Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிகணேசன் அவர்களின் 78 வது பிறந்ததினம் இன்று.

Featured Replies

சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம்

சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி

1928 அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.

புராணக் கதைகளாலும் பாடல்களாலும் மட்டுமே நிரப்பப்பட்ட தமிழ் சினிமா சிவாஜி வந்த பிறகே புதுத் தோற்றம் கொண்டது எனலாம். நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், நம் குழுமத்தில் வெளியிட்ட மலர் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் சில பகுதிகளை இங்கே உங்களுக்கு ஃப்ளாஷ்பேக் பொக்கேவாகத் தருகிறோம்.

* இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த விருதுகளிலேயே நீங்கள் பெரிதாக மதிக்கும் விருது எது?

"வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக கெய்ரோவில் (Afro-Asian Film Festival) அளிக்கப்பட்ட விருதைத்தான் நான் இன்றும் பெரிதாக மதிக்கிறேன். திறமை வாய்ந்த பெரிய நடிகர்களுக்கிடையே எனக்குக் கிடைத்த முதல் விருது அது. முதலில் கிடைக்கும் கெüரவத்துக்குத்தானே எப்பொழுதும் மதிப்பு அதிகம்.

* பெரியார் வேடத்தில் நடிப்பதுதான் லட்சியம் என்று கூறியிருக்கிறீர்கள்... அது பெரியாரின் கொள்கை மீது உள்ள ஈடுபாட்டினாலா அல்லது தனிப்பட்ட முறையில் பெரியார் மீது நீங்கள் கொண்டுள்ள மரியாதைதான் காரணமா?

பெரியார் கொள்கை மீதுள்ள ஈடுபாடுதான் காரணம். சின்ன வயதிலிருந்தே ஐயாவின் (பெரியாரின்) கொள்கையில் எனக்கு பிடிப்பு உண்டு. 1954-க்குப் பிறகுதான் எனக்குக் கோவில் தெரியும். அதற்கு முன்பெல்லாம் நான் கோவிலுக்குச் சென்றதில்லை. நான், கலைஞர், கரந்தை சண்முகவடிவேல் போன்றவர்கள் கோவில் பக்கம் செல்வோம். காற்றாட பேசிவிட்டுத் திரும்புவோம். பக்தியெல்லாம் கிடையாது.

ஒரு சமயம் நான் மிகவும் மனம் உடைந்திருந்தேன். அப்போது இயக்குநர் பீம்சிங்தான் என்னை முதல் முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அன்றுதான் நாஸ்திக கணேசன் ஆஸ்திகரானார்.

* கோவிலுக்கு போகாததுதானா பெரியார் கொள்கை?

கலைஞர் எழுதிய வசனத்தை சொல்கிறேன். கோவில் கூடாது என்பதல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

எனக்கு இரண்டு மூன்று தலைவர்கள் மேல் அபிமானம் உண்டு. பெயரைச் சொன்னால் பிரச்சினை வரும். ஐயா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.

தமிழ் மக்களுக்கு மறதி அதிகம். காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களையே ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறதே? அது போல ஐயாவையும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஐயா ஒரு தங்க விளக்குதான். எவ்வளவுதான் ஒளி தந்தாலும் அந்த வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு மக்களைத் தூண்ட வேண்டுமல்லவா? அதனால்தான் ஐயா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்.

இப்போது தொழில்நுட்ப ரீதியாக திரைப்பட உலகம் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. ஐயா மாதிரி மேக்-அப் போட்டு தத்ரூபமாக நடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. காமராஜர் வேடத்தில் கூட நடிக்க ஆசைதான். அவர் வாட்டசாட்டமாக இருப்பார். பெரிய உருவம், அவருக்குள்ள ஆகிருதி எனக்கு இல்லை. எனக்கு அதுபோன்ற உடல்வாகு கிடையாது.

ஆனால் ஐயா வேடம் எனக்குப் பொருந்துமென்று நினைக்கிறேன். எனது ஆயுளுக்குள் அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு இயற்கை விட்ட வழி. ஐயா கொடுத்த பட்டத்தை வைத்துதானே இன்றைக்கும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...!

