Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன?

Featured Replies

யாழ்ப்பாண குடாக்கடல் மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் டைனமைற் மூலம் மீன்பிடி என்பது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் சாதாரண விடயமாகும். டைனமைற் ரக வெடி பொருட்களை நீர்மட்டத்திற்கு மேலாக வெடிக்க வைப்பதன் மூலமாக எதிர்பாராத அதிர்வ லைக்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மீன்களையும் கொன்று அறுபடை செய்வதே அந்த நுட்பமாகும்.

 

அந்தவகையிலேயே தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி, ஜெலிக்னைற் குச்சிகள் கடத்தப்பட்டு பிடி படுகின்ற கதை அமைகின்றது. யாழ். குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இத்தகைய டைனமைற் மீன்பிடியை கடற்படையின் மூலம் முன்னெடுப்பது ஒன்றும் புதிதல்ல.


தேவையான வெடிபொருட்களுக்காக எறிகணையொன்றை வெட்டிப்பிளக்க முற்பட்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததும் பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கலாம்.

 

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான வசந்தன். குருநகரை சொந்த இடமாகக் கொண்டவராவார். இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கின்ற வெடிபொருட்களை மீட்டெடுத்து இத்தகைய மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு விற்பதென்பது சிலருக்கு தொழிலாகவே இருக்கின்றது.


புதுக்குடியிருப்பு பகுதியில் அகப்பட்ட ஒரு பகுதி வெடிபொருட்களை குருநகர் மீனவர்களுக்கு விற்பதற்கு வசந்தன், விலை பேசியிருந்தார். கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்த இரு தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டினால் வசந்தன் காட்டிக்கொடுக்கப்பட்டு சகபாடியுடன் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டார்.

கூடவே அவரது நண்பர் ஒருவரும் இந்தப் பொறியினுள் சிக்குண்டிருந்தார். சுலபமாக தான் தப்பிக்க வழிதேடிய வசந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனின் ஆதரவாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளார்.


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும், கூட்டமைப்பின் வெற்றிக்காக சிறீதரன் அலுவலகத்தில் வசந்தன் சிறிதுகாலம் பணியாற்றியிருந்தார்.

 

இதை தவிர அவர் எவ்வகையிலும் அந்த அலுவலகத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. வெடிபொருள் சகிதம் ஒருவர் அகப்பட்டுக் கொண்ட விடயம் சிறீதர் தியட்டர் பக்கம் சென்றடையவே, நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இரையொன்று பொறியில் அகப்பட்டவிட்டதாக தியட்டர்காரர்கள் மகிழ்ச்சி கொண்டாடினார்கள்.


சிறீதரன் அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது அவர்களது வலது, இடது கரங்களாக இருந்துவரும் வேழமாலிகிதன் மற்றும் பொன்காந்தனை சிக்கவைக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.

 

கிளிநொச்சியில் அரசியல் செய்து கொண்டிருக்கும் சந்திரகுமாரின் கோரிக்கையின் பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்து அவசர அவசரமாக றுசாங்கள் எனப்படும் ஈ.பி.டி.பி உறுப்பினரும், தன்னையொரு ஊடக மேதாவி எனக்காட்டிக் கொள்பவருமான றுசாங்கன் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டார்.


வசந்தன் சகிதம் கிளிநொச்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவொன்று தேடுதல் என்ற பெயரில் தன்னிச்சையாக ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் சென்று தேடுதலை தொடங்கினர்.

 

இத்தேடுதல் தொடர்பாக மக்கள் பிரதிநிதி என்றவகையில் தமக்கு தகவல் கூட பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் வழங்கியிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.


சி.சிறீதரனின் அலுவலகம் என்பது எந்தவொரு இரகசியமும் அற்ற ஒரு எளிமையான அலுவலகமே சமயலறை என்பதில் என்றுமே சமையல் நடந்ததில்லை. மூன்றுவேளை உணவுகளும் எங்கேனும் உணவகத்திலிருந்து எவரனும் காசு கொடுத்தே வாங்கி வருவார்கள்.

