Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை! - மார்க்ஸ். அ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

மார்க்ஸ். அ.

lee-kuan-yew-3-sized-233x300.jpg

நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவரது இறுதி அஞ்சலி அமைந்தது.

தமிழகத்திலும் கூட ஆங்காங்கு தன்னிச்சையாக மக்கள் ஃப்லெக்ஸ் போர்டுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீவிரத் தமிழ்த் தேசியவாதியாகிய வைகோ கண்ணீர் ததும்ப அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். “நல் ஆளுகைக்கான” விளம்பர மாதிரியாக (poster boy of good governance) ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, ‘வால் ஸ்ட்ரீர் ஜர்னல்’ ஆகியவை லீயைப் புகழ்ந்தன.

அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுடனும், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே போன்ற குறை வளர்ச்சி நாடுகளுடனும் லீயின் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சியை ஒப்பாய்வு செய்தது ஒரு இதழ். சிங்கப்ப்பூரின் வளர்ச்சி அமெரிக்காவுடையதைக் காட்டிலும் விரைவானது, அதிகமானது எனத் தரவுகளுடன் நிறுவியது அந்த இதழ் (கிரகாம் ஆலிசன், ‘தி அட்லான்டிக்’, மார்ச் 30, 2015). கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிப்பு வீதம் 2 சதம் என்றால் சிங்கப்பூரின் வீதம் 6 சதம். உலகத் தொழிற் போட்டிக்கான குறியீட்டில் (Economic Forum’s Global Competitiveness Index) இரண்டாவதாகவும், உலக அளவில் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் வரிசையில் (Economist Intelligence Unit’s ranking) முதலாவதாகவும் லீயின் சிங்கப்பூர் இன்று மதிப்பிடப்படுகிறது. எல்லா Credit Rating நிறுவனங்களும் இன்று சிங்கப்பூருக்கு AAA அந்தஸ்து வழங்குகின்றன என்பவற்றை எல்லாம் இதழ்கள் எழுதி மாய்ந்தன.

பொருளதாரத்தில் மட்டுமா இந்த முன்னேற்றம். இல்லை மக்கள் நலம், ஊழலற்ற ஆளுகை, குற்றச் செயல்கள் இன்மை ஆகிய அம்சங்களிலும் இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள நாடு சிங்கப்பூர்.

1965ல் ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் (infant-mortality rate) 2003ல் வெறும் 2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவு. உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை (World’s healthiest country) முதன்மைப்படுத்துகிறது. குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ள வகையிலும் லீயின் சிங்கப்பூர் முன்னிற்கிறது. சிங்கப்பூரில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைக் காட்டிலும் 24 மடங்கு குறைவு. லீயின் மரணத்தை ஒட்டி இப்படி நிறையத் தரவுகள் விரிவான ஆதாரங்களோடு ஊடகங்களில் மிதந்தன. சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

***

இந்தப் பெருமைகள் அனைத்தும் லீ குவான் யூவையே சாரும் என்பதிலும் யாருக்கும் கருத்து மாறுபாடில்லை. 1950 – 60 களில், இரண்டாம் உலகப் போர் மற்றும் இனக் கலவரங்களால் நசிந்து கிடந்த இந்தப் பிரிட்டிஷ் காலனியை, வெறும் 718.3 சதுர கி.மீ பரப்பளவே உள்ள இந்தச் சின்னத் தீவை, வளர்ச்சியற்றிருந்த ஒரு துறைமுகக் கிராமத்தை, இப்படிப் பல அம்சங்களில் உலகத் தரத்தில் முதலான நகர அரசாகவும் (City state), உலகின் மிகச் சுறுசுறுப்பான துறைமுகங்களில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வந்து வழக்குரைஞராகப் பணி புரிந்து கொண்டிருந்த ஹாரி லீ குவான் யூ 1959 ல் தொடங்கிய பி.ஏ.பி (People’s Action Party – PAP) கட்சிதான் இன்று வரை தனிப் பெரும்பான்மையுடன் சிங்கப்பூரை ஆண்டு வருகிறது. சாகும் வரை அதன் தனிபெரும் தலைவராக் இருந்தவர் லீ. 30 ஆண்டு காலம் பிரதமர், 56 ஆண்டு காலம் சகல அதிகாரங்களும் கூடிய அமைச்சர், 60 ஆண்டு காலம் ஒரே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எனத் தொடர்ந்து சிங்கப்பூரைத் தன் சுண்டு விரல் இயக்கத்தில் வைத்திருந்தவர் அவர்.

