Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லூரி மாணவர்களின் போராட்டம். இரண்டு நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வுகள்.

Featured Replies

நிகழ்வு - ஒன்று

சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி

நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித்

தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற

இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும்

சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ

மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.

ஐம்பது

ரூபாய் தருகிறேன் என்று அதிரடியாகச் சொன்னேன், இரண்டு நிமிட உரையாடலில்

அறுபது ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். பயணம் துவங்கியது, "சார், நீங்க

கோயம்பேட்ல எங்க போகணும்?".

"செங்கொடி அரங்கம்,"

"அது எங்க சார் இருக்கு?"

"அதாங்க லயோலா கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்துறாங்க இல்லையா?"

"அதுக்குப் பக்கத்துக்கு ஹோட்டலா சார்"

"இல்லங்க, அங்கேயே தான், அவங்களுக்கு வாழ்த்துச் சொல்றதுக்காகவே பெங்களூரில் இருந்து வர்றேன்"

அமைதியானார் தாணி (ஆட்டோ) ஓட்டுனர்.

இடம் வந்ததும் இறங்கினேன், சட்டைப் பைக்கும் கையை இட்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியில் எடுத்துக் கொடுத்தேன்.

"இல்ல சார், வச்சுக்குங்க"

"என்ன ஆச்சு!!!!!"

"என்னால போராட்டம் எல்லாம் பண்ண முடியாது, ஆனா, நானும் தமிழன் தான் சார்,

பெங்களூர்ல இருந்து இங்க வந்து வாழ்த்துச் சொல்ற உங்களை மாதிரி எனக்கும்

உணர்வு கொஞ்சமாச்சும் இருக்காதா. ஒரு உதவின்னு நினைச்சுக்குங்க சார்"

சென்னையின் போக்குவரத்தில் கரைந்து காணாமல் போகிறார் அந்த தாணி ஓட்டுனர்,

மெல்ல நடந்து அக்கினிக் குஞ்சொன்றை மரப் பொந்துகளில் அடைகாத்த தம்பிகளைப்

பார்க்க நடக்கத் துவங்கினேன் நான்.

நிகழ்வு - இரண்டு

(தம்பி பா.காளிமுத்து சொல்லக் கேட்டது)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு

போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக்

கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு

நின்று கொண்டிருக்கிறார்கள்.

"கொடுங்கோலன் ராஜபக்ஷேவைத் தூக்கிலிடு"

"இந்திய அரசே, இலங்கையை ஆதரிக்காதே"

"தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து"

"போர்க்குற்றவாளிகளைத் தூக்கிலிடு"

"வெல்லட்டும் வெல்லட்டும், மாணவர் புரட்சி வெல்லட்டும்".

முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கிறது.

இடைவெளியில் சில மாணவர்கள் தேநீர் அருந்துவதற்காக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்கள்.

பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்த சில அதிரடிப்படை வீரர்களோடு தலைமைக் காவலர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் உள்ளே நுழையத் தயங்கியபடி வெளியே நின்றபடி தேநீர் சொல்கிறார்கள்.

தலைமைக் காவலர் முழக்கங்கள் இட்டுக் களைத்திருந்த மாணவர் ஒருவரை அழைக்கிறார்.

"ஏலே, காலைல இருந்து எதாச்சும் சாப்டியாலே".

"கண்ணெல்லாம் உள்ள கூடி போயிட்டு".

"உயிர விட்டுக் கத்தாதலே"

"வயித்துக்கு எதாச்சும் சாப்பிடு"

காவலரின் திடீர்ப் பாசம் கண்டு மருள்கிறார்கள் மாணவர்கள்.

தலைமைக் காவலர் கடைக்காரரிடம் சொல்கிறார், "யோவ், கோட்டிப் பயலுகளுக்கு என்ன வேணுமோ கொடும், துட்டு நான் குடுக்கேன் என்ன???"

