Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையில் யாப்பு: ரமணி

Featured Replies

1.1. செய்யுளும் கவிதையும்

யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு.

எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம்.

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.

மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாகும் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் அதன்பொருள் மனமே.

கவிதையில் மனதைச் சொல்லும் போது
செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.
 

 

2. செய்யுள் உறுப்புகள்

தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கு.

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம், பயனும், மெய்ப்பாடு,
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்றிவ் வாறு.

2.1. செய்யுள் இயற்ற

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாக.

பாவே செய்யுள் என்பது ஆகும்;
அந்தப் பாவும் அளவுடன் வரும்;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகும்.

இந்த ஏழு உறுப்புகள் எல்லாம்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
வழக்கு என்பது பேச்சு வழக்கு,
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
 

2.2. வரிகள் அமைக்க

செய்யுள் அமைக்க உறுப்புகள் ஏழெனில்
வரிகள் அமைக்கப் பத்தும் இரண்டும்:
வனப்பு, தொடை, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, புலனே இழைபு
என்பன அந்தப் பத்தும் இரண்டும்.

வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு.

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டு என்பது.

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி.

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகு என்பது.

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு.

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும்.

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
பயின்று குறிப்பால் சொல்வது புலனாம்.

தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபு என்பது.

2.3. பொருள் உணர்த்த

வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பத்தும் மூன்றும்:
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்று பத்தும் மூன்றும்.

நோக்கு என்பது கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டாரை ஈர்த்து
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பு.

திணை என்பது அகமும் புறமும்;
அகமாம் மனதின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரம்.

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.

கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்று என்பது அவர்களின் பேச்சு.

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே.

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.

துறை என்பது மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறு படுதல்.

2.4. யாப்பும் தூக்கும்

யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;

தூக்கு என்பது ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... [தொல்.பொ.313]

தூக்கு என்பது தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் ஏழு வகைப்படும்.

மரபு என்பது நிறுவிய வழக்கு;
தூக்கு என்பது மதிப்பினை ஆய்தலும்.

செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து,
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாக உள்ள உறுப்புகள்.

மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவன.

2.5. யாப்பியல்

வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபு, இழைபு என்று மொத்தம்
பத்தும் நான்கும் அமைவது யாப்பியல்.

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.

மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவது.

2.6. மூவகை யாப்பு

யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.

அடிப்படை உறுப்புகள் ஏழு ஆகும்:
மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்று.

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.

அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபு.

3. யாப்பு விவரணம்: ஓசை

அடிப்படை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
செயல்வகை உறுப்புகள் பின்னர் ஆய்வோம்.
பொருள்வகை உறுப்புகள் இறுதியில் ஆய்வோம்.

அடிப்படை உறுப்புகள் ஏழில் வருமே:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாக. [பார்க்க 2.1.,2.6.]

செயல்வகை உறுப்புகளும் ஏழில் வருமே:
யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும்,
வண்ணம், இயைபு, இழைபு என்று. [பார்க்க 2.6.]

பொருள்வகை உறுப்புகள் பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று. [பார்க்க 2.3.,2.5.]

மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.

தளைகள் பயின்றிட வருவது ஓசை:
தளையால் ஓசையும் ஓசையில் தளையும்
என்றிவ் விரண்டும் ஸயாமின் இரட்டையர்.

3.1. அசையும் சீரும்
ஓசை விவரணம் நோக்கும் முன்னர்
அசைச்சீர் உறுப்புகள் அடிப்படை தெளிவோம்.

குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
இறுதியில் வருவது: ’பானு, படகு’.

ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்-நேர்’ ஆகும்.

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை
நிரையெனச் சேர்த்த பின்னரே,
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின்
நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.

இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகும்.

அசைகள் இணைந்து வருகிற சீர்களில்
ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில்
பெரிதும் பயின்று வருமென அறியலாம்.

ஈரசைச்சீர் மாச்சீர் விளச்சீர் என்பன.
நேரசை இறுதியில் வருவது மாச்சீர்
நிரையசை இறுதியில் வருவது விளச்சீர்.

மூவசைச்சீர் காய்ச்சீர் கனிச்சீர் என்பன.
நேரசை இறுதியில் வருவது காய்ச்சீர்.
நிரையசை இறுதியில் வருவது கனிச்சீர்.

அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய பகுதியில் அறியப் பெறலாம்.
 

3.2. செய்யுள் ஓசை

ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு.
இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
ஒலியின் ஊடக மாக வருவது.

இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது.
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே.

தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு:
அகவல், செப்பல், துள்ளல், தூங்கல்

3.3. அகவல் ஓசை

மயில்கத் துவதை அகவல் என்கிறோம்;
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்.

உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
எடுத்தல் என்றும் அதனை அழைப்பர்.

செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை:
தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்;
நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறு.

ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்,
இருவர் உரையா டலாக இன்றி.

ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்;
அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!

தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பது அறியலாம்.

அகவல் ஓசை பயின்று வருவது
ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.

ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.

மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்று வந்தால் ஆசிரி யத்தளை.

’மாமுன்நேர்’ என்றால் மாச்சீரைத் தொடர்ந்துவரும்
சீரின் முதலசையில் நேரசை இருக்கும்.
’முன்’னென்றால் எதிர்நோக்கி என்றுபொருள் கொள்க.

மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

இவ்விரு தளைகளும் சீரிடை அடியிடைத்
தளைத்துச் செய்யுளில் வருவது முக்கியம்.

அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை‍இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
---அகநானூறு 149.

இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
 

இன்னும் வளரும்..........

 

 

 

http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013_04_01_archive.html

http://www.eegarai.net/t91128-topic

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வந்தி. நீங்கள் இவை பற்றி நன்றாக அறிந்தவர். இதை இலகுபடுத்தி, குறுக்கி  அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதினால் நன்றாக இருக்குமே.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.