Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

ராசி பட்டு... ரெமி பவுடர்! - ஜெயலலிதா தோன்றிய விளம்பரப் படங்கள்

 
 

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. தமிழக அரசியல் இன்னும் சீரான நிலைக்குத் திரும்பவில்லை. முக்கியமாக அ.தி.மு.க-வில் வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.

ஜெயலலிதா என்னும் ஆளுமை அரசியலில் கால் பதிப்பதற்கு முன்புவரை திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். சிறந்த நடிகைக்கான ஏழு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் ஆறு தமிழ்நாடு சினிமா விருதுகளையும் வாங்கி குவித்தவர். நடிப்பு மட்டுமல்ல பின்னணி பாடகி என்னும் முகமும் ஜெ.வுக்கு உண்டு. 1960-ல் ஸ்லீவ்லெஸ் ஆடைகளும் குட்டைப் பாவாடைகளும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஜெயலலிதாவையே சேரும். சினிமா மட்டுமல்ல அவர் நடித்த விளம்பரப் படங்களும் சூப்பர்ஹிட். ஜெயலலிதாவின் அரசியல் மேடை பேச்சுகளும் திரைப்படத்தில் நடித்த புகைப்படங்களும் ஏராளமாக இணையத்தில் உள்ளன. ஆனால், அவர் நடிப்பில் வெளியான விளம்பரப் படங்கள் காணக்கிடைப்பது அரிது. எனவே 50 ஆண்டுகளுக்கு முன்னாள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஜெயலலிதா விளம்பரப் படங்களைத் தேடிப்பிடித்து உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்!

வட்ட நீள டப்பியில் ரெமி பவுடர்! 1960-ல் ரெமி பவுடர் விளம்பரத்தில் கோட்டோவியமாக வெளிவந்த ஜெயலலிதா புகைப்படம்!

ஜெயலலிதா
 

 
 

 

ஜெயலலிதா

1964-ல் `ராசி’ பட்டு விளம்பரங்களில் அறிமுகமாகி ராசி மங்கை எனத் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார் ஜெயலலிதா.

jayallaithaa

jayalalithaa

60-களுக்குப் பிறகு சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்த பின் விளம்பரங்களில் நடிப்பதற்கு விடை கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

மூன்று முறை திருமணமானவர், எக்கச்சக்க காதல்: விமர்சனங்களைத் தாண்டி மண்டேலா பெண்களுக்காகச் சாதித்தது என்ன? #Mandela

 
 

ன்று நெல்சன் மண்டேலாவின் நினைவு நாள். கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய உலகின் முக்கியத் தலைவராக அறியப்படும் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்க பெண்களின் உரிமைகளை மீட்பவராக இருந்தார்.

மண்டேலா

 
 

“பெண்களின் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வகையான அடக்குமுறைகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் விடுதலையை அடைய முடியாது” - 1994-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் நடைபெற்ற முதல்தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டேலா, தன்னுடைய முதல் நாடாளுமன்ற பேச்சில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் சமத்துவம் இல்லாமல், எந்த வெற்றியையும் அடைய முடியாது என்பதை மண்டேலா உறுதியாக நம்பினார். 

''பெண்கள் ஏழ்மையுடன் பிணைக்கப்பட்டிருக்கும் வரை, கீழாகப் பார்க்கப்படும் வரை, மனித உரிமைகள் அதனுடைய முக்கிய சாரத்திலிருந்து குறைபடும்' என்றவர், பேச்சோடு நிறுத்தவில்லை. பெண்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில், தென் ஆப்பிரிக்காவின் பொது சுகாதார அமைப்பின் மூலம், பெண்களுக்குப் பிரசவத்துக்கு முன்பும் பின்பும் இலவச சிகிச்சையை நடைமுறைப்படுத்தினார். ஆறு வயது வரையிலான குழந்தைக்கும் இலவச சிகிச்சையைக் கட்டாயப்படுத்தினார். 

