Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் சமாதானமும் அதிகரித்துச் செல்லும் கொலைகளும் - தாயகத்தில் இருந்து எழுவான்.

Featured Replies

சிறீலங்காவில் 2009 ஆண்டுக்கு முன்னர் எந்தொரு மூலைமுடுக்கிலும், யாரோ செய்யும் கொலைகளை இலகுவாக விடுதலைப் புலிகள்தான் செய்துள்ளார்கள் அக்கொலைக்கு அவர்களே பொறுப்பென தொடர்ந்து குற்றஞ்சாட்டிய சிங்கள அரசாங்கங்கள், இன்று வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முழுப் பாதுகாப்பையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தமிழர்கள் பால்வேறுபாடின்றி மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

முற்றுமுழுதாக சிறீலங்கா படைகளின் கண்காணிப்பிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொலைகள் சாதாரண முறையில் இடம்பெறுகிறன. படைகள் மற்றும் படைத்துணைக்குழுக்கள் ஆகியவற்றைத் தவிர வேறெந்தத் தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், ஆயுதமுனையில் வர்த்தகர்கள், பொதுமக்கள் என அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவையனைத்தும் பாதாளக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என ஒரே சொல்லில் பதிலளிக்கின்றனர். கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூட இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அனைவரும், அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல முடியும் என அரசாங்கமும், காவல்துறையினரும் தெரிவிக்கும் கருத்துக்கு எதிரான கருத்தை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரின் கருத்தின்படி அரச ஆதரவு பெற்ற பாதாளக் குழு ஒன்று செயற்படுகிறது என்பதை அவர் மறைமுகமாக தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அந்த அமைப்புக்கு உதவி செய்யும் தமிழர்களை, ஆதரவாளர்களை நேரடியாக இலக்கு வைத்து வெள்ளை ஊர்தியில் கடத்தல், படுகொலைகள் என கொடூரமான செயல்களை கடந்த முப்பதாண்டு காலத்தில் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்தது. தற்போதும் தொடர்கிறது.

இன்று குறிப்பாக குடாநாட்டில் தினமொரு சடலமாக ஆண், பெண் இருபாலாரும் மீட்கப்படுகின்றனர். தற்போது கொலை செய்யப்படும் முறைமை மாற்றப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தின் நோக்கம் தொடர்கதையாகவே உள்ளது. குடாநாட்டில் இடம்பெறும் கொலைகள் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகிறது. அடிகாயங்களுடன், தூக்கில் தொங்கியபடி, எரிவடைந்த நிலையில், பாழடைந்த கிணற்றிலிருந்து என பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்க்கப்படுகின்றனர்.

இவையெல்லாம், சிறீலங்காப் படைகள் முகாமிட்டுள்ள பகுதி, காவல்ரண்கள் அண்மித்த பகுதி என ஆயுதப்படைகள் நிலை கொண்டுள்ள பகுதியைச் சூழவே நடைபெறுகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறான சம்பவங்களினால் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் சடலங்கள் பிரேரதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்ற வாசகத்துடன் நின்றுவிடுகிறது.

அதன்பின்னர், அது தொடர்பாக எந்தொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதில்லை. அதன் சூத்திரதாரிகளும் இனங்காணப்படுவதில்லை. நாட்டிலுள்ள ஊடகங்களும் குற்றச் செயல்கள் தொடர்பாக எவற்றையும் ஆராய்வதுமில்லை, மக்கள் மத்தியில் விழிப்புர்ணர்வுகளை ஏற்படுத்துவதுமில்லை. இவற்றுக்கு ஊடகச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது, அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

நாட்டிலுள்ள முன்னணிப் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர்களை மாதம் ஒருமுறை சந்திக்கும் ஏற்பாடுகளை சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டுள்ளார். இவற்றில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், செய்திகளை வெளியிடும் போது அரசாங்கத்திற்கு பாதகமாக செயற்படக் கூடாது என நேரடியாகவே அச்சுறுத்தப்படுகின்றார்கள். அதனையும் மீறி செயற்படும் ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சலுகைகளுடனான சந்திப்பு அதனையும் மீறி செயற்படும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இதுதான் இன்றைய ஊடகச் சுதந்திரம்.

