Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து

Featured Replies

புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து 1

 
 
newzealand_2238047f.jpg
 

நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம்.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன.

தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதியில் வெடித்தது. இதன் காரணமாகத்தான் அங்கு ‘டாப்போ ஏரி’ உருவானது.உலகின் மிகப் பெரிய பூச்சி இனம் (Giant Weta) நியூசிலாந்தில்தான் உள்ளது. ஒரு குருவியைவிட அதிக கனம் கொண்டதாக இந்தப் பூச்சி இருக்கும். நாட்டில் மூன்றில் ஒரு பங்கு பூங்காக்களால் ஆனது. ஏதோ திறந்த வெளிப் பூங்காக்கள் அல்ல. வேலியிடப்பட்டு நன்கு பாதுகாக்கப்படும் பூங்காக்கள்.

உலகிலேயே இரண்டு நாடுகள்தான் மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய அனுமதிக்கின்றன. அவற்றில் ஒன்று அமெரிக்கா. மற்றொன்று? உங்களுக்கே இந்நேரம் யூகிக்க முடிந்திருக்கும்.நியூசிலாந்து ஒரு தீவு நாடு. தென்மேற்குப் பசிபிக் கடலில் உள்ளது. இரண்டு நிலப்பகுதிகள் இணைந்த பகுதி. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்காக 1500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வளவு தனிமையாக இருப்பதாலோ என்னவோ அங்கு மக்கள் குடியேற்றம் மிகவும் மெதுவாக நிகழ்ந்தது. இங்கு மக்கள் குடியேறி 800 வருடங்கள்தான் ஆகின்றன. அந்த விதத்தில் நியூசிலாந்து ஒரு ‘நியூ’ நாடுதான்.

இப்போது கூட அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் குறைவான மக்கள் தொகைதான். தலைநகரம் வெலிங்டன். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக பிஸியான நகரம் ஆக்லாந்துதான். எக்கச்சக்கமான செம்மறி ஆடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. சுமார் நான்கு கோடி செம்மறி ஆடுகள். கணக்கிட்டால் ஒவ்வொருவருக்கும் ஒன்பது செம்மறி ஆடுகள்.

கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் நியூசிலாந்து வீரர்களை ‘கிவிக்கள்’ என்று அழைப்பதை அறிந்திருப்பார்கள். கிவி என்பது பறக்க முடியாத ஒரு பறவை. நியூசிலாந்தில் அதிக அளவில் காணப்படுகிறது. நியூசிலாந்தின் நாணயத்தின் பெயர்கூட கிவி டாலர்தான். ஒரு டாலர் 100 சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் விமானப்படையின் லோகோகூட கிவி பறவைதான்.

ரேடியோ கார்பன் டேட்டிங் எனும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்தபோது நியூசிலாந்தில் கி.பி. 1250ல்தான் முதல் குடியேற்றம் நடந்திருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அப்படிக் குடியேறியவர்களின் கலாச்சாரத்தை மவோரி என்கிறார்கள். ஒருவித நாடோடிகளின் கலாச்சாரம் இது.

இவர்களிடையே உடு (Utu) என்ற பொருளாதாரப் பரிமாற்றம் இருந்தது. இதற்கு மூன்று கொள்கைகள் அடிப்படையாக இருந்தன. ஒன்று, கொடுப்பவர் மனப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் அவருக்கு இருக்கக் கூடாது. இரண்டு,

வாங்கிக் கொள்பவர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். சொல்லப் போனால் அதைவிட அதிக மதிப்புள்ள பொருளை திருப்பிக் கொடுக்க வேண்டும். மூன்றாவது, இதுபோன்ற பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

கேட்கவே இன்பமாக இருக்கிறதில்லையா? ஆனால் இந்தக் கலாச்சாரத்தில் இன்னொரு சுவாரசியமான கோணமும் உண்டு. மேற்படி விதிகள் அவமானம் என்பதற்கும் பொருந்தும். அதாவது அவமானப்படுபவர் அந்த அவமானத்தை அதிக அளவில் எதிராளிக்குத் திருப்பித்தர வேண்டும். இப்படி ஒருவரையொருவர் அவமானப்படுத்திக் கொள்வது தொடர்ந்து நடைபெற வேண்டும்!

இவர்களுடைய நாடோடிக் கதைகளில் ஒரு தனித்துவம் உண்டு. ஒருவர் வர்ணிப்பதுபோலத்தான் இந்தக் கதைகள் இருக்கும். தான் வாழ்வதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அவர் கூறுவார். ஆனால் அவர் கண் எதிரே அவை நடப்பதுபோல நிகழ்கால வர்ணனைகளாகதான் அவை இருக்கும். கலாச்சாரத்தை மீறியதால் கிடைக்கும் தண்டனைதான் நோய்கள் என்று நம்பினார்கள். யாராவது நோய்வாய்ப்பட்டால் அவரை உடனே தனி இடத்திற்கு மாற்றிவிடுவார்கள். மாந்திரீகம் நடைபெறும். ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு தீயசக்தியின் வேலை. உதாரணத்திற்கு காசநோயை உண்டாக்கும் தீயசக்தியின் பெயர் டோக். கழுத்துப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம் ஹுரா.

சிப்பிகள், மீன்கள், வாத்துகள் போன்றவை இவர்களின் முக்கிய உணவுகள்.இரண்டுக்கு மூன்று மீட்டர் அளவிலான குடிசைதான் இருப்பிடம். ஜன்னல் கிடையாது, சிம்னி கிடையாது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே எட்டிப் பார்க்க, மவோரி கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்தது. அந்த மாற்றம் நியூசிலாந்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டது. இன்றுவரை பல சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/புதிதாய்-பிறந்த-நியூசிலாந்து-1/article6673725.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2

 
 
நியூசிலாந்தின் மவோரி இன மக்கள். (கோப்புப் படம்)
நியூசிலாந்தின் மவோரி இன மக்கள். (கோப்புப் படம்)

நியூசிலாந்து பற்றிய செய்திகள் அடிக்கடி நம் காதுகளை எட்டுவதில்லை. அவர்கள் நாட்டின் கிரிக்கெட் அணியினரைப் பற்றி மட்டுமேதான் நாம் கேள்விப்படுகிறோம். அந்த அளவுக்கு அமைதியான நாடா அது? பரபரப்பான எந்த விஷயமுமே அங்கு நடப்பதில்லையா?

