Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும்

யமுனா ராஜேந்திரன்

enhanced-15505-1420644639-7.png

சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரியால் 4 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

படுகொலையாளர்களான சைத் குவாச்சி மற்றும் ஷெரீப் குவாச்சி என இரு சகோதரர்கள், ஹமதி கலிபோலி என மொத்தமாக மூன்று தாக்குதலாளர்கள் பிரெஞ்சுக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஹமதி கலிபோலியின் மனைவியான ஹையத் மோமடின் என்பவர் ஆயுதந் தாங்கியவர் மற்றும் ஆபத்தானவர் என அறிவித்து பிரெஞ்சு அரசு அவரை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. சைத் குவாச்சி, ஷெரீப் குவாச்சி போன்ற இருவரே சார்லி ஹெப்டோ படுகொலைக்குப் பொறுப்பான சந்தேகநபர்கள் என முதலில் அறிவித்தது பிரெஞ்சு அரசு. சகோதரர்கள் இருவரிடமும் மௌரத்திடமும் பிரெஞ்சுத் தொலைக்காட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட கைபேசி உரையாடல்கள் கார்டியன் பத்திரிக்கையில் வெளியானதையடுத்தும் லிபரேஷன் பத்திரிக்கையில் வெளியான ஹையத் போமடின் ஆயுதப் பயிற்சிபெறும் புகைப்படங்களை ஒட்டிய செய்தியை அடுத்தும் படுகொலையாளர்களான் மூவருக்கும் இருக்கும் ஆண்டுக்கணக்கான நெருக்கமான உறவு ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது. சார்லி ஹெப்டே தாக்குதலும் யூத பலசரக்குக் கடைத் தாக்குதலும் என இரு தாக்குதல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என ஹமதி கலிபோலி அறிவித்திருக்கிறார். இதனோடு ஈராக்கில் இயங்கும் இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ்ஐஎஸ் சார்பாகத் தான் தாக்குதலில் இறங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர் செய்து வருவதற்கான எதிர்விணையே இது எனவும் அவர் தெரிவித்துpருக்கிறார்.

குவாச்சி சகோதரர்கள் தமது தாக்குதல் தீர்க்கதரிசியை அவமானப்படுத்தியதற்கான தமது பழிவாங்கல் எனத் தெவித்திருக்கிறார்கள். அதனோடு மேற்கத்தியர்கள்-அமெரிக்கர்கள் போலத் தாம் பெண்களைக் கொல்லவில்லை எனவும் தெவித்திருக்கிறார்கள். எம்மிடம் அறவழிகாட்டல் நெறிகள் இருக்கின்றன எனவும் தெரிவித்திருக்கிறார்கள். சார்லி ஹெப்டே தாக்குதலின் போது ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியரிடம் ‘நீங்கள் பெண்ணாக இருப்பதால் உங்களை நாங்கள் கொல்லாமல் விடுகிறோம்’ எனச் சொல்லி அவரைச் சுடாமல் விடுவித்திருக்கிறார்கள் எனும் தகவலையும் எவரும் இதனுடன் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

குவாச்சி சகோதரர்கள் இருவரும் திருட்டுக் குற்றச்சாட்டுக்களுக்காக முன்னர் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எனவும் அவர்கள் ஈராக், ஏமன், சிரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் பிரெஞ்சுச் சிறையில் அடைபட்டிருக்கும் ஒரு அடிப்படைவாதியை விடுதலை செய்ய முயன்றார்கள் எனவும் லிபரேஷன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. தாம் சிரியாவில் பயிற்சி பெற்றதாகவும் ஏமான் அல் குவைதா வழிகாட்டலில் செயல்படுதாகவும் தமது கைபேசி உரையாடலில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைத் தாக்குதல்கள் ஐஎஸ்ஐஎஸ் அல்குவைதா போன்ற அடிப்படைவாதிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும், ஈராக், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளில் மேற்கத்திய-இஸ்ரேலியத் தலையீடுகளுக்கு எதிரான விளைவு எனவும், சார்லி ஹெப்டோ இதழ்களில் வெளியான தீர்க்கதரிசி முகமது பற்றிய கேலிச் சித்திரங்களுக்கு எதிரான பழிவாங்கல் எனவும், மிக அண்மையில் சார்லி ஹெப்டோ டிவீட் செய்த ஐஎஸ்ஐஎஸ்யின் கோடீஸ்வரத் தலைவருக்கு எதிரான நக்கல் செய்திக்கு எதிரானது எனவும் முடிவுக்கு – அரசியல் முடிவுக்கு – எவரும் வர முடியும்.

இந்தத் தாக்குதலின் விளைவாக நான்கு உலக அரசியல் நகர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. பயங்கரவாதம் தொடர்பான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கவும் தமக்கிடையில் புதிய ஒத்துiழைப்பை உருவாக்கவும் பிரெஞ்சுச் ஜனாதிபதி இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். யூத பலசரக்குக்கடை தாக்கப்பட்டு 4 யூதர்கள் கொல்லப்பட்ட பின்னால் இஸ்ரேலுக்கும் பிரான்சுக்கும் இடையில் தமது யூத இன மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களைப் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தம் உருவாகப் போகிறது. ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்புச் சட்டங்கள் இன்னும் இறுக்கமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பாதுகாப்பு அமைப்புகள் மட்டத்திலும் அது குறித்த தனிமனித சுதந்திரத்திற்கான அசசுறுத்தல் குறித்த அவதானங்கள் மனித உரிமைகள் அமைப்புகள் மட்டத்திலும் உருவாகி இருக்கின்றன. இதுவன்றி இஸ்லாமியர் உள்படச் சிறுபான்மையின் மக்களின் மீதான துவேஷ உணர்வு ஐரோப்பாவெங்கிலும் அதிகரிக்கும் ஆபத்தும் உருவாகியிருக்கிறது. பிரான்சில் மசூதிகள் மீதான தாக்குதல்களும் இஸ்லாமிய உணவகங்கள் மீதான தாக்குதல்களும் இந்த ஆபத்துக்களுக்கான சான்றுகளாக ஏற்கனவே துவங்கிவிட்டன.

