Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர் | நிலம் | வனம்!

Featured Replies

  • தொடங்கியவர்

இருபெரும் நாயகர்கள்!

 

neer_2111380f.jpg

முத்துமுனியன் - இயேசுபுத்திரன்

நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.

தன்னம்பிக்கை நாயகன்!

“ஏல...”

“ஏல...”

“யாழி...”

“யாழி...”

“கோவேல்...”

“வாங்க...”

“வலிய...”

“பணிய...”

“ஏல...”

“ஏல...”

- கடற்கரையை நெருங்கும்போதே அழைக்கிறது அம்பா பாடல். கடலையே கயிறு கட்டி இழுப்பதுபோல, கரை வலை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். மீன்பிடி முறைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான முறை கரை வலை முறை. கரையிலிருந்து சில மைல் தூரத்தில், கடலில் வலையை அரை வட்ட வடிவில் விரித்துவிட்டு, கரையிலிருந்து அதைக் கயிறு கட்டி இழுக்கும் மீன்பிடி முறை இது. விசேஷம் என்னவென்றால், ஆண்களோடு பெண்களும் பங்கேற்கும் மீன்பிடி முறை. பெரும் பகுதியான உழைப்பு கரையிலிருந்தே கொடுக்கப்பட்டாலும், கடலிலும் சிலர் நின்று ஒழுங்குபடுத்துவார்கள். கயிற்றை இழுக்கும்போது கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் அம்பா பாடலைக் கேட்கத்தான் கோதண்டராமர்கோவில் சென்றிருந்தேன். ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி இது. முத்துமுனியன் முனிய சாமியை அங்குதான் சந்தித்தேன். பாரம்பரியமான பாடலினூடே, அன்றைய தினம் ராமேஸ்வரம் பகுதி கடலோடிகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற செய்தியையும் கலந்தடித்துப் பாடியவாறே வலையை இழுத்துக்கொண்டிருந்தார். மிகுந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே வலை இழுத்தபோதுதான் அவரிடம் அந்த வேறுபாட்டை உணர்ந்தேன்: அவருக்குக் கண்களே இல்லை!

“எனக்குச் சொந்தூரு தனுஷ்கோடி. பெரும்புயலு அடிச்சுச்சுப் பாருங்க, அதுலயே நான் தப்பினவன். சின்ன வயசுல நல்ல பழக்கம் ஏதுமில்ல. காலியாதான் திரிஞ்சன். மொரட்டு சுபாவம். கைக்துடுக்கு வாய்த்துடுக்கு. பேச்சு நீண்டா சாத்திருவேன். ஒரே அடி. இப்பமே அறுவத்தியஞ்சி நெருங்குது, நல்லாத்தானே இருக்கன்? அப்ப இன்னும் நல்லா வாட்டஞ்சாட்டமா இருப்பன்.

உத்த ஒரே தொணயா எங்கய்யா இருந்தவரைக்கும் கஸ்ட நஸ்டம் தெரியல. ஒரு நா கடலுக்கு எங்கய்யாகூடப் போயிருந்தன். வலய இழுக்குறப்போ, மீனுங்ககூடவே ஒரு சொறி வலயில ஏறிடுச்சு. வலய இழுத்த வேகத்துல அவரு நெஞ்சுல பட்டுடுச்சு. ‘ஏ... யப்பா... சொறிடா... தொட்டுராதடா’ன்னார். அவ்ளோதான். நெஞ்சை அரிச்சிக்கிட்டு ரத்தம் கொப்புளிச்சிச்சி. போய்ட்டார். அப்பவும் திருந்தல. வாரிக் கொடுக்குற கடல்ல வெடிய போட்டு மீன் புடிச்சேன்.

கடலம்மா எவ்வளவு பொறுப்பா? ஒருநா வெடிய போடும்போது, கையிலேயே வெடிச்சிடுச்சு. அப்பிடியே மண்டை ரெண்டா செதறிட்டு. கண்ணெல்லாம் காலி. படகுல போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடுறாங்க. ‘ஏ... யய்யா... புயல்லயே பொழச்சவன் நானு, என்னய காப்பாத்தி மட்டும் உட்ருங்க, நாஞ் சாவ மாட்டன். பொழச்சிக்குவன்’னு அனத்திக்கிட்டே இருந்தவன் அப்படியே மயங்கிட்டன். ஆஸ்பத்திரில ஒரு வாரஞ் செண்டு நெனப்பு வந்தப்போ, கண்ணு இல்ல. உசுரப் பொழைக்கவெச்சதே பெரிசுன்னுட்டாங்க.

நெலகொலஞ்சி ஊர் திரும்பினப்போதாம் தெரிஞ்சிது, எம் மேல ஊருக்கு இருந்தது பயம் இல்ல, அருவருப்புன்னு. ச்சீ... என்னடா வாழ்க்க நாம வாழ்ந்ததுன்னு போயிட்டு. ஒரு பய சீந்தல. கடக்கரயில நெதம் வந்து ஒக்காந்திருக்குறதைப் பாத்துட்டு, ஒரு கூட்டம் ஒரு நா எரக்கப்பட்டு கொஞ்சம் மீனும் சோறும் தந்துச்சு. ‘அய்யா... எனக்கு சோறு வேணாம், நா பிச்ச எதிர்பாக்கல, வேல கொடு, என்னால செய்ய முடிஞ்சதுக்குக் கூலி கொடு’ன்னு கேட்டேன். அவங்களுக்கு மலப்பு. கடத் தொழிலுக்கு ஒடம்புதான் உசுரு. கடலோடுறவனுக்கு ஒடம்பு முழுக்க கண்ணா இருக்கணும். எனக்குக் கண்ணே இல்ல. நா வுடுறதா இல்ல. சேத்துக்கிட்டாங்க.

