Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் லயன் அறைகளில்தான் நாங்கள் வாழுகிறோம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதையுண்டு போன கொஸ்லாந்தை மக்களின் தியாகம் மலையக மக்களுக்கு நிலத்தையும் வீட்டையும் பெற்றுக் கொடுக்குமா?: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:-

Kos%20mothers_CI.jpg

மலையக மக்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகங்களில் வரும் செய்திகளை தொகுக்கும்போது ஏதோ ஓர் நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் வாழும் லயன்களுக்கும் வன்னியில் எங்கள் மக்கள் வாழ்ந்த முள்வேலி முகாங்களுக்கும் - யுத்தத்தின் பின் இப்போ மக்கள் வாழும வாழ்விடங்களுக்கும்;  இடையில் ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போல் உணர்கிறேன்...


மீள்குடியேறிய மக்களின் கூடாரங்களும் மலையக மக்களின் கூடாரங்களும் கூட அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் மலையக மக்களின் வாழ்வு பற்றி பேசும் தொலைக்காட்சிகளில் மலையகம் தொடர்பில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான கதைகள் மலையக மக்களின் வாழிடம் பற்றித்தான் பேசுகின்றன.


மலையகத்திற்குச் செல்லாத ஒரு காலத்தில் மலையகத்தை புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் பார்த்திருந்தோம். எங்கள் ஊர்களில் மலையகத்திலிருந்து இன வன்முறை காரணமாக துரத்தியடிக்கப்பட்டு வந்த மக்கள் சொல்லும் மலையக கதைகளைக் கேட்கும்போதும் மலையகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் இருக்கும் குறிப்பாக மலை சாராத பகுதிகளில் வசிக்கும் அனேகருக்கும் இப்படி மலையகம் தொடர்பில் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.


பாடசாலை சுற்றுலாவின்போது மலையகத்திற்கு சென்றபோதுதான் அந்த அழகுக்குள் எத்தகைய அவலம் புதைந்திருக்கிறது என்பதை புரிந்தது. சில தேயிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றபோது அதன் ஓரமாக லயன்கள் எனப்படும் மக்கள் குடியிருப்புக்கள் இருந்தன. அந்த வீடுகளை அன்று பார்த்தபோதும் அக்கராயனிலும் ஆனை விழுந்தானிலும் என ஈழத்தின் பல இடங்களில் பார்த்த அகதிமுகாங்கள்தான் நினைவுக்கு வந்தன. இவ்வாறு மலையக மக்கள் வாழ வைக்கப்பட்ட விதம் அவர்களுக்கு நேர்ந்த அரசியல் சூழலை அதிர்ச்சியோடு காட்டுகிறது.


1844ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து தேயிலை, கோப்பி, இறப்பர் தோட்டங்களில் வேலைக்காக கொண்டுவரப்பட்ட மக்கள் தங்கள் உழைப்பினால் மலையகம் என்ற தேசத்தை உருவாக்கினார்கள். இலங்கை அரசுக்கு பாரிய பொருளாதாரத்தை மலையக மக்கள் ஈட்டிக் கொடுக்கின்றனர். மலையகம் என்ற பொருளாதார விளை தேசத்தை உருவாக்கி இலங்கைப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்த மலையக மக்கள், பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியபோது கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்தால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.


1983இல் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை நடத்தியபோது தெற்கில் இருந்த மலையக மக்களும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர். அதனால் பலர் இந்தியாவுக்கு நாடு திரும்பிய அதேவேளை பலர் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நோக்கி வந்தனர். 2012ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கைத் தீவு மக்களில் 4.16 வீதமான மலையகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லைப் பிரதேசத்தில் உள்ள கொஸ்லந்த மிரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பல நூற்றுக்கணக்காணவர்கள் புதைந்து போயுள்ளனர்.


பேரதிர்ச்சி தரும் இந்த இயற்கைப் பேரனர்த்ததால் முழு மலையக தேசமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இயற்கை அனர்த்தம் குறித்து சிந்திக்க வேண்டிய இந்த நிலையை தடுத்திருக்க வேண்டிய எவரும் இதைக் கண்டுகொள்ளலில்லை. ஆனால் தாங்கள் ஒரு அபாய பகுதியில் அபாய வீடுகளில் வாழ்ந்து வருவதை அந்த மக்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் சொல்லிக் கொண்டிருந்தவர்கள். 'எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் லயன் அறைகளில்தான் நாங்கள்  வாழுகிறோம் என்று சொல்லாத மலையக மக்கள் இல்லை. உக்கிப்போன கூரைகளும் வெடித்து பாளம் பாளமாக பிளந்த சுவர்களுமாக காணப்பட்ட அந்த லயன்களில்தான் அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டது.