நிறவெறியும் தீண்டாமையும் இருந்த தென் ஆப்பிரிக்காவில், 2.7 சதவீதமே பெண்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், முதல் மக்களாட்சி தேர்தலில் அது 27 சதவீதமாக உயர்ந்தது. மண்டேலாவின் அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம்பிடித்தனர். சபாநாயகர் பதவியும் ஃப்ரீன் ஜின்வாலா என்கிற பெண்ணுக்கே கொடுக்கப்பட்டது. இன்றைக்கு, தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தில் 40 சதவீத அமைச்சர்கள் பெண்கள். அரசியலில் பாலியல் சமத்துவத்தை, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கே முன்னோடியாக நிற்கிறது. இதனைச் சாத்தியப்படுத்தியதில் மண்டேலாவின் பங்கு முக்கியமானது. 

தென் ஆப்பிரிக்க விடுதலையில் பெண்களின் பங்கு குறித்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மண்டேலா நினைவு கூர்ந்தவாறு இருந்தார். 

1956, ஆகஸ்டு 9-ம் தேதி... 'நகரங்களில் இருக்கும் கறுப்பினப் பெண்கள், கையில் ஒரு கடவுச் சீட்டு வைத்திருக்க வேண்டும்' என்ற சட்டத்தை எதிர்த்து 20,000 பெண்கள் தென் ஆப்பிரிக்க தலைமைச் செயலகத்தை நோக்கி ஒரு மாபெரும் பேரணியை நடத்தினார்கள். 40 வருடங்களுக்குப் பிறகு, அந்த நாளை பெண்கள் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்து, தென் ஆப்பிரிக்க பெண்களுக்கு மரியாதை செய்தார் மண்டேலா. “அந்தப் பெண்கள் தைரியமாகவும், உறுதியுடனும், உற்சாகத்துடனும் இருந்தார்கள்” என்று அந்தப் போராட்டம் பற்றி தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளார் மண்டேலா. 

1995-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் வரைவு நிலையில் இருந்தபோது, ''நமக்கு முன்பு, நீதிக்கான பாதையில் போராடிய பெண்களுக்குச் சமர்ப்பிக்கும் வகையில் இந்த மண்ணின் சட்டதிட்டங்களும் கொள்கைகளும் பெண்களுடைய உரிமையை நிலைநிறுத்துவதாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். “இனம், பாலின வேறுபாடு, கர்ப்பம், திருமண நிலை, இனம் அல்லது சமூகத் தோற்றம், நிறம், பாலியல் சார்பு நிலை, வயது, இயலாமை, மதம், மனசாட்சி, நம்பிக்கை, கலாசாரம், மொழி மற்றும் பிறப்பின் அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அரசு பாகுபாடு காட்டாது” என்று தென் ஆப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டது. நெல்சன் மண்டேலா பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐநாவின் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான ஒப்பந்தங்களுக்கும் தென் ஆப்பிரிக்கா ஒப்புக்கொண்டது. 

இப்படி, தன் காலத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக நெல்சன் மண்டேலா உழைத்தவை ஏராளம். மண்டேலா மூன்று முறை திருமணம் செய்தவர். நிறைய பெண்களைக் காதலித்தார் என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்படுகிறது. அவருடைய வாழ்க்கை நிறவெறிக்கு எதிரான போராட்டத்தையும், அவர் நேசித்த பெண்களையும் சுற்றியே இருந்தது. அவர் எப்போதும் மக்களை நேசிப்பவராக இருந்தார். அவர் எப்போதும் நேசிக்கப்பட்டார். இளம் வயதில் நிறையக் காதல் கதைகள் இருந்தாலும், தான் எப்போதும் அந்தப் பெண்களிடம் நேசத்தையே தேடியதாக அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் தென் ஆப்பிரிக்கா முன்னணியில் இருப்பதற்குக் காரணம், நெல்சன் மண்டேலா!

https://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Nahaufnahme, Text und Innenbereich

கறுப்பு காந்தி' , தென் ஆபிரிக்காவின் தேசபிதா, உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரர், தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினம்

Link to comment
Share on other sites

வலி இல்லாமல் உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்

ஒரு பட்டனை அழுத்தினாலே சில நிமிடங்களில் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டொக்டர்  பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.

online_New_Slide.jpg

பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ள  இந்த இயந்திரத்தை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் வடிவமைத்துள்ளார்.

இந்த தற்கொலை இயந்திரத்திற்கு "தி சார்கோ கேப்சியூல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதலாவதாக நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும்.

அதன் முடிவில் நான்கு இலக்க எண் தரப்படும், அதைப் பயன்படுத்தி இயந்திரத்தின் வகையைப் பதிவிறக்கம் செய்து அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம்.

