Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவந்த சீக்கிய தேசம்-தடதடக்கும் வரலாறு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன.

மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவிகளில் போதிய இடமில்லை” என்பதையும் இணைத்து போராடினார்கள்.

sk4.jpg

ஆனால்,அப்பொழுதைய சூழலை ஆய்ந்த பல்தேவ் ராஜ் நய்யார் எனும் சமூகவியல் அறிஞர் இந்திய ராணுவத்தில் இருபது சதவிகிதம் சீக்கியர்களே இருந்தார்கள்,மேலும் தாங்கள் இந்திய மக்கள் தொகையில் இருந்த அளவுக்கு இரு மடங்கு அதிகமாக அரசாங்கப்பதவிகளில் சீக்கியர்கள் நிறைந்து இருந்தார்கள் என்கிறார். பின்னர் என்ன காரணம் என்றால்,தொடர்ந்து தேர்தல்களில் காங்கிரஸ் அங்கே வென்று கொண்டிருந்தது.

கெய்ரோன் கோலோச்சி கொண்டிருந்தார் ; வளர்ச்சி,கல்வி,விவசாயம் என்று கலக்கி எடுத்தார். எதிர்ப்பு குரல் எழுந்தால் தூக்கி உள்ளே போடுவதை சாவகசமாக செய்தார். கூடவே குடும்பத்துக்கு என்று சொத்தும் சேர்த்துக்கொண்டார். நேரு விசாரிக்க வேண்டும் அவரை என்ற வேண்டுகோள் அழுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விசாரணைக்குழு ஒன்று அமைப்பதோடு அமைதி காத்தார். என்ன ஆனாலும் கெய்ரோன் மற்றும் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தார்கள்.

sk2.jpg

இந்தி மட்டும் போதும் என்று பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த இந்துக்கள் சொன்னார்கள்,குருமுகி வரிவடிவம் கொண்ட பஞ்சாபியும் தேவை என்று சீக்கியர்கள் முழங்கினார்கள்,தாரா சிங்குக்கு பதிலாக பதே சிங் சிரோன்மணி அகாலிதள தலைவர் ஆகியிருந்தார்; மத ரீதியான தனி மாநில கோரிக்கையை மொழிரீதியான கோரிக்கையாக மாற்றியிருந்தார். காங்க்ரா என்கிற பகுதி மக்கள் ஹிமாச்சல பிரேதசத்தில் இணைய விரும்பினார்கள். இந்தி பேசும் மக்களுக்கு ஹரியானா,பஞ்சாபி பேசியவர்களுக்கு பஞ்சாப் மற்றும் காங்க்ரா ஹிமாசல பிரேதசம் போய் சேரட்டும் என்று 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பிரித்து தந்தார்.

1972 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் வென்றது. அடுத்த தேர்தலில் தோற்றதும் மீண்டும் சிக்கலை கையில் எடுத்தார்கள்.அனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதில் பாதுகாப்பு,அயல்நாட்டு உறவு மற்றும் நாணயம் ஆகியவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்கிற சுயாட்சி கோருகிற தீர்மானம் எழுந்திருந்தது. கூடவே,தீர்மானத்தின் முதல் பக்கத்தில் தனி நாடு கிடைத்தாலும் பரவாயில்லை என்றொரு வரியை அமைதியாக சேர்த்திருந்தார்கள்.

எமெர்ஜென்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பெருவெற்றியோடு சிரோன்மணி அகாலிதளம் பிடித்தது. நடுவே காலிஸ்தான் கோரிக்கை வேறு மீண்டும் துளிர்த்து இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன்னர் மின்டோ-மார்லி முன்னர் எழுப்பப்பட்ட கோரிக்கை அது.

sk3.jpg

1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் என்கிற நாடு பஞ்சாபியர்களுக்கு உருவாக உள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதற்கு பாகிஸ்தான் வேறு ஆசீர்வாதம் செய்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அவரின் தளபதி பல்பீர் சிங் சந்து பஞ்சாபில் இருந்தவாறு அதே அறிவிப்பை வெளியிட்டார். கூடவே தனி நாணயம் மற்றும் ஸ்டாம்புகள் வெளிவந்தன. இந்திரா அரசு கண்டும்,காணமல் இருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நிகழ்த்தி இந்திரா அரசு தேர்தல் நடத்தியது. அதற்கு அது பிந்த்ரன்வாலேவை பஞ்சாபில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது.

குர்பச்சன் சிங் என்பவர் நிரங்காரிகள் என்கிற மதப்பிரிவை துவங்கி சீக்கிய மதத்தை சுத்தம் செய்வதாக சொல்லி இந்து மதத்தோடு இணைந்து விட வேண்டும் என்று அவர் முழங்கினார். முடியை,தாடியை மழித்து விட்டு,டர்பனை கழட்டிவிட்டு சுத்தமாக அவர் அழைக்க அதை எதிர்த்து அகண்ட கீர்த்தனி என்கிற அமைப்புன் களமிறங்கியது. அதன் தலைவர் ஃபௌஜா சிங் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் இறந்து போனார்கள். கோர்ட் குர்பச்சன் சிங் நிரபராதி என்று விடுவித்தது.

இறந்து போன ஃபௌஜா சிங்கின் மனைவி களத்தில் குதித்தார் அவருக்கு ஆதரவாக சீக்கியர்கள் சுத்தமாக வேண்டும்,இந்தியாவில் இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று முழங்கிய பிந்த்ரன்வாலே களத்துக்கு வந்தார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தோற்கடிக்க வேண்டிய சூழலில் இந்திரா அவரோடு கைகோர்த்து மேடையேறினார். மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவாக பிந்த்ரன்வாலே பிரச்சாரம் செய்தார். தீவிரப்போக்கை கைக்கொள்ள இளைஞர்களை அழைத்தார் ; தனிப்பிரிவு நான்கள் என்பதோடு காலிஸ்தான் நோக்கியும் பயணம் நகரும் என்பதை கோடிட்டு காட்டினார்.