பாலஸ்தீனத்திலும் மத்தியக் கிழக்குநாடுகளிலும் அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கைகளும் ராணுவத் தலையீடுகளும் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய வெகுமக்களின் மத்தியில் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய எதிர்ப்பை அதிகரித்திருக்கிறது. இதனால் ஆவேசம் கொண்ட ஒரு தலைமுறை இஸ்லாமிய நாடுகளில் அல்லது இஸ்லாமைப் பின் பற்றுபவர்களிடம் தோன்றியுள்ளது. இந்தத் தலைமுறையை தமது மததியகால இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள், பெண்வெறுப்பு, மேற்கத்திய மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அரசயல் திட்டமாகக் கொண்ட அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கம் தனது இலக்குகளை அடையப் பாவிக்கிறது. தலிபான், அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்றனவே இந்த இறையியல் இயக்கத்தை வழிநடத்துகிறது. இந்தச் சிந்தனைப் பள்ளியே செப்டம்பர் தாக்குதலை நிகழ்த்தியது. இந்தச் சிந்தனைப் பள்ளியின் அரசியல் மையம் சவுதி அரேபியா எனும் நாடும் அதனது ஆதரமான வகாபிய சிந்தனையும்தான். செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய துவேஷ உணர்வு அதிகரித்துவருகிறது. இதனது விளைவே பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மற்றும் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் அதிகாரித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படுகொலைத் தாக்குதல்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படுகொலைத் தாக்குதல்களை வெறுமனே ஐரோப்பிய-அமெரிக்க-இஸ்ரேலியக் கொள்கைகளின் எதிர்விளைவு என்று மட்டுமே பார்க்க முடியாது. அது பிரச்சினையை மிகக் குறுக்கிப் பார்ப்பதாகவே முடியும். அதில் இரண்டு பரிமாணங்கள் உண்டு. இந்தக் கொள்கையினால் அதிருப்தி கொண்ட மனநிலை முழு இஸ்லாமியர்களிடமும் உண்டு. அது நியாயமானது. தலிபான், ஐஎஸ்ஐஎஸ், அல்குவைதா போன்றவர்களின் சமூகத்திட்டம் அதற்கான தீர்வாக முடியாது. அது அடிப்படைவாதம். பெண் வெறுப்பும் மத்தியகாலக் காட்டு மிராண்டிச் சட்டங்களும் கொண்ட ஒரு இலட்சிய சமூகம் அவர்களது இலட்சிய சமூகம். முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் மாற்று என இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் முன்வைக்கப்படும் ஒரு சமூகத் திட்டம் அது. இந்தச் சமூகத்திட்டத்தை மனுக்குல மேன்மையில் அக்கறை கொண்ட அனைவருமே நிராகரிக்க வேண்டும். இவர்களே உலகெங்கிலும் இன்று பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்கள். இது குறித்த புரிதலுடன்தான் எவரும் சாரலி ஹெப்டோ பிரச்சினையை அணுக வேண்டும்.

பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு சார்லி ஹெப்டோ வார இதழ் குறித்த ஒரு மதிபபீடு இங்கு அடிப்படையானதாகும். ஏன் சார்லி ஹெப்டோ மீது படுகொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது? சார்லி ஹெப்டோ வார இதழ் பலரால் குற்றம் சாட்டப்படுவதுபோல வெள்ளை இனவாத மற்றும் நிறவாதப் பத்திரிக்கையா? அல்லது முகமதுவை, இஸ்லாமை மட்டுமே அது கேலிச்சிரமாக்கி தனிமைப்படுத்திப் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கிறதா? இரண்டுக்குமே இல்லை என்பதுதான் பதில்.

சார்லி ஹெப்டொவின் மீதான தாக்குதலை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பாசிசத் தாக்குதல் என எந்தவிதமானத் தயக்கமும் இன்றிச் சொல்ல முடியும். ஐரோப்பிய நிறவாதம், இஸ்லாமியோ போபியா, கீழைத்தேயவாதம் என்கிற எந்தவிதமான அடிப்படைகளையும் சார்லி ஹெப்டோ பிரச்சினையில் பொருத்த முடியாது. சார்லி ஹெப்டோ ஒரு இடதுசாரி, மதவாத எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, நிலவும் அமைப்பு எதிர்ப்பு இதழ். பிரெஞ்சுப் புரட்சியின் நல்மரபான மதத்திலிருந்து அரசு எனும் நிறுவனத்தையும், சிவில் சமூக நிறுவனங்களையும், நீதி அமைப்பையும், தனிமனித சுதந்திரத்தையும் தூரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது பார்வை.

அறுபதுகளின் இறுதியில் தோன்றிய இந்தக் கார்ட்டூன் இதழ் இத்தகைய அதிகாரங்களைக் கோபமூட்டுவது அல்லது எரிச்சலூட்டுவது என்பதைத் தனது இதழியல் அறமாகக் கொண்டுள்ளது. இது அராஜகவாதம் என அழைக்கப்படும் ஒரு தத்துவார்த்த நிலைபாடு. புருதோன் முதல் சோம்ஸ்க்கி வரையிலுமான சிந்தனையாளர்களை இவ்வாறு வகைமைப்படுத்துவதும் மேற்கில் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவார்ந்த நிலைபாடும் இது. சார்லி ஹெப்டோ மீது வெறுப்புக் கொண்டவர்களில் பிரெஞ்சு ஜனாதிபதி டீ கால் முதல், பிரெஞ்சு வலதுசாரி நிறவாதியான லீ பென், வாத்திகன் அடிப்படைவாதிகள், யூத, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என அந்தப் பட்டியில் மிக நீண்டது. இவர்களிடம் இவர்களை விமர்சிப்பதில் நொய்மையும் சகிப்புத்தன்மையும் காட்டவேண்டும் என்று கோருகிறவர் ஏதோ ஒரு விதத்தில் அடிப்படைவாதியாகத்தான் இருக்க முடியும்.

இந்த வகையில் முழுமையாக சார்லி ஹெப்டோவின் இதழியல் அறத்தைக் காத்து நிற்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிரெஞ்சு இடதுசாரித் தராராளவாத இதழ்களான லிபரேஷன், லெ மான்டோ டிப்ளமேடிக், கார்டியன் போன்ற இடதுசாரி தாராளவாத நாளிதழ்கள் கூட இத்தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவே எழுதின. போப், முகமது, இயேசு, லீ பென், யூத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், வெள்ளை நிறவெறி என இவை அனைத்தும் குறித்து இதனது அட்டைப்படக் கட்டுரைகள் இருக்கின்றன. சார்லி ஹெப்டோ குறித்து தேடிப்பார்க்கிற எவருக்கும் இவைகள் கிடைக்கின்றன.

உலக அளவில் திரட்டிக் கொண்ட வடிவில் கருத்தியல் அடிப்படையில் மதத்தின் பெயரால் அதிகமும் நடந்த அண்மைக்கால வெகுமக்கள் கொலைகளில் பெரும்பாலுமானவை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நிகழ்த்தப்பட்டவைதான். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தலிபான்கள், ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், உலகெங்கிலும் அல்குவைதாவினர் அறிவித்துவிட்டே இதனைச் செய்கிறார்கள். சமவேளையில் சவுதி அரேபிய, ஈரானிய தண்டனைச் சட்டங்கள் மத்தியக் காலத் தண்டனைச் சட்டங்களாக இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் இந்தத்தகவல் தொழில்நுட்பச் சாதனங்களில் குவிந்து கிடக்கின்றன.

