிற்காலத்தில் இச்சம்பவம் பற்றிப் பேசும்போது, "பிரபாகரன் அன்று நன்றாகவே தூங்கினார், காலை விடியுமுன்னரே அவர் கிளம்பிவிட்டார்" என்று கூறுகிறார். நண்பரின் வீட்டிலிருந்து புறப்பட்ட பிரபாகரன் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலின் முன்னாலிருந்த தேனீர்க் கடைக்குச் சென்றார். அங்கே கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். கொலையின் பின்னரான விசாரணையின்போது சாட்சியமளித்த அக்கடையின் உரிமையாளர், அவர்கள் நால்வரும் தனது கடையில் காலையுணவினை முடித்துக்கொண்டு கோயிலின் அருகில் சென்று எவரின் வருகைக்காகவோ காத்திருப்பதை தான் கண்டதாக கூறினார். சிறிதுநேரத்தில் அங்குவந்த துரையப்பாவின் கார், கோயிலின் வாயிலைக் கடந்து ஒரு சில மீட்டர்கள் சென்று நிறுத்தப்பட்டது. தனது கதவினைத் திறந்துகொண்டு வெளியே இறங்கினார் துரையப்பா. அவருக்காகக் காத்திருந்த நான்கு இளைஞர்களும் அவரைப் பார்த்து, "வணக்கம் ஐயா" என்று கூறினார்கள். இயல்பாகவே நட்பாகப் பேசும் துரையப்பாவும் அவர்களைப் பார்த்து, "வணக்கம் தம்பிகள்" என்று பதிலுக்குக் கூறினார். பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த சுழற்துப்பாக்கியினை வெளியே எடுத்து துரையப்பாவை நோக்கிச் சுட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் துரையப்பாவின் நெஞ்சுப்பகுதியை ஊடறுத்துச் சென்றன. காயத்திலிருந்து இரத்தப் பீய்ச்சிட்டுப் பாய்ந்தது. நிலைகுழைந்து கீழே விழுந்த துரையப்பா அவ்விடத்திலேயே பலியானார். அதன்பின்னர் துரையப்பாவின் காருக்குச் சென்ற பிரபாகரனும் மற்றைய மூவரும், சாரதியை துரத்திவிட்டு காரை ஓட்டிச் சென்றனர். இனப்பிரச்சினையின் முதலாவது கொலை நடத்தப்பட்டாயிற்று. அது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிங்களவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது சிறிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குட்டிமணி 1973 ஆம் ஆண்டு அவர் பயணித்த படகிலிருந்து டெட்டனேட்டர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து குட்டிமணி தமிழ்நாட்டில் கைதானார். இந்தியாவின் வெடிபொருள் மற்றும் கடவுச்சீட்டு சட்டங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் அரசுக்கெதிரான பழிவாங்கும் தாக்குதல்களை குட்டிமணி திட்டமிட்டிருந்தார் என்கிற இலங்கையரசின் அறிவிப்பினை ஏற்றுக்கொண்ட அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முத்துவேல் கருனாநிதி, இலங்கை அரசு கேட்டுக்கொண்டதன்படி குட்டிமணியை இலங்கைக்கு நாடுகடத்த ஒப்புக்கொண்டார். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குட்டிமணி சிலகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்திறங்கிய தங்கத்துரை தனது இயக்கத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தார். 1975 ஆம் தைமாதம், மூன்றாவது அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. லண்டன் நகரில், தொடர்மாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற பல சம்பாஷணைகளின் விளைவாக இளையதம்பி இரத்திணசபாபதி மற்றும் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் ஆகியோர் இணைந்து இந்த மூன்றாவது அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது தமிழரின் பிரச்சினையை உலகறியச் செய்வதுதான். இவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் 1975 ஆம் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற நகரங்களான இங்கிலாந்தின் ஓவல் மைதானம் மற்றும் மஞ்செஸ்ட்டர் மைதானம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், ஒருசிலர் இலங்கையில் சிங்கள அரசு தமிழர் மேல் புரிந்துவரும் அட்டூழியங்களை பதாதைகளில் எழுதி, அவற்றினைக் கைகளில் உயரப்பிடித்தவாறு மைதானத்தின் குறுக்கே ஓடினர். இவ்வமைப்பின் கிளையொன்று யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டதோடு, 1976 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வவுனியா கண்ணட்டி பகுதியில் இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்னுமொரு ஆயுத அமைப்பொன்று 1975 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு, சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களுக்கு பலவிதமான அரசியல்க் கொள்கைகள் இருப்பினும், ஒரு அமைப்பாக அமிர்தலிங்கத்தின் கீழ் இவர்கள் செயற்பட்டனர். இந்த அமைப்பில் இருந்த இடதுசாரி கொள்கையுடைய பல உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை தமிழ் அரசியல்வாதிகள் உதட்டளவில் மட்டுமே தமிழர் நலன்குறித்துப் பேசுபவர்களாகவும், பாராளுமன்ற பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசியல் செய்பவர்களாகவுமே தெரிந்தனர். ஆகவே, தமிழ் இளைஞர் பேரவை என்பது, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை விலத்தி, செயற்றிறன் மிக்க, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அத்துடன் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட சாதி ஒழிப்புக் கோஷம் பொய்யானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதப் பிரதிவாதங்களின் விளைவாக தமிழ் இளைஞர் பேரவை 1975 ஆம் ஆண்டு ஆனி மாதம் இரு பிரிவுகளாக உடைந்தது. அதன்படி மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ஒரு பிரிவு தொடர்ந்தும் தமிழர் ஐக்கிய முன்னணியோடு செயற்பட, முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையிலான மற்றைய பிரிவு பிரிந்துசென்று ஈழம் விடுதலை இயக்கம் எனும் அமைப்பினை உருவாக்கியது. துரோகிகளை அழித்தல் சிவாகுமாரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட, சிறிமாவின் தமிழ் முகவர்களான துரோகிகளைக் கொல்லும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1975 ஆம் ஆண்டு, தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான ஆணையினை தந்தை செல்வாவிற்கு வழங்கிய அதே காலப்பகுதியிலேயே தமிழினத்தின் துரோகிகளை கொல்லும் முடிவினை பிரபாகரன் எடுத்திருந்ததாக அந்நாட்களில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பிலிருந்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது அமைப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரபாகரன் தனது முடிவிற்கான காரணம்பற்றி தெளிவாக விளக்கியிருந்ததாகவும் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கைத் தமிழரின் சரித்திரப் பெருமைபற்றி பிரபாகரன் பரவசத்துடன் பேசியிருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாண ராஜ்ஜியம் பற்றியும், போர்த்துக்கேயரிடம் அது வீழ்ச்சியுற்றது பற்றியும், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தமிழ்த் தலைவர்களின் அசமந்தத்தினால் தமிழரின் இறையாண்மை சிங்களவரிடம் அடகுவைக்கப்பட்டதுபற்றியும் உணர்வுபொங்க அவர் பேசியிருக்கிறார். மேலும், காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்கியது குறித்துப் பேசிய பிரபாகரன், மக்கள் ஆணையின்படி இழக்கப்பட்ட தமிழரின் இறையாண்மையினை மீளப்பெற்றே தீருவோம் என்று முழங்கியதாகவும் கூறுகிறார். "இந்த உன்னதமான கடமை எமது தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இலகுவான காரியமல்ல. மிகவும் கடுமையானதாகவும் நீண்டதாகவும் இது இருக்கப்போகிறது. ஆனால், நாங்கள் இதனை செய்துமுடிப்போம்" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். பிரபாகரனுக்கு அப்போது 20 வயதே ஆகியிருந்தது. அவரது வழிநடத்துதலின் கீழ் 30 போராளிகள் செயற்பட்டுவந்தனர். அவரிடமிருந்த ஆயுதங்கள் இரு கைத்துப்பாக்கிகள் மட்டுமே. ஒன்று வெளிநாட்டில் செய்யப்பட்டது, மற்றையது உள்நாட்டுத் தயாரிப்பு. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் தனது பயிற்சிமுகாமினை அமைத்திருந்த பிரபாகரன் தனது தோழர்களுக்கு துப்பாக்கியை நேராகச் சுடும் பயிற்சியை வழங்கிவந்தார். தமது நள்ளிரவு கலந்துரையாடல்களில் தமது முதலாவது ராணுவ நடவடிக்கையின் இலக்கினை தெரிவுசெய்தார்கள். அவர்தான் யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா. அது அமைப்பின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு. தமது இலக்கு யாரென்பதைத் தெரிவித்த பிரபாகரன், அதற்கான காரணத்தையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதில் முதலாவது குற்றச்சாட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டில் நடந்த படுகொலைகளில் துரையப்பா ஆற்றிய பங்கு. இரண்டாவது குற்றச்சாட்டு, தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் முடிந்த கையோடு, யாழ்ப்பாணத்தில் சிறிமாவுக்கு வரவேற்பளிக்க மக்களை பலவந்தமாகத் திரட்ட அவர் எடுத்த முயற்சிகள். மூன்றாவது குற்றச்சாட்டு, சிறிமாவின் அரசுக்கு ஆதரவான தளம் ஒன்றினை தமிழர்களிடையே ஏற்படுத்துவதற்கு துரையப்பா செய்துவந்த நடவடிக்கைகள். வரதராஜப் பெருமாள் கோயில், பொன்னாலை யாழ்ப்பாணம்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
காங்கேசந்துறை இடைத்தேர்தலும் மக்கள் ஆணையும் காங்கேசந்துறை தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததமை அரசை சிக்கலில் வீழ்த்தியிருந்தது. தந்தை செல்வாவுக்கு எதிராக இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒருவரைத் தெரிவுசெய்வதென்பது அரசைப்பொறுத்தவரையில் கடிணமான விடயமாகக் காணப்பட்டது. இவ்விடயம் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிமாவினால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. இத்தேர்தலில் அரசாங்கத்தினால் நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் தோல்வியடைவார் என்பதை தான் நம்புவதாகக் கூறிய சிறிமா, அத்தோல்வி கெளரவமான முறையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் கூறினார். இதற்காக தமிழர் ஐக்கிய முன்னணியினரின்ருக்கெதிரான வாக்குகள் பிரிக்கப்படாமல் இருக்க பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க அவர் தீர்மானித்தார். காங்கேசந்துறையில் ஆதரவுத்தளம் ஒன்றினைக் கொண்டிருக்கும் கம்மியூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யலாம் என்று அமைச்சரவை அவருக்கு ஆலோசனை வழங்கியது. இதன்படி, கம்மியூனிஸ்ட் கட்சி வி. பொன்னம்பலத்தை இத்தேர்தலில் நிற்குமாறு கேட்டுக்கொண்டாலும்கூட, அவர் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு நிகரான மாற்று தீர்வொன்றினை தான் மக்களிடம் முன்வைத்தாலன்றி இத்தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாதென்று பொன்னம்பலம் தனது கட்சியின் அரசியல்த் துறையினரிடம் கூறினார். பொன்னம்பலம் தனது கட்சியினரிடையே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக பிராந்தியங்களுக்கான சுயாட்சி முறையினை முன்வைத்து விவாதித்து வந்திருந்தார். ஆகவே, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தை உருவாக்குவதாக உத்தியோகபூர்வமற்ற முறையில் அவர் தேர்தலில் மக்களின் முன் பிரச்சாரப்படுத்தலாம் என்று அவரது கட்சி மேலிடம் அனுமதியளித்தது. சுமார் 41,227 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதி மக்களிடம் இரு விடயங்களுக்கான ஆணையைத் தருமாறு தந்தை செல்வா கேட்டிருந்தார். முதலாவது 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பான ஒற்றையாட்சி முறையினை நிராகரிப்பது. இரண்டாவது தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்கிக்கொள்வதென்பது. தந்தை செல்வாவின் தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பிரபாகரனும் அவரது தோழர்களும் தந்தை செல்வாவிற்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக்கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்களான ஈழவேந்தன் மற்றும் உமாமகேஸ்வரன் போன்றோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்தொகுதியின் ஓவ்வொரு வீட்டிற்கும் சென்ற இவர்கள் மக்கள் அனைவரும் தமிழ் ஈழமென்னும் தனிநாட்டிற்காக வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டதாக ஈழவேந்தன் கூறியிருந்தார். காங்கேசந்துறை இடைத்தேர்தல் 1975 ஆம் ஆண்டு மாசி மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது. தந்தை செல்வா அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில், அறுதியான வெற்றியைப் பெற்றார்.மொத்த வாக்காளர்களில் 87.09 வீதமானோர் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தொகுதியின் வரலாற்றில் இதுவே மிகக்கூடிய வாக்களிப்பு வீதமாகும். பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்ட 9,547 வாக்குகளுக்கெதிராக தந்தை செல்வா 25,927 வாக்குகளைப் பெற்றார். உடல் ஊனமுற்றிருந்த வாக்காளர்களைக் கூட தமது தோள்களில் சுமந்துசென்று போராளிகள் வக்களிப்பில் கலந்துகொள்ளச் செய்திருந்தனர். தனது தேர்தல் வெற்றியின்பின்னர் மக்களிடம் உரையாற்றிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "அந்நியரின் ஆக்கிரமிப்பினூடாக ஒருகுடையின் கீழ் கொண்டுவரப்படும்வரை இந்த நாட்டின் தமிழர்களும், சிங்களவர்களும் வெவ்வேறானஇறையாண்மைகொண்ட மக்கள் கூட்டங்களாகவே சரித்திர காலம் முதல் வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடங்களாக ஒருமித்த இலங்கையினுள் சிங்களவர்களுக்குச் சமமான வகையில் அரசியல் உரிமைகளைப் பெற நாம் போராடி வருகிறோம்". "ஆனால், மிகவும் வேதனையளிக்கும் விதமாக தொடர்ந்து ஆட்சியமைத்துவரும் சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அபரிதமான அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து வருவதுடன், எம்மை இரண்டாம்தர மக்கள் எனும் நிலைக்கும் தள்ளிவருகிறார்கள். தமிழ் மக்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதன் மூலம் இதனை அவர்களால் செய்துவர முடிகிறது". "இத் தேர்தல் வெற்றியின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையின்படி எனது மக்களுக்கும், இந்தநாட்டிற்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், சுதந்திரமான தனிநாடான தமிழீழத்தினை உருவாக்குவோம் என்பதாகும்". இதனைச் செவிமடுத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழமே எமது தாய்நாடு" என்றும் "தமிழ் ஈழமே எமது விருப்பு" என்றும் கோஷமிட்டனர். பல இளைஞர்கள் தந்தை செல்வாவின் அருகில் சென்று தமது சுட்டுவிரலில் கிறி, அவரது நெற்றியில் இரத்தத் திலகம் இட்டனர். எஸ் ஜே வி செல்வனாயகம் அன்றிலிருந்து தான் இறந்த 1977, சித்திரை 5 ஆம் திகதிவரை தான் கொண்ட கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. தனது பேச்சுக்களில் தனிநாட்டிற்கான அவசியத்தை அவர் நியாயப்படுத்தியே வந்திருந்தார். தமிழீழம் என்பது நிலப்பரப்பு ரீதியியாகவும், மக்கள் தொகையிலும் சிறியதாக இருப்பதால் சாத்தியமற்றது என்று அவரை விமர்சித்தவர்களுக்கு அவர் வைகாசி மாதம், 1975 ஆம் ஆண்டு கொக்குவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பதிலளித்திருந்தார். "தமிழ் ஈழத்தைக் காட்டிலும் மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும் குறைந்த நாடுகள் தம்மை சுதந்திரமான, தனியான நாடுகளாக அரசாண்டு வருகின்றன. அப்படியிருக்கையில், ஏன் தமிழர்கள் தமக்கான தனிநாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது?" என்று அவர் கேள்வியெழுப்பினார். சிங்கள அரசுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் ஈடுபடவேண்டும் என்று கூறிவந்தோருக்கு 1975 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 2 ஆம் திகதி, தெல்லிப்பழை கொல்லன்கலட்டியில் பதிலளித்துப் பேசிய தந்தை செல்வா, "நாங்கள் அவர்களுடன் தேவையானளவிற்குப் பேசியாயிற்று. எமக்கு சட்டரீதியாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக எமது சிங்களச் சகோதரர்களுடன் கடந்த 25 வருடங்களாக சமாதான வழிமுறைகளில் கேட்டு வந்திருக்கிறோம். பல சிங்களத் தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதோடு, பல ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறோம். ஆனால், எமது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போயுள்ள நிலையில் நாம் அவர்களுக்கு "வணக்கம்" கூறி விடைபெறும் காலமும் எமக்கான தனிநாட்டினை உருவாக்கும் காலமும் வந்துவிட்டது". என்று கூறினார். ஆயுத அமைப்புக்கள் மிதவாத அரசியல்த் தலைவர்கள் தமது வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைச் சந்தித்தையடுத்து, விரக்தியுற்று தமது முன்னைய நிலைப்பாடான ஒருமித்த இலங்கைக்குள் சமஷ்ட்டி அடைப்படியிலான தீர்வினைக் காணுதல் என்பதிலிருந்து தனியான நாடு என்பதே ஒரே வழி எனும் நிலைப்பாட்டிற்கு வந்துகொண்டிருக்க, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் தம்மை ஒருங்கிணைப்பதிலும், பலப்படுத்துவிதலும் ஈடுபட்டிருந்தார்கள். 