* நீங்கள் நடிக்கும் படம் பெரியாரை பற்றிய முழுமையான படமாக இருக்குமா?

இல்லை. ஐயா வேடத்தில் நடித்து ஒரு முழுப் படத்தையே எடுப்பது இன்றைய சூழ்நிலையில் ஒத்துவராது. ஒரு கமர்ஷியல் படத்தில் ஐயா பாத்திரம் வருவது அதிகபட்சம் மூவாயிரம் அடி இருக்க வேண்டும். அதுதான் தாங்கும். ஒரு வயதான ஹீரோ மாதிரி இப்போது எனக்குக் கொடுக்கிறார்களே.. அது மாதிரி - படத்தில் ஐயா வேடம் அமைய வேண்டும்.

ஐயா மாதிரி நீண்ட தாடியெல்லாம் வைத்து அருமையாக மேக்-அப் போட்டு எடுக்க வேண்டும். இந்தத் தாடி இல்லை (தனது தாடியை வருடிக் காட்டுகிறார்). இது பிளேடு விலை ஏறியதால் வந்த தாடி! ஐயா தாடி அறிவு தாடி. ஐயா வேடத்தை வைத்து முழுப்படமும் எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது மக்களிடம் போய்ச் சேரவேண்டும்!.

* பெரியார் வேடத்தில் உங்களை நடிக்க வைப்பது தொடர்பாக யாராவது அணுகியிருக்கிறார்களா?

இதுவரை இல்லை. யார் மணிகட்டுவது என்பதுதான் பிரச்சினை. அதுபோன்ற ஒரு படத்தை எடுப்பதற்கு துணிவு வேண்டும். நாமே எடுக்கலாமா என்று யோசிக்கிறேன். இன்னும் பழமாகல. காயாகத்தான் இருக்கு, பார்ப்போம்.

* சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம், தகுதி எவை என்று கருதுகிறீர்கள்?

நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒழுங்காகச் செய்தாலே போதும். எல்லாம் நன்றாக வரும். எந்தப் பாத்திரத்தைச் செய்தாலும் மக்கள் ரசிக்கும் படியாகச் செய்ய வேண்டும். "நவராத்திரி'யில் நீங்க ஒன்பது ஆளைத்தானே பாத்தீங்க. ஒன்பது சிவாஜியையா பார்த்தீங்க? நடிகனுடைய லட்சணமும் அதுதான்.

* நடிப்பில் உங்கள் வாரிசாக யாரைச் சொல்வீர்கள்?

அதெல்லாம் சும்மா சார். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம். வாரிசு என்று சொல்வதற்கு? இப்போது வருகிற பிள்ளைகளும் நன்றாகத்தானே செய்கிறார்கள். வாரிசு என்று சொல்லமுடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது என்று எடுத்துக்கொண்டால் கமல் நன்றாகச் செய்கிறார்.

எங்கள் காலத்தில் இப்போது உள்ளது போல டெக்னாலஜி கிடையாது. அதனால் மேக்-அப் போடுவதற்காக என்னை வருத்திக்கொண்டேன். முகம் முழுவதும் பிளாஸ்டிக் மேக்கப் போட்டு ஒட்டிக்கிட்டேன். உடம்பு முழுவதும் முடியை ஒட்டிக்கிட்டேன். இப்போது அப்படி இல்லை. இந்த கோணத்தில் பார்க்காமல்... நன்றாகச் செய்கிறார். இதை அவருக்கு வேண்டாதவர்கள் கூட மறுக்க முடியாது.

* இந்தப் படத்தில் நடித்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்த படம் அல்லது பாத்திரம் ஏதனும் உண்டா?

நான் நடித்த படங்களையே அதிகம் பார்த்ததில்லை. மற்றவர்கள் நடித்த படங்களை பார்த்தால்தான் சொல்ல முடியும். முன்னூறு படங்களில் நடித்திருக்கேன், கிட்டத்தட்ட நான் செய்த வேடங்களைத்தானே மற்றவர்களும் செய்திருப்பார்கள். பிறகென்ன...?

- தொகுப்பு : பாரதி

நன்றி சினிமாஎக்ஸ்பிரஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.