Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
செல்வரட்னம் சிறிதரன்


வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதுகுறித்து அரசியல் விமர்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த மக்கள் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
 
அரசாங்கம் கூறுகின்ற அல்லது வலியுறுத்துகின்ற அபிவிருத்தியை இலக்காக வைத்து அவர்கள் வாக்களிக்கவில்லை. வீதிகள் போடவேண்டும் என்றோ, பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, மேலும் பல பகட்டான வசதிகள் வாய்ப்புக்களை வடபகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. அவர்கள் கேட்டதெல்லாம் உரிமையோடு வாழ வேண்டும். எந்தவிதமான இராணுவ கட்டுப்பாடுகளோ நெருக்குவாரங்களோ இல்லாத இயல்பான ஒரு வாழ்க்கை வாழத்தக்க வகையிலான ஓர் அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றே கோரியிருக்கின்றார்கள். இதற்காகவே அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

அதேநேரம் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் குறித்துக் காட்டியிருக்கின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அபிமானம், ஆதரவு, பற்று என்பவற்றையெல்லாம்கூட அவர்கள் தமது புள்ளடிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றில் மூன்று கட்சிகள் தீவிரமான போராட்டத்திற்காக ஆயுதக் குழுக்களாகத் தோற்றம் பெற்று ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்திருக்கின்றன.

மிதவாதம், தீவிரவாதம் ஆகிய இரண்டையும் பற்றி இப்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. தமிழரசுக் கட்சியே ஜனநாயக வழியில் தோன்றி தமிழ் மக்களுக்காக நீண்டகாலம் அரசியல் பணியாற்றிய கட்சி என்று பெருமை பேசப்படுகின்றது. சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கைககளையும், வழிமுறைகளையும் அவர்களே கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆயுதக்குழுக்களாகச் செயற்பட்டவர்களின் கட்சிகளுக்கு அரசியல் அரங்கில் இடமில்லை என்ற வகையிலான ஒரு போக்கும் தலையெடுத்திருக்கின்றது. அவர்களுடைய கரங்கள் கறை படிந்தவை. இரத்தம் தோய்ந்தவை. மக்களுக்கு எதிரான பல செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள் என்றவாறெல்லாம் இப்போது அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அணியினரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்ற போக்கிலான நடவடிக்கைகளும் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது.

இந்தப் போக்கும் நடவடிக்கைகளும் அரசியல் மட்டத்திலேயே காணப்படுகின்றது. மக்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்திருக்கின்றார்கள். வீட்டுச் சின்னத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பே பெரும்பாலான மக்களின் குறிப்பாக, கிராமிய மக்களின் கட்சியாகும். அந்தக் கூட்டமைப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒற்றுமையாக ஓர் அணியில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியமான எதிர்பார்ப்பாகும்.

கட்சி ரீதியாக எவரும் பிரிந்திருப்பதையோ அல்லது கட்சிகளை முதன்மைப்படுத்திச் செயற்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை. ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையாக எங்களிடம் வாருங்கள். ஓரணியில் எங்களைப் பாருங்கள். எமது சுகதுக்கங்கள், கஸ்ட நட்டங்களைப் பாருங்கள். உங்களால் முடிந்த சேவையை எங்களுக்கு நேர்மையாகச் செய்யுங்கள் என்பதே அவர்களுடைய அபிலாசையாக இருக்கின்றது.



கூட்டமைப்பு என்ற ஓரணி

ஆனால், இந்த ஓரணி என்ற விடயம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் விரும்புகின்ற, மக்கள் நேசிக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு சட்ட ரீதியான அரசியல் அந்தஸ்தையும், முகவரியையும் கொடுப்பதற்குக் கூட்டமைப்புக்குள்ளே பல தடைகள் காணப்படுகின்றன. இதன் காணமாகத்தான், அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற விடயம் இன்னும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது.

ஆயுதக் குழுக்கள் என்ற பெயரில் இருந்து மாற்றம் பெற்று, அரசியல் கட்சிகள் என்ற பெயரை நிரந்தரமாகக் கொண்டிருப்பதற்கு ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் விருப்பம் கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. ஆனால், அவர்களை அந்த வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்குப் பல தடைகள் போடப்பட்டு வருகின்றன. அவர்கள் அப்படியே இருக்க வேண்டும். அந்த வழியில் அவர்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் போக வேண்டும். இல்லையேல், தங்கள் முகவரிகளை விட்டுவிட்டு, தமது கட்சிக்குள் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பது தமிழரசுக் கட்சியின் எண்ணப் போக்காகத் தெரிகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு மந்திரம் போன்றது. இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிகுந்த நம்பிக்கைக்குரியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யார் இருக்கின்றார், அவருடைய பின்புலம் என்ன என்பதையெல்லாம் மக்கள் துருவித் தோண்டி ஆராய்ந்து பார்ப்பதில்லை. கூட்டமைப்பில் இருக்கின்றார், கூட்டமைப்பில் இணைந்து வந்திருக்கின்றார் என்றால் அதுவே போதும். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதன் காரணமாகத்தான், முன்னாள் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும்கூட மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். அவர் இதனை எத்தகைய மனப்பாங்கில் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் உண்மையை உணர்ந்து அந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார் என்பது மக்கள் தமது நடவடிக்கைளின் மூலம் பல இடங்களில் பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

எனவே, மக்கள் விரும்புகின்ற, மக்கள் மிகவும் நேசிக்கின்ற, நம்பிக்கை வைத்துள்ள ஓர் அமைப்பை சட்ட ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அதுவும் அரசியலில் அது இன்றியமையாதது.