ஆயின் எங்களுக்கு தெரியாது? எங்களுக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கூற முடியாது. இந்தக் குரல்கள் நூற்றாண்டுகளாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மலையக மக்களை சுறண்டி உழைக்கும் தேயிலை நிறுவனங்கள் வீங்குகின்றன. அந்த மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் செய்பவர்கள் வீங்குகிறார்கள். காலம் காலமாக இந்த மக்களை சுறண்டுவதில்தான் அவர்களின் உழைப்பும், அரசியலும், இருப்பும் தங்கியுள்ளது. ஆனால் அந்த மக்களின் வாழ்வில் விடிவில்லை. நிம்மதியில்லை. மீட்சியில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்களும் பின்வந்தவர்களும் தமிழர்களுக்கு காலனியவாதிகள்தான் என்பதையே மலையக மக்களின் கதையும் சொல்கிறது.


தங்களின் குழந்தைகள் லயன் அறைகளைவிட்டு வெளியே வரவேண்டும் என்பது அவர்களின் கனவுகள். பாடசாலைக்குச் சென்ற எழுபது பிள்ளைகள் உயிர் தப்பியிருப்பது அந்த மக்களின் கனவின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது. காலம் காலமாக அந்த மக்கள் மலையக தோட்டங்களுக்கு உரமாகிப்போனார்கள். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. காலம் காலமாக பாதுகாப்பான வாழிடங்களை கோரிய அந்த மக்களின் குரல்களை செவிசாய்க்காத அந்த மக்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுககாக பலியாக்கிய எல்லோரும் இந்தப் பேரழிவுக்கு பெறுப்பேற்க வேண்டும்.


மலையக மக்களின் உழைப்பை சுறண்டி அவர்களுக்கு போதிய சம்பளமோ பாதுகாப்பான வாழிடங்களோ கொடுக்காத தேயிலை தோட்ட நிறுவனங்களும் அந்த மக்களின் வாழ்வு, அவர்களின் பாதுகாப்பு, உரிமை தொடர்பில் அக்கறைய எடுக்காத அரசியல் தலைவர்களும்தான் இதற்கு பெறுப்பேற்ற வேண்டும். மக்கள் இன்னும் தேயிலைச் செடிகளுக்குள் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கால்கள் புதைத்து நிற்கும் தேயிலைத் தோட்டமெங்கும் அட்டைகள். மலையக மக்களின் இரத்த்தை உறிஞ்சும் இந்த அட்டைகளிடமிருந்து இந்த மக்களுக்கு எப்போது விடிவு.

"நாங்கள் மகிழச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறோம்" என்று ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையையும் மலையக மக்கள் மீதான சுறண்டலையும் மறைத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு ஆதரவாகப் பேசிய பிரபல மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன் போன்றவர்கள் இதற்கெல்லாம் என்ன சொல்வார்கள்? 
 
இலங்கை ஜனாதிபதி போன்றவர்கள் பொதிகளுடன் புகைப்படங்களில் மின்னத் தொடங்குவது இந்த அவலத்தையும் அரசியல் ஆக்கும் அபாயமாகவே தோன்றுகிறது. தலைமுறையை காவு கொடுத்தவர்களுக்கு தாய் தந்தை உறவுகளை மலைக்குப் பறிகொடுத்தவர்களுக்கு இந்த நிவாரணங்களைகளுக்கும் அப்பால் எது அவசியமானது? அவர்களுக்கு என்று பாதுகாப்பான வாழிடங்களே தேவை. 
 
அன்று வாக்குரிமை பறிக்கப்பட்டு இந்த மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டன் தொடர்ச்சியான அணுமுறையும் வெளிப்பாடாகவே இன்றும் அந்த மக்கள் நிலமற்றவர்களாக லயன்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். பரம்பரை பரம்பரையாக இந்த தேசத்தில் உழைத்து  மலையக தேசத்தை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் இந்த மக்கள் நிலமுடைய மக்களாக ஆக்கப்படுவதே எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. 


மலையக மக்களை பார்க்கும்போதெல்லாம் அவர்கள் எவ்வளவு நலிந்து போயிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். நூற்றாண்டுகளாய் சுறண்டப்படுவதும் ஏமாற்றப்படுவதும் அவர்களின் தோற்றத்தில் தெரியும். அவர்களை உறிஞ்சும் தொழிலிடமும் நிம்மதியற்ற வாழிடமும் ஏற்படுத்திய களைப்பு அவர்களில் தெரியும். அந்த மக்களின் நலிந்த தேகங்களும் வலிகலந்த குரல்களும் இதை உணர்த்தும். ஆனால் தேயிலையை இறப்பரை கோப்பியை உருவாக்கும் பண்டங்கள் என்பதைத் தவிர இதையெல்லாம் யாரும் கருத்தில் எடுக்கவே இல்லை.


மத்திய மலை நாட்டில் உள்ள இந்த மக்கள் இவ்வாறுதான் காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பது அங்கு அவர்களுக்குள்ள சம உரிமையின்மையும் புறக்கணிப்பையும் ஒடுக்குதலையுமே காட்டுகிறது. பதுளை ஹல்துமுல்லையில் ஏற்பட்ட மனிதப் பேரழிவு இனியும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் மலையக லயன்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்களுக்கு இயற்கைப் பாதுகாப்பான காணிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். தங்கள் வாழ் நிலத்திற்காக போராடும் ஈழத் தமிழர்களும் அவர்களின் தலைமையும் மலையக தேச மக்களின் இந்த வாழ் நிலத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது.


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:-

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113120/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.