Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும்

முத்துக்குமார்

996a7226-33a5-4ae3-9bb3-31bc9963b92a1.jp

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றார். ஒன்று, 33 அரசியற் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை. இரண்டாவது ஹெல உறுமயவுக்கும் மைத்திரிபால சிறீசேனாவிற்கும் இடையேயான உடன்படிக்கை. இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம், ஹெலஉறுமய பொது வேலைத்திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அதேவேளை அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை. பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு இருந்தபோதும், தனது தனித்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது,

அந்த இரண்டு உடன்படிக்கைகளையும் தமிழ் மக்கள் நிலைநின்று விரிவாக ஆராய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

முதலில், முதலாவதாக கைச்சாத்திடப்பட்ட பொது வேலைத்திட்ட உடன்படிக்கையைப் பார்ப்போம். இவ் உடன்படிக்கை டிசெம்பர் மாதம் முதலாம் திகதி கைச்சாத்திடப்பட்டது. 33 அரசியல் கட்சிகளும் சில பொது அமைப்புக்களும் இதில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா பிரிவு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 33 கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இவ் 33 கட்சிகளில் மேற்கூறிய நான்கு கட்சிகளையும் தவிர ஏனைய கட்சிகள் வெறும் பெயர்ப்பலகைகளுடன் உள்ள கட்சிகள் என்றே கூறவேண்டும். கட்சிகளின் இலக்கத்தை அதிகரிப்பதற்காக இவை சேர்க்கப்பட்டனவே தவிர இவை சிறிதளவு வெகுஜன பலத்தைக் கூட கொண்டவையல்ல. பொது அமைப்புக்கள் என்ற வகையில் சோபித தேரரின் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம், முஸ்லிம் மக்களின் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கெமுனு விஜேரட்ண தலைமையிலான தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உட்பட பல பொது அமைப்புகள் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வமைப்புக்களில் மேற்கூறிய மூன்று அமைப்புகள் மட்டும் வெகுஜனப்பலம் கொண்டவை. ஏனையவை வெறும் கடிதத் தலைப்புகளுடன் இருப்பவையே.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் உயிரிழந்த தலைவர்கள், இராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம், உயிரிழந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களையோ, உயிரிழந்த போராளிகளையோ நினைவு கூர்ந்து அஞ்சலி எதுவும் செலுத்தப்படவில்லை.

உடன்படிக்கையில் ஜனாதிபதி பதவியேற்று 100 நாட்களில் நகர்த்தப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் இருந்தன. நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குதல், மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய பாராளுமன்ற முறையை கொண்டு வருதல். பாராளுமன்ற ஆட்சியில் ஜனாதிபதி அரசின் தலைவராக செயற்படுதல், 18வது திருத்தச் சட்டத்தினை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தேர்தல் முறையினை மாற்றுதல் என்பனவே அவ்வேலைத் திட்டங்களாகும்.

இவ் வேலைத்திட்டங்களில் மருந்துக்குக் கூட தமிழ்மக்கள் பற்றிய வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை. தமிழ்மக்கள், இனப்பிரச்சினை, அதிகாரப்பகிர்வு போன்ற சொற்பதங்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க சிங்கள மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்களாகவே இவற்றைக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது உடன்படிக்கையான ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஹெல உறுமயவிற்கும் இடையிலான உடன்படிக்கை டிசெம்பர் மாதம் மூன்றாம் திகதி கைச்சாத்திடப்பட்டது. முன்னரே கூறியது போல, ஹெலஉறுமய பொதுவேலைத்திட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் தனியான ஓர் உடன்படிக்கையில் தான் கையொப்பமிட்டது. இதற்குப் பிரதான காரணம் தமது சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை மைத்திரியினை ஏற்கச் செய்வதே ஆகும். இதன்மூலம் தான் ஆதரவு கொடுப்பதற்கான நோக்கத்தை ஹெல உறுமய நிறைவுசெய்துள்ளது.