அங்கே இருந்த பிந்த்ரான்வாலேவின் உடனிருந்தவர்கள் கொலைகள் செய்ய அஞ்சவே இல்லை. இவர் பேச்சுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பதினைந்து பேர் இறந்து போனார்கள் அவரின் தீவிரவாதப்போக்கை கண்டித்து எழுதிய பஞ்சாப் கேசரி ஆசிரியர் ஜக்ஜித் நாராயண் கொல்லப்பட்டார்.sk1.jpgஅதற்கு காரணம் பிந்த்ரன்வாலே என்று எல்லாருக்கும் தெரியும். களம் புகுந்தது போலீஸ். அவரைக்கைது செய்யாமல் கொஞ்சம் இருங்கள் என்று ஹரியானா வரை போன போலீசுக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உத்தரவு போட்டார். நானே இரண்டு வாரத்தில் சரண்டர் ஆகிறேன் என்று சொன்ன பிந்த்ரான்வாலேவை கைது செய்ய போலீஸ் போனதும் கலவரம் உண்டாகி அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் பதினோரு போலீஸ்காரர்கள் பலியானார்கள். அடுத்து ஒரு விமானம் கடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது ; கோர்ட் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்று விடுதலை செய்தது.

அதுவரை அவரை வெறுத்த சீக்கியர்கள் மத்தியில் கூட அவர் நாயகர் ஆனார். சிரோன்மணி அகாலிதள தலைவர் லோங்கோவால் பொற்கோயில் வந்து தங்கிக்கொள்ள அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சிரோன்மணி கட்சியினர் 83 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். பிந்த்ரன்வாலேவும் கிளம்பினார். காலிஸ்தான் கோரிக்கைக்கு அமெரிக்கா,கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிதி குவிந்தது ஒரு புறம். எக்கச்சக்க ஆயுதங்களோடு உள்ளே காத்துக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கூட்டாளி பிந்த்ரன்வாலே இப்பொழுது கட்சி மாறியிருந்தார்.

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்திரா முயற்சித்தார். இரண்டு நதிகளை பிரிவினையின் பொழுது இழந்து விட்டோம்,இருக்கிற மூன்று நதிகளை மற்ற இரு மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அதெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,ஹரியானா மற்றும் பஞ்சாபுக்கு பொதுவாக இருக்கும் சந்திகர் எங்களுக்கு மட்டும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்தார்கள். வன்முறையும் எகிறிக்கொண்டு இருந்தது. இந்துக்கள் மீதும்,எதிர்த்த சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன,பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்றது. பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அப்பாவி மக்கள் சுடப்பட்டு இறந்தார்கள் ; பயம் பஞ்சாபை பீடித்தது.

“காங்கிரசின் ஆட்சி முகலாயர் ஆட்சியை போன்றது ; நாற்பது சீக்கியர்களால் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள முடிந்தது என்றால் நம்மால் முடியாதா ? அமைதி என்பதே நமக்கு இங்கே சாத்தியமில்லை. தனி நாடே இலக்கு “,என்றும்,”இந்துக்கள் உங்களை தேடிக்கொண்டு வந்தால் அவர்களின் தலைகளை டிவி ஆண்டெனாக்களை கொண்டு நசுக்குங்கள் !” என்றெல்லாம் பேசி பேசி வன்முறையை தூண்டிவிட்டார். இந்திரா எப்படியும் அமைதியாக முடித்துக்கொள்ளலாம் என்று இறுதிவரை பேச்சுவார்த்தைகள் நடத்திப்பார்த்தார். எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது போல டி.ஐ.ஜி கொல்லப்பட்டார். ஜனாதிபதி பொற்கோயிலுக்கு போன பொழுது அவர் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றது.

ராணுவம் நுழையலாம் என்று சிக்னல் தரப்பட்டது. ஜூன் மூன்றில் பொற்கோயில் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்னர் லோங்கோவால் நிலவரி,தண்ணீர் மற்றும் மின்சார் பில்கள் கட்ட மாட்டோம்,மாநிலத்தை விட்டு தானியங்களை அனுப்பமாட்டோம் என்றெல்லாம் முழங்கினார். ஒரே நாளில் வேலை முடிந்துவிடும் என்று மிஷின் கன்களோடு போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. மறைவிடங்கள்,சுட்டிவிட்டு தப்பிக்கும் வழிகள் என்று அனைத்தும் தெளிவாக இருந்தது. கூடவே குறுகிய இடைவெளிகளில் புகுந்து தாக்கிவிட்டு தண்ணி காட்டிகொண்டு இருந்தார்கள். எறிகுண்டுகள் வேறு பயமுறுத்தின. பஞ்சாபியான பிரார் வழிகாட்டிக்கொண்டு இருந்தார் எந்த சுபேக் சிங்குடன் இணைந்து வங்கதேச விடுதலையை சாதித்தாரோ அவர் எதிர் முகாமில் தலைமை தாங்கிக்கொண்டு இருந்தார்.

துப்பாக்கிகள் போதாது என்று வெகு செக்கிரம் புரிந்தது. டேங்குகள் தேவை என்று டெல்லிக்கு சொல்லப்பட்டது. பதிமூன்று டேங்குகள் வந்து சேர்ந்தன. அஅவர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். இறுதியில் நான்கு அதிகாரிகள்,79 வீரர்கள் மற்றும் 492 தீவிரவாதிகள் இறந்து போனதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால் சில ஆயிரங்களில் இருக்கும் இறப்புகள் என்பது பொதுவான கருத்து..

கூடவே,ஹர்மீந்தர் சாஹிப் மற்றும் அகால் தக்த் என்கிற சீக்கியர்களின் புனிதமான பீடங்கள் சேதப்படுத்தப்பட்டு அவர்களின் புனித ஆலயமான பொற்கோயில் ரத்த நிலமாக மாறி ஆறாவடுவை உண்டாக்கி இருந்தது. அரசியல் பகடையில் முன்னேறி மேலே போன பிந்த்ரன்வாலே கூடவே மாணவர் அமைப்பின் தலைவர் அம்ரீக் சிங் இறந்து கிடந்தார்கள். சுபேக் சிங் வாக்கி டாக்கியோடு இறந்து கிடந்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்தது. அப்பொழுதைக்கு சிக்கல் ஓய்ந்தது போல இருந்தாலும் அமைதி திரும்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நடுவில் பின்விளைவுகளாக இந்திரா காந்தியின் படுகொலை,சீக்கியர்கள் மீதான கலவரங்கள்,படுகொலைகள்  ஆகியன காத்திருந்தன. அரசியல் ஆடுகளத்தில் உயிர்கள் எத்தனை மலிவாக போயின என்பதன் நிகழ்கால உதாரணம் பஞ்சாப் சிக்கல்.