1963 ல் சரவாக், வட போர்னியோ ஆகிய முன்னாள் பிரிட்டிஷ் காலனிகள் மலேசியத் தீபகற்பத்துடன் இணைந்து கூட்டாட்சி அமைத்த போது நீர், நிலம் முதலான மிக அடிப்படையான இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரை மலேசியக் கூட்டாட்சியில் இணைப்பது என்கிற முடிவை லீ எடுக்க வேண்டியதாயிற்று.

எனினும் சிங்கப்பூர் மாநில அரசுக்கும், மலேசிய மத்திய அரசுக்கும் பல பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. 1964ல் பெரும் இனக் கலவரம் ஒன்றும் உருப்பெற்றதை ஒட்டி மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து விலக்குவது என முடிவெடித்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் (120 எதிர் 0) இம்முடிவு எடுக்கப்பட்டது. உலக வரலாற்றில் இப்படி கட்டாயமாக விடுதலை அளிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் அமைந்தது. லீ இதைத் தேசிய ஊடகங்களில் அறிவித்த போது அழுதார் எனச் சொல்லப்படுகிறது.

இயற்கை வளங்கள் அற்ற இந்தச் சின்னஞ் சிறு நாட்டை தொழில் உற்பத்தியையும், வணிகத்தையும் மையமாகக் கொண்ட உலகத் தரமான நாடாக ஆக்குவதற்கு லீ தேர்ந்த அணுகல் முறையை விளக்க அரசியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் சொற்களில் முக்கியமானது Meritocracy – அதாவது திறமையை மையப்படுத்திய ஆளுகை. ஒரு கார்பொரேட் நிறுவனம் போல அது ஒவ்வொரு துறையிலும் சாதித்தாக வேண்டும். சாதனை, சாதனை ஒன்றுதான் எல்லாவற்றிலும் அளவு கோல்.

எதுவும் இதற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. மொழி, இனம் எந்தப் பிரச்சனையும் குறுக்கே வந்துவிடக் கூடாது. 5.5 மில்லியன் மக்கள் தொகையில் 75 சதம் பேர் சீனர்களாக இருந்த போதும் சீன மொழிதான் (மான்டரின்) ஆட்சி மொழி என அவர் அறிவிக்கவில்லை. மான்டரின், தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினார். ஆங்கிலம் பொதுமொழி. சீனம் அல்ல. பள்ளிகளில் தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்கும் வாய்ப்பு ஒவ்வொரு மொழியினருக்கும் அளிக்கப்பட்டது. இதற்கென லீ தனது சொந்த நிதியிலிருந்து 12 மில்லியன் டாலரை அளித்தார்.

30 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய லீ அந்தப் பொறுப்பை அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய கோ சோ டோங் கிடம் ஒப்படைத்தார். எனினும் அமைச்சரவையில் “மூத்த அமைச்சர்” (Senior Minister) எனும் பதவி ஒன்றை உருவாக்கி அதைத் தன் கைவசம் வைத்துக் கொண்டார்.

உரிய நேரம் வந்த போது (2004) மகன் லீ சைன் லூங் கிடம் பிரதமர் பொறுப்பை அளித்தார். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக லூங் தந்தையை ‘அமைச்சர்களின் ஆசான்” (Minister Mentor) என்கிற பதவியை உருவாக்கி அதில் அமர்த்தினார். அதிகார நுணுக்கங்களில் மகன் முழுமையாகத் தேறியவுடன் 2011 ல் லீ ஆசான் பதவியிலிருந்து இறங்கினார். எனினும் சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார்.

உலகத் தரமான பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நகரம், ஊழலற்ற ஆட்சி, அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்ற வாழ்க்கை வேறென்ன வேண்டும் குடி மக்களுக்கு என்பதுதான் ஆளுகை குறித்து லீ கொண்டிருந்த கருத்தாக இருந்தது.

லீயின் உடல் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற இல்லத்திலும், பிற பொது மையங்களிலும் 1.25 மில்லியன் மக்கள் தங்களின் முதல் பிரதமர் லீ குவான் யூ விற்கு அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கிறார் லீயின் மூத்த மகனும் இன்றைய பிரதமருமான லீ செய்ன் சூங் (ராய்டெர்ஸ், மார்ச் 29).

