Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள்

Featured Replies

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள்

 

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. எனவே கட்டிடங்க‌ளின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள‌ வேண்டும் என்பது ஜெயலலிதா தரப்பு வாதம்.

 

10715ci.jpg

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின் தீர்ப்பு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக உயர்நீதிமன்றத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறது.

 

18 ஆண்டுகளாக நீண்ட விசாரணை, சுமார் ஆற‌ரை லட்சம் ஆவணங்கள்,259 சாட்சியங்கள்..நாளுக்கு நாள் எக்கசக்க மான எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக் கின்றன. மேல்முறையீட்டு விசா ரணையை 41 நாட்களில் சுனாமி வேகத் தில் முடித்துவிட்டு, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் கதவு மூடப்பட்ட அறை எண் 14-ல் அமர்ந்து தீர்ப்பை தயார் செய்து கொண்டிருக்கிறார் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி.

 

இவ்வழக்கு விசாரணையின் போது வாத, பிரதிவாதங்களைக் கேட்டு நீதிபதி அதிர்ச்சி, ஆச்சர்யம், அதிருப்தி, கோபம், ஏமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உணர்வு களை வெளிப்படுத்தும் கேள்விகளை எழுப்பினார். நீதிமன்றத்தில் ஒலித்த அதே கேள்விகளை இவ்வழக்கை கவனிக்கும் `தி இந்து'வாசகர்களும் எதிரொலித்தனர். நமது இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வழக்கு தொடர்பாக சரமாரியான கேள்விகளையும், அவர் களது ஆக்கப்பூர்வமான விமர்சனங் களையும், தெளிவான கருத்துகளையும் முன்வைத்தனர்.

 

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகள் மதிப்பிடப்பட்ட விதம் முக்கியமாக அங்கு பதிக்கப்பட்ட விலை உயர்ந்த மார்பிள் கற்களின் விலை மதிப்பீடு தீர்ப்பை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. எனவே அவை குறித்த நீதிமன்ற விசாரணையை விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் வீட்டில் பதிக்கப்பட் டுள்ள மார்பிள் குறித்த விசாரணையின் போது நீதிபதி, “அதிகப்படியாக ஒரு சதுர அடி மார்பிளின் விலை எவ்வளவு என மதிப்பீட்டீர்கள்?'' என கேட்டார். அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சொன்ன பதிலில் நீதிபதி அதிர்ந்தார். “1994-95-ல் ஒரு சதுர அடி மார்பிளின் விலை 5919 ரூபாயா? மதிப்பிட்ட அதிகாரிகளுக்கு கொஞ்சம் கூட “காமன்சென்ஸ்” இல்லையா?'' என கடுமையான சொற்களையே பிரயோகித்தார்.

 

19 கட்டிடங்களில் 5 நாட்கள் மதிப்பீடு

1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 சொத்துக் குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது. தலைமை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு வழக்கில் தொடர்புடைய 19 கட்டிடங்களை மதிப்பிட 11 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவினர் 7.12.1996 முதல் 12.12.1996 வரை தமிழ்நாடு, ஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌னர்.

 

இது தொடர்பாக தலைமை பொறி யாளர்கள் ஜெயபால் (அரசு தரப்பு சாட்சி 116), சொர்ணம் (அரசு தரப்பு சாட்சி 107), வேலாயுதம் (அரசு தரப்பு சாட்சி 98) ஆகி யோர் அளித்த சாட்சியத்தில் 19 கட்டிடங் களின் மதிப்பு ரூ.28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430. இதில் 3 கட்டிடங் கள் மட்டுமே ஜெயலலிதாவுக்கு சொந்த மானவை. போயஸ் கார்டனில் உள்ள‌ 31, 36 கதவு எண்கள் கொண்ட‌ பங்களா மற்றும் ஹைதராபாத் திராட்சை தோட்ட பங்களாவின் மதிப்பு ரூ.13 கோடியே 64 லட்சத்து 31 ஆயிரத்து 901.

 

இந்த கட்டிடங்களில் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பல்வேறு அறைகளில் பல விதமான மார்பிள், விலை உயர்ந்த கிரானைட், உயர் ரக டைல்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோ இத்தாலியன், இத்தாலியன் ஒயிட், இந்தியன் ரெட் சிகாகோ, இந்தியன் ஓரியன், ரோமன் சில்வியா, ரோஸா வெர்னா, கிரே வில்லியம் உள்ளிட்ட மார்பிள், உயர் ரக தேக்கு மரம், தொல்பூர் கற்கள் அதிகளவில் பயன்படுத்த‌ப்பட்டுள்ளன.

 

மலைக்க வைக்கும் மார்பிள்

போயஸ் கார்டனில் 5 தளங்கள் கொண்ட பங்களாவின் தளத்திற்கு வித விதமான மார்பிள், கிரானைட், உயர் ரக தேக்கு மரம் ஆகியவை பதிக்கப்பட் டுள்ளது. இதனை 5 நாட்கள் மதிப் பிட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் கள் மார்பிள், தேக்கு மரம், தொல்பூர் கற்கள் ஆகியவை சதுர மீட்டர் அளவு முறையில் கணக்கிட்டனர். ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா வீட்டில் இந்தோ இத்தாலியன் மார்பிள் உள்ளிட்ட விலை உயர்ந்த மார்பிள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான உயர் ரக மார்பிள் என்பதால் அவை சதுர மீட்டர் அளவு முறையில் கணக்கிடப்பட்டது. சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் உள்ள கட்டிடங்களை மதிப்பிட்ட போது சிலவற்றை சதுர அடியிலும், மற்றவ‌ற்றை சதுர மீட்டரிலும் மதிப்பீடு செய்திருந்ததால் நீதிபதி `திடீர்' கேள்வி களை எழுப்பிக் கொண்டே இருந்தார்.

 

அந்த கட்டிடங்களில் தளங்களை அலங்கரிக்க பதிக்கப்பட்ட மார்பிள், கிரானைட், தேக்கு மரம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.3.62 கோடி. மார்பிளை பொறுத்த வரை அதிகபட்சமாக ஒரு சதுர அடி ரூ.5919 (இந்தோ இத்தாலியன் ஒயிட் மார்பிள்), ஒரு சதுர மீட்டர் சுமார் 30 ஆயிரம் எனவும், குறைந்தப்பட்சமாக ரூ.300 எனவும் மதிப்பிடப்பட்ட‌து. ஒவ்வொரு கட்டிடங்களிலும் ஃபேன்ஸி ரக டைல்ஸ் 50 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அப்போதைய சந்தை மதிப்பில் கணக்கிடப்பட்டது என அரசு சான்று ஆவணம் 661-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த‌ மார்பிள், கிரானைட், டைல்ஸ் ஆகியவை மும்பையில் உள்ள `நியூ மார்பிள் & கிரானைட்' நிறுவனத்தில் வாங் கப்பட்டவை. மும்பையில் இருந்து லாரி மூலம் சென்னைக்கும், ஹைதராபாத் துக்கும் கொண்டுவரப்பட்ட‌து. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாள‌ர் கே.மாடசாமி (அரசு தரப்பு சாட்சி) சாட்சியம் அளித்துள்ளார் என ஆதாரம் காட்டப்படுகிறது.

 

அப்போது கே.மாடசாமி.. இப்போது கே.எம்.சாமி

ஜெயலலிதாவின் சொத்துகளை மிகைப்படுத்திக் காட்டி, வழக்கை புனைய வேண்டும் என்பதற்காக கட்டிடங்களின் மதிப்பு அதிகமாக சித்தரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் தகுதி குறைந்த பொறி யாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

19 கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி. அதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 3 கட்டிடங்களின் மதிப்பு ரூ.3.62 கோடி மட்டுமே என வருமான வரித் துறை தீர்ப்பாயம் சான்றழித்துள்ளது.

 

இது தொடர்பாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “கட்டிட மதிப் பீட்டின் உண்மை தன்மையை புரிந்து கொள்ள மார்பிள் மதிப்பீடு செய்யப் பட்டதை குறிப்பிடலாம். அப்போதைய சந்தை மதிப்பில் ரூ.100 விற்ற இத்தாலியன் ஒயிட் மார்பிள் 50 மடங்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தரப்புக்கு தேவையான அனைத்து மார்பிள்களும் மும்பையில் உள்ள `நியூ மார்பிள் & கிரானைட்' நிறுவனத்தில் வாங்கப்பட்டன.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாள‌ர் கே.எம்.சாமி (குற்றவாளி கள் தரப்பு சாட்சி) சாட்சியம் அளித்துள் ளார். இவரே 1997-ல் கே.மாடசாமி என்ற பெயரில் அரசு தரப்புக்கு சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியத்தில் ரூ.100 மதிப்புள்ள மார்பிளை அதிகளவில் வாங்கியதால் 10 சதவீதம் தள்ளுபடி செய்து ரூ 90-க்கு விற்றேன்.

 

மும்பையில் இருந்து சென்னை, ஹைதராபாத்தில் இறக்குவது வரையிலான லாரி போக்குவரத்து செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன்'' என நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் 2014-ல் ஆதாரங்களுடன் சாட்சியம் அளித் தார்'' என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

 

20 சதவீத தள்ளுபடி சரியா?

இதையடுத்து அரசு தரப்பு ம‌திப்பீட் டின் உண்மை தன்மை சந்தேகத் திற்குரியது. எனவே நீதிபதி குன்ஹா அரசு தரப்பு மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி செய்து, 19 கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடி என ஏற்றுக்கொள்கிறேன் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மேல்முறையீட்டில் ஜெயலலிதாவின் தரப்பு, `தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. வருமான வரித்துறை கணக்கின்படி 19 கட்டிடங்களின் மதிப்பு ரூ.13.62 கோடி. அதில் ஜெயலலிதாவின் 3 கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.3.63 கோடி. ஆனால் நீதிபதி குன்ஹா அரசு தரப்பு, குற்றவாளிகள் தரப்பு இரண்டு மதிப்பீட்டையும் ஏற்கவில்லை. அவரே எவ்வித அடிப்படையும் இல்லாமல் 20 சதவீதம் தள்ளுபடி செய்து கட்டிடத்தின் மதிப்பு ரூ.22 கோடி என வரையறுத்துள்ளார். இது முற்றிலும் முரணான அணுகுமுறை.

 

எனவே கட்டிடங்க‌ளின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள‌ வேண்டும். வருமான வரித்துறை ஏற்றுக் கொண்ட மதிப்பையே க‌ட்டிடங்களின் உண்மையான மதிப்பாக கருத வேண்டும். ஏனென்றால் இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த போது அதை விசாரித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம் அரசு தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

 

சொத்துக்குவிப்பு வழக்கின் மதிப்பீட்டில் மூல ஆதாரமாக விளங்கும் மார்பிள் விலையில் எதனை நீதிபதி குமாரசாமி ஏற்பார்?
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6993309.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...2 - சுதாகரனின் பிரம்மாண்ட திருமணத்தில் தீர்ப்பு நிச்சயிக்கப்படுகிறது
 

10y4caf.jpg

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் குறுக்குவெட்டு தோற்ற‌த்தை எளிய மக்களுக்கும் மிக எளிதாக நினைவூட்டுவ‌து சுதாகரனின் பிரம்மாண்ட திருமணம். முக்கிய அரசியல் தலைவர்களின் அணிவகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரி, தோட்டாதரணியின் செட்டிங், மாண்டலின் ஸ்ரீனிவாஸின் இன்னிசை என 20 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய அந்த ஆடம்பர திருமணம்தான், ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தீர்மானித்தது. மேல் முறையீட்டின் தீர்ப்பையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதும் அதுவே.

 

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வழி பேத்தி சத்தியலட்சுமிக்கும் 7.7.1995 அன்று திருமணம் நடந்தது. லாலுபிரசாத் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர் களும் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள், அலங்கார வளைவுகள், மேடைகள், மின் விளக்குகள், வரவேற்பு பலகைகள் அமைக்கப்பட்டன.

 

ஆடம்பர திருமண செலவு

இந்த திருமணத்துக்காக 7 லட்சம் சதுர அடிக்கு ஓலை பந்தல், ரூ.37 லட்ச செலவில் ஆடம்பர மேடை உட்பட பிரம்மாண்ட பந்தல்கள் அமைப்பதற்கு ரூ.5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532-ம், உணவு, தண்ணீர், தாம்பூலத்துக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125-ம் செலவாகியுள்ளது. வெள்ளித் தட்டுகளுடன் கூடிய அழைப்பிதழ்களை தபாலில் அனுப்பிய வகையில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரமும் ஊழியர்களுக்கு உடை வாங்கியதற்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும் செலவாகியுள்ளது.