 

இரவு வேளைகளில் படுப்பதற்கு பாய் ஒன்றுக்காக ஆதரவாளர்கள் பிடுங்குப்பட்டுக் கொள்வதை சாதாரணமாக பார்க்க முடியும். இருக்கின்ற ஒரேயொரு மலசலகூடத்திற்கும் கூட நீண்ட வரிசையொன்று காத்திருக்கும்.

தேவைகளையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ள ஒரு நீண்ட மக்கள் கூட்டம் நாள்தோறும் அங்கிருக்கும். புலம்பெயர் தேசத்து உறவுகளது உதவிகள் எதோ பகிர்ந்தளிக்கப்பட்டு எவரையுமே வெறுங்கையுடன் செல்ல அங்கிருப்பவர்கள் அனுமதிப்பதில்லை.

 

ஆகக்குறைந்தது ஒரு உணவுப் பொட்டலம் ஏனும் கிடைக்கும் என்கிறார் கிளிநொச்சியை சேர்ந்த பொதுமகன் ஒருவர். அபிவிருத்தி, இயல்புவாழ்வு எனக்கூறிக் கொண்டு அரசியல் செய்ய வந்த பலரும் வடகிழக்குப் பகுதிகளில் தொடரும் இராணுவ ஆட்சியினால் கந்தறுந்து போயிருக்கின்றனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் மக்களுக்காக அஞ்சாமல் குரல் கொடுப்பவர் என்ற வகையிலும், சிறீதரனுக்கான மக்கள் ஆதரவுப்பலம் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சிறீதரன் போன்ற இளம் சமுகத்தினர் தலைமை தாங்கவேண்டும் என்ற கோசம் அண்மைக்காலமாக புலத்திலும், தாயத்திலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


இவற்றுக்கப்பால் அமெரிக்கா மற்றும் இந்திய தூதுவராலய மட்டங்களில் அவருக்குள்ள தொடர்புகளும் சிக்கவைப்பதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

குறிப்பாக வன்னியில் யுவதிகள் படைத்தரப்பில் இணைக்கப்பட்டமை, நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல், மூன்றாம் தர அரசியல் என அனைத்தையும் அம்பலப்படுத்துவதில் சிறீதரனும், அவரது சகபாடிகளும் பின்னின்றதே கிடையாது.


குறிப்பாக வன்னியின் எந்தவொரு குடியேற்றத்திட்டமாயினும் சரி, நில ஆக்கிரமிப்பாயினும் சரி, இராணுவ அத்துமீறல்களாயினும் சரி, விரல் நுனிகளில் வைத்து தகவல் சொல்ல இவர்களால் முடிந்தது.

 

 

 

அன்று நடந்தது….!


தேடுதல் கட்சி அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்தவேளை அவசர அவசரமாக உள்ளே நுழைந்த றுசாங்கனுடன், தினமுரசு பத்திரிகையின் முகவர் என்ற அடையாளத்துடன் மிகமோசமான பெண் இராணுவப் புலனாய்வாளியுமான வதனி என்பவரும், அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளே அழைக்கப்பட்டிருந்தனர்.

 

 

சம்பவம் அறிந்து அங்கு சென்றிருந்த குடாநாட்டின் நடுநிலமை ஊடகங்களான உதயன், தினக்குரல், வலம்புரி மற்றும் இணைய ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்,

 

அடங்கிய குழுவொன்று உட்செல்ல பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதும் முடியாமல் போனதுடன், அங்கிருந்து அச்சுறுத்தி துரத்தப்பட்டனர்.


சாதாரணமாக காற்சட்டை பைக்கற்றுக்குள் வைத்து எடுத்துவரக் கூடிய 350கிராம் சீ4 வெடிபொருளை கண்டெடுத்து விட்டதாக கூறி பிரசாரங்கள் ஆரம்பமாகின.