மேலோட்டமாகப் பார்த்தால் ஆமாம் என்று விடை கூறிவிடலாம். ஆனால் நியூலாந்தின் போக்குகளைச் சற்றே கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அங்கு அமைதியான (ஆனால் அழுத்தமாக) ஒரு மாற்றம் நடந்து வருவதைப் புரிந்து கொள்ள முடியும். மாறிவரும் தங்கள் மனநிலையை நியூசிலாந்து தெளிவாகவே பதிவு செய்து வருகிறது. இதை அறிய வேண்டுமானால் அந்த நாட்டின் சரித்திரத்தை நாம் முதலில் புரட்டிப் பார்க்க வேண்டும்.

ஆவணங்களின்படி முதலில் நியூசிலாந்தை அடைந்த ஐரோப்பியர்கள், போர்சுக்கீசியர்கள்தான். ஏபெல் டஸ்மான் என்பவர் தலைமையில் இவர்கள் குழு நியூசிலாந்தில் இறங்கியது. உள்ளூர் வாசிகள் கடுமையாகப் போரிட்டனர். போர்த்துகீசியர்களை இவர்கள் ஓடஓட விரட்டினாலும், தங்கள் இனத்தில் ஒருவர் இறந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் துப்பாக்கி குண்டினால் அவர் இறந்து அவர்களுக்குப் பேரதிர்ச்சி. காரணம் துப்பாக்கி என்பது அவர்களுக்கு அறிமுகமாகாத ஒன்று.

பயம் கொண்ட ஐரோப்பியர்களும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு அந்தப் பக்கமாக தலையை வைத்துகூடப் படுக்கவில்லை. 1769ல் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் ஒரு பெரும் குழுவுடன் கிட்டத்தட்ட நியூசிலாந்து கடற்கரை முழுவதும் காலடி வைத்தார்.

மவோரி இனத்தவர் மிகச் சிறப்பான சமூக அடித்தளங்களோடு வாழ்வதைக் கண்டு வியந்தார். இத்தனைக்கும் அவர்கள் ஏதோ கற்கால நாகரிகத்தினர்போல வாழ்ந்து கொண்டிருந்தனர். சாலைகள் கிடையாது, பானைகள் கிடையாது. ஏன், சக்கரங்களே கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கை. தவிர வணிகத்தில் சிறிதும் விருப்பம் இல்லாதவர்களாக இருந்தார்கள். எளிதில் கோபப்படுபவர்களாகவும் காட்சியளித்தார்கள். என்றாலும் சமூகம் என்ற விதத்தில் சிறப்பாகவே இணைந்திருந்தார்கள்.

மவோரி என்ற வார்த்தைக்குப் பொருள் ‘இயல்பான’ - அதாவது ‘தனிச்சிறப்பு இல்லாத’ என்பதுதான். இப்படி ஓர் அர்த்தம் கொண்ட வார்த்தையைப் பெருமையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். தங்கள் எல்லைக்குள் வந்து சேர்ந்த வெளிநாட்டவர்களை ‘பகேஹா’ என்று அவர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.

டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இங்கு கால் பதித்ததைக் கண்டதும் பிரான்ஸ் நாட்டின் அரசும் நியூசிலாந்து மீது ஒரு கண் பதிந்தது. அதற்குப் பிறகு பல ஐரோப்பியர்களும், வட அமெரிக்கர்களும் மாறி மாறி அங்கே வரத் தொடங்கினர். சுறா பிடிக்க, கடல் மீன் பிடிக்க, வணிகத்துக்கு என்று பலவித காரணங்கள். இந்த மாற்றங்களை மவோரி இனத்தவர் பெரிய எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டனர் என்பது வியப்பு.

நிலம்தான் ஏராளமாக இருக்கிறதே. புதியவர்களும் இருந்து விட்டுப் போகட்டுமே. இப்படி நினைத்த மவோரி இனத்தவருக்கு அடுத்த அடி காத்திருந்தது. 1820க்களில் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய ஐரோப்பிய ஆண்களில் கணிசமானவர்கள் மவோரிப் பெண்களை மணந்து கொண்டார்கள்.

இதில் மவோரி ஆண்களுக்கு எரிச்சல். கலப்பு மணத்தை எதிர்த்தனர் என்பது முக்கிய காரணம் அல்ல! திருமண வயதுப் பெண்களில் பலரையும் ஆங்கிலேய ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தொடங்கியதால் மவோரி இளைஞர்களுக்குக் கல்யாணத்திற்கு இளம்பெண்கள் போதிய அளவில் கிடைக்காமல் போயினர்.

எரிச்சலுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவர்கள் இனப் பெண்களை ஐரோப்பியர்கள் மணந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இன ஆண்களை மணந்து கொள்ள ஐரோப்பிய இளம் பெண்கள் முன்வரவில்லை. இந்தப் ‘பாரபட்சமான போக்கு’ அவர்களை எரிச்சல் கொள்ள வைத்தது.

பிற ஐரோப்பிய இறக்குமதிகளும் மவோரிக்களைத் திணறடித்தன. உருளை, வெங்காயம், சிக்கன், கோதுமை என்று ஒவ்வொன்றுமே மவோரி கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டன. புதிய பயிர்களை விளைவித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் ஐரோப்பியர்கள் எதைக் கொடுத்தாலும் (இறக்குமதி) உடனடியாக அதற்கான பணத்தை எதிர்பார்த்ததை மட்டும் மவோரிக்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் பரிசுக் கொள்கைகளில் முதலாவது அடிபடுகிறதே! தவிர பொருளுக்கு பதிலாக வேறு பொருளைத்தானே கொடுக்க முடியும். இவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்களே.

ஒருவழியாக பணத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார்கள். முக்கியமாக பொருள்களைவிட பணத்தை உறவினர்களிடமிருந்து மறைத்து வைப்பது சுலபம் என்ற கோணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது! என்றாலும் கரன்ஸி நோட்டுகளைவிட நாணயங்களைதான் அவர்கள் மிக அதிகமாக விரும்பினார்கள்.

உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருக்கவே, வணிகம் அதிகமாகவே இருந்தது. உருளைக்கிழங்கு வணிகத்துக்கு மவோரி இனத்தவர் முக்கியத்துவம் கொடுத்ததற்கு ஒரு தனித்துவமான காரணமும் இருந்தது.