 

65 ஆயிரம் அழைப்பிதழ்கள், விஐபி களுக்கு வெள்ளித்தட்டு அழைப்பிதழ், சென்னையில் முக்கிய இடங்களில் மின்விளக்கு அலங்காரம், பட்டாசுகள், டோங்கா நடனம், கரகாட்டம், யானை, குதிரை ஊர்வல வண்டிகள், வீடியோ, இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம் உள்ளிட்டவற்றுக்கு லட்சங்களில் செலவழிக்கப்பட்டது. மொத்தமாக சுதாகரனின் திருமணத்துக்காக ஜெயலலிதா தரப்பு ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவு செய்துள் ளனர் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட‌ பொதுப்பணித்துறை அதிகாரி தங்கராஜன் (அரசு தரப்பு சாட்சி 181) மதிப்பீடு செய்தார்.

 

இதனை நிரூபிக்கும் வகையில் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு (அரசு தரப்பு சாட்சி 259) ஜெயலலி தாவின் ஆடிட்டர் ராஜசேகரன், முதல்வரின் உதவி செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி, சிவாஜியின் மகன் ராம்குமார், மணமகளின் தந்தை நாராயணசாமி உட்பட 30-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

 

துல்லியமாக மதிப்பிட முடியுமா?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

''உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இவ்வழக்கில்தான் ஒரு திருமணத் துக்கு ஆன செலவை சுமார் 2 ஆண்டுகள் கழித்து மதிப்பீடு செய்திருப்பார்கள் என கருதுகிறேன். திருமண ஆல்பத் தையும், வீடியோ பதிவுகளையும், பத்திரிகை செய்திகளையும், திருமணத் துக்கு வந்து சாப்பிட்டு போனவர் களையும் கொண்டு அந்த திருமண செலவை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியுமா?

 

சுதாகரனின் திருமணச் செலவை ஜெயலலிதா செய்ததாகப் பொய் சாட்சிகள் மூலம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜோடித்துள்ளது. தமிழக முறைப்படி மணப்பெண் ணின் குடும்பத்தார்தான் திருமணச் செலவை செய்வார்கள். அதன்படி நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் (குற்றவாளிகள் தரப்பு சாட்சி 1) அனைத்து செலவையும் செய்தார். இத‌ற்கு அவர் வருமான வரியும் கட்டியுள்ளார். 1074 பேரை விசாரித்த நல்லம்ம நாயுடு, அரசுத் தரப்பு சாட்சியாக ராம்குமாரை சேர்க்காதது ஏன்?

 

திருமணத்துக்கு பந்தல் அமைத்த தோட்டா தரணி, இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், மாண்டலின் னிவாஸ் ஆகியோர் ஜெயலலிதா, சிவாஜி வீட்டு திருமணம் என்பதால் ஒரு ரூபாய்கூட‌ கட்டணம் வாங்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு மட்டுமே ரூ 7,000-ஐ ராம்குமார் வழங்கினார். சிவாஜியின் திரைப்பட நிறுவனத்தில் அவரது இளையமகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் ரூ.99 லட்சத்தை திருமணத்துக்காக ராம்குமார் செலவு செய்துள்ளார்''என்று வழக்கறிஞர் குமார் வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா,''திருமணத்தின்போது சிவாஜி உயிருடன் இருந்தாரா? அவரிடம் ஏன் விசாரிக்கவில்லை?” என கேட்டார்.அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் மவுனம் சாதித்தனர்.

 

குன்ஹாவின் திருமண கணக்கு

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ''சுதாகரனின் திருமண செலவுகள் குறித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. அரசுத் தரப்பு சாட்சியான பொதுப்பணித் துறை பொறியாளர் தங்கராஜன், ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஜவஹர் பாபுவை விசாரித்துள்ளார். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

 

திருமண செலவுகளுக்கு மணமகளின் தந்தை நாராயணசாமி கொடுத்தது ரூ.14 லட்சம் மட்டுமே. மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.

வட இந்திய அலங்கார நிபுண ரான பால்பாபுவுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி. நகர் வரையிலான சாலையை செப்பனிட்ட சுப்பிரமணி, சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தனது பெயரில் காசோலை வழங்கியுள்ளார். மேலும் ரமேஷ் என்பவருக்கு 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடித்தற்காக ரூ.11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் திருமணத்தில் மண மக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா தரப்பில் 11.09.1995 அன்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 660-ம் 'ராக் ஆர்ட்ஸ்' விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதேபோல 1984-85,1994-95 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு ஆடிட்டராக இருந்த ராஜசேகரனின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதில் 928 பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் முழுவதும் சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான ரசீதுகள், செலவுகள் தொடர்பானவை. மேலும் அங்கு 1996-97-ம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல்செய்த வருமானவரி கணக்கில் சுதாகரன் திருமணத் துக்கு ரூ.29 லட்சத்து 92ஆயிரத்து 721 செலவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ஆவணமும் சிக்கியது.

 

சிவாஜி குடும்பம்

சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் சாட்சியத்தில்,''என் இளைய சகோதரி சாந்தியின் மகளின் திருமணத்துக்கான மொத்தச் செலவுகளையும் நானே ஏற்றுக்கொண்டேன். இதற்காக தனியாக வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.99 லட்சம் செலவு செய்துள்ளேன்''என கூறியுள்ளார். ஆனால் அவர் தாக்கல் செய்த வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலில் வங்கி கிளையின் முகவரி,முத்திரை இல்லை. அதில் அச்சாகி இருப்பதை நல்ல வெளிச்சத்தில்கூட படிக்க முடியவில்லை.இதை எப்படி ஓர் ஆதாரமாக ஏற்க முடியும்?

எனவே சுதாகரன் திருமணத் திற்கான பெரும்பாலான செலவுகள் போயஸ்கார்டன் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ்கள் அச்சடித்தது, வி.ஐ.பிகளுக்கு வழங்கியது, உணவுப் பொருள்கள், இனிப்புகள், வி.ஐ.பி-கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், திருமணம் நடந்த இடம், வரவேற்பு நடந்த சாலைகள், அலங்கார மின் விளக்குகள், பத்திரி கைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் ஆகியவை அனைத்தும் ஜெயலலிதா தரப்பே செய்த‌து.

 

அதே நேரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் சிலவற்றை ஏற்க முடியவில்லை.அடிப்படை ஆதாரங்கள், கூடுதல் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதாகரனின் திருமணத்துக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவாகியுள்ளது.''

இவ்வாறு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவில் சுதாகரனின் திருமணம் குறித்த‌ விசாரணையின்போது, நீதிபதி குன்ஹாவிடம் முன்வைத்த வாதத்தை, ஜெயலலிதா தரப்பு வழக்கறி ஞர்கள் நீதிபதி குமாரசாமியிடம் முன்வைக்க‌வில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மிகைப்படுத்தப்பட்ட திருமண மதிப்பீட்டை நாங்கள் ஆதாரத் துடன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம்.அதனால் நீதிபதி குன்ஹா அந்த மதிப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டார்.

 

ஆனால் அவராக கணக்கிட்டு சுதாகரனின் திருமணத்துக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவு செய்யப்பட்டதாக தீர்ப்பில் கூறியுள்ளார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் வரையறுக்கப்பட்ட இந்த தொகையை ஏற்காமல், வருமான வரித்துறை ஏற்றுக்கொண்ட ரூ. 29 லட்சத்து 92ஆயிரத்து 721 மட்டும் சுதாகரனின் திருமண செலவாக ஏற்க வேண்டும்''என கோரிக்கை விடுத்தனர்.

சற்று நேரம் புன்முறுவலுடன் இருந்த‌ நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ''சிவாஜிக்கும்,எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன தொடர்பு?''என கேட்டார். நீதிபதி ஏன்தான் அப்படி கேட்டாரோ?

 

-தீர்ப்பு நெருங்குகிறது..
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6995715.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-3... போயஸ் கார்டனில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள்..!
sxoshj.jpg
 

நல்லம்ம நாயுடு தலைமையிலான தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 7.12.1996 முதல் 12.12.1996 வரை 31&36 கதவு எண்கள் கொண்ட ஜெயலலிதா வின் போயஸ்கார்டன் வீட்டில் சோதனை நடத்தினர். கைப்பற்றப் பட்ட நகைகளையும் அலங்கார பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரி வாசுதேவன் `மெட்லர் எலெக்ட்ரானிக்' என்ற பிரத்யேக தராசு மூலம் மதிப்பிட்டார். இதை ஜெயலலிதாவின் ஆலோசகர்கள் பாஸ்கரன், விஜயன், வழக்கறி ஞர்கள் சேகர், சந்திரசேகர், ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேரடியாக கண்காணித்த‌ன‌ர். அதில் 31,போயஸ்கார்டன் வீட்டில் கைப் பற்றப்பட்ட‌ 23,113 கிராம் தங்கத்தின் அன்றைய விலை 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். தங்கத்தில் பதிக்கப்பட்டிருந்த வைரத்தின் அன்றைய விலை 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய்.

 

 

இதே போல 36, போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனை யில் 42 நகைப் பெட்டிகளில் 4,475 கிராம் தங்கம் இருந்தது. அதன் அன்றைய மதிப்பு ரூ.17 லட்சத்து 37 ஆயிரத்து 266 என்று பதிவு செய்யப்பட்டது. அதில் பதிக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு ரூ.47 லட்சத்து 61 ஆயிரத்து 816. மேலும், 1,116 கிலோ வெள்ளிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அன்றைய மதிப்பு ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் என குறிக்கப்பட்டது. ஆக மொத்தம் ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட‌ தங்க, வைர, வெள்ளி நகைக‌ளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 47 லட்சத்து 91 ஆயிரத்து 252 என மதிப்பிட‌ப்பட்டது.

 

1,116 கிலோ வெள்ளிப் பொருட் களை தனது ஆலோசகர் பாஸ்கரனிடம் வழங்குமாறு ஜெயலலிதா கோரியதால், அவரிடம் வழங்கப்பட்டது. மற்ற தங்கம், வைர நகைகளை நந்தனம் அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மகஜர் சொல்கிறது. இதனை அரசு தரப்பு சாட்சிகள் வாசுதேவன், ஸ்ரீஹரி, சாந்தகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர்.

 

1996-ம் ஆண்டு பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்ட 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை பெங்களூரு நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில் நீதிபதி குன்ஹா பிடிவாதம் காட்டினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் அக்கறை காட்டாததால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்கரனும் இறந்துவிட்டதால், தற்போது அந்த 1,116 கிலோ வெள்ளி யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கள், “1964-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா மட்டுமல்ல, அவரது தாயார் சந்தியாவும் திரைப்படங்களில் நடித்து சம்பாதித்துள்ளார். அதிமுகவில் இணைந்த பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வெள்ளி வாள், வெள்ளி கிரீடம், வெள்ளி செங்கோல் மற்றும் சில தங்க, வைர‌ நகைகளை பரிசாக வழங்கினார்.

 

1984-90 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக வும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயலலிதா இருந்துள்ளார். அப்போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு அன்பளிப்பாக 3,365 கிராம் தங்கம் வழங்கினர். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு வந்த அன்பளிப்பு நகைகளையும் சேர்த்து அவரிடம் 26,902 கிராம் தங்கம் இருந்தது. இதற்காக ஜெயலலிதா 1964-ம் ஆண்டில் இருந்து 1996 வரை அந்தந்த ஆண்டுகளில் முறையாக சொத்துவரியும், வருமான வரியும் செலுத்தியுள்ளார்.1992-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் இருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் என்பதை வருமான வரித்துறை தீர்ப்பாயமும் உறுதி செய்துள்ளது.

 

இதே போல `கீர்த்திலால் காளி தாஸ் & கம்பெனி'யைச் சேர்ந்த சுப்புராஜ் (அரசு தரப்பு சாட்சி 155), சாந்தகுமார் அளித்த வாக்கு மூலத்தில்,1991-க்கு முன்பு சசிகலாவிடம் 1,902 கிராம் தங்க, வைர‌ நகைகளும் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளார். த‌னது நகைகளுக்காக அந்தந்த ஆண்டு களில் வருமான வரியும் சொத்துவரியும் செலுத்தியுள்ளார். வழக்கு காலத்துக்கு முன்பே வாங்கப்பட்ட தங்க, வைர, வெள்ளி உள்ளிட்ட‌ நகைகளை எல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

 

 

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறும் தங்க,வைர‌ நகையின் அளவுக்கும், ஜெயலலிதா தரப்பு கூறும் நகைகளின் அளவுக்கும் இடையே 656 கிராம் வித்தியாசம் இருக்கிறது. இந்த தவறை தங்கத்தை மதிப்பிடுவதில் அனு பவம் இல்லாத சுங்கத்துறை அதிகாரி வாசுதேவன் செய்துள் ளார். அதே போல ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றிய பெரும்பாலான பூர்வீக பழைய நகைகளை எல்லாம் புதிய நகைகளாக மதிப் பிட்டுள்ளார். மேலும் நகைகள் வாங்கப்பட்ட தேதியைக் கொண்டு மதிப்பிடாமல், கைப்பற்றப்பட்ட1996-ம் ஆண்டு தங்க, வைர விலை நிலவரப்படி நகைகளை ம‌திப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்துக் களை மிகைப்படுத்தி காட்ட வேண் டும் என்பதற்காகவே, நகைகளில் பதிக்கப்பட்ட சாதாரண ஃபேன்ஸி கற்களை எல்லாம் விலையுயர்ந்த வையாக மதிப்பிட்டுள்ளனர். எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மதிப்பீட்டை நீதிமன்றம் ஏற்கக்கூடாது''என ஜெயலலிதா தரப்பில் வாதிட்டன‌ர்.

