Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன்

வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறார்கள். தாய்மார்கள் அவர்களைக் காப்பாற்றச்சொல்லி மன்றாடுகிறார்கள். பின்னர் காடு அதிரக் கதறியழுகிறார்கள். சில நேரங்களில் விடியும் வரை கேட்கும். நான் கொட்டக்கொட்ட விழித்திருப்பேன்.. நீ இன்று கேட்கிறாயா..” என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருடைய கைகளைப்பற்றி விடைபெற்றேன். அவருடைய மனம் இன்னமும் 2009லிருந்து மீளவில்லை. அந்நாட்களிலேயே உறைந்து பிறழ்ந்து விட்டது.

இன்னுமொருவன், இவன் சிறுவன். எட்டு வயது. இறுதி யுத்தத்தில் சிக்கி, மீண்டு, முகாமில் அடைக்கப்பட்டு இப்பொழுது யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியிருக்கின்றான். இவன் வளவிலும், தெருவிலும், பள்ளிக்கூடத்து வேலிகளிலும் அலையும் தவளை, ஓணான், அறணை, அணில் என எந்தச் சிறு உயிரினங்களையும் உயிரோடு விடுவதில்லை. சிலநேரங்களில் அவற்றைத் திரத்தி ஓடுபவனை, தேடிச் சென்றுதான் அழைத்து வரவேண்டுமென்றார் அவனுடைய அம்மா. தவளைகள் மேலே கல்லைத் தூக்கி வீசி நசித்துக் கொலைசெய்துவிட்டு அதனை மண்ணில் புதைத்து நாட்கள் கழிய குழியைத் தோண்டி எலும்புகளை கிளறிப்பார்ப்பானாம். ஓணான் முட்டைகளை கல்லால் குத்தும்போதும், பதுங்கிச் சென்று கொல்லும்போதும் அவனுடைய முகத்தைப் பார்த்தால் தனக்கு இறுதி யுத்த காலங்களே நினைவுக்கு வருகின்றன என்று அச்சப்பட்டார் அந்த இளம் தாய். அக்காலத்தில், ஆரம்பத்தில் குண்டுச் சத்தங்களுக்கும் சாவுகளுக்கும் பயந்து பயந்து அழுதவன், நாளாக நாளாக ஒருவித இறுக்கத்தோடு இருந்தானென்றும், செத்த உடல்களை சலனங்களின்றியே பார்த்தானென்றும், ஒருகட்டத்தில் ஒருவித ஆர்வத்தோடு சாவுகளைக் காணப் பழகிக்கொண்டானென்றும் அவர் சொல்ல நடுக்கமாயிருந்தது.

யுத்தப்பின் காலத்தில், நடந்து முடிந்த யுத்தம், சமூக மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் கொரூரமான தாக்கத்தின் இரண்டு பதிவுகள் இவை. பால் வயது வேறுபாடின்றி யுத்தகாலத்து நினைவுகள் மனதைச் சிதைக்கும் கொடிய மிருகமாக பலருக்குள் ஒளிந்துகொண்டுள்ள இந்த நிலைபற்றி நம்மிடத்தில் பெருமளவான உரையாடல்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் யுத்தத் தரப்புக்களின் சரி/பிழைகளும், அவற்றின் அரசியல்களும் பேசப்பட்டும் படைக்கப்பட்டும் உள்ள அளவிற்கு யுத்தம் சிதைத்த மனங்களையும், அவற்றை ஆற்றுப்படுத்தும் வழிகளையும் பேசுவதற்கு யாரும் முற்படவில்லையென்பது துர்ப்பாக்கியமானது.

வெளிநாடுகளில் உள்ளதுபோல ஆற்றுப்படுத்துகையெனும் சிகிச்சை வாய்க்காத சூழலில் இப்படியான மனச் சிதைவுகளுக்கு உள்ளானவர்களை பைத்தியங்கள் என்று ஒதுக்கி வைப்பது சமூகத்தின் இயல்பான நிலையாயிருக்கிறது. மனச்சிதைவும், அழுத்தமும் சமூகத்திற்கு எதிரான கூறுகளாகவும் மாறக்கூடுமென்ற விழிப்புணர்ச்சி யாரிடத்திலும் இல்லாமலிருக்கிறது.

