Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் மகாநாடு, இறுதியாக 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான யோசனை சில விவாதங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். சர்வதேச பரப்பில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில்தான், கொமன்வெல்த் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருக்கிறது என்பதையும், மேற்படி கூற்றோடு இணைத்து வாசிப்பது அவசியம். அதே இந்தியாவே, பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் மீதான பிரேரணைகளுக்கும் ஆதரவாக வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்தது. ஓர் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏன் இந்த மாற்றம்? இந்தியாவின் மேற்படி நிலைப்பாடானது கொழும்பைப் பொறுத்தவரையில் பேரதிர்ச்சியாகவே அமைந்திருந்தது.

 

இரண்டு காரணங்களினால் இந்தியா மேற்படி அமெரிக்க பிரேரணையை ஆதரித்திருக்கலாம். ஒன்று, அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் நோக்கிய கொள்கை முன்னெடுப்பின் ஒரு பங்காளி என்னும் வகையில், இந்தியாவால் மேற்படி அமெரிக்க பிரேரணையை நிராகரிக்க முடியாது போயிருக்கலாம். மற்றையது, ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில், யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களின் தலைமைப் பொறுப்பை முற்றிலுமாக அமெரிக்காவின் வசம் விட்டுவிடுவதானது, நீண்டகால நோக்கில், இலங்கையின் மீதான இந்திய செல்வாக்கை வலுவிழக்கச் செய்யலாம் என்றும் இந்தியா கணித்திருக்கக் கூடும். அந்த வகையில், இலங்கையின் மீதான செல்வாக்கை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் ஓர் உத்தியாக, அமெரிக்க பிரேரணையை இந்தியா ஆதரித்திருக்கலாம். ஏனெனில் யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் மீது தனது பிடியை இறுக்குவதற்கு ஏற்றவாறான போதிய வாய்ப்புக்கள் எதுவும் அப்போது இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை. அத்தகையதொரு சூழலில்தான், அமெரிக்கா இலங்கையின் மீது ஒரு பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருந்தது.

ஆனால் இந்தியாவின் முடிவில் எத்தகைய காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியிருப்பினும், மேற்படி இந்தியாவின் அணுகுமுறையானது, மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரு நம்பகமான சக்தி அல்ல என்னும் கருத்தையே கொடுத்திருக்கும். ஒப்பீட்டளவில் இன்றைய கொழும்பு இந்தியாவைக் காட்டிலும் சீனாவையே அதிகம் நெருங்கியிருக்க விரும்புவதாகவே தெரிகிறது. ஏனெனில் இலங்கை சர்வதேச ரீதியில் நெருக்கடிகளை சந்தித்த வேளைகளிலெல்லாம், கொழும்பிற்குத் தோள் கொடுக்கும் ஒரு நாடாகவே சீனா தன்னை நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்தியா தனது உள்ளக நிலைமைகளை கருத்தில் கொண்டு, எந்நேரமும் கொழும்மை கைவிட்டுவிடுவோம் என்பதையே நிரூபித்திருக்கிறது. அத்தகையதொரு செய்திதான், நடைபெற்று முடிந்த கொமன்வெல்த் மகாநாட்டின் ஊடாகவும் கொழும்பிற்குக் கிடைத்திருக்கிறது.

இலங்கையின் உடனடி அயல்நாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்வில் பங்குகொள்ளாமை, கொழும்பைப் பொறுத்தவரையில் நல்ல செய்தியல்ல. ஆளும் காங்கிரஸ் அடுத்த ஆண்டு ஒரு தேர்தலுக்கு முகம்கொடுத்திருக்கின்ற சூழலில், மன்மோகன் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வொன்றில் பங்குகொள்வது இலகுவான ஒன்றாக இருந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான், மன்மோகன் கொமன்வெல்த் மகாநாட்டில் பங்குகொள்வதை தவிர்த்திருந்தார். ஆனால் இது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் வேறு விதமாகவே புரிந்து கொள்ளப்படும். அதாவது, தமிழ் நாட்டின் பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே மன்மோகன் இவ்வாறு நிகழ்வை தவிர்த்திருக்கின்றார் என்பதே அவர்களது புரிதலாக இருக்கும். உள்நாட்டு அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு மன்மோகன் நிகழ்வை தவிர்த்திருந்தாலும், இந்தியா நிகழ்வை பகிஸ்கரித்திருக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வது அவசியம்.

