Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பவுத்தம் - ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

Featured Replies

எழில்.இளங்கோவன் திங்கள், 11 ஜூன் 2012 10:48

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.png / 0

குறைந்தஅதி சிறந்த

புத்தரின் துறவும் விழைவும் - 3

கபிலவஸ்துவின் எல்லை நதியான “அனோமா” ஆற்றைக் கடந்து, மகதப் பேரரசின் தலைநகர் இராஜகிருகத்திற்குப் போய்ச் சேருகிறார் சித்தார்த்த புத்தர் - துறவியாக. அப்பொழுது அவருக்கு வயது 29.

புத்தரின் துறவுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கதை, மற்றொன்று வரலாறு. இரண்டையும் பவுத்த நூல்களே சொல்கின்றன.

budhha_395.jpgஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு கிழவர், இறந்து போன ஒருவரின் உடல் இவைகளை முதன் முதலாகப் பார்த்த புத்தர், உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டார் என்பது மரபு ரீதியாகச் சொல்லப்படும் கதை.

“இந்த மூன்று காட்சிகளின் விளைவாக புத்தர் துறவறம் ஏற்றாரென்றால், இதற்கு முன் இந்தக் காட்சிகளை அவர் பார்க்கவில்லை என்பது எப்படிப் பொருந்தும்? இவைகள் நூற்றுக் கணக்கில் பொதுவாய் நிகழும் காட்சிகள். இவற்றை இதற்கு முன் புத்தர் காணாதிருந்திருக்கவே முடியாது. முதல் முறையாக அப்போதுதான் இவற்றைப் புத்தர் கண்டால் என்று கூறும் மரபு ரீதியான விளக்கத்தை ஒப்புக் கொள்ளவே முடியாது. இந்த விளக்கம் ஏற்புடையதன்று, அறிவுக்குப் பொருந்துவதன்று” - என்று இந்தக் கதையைத் தூக்கி எறிந்து விடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

பகுத்தறிவுப் பார்வையில் டாக்டர் அம்பேத்கரின் கருத்து மிகவும் சரி. எனவே இது குறித்து விரிவாகப் பேசுவதை இங்கு தவிர்த்திடுவோம்.

அப்படியானால் புத்தரின் துறவுக்கு உண்மையான காரணம் என்ன?

சரியாகச் சொன்னால் இந்தியாவின் முதல் புரட்சிக்கு வித்திட்ட இடமும், பண்டைய இந்தியாவின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட இடமும், புத்தரின் துறவில் ஒன்றுபடுகின்றன.

இதனை மிகச் சரியாகப் பார்த்தவர்கள் இருவர். ஒருவர் கோசாம்பி, மற்றொருவர் தேவிபிரசாத் சட்டோபாததியாயா.

சாக்கியர்கள் வாழ்ந்த கபிலவஸ்துவுக்கும், கோலியர்கள் வாழ்ந்த ராம்காமுக்கும் எல்லை ஆறாக அமைந்திருந்தது “ரோகினி” ஆறு. இன்று அது கொஹனா என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆற்று நீரால் சாக்கியர்களுக்கும், கோலியர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. சச்சரவுக்குக் காரணம் (கவனிக்கவும்) நதிநீர்ப் பங்கீடு அல்ல ; மாறாக, யார் முதலில் நீரைப் பயன்படுத்துவது என்பது குறித்துத்தான்.

சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இது ஒரு கவுரவப் பிரச்சனை.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இனத்திற்கும், இனக்குழுவுக்கும் அவைகளின் நலம் பேணத் தனித்தனியாகச் சங்கங்கள் இருந்தன. ஒவ்வொரு சங்கமும் சன்ஸ்தகார் என்று அழைக்கப்பட்டது.

ரோகினி நதிநீர்ப் பயன்பாடு குறித்துப்பேச, சாக்கியர்கள் தங்களின் சன்ஸ்தகார் சங்கத்தைக் கூட்டினார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள். முடிவும் எடுத்தார்கள்.