-பூ.கொ.சரவணன்

vikatan

இந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) ?

 

இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக் கொண்டாடப்படுகின்றனர் ?, அவர்கள் இந்திராவைக் கொன்றிருக்காவிட்டால் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் சீக்கியருக்கெதிரான படுகொலைகள் நிகழ்ந்திருக்காது. அல்லது பொற்கோயிலில் இந்திய இராணுவத்தை ஏவி மிகப்பெரும் படுகொலைகளையும், சீக்கியரின் புனிதமாகக் கருதும் இடத்தை அழித்த இந்திராகாந்தியை கொன்றதால் கொண்டாடப்படுகிறார்களா என்றால் அதுதான் உண்மை. அவர்களிருவரும் பகத் சிங்கை விடவும் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்திரா காந்தி படுகொலையை அவர்கள் துன்பியல் நிகழ்வாகக் கருதவில்லை. அவர் கொல்லப்படுவார் என்பதை பஞ்சாப்பிய சீக்கியர்கள் உணர்ந்தே இருந்தனர். இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம்  வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.  இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History )  என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.
 
                                       597381.jpg
 
அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது.  இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார். 
 
அமைதி நடவடிக்கை (Operation Shanti)
 
சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம். 
 
பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.
 
இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
 
இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி)  என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.
 

 
1984 கலவரத்தின் சில துளிகள்

 

 

 

 

இந்திரா காந்தியின் படுகொலையும் மக்களின் எதிர்வன்முறையும்
 
சிறுபான்மையினரின் மேல் வன்முறை ஏவப்படும்போது இந்துப் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் ஒரு பதில் சொல்வார்கள். இந்த வன்முறை இந்துக்களின் எதிர்த்தாக்குதல் என்று மொத்த இந்துக்களின் மீதும் பழியைப்போட்டுவிடுவார்கள். இதைத்தான் டெல்லியில் நடந்த படுகொலைக்குப் பின்பும் சொன்னார் இராஜீவ் காந்தி. இந்திராவின் படுகொலைக்கும் பஞ்சாப்பில் நிலவிய பிரிவினைத் தீவிரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் பல்லாயிரம் சீக்கியர்கள் பேராயக்கட்சிப் பேய்களின் கொடூரத்திற்கு இலக்காகி மாண்டுபோனார்கள். டெல்லியிலிருந்த சீக்கியர்கள் பலர் பேராயக்கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்து மதவெறியைத் தூண்டுவதற்காக இவர்களைக் கொல்லப்படக் காரணமான கொலைகாரப் பயங்கரவாதி உதிர்த்த முத்துக்கள்தான் இவை. 
 
     "இந்திரா அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து சில கலவரங்கள் நடைபெற்றன. இந்தியாவே சில நாள்களுக்கு உலுக்கப்பட்டதிலிருந்து (சீக்கியர் படுகொலை) மக்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததை நாம் அறிவோம், ஆனால் பெரிய மரம் வீழும்போது தரை சிறிது அதிர்வது இயற்கையானது" என்றார் இராஜீவ்.
 
இந்திராகாந்தி 1984 -ம் ஆண்டு, அக்டோபர் 31 ம் நாள் காலை 9.15 மணிக்கு சுடப்படுகிறார். அவர் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். பலனின்றி இரண்டு மணிநேரத்தில் இறந்துவிடுகிறார். அவரது இறப்புச் செய்தி அனைத்திந்திய வானொலியில் அறிவிக்கப்படுகிறது. நண்பகலில் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் மக்கள் கூடத் தொடங்குகின்றனர். அவர்களால் வெறுப்பைக் கக்கும் "இரத்ததிற்கு இரத்தம்", "சீக்கியர்கள் தேசத்துரோகிகள்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. அவை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்நாள் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைய குடியரசுத்தலைவரான ஜைல் சிங் அன்று மாலை அவ்விடம் வந்து சேர்ந்த போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. அங்கங்கே சீக்கியர்கள் மகிழுந்துகளிலிருந்தும், பேருந்துகளிலிருந்தும் வெளியே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர், அவர்களது தலைப்பாகைகள் கிழித்தெறியப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவ்வளவுதான் இந்திரா காந்தி படுகொலை நடந்த நாளில் சிக்கியருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக இருந்தது.
 
திட்டமிடப்பட்ட வெறியாட்டம்
 
இந்த ஆவேசமானது ஒரு இரவுக்குள் மிகப்பெரும் படுகொலைகளைத் தொடக்கிவைக்கும் அளவுக்குக் கொலைகாரர்களால் ஊதிப்பெருக்கப்பட்டது. இதற்குக் காரணம் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்பதே. அந்தத் தந்திரம் வெற்றி பெற்றது. அந்தத தேர்தலில் மிகப்பெருமளவிளான வாக்குகளைப் பெற்று வென்றது பேராயக்கட்சி (காங்கிரஸ்).
 
A+Sikh+boy+being+burnt+alive+-1984.jpg
 
 திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையும் காவல்துறையின் உதவியும் மிகப்பெருமளவில் படுகொலைகள், கொள்ளையடிப்புகள், வன்கலவிகளுக்கு வழிவகுத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன்குமாரும், வர்த்தக சங்கத் தலைவர் லலித் மேகன் என்பவரும் கொலைகாரக் கும்பலுக்குப் பணமும், சாராயமும் தந்து தூண்டிவிட்டவர்கள். ஜே.ஜே காலனி எனப்படும் இடம் அவசரநிலைக் காலத்தில் பேராயக்கட்சியின் ஆட்சியாளர்களால் சேரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மறுகுடியேற்றப் பகுதிகளாகும். இந்தப் பகுதி பேராயக் கட்சிக்கு மிகப்பெரும் வாக்குவங்கியாக இருந்தது. குஜ்ஜார், ஜாட் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பாங்கீஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் வரை பலரும் பேராயக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இப்பகுதிகளில் இருந்த படிப்பறிவற்றவர்கள், உதிரிப்பாட்டாளிகள், சமூகப்பகைவர்கள், பொறுக்கிகள், பொறம்போக்குகளைக் கொண்டு பேராயக் கட்சி தமது அரசியல் போராட்டங்களில், பேரணிகளில், பொதுக்கூட்டங்களில், கலவரங்களில் ஈடுபடுத்தி வந்தது. இவர்களே கொலை, கொள்ளை, வன்புணர்ச்சிகளை நடத்தும் அடியாள்களாக செயல்பட்டனர்.
 
