Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றத்து மாமரம்: (தொடர் கட்டுரை)

Featured Replies

வணக்கம்! 

நான் தான்  முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமரம், முற்றத்து மாமரம். முத்தண்ணா, முத்து என்பது அவரது பெயர், பெயருக்கு ஏற்றவாறு ஒரு முத்தான மனிதர் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் எனது நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் கூறியிருக்கிறார்கள்.  முத்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. 

ஆனால், கிடைபதற்கு அரிதான ஒன்று என்பது மட்டும் தெரியும். காரணம், ஒருநாள் முத்தக்கா, முத்தண்ணாவின் மனைவி ராணி, முத்தண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘முத்தக்கா’ என்றுதான் அழைப்பார்கள், முற்றத்தில் அமர்ந்து வானொலிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது ‘ஆழ்கடலில் முத்தெடுத்து’ என்ற பாடலைக் கேட்டவுடன் ‘இஞ்சேருங்கோ’ என்று முத்தண்ணாவைக் கூப்பிட்டு, ‘ஆழ்கடலில்தான் முத்து கிடைக்குமாமே, உங்களையும் ஆழ்கடலில் தேடி எடுத்துத்தான்  எனக்குத் தந்தார்களோ’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடியது மறக்கமுடியாத பல நிகழ்வுகளில் ஒன்று. 

முத்தக்காவும் ஒரு முத்துத்தான்.  முத்தண்ணவுக்காகத் தேடி எடுத்த முத்து அவர். முத்தண்ணாவின் வாழ்க்கையின் புதிய திருப்பங்களுக்கான திறவுகோல்.  அதுமட்டுமல்ல, தன்னைத் தவிர எல்லோரையும், எல்லாவற்றையும் சிறப்பாகக் கவனிக்கும் ஜீவன். என்னில் கூட அளவுகடந்த அன்பு அவருக்கு. வீட்டுக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே கைகழுவ வரும்போது என்னை அசுத்தப்படுத்தி விடுவார்கள் என்று எனக்கருகே வர விடமாட்டார். 

என்மீது  மட்டுமல்ல, காலம் காலமாக வளர்த்து வந்த, வளர்த்து வருகின்ற நாய், ஆடு, மாடு என்பவற்றுடன் கூட அதே அன்பு தான்.  நான் இருப்பது ராணியின் வீட்டு முற்றத்தில் தான்.  திருமணமானவுடன் அது முத்தண்ணாவின் வீடாக மாறி ராணியும் முத்தக்காவாக மாறிவிட்டார்.  இந்த மாற்றம் முத்தக்காவுக்கு அன்று தொட்டு இன்றுவரை பெருமையாக இருக்கிறது. 

முத்தண்ணா திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்தது முதல் இவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் எனது நோக்கம். அதற்கு முன்னர் எனது பிறப்பைப் பற்றி நான் அறிந்துகொண்ட ஆச்சரியமான சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகின்றது.

நன்றி 
கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.

தொடரும் ...............................................

முற்றத்து மாமரம்: (2)  கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.
--------------------------------------------------------------------------------------------

முத்தக்காவின் கிராமத்தில் இருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள சிறிய நகரத்தில் அவரது மாமியார் அன்புமதி, தந்தையின் இளைய தங்கை, வசித்து வருகிறார். அன்புமதியின் கணவர் மாணிக்கம் நகரத்தின் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள உணவுச்சாலையின் உரிமையாளர். பாடசாலை விடுமுறை நாட்களில் மாமியாரின் வீட்டுக்குச் சென்று அவர்களது குழந்தைகளுடன் பொழுதைப் போக்குவது வழக்கம் முத்தக்காவுக்கு.  ‘ராணி மச்சாள், ராணி மச்சாள்’ என்று மழலை கலந்த குரலில் அவர்கள் அழைக்கும் போது முத்தக்காவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.  அவர்களும் ‘ராணி மச்சாள்’ வீட்டுக்கு வந்துவிட்டால் அப்பாவையும் அம்மாவையும் மறந்து விடுவார்கள். 


ஒருநாள் அவர்களது முற்றத்தில் குழந்தைகளுடன் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது முத்தக்கா அடித்த பந்து அவர்களது காணியின் எல்லைக்கு அருகில் இருந்த குப்பை மேட்டையும் தாண்டிச் சென்றுவிட்ட்டது. பந்தை எடுக்கச் சென்றபோது இடம்பெற்ற நிகழ்வு தான் இன்று நான் முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்வதற்கான காரணமாகும். பந்தை எடுப்பதற்காக குப்பைமேட்டைத் தாண்டிச் செல்லும்போது குப்பைமேட்டுக்கு அருகில் மூன்று இலைகளுடன் நின்ற என்னைக் கண்டதும் அவர் மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பு ஏற்பட்டதாம். 


