Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொசு

Featured Replies

பா. இராகவன் எழுதிய கொசு என்னும் தொடரை வாசிக்க கிடைத்தது. அதனை உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

***************

அத்தியாயம் ஒன்று

கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன.

"பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்சா பாத்தியா? இது பேதி கண்டு பட்த்துக்கினு இருக்கசொல்ல மட்டும் வைத்தியர் வூட்டுக்கு தூய்க்கினு ஓட நாம வோணும். போயி நாக்க புடுங்கறமாதிரி நாலு வார்த்த கேக்கத் தாவல? இங்க இன்னா பண்ணிக்கினுகிற?”

அவிழ்த்துக்கொண்டிருந்த துணி மூட்டையை மீண்டும் சேர்த்துக் கட்டி அதன்மீதே உட்கார்ந்தபடி நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் பொற்கொடி. புசுபுசுவென்று மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தாள் வளர்மதி.

"கண்டுகினுதானே வரப்போறான்? இப்பவேவா கொண்டுகினு வந்துருவான்? போவட்டும் விடு. நாலு தபா பொண்ணு பாக்கறேம்பேர்வழின்னு போயி காரியம் கைகூடாம வந்தாங்கல்ல? அந்த நெனப்பா இருக்கும். இந்தவாட்டியாச்சும் நல்லபடியா முடிஞ்சா சரி. காலீலயே நெனச்சேன். அவன் ஆத்தாக்காரி கடும்பாடியம்மன் கோயில்ல சுத்திக்கினு இருந்தா. இன்னாடா இது, திருவிழான்னாக்கூட கோயில் பக்கம் வராத பொம்பள இப்பிடி உருகி உருகி சுத்துதேன்னு பாத்தேன். கேக்கலாம்னுதான் நெனச்சேன். சர்தாம்போ, சரக்கு மலிஞ்சா கடைக்கு வருதுன்னு வுட்டுட்டு வந்தேன். இதான் சமாசாரமா? சர்தான்..”

எதிர்பார்த்த பதில் வராததில் வளர்மதிக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. விட்டுவிட முடியுமா என்ன?

"போடி இவளே.. ஊரான் துணி தோய்க்க நேரம் பார்த்தா பாரு.. வாடி என்னோட. அங்க அத்தினி பேரும் முத்துராமன் வீட்டாண்டதான் நின்னுக்கினுகிறாங்க. கட்சிக்காரப் பசங்க இந்தவாட்டி வீரத்திலகம் வெச்சி அனுப்பறதா ப்ளான் போட்டிருக்கானுக. செம காமடிதான் போ.”

பொற்கொடிக்குச் சிரிப்பு வந்தது. வீரத் திலகம். அ, அருமையான யோசனை. இதற்குமுன் ஏன் யாருக்கும் இது தோன்றாமல் போய்விட்டது? அவளுக்குத் தெரிந்து முத்துராமன் நான்கு முறை பெண் பார்க்கப் போய்விட்டு வந்திருக்கிறான். கிளம்புகிற ஜோர் பெரிதாகத்தான் இருக்கும். பேட்டையே அமர்க்களப்படும். திரும்பி வரும்போதே மாலையும் கழுத்துமாகத்தான் வருவான் என்பது போன்ற தோற்ற மயக்கம் அவசியம் உண்டாகிவிடும். கட்சி வேட்டி, கட்சித் துண்டுடன் அவனும் அவன் அப்பா, சிற்றப்பா வகையறாக்களும் மற்றவர்களும் வீதிக்கு வந்து நின்று இரு புறமும் ஒரு பார்வை பார்ப்பதென்ன, கம்பீரமாக வாடகை குவாலிஸில் ஏறி உட்காருகிற தோரணை என்ன, அவன் அம்மா அலட்டுகிற அலட்டல் என்ன, திருஷ்டி கழிக்கிற ஜோரென்ன, அவன் தங்கை முகத்தில் பொங்கி வழியும் பெருமிதமென்ன..

சந்தேகமில்லாமல் காலனியில் முத்துராமனின் வீடு ஒரு தனித் தீவு. அபூர்வமாக அவனை மட்டும் வீட்டில் படிக்க வைத்தார்கள். அந்தச் சனியன் மண்டையில் ஏறினால்தானே? பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயம் திருச்சியில் ஏதோ கட்சி மாநில மாநாடு என்று ரயிலேறிப் போய்விட்டான். ஆத்தாக்காரிதான் ஊரெல்லாம் கூட்டி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படிப் போகிறது புத்தி?

"அட இவ ஒருத்தி வெளங்காதவ. தமிழரசன் புள்ளைக்கு புத்தி வேற எப்படிப் போவும்? இவங்கப்பன் ரயிலுக்கு முன்னால தலவெச்சி ரெண்டு வாரம் ஜெயிலுக்குப் போயி இருந்துட்டு வந்தவன் தானே? ஜெயிலுக்களி தின்னுட்டு வந்துட்டு வூட்ல சாம்பார் சோறு சரியில்லன்னு நொட்டு சொன்னவன் தானே? வேறெப்படி இருப்பான்?”

முத்துராமன் பொதுத்தேர்வு எழுதாதது பற்றி அவனது தந்தை ஏதும் விசாரிக்க வில்லை. ‘கூட்டத்துக்குப் போறன்னா சொல்லிட்டுப் போவறதுதானடா தறுதல? பஸ்ஸ¤க்கு சில்ற கூட கேக்காம அப்பிடி என்னா அவசரம் ஒனக்கு?’

"பஸ்ஸ¤ல போவலப்பா. செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போனேன். அங்கேருந்து லாரில போயிட்டோம். எட்டு லாரிங்க. அறுநூறு பேரு. சோத்துப் பொட்லம் குடுத்துட்டாங்க. தண்ணி பாகிட் இருந்திச்சி. ஒண்ணும் கஷ்டம் இல்லப்பா.”

"தலைவரு சூப்பரா பேசினாரா?”

அருகே வந்து உட்கார்ந்து ஆர்வமுடன் கேட்டார் தமிழரசன்.

"தூத்தேறி. எந்திரிச்சிப் போய்யா அந்தண்ட. பரிட்சைக்குப் போவல அவன். அது ஏன்னு கேக்கத் துப்பில்ல. நீயெல்லாம் ஒரு தகப்பன்.”

மனைவியின் கோபத்துக்கு மதிப்பளிப்பதுபோல அவர் அந்தக் கணம் எழுந்து வெளியே போனாலும் மகனைத் தனியே கூப்பிட்டு முழு மாநாட்டு விவரங்களையும் கேட்காமல் விடவில்லை. அவர் போகாத பொதுக்கூட்டங்களா? விடிய விடிய குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்காத சொற்பொழிவுகளா? வாங்காத கல்லடிகளா? காலம் அவரது காலை உடைத்து உட்காரவைத்திருந்தது. காப்பிக்குக் கூட சர்க்கரை போட்டுக்கொள்ள வழியில்லைதான். ஆனாலும் சர்க்கரை நோயாமே? நிற்க முடியவில்லை. நடப்பது சிரமமாக இருக்கிறது. மேலதிகம் மூச்சு வாங்குகிறது. அடிக்கடி தலை சுற்றுகிறது.

வயது. ஆம். அதுதான் பிரச்னை. ஒரு மாவட்டச் செயலாளராகும் கனவு அவருக்கு ஐம்பது வயது வரை இருந்தது. சைதாப்பேட்டை அளவிலேயே முன்னிலைக்கு வர முடியாமல் போய்விட்டதற்கு யாரைக் காரணம் சொல்வதென்று தெரியவில்லை. கடவுளைச் சொல்லலாம். கட்சியில் மிகத் தீவிர உறுப்பினராக இருந்த காலம் வரை கண்டுகொள்ளாத கடவுள். அட, தலைவரே பொருட்படுத்தாத கடவுளைத் தான் என்ன கொண்டாடுவது? ஆனாலும் அடி மனத்தில் அவருக்கு உறுத்தல் இருக்கவே செய்தது.

"ஏன் கற்பகம், ஒருவேளை மெய்யாவே கடவுள் இருந்துட்டாருன்னா, செத்தப்பறம் என்னிய டீல்ல வுட்டுடுவாரோ? இந்த சொர்க்கம், அது இதுங்கறாங்களே.. அங்கெல்லாம் நம்மள சேக்கமாட்டேன்னு சொல்லிருவாங்களோ?”

"பின்ன? நீ செத்தா ஆவியாத்தான் அலையப்போற. இதுல இன்னா சந்தேகம். இதே ஆத்தங்கரையிலதான் சுத்திக்கினு இருப்ப. ஏந்தலையெழுத்து, அப்பவும் உன்னாட லோல் படணும்னு இருக்கோ என்னமோ?”

முத்துராமனின் அம்மா இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவள். பிறந்து, புகுந்த குடிசைகள் இரண்டும் அடுத்தடுத்த சந்துகளிலேயே இருந்துவிட்டதில் வாழ்க்கையில் பெரிய மாறுதல்கள் எதையும் அவள் பார்த்ததில்லை. அவளது அப்பா காங்கிரஸ் அனுதாபி. சுதந்தர தினத்துக்கு மட்டும் வெள்ளைச் சட்டை போட்டு, கொடி குத்திக்கொள்கிற ஆசாமி. வாழ வந்த இடத்தில் அத்தனை பேருக்கும் தமிழ்ப் பெயர்களும் சிறை சென்ற சரித்திரமும் இருந்ததில் அவளுக்குப் பெரிய வியப்பு ஏதும் ஏற்படவில்லை.

"போவுதுபோ.. குடிச்சி சீரழிஞ்சி சுருண்டு கெடக்காம கட்சி, கட்சின்னுதானே அலையுதுங்க? அதுக்கு இது எவ்ளவோ மேல” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். குடித்துச் சீரழிந்த சரித்திரக் கதைகள் அவளது வம்சத்தில் நிறைய இருந்தன. தனக்குப் பிறந்ததாவது படித்து முன்னேறுமா என்று கொஞ்சநாள் கனவு கண்டுகொண்டிருந்தாள். முத்துராமன் பன்னிரண்டாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள, அடுத்துப் பிறந்த இரண்டும் ஐந்தைத் தாண்டவே அடம் பிடித்ததில், அவள் கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு, கடனுக்குத் தையல் மிஷின் ஒன்றை வாங்கி வீட்டில் போட்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

அளந்து அளந்துதான் ஆசைப்படவேண்டும். கவனமுடன் தான் கனவுகள் காண வேண்டும். கடவுள் முக்கியம். கட்சியும் முக்கியம். கணவனும் குழந்தைகளும் அதைவிட முக்கியம். என்ன செய்து யாரைத் தடுத்துவிட முடியும்? முத்துராமனைப் பின்பற்றி அவன் தம்பி தமிழ்க்கனல் கட்சிக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் போகத் தொடங்கியபோது கற்பகம் மறக்காமல் தினத்தந்தி பேப்பரில் நாலு இட்லி வைத்து மடித்துக் கொடுத்து அனுப்பத் தொடங்கினாள். தேர்தல் காலங்களில் அவர்கள் இரவு பகலாக வீடு வராமல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தானே தேடிப்போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தாள். யார் கண்டது? தொடர் ஓட்டப்பந்தயத்தில் பாதியில் தன் கணவன் நின்றுவிட்ட இடத்திலிருந்து முத்துராமன் தொடரலாம். அவன் மாவட்டச் செயலாளர் ஆகலாம். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அமைச்சரும் ஆகலாம். ஒருவேளை முடியலாம். சைதாப்பேட்டைச் செம்மல் என்று யாரும் பட்டம் கூடத் தரலாம். எதுவும் சாத்தியம்தான். கனவுகள் ஆசீர்வதிக்கப்படும்போது.

எதற்கும் இருக்கட்டும் என்றுதான் அவள் எப்போதாவது கையில் கொஞ்சம் காசு இருக்கும்போது கடம்பாடி அம்மனுக்கு அரை லிட்டர் பால் பாக்கெட் எடுத்துப் போய் அபிஷேகத்துக்குக் கொடுத்துவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு வருகிறாள். இப்போதெல்லாம் முன்னைப்போல் கடவுளே இல்லை என்று புருஷன்காரன் அழிச்சாட்டியம் பண்ணுவதில்லை. கோயிலுக்கு ஆவின் பால் எடுத்துப் போகும்போது சண்டை பிடிப்பதில்லை. பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.

0

குவாலிஸ் புறப்பட இருந்த சமயம் பொற்கொடியும் வளர்மதியும் வேகமாக ஓடி வந்தார்கள்.

"டேய் முத்துராமா.. கொஞ்சம் இருடா.. பொண்ணு பாக்கப் போறியாம்ல?” என்று இடுப்பில் தயாராக முடிந்துவைத்திருந்த குங்குமப் பொட்டலத்தை எடுத்து அவன் சற்றும் எதிர்பாராதவிதத்தில் நெற்றியில் தீற்றினாள் வளர்மதி.

அவன் சிரித்தான். ‘இரு, ஒன்ன வந்து கவனிச்சிக்கறேன்.’

"அட எவண்டா இவன்? இப்பவும் வந்து எங்களத்தான் கவனிக்கணுமா? இந்தவாட்டியாச்சும் போன காரியத்த ஒர்க்கவுட்டு பண்ணிக்கினு வா. அப்பால கவனிக்க வேற ஜோலிங்க நிறைய இருக்கும்.”

முத்துராமனுக்கு சிரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வேண்டாம். ஒருவேளை அம்மாவுக்குப் பிடிக்காது போகலாம்.

"த.. தள்ளிப்போ. சும்மா கவாங்கவான்னுக்கிட்டு. வந்து பேசிக்கறேன். நீ ஏறுடா..” என்று போலியாகச் சிடுசிடுத்து அவனை வண்டிக்குள் தள்ளினாள் கற்பகம். வீதி நிறைத்து நின்ற ஜனம் கையசைத்தது. பொற்கொடியும் கையசைத்தாள். ஆனாலும் ஏனோ அவன் முகத்தை நேராக அவளால் பார்க்க முடியவில்லை. சற்றும் சாத்தியமே இல்லை என்றாலும், யாரிடமாவது சொல்லலாம் என்று பலகாலமாக நினைத்துக்கொண்டிருப்பதுதான். ஆனால் யாரிடம் சொல்வது? வாய் இல்லாத, காது மட்டும் உள்ள கொள்கலன் ஏதும் உண்டா என்ன?

தான் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தாள். இந்நேரம் அத்தனைத் துணிகளையும் அலசிப் போட்டிருக்கலாம். இந்தச் சனியன் பிடித்த வளர்மதியால் வந்த வினை. கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். எதற்காக வரவேண்டும்? ஆகப்போவது ஒன்றுமில்லை. வண்டியில் ஏறுபவனை வெறுமனே பார்த்துக் கையசைக்கிற வேலை. போர்க்களத்துக்குப் போகிறவனை வழியனுப்புகிற மாதிரியா? சே. என்ன அபத்தம் இது. எப்படியாவது இம்முறை முத்துராமனுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட வேண்டும் என்று அவள் மிகவும் விரும்பினாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி படை திரட்டிக்கொண்டு போகிற அவஸ்தையிலிருந்து அவன் தப்பிப்பதற்காக மட்டுமல்ல. அதற்குப் பிறகாவது தனக்குள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌன ஓலத்தை அடக்கிச் சுருட்டி அழுத்திப் புதைக்கவும் கூட.

ஆற்றங்கரைக்குத் திரும்பப் போகிற வழியெங்கும் அவள் அதையேதான் நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த முறை எக்மோர் பெண்ணாமே? அடையாற்றுக்கரைவாசிக்கு கூவக்கரைப் பெண் சரியாகத்தான் இருக்கும். பளபளவென்று குவாலிஸில் போய் இறங்கும் முத்துராமன். குடிசை வாசலில் பெஞ்சு போட்டு உட்காரவைப்பார்களாயிருக்கும். பின்னே இத்தனை கூட்டத்துக்கு உள்ளே எங்கிருந்து இடம் இருக்கும்? த.. சட்னு போயி ஆறு டீ வாங்கியா.. யாரோ, யாரையோ விரட்டுவார்கள். யார் அந்தப் பெண்? கையில் டீ க்ளாஸ¤டன் வந்து முத்துராமன் எதிரே குனிந்த தலையுடன் எப்படி நிற்கப் போகிறாள்? என்ன சேலை உடுத்தியிருப்பாள்? அவளைப் பெற்றவள் நல்லவளாக இருக்கவேண்டும். முத்துராமனை அவள் அடிக்கடி கிண்டல் செய்திருக்கிறாள். பாத்துக்கினே இரு.. சினிமாவுல வர காந்திமதியாட்டம் ஒனக்கு ஒரு மாமியாக்காரி வந்து நிக்கப்போறா. கட்சியும் வேணாம், ஒரு கருமாந்திரமும் வேணாம்னு மெரட்டப்போறா. பொண்ணக் கட்டின பாவத்துக்கு சர்தான் அத்தன்னு சுருண்டு நிக்கப்போற..

முத்துராமன் இதற்கெல்லாம் பதில் சொன்னதில்லை. வெறுமனே சிரிப்பான். எல்லோருக்கும் எப்போதாவது ஒருநாள் திருமணம் ஆகத்தான் போகிறது. யாரோ ஒரு பெண். எங்கிருந்தோ வரப்போகிறவள்.

முத்துராமன் விஷயத்தில் அது ஏன் தானாக இருக்கக் கூடாது என்றுதான் பொற்கொடி நினைத்தாள். வேணாம்டி, நெனப்ப அழுத்தித் தொடச்சிரு என்று அம்மா சொன்னபோது அழக்கூடத் தோன்றவில்லை. துடைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவனுக்குத் திருமணம் ஆகும்வரை தள்ளிப்போட்டால் தப்பில்லை என்று தோன்றியது.

-

[கல்கியில் தொடராக வெளிவந்தது]

அத்தியாயம் இரண்டு

இருபத்தி மூன்று வயதில் தனக்கு மீண்டும் வேறொரு பெயர் வைக்கப்படும் என்று சாந்தி நினைத்துப் பார்த்ததில்லை. இந்தப் பெயருக்கு என்ன குறைச்சல்? சிறியதாக, நன்றாகத்தானே இருக்கிறது? தவிரவும் அந்நாளில் சாந்தி நிலையம் என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் ஆசைப்பட்டு வைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். ரேஷன் கார்டில் இருக்கிற பெயர். பாதியில் விட்ட பள்ளிக்கூடம் கொடுத்தனுப்பிய சர்டிபிகேட்டில் இருக்கிற பெயர். வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிற பெயர். ஊரும் உறவும் குறைந்தது ஒரு கோடி முறையாவது கூப்பிட்டுப் பழகியிருக்கக் கூடிய பெயர்.

“பேர மட்டும் தமிழ்ப் பேரா மாத்திருவோங்க. இந்த ஒரு கண்டிசனுக்கு நீங்க சம்மதிச்சித்தான் ஆவணும்.”

முத்துராமனின் அப்பா கிளம்புமுன் கைகூப்பியபடி சொல்லிவிட்டுப் போன காட்சி அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன்னையறியாமல் சிரித்துக்கொண்டாள். சா – ந் – தி. தமிழ்ப் பெயர் இல்லையா இது? வேறென்ன பெயர்? இங்கிலீஷா? இந்தியா? தெலுங்கு?

அவளது தந்தை சந்தேகமாகக் கேட்டபோது முத்துராமன்தான் விளக்கம் சொன்னான். அது வடமொழி. வடமொழி என்றால்?

“நமக்கு சம்மந்தமே இல்லிங்க. சம்ஸ்கிருதம்னுவாங்க. ஐயமாருங்க பாஷை.”

அட, இத்தனை நாள் தனக்கு இருந்தது சம்ஸ்கிருதப் பெயரா? சாந்திக்கு அது ஒரு செய்தியாக இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த முத்துராமன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தவிரவும் பெயரை மாற்றுவதில் அவனும் அவனது தந்தையும் கொண்டிருந்த தீவிரம் அவளுக்குப் புதிதாக இருந்தது. சிறு வயதுகளில் பொங்கலுக்கு முந்தைய தினம் இரவு அவளது அப்பா திடீரென்று நினைத்துக் கொண்டமாதிரி கடைக்குப் போய் அவளுக்கும் அவளது தங்கைக்கும் அம்மாவுக்கும் புதுத்துணி எடுத்துவரும் நாள்கள் நினைவுக்கு வந்தது. சந்தேகமில்லை. அவர்களுக்கும் பொங்கல் உண்டு. ஓரிரு மணி நேரங்கள் முன்னதாகத்தான் அது உறுதி செய்யப்படும் என்றபோதும், அந்த ஊரடங்கிய பொழுதில் அப்பா கொண்டுவந்து நீட்டும் பிளாஸ்டிக் கவரைப் பிரித்துத் துணியின் புதிய வாடையை நுகர்ந்து பார்த்து, தொட்டுத் தடவிச் சில நிமிடங்கள் சந்தோஷப்படும்போது அப்பா என்கிற நபர் மிகவும் இனிமையானவராகத் தோன்றுவார். அவர்தான் என்ன செய்வார்? விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல ஏழைமை. திணிக்கப்பட்டது. அவர் ஓட்டுகிற மீன்பாடி வண்டி தன் சக்திக்கு உட்பட்ட வருமானத்தைக் கொடுக்கவே செய்கிறது. ஆனாலும் நான்கு வயிறுகளுக்கு அது போதுமானதல்ல.

சாந்தியும் அவளது அம்மாவும் தெரிந்தவர்கள் வீட்டில் வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, தொடங்கியபோது அவளது தங்கை சரோஜாதேவி ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். முத்துராமனின் தந்தையைப் போல யாரோ ஓர் உள்ளூர் அரசியல்வாதிதான் அதட்டல் போட்டு அவளைப் பள்ளிக்குக் கொண்டுவிட்டது. படிப்பு வந்தால் படிக்கட்டும். குறைந்தபட்சம் ஒரு வேளை உணவு உறுதி.

சாந்திக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது. அவளது தந்தை எதையும் மறுத்ததில்லை. திணிக்கப்பட்ட எதையும். எப்போதும் ஒரு நூதனமான வெறுப்புணர்வுடன் வீட்டில் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் அம்மா. பெரும்பாலான தினங்களில் காலியாகவே இருக்கிற பாத்திரங்கள், மளிகைச் சாமான்களுக்கான பிளாஸ்டிக் டப்பாக்கள். கிழிந்து தொங்குகிற சாயம் போன உடைகள். ஒரு சிறு தூறலுக்கும் தாக்குப் பிடிக்க வக்கில்லாத நொறுங்கிய குடிசை.

“த.. என்னா செலவானாலும் செரி. மொதல்ல ஓலைய மாத்திரணும். பொண்ணுக்குக் கல்யாணம்னு வெச்சிக்கிட்டு இப்பிடி உளுத்த ஓலையோட நின்னம்னா நாலு பேரு காறித்துப்புவானுங்க. வாழமண்டி கணேசன் நூத்தம்பது ரூவா தர்றேன்னான். நீ வேலை பாக்கற வூடுங்கள்ள கேட்டுப்பாரு. சோத்துப்பாடுதான் என்னிக்கும் இருக்குது. பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்கசொல்ல ஏன்னா கேக்கற? அந்தமாதிரின்னு வெச்சிக்க. ஆமா, சொல்லிட்டேன்.”