1975 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இரு ஆயுத அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மறைவாக இயங்க ஆரம்பித்திருந்ததுடன், மூன்றாவது அமைப்பு இங்கிலாந்து லண்டனில் உருவாக்கப்பட்டது. பிரபாகரன் குழு என்று அறியப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பே இவற்றுள் முதன்மையானதாகக் காணப்பட்டது. அவ்வியக்கத்தினது அர்ப்பணிப்பு மிக்க போராடக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை 30 வரை அதிகரித்திருந்தது. அதனிடம் அப்போது இரு துருப்பிடித்த சுழற்துப்பாக்கிகளும், வீட்டில் செய்யப்பட்ட இரு கையெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. இவற்றினை வைத்துக்கொண்டே சிறிமாவுக்கு வரவேற்பளிக்க துரையப்பாவும், குமாரசூரியரும் மேற்கொண்ட முயற்சிகளை பிரபாகரனின் போராளிகள் தவிடுபொடியாக்கியிருந்தனர். செட்டியே இந்த செயற்பாடுகளின் பிரதானமாகச் செயற்பட்டிருந்தார். செட்டிமேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை அப்போது பலனளித்திருந்தது போலத் தோன்றியது. ஆனால், செட்டி தொடர்பாக பெரிய சோதி கொண்டிருந்த ஐய்யமும் தவறானதல்ல. ஏனென்றால், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தைக் கொள்ளையடித்த செட்டி, சுமார் 69,000 ரூபாய்களை தன்னுடனேயே வைத்திருந்தார். திடீரென்று அவருக்கு வந்த வசதியினைப் பார்த்து சந்தேகித்த நண்பர்கள் இது குறித்து அவரிடம் வினவியபோது, அப்பணத்தைக்கொண்டு தான் ஒரு பழைய காரினை வாங்கியதாக அவர் பொய்யுரைத்திருந்தார். 1974 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார். செட்டியின் கைது பிரபாகரனுக்கு சிக்கலான சூழ்நிலையினைத் தோற்றுவித்தது. பொலீஸாரின் கடுமையான விசாரணைகளின்போது, செட்டி தனது இருப்பிடங்க்களை நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடுவார் என்பதை பிரபாகரன் உறுதியாக நம்பினார். மேலும், தமிழ் அதிகாரி பத்மநாதன் செட்டிக்கு வழங்கிய சித்திரவதைகளை பிரபாகரனே எதிர்பார்க்கவில்லை என செட்டியின் நண்பர் ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறியிருந்தார். பத்மநாதன் செட்டியை ஒருவாறு பொலீஸ் உளவாளியாக மாற்றுவதில் வெற்றி கண்டிருந்தார். செட்டியின் கைதின் பின்னர் பிரபாகரனுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. பழங்களையும், நண்பர்களிடமிருந்து கிடைக்கும் உணவையும் உட்கொண்டே அவர் சமாளித்து வந்தார். மிகுந்த களைப்புடனும், பசியுடனும் அவர் தனது தோழர்களின் வீடுகளுக்கு சொல்லமலேயே வந்துவிடுவார். அவரை தமது சமையலறைக்குள் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கிருந்த உணவுகளை அவருக்குக் கொடுப்பார்கள். அதனை அவர் உட்கொண்டுவிட்டு, அங்கேயே சில மணிநேரம் படுத்துறங்கிச் சென்றுவிடுவார். எம். என், நாராயணசாமி தனது புத்தகமான "இலங்கையின் புலிகள்" இல் குறிப்பிடும்போது, "அவருக்கு ஒருமுறை மஞ்சள்க் காமாலை வந்திருந்தது. ஆனால், அவரோ வைத்தியரிடம் போக விரும்பவில்லை. ஆனால் அதிசயமாக, அவரது தோழர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் அவர் குணமானார்" என்று எழுதுகிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கேட்ட தமிழர்களும், யாழ்ப்பாணத்தில் திறந்த சிறிமாவும் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான எதிரணிக்கு மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஆதரவு சிறிமாவின் அரசை அச்சப்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழர் ஐக்கிய முன்னணியினை தன்பக்கம் வைத்திருக்க விரும்பியது. திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்குமாறு தமிழர்கள் பல காலமாக அரசைக் கேட்டுவந்தனர். ஆனால் இதுதொடர்பாக பாராமுகமாக இருந்துவந்த சிறிமா, இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து, தமிழரின் வாக்குகளை தன்பக்கம் இழுத்துக்கொள்ள, யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பலகலைக்கழகம் ஒன்றினை அமைக்கப்போவதாக அறிவித்தார். மேலும், தானே இப்பல்கலைக்கழகத்தினைத் திறந்துவைக்கப்போவதாகவும் தெரிவித்தார். பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930) அது ஒருவகையான தந்திரோபாய அரசியல் அறிவிப்பு. இளைஞர்கள் சிறிமா செய்யப்போவதை உணரந்துகொண்டனர். சிறிமாவின் சிங்கள அரசு செய்ய நினைப்பது திருகோணமலையில் அமைக்கும்படி தமிழர்களால் கோரப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினை அவர் அமைப்பதன் மூலம் வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையே பிரிவினையொன்றை உருவாக்கவே அவர் முனைகிறார் என்பதனை தெளிவாகப் புரிந்துகொண்டனர். உடனடியாக செயலில் இறங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் கைலாசபதி அவர்களைத் தலைவராக தேர்வுசெய்ததுடன், அப்பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்காக பொன் பொன்னம்பலம் ராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியின் வளாகத்தினை தெரிவுசெய்தனர். 1974 ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சிறிமா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். பல்கலைக்கழகத்தினை சிறிமா திறந்துவைக்கும் நிகழ்வினை முற்றாகப் புறக்கணிக்குமாறு போராளிகள் மக்களைக் கேட்டுக்கொண்டதோடு, சிறிமாவின் ஆதரவாளர்களால் யாழ்க்குடாநாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட பிரதமரை வரவேற்கும் எந்த அரச நிகழ்விலும் பங்கெடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். பிரதமரின் வருகைக்கெதிராக கறுப்புக்கொடி போராட்டத்தையும் அவர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இளைஞர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மக்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அபோது ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் கைகளுக்கு மாறியிருந்தது. சிவகுமாரனின் மரணமும், சத்தியசீலனின் கைதும் நான்கு ஆயுத அமைப்புக்களின் இரண்டினை முற்றாகச் செயலிழக்க வைத்திருந்தன. மேலும், தங்கத்துரையும் குட்டிமணியும் தொடர்ந்தும் சேலத்தில் தங்கியிருந்தமை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளையும் பெரிதாகப் பாதித்திருந்தது. பிரபாகரனின் யாழ் மீள்வருகையோடு, அவரது இயக்கமான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு மட்டுமே யாழ்ப்பாணத்தில் வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 20 வயது நிரம்பிய பிரபாகரனின் முடிவுகளை மரியாதையுடன் மக்கள் ஏற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய முன்னணியினரும் வேண்டாவெறுப்புடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிறிமாவுக்கு மிகச் சூடான வரவேற்பினை பிரபாகரன் அளித்தார். சிறிமாவின் வருகையினையொட்டி யாழ்க்குடாநாட்டின் 6 இடங்களில் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. யாழ்ப்பாணச் சந்தை, காங்கேசந்துறை பொலீஸ் நிலையம், கம்மியூனிஸ்ட் கட்சி அரசியல்த்துறை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீடு ஆகியன இலக்குவைக்கப்பட்டிருந்தன. பொன்னம்பலமே சிறிமாவின் மொழிபெயர்ப்பாளராக செயலாற்றியிருந்தார். இந்தக் குண்டுவெடிப்புக்களால் எவருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது உடமைகளுக்கு கடுமையான சேதங்களோ ஏற்பட்டிருக்கவில்லை, ஆனால் அச்சகரமான சூழ்நிலையொன்றினை இது தோற்றுவித்திருந்தது. இவற்றிற்கு மேலதிகமாக சில பேரூந்துகள் மீது கல்லெறிரித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒரு சில தீக்கிரையாக்கப்பட்டும் இருந்தன. சிறிமாவின் யாழ் வருகையினை முன்னிட்டு அல்பிரெட் துரையப்பாவும், அமைச்சர் செல்லையா குமாரசூரியரும் மேற்கொண்ட வரவேற்பு நிகழ்வுகளுக்கு மக்கள் கூட்டத்தினை ஒன்றுதிரட்ட அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பிசுபிசுத்துப் போயின. துரையப்பாவே இதில் மும்முரமாக மக்களைத் திரட்ட எத்தனித்ததுடன், தனது சொந்த வாகனத்திலேயே மக்களை நிகழ்விற்கு அழைத்துவரவும் முயன்றார். சிறிமாவின் யாழ்வருகையும், அதனூடாக அவர் அடைய நினைத்த மக்கள் ஆதரவு முயற்சியும் படுதோல்வியைச் சந்தித்திருந்தன. தமிழ் ஆயுத அமைப்புக்களின் சொற்படி தமிழர் ஐக்கிய முன்னணி நடக்க எடுத்த முடிவும் அரசிற்கு எரிச்சலினை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் தமிழர் ஐக்கிய முன்னணிக்கெதிராக தனது கோபத்தினைக் காட்டிக்கொள்ளும் நிலையில் சிறிமாவின் அரசு இருக்கவில்லை. எதிரணியின் வளர்ந்துவரும் செல்வாக்கிற்கு அஞ்சியிருந்த அரசாங்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரிற்கு அப்போது அழுத்தங்களைக் கொடுக்க விரும்பவில்லை.தமிழர் ஐக்கிய முன்னணியினரின் இரு கோரிக்கைகளான காங்கேசந்துறைத் தொகுத்திக்கான இடைத்தேர்தலினை நடத்துவது மற்றும் சிறையிலிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வது ஆகியவற்றினை செய்ய ஏற்றுக்கொண்ட அரசு தேர்தலினை நடத்தியதோடு சில இளைஞர்களையும் விடுதலை செய்தது. மேலும், தனது அரசு அறிவித்த பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை மூலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த வடபகுதி மாணவர்களையும் இளைஞர்களையும் சமாதானப்படுத்த மாவட்ட ரீதியான பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கை முறையினையும் அறிவித்தது. தமிழ் பரீட்சைத்தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மாணவர்களுக்கு சாதகமாகச் செயற்படுகிறார்கள் என்கிற சிங்களவர்களின் குற்றச்சாட்டினை அடுத்து அரசால் நியமிக்கப்பட்ட கியுனிமன் ஆணிக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே மாவட்ட ரீதியிலான பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கை முறையினை அரசு கொண்டுவந்தது. கியுனிமன் ஆணிக்குழுவின் அறிக்கையின்படி, "ஒரு குறிப்பிட்ட மொழியில் பதிலளிக்கப்படும் வினாத்தாளகளை திருத்தும் ஆசிரியர்கள் அம்மாணவர்களுக்குச் சார்பாகத் திருத்துவதற்கான சாத்தியங்களோ, அல்லது அப்படி நடந்தமைக்கான சாட்சிகளோ எம்மால் கண்டறியப்படவில்லை" என்று சிங்களவர்களின் குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்திருந்தது. மேலும், அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தரப்படுத்தல் முறையானது இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனத்தையும், சந்தேகத்தினையும் மேலும் ஆளமாக்கி விட்டிருப்பதாகவும் பொதுப்பரீட்சைகளின்மீது மக்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையினையும் தரப்படுத்தல் முறை வெகுவாக பாதித்திருக்கிறது என்றும் கூறியது. 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட ரீதியிலான பல்கலைக்கழக அனுமதி முறையின்படி பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் 30 வீதமானோர் மெரிட் மூலமாகவும், 55 வீதமானவர்கள் மாவட்டங்களுக்கான எண்ணிக்கை மூலமாகவும், மிகுதி 15 வீதமானோர் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டனர். மாவட்ட எண்ணிக்கை அடிப்படையிலான அனுமதி முறை யாழ்ப்பாண மாணவர்களைப் பாதித்திருந்தபோதிலும், வேறு மாவட்டங்களில் வாழும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகும் நிலையினை உருவாக்கியிருந்தது. 1974 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 7 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டது. இது மொத்த மக்கள் தொகையில் யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை வீதத்திற்குச் சமனானது. ஆனால், இந்த புதிய அனுமதி முறை வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்த தமிழ் மாண்வர்களுக்கு அனுகூலமாக அமைந்தது. இந்த மாவட்ட ரீதியிலான அனுமதி முறையூடாகவே கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முதன்முதலாக ஒரு மாணவர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாவது இராணுவ நடவடிக்கை நாடுதிரும்பிய பிரபாகரன் சிவகுமாரன் முயன்று செய்யமுடியாமற்போன ஒரு விடயத்தைப் பிரபாகரன் செய்துமுடித்தார். அதுதான் யாழ்நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவைக் கொல்வது. சிவகுமாரனின் திடீர் மரணமும் பிரபாகரன் நாடுதிரும்புவதற்கான காரணிகளில் ஒன்றாகவிருந்தது. சிவகுமாரனின் மறைவோடு அரசுக்கெதிரான கிளர்ச்சியாளாளர்களின் செயற்பாடுகள் மந்தகதியினை அடைந்தன. ஆகவே, இச்செயற்பாடுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தான் நாடு திரும்புவது அவசியமானதென்று பிரபாகரன் கருதினார். அப்போது பிரபாகரனுடன் செட்டியும் இருந்தார். புதிய தமிழ்ப் புலிகளை பிரபாகரன் ஆரம்பிக்கும்போது செட்டியும் அவருடன் இருந்தார். 1973 ஆம் ஆண்டு செட்டி கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கிருந்து தப்பி அவர் சென்னை வந்தடைந்திருந்தார். பிரபாகரனுடன் கோடாம்பக்கத்தில் தங்கியிருந்த பெரிய சோதி, பிரபாகரன் செட்டியுடன் சேர்ந்து செயற்படுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால், குட்டிமணி தங்க்த்துரை ஆகியோரிடம் இதுபற்றி முறையிட்டிருந்தார். ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அடிபணிய பிரபாகரன் விரும்பவில்லை. அவரைப்பொறுத்தவரையில் அன்றைய தேவையாக இருந்தது தாயகத்தில் அரசுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது மட்டுமே, அதற்கு செட்டி அவருக்குச் சரியான ஆளாகத் தெரிந்ததனால், அவருடன் சேர்ந்து செயற்பட அவர் தீர்மானித்திருந்தார். சிவகுமாரன் மரணித்து ஏறத்தாள ஒன்றரை மாதத்திற்குப் பின்னர், 1974 ஆம் ஆண்டு ஆடி மாதம் பிரபாகரன் நாடு திரும்பினார். தனக்கான மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதில் பல கஷ்ட்டங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவரது முன்னைய மறைவிடங்கள் அனைத்தையும் பொலீஸார் அறிந்துவைத்திருந்தனர். அவரிடம் பணமிருக்கவில்லை. ஊரிலிருந்த அவரது முன்னாள்த் தோழர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பொலீஸாரின் கண்களிலிருந்து தப்பியிருந்த ஒருசில நண்பர்களும் அச்சம் காரணமாக பிரபாகரனுக்கு உதவ முன்வரவில்லை. ஆயுதரீதியில் செயற்பட எத்தனித்த பல இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த காலம் அது. இப்போராளிகளைத் தேடி வேட்டையாடுவதில் முன்னின்று செயற்பட்ட பல தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் மிகக்கடுமையாக இருந்தன. தமிழ்ப் பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை, பத்மநாதன், மற்றும் தாமோதரம்பிள்ளை ஆகியோர் மேலிடத்திலிருந்து வரும் பாராட்டுதல்களுக்காகவே தமிழ் இளைஞர்களைத் தேடித்தேடி வேட்டையாடி வந்தனர். "அவர்கள் எப்படியாவது இளைஞர்களைப் பிடித்துவிடுவார்கள்" என்ற பெயர் பொலீஸ் திணைக்களத்தில் அவர்களுக்கு இருந்தது. தமிழ் இளைஞர்களுடன் கடுமையாக நடந்துகொள்ளுமாறு அரசாங்கமும் இவர்களைப் பணித்திருந்தது. அமைச்சர் குமாரசூரியர் இந்தவிடயத்தில் மிகக்கடுமையாக நடந்துகொண்டிருந்தார். தமிழ் ஆயுத அமைப்புக்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடக் கங்கணம் கட்டிய குமாரசூரியர் தமிழ் பொலீஸ் அதிகாரிகளின் கடுமையான செயற்பாடுகளின் பின்னால் இருந்துவந்தார். தமிழர்களை அரசின் வழிக்குக் கொண்டுவர குமார்சூரியர் எடுத்துவந்த முயற்சிகளையெல்லாம் தமிழ் இளைஞர்கள் குழப்பிவிடுவார்கள் என்பதை அவர் உணரத் தலைப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாவது மாவீரர் சிவகுமாரனின் உருவச்சிலை – 2004 சிவகுமாரனே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது மாவீரன் என்று தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொண்டது. அவரது உயிர்த்தியாக நாள் மாணவர் எழுச்சி நாளன்று நினைவுகூரப்பட்டது. பிரபாகரனின் ஆணையின்படி இந்தநாள் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தமீழ விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையாக உழைத்தவர்களை நினைவுகூர்வதென்பது பிரபாகரனைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. ஆரம்பத்தில் சிவகுமாரனின் மறைவு நாளாக ஆனி 5 கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1996 ஆம் ஆண்டின் மாணவர் எழுச்சி நாளுக்குப் பின்னர் அது ஆனி 6 இற்கு மாற்றப்பட்டது. ஆனி 5 உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டுவருவதே இதற்குக் காரணமாகும். 