images.jpg
 
இந்தக் கொலைகாரர்களுக்கு மூன்று நாட்களும் போக்குவரத்து வசதி எல்லாவகையிலும் செய்து தரப்பட்டது. டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தொடங்கி, காவல்துறையினரின் வாகனங்கள் வரையில் இந்தக் கும்பல்களை சீக்கியர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு உதவின. இந்தக் கும்பலுக்குத் தொடர்ந்து வெறியூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன். "சீக்கியரைக் கொல், கொள்ளையடி", "சீக்கியனுக்குப் பாடம் கற்பிக்க!", "ஒரு சர்தாரும் தப்பக்கூடாது!", "காவல்துறையே நம்முடன் இருக்கிறது!" இவை முழக்கமிடப்பட்டன. இந்தக் கொலைகாரப் பேய்களுக்கு உருட்டுக்கட்டைகள், கம்புகள், வேல்கள், வாட்கள், கத்திகள், இரும்புத்தடிகள் மண்ணெண்ணெய் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டன, அவர்களின் கைகளில் வாக்காளர் பட்டியல் இருந்தது. வீடுவீடாக வெறியாட்டம் நடந்தது. வீடுகளிலிருந்தவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அடித்தும், வெட்டியும், உயிருடன் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். சாலையில் துரத்தித் துரத்தி வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். ஆண்கள் தலைப்பாகையைக் கிழித்தும் முடியை வெட்டியும், பெண்கள் கணவர்கள், அண்ணன்கள் முன்னிய்லையில் கும்பல்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். பாதி உயிருடன் எரிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரது பிணங்களும் தெருவிலே கிடந்தன. அவைகள் மூன்று நாட்களுக்குப் பின்பே கொலையானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டிய நிலையில் அப்புறப்படுத்தப்பட்டன. 
 
காவல்துறையினர் பரப்பிய வதந்திகள்
 
டெல்லியின் காவல்துறையும் தன் பங்கிற்கு பொய்யான வதந்திகளைப் பரப்பி சீக்கியருக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. பரப்பப்பட்ட மூன்று வதந்திகள் 
 
1. சீக்கியர்கள் இந்திராவின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டும் மகிழ்ந்தனர். 
 
2. ஒலிப்பெருக்கியுடன் இருந்த காவல்துறையினரின் வாகனங்கள் "சீக்கியர்கள் டெல்லியின் குடிநீர் விநியோகத்தில் நச்சைக் கலந்து விட்டார்கள்" என்றன , சில இடங்களில் மக்கள் நீரைக் குடிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.
 
3. பஞ்சாப்பில் கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களுடன் இரயிலொன்று பழைய டெல்லி இரயில் நிலையத்தில் வந்துள்ளது. சீக்கியர்களின் கூட்டமொன்று கலவரத்தைத் தூண்டுகிறது, எனவே இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாணியில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன.  
 
இதனால் சீக்கியர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவர்களின் புனித நூல்கள் எரிக்கப்பட்டன. அவர்களின் குருத்துவாராக்களில் சிறுநீரைக் கழித்துவிட்டு அவைகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினர் சீக்கியரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர். கொலைகாரர்கள் வீடுவீடாக வாக்காளர் பட்டியலுடன் சென்று அடையாளம் கண்டு கொன்று குவித்தனர்.  மேலும் சீக்கியர்களில் ஆண்கள் தலைப்பாகை, தாடிகளைக் கொண்டும், பெண்கள் உடைகளைக் கொண்டும் எளிதாக அடையாளம் காணப்பட்டு சூறையாடப்பட்டனர். இத்தனைக் களேபரத்திலும் மிக நேர்த்தியாக நடந்த நிகழ்வுகள் சில, அன்றாடங்காய்ச்சிகளான உழைப்பாளி சீக்கியர்கள் வாழும்பகுதிகளில் அதிகமாக கொலைகளும் , பணக்கார சீக்கியர்கள் வாழுமிடங்களில் கொள்ளைகளும் அதிகமாக நடந்தன. கொலைகார ஓநாய்க்கூட்டத்திற்கு எந்தெந்தக் கடைகள் கொள்ளையடிக்கப்படவேண்டும், எந்தெந்தக் கடைகள் எரிக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். 
 
இந்தக் கொலைவெறியாட்டத்தினால் 3000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. விதவைகள் எண்ணிக்கை 1300, பெற்றோர், உறவினரை இழந்து அநாதைகளானவர்கள் 4000 பேர்கள். உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் டெல்லியிலிருந்து மட்டும் ஏறக்குறைய 50,000 பேர்கள் வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குறித்தும் பஞ்சாப்பில் சீக்கியர் மனநிலை குறித்தும் ஒரு ஆவணப்படம் கீழே

நீல விண்மீன் நடவடிக்கையில் அழிந்த சீக்கியரின் வரலாற்று நூலகம்

 

சீக்கியரின் அடுத்த ஈடு செய்யமுடியாத இழப்புதான் பொற்கோயிலின் ஒரு பகுதியாக இருந்த அவரகளது நூலகம்(Sikh Reference Library) அழிந்து போனது. இராணுவச் சண்டைக்குள் காணாமல் போன துயரத்தில் ஒன்றாக கருதப்படுவது இந்த  நூலகம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிகழ்வு. அவர்களின் சில நூற்றாண்டுச் சேகரிப்புகள் ஒரு நாளில் மறந்து போயின. இது ஒரு வகையில் யாழ்ப்பாண் நூலகம் எரிக்கப்பட்டது போன்றதுதான். 
 