ஒடம்பு அத்துக்கெடந்தப்போ, கிராமத்துல ஒரு ஆத்தாதான் எரக்கப்பட்டு உதவுனா. ஒழைச்சத அந்த ஆத்தாகிட்ட கொண்டுபோய் கொடுத்தன். ஒரு நா அந்த மவராசி செத்துட்டா. அந்த ஆத்தாளுக்கு ஒரு மவ. ஏ... ஆயா நா ஒன்னக் கடசி காலம் வரைக்கும் என் ராணி மாரி வெச்சு பாத்துக்குவேன். என்னய கட்டிக்குறீயான்னேன். சரின்னுச்சு. கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. என்னய நம்பி வேல கொடுத்தவங்களுக்கும் வாழ்க்க கொடுத்தவளுக்கும் நம்பிக்க கெடாம விசுவாசத்தக் காப்பாத்துறன்.

அதிகாலயிலயோ நடுராத்திரியிலயோ தொழிலுக்குக் கூப்பிட்டா ஒடனே ஓடியாந்திருவேன். கவனமா தொழில் பண்ணுவேன். கடுசா உழைப்பென். கண்ணில்லேன்னு நா நெனக்கிறதே இல்ல. மனசு முழுக்க நம்பிக்க கெடக்கு. வாரிக் கொடுக்க கடலம்மா இருக்கா. நாம இயற்கய துன்புறுத்தலன்னா, அதவிட நமக்குத் தொண கெடயாது. என்ன நா சொல்றது?”

கேள்விக்குப் பதில் எதிர்பார்க்காமல் ஓடுகிறார். அம்பா பாடல் தொடர்கிறது...

“ஏல...”

“ஏல...”

 

 

தர்மத்தின் தலைவன் !

“யாரு, எங்கூரு எம்ஜிஆரையா தேடிக்கிட்டு ருக்கீங்க?” - இயேசுபுத்திரனைக் கன்னியாகுமரி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.

கடல் நடுவே இருக்கும் பாறைகள் வெளியிலிருந்து கடற்கரைக்குச் செல்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அழகானவை. கடற்பாறைகளின் முழு அடியையும் ஆபத்தையும் கடலோடிகள் மட்டுமே அறி வார்கள். கரைக்கடலில் பாறைகள் நிறைந்த பகுதியைத் தாண்டிச் செல்வதை ஆழி தாண்டுதல் என்று சொல்வார்கள் அவர்கள். மிகச் சவாலான பகுதி அது.

இந்தியப் பெருநிலத்தின் எல்லையான குமரிக் கடலில் இப்படி நிறைய ஆபத்தான பாறைகள் உண்டு. “அதோ தெரியிதே அது பேரே மரணப் பாறன்னுதாம் சொல்லுவம். அதுக்கிட்ட அலயில விழுந்தம் விறுவிறுன்னு இழுத்து, பாறயிடுக்குல கொண்டுபோயி சொருக்குன்னு சொருகியிரும். அதோ தெரியிதே கொஞ்சம் சின்னதா, அந்தப் பாறகிட்ட ஆப்புட்டாலும் அப்பிடித்தாம். மேல பாக்க ரெண்டு ஆளு ஒசரம் தெரியிதுல்ல, உள்ள போய்ப் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க. அவ்ளோ உசரம். மத்ததெல்லாமும் லேசுபட்டதுன்னு நெனைக்க வேணா. கடத் தொழிலுக்குப் போறவங்களே அசந்தா சிக்கிக்குற எடம் இது. கடலப் பத்தி ஒண்ணுந் தெரியாத சுற்றுலா பிராயணிங்க சிக்கிக்கிட்டா என்னாவும்? இதுவரைக்கும் பல நூறு பொணம் வுழுந்துருக்கு, பாருங்க இங்கெ...” - உள்ளூர்க்காரர்கள் இப்படி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள்.

குமரிக் கடலில் கடலலையின் அடியில் படகு தவறிக் கவிழ்ந்தாலும் சரி, பாறையில் ஏறி ஆட்கள் யாரும் விழுந்தாலும் சரி, உடனே அழைப்பு செல்லும் இடம் இயேசுபுத்திரன் வீடு.

“சின்ன வயசுலேந்தே எம்ஜிஆர்னா ஒரு பிரியம். அதுவும் கடலோடியா, படகோட்டியா நடிச்சாரு பாருங்க சார், அவரு மேல உசுராயிட்டு. அப்போ மனுசன்னா, என்னா சார்?

(பாடிக்காட்டுகிறார்)

‘உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...’

‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...’

இதாம் நம்ம லட்சியம். சும்மா பேசுனா, லட்சியமாயிடுமா? ஒதவின்னு வந்தா ஒதவணும் சார், ஒதவணும். எங்கிட்ட யாரு ஒதவின்னு கேட்டு வந்தாலும் ஒதவிருவன். அப்படி ஒரு நா, கடக்கரயில நின்னுக்கிட்டிருக்கன். திடீர்னு கடல்ல தவறி வுழுந்துட்டாங்கன்னு கூட்டம் ஓடுது. நான் யோசிக்குறன். என் தலைவன் படத்துல இந்நேரத்துக்கு என்னா செய்வான்னு. ‘டேய் இயேசுபுத்திரா, நீ யோசிக்காதரா... நீ மனுசன்னா ஒதவணும்... ஓடு.. குதி’ன்னு நெஞ்சுலேந்து ஒரு கொரல். அவ்ளோதாம். குதிச்சுட்டன். அப்போலேந்து இது பழக்கமாயிடுச்சு சார். இங்கெ பாருங்க, கையில தலைவன்...” என்று கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்ஜிஆரைக் காட்டுகிறார்.