தற்கொலை செய்யப்போகும் ஒருவர் இயந்திரத்தில் அமர்ந்து ஒரு பட்டனை அழுதியதும் நீர்ம நிலையில் உள்ள  நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில் வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்யும்.

இதுகுறித்து டொக்டர் பிலிப்,

"சார்கோ இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை. இதைபயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர் யாராக இருந்தாலும் சார்கோ இயந்திரத்தைப்பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம்" என கூறியுள்ளார்

இயந்திரத்தின் மேல் பகுதியை தனியாக பிரித்து எடுத்து சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாகவுள்ளமை  இதன் சிறப்பம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

நடுவானில் விமானத்துக்குள் நுழையும் 'சூப்பர்மேன்' சாகசம்: சிலிர்க்க வைக்கும் முயற்சி

 

 
stunt%202jpg

4000 மீட்டர் உயர மலை சிகரத்திலிருந்து குதித்து, அந்தரத்தில் மிதந்தபடி அருகில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் நுழைய முயற்சிக்கும் சாகச வீடியோ ஒன்று யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

ரெட் புல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் விளம்பரமாக அடிக்கடி பல சாகச வீடியோக்களை பதிவேற்றி வருகிறது. அப்படி சமீபத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று யூடியூபில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

இந்த சாகசத்தை செய்தது ஃப்ரெட் ஃபூகன் மற்றும் வின்ஸ் ரெஃப்பெட் என்ற இரண்டு விங்ஸ்யூட் ஃப்ளையர்கள் (wingsuit flyers). விங்ஸ்யூட் என்பது விமானத்திலிருந்து கீழே குதித்து அந்தரத்தில் சாகசம் செய்பவர்களுக்கான பிரத்யேகமான உடை. இந்த உடையை அணிந்து சாகசம் செய்து வானில் மிதந்து/பறப்பவர்களே ஃப்ளையர்கள்.

20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விமானத்திலிருந்து கீழே குதித்து, அந்தரத்தில் மிதந்து, மீண்டும் அதே விமானத்துக்குள் நுழைந்த பாட்ரிக் டி கேயர்டன் என்ற சாகச வீரரின் நினைவாக அதே போன்றொரு முயற்சியை செய்து பார்ப்பதே மேற்சொன்ன இரண்டு சாகச வீரர்களின் நோக்கம். ஆனால் அப்போது ஒருவர் தான் இருந்தார். இம்முறை இரண்டு பேர். ஸ்விட்சார்லாந்தின் யுங்க்ஃப்ராவ் என்ற பனிமலையின் 4062 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து, கீழே பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் நுழைய வேண்டும். ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைகளில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூப்பர்மேன் சாகசத்துக்கு வானில் ஒரு கதவு (A Door in the Sky) என்று பெயரிட்டார்கள். இதற்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்தார்கள். கிட்டத்தட்ட 100 முறை சோதனையோட்டம் நடந்தது. இத்தனை நாள் பயிற்சியை செயலில் கொண்டு வருவதற்கான நேரம் வந்தது. இரண்டு வீரர்களும் நினைத்ததை சாதித்தார்களா? கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.

 

வழக்கமாக இது போன்ற டைவிங் முயற்சிகளில் தரைக்கு அருகே வந்துவிட்டாலோ, முயற்சியில் பிசகு ஏற்பட்டாலோ சாகச வீரர்கள் தங்கள் பாராசூட்களை பயன்படுத்தி தரையிறங்கிவிடுவார்கள். ஆனால் இந்த இருவரும் அப்படி செய்யாமல், விமானத்துக்குள் நுழைவதிலேயே கவனமாக இருந்து சாதித்தும் காட்டியுள்ளார்கள். விடா முயற்சியும், கடும் பயிற்சியும் நாம் நினைத்ததை சாதிக்க வைக்கும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோ உள்ளது என பலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.