சீக்கியரின் பொற்கோயிலில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலின் பெயர்தான் நீல விண்மீன் நடவடிக்கை (Operation Blue star). அந்த இராணுவ நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தால் பொற்கோயிலில் இருந்த விலைமதிப்பற்ற தங்கம் போன்ற பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றில்  சில திருப்பியும் அளிக்கப்பட்டன. பலவும் அழிந்து போயின அல்லது தொலைந்து போயின.  பொற்கோயிலின் ஒரு கட்டிடத்தில் இருந்த இந்த நூலகம் 1947 - ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 600 ஆண்டுகால சீக்கியரின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சீக்கிய மதத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் , குருமார்களின் போதனைகள் கொண்ட பல நூல்களையும் கொண்ட அவர்களின் அடையாளமாகவும் விளங்கியது. இது இந்திய இராணுவத்தால் மர்மமான முறையில் எரித்து அழிக்கப்பட்டது அங்கிருந்த சில விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 
 
library.jpg
 
                                                                              எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி
 
நூலகத்தில் ஏறக்குறைய 20000 நூலகள் இருந்திருக்கலாம். சீக்கிய குருக்களின் சீடர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதிகள்,  ஆதிகிரந்தத்தின் பல்வேறு கையெழுத்துப் பிரதிகள், குரு கோவிந்த் சிங் அவர்களால் தொகுக்கப்பட்ட போதனைகள், பல்வேறு இலக்கியங்கள், ஓவியங்கள், பாடல்கள் அடங்கிய பல பண்பாட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டன. அதில் பஞ்சாபி மொழியிலிருந்த நூலகள், கையெழுத்துப் பிரதிகள் எண்ணிக்கை 2335. பஞ்சாபிய மொழி மட்டுமன்றி அஸ்ஸாமிய, சிந்தி, வங்காள மொழிகளிலும் இருந்த நூல்களும் இதில் அடக்கம். ஆங்கில மொழியில் மட்டும் 1047 நூல்கள் இருந்தன. ஏறக்குறைய 383 பாகங்களாக இருந்த நூல்கள் 980 தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன
 
நூலகம் எரிக்கப்பட்டதா என்ற சர்ச்சை
 
பிந்தரன்வாலேவையும் அவரது ஆதரவாளர்களையும் அழிப்பதற்காக இந்த நீல விண்மீன் நடவடிக்கை இந்திராவினால் உத்தரவிடப்பட்டது. சில நூறு காலிஸ்தானிகளை எதிர்த்து மிகப்பெரும் இராணுவ நடவடிக்கையாக பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மிகப்பெரும் தாக்குதல் சீக்கியர் மீது நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை 1984 ம் ஆண்டு ஜூன் 3 முதல் 6 ம் தேதிவரையில் நடத்தப்பட்டது. அரசின் கணக்குப்படி 493-800 காலிஸ்தானிகள் (பொதுமக்களும் சேர்த்து ) 83 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஆனால் பல்லாயிரம் சீக்கியர் கூடும் ஒரு திருநாளில் நடத்தப்பட்டதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்ககூடும்.
 
நீல்விண்மீன் நடவடிக்கை ஜூன் 6, 1984 வரை நடந்தது. அந்த நாளின் (ஜூன் 6) மாலை வரையிலும் நூலகம் பாதிப்படையவில்லை. ஜூன் 7 ம் நாள் அதிகாலை வேளையில்தான் எரிக்கப்பட்டுள்ளது. எனவே சண்டையில் நூலகம் சேதமடைவில்லை. பின்பு மர்மமான முறையில் இராணுவத்தால் எரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
 
ஏன் நூலகம் அழிக்கப்பட்டது?
 
யாழ்ப்பாண நூலகம் மொத்தமாக அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்களுடன் சேர்த்து எரியூட்டப்பட்டது. சீக்கியரின் நூலகமோ அங்கிருந்த நூல்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு எரிக்கப்பட்டது. நூலகத்திலிருந்த நூல்கள் பல நூற்றுக் கணக்கான பெரிய மூட்டைகளில் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த மூட்டைகள் இலக்கமிடப்பட்டவையாக (numbered) இருந்தன. இவையனைத்தும் பல  இராணுவ வாகனங்களில் ஒரு இரகசிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்பு நூலகக் கட்டிடம் எரியூட்டப்பட்டது. இது  மைசூர் புலி திப்பு சுல்தானின் நூலகத்தை வெள்ளையர்கள கொள்ளையடித்த செயலுக்கு ஒப்பானது.  
 
அவை ஏன் எடுத்துச் செல்லப்பட்டன எனபது குறித்துத் தெளிவான செய்திகள் இல்லை.அவை இந்திராவால் பிந்தரன்வாலேவுக்கு எழுதிய முக்கியமான கடிதங்களை கைப்பற்றும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அந்தக் கடிதங்கள் கைப்பற்றப் படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் 2 விழுக்காடுகள் சீக்கியரிடம் திருப்பியளிக்கப்பட்டன. தற்போது கைப்பற்றப்பட்ட பல பொருட்களும், ஆவணங்களும், கோப்புக்களும் நடுவண் புலனாய்வுத் துறையினரிடம் உள்ளன. இந்தத் தகவல்கள் நடுவண் புலனாய்வுத் துறையில், நீலவிண்மீன் நடவடிக்கையில் இருந்த   ஒருவரால் வெளியிடப்பட்டது

1984: டெல்லியில் சீக்கியர் மீதான கலவரத்தைத் தூண்டிய அமிதாப் பச்சன்

 
சீக்கியர் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் மொத்தம் 200 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் 177 காங்கிரஸ் கொலைகாரர்களும் , 17 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம். இதுவன்றி குற்றம் சாட்டப்பட்ட பெரும்புள்ளி நடிகர் அமிதாப் பச்சன். முதன் முதலில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை மக்களிடம் தூண்டியவர் அமிதாப் பச்சன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சீக்கியர்கள். 
                                            
அமிதாப்பின் மீதான குற்றச்சாட்டுக்கள்
சீக்கிய இனப்படுகொலைக்கு முன்பு அமிதாப் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அதில் சீக்கியர்களைக் கொல்லுமாறு மக்களைத் தூண்டினார்.
 
 "சீக்கியர்கள் இந்திராகாந்தியை மட்டும் கொல்லவில்லை, அவர்கள் இந்த தேசத்தின் தாயையே கொன்றுவிட்டார்கள்" என்றார்.
 
  "இந்திரா சிந்திய குருதியை கொலைகாரர்களும்(சீக்கியர்கள்)  சிந்த வேண்டும்" என்கிற பாணியில் "இரத்தத்திற்கு பதில் இரத்தம்" என்று முழங்கினார் அமிதாப்.

