Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதை ஏற்றும் கிரிக்கெட்டும் தடுமாறும் தமிழ் தேசியமும்!

Featured Replies

போதை ஏற்றும் கிரிக்கெட்டும் தடுமாறும் தமிழ் தேசியமும்! என் வாழ்கையில் நான் மிகவும் நேசித்த ஒன்று கிரிகெட். நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (Past tense). பள்ளியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், கல்லூரி, மாவட்ட அளவில் என பலவகை போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் எங்களது அணியை (Killer CC) தெரியாத எவரும் இருக்க மாட்டார்கள். இங்கே FB-இல் கூட இருக்கும் எனது நண்பன் Ismail Mohammed ஒருமுறை எங்களது ஜோனில் வரும் ஒரு மிக சிறந்த அணியை ஆட்டத்தின் முதல் நான்கு பந்துகளிலும் நான்கு விக்கெட்டுகளை 'போல்ட்' என்ற முறையில் வீழ்த்தியது மறக்க முடியாத நினைவு! புகழின் உச்சத்தை அடைந்திருந்தோம்! எனது நண்பர்கள் அனைவரும் SDAT எனும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அதாரிட்டி ஆப் தமிழ் நாடு நடத்தும் விளையாட்டு பள்ளிகளில் விளையாட்டை முதன்மை பாடமாக எடுத்து படித்தவர்களாகவே இருந்தோம். ஒருவகையில் என் வாழ்க்கை (என் அளவுகோலில்) நாசமாகபோனதற்கு கிரிக்கெட்டுக்கு முதல் பங்கு இருக்கிறது அல்லது நான் கிரிகெட்டை தொலைத்ததும், என் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கியதும் சம காலத்தில் நடந்த எதார்த்த விபத்தல்ல!

நான் ஏன் என் சுயபுராணத்தை இங்கே பாடுகிறேன் என்றால், குறைந்தது ஒரு பதினைந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி, அது தொடர்புடைய வீரர்களிடம் பழகியதில் நானறிந்து எங்கள் சமகாலத்தில் விளையாடிய ஒருவர் கூட பிராமணர் இல்லை. ஆனால் அன்று முதல் இன்றுவரை தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு சென்ற அனைவருமே பிராமணர்கள்! எடுத்துக்காட்டாக, ஸ்ரீ வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சந்திரசேகர், பாரத் அருண், லக்ஸ்மண் சிவராமகிருஷ்ணன், WV. ராமன், சடகோபன் ரமேஷ், சிறீதரன் ஸ்ரீராம், பாலாஜி, ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய் (கிருஷ்ணா), பத்ரிநாத், பதானி, தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக் etc. இது எப்படி சாத்தியமாகிறது என்றே விளங்கவில்லை?

ஒரு வாதத்திற்கு பிராமணர்கள் இயற்கையாகவே (Genetically) விளையாட்டு வீரர்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, கடந்த இருபது, முப்பது ஆண்டு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த மற்ற பிரதான அணிகளான கால்பந்து, கபடி மற்று ஹாக்கி அணிகளை அலங்கரித்தது முழுவதும் ஒடுக்கப்பட்ட மற்றும் இடைச்சாதியினரே! இங்கே மட்டும் ஏன் பிராமண Genetic make-up வேலை செய்யவில்லை? இதை தட்டி கேக்கவேண்டிய ஆண்ட பரம்பரைகள் எந்த அந்தபுரத்தில் துயிலுறங்கினார்கள்? நவீன புரட்சியாளர்கள் ''மாற்றுக்குருபூசை'' சாதி ஒழிப்பு புரட்சியில் இதை கவனிக்க தவறி விட்டார்களோ? அல்லது இதில் வோட்டு வங்கி அட்வான்டேஜ் இல்லையா?stopgenocide.jpg

விளையாட்டை முதன்மை பாடமாக எடுத்து படித்து இந்தியன் வங்கிக்கு (தற்காலிகம்) விளையாடிய ஆருயிர் நண்பன் Mohammed Rafik இனி வாழ வழியே இல்லை என்ற நிலை வந்தபோது கடைசியாக விளையாட்டு கோட்டாவில் 'சுங்க வரித்துரையில்' எடுபிடி வேலை கிடைத்தது. 'மோகன் பகானுக்கு' விளையாடிய நண்பன் குலோத்துங்கனுக்கு இன்னும் ஏதும் கிடைக்கவில்லை. நண்பர்கள் ஆல்பர்ட்டுக்கும், பரீத்துக்கும் போலீஸ் வேலை கிடைத்தது. எனக்கு மூத்த தலைமுறையினர் (சீனியர்ஸ்) பலர் டிஸ்ட்ரிக்ட், டிவிசினல், ஸ்டேட் என அனைத்து செர்டிபிகேட்களும் வைத்திருந்தும் கடைசிவரை வேலை கிடைக்காமலே ரிடையர்ட் ஆகிவிட்டார்கள். இப்படியாக இவர்களின் விளையாட்டுத்திறன் 'இனிதே' முடித்துவைக்கப்பட்டு விட்டது. ஆனால் பிராமணர்கள் விளையாடும் 'ஹைபுரோபைல்' விளையாட்டுக்கு தேசம் முழுதும் இருளில் தத்தளிக்கும் போது மெர்குரியில் மின்னொளி. அதனால், இப்போதெல்லாம் IPL அரங்கத்தை தாண்டி ஜொலிக்கும் மின்னொளியை பார்க்கும் போதெல்லாம், யாரோ வேசித்தொழிலுக்கு விளக்கு பிடிப்பதை போன்றே உணருகிறேன்!

