Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மாவீரர்களின் தியாகத்தை மறந்து தமிழீழக் கொள்கைக்கு சாவுமணி அடித்து மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் -ஜெயா

Featured Replies

தமிழினத்தின் தாயக விடுதலைக்கு சவக்குழியாக அந்துள்ள மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டு, நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமானால் அது தமிழ் மக்களின் கொள்கைக்கு சாவுமணி அடித்ததாகவே வரலாற்றில் பதியப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நடத்தப்படவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

’’சிறீலங்கா – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணசபை ஆட்சி முறையை இந்தியா கொண்டுவந்ததே எமது தாயகக் கொள்கையை சிதைத்து விடுதலைப் போராட்டத்தை அடியோடு அழித்துவிடுவதற்காகவேயாகும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் உறுதியாக இருந்ததன் காரணமாகவும் தமிழ் மக்கள் மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளாததாலும், இந்தியாவின் நோக்கம் நிறைவேறவில்லை. அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது வடகிழக்கு மாகாணபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் இந்திய அமைதிப்படையினதும் ஆயுதக்குழக்களினதும் ஒத்துழைப்பின் காரணமாக ஈ.பி,ஆர்.எல்.எப் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் மூலம் அக்கட்சி தமிழினத்திற்க வரலாற்றுத் துரோகத்தையும் செய்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த வரலாறு எல்லோருக்கும் தெரிவிதவிடயம். மாகாணசபையின் ஊடாக தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்பதுடன் எந்தவொரு அதிகாரமும் முதலமைச்சருக்கு இல்லை. என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட முதலைமைச்சர் வரதராஐபெருமாள் தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்ததும் தெரிந்ததே.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் முதலமைச்சரான வரதராஐபெருமாளாலேயே எந்தவொரு அதிகாரத்தையும் செய்முடியாமல் போய்விட்டது. அதிலும் இந்தியா தலையிட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அதிகாரத்தையும் வழங்க முன்வரவில்லை.

மாகாணசபையின் முதலமைச்சர் ஒரு உயிருள்ள பொம்மை. இலங்கை ஐனாதிபதியின் பிரதிநிதியான ஆளுனரே முழு அதிகாரமும் கொண்டவர். கிட்டத்தட்ட ஐனாதிபதியின் ஆழுகையே மாகாணபையிலும் மறைமுகமாக உள்ளது. முக்கியமான விடயங்களான காணி, பொலிஸ், நிதி, நீதி உட்பட எந்தவொரு அதிகாரமும் மாகாணசபைக்குக் கிடையாது. ஒரு சிற்றூழியரை நியமனம் வழங்குவது அல்லது இடமாற்றம் செய்வது என்றாலும் ஆளுனரின் அனுமதி வேண்டும். இந்த இலட்சணத்தில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு எதைச் சாதிக்கப்போகின்றது. .

அது மாத்திரமின்றி எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதற்கு அப்பால் எமது தாயகக் கொள்கையை சிதைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மாகாணசபைக்கு எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டியிடலாம் அல்லது ஆட்சியைக் கைப்பற்றலாம். ஆனால் எமது தமிழ் தேசியத்தை, தன்னாட்சி கோட்பாட்டை, சுயநிர்ணய உரிமையை, தமிழீழத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்குச் செல்லுமானால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டி வருவதுடன் அரசியல் ரீதியாக எந்தவொரு சுயநிர்ணய உரிமையுடைய தீர்வையும் பெறமுடியாத முகவரியற்ற இனமாக மாறும் நிலை ஏற்படும். .

அதிலும் குறிப்பாக எமது தாயகம் தற்போது வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 2008 ஆம் ஆண்டில் அரசாங்கம் திட்டமிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தியது. அதில் நாம் எமது கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற காரணத்தினாலேயே தேர்தலை புறக்கணித்தோம். அத்தேர்தலில் எமது விடுதலைப்போராட்டத்தை அழித்தவர்களில் ஒருவரான பிள்ளையானுக்கு மகிந்த முதலமைச்சர் பதவியைப் பரிசாகக் கொடுத்த போதிலும் பிள்ளையானால் என்ன செய்ய முடிந்தது. கட்டிடம் கட்டுவதும் வீதி அமைப்பதும் எமது மக்களுக்கான உரிமை அல்ல. மகிந்தவினால் வீசியெறிந்த எலும்புத்துண்டான முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் பணம் சம்பாதித்ததும் தனது உறவினர்களுக்கு ஒப்பந்த வேலைகளைக் கொடுத்து அதன் மூலம் வருமானம் பெற்றும் தன்னை வளர்த்துக் கொண்டதே தவிர எதைச் சாதிக்க முடிந்தது. பிள்ளையான் மாகாணத்தில் எந்தவொரு வேலையை செய்வதானாலும் அல்லது முடிவெடுப்பதானாலும் ஆளுனரின் அனுமதியைப் பெறவேண்டும். மகிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த பிள்ளையான் ஆளுனர் தொடர்பாக மகிந்தவிடம் பலமுறை முறையிட்டு அழுது பார்த்தும் எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆளுனரின் ஆட்சியே நடந்தது.