தலிபான், ஐஎஸ்ஐஎஸ், சவுத் அரேபியா, ஈரானிய தண்டனைச் சட்டங்கள், சகோதரத்துவ அரசியல் இஸ்லாமின் அடிப்படைவாத நிலைபாடுகள் போன்றவற்றை இடதுசாரி மற்றும் தாராளவாத ஜனநாயக நிலைபாட்டிலிருந்து விமர்சிக்கும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் இன்று அரபு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் அதிகரித்து வருகிறார்கள். இடதுசாரிப் பார்வைக்கு தாரிக் அலியையும் சமிர் அமினையும் குறிப்பிட இயலுமானால் தாராளவாத இஸ்லாமியப் பார்வைக்கு தாரிக் ரமடானையும் ஹமித் தபாசியையும் நாம் குறிப்பிட முடியும்.

தமிழக, இலங்கை சமூக வலைத்தளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்தப் பார்வைகளைப் பகிர்ந்து கொள்கிற இஸ்லாமிய இளைஞர்களையும் எழுத்தாளர்களையும் பெண் எழுத்தாளர்களையும் தொகையாக நம்மால் காணமுடியும். இந்தத்தலைமுறை தலிபான், அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ், ஈரான், சவுதி அரேபியா தண்டனைச் சட்டங்கள் போன்றவற்றை நிராகரிக்கிறவர்கள். சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலையும் படுகொலைகளையும் இவர்கள் நிராகரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

கார்ட்டூன்களின் இயேசுவையோ அல்லது பிற மத தீர்க்கதரிசிகளையோ சித்தரிக்கக் கூடாது எனும் நிலைபாடு ஒன்று. ஒருவரைச் சித்தரிக்கலாம் எங்களுடைய மதத்தீர்க்கதரிசையை மட்டும் சித்திரிக்கக் கூடாது என்று தமது தனித்துவத்தை வலியுறுத்துவது பிறிதொன்று. உலகவயமான சூழலில், கருத்துரிமையும், மத அடிப்படைவாதமும் உலகவயமானவையாக ஆகியிருக்கும் சூழலில், மத அடிப்படைவாதம் என்பது மதங்களுக்கு இடையிலான வித்தியாசமின்றி எல்லா நாடுகளிலும் பெண்களுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள சூழலில் எந்த மதப் பிரதிமையை முன்வைத்து அடிப்படைவாதம் உருவாகிறதோ அந்தப் பிரதிமையைப் பற்றிய புனிதபிம்பத் தகர்ப்பைச் செய்யக் கூடாது என்பதை, மதம் வேறுபட்ட பார்வை கொண்டவர்களின் மீது வரலாறு முழுவதும் இழைத்த தீமையை விமர்சிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது.

உலகவயமாதலும் இடப்பெயர்வும் நாடுகளின் எல்லையை மட்டுமல்ல தத்தமது கலாச்சாரத்தின் எல்லைகளையும் கூட உடைத்து வருகிறது. இதை அங்கீகரிப்பவர் மட்டுமே இன்று உலகக் குடிமக்களாக இருக்க முடியும். இதில் தனித்துவத்தையும் தமக்கு மட்டுமே விலக்கைக் கோருவதும் நடைமுறைச் சாத்தியமும் இல்லை. இதில் இந்து, கிறித்துவம், யூதம், இஸ்லாம் என்றெல்லாம் வித்தியாசமில்லை. சார்லி ஹெப்டோ தனியொரு மதத்தை மட்டும் விமர்சிக்கவில்லை. எவருக்கும் சிறப்புத் தகுதிகளையும் அது வழங்கவில்லை. அடிப்படைவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பதாலேயே அது சகல மதங்களையும் தலைகீழாகக் கவிழ்க்கிறது.

சார்லி ஹெப்டோவின் கேலிச் சித்திரங்கள் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. அனைத்து வலதுசாரிகளையும், அடிப்படைவாதிகளையும், அடிப்படைவாத நிலைபாடுகளையும் அது விமர்சித்திருக்கிறது. இடதுசாரிப் பன்முகத்துவம் என்பதையே அது தனது கொளகையாக அறிவித்திருக்கிறது. நிலவும் நிறுவன எதிர்ப்பு, அடிப்படைவாத மத எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு போன்றவற்றையே இன்றுவரை அது பேணிவருகிறது. கடந்த காலங்களில் கம்யூனிசக் குப்பை என வலதுசாரிகள் அதனை விமர்சித்து வந்திருக்கிறார்கள். யூதமதவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கத்தோலிக்க அடிப்படைவாதிகளும் அதனை விமர்சித்து வந்திருக்கிறார்கள். அடிப்படைவாத இஸ்லாமை மட்டுமே அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பது யதார்த்தத்தில் வேர்கொள்ளாத பார்வை. ஐரோப்பாவில் நிகழ்ந்த பெருமளவிளான அரசியல் படுகொலைகளுக்கு அடிப்படைவாத இஸ்லாமே காரணமாக இருப்பதனால் அதற்கான எதிர்விணைகளும் அதிகமாக இருக்கிறது. முகமதுவை அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளும் கடத்திவிட்டார்கள் எனப் பொருள் கொண்ட நிறைய கேலிச் சித்திரங்கள் அவ்விதழில் வெளியாகியிக்கின்றன. அனைத்து அடிடபடைவாதங்களையும் குறித்து கேலிச் சித்திரம் வரைகிற ஒரு இதழை ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாதம் குறித்து மட்டும் கேலிச் சித்திரம் வரையக்கூடாது எனக் கோருவது சமநிலைப் பார்வையாக இருக்க முடியாது.