 

 

முன்பணம் வாங்கிய நடராஜன்

இதற்கு நீதிபதி குன்ஹா, “ஜெயலலிதாவின் நகைகளை மதிப்பிட்ட வாசுதேவன் தங்கத்தை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான‌ அனுபவம் மிக்கவர். அதனால் அவரது மதிப்பீட்டில் தவறுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தனது நகைகள் எல்லாம் பரிசுப் பொருளாகவும், வழக்கு காலத்துக்கு முன்பாகவும் வாங்கப்பட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது.1991-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட நகைகளுக்கு பழைய தேதியிட்டு வருமான வரி கட்டியுள்ளனர். சொத்துவரி, வருமான வரி கட்டியதால் மட்டுமே அவை நேர்மையான வழியில் வந்தவை என பொருள் கொள்ளமுடியுமா?

 

மேலும் அரசு தரப்பு சாட்சிகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை ஹரி, கீர்த்திலால் காளிதாஸ் & கம்பெனி' கடையை சேர்ந்த சுப்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில், “1986 முதல் 1991 வரை ஜெயலலிதா, சசிகலாவுக்கு நகைகளை விற்றோம். மேலும் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த 62 தங்க, வைர‌ நகைகளை மதிப்பிட்டு,அதன் அன்றைய விலை 1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய் என சான்றிதழ் கொடுத்தோம். இதே போல 1990-91-ம் ஆண்டு சசிகலாவின் தங்க வைர நகைகளை மதிப்பிட்டு ரூ.12 லட்சத்து 95 ஆயிரத்து 704 எனவும்,5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.27 ஆயிரத்து 468 எனவும் சான்றிதழ் அளித்தோம்'' என கூறியுள்ளனர்.

1991-92-ம் ஆண்டு சசிகலா தாக்க‌ல் செய்த சொத்துக் கணக்கில் தனது தங்க, வைர நகைகளின் மதிப்பு 1 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் சசிகலாவின் நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 174 ஆக‌ உயர்ந்துள்ளது.

 

இவ்வளவு நகைகள் சசிகலாவுக்கு எப்படி வந்தது? எங்கு வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்பதற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய‌ வில்லை. சசிகலாவின் கணவர் நடராஜ‌ன் மூலமாக நகைகள் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. 1991-ம் ஆண்டில் அரசு ஊழியராக இருந்த நடராஜ‌ன் ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கே அரசிடம் ரூ.3,000 முன்பணமாக பெற்றுள்ளார். 1991-க்கு முன்பு ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் 7,040 கிராம் தங்கம் மட்டுமே இருந்துள்ளது என தெரிய வருகிறது.

எனவே போயஸ்கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 27588 கிராம் தங்கத்தில்,20548 கிராம் தங்கம் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலக்கட்டத்தில் வாங்கப்பட்டது.1992-ம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி அதன் மதிப்பு ரூ.88 லட்சத்து 97ஆயிரத்து 324. அதில் பதிக்கப்பட்டிருந்த வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 820 ஆகும். ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பின் த‌ங்க,வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144'' என தனது தீர்ப்பில் குன்ஹா விவரித்துள்ளார்.

 

இவ்வளவு பரிசா?

மேல்முறையீட்டில் தங்க,வைர நகைகள் மீதான விசாரணையின் போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “ஜெயலலிதாவை சிறையில் அடைத்துவிட்டு, அவர் இல்லாத நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியது ஏன்? எதற்காக அவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? யாருடைய‌ உத்தரவின் அடிப்படையில் இப்படி சோதனை நடத்தப்பட்டது?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு பவானிசிங் மவுனமாக இருந்ததால் திமுக வழக்கறிஞர் சரவணன், “ஜெயலலிதாவின் ஒப்புதல் கடிதத்தின் பேரிலே சோதனை நடத்தப்பட்டது''என்றார்.

 

அதற்கு நீதிபதி, “போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பவர் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தை ஏற்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது தெரியுமா?'' எனக் கேட்டார். ஜெயலலிதாவின் தங்க, வைர, வெள்ளி நகைகளின் பட்டியலை நோட்டம் விட்ட நீதிபதி, “ஜெயலலிதாவுக்கு பரிசாக இவ்வளவு நகைகள் வந்ததா?''என கேட்டார்.

 

அதற்கு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், “தமிழர்கள் மிகவும் வித்தியாசமான குணாம்சம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, தங்களின் தலைவர் களுக்காக எதையும் செய்வார்கள். எம்ஜிஆரில் ஆரம்பித்து தற்போது ரஜினிகாந்த் வரை இதுதொடர் வதை பார்க்கலாம்.

இவ்வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது 300-க்கும் மேற்பட்ட‌வர்கள் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இந்நிலையில், தொண்டர்கள் அன்புப் பரிசாக வழங்கியதை எல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதாவின் சொத்தாக சேர்த்துள்ளது''என்றார்.

 

சற்று நேரம் மவுனமாக இருந்த நீதிபதி, “அண்ணா துரை, எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய திராவிட தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறேன். எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தவாறே தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தார் அல்லவா?''என மலரும் நினைவுகளை சற்று அசைப்போட்டார்.

 

1997-ம் ஆண்டு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு நகைகள் பற்றி அளித்த வாக்குமூலத்தையும் தற்போது வைக்கப்படும் வாதத்தையும் நீதிபதி குமாரசாமி ஒப்பிட்டுக் குறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

 

-தீர்ப்பு நெருங்குகிறது
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7002255.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி- 4: திராட்சைத் தோட்டமும் டி’குன்ஹாவின் மதிப்பீடும்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் குறித்து நீதிபதி டி'குன்ஹாவின் மதிப்பீடு மேல்முறையீட்டில் முரண்பட்ட விஷயமாக இருந்தது.

 

ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த ஜே.டி.மெட்லாவில் 11.35 ஏக்கர் நிலமும், பஷீராபாத் கிராமத்தில் 3.5 ஏக்கர் நிலமும் இருந்தது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் நடத்திய சோதனை விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் கதிரேசன் (அரசு தரப்பு சாட்சி 256) மற்றும் ரெங்கா ரெட்டி மாவட்ட தோட்ட கலைத்துறை இயக்குநர் கே.ஆர்.லதா (அரசு தரப்பு சாட்சி 165) மற்றும் உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரி சஞ்சய்குமார் (அரசு தரப்பு சாட்சி 233) நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

 

அவர்களது வாக்குமூலத்தில், ''ஜெயலலிதாவுக்கு சொந்தமான 14.5 ஏக்கர் திராட்சை தோட்டத்தில் 'அனாப் இ சாஹி’ திராட்சை கொடிகள் (காஷ்மீர் வகை) 580 இருந்தன. அவற்றின் வயது 15. மேலும் 4 வயதான 1266 விதையற்ற திராட்சை கொடிகள் பயிரிடப்பட்டிருந்தன.

இது தவிர 1 ஏக்கரில் 96 கொய்யா மரங்களும், வரப்புகளில் தென்னை, வாழை, பப்பாளி பழ மரங்களும் இருந்தன. மேலும் 1 ஏக்கரில் கத்தரி, பாகற்காய் மற்றும் ரோஜா பயிரிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 340 வருமானம் கிடைத்துள்ளது'' என்றனர்.

 

2 நாட்களில் அளக்க முடியுமா?

இதற்கு ஜெயலலிதா தரப்பு,''வருமானவரித்துறை தீர்ப்பாய சான்றிதழின்படி 1991-96 காலக்கட்டத்தில் திராட்சைத் தோட்டத்தில் இருந்து ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் வருமானமாக வந்துள்ளது. 5 ஆண்டு சாகுபடியை 2 நாட்களில் மதிப்பீடு செய்ய முடியுமா?'' என கேள்வி எழுப்பினர்

 

குன்ஹாவின் தனி மதிப்பீடு

இதற்கு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில்,''அரசு தரப்பு சாட்சிகள் கதிரேசன், கே.ஆர்.லதா, சஞ்சய்குமார் ஆகியோர் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் தொடர்பாக அளித்துள்ள மதிப்பீடுகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. தோட்டக்கலைத்துறை அதிகாரி கே.ஆர்.லதா ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 340 வருமானம் எனக்கூறும் நிலையில் மற்றொரு தோட்டக்கலைத்துறை அதிகாரி கொண்டாரெட்டி ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் ரூ.6 லட்சத்து ஆயிரத்து 380 ரூபாய் கிடைத்திருக்கும் என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

ஜெயலலிதா தனது திராட்சைத் தோட்ட வருமானமாக 1987-88-ல் ரூ.4.8 லட்சமும், 1988-89-ல் ரூ.5.5 லட்சமும், 1989-90-ல் 7 லட்சமும், 1992-93-ல் ரூ.9.5 லட்சமும் வருமான வரி செலுத்தியுள்ளார். இதை வருமான வரித்துறை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளன‌ர்.

திராட்சைத் தோட்டத்தில் 10 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெற்றதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அங்கு ஆண்டு வருமானம் ஓர் ஏக்கருக்கு ரூ.20,000 ரூபாய் என தெரியவருகிறது. எனவே 10 ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம். ஆக மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வருகிறது. இந்த தொகையே 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டம் மூலம் கிடைத்த வருமானமாக இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது'' என மதிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு ஜெயலலிதா தரப்பு மேல்முறையீட்டில், ''ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் தொடர்பான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீட்டை முற்றிலும் தவறானது என நீதிபதி டி'குன்ஹா ஒப்புக் கொண்டுள்ளார். 1974-ல் இருந்து 1996 வரை குறிப்பிட்ட ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த திராட்சை தோட்ட வருமானத்தை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த போது அவர்களது கோரிக்கையை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.

 

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த திராட்சை தோட்ட வருமானத்தை ரூ.52 லட்சத்து 50 ஆயிரத்தை உறுதி செய்வதற்காக 1999-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது எங்களது மதிப்பீட்டை ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை நீதிபதி குன்ஹா ஏற்றுக் கொள்ளாமல் போனது ஏன்?’ என்று வாதிட்டனர்.

 

அதற்கு நீதிபதி குமாரசாமி, ''வருமானவரி தீர்ப்பாயம் அளிக்கும் சான்றிதழ்களை குற்றவியல் வழக்குகளில் ஏற்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார். சிறிது நேரம் தனது ‘டேப்லெட்டில்’ அலசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், ''வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முடிவு குற்றவியல் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக பிஹார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மீதான வழக்கில் வ‌ருமான வரித் துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை பாட்னா உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, ‘‘வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை முக்கிய ஆதாரமாக கருதலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள‌து'' என்றார்.

 

அதற்கு நீதிபதி,''ஐந்து ஆண்டுகளில் ஐந்து ஏக்கர் திராட்சை சாகுபடியில் ரூ.52.50 லட்சம் வருமா? அப்படியென்றால் அப்போது ஒரு கிலோ அனாப் இ சாஹி திராட்சை எவ்வளவு?'' என்றார். அதற்கு யாரிடமும் பதில் இல்லை.

 

-தீர்ப்பு நெருங்குகிறது

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7006095.ece?homepage=true
 

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு டைரி-5: 'நமது எம்ஜிஆர்' பத்திரிகைக்கு ரூ.14.1 கோடி வருமானம் வந்ததா?
 

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு காலகட்டத்தில் நால்வரின் மொத்த வருமானம் ரூ.9.34 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சொன்னது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்போ தங்களுக்கு ரூ.32.24 கோடி வருமானம் வந்தது என்றும், இதில் ரூ.14.1 கோடி நமது எம்ஜிஆர் பத்திரிகையின் 'டெபாசிட்' திட்டம் மூலம் வந்ததாகவும் தெரிவித்தது.

 

இதற்கு அரசு தரப்பு முன்னாள் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா,''சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு (அரசு தரப்பு சாட்சி 259) தலைமையிலான த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சசிகலாவுக்கு சொந்தமான சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் அலுவகத்தில் 7.12.1996 முதல் 12.12.1996 வரை சோதனை நடத்தினர். அதில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் உள்ள வங்கி கணக்குப் புத்தக்கங்கள், வரவு செலவு கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை கைப்ப்பற்றினர்.

 

அப்போது நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு சந்தா,டெபாசிட் வசூலித்தது தொடர்பான எந்த கணக்கு புத்தகமும் கிடைக்கவில்லை. மேலும் சந்தாதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி காசோலை, வரைவோலை, ரொக்கமாக பெற்றதற்கான ரசீதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நமது எம்ஜிஆர் பத்திரிகை ஊழியர்களிடம் விசாரித்த போது டெபாசிட் திட்டம் தொடர்பாக எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.