***

அமோஸ் யீ ஒரு 17 வயதுச் சிறுவன். அவனைச் சிங்கப்பூர் அரசு இரண்டு நாட்களுக்கு முன் (மார்ச் 29) கைது செய்துள்ளது. அவன் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை “லீ, ஒரு சகிக்க முடியாத ஆள்” (Lee, A horrible Person) எனச் சொன்னதுதான்.

சென்ற மார்ச் 27 அன்று, “கடைசியாக லீ செத்துத் தொலைந்தார்” (Lee Kuan Yew is finally dead!) என்கிற தலைப்பில் ஒரு காணொளியை யூ ட்யூபில் அமோஸ் லீ பதிவேற்றினான். அடுத்த இரண்டே நாட்களில் 686,000 பேர் அதைக் கண்டனர்.

“லீ எல்லோர் மனத்திலும் அச்சத்தை விதைத்திருந்தார். ஏதாவது சொன்னால் பிரச்சினை வந்து விடுமே என எல்லோரும் அஞ்சினர்… அதன் விளைவுதான் லீக்குக் கிடைத்துள்ள பெருமைகள்…” என அவன் கூறியது ஒரு இதழில் (The Independent) வெளிவந்தது. “ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்படவில்லை…” எனவும் சொன்னான்.

லீ செய்ன் லூங் அரசு சென்ற 29ம் தேதி அன்று அமோஸைக் கைது செய்தது. யூ ட்யூப் பதிவும் முடக்கப்பட்டது.. கருத்துச் சுதந்திரத்தில் சிங்கப்பூர் அரசின் அணுகல் முறையைப் புரிந்து கொள்ள இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என லீயை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சியில் லீ குவான் யூவைப் பாராட்டுகிறவர்கள் கூட கடைசியில் இப்படிச் சொல்லி முடிப்பது வழக்கம்:

“அரசை எதிர்த்த ஆர்பாட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் முதலான சிவில் உரிமைகளை முடக்கும் அரசு எனவும், அரசியல் எதிரிகள் மீது வழக்குகளைத் (libel suits) தொடரும் அரசு எனவும் லீயின் ஆளுகை விமர்சிக்கப்பட்டது. ஆனால், அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அவசியம் எனவும், இத்தகைய நடவடிக்கைகளுடன் ‘சட்டத்தின் ஆட்சியும்’ சேரும்போதுதான் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும் என்றும் அவர் வாதிட்டார்” – இப்படி முடிகிறது லீ குறித்த விக்கிபீடியா கட்டுரை.

சிங்கப்பூர் குறித்த விக்கி கட்டுரையில், “பத்திரிக்கைச் சுதந்திரம் உலகத்திலேயே மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அதிக பட்சமாக ஒடுக்கப்படுவதாலும் ஜனநாயக அளவுகோலைப் (Democratic index) பொருத்த மட்டில் ஆகக் கீழான நாடாக அது உள்ளது” என்கிற சொற்களைக் காணலாம்.

கலைஞர்களுக்கும் கூட அங்கு கருத்துரிமை இருந்ததில்லை. தமிழ் பேசும் உலகின் ஆகச் சிறந்த அரங்க இயக்குனரும் கலைஞருமான சிங்கை இளங்கோவன் மற்றும் அவர் மனைவி தேன்மொழி (‘அக்னிக் கூத்து’ அமைப்பின் தலைவர்) அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு (Laredo Morning Times, Oct 29, 2000).

“எனது எல்லா நடவடிக்கைகளையும் சரி என நான் சொல்லவில்லை. முறையான விசாரணை இல்லாமல் நான் கைதுகளைச் செய்தது உண்மைதான்” – என அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம் லீ-யே ஒரு முறை வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன்னுடையது “சட்டத்தின் ஆட்சி, முற்றிலும் திறமையை அடிப்படையாகக் கொண்டது” என அவர் சொல்லிக் கொண்டாலும் நடைமுறை அப்படி இல்லை. 30 ஆண்டு காலப் பிரதமர் பதவிக்குப் பின் தனக்கு மிகவும் விசுவாசமான ஒருவரைப் பதவியில் அமர்த்திய போதிலும் அவரை முழுமையாக நம்பாமல் அமைச்சரவைப் பதவி ஒன்றை உருவாக்கி அமர்ந்து கொண்டவர் லீ. இராணுவத்தில் அவர் மகன் மிக வேகமாகப் பதவி உயர்வுகளைப் பெற்றார். அவர் பிரதமராகத் தகுதி பெறுவதற்கு அது தேவையாக இருந்தது. மருமகளின் கட்டுப்பாட்டில் ஒரு “தேசிய முதலீட்டு நிதியம்” செயல்படுகிறது. பல பில்லியன் டாலர்கள் அளவிலான மக்களின் பணம் எந்த வெளிப்படைத் தன்மையும் இன்றி அவரால் கையாளப்படுகிரது.

வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான பல கட்சி ஆட்சி முறை என்று சொல்லிக் கொண்ட போதிலும் கடந்த 60 ஆண்டுகளாக அங்கு லீயின் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைத் தொடர்ந்து கடுமையான அபராதம் விதித்து ஓட்டாண்டி ஆக்குவதோடு மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாதவாறும் செய்யப்பட்டது. கடந்த தேர்தலில் எதிர்க் கட்சிகள் 40 சத வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் நாடாளுமன்றத்தில் 10 சத இடங்களைத்தான் பெற முடிந்தது.

ஊழல்கள் இல்லைதான். ஆனால் ஊழலை ஒழிப்பது என்கிற பெயரில் அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அளிக்கப்படும் அபரிமிதமான ஊதியம் கடும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் இங்கு முதலீடு செய்யப்படும் வெளி நாட்டுப் பணங்கள் பெரும்பாலும் தவறான வழிகளில் சம்பாதிக்கப்பட்டவை என்பதையும் மறந்துவிட இயலாது.

ஒன்றை இங்கு அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, வங்க தேசம் முதலான நாடுகளிலிருந்து சென்று அங்கு கட்டுமானத் தொழிலிலும், இதர கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளிகளின் பங்கு இன்றியமையாதது.

2013ம் ஆண்டுக் கணக்குப்படி அங்கு இன்று 1.3 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 760,000 பேர் பயிற்சியற்ற (unskilled) ஆண் தொழிலாளிகள். 210,000 பேர் வீட்டு வேலைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பெண் தொழிலாளிகள் (The Straits Times, Dec 22, 2013).

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பணி செய்து கொண்டிருந்த போதும் லீ இறுதிவரை ‘புலம் பெயர்ந்த தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கான’ ஐ.நா உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. அதிக அளவில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளை அனுப்புகிற நாடுகளுடன் இரு நாட்டு ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை.

வேலை அளிக்கும் நிறுவனங்கள் மூலமாகப் பெறும் விசாக்களுடன் (employer sponsored visas) வரும் தொழிலாளிகள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முதலாளிகள் அளவற்ற அதிகாரத்துடன் சுரண்டிக் கொழுக்க இது வழி வகுக்கிறது. ஊதியம் வழங்க மறுப்பது, இடைவெளி இன்றி நீண்ட பணி நேரம், ஆபத்து விளைவிக்கக் கூடிய வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துதல், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளை ஏற்க மறுத்தல், ஊதிய பாக்கிகளைக் கணக்கிட்டுக் கொடுக்காமலே கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றல் (forced repatriation), வசதிகளற்ற தங்குமிடங்களில் திணித்து அடைத்தல் என இத் தொழிலாளிகள் படும் துயரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்ற 2013 டிசம்பர் 8 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி விபத்தொன்றில் இறக்க நேர்ந்ததை ஒட்டி சுமார் இரண்டு மணி நேரம் 400 தொழிலாளிகள், பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வங்க தேசத்தவர், காவலர்களையும், காவல் வாகனங்களையும் தாக்கிச் சேதம் விளைவித்தபோது சிங்கப்பூர் அரசு அதிர்ச்சி அடைந்தது. வரலாறு காணாத இந்த எதிர்ப்பைக் கண்டு துணுக்குற்றது.

தேங்கிக் கிடந்த வேதனை இப்படி வெடித்துச் சிதறியது. பின்னணியாக உள்ள நியாயமான காரணங்களைக் காண மறுத்த சிங்கப்பூர் அரசு அதை ஒரு குடிகாரர்களின் வெறியாட்டமாகக் கொச்சைப் படுத்தியது. சுமார் 22 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 57 பேர்கள் கட்டாயமாக அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். இனி அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்ப இயலாது. 200 பேர்களுக்கும் மேற்பட்டோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். தொழிலாளிகள் மீது இவ்வளவு கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கப்பூர் அரசு இந்தத் தொழிலாளிகள் வசிக்கும் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் மது விற்பனையை நிறுத்துவது, தொழிலாளர்களை அழைத்துச் செல்ல தனியார் வாகனங்கள் பயன்படுத்தப் படுவதை நிறுத்துவது முதலான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டது.