சார்லி ஹெப்டோ பிரச்சிiனை தொடர்பான கருத்து விவாதங்களில் இடதுசாரிச் சிந்தனையாளரான தாரிக் அலி, மேற்குலக இஸ்லாமியத் தாராளவாதியான தாரிக் ரமடான் என இருவரது கருத்துக்களை மட்டுமே நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். தாரிக் அலி இதில் இரு பரிமாணங்கள் இருக்கிறது என்கிறார். முதலாவதாக, மத அடிப்படைவாதிகள் ஒரு புறமும், மதநீக்க அடிப்படைவாதிகள் – செக்யூலர் பன்டமென்டலிஸ்ட்ஸ – ஒரு புறமும் இயங்குகிறார்கள், இதனது அரசியல் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். இரண்டாவதாக, முகமதுவைக் கேலியாக விமர்சித்த டென்மார்க் இதழ் ஜிலான்ட் போஸ்ட் மோசஸ் பற்றி கேலிச் சித்திரம் போட மாட்டோம் எனச் சொன்னதைச் சுட்டி, இது மேற்கத்திய கருத்துச் சுதந்திரத்தின் இரட்டை நிலைபாட்டைச் சுட்டுகிறது என்கிறார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக இஸ்லாமிய ஆய்வியல் பேராசிரியரான தாரிக் ரமடான் அதிகமும் மேற்கத்திய முஸ்லீம்கள் ஐரோப்பிய தாராளவாத மதிப்பீடுகளுக்குள் இணங்கி வாழ்வது குறித்து அக்கறைபடுகிறவர். கோட்பாட்டளவில் தான் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன் என அவர் திரும்பத் திரும்ப வலியுறத்துகிறார். தான் செல்ல நேரும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தைப் பேண வேண்டும் எனக் கோரிவருவதாகவும் அவர் சொல்கிறார். சமவேளையில் மேற்கத்திய நாடுகள் கருத்துச் சுதந்திரம் எனும் நிலைபாட்டில் இரட்டை நிலைபாடுகள் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். தாரிக் அலி குறிப்பிடுவது போலவே, இஸ்லாமை விமர்சிக்கிற மாதிரி யூதமதத்தை இவர்களால் விமர்சிக்க முடியுமா எனவும் அவர் கேட்கிறார். மேற்கில் நடக்கும் இத்தகைய தாக்குதல்களை விமர்சிக்கும் இவர்கள், அரபு சர்வாதிகாரிகளை ஆதரிக்கும், அரபு நாடுகளில் தலையிட்டுக் கொலை புரியும், ‘நாங்கள் இறந்தவர்களின எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை’ எனும் அவர்களது கூற்றை, அவர்களது பாலஸ்தீனம் தொடர்பான நிலைபாட்டை இதே வகையில் விமர்சிக்கிறதா எனக் கேட்கிறார். இதே போல, பயந்துபோயிருக்கிற, அதிகாரமற்ற, ஒடுக்குமறைக்கு உள்ளாகிற ஐரோப்பிய முஸ்லீம்களிடம் கேலிச்சித்திரங்களைப் பார்த்துச் சிரிக்கிற மனநிலையிலும் அவர்கள் இல்லை என்கிறார். விமர்சனத்துடன் பொறுப்பும் வேண்டும் எனவும் அவர் கோருகிறார்.

இவ்வாறு சொல்கிற தாரிக் அலியும் தாரிக் ரமடானும் சார்லி ஹெப்டோ படுகொலையை நிபந்தனையற்றுக் கண்டிப்பதாகவும் சொல்கிறார்கள். கேலிச் சித்திரத்திற்கு எதிர் இன்னொரு கேலிச் சித்திரம், விமர்சனத்திற்கு எதிர் மற்றொரு விமர்சனம்தான் பதிலாக இருக்க முடியுமேயொழிய படுகொலை பதிலாக இருக்க முடியாது எனவும் தாரிக் அலி குறிப்பிடுகிறார்.

குறிப்பாக சார்லி ஹெப்டோ மீதான தாரிக் அலியின் விமர்சனமாக அவ்விதழ் மதநீக்க அடிப்படைவாதத்தைப் பேசும் இதழ் என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம். தாரிக் ரமடானின் விமர்சனமாக அதிகாரமற்ற, சிரிக்கிற மனநிலை கொண்டிராத மக்களை நோக்கிய கேலிச்சித்திரங்கள் சார்லி ஹெப்டோவின் விமர்சனங்கள் என நாம் புரிந்து கொள்னலாம். இன்னும் சார்லி ஹெப்டோ ஆசிரியர் சார்ப்போ சேபர்னியருடனான தனது இரண்டு தொலைக்காட்சி விவாதங்களையும் தாரிக் ரமடான் நினைவுகூர்கிறார். தாரிக் அலியோ தாரிக் ரமடானோ சார்லி ஹெப்டோவை வெள்ளை நிறவாத இதழ் எனக் குறிப்பிடுவதில்லை. இஸ்லாமை மட்டும் அது குறிவைக்கிறது எனவும் குறிப்பிடவில்லை. இன்னும் சார்லி ஹெப்டோ கருத்துச் சுத்திரத்தில் இரட்டை நிலைபாட்டைக் கடைப்பிடிக்கிறது எனவும் ரமடானால் சொல்ல முடியவில்லை. சார்லி ஹெப்டோ இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைக் கணக்கிலெடுக்காமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினது உணர்வுகளாக மட்டுமே இதனை முன்னிறுத்தி எதிர்விணை செய்கிறது. இது மதநீக்க அடிப்படைவாதம் என்கிறார் தாரிக் அலி.

சார்லி ஹெப்டோ குறித்த உரையாடல்களில் இருவருமே தவற விடுகிற பிரச்சினையொன்று இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்களை இவர்கள் அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பியக் கொள்கைகளின் எதிர்விளைவான அரசியலாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனையே திரும்பத் திரும்பத் வலியுறுத்துகிறார்கள். இது இத்தகைய தாக்குதல் பின்னணிகளில் ஒரு பரிமாணம் மட்டும்தான். இன்னொரு முக்கியமான பரிமாணம் உண்டு. இத்தகைய தாக்குதல்களை ஒரு சீரழிவுச் சமூகத் திட்டத்தை இலக்காகக் கொண்ட, அதற்கு இறையியல் பரிமாணத்தையும் வழங்குகிற அடிப்படைவாதச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் உலக அளவில் ஒருங்கிணைக்கிறார்கள் என்பதுதான் அது. இதனை தாரிக் அலியோ, தாரிக் ரமடானோ அழுத்தமாக முன்வைப்பதில்லை.

ஸல்மான் ருஸ்டி பிரச்சினையில் பதிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் கொல்லப்பட்டது, பணிதல் எனும் திரைப்படத்தினை எடுத்ததற்காகக் ஹாலந்து இயக்குனர் தியோ வான்கோ கொல்லப்பட்டது, டென்மார்க் ஜிலான்ட் போஸ்டன் கார்ட்டூன் பிரச்சினையை அடுத்து உலகெங்கிலும் நிகழந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள், இன்னசென்ஸ் ஆப் முகமது திரைப்படத்தினை அடுத்து எழுந்த வன்முறைகள் என்பதனையடுத்து நிகழ்ந்திருக்கிற, உலக அளவில் தாக்கங்களை உருவாக்கியிருக்கும், ஐரோப்பாவில் இன்றும் இனிவரும் காலங்களிலும் மிகப்பெரும் விளைவுகளையும் உருவாக்கப் போகும் பிரச்சினைதான் சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை.

கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடனும் சமூகநீதியுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது எனும் பார்வையுடன், ஒரு விமர்சனத்துக்கான அல்லது படைப்புக்கான, கேலிச் சித்திரத்திற்கான எதிர்விணை என்பது மறுவிமர்சனம், இன்னொரு படைப்பு, மாற்றுக் கேலிச்சித்திரம்தான் எனும் பார்வை வலுவடைந்து வருகிறது. கோட்பாட்டளவில் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தைத் தான் ஆதரிக்கிறேன் என்றுதான் தாரிக் ரமடானால் சொல்ல முடிகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தையம் அதனது படுகொலைக் கருத்தியலையும் நாம் அனைவருமே நிராகரிக்க வேண்டும். அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டம் இந்த வகையிலேயே தார்மீக அரசியலாக முடியும்.