அதேவேளை மன்மோகன் நிகழ்வில் பங்கு கொள்ளாமை, தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்றவாறானதொரு புரிதலும் ஒரு சில தமிழ் தேசிய தரப்பினரிடம் இருப்பதாக தெரிகிறது. உண்மையில் மன்மோகன் இதில் பங்குகொண்டு, கமரோன் போன்று யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருப்பாராயின், அதன் அரசியல் முக்கியத்துவம் மிகவும் கனதியான ஒன்றாக அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு கூட்டமைப்பின் தலைமையிடம் இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.

மேலும், மன்மோகன் நிகழ்வில் பங்குகொண்டிருந்தால், கொமன்வெல்த் மகாநாடு, மன்மோகன், டேவிட் கமரோன் ஆகிய இருவரது குரலாக அமைந்திருக்கும். ஆனால் இறுதியில் கொமன்வெல்த் மகாநாட்டில் டேவிட் கமரோன் மட்டுமே தனித்துத் தெரிந்தார். பிறிதொரு வகையில் நடைபெற்று முடிந்த மகாநாட்டின் நிகழ்ச்சிநிரலை நோக்கினால் ஒரேயோரு விடயமே தூக்கலாக தெரிகிறது. அதாவது, கொமன்வெல்த்தை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பதற்கான ஒரு களமாக கமரோனால் பயன்படுத்தப்பட, அதே களத்தை, அரசாங்கத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்திக் கொண்டார். இதில் எவர் வெற்றி பெற்றார் என்பதற்கான பதில் எதிர்கால நிலைமைகளில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் கொமன்வெல்த் மகாநாடு இலங்கையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பதானது, முதலாவது பார்வையில், ஆளும் மகிந்த அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உலகளாவிய மனித உரிமை அமைப்புக்களினதும், கனடாவின் பலமான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே கொமன்வெலத் மகாநாடு இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை பிறிதொரு வகையில் மனித உரிமை அமைப்புக்களின் தோல்வி என்றும் ஒருவர் வாதிட வாய்ப்புண்டு.

ஆனால், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மீது, மீண்டும், உலகின் பார்வையை திருப்புவதற்கான ஒரு வாய்ப்பாக, கமரோன், மேற்படி மகாநாட்டை பயன்படுத்திக் கொண்டமையானது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு தோல்வியே ஆகும். ஐ.நாவில் வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதமர், இறுதி யுத்தம் இடம்பெற்ற வடக்கிற்கு விஜயம் செய்தமையும், வடக்கின் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியமையும், அதன் பின்னர் இலங்கை உள்ளகமட்டத்தில் உரிய விசாரணையை மேற்கொள்ளாது விட்டால், சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதாக எச்சரித்திருப்பதும், இலங்கை அரசாங்கத்திற்கு இனிப்பான விடயங்களல்ல. இந்த பின்னணியில், அடுத்த ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் கடுமையான பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான ஏதுநிலையே காணப்படுகிறது. ஒருவேளை அந்த பிரேரணையை அமெரிக்காவிற்கு பதிலாக பிரித்தானியாவே கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்த பின்னணியில், தமிழர் நோக்கில் மேற்படி நிலைமையை எவ்வாறு கணிக்கலாம்? இதுவரை பசுபிக் அதிகாரமான அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வந்த கொழும்பு, கமரோனின் எச்சரிக்கையை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான நாடான பிரித்தானியாவின் அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஏலவே அமெரிக்காவுடன் வலுவான ராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கும் பிரித்தானியா, அமெரிக்க அழுத்தங்களுக்கு பலமானதொரு நட்பு சக்தியாக செயலாற்றக் கூடிய ஏதுநிலை காணப்படுகிறது. இந்த நிலைமையானது, மேற்கின் இரு பெரும் சக்திகளான அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் நேரடியான அழுத்தங்களை, ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டுநிலையை கொழும்பிற்கு ஏற்படுத்தலாம்.

தமிழர் அரசியலை பொறுத்தவரையில், மகிந்த அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடொன்றே ஒரேயொரு சாதகமான விடயமாகும். இன்று அரசாங்கம் சர்வதேசளவில் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கள் அனைத்திற்கும், மேற்படி இறுக்கமான நிலைப்பாடே காரணமாகும். இந்தச் சூழலை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தரப்பினர் தெளிவாக விளங்கிக் கொண்டு செயற்படுவதாகவே இக்கட்டுரை கருதுகின்றது. எனவே இன்றைய சூழலில், கனிந்துவரும் சூழலை எவ்வாறு தமிழர் தரப்பு தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில்தான், தமிழர் தரப்பின் திறமை நிரூபணமாகும். ஆனால் இதனை வெறுமனே யாழ்பாணத்து வீதிகளில் நின்று கோசமிடுவதாலோ அல்லது, சம்பந்தரை கெட்ட வார்த்தைகளினால் ஏசுவதாலோ சாதித்துவிட முடியாது.