பதிவேற்றப்பட்ட 5 நாட்களில் இதுவரை 32 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ஜெய்பூர் மகாராஜாவோடு லண்டனுக்கு வெள்ளிக் கலசங்களில் சென்ற கங்கை

ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, இந்தியாவின் வடமேற்கிலிருந்து லண்டன் நகரிற்கு பயணித்த ஜெய்பூர் மகாராஜா கங்கை நீரை வெள்ளிக் கலசங்களில் அடைத்து ஆயிரக்கணக்கான லிட்டர் கொண்டு சென்றதை விவரிக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

ஆகாய பிம்பம் போல் ஒரு மாளிகை

 

 
2chgowFalaknuma%20Palace1

ஹை

தராபாத்தில் அமைந்திருக்கும் பிரபல ‘தி தாஜ் ஃபலக்நுமா’ மாளிகையின் ‘101 டைனிங் ஹால்’ சமீபத்தில் செய்திகளில் அடிபட்டிருக்கிது. ஆறாவது நிஸாம் மெஹ்பூப் அலி பாஷா விருந்தினர்களுக்கு விருந்தளித்த இந்தப் பிரம்மாண்டமான உணவு அறையில், டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்திருத்திருக்கிறார்.

   
2chgowFalaknuma%20Palace3
 

இந்த விருந்தின் காரணமாக ஒரே நேரத்தில் 101 பேர் அமர்ந்து சாப்பிடும் இந்த உணவு அறையும் ஃபலக்நுமா மாளிகையும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. உருதுவில் ‘ஃபலக்நுமா’ என்பதற்கு ‘ஆகாயத்தின் பிம்பம்’ என்று அர்த்தம். இந்த மாளிகையில் அமைந்திருக்கும் பெரிய அறைகளில் ஒன்றாக ‘101 டைனிங் ஹால்’ இருக்கிறது. இந்த அறையில் அமைக்கப்பட்டிருக்கும் உணவு மேசை 80 அடி நீளம் கொண்டது. ஏழு பகுதிகளாகப் பிரித்து இணைக்கப்பட்டிருக்கும் இந்த மேசை 5.7 அடி அகலமும், 2.7 அடி உயரமும் கொண்டது.

2chgowFalaknuma%20Palace4

இந்த ஃபலக்நுமா மாளிகை 32 ஏக்கர் பரப்பளவில் ஒரு தேளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 400 ஆண்டு கால நிஜாம்களின் வாழ்க்கைமுறையைப் பறைசாற்றும் சாட்சியாக இந்த மாளிகை திகழ்கிறது. அரச வாழ்க்கையின் செழுமையை உணர்த்தும் வெனிசீய சரவிளக்குகள், அரிய கலைப் பொருட்கள், அலங்காரச் சட்டகங்களில் அடைபட்டிருக்கும் சுவரோவியங்கள் போன்றவை இந்த மாளிகையின் உள் அலங்காரச் சிறப்பை உணர்த்துவதாக இருக்கின்றன.

2chgowFalaknuma%20Palace6

இந்தச் உணவு அறையில் இடம்பெற்றிருக்கும் 28 ஓவியங்களில் பல்வேறு உணவுப் பண்டங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்களில் இருக்கும் உணவுப் பண்டங்களில் தான் சாப்பிட நினைப்பதை நிஜாம் சுட்டிக்காட்டுவாராம். அந்த உணவு அதற்குப் பிறகு அவருக்குப் பரிமாறப்படுமாம். இந்த உணவு அறையில் இடம்பெற்றிருக்கும் 101 நாற்காலிகளும் பச்சை நிறத் தோலில் ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நாற்காலிகளில் நிஜாம் பயன்படுத்திய நாற்காலிகளின் கைப்பிடிகள் மட்டும் சற்று உயரமாக இருக்கிறது.

1893-ம் ஆண்டு, கட்டப்பட்ட இந்த ஃபலக்நுமா மாளிகையை ‘பைகா’ (Paigaah) குடும்பத்தினரிடமிருந்து வாங்கியிருக்கிறார் நிஸாம். இந்த மாளிகை இத்தாலிய, ட்யுடர் கட்டிடக் கலைகளின் பிரம்மாண்டமான கலவையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

