Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. சில மாதங்களுக்குப் பின்னர், ஒரு நாள் இரவு வேலை. நானும், நீர் கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கச் சிங்களவரான‌ பெர்னாண்டோ எனும் பொறியியலாளரும் பணியில் இருந்தோம். தொழிற்சாலையில் இயந்திரங்கள் சரிவர இயங்குகின்றனவா, தொழிலாளர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இரவு உணவு அருந்துவதற்காக அன்று பணியில் இருந்த நாம் இருவரும் எமது அலுவலக அறைக்குச் சென்றோம். உணவருந்திக் கொண்டிருக்கும்போது பெர்ணான்டோவின் தகப்பனார் தொலைபேசியில் அவனுடன் உரையாடத் தொடங்கினார். அவனது முகத்தில் கலவரம். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது எங்கோவொரு இடத்தில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருப்பது புரிந்தது. ஆனாலும் அதனைக் கேட்கும் திராணியில்லை. வெகுநேரமாகத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டதும் பேசத் தொடங்கினான். "கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் விமானங்களைப் புலிகள் தகர்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று ஆரம்பித்தவன், "இத்தாக்குதல் குறித்து உனது கருத்து என்ன? இவ்விமானங்கள் எமது சொத்துக்கள் அல்லவா? எமது நிதியில்த்தானே இதனை வாங்கியிருக்கிறது அரசாங்கம், அப்படியிருக்க இவற்றை அழிப்பது சரியா?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். அழிக்கப்பட்டிருப்பது விமானப்படை விமானங்களா அல்லது ஏர் லங்கா விமானங்களா என்றுகூட எனக்குத் தெரியாது. அப்படியிருக்க அழிக்கப்பட்டது சரியா தவறா என்று என்னால் எப்படிக் கூறமுடியும். நான் பதிலளிக்காது பேசாமல் இருக்கவே, "உனக்குச் சந்தோசமாக இருக்கலாம்" என்று சட்டென்று கூறினான். இருப்பதோ நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்ட இடம். தொழிற்சாலையில் என்னைத்தவிர இன்னொரு தமிழர் மருந்துற்கேனும் இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் எவராலும் தடுத்துவிடமுடியாது, அப்படியிருக்க நடந்தது குறித்து சந்தோசப்படுகின்றேன் என்று எப்படிக் கூறமுடியும்? ஆகவே, "இல்லையில்லை, அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை" என்று வேண்டுமென்றே பொய்கூறினேன். சிறிது நேரத்திலேயே கட்டுநாயக்காத் தாக்குதல் குறித்த செய்தி தொழிற்சாலையெங்கும் பரவிவிடவே, நான் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்து விட்டேன்.
  2. சுமார் ஒருவருடம் முடிவடைந்த பின்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற நண்பனான பிரபாகரனையும் அவ்வேலைத்தளத்தில் இணைத்துவிட்டேன். இயல்பாகவே அதிகம் பேசத் தயங்கும் அவன், அத்தொழிற்சாலையில் எவருடனும் அதிகம் பேச்சுக்கொடுப்பதில்லை. தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவிடுவான். இதனாலேயே அவன் மீது அங்கு பணியாற்றிய சில சிங்களப் பொறியியலாளர்களும், பெரும்பாலான தொழிலாளர்களும் சந்தேகப் படத் தொடங்கினர். அவனது பெயரும் பிரபாகரன் என்று தெரிந்துவிடவே ஏதோ விடுதலைப் புலிகளின் தலைவரே அங்கு வேலைக்கு வந்து இணைந்திருப்பதாக அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ? அவன் குறித்து என்னிடம் தொடர்ச்சியாக கேள்விகேட்கத் தொடங்கினார்கள். அவனை எப்படி உனக்குத் தெரியும்? ஏன் எம்முடன் பேசமாட்டேன் என்கிறான்? ஏன் எப்போது பார்த்தாலும் கண்களை முழுசுவது போல வைத்திருக்கிறான்? இவனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பதே