மனைவி இழந்தவனின் டாங்கோ நடனம்
-பாப்லோ நெருடா-
ஓ மலைனா,
இந்நேரம் என்மடல்களைப் பார்த்திருப்பாய்,
இந்நேரம் கோபத்தில் கத்தியிருப்பாய்,
வெறிநாயென்றும், நாய்களைப் பெற்றவன் என்றும் வசைபாடி
என் தாயின் நினைவை
இந்நேரம் இழிவுபடுத்தியிருப்பாய்.
வெப்ப நாடுகளையும்,
எனக்குப் பெரும் தொல்லை தந்த காய்ச்சல்களையும்
இன்றும் நான் வெறுக்கும் ஆங்கிலேயர்களையும்
அங்கே இப்போதும் நான் இருந்துகொண்டு குறைசொல்லிக்கொண்டிருப்பதாய் நினைத்து
என்னைத் திட்டிக்கொண்டிராமல்
என் இரவுநேரக் கனவுகளையும்
என் உணவுமுறையையும்
உன்னால் நினைவுகூர இயலாது.
மலைனா,
உண்மையில் இரவு எவ்வளவு பெரியது,
உலகம் எவ்வளவு தனிமையானது!
முன்புபோலவே,
ஒற்றையறைகளுக்கும்
உணவுவிடுதியின் ஆறிப்போன சாப்பாட்டிற்கும்
நான் பழகிவிட்டேன்.
என் சட்டைகளையும் சிராய்களையும்
தரைமீது கழற்றிப் போடுகிறேன்.
என் அறையில் உடைமாட்ட கொக்கிகள் இல்லை.
சுவர்களில் எவருடைய படமும் இல்லை.
உன்னை மீண்டும் பெறுவதற்காக
என் ஆன்மாவில் உள்ள எவ்வளவு நிழலையும் நான் தருவேன்.
மாதங்களின் பெயர்கள் மிரட்டல்களைப்போல் ஒலிக்கின்றன.
குளிர்காலம் என்றசொல் சாப்பறைபோல் ஒலிக்கிறது.
என்னைக் கொன்றுவிடுவாயோ என்றஞ்சி
தென்னை மரத்தடியில் நான் புதைத்த கத்தியை
ஈரமணலடியே, செவிட்டு வேர்களுக்கிடையில்
பின்னர் நீ கண்டுபிடிப்பாய்.
உன் கையின் அழுத்தத்திற்கும்
உன் காலின் மினுங்கலுக்கும் பழக்கப்பட்ட
அந்த சமையலறை எஃகைக் காணத் திடீரென விழைகிறேன்.
மனித மொழிகள் அனைத்திலும்
வறியோர் மட்டுமே
உன் பெயரறிவர்.
துளைக்கவியலா தெய்வீகப்பொருளான
உன் பெயரைப் புரிந்துகொள்ள
அடர்ந்தமண்ணுக்கும் இயலவில்லை.
நிலைப்படுத்தப்பட்ட கதிரவனின் நீரைப்போல் ஓய்ந்திருக்கும்
உன் கால்களின் பட்டப்பகலையும்
உன் விழிகளில் உறங்கிப் பறந்துயிர்க்கும் குருவியையும்
உன் இதயத்தில் நீ வளர்க்கும் வெறி நாயையும்
எண்ணுகையில் துயர்மேலிடுகிறது.
இதுபோலவே,
நமக்கிடையே இருக்கும் மரணித்தவர்களையும்
இனி மரணிக்கப்போகிறவர்களையும்
பார்க்கிறேன் நான்.
சாம்பலை மூச்சாய் விடுகிறேன்.
காற்றிலேயே சாபம் விடுகிறேன்.
எனைச்சுற்றி எப்போதும் இருக்கப்போகும்
அகண்ட இந்த வெறுமைவெளியையும்
பூதாகரமான கடற்காற்றையும்
உன்னை அடைவதற்காக நான் தருவேன்!
குதிரைத்தோலின் அங்கமாகிடும் சாட்டையைப்போல்
நினைவுமறதி கலக்காத நீண்ட இரவுகளில் கேட்கும்
உன் இரைந்த மூச்சும்,
காற்று மண்டலத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது.
மெதுவாக, ஆடிக்கொண்டே, வெள்ளியென,
பிடிவாதமான தேனை ஊற்றுவதுபோல்
கொல்லைப்புறத்து இருளில்
நீ சிறுநீர் கழிப்பதை கேட்பதற்காக,
நான் வைத்திருக்கும் நிழல் கூட்டத்தையும்,
என் ஆன்மாவில் சண்டையிடும்
பயனற்ற வாள்களின் போரொலியையும்,
மறைந்துபோனவற்றையும், மறைந்துபோன உயிர்களையும்,
புரிந்துகொள்ளவியலா அளவிற்குப் பிரிக்கமுடியாமல்
தொலைந்து போனவற்றையும்,
என் நெற்றியின்மீது தனித்திருந்து அழைக்கும் குருதிப் புறாவையும்
எத்தனை முறை வேண்டுமானாலும் தருவேனே.