Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிகாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரன்

வா.மணிகண்டன்

ஞாயிற்றுக்கிழமை சேலம் போக வேண்டியிருந்தது. கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்கள் அழைத்திருந்தார்கள். பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா ஞாயிறுதான் நடைபெற்றது. அமெரிக்காவில் இருக்கும் சில இலக்கிய வாசகர்கள் பல வருடங்களாக இந்த விருந்தை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மூன்று படைப்பாளிகள் நடுவர்களாக இருந்து இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வருடம் பெருமாள் முருகனுக்கு. அநேகமாக விருதைப் பெற்றுக் கொள்பவர் விரும்பும் ஊரில்தான் விழா நடக்குமாம். இந்த முறை சேலத்தில்.

சேலத்தில் விழா நடைபெறுவதாக அறிவித்தவுடனே கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அந்த ஊரின் மீதான பிரியம் அப்படி. சேலத்தில் இருந்த நான்கு வருடங்களும் அந்த நகரத்தை மனதுக்கு நெருக்கமானதாக மாற்றியிருக்கிறது. மற்ற எல்லா ஊர்களையும் போலவே பதினைந்து வருடங்களில் சேலம் தாறுமாறாக மாறியிருக்கிறது. இருந்தாலும் ஊரின் உயிர் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் உயிர் உள்ளது அல்லவா? அந்த உயிரின் காரணமாகவே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நுண்மையான சுவாரஸியம் உண்டு. எந்த ஊரும் தனது சுவாரஸியத்தை நமக்கு அவ்வளவு சீக்கிரம் காட்டிவிடாது. தனது ஒவ்வொரு மூலையிலும் பாதங்களை அலையவிடுபவனுக்கே தனது ரகசியங்களின் புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றன. அதை மெல்ல மெல்லப் பருக வேண்டும்.

நகரங்களின் பகலை விட இரவு எந்தவிதத்திலும் மட்டமானது இல்லை. விளக்கு வெளிச்சமும், குளிர்ந்த காற்றும், குப்பை பொறுக்கும் எளிய மனிதர்களும், தீடிரென்று விரையும் வாகனங்களும், டீ விற்கும் சைக்கிள்காரரும், வீதியைப் பெருக்குபவர்களும், கண்ட்ரோல் ரூம் ஓசையைத் துப்பும் வாக்கி-டாக்கியோடு அலையும் போலீஸ் வாகனமும், வெளியில் காட்டிக் கொள்ளாத பயத்தோடு வேகமாக நகரும் மனிதர்களும், உறங்காமல் திரியும் நாய்களும், ஓரமாக நின்று சைகை செய்யும் பெண்களும்- அது ஒரு மாய உலகம்.

சேலத்தை வெகுநாட்கள் அப்படி பார்த்திருக்கிறேன். நள்ளிரவுகளில் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறேன். அதுவும் இரவு நேரத்திலேயே. இரவுக்காட்சிகள் முடிந்த பிறகு பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு நடந்து வந்த பாதையின் நினைவுகள் வரும் போதெல்லாம் சேலம் பற்றிய கற்பனைகள் விரிந்துவிடும். இனி திரும்பவே முடியாத கற்பனைகள் அவை. அதன் காரணமாகவோ என்னவோ சேலத்தோடு நெருங்கிய உறவு இருப்பதாக அவ்வப்போது தோன்றும். அந்த நெருக்கத்தின் காரணமாகவே சேலம் என்றவுடன் வருவதாக முடிவு செய்து கொண்டேன்.

இன்னொரு காரணம் பெருமாள் முருகன். அவரது எழுத்துக்கு இருக்கும் வசீகரம். கிட்டத்தட்ட அடிமையாக்கி வைத்திருக்கிறார்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த மாதிரியான இலக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது முந்தின நாள் இரவே போய்விடுவது நல்லது. அறையில் தீர்த்தவாரி நடக்கும். போதை ஏற ஏற நிறையப் பேசுவார்கள். நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. காது கொடுத்தால் போதும். ஒருவர் கவிதையைப் பற்றி பேசுவார். இன்னொருவர் நாவலைப் பற்றிப் பேசுவார். இன்னொருவர் யாரையாவது திட்டுவார். போதை மனத்தடைகளை உடைத்திருக்கும் என்பதால் மனதுக்குள் இருப்பதையெல்லாம் கொட்டிவிடுவார்கள். அமைதியாக அமர்ந்திருந்தாலோ அல்லது அவ்வபோது எதையாவது கேள்வி கேட்டாலோ போதும்- ஏகப்பட்ட விவரங்களை மூளையில் கட்டிக் கொள்ளலாம்.

அப்படித்தான் நம்பிச் சென்றிருந்தேன்.

