Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

download+(12).jpg

வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும்.

மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும்.

மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்?

தங்களுடைய நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமே அவர்களுக்குத் தலைமைகள் தேவைப்படுகின்றன. மேலும் சமூகப் பாதுகாப்பிற்காகவும் அடையாளத்திற்காகவும். இந்த அடையாளம் கௌரவத்தையும் மதிப்பையும் மாண்பையும் கொண்டது.

வெற்றிபெறும் தலைமைகளை, ஆளுமையுடைய தலைமைகளை, மதிப்பும் மாண்புமுடைய தலைமைகளை, வியப்புகளை ஏற்படுத்தும் தலைமைகளையே மக்கள் தங்களுடைய அடையாளமாகக் கொள்கின்றனர். அந்தத் தலைமைகள் அவர்களைப் பொறுத்தவரை ஒரு நிழல் விருட்சமாகவும் கனிமரமாகவும் விரிந்த வானமாகவும் குளிர் ஊற்றாகவும் அமைந்திருக்க வேண்டும்.

வரலாறு நெருக்கடிகளையே அதிகமாகத் தன் மடியிற்கொண்டது. இயற்கை நெருக்கடியும் சமூக நெருக்கடியும் கலந்தது மனித வரலாறு. இந்த இரண்டு நெருக்கடிகளையும் கடந்து வந்ததும் அதே மனித வரலாறே.

தன்முன்னேயிருக்கும் அல்லது தன்னை நோக்கி வருகின்ற நெருக்கடிகளை வென்று முன்னேறுவதே தலைமைகளின் கடமை. மனித குலத்தை முன்னகர்த்தி வந்த தலைமைகள் இத்தகைய பண்பைக் கொண்டவையே.

ஆனால், தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்திப்பது ஏன்?

தமிழர்களுக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லையா? அல்லது அவர்களுடைய வரலாற்றில் தோல்விக்கான பாத்திரத்திற்கே இடமளிக்கப்பட்டுள்ளதா?

அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளை அவர்கள் எப்போதும் பயன்படுத்தத் தவறுகின்றனரா? அல்லது வாய்ப்புகளைப் பயன்படுத்த அவற்றுக்குத் தெரியாதா?

இத்தகைய தவறுகள் எதனால், எவற்றால் ஏற்படுகின்றன?

அல்லது தமிழர்களால் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கவே முடியாதா?

தாம் கடிமாக உழைத்து உருவாக்கிய வாய்ப்புகளையே அவர்கள் மிக இலகுவாக இழப்பது ஏன்?

இந்த மாதிரியான கேள்விகள் ஈழத்தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்கு இன்று அவசியமானவை. மேலும் இவை கூர்மையாக அணுகப்பட வேண்டியவையும் கூட.

ஏனெனில், ஈழத்தமிழர்கள் இன்று மிகப் பின்தங்கிய அரசியல் நிலைமையிலும் வாழ்க்கை நிலையிலும் உள்ளனர் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த நூறு ஆண்டு கால இலங்கையில் தமிழ்த் தலைமைகள் எத்தகைய பாத்திரத்தை இலங்கையின் அரசியலிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியலிலும் வாழ்க்கையிலும் வகித்துள்ளன? என்று நோக்கினால் இது இன்னும் தெளிவாகப் புலப்படும்.

அதிகம் படித்தவர்களாகவும் ஒரு காலத்தில் சிங்களச் சமூகத்தினராலேயே மதிக்கப்பட்டவர்களாகவும் இருந்த சேர்.பொன் இராமநாதன், அருணாசலம் சகோதரர்கள் தொடக்கம் இன்றைய இரா. சம்மந்தன் வரையில் பலர் இந்தத் தலைமைப் பாத்திரங்களை வகித்துள்ளனர்.

ஆங்கிலேயரிடத்திலும் சிங்களவர்களிடத்திலும் செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்த தலைவர்கள் எப்படித் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாமற் போனார்கள். எப்படி தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் இருந்தனர்?