காது மடிப்பிலிருந்து பீடியை உருவிப் பல்லில் கடித்தவண்ணம் தன் முடிவைச் சொல்லிவிட்டு அப்பா குடிசைக்கு வெளியே போன காட்சி சாந்திக்கு நினைவில் நகர்ந்தது. அம்மா ஏதும் பேசவில்லை. ஓலை மாற்றுகிற விஷயத்தில் அவள் பெரும்பாலும் தேர்தல்களையே நம்பியிருப்பவள். வோட்டுக்கேட்டு வருகிற மகராசன்களில் யாராவது ஒருவர் இதுநாள் வரை அந்தப் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு ஓலை. தண்ணிக்குக் குடம். சென்றமுறை யாரோ ஒருவர் சூட்கேஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனார்.

“பொட்டி எதுக்குன்னு யோசிக்காத தாயி. நீ வோட்டுப்போட்டு நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா வீட்டுக்கு ஒருத்தருக்கு கவர்மெண்டு வேலை கேரண்டி. அப்பால உம்புருசன் சம்பளமாவும் கொண்டாருவான், கிம்பளமாவும் கொண்டாருவான். அது அவன் சாமர்த்தியம்.” வேட்பாளர் சிரித்தபடி கிசுகிசுத்தபோது, வெகுகாலம் கழித்துச் சிரிப்பவள் போல சாந்தியின் அம்மாவின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.

“யாரு? இதுவா? சம்பாரிக்கறதா? தெனம் இருவத்தஞ்சு ரூவா கொண்டாருது. அதுக்கே முதுக வலிக்குது, மொழங்கால வலிக்குதுன்னு நைட்டு பூரா மொனங்கினு கெடக்குது. என்னமோ எந்தலையெழுத்து போன்னு நெனச்சிக்கினு இத்தினி வருசம் ஓட்டிட்டுப் பூட்டேன். நீதான் சொல்ற. மவராசன் கெலிச்சி எதனா நம்ம மக்களுக்கு நல்லது செய்யாமலா பூடுவ? வேல குடுக்கறியோ என்னமோ, ஊட்டுக்குள்ளாற வெயிலு, மள வந்து ஊத்தாம கூரை மாத்த கொஞ்சம் ஏற்பாடு பண்ணு கண்ணு. ஒனக்கு புண்ணியமாப் போவும். கண்டிசனா ஒனக்குத்தான் என் வோட்டு.”

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் குடிசையின் கூரையை அம்மா எத்தனை திறமையாக மாற்றிவிடுகிறாள்! சாந்திக்கு அது எப்போதும் தீராத வியப்பு.

“வேற வழியில்லடி. வாயுள்ள புள்ள பொழைக்கும். நாய் உள்ள வூட்லதான் திருட்டு நடக்காது. இந்த வூட்டுக்கு வாயும் நாந்தான், நாயும் நாந்தான். உங்க ரெண்டு பேத்துக்கும் எவனையானா ஒருத்தன புடிச்சி கட்டிவெச்சிட்டேன்னா போதும்.”

“எதுக்கும்மா? நீ ஒருத்தி படற கஷ்டம் போதாதா?”

“அடபோடி போக்கத்தவளே. கஷ்டக்கணக்கு பாத்திருந்தன்னா கால்வயிறு கஞ்சி கூட கெடைச்சிருக்காது. என்னா கெட்டுப்போச்சி இப்ப? த..ரெண்டு பேரும் பனமரத்துல பாதியா எந்திரிச்சி நிக்குறிங்கள்ள? நாம்பெத்ததுன்னு ஒரு இது மனசுக்குள்ளார வருதில்ல? இதுக்கு மேல இன்னா வோணும்? காசு பணம் பாதில போனாத்தாண்டி கஸ்டம். பாத்ததே இல்லன்னா, அதுவும் சாமி மாதிரிதான். எப்பயாச்சும் வரம் குடுக்கும்னு கனா கண்டுக்கினே போய்க்கினு இருக்கவேண்டியதுதான்.”

பெண் பார்க்க வந்திருந்த முத்துராமன் குடும்பத்தினரிடமும் அம்மா இதைத்தான் சொன்னாள். கோயிலில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றபோது மட்டும் முத்துராமனும் அவனது தந்தையும் மறுத்துவிட்டார்கள்.

“அதெல்லாம் வேணாம்மா. எங்க காலனில, எங்க பேட்டைல நடு ரோட்டுல மேடை போட்டு நடத்தறதுதான் எங்களுக்கு வசதி. ஏற்கெனவே எங்க மாவட்டச் செயலாளராண்ட பேசியிருக்கேன். வந்து நடத்திக்குடுக்கறேன்னிருக்காரு. மைக்கு செட்டு செலவெல்லாம் எங்களோடது. கட்சிக்காரங்க நூறு பேரு வருவாங்க. பிரியாணி போட்டா சந்தோசப்படுவாங்க. நாம சாம்பார் சாதம் போட்டாக்கூட போதும். அந்த செலவ மட்டும் பாதியா பிரிச்சிக்குவம்.” என்றார் முத்துராமனின் அப்பா.

தேர்தல் சமயங்களில் வோட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களைத் தவிர சாந்திக்கு அரசியலில் ஏதும் தெரியாது. தன் எதிர்காலக் கணவன் ஓர் அரசியல்வாதி என்பது அவளுக்குப் புதிதாக இருந்தது. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வலம் வரக்கூடியவன். இப்போதைக்கு பைக் வைத்திருக்கிறான். சைதாப்பேட்டையில் நடக்கிற கட்சிக்கூட்டங்களில் முதல் வரிசையில் அவனைப் பார்க்கலாம். ஓரிரு முறை மேடை ஏறி யாரையோ வழிமொழிந்திருப்பதாகவும் சொன்னார்கள். எப்பிடியும் அடுத்த கார்ப்பரேசன் எலக்சன்ல கவுன்சிலராயிருவான் என்று அவனது அம்மா சொன்னபோது கேட்க வினோதமாக இருந்தது அவளுக்கு. எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் வரும்முன், மாப்பிள்ளை ஒரு டெய்லர் என்று மட்டுமே அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அதனாலென்ன? டெய்லர் கவுன்சிலராகலாம். கவுன்சிலர் சேர்மன் ஆகலாம். சேர்மன் எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் மட்டும் உடன் வரவேண்டும்.

“அப்பிடி இல்லிங்க. இது உழைப்புங்க. ராப்பகலா உழைக்கணும். கஸ்டம் பாக்காம உழைக்கணும். அரசியல் சுலபமில்லிங்க. நான் டிரை பண்ணேன். மேலுக்கு வரமுடியல. எம்புள்ள வந்துருவான். அது நிச்சயம். அவன ஒரு எம்.எல்.ஏ ரேஞ்சுக்கு நிக்கவெச்சிப் பாக்காம இந்தக் கட்ட போய் சேராது. அது மட்டும் நிச்சயம்.”

கண்ணில் பற்றி எரிந்த கனவுடன் அவனது அப்பா பேசியது சாந்திக்கு வியப்பாக இருந்தது. புதிய மனிதர்கள். புதிய உறவு. புதிய இடத்துக்குப் போக ஆயத்தமாகவேண்டிய தருணம். பரவாயில்லை. ஓரளவு நல்ல குடும்பமாகத் தெரிகிறார்கள். ஒப்பீட்டளவில் சற்று வசதியானவர்களாகவும் கூட. ஆனால் விடாப்பிடியாக ஏன் பெயரை மாற்ற நினைக்கிறார்கள்?

“தப்பா நெனச்சிக்காதிங்கம்மா.. நம்மளுக்குத் தமிழ் தான் எல்லாம். எம்பேரு தமிழரசன். இவனுக்கு முத்துராமன்னு பேரு வெச்சது இவனோட அம்மா. மொத புள்ள பாருங்க.. அதத்தான் வெச்சித்தீரணும்னு கண்டிசனா சொல்லிட்டா. ரெண்டாவது புள்ளைக்கி தமிழ்க்கனல்னு தலைவர் வந்து பேரு வெச்சி முக்கா பவுன்ல செயின் போட்டுட்டுப் போனாரு. பொண்ணு பொறந்தா தமிழ்ச்செல்வின்னு வெக்கணும்னு நெனச்சேன். புள்ளையாயிட்டான். என்னோட மருவளா வரவளுக்குத் தமிழ்ப்பேரா இருக்கறதுதான் எங்களுக்குப் பெருமை, கௌரவம்.”

அப்பாவோ, அம்மாவோ இதற்கு லேசான மறுப்புத் தெரிவிக்கலாம் என்று சாந்தி நினைத்தாள். ஆனால் இருவருமே அமைதியாகத்தான் இருந்தார்கள். பரபரவென்று மேற்கொண்டு ஆகவேண்டியவை குறித்துப் பேசிவிட்டு, தை பிறந்ததும் திருமணம் என்று முடிவு செய்து, காப்பி சாப்பிட்டார்கள்.

“ஜனவரியில பாளையங்கோட்டைல ஒரு மாநாடு இருக்குதுங்க. இன்னும் தேதி முடிவாகல. அது தெரிஞ்சதும் சொல்லி அனுப்பறோம். அதுக்குப் பிரச்னை வராம கல்யாணத்தேதிய வெச்சிக்கங்க” என்று புறப்படும்போது முத்துராமன் சொன்னான்.

வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே வந்ததும் அம்மா அவளை இழுத்து திருஷ்டி கழித்தாள்.

“விடிஞ்சிதுடி ஒனக்கு. நல்ல எடம். மாப்ள படிச்சவரா இருக்காரு. கௌரவமான குடும்பம். அவங்கப்பாரு எவ்ளோ தன்மையா பேசுறாரு, பழகுறாரு பாத்தியா?”

“அதெல்லாம் சரிம்மா.. பேர எதுக்கு மாத்தணுங்கறாங்க?”

“இந்தப் பேர வெச்சிக்கிட்டு என்னா சொகத்த கண்டுட்ட? மாத்திக்கிட்டுப் போயேன். நான் அவங்கம்மாவாண்ட விசாரிச்சிட்டேன். இந்தப் பொண்ணு ஓகே ஆனா வள்ளி மயில்னு பேரு வெக்கறதா அவங்கப்பாரு முடிவு பண்ணியிருக்காராம். அதுவும் சாமி பேருதான். நல்லா இருக்கில்ல?”

வள்ளிமயில். அட! இது என்ன பெயர்? அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் சாந்தியை விடவுமா என்று தெரியவில்லை. முத்துராமன் தன்னை எப்படிக் கூப்பிடுவான்? வள்ளி என்றா? மயில் என்றா?

சாந்தி அனிச்சையாக எழுந்து கண்ணாடி முன் சென்று நின்று சில வினாடிகள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய பேச்சுவார்த்தைகளோ, விவாதங்களோ, அபிப்பிராய மாறுதல்களோ இல்லாமல் சுமுகமாகத் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது அவளுக்கு மிகுந்த வியப்பைக் கொடுத்தது. நேற்று வரை நினைத்துப் பார்க்கவில்லை. எல்லாம் சடாரென்று கூடி வந்து, முடிந்துவிட்டது.

இனி என்ன? எக்மோரிலிருந்து சைதாப்பேட்டை. இருபத்தி மூணு சி இருப்பதாக அப்பா சொன்னார். ஏறி குந்திக்கினா அர அவரு. அவ்ளதானே?

“த.. பஸ்ஸ¤ இன்னாத்துக்கு? அதான் மாப்ள பைக்கு வெச்சிக்கிறாருன்னு சொன்னாங்கல்ல?” என்றாள் அம்மா.

தன் மனத்தில் முத்துராமனும் அம்மாவின் மனத்தில் அவனுடைய பைக்கும் சரியாகப் பொருந்தி அமர்ந்தது பற்றி யோசித்துக்கொண்டே வெளியே வந்தாள் சாந்தி.

  • தொடங்கியவர்

அத்தியாயம் மூன்று

வட்டச் செயலாளர் தூங்கி விழித்தபோது மணி மூன்றாகியிருந்தது. அவரைப் பார்ப்பதற்கு முத்துராமன் வந்திருப்பதாகப் பையன் வந்து சொன்னான். இப்ப நான் எங்க இருக்கேன் என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். தூங்கி எழும்போதெல்லாம் வந்துவிடுகிற குழப்பம். யாரும் கேட்பதற்கில்லை என்கிற சுதந்தரத்தில், வயசுக் காலத்தில் கையில் புரளத் தொடங்கியிருந்த காசு கொடுத்த தன்னம்பிக்கையில், தன் வாழ்வில் அவர் செய்துகொண்ட புதிய ஏற்பாடு தொடக்கத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில்தான் இருந்தது. தொழில் சிறந்த காலம் அது. சைதாப்பேட்டையின் காய்கறி மார்க்கெட் அநேகமாக அவரது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஓடுகிற லாரிகளும் இறங்குகிற சரக்குகளை அடுக்கிப் பிரிக்கிற இடமும்.

பஜார் அப்போது பெரிய அளவில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துணிக்கடைகள். வீராச்சாமி முதலியார் நாட்டு வைத்தியக் கடை. பிராந்தியத்தில் ஒரிஜினல் சிட்டுக்குருவி லேகியம் விற்றுக்கொண்டிருந்த ஒரே வியாபாரி. அங்கே அரிசி மண்டி. இங்கே ஒரு பலசரக்குக் கடை. ஒரு ஹோட்டல் திறந்தால் லாபம் இருக்கக்கூடும் என்று வட்டச் செயலாளர் நினைத்தார்.

அடச்சே சும்மா கெட என்று அவருடைய அப்பா சொன்னார். ‘நம்மூர்ல ஓட்டல்ல துண்றவன் எத்தன பேரு? ஐயமாருங்க ஏரியா இது. காப்பி க்ளப்பு போடுறியா? செய்யின்னுவேன். ஆனா நம்மாளுங்க போடுற காப்பிய கழுனித்தண்ணின்னுடுவானுக. திராவகம் மாதிரி ஸ்டிராங்கா காப்பி போடத்தெரிஞ்ச ஆளு ஒருத்தன புடி மொதல்ல. அப்பால ஓட்டல் தொறப்பியாம்.’

ஆனால் வட்டச் செயலாளருக்குத் தன் தந்தையின் கணிப்பு காலம் புரியாதது என்று தோன்றியது. சண்டை போட்டுப் பணம் வாங்கி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நூறடி தொலைவில் ‘இனிய தமிழ் அசைவ உணவகம்’ என்று போர்டு போட்டுக் கடை விரித்தார்.

அப்போது அவர் வட்டச் செயலாளர் இல்லை. வெறும் தொண்டர். இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் கோஷமிட்டுக்கொண்டு பெருமாள் கோயில் தெருவுக்குள் போய் அழிப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். ஹிந்தி வாத்தியார் ஒருவரின் வீட்டு வாசலில் இருந்த டியூஷன் போர்டு தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை. தவிரவும் தார் கொண்டு அழிக்க அதில் ஏதுமில்லை. தண்ணீர் தெளித்தால் அழியும் சாக் பீஸ் எழுத்துகள். ஆகவே அவர் ஹிந்தி வாத்தியாரை மட்டும் அடித்துவிட்டு நேரே போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்குப் போய் தயாராக இருந்தார்.

என்ன துரதிருஷ்டம்? தன்னை அடித்த ஒருவன் மீது புகார் கொடுக்கவேண்டுமென்று தோன்றாதா ஒருவருக்கு? ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஹிந்தி வாத்தியார் புகார் கொடுக்க வராத காரணத்தால் சிறை செல்லும் எண்ணம் வீணாகி, துக்கத்தைப் போக்கிக்கொள்ள அன்றிரவு பாரகன் டாக்கீஸ¤க்குப் போனார். ராஜ் கபூர் நடித்த படம். நர்கீஸ¤ம் ராஜ் கபூரும். எத்தனை அருமையான ஜோடி! லயித்துப் பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிவிட்டார்.

பிற்பாடு நிறைய கூட்டங்களில் தோரணம் கட்டி, கைக்காசைச் செலவழித்து உணவுப் பொட்டலங்கள் போட்டு, போஸ்டர் ஒட்டி, தலைவர் வந்தபோது ஓடிச்சென்று புதிய செவனோக்ளாக் பிளேடால் புறங்கையில் கீறி ரத்தத் திலகமிட்டுப் படிப்படியாக மேலுக்கு வந்தார். பேசத் தெரிந்திருந்தது. உணர்ச்சி கொப்பளிக்க. நரம்புகள் புடைக்க. கண்களில் நீர் மல்க. அவரை வட்டச் செயலாளராகக் கட்சி மேலிடம் நியமித்தபோது காய்கறி மார்க்கெட்டில் அவர் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்தார்.

எப்போதுமே முதலில் தொடங்குகிற எதுவும் எப்படியோ ஜெயித்துவிடுகிறது. காய்கறி மார்க்கெட்டுக்கென்றே அவர் ஓட்டத்தொடங்கிய லாரிகளைப் போல. பேட்டையின் முதல் அசைவ உணவகமாக அவர் தொடங்கிய இனிய தமிழைப் போல. மகன் தேறிவிட்டான் என்று அவரது தந்தை நிம்மதியாகக் கண்ணை மூடினார். வட்டச் செயலாளர் துணிந்து தன் வாழ்வில் இரண்டாவதாக ஒரு பெண்ணுக்கு இடமளிக்க முடிவு செய்து கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியிலிருந்து அழைத்து வந்தார்.

அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு பிள்ளைகள். அப்புறமெதற்கு இரண்டாவது என்று தெரிந்தவர்கள் கேட்டார்கள். செயலாளர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. பிரமாதமான காதலில் விளைந்த திருமணம் இல்லை அது. ஆனாலும் அது ஓர் அவசியம் என்று அவர் நினைத்தார். தவிரவும் பகுதியில் அதற்குமுன் யாரும் இரண்டாவது சம்சாரம் என்று வைத்துக்கொண்டிருக்கவில்லை. வியாபாரத்தைப் போல வாழ்க்கையும் ஒரு புதிய திருப்பம் காணும் என்று அவர் எண்ணியிருந்தார்.

மாறாக, பேட்டையில் அவருடைய செல்வாக்கு பலபேரால் பங்கிடப்படத் தொடங்கியிருந்தது. தொலைவில் தெரியும் லாரியின் முகப்பு விளக்கு மாதிரி இருக்கும். சடாரென்று பாய்ந்து கடந்து போய்விடுவார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே அவருக்குப் புரியவில்லை. அவர் நீண்டகாலமாக வட்டச் செயலாளராக இருந்தார். அந்தப் பதவிக்குப் பிரச்னை இல்லை. ஆனால் மேலும் மேலுக்கு வரவிடாமல் தடுப்பது எது? வாழ வந்த முதல் மனைவி, ஆள வந்த இரண்டாமவளை அங்கீகரித்துவிட்டாள். மகன்கள் இருவரும் தலையெடுத்துவிட்டார்கள். தொழில் பெருகியிருக்கிறது. பணம் பெருகியிருக்கிறது. ஆனாலும் கட்சி தன்னை உரிய முறையில் பெருமைப்படுத்தவில்லை என்கிற எண்ணம் மட்டும் அவருக்கு இடைவிடாமல் அரித்துக்கொண்டிருந்தது. ஏதாவது செய்யவேண்டும். அத்தனை பேரும் கவனிக்கும் விதத்தில். கட்சி கொண்டாடும் விதத்தில். அடுத்த தேர்தலிலாவது ஒரு சீட் கிடைக்கிற விதத்தில்.

என்ன செய்யலாம்? தனது அடிப்பொடிகளுடன் அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஒரு வார காலமாக. இரவு பகலாக. சிறியதொரு திட்டம் போலத் தோற்றம் தரவேண்டும். ஆனால் சில மாதங்களாவது இடைவிடாமல் நடந்தாகவேண்டும். பேசப்படத்தக்கதாக இருக்கவேண்டும். தனியொருவனாகத் தான் முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டுப் பெருமையைத் தலைவரின் காலடியில் சென்று வைத்துவிட வேண்டும். இது உதவும். காலடியில் வைக்கப்படும் பெருமைகளுக்குக் கண்டிப்பாகத் தலைவர் பதில் மரியாதை செய்துவிடுவார். என்ன செய்யலாம்?

அப்போதுதான் மாந்தோப்புக் காலனி வடிவேலு சொன்னான். அவருடைய எடுபிடி போல எப்போதும் உடனிருக்கும் தொண்டரடிப்பொடியன். "நம்ம முத்துராமன கூப்ட்டுப் பேசுங்க தலைவரே! உங்க கனவு ஒர்க்கவுட் ஆவணும்னா அவன் தான் சரி. திட்ட கமிஷன் துணைத்தலைவரு மாதிரி ஏகப்பட்ட ஐடியாங்க வெச்சிருக்கான். இன்னாத்துக்குடா இவ்ளோ யோசிக்கற, ஒடம்புக்கு ஒத்துக்காம, வயித்தால போயிடப்போவுதுன்னா சிரிக்கறான். மக்களுக்கு நல்லது செய்யணுங்கறான். நீங்க பாத்துப் பேசி திருத்தினாத்தான் உண்டு."

அதனால்தான் வரச்சொல்லி இருந்தார். முத்துராமன். அட, பெண் பார்க்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தான் அல்லவா? பார்த்துவிட்டானா? திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டதா?

"அப்பிடியா? பய என்னாண்ட சொல்லவேயில்லியே?" என்றான் வடிவேலு.

"த.. ஓட்றா.. போயி நம்ம சுண்ணாம்புக்கடைக்காரராண்ட விசாரிச்சிட்டு பின்வழியா ஓடியா. அவருதான் அவன் பொண்ணு பாக்கப் போவ வண்டி குடுத்து அனுப்பிச்சாரு. வெவரம் தெரிஞ்சிருக்கும்."

வடிவேலு தலைவரிடம் சில நுணுக்கங்களைக் கண்டு பிரமித்திருக்கிறான். அவற்றில் இதுவும் ஒன்று. தகவல் சேகரிப்பில் அவர் செலுத்துகிற ஆர்வம். எதிராளி எதிர்பாராத தருணத்தில் அதை லாகவமாக வெளிப்படுத்தி வியப்பூட்டும் அலகிலா விளையாட்டுக் குணம். வட்டம் என்றால் சும்மாவா? அவன் ஓடினான்.

அவர் எழுந்து சோம்பல் முறித்தார். தயாராக இருந்த காப்பியைக் குடித்துவிட்டு முகம் கழுவி குட்டிக்குரா பவுடரை மேனியெங்கும் தெளித்துக்கொண்டார். ஹேங்கரில் கழட்டி மாட்டியிருந்த வெள்ளைச் சட்டையை மீண்டும் எடுத்து அணிந்துகொண்டு தலையைச் சீவிக்கொண்டார். பழசாகிவிட்ட புதிய ஏற்பாடு, அவர் வெளியே கிளம்புகிறாரா என்று கேட்டது.