நதிநீர்ப் பயன்பாட்டில் முரண்டு பிடிக்கும் கோலியர்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் - என்பதுதான் சங்கத்தின் பெரும்பான்மை முடிவாக இருந்தது. சங்கத்தின் உறுப்பினரான சித்தார்த்த புத்தர், இதனைக் கடுமையாக எதிர்த்தார். கோலியர்கள் மீது தாக்குதல் தொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

புத்தரைச் சங்கம் நிராகரித்தது. சங்கத்தைப் புத்தர் நிராகரித்தார்.

விளைவு...கபிலவஸ்துவைவிட்டுத் துறவியாக வெளியேறினார் புத்தர்.

பெளத்த நூல்கள் இத்தோடு புத்தரின் துறவை நிறைவு செய்து கொள்கின்றன. சொல்லப்போனால் இது ஒரு மேலோட்டமான செய்தி அவ்வளவுதான்.

அடிப்படையில் புத்தரின் துறவு, இனக் குழுக்களின் அழிவு, அவைகளின் மேல் எழுந்த அரசுகளின் ஆதிக்கம் இவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தது. இதுவே பவுத்தம் சூல் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.

பவுத்த இந்தியாவில், கி.மு. 600 காலகட்டங்களில் தனித்தனிச் சமூகக் குழுக்கள் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கோசாம்பி கூறுகிறார்.

இச்சமூகக் குழுக்களின் இன்னொரு பெயர் இனக்குழுக்கள். ஒன்றுமட்டும் தனித்திருந்தால் அது இனம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் இணைந்திருந்தால் அது இனக்குழு. அன்றைய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் பரவலாக இருந்துள்ளன.

இவ்வினக் குழுக்களின் அடுத்த கட்டம் அல்லது வளர்ச்சி அரசுகள் ஆயின. இவ்வாறு தோன்றிய இருபெரும் அரசுகள் கோசலம், மகதம் ஆகியன.

தொடக்ககால இனக்குழுச் (சன்ஸ்தகார்) சங்கங்களிடம் நிர்வாக அமைப்பு முறையும், கட்டுப்பாடும், சனநாயக நடைமுறையும் சிறப்பாக இருந்தன.

இக்குழுவுக்கு ஒரு தலைவன். அவனைத் தேர்வு செய்வது சங்கம். சங்கத்தை நெறிப்படுத்தப் பேரவைக்குழு. குழு உறுப்பினர்களாக ஆண்களும் பெண்களும் சமமாக இருந்தனர். 19 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்கலாம். மக்களில் உயர்வு தாழ்வு இல்லை. அனைவரும் சமம் என்ற சமத்துவச் சமுதாயத்தின் அடையாளமாக இனக்குழுக்கள் இருந்தன.

இவ்வினக்குழு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வீரர்கள் கூட்டமும் வைத்திருந்தது. ஒரு வகையில் இது ஒரு படைப்பிரிவு, வலிமை வாய்ந்தது.

இந்த இனக்குழுக்கள் அனைத்தும் தனித்தனிச் சுதந்திரமான இனக்குழுக்களாக இருந்தன என்பதுதான் கவனிக்கப்பட வேணடிய செய்தி.

நாளடைவில் இனக்குழுக்களுக்கிடையில் மோதல்கள் நிகழ்ந்தன. வலிமையான இனக்குழு வெற்றியில் சமத்துவம் வீழ்த்தப்பட்டுத் தனி அதிகார ஆட்சி ஏற்பட்டது. அந்த ஆட்சி அரசாக மாறியது, அதன் தலைவன் அரசன் ஆனான். சமத்துவம் அழிந்தது - முடியாட்சி தோன்றியது. கோசலமும் மகதமும் இதற்குச் சான்று.

பிற்காலத்தில் உருவான அர்த்த சாஸ்திரத்தில், “சுதந்திர இனக்குழுச் சங்கங்கள் இருக்கும்வரை அரசாட்சிகள் எழ முடியாது. இனக்குழுச் சங்கங்கள் இருப்பது முடி அரசுகளுக்கு ஆபத்தாகும். ஆகவே அரசுகள் உதிக்க, இனக்குழுக்களை அழிப்பது அவசியமாகும்” என்று கவுடில்யன் கூறுவது கருதத்தக்கது.

உதித்தெழுந்த முடியரசுகள் இனக்குழுக்களை கடுமையாக அழித்தன.