“கடலப் பாக்க வந்து, பாறயில ஏறிக் கடல்ல வுழுந்து, சுழல்ல மாட்டிக்கிறவங்க மட்டுமில்ல சார், எங்காளுங்களே பலரு கடல்ல கட்டுமரத்துல, வள்ளத்துல போம்போது மாசா அடிச்சித் தூக்கிக் கவுத்துரும். ஓடுவன். தேடித் தூக்கியாருவன். நெறய பேரு பொணமாவே போயிருவாங்க சார், அதயும் தூக்கிட்டு வந்து போடுவன். நல்ல ஆழத்துல படகுல என்ஜின் கடச்செடி கொடிங்கள்ல சிக்கிரும். ஓடுவன். கடலுக்குள்ள குதிச்சு, ஆழம் போயி, சிக்கியிருக்க செடி கொடிங்களை அறுத்துடுவன். சமயத்துல, வள்ளம் ஒருபக்கமா கவுந்துரும். கீழ போயி சங்கிலியைக் கோத்துட்டு, தூக்க ஒத்தாச பண்ணுவம்...”

“கடல் பயமாக இருக்காதா?”

“நம்ம கடலம்மா புள்ளைங்க சார். அதாம் ஒரே நம்பிக்க. நம்ம நமக்காவ குதிக்கல. நாலு பேர் உசுருக்காகக் குதிக்கிறம். கடலம்மா பாத்துக்குவான்னு ஒரு நம்பிக்க.

எல்லாமே சாவுக்குத் துணிஞ்சு எறங்குற வேலதான் சார். பயங்கர ஆழம். சொழலு வேற இழுக்கும். வரிப்புலியன் சுறா, மொரட்டுத் திருக்கைங்க கெடக்கும். கடப்பாம்புங்க கெடக்கும். கண்ணுல சிக்கினம், சிக்குன வேகத்துல மேல போய்ச் சேர வேண்டியதான். அதெல்லாம் வுடுங்க. மூச்ச அடக்குறது இருக்கே, அத சரியா கணக்குப் பண்ணாம வுட்டோம்னாலும் அவ்ளோதான். மாரடச்சு, கண்ணு தெரிச்சுப் போய்சேர வேண்டியதுதாம். எங்கண்ணனே ஒருத்தரு அப்பிடிப் போய்சேந்துருக்கார்.

ஒவ்வொருவாட்டியும் இப்பிடிப் போயி கடல்ல குதிச்சு முங்கி வெளிய வரும்போது எதாவது ஒடம்புல அடியோடுதான் வருவன். வூட்டுல திட்டுவாங்க. இனிமே இந்த வேல பாக்கக் கூடாது, நமக்கும் வயசாயிட்டுன்னெல்லாம் எனக்குள்ளயே சொல்லிக்குவேன். ஆனா, யாரோ ஒருத்தர் ஒதவின்னு கேட்டு வரும்போது எல்லாமே மறந்துரும். என் தலைவனா இருந்தா, என்னா செய்வான்னு நெனச்சுக் குதிச்சுருவன். இதுவரைக்கும் பதினெட்டு உசுரக் காப்பாத்திருக்கன் சார். இருபத்தியஞ்சி பொணத்தத் தூக்கிப்போட்டுருக்கன். போலீஸே நம்மளத் தேடித்தான் வருவாங்க. எதயும் காசு பணத்துக்காவ செய்யிறதுல்ல.

ஆக்ராலேந்து அசோக் ராணான்னு போலீஸ் அதிகாரி. எஸ்பியா இருந்தவரு. அவரு பையன் இங்கெ வந்தப்போ தவறி வுழுந்துட்டான். உசுரக் கொடுத்துக் காப்பாத்தினேன். என்ன வேணும் கேளுன்னு புடியா நிக்கிறாரு மனுஷன். ஒண்ணும் வேணாம் சார்னு சொல்லி அனுப்பிட்டன். கொஞ்ச நாள் கழிச்சு ஆள் வுட்டு ஆக்ரா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். வீட்டுக்குப் போய்ப் பாத்தா என் படத்த சாமி படத்தோட வெச்சிருக்காங்க. இந்த அன்பு போதும் சார்னு சொல்லிட்டு வந்துட்டன். அன்பைவிட மேல என்னா சார் இருக்கு இந்த ஒலகத்துல? நான் சொல்றது சரிதான?”

நெகிழவைக்கிறார் இயேசுபுத்திரன்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6418160.ece?homepage=true&theme=true

 

 

  • Replies 52
  • Views 19.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும்

 

s2_2113312g.jpg

 

s1_2113313g.jpg

 

நீர்ப் பயணத்தில் பார்த்த இரு ஆச்சரிய ஊர்கள் இவை. ஒன்று, சர்வதேச அளவில் ஆழ்கடல் மீன்பிடியில் சவால் விடும் சூரர்களைக் கொண்ட ஊர். சுறா வேட்டையில் எவ்வளவு ஈடுபாடோ, அதே அளவுக்குக் கால்பந்தாட்டத்திலும் வேட்கை கொண்டவர்கள். ஊரில் சந்தோஷ் டிராபி வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 19. இன்னொன்று, தனக்கெனத் தனிக் கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் ஊர். பெண்களுக்குத் திருமணச் சீராகத் தனி வீடு கட்டிக்கொடுக்கும் ஊர். இங்கே காவல் நிலையமும் கிடையாது, மதுக்கடைகளும் கிடையாது. முக்கியமாக, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி.