1993 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிவகுமாரனின் நினைவுநாள் கொண்டாடப்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு மொத்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இது அனுஷ்ட்டிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு, சிவகுமாரனின் தியாகத்தை வணக்கம் செலுத்தும் முகமாக, மேலே உயர்த்திப் பிடிக்கப்பட்ட முஷ்ட்டியுடனான சிவகுமாரனின் உருவச்சிலை வெண்கலத்தில் செய்யப்பட்டு அவரது பிறந்த ஊரான உரும்பிராயில் நிறுத்தப்பட்டது. தமிழ் மாணவர் அமைப்பினரின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான முத்துக்குமாரசாமி அச்சிலையினைத் திறந்துவைத்தார். 1977 ஆம் ஆண்டு இராணுவம் அச்சிலையினை அடித்து நொறுக்கியிருந்தாலும் கூட, மறுவருடமே அது மீளவும் கட்டி எழுப்பப்பட்டது. இராணுவம் 1981 இல் மீண்டும் அச்சிலையினை உடைத்துப் போட்டது. 1982 ஆம் ஆண்டு மாசி 27 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இச்சிலை தொடர்பான சம்பாஷணை ஒன்றினைப்பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. 1982 ஆம் ஆண்டு, தை மாதம் 28 ஆம் திகதி உரும்பிராயில் சிவகுமாரனின் வீட்டிற்கு அதிரடியாக நுழைந்த சுமார் 50 ராணுவத்தினர் தாம் இங்கே ஒளிந்திருக்கும் ஆயுதக்குழு உறுப்பினர்களைத் தேடுவதாக அவரது பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். அவ்வேளை சிவகுமாரனின் உடைக்கப்பட்ட சிலையிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய துண்டொன்றைக் கண்டனர். "இது யாருடைய சிலை?" என்று ராணுவ வீரர்களின் தளபதி சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமியைப் பார்த்துக் கேட்டான். "உடைக்கப்பட்ட எனது மகனின் சிலையிலிருந்து நான் எடுத்துவந்த சிறிய துண்டே அது" என்று அவர் பதிலளித்தார். "இதை இங்கே கொண்டுவந்தது யார்?" என்று அவன் மீண்டும் கேட்டான். "சாதாரண பொதுமக்கள்" என்று தாயார் பதிலளித்தார். "சிவகுமாரன் தற்போது எங்கே?" என்று அவன் மீளவும் கேட்டான். "அவர் 1974 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதியன்று இறந்துவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். சிவகுமாரன் மரணித்து 8 வருடங்களாகியும் அவர்பற்றிய செய்தி அந்த இராணுவ அதிகாரிக்குத் தெரிந்திருக்கவில்லையென்றால், தமிழ் மக்களின் போராட்டம் பற்றி எவ்வகையான அறிவினைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த ராணுவ அதிகாரி மட்டுமல்லாமல், நாட்டின் பிரதமரான சிறிமா, அவரது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொலீஸார் என்று எவருமே தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள், உணர்வுகள் குறித்து ஒருபோதுமே அக்கறைப்பட்டிருக்கவில்லை என்பதனையும் இது காட்டுகிறது. சிவகுமாரனின் மரணச் சடங்கின்போது அமிர்தலிங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து ரகசிய உளவுச் செய்தியொன்றினை யாழ்ப்பாணப் பொலீஸார் பிரதமர் சிறிமாவுக்கு அனுப்பிவைத்திருந்தனர். இந்த உளவு அறிக்கையின்படியே சிறிமா தனது தீர்மானங்களைப் பின்னர் எடுத்திருந்தார். அந்த உளவு அறிக்கை பின்வருமாறு கூறியது, "நாங்கள் அவரது பேச்சினை பதிந்து வைத்திருக்கிறோம். அந்த பேச்சில் அவர் ஒரு குற்றவாளியை வீரன் என்று புகழ்ந்திருந்தார்" .
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இளைஞர்களின் கோபம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேண்டுமென்றே பொலீஸார் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து இளைஞர்கள் மிகுந்த கவலையும், ஆத்திரமும் கொண்டிருந்தனர். இதற்கு எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். சிவகுமாரன் யாழ்ப்பாணத்திலும், பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தபடியும் இளைஞர்களை உணர்வூட்டிக்கொண்டிருந்தார்கள், பழிவாங்குதல் அவசியம் என்று உரைத்தார்கள். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அப்பாவிகள் மேல் கண்மூடித்தனமாக சிங்கள அரசின் காவல்த்துறை நடத்தியிருக்கும் தாக்குதல் தமக்குக் கூறும் ஒரே செய்தி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தினைக் கையிலெடுக்க வேண்டும் என்பதைத்தான் என்று அவர்கள் வாதிட்டார்கள். அவர்களால் மூன்று தனிநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டார்கள். அவர்களின் இலக்குகளாக அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகர ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். சிவகுமாரனின் நண்பர்கள் கூறுகையில், அப்பாவிகளின் கொலையோடு நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சந்திரசேகரவையே முதலில் கொல்லவேண்டும் என்று அவர் தம்மிடம் கூறியிருந்ததாகக் கூறுகிறார்கள். தமிழ் இளைஞர் பேரவை இத்தாக்குதலைக் கண்டித்து பொலீஸாருக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. இலங்கையின் சுதந்திர தினமான மாசி 4 ஆம் திகதியினை தமிழர்கள் நினைவு வணக்க நாளாகவும், இறைவனைப் பிராத்திக்கும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஒன்பது அப்பாவிகள் கொல்லப்பட்ட பகுதிக்கு முன்னால் அமைந்திருந்த முனியப்பர் கோயிலில் உண்ணாவிரத நிகழ்வொன்றினை ஆரம்பித்த அவர்கள், தமிழர்கள் அனைத்து இந்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் கொல்லப்பட்ட ஒன்பது அப்பாவிகளுக்காக நினைவு பூஜைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலும், மாசி 3 ஆம் திகதி மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளைப் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என்றும் இளைஞர் பேரவையினர் கேட்டுக்கொண்டனர். பொலீஸாரின் அச்சுருத்தல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் மாசி 3 ஆம் திகதியன்று பாடசாலைகளைப் புறக்கணித்திருந்தனர். சுதந்திர நாளான மாசி 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியிலும் இளைஞர்களால் கறுப்புக் கொடியொன்று பறக்கவிடப்பட்டது. கறுப்புக்கொடிகள் தம் கண்முன்னே பறப்பதைக் கண்ணுற்ற பொலீஸார் வீதியால் சென்றோரைத் தாக்கியதோடு, மணிக்கூட்டுக் கோபுரத்தில் கட்டப்பட்ட கொடியினை பொதுமக்களை வற்புறுத்திக் கழற்றி எறிந்தனர். அதன்பின்னர் யாழ்நகரிற்குள் சென்ற பொலீஸார் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட கடை உரிமையாளர்களை நையைப் புடைத்ததுடன், கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடிகளையும் அறுத்தெறிந்தனர். அசெளகரியமான சூழல் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து யாழ்ப்பாண வர்த்தகர்களும், சாதாரணம் மக்களும் இருவேறு பிரிவினரிடமிருந்து முரணான அறிவுருத்தல்களைப் பெறவேண்டியதாயிற்று. முதலாவது தமிழ் இளைஞர்கள் மற்றும் ஆயுதஅமைப்புக்கள். மற்றைய பிரிவினர் இலங்கையின் பொலீஸார். இளைஞர்கள் வர்த்தக நிலையங்களிப் பூட்டுமாறு அறிவித்தல் விடுத்தபின்னர், பொலீஸார் அவ்வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வர்த்தகர்களை மிரட்டி மீண்டும் அவற்றினை திறக்கச் செய்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவிய சூழ்நிலையினை வர்த்தகரான மயில்வாகனம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், "நாம் எமது இளைஞர்களை நேசிக்கிறோம். அவர்கள் எமக்குத் தரும் அறிவித்தல்களில் எமக்குப் பிரச்சினை இருந்ததில்லை, அதனை விரும்பியே நாம் செய்துவந்தோம். ஆனால், பொலீஸார் வந்து எம்மை அச்சுருத்தி கடைகளைத் திறக்கப்பண்ணினார்கள். அவர்களை நாம் முற்றாக வெறுத்தோம்". இந்தச் சூழ்நிலை இரட்டை நிர்வாகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவருவதைக் காட்டியது. இளைஞர்களுக்கும், பொலீஸாருக்குமிடையிலான முறுகல்நிலை யாழ்ப்பாணத்தில் மோசமடையத் தொடங்கியது. தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் பின்னர் சிவகுமாரன் இரு கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது முதலாவது முயற்சி பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவைக் கொல்வதாக அமைந்தது. சிவகுமாரனும் அவரது சில நண்பர்களும் சந்திரசேகரவைக் கொல்வதற்கு கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகில் பதுங்கியிருந்தனர். சந்திரசேகர பயணித்த ஜீப் வண்டி அவர்களை நெருங்கியதும், அதனை மறித்த சிவகுமாரன், கதவினைத் திறந்து சந்திரசேகர மீது தனது சுழல்த்துப்பாக்கியினால் சுட்டார். ஆனால் துப்பாக்கி சுடவில்லை. அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி. சந்திரசேகர வாகனத்தை விட்டு வெளியே பாயவும், சிவகுமாரனும் நண்பர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அவரது இரண்டாவது முயற்சி பொன்னாலைப் பாலத்தருகில் துரையப்பாவின் வாகனத்தை வழிமறித்து, அவரைச் சுடுவதாகவிருந்தது, ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது. கூட்டுச் சத்தியம் இதனையடுத்து சிவகுமாரனை எப்படியாவது கைதுசெய்துவிடவேண்டும் என்று பொலீஸார் தமது தேடுதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். தனது நடமாட்டங்களும், செயற்பாடுகளும் சிறிது சிறிதாக முடக்கப்பட்டு வருவதை சிவகுமாரன் உணரத் தொடங்கினார். அதனால் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்று சிறிதுகாலம் அங்கு தங்கியிருக்கலாம் என்று நினைத்தார். அதற்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால் இரு தமிழ் அரசியல்வாதிகளை அவர் அணுகியிருந்தார். ஆரம்பத்தில் உதவிசெய்வதாக உறுதியளித்துவிட்டு, இறுதியில் கையை விரித்துவிட்டார்கள். இதனால் கடும் விரதியடைந்த சிவகுமாரன் தனது நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசும்போது, "அவர்களுக்கு பேசுவதற்கு மட்டுமே நன்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் ஒருபோதும் காரியத்தில் இறங்குவதில்லை" என்று கூறியிருக்கிறார். சிவகுமாரன் தானே செயலில் இறங்கத் தீர்மானித்தார். அதன்படி கோப்பாய் மக்கள் வங்கியினைத் திருடுவது என்று அவர் முடிவெடுத்தார். 1974 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி காலை, வங்கி தனது வேலைகளை ஆரம்பித்திருந்த வேளை சிவகுமாரனும் இன்னும் ஐந்து தோழர்களும் வங்கிக்குச் சென்றனர். வங்கிக்குச் சென்றவுடன் வாசலில் காவலில் இருக்கும் பொலீஸாரைச் சுடுவது, பின் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை ஒரு அறைக்குள் அடைப்பது, பணத்தைத் திருடுவது என்பதே அவர்களது திட்டம். அதன்படி, சிவகுமாரன் காவலுக்கு நின்ற பொலீஸார் மீது இருமுறை சுட்டார், ஆனால் குறி தவறிவிட்டது. பொலீஸார் சுதாரிப்பதற்குள் சிவகுமாரன் செம்மண் தோட்டவெளிகளுக்கூடாக ஓடத் தொடங்கினார், பின்னால் பொலீஸார் திரத்திக்கொண்டே வந்தனர். ஒருகட்டத்தில் பொலீஸார் தன்னை எட்டிப் பிடிக்கும் தூரத்திற்குள் வந்துவிட்டதை உணர்ந்தார் சிவகுமாரன். இனித் தப்பிக்க முடியாது என்கிற நிலையினை உணர்ந்தவுடன், தான் கூடவே வைத்திருந்த சயனைட் வில்லையினை விழுங்கினார். நினைவிழந்து வீழ்ந்துகிடந்த சிவகுமாரனை பொலீஸார் யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றனர். சிவகுமாரன் சயனைட் அருந்தி நினைவின்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி காட்டுத்தீப் போல் நகரெங்கும் பரவியது. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பின்வருமாறு விபரித்தார், "அந்தச் செய்தி எமது செவிக்கு எட்டியபோது நாம் வகுப்பில் இருந்தோம். ஒருவிதத்தில் அச்செய்தி எமக்கு உற்சாகத்தினை அளித்தது. எமது பாடசாலையினைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் தமிழ்த்தாய்க்காக தனது உயிரைத் தியாகம் செய்திருக்கிறான் என்று நாம் பரவசப்பட்டோம். பாடசாலை முடிந்தவுடன் சைக்கிள்களில் ஏறி வேகமாக யாழ்ப்பாண வைத்தியசாலை நோக்கி விரைந்தோம். நாம் அங்கே சென்றபோது பெரும் திரளான மக்கள் வைத்தியசாலையில் குழுமியிருந்தனர். அவர்களுள் அநேகமானவர்கள் மாணவர்கள். அன்று மாலை அவர் இறந்துவிட்டதாக நாம் அறிந்தபோது துக்கம் எம்மை ஆட்கொள்ள அழத் தொடங்கினோம்". யாழ்ப்பாணம் அழுதது, ஒட்டுமொத்த யாழ்க்குடா நாடே அழுதது. அனைத்து இலங்கைத் தமிழர்களும் அழுதார்கள். ஒருவர் செய்யக்கூடிய உச்ச தியாகம் அது. தாங்கொணாத் துயரம் ஒன்றினுள் தமிழ்ச் சமூகம் மூழ்கிக்கொண்டிருந்தது. யாழ்க்குடாநாட்டின் பல வீடுகளில் கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டன. கடைகளின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. சிவகுமாரனின் உயிர்த்தியாகத்தைப் போற்றிப் பதாதைகளும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. சிவகுமாரனின் இறுதிக் கிரியைகள் ஆனி 7 ஆம் திகதி நடைபெற்றது. மிகப்பெருந்திரளான மக்கள் அவரின் வீட்டின் முன்னால் வரிசைகளில் நின்று அவருக்கான தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தினர். அவர்களில் 7 இளைஞர்கள் தமது கைகளை அறுத்து இரத்தத்தில் சிவகுமாரனின் நெற்றியில் திலகமிட்டு தாய்த் தமிழுக்காக தமது உயிரைக் கொடுப்போம் என்று சத்தியம் செய்தனர். பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து போயினர். உயிர்த் தியாகம் எனும் கருத்தியலை உருவாக்கியவர் தியாகி சிவகுமாரனே! சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளை மாணவர்களே பொறுப்பெடுத்துக்கொண்டனர். சிவாகுமாரன் உயர்தரம் பயின்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு அவரது பூதவுடலை எடுத்துச் சென்று அங்கே மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்க விரும்பினர். பொலீஸார் இதற்கு அனுமதி மறுக்கவே பொலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கிய மாணவர்கள், பொலீஸ் தடையினையும் மீறி சிவகுமாரனைன் பூதவுடலை எடுத்துச் செல்வோம் என்று கோஷமிட்டனர். சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, மாணவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே பிணக்கு மேலும் மோசமடையாதவாறு தவிர்த்துவிட்டனர். சுயாதீனமான கணிப்பீடுகளின்படி சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 15,000 ஆவது இருக்கலாம் என்று தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் அதுவரை இடம்பெற்ற இறுதி ஊர்வலங்களில் சிவகுமாரனின் இறுதி ஊர்வலத்திலேயே அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சமஷ்ட்டிக் கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் சிவகுமாரனின் மறைவினையொட்டு மிகவும் இரக்கமான அறிக்கையொன்றினை வெளியிட்டார், "தமிழ் மக்களுக்காகன மிக உச்ச தியாகத்தினை தம்பி சிவகுமாரன் புரிந்திருக்கிறார். அது ஒரு வீரம் மிக்க செயலாகும். தமிழ் மக்களின் பிறப்புரிமையினை மீட்டெடுக்க அவர் தேர்வுசெய்த ஆயுத தாங்கிய வன்முறைப் போராட்டத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் கூட, அவரது இலட்சிய உறுதிக்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று அந்த அறிக்கை கூறியது. இளைஞர்கள் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்டுக் காணப்பட்டார்கள். அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்கு மேடையில் வைக்கப்படுகையில் வரிசையாக நின்ற இளைஞர்கள் கூட்டுச் சத்தியம் ஒன்றினை மேற்கொண்டனர். "சிவகுமாரனின் பெயரால், அவரது ஆன்மாவின் பெயரால், அவரது வித்துடலின் பெயரால் அவர் முன்னெடுத்த தமிழர்களின் சுதந்திரப்போராட்டத்தினை, நாம் எமது இலட்சியத்தினை அடையும்வரை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், அதுவரையில் நாம் ஓய்வெடுக்கவோ பின்வாங்கவோ மாட்டோம் என்றும் இத்தால் உறுதியெடுக்கிறோம்" என்று சிவகுமாரனின் உடல்மீது சத்தியம் செய்துகொண்டார்கள். தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, உயர்வாக மதிக்கப்பட்ட விடுதலைப் போராளியாக சிவகுமாரனுக்கு தமிழர்கள் புகழஞ்சலி செலுத்தியதுடன், ஈழத்தின் "பகத் சிங்" என்றும் அவரை அழைக்கத் தலைப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது நாளந்த போர் நாளேட்டில் சிவகுமாரனின் உயிர்த் தியாகம் பற்றி 1984 இல் இவ்வாறு கூறியிருந்தது. "சிவகுமாரன் ஒரு மிகச் சிறந்த விடுதலைப் போராளியாகவும், ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழந்தார்" என்று பதிவிட்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிக்க நன்றி நொச்சி அவர்களே. திரு சபாரட்ணம் எழுதியதை என்னால் முடிந்தவரையில் அப்படியே எழுத முயல்கிறேன். ஈழப்பிரியன் அண்ணா மற்றும் நுணாவிலான், உங்களின் ஆதரவிற்கு எனது நன்றிகள் !
