Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரியங்கா என்னை பொலிஸ் அதிகாரியைப்போல் மிரட்டினார்!- நளினி திடுக்கிடும் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார்.

கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். பிரியங்கா காந்தி – நளினி சந்திப்புக்குப் பிறகு, பத்திரிகைகளைத் தவிர்த்து வந்த நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி மூலம் தொடர்புகொண்டபோது அவர் வழங்கிய செவ்வி வருமாறு!

பேரறிவாளனின் வாக்குமூலம் முழுமையானது அல்ல. அதை நான் சரியாகப் பதிவு செய்யவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் கூறியுள்ளார். உங்களிடமும் தியாகராஜன்தான் வாக்குமூலம் பெற்றாரா?

பேரறிவாளனிடம் மட்டுமல்ல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போது தண்டனை அனுபவிக்கும் யாரிடமும் உண்மையாக வாக்குமூலம் வாங்கப்படவில்லை. அது நேர்மையாகப் பதிவு செய்யப்படவும் இல்லை. கடுமையான சித்திரவதைக்கிடையில் அந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைவரும் சித்திரவதைக்கு அஞ்சித்தான் கையெழுத்துப் போட்டோம்.

p12.jpg

தியாகராஜன் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய தேதி 1991-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி. அன்று வெளியில் பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. அன்று முழுவதும் நான் சித்திரவதையின் வேதனை தாங்காமல் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணி. இரவு 8 மணிக்கு என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அரை மணிநேரம் பரிசோதனை நடைபெற்றது.

அரை மணிநேரம் கழித்து, என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சில காகிதங்களுடன் அமர்ந்திருந்தார். அவற்றில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். ‘இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய்’ என்றார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல்தான், நான் கையெழுத்துப் போட்டேன்.

அதன் பிறகு அந்தக் காகிதத்தில் அவர்களாக நிரப்பிக் கொண்டதுதான் இன்று உலகத்தின் பார்வைக்கு என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாகக் காட்டப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் எனக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்படித்தான் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார். இது எதுவும் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கு விசாரணை முழுவதும் தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நீங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லையா? இந்தப் படுகொலை பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?

சத்தியமாகத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், காதலித்துத் திருமணம் செய்த என்னை, அதுவும் நான் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்களுடன் அனுப்பி இருப்பாரா? அதுபோல், இப்போது இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் யாருக்கும் அந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.

நாங்கள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், குற்றவாளிகளாக மாற்றப்பட்டு இன்று தண்டனைக் கைதிகளாக இருக்கிறோம். அந்தச் சம்பவம் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. அவர்கள் இறந்துவிட்டனர். குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி இறந்து பல மணி நேரம் கழித்துத்தான் எனக்கே விவரம் தெரியவந்தது.

சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், ‘நளினிக்கு இதுபற்றி தெரியும்’ என்று வயர்லெஸ் ஆதாரம் ஒன்றைச் சொல்கிறாரே?

வயர்லெஸ் பேச்சு சங்கேத வார்த்தைகளால் ஆனது. அந்த சங்கேத வார்த்தைகளை சி.பி.ஐ. உடைத்துப் பார்த்தனர். அதில் பேசிய குரல் சொன்ன விஷயம் என்னவென்றால், ‘ராஜீவ் காந்தி கொலை பற்றிய விஷயம் எங்கள் மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது’ என்றுதான் வருகிறது. அது சிவராஜன், சுபா, தனு ஆகிய மூவரைத்தான். என்னை அல்ல.

அந்த வயர்லெஸ் தகவலில், ‘ஆபீஸர்… பெண் நம்பிக்கையானவர்’ என்று என்னைப் பற்றி வருகிறது. நளினிக்குத் தெரியும் என்று எந்த இடத்திலும் அந்தக் குரல் குறிப்பிடவில்லை. ஆனால், தியாகராஜன் ஏன் இப்படி திரித்துக் கூறினார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

இத்தனை வருடச் சிறை வாழ்க்கையில் உங்கள் மனதை வெகுவாக பாதித்த சம்பவம் ஏதாவது?

இந்தச் சிறையில் பக்கா என்ற விஜயா என்று ஒரு கைதி இருக்கிறாள். கடந்த 24 ஆண்டுகளாக அவள் சிறையில் இருக்கிறாள். கழைக்கூத்தாடியான அவளது நடனத்தினால் கவரப்பட்ட ஒருவர் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய வீட்டில் சாதியைக் காரணம் காட்டி, இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊரைவிட்டு விரட்டிவிட்டனர்.