எனவே மாகாணசபை ஆட்சி மூறையின் கீழ் எதையும் எமது இனத்திற்குப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதே உண்மை. அச்சட்டத்தின் கீழ் எந்தவொரு உரிமையும் இல்லாமலேயே அது உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்குள்ளோ அல்லது இலங்கை ஆட்சியாளர்களுக்குள்ளோ புகுந்து புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இந்தியாவினாலும் முடியாத காரியம். வடகிழக்கு இணைந்த மாகாணத்திலிருந்து கிழக்கைப் பிரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தபோது அதைத்தடுப்பதற்கு நாம் பல முயற்சிகள் எடுத்திருந்தோம். ஐனாதிபதி உட்பட அரச உயர் மட்டங்களுடனும் வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் குறிப்பாக இந்திய அரசிடமும் சந்திப்புக்களை நடத்தி கிழக்கை பிரிக்க வேண்டாம் என கேட்டிருந்தோம். (இச்சந்திப்புகளில் நானும் அப்போது கலந்து கொண்டேன்.) ஆனால் எதுவுமே நடக்கவில்லை. குறிப்பாக இந்தியா தன்னால் எதுவுமே செய்யமுடியாது என கையை விரித்துவிட்டது.

எமது தாயகக் கொள்கையை சிதைத்து எமக்கென தனியான தமிழீழம் அமைய விடக் கூடாது என்பதே இந்தியாவின் கொள்கை அதையே முள்ளிவாய்க்கால் வரை இந்தியா செய்தது. தற்போதும் செய்து வருகின்றது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலியாகக் கூடாது. இத்தேர்தலில் போட்டியிட்டு கூட்டமைப்பு எதையும் சாதிக்கப்போவதில்லை. அத்துடன் கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றப்போவதுமில்லை. அதற்கு தமிழ் வாக்காளர் விகிதாசாரம் போதாது. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி அக்கட்சி கூட்டமைப்புடன் இணையப்போவதில்லை. அத்துடன் தமிழ் தேசியத்தையோ அதன் கொள்கையையோ அது ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவ்வாறு இணைந்தாலும் அதில் பின்நோக்கம் இருக்கும். அல்லது மகிந்த அரசின் சதித்திட்டமாக இருக்கும். அது மாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரசை நம்ப முடியாது எந்தநேரத்திலும் அரசுடன் ஒட்டிக் கொள்ளும் கொள்கை உடையது. எனவே முஸ்லிம் காங்கிரசை நம்பி கூட்டமைப்பு கூட்டுச்சேருமானால் எதிர்காலத்தில் மோசம் போவது உறுதி.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுமானால் எமது கொள்கையை குழிதோண்டிப் புதைத்ததாகவே அமையும். தற்போது எமது விடயத்தில் சர்வதேச ரீதியாக உள்ள சாதகமான நிலை மாறலாம். மாகாண ஆட்சியை ஏற்றுக் கொண்டதால் அதுவே தமிழ் மக்களுக்கான தீர்வு என சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச ரீதியாக பரப்புரை செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். இதனால் தற்போது சர்வதேச ரீதியாக புலம்பெயர் மக்களால் மற்றும் தமிழக எமது உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள், அழுத்தங்கள் அத்தனையும் பயனற்றதாகிப் போகும். தாயகக் கொள்கையை அடிப்படை கொள்கையாக வைத்திருந்த தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு மாகாணசபை ஆட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனவே தமிழினத்திற்கு தன்னாட்சி உரிமையுள்ள தீர்வொன்று அவசியமில்லை என சர்வதேச நாடுகள் கூறும் நிலை தோன்றும். இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அதன் ஐனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ள தீர்மானித்துள்ள பக்கசார்பற்ற விசாரணை, இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை என்பன இல்லாமல்போய் மகிந்த தப்பிக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் புலம் பெயர் மக்கள் இதுவரை காலமும் செய்த போராட்டங்கள் அர்த்தமற்றதாகி விடும். சர்வதேச நாடுகளில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சட்ட வாளர்கள், சனல் 4 மற்றும் ஏனைய ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக செய்த அத்தனை பணிகளும் விணாகிப்போகும்.

