Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன?

கலாநிதி சர்வேந்திரா

<p>முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன?</p>
 

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாக சுமந்திரனின் விசுவாசிகள் அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் நடாத்திய கூட்டங்களிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இக் கருத்துக்கள் இரண்டு விடயங்களில் மையங் கொண்டிருந்தன. முதலாவது விடயம் வடக்கு மாகாணசபை நிறைவேற்றியிருந்த இனவழிப்பத் தீர்மானம் தொடர்பானது. இரண்டாவது விடயம் முதலமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் எடுத்த நிலைப்பாடு மற்றும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பானது. தேர்தலின்போது முதலமைச்சர் எடுத்த நிலைப்பாட்டைப் பற்றிப் பேசும்போது முதலமைச்சரைப் பற்றிக் கிண்டலாகவே சுமந்திரன் பேசினார். «ஊமையாக இருக்கப் போவதாக முதல்நாள் அறிவித்தார். மறுநாள் ஊமை வாய்திறந்து பேசியது» என்றவாறு அவரது கிண்டல் இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பேசித் தீர்த்திருக்க வேண்டிய ஒரு விடயத்தை, அவ்வாறு செய்யாது முதலமைச்சருக்கு எதிரான பரப்புரையாக ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

சுமந்திரன் முதலமைச்சருக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியவுடன் அவரது விசுவாசிகள் மேலும் ஒரு படி வேகமான முறையில் செயற்படத் தொடங்கினர். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் தெரியாது, இராஜதந்திரம் தெரியாது, போலிச்சாமியார் பிரேமானந்தாவின் பக்தர், கூட்டமைப்புக்கு அவர் ஒரு பாரம் போன்ற கருத்துக்களைச் சற்றும் தயங்காது முன்வைக்கத் தொடங்கினர். எழுத்தில் வெளிப்படுத்துவதை விட நேரடியான தனிப்பட்ட உரையாடல்களில் முதலமைச்சர் மீதான கண்டனங்கள் கடுமையாக இருந்தன. முதலமைச்சரைத் தனிமைப்படுத்தி, அவருக்கு நெருக்கடி கொடுத்து, தமக்கு அடிபணியச் செய்யும் திட்டம் ஒன்றை சுமந்திரனும் அவரது விசுவாசிகளும் செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழும்பும் அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இவற்றின் உச்சக்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியுடன் முதலமைச்சர் மேற்கொண்ட கடிதத் தொடர்பு குறித்த பிரதிகள் வெளியிடப்பட்டு, முதலமைச்சரின் நேர்மை குறித்துச் சந்தேகம் எழுப்பக்கூடிய வகையில் 4.10.2015 அன்று வெளியாகிய தீபம் பத்திரிகை (இதழ் 11) கட்டுரை ஒன்றினை வடித்திருந்தது. இக் கட்டுரையாளருக்குக் கிடைக்கும் தகவலின் படி கூட்டமைப்புத் தலைமைக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்களின் பிரதியே தீபம் பத்திரிகைக்கு வழங்கப்பட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக் கட்டுரையின் தலைப்பில் முதலமைச்சர் «விலை போகாமால் இருந்தாரா» எனக் கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. தீபம் பத்திரிகையில் வந்த கட்டுரை கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. «முதலமைச்சர் நிதியம் செயற்படத் தொடங்கும் போது தாயகத்தின் மேம்பாட்டுக்கு நிதிப் பங்களிப்பை வழங்க புலம்பெயர் மக்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை செய்யவேண்டிய தருணத்தில் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்» என்று தீபத்தில் வெளிவந்த கட்டுரை தொடர்பாக தனது அதிருப்தியினை ஒரு செயற்பாட்டாளர் வெளிப்படுத்தினார். «தீபம் குழுமத்தினர் யாருக்கு விலை போனார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்கும் இவ்வேளையில், முதலமைச்சர் விலை போனாரா என இவர்கள் கேட்பது ஒரு முரண்நகை» என்றார் இன்னொருவர். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் விரிவாகப் பதிலளித்திருக்கிறார். இப் பதிலின் ஊடாக வெளிப்படும் முக்கியமானதொரு விடயம் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான முதலமைச்சரின் சம்மதத்தை பெறுதற்கு ஐக்கிய நாடுகள் சபை முயன்றிருக்கிறது என்பதாக இருக்கிறது.

இக் கட்டுரையின் நோக்கம் முதலமைச்சருக்கும் சுமந்திரன் அணியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை விபரிப்பது அல்ல. மாறாக முதலமைச்சரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன என்பது தொடர்பாகச் சுருக்கமாக நோக்குவதுதான். முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்பாகச் சுமந்திரன் வெளிப்படையாகப் பேசினாலும், முதல்வருக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்தான் முதல்வருக்கு எதிரான கருத்துக்கள் சுமந்திரனாலும் அவரது ஆதரவாளர்களாலும் வெளிப்படையாக முன்னெடுக்கப்படக் காரணம் எனலாம். முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேடிப்பிடித்து அரசியலுக்கு கொண்டு வந்தவர் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனே. தாம் முன்னெடுக்க விரும்பும் அரசியலுக்கு ஒத்துழைப்பவராக தனது நிலைப்பாட்டை ஆதரித்து நிற்பவராக விக்னேஸ்வரன் இருப்பார் என சம்மந்தன் எதிர்பார்த்தார். முதலமைச்சர் விடயத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்த கனவையும் தகர்த்துத்தான் சம்மந்தன் இந்த முடிவை எடுத்திருந்தார். முதல்வரான ஆரம்பத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் எடுத்த நிலைப்பாடுகள் சம்மந்தனின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்திசைவாகவே இருந்தன. காலப்போக்கில் முதல்வரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மேட்டுக்குடி அரசியல் சிந்தனைப்போக்குக்கு மாறாக மக்களை மையம் கொண்டதொரு சிந்தனைப்போக்கு அவருக்குள் ஏற்படத் தொடங்கியது. இது மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதனால் தன்னில் ஏற்பட்டுள்ள மாற்றம் என இதனை முதல்வர் வெளிப்படுத்துகிறார்.