 

சசிகலா மீது 14.6.1996 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போதோ, 4.6.1997 அன்று இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதோ நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் தொடர்பாக கூறவில்லை. வழக்கின் விசாரணையின் போது திடீரென வந்து தனக்கு நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் மூலம் ரூ.14.1 கோடி வருமானம் வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது.

 

'நமது எம்ஜிஆர் டெபாசிட்' திட்டத்தை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்காக 1997-க்கு பிறகு வருமான வரி செலுத்தியுள்ளனர். எனவே நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வருமானமாக வந்ததாக கூறப்படும் ரூ.14.1 கோடியை நீதிமன்றம் ஏற்கக்கூடாது'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 

சசிகலா தரப்பு பதில்

இதற்கு சசிகலா தரப்பு, ''அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக வெளிவரும் 1991-96 காலக்கட்டத்தில் நமது எம்ஜிஆர் பத்திரிகையின் வளர்ச்சி நிதிக்காக டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி வாசகர்கள் ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.18 ஆயிரம் வரை செலுத்தினால், முறையாக நமது எம்ஜிஆர் பத்திரிகை 5,10, 15 எண்ணிக்கையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து 9,000 பேர் டெபாசிட் திட்டத்தில் இணைந்தனர்.

இதன் மூலம் நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வருமானமாக ரூ.14.1 கோடி வந்தது. இதற்கு 1997-ம் ஆண்டு, அதாவது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பா கவே வருமான வரி செலுத்தப் பட்டுள்ளது. மேலும் நமது எம்ஜிஆர் டெபாசிட் திட்டத்தில் இணைந்து பத்திரிகை பெற்றதற்காக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா (குற்றவாளிகள் தரப்பு சாட்சி 61),அதிமுக நிர்வாகிகள் ஆதி ராஜராமன்(குற்றவாளிகள் தரப்பு சாட்சி 31) உட்பட 29 பேரும், சசிகலாவின் ஆடிட்டர்கள் சவுந்திரவேலன், நடராஜன் (குற்றவாளி தரப்பு சாட்சி 2) ஆகியோ ரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்'' என வாதிட்டது.

 

 

ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள்

நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில்,''நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் திட்டத்தின் மூலமாக ரூ14.1 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக சசிகலா சொல்கிறார்.ஆனால் டெபாசிட் வசூலித்த‌தற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.1998-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.14.1 கோடிக்கான ஆதாரத்தை கேட்டபோது, நமது எம்ஜிஆர் பத்திரிகையின் பொறுப்பை கவனித்த மேலாளருக்கு முறையாக கணக்குகளை பராமரிக்க தெரியவில்லை'' என்றனர்.

இதே போல மீண்டும் வருமான துறை அதிகாரிகள் 2001-ம் ஆண்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆதாரங்களை கோரியபோது,''நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் வசூலித்த ரசீதுகளை சென்னை தி.நகர் அருகே கொண்டு சென்றோம். அப்போது எங்களது காரில் இருந்து அந்த ரசீதுகள் திருட்டு போய்விட்டது. இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளோம்''என்றனர். இதனால் சசிகலாவின் வருமான கணக்கை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இந்நிலையில் 2012-ம் ஆண்டு திடீரென சசிகலா தரப்பு,''நமது எம்ஜிஆர் டெபாசிட் திட்டத்திற்கான ரசீதுகளும், கணக்கு புத்தகங்களும் கிடைத்துள்ளன''எனக்கூறி அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அந்த ரசீதுகளில் பெரும்பாலனவற்றில் நிறுவனத்தின் பெயரோ, முத்திரையோ இல்லை என்றும், சில ரசீதுகள் மழையில் நனைந்து எழுத்துகள் அழிந்து காணப்படுகின்றன என்றும், ஒரு சில ரசீதுகள் புத்தம் புதிய காகிதங்களாக தென்படுகின்றன என்றும் எதிர் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டது. அதே போல நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டத்தில் இணைந்தது தொடர்பாக வாக்குமூலம் அளித்த 31 பேரும் எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இதையெல்லாம் தாண்டி நமது எம்ஜிஆர் பத்திரிகை உண்மையிலே டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் அனுமதி பெற வேண்டும். மேலும் தனது பத்திரிகையின் ஆண்டு லாப நஷ்ட கணக்கை ஆண்டுக்கொரு முறை பத்திரிகையில் வெளியிட வேண்டும். இதுபோன்ற ஆதாரங்களை தாக்கல் செய்து நிரூபிக்காததால் ரூ.14.1 கோடியை நமது எம்ஜிஆரின் வருமானமாக ஏற்கமுடியாது'' என தீர்ப்பில் கூறியுள்ளார்.

 

கருணாநிதி காரணமா?

மேல்முறையீட்டு விசாரணை யின் போது ஜெயலலிதா தரப்பு, “1990-91-ல் சந்தா மூலமாக நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.13.54 கோடி வருமானம் வந்தது. இதற்கான வருமான ஆதாரத்தை ஆய்வு செய்த‌ வருமான அதிகாரிகள்,கணக்கு சரியாக இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். இதே போல டெபாசிட் திட்டத்தின் மூலம் 1991-96 காலக்கட்டத்தில் ரூ.14.1 கோடி வருமானம் வந்தது. இதற்கான முறையான ஆவணங்களை தாக்கல் செய்ததால் காலம் கடத்தி வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டது. நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டத்தில் இணைந்த 31 பேரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அந்த சாட்சிகளை அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்தும்,வேறு ஆதாரங்களை தாக்கல் செய்தும் நமது எம்ஜிஆர் பத்திரிகையின் டெபாசிட் திட்டம் பொய்யானது என நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் நீதிபதி குன்ஹா எங்களது வருமானத்தை ஏற்கவில்லை'' என வாதிட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி, ''ஜெயலலிதா 'நமது எம்ஜிஆர்' பத்திரிகை ஆரம்பித்தது போல,'திமுக தலைவர் கருணாநிதி ஏதேனும் பத்திரிகை ஆரம்பித்தாரா?''என கேட்டார். அதற்கு திமுக வழக்கறிஞர், 'கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தாலும், முதலில் அவர் ஒரு பத்திரிகையாளர்.தற்போது 92 வயதிலும் இடைவிடாமல் 'முரசொலி' செய்தித்தாளை நடத்திவருகிறார்''என்றார்.

அதற்கு நீதிபதி,''ஆக மொத்தத் தில் ஜெயலலிதா பத்திரிகை ஆரம்பிப்பதற்கும் கருணாநிதி தான் காரணமா?''என புன்முறுவ லுடன் கேட்டார். இறுக்கமான விசார ணைக்கு நடுவே கலகலப்பான சிரிப்பலை அப்போது எழுந்தது.

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF5-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82141-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/article7010208.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-6: அன்பளிப்புக்கும் லஞ்சத்துக்கும் இடையே மெல்லிய கோடு
 

 

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக‌ இருந்தபோது அவரது மொத்த சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 ரூபாயாக இருந்தது. அப்போது வருமானம் 9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 53.56 ரூபாய், செலவு 11 கோடியே 56 லட்சத்து 56 ஆயிரத்து 833.41 ரூபாய் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆவணங்கள் சொல்கின்றன.

 

இதற்கு ஜெயலலிதா தரப்பு, “1991-96 காலக்கட்டத்தில் 32 தனியார் நிறுவனங்கள், ஹைதராபாத் திராட்சை தோட்டம், பிறந்தநாள் அன்பளிப்பு மூலமாக ரூ.34.24 கோடி வருமானமாக வந்தது. வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்ட இந்த வருமானத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக ஆதாரப்பூர்வ வருமானத்தை இருட்டடிப்பு செய்துள்ளது” என சொல்கிற‌து.

“தனிநபருக்கு வரும் அன்பளிப்புகளை வருமானமாகவோ,சொத்தாகவோ கருத முடியாது என்பதால்,ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அன்பளிப்பாக வந்த பணத்தை வழக்கில் சேர்க்கவில்லை.மேலும் அன்பளிப்புகளை சட்ட‌ப்பூர்வ வருமானமாகவோ,ஆதாரப்பூர்வ வருமானமாகவோ கருத முடியாது என்பதால் அதனைப் பற்றி வழக்கு ஆவணங்களில் குறிப்பிடவில்லை''என விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு ஜெயலலிதா தரப்பு, ‘‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 1992-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் அன்பளிப்பாக ஏராளமான பொருட்களை வழங்கினர். பிறந்தநாள் அன்பளிப்பாக 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் காசோலையாகவும் வங்கி வரைவோலையாகவும் அனுப்பினர். மேலும் வெளிநாட்டில் இருந்து டாலராக 77 லட்சத்து 52 ஆயிரத்து 59 ரூபாய் வந்தது.

இதற்கு 1993-ம் ஆண்டு ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்தார்.இதை அவரது சட்டப்பூர்வ‌ வருமானமாக ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்துக்கு தனியாக வரி விதித்தனர். அதையும் ஜெயலலிதா முறையாக செலுத்தினார்’’ என்று வாதிட்டது.

 

அன்பளிப்பும் லஞ்சமும் ஒன்றே

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ‘‘பிறந்த நாள் பரிசாக வந்த 2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 71 ரூபாயை வருமானமாக ஏற்கவில்லை. அன்பளிப்பாக வந்ததை வருமானமாக கருதுவது நியாயமில்லை என்பதால் இரண்டையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. ஏனென்றால் பிறந்தநாள் பரிசுகள் ஒன்றும் சட்டவிரோதமானவை அல்ல.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்பளிப்பு பணத்தை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு உட்பட 30 அதிமுக நிர்வாகிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள் குறைந்தபட்சமாக ரூ.500-ல் இருந்து ரூ.5 லட்சம் வரை வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியதை ஜெயலலிதா தரப்பு நிரூபித்துள்ளது.

 

அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்பாக கொடுத்த பொருட்கள் உண்மை என தாக்கல் செய்துள்ள ஆதாரங்களில் சில ஓட்டைகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி பொது ஊழியரான(முதல்வர்) ஜெயலலிதா பல்வேறு நபர்கள் அளிக்கும் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வது முற்றிலும் தவறானது. இதை உச்ச நீதிமன்றம், ‘பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதையும்,அன்பளிப்புகள் வாங்குவதையும் தடை செய்துள்ளது. பொது ஊழியர் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டால்,லஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கியுள்ள தடைகளை ‘அன்பளிப்பு' என்ற பெயரில் எளிதாக‌ கடந்து விடுவார்கள்''எனக் கூறியுள்ளது. எனவே முதல்வரான ஜெயலலிதா அன்பளிப்பு பெற்றது சட்டப்படி குற்றம் ஆகும்'' என கூறியுள்ளார்.

 

மெல்லிய கோடு

அன்பளிப்பு தொடர்பான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை மேல்முறையீட்டின்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் கடுமையாக எதிர்த்தார். ‘‘தமிழக அரசியல் கலாச்சாரப்படி தொண்டர்கள் தங்களது தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது மிக சாதாரணமான ஒன்று. அந்த வகையில் ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளின்போது ரூ.2.92 கோடி வங்கி வரைவோலையாக வழங்கினர். ஜெயலலிதா நடிப்பதை நிறுத்தி முழு நேர தொழிலாக அரசியலில் ஈடுபட்டு வருவதாலும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியின் பெயராலும் அன்பளிப்பை தவிர்க்கவில்லை.

 

தனது முழுநேர தொழிலான அரசியலின் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, 1993-ம் ஆண்டு வ‌ருமான வரி செலுத்தினார். இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது வருமான வரித்துறை தீர்ப்பாயம், ‘ஜெயலலிதாவின் அன்பளிப்பு பணத்தை வருமானமாக ஏற்றுக்கொள்வதாக' சான்றிதழ் அளித்தது.

மேலும் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்பு வழங்கிய 75 பேரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், 50 சதவீத நன்கொடையாளர்களை வருமான வரித்துறை தீர்ப்பாயமும் குறுக்கு விசாரணை செய்துள்ளது.

 

ஊழல் தடுப்பு சட்டத்தின்படியும்,இந்திய தண்டனை சட்டம் 165-ம் பிரிவின் படியும் சட்ட விரோதமாக வந்த பணத்தை மட்டுமே வருமானமாக ஏற்க முடியாது.இது தவிர‌ வருமான வரித்துறையின் 28-வது விதிமுறை, ‘அன்பளிப்பாக வரும் பணத்திற்கு வரி செலுத்தினால் சட்டபூர்வ வருமானமாக கருதப்படும்' என தெளிவாக சொல்கிறது. இதனை நீதிபதி குன்ஹா பரிசீலிக்காமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது.

பரிசுகளும்,அன்பளிப்புகளும் சட்டத்துக்கு புறம்பானவை என எந்த சட்டமும் சொல்லவில்லை. லஞ்சத்துக்கும் பரிசுக்கும் அன்பளிப்புக்கும் இடையே மெல்லிய கோடு இருக்கிறது'' என்றார்.