சரி, கிரிக்கெட் வெறும் விளையாட்டுதானே, அதற்கும் சமூக அவலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? எல்லோருக்கும் எளிதில் புரியும் ஈழ அரசியலை பார்ப்போம்! 2008/09 தமிழின வரலாற்றின் கருப்பு வருடங்கள். 2008-இல் மும்பை பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் (!) தாக்கப்படுகிறது. கோபத்தில் அடுத்து சில மாதங்களில் பாகிஸ்தானோடு நடக்கவேண்டிய கிரிக்கெட் தொடரை ரத்து செய்கிறது கிரிக்கெட் ஆணையம். இந்த தேசத்தின் ஒவ்வொரு அணுவையும் நம் கண்ணுக்கு தெரியாமல் நகர்த்தும் முதலாளிகளுக்கு வருமானம்? அதற்கு பதிலாக, உடனடியாக இலங்கையுடன் மாற்று-ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டு கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடாகிறது! அதே சமகாலத்தில் முள்ளிவாய்க்காளில் விழுந்த கொத்துக்குண்டுகளின் வேட்டு சத்தமும், மரண ஓலமும் உங்கள் காதுகளில் விழாமல் இந்திய வீரர்களின் (!!!) அதிரடி ஆட்டத்துக்கு நடுவே தேச பற்றாளர்களின் கைதட்டல்களாலும், விசில் சத்தங்களாலும் மறைக்கப்படுகிறது. சில நூறு பேரை கொன்ற பாகிஸ்தான் எதிரியானது, பல்லாயிரம் மக்களோடு சேர்த்து எம் இனத்தையும் அழித்த இலங்கை நட்புனாடனது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டை நேரடி ஒலிபரப்பு செய்த ஊடகங்களும், இந்திய அரசும், முள்ளிவாய்க்காளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய எங்களை தேச துரோகிகள் பட்டமளித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தன.cricket%20party.jpg

சரி, உங்கள் ஆதர்ச நாயகர்களையாவது பார்ப்போம்! ஃபெராரி கார் நிறுவனம் டெண்டுல்கருக்கு 2002 இல் Ferrari 360 Modena என்ற ஒரு காரை அன்பளிப்பாக வழங்குகிறது. அதற்கு இறக்குமதி வரி கட்டவேண்டியதை அறிந்தும், கட்டாமல் இந்தியா கொண்டுவருகிறார் (ஆச்சர்யக்குறி!!!). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும் டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இல்லை, அந்த காரை மனதார விரும்பினார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது, ஏனெனில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காரை சூரத்தை சேர்ந்த ஜெயேஷ் தேசாய் என்ற ஒரு தொழிலதிபருக்கு விற்று பணம் பார்க்கிறார் உங்கள் ஆதர்ச நாயகன். நாமோ வேண்டியவர்கள் வழங்கும் சாக்லேட்டின் கவரை கூட பத்திரப்படுத்தி வைக்கிறோம்; நம் ஆதர்ச நாயகனுக்குத்தான் எவ்வளவு பெரிய 'சின்னப்புத்தி'?

cricket2011.jpgஇந்த அயோக்கியத்தனத்துக்கு துணை போகும் இந்திய அரசாங்கம்! ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் கருப்பின வீரன் ஆண்ட்ரூ சைமண்ட்சை குரங்கு என்கிறார் ஹர்பஜன். பொதுவாக, உலகம் முழுவதும் விளையாட்டில் இன/நிறவெறிக்கு எதிராக ஜீரோ டாலரன்ஸ் (Zero Tolerance) கடைபிடிக்கப்படுகிறது. நடுவர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்து ஹர்பஜனை போட்டியில் இருந்து சஸ்பென்ட் செய்கிறார்கள். இந்திய அரசாங்கமே நேரடியாக தலையிட்டு ராசதந்திர அழுத்தம் கொடுக்கிறது. ஹர்பஜனை போட்டியில் சேர்க்கவில்லை எனில் பாதியிலேயே நாடு திரும்புவோம் என்கிறது ஆணையம், அதற்கு ஆதரவு தெரிவித்து தேசபற்றாளர்களும், ஊடகங்களும் பொங்கி எழுகிறார்கள். இந்த தேசத்தின் லட்சணத்தால் அரபு நாடுகளிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அடிமைப்பிழைப்பு பிழைக்கும் மக்களுக்காக ஒரு இம்மியளவும் இராசதந்திர நடவடிக்கைகளில் இறங்காத அரசாங்காம், ஒழுங்கீனமான தனது விளையாட்டு வீரனுக்கு இறங்குவது எத்துனை பெரிய கவேலமான செயல்!