"அட ஆமா ஒரு முக்கியமான இது.. ஆறு மணிக்குள்ளார வந்துருவேன்." என்று சுவரைப் பார்த்து பதில் சொன்னார்.

"நைட்டுக்கு சமைக்கணுமா வேணாமான்னுதான் கேக்குறேன். நீங்கபாட்டுக்கு இங்க வரேன்னிட்டு அங்க போயிட்டிங்கன்னா நாளைக்கு பழையத யாரு திங்கறது?"

சொல்வதற்கில்லை. டிபன் பாக்ஸில் போட்டு அந்த வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவாள் என்று அவருக்குத் தோன்றியது. எத்தனைக் காலமானாலும் பெண்கள் சில விஷயங்களில் மாறுவதே இல்லை. தவிரவும் வட்டச்செயலாளர் என்கிற பதவியையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அவர் கண்டுகொள்ளாத மாதிரி வெளியே வந்தார். வாசலில் காத்திருந்த முத்துராமன் அவரைக் கண்டதும் சட்டென்று எழுந்து வணக்கம் சொன்னான்.

"நல்லாருக்கிங்களா தலைவரே? வரசொன்னிங்கன்னு சொன்னாங்க."

"வாய்யா மாப்ள.. எப்பிடி இருக்கா நம்ம மருமவப் பொண்ணு வள்ளி மயில்?"

முத்துராமன் முகத்தில் மெல்லிய வியப்பும் சந்தோஷமும் வெளிப்பட்டது. காட்டிக்கொள்ளாமல் ‘ஆமா தலைவரே. நீங்கதானே சொல்லியிருக்கிங்க? நம்மாளுங்க கூட தமிழ்ப்பேரு வெக்கலைன்னா வேற எவன் வெப்பான்னு?’

"ரொம்ப கரெக்டு. எல்லாம் கேள்விப்பட்டேன். உன் கல்யாணத்த நான் நடத்திவெக்கறேன். எப்ப வெச்சிருக்காங்க?"

"ஜனவரில இருக்கும் தலைவரே. டேட்டு நான் அப்பால சொல்றேன்னிருக்கேன். மாநாடு வருதில்ல? அதுக்கு பாதிப்பில்லாம பாத்துக்கணும்னிட்டு ஒரு இது.."

"அதுவும் செரிதான். கட்சிக்காரனுக்கு சொந்த சந்தோசம், சொந்த துக்கமெல்லாம் ரெண்டாம்பட்சம். உங்கப்பா அந்தக் காலத்துல மூணு மாசத்துக்கு ஒருதபா தான் வூட்டுக்கே போவாரு, பாவம். செரி அத்தவுடு. ஒரு முக்கியமான காரியம். அதான் உன்னிய கூப்ட்டுவுட்டேன்."

"சொல்லுங்க தலைவரே..!" முத்துராமன் கவனமுடன் அவரை நெருங்கி, கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

வட்டச் செயலாளர் சுற்றுமுற்றும் பார்த்தார். "ம்ம்.. இங்க வேணாம்.. வா, நாம நம்ம ஆபீசுக்குப் போயிரலாம்.." என்று அவன் தோளில் கைவைத்து அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.

முத்துராமனுக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால் தலைவர் தன்னைத் தனியே அழைத்துச் சென்று விவாதிக்க விரும்புவார்? கண்டிப்பாக அவன் மேலே வரப்போகிறான். சந்தேகமில்லை. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லவேண்டும். எல்லாம் பெண் பார்த்துவிட்டு வந்த ராசி என்று சந்தோஷப்படுவாள்.

ஒரு வேளை அதுதான் உண்மையும் கூடவோ? இருக்கலாம். அவனுக்கு ஒரு நடை எக்மோர் சென்று சாந்தியை இன்னொருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. சே, வள்ளி மயில்.

அத்தியாயம் நான்கு

இனிய தமிழ் அசைவ உணவகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து, அதன் மேல் மாடியின் பின்புறம் அமைந்திருந்த வட்டச் செயலாளரின் அலுவலக அறையை எடைபோட்டுவிட முடியாது. ஸ்தாபிதம் 1967 என்கிற காரை பெயர்ந்த புடைப்பு எழுத்துகளைப் போலவே அவரது அறையும் அநேகமாகக் கண்ணில் தென்படாது. உடைந்து, கால் ஆடும் மேசைகளும் உட்புறம் பச்சை மிகுந்த தம்ளர்களும் அழுக்கும் ஈரமுமாகக் கால்வைக்க முடியாத அளவுக்குப் பராமரிக்கப்படுகிற கைகழுவும் இடமும் பசியோடு உணவருந்த வருகிறவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சாப்பிட்ட பிரியாணிக்கோ, சாப்பாட்டுக்கோ பில் பணம் கொடுத்துவிட்டுச் சிறிய ஏப்பமுடன் பெருஞ்சீரகம் மென்றபடி வெளியேறும் கூட்டம் ஒருபோதும் அந்த மேல் மாடி அறை குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வட்டச் செயலாளர், வட்டச்செயலாளர் ஆன முதலாமாண்டு நிறைவை ஒட்டி அந்த அறையைக் கட்டினார். நாநூறு சதுர அடிகள் கொண்ட அறை. உள்புறம் முழுவதும் மரவேலைப்பாடுகள் செய்து சத்தத்தைத் தடை செய்திருந்தார். தரையில் விரித்திருந்த கம்பளம், கஸ்டம்ஸ் ட்யூட்டி கட்டாமல் எடுத்துவரப்பட்டது. ஒளிரும் சாண்டலியர் விளக்குகளும் கிரானைட் இழைத்த மேசையும் தந்தச் சிற்பங்கள் அணிவகுத்த குஷன் சோபாக்களும் இன்னபிறவும் அவரது ரசனைக்குச் சான்று சொல்பவை. இயற்கை அன்னையின் அழைப்புக்கு எனப் பிரத்தியேகமாக ஓர் ஓய்வறை இணைத்திருந்தார். பொதுவாக வட்டச் செயலாளர் செய்திகளை முந்தித்தரும் தினத்தந்தியை அங்கே அமர்ந்துதான் படிப்பது வழக்கம். முன்னதாக ஒவ்வொரு நாளும் அதிகாலை அவரது எடுபிடி வடிவேலு செய்தித்தாள் வந்ததும் ஸ்டேப்ளர் பின் அடித்து அங்கே ஷெல்பில் வைத்துவிடுவான். ‘எளவு அங்க குந்திக்கிட்டு படிச்சாத்தான் பேப்பர் படிச்ச திருப்தியே கிடைக்குது’ என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் வட்டம், பாத்ரூம் சுவர்களுக்கும் கிரானைட் பதித்த முதல் தமிழர் என்பது பலருக்கும் தெரியாது.

பட்டனை அழுத்தினால் நகர்ந்து வரும் மரத்தாலான மதுவறை, பணம் அடுக்கப் பிரத்தியேகமாக ஒரு கல் சதுரம், ரெக்கார்டிங் கருவி பொருத்தப்பட்ட ரகசியச் சுவர் என்று வளமான எதிர்காலத்தை உத்தேசித்து நிறைய சௌகரியங்கள் செய்துவைத்திருந்தார். தேர்ந்தெடுத்த சிலரை மட்டுமே தன் அலுவலக அறைக்கு அழைப்பார். விவாதிப்பவை எதுவும் வெளியே போகலாகாது. வட்டம் என்பவர் திட்டங்களின் நாயகன். அப்படித்தான் வருபவர்கள் நினைக்கவேண்டும். அதுதான் அவரது விருப்பம். என்றைக்கு இருந்தாலும் எம்.பி ஆகப்போகிறவர். என்றைக்காவது ஒருநாள் மத்திய அமைச்சராகாமல் உயிர்விடப் போவதில்லை. தவிரவும் பிராந்தியத்தில் மிகப்பெரிய லாரி முதலாளி. என்ன குறைச்சல்? ஆங்.. கொஞ்சம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். கனவின் பெரும்பகுதி வெற்றி அதில் இருக்கிறது. எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக்கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.

உலகம் பார்ப்பதற்கு ஒளி விளக்கு ஏற்றப்பட்ட இரண்டு கட்டு வீடு. தழையத் தழையத் தமிழ்த்தாலியும் நெற்றி நிறைத்த குங்குமமும் அணிந்த மனைவி. வருபவர்களுக்கு அங்கே வாழை இலை போட்டு அவசியம் உண்டு வீட்டுச் சாப்பாடு. அம்மா கையால சாப்ட்டு எத்தினி நாளாச்சு என்று உறிஞ்சி உண்டவர்களில் பெரும்பாலானோர் அவரது இன்னொரு சிறிய இல்லத்துக்கு வரக்கூடியவர்கள் இல்லை. அதற்கொரு தனித்தகுதி வேண்டும். அதிலும் விஞ்சியவர்களை மட்டுமே பொதுவாக அவர்தம் பிரத்தியேக அலுவலகத்துக்கு அழைப்பார்.

முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. அவனுக்கு வட்டத்தைத் தெரியும். கூட்டங்களில் பார்த்ததும் தோளில் தட்டி நலம் விசாரிக்கிற வட்டம். அப்பா எப்படி இருக்குறாரு என்று அன்புடன் இரண்டு சொற்கள். வீட்டுக்கு அழைத்ததில்லை. அதுவும் இரண்டாவது வீட்டுக்கு? வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இரண்டு இனிய இல்லங்கள் பற்றியும் மூன்றாவதான அந்த ரகசிய அலுவலகம் குறித்தும். என்றைக்காவது ஒருநாள் வட்டத்தின் அன்பு வட்டத்துக்குள் வரமாட்டோமா என்பதுதான் அவனது நீண்டநாள் ஏக்கமாக இருந்தது. ஆனால் விதி அவனை நகரச் செயலாளரைத் தாண்டவிடாமல் அடித்துக்கொண்டிருந்தது.

ஒரு சமயம் விளம்பர டிசைன் ஒன்றை வட்டத்திடம் காட்டி ஒப்புதல் பெறவேண்டியிருந்தது. நானே கொண்ட்டுபோய் காட்டிட்டு வந்துடறேங்க என்று அவன் நகரச் செயலாளரிடம் சொன்னான். உண்மையில் அப்போது முத்துராமனுக்கு உள்நோக்கம் ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் நகரம் கண்டிப்பாக மறுத்துவிட்டது.

"இந்தாபாரு முத்துராமா. நீ அரசியல்ல நாலு வருசமா இருக்க. நான் ஏளு வருசம். நமக்குள்ளார கண்ணாமூச்சியே வேணாம். இன்னும் மூணு வருசம் நீ எனக்கு சேவ செய்யி. அப்பால நீ வட்டத்தாண்ட போவலாம். அநேகமா அப்ப நான் வட்டமா இருப்பேன். உன்னிய நல்லாத் தெரிஞ்சவனா, லச்சணமா வாய்யான்னு கட்டிப்புடிச்சி வரவேற்பேன். என்னா நாஞ்சொல்றது புரியுதா?"

முத்துராமனுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. இது அரசியல். மின்சாரத்தைவிடவும் அபாயம் பொருந்தியது. நெருங்குவதில் கவனம் வேண்டும். தொடுவதில் மேலும். சற்று அசந்தாலும் உருக்கிச் சுருட்டி எறிந்துவிடும். ஆகவே தவறிழைத்துவிட்டவன் போல் வாய்பொத்திப் பின்வாங்கிப் போய்விட்டான்.

என்றாவது ஒருநாள். எப்போதாவது ஒரு தருணம். கண்டிப்பாகத் தான் மேலே வந்தே தீரவேண்டும் என்பதே அவனது லட்சியமாக இருந்தது. படித்து முடித்து ஆபீசராகும் உத்தியோகமில்லை இது. தொண்டு செய்துதான் வந்தாக வேண்டும். அவனுக்குத் தெரியும் அது. எதற்கும் சளைக்காமல்தான் இயங்கிக்கொண்டிருந்தான். தீவிரமாக. மிகவும் உக்கிரமாக. அதிகநாள் அவகாசம் தேவைப்படும் என்று அவன் நினைக்கவில்லை. எப்படியும் பத்து வருடங்களுக்குள் தானொரு எம்.எல்.ஏ. ஆகிவிட முடியும் என்றுதான் நினைத்தான். பின்புலம் இல்லை. அதனாலென்ன? ஆர்வம் இருக்கிறது. கவனம் இருக்கிறது. நோக்கத்தில் திசை தடுமாறாத உறுதி இருக்கிறது. போதாது?

ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் அவன் காத்திருந்தான். ஒரு வகுப்பில் படிக்காமல் கடந்து மேலே போகிற சந்தர்ப்பம். திறமைக்குக் கிடைக்கிற அங்கீகாரம் போல உழைப்புக்கும் ஒருநாள் கிடைக்காமலா போய்விடும்?

"நீ வேலைக்காரன்னு உன்னிய கூப்புடல முத்துராமா. நீ மூளைக்காரன். அது எனக்குத் தெரியும். நம்ம பசங்களும் பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கானுக. போன எலக்சன் டயத்துல வீட்டுக்கு வீடு குங்குமச் சிமிழ் குடுத்தப்ப, நீதான் உள்ள குங்குமத்த ரொப்பி, ஒரு வெள்ளி காயின் வெச்சிக் குடுங்கன்னு சொன்னியாம்? வடிவேலு சொன்னான். என்னாமா ஒர்க் அவுட்டு ஆச்சு பாத்தல்ல? அதான். அதான் வோணும் எனக்கு. பொம்பளைங்கள கவர் பண்ணீரணும்டா. செலவு ஒரு மேட்டரே இல்லன்னு வையி. எனக்கு இப்ப என்னா வோணும்? ஒரு கவன ஈர்ப்பு. ஜனவரில கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்கப்போவுது. மெயின் அஜண்டா இன்னா தெரியுமா? சென்ட் ரல் மினிஸ்டிரில ரெண்டு சீட்டுக்கு பை எலக்சன் வருதில்ல? அதுக்கு யாரப் போடலாம்னிட்டு முடிவு பண்ணப்போறாங்க.."

முத்துராமனுக்குக் குழப்பமாக இருந்தது. இவர் என்ன சொல்ல வருகிறார்? எப்படி இவரால் மத்திய அமைச்சர் பதவி வரை யோசிக்க முடிகிறது?

"புரியிதுரா.. நீதான் இன்னும் வளரணும். தபாரு.. லைனுகட்டி சொல்லிக்கினே வரேன். கரெக்டா பாயிண்ட புடிச்சிக்கிட்டே வா. புரியும். ரெண்டு சீட்டு அங்க வேகண்டு. ஆள் போட்டாவணும். யார போடுவாங்க? இது தினத்தந்தி படிக்கற எல்லாருக்கும் தெரியும். நான் அத்த சொல்லல. ரெண்டு தலைங்க புச்சா கேபினட்டுக்குள்ளார போச்சின்னா அந்த போஸ்டுக்கு இன்னும் ரெண்டு நவுரும். யார் அந்த ரெண்டு? ராஜ்ய சபாவுல வெத்துக்கு பல்லு குத்திக்கினு குந்திக்கினுகீதுங்களே, அதுங்கள்ள ரெண்டு. ஏன்னா நமக்கு லோக் சபா எம்பி பவர் வேற இல்ல. அப்பிடியே நவுந்து நவுந்து வந்திச்சின்னு வையி. எப்பிடியும் எங்கயாச்சும் அதே ரெண்டு சீட்டு வேகன்சி வந்துதான் ஆவும். என்னிய ராஜ்ய சபா எம்பி ஆக்குவாங்கன்னு கூட நான் எதிர்பார்க்கல. அட்லீஸ்டு, அதுக்கு பக்கத்து வூட்டு காம்பவுண்டு செவுரு மேல குந்திக்கற மாதிரியாச்சும் ஒரு சான்ஸ் இப்ப கிடைச்சாவணும். இத்த வுட்டேன்னு வையி. அடுத்த ரெண்டு வருசம் ஜென்ரல் எலக்சன் வர்ற வரைக்கும் இப்பிடியே வட்டமா சுத்திக்கினு இருக்கவேண்டியதுதான்."

முத்துராமனுக்குப் பாதி புரிந்து, பாதி புரியாதது போலிருந்தது. ராஜ்ய சபா எம்.பிக்களில் இருவர் அமைச்சரானாலும் அங்கு வேகன்ஸி ஏற்பட சந்தர்ப்பம் இல்லையே? ஆனால் மேற்கொண்டு கேள்வி கேட்டு வட்டத்தை டென்ஷன் ஆக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ‘சொல்லுங்க தலைவரே, நான் என்ன செய்யனும்?’ என்றான் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு. வட்டம் எம்பி ஆகிறாரோ, என்னமோ, ஓரடுக்கைத் தாண்டித் தன்னுடைய தொடர்பு விரிவடையப்போகிற சந்தோஷம் அவனுக்குள் பரவியிருந்தது.

"எனக்கு ஒரு ஐடியா வோணும் முத்துராமா. மாவட்டச் செயலாளராண்ட நமக்கு நல்ல கனெக்சன் இருக்குது. வெவசாய அமைச்சரும் வேண்டப்பட்டவருதான். ஆனா பாரு.. பாத்தா நல்லாருக்கியான்னு கேக்கறாங்களே தவிர, எனக்கு நல்லது செய்யணும்னு அவிங்களுக்குத் தோணமாட்டேங்குது. நான் ஒருத்தன் முக்கியஸ்தன்னு புரியவெக்கணும். எனக்கு அப்பால வந்த நாலு பயலுவ மேல பூட்டானுங்க. இருவது வருசமா கட்சில இருக்கேன். என்னா சொகத்த கண்டுட்டேன்? இந்த நெனப்பு சாஸ்தியாயிட்டா தூக்கம் வரமாட்டேங்குது முத்துராமா. பதவிசொகம்னு இல்ல. எதுக்காக இத்தினி வருசம் உழைச்சோம்னு ஒரு கேள்வி வருதில்ல? சாமி இல்லன்னு சொல்லிட்டு, சாமி சொன்னமாதிரி, கடமைய செய்யி, பலன எதிர்பார்க்காதன்னு மேலிடம் சொன்னா கேக்கமுடியுமா?"

முத்துராமனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அதுநாள்வரை நான்கு வார்த்தைகளுக்கு மேல் மொத்தமாகப் பேசியிராத வட்டச் செயலாளர். இப்படிக் கூப்பிட்டு சோபாவில் உட்காரவைத்துவிட்டு எதிரே மேசைமீது சம்மணமிட்டு அமர்ந்து நூறு வருடம் பழகியவர்போல் பேசுகிற மனிதர். எத்தனை உரிமை, எத்தனை சுவாதீனம்? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் பேட்டையில் முத்துராமனின் மதிப்பு அந்தக் கணமே பலமடங்கு அதிகரித்துவிடும்.

"வேணாம் முத்து. உன்னோட வெச்சிக்க. நீ ரகசியம் காப்பேன்ற நம்பிக்கையில சொல்லுறன்.. எனக்கு ஒரு டக்கர் ஐடியா மட்டும் குடு. அது ஒர்க் அவுட்டு ஆயிருச்சின்னா நான் எங்கியோ போயிருவேன். எனக்கு ஹெல்ப் பண்ண உன்னிய மறக்காம கண்டிப்பா நல்லது செய்வேன். மாநாட்டுக்கு முன்னால நாம செய்யப்போற காரியம் ஹிட்டாகி, தலைவராண்ட போவணும். அட எவண்டா அவன், சூப்பரா ஒரு வேலை பண்ணிட்டானேன்னு அவரு ஆச்சர்யப்படணும். இன்னமே உப தேவதைங்கள நம்பி பிரயோசனமில்லன்னு முடிவுக்கு வந்துட்டேன்.."

முத்துராமனுக்கும் அதுவே சரியென்று பட்டது. அவனளவில் நகரம் ஒரு உப தேவதை. வட்டம் தேவதை. நாளைக்கு வட்டம் உபதேவதையாகும். மாவட்டம் தேவதையாகும். தேவதைகளின் வழியே தெய்வத்தை அடையவேண்டும். நீண்ட பயணம்தான். ஆனாலும் தொடங்குவதற்கு இதோ ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

பரபரவென்று யோசித்தான். ஒரு செயல். ஒரே ஒரு செயல். ஆனால் ஒட்டுமொத்த கட்சியாட்களின் கவனத்தையும் கவரவேண்டும். தலைவர் வரை சென்று தாக்கவேண்டும். வட்டம் சொன்னதுபோல, அந்தச் செயலின் வெற்றியை அவர் தலைவரின் காலடியில் சமர்ப்பித்து வணங்கும்போது அவருக்கு டில்லி செல்லும் விமானத்தில் ஒரு டிக்கெட் கிடைத்தாக வேண்டும். என்ன செய்யலாம்?

வட்டம் மேசையிலிருந்து கீழிறங்கி, நாற்காலிக்கு வந்தார். முத்துராமன் சடாரென்று எழுந்து அவரருகே சென்று கைகளைப் பிடித்தான்.

"ஒரு ஐடியா தலைவரே!"

"சொல்லு! சொல்லு!" என்று பரபரப்பானார்.

"கொசு!" என்றான் முத்துராமன்.

  • தொடங்கியவர்

அத்தியாயம் ஐந்து

அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அண்டு நற்பணி மன்றம் (ரிஜிஸ்டர்டு) போர்டு வைத்துக் கொடி பறந்த தூண் அருகே வெளேரென்று வேட்டி கட்டி இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். பக்கவாட்டு ஸ்டாண்டு போட்டு நிறுத்திய பைக்கின் முன்புறம் சிறிதாகக் கட்சிக்கொடி பறந்தது. பன்னிரண்டு வருடங்களாகப் பறக்கிற கொடி. ஒரு லைசென்ஸின் பணியைச் செவ்வனே செய்யும் சிறந்த மாற்று. பின்னால் வந்து நின்ற வெள்ளை நிற அம்பாசிடரிலிருந்து வட்டச் செயலாளர் இறங்கினார். ஒரு பக்கத் துணையாக மேலும் நான்கு பேர் அவர் பின்னால் இறங்கிவந்து நின்றார்கள்.

இறங்கியவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். நூறு, நூற்றைம்பது குடிசைகள் இருக்குமா? அளவெடுத்துத் தைத்தது போல் முன்புறம் சரிந்த கூரைகள். வீதியில் காய்ந்த அலுமினியப் பாத்திரங்கள், துணிகள். எல்லாச் சந்துகளிலிருந்தும் புறப்பட்டு ஓடும் நிஜார் மட்டும் அணிந்த சிறுவர்கள். எங்கோ தூரத்தில் கேட்கிற பெண்கள் சண்டையொலி. அந்தப் பக்கம் ஓடுகிறது ஆறு. அடையாறு என்பார்கள். இனியும் வெட்டியெடுக்க மண் இல்லாத காரணத்தால் லாரி முதலாளிகளால் கைவிடப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. முத்துராமன் சொல்லியிருந்தான். ‘வந்து பாருங்க தலைவரே.. துணி துவைக்கறவங்க பெரும்பாலும் கல்லு தேடுறதே கெடியாது. அப்படியே தரையில நாலு குமுக்கு குமுக்கி அலசிப் புழிஞ்சி போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க. அப்பால எங்கேருந்து தண்ணி தங்கும்?’