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பொலீஸ் படுகொலைகள் செல்லையா குமாரசூரியரின் ஆலோசனைப்படி நடந்த சிறிமாவின் அரசாங்கம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிய நாளிலிருந்தே அதனைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கியிருந்தது. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற சர்வதேச நிகழ்வான தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை சிறிமாவின் அரசின் அனுசரணையுடன், தானே நடத்தவேண்டும் என்று விரும்பிய குமாரசூரியர், இதன்மூலம் தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் நல்ல அமைச்சர் எனும் நற்பெயரினை சிறிமாவிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். மலேசியாவிலும், தமிழ்நாட்டிலும் நடைபெற்றதைப்போல, இலங்கையில் நடந்த மாநாட்டை நாட்டின் தலைவரான சிறிமாவே ஆரம்பித்துவைக்கவேண்டும் என்று குமாரசூரியர் பிடிவாதமாக நின்றார். முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தேறியபோது அந்நாட்டின் பிரதமர் டுங்கு அப்துள் ரெகுமானே அம்மாநாட்டினை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே 1968 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி தமிழ்நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது மாநாட்டினை இந்தியாவின் அரசுத்தலைவராக இருந்த சாக்கிர் ஹுஸ்ஸயின் ஆரம்பித்து வைத்திருந்தார். மூன்றாவது மாநாடு பரீஸில் இடம்பெற்றபோது யுனெஸ்க்கோ வின் செயலாளர் நாயகம் ஆரம்பித்து வைத்திருந்தார். நான்காவது மாநாட்டினை நடத்துவதற்கு இலங்கை தெரிவுசெய்யப்பட்டிருந்தது. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இலங்கைக் கிளை, 1973 ஆம் ஆண்டு சித்திரை மாதம் கொழும்பில் மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கான குழுவொன்றினை அமைப்பதற்காக ஒன்றுகூடியது. இலங்கைக் கிளையின் தலைவரான கலாநிதி தம்பைய்யா இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகளில் அந்த நாட்டு தலைவர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைத்ததுபோன்று இலங்கை மாநாட்டினை சிறிமாவே அரம்பித்துவைக்கவேண்டும் என்று தம்பையா தீர்மானம் ஒன்றினை முன்மொழிய, கொம்மியூனிசக் கட்சியின் பின்புலத்தில் இயங்கி வந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் அதனை ஆமோதித்தனர். ஆனால், அக்கூட்டத்தில் பங்குபற்றிய பெரும்பாலானவர்கள் தமிழரின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்திலேயே இந்த மாநாடு நடைபெறுவதை விரும்பினர். யாழ்ப்பாணதில் நிலவிவந்த அரசுக்கெதிரான மனோநிலையினை நன்கு உணர்ந்திருந்த அமைச்சர் குமாரசூரியரின் ஆதரவாளர்கள், மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்தும் எத்தனிப்புக்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பின்புலத்திலேயே நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அன்றைய தினத்திலிருந்து இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதைத் தடுத்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்ட அமைச்சர் செல்லையா குமார்சூரியர் அரச இயந்திரத்தைப் பாவித்து, மாநாட்டினை நடத்தும் குழுவினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எதிராக பல தடைகளைப் போட்டுவந்தார். அவற்றில் ஒன்று மாநாட்டில் பங்குபெறும் பல இந்திய நாட்டவர்களுக்கான இலங்கை வரும் அனுமதியினை இரத்துச் செய்வது. மாநாட்டினை ஒருங்கிணைப்பவர்களின் வேண்டுகோளான வீரசிங்கம் மண்டபத்தினைப் பாவிக்கும் அனுமதி மற்றும் ஒலிபெருக்கிகளைப் பாவிக்கும் அனுமதி ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதித்த அமைச்சர், வீரசிங்கம் மண்டபத்தினை மாநாடு ஆரம்பிக்கும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டுமே பாவிக்கமுடியும் என்று கூறியதோடு, ஒலிபெருக்கிகளைப் பாவிப்பதனையும் தடுத்து விட்டிருந்தார். மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எதிராக அரசு போட்டுவந்த முட்டுக்கட்டைகள், குறிப்பாக அமைச்சர் செல்லையா குமாரசூரியரினால் தொடர்ச்சியாக செய்யப்பட்டுவந்த இடையூறுகள், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக தமிழ் இளைஞர்கள் கருதினர். அதனால், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதற்கு திடசங்கற்பம் பூண்ட இளைஞர்கள் ஓரணியாக திரண்டனர். யாழ்நகர் முழுவதும் தமிழ் கலாசார முறைப்படி இளைஞர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்கம்பத்திலும் வாழைமரங்கள் கட்டப்பட்டதோடு, இந்த வாழைமரங்களுக்கிடையே மாவிலைத் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்து வீதிகளின் ஒவ்வொரு சந்தியிலும் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டன. யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பல தமிழ் ஆராய்ச்சியாளர்கள் யாழ்நகரில் அன்று காணப்பட்ட விழாக்கோலத்தினைப் பார்த்துப் புலகாங்கிதமடைந்தனர்.திருச்சியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் நைனா மொஹம்மட் மற்றும் தமிழ் அறிஞர் ஜனார்த்தனனன் போன்றவர்கள் யாழ்ப்பாண நகரம் பூண்டிருந்த விழாக்கோலத்தையும், மக்களின் மனங்களில் நிரம்பிவழிந்த தமிழ் உணர்வையும் கண்டு வியப்புற்று தந்தை செல்வாவின் வீடு அமைந்திருந்த காங்கேசந்துறைக்கு பேசப்போயிருந்தனர். "ஐயா, நாம் இங்கு காணும் மக்கள் உணர்வையும் உற்சாகத்தினையும் தமிழ்நாட்டில்க் கூட காணவில்லை. யாழ்ப்பாணத்து மக்கள் தமிழின்மேல் கொண்டிருக்கும் அன்பும் அவர்களின் உற்சாகமும் எம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டது" என்று அவரிடம் கூறினர். அதற்குப் பதிலளித்த செல்வா அவர்கள், "யாழ்ப்பாணத்து மக்கள் தமது மொழிபற்றியும், கலாசாரம் பற்றியும் அதீதமான உணர்வுமிக்கவர்கள். தாம் தமிழரென்பதற்காக அச்சுருத்தப்படுவதாலேயே இந்த உணர்ச்சி அவர்களுக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து 9 ஆம் திகதி முடிவடைந்தது. இந்த நிகழ்வு பெரும் தமிழ் அறிஞர்களின் அறிவினைப் பறைசாற்றியதுடன் அவர்களுக்கிடையிலான அறிவுசார் சம்பாஷணைகளையும் கொண்டிருந்தது. வீரசிங்கம் மண்டபத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஆரம்பம் அமைந்தாலும், டிம்மர் மண்டபத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கும், கல்விமான்களுக்குமான மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முடிவுநாளான தை 10 ஆம் திகதி இந்த விழாவில் சாதாரண மக்களும் அனுமதிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதிநாள் நிகழ்விற்கு துரையப்பா அரங்கினை பதிவுசெய்திருந்தார்கள். இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்ளவென பெருந்திரளான மக்கள் மதியத்திலிருந்து துரையப்பா அரங்கினை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால், அரங்கத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்டுக் கிடந்தன. வாயிலில் நின்ற காவலர்கள் யாழ் நகர மேயர் அல்பிரெட் துரையப்பாவின் ஆணையின்படியே வாயிற்கதவுகள் பூட்டப்பட்டதாகக் கூறியதுடன், அவரது அனுமதியின்றின் அதனைத் திறக்க முடியாதென்று மறுத்துவிட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் துரையப்பாவைத் தொடர்புகொள்ள எடுத்துக்கொண்ட் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அன்றிரவு துரையப்பா அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டு ஒளித்துக்கொண்டார். துரையப்பா வேறு வழியின்றி, இறுதிநாள் நிகழ்வினை வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் இருந்த பகுதியில் நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் தீர்மானித்தனர். அவசர அவசரமாக மேடையொன்று எழுப்பப்பட்டு, மக்கள் அனைவரும் மேடையின் முன்னாலிருந்த புற்றரையில் அமருமாறு கேட்கப்பட்டனர். காங்கேசந்துறை வீதியினைத் தவிர்த்து அமர்ந்துகொள்ளுமாறு கூட்டத்தினர் வேண்டப்பட்டனர். ஆனால் நிகழ்விற்கு வருகைதந்த மக்களின் எண்ணிக்கை 10,000 இனைத் தாண்டவே, மக்களின் ஒருபகுதியினர் காங்கேசந்துறை வீதியிலும் நிற்க வேண்டியதாயிற்று. அப்பகுதிக்கு வந்த யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸ் பரிசோதகர் சேனாதிராஜாவை கூட்டத்திற்கருகில் மறித்த தன்னார்வத் தொண்டர்கள், வீதியினைப் பாவிக்கமுடியாதென்றும், மணிக்கூட்டுக் கோபுர வீதியினைப் பாவிக்குமாறும் கோரினார்கள். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வாகனத்தில் போவது, அங்கு பேசிக்கொண்டிருக்கும் வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு அவமதிப்பாக இருக்கும், ஆகவே தயவுசெய்து மாற்றுவழியால் செல்லுங்கள் என்று மிகுந்த கெளரவத்துடனேயே இளைஞர்கள் பொலீஸ் பரிசோதகரிடம் கேட்டிருக்கிறார்கள். சேனாதிராஜாவும் தனது வாகனத்தைத் திருப்பிக் கொண்டு மாற்று வழியினால் தனது பொலீஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தின் பின்னர் அதேவழியால் வந்த இன்னொரு யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸாரான சார்ஜென்ட் வோல்ட்டர் பெரேராவிடமும் இளைஞர்கள், சேனாதிராஜாவிடம் கூறியதையே கூறியிருக்கிறார்கள். பொலீஸ் நிலையத்திற்குத் திரும்பிய சார்ஜன்ட் வோல்ட்டர் பெரேரா இதுபற்றி தனது அதிகாரி, பரிசோதகர் நாணயக்காரவிடம் முறையிட்டிருக்கிறார். இந்தவிடயத்தை நாணயக்கார யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவிடம் முறையிட்டிருக்கிறார். அப்போது நேரம் இரவு 8:30 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் முற்றான ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாருடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு பொலீஸ் பாரவூர்தியில் வந்திறங்கினார் சந்திரசேகர. அப்போது திருச்சியிலிருந்து வருகைதந்திருந்த தமிழறிஞர் கலாநிதி நைனா மொகம்மட் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சின் சொல்லாண்மையினையும், பிழையின்றிப் பொழிந்துகொண்டிருந்த தமிழையும் கேட்டுப் பார்வையாளர்கள் மெய்மறந்து நின்றிருந்தனர். எங்கும் நிசப்தமான அமைதி. எல்லாமே மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திடீரென்று ஒலிபெருக்கியூடாகக் கடுந்தொணியில் பேச ஆரம்பித்த சந்திரசேகர, மக்கள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு அறிவித்தார். பின்னர், தன்னோடு வந்திருந்த ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீசாரை தாக்குதல் நிலைகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். பாரவூர்தியை மக்களை நோக்கி ஓட்டுமாறு கூறிய சந்திரசேகர, கலகம் அடக்கும் பொலீஸாரை பாரவூர்தியின் பின்னால் அணிவகுத்து நகருமாறு பணித்தார். அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்கள், மாநாட்டினைக் குழப்பவேண்டாம் என்று பொலீஸாரைப் பார்த்து மன்றாடத் தொடங்கினர். அவர்கள் மேல் தமது பாரமான சப்பாத்துக் கால்களால் உதைந்துகொண்டு பொலீஸார் முன்னேறினர். வைத்தியநாதன் மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்த பகுதிகளை நோக்கி பொலீஸார் கடுமையான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர். அவற்றில் ஒன்று மேடைக்கு மிக அருகில் விழ, அருகில் இருந்த மாநாட்டு தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் மூச்சுத்திணறி கீழே விழுந்தார். மேடையில் வீற்றிருந்த சர்வதேச தமிழ்ப் பேச்சாளர்கள் கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதலினால் காயப்பட்டு, பார்வையின்றித் தடுமாறத் தொடங்கினர். பின்னர் தாம் கொண்டுவந்த துப்பாக்கிகளை எடுத்து வானை நோக்கிச் சுடத் தொடங்கினர் பொலீஸார். துப்பாக்கிச் சூடுபட்டு மின்கம்பிகள் அறுந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மேல் வீழ்ந்தது. ஏழு மக்கள் மின்னழுத்தத்தால் அவ்விடத்திலேயே பலியானார்கள். காயப்பட்ட பலரில் இருவர் பின்னர் மரணமானார்கள். நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகவும் குழப்பகரமான நிலையில் முடிவிற்கு வந்ததுடன், இன்றுவரை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவையும் ஏற்படுத்தி விட்டது, இந்த அக்கிரமத்தை மன்னிக்கமுடியாமலும் ஆக்கிவிட்டது. இந்தக் கொலைகளுக்குப் பின்னர் அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தினையும் மன்னிக்கத் தமிழ் மக்கள் தயாராக இருக்கவில்லை. பொலீஸாரின் கண்மூடித்தனமான நடவடிக்கையினை தவறென்று ஏற்றுக்கொள்ள பிரதமர் சிறிமா மறுத்துவிட்டார். பொலீஸாரின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்திய பிரதமர், மாநாட்டினர் பொலீஸார்மீது தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார். அப்பாவி மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவுக்கும், அவரோடு அன்றிரவு மக்கள் மேல் தாக்குதல் நடத்திய பொலீஸாருக்கும் சிறிமாவினால் பதவியுயர்வு வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஆனால், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து நீதித்துறையினரூடாக விசாரணை ஒன்றை நடத்த யாழ் நீதிபதி பாலகிட்ணர் அமர்த்தப்பட்டார். ஆனால், பாலகிட்ணர் பிரேரித்த விடயங்களை அமுல்ப்படுத்த சிறிமா அரசு மறுத்துவிட்டது. நீதித்துறை மீதும், பொலீஸார் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை தமிழ்மக்கள் முற்றாக இழந்தனர். அரச சாரா மக்கள் அமைப்பான யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஒ. எல். டி கிரெஸ்ட்டர், வி. மாணிக்கவாசகர் மற்றும் ஓய்வுபெற்ற கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய சபாபதி குலேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பங்குனி 1974 இல் வெளிவந்த அவர்களது அறிக்கையில் பொலிசாரைக் குற்றவாளிகளாக அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். பொன் சிவகுமாரனின் உடைக்கப்பட்ட உருவச் சிலை