அவர்களின் கேள்விகளாக இருந்து வந்தது. சிலர் வெளிப்படையாகவே அவனைக் கொட்டியா என்று அழைக்கத் தொடங்கினார்கள். சிலவேளைகளில் மனமுடைந்து பேசுவான். எதுக்கடா இங்கே வந்தேன் என்று இருக்கிறது என்றும் கூறுவான். அந்தச் சூழலில் அவனால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உனக்குச் சிங்களம் தெரியும், அதனால சமாளிக்கிறாய், என்னால முடியாது" என்று சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவனது சகோதரியொருவர் ஜேர்மனியிலிருந்து அவனை அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். சில மாதாங்களிலேயே அவனுக்கான விசா கிடைத்தவுடன், எதுவுமே கூறாது வேலையை விட்டு விட்டுச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு வேலையினை உதறித்தள்ளிவிட்டுச் சென்றமையானது நிர்வாகத்தில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக எனது நண்பன் என்றபடியினால் என்மீதே அவர்களின் கேளவிக்கணைகள் வந்து வீழ்ந்தன. சிலர் அவனைப் புலிகளின் உறுப்பினர் என்று நம்புமளவிற்கு வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.
  3. இலங்கை காவல்த்துறையும் நானும் காலம் : 2000 முதல் 2002 வரை இடம் : பிலியந்தலையிலிருந்து கட்டுப்பெத்தை வரையான பயணப்பாதை 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையின் பட்டக்கத்தரை எனும் பகுதியில் அமைந்திருந்த ஈஸ்வரன் சகோதரர்கள் நிறுவனத்தினதும் இந்தியாவின் நில்க்கமால் நிறுவனத்தினதும் பிளாத்திக்கு தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளனாகப் பணியாற்றி வரத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர்களை மட்டுமே கொண்ட அப்பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது அப்பகுதியில் வேலை நிமித்தம் வாழ்ந்துவந்த தமிழர்கள் தாக்கப்பட்டதாகவும், அத்தொழிற்சாலையில் பிற்காலத்தில் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும் இணைந்துகொண்ட அப்பகுதிச் சிங்களவர்கள் கலவரத்தின்போது தமிழர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் எனக்கு முன்னர் அத்தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் கனடா சென்றிருந்த தமிழ் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். ஆகவே மிகுந்த அவதானத்துடனேயே அப்பகுதிக்குச் சென்றுவந்தேன். என்னைப்போலவே இன்னொரு தமிழ்ப் பொறியியலாளரும் கூடவே அங்கு பணியாற்றி வந்தார். ஆறு பொறியியலாளர்களால் வழிநடத்தப்பட்டு வந்த அத்தொழிற்சாலையில் சுமார் 60 வரையான சிங்களத் தொழிலாளிகள் பணியாற்றி வந்தார்கள். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் கர்வம், நான் தமிழ‌ன் என்று தெரிந்திருந்தமையினால் இரட்டிப்பாகியிருந்தது எனக்கு நன்கு புரிந்தது. வேலை நிமித்தம் அவர்களுடன் பேசும்போது அதட்டலான தொனியில் பேசுவதும், நான் கூறும் வேலைகளை செய்ய மறுப்பதும் சிலவேளைகளில் நடப்பதுண்டு. "நீ வேண்டுமானால் இத்தொழிற்சாலையில் நடத்துனராக இருக்கலாம், ஆனால் நீ எனது வீதியினூடாகத்தான் ஒவ்வொருநாளும் இங்கு வந்து செல்லவேண்டும் என்பதை மறந்துவிடாதே" என்று அதட்டும் அள‌விற்கு அவர்களின் போக்கு இருந்தது. பெரும்பாலான சிங்களத் தொழிலாளிகள் தாமுண்டு, தம் வேலையுண்டு என்று இருந்துவிடுபவர்கள். ஆனால், பலர் வெளிப்படையாகவே இனவாதம் கக்கினார்கள். அதுவும் தமிழ்ப் பொறியியலாளர் என்று தெரிந்ததும் அவர்களின் இனத்துவேஷம் வெளிப்படையாகவே தெரிந்தது.