கலை இலக்கியம், தத்துவம், நடைமுறை என இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது மத்தியகாலத் தண்டனைச் சட்டங்களிலும் பெண்வெறுப்பிலும் இஸ்லாமிய அடிப்படைவாதமான தலிபான்-அல்குவைதா-ஐஎஸ்ஐஎஸ் முன்வைக்கும் சமூகத்திட்டத்திலும் இருக்க முடியாது. சார்லி ஹெப்டோ பிரச்சினை குறித்த விவாதம் இத்தகைய திசை நோக்கி நகர்வதே எதிர்கால உலகுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

http://yamunarajendran.com/?p=1792

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார்லி ஹெப்டோ : இஸ்லாமிய வெறுப்பும் ஐரோப்பிய இடதுசாரிகளும்

யமுனா ராஜேந்திரன்

5-foucault-sartre-02.jpg

I

படுகொலையின் பின்னான சார்லி ஹெப்டோவின் முதல் இதழ் தீர்க்கதரிசி முகமதுவை அட்டைப்படமாகக் கொண்டு வெளியாகிவிட்டது. சார்லி ஹெப்டோ பிரச்சினையை முன்வைத்து ஜெர்மனியில் பெருமளவிலும் பிற ஐரோப்பிய நாடுகளில் சிறுசிறு அளவிலும் ஏலவே செயல்பட்டு வரும் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கட்சிகள் தமது நாடுகளில் குடிவரவுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை இறுக்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டங்களைத் தமது தலைநகர்களில் நடத்தியிருக்கின்றன.

பிரித்தானியாவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்குள் இணையக் கண்காணிப்பும் கொண்டுவரப்பட வேண்டும் என முன்மொழிவுகள் எழுந்திருக்கின்றன. பிரான்சில் யூதர்களின் வழிபாட்டிடங்களையும் அவர்தம் கல்விச் சாலைகளையும் பாதுகாப்பதற்கெனவே 5,000 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலதிகமாகக் கொந்தளிப்பான இடங்களில் 5,000 படையினரும் 4,500 காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25 இற்கும் மேற்பட்ட இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. 50 பேர் வரை பயங்கரவாதத்தை ஆதரித்தார்கள் எனும் குறச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். யூத விரோத கேலிச்சித்திரக்காரர் என அறியப்பட்ட தியோபான்டிஸ் சார்லி எனும் சொல்லையும் கொலையாளிகளில் ஒருவரான காலிபோலி பெயரையும் இணைத்து அது போல் நான் உணர்கிறேன் எனச் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் உள்பட மேற்கத்திய நகர்களில் நிறவாதத்திற்கும் இஸ்லாமிய வெறுப்புக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களும் எழுந்திருக்கின்றன.

II

சார்லி ஹெப்டோ பிரச்சினையை இன்றைய சார்லி ஹெப்டோ தாக்குதலும் அதையொட்டி எழுந்திருக்கிற சர்ச்சைகளையும் ஒட்டி மட்டுமே நாம் புரிந்து கொள்ள முடியாது. இதற்கென நாம் வரலாற்றில் முன்னும் பின்னுமென ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரான்சில் 50 இலட்சம் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். வட ஆப்ரிக்க நாடுகளில் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தின் உடன்விளைவாக எழுந்ததே இஸ்லாமியர்களின் பிரெஞ்சுக் குடியேற்றம். அரை நூற்றாண்டின் முன்பான முதல் குடியேறிகளின் மூன்றாம் தலைமுறையினர் தற்போது உருவாகிவிட்டார்கள். என்றாலும் பிரெஞ்சுப் பெரும்பான்மைச் சமூகத்தினால் உள்வாங்கப் படாதவர்களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். நகரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக, குடியிருப்பு வசதிகள் அற்றவர்களாக, வேலையின்மையினிடையிலும் வறுமையிலும் வாழ்கிறவர்களாகவே அவர்களில் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள்.

மதங்களுக்கிடையிலான ஒப்பீட்டளவிலான சுதந்திரம் எனும் அளவில் அவர்களுக்கு இரண்டு பின்னடைவுகள் இருக்கின்றன. பிரான்ஸ், பிரித்தானியா உள்பட பெரும்பான்iயான ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ மதத்திற்கெதிரான மதநிந்தனைகளைத் – பிளாஸ்பெமஸ் – தடுக்க சட்டங்கள் இருக்கின்றன. சல்மான் ருஸ்டி பிரச்சினையை அடுத்து இஸ்லாமையும் அந்தச் சட்டத்தினுள் கொண்டு வர பிரித்தானியாவில் இஸ்லாமிய அமைப்புகள் கோரின. ஆது நடைமுறைக்கு வரவில்லை. ஐரோப்பிய நாடுகளிலும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இரண்டாம் உலகப் போரையடுத்து யூதமதத்திற்கும் இத்தகையதொரு பாதுகாப்பு ஐரோப்பிய நாடுகளில் உருவானது. யூதவெறுப்பு – ஏன்டிசெமைட்- சட்டவிரோதமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஹாலோகாஸ்ட் டினையல் அல்லது யூதப்படுகொலை மறுப்பு என்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டது. நடைமுறையில் இஸ்ரேல் எனும் நாடு பாலஸ்தீனத்திலும் மத்தியக்கிழக்கிலும் நிகழ்த்தும் படுகொலைகள் பற்றிய விமர்சனங்களை யூதவிரோதமாக நிரல்படுத்தும் ஒரு போக்கும் ஊடகங்களில் தோன்றியது.

பாலஸ்தீனப் பிரச்சினையும் ஐரோப்பிய பிரெஞ்சு இடதுசாரிகளது பார்வைகளும் எவ்வாறு இருந்து வந்திருக்கிறது என்பது குறித்தும் சில அனுபவங்கள் இருக்கிறது. கான்டிநென்டல் தியரி – இருத்தலியல் – அமைப்பியல் – பின் அமைப்பியல் – பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களில் பெரும்பாலுமானவர்கள் யூதர்கள் எனக் கொண்டால் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையிலான பிரச்சினை குறித்த அவர்களது பார்வை எல்லா நிலைகளிலும் பாலஸ்தீன ஆதரவுக் கண்ணோட்டம் கொண்டிருந்தது எனச் சொல்ல முடியாது.

பாலஸ்தீனர்களின் மியூனிக் தாக்குதலை ஆதரித்த சார்த்தர் சமவேளையில் அதன் பின்பு நாடு நாடாக பாலஸ்தீனர்களைத் தேடிக் கொன்ற கோல்டா மேயரின் நடவடிக்கைகளையும் ஆதரித்தார். இரண்டும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கருதினார். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு அறிவுஜீவிகளது ஆதரவைத் திரட்ட முயன்ற எட்வர்ட் சைத், சார்த்தர், பூக்கோ, சிமோன் தி பூவா போன்றவர்களிடம் இருந்து ஏமாற்றத்தையே பெற்றதாக அவர் பதிவு செய்திருக்கிறார். பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் தெளிவாக பாலஸ்தீனத்தின் பால் ஆதரவு நிலைபாடு எடுப்பது என்பதல்லாமல் இரண்டுக்கும் இடையில் சமதூரத்தைக் கடைப்பிடிப்பது என்பதாகவே அவர்களது பார்வைகள் இருந்தன.