ஐரோப்பியர்கள் துப்பாக்கிகளை நியூசிலாந்துக்கு அறிமுகப்படுத்தினர். எதிராளியைப் பயப்படுத்த துப்பாக்கிகள் எவ்வளவு பயன்படும் என்பதை அறிந்து கொண்டவுடன் ஒவ்வொரு மவோரி குடும்பமும் தானும் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க வேண்டுமென்று விரும்பியது. வேடிக்கை என்னவென்றால் எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஐரோப்பியர்களுக்கு எதிராக துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை.

மாறாக அவர்களுக்குள் நடைபெற்ற உட்பூசலில்தான் பங்காளிகளை போட்டுத்தள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். அதாவது அவர்கள் எண்ணம் இப்படியிருந்தது. தங்களின் விவசாய நிலங்களுக்குப் பங்காளிகள்தானே போட்டியிடுகிறார்கள். வெளிநாட்டினர் காலியாக இருக்கும் நிலத்தில்தானே குடியேறுகிறார்கள்.

இதில் வேதனை என்னவென்றால் துப்பாக்கிக்குப் பதிலாக உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்தாக வேண்டிய கட்டாயம். இதற்காக அவர்கள் புதிய அசுத்தமான நிலங்களில் எல்லாம் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். இதன் காரணமாக அவர்கள் ஆரோக்கியம் குலையத் தொடங்கியது. அவர்கள் ஆரோக்கியத்தைத் தொலைக்க வேறு சில முக்கிய காரணங்களும் உருவாயின.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/புதிதாய்ப்-பிறந்த-நியூசிலாந்து-2/article6678845.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 3

 
 
வைடாங்கி உடன்படிக்கை கையொப்பமாவதைச் சித்தரிக்கும் ஓவியம்.
வைடாங்கி உடன்படிக்கை கையொப்பமாவதைச் சித்தரிக்கும் ஓவியம்.

கால் பதித்த ஐரோப்பியர்கள் தங்களோடு, ஐரோப்பாவில் பரவியிருந்த பல நோய்களையும் கூடவே கொண்டு வந்தனர். அது போதாதென்று மதுவகைகள், புகையிலை போன்றவற்றையும் பெருமளவில் அறிமுகப்படுத்தினர்.

மவோரி இன இளம் பெண்கள் ‘பகேஹா’ மாலுமிகளுக்கு பாலியல் தொழிலாளிகளாக படைக்கப்பட்டனர். மவோரி இனத்தவர் இப்படிப் பலவிதங்களில் தங்கள் ‘ஆரோக்கியமான வாழ்க்கையைத்’ தொலைத்தனர். இந்த சமயத்தில்தான் பிரிட்டனிலிருந்து வேறொன்றும் நியூசிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்டது அது கிறிஸ்தவ மதம்.

ஒரு பெரும் படையே பிரிட்டனிலிருந்து நியூசிலாந்துக்கு இறக்கப்பட்டது. அவர்கள் மத போதகர்கள். படிக்க கற்றுத் தருகிறோம், எழுத கற்றுத் தருகிறோம், புதிய முறையில் விவசாயம் செய்ய கற்றுத் தருகிறோம் என்றெல்லாம் தொடங்கி தங்கள் முக்கிய நோக்கத்தையும் கூடவே நிறைவேற்றிக் கொண்டார்கள் - கிறிஸ்தவ மத மாற்றம்.

தவிர ஆங்கில மருத்துவத்தையும் அவர்கள் மதமாற்றத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளூர் நோய்களுக்கு மவோரி இனத்தவர்கள் உள்ளூர் தாவரங்களை மருந்தாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள்தான். ஆனால் புதிதாக வந்து சேர்ந்த ஐரோப்பிய நோய்களுக்கு தீர்வு என்ன என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது. ஆங்கில மருத்துவம்தான் இந்த நோய்களுக்குக் குணம் அளித்தது. ‘மருத்துவம் மட்டுமல்ல எங்கள் மதமும் சேர்த்துதான் உங்களை குணப்படுத்தியது’ என்று கிறிஸ்தவ மதபோதகர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பலன் இருந்தது.

1788-ல் நியூ சவுத் வேல்ஸின் (இது ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குதான் மொத்த ஆஸ்திரேலியாவின் தலைநகரமான சிட்னி உள்ளது) ஆளுநராகப் பதவி யேற்றார் ஆர்தர் பிலிஃப். நியூ சிலாந்து இனி எங்களுக்குச் சொந்தம் என்றார்.

பிரிட்டிஷ் அரசு உடனே செயல்பட்டது. நியூசிலாந்தில் இருந்த பிரெஞ்சுக் குடியேற்றங்களை நீக்க முனைந்தது. உள்ளூர்வாசிகள் பயந்தனர். “எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். எங்களைக் காப்பாற் றுங்கள்” என்று பிரிட்டனை ஆண்ட மன்னன் நான்காம் வில்லிய முக்குக் கடிதம் அனுப்பினார்கள். உள்ளூர் ஐரோப்பியர்கள் மிகவும் சட்டமீறலாக நடந்து கொள்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடன் பிரிட்டன் ஜேம்ஸ் பஸ்பி என்பவரை ‘பிரிட்டிஷ் ரெசிடென்ட்டாக’ அனுப்பியது.

1816-லிருந்து மவோரி அரசு ஒன்று அமைவதற்காக பல உள்ளூர் மவோரி தலைவர்களும் இங்கிலாந்துக்கு அடிக்கடி சென்று வந்தனர். இதைத் தொடர்ந்து மன்னர் நான்காம் வில்லியம் நியூசிலாந்தின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1839ல் நியூ சவுத் வேல்ஸ் தேசத்துடன் நியூசிலாந்து இணைக்கப்பட்டது. அதே ஆண்டு லண்டனில் ‘நியூசிலாந்து கம்பெனி’ ஒன்று தொடங்கப்பட்டது. இதன் ஒரே நோக்கம் நியூசிலாந்தை பிரிட்டனின் காலனி ஆக்குவது தான்.

நியூசிலாந்தின்மீது பிரான்ஸ் அரசியல்வாதிகளும் கண்வைத் தனர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் குழப்பம் விளைந் தது. 1840 பிப்ரவரி 6 அன்று வைடாங்கி உடன்படிக்கை (Treaty of Waitangi) மவோரி தலைவர்களாலும், பிரிட்டிஷ் அரசியின் பிரதிநிதிகளாலும் கையெழுத்திடப்பட்டது.