தூத்தூர். தமிழகக் கடல் எல்லையான நீரோடியிலிருந்து இறையுமண்துறை வரை உள்ளடக்கிய தீவு ஊர். சுறா வேட்டையர்கள் நிரம்பிய ஊர் என்கிற ஒரு வரித் தகவல்தான் தூத்தூர் கடலோடிகளிடம் என்னைக் கொண்டுசென்றது. ஆனால், தமிழகத்துக்கு வழிகாட்ட தூத்தூர்காரர்களிடம் இரு விஷயங்கள் இருக்கின்றன என்பதை அங்கே சென்ற பின்னர் உணர்ந்தேன்.

ஆழ்கடல் சூரர்கள்

“எல்லாக் கடலோடிங்களுக்குமே ஒரு கனா இருக்கும். என்னிக்காச்சும், நாம சுறா வேட்டையாடிடணும்னுட்டு. எங்க ஊருல ஒவ்வொருத்தனும் சுறா வேட்டக்காரந்தான். அதுவும் நெதம் நெதம் பொழப்பே சுறா வேட்டதான். ஜப்பான்காரன், தாய்வான்காரன், வியட்நாம்காரனெல்லாம் வெச்சிருக்குற கப்பலுங்க எல்லா வசதியும் கொண்டதுங்க. நம்ம ஆளுங்க வெச்சிருக்கிறது சாதாரண படகுங்க. ஆனாக்க, நம்மாளுங்ககிட்ட போட்டி போட முடியாது. ரொம்ப நுட்பமான ஆளுங்க. நடுக்கடல்ல இவங்க அமைக்கிற ஆயிரங்கால் தூண்டிலப் பாத்தா, எந்த நாட்டுக்காரனும் மலச்சுப்போவான். நீளவாக்குல ஒரு தூண்டி. அதுல குறுக்கமறுக்கன்னு பல தூண்டி. அப்பிடி ஒரு நுணுக்கம். இந்தப் பல தூண்டில எந்த ஒரு தூண்டி யாவது புடிச்சு சுறா எதாச்சும் சேட்டயாடினாகூட, மத்த தூண்டி பாதிக்காது. அப்பிடி ஒரு அமைப்பு. இதெல்லாமும் படக ஓட்டிக்கிட்டே போறபோக்குல கையாளுவாங்க” - ஊர்க்காரர்கள் பேசும்போதே புல்லரிக்கிறார்கள்.

 

சுறா வேட்டை எப்படி?

ஊரில் சுறா வேட்டையில் கில்லாடி யார்? பலருடைய விரல்களும் பெரியவர் சர்டைனை நோக்கியே நீள் கின்றன. ஆழ்கடல் சென்று அன்றைக்குத்தான் ஊர் திரும்பியிருந்தார்.

“கரக்கடல்லயே தொழில் செய்யிறவங்களுக்குச் சுறா வேட்ட பெரிய சாகசம். ஆழ்கடல் பழகுனா அதுவும் சாதாரணமாயிரும். வேற யாரயும்வுட நாங்க சின்னச் சின்ன நுணுக்கங்கள் சிலதைப் பயன்படுத்துறோம். உதாரணமா, வெளிநாட்டுக்காரன் கரயிலேந்து எடுத்துட்டு வந்த செத்த மீன் துண்ட முள்ளு வாயில சொருவுவாம். நாம அப்பிடிச் செய்யிறதில்ல. கடலுக்குள்ள அப்பக்கைக்கப்ப புதுசா மீனப் புடிச்சு, உசுரோட முள்ளு வாயில சொருவுவோம். எப்பவுமே பெரும்புடி மீனுங்க வேட்டயாடித் திங்கத்தாம் விரும்பும். அதனால, உயிரோட துள்ளுற மீனப் பாத்து வந்து நம்ம தூண்டில்ல சிக்கும். அவ்ளோதாம். இப்பிடிச் சில நுணுக்கங்க.

கடலுக்குள்ள வரிப்புலியன் சுறாவப் பாக்குறது, காட்டுக்குள்ள புலியப் பாக்குற மாரின்னு சொல்லுவாங்க. அந்தக் கடலே அவனுதுங்கிற மாரி சீறுவான். அதுவும் பெரும்பாலும் ஜோடி போட்டுதாம் வருவான். ஒரு வரிப்புலியனப் புடிக்கிறதுக்குள்ள அவனோட ஜோடி வந்துட்டா, ரெண்டு பேரயும் சேத்து நாம போராடணும். அப்பிடியே வெறியோட படகயே கடிச்சு முழுங்குற மாரி கடிப்பாம். சமயம் பாத்து ஈட்டிய வீசி அடிப்பம். ஜோடி வந்துட்டா ரெண்டு குழுவா பிரிஞ்சு அடிப்பம். அடி வுழுந்த வேகத்துல படகுக்குள்ள கொண்டுவரணும். இல்லன்னா, சுறாலேந்து கசியிற ரத்த வாடைக்கு மத்த பெருமீனுங்க சூழ்ந்துரும்...”

- ஒரு சுறா வேட்டை கண் முன்னே வார்த்தைகளால் அரங்கேறுகிறது.