பிரான்சின் புகழ்வாய்ந்த இடதுசாரி இதழ்களில் ஒன்றான லிபரேஷன் 1970 ஆம் ஆண்டு சார்த்தரால் நிறுவப்பெற்றது. அதே காலத்தில்தான் லெமான்டே டிப்ளமேடிக் இதழும் சார்லி ஹெப்டோ இதழும் துவக்கப்பட்டது. இந்தப் பத்திரிக்கைகளில் 1968 எழுச்சியின் துவக்கத்தில் இருந்த இலட்சிய வேட்கை மெல்ல மெல்லத் தேய்ந்து வந்தது. அதற்கான காரணங்களை சோசலிசத்தின் பின்னடைவிலும் நாம் காண முடியும். இப்பத்திரிக்கைகளில் நிறைய ஆசிரியர் குழு மாற்றங்கள் நடந்தன. ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவைகளது விற்பனை எண்ணிக்கை வீழ்ந்துவந்தன. ஆட்குறைப்புகள் நடந்தன. சார்த்தரின் மரணத்தின் பின் லிபரேஷன் பத்திரிக்கையில் வெளியார் மூலதனம் என்பதோடு அரசியலும் நுழைந்தது. ஆசிரியர் குழுவினுள் கருத்துப் போராட்டங்களும் நடந்தபடி இருந்தன. சார்லி ஹெப்டோ இதழிலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்தன.

சார்லி ஹெப்டோ இதழ் துவக்கம் முதலே லிபரட்டேரியன் கருத்து வெளிப்பாட்டு முறையையும், பிரெஞ்சுக் குடியரசின் முழக்கமான சுதந்திரம், சகோதரத்துவம, சமத்துவம் என்பதனையும் தனது கொள்கையாகக் கொண்டிருந்தது. லிபர்ட்டேரியன் கருத்து வெளிப்பாட்டு முறை என்பது மூர்க்கமானதும், தெருமனிதனின் மொழியையும், பாலியல் கொச்சைகளையும் கொண்டதாகும். பிரெஞ்சுப் புரட்சியின் கொலைகளை மறுத்தவர் என்றும் நவீனத்துவத்தின் இருண்மையை முன்வைத்தவர் என்றும் சொல்லப்படும் மார்கிஸ் டீ சேடின் வெளிப்பாட்டு முறையை லிபரட்டேரியன் கருத்து வெளிப்பாட்டு முறைக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நாம் குறிப்பிடலாம்.

சார்லி ஹெப்டோவின் மீதான விமர்சனங்களையும் வழக்குகளையும் நாம் இருவிதமாக வகைப்படுத்தலாம். கிறித்தவம், இஸ்லாம், யூதம் என மூன்று மதங்களையும் அது விமர்சித்ததால் மூன்று மதம் சார்ந்தவர்களும் அதன் மீது வழக்குத் தொடுத்தார்கள். நிறவாதக் கட்சியான நேஷனல் பிரன்டின் தவைர்களை, பிரெஞ்சு அரசுத் தலைவர்களை விமர்சித்ததால் அவர்கள்து வழக்குகளையும் எதிர்கொண்டார்கள். அறுபதுகள் எழுபதுகளில் எண்பதுகளில் இருந்த சார்லி ஹெப்டோவின் நிலை இதுதான்.

தொண்ணூறுகளில் சார்லி ஹெப்டோவில் நடந்த ஒரு முக்கியமான மூலதனம் மற்றும் ஆசியர் குழ மாற்றத்தையடுத்து பிலிப் வேல்(1992-2009) என்பவர் ஆசிரியர் பொறுப்புக்கு வருகிறார். இவரது காலத்தில் சார்கோசியின் மகனது யூதப் பெண்ணுடனான திருமணம் குறித்து எழுதப்பட்ட கட்டுரையின் ஆசிரியர் மீது யூதவிரோதக் கட்டுரையை என வழக்குத் தொடுக்கப்பட்டதையடுத்து பிலிப் வேல் அந்தக் கட்டுரையாசிரியரை பதவிநீக்கம் செய்கிறார். கட்டுரையாசிpயர் தனது வேலை நீக்கத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கில் அவர் வெற்றிபெறுகிறார். நஷ்டஈடும் பெறுகிறார். பிலிப் வேல் ‘பாலஸ்தீனர்கள் நாகரீகமற்றவர்கள்’ என எழுதியதையடுத்து ஆசிரியர் குழவைச்சேர்ந்த மோனா கோலட் என்பவர் ஆட்சேபனை எழுப்பியதயைடுத்து பிலிப் வேலினால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

2001 ஆம் ஆண்டு நிறவாதம் அல்லது இனவாதம் எனும் குற்றச்சாட்டுக்கு சார்லி ஹெப்டோ ஆளாகப்போகிறது எனும் எச்சரிக்கையுடன் ஆலிவர் சரோன் எனும் ஜெர்மானியப் பத்திரிக்கையார் சார்லி ஹெப்டோவடனான தனது உறவை முறித்துக் கொள்கிறார். சார்லி ஹெப்டோவின் தனது நிலைபாட்டிலிருந்து பின்வாங்காத பிடிவாதத்தையடுத்து 2013 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோவின் ஆசிரியர் குழுவுக்கு ஒரு திறந்த கடிதத்தை ‘ஆர்ட்டிகல் 11’ எனும் இணையதளத்தில் அவர் வெளியிடுகிறார். அதற்கு இப்போதைய தாக்குலில் மரணமற்ற சேபர்னியர் லெமான்டே டிப்ளமேடிக் இதழில் ஒரு பதிலையும் எழுதுகிறார்.