‘தந்தை’ செல்வா, தங்க மூளை ஜீ.ஜீ. பொன்னம்பலம், ‘தளபதி’ அமிர்தலிங்கம், ‘இரும்பு மனிதன்’ நாகநாதன், ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், தலைவர் பிரபாகரன், இப்பொழுது ஐயா சம்மந்தன் என்று பெருமித அடைமொழிகளோடு கொண்டாடப்பட்ட தலைவர்கள் எல்லாம் இருந்தும் தமிழர்களின் அரசியல் பின்னகர்ந்திருக்கிறதே தவிர, அது ஒரு அடிகூட முன்னகரவில்லை.

எல்லாத் தலைவர்களும் தோல்விக்கும் பின்னடைவுக்குமே தங்களுடைய அரசியல் அணுகுமுறைகளை உருவாக்கி வைத்திருந்தது ஏன்? ஏன் வெற்றியை நோக்கிச் செல்ல முடியாதிருந்தனர்? இன்னும் ஏன் வெற்றியை நோக்கிச் செல்வதற்கு முடியாமலிருக்கின்றனர்?

‘சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிகம் படித்தவர்கள், அதிக மூளைசாலிகள்’ என்று சொல்லிக் கொள்ளும் ஐதீகம் தமிழர்களிடம் பொதுவாகவே உண்டு. ஆனால், இதைச் சொல்லிக் கொள்ள அவர்கள் ஏன் கூச்சப்படவில்லை? இப்படிச் சொல்லிக் கொள்ளவும் கருதவும் கூடிய அடிப்படைகள் என்ன?

தன்னை நோக்கி வருகின்ற அத்தனை நெருக்கடிகளையும் மிக நுட்பமாக வெற்றிகொள்ளும் சிங்களத் தரப்பை ஒரு அவதானமாகவும் பாடமாகவும் கொள்ளுவதற்குத் தமிழ்த்தரப்புத் தவறுவது ஏன்?

பதிலாக, இருக்கின்ற ஆதரவுச் சக்திகளையும் அது எதிர்நிலைக்கே கொண்டு சென்றதையும் ஏன் இன்னும் அது விளங்காதிருக்கிறது?

இந்தியா உள்ளிட்ட வெளித்தரப்புகளையும் உள்ளுரிலுள்ள நேயச க்திகளையும் அது புறந்தள்ளியது ஏன்?

கடந்த நூறு ஆண்டுகால தமிழ்த்தரப்பின் அரசியலில் அது தமிழ் மொழிபேசும் பிற சமூகங்களான முஸ்லிம்களையும் மலையக மக்களையும் எதிர்நிலைக்கே கொண்டு சென்றுள்ளது. இதையிட்ட கவலையைக் கூட அது கொள்ளாதிருப்பது எதற்காக?

அதாவது, மொழி ரீதியாக இருந்த ஒற்றுமையைக் கூடத் தமிழ்த்தரப்புப் பேண முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. பதிலாக அந்தச் சமூகங்களை அரசை நோக்கித் தள்ளுவதையே தமது பிரதான தொழிற்பாடாகவும் அது கொண்டிருக்கிறது.

தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல் முன்னிறுத்தப்பட்ட பிந்திய காலத்திற்கூட இந்தப் பின்னடைவு அம்சங்களைக் குறித்த விளக்கங்களை அது பெறாதிருப்பதன் நோக்கம் என்ன?

இந்த மாரியான குறை அம்சங்கள் தன்னுடைய எத்தகைய வீரியமிக்க செயற்பாடுகளையும் பாழக்கிக்கிச் சிதைத்து விடும் என்பதை ஏன் இன்னும் அது உணராதிருக்கிறது?

ஏனெனில், கடந்த நெருக்கடிக் காலங்கள் அத்தனையிலும் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டேயுள்ளனர். அந்தப் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக வெளிச்சக்திகள் ஆதரவளிக்கவும் இல்லை. உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அது சாத்தியப்படவும் இல்லை.

குறிப்பாகத் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறை மூலம் தமிழர்கள் விரட்டப்பட்டபோது எவராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது சிங்களத் தரப்பின் நிகழ்ச்சி நிரலின்படியே அந்த நிகழ்ச்சிகள் இறுதிவரையில் நடந்தன.

பின்னர் யுத்தத்தின் போதும் இதேதான் நிலை. இறுதிவரையில் சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே வெளி ஆதரவுகள் கிடைத்துள்ளன.