எனக்கும் இவங்களப் போல ஒரு மகன் இருக்காம்ல, மூணு நாளா தூத்துக்குடில

பட்டினியாக் கிடக்கான், செத்தாலும் பரவாயில்லப்பா, இப்போ விட்டா எப்பவுமே

நாம ஜெயிக்க முடியாதுன்னு போன்ல சொல்றான். என்ன செய்றது, நாங்க பாக்குற

வேலை அப்பிடி, போலீஸ்காரனும் மனுஷன் தாம்ல, எம்மக்களப் போலத் தான் உங்களைப்

பாத்தாலும் தெரியுது , நல்லா வயித்துக்குச் சாப்பிடுங்க, அப்புறமா

போராட்டம் பண்ணுங்க".

"வேண்டாம்னு தடுக்கவும் முடியல, பண்ணுங்கன்னு ஆதரிக்கவும் முடியல, போலீஸ்காரன் பொழப்பு ஒரு சாபக்கேடு கண்ணா",

பக்கத்தில் இருக்கும் காவலரிடம் புலம்பி விட்டு மாணவர்கள் கொடுக்க முயன்ற

பணத்தைத் தடுத்து தனது காக்கிச் சட்டையின் ஈரத்தில் இருந்து நூறு ரூபாய்த்

தாளை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார் தலைமைக் காவலர் என்று

சொல்லப்படுகிற ஒரு தமிழனின் அப்பா.

தமிழகமெங்கும் இப்படித்தான்

மாணவர்கள் தங்கள் சொந்த இனத்தின் மனசாட்சியை உலுக்கியபடி வீதிகளில் வெறி

கொண்ட கண்களோடும், நிமிர்ந்த நெஞ்சங்களோடும் அலைகிறார்கள், இழந்த

தமிழர்களின் மானத்தை மீட்டெடுக்கும் புதிய போராளிகளாய் அவர்கள் உலகெங்கும்

போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

வழக்கமாய் திரைப்பட

அரங்குகளின் முன்னாலும், கிரிக்கெட் மைதானங்களின் முன்னாலும் படை திரளும்

ஒரு பாமரக் கூட்டம் என்று பகடி பேசியவர்களின் முகங்களைக் கேள்விக்

குறிகளால் நிரப்பியபடி தங்கள் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில்

கூர்மையாய்த் திரளும் இவர்களின் புதிய அவதாரம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு

எம்மை அழைத்துப் போகிறது.

தெளிவான சொற்கள், சமரசம் இல்லாத கோரிக்கைகள், மண்டியிடாத வீரம், ஒழுங்கான நகர்வுகள்.

நெடுங்காலத் தோல்விகளுக்கும், குறுகிய வெற்றிகளுக்கு அப்பால் தெளிவான ஒரு புள்ளியாய் விடியல் எமை நோக்கி வருகிறது.

இப்போது நமது கடமை தலைமைக் காவலர் செய்ததைப் போல எமது தம்பிகளின்

களைப்பைப் போக்குவதும், அவர்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்வதும்

மட்டும்தான்.

உங்களைச் சுற்றி நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக என்று போராடத் துணிந்தீர்களோ அப்போதே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

தம்பிகளா, தங்கச்சிகளா, என்னமோ போங்கடா, முன்ன எல்லாம் உங்களைப்

பார்த்தால் எரிச்சல் எரிச்சலா கடுமையான கோவம் வரும், இப்போ ஒரு பத்து நாளா

உங்களைப் பாத்தா அப்படியே அணைச்சு நிறைய முத்தம் குடுக்கணும் போலத்

தோணுது, சந்தோசத்துல திக்கு முக்காட வைக்கிறதுன்னா இதாண்டா

பயலுகளா....ரொம்பப் பெருமையா இருக்கு, நிமிந்து நடந்து ரொம்ப

நாளாச்சுடா.....................................வாழ்த்துக்களும்,

முத்தங்களும் உலகத் தமிழர்களின் உதடுகளில் இருந்து........

தொடரட்டும் உங்கள் போராட்டம், வெல்லட்டும் தனித் தமிழீழம்.

 

 

இந்த செய்தி தொடர்பான படம் பார்க்க.....

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் அறப்போர் ஈழப்போராட்டம் குறித்த மாயைகளை விலக்கும் என நம்பலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வெற்றியோ தோல்வியோ எனக்கு அதெல்லாம் தேவை இல்லை பட் இவளவு எழுச்சிய நான் எதிர்பாக்கவே இல்லை இவளவும் காணும் கொண்டு போய்டலாம் நன்றிகள் உறவுகளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.