 

அதற்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ‘‘அதிமுக தொண்டர்கள் இவ்வளவு பரிசுப் பொருட்களை வழங்கி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது''என கூறியவர், ‘திமுக வழக்கறிஞர் சரவணனிடம், ‘‘உங்களது கட்சி தலைவர் கருணாநிதி இதேபோல‌ அன்பளிப்பு வாங்குவாரா?''என வினவினார்.அதற்கு அவர், ‘‘எங்கள் தலைவர் அன்பளிப்பு வாங்கமாட்டார்'' என்றார்.

அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கள், ‘‘கருணாநிதி பிறந்தநாளின்போது உண்டியல் வைத்து பணம் வசூல் செய்வார்கள். கருணாநிதி அறிவியல் பூர்வமாக‌ குற்றம் புரிகிறவர் என சர்க்காரியா கமிஷனே சான்றிதழ் அளித்துள்ளது''என கோரஸாக கூறினர். அப்போது கர்நாடக உயர் நீதிமன்றம் தமிழகத்தின் அரசியல் மேடையாக மாறியது.

மேலும்..
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF6-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article7014368.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-7: 20 சதவீத தள்ளுபடி அளித்த நீதிபதி குன்ஹா

 

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.66.65 கோடி. இதே காலகட்டத்தில் நால்வருக்கும் சொந்தமான 19 கட்டிடங் களின் மொத்த மதிப்பு ரூ.28.17 கோடி. இதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டனில் 2 வீடுகள், ஹைதராபாத் ஜே.டி.மெட்லா பண்ணை வீடு ஆகிய 3 கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.13.64 கோடி என்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் கேஸ் டைரி புத்தகம்.

 

இது தொடர்பாக அரசு தரப்பில், ‘போயஸ்கார்டன் வீட்டின் உள்பகுதியில் 35 எம்.எம். 2 புரொஜெக்டர்கள் கொண்ட மினி தியேட்டர் உட்பட ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு வசதியான அறைகள் கட்டப்பட்டுள்ளன. 125 கிலோ வாட், 62.5 கிலோவாட் அளவுள்ள 2 ஜெனரேட்டர்களும்,1.5டன் முதல் 2.5 டன் எடையுள்ள 39 குளிர்சாதனங்களும் இருந்தன.

போயஸ்கார்டன் வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் மிகப்பெரும் சிற்ப கலைஞர்கள் செதுக்கப்பட்ட விலை யுயர்ந்த அலங்கார ம‌ர சிற்பங்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட 21 மரப் பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி. இதே போல 118 எலக்ட்ரானிக் பொருட்களின் மதிப்பு ரூ 1.5 கோடி. இது தவிர 10 கிரவுண்ட் 330 சதுர அடி தரையிலும், அதன் சுவரிலும் விதவிதமான மார்பிள், விலை உயர்ந்த கிரானைட்,தேக்குமரம் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களின் கட்டுமான மதிப்பு ரூ.13.64 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரங்கள், சாட்சியங்க‌ளுடன் நிரூபித் துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு ஜெயலலிதா தரப்பு வழக் கறிஞர் பி.குமார், ‘‘கிரானைட், மார்பிள், தேக்கு, மர சிற்பங்கள் ஆகியவற்றின் விலையை 100 மடங்கு வரை அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சந்தையில் கேட்டு அறியப் பட்டதாக கூறும் பொருட்களின் மதிப்பு 1991-96 வரையிலான விலைதான் என்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை. க‌ட்டிடங்களை கட்டிய பொறி யாளர்களையோ, வடிவமைப்பாளர் களையோ குறுக்கு விசாரணை செய்ய வில்லை. இதில் இருந்து விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் அப்போதைய திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாக கட்டுமானத்தின் மதிப்பீடு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது.

எனவே அரசு தரப்பின் கட்டுமான மதிப்பீட்டை தள்ளுபடி செய்து, வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை கருத்தில் கொள்ள வேண்டும்'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 

20 சதவீத தள்ளுபடி

இதற்கு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ‘‘ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை மட்டும் பொதுப்பணித் துறையின் விலைப் பட்டியல்படி க‌ணக்கிட்டுள்ளனர்.பொதுப்பணித் துறையிடம் விலைப்பட்டியல் இல்லாத கிரானைட், மார்பிள்,தேக்கு போன்ற பொருட்களை 1999-ம் ஆண்டு சந்தை விலைப்படி கணக்கிட்டுள்ளது தெரிய வருகிறது.ஆனால் அந்த விலை தான் உண்மையான விலை என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ச‌மர்ப்பிக்கவில்லை.

 

கட்டிட மதிப்பீட்டை பொறுத்தவரை அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு இரண்டிலும் நிறைய குறைபாடுகள் இருக்கிறது.எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொதுப்பணித்துறை பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்த மதிப்பில் 20 சதவீதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது'' என தெரிவித்துள்ளார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு மேல்முறையீட்டில், ‘‘ஜெயலலிதாவின் கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் அடங்கிய‌ வல்லுநர் குழு அப்போதைய திமுக அரசால் நியமிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவின் கண் காணிப்பின் கீழ் செயல்பட்ட அந்த குழு சுதந்திரமாக செயல்படவில்லை.அந்த குழுவுக்கு ‘ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிடும் குழு' என வெளிப்படையாக பெயரிடப்பட்டதில் இருந்தே,அவர்கள் திமுக அரசுக்கு சாதகமாக நடந்துக்கொண்டது பற்றி அறிந்துகொள்ள முடியும்.

 

கட்டுமான மதிப்பீடு குறித்து ம‌திப்பீட்டு குழுவில் இடம்பெற்ற அரசு தரப்பு சாட்சிகள் வேலாயுதம், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோரிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர்கள், ‘பொதுப்பணித்துறை விலைப்பட்டியல் இல்லாத அலங்காரப் பொருள்கள், கிரானைட், மார்பிள், எலக்ட் ரானிக் பொருட்கள் பற்றி சென்னை கோயம் பேட்டில் நூறு அடி சாலையில் உள்ள ஒரு கடையில் விலை விசாரித்தோம்.

அங்கு பெறப்பட்ட விலை நிலவரம் குறித்த ரசீதுகளை சாலையிலே கிழித்துப் போட்டுவிட்டோம்'' என தெரிவித்துள் ளனர். கட்டுமான மதிப்பீட்டை உண்மை யான ஆதாரத்துடன் நிரூபிக்க உதவும் ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?

 

இதே போல குற்றவாளிகள் தரப்பு சாட்சி மும்பையை சேர்ந்த மார்பிள் மாடசாமி அளித்துள்ள சாட்சியத்தில், ‘‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை புதுப்பிக்க ஒரு சதுர அடி மார்பிள் ரூ.90-க்கு விற்றேன். அதனை மும்பையில் இருந்து சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் என நிறுவன செலவிலே லாரி மூலம் அனுப்பினேன்'' என உரிய ஆவணத்துடன் தெளிவாக கூறியுள்ளார். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மார்பிள் விலையை மலை அளவுக்கு உயர்த்தி கணக்கிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துகளை மிகைப்படுத்திக் காட்டி குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீடு செய்துள்ளது. இதில் அப்போதைய ஆளும் கட்சியின் அழுத்தம் வெளிப்படை யாகவே தெரிகிறது. இந்திய சாட்சிய சட்டப்படி, வழக்கு விசாரணையின் போது சுதந்திரமாக செயல்படாத அதிகாரிகளின் சாட்சியங்களை சாட்சிய மாக ஏற்கக்கூடாது. எனவே இந்த மதிப்பீட்டு குழு சமர்ப்பித்த அனைத்து விலைப்பட்டியலையும் ஏற்க கூடாது''என வாதிடப்பட்டது.

 

மேலும் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு, ‘‘பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் மதிப்பீடு தவறானது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அரசு தரப்பு சாட்சியங்களை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. மாறாக அந்த மதிப்பீட்டில் 20% தள்ளுபடி செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எவ்வித ஆதாரமும், ஆவணமும், சாட்சியமும் இல்லாமல் நீதிபதி குன்ஹா தானாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார். சட்டவிதிகளை மீறி ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எப்படி நீதிபதியால் முடிவுக்கு வர முடிந்தது. நீதிபதி குன்ஹாவின் 20 சதவீத தள்ளுபடி கணக்கு ஒரு புதிய‌ வழக்கை ஆரம்பிக்கும் வகையில் இருக்கிறது''என வாதிடப்பட்டது.

 

சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி,''இது குற்றவியல் வழக்கு. வருமான வரி வழக்கல்ல. வருமான வரித்துறை தீர்ப்பாயம் பற்றி பேசிக்கொண்டிருப்பது உங்களுக்கு உதவாது. நீங்கள் பேசுவதை எல்லாம் குறிப்பெடுக்க நான் ஆடிட்டர் அல்ல. இதுவரை நீங்கள் 20 சதவீத ஆதாரத்தைக்கூட என்னிடம் கொடுக்க வில்லையே?'' என்றார்.

 

ஜெயலலிதா தரப்பு மவுனமாக இருந்ததால், ‘‘உங்களிடமாவது ஆதாரம் இருக்கிறதா?''என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டார். அதற்கு,‘‘வழக்கின் முடிவில் அதனை தாக்கல் செய்கிறேன்''என்றார். ஆனால் இறுதிவாதத்தின் போது கட்டுமான மதிப்பீடு குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

- மேலும்..
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF7-20-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/article7018304.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-8: 32 நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்ட 3,000 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்?
 

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பல நீதிபதிகள் விசாரித்துள்ளனர். அவர்களில் மல்லிகார்ஜுனையாவும், குன்ஹாவும் முக்கியமானவர்கள். தீர்ப்பு வழங்கியது டி’குன்ஹா என்றால் பெரும்பான்மை விசாரணையை முடித்தது மல்லிகார்ஜுனையா. மல்லிகார்ஜுனையாவுக்குப் பிறகு பாலகிருஷ்ணா, சோமராஜு, முடிகவுடர் ஆகிய நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். இறுதியாக டி’குன்ஹா வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.

 

விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெயலலிதா முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தமிழகம் முழுவதும் 197 இடங்களில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.22.52 கோடி.1991-க்கு முன்னாள் வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட வருமானம் இல்லாத மூன்று பேரால், எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு கிராமம் அளவுக்கு சொத்துக்கள் வாங்கப்பட்டது?'' எனக் கேள்வியெழுப்பினார் அவர்.

 

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகிய மூவரும் குடியேறினர்.அப்போது சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்‌ஷன்,மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ்,ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் டிவி பிரைவேட் லிமிடெட் என 32 தனியார் நிறுவனங்களை தொடங்கினர். இந்த நிறுவனங்களுடன் மூவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்தனர்.

தனியார் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைக்காகவும், நிலம் வாங்குவதற்காகவும் பல்வேறு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர். அந்த வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர்.

 

இதே போல தோட்டக்கலைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் (அரசு தரப்பு சாட்சி 71) அளித்துள்ள வாக்குமூலத்தில், “சுதாகரன் நிர்வாக இயக்குநராக இருந்த ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக 1994-ம் ஆண்டு தூத்துகுடி, திருநெல்வேலியில் மீரான்குளம், சேரகுளம், வல்லகுளம் ஆகிய கிராமங்களில் 1,163 ஏக்கர் உட்பட ஒரு ஏக்கர் ரூ. 16 ஆயிரம் விலையில் மொத்தம் 1,300 ஏக்கர் வாங்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

 

மற்றொரு அரசு தரப்பு சாட்சி சார்பதிவாளர் ராஜகோபால், “சசிகலா நிர்வாக இயக்குநராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட வெலகாபுரம், கருங்குழிப்பள்ளம், ஊத்துக்காடு, கலவை ஆகிய கிராமங்களில் 850 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சிறுதாவூரில் இசையமைப்பாளர் கங்கை அமரனிடம்(அரசு தரப்பு சாட்சி 40) இருந்து 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.

 

இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரிலும்,மூவரும் நிர்வாக இயக்கு நராக இருந்த 32 தனியார் நிறுவனங்களின் பெயரிலும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக் காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சோழிங்கநல்லூர், செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என பல மாவட்டங்களில் 3,000 ஏக்கர் நிலம்,கட்டிடம்,கடைகள் வாங்கப்பட்டுள்ளது அரசு தரப்பில் தக்க ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என ஆதாரங்களுடன் வாதிட்டார்.

 

நிறுவனங்களின் சொத்து

இதற்கு மூவர் தரப்பிலும், “குறிப்பிட்ட 32 தனியார் நிறுவனங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டுமே நிர்வாக இயக்குநர்களாக இருந்தனர். அதன் பிறகு மூவரும் பங்குதாரர்களாக மட்டுமே அங்கம் வகித்தனர். வாங்கப்பட்ட சொத்துகள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இயக்குநருக்கோ, பங்குதாரருக்கோ சொந்தமானவை அல்ல.