 

ஆழ்கடல் எனும் அற்புத உலகம்

தூத்தூரைச் சுற்றிலும் எங்கும் குடிசைகளுக்கு இடம் இல்லை. “நாங்க நல்லா வசதியா இருக்கம். ஆழ்கடல் தொழில் தந்த வசதி இது. நம்மாளுங்க பல எடங்கள்ல தொழில் இல்லன்னு பொலம்பி உக்காரப் பெரும்புடியான காரணங்கள்ல ஒண்ணு, கரக்கடல்லயே தொழில் செய்யிறது. கட்டுமரமும் நாட்டுப்படகுங்களும் ஓடுற எடத்துலயே விசைப்படகுங்களயும் டிராலரயும் ஓட்டுனா என்னாறது? நம்ம நாட்டு ஆழ்கடல் வளத்துல பெரும் பகுதி பயன்படுத்தாமலே கெடக்குது.

ஒரு மொற ஆழ்கடல் போனா, ஒரு மாசத்துலேந்து ஒண்ணர மாசம் வரைக்கும் ஆவும் ஊர் திரும்ப. படகுக்கு டீசல் மட்டுமே பதினஞ்சாயிரம் லிட்டர் வரைக்கும் பிடிப்பம்னா, எவ்ளோ அரிசி, மளிகைச் சாமான், தண்ணீ பாட்டில் எடுத்துட்டுப் போவோம் பாத்துக்கங்க. ஆழ்கடல் தொழில் ஒரு தனி ஒலகம். கடலுல ஒரு எல்லயத் தாண்டிட்டா அது வேற ஒலகம். திடீர்னு ஒரு நா முழுசா பகலே இருட்டி ராத்திரியாவும்; கொஞ்ச நேரத்துலயே பகலு திரும்பும். ராத்திரில பெருவெளிச்சம் வரும். புலுவைங்க (திமிங்கிலங்கள்) பாட்டு பாடும். படகு உசரத்துக்கு மேல மாசா வரும், சலும்பலே இல்லாமலும் கட்டாந்தரையாட்டம் கடல் கெடக்கும். அது ஒரு தனி ஒலகம்...”

 

கால்பந்துக் காதல்

தூத்தூர்க்காரர்கள் ஆழ்கடலைத் தாண்டிக் காதலிக்கும் இன்னொரு விஷயம் கால்பந்து. தெருவுக்கு நான்கு மைதானங்கள் இருக்கின்றன. ஊர்க்காரர்கள் எல்லோருமே கால்பந்து ஆடுகிறார்கள், தாத்தா, அப்பா, பேரன் என்று வயது வித்தியாசம் இல்லாமல். “ஒண்ணு கடல்ல கெடப்பம். இல்ல, தெடல்ல கெடப்பம். தெருக்குத் தெரு வெளயாடிக்கிட்டு இருக்குறதால, இங்கெ ஒரு புள்ள பால் குடிக்கிற வயசிலயே பந்தடிக்கிறத வேடிக்க பாக்க ஆரமிச்சுரும். நடக்குறதுக்கு முன்னயே ஒதைக்க ஆரம்பிச்சுரும்” என்கிறார்கள்.

ஊர்க்காரர்களின் இந்த விளையாட்டு ஆர்வத்தை நல்லமுறையில் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் கடந்த தலைமுறையினர். அறுபது ஆண்டுகளுக்கு முன் ‘கென்னடி கிராமப்புற இளைஞர்கள் குழு’என்ற பெயரில் தொடங்கிய கால்பந்தாட்டக் குழு, கிராமத்தில் இன்று மகத்தான மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. “மொதல்ல கடக்கர மக்கள்கிட்ட இருக்குற உடல் வலுவுக்குச் சரியான தீனி வெளயாட்டு. பக்கத்து ஊருங்களோட அடிக்கடி வர்ற சண்டைங்களுக்கு முடிவுகட்டுச்சு. எல்லாத்துக்கும் மேல இன்னக்கிப் பலரக் கௌரவமா வெளியில தூக்கிட்டுப் போயிருக்கு. இங்கெயுள்ள பலரு மாநில அணியில, தேசிய அணியில இருக்காங்க. சந்தோஷ் டிராஃபி ஆட்டக்காரங்க மட்டும் 19 பேரு. ஐசிஎஃப், ஏஜிஎஸ், பிஎஸ்என்எல்னு பல நிறுவனங்கள்ல எங்க ஊர்க்காரங்கள வேலயில உக்காத்திவெச்சிருக்கு கால்பந்தாட்டம்” என்கிற தீர்தோஸ், தமிழகக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இப்போது குமரி மாவட்ட உடற்கல்வி அலுவலர்.

ஆழ்கடல் வளத்தைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறது, கடலோர மக்களின் உடல் வளத்தைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறது தூத்தூர்க்காரர்களுக்கு!

 

ஊர்க் காதலர்கள்

காயல்பட்டினத்தைப் பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட… ஆச்சரியம் அதிகமாகிக்கொண்டே போனது. சொந்த ஊர்க் காதல் நம்மூரில் விசேஷம் இல்லை. என்றாலும், காயல்பட்டினக்காரர்களின் ஊர்க் காதல் அசரடிக்கிறது.