1840ல் மவோரி மக்கள் பிரிட் டிஷ் ராணியுடன் ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி அரசியின் தலைமையை நியூசி லாந்து ஏற்கும். பிற நாடுகளிலி ருந்து நியூசிலாந்து மக்களை பிரிட்டன் பாதுகாக்கும். மவோரிக் களின் நிலங்களை அவர்களே அனுபவிப்பார்கள்.

1841ல் நியூசிலாந்து தனி பிரிட்டிஷ் காலனி ஆனது.

கொடுத்த வாக்கை பிரிட்டன் நிறைவேற்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மவோரிக்களின் நிலங்களைத் தாங்கள் வாங்கிக் கொண்டனர். ‘‘பணம் கொடுக்கிறோம்’’ என்றார்கள். ஆனால் நிலத்தை விற்கத் தயாராக இல்லாதவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 1860க்களில் போர் நடைபெற்றது. நிலங்கள் கட்டாயமாக பிடுங்கப்பட்டன.

பிரிட்டிஷ் மக்கள் ஆயிரக்கணக்கில் நியூசிலாந்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் புதிய வாழ்வு கிடைக்க பிரிட்டிஷ் அரசு உதவியது. ரயில் பாதைகள் போடப்பட்டன.

1852ல் நியூசிலாந்தின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் மவோரி இனத்தவருக்கு மரண அடி விழுந்தது. இதன்படி அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் மவோரி இனத்தவர் விலக்கப்பட்டனர். தானாகவே மவோரி இனத்தவர் எந்த அரசையும் அமைக்கக் கூடாது என்றும் தெளிவாகவே கூறியது அரசியல் அமைப்புச் சட்டம்.

மவோரி இனத்தவர் இனி பிரிட்டிஷ் குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்றது அரசியலமைப்புச் சட்டம். அதாவது பழங்குடி மக்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் பின்பற்றப்பட்டன. பெயர்தான் பிரிட்டிஷ் குடிமக்கள். இதனால் எந்தவொரு நன்மையும் மவோரி இனத்தவருக்குக் கிடைக்கவில்லை.

தொடக்கத்தில் ‘நம் இனத்தின் நிழலை பிரிட்டிஷ்காரர்களுக்கு அளிக்கிறோம். அதன் நிஜத்தை நாம்தான் வைத்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் கூறி வெற்றிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தார்கள் மவோரி இனத்தலைவர்கள். ஆனால் தொடர்ந்த நிகழ்ச்சிகள் நேரெதிராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

1858-ல் கிங் இயக்கம் என்ற ஒன்று உருவானது. மவோரி இனத்தவர்கள் உருவாக்கிய இயக்கம் இது. இதற்குத் தலைவராக அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இதனாலெல்லாம் குறிப்பிடத்தக்க பலன் எதுவுமே இல்லாமல் போனது.

அதேசமயம் ஆங்கிலேய மக்கள் நியூசிலாந்தில் அதிகமானதையொட்டி பல வசதிகளை நியூசிலாந்துக்கு உருவாக்கத் தொடங்கியது ஆங்கிலேயே அரசு. 1860லிருந்து 1881 வரை மட்டும் நியூசிலாந்தில் உயர்ந்த ஐரோப்பியர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். (அதற்கு முன் வெறும் 60,000 பேர்தான் இருந்தனர்).

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/புதிதாய்ப்-பிறந்த-நியூசிலாந்து-3/article6682137.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

புதிதாய்ப் பிறந்த `நியூ’சிலாந்து 4

 
newzealand_2241505f.jpg
 

உலகத்திலேயே நான்தான் முதலாவது’’ என்று ஒரு விதத்தில் நியூசிலாந்து பெருமைப்பட்டுக் கொண்டால் அது நியாயம்தான். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு அதுதான்.

உலகின் அத்தனை நாடுகளிலும் ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலைதான் இருந்தது. ஜனநாயகத் தொட்டில் என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ் நகரில் கூட இதே நிலைதான். மகளிர் வாக்குரிமையை ஆங்கிலத்தில் Women's suffrage என்பார்கள். மகளிருக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. அந்தக் காரணங்களில் முக்கியமாகக் கூறப்பட்டவை இவை.

அரசு என்றால் ஓர் ஆக்ரோஷம் வேண்டும். பிடிவாதமான உறுதி வேண்டும். இளகிய மனமெல்லாம் அரசை நடத்த சரிப்பட்டு வராது.

பாராளுமன்றம் என்றால் ராணுவம் தொடர்பான முடிவுகளையெல்லாம் எடுக்க வேண்டியிருக்கும். பெண்களால் இதெல்லாம் முடியுமா என்ன?

தவிர இயல்பாகவே பெண்களுக்கு வாக்களிக்கும் ஆசையெல்லாம் கிடையாது.

ராணுவத்தில் சேர வேண்டுமென்றால் பெண்கள் முன்வருவார்களா? அப்படியிருக்க வாக்களிப்பதில் மட்டும் ஏன் சமத்துவம்?

ஒரு பெண் நாட்டின் தலைமையேற்றால் அந்த நாட்டைப்பற்றிய இமேஜ் என்னாவது? அத்தனை நாடுகளின் ஏளனப் பார்வைக்கும் இலக்காக வேண்டுமா?

குடும்ப அமைப்பு நாசமாகிவிடும். சமூகம் சீர்கெட்டுவிடும்.

இப்படி எதையெதையோ வஞ்சகமாகவோ, அறியாமையினாலோ கூறி வாக்களிக்கும் உரிமை மகளிருக்கு மறுக்கப்பட்டு வந்தது. வேடிக்கை என்னவென்றால் பெண்களும் நெடுங்காலத்துக்கு இதற்கெதிராகக் குரல் எழுப்பவில்லை. மகளிர் வாக்குரிமைக்கான இயக்கம் முதலில் 1780களில் பிரான்சில் துவங்கியது. பிறகு ஸ்வீடனில் அது பரவியது. 1756-ல் அமெரிக்காவின் ஒரு சின்ன பகுதியான மாஸசூட்ஸில் மட்டும் இது அமலுக்கு வந்தது. (உள்ளூர் முனிசிபாலிடி தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை). பிறகு நியூ ஜெர்ஸியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் ஒரு பெண் திருமணமாகாதவளாகவும், தன் பெயரில் சொத்துக்கள் கொண்டவளாகவும் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற விநோத நிபந்தனையும் அதில் கலந்திருந்தது. இந்த நிலையில் பெண்களுக்கு நாடு தழுவிய வாக்குரிமை அளிக்க நியூசிலாந்து முன்வந்தது. 1893 செப்டம்பர் 19 உலக மகளிர் திருப்புமுனைகளில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் மகளிருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்.