கடந்த 30 ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் கூலி குறைக்கப்பட்ட இந்தப் புலம் பெயர் தொழிலாளிகளின் உழைப்பு (subsidised labour) முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் பெருகிக் கொண்டுள்ள நிலையில் புலம் பெயர் தொழிலாளிகளின் வரத்து குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

***

லீ குவான் யூ வைப் பொருத்த மட்டில் ஜனநாயகம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான தடைக் கல். இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒரே நேரத்தில் சாத்தியம். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றின் ஆகக் கறை படிந்த காலமாகிய இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தை (1975- 77), “இந்தியாவில் ஒழுங்கை நிலை நாட்ட இந்திரா செய்த சரியான காரியம்…” எனப் பாராட்டியவர் லீ. “நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமை இல்லை. அது அரசின் கருணை” என இந்திரா அரசு அன்று சொல்லியது நினைவிருக்கலாம். அதே போல அருகிலுள்ள மியான்மரின் இராணுவ சர்வாதிகார ஆட்சியையும் ஆதரித்து வந்தவர்தான் லீ.

பி.பி.சி. நேர்காணல் ஒன்றில் ஹாங்காங் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) நிறுவனர் மார்டின் லீ சொன்னது போல, “லீ குவான் யூ சொந்த மக்களை என்றும் நம்பியதில்லை. அவரால் அம் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தைத் தரவே இயலாது… அங்கு ஜனநாயகம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் எப்போதும் அங்கு மக்கள் இழப்புகளை மட்டுமே சந்திக்க இயலும்…” (Quoted by Muhammed Cohen, Forbes India, April 30, 2015). நீதி மன்றங்களும் அவர்களது இழப்புகளை ஈடு செய்ததில்லை.

“நீங்கள் ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுங்கள். நான் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்…” என்பதுதான் லீ குவான் யூ அவரது மக்களிடம் மேற்கொண்ட பேரம் (bargain). மாற்று விருப்பிற்கு இடமில்லாமல் திணிக்கப்பட்ட கட்டாயமான பேரம் அது. மக்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொண்டதாகச் சொல்ல இயலாது. சராசரித் தனிநபர் வருமானம் மிக அதிகமாக இருந்தபோதும் மக்கள் அங்கு திருப்தியுடன் வாழ்வதாகச் சொல்ல முடியாது. வெளி நாட்டில் அகதிகளாக வாழும் சிங்கப்பூரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு வேளை மனிதர்கள் வாய், வயிறு, பிறப்புறுப்பு ஆகிய மூன்றுடன் மட்டும் பிறந்திருந்தால், லீ குவான் யூவின் பேரத்தை அவர்கள் விருப்புடன் ஏற்று வாழலாம். ஆனால் மனிதர்கள் அரசியல் மிருகமாயிற்றே.

இது ரொம்ப நாள் தாங்காது. சிறைப்பட்டுள்ள அமோஸ் லீயின் எதிர்க்குரல் இதற்கொரு நிரூபணம்.

http://vallinam.com.my/version2/?p=2062

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு வந்த இரண்டு பின்னூட்டங்கள்...

Ravi

எப்படித்தான் ஆட்சி செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதே உலக பத்திரிகைக்காரரின் செயல்.உலகத்திலே சிங்கப்பூருக்கு நிகரான நாடு கிடையாது என்பது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்ட தொழிலாளிகளின் பிரச்சைனையிலும் தவறுண்டு உலகத்தில் எந்த நாட்டில் பிரச்சனை இல்லை அய்ரோப்பியர்கள் யோக்கியர்களா அமெரிக்கர்கள் யோக்கியர்களா?நான் ஒரு நாடோடி ITF சர்வதேச போக்குவரத்து அமைப்பில் உறுப்பினன்.உலகத்தில் முக்கால்வாசி நாடுகழுக்குப்போய் வந்திருக்கின்றேன்.சிங்கப்பூரில் உள்ளமாதிரி உலகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நாடு வேறெங்கும் இல்லை என்பேன்.எவன் தவறில்லாதவன் சட்டம் இறுக்கமாக இருந்ததால்தான் மக்கள் உலகம்பாராட்டும்படி வாழ்கின்றார்கள்.எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள்.புராணக்கதைகளில் வில்லன்கள் வரவில்லையா?இறையவதாரங்களே வில்லன்களை சந்தித்திருக்கின்றது.மனிதனாக வாழ்ந்தவன் சந்திக்க முடியாதா?லீ குவான் இயூ வைக்குறைகூறுபவர்கள், ஆட்சியில் இருந்திருந்தால் சிங்கப்பூரை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பார்களா?இல்லவே இல்லை அவர்கள் தங்கழுக்குப்பணம் சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவுதான்.