2chgowFalaknuma%20Palace7
 

இந்த மாளிகையில் 60 அறைகளும் 22 பேரறைகளும் (Halls) இருக்கின்றன. 1950- களுக்குப் பிறகு, இந்த மாளிகை பொதுப் பயன்பாட்டில் இல்லை. 1951-ம் ஆண்டு, இந்த மாளிகையின் கடைசி விருந்தாளியாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு, இந்த மாளிகையை ‘தாஜ் ஹோட்டல் குழுமம்’ 2010-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துப் புதுப்பித்திருக்கிறது. தற்போது இந்த மாளிகையை எட்டாம் நிஸாமுடைய மனைவி இளவரசி எஸ்ரா நிர்வகித்துவருகிறார். இந்த மாளிகையின் அறையில் விருந்தாளியாக ஒரு நாள் தங்குவதற்கு ரூ. 5-8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

கண்களுக்கு விருந்தளிக்கும் 'சூப்பர் மூன்'

முழு நிலவுகளைவிட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும்இந்த 'சூப்பர் மூன்' உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தாண்டின் ஒரே சூப்பர் மூனான இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில் அடுத்தடுத்து இதுபோன்று நிகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

பறவைகள் மோதிய விமானம்... ஆற்றில் இறக்கிய பைலட்... விமான வரலாற்றில் ஒரு 'வாவ்' சம்பவம்!

 
 

பைலட் விமான விபத்து

2009 ஆண்டு ஜனவரி 15 குளிர்காலத்தின் வியாழக்கிழமை. நியூயார்க் நகரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது. லகுவார்டியா விமானநிலையம் பரபரப்பாக இருக்கிறது. விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. விமானங்களுக்கு ஓடுபாதையில் இறங்க வேண்டிய நேரத்தை சிக்னலாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். லகுவார்டியாவிலிருந்து US ஏர் பஸ் 1549  A320 என்கிற விமானம் நார்த் கர்லோநியாவில் உள்ள சார்லோட்டி விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிறது. 66 டன் எடை கொண்ட விமானம் இரண்டு என்ஜின்களைக் கொண்டது. இரண்டு என்ஜின்களும் 40000 குதிரைத் திறன் கொண்டவை. பைலட்டின் பெயர் செஷ்லே சுல்லேன்பெர்கர் (Chesley Sullenberger). வயது 57. இவர் அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக  இருந்தவர். மொத்தம் 19663 மணி நேரம் பறந்தவர். அதில் 4765 மணி நேரம் A320 விமானத்தில் பயணித்தவர்.

 

ஏர் பஸ் 1549  A320 விமானத்தில் 150 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் பயணிக்கிறார்கள். விமானம் கிளம்புவதற்கான ஒப்புதல் நிலைய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கிறது. விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதையிலிருந்து மாலை 3:24:56 நொடிகளுக்கு விமானம் புறப்படுகிறது. 

விமானம் 2818 அடி உயரத்தில் 343 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது. விமான முகப்புப் பகுதியில் விமானத்தின் முன்பாக பறவைகள் வருவதை பைலட் பார்க்கிறார். அவை கனடா கீஸ் வகை பறவைகள். 3:27:11  பறவைகள் விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதுகின்றன. பறவைகள் மோதியதில் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதாகின்றன. விமானம் பழுதானதை உணர்கிற பைலட் உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைத் தெரிவிக்கிறார். 3:27:33 வினாடிகளில் "விமானத்தில் பறவைகள் மோதிவிட்டன.  உடனே விமானத்தை லகுவார்டியாவில் தரை இறக்க வேண்டும் ஓடுபாதையை கிளியர் செய்து கொடுங்கள்” என்கிறார். நிலைமையின் தீவிரத்தை அறியாத விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை நியூ ஜெர்சியில் இருக்கிற டேடேர்போரோ விமான நிலையத்தில் இறக்குங்கள் எனத் தகவல் சொல்கிறார்கள். 

"விமானத்தை டேடர்போரோவில் இறக்குவதற்குச் சாத்தியமில்லை" என பைலட் பதிலளிக்கிறார். விமானம் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்திற்கு மேலாகப் பறந்துக்கொண்டிருக்கிறது. பயணிகளுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. விமானத்தில் இருக்கிற 150 பயணிகளையும் காப்பாற்றியாக வேண்டிய அசாதாரண சூழ்நிலை. நொடிக்கு 18 அடி கீழ் நோக்கி விமானம் சென்றுகொண்டிருக்கிறது. தீவிரத்தை உணர்கிற பைலட் 3:28:10 நேரத்தில் விமானத்தை அட்சன் பகுதியில் இறக்குவதாக விமான நிலையத்திற்குத் தெரிவிக்கிறார். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் ”அட்சன் பகுதியிலா வேண்டாம்” என்கிறார்கள். காரணம் அட்சன் என்பது ஓடுதள பகுதி அல்ல என்பதே. நியூயார்க் நகரத்தில் இருக்கிற ஒரு ஆறு. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் இருக்கிற நகரின் பரபரப்பான பகுதி. மொத்த விமான நிலையமும் பதற்றத்திற்கு வருகிறது. அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாகச் செல்லும் ஆறு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். 