வாக்களித்தது மட்டுமல்ல, ஒரு பெண்மணி தேர்தலில் வேட்பாளராகவே நின்றார். மேயர் பதவிக்குப் போட்டியிட்ட அந்தப் பெண்மணியின் பெயர் எலிசபத் ஏக்ஸ். மற்ற நாடுகளுகளைவிட நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் நீண்ட வருடங்களாகவே (1887லிருந்தே) பிரச்சாரம் செய்யப்பட்டது. பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக 1893-ல் இது சட்டமானது. அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்டில் அளிக்கப்பட்ட ஒரு மனு (1893 Petition).

கேட் ஷெப்பர்டு (KATE SHEPPARD) என்ற பெண்மணிக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. கேட் நன்கு படித்தவர். தன் அப்பாவைப் போலவே இசை ஆர்வம் மிக்கவர். தந்தை இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மகளுடன் கிரிஸ்ட்சர்ச் நகருக்கு குடிபெயர்ந்தார் அவர் அம்மா. கேட் கிறிஸ்தவ மதத்தில் தீவிரப் பற்று கொண்டவராக வளர்ந்தார். நாளடைவில் வால்டர் ஷெப்பர்டு என்பவரை கேட் மணந்து கொண்டார். தங்கள் மகனுக்கு டக்லஸ் என்று பெயரிட்டனர்.

மகளிரை இரண்டாம் தரக் குடிமக்களாக உலக நாடுகள் நடத்துவது கேட்டுக்குப் பிடிக்கவில்லை. “மனிதர்களைப் பிரிக்கும் எதுவாக இருந்தாலும் - அது இனம், வகுப்பு, பாலினம் என்ற எதுவாக இருந்தாலும் - வெற்றி காணப்பட வேண்டும்'' என்று மேடைகளில் முழங்கினார். அடுத்தடுத்து பெண்களின் வாக்குரிமைக்காக அரசிடம் மனுக்களைக் கொடுத்தார்.

பெண்களின் உலகம் என்பது குடும்பம்தான் என்று வாதிட்டனர் எதிர்க்கட்சியினர். `அதனால் என்ன? பெண்களுக்கு வாக்குரிமை அளித்தால் குடும்பங்களைப் பாதுகாக்கும் பல கொள்கைகளை அவர்கள் ஆதரித்து அறிமுகப்படுத்த வாய்ப்பு உண்டே' என்றார் கேட்.

முதலில் மேல்சபையில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. ஆதரவாக 20 வாக்குகள். எதிராக 18 வாக்குகள். கீழ் சபையில் ஏற்கனவே அறுதியிட்ட மெஜாரிட்டியில் மகளிருக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.

பெண்களுக்காக வாக்குரிமை அளிக்கப்பட்டவுடன் கேட், அப்பாடா என்று ஓய்வெடுக்க முடியவில்லை. காரணம் அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல். “பெண்களே, உடனே உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுங்கள்'' என்று முழங்கினார். பெண் வாக்காளர்களில் மூன்றில் இருவர் என்கிற விகிதத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

தேர்தலுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று அங்கும் மகளிர் வாக்குரிமை குறித்து பேச்சுகள் நிகழ்த்தினார். அங்கும் இந்த ஆர்வம் பரவத் தொடங்கியது. மீண்டும் நியூசிலாந்து திரும்பிய போது அங்கு புதிதாக உருவாகியிருந்த மகளிர் தேசியக் குழுவின் தலைமைப் பதவி இவரைத் தேடி வந்தது. எனினும் சில வருடங்களிலேயே உடல்நிலை காரணமாக அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். என்றபோதிலும் தன் எழுத்து மூலமாக மகளிர் உரிமையைத் தேடலைத் தொடர்ந்தார்.

நியூசிலாந்து சரித்திரத்தில் மட்டுமல்ல மகளிர் முன்னேற்றச் சரித்திரத்திலும் கேட் ஷெப்பர்டு முக்கியமானவர். இவரது உருவம் நியூசிலாந்தின் 10 டாலர் நோட்டில் இடம் பெற்றது.

2006ல் மகளிர் சரித்திரத்தில் மற்றொரு சரித்திரம் படைத்தது நியூசிலாந்து. ஏற்கனவே அந்த நாட்டில் தலைவியாக அரசி இருக்க, நியூசிலாந்தின் பிரதமர், கவர்னர் ஜெனரல், சபாநாயகர், முக்கிய நீதிபதி என்று அத்தனை உயர் பதவிகளிலும் பெண்கள்!

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/புதிதாய்ப்-பிறந்த-நியூசிலாந்து-4/article6683574.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 5

 
 
நியூசிலாந்தின் கோல்டன் பே நீரூற்றின் ஒரு பகுதி. (கோப்புப் படம்).
நியூசிலாந்தின் கோல்டன் பே நீரூற்றின் ஒரு பகுதி. (கோப்புப் படம்).

மகளிர் வாக்குரிமை அறிமுகத்தில் கேட் ஷெப்பர்டு பெயர் எப்படி அழிக்க முடியாத இடத்தைப் பெற்றதோ அதேபோல் மற்றொரு பெண்மணியும் நியூசிலாந்து சரித்திரத்தில் தனி இடத்தைப் பெற்றார். 2011ல் 98 வயதுப் பெண்மணி ஒருவர் இறந்தபோது, வெலிங்டன் நகரமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. அவர் பெயர் நான்ஸி வேக்.

இரண்டாம் உலகப் போரில் இவர் ஓர் ஒற்றராக விளங்கினார். பின்னர் மிகவும் தேடப்படும் குற்ற வாளிகளில் ஒருவராகக் கருதப்பட்டார். மிகவும் தைரியமான பெண்மணி இவர் என்பதில் இருவேறு கருத்து கள் இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, நாஜிகளுக்கு எதிராக இவர் செய்த ஒற்று வேலைகள் மிக அதிகம்.