(‘Khoon ke chheente Indira ko marne walon ke gharon tak pahunchne chahiye (The bloodstains must reach the houses of those who killed Indira)’)

 
architacts+of+84+sikh+genocide.jpg

 
இந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அகில இந்திய மருத்துவ கழகத்தில்(AIIMS), அமிதாப்பும் இராஜீவும் இருந்தனர். அப்போது தூர்தர்ஷனின் நிருபர்களும் இருந்தனர். அப்போதுதான் இந்த அமிதாப் கலவரத்தைத் தூண்டும் வகையில் கூடியிருந்த மக்களை நோக்கி "சர்தார்கள் தேசத்துரோகிகள்" என்றும் "இரத்ததிற்குப் பதில் இரத்தம்" (Blood for blood)  என்கிற தொனியில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு மக்கள் கூட்டத்துடன் சில தொலைவு நடந்தார். இவரது ஆவேசப் பேச்சு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. வட இந்தியா முழுவதும் சீக்கியருக்கு எதிராக இந்துக்களை கலவரத்தில் ஈடுபடுத்த இது ஒரு தூண்டுதலாக இருந்தது. 
 
இராஜீவ் - அமிதாப் நட்பு
 
இவர்களின் நட்பு மிகவும் புகழ் வாய்ந்தது. இராஜீவும் அமிதாப்பும் தோஸ்தி நெ.1 என்று அழைக்கப்படுமளவிற்கு நண்பர்களாக இருந்தனர். பச்சன் காந்தி குடும்பத்தின் நட்பு உலகறிந்தது. இரண்டு குடும்பங்களுமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லிக்குக் குடிபெயர்ந்த பின்னும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அமிதாப்பும் இராஜீவும் பால்ய காலத்தில்  ஒன்றாக ஊர்சுற்றியது, நீச்சலடித்ததையும் குறிப்பிட்டுள்ளார் அமிதாப். மேலும் 1968 - ல் சோனியா அன்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) இந்தியா வந்த போது திருமணத்திற்கு முன் ராஜீவின் இல்லத்தில் தங்கக் கூடாது என்பதால் அமிதாப்பின் வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டார். அமிதாப்பின் தாயார் தேஜி பச்சன் அவருக்கு தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். 
 
மேலும் முதன் முதலில் அமிதாப் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் இராஜீவ்தான். இந்திராவின் படுகொலைக்குப் பின்னர் இராஜீவ் வற்புறுத்தலினால்  தேர்தலில் நின்றார் அமிதாப். அலகாபாத் தொகுதியில் பஹூகுனா என்ற செல்வாக்குள்ள ஒருவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட அமிதாப் 62% வாக்குகளுடன் மிகப்பெரும் வெற்றி பெற்றார். இருப்பினும் மூன்று வருடங்கள் மட்டுமே அரசியலில் இருந்த அமிதாப் ஃபோபர்ஸ் குற்றச்சாட்டின் காரணமாக அரசியலிலிருந்து விலகினார். இராஜீவின் படுகொலைக்குப் பின்னர் இரு குடும்பத்திற்குமிடையிலான் நட்பு உடைந்தது. 2007 இல் அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனின் இறந்த போது, இறுதிச் சடங்கில் கூட சோனியா கலந்து கொள்ளவில்லை.
 
 
அமிதாப்பின் புகழைப் பயன்படுத்திக்கொண்ட இராஜீவ்
 
1980 களில் அமிதாப் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்பது  நாம் அறிந்ததே. எல்லாக் காலத்திலும் திரைப்படங்களில் நாயகர்களுக்குப் புகழைத் தரும் பாத்திரமான "கோபக்கார இளைஞன்" வேடத்தில் நடித்துப் செல்வாக்குப் பெற்றவராக இருந்தவர் அமிதாப். சீக்கியர் மீதான வெறியைத் தூண்டும் இவரது ஆவேசப் பேச்சுக்கள் ஹிந்துக்களிடம் கலவரத்தைத் தூண்டியதில் மற்ற கொலைகாரர்களைக் காட்டிலும் பெரும் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர் சீக்கியர்கள். அதுவும் தூர்தர்ஷன் இவரது உரையை நேரடியாக ஒளிபரப்பியது மிகவும் கீழ்த்தரமானது.  இவராகப் பேசினாரா அல்லது இராஜீவின் தூண்டுதலினால் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகர் அரசுத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் உரை நிகழ்த்துவதை என்னவென்பது?
 
 
இதுவரையிலும் அமிதாப்பச்சனுக்கு எதிரான  வழக்குகள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.  அமிதாப்பும் இதுவரையில் தனது நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கவில்லை. இதை எதிர்த்து அமிதாப்பின் வலைப்பூவிலும் பின்னூட்டமிட்டவர் அஜ்மீர் சிங் ரந்தாவா என்பவர். அவரது வலைப்பூவில்  இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். 
 

 

அமிதாப்பச்சனின் அம்மா சீக்கியரா?

 

படுகொலையின் காரணங்களுக்குப் பதில் சொல்லும்போதெல்லாம் அமிதாப்பச்சனும், ஜக்தீஷ் டைட்லரும் தாம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அது உண்மையா? ஜக்தீஷ் டைட்டல் சீக்கியராக பிறந்தவர்தான் எனினும் கிறித்தவராக மாறிவிட்டாரென்றும் கூறுகின்றனர். அமிதாப்பச்சனின் அம்மா தேஜி சீக்கியர்தான். ஆனால் அவர் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இந்து ஒருவரைத் திருமணம் செய்து (இந்துவாக) மதம் மாறியவர்தான். மேலும் அவரது தந்தையாரும், தாத்தாவும் சீக்கிய மதத்துக்கு எதிரானவர்கள் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர். அவரது முப்பாட்டனார் தேஜிபச்சனின் தாத்தா சர் கெம் சிங் பேடி சீக்கியர்களை இந்து மத்திற்குள் உள்வாங்கும் இந்துத்துவாக்களுக்கு துணை நின்றவர். அவரது இரண்டு மகன்களும் இதே போன்று செயல்பட்டவர்கள். சீக்கியர்களின் புனித நூலை ஐந்தாவது வேதம் என்றும் சீக்கியர்கள் இந்துக்களே என்றும் கூறவும்  பரப்புரை செய்யவும் உதவியவர்கள். இந்தப் பரம்பரையில் வந்த அமிதாப் இயல்பாகவே சீக்கிய வெறுப்பில் வளர்க்கப்பட்டவர் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர்.                         