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாவது சயனைட் பொன் சிவகுமாரன் (1950 - 1974) தமிழர் ஐக்கிய முன்னணியினரை சமாதானப்படுத்த சிறிமாவோ எடுத்துவந்த அனைத்து முயற்சிகளையும் 1973 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளன்று இடம்பெற்ற 9 தமிழரின் படுகொலைகள் உடைத்துப் போட்டன. இந்த மரணங்கள் தமிழரின் இதயங்களை ஆளமாக ஊடுருவிட்டதுடன், அவர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்துமிருந்தன, குறிப்பாக இளைஞர்கள் இதனால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆயுத ரீதியில் இயங்க ஆரம்பித்திருந்த இளைஞர்கள் இந்த 9 பேரின் படுகொலைகளுக்கும் பழிவாங்கவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்களின் முதலாவது இலக்காக இருந்தவர் சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாண நகர மேயராகவும் இருந்த அல்பிரெட் துரையப்பா. யாழ்ப்பாணத்தில்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்துவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் செல்லையா குமாரசூரியரின் மிக நெருங்கிய நண்பரே அல்பிரெட் துரையப்பா. குமாரசூரியருடன் சேர்ந்து தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தடுத்துவிட எத்தனித்த துரையப்பா தன் பங்கிற்கு துரையப்பா விளையாட்டரங்கினை தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினர் இறுதிநாள் நிகழ்வுகளுக்கு உபயோகிக்க தரமுடியாது என்று மறுத்துவிட்டார். ஒருவருக்கொருவர் நேரடியாகத் தொடர்பில்லாத, இரு ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் துரையப்பாவைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்கள். அவர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன்னுத்துரை மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் புதல்வன் சிவகுமாரன். இரண்டாமவர் 19 வயதே நிரம்பிய பிரபாகரன். சிவகுமாரனைப் பொறுத்தவரையில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் தனிப்பட்ட ரீதியில் அவரை மிகவும் பாதித்திருந்தது. ஏனென்றால், தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வருகைதந்திருந்த பல வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தன்னார்வத் தொண்டர் அமைப்பில் சிவகுமாரனும் இருந்தார். ஆனால், பிரபாகரன் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்கும் வேளையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். ஆனால், மாநாட்டின் இறுதிநாளில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை தமிழினத்தின் புகழ் மீதும் அதன் கலாசாரத் தொன்மைமீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக அவர் பார்த்தார். சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர்தான் சிவகுமாரன். தனது ஆரம்பக் கல்வியினை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். உயர்தரத்தின்பின்னர் மேலதிக படிப்பிற்காக கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் அவர் இணைந்துகொண்டாலும் கூட, தனது அதீத அரசியல் ஈடுபாட்டினாலும் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்புக்களாலும் அதிலிருந்து இரு மாத காலத்திற்குள் அவர் விலகினார். 1971 ஆம் ஆண்டு தமிழ் மாணவர் அமைப்பில் இணைந்த சிவகுமாரன், அதற்கு முன்னரே அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார். முதலாவதாக 1971 ஆம் ஆண்டு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறியின் வாகனம் மீதும், பின்னர் அல்பிரெட் துரையப்பாவின் வாகனம் மீதும் அவர் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தார். அவருடனான நினைவுகளை அவரது தோழர்கள் மிகவும் வாஞ்சையுடன் நினைவுகூருகிறார்கள். "அவர் மிகவும் உணர்வுபூர்வமானவர். ஆயுதப் போராட்டம்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். சமஷ்ட்டிக் கட்சி சுதந்திரவிடுதலைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவேண்டும் என்றும், அக்கட்சிக்கு ஆயுத ரீதியிலான துணை அமைப்பொன்று வேண்டுமென்றும் தொடர்ச்சியாக வாதிட்டு வந்தார்" என்று அவரது தோழர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா கூறுகிறார். வங்கதேச விடுதலைப் போராட்டத்தையே தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தின் முன்மாதிரியாக சிவகுமாரன் பார்த்து வந்தார். அங்கு முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி அரசியல் ரீதியிலான போராட்டங்கள் மூலம் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க, ஆயுதக் குழுக்கள் அவரின் போராட்டத்திற்கு பக்கபலமாக ஆயுத ரீதியிலான போராட்டத்தினை நடத்திவந்தன. சிவகுமாரன் பற்றிப் பேசும்போது ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், "அவர் ஆயுதப் போராட்டத்தின் அவசியம் குறித்து இரவிரவாகப் பேசுவார். அரசியல் ரீதியிலான போராட்டமும், ஆயுத ரீதியிலான போராட்டமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று உறுதுணையாக விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கலாம் என்பதே அவரது சிந்தனையாக இருந்தது". குட்டிமணி தங்கத்துரை குழுவில் சில காலம் செயற்பட்ட சிவகுமாரன், பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து தனக்கான குழுவொன்றினை "சிவகுமாரன் குழு" எனும் பெயரில் நடத்தினார்.1972 ஆம் ஆண்டு , மாசி மாதம் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் நிறுத்தப்பட்டைருந்த துரையப்பாவின் வாகனத்தின்மீது குண்டுத்தாக்குதலை நடத்தினார் என்கிற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டிருந்தார். சிவகுமாரன் தனது வாகனத்திற்குக் குண்டெறிந்தவேளை, துரையப்பாவும் அவரது நண்பரான நீதிபதி கொலின் மெண்டிசும் யாழ்ப்பாணம் ஓய்வு விடுதியில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தனர். வாகனம் கடுமையாகச் சேதப்படுதப்பட்டிருந்தது. சிவகுமாரன் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதும், சிவகுமாரனுக்காக வாதாடிய வழக்கறிஞர் சி. சுந்தலிங்கம் வழக்கினை மல்லாகம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த சுந்தரலிங்கம், துரையப்பாவின் நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மல்லாகம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட வழக்கில் பிணையணுமதி கோரப்பட்டபோது, நீதிபதியினால் அது மறுக்கப்பட்டது. சில மாதங்களின்பின்னர் போதிய சாட்சிகள் இன்மையினால் சிவகுமாரன் விடுதலை செய்யப்பட்டார். விசாரணைகளின்பொழுது அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். தனது தோழர்களுடன் அவர் இதுபற்றிப் பேசும்போது, சித்திரவதைகள் தாங்கமுடியாதவையாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். இனிமேல் பொலீஸாரின் கைகளில் பிடிபடப்போவதில்லை என்று அவர் தனது தோழர்களிடம் கூறியிருந்தார். "அவர்களின் கைகளில் பிடிபடுவதைக் கட்டிலும் நான் இறப்பதே மேல். அவர்களிடன் பிடிபட்டு எனது தோழர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் காட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் நான் இறந்துவிடுவது எவ்வளவோ மேல்" என்று அவர் கூறியிருக்கிறார். 1973 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவும் சித்திரவதைகளின் கொடூரத்தனமைபற்றிக் கூறுகிறார். "சித்திரவதைகள் மிகக் கடுமையானதாக இருந்தது. அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு நாள் இரவு என்னை திறந்த வெளியொன்றிற்கு இழுத்துச் சென்று நான் மயக்கமாகி விழும்வரை அடித்தார்கள். நான் மயங்கியவுடன், இறந்துவிட்டதாக நினைத்து என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். பின்னர் ராணுவ ரோந்து வாகனம் ஒன்று என்னை அங்கிருந்து மீட்டு வந்தது" பொலீஸ் சித்திரவதையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முறையொன்றினை சிவகுமாரன் கண்டுபிடித்தார். பிடிபடுவதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்வது மேலானது என்று அவர் புரிந்துகொண்டார். உட்கொண்டவுடன் உயிரினை உடனே பறிக்கும் நஞ்சான சயனைட்டினை தன்னோடு எப்போதும் அவர் காவித் திரியத் தொடங்கினார். சயனைட் வில்லையினை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் முறைமையினை உருவாக்கியவர் சிவகுமாரனே ! தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தன்னார் தொண்டர் படையின் முக்கிய உறுப்பினராக சிவகுமாரன் செயலாற்றிவந்தார். யாழ்ப்பாண நகரை அலங்கரிப்பதில் முன்னின்று உழைத்த சிவகுமாரன், தனது தோழர்களின் உதவியுடன் நகரை இரண்டு மூன்று நாட்களிலேயே ஒரு கலாசார பூங்காவாக மற்றியிருந்தார். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு இறுதிநாள் படுகொலைகளின் பின்னர் அவர் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்டதாகவும், எவருடனும் பேசுவதைக் கூடத் தவிர்த்துவிட்டதாகவும் அந்நாட்களில் அவரோடிருந்தவர்கள் கூறுகின்றனர். அப்படுகொலைகளுக்கு கட்டாயம் பழிதீர்த்தே ஆகவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. துரையப்பா மற்றும் பொலீஸ் அதிகாரி சந்திரசேகர ஆகிய இருவரையும் தான் பழிவாங்கப்போவதாக அவர் தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார். "ஒன்பது அப்பாவிகளைப் ப்டுகொலை செய்த இந்த ராஸ்க்கல்களின் செயல் ஒருபோதும் தண்டிக்கப்படமால்ப் போகாது" என்று தனது நண்பர்களிடம் சிவகுமாரன் கூறியிருக்கிறார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உமா மகேஸ்வரன் தலைவர்களின் இந்த முடிவிற்கெதிராக தமிழ் இளைஞர் பேரவை புரட்சிசெய்ய ஆரம்பித்தது. அவ்வமைப்பின் கொழும்பு கிளையின் தலைவர் ஈழவேந்தனும், செயலாளர் உமா மகேஸ்வரனும் தமிழ்த் தலைவர்களைப் புறக்கணிக்குமாறு கடுமையான அறிக்கையொன்றினை வெளியிட்டனர். "மக்கள் விரும்புவதை உங்களால் செய்யமுடியாவிட்டால், தயவுசெய்து விலகிச் செல்லுங்கள்" என்பதே அவ்வறிக்கையின் செய்தியாக இருந்தது. ஈழவேந்தன் சமஷ்ட்டிக் கட்சியில் இளைய தலைவர்களான அமிர்தலிங்கம், நவரட்ணம் மற்றும் ராஜதுரை ஆகியோர், இளைஞர்களை ஆசுவாசப்படுத்த முயன்றதுடன், தாம் மீண்டும் சமஷ்ட்டி முறை ஆட்சிக்கான கோரிக்கையினை மீண்டும் தில்லையென்று தெரிவித்தனர். "எமது முடிவு உறுதியானது. நாம் சமஷ்ட்டி முறைத் தீர்வினை கைவிட்டு விட்டோம். தமிழர் ஐக்கிய முன்னணியின் தீர்மானத்தில் சுய ஆட்சியென்று பாவிக்கப்படும் பதத்தினை நாம் சமஷ்ட்டி என்று அர்த்தப்படுத்தக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்படுவது தனிநாட்டிற்கான கோரிக்கையே அன்றி, அதற்குக் குறைவான எதுவுமல்ல" என்று ஈழவேந்தனிடமும் உமா மகேஸ்வரனிடமும் அமிர்தலிங்கம் தெரிவித்தார். தான் சமஷ்ட்டிக் கட்சியில் தலைவராக 1973 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து வெளியிட்ட அறிக்கையில் அமிர்தலிங்கம், சமஷ்ட்டிக் கட்சியில் நடவடிக்கைகளில் நிச்சயம் இளைஞர்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று கூறினார். அவர் தான் கூறியபடி செயற்படவும் தலைப்பட்டார். அதன்படி, 1973 ஆம் ஆண்டு புரட்டாதி 9 ஆம் திகதி மல்லாகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி, சமஷ்ட்டி அடிப்படையிலான கோரிக்கையினைக் கைவிடுவதாகவும், தனிநாட்டிற்கான கோரிக்கையே தமது தற்போதைய நிலைப்பாடு என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. தமது தீர்மானம் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "சிங்கள மக்களின் விருப்பத்துடன் எமக்கான உரிமைகளை எம்மால் பெறமுடியாது என்பது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில், எமக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமிழர் பூர்வீக தாயகத்தில் தமிழ் தேசமாக, உலகின் எந்தவொரு நாடும் சுயநிர்ணய உரிமையின் பால் தாமைத் தாமே அள்வதுபோல, எம்மை நாமே ஆளும் நிலையினை உருவாக்குவதுதான்" என்று கூறினார். மல்லாகம் தீர்மானத்தின் இறுதிப்பகுதி இதனைத் தெளிவாக விளங்கப்படுத்துகிறது, "இன்று நடந்த தேசிய மாநாட்டின் பிரகாரம், தமிழர்கள் தமக்கான தனியான தேசத்தை அமைக்கும் அனைத்து இலக்கணங்களையும், தனியான நாட்டில் வாழும் உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தெரிவிப்பதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழர்களும் தமது பூர்வீக தாயகத்தில் தனியான தேசமாக வாழ்வதுதான்" இத்தீர்மானத்தினையடுத்து இளைஞர்கள் மகிழ்வுடன் காணப்பட்டனர். தமிழ் ஈழமே எங்கள் தாய்நாடு, தமிழ் ஈழமே எங்கள் ஒரே விருப்பு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆயுத அமைப்புக்கள் இந்தச் சுலோகங்களையே தமது தாரக மந்திரமாக வரிந்துகொண்டன. அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துசென்ற இளைஞர்கள், தமிழர் தாய்நாட்டை உருவாக்குவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் அறைகூவல் விடுத்தனர். அமிர்தலிங்கம் இயல்பாகவே உணர்வுபூர்வமானவர். இளைஞர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டினால் உந்தப்பட்ட அவர் பின்வருமாறு கூறினார், "எங்களின் இளைஞர்களுக்காக, இந்தத் தருணத்தில் நான் கூற விரும்புவது, எங்களால் வழங்கக் கூடியது இரத்தமும், வியர்வையும், கண்ணீரும்தான். இதனால் உங்கள் மீது பொலீஸாரின் தடியடியும், இராணுவத்தின் அராஜகத் தாக்குதல்களும், வழக்கின்றித் தடுத்துவைக்கப்படும் அட்டூழியங்களும் நிகழ்த்தப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்துநிறைந்த இந்தப் பாதையூடாகப் பயணித்து எமக்கான சுந்தத்திரத்தை நாம் அடைவோம்". "எமது தாய்நாட்டிற்கான விடுதலைக்காக எமது இரத்தத்தையும் , உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டோம்" என்று இளைஞர்கள் பதிலுக்கு ஆர்ப்பரித்தனர். ஆனால், வெறும் இரு மாத காலத்திற்குள் தமிழ்த் தலைவர்களும், தமிழ் இளைஞர் அமைப்பினை வழிநடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் அடியாட்களும் இளைஞர்களைக் கைவிட்டனர். அரசுக்கெதிரான எதிர்ப்பினைக் காட்டவேண்டிய அவசியத்தில் தவித்த தமிழர் ஐக்கிய முன்னணியினர், தபால் சட்டமான "உபயோகித்த முத்திரைகளைப் பாவிக்கப் படாது" என்பதனை மீறும் முகமாக பாவித்த முத்திரைகளையே தாம் பாவிக்கப்போவதாக அறிவித்தனர். காந்தி ஜயந்தி தினமான ஐப்பசி 2 ஆம் திகதியன்று ஆலயங்களில் சத்தியாக்கிரக நிகழ்வுகளை நடத்தப்போவதாகவும், 10,000 கடிதங்களை பாவித்த முத்திரைகளை மீண்டும் இணைத்து அனுப்பப்போவதாகவும் அறிவித்தனர். இவ்வறிவித்தலை எள்ளி நகையாடிய இளைஞர்கள், பாவிக்கப்பட்ட முத்திரையுடன் அனுப்பப்படும் கடிதங்களை தபால் ஊழியர்களே குப்பையினுள் எறிந்துவிடுவார்கள், உங்களின் எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போய்விடும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியப்டியே அந்த எதிர்ப்பு நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. தமிழ் இளைஞர் பேரவை 50 நாள் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தினை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்தது. பகல் வேளையில் உண்ணாவிரதமிருந்த உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரிக் கோஷமிட்டனர். இந்த சுசுழற்சிமுறை உண்ணாவிரத நிகழ்வினை பரிகசித்த சிவகுமாரன், இதனை ஒரு மோசடி நாடகம் என்று வர்ணித்தார். சத்தியாக்கிரகம் எனும் உயரிய செயற்பாடு தமிழ்த் தலைவர்களால் அரசியல் விபச்சாரமாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களில் இயங்கும் பல இளைஞர்கள் தமது மறைவிடங்களில் உண்ண உணவின்றி நாள்தோறும் பட்டினியை எதிர்கொண்டுவருவதாக அவர் கூறினார். தமிழர் ஐக்கிய முன்னணியினரும், தமிழ் இளைஞர் பேரவையும் கைதுசெய்யப்பட்ட இளைஞர் விவகாரத்தை தமது அரசியல் ஆதாயங்களுக்காகப் பாவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஐப்பசி மாதமளவில், தமிழர் ஐக்கிய முன்னணியினரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவிடாது தடுப்பதென்பது அரசைப் பொறுத்தவரையில் அவசியமானதாக உணரப்பட்டது. ஐப்பசி 11 அன்று, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் எதிர்க்கட்சியினரின் பேரணியொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்தது. இப்பேரணியில் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதி ஒருவரையும் அனுப்பிவைக்குமாறு அது கேட்டிருந்தது. எதிர்க்கட்சியினரின் இந்தப் பேரணியில் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கலந்துகொள்வதை சிறிமா விரும்பவில்லை. ஆகவே, அவர் தந்தை செல்வாவிற்கு சிநேகபூர்வமான கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில், காங்கேசந்துறை இடைத்தேர்தலினை தான் நடத்தாமைக்கான காரணம் பொலீஸாரின் அறிவுருத்தலேயன்றி வேறில்லை என்றும், தமிழர் ஐக்கிய முன்னணியினருடன் தான் புதிய பேச்சுக்களை ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐப்பசி 8 ஆம் திகதி அரசுடன் தமிழர் ஐக்கிய முன்னணி நடத்திய பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்குக் காரணம், தந்தை செல்வா முன்வைத்த 4 கோரிக்கைகளில் ஒன்றினை மட்டுமே செய்வதாக சிறிமா ஒத்துக்கொண்டதுதான். நீதிமன்ற மொழிப்பாவனைக்கான சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்க்க சிறிமா இணங்கியபோதும், ஏனைய மூன்று கோரிக்கைகளான தமிழ் மொழியினை அரச கரும மொழியாக யாப்பினுள் இணைப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு சுய அதிகாரத்தை வழங்குவது, அரச ஆதரவுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உடனே நிறுத்துவது ஆகியவை சிறிமாவினால் முற்றாக நிராகரிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைகளின் தோல்வி, 1973 ஆம் ஆண்டு, மார்கழி 2 ஆம் நாள் அன்று அரச நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாமை எனும் எதிர்ப்புப் போராட்டத்தினை நோக்கி தமிழர் ஐக்கிய முன்னணியினரைத் தள்ளியது. மேலும், கைதுசெய்யப்பட்டு, வழக்கின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கக் கோரும் போராட்டத்தினையும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கையிலெடுத்தனர். மார்கழி 31 இற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் விடுதலை செய்யப்படாதவிடத்து, சில தெரிவுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அது அரசுக்கு அறிவித்தது. "மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலீஸார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கைதுசெய்யவேண்டி ஏற்படும்" என்று அமிர்தலிங்கம் கூறியிருந்தார். பொலீஸார் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்கும்போது சரியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டி வந்தார். தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என்று பொலீஸாரை தலைமை வழக்கறிஞர் அறிவுருத்தியபோது, இந்த இளைஞர்களை தாம் தொடர்ந்தும் விசாரித்துவருவதாகவும், விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்றும் பொலீஸார் அறிவித்தனர். இந்த பொய்க்காரணங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததுடன், காசி ஆனந்தன் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பொலீஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அரசாங்கம் காசி ஆனந்தனை விடுதலை செய்தது. மீமாக இருந்த 42 பேரில் 25 இளைஞர்களை மார்கழி 29 வரையில் விடுதலை செய்திருந்தது.நீதியமைச்சராக இருந்த பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா, தந்தை செல்வாவிற்கு எழுதிய கடிதத்தில், மீதமிருக்கும் இளைஞர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் அல்லது அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று கூறிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய முன்னணியினர் தமது சட்டங்களை மீறும் ஆர்ப்பாட்டத்தினைப் பின்போட்டுவிட்டனர். ஆனால், தை 10 ஆம் திகதி தமிழ் மக்களை, குறிப்பாக இளைஞர்களை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கை ஒன்றினை சிறிமாவின் அரசு எடுத்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தலைமறைவு வாழ்க்கை தங்கத்துரை, குட்டிமணி, பெரிய சோதி உட்பட சில உறுப்பினர்கள் பொலீஸாரிடமிருந்து ஒளிந்துகொள்ள பிரபாகரன் தொடர்ந்தும் தனது பெற்றோருடனேயே தங்கியிருந்தார். பங்குனி நடுப்பகுதியில், ஒரு நாள் அதிகாலை 3 மணிக்குப் பொலீஸார் பிரபாகரனின் பெற்றோரின் கதவினைத் தட்டும்போது அவர்கள் தேடிவந்திருப்பது தன்னையே என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் வீட்டின் பின்வழியால் இருளினுள் மறைந்து தலைமறைவானார். வீட்டின் முன் கதவைத் திறந்த பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் கதவின் முன்னால் பொலீஸார் நிற்பதைக் கண்டதும் அதிர்ந்துபோனார். பிரபாகரனின் தாயிடமும், அவரின் பின்னால் ஒளிந்துநின்ற பிரபாகரனின் இரு சகோதரிகளிடமும் பேசிய பொலீஸார் தாம் பிரபாகரனைக் கைதுசெய்யவே வந்திருப்பதாகக் கூறினார்கள். அவர்களின் விக்கித்துப் போய் நிற்க, பொலீஸார் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் துரித கதியில் தேட ஆரம்பித்தார்கள். ஆனால், பிரபாகரனை அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை. அங்கு வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், "தீவிரவாதியான உங்களின் தம்பி தப்பிவிட்டான், ஆனால் அவனை நான் நிச்சயம் விரைவில் கைதுசெய்வேன்" என்று அவரது சகோதரிகளைப் பார்த்து கூறிவிட்டுச் சென்றார். ஆனால், சிங்களப் பொலீஸாரினால் பிரபாகரனை ஒருபோதுமே கைதுசெய்ய முடியவில்லை. அவர்களைவிட அவர் எப்போதுமே இரு படிகள் முன்னிலையிலேயே இருந்துவந்தார். அவர்களின் நண்பர்கள் கூறும்போது, பொலீஸார் அவரைத் தேட ஆரம்பித்ததன் பின்னர் அவர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். பின்னாட்களில் ராமுக்குப் பேட்டியளித்த பிரபாகரனும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். "1973 ஆம் ஆண்டு நான் தலைமறைவு வாழ்க்கையினை ஆரம்பித்துவிட்டேன். தலைமறைவு வாழ்க்கையினை வாழ்வதென்பது மிகவும் சிக்கலானதொரு விடயம். ஆனால் நெடுங்காலமாக இதனைச் செய்யவேண்டியிருந்தது. நம் எல்லோருக்குமே அது ஒரு கடிணமான காலமாக இருந்தது. எம்மைச் சுற்றி ராணுவம் எப்போதுமே அக்கிரமங்களில் ஈடுபட்டுவந்த அக்காலத்தில் அவர்களின் வலையிலிருந்து தப்பி வருவது கடிணமானதாகவே இருந்தது". தங்கத்துரை குட்டிமணியுடன் இணைந்து பிரபாகரனும் தலைமறைவு வாழ்க்கைக்குள்ச் சென்றார். தனது மகன் இருக்கும் இடத்தை ஒருவாறு அறிந்துகொண்ட வேலுப்பிள்ளை அவரை வீடுதிரும்புமாறு மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டபோதும் அவர் வர மறுத்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். அவர் தனது தந்தையிடன் பின்வருமாறு கூறினார், "என்னால் உங்களுக்கோ அல்லது வீட்டில் எவருக்குமோ இனிமேல் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. நான் வீடுதிரும்பினால் உங்களுக்கும், வீட்டிலுள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் உருவாகும். என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வேண்டாம். என்னை எனது பாதையிலேயே போக விடுங்கள். எதிர்காலத்தில் என்னிடமிருந்து எதனையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்" என்று கூறினார். ஆனால், பொலீஸார் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவரைச் சுற்றி வலை இறுகத் தொடங்கியபோது அவர் குட்டிமணி, தங்கத்துரை, பெரியசோதி ஆகியோருடன் குட்டிமணியின் படகில் ஏறி தமிழ்நாட்டிற்குச் சென்றார். இலங்கைத் தமிழர்கள் அதிகம் பாவிக்கும் தமிழ்நாட்டின் வேதாரணியம் பகுதியில் அவர்கள் தரையிறங்கினார்கள். அங்கு சிலகாலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் சென்னைக்குச் சென்று தமக்கான அமைவிடம் ஒன்றினை உருவாக்கி தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அவர் நினைத்தார். குட்டிமணியும் தங்கத்துரையும் சேலத்திற்குச் சென்றுவிட்டனர். பிரபாகரனும் பெரியசோதியும் தாம் தங்கியிருந்த பகுதியில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பெரும்பாலும் தயிர்ச் சாதமும், கோயில் பிரசாதமுமே அவர்களின் உணவாக இருந்தது. பலநாட்கள் வெறும்வயிற்றுடனேயே அவர்கள் உறங்கியிருக்கிறார்கள். சென்னையில் ஜனார்த்தனின் உதவியுடன் சிறிய வீடொன்றினை கோடாம்பாக்கம் பகுதியில் அவர்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டனர். பிராபகரனைக் கண்டவுடனேயே ஜனார்த்தனுக்குப் பிடித்துப்போயிற்று. அதற்கான காரணத்தை அவரே பின்னர் விளக்கியிருந்தார், "அவர் மிகவும் இளையவராகவும், கூச்சசுபாவமுள்ளவராகமும் தெரிந்தார். உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தார். புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும், செயலில் இறங்கவேண்டும் என்கிற வேகமும் அவரிடம் இருந்தது. அவர் என்னிடம் கேட்ட பல கேள்விகளைக் கண்டு நான் வியந்துபோனேன். தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றி மிக ஆளமாக அவர் புரிந்துவைத்திருந்தார். அவரை பலமுறை இரவு உணவுகளுக்காக அழைத்துச் செல்வேன். அவருடன் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான விடயமாக இருந்தது. அவருக்கும் சுவையான உணவுகளை உண்பது பிடித்துப் போயிருந்தது". பிரபாகரனிடம் பணம் பெரிதாக இருக்கவில்லை. இருந்தவற்றையும் மிகவும் சிக்கனமாகவே அவர் பயன்படுத்தி வந்தார். பெரியசோதியே அவர்களுக்கான உணவினைத் தயாரிப்பார். பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மரக்கறிகளுடன் அவர்கள் சோற்றினை உட்கொண்டார்கள். அசைவ உணவுகளை விரும்பும் பிரபாகரன் சனிக்கிழமைகளில் கோழிக் கறியினை அவரே சமைப்பார். எப்போதும் செயலில் இறங்கவேண்டும் என்று விரும்பும் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்த செயலற்ற வாழ்வு களைப்பினைக் கொடுத்தது. அதனால் செயல்ப்பாடு மிக்க யாழ்ப்பாணத்திற்கே மீண்டும் திரும்பவேண்டும் என்று அவர் நினைத்தார். 1974 ஆம் ஆண்டு, தனது தோழரான செட்டி அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிவந்து சென்னையின் மைலாபூரில் தங்கியிருப்பதனை அறிந்தபோது அவரைச் சென்று சந்தித்தார் பிரபாகரன். 1973 ஆம் ஆண்டு செட்டியும், அவருடன் கண்ணாடி, அப்பையா மற்றும் சிவராஜா ஆகிய நால்வரும் அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பி வந்திருந்தார்கள். பிரபாகரனும் செட்டியும் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்ப நினைத்தபோது பெரியசோதி அதனை விரும்பவில்லை. செட்டியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என்று அவர் பிரபாகரனை எச்சரித்தார். தனது மைத்துனரான பிரபாகரனிடம் பேசிய பெரியசோதி, செட்டி நம்பத்தகுந்தவர் இல்லையென்றும், ஒரு குற்றவாளியைப்போல இப்போது செயற்பட்டுவருவதாகவும் கூறினார். ஆனால், பிரபாகரன் பெரியசோதி கூறியதைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. செட்டி ஒரு செயல்வீரன் என்று பெரியசோதியைப் பார்த்துக் கூறினார் பிரபாகரன், "நீங்கள் உங்கள் வாழ்க்கையினை சமைப்பதிலும், உண்பதிலும் உறங்குவதிலும் செலவழிக்கிறீர்கள். உங்களைப்போன்று எனது வாழ்க்கையினையும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனக்குச் செயற்பாடுகளே முக்கியம். நான் இளமையாக இருக்கும்போதே எனால் செய்யமுடிந்தவற்றைச் செய்ய நான் விரும்புகிறேன். செட்டியும் என்னைப்பொலவே செயற்பாடுகளை விரும்புகிறவன்" என்று கூறினார். செட்டியுடன் மீள ஒன்றிணைய பிரபாகரன் எடுத்த முடிவு பெரியசோதிக்கு கவலையளித்தது. அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் நடவடிக்கையினை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் முயன்றார். குட்டிமணியுடனும் தங்கத்துரையுடனும் பேசி பிரபாகரன் யாழ் திரும்புவதைத் தடுத்துவிட அவர் முயற்சித்தார். பின்னர் ஜனார்த்தனன் மூலம் பிரபாகரனுடன் பேசி அவர் நாடு திரும்புவதைத் தடுக்க முனைந்தார். பிரபாகரனுடனான தனது சம்பாஷணை குறித்துப் பின்னாட்களில் பேசிய ஜனார்த்தனன், பிரபாகரன் கேட்ட கேள்விக்கு தன்னிடம் பதில் இருக்கவில்லை என்று கூறினார், "செட்டியின் சமூகவிரோத செயற்பட்டுகள் குறித்து நான் அறிவேன். அவனுடன் சேர்வதால் எனது அடையாளத்தை நான் ஒருபோதும் இழந்துவிடப்போவதில்லை" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக ஜனார்த்தனன் கூறினார். வயதில் மிகவும் இளையவரான பிரபாகரன் தமது அறிவுரைகளை மீறி யாழ்ப்பாணம் செல்ல எத்தனிப்பதையும், தமது வட்டத்திற்குள் இல்லாத, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டியுடன் தோழமை பூணுவதையும் குட்டிமணியோ தங்கத்துரையோ விரும்பவில்லை. ஆனால், பிரபாகரனின் உணர்வுகளையும், செயலில் அவருக்கிருந்த நம்பிக்கையினையும் த் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார் ஜனார்த்தனன். 1974 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியபோது, யாழ்ப்பாண மக்கள் சிறிமாவின் செயற்பாடுகளினால் கடுமையான அதிருப்தியடைந்திருந்தனர். தமது சுயகெளரவத்தினைக் காத்திட வேண்டுமென்றால், தனியான நாட்டினை உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் நினக்கத் தொடங்கியிருந்தனர். இதற்கு தபால் அமைச்சராக இருந்த குமாரசூரியரின் அடாவடித்தனமும், கொழும்பிலிருந்த ரஸ்ஸியத் தூதரகத்தால் ஆட்டுவிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும் அமைப்பினரின் எழுத்துக்களும் சிறிமாவின் இனவாதச் செயற்பாடுகளும் அன்று காரணமாக இருந்தன. 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அதிருப்தியினைத் தணியவைக்க சிறிமா இருமுறை முயன்றார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இதனை அவர் செய்தார். இலங்கையின் பிரதான செய்திநிறுவனமான லேக் ஹவுஸ் பத்திரிக்கை ஸ்த்தாபனத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களில் ஒருவரான தொண்டைமான் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார். இதனால் கவலையடைந்த அரசாங்கத்திற்கு, தமிழர் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி நோக்கிச் சாய்வதைத் தடுக்கும் செயற்பாடுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வழிக்குக் கொண்டுவரப்பட்ட தலைவர்கள். 1973 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் திகதி நீதிமன்ற மொழிகள் சட்டத்தினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தமிழ் மொழி வடக்குக் கிழக்கில் அமைந்திருந்த நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக பாவிக்கக் கூடிய நிலை உருவாகியது. தமிழர்கள் இச்சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்ர்குமாறு கூறியபோதும், அரசு அதனை விடாப்பிடியாக மறுத்து நிராகரித்துவிட்டது. 