ஆ, ஏழைகளின் பிரச்னை. எத்தனை யுகங்களாக ஒரு ஜீவநதி போல் தழைத்துக்கொண்டிருக்கிறது? ஒரு சந்தர்ப்பம் கொடுத்து நாலு பேரைக் கூப்பிட்டு வைத்துப் பேசச் சொன்னால் மணிக்கணக்கில் பொழிந்து தள்ளிவிடுவார்கள். தேர்தல் தோறும் நடக்கிறதுதான். கேட்டீர்களா? இதெல்லாம் எப்படித் தீரும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்கு வோட்டுப் போட்டாலொழிய உங்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வேறு யாருமில்லை. ஆகவே என்னருமை மக்களே, மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்.

ஒரு சமயம் வட்டம், மாவட்டத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மாவட்டம் பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்.

"இந்தா பாருய்யா.. ஒரு லாஜிக்கு இருக்குது. கஸ்டப்படறவன்னு நாலு பேரு இல்லன்னா நாமல்லாம் தலைல துண்டு போட்டுப் போய்க்கினே இருக்கவேண்டியதுதான். குறிப்பா படிக்காதவன். யோசிச்சிப் பாரு.

படிச்சவன் எத்தினி பேரு நமக்கு வோட்டுப் போடுறான்? வுட்டா நெத்தில கொழச்சி நாமத்த போடுவான். ஒலகத்துல ஒரே ஒரு நியாயம்தான் நெரந்தரம். கடல் நெறைய மீனு இருக்கறது நாம திங்கறதுக்காக.

கோழியும் ஆடும் கூட்டம் கூட்டமா உற்பத்தி ஆவுறது நாம திங்கறதுக்காக. கோழிக்கு தீவனம்தான் போடுவ. கோயிலா கட்டுவா? அதே மாதிரிதான். எலக்சன் டயத்துல சில்வர் குடம் குடு. சிரிப்பு மாறாம கைகூப்பு.

ஆத்தா நீதான் வாழவெக்கணும்னு கால்ல வுழு. தப்பே இல்ல. ஆனா அத்தோட நிப்பாட்டிக்க. உன்ன முன்னேத்தறேன் பேர்வழின்னு போயி உஸ்கூலு தெறக்கறேன், ஆட்டோ வாங்கித்தரேன்னு ஆரமிச்சன்னா, அவன் காலு மேல காலு போட்டுக் கேள்வி கேக்க ஆரமிச்சிருவான். நாலு வார்த்த அவன் இங்கிலீசுல பேசினான்னா உன் நெஞ்சு தாங்குமாய்யா? அடைகாக்கணும்யா.. அப்பிடியே அலுங்காம குலுங்காம வம்சம் வம்சமா அவங்கள இருக்கறபடியே அடை காக்கணும். அவ்ளோதான்.."

ஒரு காலத்தில் மாவட்டம் நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் வட்டமாக இருந்த காலம் அது. எப்போதும் ஏழெட்டு சீடர்கள் அவரைச் சுற்றி இருப்பார்கள். ஓய்வும் மூடும் வாய்த்தால் பொன்மொழிகளாக உதிர்த்துக்கொண்டே இருப்பார். நிறைய ரத்தினங்கள். நிறைய கெட்ட வார்த்தைகள். தடாலடி விமரிசனங்கள். அங்கே நக்கல் கொஞ்சம். இங்கே ஏக்கம் கொஞ்சம். அவருக்கும் கனவுகள் இருந்தன. யாருக்குத்தான் இல்லை? கழுதையாக மாறிக் காலமெல்லாம் சுமந்தேதான் தீரவேண்டியிருக்கிறது. சில சமயம் கழுதை உதைக்கும். சில சமயம் சுமந்த கனவை பத்திரமாக இறக்கிவைக்கும். அவர் மாவட்டமாகி, எம்.எல்.ஏவும் ஆகி அடுத்த வருடம் அமைச்சரே ஆகிவிடுவார் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வட்டம் பெருமூச்சு விட்டார். தன் கழுதைக்கு உதைக்க மட்டுமே தெரிந்திருந்த அவலத்தை நினைவு கூர்ந்ததன் விளைவான பெருமூச்சு அது.

"எலேய், ஓடுடா. முத்துராமன் வூடு எதுன்னு கேளு, கேட்டுக்கினு வா."

சட்டென்று தரையைத் தொட்டு உத்தரவிட்டார் வட்டம். இரண்டு பேர் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். இது ஒரு முயற்சி. அநேகமாக அவரது வாழ்நாளில் மேற்கொள்ளப்போகிற மிகப்பெரிய முயற்சி. அசுர முயற்சி என்பார்களே, அது. தானும் தனக்கு வேண்டியவர்களுமாக நாள் கணக்கில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதெல்லாம் இப்படி ஒரு யோசனை தோன்றியதில்லை. ஒரு குப்பத்தைத் தத்தெடுத்து முன்னேற்றுகிற யோசனை. முத்துராமன் என்கிற சாதாரணத் தொண்டன் கொடுத்த யோசனை. நல்லது. தொண்டர்கள் யோசிப்பவர்களாகவும் இருப்பது உத்தமம். ஆனால் தலைவர்களுக்காக மட்டும்.

"எலேய், அந்த முத்துராமன் டெய்லர் வேல தானே பாக்கறான்? சரியாத் தெரியும்ல?" என்றார் திரும்பிப் பார்த்து.

"ஆமா தலைவரே.. அதனாலதானே தையல் மிசின் வாங்கி எடுத்தாந்திருக்கோம்?" என்றான் ஓர் அடிப்பொடி.

"ஆங்.." என்று எங்கோ பார்த்து என்னவோ சிந்திக்கத் தொடங்கினார் வட்டம். முத்துராமன் பேசியவை அனைத்தும் அவருக்கு மீண்டும் செவிகளில் ஒலித்தன.

"அரசியல் முக்கியம்தான் தலைவரே. முழிப்போட இருக்கறது முக்கியந்தான். ஆனா அப்பப்ப நாம மக்கள் பக்கம் இருக்கம்னு காட்டிக்கத்தாவலையா? நம்மூருல அரசியல்வாதிங்களவுட பிரசிடெண்ட ஏன் மக்கள் தெய்வமா நினைக்கறாங்க? யோசிச்சிப் பாருங்க. மத்திய பிரதேசத்துல எவனானா ஒரு எம்.எல்.ஏ., எம்.பிக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு நினைக்கறிங்க? சான்சே இல்ல.. தலையெழுத்தேன்னு ஓட்டு போடுறான்.

அந்தம்மா யாரு அது.. ஆங், மேதா பட்கர்.. அவங்க பின்னாடி எத்தினி பேரு கூட்டம் கூட்டமா போறாங்க பாருங்க.. இன்னாத்துக்காக அந்தம்மா அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணும்? சொல்லுங்க பாக்கலாம்? காந்தி •பார்முலா தலைவரே.. என்னிக்கானாலும் •பெய்லியர் ஆவாத மேட்டர் அது. மக்களுக்காக நிக்கறேன்னு தெரிஞ்சாத்தான் அவன் நம்மள நம்புவான். ஓட்டுக்காக வரேன்னு தெரிஞ்சா முடிஞ்சவரைக்கும் கரந்துக்கிட்டு அனுப்பிரலாம்னுதான் பாப்பான்.."

வட்டத்துக்குப் புல்லரித்துப் போய்விட்டது. சாதாரண குப்பத்துவாசி. டெய்லராகப் பிழைப்பு நடத்துபவன். ஆனாலும் தவறாமல் தினத்தந்தி படிக்கிறான் போலிருக்கிறது. மேதா பட்கர்.. ஆங், தெரிந்த பெயர்தான்.

என்னமோ கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார் இல்லை?

"அதான் அந்த டேம் மேட்டரு தலைவரே. குஜராத்து, மத்தியபிரதேசம் நடுவால நர்மதா நதிமேல கட்றதா சொன்னாங்களே.. சர்தார் பட்டேலோ என்னமோ.."

அடச்சே, சர்தார் சரோவர். ஞாபகம் வந்துவிட்டது. என்ன அவஸ்தை இது. ஒரு தொண்டனின் உலக ஞானம் கூடத் தலைவருக்கு இல்லாமல் இருந்தால் பிறகு எப்படித் தான் பார்லிமெண்டுக்குப் போவது? தினசரி படிக்கும் தினத்தந்தியில் சினிமா பக்கங்களிலேயே புத்தி நிற்கிறது. மாற்றிக்கொள்ள வேண்டும்.

"வாங்க, வாங்க தலைவரே.. என்னாது இது சொல்லாம கொள்ளாம? ஒரு வார்த்த சொல்லிவுட்டிங்கன்னா நா வந்திருக்கமாட்டனா?" பதறிக்கொண்டு வந்து நின்றான் முத்துராமன்.

வட்டம் புன்னகை செய்தார். வண்டியிலிருந்து தையல் மிஷின் இறக்கப்பட்டது.

"வெச்சிக்க முத்துராமா.. ஒனக்குத்தான்"

கூட்டம் கூடிவிட்டது. வீதியில் நாற்காலி போடப்பட்டு தலைவர் உட்காரவைக்கப்பட்டார்.

"பாத்துக்கங்கடா.. ஊல ஒலகத்துல, தேர்தல் இல்லாத காலத்துல எந்தத் தலைவரு இப்படி நம்மளயெல்லாம் பாக்க வருவாரு? இந்த நெனப்பு எல்லார் மனசுலயும் எப்பவும் இருக்கணும்" என்றான் முத்துராமன்.

தலைவர் புன்னகை செய்தார். முத்துராமனின் அம்மா அவருக்கு காப்பித்தண்ணி எடுத்து வந்து கொடுத்தாள். அவனது தந்தை தள்ளாடி எழுந்து வந்து வணக்கம் சொன்னார்.

"நல்லா இருக்கிங்களா?’’

"ஐயா.. நீங்க உக்காருங்க.. நீங்க ஏன் எழுந்து வரணும்? நான் வரமாட்டனா?" என்று வட்டம் நம்பமுடியாத அடக்கம் காட்டிப் புல்லரிக்கச் செய்தார்.

"முடியலங்க.. சக்கர நோய்ன்னாங்க. அது என்னாவோ, என்ன எளவோ.. காலு ரெண்டும் வீங்கிக்கினு எளுந்து நடமாட முடியாம போயிடுச்சி. என்னிக்கிப் போய் சேரப்போறனோ.."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. டேய் வடிவேலு.. ஐயா யாரு தெரியும்ல? நம்ம கட்சிக்காக அந்தக் காலத்துல மாடா உழைச்சவரு.. நானெல்லாம் அரசியல் படிச்சதே இவங்ககிட்டல்லாம்தான்.." சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்சநேரம்.

முத்துராமன்தான் விஷயத்தை ஆரம்பித்தான். வட்டச் செயலாளர் வந்திருக்கும் விஷயம். கொசு ஒழிப்பு. யாரும் சிரிக்காதீர்கள். மிகப்பெரிய பிரச்னை அல்லவா அது? காலம் காலமாகப் பேட்டைவாசிகளை எத்தனை பாடு படுத்திவந்திருக்கிறது? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எத்தனை நூறு பேருக்கு இங்கே யானைக்கால் நோய் இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.

"மருந்து அடிக்கப்போறாங்களாமா?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

முத்துராமன் திரும்பிப் பார்த்தான்.

"ஆமா தல.. மருந்தடிப்பாங்க. மத்ததும் செய்வாங்க.. மூணு மாசம் டயம். நம்ம பேட்டைய தலைவரு சுவிட்சர்லாந்து மாதிரி மாத்திக்காட்டப்போறாரு பாருங்க.. டேய், நம்ம பேட்டைய தலைவரு தத்தெடுத்திருக்காருடா.. சொந்தக்காசுல அத்தினியும் பண்ணப்போறாரு.."

ஓவென்று சந்தோஷக் கூக்குரலிட்டது கூட்டம். சுவிட்சர்லாந்து எந்த நாட்டுக்குப் பக்கத்து நாடு என்று வட்டம் யோசித்துப் பார்த்தார். சரியாகத் தோன்றவில்லை. எதற்கு அதெல்லாம் என்று வேறு விஷயம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

அவரைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா பிரச்னை. இதுதான். இது ஒன்றுதான் இறுதி முயற்சி. இங்கே தொடங்குகிற ஓட்டம் பாராளுமன்றத்தில்தான் போய் முடியவேண்டும். சாதனை செய்க பராசக்தி. துணிந்து

எழுந்து அந்தக் குப்பத்தின் கொசுத்தொல்லையை ஒழிப்பதற்காகவும் இதர நலப்பணிகளுக்காகவும் பதினைந்து லட்ச ரூபாய் செலவிடவிருப்பதாக அறிவித்தார்.

கூட்டம் ஜோராகக் கைதட்டியது.

  • தொடங்கியவர்

அத்தியாயம் ஆறு

குவார்ட்டர் விட்டது போல கிர்ர்ரென்றிருந்தது முத்துராமனுக்கு. ஆல்பர்ட் தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்று நண்பர்கள் சொன்னபோது உடனே சாந்தியின் ஞாபகம் வந்தது பெரிய விஷயமில்லை.

தியேட்டர் வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்ததில்தான் அவன் திக்குமுக்காடிப் போயிருந்தான்.

பார்த்ததும் உடனடியாக ஒரு புன்னகை தருவதில் பிரச்னை ஏதுமிருக்கவில்லை. ஆனால் அடுத்தக் கணம் என்ன பேசுவது என்று புரியாமல் சற்றுத் திணறிவிட்டான். நல்லாருக்கியா என்று கேட்கலாமா? அபத்தம்.

பார்த்துவிட்டு வந்து மூன்று நாள்தான் ஆகிறது. அப்பா, அம்மா சௌக்கியமா? அது அதை விட அபத்தம். என்னமோ பிறந்ததிலிருந்து பழக்கம்போல் அப்படியெல்லாம் போலியாக விசாரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. சரி, படம் பாக்க வந்தியா? அது, எல்லாவற்றையும் விட. தியேட்டருக்கு வேறு எதற்கு வருவார்கள்?

அவனது திணறலை சாந்தி மிகவும் ரசிப்பது போல் பட்டது. அவளும் யாரோ ஒரு பெண்ணுடன் தான் வந்திருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று முத்துராமன் அவசரமாக, ‘ஒரு நிமிஷம்’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, தன்னுடன் வந்திருந்த நண்பர்களைத் தள்ளிக்கொண்டு பத்தடி பின்னால் போனான்.

‘மாப்ள, இவதாண்டா.. இவளத்தான் போய் பாத்துட்டு வந்தேன். ஜனவரில கல்யாணம்னு சொல்லியிருக்கு.’

‘கொய்யால.. கணக்காத்தான் இங்க படம் பாக்க வந்திருக்க’ என்று சந்தோஷத்தில் அவன் தோளைத்தட்டி, ‘அண்ணிய அறிமுகப்படுத்திவெச்சிருடா.. அப்பால மறந்துடப் போறாங்க’ என்றான் கதிர்.

சட்டென்று முத்துராமனுக்குப் பேசுவதற்கு ஒரு விஷயம் அகப்பட்டுவிட்டதுபோலத் தோன்றியது. வா என்று அவர்களைத் தள்ளிக்கொண்டு அவளருகே போனான்.

‘சாந்தி.. இது கதிரு. என் சிநேகிதன். இவன் ரஜினி ராம்கி. அவன் ஜெயச்சந்திரன்..’

‘டேய், போரும்டா.. நீ பேசிட்டிரு. நாங்க அங்க நிக்கறோம். படம் ஆரம்பிக்க பத்து நிமிஷம்தான் இருக்கு’ என்று சந்தர்ப்பம் அறிந்த சொந்தச் சகோதரன் ஒருவன் திரும்பி நடந்தான். நண்பர்கள் சிரித்தபடி நகர்ந்து போனார்கள்.

முத்துராமன் கண்டிப்பாக அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை. சினிமா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று கட்டாயப்படுத்தி அவனது நண்பர்கள் அழைத்துவந்திருந்தார்கள். தலைவர் படம். கண்டிப்பாக வெகு சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எல்லோரும் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த தலைவர். தனிக்கட்சியா, இருப்பதில் ஒன்றா என்று தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் அந்த விவாதங்கள் நடந்தபோது முத்துராமன் கருத்து சொல்லியிருக்கிறான். வருவதும் வராததும் அவர் இஷ்டம். அவருக்காகத் தான் புதிய கட்சியில் சேர முடியாது. ஆனால் படம் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கிற வழக்கத்தில் மாறுதல் இருக்காது.

அவனுக்கு அவனுடைய அம்மாவும் சித்தப்பாவும் தாத்தாவும் பல சமயம் அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். மாநகராட்சி மருத்துவமனையில் அவன் பிறந்தபோது, சொந்தக்காரப் பெண்கள் ஆளுக்கொரு கைத்தறிப் புடைவையை மடித்துக் கையில் வைத்துக்கொண்டு குழந்தையை எடுத்துக்கொள்ளத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். டாக்டரம்மா அவனை ஒரு பூச்செண்டு போல் ஏந்தி எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ வேகமாக அவனுடைய தந்தை ஓடி வந்தார்.

‘ஒரு நிமிசம் டாக்டரம்மா..’

பாய்ந்து வந்தவர் கையில் புத்தம் புதிய கட்சிக்கொடி. ‘குழந்தைய என்கிட்ட குடுங்க. எம்புள்ள மவராசன் மேல மொத மொத இந்தக் கொடிதான் படணும்’

யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காரக் குடும்பம்தான். தீவிரத் தொண்டர் வம்சம்தான். ஆனாலும் பிறந்த குழந்தையைக் கொடியில் ஏந்தும் அளவுக்கா விசுவாசம் இருக்கும்?

‘விசுவாசமில்ல டாக்டரம்மா.. எங்க சுவாசமே இதுதான்..’ முத்துராமனின் தந்தை, கையில் கிடந்த குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுத் தலைவரின் பெயரைக் காதில் சொல்லி, ‘வாழ்க’ என்றபோது டாக்டரம்மா சிரித்தார்.

‘கட்சியெல்லாம் இருக்கட்டுங்க. புள்ள பொறந்திருக்கான். நல்லா படிக்கவைங்க மொதல்ல. படிச்சி பெரியாளாவட்டும்.’

‘அ.. அதெல்லாம் கரீட்டா செஞ்சிருவம்ல? எத்தினி படிச்சாலும் எம்புள்ள எங்க கட்சிதான். என்னால போவமுடியாத உயரத்துக்கு அவன் போவப்போறான் டாக்டரம்மா. பாத்துக்கினே இருங்க.. இதே ஆசுபத்திரிய இன்னும் பெரிசா மாத்திக்கட்டி தெறப்பு விழாவுக்கு அவன் வந்து குத்துவெளக்கேத்துவான்!’

என்னென்னவோ பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். மனத்தில் முட்டி மோதிக்கொண்டிருந்த மகிழ்ச்சிக்கு சொற்களும் அர்த்தமும் முக்கியமில்லை. வெளிப்பாடு போதும். அவர் கண்ணில் தெரித்த பரவசம் டாக்டருக்குப் புரிந்தது. ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

முத்துராமன் பலமுறை கேட்ட அந்தக் கதை இப்போது நினைவுக்கு வந்தது. ஏனோ அதை சாந்தியிடம் சொல்லவேண்டும்போலிருந்தது. ஏதாவது பேச விரும்பினான். அன்பாக. அல்லது தன்னைப் பற்றி.

அவளைப்பற்றியும் கேட்கலாம். உட்கார்ந்து பேச அவகாசமில்லை. நண்பர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடக் கூடும். ஆனால் சடாரென்று கட்சிக்கொடியில் தன்னை வாங்கிக்கொண்ட தந்தையிடமிருந்தா தொடங்கமுடியும்?

‘எப்படி இருக்கே? படம் பாக்க வந்தியா?’

‘இல்ல.. எந்தங்கச்சி இங்க பாப்கார்ன் சப்ளை பண்ண வந்தா. அவள கூட்டிக்கினு போவலாம்னு வந்தேன்’

‘அட, பாப்கார்ன் பிசினஸ் பண்றிங்களா?’

‘இல்லல்ல.. செட்டியார் வூட்ல செஞ்சி பாகிட் பண்ணி குடுப்பாங்க. இவ எடுத்தாந்து இங்க போட்டுட்டுப் போவா. கூட மாட இருந்தா அஞ்சு பத்து கிடைக்கும்ல?’

தியேட்டரின் வராந்தாவில் ஐஸ் க்ரீம் கடை அவன் கண்ணில் பட்டது. அவளை அழைத்துப்போய் கோன் ஐஸ் வாங்கித் தரலாமா என்று நினைத்தான். ஏதாவது நினைத்துக்கொண்டுவிட்டால்?

‘கலர் குடிக்கறியா?’ என்று கேட்டான்.

‘ஐயே.. அதெல்லாம் வாணாம்.. நான்.. நான் வந்து..’ அருகே சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அவளது தோழி ரகசியமாகச் சிரிப்பது போலப் பட்டது.

‘உன் •ப்ரெண்டுக்கும் சேர்த்துதான் சொல்லுறேன்..’

‘எலேய் மாப்ள.. சைக்கிள் கேப்புல எங்கள மறந்துறாத.. சைதாப்பேட்டைலேருந்து உன்னிய வெச்சி மிதிச்சிக்கிட்டு வந்திருக்கோம்.. அது நெனப்புல இருக்கட்டும்..’

பின்னாலிருந்து நண்பர்கள் குரல் கொடுத்தார்கள். அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. கடவுளுக்கு நன்றி. இது எதிர்பாராதது. அர்த்தமற்ற சந்திப்புதான் என்றபோதும் ஆனந்தமாக இருக்கிறது.

வெட்கப்பட்டுக்கொண்டு அவள் ஓடிவிட்டாலும்கூட சந்தோஷத்தில் குறைவிருக்காது என்று தோன்றியது. ஆனால் சாந்தி அநாவசியமாக வெட்கப்படுகிற பெண்ணாகத் தெரியவில்லை. தைரியமாகத்தான் இருந்தாள்.

முகத்தை நேருக்கு நேர் பார்த்துத்தான் பேசினாள். அவனுக்குத்தான் குறுகுறுவென்றிருந்தது.

‘நாளைக்கு எங்கப்பா உங்க வீட்டுக்கு வருவாரு.. நாள் பாத்திருக்காங்க. நீங்க சொன்னாப்புல ரெண்டு மூணு முகூர்த்த நாளா பாத்திருக்கு. உங்களுக்கு எது வசதின்னு கேட்டுக்கிட்டு செய்யலாம்னு..’