  4. 2006–2009 காலகட்டத்தில், குறிப்பாக இறுதி கட்டத்தில் நடைபெற்ற Sri Lankan Civil War ன் போது, அமெரிக்காவைவிட ரஷ்யா இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவியை அதிகமாக வழங்கியது. ஆனால் முழுப் படம் சற்று விரிவானது. 🇷🇺 ரஷ்யா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது. United Nations இல் இலங்கைக்கு தூதரக ஆதரவு வழங்கியது, குறிப்பாக இலங்கை மீது மேற்கத்திய நாடுகள் முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டது. சீனாவுடன் சேர்ந்து, இந்தப் போர் ஒரு உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தது. 🇺🇸 அமெரிக்கா Liberation Tigers of Tamil Eelam (LTTE) அமைப்பை 1997 முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் சில பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் நுண்ணறிவு ஆதரவும் வழங்கியது. ஆனால் போரின் இறுதி கட்டத்தில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து பொதுவாக விமர்சித்தும், தற்காலிக சமாதானம் மற்றும் விசாரணைகளை வலியுறுத்தியும் இருந்தது. மொத்த மதிப்பீடு 2008–2009 இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது நேரடி இராணுவ உதவி என்ற கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவைவிட ரஷ்யா (மேலும் சீனாவும்) அதிக ஆதரவு வழங்கியது. மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மிகவும் தாக்கம் செலுத்தியவை. 2022 முதல் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் முதன்மையாக ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க எடுத்த முடிவின் விளைவாகும். 2022 பிப்ரவரியில் Russia, Ukraine மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாடே அதனால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகளுக்கும் கட்டமைப்பு சேதங்களுக்கும் நேரடி காரணங்களாக உள்ளன. அமெரிக்காவின் பங்கு என்ன? United States உக்ரைனை ஆக்கிரமிக்கவில்லை. இராணுவ உதவி (ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவு தகவல்) நிதி உதவி ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் (sanctions) தூதரக ஆதரவு ஆகியவற்றினை அது வழங்கியது இந்த உதவி உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறம், நேட்டோ விரிவாக்கமும் அமெரிக்காவின் புவியியல்-அரசியல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது: புவியியல்-அரசியல் பதற்றங்கள் சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால் போர் தொடங்கும் இறுதி முடிவு ரஷ்யா தலைமையால் எடுக்கப்பட்டது. நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியதாக யாராவது நினைத்தாலும், அதனால் தாக்குதலைத் தொடங்கிய நாட்டின் பொறுப்பு வேறு நாட்டிற்கு மாற்றப்படாது. “அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக உக்ரைன் விலை செலுத்துகிறதா?” உக்ரைன் ஒரு மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறது, காரணங்கள்: அது ஒரு சுயாட்சியுடைய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கியிருப்பது ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கியமான நிலைப்பகுதியாக இருப்பது வரலாற்று தொடர்புகள் ரஷ்யாவுடன் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது ஆனால் உடனடி மற்றும் நேரடி அழிவுகளுக்கான காரணம் ரஷ்யா தொடங்கிய போரே — அமெரிக்காவின் “ஆதிக்கம்” அல்ல.
  5. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.