கோசல மன்னன் பசனேதியின் மகன் விதுதபன் சாக்கிய இனக்குழுவை பூண்டோடு அழித்தான். புத்தரால் அதைத் தடுக்க முடியவில்லை. கபிலவஸ்து கோசலரின் ஆட்சியில் சேர்க்கப்பட்டது.

மகதப் பேரரசன் பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு, புத்தர் காலத்திலேயே வஜ்ஜிய இனக்குழுவை நிர்மூலமாக்கினான். வைசாலி அஜாத சத்ருவின் ஆட்சிக்குட்பட்டது.

மன்னர்கள் தங்கள் நாட்டை விரிவாக்கம் செய்ய பேராசைப்பட்டார்கள். அதனால் இனக்குழுக்கள் மீது படையயடுத்து ஆண்கள், பெண்கள் என கொல்லப் பட்டவர்கள் ஏராளம். மன்னர்களின் காம வேட்கை யால் பெண்கள் சின்னாபின்னம் ஆக்கப்பட்டார்கள். அடிமைப்படுத்தப்பட்ட இனக்குழு மக்களிடம் வரி என்ற பெயரில் பொருள்கள் பிடுங்கப்பட்டன, களவாடப்பட்டன.

“அடமானம், வட்டி, கந்துவட்டி என்ற ஏற்பாடுகள் உருவாயின. இவை எல்லாம் மக்களைக் கசக்கிப் பிழிந்தன” என்கிறது அர்த்த சாஸ்திரம்.

“இனக்குழுக்களை அழித்த அன்றைய மன்னர்கள் சபலங்களுக்கும், சலனங்களுக்கும் ஆட்பட்டு வரம்பற்ற கொடுங்கோலர்களாக இருந்தார்கள். தண்டனையாலும், வரிகளாலும், சித்ரவதைகளாலும், கொள்ளையாலும் ஆலையில் கரும்பை நசுக்குவது போல மக்களை நசுக்கினார்கள். அங்கே மந்திரிகளும், பூசாரிகளும் மன்னனின் கொடுமைகளுக்குத் துணை போனார்கள்” என்று தெளிவாகச் சொல்கிறார் பிக்.

இவைகள் எல்லாம் நடந்தது புத்தரின் காலத்தில். புத்தர் இளைஞராக இருக்கும் போது இவைகளை எல்லாம் கவனித்துள்ளார்.

சுதந்திரமான இனக்குழுச் சமூக மக்கள், அரசுகளின் அதிகாரத்தில் தம் சுதந்திரத்தை இழந்து விட்டார்கள். மக்கள் கொல்லப்படு கிறார்கள், கொள்ளையடிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமை களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். சுதந்திர இனக்குழு மக்கள் இப்பொழுது அடிமைகள் ஆகிவிட்டார்கள்.

துன்பம் மக்களின் வாழ்வைச் சூழ்ந்து கொண்டது. அதில் இருந்து அவர்கள் விடுதலை பெற முடியாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். உண்மையில் மக்கள் அறியாமைக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள் - இவைகள் எல்லாம் சித்தார்த்த புத்தரைச் சிந்திக்க வைத்தன.

வலிமை வாய்ந்த அரசனை எதிர்த்துப் போரிட முடியாது. ஆனாலும் மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது புத்தரின் சிந்தனையாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சாக்கியர் - கோலியர் நதிநீர்ப் பயன்பாடு சிக்கல் சாக்கியச் சங்கத்தில் வந்தது. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, ஒரு முடிவோடு கபிலவஸ்துவைவிட்டு வெளியேறுகிறார் புத்தர் துறவியாக.

புத்தரின் துறவுக்குச் சொல்லப்பட்ட கதை வேறு, காரணம் வேறு, காரணத்தின் விளைவு வேறு.

அதைத்தான் தொடர்ந்து பேசப்போகிறோம்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20054:2012-06-11-05-20-00&catid=1480:12012&Itemid=723

- மீண்டும் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நாரதர்!

எனது கருத்துக்களை, முடிவில் பகிர்கின்றேன்!

  • தொடங்கியவர்

கருவாகியது பவுத்தம்! உருவாகியது சங்கம்!