விமானம்

வேறு வழியின்றி விமானத்தை பைலட் அட்சன் ஆற்றுப் பகுதியில் இறக்க முடிவு செய்கிறார். பயணிகளுக்கு நிலைமை எடுத்துச் சொல்லப்படுகிறது. விமான ஒலிபெருக்கியின் மூலம் விமானிப் பயணிகளுடன் உரையாடுகிறார். பயணிகள் பயத்தில் உறைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத சூழல். விமான நிலையக் கட்டுப்பட்டு அறையில் இருக்கிற அதிகாரிகள் நியூயார்க் கடற்படைக்குத் தகவல் கொடுக்கிறார்கள். கடற்படையின் படகுகள் கப்பல்கள் குறிப்பிட்ட இடத்திற்குக் கிளம்புகின்றன. பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், படகுகள் என அட்சன் ஆறு மிகப்பெரிய விபத்திற்கு தயாராகிறது. 

3:30  நிமிடத்திற்கு பைலட் விமானத்தை அட்சன் ஆற்றில் இறக்குகிறார். ஆற்றுக்கும் விமானத்திற்குமான இடைவெளி 500 அடியிலிருந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. 100 அடி, 50 அடி, 20 அடி, 10 அடி எனக் குறைகிறது. 0.  அவ்வளவுதான். அதிபயங்கரச் சத்தத்துடன் விமானம் ஆற்றில் பாய்கிறது. அட்சன் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற மக்கள் பேராபத்தை உணர்கிறார்கள். விமானம் ஆற்றில் பாய்ந்த அடுத்த நிமிடம் ஆற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்கவில்லை. விமானத்தின் தானியங்கி கதவுகள் மூடிக்கொள்கின்றன. கதவுகள் மனித முயற்சியில் திறக்கப்படுகிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு பயணிகள் விமானத்திலிருந்து வெளியே வருகிறார்கள். சிலர் பதற்றத்தில் வெளியே குதிக்கிறார்கள். குளிர்காலம் என்பதால் நீர் ஐந்து டிகிரி குளிராக இருக்கிறது. விமானத்திலிருந்து வெளியே வந்தவர்களை குளிர் வாட்டி வதைக்க ஆரம்பிக்கிறது. விமானத்தின் இறக்கைப் பகுதிகளில் ஏறி நின்று  கொண்டு உதவிக்கு அழைக்கிறார்கள். விமானம் ஆற்றில் இறங்கிய நான்கு நிமிடங்களில் கடற்படையின் படகுச் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறது. பயணிகளில் ஒருவர் மாற்றுத் திறனாளி. விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பிக்கிறது. கடற்படை வீரர்கள் பயணிகள் எல்லோரையும் பத்திரமாக மீட்கிறார்கள். படகுகள் மூலம் எல்லோரும் மீட்டு ஆற்றின் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். 3:55 நிமிடத்தில் விமானத்தின் கடைசிப் பயணியும் பத்திரமாக மீட்கப்படுகிறார். எல்லோரும் காப்பாற்றபட்டார்கள் என்பதை உறுதி செய்கிற விமான பைலட் கடைசியாக வெளியே வருகிறார். ஐந்து பயணிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். எழுபத்தி எட்டு பயணிகளுக்குச் சிறிய காயங்கள். சிலர் குளிர் காய்ச்சலுக்கு ஆளானார்கள். ஒரு பயணிக்கு விமானத்தின் எரிபொருள் கண்ணில் பட்டதில் பார்வை போனது. 