அதன் பிறகு இருவரும் கழைக்கூத்தாட்டம் நடத்தி பிழைத்து வந்துள்ளனர். ஒரு நாள் இரவு ரோட்டோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் அவனைக் கல்லால் அடித்து விரட்டி உள்ளனர். அதில் காயம்பட்ட அவன் இறந்துவிட்டான்.

இவர்களை கைதுசெய்த போலீஸ், இறந்தவனிடம் இருந்து 500 ரூபாயை திருடுவதற்காக இவர்கள் அவனைக் கொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டி இரண்டு பேரையும் சிறையில் அடைத்துவிட்டனர்.

கணவன் ஆண்கள் சிறையிலும் இந்தப் பெண் இங்கும் என இரண்டு பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர். அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு இப்போது ஒரு குழந்தையைப்போல் உளறிக் கொண்டிருக்கிறாள். ஒட்டுமொத்த சிறைக்கும் அவள் செல்லப்பிள்ளை. அவளை விடுதலை செய்வதற்கும் விடுதலையானவுடன் ஏற்றுக்கொள்வதற்கும் காப்பகங்கள் தயாராக உள்ளன. ஆனால், சிறை நிர்வாகம் அவளை வெளியே அனுப்ப மறுக்கிறது.

இப்போது என்னுடைய விடுதலையைவிட நான் அவளுடைய விடுதலைக்காகத்தான் அதிகமாக என் வழக்கறிஞரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.

பிரியங்கா – நளினி சந்திப்பு… என்ன நடந்தது அந்தச் சந்திப்பில்?

அன்று சிறைச்சாலை வழக்கத்துக்கு மாறான பரபரப்புடன் இருந்தது. திடீரென பரபரப்புகள் ஓய்ந்து பேரமைதி நிலவும்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த கைதிகளும் செல்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை மட்டும் சிறைத் துறை கண்காணிப்பாளர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பிரியங்கா அமர்ந்திருந்தார். எனக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆனால், எஸ்.பி. சொன்னதும் அதிர்ச்சியும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பிரியங்காவும் நானும் மட்டும்தான் அங்கு இருந்தோம். என் அச்சத்தை அதிகரிப்பது போல், பிரியங்காவின் முகம் இறுக்கமாகவும் அவரது பார்வை கோபமாகவும் இருந்தது.

என்னைப் பார்த்த உடனேயே, ஒரு போலீஸ் அதிகாரியைப்போல் என்னை மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்தார். கேள்விகள் மேல் கேள்விகள். தன் தந்தை கொல்லப்பட்ட அன்று நீ ஏன் அங்கு போனாய்? உனக்கு முதலிலேயே தெரியுமா? அவர்கள் உனக்கு எப்படிப் பழக்கம்? நோக்கம் என்ன? என்று வரிசையாகக் கேள்விகள் கேட்டார்.

அதற்கு நான் எனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினேன். ஆனால், அந்தச் சந்திப்பில் நடந்த மற்ற விவரங்கள் மிகமிக முக்கியமானவை. ஆனால், அவற்றை சொல்வதற்கான நேரம் இது அல்ல. காலம் நினைத்தால் அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கும். அப்போது அந்த விவரங்களை வெளியிடுவேன்.

உங்கள் விடுதலை தள்ளிப்போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களில் விடுதலையாவதற்கான வாய்ப்பு எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்காக முன் விடுதலைக் குழு அமைக்கப்பட்டு பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு என் விடுதலையை ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒரு அறிக்கை வாங்கி, நளினி வெளியே வந்தால் ராயப்பேட்டையில்தான் தங்குவார். அது வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி-க்கள் நிறைந்த பகுதி. அதனால், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் என்னுடைய விடுதலை தடைபட்டுள்ளது.

இது அரசியல் வழக்கு என்பதால்தான், இதில் தலையிட யாரும் விரும்பவில்லை. சிறையில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போதும் முதல்வராக இருந்தார். அவர் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுத்து என்னுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்.

அதுபோல், என்னுடைய விடுதலை விவகாரத்திலும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

[ விகடன் ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.