ஸ்ரீவிஜி

சிங்கப்பூர் ஒரு அருமையான நாடு. மலேசியர்கள் நாங்கள் எங்கு சென்றாலும், நாங்கள் மலேசியாவில் இருந்து வந்துள்ளோம் என்று சொன்னால், பதிலுக்கு அவர்கள், சிங்கப்பூரின் அருகில் உள்ள நாடா? என்று தான் கேட்பார்கள். ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு நாட்டை, தேனீக்கள் வட்டமடிக்கின்ற சோலைவனமாக மாற்றியவர் திரு லீ. சிங்கப்பூரை வர்த்தகமையமாக மாற்றியமைக்க அவர் பட்டபாடு போன்றத்தக்கது. எவ்வளவு உழைத்திருந்தால் அந்நாடு எல்லாவளமும் உள்ள எங்களின் நாட்டையே மிஞ்சியிருக்கும். !? நல்லாட்சி செய்பவரும் கண்டனத்திற்குரியவர்.? கடுமையான உழைப்பு உலகத்தால் பாராட்டப்படவேண்டிய ஒன்று. உலக மக்கள் அனைவரையும் திருப்பிப்பார்க்கவைத்த ஒரு மாபெரும் தலைவர் திரு லீ. மூவினம், யாரையும் ஒடுக்கவில்லை. சிங்கப்பூரியன் என்று சொல்லி தலை நிமிர்கின்றார்கள். எல்லோரும் உயர்ந்துள்ளார்கள். அங்குள்ள மக்கள் யாரும் வேலை வாய்ப்புகளுக்காக உலகமுழுக்க அலைவதில்லை. அடிமட்ட தொழிலாளிகளாக எங்கும் அலைந்ததில்லை. குற்றச்செயல்களும் அதிக அளவில் குறைந்து காணப்படுகிறது. இது போதாதா சார் தனியொரு மனிதனுக்கு.!

குரல் எழுப்பி, போராட்டம் நடத்தி, உரிமை கேட்டு, பேச்சுரிமை எழுத்துரிமை என இஷ்டம்போல் வாழ்கிற நாட்டு மக்கள் படும் அவஸ்தைகள் போதும்.

கட்டுக்கோப்பு, ஒழுங்கு என மக்களை வழி நடத்தி நல்லாட்சி செய்த லீ என்று மக்கள் மனதில் வாழ்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ravi

எப்படித்தான் ஆட்சி செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதே உலக பத்திரிகைக்காரரின் செயல்.உலகத்திலே சிங்கப்பூருக்கு நிகரான நாடு கிடையாது என்பது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்ட தொழிலாளிகளின் பிரச்சைனையிலும் தவறுண்டு உலகத்தில் எந்த நாட்டில் பிரச்சனை இல்லை அய்ரோப்பியர்கள் யோக்கியர்களா அமெரிக்கர்கள் யோக்கியர்களா?நான் ஒரு நாடோடி ITF சர்வதேச போக்குவரத்து அமைப்பில் உறுப்பினன்.உலகத்தில் முக்கால்வாசி நாடுகழுக்குப்போய் வந்திருக்கின்றேன்.சிங்கப்பூரில் உள்ளமாதிரி உலகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நாடு வேறெங்கும் இல்லை என்பேன்.எவன் தவறில்லாதவன் சட்டம் இறுக்கமாக இருந்ததால்தான் மக்கள் உலகம்பாராட்டும்படி வாழ்கின்றார்கள்.எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள்.புராணக்கதைகளில் வில்லன்கள் வரவில்லையா?இறையவதாரங்களே வில்லன்களை சந்தித்திருக்கின்றது.மனிதனாக வாழ்ந்தவன் சந்திக்க முடியாதா?லீ குவான் இயூ வைக்குறைகூறுபவர்கள், ஆட்சியில் இருந்திருந்தால் சிங்கப்பூரை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பார்களா?இல்லவே இல்லை அவர்கள் தங்கழுக்குப்பணம் சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவுதான்.

 

 

எமது போராட்டமும் சுபமே முடிந்திருந்தால் தமிழீழமும் ஒரு சிங்கப்பூர்தான்.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.