முத்துராமனுக்கு நெஞ்சு வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. எது வசதி? இப்போதே திருமணத்தை முடித்துவிடலாம். ஆல்பர்ட் தியேட்டர் வாசல். பின்னணியில் அவன் மனத்துக்குப் பிடித்த நடிகரின் மாபெரும் கட் அவுட். மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. கூடி நிற்கச் சொல்லி ஒரு குரல் கொடுத்தால் கண்டிப்பாகக் கூடிவிடுவார்கள். நடுச் சாலையில் திருமணம். பக்கத்தில்தான் தினத்தந்தி அலுவலகம் இருக்கிறது. செய்தி பரவி யாராவது நிருபர் வந்து படமெடுத்துக்கொண்டு போனாலும் வியப்பதற்கில்லை. அந்தப் பட்சத்தில் சாந்தியையும் கட்சி மாநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்.

ஆனால், நீ வருவியா என்று கேட்டபோது மாட்டேன் என்று தலையசைத்துவிட்டாள்.

‘ஏன்? அரசியல் பிடிக்காதா உனக்கு?’

‘தெரியாது’ என்று பதில் சொன்னாள். ‘நமக்கெதுக்குங்க அதெல்லாம்? வேளைக்கு சோறு கிடைக்கறது பெரிய விசயம். அப்பாவால இப்பல்லாம் முன்னமாதிரி மீன்பாடி வண்டி மிதிக்க முடியறதில்ல.. கால் நோவுதுங்கறாரு. மோட்டார் வெச்ச சைக்கிள் ரிக்சா வாங்கணும்னு ஆசைப்படறாரு.. பணத்துக்கு எங்க போவறது? பணம் சம்பாரிக்கறதுக்குக் கூட மொதல்ல போடக் கொஞ்சம் பணம் வேண்டியிருக்குது. யோசிச்சிப் பாத்தா கோழிலேருந்து முட்டை வந்ததா, முட்டைலேருந்து கோழி வந்ததாங்கறமாதிரி இல்ல?’

முத்துராமனுக்குப் பெரிய ஆச்சர்யமாகப் போய்விட்டது. என்னமாய்ப் பேசுகிறாள் இவள்? சாதாரண சொந்த, சோகக் கதை. ஆனால் எத்தனை பெரிய தத்துவங்கள் அடங்கியதாக அமைந்துவிட்டது? கண்டிப்பாக இதற்குமுன்னால் தன்னுடைய கட்சிக்கொடியில் பிறந்த கதை எடுபடப்போவதில்லை.

‘கவலப்படாத சாந்தி.. எல்லாம் சரியாயிரும். சரியாக்கிறலாம். எங்க ஏரியா வட்டச் செயலாளரு நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு.. இந்த வருசம் ரெண்டுல ஒண்ணு எதனா நல்லது செஞ்சே தீருவாரு.. கொஞ்சம் பொறுத்துக்க.’ என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசினான்.

‘ஐயே.. அதுக்குள்ள மாமனாரு மேல அனுதாபம் வந்திரிச்சாக்கும்..’

சடாரென்று வந்துவிட்ட அவளது கேலியும் அவனுக்குப் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்தபோது, தன்னுடைய பதில் சற்றே பொருந்தாத் தொனியில்தான் வந்திருக்கிறது என்பது புரிந்தது. சிரித்தான்.

‘எலேய் மாப்ள.. பெல்லடிச்சிட்டான். படம் பாக்க வரியா? இல்ல, படம் காட்டிக்கினே இருக்கப்போறியா? நாங்க போறம்..’

வரட்டுமா சாந்தி?

அவள் தலையசைத்தபோது வேகமாக யாரோ ஓடி வந்து அவளை மோதுவது போல் நிற்க, முத்துராமன் திரும்ப இருந்தவன் ஒரு கணம் தயங்கினான்.

‘சாந்தி, இங்கயா இருக்க.. உன்ன உங்கப்பாரு தேடிக்கிட்டிருக்காரு. குப்பத்துல எவனோ நெருப்பு வெச்சிட்டாண்டி.. ஆறு குடிசை எரிஞ்சிருச்சி.. சீக்கிரம் ஓடியா..’

  • தொடங்கியவர்

அத்தியாயம் ஏழு

முதலில் புகைதான் தென்பட்டது. அர்த்தமற்ற கூச்சல்களும் தபதபவென்று ஓடும் சத்தமும் வெளியை நிறைத்திருந்தது. முத்துராமனும் சாந்தியும் குப்பத்தை நெருங்கியபோது ஒரு பாதி எரிந்து நாசமாகி சேறும் கரியுமாகக் கிடக்க, இன்னொரு பக்கத்தில் தீயை அணைக்க மக்கள் போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீதியெங்கும் துணி மூட்டைகளும் பாத்திரங்களுமாக உருண்டு கிடக்க, பெண்களின் ஒப்பாரியில் அடி வயிறு பிசைந்தது.

‘டேய், எல்லா குடிசைங்கள்ளயும் உள்ள பூந்து பாருங்கடா.. பெருசு எதாச்சும் தூங்கிக்கினு கெடக்கப்போவுது!’

யாரோ குரலெழுப்பியபடி ஓடினார்கள். வீசியடிக்கும் தண்ணீரில் அத்தனை பேரும் முழுதாக நனைந்திருந்தார்கள். கவலையும் வேதனையும் பதற்றமுமாக விரைந்த சாந்தி, தன் குடிசையை நெருங்கியபோது சட்டென்று ஒரு கணம் நின்று மூச்சு வாங்கினாள். கடவுளுக்கு நன்றி. அப்பாவும் அம்மாவும் வெளியே நின்றுகொண்டு இருந்தார்கள். ஆளுக்கொரு பக்கெட். முடிந்த அளவுக்கு முயற்சி.

‘சாந்தி.. வந்துட்டியா.. தங்கச்சி எங்கடி?’

‘தியேட்டர்ல இருக்காம்மா. அவள கூட்டிக்கினு வரலாம்னுதான் போனேன்..’

அவர்கள் அப்போதுதான் முத்துராமனைப் பார்த்தார்கள். சட்டென்று சாந்தியின் அப்பா, தூக்கிக்கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டார்.

‘அ.. தம்பி.. வாங்க, இங்க..’

வரவேற்கக் கூட முடியாத சூழல் சட்டென்று தாக்கியது.

‘இருக்கட்டுங்க.. பக்கெட்ட என்னாண்ட குடுங்க.. உள்ள இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்துட்டிங்களா?’

கேட்டபடி வேகமாக குடிசைக்குள் ஓடினான்.

‘ஐயோ.. தம்பி, வேணாம்.. போகாதிங்க.. எல்லாம் எடுத்தாச்சு..’

சாந்தியின் அம்மா பேசி முடிப்பதற்குள் உள்ளே பாய்ந்து ஒரு பார்வை சுழலவிட்டு அவன் வெளியே வந்துவிட்டான்.

ஒரு பத்து நிமிஷம் பதற்றத்தில் கரைந்ததும் பிராந்தியம் முழுவதும் குளித்து முழுகிக் கருகிக் கிடந்தது. ஓலங்களும் ஒப்பாரிகளும் தேய்ந்து முனகலாகிக்கொண்டிருந்தன. சாந்தியும் அவளது அம்மாவும் அப்பாவும் மூன்று மூட்டைகளில் பொருள்களைக் கட்டி எடுத்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்கு வந்து உட்கார, முத்துராமன் அவர்களுக்கு எதிரே உட்கார்ந்தான்.

‘பாருங்க தம்பி.. எம்.எல்.ஏ.வுக்கு சொல்லிவுட்டு அர அவரு ஆவுது. இன்னும் வரக்காணம்..’ என்றார் சாந்தியின் அப்பா.

‘ஊர்ல இல்லியோ என்னமோ.. போலீஸ்காரங்க வந்திருக்காங்களே. எம்.எல்.ஏ., வருவாரு. எப்பிடியும் வராம போவமாட்டாரு.’

எங்கோ பார்த்துக்கொண்டிருந்த சாந்தியின் அம்மா, சட்டென்று நினைவுக்கு வந்தவள் மாதிரி திரும்பிக் கேட்டாள்: ‘ஏண்டி சாந்தி.. இந்தவாட்டி ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல?’

ஒரு கணம் சாந்திக்குப் புரியவில்லை. புரிந்தபோது பதற்றமானாள். என்ன பேசுகிறாள் அம்மா? அதுவும் யார் எதிரே?

முத்துராமன் சிரித்துவிட்டான். ‘அப்பிடித்தாங்க. தீ கூட, பழகிருச்சின்னா தண்ணி மாதிரிதான். நம்மள மாதிரி குப்பத்து சனங்க இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு மூலைல குந்திட்டா அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்ணுறது? எம்.எல்.ஏ. வந்து என்னா குடுக்கறாருன்னு பாருங்க. எப்பிடியும் ரெகுலர் நஷ்ட ஈடு இருக்கும். அப்பால நாம பேசுறத பொறுத்து மேற்கொண்டு ஏதாச்சும் தேறும்.’

‘நீங்க ஒண்ணு தம்பி.. இங்க நாலு தலைங்க இருக்குதுங்க. கட்சிக்காரப் பசங்க. எல்லாம் பேசி வாங்கி எடுத்தாந்து தர்றது அவங்கதான். என்னா ஒண்ணுன்னா, ஒயுங்கா வர காசு வந்துருமே தவிர, மேல் காசு எல்லாம் அதுங்க பாகிட்டுக்குத்தான் போவும். அஞ்சு பத்து மேல குடுங்கடான்னு கேட்டாக்கா, இன்னா பெர்சு, பிசினசா பேசுறேன்னுவானுக. உங்க ஏரியாவுல எல்லாம் எப்பிடி தம்பி?’

முத்துராமனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. எத்தனை அபத்தமான அவலம் இது. ஒரு பிராந்தியமே பற்றிக்கொள்கிறது. அந்தக் கண நேரத்துப் பதற்றத்தில் போலித்தனம் கிடையாது. உயிரைக் காட்டிலும் பெரிது வேறென்ன? தப்பித்து விட்ட சந்தோஷம் கட்டாயம் உண்டு. ஆனால் கணப் பொழுதுதான். பதற்றம் தணிந்த உடனேயே மனம் கணக்குகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எப்போதும் போதிய இடைவெளிகளில் பற்றவைக்கப்படுகிற காலனிகள். வந்து பார்த்து ஆறுதல் சொல்லி, செய்தித்தாளில் இடம் பிடிக்கிற உள்ளூர் எம்.எல்.ஏ. நிவாரணத் தொகையும் சாம்பார் சாதப் பொட்டலமும்.

எண்ணி எடுத்து நீட்டும் பணத்துக்குக் கைநாட்டு வாங்கும்போது முகத்தை அருகில் பார்த்துக்கொள்ளும் கட்சிக்காரர்கள். சற்றுத் தள்ளி இருந்து வேடிக்கை பார்க்கிற ரெவின்யூ அதிகாரிகள்.

அரசாங்கமும் அரசியலும் வேறு வேறா? இல்லையா? நீண்ட நாளாக முத்துராமனுக்கு இந்தக் குழப்பம் உண்டு. அவனுக்கு இத்தகைய சம்பவங்களெல்லாம் அதிர்ச்சியளித்த காலம் மலையேறிவிட்டது. அடையாற்று ஓரத்தில் அவனது காலனியே ஒரு சமயம் பற்றவைக்கப்பட்டபோது முதல் நாள் இரவு அவனுக்குத் தகவல் தெரிந்துவிட்டது.

‘ஐயோ’ என்று அவனையறியாமல் பதறியபோது சட்டென்று சில கரங்கள் அவன் வாயை அடைத்தன.

‘த.. சும்மாருடா.. இவனே மாட்டிவுட்றுவான் போலருக்குதே.. எவண்டாவன்? இன்னா, இன்னா ஆயிருச்சி இப்ப? குடிசைன்னா பத்திக்கத்தான் செய்யும். சும்மா ஒண்ணுமில்ல. வூட்டுக்கு ஆயிரம் தந்துருவாங்க. கூரை மாத்திக் குடுத்துடுவாங்க. ரெண்டு நாளைக்கு சோத்துப்பொட்டலம், தண்ணி பாகிட் எல்லாம் உண்டு. அரசியல்னா நாலும் இருக்கத்தான் செய்யும். இன்னிக்கி அடிக்கிற கையி நாளைக்கி காலீல அணைச்சிரும்.

கவலையே படாத. போ.. போய் வூட்ல இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்து பேக் பண்ணி வெச்சிரு ரெடியா. பத்திக்கின வுடனே வெளில ஓடியா.. முன்னால வந்து மானத்த வாங்காத.’

முத்துராமனுக்கு அப்படியொரு அனுபவம் புதிது. கட்சிக்காரன் தான். கொடி கட்டக்கூடியவன் தான். மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ என்று மைக்கில் தன் குரலைக் கேட்டுத் தானே சிரித்துக்கொள்பவன் தான்.

தலைவர்கள் யார் வந்தாலும் வாழச்சொல்லிக் கோஷம் போடுகிறவன் தான். அரசியலில் எல்லாமே சகஜம் என்பதும் தெரியாதவன் அல்ல. ஆனாலும் நாளைக்காலை தன் காலனி பற்றி எரியப்போகிறது என்று கேள்விப்பட்டபோது அவனுக்குள் ஏற்பட்ட பதற்றத்தை அத்தனை சுலபத்தில் தணிக்க முடியவில்லை.

‘என்னண்ணே.. இப்பிடி சொல்றிங்க.. இதெல்லாம் தப்பில்லியா?’

‘தபாரு முத்துராமா.. உங்கப்பாரு மொத்தமா ஆயிரம் ரூவாவ பாத்து எத்தினி நாளாயிருக்கும்னு யோசிச்சிப் பாரு. அட அவர வுடு. நீ பாத்திருக்கியா? காலு ஒடிய ஒடிய மெசினு அடிக்கற. பேண்டு தெச்சா நாப்பது ரூவா, சட்டை தெச்சா இருவது ரூவா. உம்பேட்டைல எத்தினி தலைங்க பேண்டு போடுதுங்க. கழுத எல்லாம் லுங்கிய வழிச்சிக் கட்டிக்கினு சுத்தி வர்ற கூட்டம்தானே? சாப்பிடுய்யா.. ஆயிர ரூவா. எவன் தருவான்?

குடிசைக்கு புச்சா கூரை போட்ருவாங்க. நிம்மதியா, சந்தோசமா இரு. அரசியல் தெரியணும்னா இந்த அடிப்படைல்லாம் புரிஞ்சிக்கணும் மொதல்ல..’

‘இருந்தாலும்..’

‘அட எவண்டாவன்? டாக்டருக்குப் படிக்கறவன் மொதல்ல தவளைய அறுக்கணும்டா.. போய் கேட்டுப்பாரு.. த.. சரி, உங்கப்பார கேளு. அவருக்குத் தெரியாத மேட்டரா? தெரிஞ்சவனாச்சேன்னு முன்கூட்டி சொல்லிவெச்சா ஏண்டா இப்பிடி ரவுசு பண்ணுற?’

முத்துராமனுக்கு அப்போதும் ஆறவில்லை. வீட்டுக்குப் போய் அப்பாவைத் தனியே கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.

‘அப்பிடியா?’ என்று சிரித்தவர், ‘ஒனக்குத்தாண்டா புச்சு. குப்பத்துல எந்தப் பெரிச வேணா கேட்டுப்பாரு.. சர்தான், செலவுக்காச்சுன்னுவானுக.’ என்று பேசியபடியே உள்ளே திரும்பி, ‘கற்பகம்.. ஏய், எங்கடி போய்த் தொலைஞ்ச.. காலீல பத்திக்குதாம். எல்லாத்தையும் ஏறக்கட்டு..’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு பீடியை எடுத்து வாயில் வைத்தபடி வெளியே போனார்.

அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. தனக்கு அரசியல் புரிந்துகொண்டிருக்கிறது என்றும் தோன்றியது. மறுநாள் காலை அவர்கள் பேசிய நேரத்துக்குச் சற்றும் தாமதமில்லாமல் யாரோ ஒருவன் பீடியை இழுத்து ஏதோ ஒரு குடிசையில் வீசிவிட்டுப் போக, அரைமணி நேரக் கூச்சல் குழப்பத்துக்குப் பிறகு நிவாரண உதவிகள் ஜீப்பில் வந்து இறங்கின. பேப்பர்காரர்களும் டிவிக்காரர்களும் வந்து சூழ்ந்துகொண்டபோது அழுதபடி அவனது தந்தையும் பேட்டி கொடுத்தார். எல்லாம் எதிர்க்கட்சி சதி.

‘த.. என்னா வளவளன்னு பேசிக்கிட்டு? தம்பி வந்திருக்காரு.. போய் ஒரு டீயானா வாங்கியாங்களேன்..’

சட்டென்று நினைவு கலைந்த முத்துராமன், சாந்தியின் தந்தை என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நினைவுகூரப் பார்த்தான்.

‘டீயெல்லாம் வேணாங்க.. பசங்களோட படம் பாக்கலாம்னிட்டு வந்தேன்.. தியேட்டர் வாசல்ல உங்க பொண்ண பாத்தேன். சௌக்கியமான்னு கேக்க வந்தா சட்டுனு பத்திக்கிச்சின்னு ஆளு வருது..’

சாந்தி சிரித்தாள். இப்படி ஒரு தருணத்தை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. எதிர்பாராமல் சந்திப்பு. எதிர்பாராத தீவிபத்து. எதிர்பாராத வருகை. எல்லாமே சாதாரணம் போல உட்கார்ந்து பேசுகிற லயம். மாப்ள வந்திருக்காரு என்று பதறக்கூடிய அம்மா கூட அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள். அத்தனை சுவாதீனம் எப்படி சாத்தியமானது? துக்ககரமான ஒரு சம்பவத்தில் இதெல்லாம் சாத்தியமே. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லி நெருங்கிவிட முடியும். கண்ணைத் துடைத்துவிட்டுக் கையைப் பற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் குப்பம் பற்றி எரிந்த சம்பவத்தை யார் இங்கே துக்க சம்பவமாக நினைக்கிறார்கள்?

அவள் நிமிர்ந்து சுற்றுப்புறத்தை ஒரு கணம் நோட்டம் விட்டாள். அத்தனை மக்களும் வீதியில் தான் இருந்தார்கள். அவரவர் குடும்பங்களுடன். அவரவர் உடைமைகளுடன். அழுதது உண்மை. பதறியது உண்மை. அது தீ என்னும் நிஜமான தகிப்பு கொடுத்த அழுகையும் பதற்றமும். ஆனால் தெரியாத தீ அல்ல. அறியாத சம்பவமல்ல. முன்பும் நடந்திருக்கிறது. முந்தைய தலைமுறையும் பார்த்திருக்கிறது. அதற்கு முந்தையவர்களும் கூட. சுதந்தர இந்தியாவில் பற்றிக்கொள்ளாத குப்பங்கள் கிடையாது. நிவாரணம் அளிக்காத அரசியல் கட்சிகள் கிடையாது.

ஆனால் இந்த சுவாதீனத்துக்கு இதுவா காரணமாக இருக்கமுடியும்? ம்ஹ¤ம். வேறென்னவோ தனக்குத் தெரியாத இழை ஒன்று குறுக்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்று சாந்தி நினைத்தாள். எதுவானால் என்ன?

அந்தக் கணம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. காண்பித்துக்கொண்டுவிடக்கூடாது என்றும் நினைத்தாள். சிரித்தாள்.

  • தொடங்கியவர்

அத்தியாயம் எட்டு

மண்ணும் கல்லும் மனிதர்களும் லாரிகளில் வந்து இறங்கியபோது, முத்துராமன் வேட்டியை மடித்துக் கட்டி, வானம் பார்த்து வணங்கியபடி தன் குடிசையை விட்டு வெளியே வந்தான். பரபரவென்று லாரிகளின் பின்புறத் தடுப்புகள் திறக்கப்பட்டு பலத்த ஓசையுடன் கல்லும் மண்ணும் சரிந்தது. தேர்தல் இல்லாத நேரத்திலும் தெய்வம் கண் திறந்து பார்க்கும். யாரங்கே, கூப்பிட்டுக்கொண்டிருக்க அவசியம் இல்லை. வீட்டு வேலைகள் முடிந்தால் யாரும் வந்து உதவிக்குக் கைகொடுக்கலாம்.

முன்னதாகத் தன் காலனியின் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆற்றங்கரை ஓரத்தில் அணிவகுக்கச் செய்திருந்தான் அவன். இது நம் ஏரியா. நம் பேட்டை. உதவிக்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். நடக்கப்போவது நமது பணி. எடுத்துப் போட்டுக்கொண்டு முடிந்ததைச் செய்வதுதான் நாட்டுக்கும் காலனிக்கும் நல்லது. சுகாதாரத் துறையும் பொதுப்பணித்துறையும் நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செய்வதற்கு எத்தனையோ உண்டு நலப்பணிகள். கசக்கி எறிந்த குப்பைக் காகிதம் போல ஆற்றங்கரை ஓரத்தில் நாற்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கிற காலனி. காரணம் யோசித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. சற்றும் எதிர்பாராமல் வந்திருக்கும் வாய்ப்பு இது.

‘மாப்ள, நம்பவே முடியலடா. தலைக்குப் பத்து நூறு தேறிச்சின்னாக்கூட நல்லாத்தான் இருக்கும். பணப் பட்டுவாடா யார் பொறுப்பு? வட்டம் ஆள் அனுப்புறாரா? நம்மாண்டயே குடுக்குறாராமா?’

‘பிச்சிருவேன் மவனே. பத்து பைசா எவனும் தொடக்கூடாது சொல்லிட்டேன். ஆன செலவுக்கு கணக்கு எழுதி சப்ஜாடா செட்டில் பண்ணிரணும்னு சொல்லியிருக்காரு. அவரு சொல்லலைன்னாங்காட்லும் நான் அதத்தான் செய்யறதா இருந்தேன். ஊரான் வூட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையேன்னு எவனாச்சும் கோல்மால் பண்ண நெனச்சிங்கன்னா திரும்ப ஒருக்கா குப்பத்துப்பக்கம் வரமுடியாது சொல்லிட்டேன்..’

அவன் திடமாக, தீர்மானமாகச் சொல்லியிருந்தான். இரண்டு பெரிசுகளைக் கூப்பிட்டு, நதிக்கரை ஓரத்து அரசமரத்தடிப் பிள்ளையார் நிழலில் நாற்காலி போட்டு உட்கார வைத்து சம்பளமில்லாத தாற்காலிக மேஸ்திரி ஆக்கியிருந்தான்.

என்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது. முதலில் சாக்கடைகள். சாலைக்கு மேலே ஓடும் கழிவுகளுக்குச் சாலையோரத்தில் இரண்டு கால்வாய் கட்டி மேல் புறம் மூட காங்கிரீட் வசதி. தாற்காலிக வசதிதான் என்றாலும் செம்மண் கொட்டிச் சமப்படுத்திய சாலைகள். சீரழிந்த குடிசைகளுக்கு புதிய ஓலைகள். ஆற்றங்கரை ஓரத்தில் சிறியதொரு தடுப்புச் சுவர். அப்புறம் கொசுக்கள்.

மருந்தடித்து அழித்துவிடக்கூடிய வம்சம் இல்லை அது. மக்கள் மனோபாவத்தில் மாற்றம் வரவேண்டும் என்று வட்டச் செயலாளர் சொல்லியிருந்தார். கைதட்டிய கூட்டத்தில் பெரும்பாலும் யாருக்கும் புரியவில்லை.