‘‘நான் ஜெர்மானியர்களை வெறுத்தேன். அவர்கள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட வேண்டும் என நினைத்தேன்’’ என்று வெளிப் படையாகவே கூறியவர். 1940ல் நாஜிக்களால் பிரான்ஸ் ஆக்ரமிக்கப்பட்டது. அப்போது தனது ஒற்று வேலைகள் மூலம் இரண்டாயிரம் யூதர்களை பிரான்சி லிருந்து நான்ஸி ரகசியமாகத் தப்ப வைத்தார். போகிற போக்கில் ஜெர்மானிய ஆயுதக் கிடங்குகளை சின்னாபின்னமாக்கினார்.

நாஜிக்களின் கெஸ்டபோவின் ‘மிகவும் தேடப்படும் நபர்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்தவர் இவர். (கெஸ்டபோ என்பது ஜெர்மனியின் ரகசியப் போலீஸ் அமைப்பின் பெயர்). ஜெர்மனி காவல் துறையில் நான்ஸிக்கான ரகசியப் பெயர் ‘வெள்ளை எலி’ எப்படிப் பிடித் தாலும் எப்படியோ தப்பித்துவிடும் சாமர்த்தியம் கொண்டதால் உண்டான காரணப் பெயர்..

1957ல் போர் விமான ஓட்டி ஜான் ஃபார்வேடு என்பவரை மணந்துகொண்டு ஆஸ்திரேலி யாவுக்குச் சென்றார். அவர் இறந்த பிறகு இங்கிலாந்தை அடைந்தார். பிரான்ஸ் அரசு மிக உயர்ந்த ராணுவ மரியாதையை அவருக்கு அளித்தது. 2006ல் நியூசிலாந்து அரசும் அவரைப் பெரிய அளவில் கெளரவித்தது.

குழந்தை பிறக்காத ஏக்கம் அவர் மனதில் இருந்தது. அந்த ஏக்கத்துடனேயே இறந்தார் வேக். அவர் உடல் எரிக்கப்பட்டது. மத்திய பிரான்ஸ் பகுதியில் அவரது சாம்பல் தூவப்பட்டது. நிரந்தரமாக ஒரு நினைவகம் அவருக்குக் கட்ட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

இப்போது மீண்டும் நியூசிலாந் தின் சரித்திரத்தில் விட்ட இடத்துக்கு வருவோம். 1947ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது நியூசிலாந்து. அடுத்த மூன்று வருடங்களில் கொரியன் போரில் நியூசிலாந்து ராணுவம் ஐ.நா. ராணுவத்தோடு இணைந்து பணியாற்றியது. 1960க் களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வியட்நாமுக்கு தன் ராணுவத்தில் ஒரு பகுதியை அனுப்பியது. அது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

1984ல் லேபர் அரசு தேர்ந் தெடுக்கப்பட்டது. பிரதமர் டேவிட் லங்கே பல புதிய பொருளா தாரச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தினார். அணுசக்தி ஆயுதங் களைக் கொண்ட அமெரிக்கக் கப்பல்கள் தங்கள் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து சேரக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1951ல் நியூசிலாந்துடன் தான் செய்து கொண்டிருந்த பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றது அமெரிக்கா.

நியூசிலாந்தின் அரசியல் பக்கங் களில் சில குறிப்பிட்ட துளிகளைப் பார்ப்போம். 1997ல் ஜென்னி ஷிப்ளி நியூசிலாந் தின் முதல் பெண் பிரதமரானார். 2002ல் சமோவா என்ற பகுதியில் ‘நாற்பது ஆண்டு சுதந்திரம்’ கொண்டாடப்பட்டபோது பிரதமர் ஹெலன் கிளார்க் கடந்த காலத்தில் உள்ளூர் இன மக்களை நியூசிலாந்து அரசு சரியான விதத்தில் நடத்தாததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக (வேறெப்படி இருக்கும்) ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்டது. 2004ல் அரசு செய்த ஓர் அறிவிப்பு மவோரி மக்களால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. கடல் படுகைகள் தேசியமயமாக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது நடைமுறைப் படுத்தப்பட்டால் தங்களது பாரம்பரிய உரிமைகள் பறிபோகும் என்று அச்சப்பட்டனர் மவோரி இனத்தினர். அரசின்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் பலனில்லை. அரசு இந்தத் தீர்மா னத்தைத் தாக்குபிடித்து வென்றது.

நியூசிலாந்து தொடர்பான வேறு சில சாதனைகள் மற்றும் வேதனைகளைப் பார்க்கலாமா?

2004 இறுதியில் தன்பாலின திரு மணத்துக்கு நியூசிலாந்து பாராளு மன்றம் அங்கீகாரம் அளித்தது. இந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்தது. அதன் வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதம் மிக அதிகமானது.

2011ல் மற்றொரு பேரதிர்ச்சி. நியூசிலாந்தின் இரண்டாவது பெரும் நகரமான கிரைஸ்ட் சர்ச் என்ற பகுதியில் ஒரு பெரும் நில நடுக்கம் உண்டாக, மக்களில் பலரும் மடிந்தனர். இந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி மீண்டும் வெல்ல, ஜான் கீ மூன்றாம் முறையாக பிரதமராகி இருக்கிறார்.

நியூசிலாந்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கல்வி நோக்கத்துக்காக ஒரு பவுண்ட் யுரேனியம் அல்லது தோரியம் (இவை கதிரியக்கம் மிக்கவை) வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அது வெடித்து விட்டால் பத்து லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.

நியூசிலாந்தில் ‘90 மைல் கடற்கரை’ என்ற ஒன்று உண்டு. உண்மையில் இதன் நீளம் 90 கிலோ மீட்டர். நவீன பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியான டாக்டர் ஹரோல்டு கில்லியெஸ் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். நியூசிலாந்து சிறைகளில் உள்ளவர்களில் 95 சதவிகிதம்பேர் ஆண்கள். அந்த நாட்டில் அணுசக்தி நிலையங்களே கிடையாது.

குழந்தைகளுக்கு எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துவிட முடியாது. தன் பெயர் விசித்திரமாக இருக்கிறது என்று ஒரு குழந்தை கருதினால் நீதி மன்றம் அந்தப் பெயரை மாற்றச் சொல்லும். கிறிஸ்துமஸ், தூய வெள்ளி, ஈஸ்டர் ஆகிய திருநாட்களில் தொலைக்காட்சிகளில் விளம்பரங் களுக்குத் தடை விதித்திருக்கும் நாடு நியூசிலாந்து.