 

நிலம் அதிகமாக வாங்கப்பட்டதாக சொல்லப்படும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் பி.டி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அந்த நிறுவனத்தை சுதாகரனுக்கு சொந்தமானது எனக்கூறியுள்ளது. ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்களை அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை.

இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் கிருஷ்ணா ரெட்டி, அணில் குமார் ரெட்டி ஆகியோருக்கு சொந்தமானது. ஆனால் சசிகலாவுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. எனவே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை இவ்வழக்கில் இணைத்தது ஏற்கத்தக்கதல்ல'' என வாதிட்டனர்.

 

ஜெயலலிதாவின் பணம்

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “அரசுத்தரப்பு சாட்சி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியத்தின்படி சசிகலாவின் ஒரே வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் மோட்டார் சைக்கிள் வாங்கவும், வீடு வாங்கவும் கடன் வாங்கியுள்ளார்.1988-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்த நடராஜனுக்கு மன்னார்குடி அருகே மூன்றரை ஏக்கர் நிலமும், வீடும் மட்டுமே இருந்தது. சசிகலாவுக்கு வேறு எதுவும் சொந்தமாக இருக்கவில்லை.

அரசுத் தரப்பு சாட்சி பாலகிருஷ்ணனின் சாட்சியத்தின்படி,1992-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்த சுதாகரன் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரம் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். 1992-ம் ஆண்டுக்கு பிறகு சுதாகரனுக்கு வேறு வழியில் வருமானம் வந்ததாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.

 

இதே போல இளவரசிக்கும் பெரிய அளவில் வருமானமும், பூர்விக சொத்தும் இல்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக இளவரசி சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில் ஆண்டு வருமானம் ரூ 48 ஆயிரம் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட 32 நிறுவனங்களுக்காக வாங்கப் பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நில பத்திர பதிவில் வாங்கப்பட்டவரின் பெயரோ, நிறுவனத்தின் முத்திரையோ பயன்படுத்தப்படவில்லை.ஆனால் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.மூலதனமே இல்லாத `ரப்பர் ஸ்டாம்ப்’ நிறுவனங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?

எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரின் பெயரிலும் உள்ள சொத்துகள் அனைத்தும் அவர்கள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய பிறகு குவித்த சொத்துகள்தான் என்பது தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் பெயரில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது''என குறிப்பிட்டுள்ளார்.

 

6 நிறுவனங்கள் மட்டும் மேல்முறையீடு

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து 32 தனியார் நிறுவனங்களில் 6 தனியார் நிறுவனங்கள் மட்டுமே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டின. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்தது சட்டப்படி தவறு. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பு உள்ளது.மற்ற 30 நிறுவனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. இவ்வழக்கில் இருந்து தனியார் நிறுவனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்''என வாதிட்டனர்.

 

அப்போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “தனியார் நிறுவனங்களின் சொத்துகள் 1997-ம் ஆண்டு முடக்கப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்களை விடுவிக்கக் கோரி தனியார் நிறுவனங்களின் சார்பில் நீதிமன்றத்தை உடனடி யாக நாடாதது ஏன்? திடீரென 1999-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்களை விடுவிக்க மனு போடப்பட்டது.அந்த மனு தள்ளு படி செய்யப்பட்டது.அதன்பிறகு அமைதியாக இருந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் 2014-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடியானது. சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் என்றால் இவ்வளவு அலட்சியமாக தனியார் நிறுவனங்கள் நடந்துக்கொள்ளுமா?'' என்றார். அதற்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான எந்த வழக்கறிஞரும் பதில் சொல்லவில்லை.

 

-இன்னும் வரும்

 


http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF8-32-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3000-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7027101.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-9: சசிகலா, சுதாகரன், இளவரசி மிரட்டி வாங்கிய சொத்துகள்
 

 

சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதாடியபோது, ‘முதல் வராக இருந்த‌ ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி சசிகலா, சுதாகரன், இளவரசி இன்னும் பல‌ர் செய்த அதிகார துஷ்பிரயோகத்தை சகித்து கொள்ள முடியாது. இவ்வழக்கில் கண்ணீருடன் சாட்சியம் அளித்திருக்கும் அப்பாவி நில உடைமையாளர்களின் வாக்குமூலத்தை வாசிக்கும்போது மனம் வலிக்கிறது, இவையெல்லாம் அவருக்கு தெரியாமல் நடந்தவையா?''என ஆவேசமாகக் கேட்டார். அதை அப்படியே நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் எதிரொலித்தார்.

 

 

பிரபல இயக்குநரும் இசையமைப் பாளருமான கங்கை அமரன் (அரசு தரப்பு சாட்சி 40), அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ‘‘திரைப்பட துறையில் இருப்பதால் கதை எழுதுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 22 ஏக்கர் நிலம் வாங்கினேன். எனது பெயரிலும் மனைவி மணிமேகலையின் பெயரிலும் இருந்த நிலத்தை விற்குமாறு சுதாகரன் என்னை மிரட்டினார். நான் மறுத்ததால், ‘‘முதல்வர் அழைக்கிறார்.போயஸ்கார்டனுக்கு வாருங்கள்' என என்னை அழைத்தார். அப்போது அங்கிருந்த சசிகலா, நிலத்தை விற்குமாறு மிரட்டி என்னை தாக்கினார். இதனால் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை அரசு நிர்ணயித்த விலையைவிட மிக குறைவாக ரூ.9.80 லட்சத்துக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்'' என சாட்சியம் அளித்துள்ளார்.

 

 

அரசு தரப்பு சாட்சிகள் திருத்துவ ராஜ், செல்வராஜ் ஆகியோர் கூறியிருப் பதாவது:

 

“பையனூரில் சசிகலாவின் பெயரில் கட்டப்பட்ட பங்களாவையும் அதனை சுற்றியுள்ள நிலத்தையும் 1996-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பொதுப் பணித்துறை பொறியாளர் சொர்ணம் (அரசு தரப்பு சாட்சி 107) தலைமையிலான குழுவினர் மதிப்பீடு செய்தனர். பையனூர் பங்களாவில் இருந்த 10 அறைகளும் மார்பிள், கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரும் படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள் தேக்குமரத்தில் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 என மதிப்பீடு செய்தனர்.

 

இதேபோல இளவர‌சிக்கு சொந்தமாக சிறுதாவூரில் உள்ள‌ பங்களாவையும் நிலத்தையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சோதனையிட்டன‌ர். அங்கிருந்த நீச்சல் குளம், 2 வட்டக் கிணறுகள், மீன் வளர்ப்பதற்கான 6 தொட்டிகள், 12 அறைகள், ஊழியர்கள் தங்க 4 அறைகள் இருந்தன. பங்களாவின் தரையில் மார்பிள் பதிக்கப்பட்டிருந்தன. கலைநயத்துடன் கூடிய இந்தோ இத்தாலியன் வொயிட்மார்பிள் சுவர் களில் பதிக்கப்பட்டிருந்தன. மெட்டாலிக், செராமிக் டைல்ஸ் பதிக்க‌ப்பட்ட குளியலறை, ரூபி ரெட் கிரானைட் கற்களால் அழகூட்டப்பட்ட பால்கனி, தேக்குமர கதவு, ஜன்னல்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 என மதிப்பிடப்பட்டது” என திருத்துவ ராஜும், செல்வராஜும் கூறியுள்ள‌னர்.

 

கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் கிரேக் ஜோன்ஸ்(அரசு தரப்பு சாட்சி 89) அளித்த சாட்சியத்தில் கூறியிருப்பதாவது: ‘‘கொடநாட்டில் எனக்கு சொந்தமான 898 தேயிலை தோட்டத்தை ஆடிசன் குழு, சவுத் இந்தியன் ஷிப்பிங் ஆகிய நிறுவனங்கள் ரூ.9.5 கோடிக்கு வாங்க முயற்சித்தன. அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த குண்டர்கள், ‘எஸ்டேட்டை ராமசாமி உடையாருக்கு தான் விற்க வேண்டும்' என மிரட்டினர். இதையடுத்து சூலூர் போலீஸ் நிலையத்தில் 25-10-1993 அன்று புகார் கொடுத்தேன். இருப்பினும் சசிகலா குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ராமசாமி உடையாருக்கு ரூ.7.5 கோடிக்கு விற்றேன். அடுத்த 6 மாதத்திலேயே அவர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ரூ.7.6 கோடிக்கு விற்றார். இதில் அரசு நிர்ணயித்த விலைகூட கிடைக்காததால் எனக்கு நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.

 

மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு

வழக்கு விசாரணையின்போது எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:

சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் நிலத்தை மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சொர்ணம், ரவிசங்கர், திருத்துவராஜ், செல்வராஜ் உள்ளிட்டோர் அப்போதைய திமுக அரசால் நியமிக்கப் பட்டவர்கள். எனவே தாங்கள் பணியாற் றும் அரசுக்கு சாதகமாக செயல்பட வேண் டும் என்பதற்காக கட்டிடத்தின் மதிப்பை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்துள்ளனர்.

 

1991-96 காலகட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி வாங்கிய அனைத்து சொத்துகளுக்கும் காசோலைகள் மட்டுமே வழங்க‌ப்பட்டன. தமிழக‌ லஞ்ச ஒழிப்புத் துறையினரின் தூண்டுதலால் மூவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‌வில்லை. வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரிப்பதற்கு முன் குற்றம் சுமத்தப்படுபவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரின் விளக்கத்தை பெற்ற பிறகே குற்றப் பத்திரிகை தயாரிக்க வேண்டும். இவ்வழக்கில் அத்தகைய விளக்கத்தை சசிகலா, சுதாகரன், இளவரசியிடம் கேட்க வில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிமுறைக‌ளை விசாரணை அதிகாரி நல்லம நாயுடு மீறியுள்ளார்''என மூவர் தரப்பிலும் வாதிடப்பட்டது.

 

ஜெயலலிதாவுக்கு தெரிந்தே நடந்தது

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “அரசுத் தரப்பு சாட்சிகளின் மூலம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு ம‌ன்னார்குடி அருகே மூன்றரை ஏக்கர் நிலமும் வீடு மட்டுமே சொத்தாக இருந்தது. சுதாகரன் 1992-ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான சான்றிதழின்படி அவரது வருமான‌ம் ரூ.44 ஆயிரம் என தெரிகிறது. அதே ஆண்டு சுதாகரன் மயிலாப்பூர் கனரா வங்கியில் சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கினார். அப்போது அவரது சேமிப்பு ரூ.105 என வங்கி மேலாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். இதேபோல இளவரசி யின் ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரம் என அவரது 1993-ம் ஆண்டு வருமான சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

அரசு தரப்பு சாட்சி கங்கை அமரன் தனக்கு சொந்தமான பையனூர் பங்களாவை வாங்கியது சசிகலாதான் என நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார். இதேபோல சிறுதாவூர் பங்களா, நிலம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களின் வீடு தேடி பத்திரப் பதிவாளர்கள் சென்றுள்ளனர். பத்திரத்தில் வாங்குபவரின் பெயரை குறிப்பிடாமல் வெறுமனே காலியாக இருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி நிலத்தை வாங்கியுள்ளனர் என்பதை அரசு தரப்பு சாட்சிகள் ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், கிரேக் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நிரூபித்துள்ளன‌ர்.

 

ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக சொத்து வாங்கி குவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலின்படி 4 பேரும் 36, போயஸ்கார்டன் வீட்டில் வசித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தன் வீட்டில் இருக்கும் தனது நண்பர்க‌ளின் நடவடிக்கை ப‌ற்றி தெரியாது என்றால் நம்ப முடியுமா?

‘‘சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உங்களுடன் வசிப்பது ஏன்?'' என்று நீதிபதி மல்லிகார்ஜூனையா ஜெயலலிதாவிடம் கேட்டபோது, ‘‘இந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்ப மில்லை''என பதில் அளித்துள்ளார்.

 

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வரும் அன்பளிப்புகள் மற்றும் முதல்வரின் பெயரைப் பயன்படுத்தி தவறான வழிகளில் சேர்க்கும் பணம், சொத்துகள் அனைத்தும் சசிகலாவின் வழியாகவே போயஸ்கார்டனுக்கு வந்துள்ளன. அதன் மூலம் சொத்துகளை வாங்கி குவிக்கும் வேலையில் சுதாகரனும் இளவரசியும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் பொது ஊழியரான ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டள்ளனர்''என நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒரே வீட்டில் வசிப்பது ஏன்?