எழில்.இளங்கோவன் செவ்வாய், 19 ஜூன் 2012 00:07 பயனாளர் தரப்படுத்தல்: / 0

குறைந்தஅதி சிறந்த

பவுத்தம்: ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

அரசுகளின் தோற்றம் இனக்குழுக்களின் அழிவின் மேல் ஏற்பட்ட பொழுது, மக்கள் அடைந்த துன்பம் மட்டுமன்று புத்தரின் மனமாற்றத்திற்குக் காரணம். அதைவிட வலிமையான ஓர் ஆதிக்கம் மக்களை அடிமையாக்கி இருந்ததைப் புத்தர் கவனித்தார். அது ஆரியம்.

அரசன் தன் அதிகாரத்திற்கு ஆயுதத்தை முன்வைத்தான். ஆரியம் தன் ஆதிக்கத்திற்கு வஞ்சகத்தை முன்வைத்தது.

ஆரியர்கள் சிறுபான்மையினர், திராவிடர்கள் பெரும்பான்மையினர். அதனால் பெரும்பான்மைத் திராவிடர்களின் வலிமையைச் சிதறடிக்க, ஆரியம் செய்த சூழ்ச்சியின் முதல் நூல் ரிக்வேதம்.

ஆரியர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள். திராவி டர்கள் அவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றது ரிக்வேதம். திராவிடர்களைச் சத்ரியர் என்றும், வைசியர் என்றும், சூத்திரர் என்றும் மூன்று கூறுகளாகப் பிரித்துப் போட்டது அந்நூல். இதைச் சதுர்வர்ணம் என்பார்கள்.

தன் பாதுகாப்புக் கருதி சத்திரியர் என்ற அரசர்களைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு, இராஜகுரு - மகாமந்திரி என்ற பெயர்களால் அரசனின் அதிகாரத்தைத் தனக்குச் சாதமாக்கியது ஆரியம்.

புரோகிதர்களும், குருமார்களும், சோதிடர் களும் உருவானார்கள். யாகங்கள் உருவாயின; வேள்விகள் உருவாயின; புரோகிதங்கள் உருவாயின; வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கின.

இவையெல்லாம் தெய்வீகத்தோடு தொடர்பு கொண்டது என்றார்கள். தெய்வத்தை "பிரம்மம்" என்றார்கள். பிரம்மமே "பிராமணன்" என்று தம்மை அதனோடு இணைத்துச் சொன்னார்கள். தெய்வீகம் ஆரியரின் சொத்து என்று சொல்லித் திராவிடர்களை அதனில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள்.

கடவுள் என்று பயமுறுத்தினார்கள்; விதியைச் சொல்லிப் பயமுறுத்தினார்கள்; மறுபிறப்பு என்று பயமுறுத்தினார்கள்.

அறியாமை மக்களை ஆட்கொண்டது. "அனைத்தும் அவன் செயல்" என்ற ஆரிய வாக்கை நம்பிய மக்கள் "தெய்வக்குற்றம்" ஏற்பட்டுவிடக் கூடாது என்று பயந்தார்கள். பரிகாரம் தேடினார்கள். சோதிடர்களிடம் ஓடினார்கள் மக்கள்.

மக்கள் மட்டுமன்று மன்னர்களும் ஏமாந் தார்கள். ஆரியர்களின் தெய்வீகத்திற்குப் பயந்த மன்னர்கள் ஏராளமான நிலங்களை இலவசமாக வழங்கினார்கள் ஆரியர்களுக்கு. "இறையிலி" என்ற பெயரால் வரிவிலக்கு வழங்கினார்கள். அவை "பிரம்மதேயம்" என்று அழைக்கப்பட்ட வரலாற்றை பவுத்த நூல் திக்நிகாய கூறுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மக்களின் நிலை வேறாக இருந்தது.

தாசா - கம்ம - போரிச - வேட்ட - விட்டா - ஆதனா - டுக்கட்டா இவை உழைக்கும் மக்களைக் குறிக்கும் பாலி மொழிப்பெயர்கள் என்பதைச் சம்யுக்த நிகாய என்ற பவுத்த நூல் கூறுவதைக் காணலாம்.