கோல்டன் பே என்ற பகுதியில் உள்ளன சில நீரூற்றுகள். இவற் றிலிருந்து தினமும் சுமார் இரண்டு பில்லியன் லிட்டர் தண்ணீர் வெளி யேறுகிறது. அதாவது, தேவைப் பட்டால் மொத்த நியூசிலாந்துக்கும் இது குடிநீர் சப்ளை செய்ய முடியும். அதுமட்டுமல்ல அண்டார்டிகாவை விட்டுவிட்டால் உலகிலேயே மிகத் தூய்மையான, இயற்கையான தண்ணீர் கிடைப்பது இங்குதானம். இந்தத் தண்ணீருக்குள் பார்வையைச் செலுத்தினால் சுமார் 63 மீட்டர் ஆழம்வரை தெளிவாகப் பார்க்க முடிகிறதாம்.

‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் திரைப்படங்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இப்படி படமாக்க நியூசிலாந்து அரசு பெரிதும் உதவியது. படப்பிடிப்புக் குழுவின் தேவைகளை நிறைவேற்ற ஒரு தனி அமைச்சகத்தையே உரு வாக்கித் தந்தது. இதெல்லாம் வீண் போகவில்லை. அந்தப் படங்கள் வெளியான பிறகு நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமானது.

நியூசிலாந்தில் அழுத்தமாக நடந்து வரும் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்டோம். அது என்ன?.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/புதிதாய்ப்-பிறந்த-நியூசிலாந்து-5/article6688799.ece

  • தொடங்கியவர்

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து - 6

 
 
நியூசிலாந்து வரைபடம்.
நியூசிலாந்து வரைபடம்.

‘குடும்பம் என்கிற அமைப்பு நியூசிலாந்தில் சிதைந்து கொண்டு வருகிறது. எளிதில் விவாகரத்து கிடைக்கிறது. தன்பாலினத் திருமணங்கள் அரிதல்ல போன்ற சூழல்கள் இந்தச் சிதைவுக்கு உறுதுணையா கின்றன. பெண்கள் ஒரே நேரத்தில் பலருடன் வாழ்க்கை நடத்துவதும், குழந்தைகளை அனாதையாக்கி விட்டுச் செல்வதும் அப்படியொன் றும் அபூர்வ விஷயமாகத் தெரிய வில்லை’. இப்படிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள் கிறிஸ்தவ மதத் தலைவர்கள்.

மக்களின் போக்கு வேறொரு விதத்திலும் மாறி வருகிறது. 1800களில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறினார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்களில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. இவர்களில் திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள், முன்னாள் கைதிகள், இங்கிலாந்து சர்ச்சின் பிரதிநிதிகள், அவர்களின் மனைவிகள் என்று பலரும் இருந்தார்கள்.

முதலாம் உலகப் போரின்போது நியூசிலாந்தில் வசித்த பல ஆங்கி லேயர்கள் இங்கிலாந்துக்குக் கிளம்பினர். இருநாட்டு அரசுகளும் அதற்கு ஒத்துழைத்தன.

1974 வரை ஆங்கிலேயர்கள் நியூசிலாந்துக்குச் செல்வதற்கும், தங்குவதற்கும் அரசு இலவசமாக உதவியது. அதற்குப் பிறகு நியூசிலாந்திலிருந்து வொர்க் பர்மிட் இருந்தால் மட்டுமே நியூ சிலாந்துக்குள் செல்ல அனுமதி யளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து செல்லும் ஆங்கி லேயர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. நியூசிலாந்தின் பொருளாதாரம் அப்படியொன்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதே முக்கிய காரணம். தொடக்கத்தி லிருந்தே தங்கள் மதத்தை நியூ சிலாந்தில் பரப்புவதில் இங்கி லாந்து மிகவும் குறியாக இருந்தது.

எப்படியோ பிரிட்டனின் தாக்கம் நியூசிலாந்தில் பலமாகவே இருந்த ஒன்றுதான். இன்று நியூசி லாந்தில் பிரபலமாக உள்ள ரக்பி, கிரிக்கெட் போன்ற விளையாட் டுகள் கூட இங்கிலாந்திலிருந்து பரவியவைதான். ஆனால் நியூசிலாந்து மக்களில் பலரும் இப்போது வேர்களை நோக்கிப் பயணம் செல்லவே விரும்புகிறார்கள்.

மொழி எனும் அடிப்படையில் நியூசிலாந்து இப்போது இங்கிலாந் திடமிருந்து விலகத் தொடங்கி விட்டது. தங்கள் பேச்சுவார்த்தை யில் அதிக அளவு மவோரி வார்த் தைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். நியூசிலாந்துகாரர்கள் பேசிக் கொள்ளும் ஆங்கிலம் இதன் காரணமாக வெளிநாட்டினருக்குப் புரிவது கஷ்டமாகவே உள்ளதாம்.

இதற்கு முன் இடங்களின் பெயர் களைக் குறிப்பிட மட்டுமே மவோரி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அலுவலகங்களில்கூட வானு, இவி, மஹி, கியோரா போன்ற வார்த்தைகள் வெகு சரளமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை மவோரி வார்த்தைகள். இவற்றின் அர்த்தம் முறையே குடும்பம், இனம், பணி மற்றும் ஹலோ. வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் புழக்கத்திலுள்ள 1000 மவோரி வார்த்கைளுக்கான ஆங்கில அர்த்தங்களை வெளியிட்டுள்ளது.

1970க்களிலிருந்து மவோரியும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. 1980க்களில் ஆரம் பக்கட்டப் பள்ளிகளில் மவோரி மொழியும் பயிற்றுவிக்கப்படு கிறது.

இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட நாடு நியூசிலாந்து. ‘’அரசியைக் கடவுள் காப்பாற்றட் டும்’’ (God save the Queen) என்று தொடங்கும் பாடல் ‘‘நியூ சிலாந்தைக் கடவுள் பாதுகாக் கட்டும்’’ (God defend New Zealand) என்று தொடங்கும் பாடல் ஆகிய இரண்டுமே அதிகார பூர்வமான தேசிய கீதங்கள்.

1977வரை அரசி பாடல்தான் ஒரே தேசிய கீதமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பெரும் பாலும் நியூசிலாந்து பாடல் தான் தேசிய கீதமாக ஒலிக்கிறது. 1972 ஒலிம்பிக்ஸில் இதுதான் ஒலித் தது. இதைத்தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஓர் இயக்கமே நடந்தது.