இறுதிப் போர்க்காலத்திற்கூட சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில் - வன்னியிலுள்ள மக்கள் பகிரங்கமாகவே மரணக்குழியினுள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதாவது யாராலும் போரைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. போரிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் முடியவில்லை.

பின்னர் அகதி முகாம்களிலிருந்த மக்களைக் கூட எந்தத் தமிழராலும் மீட்க முடியவில்லை.

அதற்குப் பின்னர் மீள் குடியேற்றத்தைக் கூட தமிழர்கள் தங்களின் விருப்பத்தின் படியோ ஆலோசனையின்படியே முழுதாகச் செய்ய முடியவில்லை.

இவை எல்லாவற்றிலும் சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலே இறுதி வெற்றியாகியிருக்கிறது.

இந்த நிலையிற்தான் தமிழ்த் தலைமைகளின் ஆழுமையும் திறனும் தீர்க்கதரிசனங்களும் தீர்மானங்களும் தந்திரோபாயங்களும் உள்ளன.

தமிழ் அரசியல் அறிவும் ஊடக நிலையும் கூட இந்தப் பின்னடைவுப் பரப்பிலிருந்து விடுபட்டதாக இல்லை.

இப்போது கூட ஒரு அருமையான வாய்ப்புக் கிட்டியது. சிங்களத் தரப்போடு பேரம்பேசக் கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

இலங்கையின் மீதான போர்க்குற்றங்கள் ஒரு நெருக்குவாரத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முஸ்லிம் அரசியற் சக்திகளை தனக்குச் சார்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அது ஒவ்வொரு தரப்பையும் தனித்தனியே கையாண்டுள்ளது.

ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தச் சக்திகள் தங்களிடையே ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டு, ஒரு பொதுத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

‘இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் நிலைமையைக் கருத்திற் கொண்டு செயற்படுகிறோம். ஆனால், தமிழ் பேசும் மக்களுடைய அரசியற் பிரச்சினைகளையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையம் அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

அதை இப்போதே செய்ய வேண்டும்.

சிங்களச் சமூகத்தினரும் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியைப் புரிந்திருக்கின்றனர். எனவே இந்த நிலையில் எல்லாக் காயங்களையும் மறந்து, கடப்பதற்குக் கடினமான நிலையை மன்னித்து ஒரு பொது உடன்பாட்டுக்கு வருகிறோம்.

ஆனால், அதற்குப் பிரதியுபகாரமாக – நீதியாக – நிலைமையை உணர்ந்து இந்த உடன்பாட்டுக்குச் சிங்களச் சமூகத்தை நீங்கள் அழைத்து வரவேண்டும்’ என ஜனாதிபதியிடம் தமிழ் பேசும் தரப்பினர் நிபந்தனையை விதித்திருக்க முடியும்.

வாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது புத்திபூர்வமானது. அதேவேளை அதை எட்டுவதற்காக தன்னுடைய நேச சக்திகளை அணுகுவதில் தேவைப்படுவது பெருந்தன்மையாகும்.

இந்த இரண்டு குணங்களும் இல்லாத நிலையே இன்றைய தமிழ்பேசும் சூழலின் யதார்த்தம்.

இது மாலுமி இல்லாத கப்பலுக்குச் சமம்.

துடுப்புகளிருந்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாத எந்தக் கப்பலோட்டியும் ஒரு அங்குலம் கூட முன்னகர முடியாது.

இன்று தமிழரின் அரசியல் அரங்கில் இருப்போர் இரண்டு வகைப்பட்டோர். ஒரு தரப்பு ஆயுதப்போராட்டம், ஆயுதமற்ற அரசியல் வழிமுறை என்ற இரண்டு வழிகளிலும் பயின்றவர்கள். குறிப்பாக திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு.சித்தார்த்தன், திரு.சுகு சிறிதரன், திரு.வரதராஜப்பெருமாள் போன்றோர். அடுத்த தரப்பினர் திரு. சம்மந்தன், திரு. ஆனந்தசங்கரி, திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர்.

ஆனால், தமிழர்களின் கப்பல் என்னவோ இன்னமும் தளம்பிக்கொண்டேயிருக்கிறது. அதற்குத் திசைகளும் இல்லை. போக்கிடமும் இல்லை.

அதில் பழைய பெருமை பேசும் கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

http://naalupakkam.b...og-post_11.html

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.