ஹெல உறுமய மைத்திரியினை ஆதரிக்கும் முடிவெடுத்தமைக்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று, சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலிற்குள் மைத்திரியையும் எதிரணியையும் வைத்திருப்பது. இரண்டாவது, தனக்குப் போட்டியாக கோத்தபாய ராஜபக்ச பொதுபலசேனாவை உருவாக்கியமைக்கு பழிதீர்ப்பது. மூன்றாவது, பேரினவாத நிகழ்ச்சிநிரலை நகர்த்தும் சிங்களதேசத்தை ஜனநாயகப்படுத்துவது.

முதலாவது காரணத்தைப் பொறுத்தவரை மகிந்தரின் குடும்பஆட்சி, ஜனநாயகமின்மை, சட்டத்தின் ஆட்சியின்மை, நீதித்துறை சுதந்திரமின்மை, இராணுவ இறுக்கம் காரணமாக அவர் தோல்வியடைந்தால் எதிர்த்தரப்பு பேரினவாத நிகழ்ச்சிநிரலை மீறிச் செயற்படுவதை தடுக்கவேண்டும். மகிந்தர் பேரினவாதத்தையே முதலீடாகக் கொண்டிருப்பதனால் அவர் விரும்பினாலும் பேரின நிகழ்ச்சிநிரலை மீற முடியாது. ஆனால் எதிர்த்தரப்பு மேற்குலக-இந்தியக்கூட்டின் ஆதரவினைப் பெற்றிருப்பதனாலும், தமிழ், முஸ்லிம் மலையக வாக்குகளை வெற்றிக்கு நம்பியிருப்பதனாலும் பல்வேறு அழுத்தங்களினால் பேரினவாத நிகழ்ச்சிநிரலை மீறி சிலவேளை செயற்படக்கூடும். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். இதற்கு ஒரே வழி பேரினவாத நிகழ்ச்சிநிரலை மையமாக வைத்து எதிரணி வேட்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தான். இதன்மூலம் தமிழர்களுடன் ஒரு நல்லிணக்கத்திற்கு எதிரணி செல்வதை தடுக்கமுடியும் என அது கருதியது.

மைத்திரி தரப்பிற்கு உள்ள பிரச்சனை யுத்த வெற்றிவாத வாக்குகளை எப்படியாவது உடைக்க வேண்டும். அதை உடைப்பதாக இருந்தால் பேரினவாத நிகழ்ச்சிநிரலை நகர்த்துவதற்கு தானும் தயார் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஹெல உறுமயவுடனான ஒப்பந்தம் அந்தப் பகிரங்க அறிவிப்பிற்கு உதவியுள்ளது. உண்மையில் மகிந்தரது மிகப்பெரிய தோல்வி மைத்திரி வெளியேறியமையல்ல. மாறாக ஹெலஉறுமய வெளியேறியமையே. ஏனெனில் சித்தாந்த பின்புலத்தையும் வலுவான அமைப்பு பொறிமுறையினையும் கொண்டுள்ள பேரினவாத அமைப்பு பொதுபலசேனாவல்ல, ஹெலஉறுமயவே.

இரண்டாவது காரணத்தைப் பொறுத்தவரை மகிந்தர் மீது நீண்டகாலமாக ஹெல உறுமய அதிருப்தியில் இருந்தது. முன்னரே கூறியது போல சித்தாந்தப் பின்புலத்தையும் வலுவான அமைப்புப் பொறிமுறையையும் கொண்ட அமைப்பாக ஹெலஉறுமய இருந்ததுமல்லாமல் சுயாதீன அமைப்பாகவும் இருந்தது. தமது கொள்கைக்கு முரணாக செல்பவர்கள் எந்த உயர்பதவியில் இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு ஹெலஉறுமய என்றும் தயங்கியதில்லை. இந்தச் சுயாதீனத்தன்மை மகிந்தர் தலைமைக்கு இடைஞ்சலாக இருந்தது. அதற்கு தான் விரும்பியது போல கையாளக்கூடிய ஒரு பேரினவாத அமைப்பு தேவையாக இருந்தது. இதனால் ஹெல உறுமயவிற்கு போட்டியாக பொதுபலசேனாவை உருவாக்கி வளர்த்தது. இது ஹெல உறுமயவிற்கு கோபத்தைக் கொண்டு வந்ததனால் மகிந்தர் தலைமைக்கு ஒரு பாடம் படிப்பதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியது.