குறிப்பாக "தலித்" என்ற பெயர் முதன் முதலாக "தலித்தா" என்று ஒடுக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் என்ற பொருளில் திரிபிடக நூலுள் ஒன்றான மஜ்ஜிய நிகாய குறிப்பிடுவது கவனத்திற்குரியது. இன்று தலித் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படு கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இம்மக்களின் வாழ்நிலை எப்படி இருந்தது புத்தரின் காலத்தில்?

விளக்கம் தருகிறார் உமா சக்கரவர்த்தி, "தாசர்கள், கம்மக்காரர்கள், போரிசர்கள் பற்றி பவுத்த நூல்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. வேட்டன் மற்றும் விட்டானிகன் போன்ற வார்த்தைகளும் ஒருசேரத் தோன்றின. முதன் முறையாகப் பயன்படுத்திய மற்றொரு வார்த்தை "தலித்தா" . மிகவும் வறிய நிலை மக்களை இது குறிப்பிட்டது.

அவர்கள் பரிதாபமான வறுமை வாழ்க்கையை வாழ்ந்தனர். உண்ணவோ, அருந்தவோ போதிய பொருட்கள் இல்லாத ஏழைகளாக இருந்தனர். தங்களது முதுகை மூடக்கூட ஆடை யின்றி இருந்தனர். மிதமான வசதியும், சமூகத்தின் இதர பகுதியினருக்கு வளமான வசதியும் இருந்தபோதிலும், அத்தகையத் தீவிர வறுமையும் அனாதர வான நிலையும் நிலவியதை, ஆதாரங்கள் முதன் முறையாகச் சுட்டிக்காட்டின.

சமூகத்தில் பணக்காரர்கள் ஆடம்பரமாக இருந்தனர். தங்கம், வெள்ளி, தானியம், அழகிய வீடுகள் பணியாட்கள் அவர்களிடம் இருந்தன. அவர்களோடு ஏழையான மக்களை இலக்கியம் ஒப்பிட்டுக் காட்டியது.

பரிச்சயமான பாலி மொழிச் சொற்றொடர்களான மொஹபோக குலம், தலித்தா குலம், சாதனா, ஆதனா, சுகட்டா, டுக்கட்டா ஆகியவை மூலம் வர்க்கங்களிடையே இருந்த கூர்மையான சமூக வேறுபாடு வெளிப்படுத்தப்பட்டது. அத்தகைய வறுமையாக்கலுக்குக் காரணமாக நிலம் மற்றும் வள ஆதாரங்கள் சமனற்றுக் கிடைக்கப் பெற்றதைக் கூறலாம். வறுமையாக்கப்பட்ட குழுக்களுக்கு தங்கள் உழைப்பை விற்பதைத் தவிர வேறு மாற்று இல்லை. அடிப்படை இருப்பிற்கான, தேவைக்காக அடிமையாக இருப்பது தவிர வேறு மாற்று இல்லை."

புத்தர் காலத்தில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலை, மக்களின் நிலை இப்படி இருந்துள்ளது. பெண்கள் உரிமையற்றவர்களாக இருந் தார்கள். பொது அவையின் முன் அவர்கள் வரக்கூடாது. தந்தை, சகோதரன், மகனின் கட்டுப்பாட்டில் வாழ்வதே பெண்களின் "தலைவிதி" . பெண்கள் அபாயகரமானவர்கள். கோபப்படுபவர்கள். காம உணர்ச்சி ததும்பு பவர்கள். கலப்படமானவர்கள். ஆண்களின் அடிமைகள். பெண்கள் கருப்புப் பாம்புகள் என்று கருதப்பட்டார்கள் என்று பவுத்த மூல நூலான திரிபிடகத்தின் ஒரு நூலான அங்குத்த நிகாய வெட்டவெளிச்சமாக்குகிறது. பவுத்த நூலான திக்நிகாய தரும் பாடல் இது:

இங்கு இருக்கிறார் மகத அரசர் அஜாத சத்ரு

அவரும் மனிதர்தான்

நானும் மனிதன்தான் - ஆனால்

முழுமையான சுகபோகங்களில்

வாழ்கிறார் மன்னர்

இங்கு நான் அடிமையாய் உழல்கிறேன்

அரசருக்கு முன் எழுந்து

பின் தூங்குகிறேன்

அவரது மகிழ்விற்குச்

சேவை செய்கிறேன் - அவரது

பார்வையைப் பார்த்துப் பணி செய்கிறேன்

ஆனால் நான் அடிமை

- இந்த மக்களைத்தான் புத்தர் "பதித்" என்று அழைத்தார். அறியாமையால் அடிமையான வர்கள் என்று இதற்குப் பொருள்.