பந்தை எடுத்துக்கொண்டு வந்த முத்தக்கா, வீட்டுக்குள் இருந்த மாமியிடம்  ‘குப்பைமேட்டுக்குப் பக்கத்தில மாங்கண்டு ஒன்று நிக்குது மாமி’ என்று சொல்ல, ‘நிக்குதா பிள்ளை?, மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு கொட்டைகளை  குப்பையோடு சேர்த்துக் கொட்டுறது தானே, அதுக்குள்ள இருந்து அடிக்கடி முளைக்கும், குப்பையைக் கொளுத்திக் கன நாளாச்சு’ என்று கூற, ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டு ‘நான் அதைக் கொண்டு போகட்டா மாமி?’ என்று கேட்க ‘ஓம் பிள்ளை’ என்று மாமி சொன்னதும், கிணற்று நீரால் என்னைக் குளிர வைத்த முத்தக்கா அடுத்தநாள் காலை மாமாவின் உதவியோடு என்னைக் கொண்டுவந்து அவரது வீட்டு முற்றத்தில் நட்டுவைத்தாராம். எவராவது என்னைப் பற்றிக் கேட்கும்போது இந்தக் கதையை முழுமையாக சொல்வதில் அளவு கடந்த மகிழ்ச்சி முத்தக்காவுக்கு.


எனது வாழ்க்கையின் ஆரம்பம் பற்றிய முத்தக்காவின் முன்னுரையை அறிந்துகொண்டீர்கள்.  அவரது வீட்டு முற்றத்தில் எனது வாழ்க்கையை ஆரம்பித்த நாள் முதல் என்மீது அவர் பொழியும் கருணையைப் பற்றி கூறுவதற்கு முன்னர் நான் யார் என்பதைப் பற்றிய எனது அறிமுகத்தைத் தருகின்றேன்.  ‘நான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் என்னைப் பற்றி விபரிக்க முடியாது என்பதால் ‘நான்’ என்று குறிப்பிட வேண்டியுள்ளது.  உண்மையில் ‘நான்’ என்று எதுவும் இல்லை. எனது இயக்கம், வாழ்வு என்பதெல்லாம் இயல்பாகவே நிகழ்கின்றன. ஏதோ ஒரு முழுமையான சக்தியின் பகுதியாகவோ அல்லது முழுமையான அந்தச் சக்தியாகவோ இருப்பதான உணர்வு.


 இயற்கையின் சுழற்சியில் காலம் என்று ஒன்று இல்லை. நானும் இயற்கை ஆதலால் காலம் அற்றவன். பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. இயற்கை தனது சமநிலையைப் பேணுவதற்கு உருவத்தையும் அருவத்தையும் பயன்படுத்துகின்றது. இப்போது நான் உருவமாக இருக்கிறேன். ஆனால் எந்த அடையாளமும் எனக்கு இல்லை. மனிதன் மட்டுமே ‘மாமரம்’ என என்னை அடையாள படுத்தியுள்ளான். 

நன்றி 
கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.

தொடரும் ...............................................

முற்றத்து மாமரம்: (3)  கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.
-------------------------------------------------------------------------------------------

எனக்கு ‘மாமரம்’ என்று பெயரிட்ட மனிதன் எனது அன்புக்கு ‘மாம்பழம்’ என்று பெயரிட்டுள்ளான்.  ‘எப்படி மாம்பழத்தை அன்பு என்று கூறுவது?’ என்ற வினா உங்கள் மனதில் எழலாம். பாரபட்சம் எதுவும் இன்றி, உயிரினங்கள் அனைத்தும் பயன்பெறக் கூடிய வகையில்  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பகிரப்படுவது தான் அன்பு.  எனது மாம்பழமும் அப்படித்தான்.


எனது மொழி இயற்கையின் மொழி.  முற்று முழுதாய் உணர்வு சார்ந்த மொழி.  சகலமும் இணைக்கப்பட்டுள்ள முழுமையான சக்தியின் ஒரே மொழி. மனிதனைத் தவிர என்னுடன் தொடர்பு கொள்ளும் ஏனைய அனைத்தும் இயல்பாகவே புரிந்து கொள்ளும் மொழி, ஒரு குழந்தையின் ஆரம்ப மொழி எனது மொழிதான். நான் காற்றுடன் சேர்ந்து விளையாடும் போது எனது அசைவுக்கு ஏற்ப குழந்தையும் அசைந்து ஆனந்தம் அடையும். எனக்கும் அந்தக் குழந்தைக்கும் இடையில் இடம்பெறும் ஆனந்த நடனம் தான் அது. குழந்தைக்குப் புரிவது அந்தக் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்குப் புரிவதில்லை. 