 

காயல் கலாச்சாரம் தனிக் கலாச்சாரம்

“தமிழ்நாட்டுல உள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் ஊர்கள்ல ஒண்ணு காயல்பட்டினம். மத்தியக் கிழக்குலேர்ந்து கடல் வாணிபத்துக்காக வந்தவங்க மண உறவு கொண்டு தங்குன ஊருங்கள்ல ஒண்ணு இது. காயல்பட்டினத்துக்குன்டு தனிக் கலாச்சாரம் உண்டு. தமிழ்க் கலாச்சாரமும் அரபுக் கலாச்சாரமும், கடலோடிகளோட வாணிபக் கலாச்சாரமும் ஒண்ணுகூடி உருவான கலாச்சாரம் இது. கடக்கரையை அலைவாய்க்கரைன்டு சொல்லுவோம். காலைச் சாப்பாடு முடிஞ்சுட்டுதாங்கிறதைப் பசியாறிட்டீங்களான்டு கேப்பம். பழைய சோத்தைப் பழஞ்சோறும்பம். ரசத்தைப் புளியானம்பம். இப்பிடிச் சீர்ப்பணியம், போனவம், வெல்லளியாரம், சர்க்கரைப்புளிப்புன்டு எங்களோட சீர் பலகாரங்கள்ல ஆரமிச்சு, நாங்க அன்டாடம் பயன்படுத்துற பல சொல்லுங்க பழந்தமிழ்ச் சொல்லுங்க. இயல்பா எங்க மக்கள்கிட்ட இருக்கு. காலங்காலமா இங்கே காவல் நிலையம் கெடையாது. மதுக்கடை கெடையாது. வட்டி கெடையாது. வரதட்சிணையையும் ஒழிச்சுட்டோம். இங்கெ பொறந்தவங்களுக்கும் புகுந்தவங்களுக்கும் வேற எந்த ஊரும் ருசிக்காது” என்கிறார் கலாமி. ‘காயல்பட்டினம் வரலாறு’ நூலாசிரியர்.

“இது தாய்வழி சமூக மரப கடைப்பிடிக்குற ஊர். கல்யாணம் முடிச்சதும் மாப்பிள்ளதான் பெண் வீட்டுக்கு வாழப் போகணும். பெரும்பாலான ஆண்கள் கடல் தாண்டி வாணிபத்துல இருக்கிறவங்கங்கிறதால, இயல்பாவே எல்லா நிர்வாகமும் பெண்கள் கையிலதாம் இருக்கும். பெண்களுக்குச் சொத்துரிமையைப் பத்திப் பேசுற காலத்துக்கெல்லாம் முன்னாடியே, இங்கெ பெண் பிள்ளைங்களுக்குச் சொந்த வீட்டைச் சீதனமாக் கொடுக்குற வழக்கம் வந்துருச்சு. ஒவ்வொரு வீட்டையும் ஒட்டிப் பெண்கள் பயன்படுத்துறதுக்குன்னே ஒரு முடுக்கு இருக்கும். அது வழியாவே பூந்து ஊரோட எந்தப் பகுதிக்கும் போய்ட்டு வந்திரலாம். அந்தந்த வீட்டை ஒட்டியிருக்குற ஆண்களைத் தவிர, வேற ஆண்கள் இந்த முடுக்கைப் பயன்படுத்தக் கூடாது. ஆனா, பெண்கள் முடுக்கையும் பயன்படுத்தலாம்; வீதியையும் பயன்படுத்தலாம்” - காயல்பட்டினம் வீடுகளைப் பற்றிய சுவாரசியங்களை அடுக்குகிறார் ஷேக்ணா.

 

ரத்த உறவு நல்லிணக்கம்

“அந்தக் காலம் தொட்டே இங்கெ பொறந்த ஒவ்வொருத்தரும் தாயா, புள்ளயா பழகுற மரபைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்ங்கிற வேறுபாட்டுக்கெல்லாம் இங்கெ எடம் கொடுக்குறதில்ல. எங்களுக்குள்ள பால்குடி உறவு உண்டு. தாய்ப்பால் இல்லாத எத்தனையோ முஸ்லிம் பிள்ளைங்களுக்குத் தன்னோட பால் தந்து ஊட்டின தலித் பெண்கள் இங்கெ உண்டு. அவங்களை இன்னொரு தாயா பாவிச்சு, பராமரிக்குற பிள்ளைங்களும் உண்டு. மகாத்மா மேல எங்களுக்கு இருக்குற மரியாதையைக் காட்ட, அவருக்கு ஒரு வளைவு கட்டினம். கால்பந்துன்னா எங்க ஊர்க்காரங்களுக்கு உசுரு. எங்க பிள்ளைங்களுக்கு வெளயாட்டு கத்துக் கொடுத்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் இறந்தப்போ, விளையாட்டரங்கம் கட்டி அதுக்கு அவரொட பேரையே வெச்சோம். இங்கெ இருக்குற சமய நல்லிணக்கத்துக்கு உயிரோட நிக்கிற சாட்சியம் அது” - சந்தோஷத் தகவல்களைப் பரிமாறுகிறார் தமிழன் முத்து இஸ்மாயில்.

“ஆர்எஸ்எஸ், பிஜேபிகாரங்ககூட இங்கெ எங்கெகூட ஒண்ணோட மண்ணாதாம் கெடப்பாங்க. நீங்க பண்டாரம் அண்ணனைக் கேட்டுப் பாருங்க. இந்த ஊர்ல இந்து அமைப்புங்களோட பெரிய பிரதிநிதி அவருதான்” என்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்து வரவேற் கும் பண்டாரம், டீ சொல்கிறார். “ஆயிரம் அரசியல் செய்யலாம், எல்லாமே சக மனுசன் நல்லா இருக்கணும்கிற அக்கறயிலதாம் முடியணும்.இங்கெ சாதி, மத வேத்துமைக் கெல்லாம் எடமே கொடுக்குறதில்ல சார்” என்கிறார் பண்டாரம். டீக்கடை சபாவில் அஞ்சல் துறை ஊழியர் சந்திர சேகரும் சேர்ந்துகொள்கிறார். “பெருமைக்குச் சொல்லல. சார், எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க பலரை அவங்க தூக்கி விட்ருக்காங்க. பல கல்யாணங்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்துருக்காங்க. பழக்கம் வழக்கமுன்னா சும்மா இல்ல, எங்கள்ல அவங்க ஒருத்தர், அவங்கள்ல நாங்க ஒருத்தர்...”