1973 ஆம் ஆண்டு, வைகாசி 17 அன்று, தமிழ் இளைஞர் பேரவை அமைப்பினர் யாழ்ப்பாணம் சமஷ்ட்டிக் கட்சியின் பிரதான அலுவலகத்தின் முன்னால் அமர்ந்து, தமிழர் ஐக்கிய முன்னணி உடனடியாக தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை, தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு கூட்டம் ஒன்றினை நடத்தியது. கூட்டத்தில் பேசிய ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணியின் தலைவர் சுந்தரலிங்கம் தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முதன்மை நடவடிக்கைகளை தமிழர் ஐக்கிய முன்னணி முன்னெடுக்கவேண்டும் என்னும் வேண்டுகோளினை முன்வைத்தார். அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு சபையினை உருவாக்கி, தனிநாட்டிற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தனிநாட்டிற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு மறுத்துவிட்ட சமஷ்ட்டிக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும், எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு ஒரு அலோசனைச் சபையினை உருவாக்கலாம் என்று கூறிவிட்டன. ஆனால், "தமிழரின் பாரம்பரிய தாயகத்தில், தம்மைத் தாமே ஆழும் ஈழத்தமிழ் தேசம்" ஒன்றினை உருவாக்க தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு அரசியல் அமைப்புச் சபை ஒன்றினை உருவாக்கத் தவறியமைக்காக இளைஞர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். சுய ஆட்சி என்பது சமஷ்ட்டி முறையிலான ஆட்சியே என்று அவர்கள் வாதாடினர். தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாப்பதும், அதனால் வரும் அதிகாரத்தையும், சலுகைகளையும் அனுபவிப்பதுமே அவர்களின் உண்மையான நோக்கம் என்று குற்றஞ்சாட்டியதோடு, இதனாலேயே தமிழ் மக்களின் விருப்பங்களையும், அவர்களது உணர்வுகளையும் இத்தலைவர்கள் பார்க்க மறுத்துவருவதாகவும் கூறினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புதிய தமிழ்ப் புலிகளின் உதயம் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு தலைவனாக வரிந்துகொண்டு பிரபாகரன் களமிறங்கியபோது அவருக்கு வயது 17 மட்டுமே ஆகியிருந்தது. இவ்வயதிலேயே தனது முதலாவது வெடிகுண்டுத் தாக்குதலை ராணுவ காவல்த்துறை களியாட்ட நிகழ்வின்போது துரையப்பா விளையாட்டரங்கில் அவர் நிகழ்த்தினார். தன்னுடன் நின்று தனது இலட்சியத்தில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய வெகுசிலரான செட்டி, சிவராஜா, ரமேஷ், கண்ணாடி, சரவணன், கலபதி மற்றும் கிருபாகரன் ஆகிய இளைஞர்களோடு தனது பயணத்தை அவர் ஆரம்பித்தார். தனது இயக்கத்திற்கு புதிய தமிழ்ப் புலிகள் என்று அவர் பெயர் சூட்டினார். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ்ப் பழமைவாதிகளுக்கும் எதிர்வினையாற்றவே தனது அமைப்பை அவர் உருவாக்கினார். குட்டிமணியும் தங்கத்துரையும் தனக்கு 15 வயது ஆகியிருந்த வேளையிலேயே அவர் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினருடன் சேர்ந்தார். தனது உறுதியாலும், விடாமுயற்சியினாலும், உத்வேகத்தாலும், இலட்சியம் மீதான தீராத பற்றினாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாலும் அமைப்பினுள் படிப்படியாக உயர்ந்து தலைமை ஏற்கும் நிலைக்கு வந்தார் பிரபாகரன். துரையாப்பா விளையாட்டரங்கு மீதான பிரபாகரனின் பெற்றொல்க் குண்டுத் தாக்குதலில் செட்டி, பெரிய சோதி, கண்ணாடி ஆகியோரும் அவருடன் இருந்தனர். புதிய தமிழ்ப் புலிகளின் உத்தியோகபூர்வ தொடக்கநாள் எதுவென்று சரியாகத் தெரியாவிட்டாலும்கூட, அவ்வமைப்பு போராட்டக் குணம்கொண்ட இளைஞர்கள் அமைப்பாக பரிணாம வளர்ச்சிபெற்றபோது அமைக்கப்பட்டதாக துரையப்பா அரங்குமீதான தாக்குதலில் ஈடுபட்ட சிலரின்மூலம் நான் அறிந்துகொண்டேன். எது எவ்வாறிருப்பினும், துரையப்பா அரங்குமீதான தாக்குதலே புதிய தமிழ்ப் புலிகளின் முதலவாது தாக்குதல் என்று பதிவாகியிருக்கிறது. சிலர், அல்பிரட் துரையப்பா மீது 1975 ஆம் ஆண்டு, ஆடி 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே அவ்வமைப்பின் முதலவாது தாக்குதல் என்று கூறுகிறார்கள். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 25 ஆம் திகது தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கையினை அடிப்படையாக வைத்தே துரையப்பா மீதான தாக்குதல் புலிகளின் முதலாவது வன்முறைச் சம்பவம் என்று இவர்கள் கூறுகிறார்கள். உமா மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த மத்திய குழுவினரின் கடிதத்தில் துரையப்பாவைக் கொன்றதே முக்கிய சம்பவமாக கருதப்பட்டதால், இதனையே முதலாவது வன்முறைச் சம்பவமாகக் கருதுவோரும் இருக்கிறார்கள். இக்கடிதம் தொடர்பான இன்னொரு சுவாரசியமான கதையும் இருக்கிறது, அதனை பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். துரையப்பா அரங்குமீதான தாக்குதலின் பின்னர் தமிழ் மாணவர் அமைப்பு மீதான பொலீஸாரின் தீவிர கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், இத்தாக்குதலின் பின்னால் இருந்தது பிரபாகரன் தான் என்று பொலீஸார் அறிந்துகொள்வதற்குப் பல மாதங்கள் ஆகின. ஏனென்றால், புதிய தமிழ்ப் புலிகளின் உருவாக்கத்தில் பிரபாகரன் ஈடுபட்டிருந்ததனால், அவ்வமைப்புப் பற்றி பொலீஸார் மட்டுமல்லாமல், தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர்களே அதிகம் அறியாமலேயே இருந்துவிட்டனர். தனது அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பிரபாகரன் ரகசியம் பேணிவந்ததே இதற்குக் காரணமாகும். பிரபாகரனின் அமைப்புப்பற்றி அதிகம் அறிந்திராமையினாலேயே பொலீஸார் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினரே துரையப்பா அரங்கு மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அவர்களைத் தேடி வந்தனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பினை உருவாக்குவதில் பிரபாகரனும் அவரது தோழர்களும் பெருமளவு நேரத்தைச் செலவிட்டனர். சுபாஸ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர் மற்றும் தனது தகப்பனார் ஆகியோரின் மூலம் தான் கற்றுக்கொண்ட முன்மாதிரியான ஒழுக்கங்கங்களை தனது அமைப்பினுள்ளும் ஏற்படுத்தினார் பிரபாகரன். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை முற்றாகத் தடைசெய்திருந்த பிரபாகரன், உறுப்பினர்கள் அனைவரும் இலட்சியமான தமிழ் மக்களின் விடிவிற்காக தமது வாழ்வையே அர்ப்பணிக்கவேண்டும் என்ற இயக்க விதியினை ஏற்படுத்தினார். தென்னிந்தியாவின் மிகப்பெரும் அரசர்களாக விளங்கிய சோழர்களின் இலட்சினையான புலியையே தமது இலட்சினையாகவும் அவர்கள் வரிந்துகொண்டார்கள். புலியின் சிரத்தையே தனது இயக்கத்தின் கொடியாகவும் பிரபாகரன் தெரிவுசெய்தார். அந்தக் காலத்தில் தனது பெற்றோருடன் வல்வெட்டித்துறையிலேயே பிரபாகரன் வாழ்ந்து வந்தார். இடைக்கிடையே வீட்டிலிருந்து காணாமல்ப் போன பிரபாகரன் அந்த நேரத்திலேயே தனது ரகசிய அமைப்பினை உருவாகி வந்தார். அவரது செயற்பாடுகள் குறித்து அவரது பெற்றோர் எதனையும் அறிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர் பேர்வையினரைத் தேடி பொலீஸார் வலைவிரித்து பிரபாகரனின் பெற்றோரின் வீட்டுக் கதவினையும் பங்குனி மாதம் 1973 ஆம் ஆண்டு தட்டியபோதே அவர்களுக்கு தமது மகனும் புரட்சிகரச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. தேசிய பாராளுமன்றத்தின் பங்குபற்றுவது என்று தமிழர் ஐக்கிய முன்னணியினர் எடுத்த முடிவு, இளைஞர்களுடன் நேரடியான பிணக்கிற்கு இட்டுச் சென்றது. தமிழ் மாணவர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், "உங்களின் முடிவின் பின்னாலுள்ள நியாத்தன்மையினை விளக்குங்கள் பார்க்கலாம். புதிய அரசியலமைப்பு என்பது தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனம் என்று எங்களிடம் கூறிவிட்டு, இன்று உங்களின் உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அதே அரசியல் யாப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். எங்களை அடிமைகளாக்குவதற்காக உருவாக்கப்பட்ட யாப்பிற்கு நீங்களே அனுசரணை வழங்குகிறீர்கள். தமிழர்களை சிங்களவருக்கு அடிமைகளாக்கும் கைங்கரியத்திற்கு உங்களின் கட்சியும் துணைபோகின்றதல்லவா?" என்று தமிழ்த் தலைவர்களைக் கேள்விகேட்டிருநெதது. ஆனால், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இளைஞர்களின் கேள்விகளுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட ஒற்றைப்பதில், "பாராளுமன்றத்தில் அமர்வதன்மூலம் அரசியல் யாப்பிற்கெதிராகப் பேசமுடியும், அதன்மூலம் தமிழர் நலன்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதனைப் பார்க்கலாம்" என்பதாகவே இருந்தது. ஆனால், இப்பதிலை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இளைஞர்கள் நிராகரித்தபோது, அதற்குப் பதிலளித்த தலைவர்கள், "எங்கள் அரசியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அனுபவம் போதாது" என்று கூறினர். ஆனால், அரசினால் வழங்கப்படும் சுகபோகங்களுக்கும் சலுகைகளுக்கும் மட்டுமே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கிறார்கள் என்பதே இளைஞர்களின் வாதமாக இருந்தது. இளைஞர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், அரச பிரச்சாரத்தினை எதிர்கொள்ளவும் ஒரு சத்தியாக்கிரக நடவடிக்கையினைத் திட்டமிட்டார் தந்தை செல்வா. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான புரட்டாதி 2 ஆம் திகதியன்று இழக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க சத்தியாக்கிரக போராட்டமொன்றினை அவர் ஏற்பாடு செய்தார். தமிழ் இளைஞர்களின் கொதிநிலையினை ஆற்றுவதற்கு யாழ்ப்பாணத்து அரச இலட்சினையான நந்திக்கொடியினை சத்தியாக்கிரகத்தில் ஏற்றிய தமிழர் ஐக்கிய முன்னனியினர், புதிய தமிழ்த் தேசத்தின் உதயத்தினை உதயசூரிய கொடியினை ஏற்றுவதன்மூலம் குறியீடாகக் காட்ட முயன்றனர். இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வில் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். மேலும், இதே சத்தியாக்கிரக நிகழ்வில் பேசிய தந்தை செல்வா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாகவும், அதற்கான காரணத்தை மறுநாள் பாராளுமன்றத்திலேயே தான் அறிவிக்கப்போவதாகவும் கூறினார். தனது ராஜினாமாவின் மூலம் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உலகிற்குக் காட்ட முடியும் என்று தான் கருதுவதாகவும் கூறினார். மறுநாள், ஐப்பசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அறிவித்த தந்தை செல்வா தமிழ் மக்களின் மனோநிலையினை அறிந்துகொள்ள விரும்பினால் தனது தொகுதிக்கான இடைத்தேர்தலினை நடத்தி அறிந்துகொள்ளுங்கள் என்றும் சவால் விட்டார். ஆனால், தந்தை செல்வாவின் சவாலினை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசாங்கம், இடைத்தேர்தலினையும் தொடர்ச்சியாக பிற்போட்டுவந்தது. தமிழ் மாணவர் அமைப்பு எனும் இளைஞர் அமைப்பு தனது கட்டுப்பாட்டினை விட்டுச் சென்றுவிட்டதனையும், அவ்வமைப்பின் தலைவர்களைப் பொலீஸார் தொடர்ச்சியாகக் கைதுசெய்துவந்ததையும் அவதானித்த அமிர்தலிங்கம் 1973 ஆம் ஆண்டு புதியதொரு இளைஞர் அமைப்பொன்றினை ஆரம்பித்து அதற்கு தமிழ் இளைஞர் அமைப்பு என்று பெயரிட்டார். இந்த புதிய அமைப்பில் சுமார் 40 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள் பின்னாட்களில் ஆயுத அமைப்பின் தலைவர்களாக மாறினார்கள். வேறுவேறான அரசியல்ப் பாதைகளில் பயணித்த பல இளைஞர்களை இதன்மூலம் ஒருகுடையின் கீழ் கொண்டுவர அமிரால் முடிந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதியாக இந்த இளைஞர் பேரவை அமையாவிட்டாலும்கூட, தமிழர் ஐக்கிய முன்னணியின் தீவிர ஆதரவாளர்களான மாவை சேனாதிராஜா போன்றவர்கள் இந்த இளைஞர் அமைப்பை தலைமைதாங்குவதற்கு நியமிக்கப்பட்டார்கள். அமிர்தலிங்கத்திற்கு விரும்பிய விடயங்களை இந்த இளைஞர் பேரவை செய்ய ஆரம்பித்தது என்று இவ்வமைப்பின் இடதுசாரிச் சிந்தனையுள்ள சிலர் விசனப்பட ஆரம்பித்திருந்தனர்.இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த பாக்கியநாதன் ராஜரட்ணம் இவ்வமைப்பின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகையில், "அமிர்தலிங்கம் எம்மிடம் சொல்பவற்றைச் செய்வதே எமது ஒரே வேலையாக அப்போது இருந்தது". என்று கூறினார். தை 14 ஆன்று உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையும் பொலீஸாரினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட மறுநாளான தை 15 ஆம் திகதி உறுப்பினர்களான ஞானசேகரமும் ஆசீர்வாதம் தாசனும் கைதுசெய்யப்பட்டார்கள். தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் பொன்னுத்துரை சத்தியசீலன் மாசி 20 நாளன்று பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். பொலீஸாரின் கடுமையான சித்திரவதைகளின்பொழுது சத்தியசீலன் இன்னும் பல உறுப்பினர்களின் விடயங்களைக் கூறியதாக வதந்திகள் உலாவின. இன்றுவரை இதனை பல ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்கள் நம்பிவருகின்றனர். தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பான பல தகவல்களை சத்தியசீலன் அன்று பொலீஸாருக்கு வழங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தமிழ் இளைஞர் பேரவையின் பல உறுப்பினர்களை பொலீஸார் பங்குனி மாதத்தில் கைதுசெய்தனர். சோமசுந்தரம் சேனாதிராஜா, மாவை, ஆனந்தப்பூபதி, மற்றும் சிவராமலிங்கம் சந்திரக்குமார் ஆகியோர் பங்குனி 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட, சுந்தரம்பிள்ளை சபாரட்ணம் 10 ஆம் திகதியும், திஸ்ஸவீரசிங்கம் 16 ஆம் திகதியும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையடுத்து அப்பாத்துரை நித்தியானந்தன், சிவராமலிங்கம் சூரியக்குமார் உள்ளிட்ட இன்னும் சில இளைஞர்களை பொலீஸார் பின்னாட்களில் கைதுசெய்திருந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பின்னடித்த தமிழ் தலைவர்கள் சிறிமாவோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமிழ் இளைஞர்களின் வன்முறையின் பின்னாலிருந்த அரசியலினப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் அனைவருமே இவை சாதாரண வன்முறைகள்தான் என்று புறந்தள்ளிவிட்டிருந்தனர். தனது பொலீஸார் இந்த வன்முறையினை மிக இலகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சிறிமா நம்பியிருக்க, தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமது தளபதியான அமிர்தலிங்கம் இந்த வன்முறைகளை ஏவும் இளைஞர்களை இலகுவாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே நம்பினர். ஏனென்றால், ஒருமுறை அமிர்தலிங்கமே ஏனைய தமிழ் அரசியல்த் தலிவர்களிடம், "என்னால் அவர்களை இலகுவாகச் சமாளிக்க முடியும்" என்று கூறியிருந்தார். குடியரசு தினத்திற்கு 4 தினங்களுக்கு முன்னதாகவே காவல்த்துறை இளைஞர் தலைவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் அமைப்பினரின் ஸ்த்தாபக உறுப்பினரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அன்று கைதுசெய்யப்பட்டார். ஆனி 9 ஆம் திகதி சிவாநந்தனும் சிவஜெயமும் கைதுசெய்யப்பட்டார்கள். மறுநாள் நமசிவாயம் ஆனந்தவிநாயகம் ஆனி 10 திகதியும், காசி ஆனந்தன் ஆனி 15 திகதியும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மயில்வாகனம் ராஜசூரியர் 30 திகதியும் சின்னையா குவேந்திரராஜா ஆடி 9 அன்றும், அமரசிங்கம் ஆடி 12 ஆம் திகதியும் செல்லையா தனபாலசிங்கம் ஆகிய செட்டி, பொன்னுத்துரை சிவகுமாரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை தமிழர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பரவலான ஆர்ப்பாட்டங்களும் இதனையடுத்து இடம்பெறத் தொடங்கின. இளைஞர்களின் மனோநிலையை சரியாகப் புரிந்துகொள்ள அமிர்தலிங்கம் தவறிவிட்டிருந்தார். இது 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணத்தை அவர் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தமிழர் முன்னணியினரை பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறு இளைஞர்கள் கோரியிருந்தனர். அவர்களது வாதம் மிகவும் எளிமையானது. "புதிய அரசியலமைப்பினை முற்றாகப் புறக்கணித்து, அதற்கெதிராக ஆறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து, யாப்பு பிரகடணப்படுத்தப்பட்ட நாளினை கரிநாளாக அறிவித்து, மக்களை அந்த யாப்பினை எரிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே, அதே அரசிய யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று அவர்கள் தலைவர்களிடம் கேட்டார்கள். யாழ்ப்பாணத்தின் பழைய பூங்கா தெருவில் தமிழ் அரசியல்த் தலைவர்களின் இந்த இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டது, அதில் "ஏமாற்றுவதே உங்களின் புதிய அரசியல் விளையாட்டு" என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞர்களின் எதிர்ப்பும், போராட்டமும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் பாராளுமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணம் செய்வதை தடுக்கவில்லை. ஆடி 4 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தோன்றிய அவர்கள் பின்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். " இலங்கைக் குடியரசுக்கு எனது பூரண விசுவாசத்தையும், தோழமையினையும் காட்டுவேன் என்றும், என்னாலான அனைத்து வழிகளிலும் நேர்மையுடன் இலங்கைக் குடியரசுக்காக நம்பிக்கையுடன் எனக்கு தரப்பட்ட பணியை செவ்வணே செய்வேன் என்றும் அமிர்தலிங்கம் ஆகிய நான் அரசியல் அமைப்பின்படியும், இந்த நாட்டின் சட்டத்தின்படியும் சத்தியம் செய்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்தார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை சர்வதேசத்திற்குக் காண்பித்த அரசாங்கம், தமிழர்கள் புதிய அரசியலமைப்பினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பறைசாற்றியது. இது இளைஞர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியது. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம், இந்த அரசியல் யாப்பிற்கு சட்டரீதியான அந்தஸ்த்தினை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிவிட்டனர் என்று சாடிய இளைஞர்கள், பாராளுமன்றத்தினைப் புறக்கணிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டின் யாப்பு, சமாதான, ஜனநாயக வழிகளில் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருந்த அனைத்து வழிகளையும் முற்றாக அடைத்து விட்டதனால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஒரே வழி தனிநாடுதான் என்று கூறினர். தனிநாட்டினை அடைவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் ஆயுதவழிப் போராட்டமே என்று உறுதியாகக் கூறிய இளைஞர்கள், தமிழ் அரசியல்த் தலைவர்களை உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாரிய விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோரினர். சிறிமாவின் செயற்பாடுகளும் இளைஞர்களின் கருத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. தந்தை செல்வாவினால் தனக்கு எழுதப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை தொடர்பான கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பியிருக்கவில்லை. தந்தை செல்வா தனது முன்னைய கடிதம் குறித்து மீண்டும் அவரை வினவியிருந்தார். ஆனால், அவரது இரு கடிதங்களும் கிடைக்கப்பட்டது என்கிற பதில் மட்டுமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணி கேட்டுக்கொண்ட ஆறு அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை மாற்றும் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. ஆகவே, தந்தை செல்வாவின் முதலாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல புரட்டாதி 30 இற்குள் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவிடத்து, தமிழரின் சுதந்திரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் உடனடியாக வன்முறையற்ற போராட்டங்களை முடுக்கிவிடவேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், தமிழத் தலைவர்களிடம் அதற்கான துணிவு இருக்கவில்லை. இளைஞர்களோ தலைவர்கள் கூறியபடி செயற்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றனர். புரட்டாதி 17 ஆம் திகதி, துரையாப்பா விளையாட்டரங்கில் நடந்துகொண்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் 17 வயதே நிரம்பிய பிரபாகரன் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டார். இத்தாக்குதல் தமிழ் இளைஞர்களை காவல்த்துறை கைதுசெய்வதைக் கண்டித்தும், அதற்கு மேலதிகமாக அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவுமே இதனை அவர் செய்திருந்தார். இந்த களியாட்ட நிகழ்வினை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், ராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் சேவையினைப் பாராட்டியே இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையாகும். ஆனால், எவருக்குமே இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. மார்கழி 20 ஆம் திகதி உடுவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வினோதனின் வீட்டின்மேல் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினர் கைய்யெறிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களத் தேடி பொலீஸார் நடத்திய கடுமையான கைது நடவடிக்கைகளையடுத்து வன்முறைகள் வெகுவாகக் குறையத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது தப்பியோடி தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியுமிருந்தார்கள். சுமார் 2 வருடங்களும் 7 மாதங்களும் மிகவும் அமைதியாகவே கழிந்துகொண்டிருந்தபொழுது மிகவும் குறிப்பிடத் தக்க வன்முறையாக 1975 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி முன்னாள் யாழ்நகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை நடந்தேறியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வன்முறையின் விதைகள் இலங்கையின் குடியரசு தினம் தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகப் பார்க்கப்பட்டது. முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அறுத்தெறிந்த இளைஞர்கள் யாழ்க்குடாநாடு முழுவதும் மின்னிழப்பை உருவாக்கினார்கள். ஆகவே, சிங்கள அரசின் குடியரசு நிகழ்வுகள் யாழ்ப்பாணச் செயலகத்தினுள்ளும், பொலீஸ் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்களுக்குள்ளும் மட்டுமே நடைபெற்றன. குடியரசு தின நிகழ்வுகளிருந்து, சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தனர். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஆங்காங்கே வன்செயல்கள் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டதுடன், அரச கட்டிடங்கள் மீது கல்விச்சும் இடம்பெற்றது. கறுப்புக்கொடிகள் தமிழர் பிரதேசங்களில் வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் மரங்கள் என்று பரவலாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. காலைவேளையில் யாழ்நகரில் ரோந்துபுரிந்த காவல்த்துறை நகரில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளைக் கிழித்தெறிந்தது. 6 நாட்களுக்குப் பின், வைகாசி 28 ஆம் திகதி இலங்கை சம சமாஜக் கட்சியின் ஆதரவாளரான சிவசோதியின் வீட்டின்மேல் இளைஞர்கள் பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தாக்கினார்கள், ஆனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனி 1 ஆம் திகதி, சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் ஏ. விஸ்வநாதன் வீட்டின்மீது எரிகுண்டுகள் வீசப்பட்டன. சிங்களவர்களுக்குச் சார்பாகவும், தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தும் அரசியல் யாப்பினை உருவாக்கிய சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கொல்வி ஆர் டி சில்வாவிற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே அவரது கட்சி ஆதரவாளர்கள்மீது இத்தாக்குதல் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதே கொல்வின் சில காலங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான சம உரிமை கேட்டுப் வாதிட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன்பின்னர், இந்த இனவாத யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. 1972 இல் நான்கு சிறிய ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தன. தங்கத்துரை - குட்டிமணி தலைமையிலான அமைப்பு தமது இலக்காக சி அருளம்பலத்தை தெரிவுசெய்தனர். அவரது குட்டையான உடல் அமைப்பிற்காக "சின்னன்" என்றழைக்கப்பட்ட அருளம்பலம் கொழும்பிலேயே வசித்து வந்ததால், குட்டிமணி - தங்கதுரை அமைப்பினரால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகவே, அருளம்பலத்தின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராம சபைத் தலைவரும், தீவிர சுதந்திரக் கட்சி ஆதரவாளருமான வி. குமாரகுலசிங்கத்தின் மீது தாக்குவதென்று முடிவெடுத்தார்கள். இவர் இன்னொரு அரச ஆதரவு அமைச்சர் குமாரசூரியருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குமாரசூரியர், குமாரகுலசிங்கம் ஊடாகவே அருளம்பலத்தை தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி அரசுடன் சேரும்படி ஊக்குவித்து வந்தார் என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. அரசுடன் அருளம்பலம் சேர்ந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்களாலும், தமிழ் மக்களாலும் துரோகியென்று அழைக்கப்பட்டு வந்தார். அரசியலமைப்பு பிரகடணப்படுத்தப்பட்டு 13 ஆவது நாளான ஆனி 4 ஆம் திகதி கோப்பாய்ச் சந்திக்குச் சென்ற குட்டிமணி, செட்டி மற்றும் சிறி சபாரட்ணம் ஆகியோர் உலகநாதனிடம் சென்று தமக்குச் சவாரி ஒன்று தேவையாக இருப்பதாகக் கூறி, அவரை குமாரகுலசிங்கத்தின் வீட்டிற்குத் தம்மை அழைத்துச் செல்லுமாறு கோரினார்கள். கார் குமாரகுலசிங்கத்தின் வீட்டினை அடைந்ததும், தம்முடன் கொண்டுசென்ற கைத்துப்பாக்கியினால் குமாரகுலசிங்கத்தின்மீது சுட்டுவிட்டு மீண்டும் காரிற்குள் ஓடிவந்தனர். குமாரகுலசிங்கத்தின் காலில் குண்டடி பட்டிருந்தது, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. காரினை நீர்வேலி நோக்கி ஓட்டிச் சென்ற குட்டிமணி, ஆளரவம் இல்லாத பகுதியொன்றில் காரினை நிறுத்திவிட்டு உலகநாதனைச் சுட்டுக் கொன்றார்கள். அருகிலேயே உலகநாதனின் காரும் எரியூட்டப்பட்டது. குட்டிமணி குமாரகுலசிங்கத்தையே கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது சாரதி உலகநாதனையே அவர்களால் கொல்ல முடிந்தது. அதே நாள் மாலை, சுதந்திரக் கட்சி ஆதரவாளரான சுந்தரதாஸின் வீட்டின்மீதும் குண்டெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சிவகுமாரனினால் 1970 இல் சோமவீர சந்திரசிறி மீதும், 1971 இல் அல்பிரட் துரையப்பா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் குட்டிமணியினால் நடத்தப்பட்ட மூன்று குண்டெறி தாக்குதல்கள் மற்றும் உலகநாதனின் கொலை ஆகியன சமாதானத்தை விரும்பும், ஒழுக்கமான யாழ்சமூகத்தை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனால், இத்தாக்குதல்கள் இன்னும் இரு ஆயுத அமைப்புக்களை தாக்குதல்களினை மேற்கொள்ள உந்தியிருந்தது. அதில் ஒன்று பிரபாகரனுடையது மற்றையது தமிழ் மாணவர் ஒன்றியத்தினுடையது. தங்கத்துரை - குட்டிமணி அமைப்பினராலோ அல்லது சிவகுமாரனின் அமைப்பினராலோ தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் சத்தியசீலன் உடனடியாகச் செயற்பட்டு அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வட்டுக்கோட்டை தியாகராஜாவைக் கொல்வதற்கு திஸ்ஸவீரசிங்கத்தையும், ஜீவன் எனப்படும் ஜீவராஜாவையும் அனுப்பிவைத்தார். அப்போது பம்பலப்பிட்டியவில் தியாகராஜா வாழ்ந்துவந்தார். ஆனி மாதம் 7 ஆம் திகதி காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற தாக்குதல் அணியினர், அவரது வீட்டின் கதவைத் தட்ட, தியாகராஜவும் கதவைத் திறந்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருக்கும் பத்திரிக்கை ஒன்றிலிருந்து அவரைப் பேட்டியெடுக்கத் தாம் வந்திருப்பதாக திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் அவரிடம் தெரிவிக்க, "என்னை எந்தப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று குமாரசூரியர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்" என்று கூறிக்கொண்டே அவர்களை அமரச் சொன்னார் தியாகராஜா. திஸ்ஸவீரசிங்கம் அமர விரும்பவில்லை. அவர் தியாகாராஜின் அருகிலேயே நின்ருகொண்டிருந்தார். ஜீவன் கதவின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தார். தியாகராஜா காரைநகர் இந்துக் கல்லூரியின் அனுபவம் மிக்க அதிபர். தன்னிடம் வந்திருந்த இரு விருந்தாளிகளினதும் உடல்மொழி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜீவன் தனது காற்சட்டை வாரிற்குள் இருக்கமாகச் செருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை வெளியே உறுவி எடுத்தார், பதற்றத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. முன்னர் துப்பாக்கியால் சுட்டுப் பழக்கமில்லாதவர், தான் கொண்டுவந்த துப்பாக்கிச் சுடுமா என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. குறிபார்ப்பதுகூட அவ்ருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் செய்யப்பட்ட அத்துப்பாக்கியில் அவர் அதிகம் பயிற்சிகூடப் பெற்றிருக்கவில்லை. "சுடடா" என்று ஜீவனைப் பார்த்து பொறுமையிழந்து கத்தினார் திஸ்ஸவீரசிங்கம். "திஸ்ஸா" என்று கத்திய ஜீவன் அவரை அப்பால் செல்லுமாறு கூறிவிட்டு கதவை நோக்கி ஓடினார் . சுதாரித்துக்கொண்ட தியாகராஜா, சடுதியாகக் குனிந்து, தரையிலிருந்த விரிப்பை வேகமா இழுத்தார். நிலவிரிப்பில் நின்றுகொண்டு சுட எத்தனித்த ஜீவன் நிலை தடுமாறி விழ, சன்னங்கள் சுவரில் பட்டுத் தெறிக்க தியாகராஜா உயிர் தப்பினார். திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் உடனேயே அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள். அவர்களின் கொலைமுயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துவந்த பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அது ஒரு மிகத் தெளிவான செய்தியைக் கொடுத்திருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமது முடிவில் உறுதியான இளைஞர்கள் அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது. இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது. அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர். அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக 4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது, 1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். 3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். 4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும். சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர். " இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர். இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள் இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர். கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. க வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர். முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர். தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார். செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர் சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார். சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது, 1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது. 2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது. 3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது. 4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது. அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன, 1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது. 3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். 4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். 5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். 6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும். இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு, 1. சி. அருளம்பலம் - நல்லூர் 2. ஏ. தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்) 3. சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்) 4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர் 5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் - நியமிக்கப்பட்டவர் புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர். அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".