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘‘1991-96 காலகட்டத்தில் பையனூர் பங்களாவை சசிகலா கட்டவில்லை. ஏற்கெனவே கங்கை அமரனின் மனைவி மணிமேகலையால் கட்டப்பட்ட பங்களாவை சசிகலா சட்டப்பூர்வமாக வாங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் செல்வம் (குற்றவாளி தரப்பு சாட்சி),‘‘1991-க்கு முன்பே மணிமேகலை பையனூர் பங்களாவுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார்'' எனக்கூறி அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பையனூர் பங்களாவை வாங்கிய சசிகலா அதில் எந்த புதிய கட்டிடமும் கட்டவில்லை. இருப்பினும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பழைய கட்டிடத்துக்கு ரூ. 1 கோடி 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 என மதிப்பீடு செய்திருப் பதை தள்ளுபடி செய்ய வேண்டும்

 

கொடநாடு எஸ்டேட்டை வாங்குவதற் காக சசிகலா வங்கியில் ரூ.3.5 கோடியும் 8 நிறுவனங்கள் மூலம் ரூ.2.20 கோடியும் பெற்றுள்ளார். இதற்கான ஆதார மாக அனைத்து ஆவணங்களும் வருமான வரித்துறையின் சான்றிதழும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா 1996-க்கு பிறகு கட்டப்பட்டது. அங்கு வாஸ்துவுக்காக கட்டப்பட்டிருந்த மீன் தொட்டிகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நீச்சல் குளம் என மதிப்பீடு செய்துள்ளனர். சிறுதாவூர் பங்களா வழக்கு காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே மிகைப்படுத்தி மதிப் பிடப்பட்டுள்ளது.

 

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் டி.வி, ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் வருமானம் வந்துள்ளது. அந்த வ‌ருமானங்களை வழக்கில் காட்டினால் மூவருக்கும் சாதகமாக அமைந்துவிடும் என்பதால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மறைத்துள்ளது. நமது எம்ஜிஆர் நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 400 வருமானம் வந்ததை விசாரணை அதிகாரி நல்லம நாயுடு ஒப்புக்கொண்டுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

வருமான வரித்துறையில் தாக்கல் செய்த கணக்குப்படி சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் போதிய வருமானம் கிடைத்தது. அந்த வருமானத்தின் அடிப்படையில் மூவரும் நிலம் வாங்கினர் என ஜெயலலிதாவின் ஆடிட்டர் சவுந்திரவேலன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால் நீதிப‌தி குன்ஹா,‘‘நால்வரும் கூட்டுசதி செய்ததாக தண்டனை வழங்கியுள்ளார். ஆனால் ஜெயலலிதா குற்றம் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த அடிப்படை ஆதாரமும் காட்டப்படவில்லை. சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம் (அரசு தரப்பு சாட்சி 182) அளித்த சாட்சியத்தில் ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து மூவ‌ருக்கும் பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என கூறியுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்'' என வாதிட்டனர்.

 

சற்றுநேரம் மவுனமாக இருந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ‘‘ஜெயலலிதாவும் சசிகலாவும் உறவினர்கள் இல்லை. சசிகலாவுக்கு திருமணமாகிவிட்டது. சுதா கரனுக்கும், இளவரசிக்கு தனித்தனியே குடும்பங்கள் இருந்தன. இருப்பினும் எதற்காக நால்வரும் ஒரே வீட்டில் இருந்தனர்?'' என கேட்டார்.

அதற்கு கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சசிகலாவின் வழக் கறிஞருமான ஆர்.பசன்ட், ‘‘ஜெயலலிதா சசிகலாவின் நட்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நட்பு. சுதாகரனும், இளவரசியும் சசிகலாவின் உறவினர்கள் என்பதால் ஒரே வீட்டில் வசித்தனர். நண்பர்கள் ஒரே வீட்டில் வசிப்பது குற்றம் என எந்த நாட்டு சட்டமும் சொல்லவில்லையே?'' என வாதிட்டார்.

 

- மேலும்
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF9-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7030790.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு டைரி-10: புற்றீசலாய் புறப்பட்ட 32 தனியார் நிறுவனங்களும், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளும்..!
 

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.66.65 கோடி மதிப்பிலான மொத்த சொத்தில் சரிபாதி சொத்துமதிப்பு 32 தனியார் நிறுவனங்களின் மூலம் இவ்வழக்கில் இணைந்தவை தான்.

 

2014-ம் ஆண்டு தனியார் நிறுவனங் களின் சொத்துகளை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய போது, `சொத்துக் குவிப்பு வ‌ழக்கு பதிவு செய்த காலத்தில் இருந்து நிறுவனங்களின் சொத்துகள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப் போது சொத்துகளை விடுவிக்க கோருவது ஏன்? சென்னையில் விசா ரணை நடந்துகொண்டிருந்த போது தூங்கிக் கொண்டிருந்தீர்களா?'' எனக் கூறி அபராதம் விதித்தார் நீதிபதி குன்ஹா.

 

இது தொடர்பாக அரசு தரப்பில், “1991-ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் என்ற இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். ஜெயலலிதா முதல்வரான பிறகு 1991-1996 கால கட்டத்தில் 32 தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலாவின் உறவினர்கள் பலர் முக்கிய பொறுப்புகளை வகித்தனர்.

சசிகலா, சுதாகரன் நிர்வாக இயக்குநர் களாக இருந்த மெட்டல் கிங், மார்பிள் மார்வெல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் 1993-ல் பதிவு செய்யப்பட்டது. அதற்கு `ஃபார்ம்-1' படிவம் கூட சமர்ப்பிக்காமலே அதிகாரிகள் பதிவு செய்துள்ளன‌ர். அதே ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஞ்ச நேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனம் தமிழக அரசின் பாடநூல்களை அச்சிட்டு வ‌ந்தது. இந்த நிறுவனத்தை சசிகலாவின் சகோ தரர் சுந்தரவதனம் நிர்வகித்து வந்தார்.

 

 

1994 ஜனவரி 24-ம் தேதி அன்று ஒரே நாளில் ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ்.லீஸிங் & மெயிண்டனன்ஸ், ஜெ.எஸ்.ஹவுஸிங் டெவலப்மெண்ட், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ.கான்ட்ராக்ட்டர்ஸ் & பில்டர்ஸ், கிரீன் ஃபார்ம் ஹவுஸ் ஆகிய 6 தனியார் நிறுவனங்கள் தொடங்கப் பட்டன. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். இதே போல 1995 பிப்ரவரி 2-ம் தேதி அன்று சசிகலா உள்ளிட்ட மூவரும் சேர்ந்து 10 புதிய நிறுவனங்களை தொடங்கினர்.

1994-ம் ஆண்டு ஜூன், ஜூலை,ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்மெண்ட், சிக்னோரா எண்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், இந்தோதோஹா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. இதிலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் இயக்குநர்களாக இருந்தனர்.

 

இவ்வாறு தொடங்கப்பட்ட 32 தனியார் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 3000 ஏக்கர் வேளாண் நிலங்களும், சென்னையை சுற்றியுள்ள இடங்களில் 3 லட்சத்து 916 சதுர அடி நிலமும், கட்டிடங்களும், தொழிற்சாலைகளும்,வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கிடையே ரூ.19.33 கோடி பண பரிவர்த்தனை நடைபெற்றது என்பதை வங்கி மேலாளர்கள் வித்யாசாகரும், அருணாசலமும் உறுதி செய்துள்ளனர்.

 

தனியார் நிறுவனங்களை பதிவு செய்தது தொடர்பாக அரசு அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், வேலாயுதம், சொர்ணம் உள்ளிட்டோரும், ஐஏஎஸ் அதிகாரிகள் சோ.அய்யர், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சிகளாக சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிறுவனங்களின் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளும் ஜெயலலிதாவுக்காக பினாமி சொத்துகளாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடந்தையாக இருந்துள்ளனர்'' என குற்றம்சாட்டப்பட்டது.

 

ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை

இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், “ஜெயலலிதாவுக்கும் 32 தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில்லை. தனியார் நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற பண பரிவர்த்தனைகள், சொத்துகள் தொடர்பான எதுவும் ஜெயலலிதாவுக்கு தெரியாது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மிகைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தனியார் நிறுவனங்களை இவ்வழக்கில் இணைத்துள்ளது.

 

ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை 1991-ல் முதல்வர் ஆவதற்கு முன்பாகவே ஜெயலலிதா, சசிகலாவுக்கு ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துவிட்டார்.

எனவே அந்த நிறுவனத்திலும், அதனுடன் நேரடி தொடர்பில் இருந்த நமது எம்ஜிஆர், சசி எண்டர்பிரசைஸ் ஆகிய நிறுவனங்களில் ந‌டந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது. அந்த நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை, சொத்துகள் வாங்கியது என எதுவும் தெரியாது'' என வாதிட்டார்.

எப்படி ஏற்க முடியும்?

 

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தொடங்கிய 32 தனியார் நிறுவனங்களும் அவர்கள் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் குடியேறிய பிறகே முழுவீச்சில் இயங்கின. ஒரே வீட்டில் இருப்பவர்கள் வாங்கிக் குவிக்கும் சொத்துகளை தனக்குத் தெரியாது என ஜெயலலிதா சொல்வதை ஏற்க முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தனது வீட்டில் இருக்கும் சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?

சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ரூ.1 கோடி கொடுத்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு ஜெயலலிதா தனது பெயரில் ஷூயூரிட்டி வழங்கியுள்ளார். இதன்மூலம் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து, தமிழகம் முழுவதும் சொத்துகள் வாங்கியதை அறிந்துள்ளார்'' என கூறியுள்ளார்

குத்தகை வழங்கலாமா?

 

மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு, “பொது ஊழியரான ஜெயலலிதா சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் முறைகேடாக சொத்து குவித்ததாக நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்துள்ளார்.

 

இது 1988-ல் திருத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்த சட்டத்தின்படி, ஒருவரின் ரத்த உறவோ, மனைவியோ, திருமணமாகாத மகளோ மட்டும் தான் பினாமியாக கருத முடியும். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த உறவுகள் அல்ல.

இதே போல சசிகலா உள்ளிட்டோர் சொத்துகள் வாங்க ஜெயலலிதா பணம் கொடுத்ததாக கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ஒரு ரூபாய் கூட பணப்பரிவர்த்தனை நடைபெறவில்லை. இதில் இருந்து நால்வரும் ஜெயலலிதாவின் பினாமி இல்லை என தெரியவருகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு தக்க ஆதாரத்துடன் நிரூபிக்காத போது நீதிபதி குன்ஹா எப்படி பினாமி என அறிவித்தார்? நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.

 

மற்ற மூவர் தரப்பில், “சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தது. இதையெல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உள்நோக்கத்துடன் வருமானமாக ஏற்கவில்லை'' என வாதிட்டனர்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “முதல்வரான ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனின் நிறுவனத்துக்கு அரசு பணியை குத்தகை கொடுப்பது சட்டப்படி நியாயமா? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களால் பதில் சொல்ல முடியாமல் திணறியதை திமுக வழக்கறிஞர்கள் ரசித்தனர்.

 

-மேலும்..
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF10-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-32-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7038773.ece

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் , இந்த வழக்கை சலிக்காமல் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்...! :)

 

கங்கை அமரனையும் காய்ச்சி எடுத்துள்ளார்கள்...! :o

  • தொடங்கியவர்

நன்றி நவீனன் , இந்த வழக்கை சலிக்காமல் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்...! :)

 

கங்கை அமரனையும் காய்ச்சி எடுத்துள்ளார்கள்...! :o

 

18 வருடம் தவணை போட்டு இழுத்தபோது அதோடு சம்மந்த பட்டவர்களுக்கு வராதா சலிப்பா :o:D  எனக்கு வந்திடப்போகுது இந்த செய்தியை இணையப்பதில் :)

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-11: பஜன்லால் மீதான வழக்கும், நல்லம்ம நாயுடுவின் விசாரணையும்

 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் முயற்சித்த போதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அமைத்த அடித்தளத்தை யாராலும் அசைக்க முடியவில்லை என சொத்துக்குவிப்பு வழக்கை ஆதியில் இருந்து கவனித்துவரும் அதிகாரி ஒருவர் இறுதி விசாரணை நாளில் பெருமிதமாகக் கூறினார்.

 

“1964-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுக மான ஜெயலலிதா 1972 வரை பிரபல நடிகையாக வலம் வந்தார். 1971-ல் அவரது தாயார் சந்தியா மறைந்த போது ஜெயலலிதாவின் பெயருக்கு `கலாநிகேதன்' என்ற இசைப் பள்ளியும், போயஸ் கார்டன் வீடும், ஹைதராபாத் நகரில் ஒரு வீடும்,14.5 ஏக்கர் நிலமும் மாற்றப்பட்டது. 1987-ல் அவரது மொத்த அசையா சொத்துகள் ரூ.7.5 லட்சமும், வங்கி இருப்பு ரூ.1 லட்சமும் இருந்தன. 1989-ல் எம்பி-யாக இருந்தபோது 4 கார்கள் (மதிப்பு ரூ.9,12,129) 1 ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கினார்.1991-ல் தமிழக முதல்வராவதற்கு முன் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2 கோடியே 1 லட்ச‌த்து 83 ஆயிரத்து 957.53 ரூபாயாக இருந்தது.