நான் அசைவதைப் பார்த்து குழந்தை சிரிக்கிறது என்று கூறுவான்.  எப்படிப் புரியும் மனிதனுக்கு?. மனிதன் தனக்கு என்று ஒரு செயற்கை மொழியை உருவாக்கி இயற்கையின் மொழியை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டானே!.  மனிதனின் செயற்கை மொழி மனிதனைத் தவிர வேறு எதனுடனும் தொடர்பு கொள்ள முடியாத மொழி. அது மட்டுமல்ல, இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்வதற்கு தடையாக இருப்பதும் அது தான். 

உணர்வின் நகர்வு தான் வாழ்தல். உணர்வுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் போது அந்த உணர்வின் உண்மைத் தன்மை அழிந்து உண்மைக்கு மாறான தோற்றத்தையே கொடுக்கின்றது.  வார்த்தைகளால் மனிதன் குழப்பம் அடைந்திருக்கிறான். தனது வசதிக்காக பெயர் அற்றவைக்கு எல்லாம் பெயர் கொடுத்துள்ளான். எனக்கு மாமரம் என்று பொதுப் பெயர் வைத்துள்ள மனிதன் அதற்குள்ளும் பிரிவை உருவாக்கி ‘கறுத்தக் கொழும்பான்’ என்று அடையாள படுத்தியுள்ளான். 


மனிதனைப் போலவே நானும் பேசுகிறேனே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.  மனிதனின் மொழிதான் உங்களுக்குப் புரியும் மொழி என்பதால் அந்த மொழியிலேயே உங்களுடன் உரையாடுகின்றேன். 

நன்றி 
கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.
(தொடரும்)

கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை. 04
-------------------------------------------------------------

மாமரம் என்று நீங்கள் அடையாளப்படுத்தி இருக்கும் என்னைப் பற்றிப் பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்ர்து கொள்ளவதற்கான தேவை இருப்பினும்  முத்தண்ணாவின் ‘வாழும் முறை’  பற்றிய விடயங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டு இடையிடையே என்னைப் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  முத்தண்ணாவின் ‘வாழும் முறை’ என்று குறிப்பிட்டதற்கான காரணம், இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்றே தனித்துவமான வாழும் முறை ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான்.  ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவனாக இருப்பதால் வாழும் முறையும் தனித்துவமாக அமைகின்றது.  


எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனைப் போல் வாழ்வதும் இல்லை, வாழ்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனெனில்  வாழ்க்கை வேறு வாழும் முறை வேறு.  ஒருவரது முதல் மூச்சுக்கும் இறுதி மூச்சுக்கும் இடைப்பட்டது வாழ்க்கை.  இறுதி மூச்சுக்கும் அப்பால் வாழ்ந்து கொண்டிருப்பது வாழும் முறை.  பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களில் சிலரை இன்றும்  நாம் எமது முன்னோடிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது அவர்கள் வாழ்ந்த முறையைத்தான். அந்த முறைதான்  இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.  அதாவது வாழ்க்கை எவரையும் அடையாளப் படுத்துவதில்லை. வாழும்முறை தான் ஒருவரை அடையாளப்படுத்துகின்றது.   


முத்தண்ணாவின் வாழும் முறையும் ஒரு அற்புதமான, ஆச்சரியங்கள் நிறைந்த, எம்மை வியப்பில் ஆழ்த்தி சிந்தனைக்கு வித்திட்டு, சிறந்த வழி ப்படுத்தலாக அமைந்துகொண்டிருக்கின்ற வாழும்முறைதான்.  இயற்கையின் தேவையால் முத்து எனும் மனித அடையாளத்துடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் முத்தண்ணாவின் வாழும் முறைக்கு முத்தக்காவின் பங்களிப்பு அளப்பரியது.  ஒரு தனிமனிதனது வாழும் முறையும் குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு அதன் இயல்புகளை ஒருநிலைப்படுத்தி வாழும் முறையும் இருவேறு பரிணாமங்களைக் கொண்டது. 

முத்தண்ணாவின் வாழ்வியல் சிறப்பானது ஒரு குடும்ப அமைப்பின் சிறப்பான நகர்வுக்கு அவரதும் அவரது குடும்ப அங்கத்தவர்களதும்  தனிமனித தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மிகவும் சிறப்பான குடும்ப அமைப்பை நகர்த்திச் சென்றுகொண்டிருப்பது தான். முத்தண்ணாவின் வாழும் முறையில் உள்ள சிறப்புக்களை அவரது முற்றத்தில் இருந்து கொண்டு உள்வாங்கிக்கொண்டிருக்கும் நான் அவற்றை முத்து முத்தாக உங்ககுக்குத் தருகின்றேன். 

நன்றி 
கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.
(தொடரும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.