 

எனினும் இணைய ஊடகங்கள் திட்டமிட்ட இம்மோசடியை அம்பலப்படுத்த சிறீதரன் தரப்பினர் மக்களிடையே அனுதாப மொன்றை சுலபமாக எட்டிக்கொண்டனர்.


இந்நிலையில் தியட்டரிலிருந்து வந்த உத்தரவொன்றையடுத்து அவசர அவசரமாக கிளிநொச்சி மருந்தகம் ஒன்றிலிருந்து (பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி அந்த மருந்தக உரிமையாளரின் பெயரை நாம் குறிப்பிடவில்லை) புலனாய்வுப் பிரிவினரால் ஆணுறைகளும், படைமுகாம் ஒன்றிலிருந்து (கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாமிலிருந்து ஆபாச சீ.டிக்கள் எடுத்துவரப்பட்டன) சீ.டிக்கள் எடுத்துவரப்பட்டு பொதிகளில் செருகப்பட்டதுடன் சீ.டி கோப்பினுள்ளும் நுழைக்கப்பட்டன.

 

இவற்றுக்கப்பால் அங்குள்ள சுப்பர் மார்கெட்டில் றுசாங்கனால் கொள்வனவு செய்யப்பட்டு வசந்தனிடம் உள்ளே வைக்க கையளிக்கப்பட்ட பொதியினுள் என்ன இருந்தது என்பதையும் றுசாங்கனே சொல்லியாக வேண்டும்.


இது தொடர்பான முதலாவது செய்தியினை தனது இணைய ஊடகமொன்றில் பரபரப்பாக பதிவேற்றிய றுசாங்கன் கட்டுநாயக்கா விமானத் தளம் தாக்கப்பட்டுவிட்டது போன்று புகைப்படங்களுக்காக காத்திருக்க வாசகர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

 

இலங்கை வரலாற்றில் அதுவும் தமிழர்களை முன்னிறுத்தி தேடுதல் வேட்டை நடத்தியதும், அங்கு சீ4 கண்டெடுக்கப்பட்டதும் எத்தனையாவது அதிசயம் என்பதை றுசாங்கனே கூறினால் நல்லது.


அலுவலகம் மீதான தேடுதல் தொடர்பான செய்தி மாலை 5.57க்கு கொழும்பு இணைய ஆங்கில ஊடகமொன்றில் பதிவேற்றப்பட்டிருந்தது. சுமார் கிளிநொச்சி நகரிலிருந்து அவ்வலுலகத்தினை சென்றடைய 10நிமிடம் மேலும் தேவைப்படுமானால் 6.07க்கு பின்னரே றுசாங்கனால் அங்கு சென்றடைந்திருக்க முடியும். ஆனால் 5.30ற்க்கு உச்சபட்ச தேடுதல் நடந்தவேளை அங்கு சென்றடைய றுசாங்கன் பெற்றிருக்கும் ஊடக ஞானஸ்த்தானம் சாத்தியமாக இருந்ததா..?

 

எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் கேட்ட வரிவிலக்கற்ற வாகனம், மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதிச் சான்றிதழ், பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு விரிவுரையாளர் பதவி, மூதவையில் தங்களுக்கொரு இடம், இன்றும் பல உறுதியளிக்கப்பட்டவைகள் உங்களுக்கு வந்து சேரும், ஆனால் தனது மக்களுக்காக குரல் எழுப்பியதற்காக வேழமாலிகிதன், எதோ ஒரு சித்திரவதைக் கூடத்தில் இந்த தருணத்தில் தலைகீழாக தொங்கி க்கொண்டிருக்கலாம்.


இராணுவ வேட்டையில் தப்பிக்க பொன்காந்தன் ஏதோவொரு குக்கிராமத்தின் காட்டுக்குள் பதுங்கியிருக்கலாம். சீறீதரன் தன் கைதை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

 

பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதன் பின்னர் வந்து முளைத்த சீடி பற்றியும், ஆணுறை பற்றியும், ஆபாச சீ.டிக்கள் பற்றியும் சித்திரவதைகளின் பின்னர் வேழமாலிகிதன் ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தைக் கொடுக்க முடியும்.