இம் மாற்றத்தின் விளைவாக முதல்வர் எடுத்த தீர்மானங்களில், தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணை தேவை என்று வடக்கு மாகாணசபை எடுத்த தீர்மானம் எவருக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ இல்லையோ, கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடம் எதுவும் கலந்து பேசாது, தனக்கு எதுவும் தெரிவிக்காது இந்தத் தீர்மானத்தை முதல்வர் விக்னேஸ்வரன் நிறைவேற்றியமை கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தனுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்க வேண்டும். தான் கூட்டி வந்த கடாவே தனது மார்பின் மீது பாய்ந்து விட்டதாகவே அவர் உணர்ந்திருப்பார். இருப்பினும் இவ் விடயத்தில் மக்கள் கருத்து முதல்வருக்குச் சாதகமாக இருந்த காரணத்தால் இவ் விடயத்தை கூட்டமைப்புத் தலைமை பெரிதுபடுத்தாது கிடப்பினுள் போட்டிருந்தது. இருப்பினும் இவ் விடயத்தின் 'பாரதூரத் தன்மை' காரணமாக முதல்வரை எப்படியும் கட்டுக்குள் கொண்டு வந்து தமது அரசியல்பாதையில் அவரை வழிநடாத்துவதற்கு உரிய வழிமுறைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

இதன் பின்னர் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் எடுத்த நிலைப்பாட்டைக் காரணமாக வைத்து முதல்வர் மீது அழுத்தத்தை பிரயோகிக்க கூட்டமைப்புத் தலைமை முடிவெடுத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தேர்தலில் முதல்வர் எடுத்த முடிவு குறித்து கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட பலர் மத்தியில் அதிருப்தியும் கவலையும் இருந்தது. இச் சூழலைப் பயன்படுத்தி கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அமைதியாக இருக்க, முதல்வர் மீதான கண்டனத்தை சுமந்திரன் வெளிப்படுத்தத் தொடங்கினார். சுமந்திரன் எடுக்கும் இந்த நிலைப்பாடு தலைவர் சம்மந்தனின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் என்பது நம்புவததற்கு கடினமான விடயம்.

இப் பின்னணியுடன் பார்க்கும்போது முதல்வர் விக்னேஸ்வரன் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டின் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே முதல்வர் மீதான கண்டனங்கள் வெளிப்படுத்தப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. கூட்டமைப்புத் தலைமை உள்ளூர் விசாரணைப் பொறிமுறையை ஆதரிக்கிறது. முதலமைச்சர் அனைத்துலக விசாரணையைக் கோருகிறார். முதல்வர் தமிழின அழிப்புத் தொடர்பான விசாரணையைக் கோருகிறார். கூட்டமைப்புத் தலைமை இன அழிப்பத் தொடர்பாக விசாரணையை கோருவதனைத் தவிர்க்க முயல்கிறது. முதல்வர் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வை வலியுறுத்துகிறார். கூட்டமைப்புத் தலைமை இந் நிலைப்பாட்டை தேர்தல் கால நிலைப்பாடாகக் கொண்டிருந்த போதும், நடைமுறையில் இந் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டம் நோக்கிச் செயற்படுவதாக இல்லை.

இத்தகையதொரு நிலையில், கூட்டமைப்புத் தலைமையின் அரசியல் நிலைப்பாட்டுக்கு மிகுந்த சவால் மிக்கவராக முதல்வர் விக்னேஸ்வரன் மாறியிருக்கிறார். இவரைக் கட்டுக்குள் கொண்டுவராவிடின் எதிர்காலத்தில் கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு இவர் சவாலாக இருப்பார் என்ற அச்சம் கூட்டமைப்பத் தலைமைக்கு ஏற்பட்ட காரணத்தால்தான் அவரைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே முதல்வருக்கு எதிரான செயற்பாடுகள் பகிரங்கமாவே மேற்கொள்ளப்படுவதாகவும் கருத இடமுண்டு. முதல்வரின் தேர்தல் கால நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்புக்கு இருக்கக்கூடிய முரண்பாடுகள் கூட்டமைப்புக்குள் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். முதல்வர் எடுக்கும் அரசியல் முடிவுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இருக்கக்கூடிய கருத்து முரண்பாடுகள் தீர்க்கப்பட முடியாதவையா? இம் முரண்பாடுகள் எங்கிருந்து எழுகின்றன? மக்கள் முன்னிலையில் கூட்டமைப்பு முன்வைக்கும் நிலைப்பாடுகளுக்கும் முதல்வரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருக்கின்றனவா? அல்லது அரசியலை கூட்டமைப்பத் தலைமை கையாளும் முறையில் இருந்து இம் முரண்பாடுகள் எழுகின்றனவா? இக் கேள்விகளுக்கான பதிலை நாம் காண முடிந்தால் இம் முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகை கிடைக்கக்கூடும்.   

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=c8dd993e-ac4b-440b-ade5-e6a7a24796a1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.