‘சுத்தமா இருக்கணும்னு சொல்றாரு பாண்டியம்மா. குந்திக்கினு இருக்கற எடத்துலயே மூக்க சிந்திப் போட்டுட்டு முந்தானைல தொடச்சிக்காதங்கறாரு. புரியுதா?’

சிரித்தார்கள். யாரும் சிரிக்க வேண்டாம் என்று முத்துராமன் கேட்டுக்கொண்டான்.

‘சிரிச்சி சிரிச்சித்தான்யா சீரழிஞ்சி போயிருக்கோம். நம்மள்ள எவன் வூட்லயானா அரிசி களைஞ்சிட்டு தண்ணிய வாசல்ல கொட்டாம இருக்கமா? நைட்டுல பாரு.. வூட்டு வாசல்ல படுத்துக்கினு இருப்பான். அப்பிடியே திரும்பி பொச்சுனு எச்சி துப்புவான். எந்திரிச்சி நாலடி போய் ஒண்ணுக்கடிக்கறவன் எத்தினி பேர் இங்க? சுத்துமுத்தும் பாத்துட்டு அப்பிடியே நடு ரோட்ல குந்திக்கிரவேண்டியது. மாநகராட்சி நவீன கழிப்பிடம்.

இருக்குதில்ல? நம்ம ஏரியாதான அது? எவனாச்சும் எட்டிப்பாக்க முடியுதா? காலு வெக்க முடியாதமாதிரி அசிங்கப்படுத்திவெச்சிக்கிறோம். கழுவித்தள்ளக்கூட எவனும் வரமுடியாதுரா. அப்பால எப்படி கொசு வராம இருக்கும்?’

இதற்கும் கைதட்டினார்கள். வட்டம் சிரித்தார். பாத்துக்க முத்துராமா என்று தோளைத் தட்டிவிட்டு சுமோவில் ஏறி மிதந்து போனார். முத்துராமன் வெறி கொண்டவன் போல் உழைக்கத் தொடங்கினான். இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் கிடைக்காது. ஊருக்கு நல்லது. உள்ளபடி தனக்கும் நல்லதுதான். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் தயங்காமல் கவுன்சிலருக்கு நிற்கலாம்.

பிற்பகல் வரை வேலை மும்முரமாக நடந்தது. சாக்கடைகள் கிளறப்பட்டதில் எழுந்த துர்நாற்றத்தில் குப்பம் முழுவதும் மூக்கை மூடிக்கொண்டது. குழந்தைகள் அழுதன. டர்ர்ர்ர்ர் என்று சத்தமுடன் வந்து நின்ற புல்டோசர், ஆற்றங்கரை ஓரத்துக் குப்பை மேடுகளை அப்புறப்படுத்தின.

‘தபார்றா.. நம்மாளுங்க ரேஞ்சே தனிதான் இல்ல.. காமசூத்ரா கவர் இருக்குது பாரு.. அந்தா பாரு.. எவனோ இங்க நாலு குவாட்டர் எம்ஜிஎம் அடிச்சிருக்கான். பாட்டிலு கெடக்குது பாரு. அவவன் ரெண்ருவா பாகிட் சரக்குக்கு வழியில்லாம அல்லாண்டு கெடக்கறான். எவந்தலையத் தடவி மொட்ட போட்டானோ..’

குப்பை மேடுகள் பல ரகசியங்களை உள்ளடக்கி இருக்கின்றன. கிளறும்போது சரித்திரத்தின் பல கிழிந்த பக்கங்கள் கிடைத்துவிடுகின்றன. பென்சிலில் எழுதிக் கசக்கிப்போடப்பட்ட ஒரு காதல் கடிதத்தை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு அது யார் கையெழுத்து என்று கொஞ்ச நேரம் அலசிக்கொண்டிருந்தார்கள்.

‘டேய், போதும் எந்திரிச்சி வாங்கடா..’ யாரோ குரல் கொடுத்தார்கள். உழைத்தவர்களுக்கான சாம்பார் சாதப் பொட்டலங்களுடன் வட்டச் செயலாளர் புன்னகையுடன் கைகூப்பும் விசிட்டிங் கார்ட் பின் செய்யப்பட்டிருந்தது.

முத்துராமனுக்கு சாப்பிட நேரம் இருக்கவில்லை. தன் நண்பர்களுடன் அவன் இருட்டும் வரை ஓயாமல் காலனி முழுதும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டிலும் சாக்கடைப் பாதைக்கான தடத்தை முடிவு செய்வது பெரிய காரியமாக இருந்தது. ஒரு ஒழுங்கில்லாமல் உருவாகியிருந்த காலனி. வாசல் புறம் மட்டுமே வழி இருந்தது. பின்புறம் என்று ஏதுமில்லாத இட நெருக்கடி. ஒவ்வொரு குடிசையின் பின்புறத்திலும் இன்னொரு குடிசை ஒட்டிக்கொண்டிருந்தது. அரையங்குல இடைவெளிகளில் அவர்கள் துணி உலர்த்திக்கொண்டார்கள். முறத்தில் மிளகாய் கொட்டி, கூரைச் சரிவுகளில் காயவைத்துக்கொண்டார்கள்.

ஒரு சாக்கடைக்கான நிரந்தர வழி என்று சிந்திக்க அவகாசமில்லாமலேயே நாற்பது வருடங்கள் சாக்கடையோடு ஓடிப்போய் அடையாறில் கலந்துவிட்டன. எத்தனை நூறு குழந்தைகள் அதற்குள் பிறந்து, வளர்ந்து ஆளாகிவிட்டன! இதே சாக்கடைதான். இதே குப்பம்தான். இதே கொசுக்கடிக்கு நடுவில்தான். துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.

அன்றைய பணிகள் முடிந்து ஆள்கள் கூலி வாங்கிக்கொண்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றபிறகு அவன் நிலவரம் சொல்வதற்காக வட்டத்தின் அலுவலகத்துக்குப் போனான். அரை மணி காத்திருக்க வேண்டியிருந்தது. பார்த்துப் பேசிவிட்டு, மறக்காமல் நன்றி சொல்லித் திரும்பி, மீண்டும் நண்பர்களுடன் மறுநாள் பணி குறித்துப் பேசிவிட்டு, ஒரு உற்சாகத்துக்கு தொண்ணூறு மில்லி மட்டும் சாப்பிட்டு மேலுக்கு அரைப் பொட்டலம் பிரியாணியை முடித்து, விடைபெற்று வீடு திரும்பும்போது மணி பதினொன்றாகிவிட்டிருந்தது.

வீதி அடங்கிவிட்டது. வாசல்களைக் கால்களும் நபர்களும் நிறைத்திருந்தார்கள். நாயொன்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. த, சொம்மாகெட என்று சொல்லியபடி அதனைக் காலால் ஒரு உதை உதைத்து அவன் தன் குடிசையின் வாசலை அடைந்தான்.

அப்பா வெளியே படுத்திருந்தார். கயிற்றுக் கட்டிலில் கண்ணயர்வு. வழக்கம் அதுதான். அவனும் அப்பாவும் வாசலில் படுப்பது. தம்பியும் அம்மாவும் வீட்டுக்குள்ளே. பேசிக்கொள்ளப் பொதுவில் இருவருக்கும் ஏதும் இருந்ததில்லை. எப்போதாவது பேச வாய் திறந்தால், வலிக்குதுடா ரொம்ப என்பார் முதல் சொல்லாக. கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்துவிட்ட வாழ்க்கை குறித்த அதிருப்திகளிலேயே அவர் நோயாளி ஆகிவிட்டதுபோல அவனுக்கு எப்போதும் தோன்றும்.

சத்தமில்லாமல் உள்ளே போகப் பார்த்தான். ஆனால் அப்பா தூங்கியிருக்கவில்லை. புரண்டு படுத்தவாறு, இப்பத்தான் வரியா என்று கேட்டார்.

‘அ.. ஆமாப்பா..’ சே. ஒரு பீடா போட்டிருக்கலாம்.

அவருக்கு சுவாசித்த காற்றின் ஒரு துளி நாசியைத் தொட்டால் போதும். அவர் அடிக்காத சரக்கா? மறைக்காத லாகவமா? ஒளித்து வைக்க என்ன இருக்கிறது?

‘உக்காரு’ என்றார் மெதுவாக. ‘உள்ள போனன்னா உங்கம்மாக்காரி பொலம்ப ஆரம்பிச்சிருவா. சரக்கடிக்காதன்னு சொல்ல எனக்கு யோக்கியத இல்ல. சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு வராத. புரியுதா?’

அவன் பேசாதிருந்தான்.

‘சாப்ட்டியா?’

‘சாப்ட்டேம்பா.. படுக்க வேண்டியதுதான். உடம்பெல்லாம் வலிக்குது..’

இரண்டுக்குமாகச் சேர்த்துச் சொன்னான். சொல்லிவிட்டுத் தன் கட்டிலை இழுத்து அவருக்குச் சற்றுத் தள்ளிப் போட்டான்.

அவர் நெடு நேரம் பேசவில்லை. ஆனால் ஏதோ பேச விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது. பேசினால் பதில் சொல்லவேண்டியிருக்கும். ஆனால் தூக்கம் வருகிறது. உழைத்த களைப்பு. நாய் விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அதுவேறு எரிச்சலாக இருந்தது. இரவில் அமைதியைத் தவிர பொதுவில் இன்னொன்று சரிப்படமாட்டேனென்கிறது.

‘இன்னிக்கி அந்தப் பொண்ணோட அப்பாரு வந்துட்டுப் போனாரு.’ என்று சடாரென்று ஓரிடத்தில் தொடங்கினார்.

முத்துராமனுக்கு முந்தைய தினம் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தபோது சாந்தி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆ, திருமணம்.

‘ஜனவரி கடேசில இருவத்தேழாந்தேதி வெச்சிக்கிரலாமான்னு கேட்டாரு’

பரபரவென்று அவன் கணக்குப் போட்டான். ஜனவரி இருபத்தி மூன்று, இருபத்தி நான்கு, இருபத்தைந்து மாநாடு. ஒரு பிரச்னையும் இல்லை.

‘வேலை நெறைய கெடக்குது. மொதல்ல மாவட்டச் செயலாளராண்ட சொல்லி அப்பாயின்மெண்டு கேக்கணும். நோட்டீஸ் அடிக்கணும். துணி எடுக்கணும். எல்லாத்துக்கும் பணம் வேணும் மொதல்ல. காதுல விழுதா?’

‘ம்..’ என்றான் மெதுவாக.

‘விளையாட்டில்லடா.. இது பெரிய காரியம். கல்யாணம் ஒருநாளோட செரி. வாழ்க்கை ரொம்ப பெரிசு முத்து.. சமயத்துல பேஜாரா தோணும். ஓடிரலாமான்னுகூட தோணும். உன் வயித்த நீ நெனச்சிப் பாக்கறது எப்பவாச்சும்தான். கல்யாணம்னு ஆயிடிச்சின்னா இன்னொரு வயித்துக்கு நீ பொறுப்பாயிருவ. மொத மாசமே கர்ப்பம்னிட்டான்னு வையி.. ஒண்ணோட ஒண்ணு இன்னொண்ணு.’

அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. அவனது அப்பா ஒருபோதும் இப்படியெல்லாம் பேசியவரல்லர். இப்படியெல்லாம் சிந்திக்கக் கூடியவர் என்றும் அவன் நினைத்ததில்லை. தன்னிடம் ஏதோ ஒன்று முக்கியமாக – மிக முக்கியமாக அவர் தெரிவிக்க விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் ஆர்வமாகக் கேட்கத் தயாரானபோது பின்னால் யாரோ வருவது போலிருந்தது.

  • தொடங்கியவர்

அத்தியாயம் ஒன்பது

முத்துராமனுக்கு அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த அவனுடைய அப்பா, ஒரு காலத்தில் மிகத் தீவிரமான கட்சிக்காரர். வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் இரவில் வீடு தங்குவார். அந்தத் தினங்களிலும் அவரைப் பார்க்க யாராவது வந்துவிடுவார்கள். வாசலில் இதே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவர் கட்சி அரசியல் பேசிவிட்டு, வந்தவரை வழியனுப்பிவைத்துவிட்டு அப்படியே படுத்துவிடுவார். முத்துராமன் கண் விழிக்கும் காலைப் பொழுதுகளில் அநேகமாக அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பார்.

கட்சியின் நம்பிக்கைக்குரிய பேச்சாளர்களுள் ஒருவராக அவர் பிராந்தியத்தில் பிரபலம். இரவு ஒன்பதரை மணிவாக்கில் மேடை ஏறி மைக்கைப் பிடித்தால் ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் நின்ற இடத்தில் ரவுண்டு கட்டி அடிப்பார் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறான். கிண்டலுக்குப் பெயர்போன பேச்சாளர். எதிர்க்கட்சிக்காரர்களைப் பெயர் சொல்லி விளித்து, விரல் உயர்த்தி நக்கலடிக்கும் வித்தகர். இருபது பேர் கூடும் கூட்டத்தை நாற்பதாக்குவதற்குக் கண்டிப்பாக அவர் அந்தக் காலத்தில் தேவைப்பட்டிருக்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் நூற்று இருபத்தைந்து ரூபாய் அவருக்குக் கிடைக்கும். தவிரவும் ஒன்றிரண்டு சோடாக்கள். தமிழரசன் பேச்சுக்குத் தமிழ்நாட்டிலேயே எதிர்ப்பேச்சில்லை என்று மாவட்டச் செயலாளர் ஒருமுறை அவரைப் புகழ்ந்திருக்கிறார். கட்சிப் பத்திரிகையில் ஆறு முறை அவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூட்ட விவரம் வெளியாகியிருக்கிறது. இரண்டு முறை நெற்றியில் ரத்தம் வரும் அளவுக்கு அடிபட்டிருக்கிறார். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் வீடு வந்து நலம் விசாரித்துப் போனதற்குச் சாட்சியாகப் புகைப்படம் இருக்கிறது.

ஒரு எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம். ஏனோ முடியாமல் போய்விட்டதில் அவர் அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு விட்டார். அந்த விஷயத்தில் குடும்பத்தில் அனைவருக்குமே வருத்தம்தான்.

முத்துராமனின் தாத்தா, சித்தப்பாக்கள், மாமன்கள் அனைவரும் காரணம் புரியாமல் பலநாள் இதுபற்றிப் பேசிப்பேசி மாய்ந்திருக்கிறார்கள்.

‘வுட்றா.. அவ்ளோதான். என்னால இதுக்கு மேல முடியல. எம்புள்ள சாதிப்பான் போ..’ என்று ஒரு வரியில் முடித்துக்கொண்டு எழுந்துபோய்விடுவார். முத்துராமன் ஒரு சமயம் தன் அம்மாவிடம் இது குறித்துப் பேசியிருக்கிறான்.

‘மருவாத இல்லாத எடத்துல என்னாத்துக்குப் பொழங்கிட்டுக் கெடக்கணும்? அவுரு வூட்லயே கெடக்கட்டும். என் ஒடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் நான் ஒழைச்சி சோறு போடுவேன்’ என்று சொன்னாள்.

அப்பாவின் அரசியல் துறவறத்துக்கு ஒரு வகையில் அம்மா காரணமாக இருந்திருப்பாளோ என்றுகூட முத்துராமன் யோசித்திருக்கிறான். ஆனால் பெண்கள் சொல்லி, விலகக்கூடிய விஷயம் அல்ல அது. ஒரு ஆர்வம் போலத்தான் மனத்தில் விழுகிறது. மெல்ல மெல்ல உடம்பினுள் பரவி ஒவ்வொரு நரம்பிலும் நிரம்பிவிடுகிறது. பிறகு கட்சிக்கொடியின் நிறம் மானசீகமாக ரத்தத்தில் தோய்ந்து ரத்தத்தின் நிறத்தை மாற்றித் தன்னுடைய நிறத்தை ஏற்றிவிடுகிறது. வெள்ளைச் சட்டைக்கும் வெள்ளை வேட்டிக்கும் மனம் விருப்பப்படுகிறது. படியச் சீவிய தலையில், பணிவு வரவழைத்துக்கொள்ளும் இரு கரம் கூப்பிய வணக்கத்தில் மேலான அரசியல்வாதியாக சித்தம் உணர்கிறது. யார் சொல்லியும் இதை மாற்றிக்கொள்ள முடியும் என்று முத்துராமனுக்குத் தோன்றவில்லை.

‘அப்படி நெனைக்காதடா.. உங்கம்மா என்னைத் தடுத்ததில்ல. ஆனா எல்லா பொம்பளைங்களும் உங்கம்மா மாதிரி இருந்துறமாட்டாளுங்க. புருசன் முந்தானைக்குள்ள இருக்கணும்னு நெனச்சாக்கூட பரவால்ல..

இப்பல்லாம் பொண்ணுங்க முந்தானையாவே அவந்தான் இருக்கணும்னு நெனைக்கறாங்க.. நாஞ்சொல்றது புரியுதா? தன்னைத்தவிர இன்னொரு விசயத்துல அக்கறை காட்ற புருசன யாருக்கும் புடிக்காம போயிருது முத்து..’

ஆடிப்போய்விட்டான் முத்துராமன். அவன் இப்படி உட்கார்ந்து சொந்த விஷயம் பேசக்கூடிய தந்தையை இத்தனை வருடங்களில் முதல் முறையாகச் சந்தித்திருந்தான். பரீட்சை எழுதாதபோது ஏன் எழுதவில்லை என்று கேட்காத தந்தை. கட்சிக்கூட்டங்களுக்குப் போகத் தொடங்கியபோது எச்சரிக்கையாகக் கூட ஏதும் சொல்லாத தந்தை. பலநாள் வீட்டுக்கே வராமல் சுற்றிக்கொண்டிருந்தபோதும் கண்டுகொள்ளாத மனிதர். ஒரு திருமணம் என்று நிச்சயமானதும் இத்தனை அக்கறை, இத்தனை கரிசனம் காட்டக்கூடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

‘புரியுதுப்பா.. ஆனா யாருக்காகவும் நம்ம லட்சியத்த விட்டுறமுடியாதில்ல? எனக்கு அரசியல்தாம்பா மொதல்ல. குடும்பமெல்லாம் அப்பாலதான்’ என்றான் மெதுவாக.

நீண்டநேரம் அவர் மௌனமாக அமர்ந்திருந்தார். ஒரு பெருமூச்சு எழுந்திருக்கவேண்டும். பிறகு மெல்லச் சொன்னார். ‘நானும் இப்படிச் சொல்லிக்கினு திரிஞ்சவன் தான். திரிஞ்சத நெனச்சி இப்பவும் வருத்தப்படல.

ஆனா வூட்டுக்கும் கொஞ்சம் செஞ்சிருக்கலாம்னு எப்பவாச்சும் தோணுது. ப்ச்.. கட்சி, கடவுளெல்லாம் காலணா காசு கையில இருந்தா இன்னும் நல்லாருக்கும் முத்து. காசில்லாதப்பத்தான் நமக்கு இதுலல்லாம் புத்தி நிலைக்குது. தப்பிச்சிக்கத்தான் இப்பிடி அலையறமோன்னு சமயத்துல தோணிரும். எளவு, நம்ம கட்ன பாவத்துக்கு அவுங்களும் கஸ்டப்பட்டாவணும். உங்கம்மா எப்பவாச்சும் எரிஞ்சி வுளுந்தா நான் என்னிக்கானா பதில் பேசி பாத்திருக்கியா? எனுக்கு கட்சி இருந்தவரைக்கும் கட்சி. இல்லேன்னு ஆனப்பறம் காஜா பீடி. அவளுக்கு என்னா இருக்குது சொல்லு? பாவம், யாரப்போயி திட்டுவா? எப்பிடி தன்னோட ஆத்தாமைய தீத்துப்பா? சர்தான் கத்திக்கினு போன்னு சொம்மா கெடந்துருவேன். கவனிச்சிருக்கியா?’

கவனித்திருக்கிறான். ஆனால் அதற்கு இதுதான் அர்த்தமாக இருக்கும் என்று யோசித்ததில்லை. தனக்குத் தெரியாத நூலிழை ஒன்றில் தன் தந்தை ஒரு மாய மணி கோத்துக்கொண்டிருக்கிறார் என்று இப்போது உணர்ந்தான். ஆயிரம் கஷ்டங்களுக்கு இடையிலும் வீடு சிதறிவிடாமல் கட்டிக்காக்கிற மணி.

‘அதச் செய்யின்னுதான் உன்னாண்ட சொல்றேன். நீ இஸ்டப்பட்டபடி அரசியல்ல முன்னுக்கு வரணும்னுதான் நானும் நெனைக்கறேன். ஆனா வூட்ட லேசா நெனச்சிராத. ஒலகத்துல இருக்கற எல்லா பொம்பளைங்களும் நல்லவங்கதான். மாமியாராவும் மருமவளாவும் ஆகாத வரைக்கும். ஆயிருச்சின்னா எப்பவேணா பத்திக்கும். அப்பிடி ஒரு நெலம வந்து நீ வூட்ட பாக்காம ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தன்னா, மக்கி மண்மேடா ஆயிரும் முத்து. தனியா போவணும்னுவா. அவ மூஞ்சிய திருப்பிக்கினு பூச்சி காட்டுவா. இவ மூக்க சிந்திக்கினு ஒப்பாரி வெப்பா. பாக்க சகிக்காது..’

அவனுக்கு சுவாரசியம் வந்துவிட்டது. நெருங்கி அவரருகே அமர்ந்து, ‘நீ எப்பிடிப்பா சமாளிச்ச?’ என்றான் புன்னகையுடன்.

‘ம்ஹ¤ம். ரொம்பக் கஷ்டப்பட்டேன். கல்யாணம் கட்டிக்கினு ரெண்டரை வருசம் தனியாத்தான் இருந்தேன். கிண்டியாண்ட எஸ்டேட் தாண்டி ஆத்தங்கரைல குடிசை ஒண்ணு பதிமூணு ரூவாய்க்கு வாடகை. நீ பொறக்கற வரைக்கும் அங்கதான். அப்பால என்னிக்கோ ஒருநாள் ஒரு வேகம் வந்து, வாடி நம்மூட்டாண்டன்னு இஸ்துக்கினு வந்துட்டேன். கொஞ்சநாள் நல்லா நடிச்சேன் முத்து. வூட்டாண்ட வந்தாலே சவுண்டு வுட்டுக்கினுதான் வர்றது. ஐயோ வந்துட்டானேன்னு நெனப்பா உங்கம்மா.. என்னியவிட எங்கம்மா தேவலன்னு அவ நெனைக்கற அளவுக்கு நடந்துக்கிட்டேன். அப்பால அவளுக்கும் ஒறவு சனம் பழகிருச்சி. உன்ன எல்லாரும் தூக்கிக் கொஞ்ச ஆரமிச்சாங்களா? அவளுக்கு அது போதும்னு தோணிருச்சி. ஊர் மேயற புருசன். ஒறவாச்சும் ஒழுங்கா இருந்தா போதும்னு விட்டுட்டா..’