பெரிதாக எந்த அசம்பாவிதமும் அந்த விபத்தில் நிகழவில்லை. பயணிகள் பைலட்டை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். விபத்து நடந்த இரண்டாம் நாள் விமானம் ஆற்றுப் படுக்கையிலிருந்து மீட்டு நியூ ஜெர்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. விஷயம் நீதி மன்றத்துக்குச் செல்கிறது. விமான நிர்வாகம் விமான பைலட்டை குற்றம் சாட்டுகிறது. விமானத்தை டேடர்போரோ விமான நிலையத்தில் தரை இறக்கி இருக்கலாம்; அதற்கான நேரம் இருந்தது. ஆனால் விமானி அவசரப்பட்டு விமானத்தை ஆற்றில் இறக்கிவிட்டார் என வாதாடுகிறது. விமானி செஷ்லே சுல்லேன்பெர்கர் அந்த நேரத்தில் பயணிகள் உயிர் குறித்து மட்டுமே சிந்தித்ததாகச் சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத விமான நிறுவனம் நீதிமன்ற உத்தரவுபடி ஒரு விமானத்தை சோதனை முயற்சியாக விபத்து நடந்த இடத்திலிருந்து டேடர்போரோ விமான நிலையத்தி இறக்கிக் காட்டுகிறது. ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி ”சோதனை செய்யப்பட்ட விமானிக்கு என்ன நடக்கப்போகிறது எனத் தெரியும். அதனால் அவர் எளிதாக விமானத்தை தரையிறக்கி விட்டார். மேலும் அவர் அதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் என்னுடைய நிலை வேறு” எனச் சொல்லி வாதிடுகிறார். 

விமான நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு  சோதனை முயற்சியில் இறங்குகிறது. நடுவானில் விமானத்தின் இரு எஞ்ஜின்களையும் செயலிழக்கச் செய்து டேடர்பெரோ விமான நிலையத்தில் தரை இறக்குகிற முயற்சியில் இறங்கியது. விமானம் பெரிய சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகிறது. அனைத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம் செஷ்லே சுல்லேன்பெர்கர் செய்தது சரி எனச் சொல்லி தீர்ப்பளிக்கிறது. செஷ்லே சுல்லேன்பெர்கர் விமானி பல பதக்கங்களைப் பெறுகிறார். விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடை வழங்கியது.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘சல்லி(Sully)' என்றொரு படம் வெளியானது. டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தோனி மகளின் மழலைக் குரலில் மற்றொரு மலையாளப் பாடல்!

 

 
ziva_2

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார்.

அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். 

இந்நிலையில், ஸூவாவுக்கென இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய புகைப்படங்கள், குறும்புகள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸூவா பாடிய மலையாள பாடல் ஒன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது அதே பாணியில் மற்றொரு மலையாளப் பாடலையும் பாடியுள்ளார். இது சமூக வலைதள வாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அந்த பாடல் பாடும் சமயத்தில் அவருக்கு உடல்நலன் சரியில்லை என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

 

இத்தனைக்கும் மத்தியில் தனது மழலைக் குரலால் ஸூவா பாடிய இந்த 2-ஆவது மலையாளப் பாடல் தற்போது வரை 1,74,255 பேரின் வரவேற்பை பெற்றுவிட்டது. வாழ்த்துக் கமென்டுகளும் குவிந்தபடி உள்ளன.

ஸூவாவுக்கு குழந்தை பராமரிப்பாளராக மலையாளி ஒருவர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் ஷீலா. ஸூவா அவரை ஷீலா ஆன்டி என்று செல்லமாக அழைப்பாராம்.

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

‘கோவில் அமைதியின் புகலிடம்’
 

image_32db6e0493.jpgவழிபாட்டுத் தலங்களில் நாங்கள் இயந்திரத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. விட்ட பொருளைத் தேடுவதுபோன்று, அவசர அவசரமாக வழிபாடு செய்வதில் எந்தஅர்த்தம் இல்லை. 

என்றும் பரபரப்பாக இயங்கும் இந்த உலகம், நாம் அமைதியை நாடி, ஆலயங்களுக்குச் செல்லும்போதும் கூட பரபரப்பு எதற்கு? 

ஆலயம் என்பது ஆன்ம நிவேதனம் செய்யப்படும் புனித இடம். அதாவது எமது ஆன்மாவை இறைவனிடம் அர்ப்பணித்து, மனோ லயத்துடன் நிர்ச்சிந்தையுடன் இருப்பதுமாகும்.  