ஒரு கட்சியாக இருக்கலாம். அல்லது பல கட்சிகள் இணைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் போன்ற கூட்டமைப்பாக இருக்கலாம். மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும்போது, அந்த செல்வாக்கை மேலும் மேலும் பலப்படுத்தி முன்னோக்கி நகர்த்திச் செல்வதே ஆரோக்கியமானதாக இருக்க முடியும். அதுவே, கட்டமைப்புடன் கூடிய எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதாரமாகவும் அடித்தளமாகவம் இருக்க முடியும்.



தேர்தலின் பின்னரான அரசியல் பாடங்கள்

வடமாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்ததும், முக்கியமான விடயங்களில் முடிவெடுப்பதில் எத்தனையோ இழுபறிகள். இழுபறிபட்டும்கூட எல்லோரும் உடன்பட்டுக்கொண்ட ஒரு முடிவை மேற்கொள்ள முடியவில்லை. கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்த வகையில் செயற்பட வேண்டும், என்னென்ன வழிகளில் காரியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், பிரச்சினைகள் அல்லது இடர்ப்பாடுகள் ஏற்படும்பொது என்னென்ன வழிகளில் அவற்றுக்குத் தீர்வு காணலாம் என்பது பற்றிய வரைமுறைகள் கூட்டமைப்பில் இல்லாதிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

தலைமைப் பொறுப்பில் யார் யார் இருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன பொறுப்புக்கள் இருக்கின்றன, எந்த வகையில் அவர்கள் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற வரையறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய கட்டமைப்புக்கள் எதுவும் கூட்டமைப்பில் இல்லாமல் இருப்பதே சின்ன சின்ன விடயங்கள்கூட பூதாகரமாகத் தோற்றம் பெற்று பல்வேறு வீணான விமர்சனங்களுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழியேற்படுத்திவிட்டிருந்தன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஓர் அரசியல் கட்சிக்குரிய யாப்பு இருந்திருக்க வேண்டும். சாதாரண விடயங்களில்கூட, இரண்டுபேர் ஒன்றிணைந்து செயற்படுகின்றபோது, அவர்களிடையே ஒப்பந்தங்கள் என்றும் கூட்டு வழிமுறைகள் என்றும் ஒப்புதல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில், அத்தகைய உடன்பாடுகளோ அல்லது வழிமுறைகளோ இல்லாமல்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் ஒட்டிக்கொள்ள முயற்சிப்பது போன்ற செயற்பாடாகவே இது காணப்படுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக, அந்தக் கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே ஐந்து கட்சிகளும் அதில் இணைந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. மக்களுக்காக இணைகின்றவர்கள் மக்களின் பெயரில் தங்களுக்காகவும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும். கூட்டமைப்பு என்ற சத்திரத்தில் கூடிக் குலவிவிட்டு அல்லது கூடியிருந்து விவாதங்களை நடத்திவிட்டு வெளியேறிச் செல்கின்ற போக்கு இனியும் தொடரக் கூடாது.

தமிழ்மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் செயற்படுகின்ற கூட்டமைப்பினர் தமது செயற்பாடுகள் தொடர்பில் தெளிவான வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்ததும் முக்கியமாகச் செய்ய வேண்டிய பதவிப்பிரமாணச் செயற்பாட்டை மகிழ்ச்சிகரமான ஒரு சூழலில் செய்ய முடியாமற்போனமைக்கு இத்தகைய வழிமுறைகள் இல்லாதிருந்தமையே முக்கிய காரணமாகும்.

வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வெற்றியானது, புதிய வழிமுறைகளை, புதிய கோணங்களிலான செயற்பாடுகளின் அவசியத்தைத் தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றது. இது இந்தத் தேர்தலில் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ள மக்கள் விடுத்துள்ள முக்கியமான செய்தியாகும்.

நல்ல முடிவுகளுக்காகக் கூடிப் பேசுங்கள். பேச்சுக்களின் முடிவில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவுகளை எடுங்கள். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துங்கள் என்பதே மக்களின் செய்தியாகும். பேசுவதற்காகக் கூடிப் பேசிவிட்டு, அவரவர் விருப்பப்படி நடந்து கொள்கின்ற வழிமுறைகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

வடமாகாண முதலமைச்சர் தொடக்கம், உறுப்பினர்கள் வரையில் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்வது, அமைச்சரவையைத் தெரிவு செய்வது முதல் சபையின் முதலாவது அமர்வு வரையிலும் முன்கூட்டியே கலந்து பேசி, எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இடம்பெற்றதாகக் கருத முடியவில்லை. கலந்தாலோசித்து எடுத்த முடிவுகள் ஆரோக்கியமானதாக அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்திருக்கும். ஆனால் ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டு, அதைப்பற்றிய தெளிவான கலந்துரையாடலின்றி அவற்றை நடைமுறைப்படுத்தும்போது, அது சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் ஒட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற கைங்கரியமாகவே இருக்கும்.