கொலை மிகச் சாதாரணமாகச் செய்யப்படக் கூடியது என்றும், ரத்தமும் தசைகளும் மிக மிகச் சாதாரணமானவையென்ற உணர்வுடனும் வளரும் குழந்தையின் எதிர்காலம் என்ன.? தன் கையிலேயே இறந்த குழந்தையின் நினைவு துரத்த, இரவெல்லாம் திடுக்குற்று விழித்து தற்கொலை செய்ய கிணற்றுக்கு ஓடும் இளம் பெண்ணை எவ்வாறு ஆறுதல் படுத்துவது..? முதலான கேள்விகள் பதிலற்றுக் கிடக்கின்றன.

0 0 0

யுத்தத்தில் சிதைந்த மனதொன்றின் கதையை பிரேம் கதிர் தன்னுடைய ஏதிலிகள் குறும்படத்தில் நேர்த்தியாக முன்வைத்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிந்தபிறகும் அது காலத்தை மட்டுமன்றி கண்டங்களையும் கடந்து எப்படித் துரத்துகிறது என்பதை ஏதிலிகள், திரைமொழியில் முன் வைக்கின்றது. யுத்தத்தில் தம் குழந்தையை இழந்த இளம் தம்பதியினர், யுத்த வலயத்திலிருந்து நீங்கி நெடும்தூரம் வந்துவிட்ட பின்னரும், அக்கொடுங்காலத்தின் நினைவுகள் இயல்பான வாழ்வொன்றுக்கான எதிர்பார்ப்பினையும் மெல்லிய சந்தோஷங்களையும் சிதைக்கும் உளவியல் அழுத்தத்தினை பார்வையாளனும் உணரும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் பிரேம்கதிர்.

eethilikal1.jpg

துணி துவைக்கும் இயந்திரத்தின் சத்தமும், அடுப்பில் எண்ணெய் பொரியும் ஒலியும், இவ்வாறான சாதாரண காரணங்கள், யுத்த காலச் சன்னதங்களிலிருந்து ஒருத்தியை மீளவிடாமல் அழுத்தத்திற்கு உள்ளாக்கி, அவள் சிறுகச் சிறுக சேமித்த கனவைச் சிதைத்துவிடுகையில் யுத்தப் பின்காலச் சந்ததி எப்படித் தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ளப் போகின்றது என்று துயரெழுகின்றது.

ஒரு படைப்பு நம்மைச் சூழ்ந்தவற்றின் தாக்கத்தை நிச்சயமாக உள்வாங்கியிருக்குமென்பது எனது நம்பிக்கை. ஒரு படைப்பாளி, தன் காலத்தை இலகுவாகப் புறக்கணித்துவிட்டு சற்றும் தொடர்பில்லாத கற்பனையில் நகரமுடியுமா..? ஆகக்குறைந்தது அது காலத்திற்குச் செய்கின்ற துரோகமல்லவா.. பிரேம் கதிர் நம் காலத்தின் துயரொன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

அண்மைக் காலத்தில் தனித்துவமாக மிளிரத்தொடங்கும் ஈழச்சினிமா குறித்து நம்பிக்கையாயிருக்கிறது.

0 0 0

யுத்தப் பின்காலச் சந்ததி எப்படித் தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ளப் போகின்றது என்றெழுதினேன். கவுன்சிலிங் போன்ற முறையான ஆற்றுப்படுத்துகைச் செயற்பாடுகள், அங்கே இல்லாத நிலையில் அல்லது அவற்றுக்குச் சென்றாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ ‘பைத்தியங்கள்’ என்று ஏளனமாகக் கருதப்படும் சமூகச் சூழலில் வேறென்ன செய்வது..? அவர்கள் பேச விரும்புகிறார்கள். தங்கள் பாடுகளைச் சொல்லி இறக்கி வைப்பதனூடாக ஆறுதலடைய விரும்புகிறார்கள். ஆயின் யாரோடு பேசுவது..? நிச்சயமாக நம்மோடுதான்.. வெளியாரோடுதான்..

அவர்களுடைய துயர மூச்சுக் குரல்களில் சாய்ந்து நின்று தம்மிருப்பு அரசியலைக் கெட்டிப்படுத்துக்கிற கெட்டிக்காரர்களுக்காக அந்தச் சனங்களை வாயடைக்கச் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் ‘கதைப்பதென்பது’ அவர்களுடைய உள வளத்திற்கான ஆறுதல். சமூகத்தின் எதிர்காலமென்பது அதனுடைய உள வளத்திலல்லவா உள்ளது..

http://www.eanil.com/?p=501

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.