ஆலிவர் சரோனின் அவதானத்தின்படி 2001 செப்டம்பர் தாக்குதலின் பின் இஸ்லாம் குறித்த கடுமையான விமர்சனம் கேலிசித்திரம் வரைதலில் சார்லி ஹெப்டோவின் ஆசிரியர் குழவினரை ஆட்கொள்ளத் துவங்குகிறது என்கிறார். இக்காலகட்டத்தில் சல்மான் ருஸ்டி, தஸ்லீமா நஸ்ரின், ஹிர்ஸி அலி போன்றவர்களுடன் 12 அறிவுஜீவிகள் கையொப்பமிட்ட ஒரு அறிக்கையையும் சார்லி ஹெப்டோ வெளியிடுகிறது. ‘இல்லை, நாங்கள் ரேசிஸ்ட்டுகள் இல்லை’ என சேபர்னியர் லெ மான்டே டிப்ளமேடிக்கில் பதில் எழுதுகிறார். 1968 தலைமுறை நாங்கள் என எழுதும் சேபர்னியர் நாங்கள் வலதுசாரி எதிர்ப்பாளர்கள். ரேசிஸ்ட் எதிர்ப்பாளர்கள் என்கிறார். சார்லி ஹெப்டோவில் வெளியான பற்பல கட்டுரைகளை அதற்கு ஆதாரமாக அவர் காட்டுகிறார். கிறித்தவ, யூத, இஸ்லாமிய மதக்குருக்களை நாங்கள் விமர்சனம் செய்வோம் என்கிறார். எங்களில் இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகள. அனார்க்கிஸ்ட்டுகள், சூழலியலாளர்கள் எனும் வேறுபாடு உண்டு என்கிறார். ‘சார்க்கோசி தோற்றபோது நாங்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டாடினோம்’ என்கிறார்.

செப்டம்பர் 11 என்பது உலக அரசியலை மாற்றியது மட்டுமல்ல அது அந்தத் தாக்குதலின் விளைவுகள் குறித்தும் சிந்திக்கத் தூண்டியது. ஓன்று பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க-மேற்கத்திய யுத்தத்தை அது தூண்டியது. தலிபான் துவங்கி அல்குவைதா – ஐஎஸ்ஐஎஸ் வரை வந்திருக்கிற இஸ்லாம் பெயரிலான ஒரு அடிப்படைவாத பாசிசக் கருத்தியலைப் பற்றி உலகு அறிந்துகொண்டது. ரஸ்யா,சீனா.கியூபா முதல் பல அரபு நாடுகளும் உள்பட பயங்கரவாதம் உலகில் இருக்கிறது என்பதனை அந்நிகழ்வு ஒப்புக்கொள்ள வைத்தது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கான எதிர்விணையாக தலிபான்-அல்குவைதா- ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அது தன்னளவிலேயே ஒரு சீரழிவு சமூகத்திட்டம். அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும் இஸ்ரேலும் உலகின் பிற நாடுகளும் உலக அரசுகளும் தத்தமது நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பதை இனவிடுதலைப் போராட்டங்களையும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் சிறுபான்மையினர் போராட்டங்களையும் எதிர்க்கப் பயன்படுத்திக் கொண்டது. பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இஸ்ரேல் பயங்கரவாதம் என நிரல்படுத்தியது. இச்சூழலில் ஆயுத விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஒரு காலத்தில் நியாயப்படுத்திய கடத்தல்களும் கப்பம் கோருதலும் தற்கொலைத் தாக்குதல்களும் இப்போது பயங்கரவாதமாக அடையாளம் காணப்பட்டு, உலக வெகுஜன அபிப்பிராயமும் அதனை ஏற்றது. விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களும் விடுதலை இயக்கங்கள் இச்செயல்பாடுகளை விட்டொழிக்க வேண்டும் எனக் கோரினர். ஹமாஸ்,ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்கள் இவ்வாறான விமர்சனங்களுக்கு உள்ளாகின. பாலஸ்தீனத்தில் ஹமாசின் தாக்குதல் திட்டங்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்தியலை எட்வரட் சைத் மற்றும் மஹ்முத் தர்வீஷ் போன்றவர்கள் கண்டித்தனர்.

மீளவும் நாம் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கும் ஐரோப்பிய இடதுசாரிகளுக்கும் வருகிறோம். பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய இஸ்லாமிய மக்கள் தாம் வாழும் நாடுகளில் விளிம்புநிலையில் வறுமையில் ஒதுக்கப்பட்டு வாழ்பவர்களாக இருந்தார்கள். ஈராக்.பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் அழிவுகளைக் கண்டு மேற்கத்திய அரசுகளின் மீது கோபமுற்றவர்களாக இருந்தார்கள். இவர்களினிடையில் அடிப்படைவாத போதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஜிகாதிகளாக ஆப்கானுக்கும் பாகிஸ்தானுக்கும் சிரியாவுக்கும் ஈராக்குக்கும் யேமானுக்கும் சென்று இவர்கள் பயற்சிபெற்றுத் திரும்பினார்கள்.

ஐரோப்பிய நகர்களில் சுரங்க ரயிலில் வெடிகுண்டுகள் வைத்தார்கள். யூதர்களின் வழிபாட்டிடங்களை, அருங்காட்சிகங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். யூத வெகுமக்களையும் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் கொலை செய்தார்கள். மறுதலையில் இஸ்லாமிய வெறுப்புக் கொண்ட வெள்ளையினவாதிகள் முழு இஸ்லாமிய மக்களின் மீதும் துவேஷத்தைப் பரப்பினார்கள். எப்போதுமே குடியேற்றக் கொள்கைகளில் இறுக்கம் வேண்டி இயங்கியவர்கள் நடந்த குண்டுவெடிப்புகளைத் தமது கொள்கை நிலைபாட்டுக்கு ஊதிப்பெருக்கினார்கள்.

பிரான்சை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டால் 50 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களில் அடிப்படைவாதக் கருத்தியல் போதனையால் பாதிப்புற்ற இளைஞர்கள் 2,000 முதல் 3,000 பேர் வரையிலும் வரையிலும் இருப்பார்கள் என மதிப்பிடுகிறார்கள். இவர்களது செயல்பாடுகளால் வரும் விளைவுகளை முழு இஸ்லாமியர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்போது நாம் சார்லி ஹெப்டோவின் நிலைப்பாட்டையும் இவர்களல்லாத பிரெஞ்சு இடதுசாரிகள் இடதுசாரி இதழ்களினதும் நிலைபாட்டைப் புரிந்துகொள்ள முயல்வோம். இவர்களுக்கு வெளியிலான ஐரோப்பிய இடதுசாரிகளதும் நிலைபாட்டைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

செப்டம்பர் 11 என்பது பல முன்னாள் இடதுசாரிகளை அடிப்படைவாத இஸ்லாமுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்க வைத்தது. இங்கிலாந்தில் முன்னாள் நியூலெப்ட் இதழின் ஆசியர் குழு உறுப்பினரான பிரெட் ஹாலிடே, பிரான்சில் சார்த்தரது தலைமுறையைச் சேர்ந்த பெர்னார்ட் ஹென்றி லெவி போன்றோர் கடுமையான அடிப்படைவாத இஸ்லாமிய எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்தார்கள். இவர்கள் இந்நிலைபாடு எடுக்க இன்னுமொரு முக்கியமான காரணம் இஸ்லாமியக் குடியரசுகள் அனைத்துமே மார்க்சியர்களை வேட்டையாடின. இடதுசாரிக் கொன்றன. பெண்களின் மீது மட்டுமீறிய வன்முறையைச் செலுத்தின.