  6. உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இப்பேச்சுக்கள் தோல்வியடையும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் புட்டினுடன் நேரடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டி நேரலாம் என்றே மக்ரோன் கூறியிருக்கிறார். மக்ரோன் இப்படிக் கூறுவதன் காரணம் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் நியாயமானது என்பதற்காகவோ அல்லது அது போரில் வெற்றிபெற்று வருகிறது என்பதற்காகவோ அல்ல. மாறாக நீண்டு செல்லும் இந்த ஆக்கிரமிப்புப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவுகள், உக்ரேனின் தற்காப்பு யுத்தத்திற்காக தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்டுவரும் ஆயுத உதவிகளால் இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம், முடிவின்றித் தொடரும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் எத்தனை வருடங்களுக்கு நீளப்போகிறது எனும் கரிசணை, ஐரோப்பாவின் எல்லைகளை இப்போர் அண்மிக்கும் தறுவாயில் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கான அச்சுருத்தல், ஐரோப்பாவினுள்ளும் இப்போர் விரிவடையும் பட்சத்தில் ஏற்படப்போகும் சிக்கல்கள், அசெளகரியமான சந்தர்ப்பத்தில் தவிர்க்கமுடியாதவாறு நேட்டோவும் இப்போரினுள் இழுத்துவிழப்படலாம் எனும் அச்சம், அணுவாயுதப் பாவனை நோக்கித் தள்ளப்படுதல் அல்லது அதற்கான நகர்வுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதல் எனும் ஆபத்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய நீண்டகால இஸ்த்திரத்தன்மையின்மை, அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள், பணவீக்கத்தினால் ஏற்படப்போகும் அழுத்தம், விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம், சரித்திரத்தில் நீண்டகாலப் போர்கள் பேச்சுக்கள் ஊடாகவே முடிவிற்கோ அல்லது பனிப்பொர் எனும் நிலைமைக்கோ கொண்டுவரப்பட்டிருக்கின்றன எனும் பாடம் ஆகிய எல்லாமுமே சேர்ந்துதான் சில ஐரோப்பிய நாடுகளை ரஸ்ஸியாவுடன் பேசி இப்போரினை முடிவிற்கோ அல்லது குளிர் நிலைக்கோ கொண்டுவரலாம் எனும் நிலைப்பாட்டினை எடுக்க வைத்துள்ளன. . பிரான்ஸும், எஸ்ட்டோனியாவும் புட்டினுடன் பேசலாம் என்று சிந்திக்கும் அதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவையும், பின்லாந்து போன்ற நாடுகளும் பேச்சுக்களை எதிர்க்கின்றன. புட்டினுடனான பேச்சுக்கள் உக்ரேனினை பலவீனப்படுத்தும் என்பதும், ஆக்கிரமிப்பிற்கான பரிசாகவே பேச்சுக்கள் பார்க்கப்பட்டுவிடும் என்பதும் இந்நாடுகளுக்கு இருக்கும் இயல்பான கரிசணை. அதனாலேயே உக்ரேனின் விருப்பின்றி பேச்சுக்கள் நடப்பதை எதிர்க்கும் இந்நாடுகள், உக்ரேனின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் பேச்சுக்கள் அமைவது அவசியம் என்று கூறுகின்றன. இவை இப்படியிருக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக புட்டின் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரில் கிரிமியா தீபகற்பம் அடங்கலாக உக்ரேன் எனும் இறையாண்மையுள்ள நாட்டின் 15 இலிருந்து 20 வீதத்தைத்தான் ரஸ்ஸியா கைப்பற்றியிருக்கிறது. ஆனால் உக்ரேனின் பிரதான நகரங்கள் இன்னமும் உக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதுடன், ரஸ்ஸியாவின் பெரும் எடுப்பிலான ஆக்கிரமிப்பைச் சமாளித்துக்கொண்டே ரஸ்ஸியாவின் உட்பகுதியிலும் ஊடுருவி கடுமையான சேதத்தினை உக்ரேன் ஏற்படுத்தியிருக்கிறது. போரில் வெற்றி அடைந்திருக்கிறது என்று கூறுமளவிற்கு ரஸ்ஸியா எதனையும் சாதிக்கவில்லை. ரஸ்ஸியாவுக்குச் சார்பான பத்தியாளர்களைத் தவிர்த்து, நடுநிலையான ஆய்வாளர்களைக் கேட்டால், ரஸ்ஸியா போரில் இதுவரை வெற்றியடையவில்லை என்றே கூறுகிறார்கள். நேற்று வெளிவந்த நான்கரை வருட ஆக்கிரமிப்புப் போரில் ஏற்பட்ட ரஸ்ஸிய இழப்புக்கள் என்று பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்கிற்குச் சார்பானது என்று பலர் இங்கே குறைகாணலாம் என்ப‌தனால் அதனை இணைப்பதைத் தவிர்க்கிறேன். புட்டின் ரசிகர் மன்றம் கருதுவதுபோல் ரஸ்ஸியாவின் போர் வெற்றியினாலேயே ஐரோப்பா அதனுடன் பேச எத்தனிக்கிறது என்பது கனவு மட்டுமே.