மாகாண சபையின் செயற்பாடுகள்

புதிய மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முதலமைச்சர் முழுமையாகப் பொறுப்பாக இருப்பார். இதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. அவருடைய கடமைகளைச் செய்வதற்கு அவருக்குப் பூரண சுதந்திரமும், முழுமையான ஒத்துழைப்பும், வலுவான பின்புல சக்தியையும் அவருக்குக் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர் முதலமைச்சர் என்ற ரீதியில் தனக்குரிய செயற்பாடுகளைப் பொதுமக்கள் நன்மையடையத்தக்க வகையில் அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதிய மாகாணசபையென்பது, அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் நோக்கிய கடினமான ஒரு பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. சபை நடவடிக்கைகளும், மாகாண நிர்வாகமும் சாதாரண சூழலிலேயே கடினமான ஒரு பணியாக இருக்கும்.

வடமாகாணத்தைப் பொறுத்தமட்டில், உடனடியாகச் செய்ய வேண்டிய எத்தனையோ அவசர காரியங்கள் இருக்கின்றன பின்விளைவுகளை மனதில் இருத்தி, மிகவும் அவதானமாக, இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் ஏராளமாக இருக்கின்றன. அதேநேரத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நோக்கியும், நியாயமான ஓர் அரசியல் தீர்வு என்ற இலக்கை நோக்கியும், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய பொறுப்பும் மாகாண சபைக்கும் அதன் தலைமைப்பொறுப்பில் இருக்கின்ற முதலமைச்சருக்கும் இருக்கின்றது.

வடமாகாண சபை செயற்படத் தொடங்கிவிட்டது என்பதற்காக தமிழ் மக்களுடைய அரசியல் விவகாரங்கள் யாவும் முதலமைச்சரின் பொறுப்பில் சென்றுவிட்டன என்று கூற முடியாது. அரசியல் விவகாரமும், அபிவிருத்தியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற ஒரு நிலையிலேயே முதலமைச்சர் தனது காரியங்களை ஆற்ற வேண்டியவராக இருக்கின்றார். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களிலும் பார்க்க பொறுப்பு கூடிய ஒரு நிலைமையாகும்.

எனவே, அரசியல் விவகாரங்களில் தவிர்க்கமுடியாத நிலையில் காரியங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ள முதலமைச்சர் எந்தவொரு கட்டத்திலும், தமிழ் மக்களின் அரசியல் நலன்களுக்கான வழிகளில் இருந்து இம்மியளவும் வழி தவறமுடியாது. அவ்வாறு வழி தவறக்கூடாது. புதிதாக அரசியல் சூழலில் பிரவேசித்துள்ள அவர் அவ்வாறு நடந்து கொள்வார் என்ற அனுமானத்தில் குறிப்பிடப்படவில்லை. சந்தர்ப்பங்களும் சூழலும் அவருக்கு பல சந்தர்ப்பங்களில் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதில் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அவ்வாறான மயக்க நிலைமை அல்லது இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவர் சரியாகவும் வெற்றிகரமாகவும் காரியங்களை முன்னெடுத்து சாதிக்க வேண்டும்.

இந்த வகையில் கூட்டமைப்பு வேறாகவும், முதலமைச்சர் வேறாகவும் இல்லாமல், அனைத்துக் காரியங்களிலும் கூட்டமைப்பும் அவருடன் இறுக்கமாக இணைந்து செயற்பட வேண்டும்.

பெரும்பான்மையான விருப்பு வாக்குகளுடன் மக்கள் என்னைத் தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆகவே, அவர்களுக்கு விசுவாசமாக சரியான தந்திரோபாயங்களைக் கையாண்டு செயற்படுவேன் என்ற எண்ணத்தில் அவர் காரியமாற்ற முனையக் கூடாது. முதலமைச்சரும் சரி, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் சரி, மக்களின் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒரே குரலில் மக்களுக்காகப் பேச வேண்டும். இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், வடமாகாண சபைத் தேர்தலைக் காரணம்காட்டி கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்கள் அதனைத் தூசுதட்டி வெளியில் எடுக்கவேண்டும். தேர்தல் திணைக்களத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதா இல்லையா என்பதைவிட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கட்டுக்கோப்பான அரசியல் அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் முக்கியமாகும். இல்லையேல் மாகாண சபையின் செயற்பாடுகளைத் தொடர்ந்து தமிழ் அரசியல் சந்திக்கப் போகின்ற அரசியல் சவால்களை எதிர்கொள்வதும் அவற்றை வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வதும் கடினமான காரியமாகவே இருக்கும். இதனையே இன்றைய அரசியல் சூழல் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கின்றது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=40f32c43-8337-4975-8772-b663a8fa2aad

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.