 

தன் நாட்டின் பிரதம நீதியரசரையே கொள்ளைக்காரியென கூறி வீட்டுக்கு அனுப்ப முடிந்த இந்த அரசின் நீதிமன்றில் நியாயம், உண்மை வெளிப்படும் என நம்பும் உங்களை இந்த மக்கள் மன்னிக்கட்டும்.


பொம்மி

 

http://www.eelamview.com/2013/01/19/sritharan-mp/

  • தொடங்கியவர்

சிறிதரனுக்குப் பாதுகாப்புத் தேவை!

 

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளைக் கோரியுள்ளன. கூட்டமைப்பின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்டதைப் போன்று அவரும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தாயக மக்களைப் போன்றே புலம்பெயர் தமிழ் மக்களும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

 

சிறிதரனின் கிளிநொச்சி பணியகத்துக்காக வழங்கப்பட்ட காவற்றுறைப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர் கைதாகிக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.


அவர் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது எவருக்கும் தெரியாது. அதனையடுத்து சிறிதரனின் கிளிநொச்சிப் பணிமனை திடீர் சோதனைக்குள்ளானது. அங்கிருந்து வெடிபொருட்கள், ஆபாசப் படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

ஆனால், அவரின் செயலாளரும் பணிமனைக்குப் பொறுப்பாளராகவும் இருந்தவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இதுவரை அறியப்படவில்லை.


இந்நிலையில், வேண்டுமென்றே தம் பணிமனை மீதும் தம் ஆதரவாளர்கள் மீதும் திட்டமிட்டு எதிர்நடவடிக்கைகள் அரசினால் எடுக்கப்பட்டு வருவதாக சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கிளிநொச்சியில் இவை இடம்பெற்றுள்ளன.

 

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையடுத்து, அவரின் கிளிநொச்சிப் பணியகத்தின் காவற்றுறையினர் அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்பு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவரின் உரைக்கு முற்றிலும் மாறுபாடான விபரங்களைத் தெரிவித்தார்.


அதன் பின்பே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அல்லது சம்பந்தனோ அல்லது வேறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ எந்த ஒரு குரலும் எழுப்பாமல் மௌனம் காப்பதின் மர்மம் என்னவென்று புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பல கேள்வி எழுப்பியுள்ளன.

 

கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அரசுக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்குமேயானால், அவருக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் குறைக்கப்படலாம் என்பதும் ஏற்புடைய கருத்தாக அமைகின்றது. கூட்டமைப்பு வெளிநாட்டுக் கிளைகள் கூட அதன் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விபரமாக எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றன.


புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இதுதொடர்பாக விபரங்கள் இடம்பெறுகின்றன. பலர் இவற்றில் பங்குபற்றி தமிழர் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்தமான கொள்கை என்ன என்று கேட்குமளவுக்கு இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. சக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையிட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி இருப்பதைப் போன்ற தோற்றப்பாடே காணப்படுகின்றது. ஏன்?

 

அவருடன் சேர்ந்து நின்றால் அவரைப் போல் எங்களையும் புலிகள் என்று அழைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்களா? இலங்கை அரசு யாரைப் புலிகள் என்று அழைக்கவில்லை என்று குறிப்பிட முடியுமா? அரசைப் பொறுத்தவரை பராக் ஒபாமா, நவநீதம் பிள்ளை உட்பட தமிழர்களுக்கு உரிமை கோரும் சகலரும் புலிகள் என்றுதானே இலங்கை அரசு குறிப்பிடுகின்றது.


பிரதம நீதியரசர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தபோது, அவரும் புலி ஆதரவாளர் என்றல்லவா அரசு குறிப்பிட்டிருந்தது? புலம்பெயர் தமிழர்கள் பலர் ஊடகங்களில் இவைபோன்ற பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு வருகின்றனர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என பெரும்பாலான புல்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதனால், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இதுதொடர்பாக வெளிநாடுகளின் உதவியை, குறிப்பாக தாம் வாழும் நாடுகளின் ஆதரவை நாடியுள்ளன. கிளிநொச்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஈ.பி.டி.பி.யினரும் நடத்திய சிறிதரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அவருக்குப் பாதுகாப்பு அவசியம் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது.


இதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. இரா. சம்பந்தனைப் பற்றி மற்றொரு தகவல் லண்டனில் வெளியாகியுள்ளது. சம்பந்தனை கடந்த ஜூலை மாதம் கொழும்பில் சந்தித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பாலிக்ஸ் இதனை வெளியிட்டுள்ளார்.

 

அவர் தம்மிடம் இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்தோ, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தோ, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ பேசவில்லை. வன்னிப் பகுதி மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் சில வழங்கப்பட வேண்டும் என்பதை மாத்திரமே அவர் என்னிடம் தெரிவித்தார் என பிரித்தானிய நாடாளுமன்ற வளவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழர் தொடர்பான கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான காணொலிப் பதிவு சகல புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி தற்போது ஒளிபரப்பும் செய்யப்பட்டும் வருகின்றன. சம்பந்தன் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வெளிவராததினால் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய விடயம் புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம் என்றே ஊடகங்க விமர்சனங்கள் பல சுட்டிக்காட்டுகின்றன.

 

திரு. சம்பந்தன் 35 ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர். அந்த அனுபவ மூப்பின் அடிப்படையிலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தெரிவானார்.


முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் தமிழரின் விடுதலைக்காக இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்பு செய்யப்பட்டது வரை அவர் மிகத் தெளிவாக கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் அறிந்திருக்க வேண்டும். அந்த போராட்டத்தின் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை அரசும் வெளிநாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

 

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது ஒருசில யதார்த்தங்களைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே ஆய்வாளர்கள் கருருகின்றார்கள். இலங்கை அரசு தமிழருக்கான தீர்வை வழங்கத் தயாராக இல்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதுமே தாமாகவே தீர்வொன்றை வழங்க முன்வராது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எப்படியும் தீர்வொன்றைப் பெற்றுக்கொள முடியும் என சம்பந்தன் சிலவேளை நம்பியிருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பலம்வாய்ந்த தமிழர் பாதுகாப்பு அரண் இருந்தபோதே பிரச்சினைக்குத் தீர்வுகாணாத இலங்கை அரசு பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தீர்வொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் என்று தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது என பல அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

திரும்பியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி அவலங்களுக்கு இலக்கான தமிழர்களுக்கு உதவும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஈடுபடலாம். அதைத் தவிர உள்நாட்டில் எவ்வித முயற்சியும் பயனளிக்காது என்பதும் கூட்டமைப்பு புரிந்துகொண்டிருக்கும் என்பதே புலம்பெயர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.


ஆனால், திரு. சம்பந்தன் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் கருத்துகளினால் வெளிநாடுகளினால் முன்னெடுக்கப்படும் இலங்கை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துவரும் இன்றைய நிலையில், அவர் தனது நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

 

நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அவர் விபரிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் கொள்கைகள் தீர்க்கமாக எடுக்கப்பட்டு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


இராணுவத்தினர் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது உலகறிந்த உண்மை. ஆனாலும், அதனையும் தாண்டி ஜனநாயக வழியில் கூட்டமைப்பினால் நடந்து செல்ல முடியும். வட மாகாணத்தில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள், சிறுமிகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

 

ஆனால், ஒரேயொரு சிங்கள இளைஞர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார். அதுகுறித்து தகவல் தருபவருக்கு பத்து இலட்சம் ரூபா பரிசு. கொழும்பிலிருந்து வந்த விசேட குழு விசாரணை. தமிழரின் இன்றைய நிலை இதுவே என்பது யதார்த்தம்.

 

வீ.ஆர்.வரதராஜா

 

http://www.eelamview.com/2013/01/20/gota-kp/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.