 

திசையெட்டும் ஒற்றுமைக் குரல்

காயல்பட்டினக்காரர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். எங்கெல்லாம் பத்துப் பேருக்கு மேல் சேர்கிறார்களோ, அங்கெல்லாம் உடனே உருவாகிவிடுகிறது காயல் நல மன்றம். இலங்கை, அரபு அமீரகம், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று செல்லும் இடங்களிலும் மன்றங்கள் தொடங்கி, ஊர் உறவைப் பேணுகிறார்கள். ஊருக்கு உதவுகிறார்கள். “எந்த ஊர் போனாலும், எங்காளுங்களுக்கு ஊர் பாசம் போவாது. ஊருல என்ன நடக்குதுன்னு விடிஞ்ச உடனே தெரியணும். இந்தச் சின்ன ஊரோட சேதியைப் பரப்ப ஒன்பது இணையப் பத்திரிகைங்க இயங்குதுன்னு சொன்னா நம்புவீங்களா?” என்று வரிசையாகக் காயல்பட்டினம் இணையப் பத்திரி கைகளைப் பட்டியலிடும் சாலிஹ், காயல்பட்டினம் டாட் காம் இணையப் பத்திரிகையை நடத்துபவர்.

“ஊரவுட்டு எங்கெ போனாலும் ஊர் மேல அக்கற கொறயுறது இல்ல. நூறு வருஷத்துக்கு முன்னாடியே இங்கெ தங்களோட சொந்த காசப் போட்டு பள்ளிக்கூடம் கட்டிக் கற்பிச்சாங்க எங்க ஊர் முன்னோருங்க. அந்தப் பாரம்பரியம் இன்னைக்கும் தொடருது. கல்விக்கு, மருத்துவத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, விளையாட்டுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் உதவ ஒவ்வொரு சங்கம் இருக்கு. எந்த ஊருல இருந்தாலும் எங்க வருமானத்துல ஒரு பகுதியக் கொடுத்துருவோம். மத்தவங்க கஷ்டப்படுறத வேடிக்க பாக்குறதில்ல. மன வளர்ச்சி குறைவான குழந்தைங்களப் பராமரிக்கக்கூட இந்தச் சின்ன ஊர்ல ‘துளிர்’னு ஒரு சிறப்புப் பள்ளிக்கூடம் உண்டு. எல்லாமே சக மனுஷம் மேல உள்ள அக்கறதாம்” என்று சொல்லும் புஹாரி, இலங்கையில் வாணிபம் செய்பவர்.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷமும் அதுதானே?

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6421533.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

நீரிலிருந்து நிலத்துக்கு...

nnv_2115158g.jpg

 

nnv2_2115159g.jpg

நீர்ப் பயணம் இன்றோடு நிறைகிறது. பயணத்தை எங்கே முடிப்பது? கொற்கை அழைக்கிறது. “கொற்கை பண்டைய தமிழரோட பெருந்துறைமுக நகரம். பாண்டியர்களோட கடல் தலைநகரம். முத்துக்குளிப்புக்குப் பேர் போன எடம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே தமிழ்க் கடலோடிங்க வெறும் மீன்பிடியில மட்டும் இல்ல; கடல் வாணிபத்துலயும் எவ்வளவு வல்லமையோட இருந்தாங்கங்கிறதுக்கான சாட்சியங்கள்ல ஒண்ணு” என்கிற நண்பர்களின் வார்த்தைகள் கொற்கையை நோக்கி மேலும் நகர்த்தின. கொற்கைக்குப் பயணமானேன்.

கடந்து வந்த பாதை

 

கொற்கை நோக்கி வண்டி முன்னேறுகிறது. நினைவுகளோ பின்னோக்கி ஓடுகின்றன. நம்முடைய கடலையும் கடலோடி களையும் புரிந்துகொள்வதற்கான இந்த நீர்ப் பயணத்தில், நாம் எந்த அளவுக்கு அவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம்? பெரியவர் சாமிப்பிள்ளை நினைவுக்கு வருகிறார். நம்முடைய கடலைப் பற்றியும் கடலோடிகளைப் பற்றியும் அவர்களுடைய சமகாலப் பிரச்சினைகளைப் பற்றியும் பிரமிக்கும் அளவுக்குப் பேசியவர். “ஐயா, நா சொல்லுற சேதிய மட்டும் வெச்சிக்கிட்டு எல்லாத்தயும் முடிவு செஞ்சிடாதீங்க. நமக்குக் கடலப் பத்தி தெரிஞ்ச சேதியெல்லாம் நம்ம முன்ன கெடக்குற கடலுல ஒரு துளி காணாது” என்றவர். காலமெல்லாம் கடலோடியவர். எந்த விஷயத்தைக் கேட்டாலும் தகவல் களைக் கொட்டுபவர். அவருக்குத் தெரிந்ததே ஒரு துளி காணாது என்றால், நாம் தெரிந்துகொண்டது எவ்வளவு இருக்கும்? ஏக்கமும் ஏமாற்றமுமே மிஞ்சுகின்றன. எனினும், ஒரு சின்ன சந்தோஷம் இருக்கிறது: நாம் அவர்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம். அவர்களுடைய பிரச்சினைகளின் மையத்தின் திசைகள் நமக்குப் புலப்பட ஆரம்பித்திருக்கின்றன.