இனக்குழுக்களின் அழிவின்போது இருந்த துன்பத்தைவிட, இந்தத் துன்பம் வலிமைவாய்ந்தது என்பது புத்தரின் பார்வை.

பிறப்பில் தோன்றிய சாதிய வர்ணம், ஆரியத்தின் ஆதிக்கம், அதற்கு மன்னர்களின் ஒத்துழைப்பு, கடவுள் கோட்பாடுகளால் வாழும் ஆரியக் கூட்டம், அதே கோட்பாடுகளால் அறியாமைக்கு உள்ளான மக்கள், உழைப்புச் சுரண்டல், அடிமை உழைப்பு, பெண்ணடிமை, இவைகளினால் நாள்தோறும், காலம்தோறும், தலைமுறை தலைமுறைதோறும் தொடர்ந்த தொடர இருக்கின்ற துன்பம் இது என்பதை உணர்ந்தபோது, மிகப்பெரிய வலியைப் புத்தருக்குக் கொடுத்தது.

துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் பெரிதும் வேறுபாடு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட புத்தர், அந்த மக்களுக்காக, திராவிட மக்களுக்காக ஆரியத்தை எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த முடிவுதான் புத்தரைத் துறவி யாக்கியது.

ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதத்தில் இந்த வரி இருக்கிறது. அது, "ஜாதிக் கொடுமையையும் குருமார்களின் ஏமாற்றுவித்தைகளையும், சடங்கு முறைகளையும் ஒழிக்க எழுந்தது பவுத்தம் என்று பல தடவை நான் கூறி இருக்கிறேன்"

புத்தர் ஆரியத்திற்கு எதிராகத்தான் பவுத்தத் தைத் தொடங்கினார் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

கபிலவஸ்துவில் முதன் முதலாக மகதப் பேரரசன் பிம்பிசாரனைச் சந்தித்த சித்தார்த்த புத்தர் அவரிடம் இப்படிச் சொல்கிறார், "உலகியல் பூசலால் காயப்பட்டு விட்டேன். மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள்... இப்போது என் பிரச்சினை விரிவாகிவிட்டது. இந்தச் சமூக முரண்பாட்டுப் பிரச்சனைக்கு நான் தீர்வு கண்டாக வேண்டும்"

பிம்பிசாரன் அமைதியாக இருக்கிறார்

புத்தர் அமைதியாகச் சிந்திக்கிறார்

கருவாகியது பவுத்தம்!

உருவாகியது சங்கம்!

- மீண்டும் சந்திப்போம்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20136:2012-06-18-18-40-42&catid=1484:162012&Itemid=726

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான், நாரதர்!

வேள்விகள் நடத்தி, அதில் குதிரைகள், மாடுகள், மான்கள் போன்ற விலங்குகளை, ஆரியர்கள் வேள்வித் தீயில் இட்டு, அவை வெந்தபின்பு அவற்றை உண்டார்கள்!

இதைக் கண்ட புத்தர், கோபத்துடன் ஆரியர்களை, நோக்கிக் கேட்கிறார்!

புத்தர்: எதற்காக இந்த விலங்குகளை, உயிருடன் தீயில் போட்டுக் கொல்கின்றீர்கள்?

ஆரியர்: ஓம குண்டத்தினூடாக இந்த மிருகங்கள், மோட்சத்திற்குப் போகின்றன!

புத்தர்: அப்படியுங்கள் வேதங்கள் கூறினால், நீங்களும் ஓம குண்டத்தில் பாய்ந்தாலென்ன?

ஆரியர்: ????

தொடர்ந்து எழுதுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.