  7. இப்படி இன்னுமொரு கதையும் அக்காலத்தில் கூறினார்கள். ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன‌ முத்தினை எடுத்து வரமுடியுமாம். யாராவது இப்படிக் கேளவிப்பட்டிருக்கிறீர்களா? என்ன மாதிரி அளந்துவிட்டிருக்கிறார்கள்??
  8. அச்சொட்டாக இக்கதையினை கேட்டிருக்கிறேன். கரவெட்டி - நாவலர் மடத்தில் தோட்டக்காணியில் அமைந்திருந்த குடிசைக்குள் படுத்திருந்த ஒரு குடும்பத்தில் தகப்பன், பிள்ளைகள் இருவர் என்று மூவரை பாம்பு தீண்டி இறந்துபோனார்கள். 80 களின் நடுப்பகுதியிலாக இருக்கலாம். இரு பாம்புகள் தோட்டத்தில் பிணைந்தபோது தகப்பனார் மண்வெட்டியால் அவற்றை அடித்ததாகவும், அப்போது ஒன்று இறந்துவிட‌ , மற்றையது தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள். உயிர் தப்பிய பாம்பே அன்றிரவு வீட்டினுள் நுழைந்து அக்குடும்பத்தில் தகப்பானாரைக் கொல்லவந்ததாகவும் ஆனால் அவர் கடிபட்டதும் பாம்பைத் தூக்கி எறிந்துவிட அப்பாம்பு அருகில் படுத்திருந்த இருபிள்ளைகளையும் கடித்துவீடுச் சென்றதாகவும் கூறினார்கள். மரண ஊர்வலம் நடக்கும்போது அருகில் இருந்த வீதியில் நின்ற பனையில் அப்பாம்பு ஏறியிருந்ததை சிலர் கண்டதாக கூறினார்கள். மயானத்தில் அந்த மூவரும் எரிக்கப்பட்ட பின்னரே அப்பாம்பு இறங்கிச் சென்றதை இன்னும் சிலர் கண்டதாகவும் கூறினார்கள். அந்தவயதில் எவர் என்ன சொன்னாலும் உண்மையென்று நம்பியதால் (இப்போதும் சிலவேளைகளில் அப்படித்தான்) சிலகாலம் பாம்பென்றால், அதுவும் கொம்பேறி மூக்கன் என்றால் கெட்ட பயம். என்ன மாதிரி எங்களைப் பேய்க்காட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு இப்பத்தான் தெரியுது!