இவற்றையெல்லாம் விட எமது விடுதலைக்காக முள்ளிவாய்கால் வரை போராடி உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் இலட்சியம் விணாகிப் போய்விடும். அந்த மாவீரர்கள் தமது இறுதி நேரத்தில் உயிரை விட்டு கண்களை மூடும் வேளையிலும் தமிழீழம் என்ற வார்த்தையையே உச்சரித்துச் செத்துப்போனார்கள் என்பதையும் கூட்டமைப்பினர் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மாத்திரமின்றி இலட்சக்கணக்கான பொதுமக்களும் தமது உயிரைத் தமிழீழத்திற்காகவே ஈர்ந்துள்ளார்கள்.

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றி அல்லது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எமது உரிமையை பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்தியா மாகாணசபை ஆட்சி முறையை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால்தான் பதின்மூன்று பிளஸ்சை பெற்றுத் தரும் என்றெல்லாம் எமது மக்களுக்கு கூட்டமைப்பு கதை கூறலாம். அல்லது பிள்ளையானோ முஸ்லிம் தரப்போ வந்துவிட்டால் எமது மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும் எனவும் கூறலாம். ஆனால் எந்தத்தரப்பு ஆட்சியைக் கைப்பற்றிலாலும் தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளமுடியாது என்பதே யதார்த்தம்.

எனவே கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடாது சர்வதேசத்திற்கும் இந்தியாவுக்கும் தெளிவான செய்தியைக் கூறுவதே இன்றைய காலத்தின் தேவையாகும். எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை என்னும் வெற்றுத் திட்டம் எமது மக்களுக்கான தீர்வல்ல சுயநிர்ணய உரிமையுடைய தன்னாட்சியே தேவை என்பதை ஆணித்தரமாகக் கூறவேண்டும். இவ்வாறு உறுதியான நிலைப்பாட்டில் இருந்தாலேயே முள்ளிவாய்கால் இனப்படுகொலையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு எமது மக்களுக்கான தீர்வை ஐ.நா ஊடாக பெற்றுத்தரும் அதற்காக நாம் சர்வதேச ரீதியில் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு மாகாணசபை ஆட்சியே எமது தீர்வென எமது கொள்கையை விட்டுக் கொடுத்து சறுக்குமானால் எதிர்காலததில் பல விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

அல்லது கிழக்குமாகாண சபைத் தேர்தலில் மற்றைய தரப்பை விட்டுக் கொடுக்க முடியாது என நினைத்தால் கூட்டமைப்புப் பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தாது சுயட்சைக்குழவொன்றை களத்தில் இறக்கி மறைமுக ஆதரவைக் கொடுப்பதே சிறந்தது. ஏனெனில் கூட்டமைப்பை உருவாக்கியது தமிழீழத்தைப் பெறவும் அதற்காக குரல் கொடுக்கவுமேயாகும். இது கூட்டமைப்பிலுள்ள சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

எமது மக்கள் தமிழீழம் கேட்கவில்லை, எனவே நாமும் தமிழீழத்தைக் கேட்கப்போவதில்லை என்றும் நாம் வடகிழக்கை எமது பூர்விகத் தாயகமென்றோ அல்லது அதைப் பிரித்துத் தருமாறு எந்தவேளையிலும் கோரவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே நாம் முன்வைப்போம் என்றும் மாகாணசபையில் போட்டியிட்டால்தான் எமது தாயகப்பூமியை, திட்டமிட்ட குடியேற்றத்தை, நிலஆக்கிரமிப்பைத் தடுக்க முடியும் என்றெல்லாம் எமது கொள்கையை மறந்து மக்களுக்குக் கூறிவரும் கூட்டமைப்பினர் இக்கூட்டமைப்பு எதற்காக அமைக்கப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

எமது மக்கள் உறுதியானவர்கள் எமது கொள்கையில் பற்றுள்ளவர்கள் அவர்களின் வாக்குப் பலத்தை சுயநல அரசியலுக்கோ அல்லது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நலன்களுக்காகவோ அடவு வைக்க வேண்டாம் என்பதுடன் எமது மாவீரர்களின் தியாகத்தை மறந்து தமிழீழக் கொள்கைக்கு சாவுமணி அடித்து மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம். இவ்வாறு நடப்பின் அது பாரிய துரோகமாகவே வரலாற்றில் பதியப்படும்.” என அந்த அறிக்கையில் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (த.தே.கூ)

மட்டக்களப்பு மாவட்டம்.

http://thaaitamil.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.