அதன் பிறகு இதற்கும் சம உரிமை உண்டு என்று முடிவெடுத் தது நியூசிலாந்து. இதற்கான சம்மதத்தையும் ராணி இரண்டாம் எலிசபெத் அளித்தார்.

மூன்றாவது முறையாக நியூசி லாந்தின் பிரதமராகி இருக்கிறார் ஜான் கீ. இவர் அந்த நாட்டின் 38வது பிரதமர். நியூசிலாந்து தேசியக் கட்சியின் தலைவர். அடிக்கடி மாதாகோவிலுக்குச் சென்றாலும் ‘‘இறைவன் உண்டா இல்லையா என்பதில் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை’’ என்கிறார்.

இம்முறை ஆட்சிப் பொறுப் பேற்றதும் அவர் அவசரமாகச் செய்த காரியம் அந்த நாட்டுக் கொடியை மாற்றி அமைத்ததுதான். அதாவது அந்த நாட்டின் கொடியில் இடம் பெற்றிருந்த பிரிட்டனின் யூனியன் ஜாக் இனி மறைந்துவிடும். ‘எங்கள் நாட்டின் தனித்துவம்தான் இனி எங்கள் தேசியக் கொடியில் இருக்கும்’ என்று பெருமை பொங்கக் கூறியி ருக்கிறார் ஜான் கீ.

கொடியை மாற்றுவதில் அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர் களுக்குச் சம்மதம்தான். ஆனால் அதற்கான காரணம் பலரைப் பொருத்தவரை மாறுபடுகிறது. ‘ஆஸ்திரேலியாவின் கொடியைப் போல காட்சி தருகிறது எங்கள் நாட்டுக் கொடி’ இதுதான் பலரது ஆதங்கம்.

காரணம் எதுவாக இருந்தாலும் கொடி மாற்றத்துக்கு பலத்த ஆதரவு. அக்டோபர் 29 அன்று புதிய கொடி தொடர்பான கருத்துக் கேட்பு நடைபெற்றது. 2016க்குள் புதிய தேசக் கொடி வடிவம் தீர்மா னிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

‘நாட்டின் பொருளாதாரம், சூழலில், ஆரோக்கியம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத் தாமல் கொடியைப் பிடித்துக் கொண்டு அலைகிறார் பிரதமர்’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பழைய கொடி மாற்றப்பட வேண்டுமென்பதில் நெருடல் எதுவும் இல்லை. ஆனால் புதிய கொடியைத் தீர்மானிக்கும் போது வேறுபாடுகள் முளைவிடலாம்.

http://tamil.thehindu.com/world/புதிதாய்ப்-பிறந்த-நியூசிலாந்து-6/article6690778.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2

 
 
நியூசிலாந்தின் மவோரி இன மக்கள். (கோப்புப் படம்)
நியூசிலாந்தின் மவோரி இன மக்கள். (கோப்புப் படம்)

 

.

ஆவணங்களின்படி முதலில் நியூசிலாந்தை அடைந்த ஐரோப்பியர்கள், போர்சுக்கீசியர்கள்தான். ஏபெல் டஸ்மான் என்பவர் தலைமையில் இவர்கள் குழு நியூசிலாந்தில் இறங்கியது. உள்ளூர் வாசிகள் கடுமையாகப் போரிட்டனர். போர்த்துகீசியர்களை இவர்கள் ஓடஓட விரட்டினாலும், தங்கள் இனத்தில் ஒருவர் இறந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் துப்பாக்கி குண்டினால் அவர் இறந்து அவர்களுக்குப் பேரதிர்ச்சி. காரணம் துப்பாக்கி என்பது அவர்களுக்கு அறிமுகமாகாத ஒன்று.

 

இதில் சில பிழையான தகவல்கள் இருகின்றன.
நியூசீலாந்தை முதன் முதலில் கண்டுபிடித்த  ஏபெல் தாஸ்மான் என்பவர் போர்த்துக்கேயர் அல்ல.

அவர் ஒரு ஒல்லாந்தர்.
ஒல்லாந்தைச் சேர்ந்த தாஸ்மான் குழுவே நியூசீலாந்தைக் கண்டுபிடிந்தவர்கள். ஒல்லாந்தர் அந்த நாட்டிற்கு இட்ட பெயர் நோவா சீலாண்டியா .
ஒல்லாந்தர்களின் பழக்கமே தாங்கள் கண்டு பிடிக்கும் நாடுகளுக்கு அல்லது தீவுகளுக்குத் தங்கள் நாட்டில் இருக்கும் நகரின் பெயரைச் சூட்டி மகிழ்வதே. அதே போலத்தான் ஒல்லாந்து மாகாணமான சீலண்ட்  என்ற பெயரை நோவா சீலாண்டியா என இன்றைய நியூசீலாந்திற்கு இட்டனர்.

பின்னர் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரை அப்படியே மொழி பெயர்ந்து நியூசீலான்ட்  என அழைத்தனர்.

  • தொடங்கியவர்

 

 

இதில் சில பிழையான தகவல்கள் இருகின்றன.
நியூசீலாந்தை முதன் முதலில் கண்டுபிடித்த  ஏபெல் தாஸ்மான் என்பவர் போர்த்துக்கேயர் அல்ல.

அவர் ஒரு ஒல்லாந்தர்.
ஒல்லாந்தைச் சேர்ந்த தாஸ்மான் குழுவே நியூசீலாந்தைக் கண்டுபிடிந்தவர்கள். ஒல்லாந்தர் அந்த நாட்டிற்கு இட்ட பெயர் நோவா சீலாண்டியா .
ஒல்லாந்தர்களின் பழக்கமே தாங்கள் கண்டு பிடிக்கும் நாடுகளுக்கு அல்லது தீவுகளுக்குத் தங்கள் நாட்டில் இருக்கும் நகரின் பெயரைச் சூட்டி மகிழ்வதே. அதே போலத்தான் ஒல்லாந்து மாகாணமான சீலண்ட்  என்ற பெயரை நோவா சீலாண்டியா என இன்றைய நியூசீலாந்திற்கு இட்டனர்.

பின்னர் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரை அப்படியே மொழி பெயர்ந்து நியூசீலான்ட்  என அழைத்தனர்.

உங்கள் தகவல்களுக்கு நன்றி வாத்தியார். தி இந்து இணணயத்திலும் பின்னூட்டம் இட்டவர்கள் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்து இருந்ததை அவதானித்து இருந்தேன்.

நன்றாக இருக்குது தொடருங்கள் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.