பள்ளிப்படிப்பை இறுதிவரை கூட முடிக்காதவர்களுக்கு திடிரென பணத்தை கோடிகளில் பார்க்கும் போது மனம் ஒருநிலைப்படாது, சஞ்சலம், கவன சிதறல் ஏற்படும் என்கிறது உளவியல். மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் கோப்பையை வெல்லும் என ஆருடம் சொல்லப்பட்ட இந்திய அணி தகுதி சுற்றிலேயே மண்ணை கவ்வுகிறது. மீண்டும் அரைவேக்காடு தேசப்பற்றாளர்கள் பொங்கி எழுகிறார்கள், தேசத்தின் மானம் போய்விட்டதாக (ஏதோ புதிதாக) குதித்தார்கள். உடனடியாக, வீரர்களின் கோடிக்கணக்கான விளம்பர வருவாயில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வீரர்கள், மாவீரன் டெண்டுல்கர் தலைமையில் புரட்சி செய்தார்கள், அன்று மாலையே 'முதலை' சரத் பவார் இல்லம் சென்றார்கள். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன! மாறாக, கிரிக்கெட் ஒரு விஞ்ஞானம் என்றால் அதன் தலைமை விஞ்ஞானி என்று போற்றப்படும் 'சேப்பலை' பயிற்சியாளர் (அந்த கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை வழங்கிய) பதவியில் இருந்து நீக்கினார்கள்!

இந்த அயோக்கியத்தனத்துக்கெல்லாம் யார் காரணமாக இருக்க முடியும்? நீங்களும் நானும்தான்! என் தமிழ் சாதி அடிமைப்படுவதை டிவி முன்னும், மைதானத்திலும் அமர்ந்து கைகொட்டி ஆரவாரம் செய்யும் என்னைவிட அயோக்கியன் யாராக இருக்க முடியும்? எனக்கு தமிழன் என்ற அடையாளமும், தமிழ் பற்றும் ஒரு கேடு! அதனால் இப்போதெல்லாம் கிரிக்கெட் என் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டுவதை விட முள்ளிவாய்க்காலை அதிகம் நினைவூட்டுவதால் என்னுள் இருந்த 'கிரிக்கெட்டின் மீதான காதல்' மெல்ல மெல்ல தற்கொலை செய்து கொண்டது! அதை பற்றி எனக்கு பெரிதாக வருத்தம் ஏதும் இல்லை, ஏனெனில் அது நடவாது போய் இருந்தால் என்னுள் இருந்த தமிழ் செத்துப்போய் இருக்கும், பல நண்பர்களுக்கு நிகழ்ந்தது போல!

இதை கடுமையாக எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் கடமை, காரணம் சினிமா, கிரிக்கெட், குடி போன்றவற்றால் கடுமையாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படுபவன் தாழ்த்தப்பட்டவனும், ஒடுக்கப்பட்டவனுமே! ஏனெனில் இவை மூன்றும் தமிழன் என்ற அடிப்படை உணர்வுகளையும், அடையாளங்களை மழுங்கச்செய்து, தான் அடிமைப்பட்டு கிடப்பதை மறக்கச்செய்து எருமைத்தோல் கொண்ட ஈனத்தமிழனையே உருவாக்கும்.

வெட்கத்துடன்,

கிரிகெட்டை சுவாசித்து உயிர்வாழ்ந்த கிருஷ்ணா என்கிற கலகக்காரன்!

http://www.adhikaala...5078&Itemid=163)

(இந்தக் கட்டுரை என் கவனத்தை ஈர்த்தது யாழ் வாசகர்களுக்காக இங்கே இணைக்கிறேன்)

Edited by navam

அர்த்தமற்ற பொழுதுபோக்கு சினிமாக்களும் (தற்காலத்தில் 95 % ஆனவை), தொலைக்காட்சித் தொடர்களும் (தற்காலத்தில் 80 % ஆனவை), குடியும் - கும்மாளமும் தமிழனை பெரிதும் சீரழிப்பது உண்மைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் பைத்தியமாக இருந்த என்னை மாற்றியது இறுதிப்போரும், ஐபிஎல்லும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.