 

1.7.1991 முதல் 30.4.1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றார். ஆனால் அவரது சொத்து மதிப்பு பல மடங் காக உயர்ந்திருக்கிறது. வ‌ருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக ஆளுநர் சென்னா ரெட்டியின் அனுமதியை பெற்று சுப்பிரமணியன் சுவாமி 14.6.1996 அன்று சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து நீதிபதி ராமமூர்த்தி, ஜெயலலிதா மீதான புகாரை பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி லத்திகா சரணுக்கு உத்தரவிட்டார். திமுக ஆதரவு அதிகாரி யான லத்திகா சரண் இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என ஜெயலலிதா நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் 4.9.1996 அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் வி.சி.பெருமாளை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில் 18.9.1996 அன்று வி.சி.பெருமாள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு 4.6.1997 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

சென்னை தனி நீதிமன்றத்தில் 1997-ம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை அரசியல் தலையீடுகளின் காரணமாக 18.11.2003 அன்று பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சாட்சி கள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம் பெறுதல், இறுதி வாதம் என எல்லாம் முடிந்து 27.9.2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்'' என சொத்துக்குவிப்பு வழக்கின் டைரி சொல்கிறது.

ஜெயலலிதா தரப்பில், “சுப்பிரமணியன் சுவாமியால் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு அரசி யல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தொடுக்கப் பட்டது. அப்போதைய ஆளுநர் ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் தன்னிச்சையாக அவர் மீது வழக்கு தொடர அனுமதித்தார். அவரது முடிவில் உள்நோக்கம் இருந்ததால் இவ்வழக்கு பதிந்தது செல்லாது.

 

 

இதே போல திமுக ஆட்சியில் பணியாற்றிய வி.சி.பெருமாள் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். இவர் அதற்கு முன்பு எந்த காவல் நிலையத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவர். எனவே அரசியல் அழுத்தத்தின் காரணமாக வி.சி.பெருமாள் பதிந்த இவ்வழக்கு செல்லாது.

ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கை ஜோடிக்க வேண்டும் என்பதற்காக விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்கு உடனடியாக 2 பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

 

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்தார் என்றால் பொது ஊழியரான அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். பொது ஊழியர் இல்லாத சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய் தனர். இதே போல மூவரும் பங்குதாரர்களாக இருந்த 32 தனியார் நிறுவனங்களையும் இவ் வழக்கில் இணைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரிடம் அடிப்படையாக எவ்வித விசாரணை யும் நடத்தாமல் நல்லம்ம நாயுடு தன்னிச்சை யாக செயல்பட்டார்.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துகளையும் மதிப்பீடு செய்தவர் கள் 100 மடங்கு வரை மிகைப்படுத்தி மதிப்பிட் டுள்ளனர். இவ்வழக்கில் ஆரம்ப புள்ளியில் இருந்து இறுதி புள்ளி வரை அரசியல் உள் நோக்கம் கலந்திருக்கிறது.எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “பொது ஊழிய ருக்கு எதிராக வழக்குத் தொடுக்க ஆளுநருக்கு அனுமதி கொடுக்க முழு அதிகாரம் இருக்கிறது.

 

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண். எம்.எஸ். 963 மற்றும் சான்று ஆவணம் 2308,2309 படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் காவல் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய வி.சி.பெருமாளுக்கு காவல் ஆய்வாளர் தகுதியும் அதிகாரமும் வழங்கப் பட்டது. எனவே அவருக்கு குற்றம்சாட்டப்பட்ட வரை கைது செய்யவும் விசாரிக்க‌வும் அதிகாரம் இருக்கிறது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற விசாரணை அமைப்புக்கு முழு அதிகாரம் இருப்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

 

நல்லம்ம நாயுடுவின் நியமனம் சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் ஒப்பு தலின்படியே நடந்துள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிந்ததும் செல்லும். ஏனெனில் மூவரும் இயக்குநராக இருந்த தனியார் நிறுவனங்களில் பின்ன‌ணியில் ஜெயலலிதா இருந்துள்ளார். அதே போல இவ்வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்ததும் செல்லும்.

 

இவ்வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிரிகளால் தொடுக்கப்பட்டது என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, ‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் மட்டும் அல்ல,நீதிமன்றத்திலும் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பொறுப்பு இருக்கிறது.ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது அதை தடுக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எதிர்க்கட்சியினருக்கு முழு உரிமை இருக்கிறது'என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே இவ்வழக்கு விசாரணையின் மீது ஜெயலலிதா தரப்பு முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

 

பஜன்லால் வழ‌க்கு

இதற்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், “சுப்பிரமணியன் சுவாமியின் புகாரை ஏற்ற சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, இதனை விசாரிக்க லத்திகா சரணை நியமித்தார்.குற்றவியல் நடைமுறை சட்டப்படி விசாரணை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு நீதிமன்றம் ஆணை வெளியிட முடியாது. எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பப் புள்ளியிலேயே விதிமுறை மீறல் நடந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதான புகாரை ஐஜி., எஸ்.பி, ஆகிய உயர் பதவிகளில் உள்ள அதிகாரி மட்டுமே விசாரிக்க அதிகாரம் இருக்கிறது. துணை காவல் கண்காணிப்பாளரான நல்லம்ம நாயுடுவுக்கு முதல்வர் மீதான வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை.

 

நல்லம்ம நாயுடு திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாலே 2006-ம் ஆண்டு அவருக்கு திமுக அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.

கடந்த 1991-ம் ஆண்டு ஹரியானா முதல்வர் பஜன்லால் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டது. முதல்வர் பதவியில் இருந்த பஜன்லால் மீதான புகாரை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கும் குறைந்த பதவியில் இருந்த அதிகாரி விசாரித்தார். அந்த அதிகாரி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை யை அடிப்படையாக கொண்டு வழக்கு நடைபெற்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் தகுதி குறைந்த அதிகாரி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி அந்த வழக்கையே தள்ளுபடி செய்தது. அதே போல் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்''என்றார்.

 

அதற்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “இவ் வழக்கில் அரசியல் அழுத்தங்கள் இருந்திருந் தாலும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இவ்வளவு வலுவான வழக்கை உருவாக்க முடியாது. முதல் கட்டத்திலே விதிமுறை மீறல் நடந்திருந்ததால் இவ்வழக்கு 18 ஆண்டு காலம் வரை நீண்டு இருக்குமா?” எனக் கேள்வியெழுப்பினார்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF11-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7042903.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-12: தீர்ப்பெழுத தினமும் 18 மணி நேரம் உழைக்கும் நீதிபதி
 

 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று கவனித்து கொண்டிருக்கிறது.18 ஆண்டுகளாக நீண்ட இவ்வழக்கை தினமும் 18 மணி நேரம் ஆராய்ந்து தீர்ப்பை நிதானமாக எழுதி கொண்டிருக்கிறார் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி.

1991-1996 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக்குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது.1997-ல் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தொடங்கிய வழக்கு விசாரணை 2003-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஆவணங்கள் மொழிப்பெயர்ப்பு, சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம், இரு தரப்பு வாதம் எல்லாம் முடிந்து கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வெளியானது.

 

 

நீதிபதி குன்ஹா தனது 1,136 பக்க தீர்ப்பில்,''ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 முறைகேடான வழிகளில் சம்பாதித்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா தரப்பின் வருவாய் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாகவும், செலவு 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாயாகவும் இருந்துள்ளது. இதன்படி பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்தது ஊழல் தடுப்புச்சட்டம் 13 (i)(e) பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.

இதே போல ஜெயலலிதா தனது சகாக்களான‌ சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் நிரூபணமாகி உள்ளது.

சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் ஜெயலலிதா குற்றம் புரிய உடந்தையாக இருந்துள்ளனர். எனவே நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கிறேன். நான்கு குற்றவாளிகளுக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கிறேன்''என குறிப்பிட்டுள்ளார்.

 

 

கூட்டுச்சதிக்கு ஆதாரமில்லை

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜெயலலிதா தரப்பு,''ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது, சாட்சிகள் விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 தனியார் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக சொத்துகள் இருந்தன. அந்த சொத்துகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை இருக்கிறது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மொத்த சொத்தையும் ஒன்றாக மதிப்பீடு செய்து வழக்கு தொடுத்துள்ளது. அதே போல நீதிபதி குன்ஹாவும் நால்வரின் சொத்தையும் ஒன்றாக கருதி தீர்ப்பு எழுதி இருப்பது தவறானது.

1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த வருமானத்துக்கும், சேர்த்த சொத்துகளுக்கும், செலவுக்கும் முறையான வருமான வரி செலுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது நால்வரும் தங்களது வருமானத்துக்கு உட்பட்டு சொத்துகள் வாங்கியதாக வருமான வரித் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது.

நால்வரின் சொத்தும் தனியாக வாங்கப்பட்டது என்பதால் பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிக்கவில்லை என்பது நிரூபணம் ஆகும். எனவே ஊழல் தடுப்பு சட்டம் 13(1) (ஈ) பிரிவின்படி ஜெயலலிதாவை தண்டிக்க முடியாது.

அரசு தரப்பில் கூட்டுச்சதியை தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் கூட்டுச்சதியை நிரூபிக்கவில்லை. கூட்டுச்சதிக்கு ஆதாரம் இல்லாத போது குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் தண்டிக்க முடியாது.

 

அதே போல த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை இவ்வழக்கில் சுதாகரனின் திருமண செலவு, கட்டிட மதிப்பீடு,விவசாய வருமான மதிப்பீடு,நில மதிப்பீடு ஆகியவற்றில் நடைபெற்ற குளறுபடிகளை 99 சாட்சிகள் மூலம் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம். இதேபோல 1992-ல் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வந்த ரூ.2.15 கோடி, நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு டெபாசிட் மூலம் வந்த ரூ.14.1 கோடி, விவசாயம், கட்டிடங்கள் மூலம் வந்த வருமானம் மற்றும் செலவுகளை 384 சான்று ஆவணங்கள் மூலம் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும்''என வாதிட்டனர்.

 

அரசுத் தரப்பு வாதம்

அரசு வழக்கறிஞர் பவானிசிங்,ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தது, சசிகலா,சுதாகரன்,இளவரசியுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தொடர்பாக‌ 6 நாட்கள் அரசு தரப்பு சாட்சியங்களை வாசித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்தான் மணி கணக்கில் விவரித்தார்.

இறுதி நாளன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தமும், குணசீலனும் தயாரித்த 200 பக்க எழுத்துப்பூர்வ அறிக்கை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “1991-க்கு முன் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ரூபாயாக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 1996-க்கு பின் 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 ரூபாயாக அதிகரித்திருந்தது.1991-1996 காலகட்டத்தில் நால்வரின் மொத்த வருமானம் ரூ.9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 53.56,செலவு 11 கோடியே 56 லட்சத்து 56 ஆயிரத்து 833.41 ரூபாயாக இருந்துள்ளது.

 

இவை யாவும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 தனியார் நிறுவனங்கள் கூட்டுச்சதி செய்து, முறைகேடாக வாங்கப்பட்டவை. இவ்வழக்கில் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம், இறுதிவாதம் ஆகியவற்றை பதிவு செய்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நால்வரையும் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கினார். அதே தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்''என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீவிரம்

18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 41 நாட்களில் விசாரித்து முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

.தற்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 9 பீரோக்களில் இருந்த 67 ஆயிரம் பக்க ஆவணங்களையும்,ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட 2.15 லட்சம் பக்க ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பை நிதானமாக எழுதி வரும் குமாரசாமி, அதற்காக தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

வியக்கத்தக்க வாசகர்களின் வரவேற்பு

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஜெயலலிதா வழக்கு தொடர்பான இத்தொடரை எவ்வித ஆதரவும் பாராபட்சமும் இன்றி நீதிக்கான பொதுமேடையாகவே,'தி இந்து' வெளியிட்டது.

நடுநிலைமையைக் கடைப்பிடித்த அதேசமயம், நீதித்துறை எல்லையையும் மீறாமல் கவனமாகக் கையாண்டது.

'ஜெயலலிதா சொத்துக்குவிப்பு டைரி' தொடர் 5 முக்கிய அம்சங்களை முன்வைத்து எழுதப்பட்டது. ஜெயலலிதா தரப்பு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றச்சாட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு முன் வைத்த மறுப்பு வாதம், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு, அதை ஆழமாக மறுத்த ஜெயலலிதா தரப்பின் மேல்முறையீட்டு வாதம், இறுதியாக அதனை நிராகரிக்கக் கோரும் அரசு தரப்பு வாதம் ஆகியவை வரிசையாக அடுக்கப்பட்டன.

இந்த தொடருக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பும், எழுப்பிய சந்தேகங்களும், ஆக்கப்பூர்வ விவாதங்களும் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தன. கடிதம், இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக எழுப்பப்ப‌ட்ட கேள்விகள் வாசகர்களின் புத்திசாலித்தனத்தை பறைச்சாற்றின. இத்தகு வாசகர்களைப் பெற்றதற்காக ‘தி இந்து’ பெருமை கொள்கிறது.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF12-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/article7051953.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.