‘நெசமாவே மாமியார் மருமவன்னா ஒத்துப்போவாதாப்பா?’

‘தெரியலடா.. ஆனா அப்பிடித்தான் இருக்குது. பதறாம குந்திக்கினு யோசிச்சிப் பாத்தா ரெண்டு பேருமே தனித்தனியா நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நம்ம மேல அவுங்க வெக்கற ஆசைதான் அப்பிடி மோதிக்க சொல்லுதுன்னு நினைக்கறேன்.’

‘அப்பசெரி. புத்தரு கரீட்டாத்தான் சொல்லிக்கிறாரு.’

தமிழரசன் புன்னகை செய்தார். ‘அது தப்பிச்சிக்கினு ஓடசொல்றதுடா.. கோழையாட்டமா இருப்பாங்க? ஆசை வெக்காதன்னா கரீட்டா ஒண்ணுத்தும்மேல வெக்காதன்னு அர்த்தம். எல்லாத்தையும் ஆசைப்பட்டுட்டா பிரச்னையே வராது பாரு. தபாரு, பொறந்த பாவத்துக்கு வாழ்ந்து தீக்கணும். வாழறதுக்கு சாட்சியா நாலு நல்லது பண்ணணும். இவ்ளோதான் மேட்டரு. நடுவுல நாம சுருண்டு வுழறமாதிரி ஆச்சின்னா அதுக்கு நாமதான் காரணமா இருக்கணும். அடுத்தவங்கள உள்ளார வுட்றகூடாது. அவ்ளோதான். புரியுதா?’

பலதும் புரிவது போலவும் எதுவுமே புரியாத மாதிரியும் இருந்தது அவனுக்கு. வியப்புடன் அவன் தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நண்பர்கள் அரக்க பறக்க ஓடிவந்தார்கள்.

‘இன்னாடா இந்நேரத்துல?’ வேகமாக எழுந்துகொண்டான் முத்துராமன்.

‘முத்து, கொஞ்சம் வரியா? ஒரு முக்கியமான சோலி..’ என்றான் ஜெயச்சந்திரன்.

அவன் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான். அவர் சிரித்தார்.

‘மணி ஒண்ணாவுதேன்னு பாக்கிறியா? போபோ.. இதத்தான் இம்மாநேரம் சொல்லிக்கினு இருந்தேன். உங்கம்மாவுக்கு நீ வந்தது தெரியாதில்ல? அந்தவரைக்கும் ஓக்கே. புரியுதா இப்ப?’

அவனும் சிரித்தான். வரேம்பா என்று கிளம்பினான்.

‘டேய், திரும்பவும் தண்ணிகிண்ணி போடாதிங்கடா.. போட்டது போதும்’ என்று குரலெடுத்துக் கத்தினார் தமிழரசன். அவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாகப் போனார்கள்.

மாந்தோப்பு ஸ்கூல் அருகே வந்ததும், ‘இங்கியே உக்காரலாம்டா’ என்றான் முத்துராமன். சுற்றுச் சுவரில் தாவி ஏறி முதலில் அவன் அமர்ந்தான்.

‘கால் வலிக்குது. அதுவும் இல்லாம காலீல வேலைவேற இருக்குது. இன்னிக்கி மூணு தெருவுல ரோடு போடுறாங்க..’

‘மாப்ள ஒரு முக்கியமான விசயம்டா.. உங்காளு குப்பத்தாண்ட கொள்த்திப் போட்டது யாருன்னு தெரிஞ்சிருச்சி..’

முத்துராமனுக்குச் சட்டென்று அந்தச் சொற்றொடரின் அர்த்தம் முழுவதுமாக உள்ளுக்குள் இறங்கவில்லை.

உங்காளு என்பதைத் தன் எதிர்கால மனைவி என்று மொழிபெயர்த்து உணரச் சில வினாடிகள் தேவைப்பட்டன. உணர்ந்ததும் ஆர்வமாகக் கேட்டான். யாரு?

‘டென்சன் ஆவாத. நம்ம வெறகுமண்டி மருதன் தான். மேலிடம் சொல்லித்தான் செஞ்சிருக்கான்.’

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

  • தொடங்கியவர்

அத்தியாயம் பத்து

பேசவேண்டும், வா என்று வரச்சொல்லி ஆளனுப்பியபோது சந்தோஷமாகத்தான் இருந்தது. வருவாள். பேசலாம். பேசாமலும் இருக்கலாம். ஆனால் பார்க்கலாம். பேச விருப்பமும் சந்தர்ப்பமும் கூடி வந்தால் பேசலாம். நினைத்ததைத்தான் பேச வேண்டுமென்பது கூட இல்லை. ஏதாவது பேசினால் கூட நன்றாகத்தான் இருக்கும். பேசாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுத் திரும்பினால் அதனைக் காட்டிலும்.

ஆனால் கிளம்பியபோது எதுவோ ஒன்று தடுத்தது. எதற்கு வரச்சொன்னோம் என்று நினைத்தான். பேசியே தீரவேண்டிய விஷயம் என்று ஏதுமில்லை. என்னமோ ஒரு பயம், பதற்றம், தவிப்பு. எனக்கு நீ சரியானவளா? இல்லை, இல்லை. உனக்கு நான் சரியானவனா என்று தெரியவில்லை என்று சொல்வதற்கா வரச்சொன்னோம்?

அவள் அச்சப்படலாம். கலவரப்படலாம். அல்லது ஏதுமற்ற வெறுமை வெளியில் தன்னைக் கரைத்துக்கொள்ளலாம். காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இம்மாதிரியான சங்கடங்கள் நேர வாய்ப்பில்லை. திடீரென்று எங்கோ முளைத்து வளர்ந்த இரு செடிகளைப் பிடுங்கி ஒரு தொட்டிக்குள் நடுகிற வேலை இது. கொஞ்சம் சிக்கல்தான். ஆனால் ரயில் ஓடும் என்றுதான் அப்பா சொல்லியிருந்தார். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆனால் தன் அரசியல் வெறிக்கும் வேகத்துக்கும் சாந்தி ஈடுகொடுப்பாளா என்கிற கவலை அவனை விடாமல் அரித்துக்கொண்டிருந்தது. என்னவாகப் போகிறோம் என்று தனக்கே தெரியாத சூழ்நிலை. உச்சிக்கும் அதலபாதாளத்துக்கும் மேலதிக தூர இடைவெளி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தால், அடுத்த வீடாகத்தான் இரண்டுமே இருக்கின்றன. எங்கும் விழலாம். இரண்டில் எதுவேண்டுமானாலும் தன்னுடையதாகலாம். இரண்டுக்கும் அவன் தயாராகத்தான் இருந்தான். ஆனால் சாந்தி தயாராக இருப்பாளா?

அதுதான் கவலையாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்துவிட்டால்?

பொதுவில் அவன் குப்பத்தைச் சேர்ந்த யாரும் இம்மாதிரியெல்லாம் யோசித்ததில்லை. ஆக்கிப்போட ஒருத்தி. அவ்ளோதானே? எல்லாத்துக்கும் சேத்துத்தாஞ்சொல்லுறேன் என்று பலபேர் அவன் காதுபடப் பேசியிருக்கிறார்கள்.

அவ்வளவுதானா? அவ்வளவு மட்டும்தானா?

இல்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. தன் தேருக்குச் சக்கரமாக அல்ல. தேரோடும் பாதையாக அவளால் இருக்க முடியுமானால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். பெருமூச்சு வந்தது.

மனிதன் சுயநலன்களால் ஆனவன். ரத்தமும் நரம்புகளும் உயிரும் உணர்வும் சுயநலத்தால் செய்யப்பட்டிருக்கிறது. பதிலுக்கு அவளுக்கு என்னவாகத் தன்னால் இருக்க முடியும்?

முத்துராமனுக்கு இந்தக் கேள்விதான் குடைச்சலைக் கொடுத்தது. பெரிய விஷயமல்ல. அடிப்படை மனிதாபிமானம். சக உயிரின் மீது கவியும் பரிவு. இதற்கு யாரும் மெடல் குத்தி, கைதட்டத் தேவையில்லை. ஆனால் தன்னால் அது முடியுமா?

அதுதான் தெரியவில்லை.

காத்திருந்தான். கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் நடுவே நின்றபடி தூரத்தில் விரையும் கார்களையும் பேருந்துகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். மேம்பாலங்களில் நிற்கிறபோது பாதுகாப்பாக இருப்பது போல் உணர முடிகிறது. கீழே விரையும் ரயில்களின் சத்தம் பாதுகாப்புப் படை வீரர்களின் அணி வகுப்புபோல் அவனுக்கு எப்போதும் தோன்றும். வீட்டில் இரவுப் பொழுதுகளில் தூக்கம் வராத போதெல்லாம் இதுதான் அவனுக்குத் தோன்றும். எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது.

அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது. சட்டென்று ‘அவ அஞ்சடி ரெண்டங்குலம்’ என்று பெண்பார்த்துவிட்டு வந்ததும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டான்.

ஒற்றைக் காகமொன்று உயரே பறந்து வந்து மின்சாரக் கம்பியில் அமர்ந்தது. முத்துராமன் திரும்பிப் பார்த்தான். சாந்தி நின்றுகொண்டிருந்தாள்.

புன்னகை இல்லை. பதற்றம் இல்லை. அச்சமோ, வெட்கமோ, ஏனென்ற கேள்வியோ எதுவுமற்ற முகபாவம்.

‘என்னமோ பேசணும்னு சொன்னிங்கன்னு உங்க சினேகிதக்கார் ஒருத்தரு வந்தாரு..’

‘அ.. ஆமா..’ என்ன பேசுவதென்று அவனுக்குச் சட்டென்று புரியவில்லை.

‘நல்லா புடிச்சீங்க சிநேகிதம். நேரா எங்கப்பாவாண்ட வந்து சொல்லிட்டாரு. அவரு என்னாடான்னா, மாப்ள பேசணும்னாருன்னா ஒடனே கெளம்புன்னு சொல்லிட்டு அவரும் கூட வந்திருக்காரு..’

சடாரென்று அதிர்ந்து நிமிர்ந்தான் முத்துராமன்.

‘அப்பா வந்திருக்காரா? எங்க?’

‘ஸ்டேஷனுக்கு வெளிய நிக்கிறாரு. நீ போயி பேசிட்டு வாம்மா, நா இங்கயே நிக்கிறேன்னாரு.’

முத்துராமனுக்கு பயமும் பதற்றமும் வெட்கமும் கலந்ததொரு உணர்ச்சி உண்டானது. என்ன மடத்தனம்!

‘இதென்னாடி புதுப்பளக்கம்னாங்க எங்கம்மா. சினிமாங்கள்ள பாத்திருக்கல்ல, சும்மாருன்னுட்டாரு அப்பா..’

‘சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல சாந்தி. நெசமாவே ஒரு முக்கியமான விசயம் பேசணும்னுதான் வரசொன்னேன். நான் பண்ணது தப்பு. பேசாம நேரா நானே உங்கூட்டுக்கு வந்திருக்கணும்’ என்றான் அவசரமாக.

அவள் ஒரு கணம் அவனை நிமிர்ந்து உற்றுப்பார்த்தாள். பெண் பார்க்க வந்திருந்த போதும் சரி, ஆல்பர்ட் தியேட்டர் வாசலில் பார்த்தபோதும் சரி. இவன் முகத்தில் இத்தனை பரபரப்பு இல்லை. பதற்றம் இல்லை. கவலை இல்லை. எனில், அப்படியென்ன தலைபோகிற விஷயம்?

அவன் தடுமாறினான். மிகவும் திணறினான். பேசத்தான் வேண்டும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று புரியவில்லை. உனக்கு நான் சரியாக இருப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்றா சொல்லமுடியும்? அல்லது என் கனவுகளுக்கு நீ குடை பிடிப்பாயா என்று கேட்கத்தான் முடியுமா?

‘எதுவானாலும் சொல்லுங்க.. டௌரி எதனா..’

‘ஐயோ.. சேச்சே..’ என்றான் அதே மாறாத பதற்றமுடன்.

‘அப்ப சரி. வேற எதுன்னாலும் ஓக்கேதான்’ சட்டென்று சிரித்தாள். அவனுக்கு சிரிக்கத் தோன்றவில்லை. தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். ஒரு விஷயத்தைப் புரியவைக்க வேண்டும். அந்த விஷயத்தில் தன் பயம் கலந்திருக்கிறது. சந்தேகம், கவலை இரண்டும் கூடக் கலந்திருக்கிறது. ஒரு பார்வையில் அது வெறும் அபத்தம். இன்னொரு பார்வையில் அர்த்தங்கள் பொதிந்தது. கவலைப்படாதே, நான் தயார் என்று அவள் சொல்லிவிடுவாளானால், மேற்கொண்டு ஒரு புன்னகையுடன் விடைபெற்றுவிடலாம். தன் கவலையை அவள் முகத்திலும் சிந்தையிலும் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்ப நேர்ந்தால் தூக்கம் வரப்போவதில்லை. அது நிச்சயம்.

‘நீங்க வேற யாரையாச்சும் லவ் பண்ணுறிங்களான்ன?’ என்றாள் திடீரென்று.

முத்துராமன் வியப்புடன் அவளைப் பார்த்தான்.

‘இல்ல.. டிவி சீரியல்ல நிறைய இந்தமாதிரி வருமில்ல? அதான் கேட்டேன்.

அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘அப்படி எதாச்சும் இருந்தா ஒனக்குப் பரவால்லியா?’

‘என்னா பண்ணமுடியும்? இதான் நம்ம தலையெழுத்துன்னு நெனச்சிக்கிட வேண்டியதுதான். இஸ்டமிருந்தா கட்டிக்கப்போறிங்க. இல்லன்னா, சர்தாம்போன்னு போவப்போறிங்க. அவ்ளோதானே?’

இவளிடம் பேசலாம் என்று சட்டென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. தடாலென்று, ‘உங்க குப்பத்துக்குத் தீவெச்சது யாரு தெரியுமா?’ என்றான் தொடர்பற்ற எல்லையிலிருந்து.

‘யாரு?’

‘எங்க கட்சிக்காரங்கதான்.’ சொல்லிவிட்டு அவள் முகத்தை உற்றுப்பார்த்தான். சலனமில்லை. வியப்பில்லை. அதிர்ச்சியில்லை. போன ஜென்மத்தில் அவள் ஒரு புத்தராகப் பிறந்திருக்கவேண்டும்.

‘ஓஹோ’ என்றாள் சாதாரணமாக.

‘ஒனக்கு இது ஷாக்கா இல்லியா சாந்தி?’

‘எதுக்கு? எல்லாந்தெரிஞ்சது தானே? உங்க கட்சிக்காரங்க இல்லாங்கட்டி வேற கட்சிக்காரங்க. ரெண்டும் இல்லன்னா பொறுக்கிப் பசங்க. வேற யாரு? எத்தினியோ வாட்டி பாத்தாச்சுங்க இதெல்லாம். பத்தவும் வெப்பாங்க. சோத்துப் பொட்டலம் குடுத்து மேலுக்கு எரநூறு ரூவா பணமும் குடுப்பாங்க. அவங்களுக்குப் பத்த வெக்கணும். நமக்கு பணம் வோணும். அவ்ளதானே!’

ஒரு கணம் அவனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. நாளிதழ்களும் புறக்கணிக்கும் தீவிபத்துச் சம்பவங்கள் தினசரி எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தீயைத் தண்ணீர் போல் அள்ளியெடுத்து முகத்தைக் கழுவிக்கொள்ளும் விதத்தில் அல்லவா பேசுகிறாள்.

அவனுக்குப் பேச்சு வரவில்லை. பேச ஏதுமிருப்பதாகவும் தெரியவில்லை. அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சாந்திதான் பேசினாள். ‘இதான் உங்க கவலைன்னா விட் ருங்க. எங்களுக்கு இதெல்லாம் பழகிருச்சி.’

‘அதில்ல சாந்தி.. எங்கவல வேற. இன்னிக்கி என் கட்சிக்காரன் எவனோ உங்க குப்பத்துல வந்து நெருப்பு வெச்சிருக்கான். நாளைக்கு என்னை போயி வைடான்னாங்கன்னா நான் போயித்தான் ஆவணும். அதப்பத்தித்தான் யோசிக்கறேன்’ என்றான் அமைதியாக.

  • தொடங்கியவர்

அத்தியாயம் பதினொன்று

எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. ஆனால் கண் விழித்தபோது மணி ஏழரையாகியிருந்தது. விடிந்ததும் முதல் நினைவாக முந்தைய நாள் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சாந்தியுடன் பேசியதுதான் முந்திக்கொண்டு வந்து நின்றது. ஆர்வமும் தயக்கமும் காரணமற்ற பயமும் பதற்றமுமாகப் பேசியதெல்லாம் சரிதான் என்று உறக்கம் வரும்வரை தோன்றியது. ஆனால் இதென்ன? விழித்து எழுகிற நேரத்தில் அத்தனையும் அபத்தமாக அல்லவா தெரிகிறது?

முத்துராமனுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. தன் தெளிவின்மையை வலுக்கட்டாயமாக அவளது சிந்தனைக்குள் திணித்துவிட்டோமோ என்று நினைத்தான். என்ன பெரிய அரசியல், புடலங்காய்? ஆபத்தும் பிரச்னைகளும் இல்லாத துறை ஏதுமுண்டா? முட்டி மோதி முன்னுக்கு வர விரும்புபவனுக்கு வலிகள் குறித்த ஞாபகம் வருவதே ஆடம்பரமல்லவா? என்ன அபத்தம்! தேரோட்டம் தாங்கும் பூமியாக ஏன் அவள் இருக்க வேண்டும்? ஏற்றி உட்காரவைத்து ஓட்டிப்போகிறேன் என்று சொல்லத் துப்பில்லாதவன் அரசியலில் மட்டும் என்ன கழற்றிவிட முடியும்?

உடனே ஓடிப்போய் முந்தைய நாள் பேசிய அனைத்தையும் அவள் மனத்திலிருந்து அழித்துவிட்டு புதிதாக ஒன்று எழுதி நிரப்ப முடியாதா என்று நினைத்தான். சிரித்துக்கொண்டான்.

குளித்து, சாப்பிட்டுக் கிளம்பும்போது அம்மா கேட்டாள்: ‘எப்படா வருவ?’

‘தெரியலம்மா.. எப்பவும்போலத்தான்.’

‘உங்க சித்தப்பா பேசணும்னிட்டுப் போனாரு. முடிஞ்சா வூட்டாண்ட ஒரு நடை வந்துட்டுப் போவ சொன்னாரு.’

‘வந்திருந்தாரான்ன?’

‘அக்காங். நேத்திக்கி வந்தாரு. நீ வர்றதே இல்லன்னிட்டு ஒரே பாட்டு. உங்கப்பாவுக்கு என்னாமோ மருந்து ஒண்ணு குடுத்துட்டுப் போனாரு. தேச்சி ஊறவெச்சிக் குளிச்சா குதிகால் வலி இருக்காதாமா.. போய்தான் பாத்துட்டு வாயேன் ஒருதாட்டி. இன்னா பெரிசா வெட்டி முறிக்கற?’

முத்துராமன் சிரித்தான். ஒரு வகையில் அவள் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை. வெட்டி முறிக்க ஏதுமற்ற வாழ்க்கையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் வந்தால் துணி தைக்கும் வேலை சரியாக இருக்கும். சாதாரண தினங்களில் குப்பத்து மனிதர்கள் புதுத்துணி எடுக்கிற வழக்கமில்லாமல் இருக்கிறது. கிழிந்த துணிகளைத் தைத்துப் போட்டுக்கொள்கிறவர்களும் அரிதாகி இருக்கிறார்கள். வண்ணங்கள் மிகுந்த வாழ்வைக் கிழிசல்களின் வழியே தரிசிப்பது பழகிவிட்டிருக்கிறது.

பொதுவாக அவன் தையல் பணிகளை இரவுகளில் மட்டுமே வைத்துக்கொள்வான். ஊர் உறங்கிவிட்ட இரவுகள். ஓடும் தையல் இயந்திரத்தின் கைச்சக்கரத்துடன் தன் கனவுகளைச் சுழற்றியபடி பணியாற்றுவதுதான் அவனுக்கு வசதி. இத்தனை நாள் வாய்க்காத ஒரு சந்தர்ப்பம் இப்போது கூடி வந்திருக்கிறது. வட்டச் செயலாளருடனான நெருக்கம். தனிப்பட்ட லாபம் ஏதுமில்லாது போனாலும் குப்பத்துக்கு ஒரு தாற்காலிக விடிவு. இன்றைக்குக் கொசு ஒழிப்புப் பணிகள் ஆரம்பமாகப் போகிறது. சாக்கடைகளுக்கு சிமெண்ட் பூசிய கால்வாய். கால்வாய்களுக்கு காங்கிரீட் மூடி. சந்து தோறும் கொசு மருந்து. ஆற்றங்கரையோரம் குப்பை ஒழிப்பு.

எப்படியும் இரவாகிவிடும். இடையில் நேரம் கிடைத்தால் அவசியம் சித்தப்பாவைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டான். அவனது தந்தையைக் காட்டிலும் சித்தப்பாவுக்கு அரசியலில் வெறியும் வேகமும் அதிகம். அவர் மாற்றுக்கட்சி. அண்ணனும் தம்பியும் அரசியல் பேசிக்கொள்ளத் தொடங்கினால் பெரும்பாலும் சண்டையில் முடியும். ஒவ்வொருவரின் தலைவரும் அடுத்தவருக்கு ஏனோ பிடிக்காமலேயே இருக்கிறார்கள். தலைவர்களும் கொள்கைகளும். கொள்கைகளும் முழக்கங்களும்.

இருவரும் ஒருவரை ஒருவர் உருப்படமாட்ட என்றுதான் இறுதியில் ஆசீர்வதித்துக்கொள்வது வழக்கம். ஏழை சொல் அம்பலமேறாவிட்டாலும், ஏழையின் வாழ்த்து பலிக்கத்தான் செய்கிறது. இரண்டு பேருமே அரசியலில் இறங்கி உருப்படாமல்தான் போனார்கள்.

‘தபார் நாகராஜு. நாம அடிச்சிக்கிட்டு என்னா ஆவப்போவுது? எங்கட்சில என்னால மேல வரமுடியல. உன் கட்சில உன்னால மேல வரமுடியல. தொண்டனா இருந்து ரிடையர் ஆவுடா சோம்பேறின்னு நம்ம தலைல எழுதிவெச்சிட்டான் கம்னாட்டி. ஒண்ணு புரிஞ்சிருச்சி எனக்கு. கொள்கை பாத்து கட்சில சேந்த நாம ரெண்டு பேருமே வெளங்காமத்தான் இருக்கம். நாலு காசு சில்ற தேறுமா, ஒரு போஸ்டு கிடைக்குமான்னு கணக்கா ப்ளான் பண்ணி நமக்கு அப்புறம் உள்ளார வந்த அத்தினி பேரும் மேல பூட்டானுக. பத்து லட்சம் வாட்டி வால்க கோசம் போட்டிருப்பமா? நல்லாத்தான் வாழறானுக. நாம வாழறமான்னு கண்டுக்கத்தான் ஒரு நாதி இல்லாம பூட்ச்சி..’