                                                                                                                                        (தொடரும்)

சீக்கியர்கள், இராஜீவ்காந்தி, காங்கிரஸ் மற்றும் இந்துப் பயங்கரவாதம்

 

இந்திய அரசால் (காங்கிரஸ்) இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் சிறுபான்மையினர் மீதான கலவரங்கள் விடுதலை பெற்ற 63 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர், ஈழத்தமிழர்கள் ஆகியோர் இதற்கு இரையானவர்கள் என்று சொல்லலாம் . இதில் சீக்கியர்களும் தப்பவில்லை. பயங்கரவாதம், பிரிவினைவாதம், அந்நியர்களின் சதி, தேசிய ஒருமைப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பிராந்திய மேலாதிக்கம், நக்ஸல் பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் போன்ற காரணங்களுக்காக இவை நியாயப்படுத்தப் படுகின்றன. இந்த வகையில் ஒன்றுதான் சீக்கியர் மீதான கலவரம். தன்னுடைய தேர்தல் நலன்களுக்காக மதவாதத்தைத் தூண்ட காங்கிரஸ் தயங்கியதே இல்லை. காங்கிரசின் இந்துமதப் பயங்கரவாதத்தின் ஒரு உதாரணம்தான் 1984 - ல் நடைபெற்ற சீக்கியர் மீதான படுகொலைகள். பாஜக ஆதரவாளர்கள் காங்கிரசை என்னமோ பயங்கரவாதம், அருந்ததிராயைக் கைது செய்யாமல் இருப்பது, நக்சலைட்டுகளுடனான் போர், பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை, சீன ஆக்ரமிப்பு போன்ற விவகாரங்களில் ரொம்பவும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அலட்டிக் கொள்வார்கள். ஆனால் பாஜகவை விட காங்கிரஸ் பலவிதங்களில் முன்னோடியாகவும், கொடூரமாகவும்  இருக்கிறது. நரேந்திரமோடிக்கு முன்னோடியே இராஜீவ் காந்திதான் என்பதற்கு  சீக்கியர்படுகொலை ஒரு எடுத்துக்காட்டு.
 
1984 - ல் சீக்கியர் இனப்படுகொலை முடிந்து 26 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்றுவரையில் அதன் முக்கியக் குற்றவாளிகள்(சஜ்ஜன் குமார், ஜெக்தீஷ் டைட்லர், ஹெச்.கே.எல். பகத், கமல்நாத் போன்ற) எவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்காது. காங்கிரஸ் கொலைகாரகள் தமது ஊடக செல்வாக்கையும், அடியாள்களையும் பயன்படுத்தி சீக்கியர் மீதான இனப்படுகொலையை சீரும் சிறப்புமாக செய்து முடித்தனர். இந்த சீக்கியர் மீதான கொலையை கலவரம் என்று சொல்வதே தவறானது. கலவரம் என்பது இரண்டு குழுவினர் மோதிக்கொள்வது, இங்கே கொல்லப்பட்டவர்கள் சீக்கியர்கள் மட்டுமே என்பதால் இதைக் கலவரம் என்றே சொல்ல முடியாது . இதே விதிதான்  மும்பை, குஜராத் போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இது எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்த்தாலே விளங்கிவிடும் இது கலவரமா இனப்படுகொலையா என்று. 
 
அக்டோபர் 31 1984 இல் இந்திரா காந்தி கொல்லப்படுகிறார். அதே நாள் இராஜீவ் பிரதமராகிறார். அன்றைய நாளில் சில இடங்களில் சீக்கியர் மீதான தாக்குதல் நடைபெறுகிறது, இருப்பினும் இரவுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. சீக்கியர்கள் நிம்மதியடைகிறார்கள். அன்றைய நாளின் பின்னிரவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நவம்பர் 1,2, மற்றும் 3 ம் தேதிகளில் நடந்த வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்படனர். அவர்கள் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டனர். பெண்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 
 
                                          1984.jpg
 
இது மிகத்தெளிவாக திட்டமிடப்பட்ட  இனப்படுகொலை என்பதற்கு சாட்சியாக 

டெல்லியில் பாலம்(palam) விமான நிலையத்தில் வந்திறங்கிய இராஜீவ், இந்திரா கொலையான செய்தியைக் கேட்டதும் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். "என் அம்மா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? போய்ப் பழி வாங்குங்கள். ஒரு தலைப்பாகையும்(Turban) இங்கே இருக்கக் கூடாது. (No turban should be seen)

 
அக்டோபர் தேதி டெல்லியிலிருந்த சீக்கிய காவலர்களுக்கு  விடுப்பு அளிக்கப்பட்டு , அவர்களின் ஆயுதங்கள் பெறப்பட்டு,இராணுவக்  குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

ஒரு சீக்கியர் தனது இந்து நண்பரின் வீட்டில் மறைந்து கொள்கிறார். அவரைத்தேடி வந்த கும்பல் அந்த வீட்டுக்காரரிடம் கேட்க, அவர் ஏற்கெனவே கொல்லப்பட்ட அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று பதிலளிக்கிறார். நம்பாத அந்தக கும்பல் தம்மிடமுள்ள வாக்காளர் பட்டியலைக் காட்டி அதில் இன்னும்  அவரது பெயர் குறிக்கப்படவில்லை எனவே அவர் இன்னும் கொல்லப்படவில்லை என்றது.
 
மேலும் கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே வாகனங்களில் வந்த நபர்களால், மண்ணெண்ணெய் போன்ற எரிப்பதற்குப்  பயன்படுத்தும் பொருட்கள்  கலவர கும்பலுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாரத்தது, சீக்கியர் தற்காபபுக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் கொலை வெறியாட்டத்தில் பங்குபெறும் காலாட்படையாக செயல்பட விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். 
 
கலவரம் நடந்த இடம் இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில், மூன்று நாட்களாகக் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இராணுவத்தைக் கொண்டு சில மணிகளிலேயே கட்டுப்ப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இராணுவமும் ஈடுபடுத்தப்படவில்லை. அதே நேரம் டெல்லி கலவரத்தின் எதிர்வினையாக பஞ்சாப்பில் சீக்கியர்கள் இந்துக்களின் மீது வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தினால் பஞ்சாப்பிற்கு அனுப்பவதற்கும் ஆயத்தமாக இருந்தது அரசு. ஆனால் பஞ்சாப்பில் எதிர்ப்பார்த்தபடி  கலவரம் ஏற்படவில்லை.
 