ஐ.நா செயலாளரினால் நியமனம் செய்யப்பட்ட நிபுணர் குழு முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் படி, நாற்பதாயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியபோதிலும், சர்வதேச சமூகம் அதனைக் கண்டு கொள்ளாத தனது செயற்பாடுகளை சிறீலங்காவில் முன்னெடுக்கின்றனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குரல் கொடுக்கும் அமைப்புக்கள், நெருக்கடிக்கான அமைப்பு போன்ற பல அமைப்புக்கள் சிறீலங்காவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லையென வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிலையில், அது பற்றிய பொறுப்புக் கூறுதலையோ அல்லது அதற்கு பொறுப்பானவர்களையோ, சர்வதேச சமூகம் கேள்வி கேட்காமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை எற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வருடத்திற்குள் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பாக அக்கறை கொண்டுள்ள ஐ.நா உட்பட அனைத்துலகம் முப்பதாண்டு காலமாக பெரும்பான்மை சமூகத்தினால் சிறுபான்மை சமூகம் நசுக்கப்படுவது தொடர்பாக தனது அழுத்தங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது பிரயோகிக்காமை ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது? போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த போதும், தமிழர்கள் கொத்தடிமைகளாவே சிங்கள பெரும்பான்மையினரால் நடாத்தப்படுகின்றார்கள். சிறீலங்கா வரும் அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றுலாத் தளமாகவே பார்வையிட்டுச் செல்கின்றார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

நடந்தவற்றை மீண்டும் மீண்டும் கூறுவதில் பயனில்லை. எதிர்காலத்தில் நடக்கப் போவதை பார்க்கலாம் எனக் கூறுபவர்களும் இன்று மௌனீகளாகத்தான் இருக்கின்றார்கள். போர்க்காலத்தை விடவும் தற்போதே தமிழர்கள் சிறீலங்காவில் அனைத்துப் பகுதிகளிலும் படுகொலை செய்யப்படுகின்றார்கள். இக்கொலைகள் பற்றி பூரண விசாரணைகளை மேற்கொண்டு அதன் சூத்திரதாரிகளை கண்டு பிடிக்க வேண்டுமாயின், சர்வதேசத்தின் கண்காணிப்பில் அமைக்கப்படும் விசாரணைக் குழுக்கள் மூலமே இதனைச் செய்ய முடியும். இன்றைய நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்வதை விட, தற்போதும் உயிருக்கு உத்தரவாதமின்றி பீதியுடன் வாழ்கின்ற மக்களுக்கு, ஒருவழியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய கட்டாயத்தேவையாக உள்ளது.

ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டினாலும் சரி, பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக கோடிக்கணக்கில் அமெரிக்க டொலர்களை வழங்கினாலும் சரி, அப்பகுதியில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள், அச்சுறுத்தல்களை தவிர்ப்பது அனைத்துலகத்தின் முதல் தேவையாக உள்ளது. கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னார் சிங்கப்பூரிலிருந்து விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் அமைச்சர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழ்கின்றார்கள் அவர்களுக்கு எந்தொரு பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

முப்பதாண்டு காலமாக தமிழ் இனம் அடிமைப்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு இன்று யாருமற்ற ஏதிலிகளாக வீதியில் விடப்பட்டு தவிக்கும் மக்களைப் பார்த்து சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்றார். தமிழர்களின் சாத்வீகப் போராட்டம் உட்பட ஆயுதப் போராட்ட வரலாறு பற்றி எந்தவொரு விளக்கமும் தெரியாத அமைச்சர், இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது குற்றம் செய்தவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.