அமெரிக்க ஐரோப்பிய பயங்கரவாத யுத்தத்தைக் கடுமையாக விமர்சிக்கும் தாரிக் அலி கூட சல்மான் ருஸ்டிக்கு ஆதரவாக நாடகம் எழுதி நிகழ்த்தினார். ஐரோப்பிய இடதுசாரிகள் இவ்வகையில் இருவிதமான நிலைபாடுகள எடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, ஐரோப்பாவில் அவர்கள் நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்களை இடதுசாரிகள் எதிர்த்தார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய துவேஷம் இதனால் பெருகும்போது அதற்கு எதிராகப் போராட வேண்டியவர்களாகவும் ஆனார்கள்.

சார்லி ஹெப்டோவில் இந்த இரு நிலைபாடுகளும் இருக்கின்றன. நிறவாதிகளான பிரெஞ்சு நேஷனல் பிரண்டுக்கு எதிராக அவர்கள் எழுதிவருகிறார்கள். குர்திஸ் மக்களது போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். காஸா தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்கள். அடிப்படைவாதம் என வருகிறபோது அவர்கள் கடுமையான நிலைபாட்டைக் கொண்டிருக்கிறார்கள். கச்சாவான, பாலியல் பண்புகள் கொண்ட கேலிச்சித்திரங்களையும் அவர்கள் பிரசுரித்திருக்கிறார்கள்.

தாரிக் அலியும் ரமடானும் இது குறித்த விவாதங்களில் குறிப்பான கச்சாவான, பாலியல் பண்புகொண்ட கேலிச்சித்திரங்கள் குறித்துப் பேசுவதில்லை. மதநீக்க அடிப்படைவாதிகள், கருத்துசு சுதந்திரத்தில் இரட்டை நிலைபாடு கொண்டவர்கள் என சார்லி ஹெப்டோவைக் குறிப்பிடும் அவர்கள், சார்லி ஹெப்டோ மீதான அடிப்படைவாதத் தாக்குதலை உடனடியாகவே கண்டிக்கிறார்கள். ஐரோப்பிய இடதுசாரிகள் இந்த வரையறைக்குள்தான் செயல்பட முடியும்.

சார்லி ஹெப்டோ பற்றிய நோம் சாமஸ்க்கியின் விமர்சனம் அமெரிக்க ஊடகங்களின் இரட்டை நிலைபாடு குறித்ததாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் பேசும் அமெரிக்கா யுகோஸ்லாவிய யுத்தத்தில் தொலைக்காட்சி நிலையத்தைக் குண்டு வீசி அழித்ததையும், ஈராக்கில் மருத்துவமனைகளைக் குண்டுவீசித் தாக்கியதையும் அதனது இரட்டை நிலைபாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார் சோம்ஸ்க்கி.

ஜிசாக்கினது பார்வை இவர்களிலிருந்தெல்லாம் வித்தியாசமானது. ஐரோப்பிய தாராளவாதிகளும் இடதுசாரிகளும் தாக்குதலுக்கான காரணம் தாக்குதலுக்கு உள்ளானவரிடமும் இருக்கிறது எனக் குற்றவுணர்வு கொள்கிறார்கள். சல்மான் ருஸ்டிக்கு பத்வா விதித்ததற்கு அவரும் காரணம் என்கிற மாதிரி கருதுவது போன்றது இது. இது சரியான பார்வை அல்ல என்கிறார். தாம் உயர்நிலையில் இருப்பதாகக் கருதுகிற அடிப்படைவாதிகள் முட்டாள்தனமான இந்தக் கேலிச்சித்திரங்களுக்காக ஏன் மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்கிறார் அவர். ஐரோப்பிய இடதுசாரிகள் ஐரோப்பிய முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவது போலவே அடிப்படைவாதிகளின் இஸ்லாமோ பாசிசத்ததையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார்.

III

நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவனாகச் சில அவதானங்களை என்னால் முன்வைக்க முடியும். லிபரேஷன், லெமான்டே டிப்ளமேடிக் என இரண்டு பாரம்பர்யமான பிரெஞ்சு இடதுசாரி இதழ்களும் சார்லி ஹெப்டோவின் நிலைபாட்டை ஆதரித்து நிறகின்றன. தமது ஆசிரியர் குழவைச் சேர்ந்த 10 பேர் மரணமுற்ற பின் தமது நிலைபாட்டின் உறுதியைத் தெரிவிக்க முகமதுவின் படத்துடன்தான் இவ்விதழ் வந்திருக்க முடியும் என லெமான்டே டிப்ளமேடிக் இதழின் முன்னாள் ஆசிரியர் சொல்கிறார். இங்கிலாந்து நாவலாசிரியரான இர்விங் வெல்ஸ் பேசும்போது பரந்துபட்ட அளவில் விஷயங்களை அணுகாமல் இறுகிய நிலையில் நின்று கொண்டு சர்ச்சைளை உருவாக்குவதை மாற்றுவதற்கு சார்லி ஹெப்டோ சிந்திக்க வேண்டும் என்கிறார். அதே வேளையில் மதநீக்க சமூகத்தின் மதிப்பீடுகளுடன் வாழ ஐரோப்பிய இஸ்லாமியர்கள் முயலவேண்டும் எனவும் அவர் சொல்கிறார்.

சார்லி ஹெப்டோ பிரச்சினையை முழுமையாகக் கருத்துச் சுதநதிரம் குறித்த பிரச்சினையாக முன்வைத்த ஐரோப்பிய அரசுகள் கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதலாக இதனைச் சித்தரிக்கின்றன. இதனை முன்வைத்து குடியேற்றச் சட்டங்களை இறுக்க முனைகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலாக இதனை மாற்றியிருக்கின்றன. ஐரோப்பாவெங்கிலும் இஸ்லாமிய விரோத உணர்வை வளர்க்க வலதுசாரிகள் இதனைப் பாவிக்கத் துவங்கிவிட்டார்கள்.

இச்சூழலில் ஐரோப்பிய இடதுசாரிகள் இஸ்லாமிய விரோத நிறவெறிக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. அரசியல் ரீதியில் பாலஸ்தின-இஸ்ரேலியப் பிரச்சினையைக் காரணம் காட்டி அடிப்படைவாத இஸ்லாமியச் சிரழிவுத் திட்டம் கொண்டவர்கள் மேற்கத்திய சமூகங்களின் விரக்தியுற்ற இளைஞர்களைத் தமது போதனைகள் மூலம் அவர்களை பலிகடாக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமையும் அவர்கள் முன் இருக்கிறது

http://yamunarajendran.com/?p=1799

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு வெளிப்படையான நல்ல அலசல்.
சில விடயங்களை புதிதாக வாசிக்க கூடியதாக இருந்தது.
வெளிப்படை என்று நான் சொல்வதன் பொருள் .... வெளியில் எது நடக்கிறதோ எது நடந்ததோ 
அதை வைத்து அலச பட்டிருக்கிறது.
 
பொதுவாக இப்போ திரைமறைவில் நடப்பவைதான் ஏராளாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.