கலவரமானது டெல்லியிலிருந்து வட இந்திய மாநிலங்களுக்கும் பரப்பபட்டது. அரசு எந்திரமே இந்தப்படுகொலைக்கு உதவியது என்பதற்குச் சான்றாக டெல்லியின் மாநகர அரசுப் பேருந்துகள் கொலைக் கும்பலை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டன.
 
அன்றைய ஊடகங்களான தூர்தர்ஷனும், அனைத்திந்தியா வானொலியும் "பிரதமர் இந்திராகாந்தி தனது "சீக்கிய" மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்" என்று தொடர்ந்து ஒலிபரப்பின.
 
சீக்கிய எதிர்ப்பு மனநிலை
 
அந்நாள்களில் தற்போது காஷ்மீரிகள் மீது இந்தியர்களின் மனப்பான்மை  எப்படி இருக்கிறதோ  அதே போல் சீக்கியர்கள் மீது இருந்தது. இந்திரா காந்தியால் அகாலிதள் கட்சிக்கு எதிராக வளர்க்கப்பட்ட காலிஸ்தானிகள் தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களால் பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீக்கியர்கள் இந்தியாவை வெறுப்பவர்கள் என்ற கருத்தும் பொதுவாக நிலவியது. இது போன்ற ஒரு காலகட்டத்தில் சீக்கியர்களின் புனித பொற்கோயிலில் நீல விண்மீன் நடவடிக்கையின் (Operation Blue Star)  வாயிலாக காலிஸ்தானிகளின் தலைவர் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். சீக்கியரின் பொற்கோயிலுக்குள்  இந்திராவினால் இந்திய இராணுவம் நுழைந்ததை சீக்கியர்கள் தமது சமூகத்தின் மீதான அவமானமாகக் கருதினர். இந்துக்கள் சீக்கியரிடையே வெறுப்புணர்வும் இருந்தது.  இதற்குப் பின்னர்தான் தனது மெய்க்காப்பாளர்களால் இந்திரா கொல்லப்பட்டார்.
 
இதைப் பின்புலமாகக் கொண்டே இந்த வன்முறைக்கு சீக்கியர்மீதான கொலைவெறி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திராவின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியரின் படுகொலை குறித்து  இராஜீவ் தனது புகழ்பெற்ற கருத்தான "பெரிய மரம் சாய்கையில் தரை பலமாக அதிர்வது இயற்கைதான்" என்பதை வெளியிட்டார்.
 
இந்த சீக்கிய எதிர்ப்பு மனநிலையே பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை  சீக்கியர்  படுகொலைக்குப் பின்பு நடந்த தேர்தலில் பேராயக்கட்சிக்கு பெற்றுத் தந்தது.
 
இந்துத்துவாக்களின் ஆதரவு 
 
இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து வீசிய அனுதாப அலையில் இந்துத்துவ  இயக்கங்களும்   இராஜீவ் காந்திக்கு ஆதரவாக இறங்கின. இராஜீவ் தேசிய ஒருமைப்பாடு சீக்கிய பயங்கரவாதம் ஆகியவற்றைப் பேசி வாக்குகளை வாங்கினார். முதன் முதலாக இராஜீவ் காந்திதான் பாபர் மசூதியின் கதவை இந்துக்களுக்காகத் திறந்துவிட்டு கலவரம் ஏறபடக் காரணமானவர் எனபதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  தற்போதைய் பாஜக வின் செயல்களெல்லாம் அன்றைய பேராயக் கட்சியிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். 1986 லிருந்தே இந்துத்துவாக்கள் ராஜீவின் பேராயக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.
 
                                     7e1001464cafaa01fc07d767d0ef.jpeg
 
 
1984 தேர்தலில் காங்கிரஸ்  வரலாறு காணாத வெற்றி பெற்றது. மொத்தம் 80% இடங்க்ளைப் பெற்றது. காரணம் இந்திரா காந்தி கொலை தோற்றுவித்த அனுதாப அலை,  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து, சீக்கிய தீவிரவாதம்  உடபட இந்துக்களைத் தூண்டி விடும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. RSS அமைப்பு பேராயக்கட்சிக்கு முழு ஆதரவளித்தது. அன்றைய RSS இயக்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் ராஜீவ் காந்தியை ஆதரித்ததற்கு சாட்சியாக எழுதியவை
 
 "சீக்கியர் மீதான இந்துக்களின் உண்மையான உணர்ச்சியை 1984 - இன் சீக்கியர்க்கெதிரான கலவரங்கள் காட்டுகின்றன." எல்லா சீக்கியர்களுமே இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டதை ஆதரிக்கும்போது, அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலகளையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்" .
 
RSS கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒருவன் மகாத்மா காந்தியைக் கொன்றபோது RSS காரர்கள் தாக்கப்படுகிறார்கள். அதற்குக் கொலைகாரனுக்கும் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றவர்களின் தலைவர் , இரண்டு சீக்கிய மெய்க்காவலர்கள் கொன்றதற்கான பாவத்தை மொத்த சீக்கியரும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்.
 
நானாஜி தேஷ்முக் சீக்கியர்களை தம்மை, இந்துக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதையும் கடிந்து கொள்கிறார்.
 
மேலும் பஞ்சாப்பில் நிகழ்ந்த வன்முறைக்கு சீக்கியரைக் குற்றம் சொல்கிறார், இந்திய ராணுவத்தின் பொற்கோயில நுழைவையும் நியாயப்படுத்தினார்.
 
குஜராத் படுகொலையப் பற்றிக் காங்கிரஸ்காரர்கள்  பேசும்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸ் கொலைகாரர்களின்  சீக்கியருக்கெதிரான கலவரத்தைப்  பேசி பதிலடி கொடுப்பார்கள்.டெல்லியின் கலவரத்தின்போது சீக்கியர்களை காங்கிரஸ் கொலைகாரர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களின் லட்சணம். கிறித்தவமும், இசுலாமும் வெளிநாட்டு மதமென்பதால் எதிர்க்கிறோம் என்று கூறியவர்கள், உள்நாட்டு மதத்தவரான  சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அவர்களின் அரசியல் நிலைப்பாடு இதுதான். 
 
                                                                                                                                             ( தொடரும் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.