மூன்றாவது காரணத்தை பொறுத்தவரை மகிந்தரின் இருப்பு பேரினவாத நிகழ்ச்சிநிரல், அதிகாரக்குவிப்பு, குடும்பஆட்சி, இராணுவ இறுக்கம் என்பவற்றில் தங்கியிருந்தது. ஆனால் பேரினவாதத்தின் இருப்பு பேரினவாத நிகழ்ச்சிநிரலை நகர்த்துவதில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தை ஜனநாயகமயப்படுத்துவதிலும் தங்கியிருந்தது. ஐக்கியப்பட்ட சிங்கள ஆதரவு அதற்கு தேவையாக இருந்தது. அதைவிட ஜனநாயக போதாமையைக் காட்டி சர்வதேச சக்திகள் தலையிடுவதையும் தவிர்க்கவேண்டியிருந்தது. இதற்காகத்தான் ஹெலஉறுமய 19வது திருத்தத்தை சமர்ப்பித்திருந்தது. மகிந்தர் அதற்கு இசையவில்லை. இதனால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி மைத்திரியினை ஆதரிக்க முற்பட்டது.

ஹெல உறுமய - மைத்திரி உடன்படிக்கையில் இரு முக்கிய விடயங்கள் இருந்தன. ஒன்று சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, இரண்டாவது ஒற்றையாட்சி அமைப்பினை மாற்றாமல் இருப்பது. அதாவது சமஸ்டியை நிராகரிப்பது. இரண்டையும் மைத்திரி ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இது பேரினவாதத்தின் பரிணாம வெற்றி. ஏனெனில் தென்னிலங்கையின் பிரதான இரு தரப்புகளும் பேரினவாத நிகழ்ச்சிநிரலை பகிரங்கமாக ஏற்றுள்ளன.

தற்போது பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கம் பற்றிக் குறிப்பிடுகின்றார். இது தமிழ் மக்களைச் சமாளிப்பதற்கு கூறிய கருத்து. தேசிய அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்தி இனப்பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கும் என அவர் கூறியிருக்கின்றார். இது நடைமுறைக்கு வந்தால் கூட, இது மகிந்தரின் தெரிவுக்குழு போன்று இன்னோர் தெரிவுக்குழுவாகவே அமையும். தமிழ்மக்கள் மகிந்தர் மீது கோபத்தில் இருப்பதனால் தனக்கு வாக்களிப்பதைத் தவிர வேறுதெரிவு அவர்களுக்கு இருக்காது என மைத்திரி நினைக்கின்றார். போரை நடத்திய சரத் பொன்சேகாவிற்கே வாக்களித்தவர்கள், தனக்கு ஏன் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நப்பாசை வேறு. வெற்றுக் காசோலையில் தமிழ்மக்கள் கையெழுத்திட்டு தருவார்கள் என்பதே அவரது நினைப்பு.

தற்போது இரு உடன்படிக்கைகளிலும் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாததினால் தமிழ்மக்கள் தேர்தலை பகிஸ்கரித்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்ற கதையினை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார். ஹெல உறுமயவும் அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்ற கதையினை நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=996a7226-33a5-4ae3-9bb3-31bc9963b92a

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய அரசாங்கம் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்ற கதையினை நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல"......... :unsure:  

 

தேசிய அரசாங்கம் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்று நம்புபவர்களைத் தலைவர்களாக தமிழ் மக்கள் கொண்டுள்ளனர்......... :icon_mrgreen:   

 

எங்கோ இடிக்கிறதே............ :o  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.