தமிழர் அரசியல் நோக்கில் காணப்படும் பிறிதொரு சாதகம், அரசாங்கம் நினைத்த மாத்திரத்தில் கடும்போக்கு நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர முடியாதவொரு சூழலுக்குள் சிக்கியிருப்பதாகும். அரசாங்கம் இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலம், இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால், அரசாங்கம் கடும்போக்குவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருப்பதால் அது இலகுவான ஒன்றாக அமைந்திருக்கவில்லை. இந்தியாவுடன் கொழும்பு ஒத்துழைக்க வேண்டுமாயின், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான 13து திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒரு தீர்வுக்கு இணங்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு இணங்கிச் சென்றால், தெற்கின் கடும்போக்குவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்களை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். அது தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை சிக்கலுக்குள்ளாக்கும். இவ்வாறு எந்த பக்கம் திரும்பினாலும் அரசாங்கம், சிக்கல்களுக்கே முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் அரசாங்கத்தின் கடும்போக்கை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இன்று அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச ரீதியான நெருக்கடிகளை, ஒரு சொல்லில் 'பாதகம்' என்றவாறு மட்டுமே வரையறுத்து, கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது. ஓர் அரசாங்கம் என்பது குறிப்பிட்ட நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தின் வெளிப்பாடு ஆகும். அத்தகையதொரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக ஏனைய நாடுகள் செயற்படுவதானது, அறிக்கைளில் குறிப்பிடுவது போன்று இலகுவான ஒன்றல்ல. இலங்கை வலுவானதொரு தேர்தல் ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் நாடாகும். அதேவேளை வலுவான நட்புச் சக்திகளையும் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றையும் மீறி, அமெரிக்கா போன்ற அதிகாரங்களால் நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில், அத்தகைதொரு அவசியம் இருக்கிறதா? எனவே இந்த இடைவெளிகளில், இலங்கை அரசாங்கம் நிலைமைகளை சீர் செய்து கொள்வதற்கான ஏது நிலையும் இருக்கிறது. அது அரசாங்கத்தின் எதிர்கால அணுகுமுறைகளிலேயே முழுமையாக தங்கியிருக்கின்றது.

எனவே இந்த பின்புலத்தில் பார்த்தால், கொமன்வெல்த் மகாநாட்டை அடிப்படையாகக் கொண்டு மேலெழுந்த விமர்சனங்கள், அவை சர்வதேச பரப்பில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தியிருக்கும் பாதகமான அலை, இவை அனைத்தும் தமிழர் நிலையில் சாதகமான விடயங்கள்தான். ஆனால் இந்த நிலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பத்தில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் தமிழர் பிரச்சினை சர்வதேச அளவில் ஒரு கவனிப்பை பெற்றிருக்கிறது என்பது உண்மை. கொமன்வெல்த் மீண்டும் அந்த கவனிப்பை அதிகரித்திருக்கின்றது. கவனிப்பு என்பது கரிசனை அல்ல. அதனை கரிசனையாக மாற்றுவது தமிழர் தரப்பின் அரசியல் சாணக்கியத்தில் தங்கியிருக்கிறது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் சாணக்கியம் என்பது அதிகம் அரசாங்கங்களுக்கு உரித்தான ஒன்றாகவே இருக்கிறது. அல்லது அரசாங்கங்களை அமைக்கக் கூடியவர்களுக்கான ஒன்றாக இருக்கிறது. இனங்கள் என்று தனித்து நோக்கினால், சாணக்கியத்தின் பெறுமதி மிகவும் குறைவான ஒன்றாகவே இருக்கிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=7d33815f-1d4e-4b64-b1bc-cb87f2e6b080

மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வந்திருந்தாலும் டேவிற் கமரூன் போல் தெளிவாக, வெளிப்படையாக, நேர்மையாக தனது கருத்தை தெரிவித்திருக்கமாட்டார். வழமைபோல் விக்கி விழுங்கி ஸ்ரீலங்கா எமது நட்பு நாடு என்றும், இறையாண்மை என்றும் பூசி மெழுகி மகிந்தவை காப்பாற்றவே முயன்றிருப்பார். இது தமிழ் மக்களுக்கு தெளிவாகவே தெரியும். மன்மோகன் சிங் வந்து வெட்டி விழுத்தி இருப்பார் என்று இன்னும் எத்தனை முழம் பூ தமிழர் காதில் சுற்ற இருக்கிறீர்கள் மிஸ்ர்ர் யதீந்திரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.