 

ஒரு புயலால் பாதிக்கப்பட்டதாலேயே அரசாங்க அமைப்புகளால் வஞ்சிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தால் புறக்கணிப்பட்டுக் கிடந்த தனுஷ்கோடி மக்களுடன் நாம் பேசினோம். நேற்றைக்கு அவர்கள் குரல் சட்டசபையில் எதிரொலித்தது. இன்றைக்கு, 50 ஆண்டுகளுக்குப் பின்பு, அங்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பதன் தொடக்கப் புள்ளி இது. அவர்களுடைய பிரச்சினைகளைக் கரிசனத்துடன் அணுக ஆரம்பிப்பதன் தொடக்கப் புள்ளி. மாற்றங்கள் புரிதல்களிலிருந்தும் புள்ளிகளிலிருந்துமே தொடங்குகின்றன.

 

கொற்கையில் கடல் எங்கே?

நினைவுகள் அலைமோதிக்கொண்டே இருக்கின்றன. கொற்கைக்குள் நுழைகிறேன். இரு பக்கமும் நெல் வயல்கள், தென்னை - வாழைத் தோப்புகள், சாலையின் ஓரத்திலேயே நெல் கதிரடிக்கும் விவசாயிகள்... இதுவா ஒரு மாபெரும் துறைமுக நகரம் இருந்த இடம்? ஆம். இன்றைக்கு ஒரு சின்னக் கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்த ஊர்தான், அன்றைய பெரும் துறைமுக நகரம் என்கிறார்கள். கொற்கையில் கடல் இல்லை. “கடலு கொற்கய கொண்டுருச்சு. பின்னாடி அப்பிடியே இங்கிருந்து மூணர மைலு அந்தாண்ட ஓடிருச்சி. கடலு பின்வாங்கிட்டதால, கொற்க இப்ப வெறும் வயக்காடா மாறிடுச்சு” என்கிறார்கள். அதற்கு மேல் எதைக் கேட்டாலும், “புள்ளை முத்து புள்ளை ஐயாவைப் பாருங்க” என்கிறார்கள்.

கொற்கையைப் போலவே ஒருகாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, தேய்ந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனிமையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடக்கிறார் பிள்ளை முத்து பிள்ளை. முதுமையும் தள்ளாமையும் வார்த்தைகளை முடக்குகின்றன. கொற்கையைப் பற்றிக் கேட்டால், ஒரு பாடலை முணுமுணுக்கிறார்.

“ஆல மரம் அரச மரம் ஆனதிந்த நாடு

அதன் பிறகு புளியமரம் ஆனதிந்த நாடு

நாலாய் உகுந்தன்னில்.... (தேம்புகிறார்)...

(குரல் புரியா வார்த்தைகள் கரைகின்றன)

கோலமாகாளி வெற்றிவேல் அம்மன்

கொலுவிருந்து அரசு செய்யும்

கொற்கை வள நாடு...” (மீண்டும் தேம்பல்)

பாண்டியர்கள் ஆட்சியின்போது மதுரையில், எப்படியான கட்டமைப்புகள் இருந்ததோ, அதேபோன்ற கட்டமைப்புகள் கொற்கையிலும் இருந்ததாகக் கூறுகிறார்கள். வீதிகளின் பெயர்கள்கூட மதுரையை ஒத்து இருந்ததாகச் சொல்கிறார்கள். கொற்கையின் பல இடங்களில் மண்ணைத் தோண்டும்போது, கடல் சிப்பிகளும் சங்குகளும் நாணயங்களும் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அப்படிக் கண்டெடுக்கப்பட்ட விவரங்கள் எல்லாம் பிள்ளை முத்து பிள்ளைக்குத் தெரியும் என்கிறார்கள். இந்தத் தகவல்களையெல்லாம் புறந்தள்ள முடியாது. கொற்கையிலிருந்து பத்து மைல் தொலைவில்தான் அரிக்கமேடு இருக்கிறது. பெரியவரிடம் பேசினால், எல்லாவற்றையும் சொல்லிவிட அவருடைய இதயம் துடிக்கிறது. முதுமையோ அழுத்திப் பிடித்து நெரித்து வார்த்தைகளைச் சிதைக்கிறது.

 

பொட்டவெளித் துறைமுகம்

பிள்ளை முத்து பிள்ளை வீட்டிலிருந்து வெளியேறி, அந்தச் சின்ன கிராமத்தின் மையப் பகுதியைத் தாண்டிச் சென்றால், துறைமுகம் இருந்த இடம் என்று ஒரு கோயிலைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கோயில் வாசலில் ‘பழமை வாய்ந்த துறைமுகம் கொற்கை’ எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட தமிழக அரசின் வளைவு நிற்கிறது. சுற்றியுள்ள பொட்டல்வெளியில் ஆடுகள் மேய்கின்றன. சுட்டெரிக்கும் அந்த வெயிலில், ஓடும் ஆடுகளின் போக்குக்கேற்ப சத்தம் கொடுத்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இரு கீதாரிகள். ரொம்ப நேரமாக அங்கேயே நின்று கவனிப்பதை உணர்பவர்கள் அருகே வருகிறார்கள்.

“ஐயா யாரு? ஊருக்குப் புதுசுங்களா?”

கதை தொடர்கிறது. களம் மாறுகிறது. ஆம். நாம் நீரிலிருந்து நிலத்தை நோக்கிப் பயணமாகப்போகிறோம். நம்முடைய நிலப் பழங்குடிகள் விவசாயிகளின் கதைகளைக் கேட்கப்போகிறோம். விரைவில். இடையில் ஒரு சின்ன இடைவெளி.

 

(பயிர்கள் தழுவும்...)

 

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6424478.ece?homepage=true&theme=true

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.