சேலத்தை அடையும் போது இரவு மணி பதினொன்றாகிவிட்டது. விடுதி அறையை தேடிக் கண்டுபிடித்த போது கிட்டத்தட்ட பேச்சு முடிந்திருந்தது. முடிந்திருந்தது என்று சொல்ல முடியாது. முடித்து வைத்துவிட்டார் ஒரு மனிதர். அவரை இதற்கு முன்பாக எங்கும் பார்த்ததில்லை. யாருடன் வந்திருந்தார் என்றும் தெரியவில்லை. குடிக்கிறார். குடிக்கிறார். குடித்துக் கொண்டேயிருக்கிறார். ஏறிய போதையின் காரணமாக வேறு யாரையும் பேசவிடவில்லை. பேசவிடவில்லையென்றாலும் பரவாயில்லை. தானாவது உருப்படியாக பேச வேண்டும். அதுவும் இல்லை. எரிச்சலாக இருந்தது.

எத்தனை நேரம்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? மற்றவர்கள் ஒவ்வொருவராக அறையைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அறையில் இருந்த ஓரிரு நண்பர்களும் உறங்கிவிட்டார்கள். சிக்கிக் கொண்டவன் நான்தான். தெளிவாக இருப்பவன் ஒருவன் நிறைந்த போதையில் இருப்பவனிடம் சிக்கிக் கொள்வதைப் போன்ற அவஸ்தை வேறு எதுவும் இல்லை. எழுந்து ஒரு நடை போய் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. அந்த விடுதியின் வெளிக்கதவை பூட்டி வைத்திருந்தார்கள். நொந்துவிட்டேன். திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை நேரம்தான் கேட்பது? காதில் துளி ரத்தம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது.

தூங்குவது போல நடித்தாலும் விடுவதாகத் தெரியவில்லை. கால்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டு ‘தூங்கிட்டியா? உன் கூட பேச வேண்டும்’ என்கிறார். ‘ஆமாங்க தூங்கிட்டேன்’ என்றால் ‘இதை மட்டும் கேளு’ என்கிறார். முகத்தை அஷ்டகோணலாக மாற்றினாலும் அவருக்கு அது பற்றிய கவலை இல்லை. எதையாவது முழங்கிக் கொண்டிருந்தார். பதில் சொல்லவில்லையென்றால் சண்டைக்கு வருகிறார்.

அரிவாளை எடுத்து கழுத்தை ஒரே போடாக போட்டால் ஒரு நிமிட வலிதான் .போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் குரல்வளை மீது காலை வைத்து ஒரு ஆக்‌ஷா ப்ளேட்டினால் அறுத்தால் எப்படித்தான் வலியை பொறுத்துக் கொள்வது. அதுவும் முனை மழுங்கிய ப்ளேடு. கழுத்தை தனியாக அறுத்து எடுத்துவிட்டார். நாக்கு வெளியே தொங்கியபடியிருந்த எனது கோர முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஜென்மத்திற்கும் என் மீது பரிதாபப்படுவீர்கள்.

இரவு தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.வழக்கமாகவே இரண்டு மணி ஆகிவிடும். முழு இரவும் தூங்காமல் கூட விழித்திருக்கிறேன். ஆனால் இந்த டார்ச்சரோடு விழித்துக் கொண்டிருப்பதுதான் நோகடித்திருந்தது.

விடுதலை அடையும் போது மணி மூன்றரை ஆகியிருந்தது. ‘போதுமடா சாமீ’ என்று குப்புறப் படுத்துக் கொண்டேன். அத்தனை போதையில் படுத்தாலும் அவர் ஆறுமணிக்கு எழுந்துவிட்டார்.

விதி வலியது. வாய் கூட கொப்புளிக்கவில்லை. பாட்டில் மூடியைத் திறந்துவிட்டார். அடுத்த தாக்குதல் ஆரம்பமானது.

குடிப்பது தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இத்தகையவர்கள் அநியாயத்துக்கு குடிக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு உளற ஆரம்பிக்கும் போது ‘உரையாடலாம்’ என்று நினைப்பவர்கள் கூட பாதியில் கிளம்பிவிடுகிறார்கள். இப்படி குடிப்பதால் எதைச் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெருமாள் முருகனிடம் பேசுவதற்காக நிறைய தயாரிப்புகளைச் செய்திருந்தேன். அவரது ‘சாதியும் நானும்’ பற்றி பேசுவதற்கு ஒரு குறிப்பேட்டில் நிறைய எழுதி வைத்திருந்தேன். அவரது நாவல்கள், சிறுகதைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கலாம். எதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வெளி ரங்கராஜனிடமும் இதுவரை பேசியதில்லை. அவரோடும் சிபிச்செல்வனோடும் பேசியிருக்கலாம். இசை வந்திருந்தார். பெரியசாமி இருந்தார். வே.பாபு இருந்தார். அத்தனை பேரையும் இவர் ஒருவரே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.

ஆனால் ஒருவிதத்தில் எனக்கு உதவியிருக்கிறார். எவ்வளவு பெரிய இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் குடிப்பவர்களுடன் இரவு நேரங்களில் தங்குவதைத் தவிர்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த ஒரு அனுபவமே போதும். இப்படியானவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாக இனி என்னால் முடியாது.

(இது இரவு அனுபவம் மட்டும்தான். மற்றபடி கூட்டம் மிக அருமையாக நடந்தது. அது பற்றி தனியாக எழுத வேண்டும். கூட்டத்தை நடத்திய நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளும்; பாராட்டுகளும்)

http://www.nisaptham.com/2014/02/blog-post_19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.