  9. இந்தக் கொம்பேறி மூக்கன் பாம்பு குறித்து என்னிடம் ஒரு கதை இருக்கிறது. இது புனைந்தது இல்லை, மாறாக நேரில்க் கண்டது. 1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். பாடசாலை நாட்களில் ஒன்று. பிற்பகல் பாடசாலை முடிந்து நானும் தம்பியும் சைக்கிளில் டெம்பிள் ரோட் ஊடாக கோண்டாவில் நோக்கி வந்துகொண்டிருந்தோம். பக்கத்தில் நண்பன் விஜயரூபனும் வந்துகொண்டிருந்தான். நல்லூர்க் கோயிலைத் தாண்டி ஆடியபாதம் வீதிச் சந்திக்குச் செல்வதற்கு சில மீட்டர்கள் தூரத்தில், வீதியின் இடதுபக்கத்தில் வீதியை அடைத்து மூடி பெருஞ்சனத்திரள். எங்களால் தொடர்ந்து பயணிக்கமுடியாததால் சைக்கிள்களை விட்டு இறங்கிக்கொண்டோம். வீதியோரத்தில் இருந்த பாரிய காணியொன்றிற்குள் இருந்தது மண்ணால் கட்டப்பட்ட, ஓலையினால் வேயப்பட்ட கூறையைக் கொண்ட வீடு. நடுத்தரவர்க்கத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லாத குடும்பம் ஒன்று வாழும் வீடுபோலக் காட்சியளித்த அவ்வீட்டின் முற்றத்தில் இரு சாரைகள் பிணைந்தபடி முற்றமெங்கும் அரைந்து கொண்டிருந்தன. சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்க்க, அவ்வீட்டின் பெண்மணியோ கையில் ஒரு சாக்குடன் பாம்புகளுக்குக் கிட்டச் செல்வதும் பின்னர் பாம்புகள் (பிணைந்தபடி) அவர் அருகில் வரும்போது விலகி ஓடுவதுமாக இருந்தார். எங்களுக்கோ அவர் அப்படி கையில் சாக்குடன் நிற்பதன் காரணம் தெரியவில்லை. அருகில் நின்ற பெரியவர்களிடம் என்ன நடக்கிறது என்று பேச்சுக் கொடுத்தோம். அப்போதுதான் சாக்கின் மகிமை தெரிந்தது. பிணைந்த பாம்புகளில் ஒன்று கொம்பேறி மூக்கனாம். விசமுள்ளது என்று கூறினார்கள். அதனை அடிப்பதற்கு அப்பகுதியில் நின்றவர்கள் முயன்றபோது, அவ்வீட்டின் பெண்மணி அவர்களை மறித்துவிட்டாராம். ஏனென்று கேட்டால், பாம்புகள் பிணையும்போது அவற்றின் மீது துணியினையோ அல்லது சாக்கினையோ போர்த்து மூடி, பின்னர் பாம்புகள் கலைந்து சென்றவுடன் அச்சாக்கினை கவனமாக எடுத்துக்கொண்டுபோய் வீட்டின் அலுமாரிக்குள் வைத்துவிட்டால் அவ்வீட்டில் செல்வம் கொழிக்குமாம் என்று அப்பெண்மணி கூறியிருக்கிறார். இதனாலேயே பாம்புகளை அடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். சிறிதுநேரத்தில் சுற்றியிருந்த ஆட்களின் சத்தத்தினால் பாம்புகள் கலைந்து ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிட, அப்பெண்மணியும் அச்சாக்கினை கவனமாக மடித்து வீட்டிற்குள் எடுத்து சென்றார். ஆனால் என்ன, அதற்குப் பிறகும் அதே வீதியினால் குறைந்தது 2 வருடங்களாவது சென்று வந்திருப்பேன், வீட்டின் நிலையோ மாறாமல் அப்படியே இருந்தது.
  10. இதுகூட என்னைக் கண்டிக்கவேண்டும் என்று சிலர் இங்கே வெளிப்படையாக கருத்துப் பகிர்ந்ததனால் ஏற்பட்டது. ஏனென்றால், என்னை யாராவது கண்டித்துவிடுவார்கள் என்கிற காரணத்திற்காகப் பயந்துபோய் எழுதாமல் நான் இருக்கப்போவதில்லை. எனது கருத்து தெனாவட்டாக வந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன், எனது நோக்கம் அதுவல்ல. நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது.
  11. எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சன‌ங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாக‌ப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.
  12. இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம். யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா? அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்? அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்? அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது. முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும். உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.
  13. உங்களது பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை விமர்சித்து வருகிறீர்கள்? நான் எனக்காக ஒரு எதிரியை உருவாக்கவில்லை. நான் எழுதும் எக்கருத்திற்கும் குதர்க்கமாக பதில் எழுதும் ஒருவருக்கான பதிலே நான் எழுதியது.
  14. தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம். என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை. இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.