நல்ல போதை ஏற்றிக்கொண்டு வீட்டில் சாப்பிட உட்கார்ந்த ஒரு தினத்தில் அவனது தந்தை தன் தம்பியிடம் பேசியது அவனுக்கு வரி வரியாக மனத்தில் ஓடியது. பரிமாறிக்கொண்டிருந்த அம்மா அவள் பாட்டுக்குப் புலம்பிக்கொண்டேதான் இருந்தாள் கடைசி வரை. எதுக்குய்யா இந்த சனிய கட்டிக்கிட்டு அல்லாடுறிங்க? விட்டுத் தொலைச்சிட்டு வேற எதுனா சோலி பாக்கவேண்டியதுதானே?

அன்றைக்குத்தான் அவன் முடிவு செய்தான். அரசியலில் அவனது நோக்கம் பதவி. மேலே வருவது. உதைத்துக்கொண்டு பாயும் ஒரு குதிரையைப் போல நிற்காமல் ஓடி வெல்வது. கொள்கைகள் அவசியம் வேண்டும். மேடைப்பேச்சுக்கு அது இல்லாமல் முடியாது. ஆனால் மேடைக்குப் பின்னால் வேண்டியவை என்னென்ன என்று தெரிந்துகொள்ளாமல் இருப்பது அபத்தம். இன்றைக்குக் கிடைத்திருக்கும் வட்டச் செயலாளரின் நெருக்கமும் அண்மையும் கண்டிப்பாகத் தன் வாழ்வில் ஒரு படி மேலேறச் செய்கிற விஷயம்தான் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. ஏறிய படியில் நிலைத்து நிற்க முதலில் கொசு மருந்து அடித்தாக வேண்டும். அப்புறம் சந்தர்ப்பம் கிடைத்தால் சித்தப்பாவைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது.

சித்தப்பா, நீங்களும் அப்பாவும் விட்ட இடத்தில் நான் ஜெயிக்கப் போகிறேன். தொலைத்த சில்லறையை நோட்டாக மாற்றி எடுக்கப் போகிறேன். நம்புவீர்களா? ஆசீர்வதிப்பீர்களா?

‘உருப்பட மாட்ட’

அவரது கரகரத்த குரல் மனத்துக்குள் ஒலித்தது. இப்போதும் சிரித்துக்கொண்டான்.

முத்துராமன் ஆற்றங்கரைக்கு வந்தபோது அங்கே வட்டச் செயலாளர் வந்து அமர்ந்திருந்தார்.

‘ஐயா.. வாங்க, வாங்க.. எப்ப வந்திங்க?’

‘இப்பத்தான் வரேன் முத்து.. உன்னியத்தான் கேட்டேன். இல்லடா?’ என்றார் பின்புறம் திரும்பி.

‘அ, ஆமாங்க. தம்பி எங்கன்னு கேட்டுக்கிட்டேதான் வந்தாரு.’

‘கொஞ்சம் தூங்கிட்டேங்க.. நைட்டு லேட்டாயிருச்சி..’

‘அதெல்லாம் பரவால்லப்பா.. எப்பிடி நடக்குது வேலைங்க? நேத்திக்கி கார்ப்பரேஷன் கமிசனர் பேசினாரு. சொந்தக் காசப் போட்டு நல்ல காரியம் பண்றிங்கன்னாரு. அதுக்குத்தானே பொதுவாழ்க்கைல இருக்கறது? என்ன நாஞ்சொல்றது?’

‘கண்டிப்பாங்க. நியாயமா பாத்தா கார்ப்பரேசன் செய்யவேண்டிய வேலைங்க இது. கொசு மருந்து அடிக்க சொல்லி எத்தினிவாட்டி மனு குடுத்திருப்பமோ கணக்கே கிடையாது. கரீட்டா தீவாளிக்கு மறுநாள் வந்து அடிப்பான். ஏழை பாழைங்க கிட்ட காசு கேக்க எப்பிடி மனசு வருதோ தெரியாது. என்னாத்த சொல்லி என்னங்க? உங்கள மாதிரி யாரானா பெரிய மனசு பண்ணாத்தாஞ்சரி.’

வட்டம் சட்டென்று எழுந்து அவன் தோளில் கைபோட்டுத் தனியே அழைத்துப் போனார்.

‘ஒரு விசயம் முத்துராமா.. நம்ம பசங்க செலராண்ட சொல்லி பத்திரிகைங்களுக்கு நியூஸ் வுட அனுப்பியிருக்கேன். எப்பிடியும் இன்னிக்கி நாளைக்குள்ள நாலஞ்சு பேரு வந்து பாப்பானுக. அந்த நேரம் நான் இங்க இருந்தா நல்லா இருக்காது. நீ என்னா செய்யி, யார் வந்து கேட்டாலும், கரெக்டா இந்த மேட்டர மட்டும் சொல்லிடு. நான் திங்கற சோறு, நம்ம தலைவர் போட்ட பிச்சை. மக்கள் குடுத்த வரம். என்னை வாழவெக்கற தலைவருக்கும் மக்களுக்கும் என்னால என்ன செய்யமுடியும்? நானும் ஏழைதான். கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறேன். அந்தப் பணத்த இந்தமாதிரி காரியங்கள்ள செலவு பண்றதுதான் நம்ம தலைவருக்கு சந்தோசம் தரக்கூடிய விசயம். முழுக்க முழுக்க தலைவர் பேராலதான் இத செய்யறேன். என் க்ரெடிட்டுன்னு இதுல ஒண்ணூம் கிடையாது. அப்பிடின்னு நான் சொன்னேன்னு சொல்லிரு..’

முத்துராமனுக்கு வியப்பாக இருந்தது. பேட்டிகள் வாய்ப்பு வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும்?

‘அட நீ ஒருத்தன்யா.. நான் பேசக்கூடாது முத்து.. இப்ப பேசினா அது நல்லாருக்காது. விசயம் பெரிசாவணும். அத்தினி பேரும் இத பாராட்டணும். நியூஸ் பாத்துட்டு தலைவர் கூப்டு பேசணும் என்னிய. நான் பேசி இதுவரைக்கும் ஒண்ணும் வெளங்கல. அவரு என்னிய கூப்ட்டு பேசினாத்தான் நான் நெனச்சது நடக்கும். புரியுதா?’

‘சர்தாங்க’ என்றான்.

‘பாத்துக்க. எங்கியும் போயிராத. மத்த பசங்கள பேச வுட்றாத. உன்னியத்தான் நம்பறேன்’ என்று தோளில் தட்டிவிட்டு வண்டியேறிப் போனார்.

மாலை வரை பம்பரமாகச் சுற்றி வேலைகளை கவனித்தான். குப்பத்தில் பாதி இடங்கள் முழு சுத்தமாகிவிட்டது போலிருந்தது. சாலைகள் திடீரென்று பளிச்சென்று தென்பட்டன. பல குடிசைகள் ஓலை மாற்றப்பட்டுக்கொண்டிருந்தன. மாற்றம் இப்படித்தான். திடீரென்று வரும். சொல்லாமல் கொள்ளாமல். ஆனால் வராமல் போய்விடுமா என்ன?

ஆறு மணி வாக்கில் அவன் சித்தப்பாவைப் பார்க்கப் போகலாம் என்று கிளம்பியபோது இரண்டு பைக்குகள் வழி மறித்தன. கட்சிக்கார ஆட்கள்தான்.

‘முத்து.. உன்னிய நம்ம தங்கவேல் அண்ணன் கையோட இட்டார சொன்னாரு. இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்திருக்காரு. அபீத் காலனியாண்ட இருக்காரு.’

எம்.எல்.ஏ.

முத்துராமன் உஷாரானான்.

  • தொடங்கியவர்

அத்தியானம் – 12

எம்.எல்.ஏ. தங்கவேலு, அடுத்த தேர்தலுக்குப் பிறகும் எம்.எல்.ஏவாக நீடித்து கட்சியும் எந்தப் பிரச்னையுமின்றி ஆட்சியமைக்குமானால் கண்டிப்பாக அமைச்சராகிவிடப் போகிறார் என்று பேட்டையில் பேசாத வாய் கிடையாது. கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கைகூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்குத் தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரண்டு செண்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும். அவரிடம் இரண்டும் இருந்தது. இரண்டு பெட்ரோல் பங்குகளும் ஆறு ஒயின் ஷாப்புகளும். போதாது? தவிரவும் தேனிக்குத் தெற்காக அம்மாபட்டியைத் தொட்டுக்கொண்டு அவருக்கு ஒரு இருநூறு, இருநூற்றைம்பது ஏக்கரில் ஒரு எஸ்டேட் இருப்பதாகச் சொல்லுவார்கள். எம்.எல்.ஏ. அதனைத் தோட்டம் என்றே குறிப்பிடுவார். என்ன பயிரிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது. ‘மானம் பாத்த பூமில என்ன பெரிசா வெளஞ்சிரப் போவுது? நம்ம சொந்தக்காரப் பையன் ஒருத்தன் அங்க இருந்து பாத்துக்கிடுறான். அவனுக்கு ரெண்டு வேளை கஞ்சிக்காச்சேன்னு களுத, வாங்கிப் போட்டுவெச்சேன்’ என்பார்.

ரசீது நோட்டுடன் யார் வந்தாலும் ஐநூற்றி ஒரு ரூபாய், கூழ் ஊற்றும் திருவிழா என்றால் ஐயாயிரத்தி ஒரு ரூபாய், ஒரு பொதுக்காரியம் என்றால் முதல் வரிசையில் உட்கார்ந்து, திரும்பிப் பார்க்காதவர்களுக்குக் கூட இரு கரம் கூப்பிய வணக்கம் என்று பிராந்தியத்தில் அவர் ஒரு நிரந்தரப் பிரபலம். இரண்டு முறை எதற்கோ கட்சி சார்பில் சிறை சென்றிருப்பதாகச் சொல்லுவார். ஆனால் கட்சிப் போராட்டங்களின் வரலாறு என்று எழுதப்பட்ட சிறு வெளியீடுகளில் அவரது பெயர் ஏனோ விடுபட்டுவிட்டது. அதனாலென்ன? தலைவரின் நம்பிக்கைக்கு உரியவர். தவிரவும் ஒன்றிரண்டு அமைச்சர்களுக்கு வலக்கரம் மாதிரி செயல்படுபவர். சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.

ஆனால் எதற்காகத் தன்னைக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்? முன்பின் அறிமுகம் கிடையாது. பெயர் தெரிந்திருக்கக் கூட நியாயமில்லை. பேட்டையளவில் பிரபலம் என்று கூடச் சொல்லமுடியாது. கொடி கட்டி, விசிலடிக்கும் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரிசைத் தலைவர்கள் விற்பன்னர்கள் இல்லை. சில பொதுக்கூட்டங்களில் அவர்கள் சில உத்திகளைக் கையாள்வார்கள். முத்துராமன் ரசித்திருக்கிறான்.

‘நாஞ்சொல்றது சரியில்லே, தப்புன்னு யாரானா ஒருத்தர் சொல்லுங்க பாக்கலாம்? அந்தா.. உக்காந்துக்கினு இருக்குறாரே ராமசாமி.. அவர கேட்டுப்பாருங்க.. சொல்லு ராம்சாமி.. ஒனக்குத் தெரியுமில்ல? கேளுங்கப்பா.. இதுல என்னா வெக்கம்? அந்தா, அங்க..அங்க வெள்ள ஷர்ட்டு போட்டுக்கினு இருக்கறது.. லே.. நம்ம சுப்ரமணிதானே நீயி? நீ சொல்லேம்பா..’

நூற்றுக்கணக்கான மனித உடல்களால் நிரம்பிய மைதானத்தில் எப்போதும் உண்டு ஆயிரக்கணக்கான ராமசாமிகள் மற்றும் எண்ணிக்கையிலடங்கா சுப்பிரமணிகள். தன் பெயரைத் தலைவர் மைக்கில் உச்சரித்ததும் எழும் உத்வேகத்தில் எழுந்து நின்று வாழ்க, வாழ்க என்று கத்தும்போது எழும் உணர்ச்சி, கூட்டத்தின் ரத்த நாளங்களில் கலந்து நிறையும். ஆனால் ஒருபோதும் எந்த ராமசாமி, எந்த சுப்பிரமணி என்று யாரும் கேட்டுவிட முடியாது. இன்னொரு கூட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதால் தலைவர்தம் சிற்றுரையை அத்துடன் முடித்துக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுவிடும்.

முத்துராமனுக்கு அதுதான் வியப்பு. தங்கவேல் அண்ணன் சரியாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆத்தங்கரைக் குப்பத்து முத்துராமன். தமிழரசனின் மூத்த மகன். டைலராக இருப்பவன். பெரிய கம்ப சூத்திரமில்லை. யாராவது சொல்லியிருப்பார்கள். வட்டத்தின் காசில் குப்பத்தைச் செப்பனிடும் வாலிபன். அண்ணன் ஏன் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. கண்டிப்பாகப் பொதுநல நோக்கம் தாண்டி ஏதாவது ஒரு புனிதமான நோக்கம் இருந்தே தீரவேண்டும். என்ன ஏது என்று கொஞ்சம் விசாரிக்க வேண்டியது ஜனநாயகக் கடமை.

வேறென்ன இருந்துவிட முடியும்? முத்துராமன் யோசித்தான். ஒருவகையில் இதைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எம்.எல்.ஏ. தங்கியிருந்த அபீத் காலனி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து, தான் வந்திருக்கும் விஷயத்தை வாசலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.

அது தங்கவேலு அண்ணனின் சகலை வீடு. முத்துராமனுக்குத் தெரியும். கடந்த தேர்தல் நேரத்தில் அங்கு வைத்துத்தான் பகுதிக்கான பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பிரம்புக்கூடையில் கட்டுக் கட்டாகப் பணத்தை நிரப்பி, சோபாவுக்கு அடியில் வைத்திருந்தார் அண்ணன். கால் மேல் கால்போட்டு சோபாவில் அமர்ந்த வண்ணம் ஒவ்வொரு செயல்வீரராக அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தையின் இறுதியில் திருப்தி ஏற்பட்டுவிடுகிற பட்சத்தில் சோபாவுக்கு அடியிலிருந்து பிரம்புக்கூடை வெளியே இழுக்கப்படும். ஒரு நோட்டு, இரண்டு நோட்டு, ஐந்து நோட்டு, பத்து நோட்டு. ஒரு நோட்டு என்பது ஒரு கட்டு. இதுதான் கணக்கு. ‘எலேய், ஆனைக்கு அல்வா வாங்கிப் போட்டாலும் ஒரு வரி எளுதி வெச்சிரு. முன்னமாதிரி இல்ல இப்பல்லாம். பாத்து நடந்துக்குங்கடா..’

பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்த சக தொண்டர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் பரவசத்தையும் தூர இருந்து முத்துராமன் பார்த்திருக்கிறான். அவனுக்கு அப்போது பணத்தைத் தொட்டுப்பார்ப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. தலைவரை அருகே பார்த்து வணக்கம் சொல்லி, பதில் வணக்கம் பெற முடிந்தால் பெரிய விஷயம் என்று நினைத்திருந்தான்.

அதே வீடுதான். அதே முத்துராமன் தான். அதே தங்கவேல் அண்ணன்தான். ஆனால் வந்திருக்கும் காரணம் வேறு. தவிரவும் ஓர் அழைப்பின் பேரில் வர நேர்ந்திருக்கிறது. இது விசேஷம். எதிர்பாராதது. ஏதாவது நடக்கும். நடக்கத்தான் வேண்டும். நகர்ந்துகொண்டிருப்பதாக உணர முடிந்தால் போதும். ஓட்டத்துக்கான காலம் வரும்போது யாராவது பிடித்துத் தள்ளிவிடுவார்கள்.

‘அண்ணன் உள்ள வரசொல்றாரு.’ குரலைப் பின்பற்றி அவன் உள்ளே போனான்.

விசாலமான வரவேற்பறை. பெரிய பெரிய அல்சேஷன் நாய்கள் மாதிரி அறையெங்கும் கனத்த சோபாக்கள் வியாபித்திருந்தன. நடுவே விரித்திருந்த பூப்போட்ட கம்பளத்தின்மீது ஒரு டீப்பாய். அதன் கண்ணாடி முகத்தின்மேல் கட்சிப் பத்திரிகை. மூலைக்கொரு அறை. நடு வீட்டில் நட்ட கொய்யாமரம் மாதிரி உயரே எழுந்து போன மாடிப்படிகள். பணத்தின் செழுமையில் பளபளத்த சாண்டலியர் விளக்குகள். இங்கே எடுபிடி. அங்கே நெற்றி நிறைய அகலக் குங்குமமிட்ட எம்.எல்.ஏ மனைவியின் சகோதரி.

‘வா முத்து.. நல்லாருக்கியா?’ என்றார் எல்.கே.ஜியிலிருந்து +2 வரை ஒரே ஸ்கூலில் படித்த பாவத்துடன்.

‘இருக்கேண்ணே. ஆத்துப்பக்கம் போனேன். நீங்க வரசொன்னிங்கன்னு ஆளு வந்து சொன்னதுல அப்புடியே ஓடியாந்துட்டேன். டிரெஸ்ஸ¤ கூட மாத்தல.’

‘ஒழைக்கறவன் என்னிக்குய்யா வேளைக்கு ஒரு டிரெஸ்ஸ¤ மாத்தியிருக்கான்? ஊரு முழுக்க தீவாளிக்கு துணி தச்சிக் குடுப்ப. என்னிக்கானா உனுக்குன்னு ஒண்ணு ஆசைப்பட்டு தச்சிருப்பியா? இல்லல்ல? அதான் சொல்றேன். உக்காரு. என்ன சாப்புடற?’

‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ணே. உங்கள பாத்ததே சந்தோசமாயிருச்சி.’

‘இருக்கட்டும். தங்கச்சி, நம்ம முத்துராமனுக்கு ஒரு காப்பி எடுத்தா..’ என்றார் உள்ளே பார்த்து.

காப்பி வந்து, அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை எம்.எல்.ஏ. பேசாதிருந்தார். முடித்துவிட்டு வைத்ததும், ‘குடிச்சிட்டியா? சரி, ஆரமிப்பம். சிங்காரம் என்னா சொல்றான்? அடுத்த எலக்சன்ல எம்.எல்.ஏ. ஆயிரணுமாமா? உங்க குப்பத்துல என்னமோ சமுதாய பொரச்சியெல்லாம் பண்றானாம்?’ என்று முதல் வரியில் விஷயத்துக்கு வந்தார்.

முத்துராமனுக்கு அதிர்ச்சியாக ஏதுமில்லை. ஆனாலும் சில வினாடிகள் தயங்கினான். இப்போது பேசுகிற ஒவ்வொரு சொல்லும் முக்கியம் என்று தோன்றியது. ஆகவே, ஜாக்கிரதையாக, ‘தெரியலண்ணே. அடிக்கடி போயிப் பாப்பம். ரொம்ப கஸ்டப்படுறோம், எதுனா செய்ங்கண்ணேன்னு கேப்போம். சர்தாண்டா செய்யிறேன், செய்யிறேன்னுவாரு. என்னா தோணிச்சோ, இப்பம் வந்து ரோடு போட்டுத்தாரேன், கொசு மருந்து அடிக்கறேன்னு செய்யிறாரு.. எல்லாம் முடிஞ்சதும் ஒரு நற்பணி மன்றம் மாதிரி ஆரம்பிச்சி, நம்ம தலைவரு பேரு போட்டு கல்லு தொறக்கணும்னு சொன்னாருண்ணே.’

‘ஓஹோ’

ஒரு கணம் யோசித்துவிட்டு ‘நீங்க சொல்லித்தான் செய்யிறாருன்னு நாங்க நெனச்சிக்கிட்டிருக்கம்ணே..’ என்றான்.

‘நாஞ்சொல்லீயா? நீவேற! பாரு, இந்தாளு செய்யறதெல்லாம் கார்ப்பரேசன் விதிமுறைங்களுக்கு எதிரா போவுது. என்னாத்த நெனச்சி செய்யறான்னே தெரியல. என்னாண்டகூட ஒரு வார்த்த சொல்லல. கமிசனரு என்னாண்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு முத்து.’

‘அடடா..’ என்றான் பட்டும்படாமலும்.

‘நான் தலைமையகத்துல விசயத்த சொல்லிட்டேன். இந்தமாதிரி ஸ்டண்டு அடிச்சிக்கினு இருக்காரு. பின்னால எதுனாச்சும் ப்ராப்ளம்னு வந்தா நான் பொறுப்பில்லன்னிட்டேன். செலவு பண்றது முளுக்க கள்ளப்பணம். மாட்னா அப்பன் தாவு தீந்துரும். அந்தாளுக்கு கட்சி மேலிடத்துல நல்ல பேரு இல்லய்யா.. இருவது வருசமா இருக்காரேன்னு, பாத்தா ஒரு வணக்கம் போடுவாங்க. அத்தோட செரி.’

முத்துராமன் உஷாரானான். மிகவும் கவனமாகக் குரலைத் தாழ்த்தி, ‘இதெல்லாம் தெரியாதாண்ணே.. நம்ம தொகுதில உங்க ஒருத்தரவிட்டா வேற யாருக்குமே செல்வாக்கு கிடையாதுண்ணே. போன எலக்சன எடுத்துக்கங்க. உங்களுக்கு பதிலா வேற யாருக்கானா டிக்கெட் குடுத்திருந்தாங்கன்னா டெபாசிட் தேறியிருக்குமா? நீங்களே சொல்லுங்க. உங்களுக்குத் தெரியாததில்ல. உங்க மூஞ்சிக்குத்தாண்ணே எல்லாம்..’

சட்டென்று எம்.எல்.ஏவின் முகம் ஒரு பூவைப்போல் மலர்ந்துவிட்டது. ‘பாரு. படிக்காதவன் ஒனக்குத் தெரியுது. அந்தப் பன்னாடைக்குத் தெரியல. ஒரு குப்பத்துல கொசு மருந்தடிச்சிட்டா அடுத்த எலக்சன்ல டிக்கெட் கிடைச்சிரும்னு நினைக்கறான்.’

முத்துராமன் தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

‘தபாரு முத்து.. உங்கப்பா காலத்துலேருந்து.. ஏன் அவங்கப்பா காலத்துலேருந்து உங்க குடும்பத்த எனக்குத் தெரியும். நீதான் இதுவரைக்கும் என்னாண்ட வராம இருந்துட்ட. இப்ப சொல்லுறேன். சிங்காரம் சங்காத்தம் ஒனக்கு வேணாம். அவன் என்னா செலவு பண்றான்ற வெவரத்த மட்டும் சப்ஜாடா என்னாண்ட வந்து சொல்லிரு. மத்தத நான் பாத்துக்கறேன்.. அதுசெரி.. நீ கார்ப்பரேசன் எலக்சன் வந்தா நிப்பியா? நான் டிகிட் வாங்கித் தரவா? இன்னும் மூணு மாசத்துல வந்துரும்யா..’

முத்துராமன் மனத்துக்குள் துள்ளிக் குதித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.