தேர்தல் பிரசார மேடைபோல அதீத சப்தமும் ஆணவ மிடுக்குடன் உலாவருதலும் வெட்கப்படத்தக்க விடயங்கள் என்பதை உணரவேண்டும். 

கண்டபடி எந்தப் பொது இடத்திலும் நடந்து கொள்வதுகூட ஆத்ம நிந்தனைதான், தனது ஆன்மாவை அவகௌரவப் படுத்துதல் பிறரையும் அசௌகரியப்படுத்தவது போலாகும். கோவில் அமைதியின் புகலிடம். 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…

டிசம்பர் 06

 

1240 : யுக்­ரைனின் கீவ் நகரம் மொங்­கோ­லி­ய­ரிடம் வீழ்ந்­தது.

1768 : பிரிட்­டா­னிக்கா கலைக்க­ளஞ்­சி­யத்தின் முதற் பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது.

pettah-346x400.jpg1790 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பில­டெல்­பி­யா­வுக்கு இடம்
­பெ­யர்ந்­தது.

1865 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் அடிமை முறை தடை செய்­யப்­பட்­டது.

1897 : உலகில் முதற்­த­ட­வை­யாக வாடகை வாகனம் லண்­டனில் சேவைக்கு விடப்­பட்­டது.

1907 : அமெ­ரிக்­காவின் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்­பெற்ற வெடி­
வி­பத்தில் 362 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1917 : ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக பின்­லாந்து அறி­வித்­தது.

1917 : கன­டாவின் நோவா ஸ்கோசி­யாவில் ஹலிஃபாக்ஸ் துறை­மு­கத்தில் ஆயுதக் களஞ்­சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்­ப­லுடன் மோதி வெடித்­ததில் 1900 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் நக­ரத்தின் பெரும் பகுதி அழிந்­தது.

1921 : இங்­கி­லாந்­துக்கும் அயர்­லாந்­துக்கும் இடையில் நட்­பு­றவு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­கி­யது.

1922 : ஐரிஸ் சுதந்­திர நாடு உரு­வா­னது.

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்­லாந்­துக்கு எதி­ராக ஐக்­கிய இராச்­சியம் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1957 : வாங்கார்ட் ரொக்கெட் ஏவப்­ப­டு­கையில், வெடித்துச் சித­றி­யதால் செய்­ம­தி­யொன்றை விண்
­வெ­ளிக்கு ஏவும் அமெ­ரிக்­காவின் முதல் முயற்சி தோல்­விய­டைந்­தது.

1967 : அட்­ரியன் கன்ட்­ரோவிட்ஸ் என்­ப­வ­ருக்கு இத­ய­மாற்று சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அமெ­ரிக்­காவில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது மனித இத­ய­மாற்று சத்­தி­ர­சி­கிச்சை இது.

varalaru-06-12-2016.jpg1971 : பங்­க­ளா­தேஷை இந்­தியா அங்­கீ­க­ரித்­ததைத் தொடர்ந்து இந்­தி­யா­வு­ட­னான அனைத்து ராஜ­தந்­திர உற­வு­க­ளையும் பாகிஸ்தான் துண்­டித்­தது.

1977 : பொப்­பு­தட்ஸ்­வானா பிராந்­தி­யத்­துக்கு தென் ஆபி­ரிக்கா சுதந்­திரம் அளித்­தாலும் எந்த நாடும் அதனை அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

1992 : இந்­தி­யாவின் அயோத்தி நகரில் முக­லாய மன்னர் பாப­ரினால் 16 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாபர் மசூதி, இந்­துத்வா அமைப்­பி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டது.

1997 : ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடி­யி­ருப்புத் தொடர் ஒன்றில் மோதி­யதில் 67 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005 : சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது பல கிராம மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.
2005: ஈரா­னிய விமா­னப்­படை விமா­ன­மொன்று தெஹ்ரான் அருகே விபத்­துக்­குள்­ளா­னதால் 84 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006 : செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களின் மூலம், அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாசா அறிவித்தது.

2013 : கொழும்பு புறக்கோட்டை போதிராஜா மாவத்தையில் ஏற்பட்ட தீயினால் நூற்றுக்கும் அதிகமான கடைகள் தீக்கிரையாகின.

http://metronews.lk

Link to comment
Share on other sites

விமர்சனங்களைப் புறம் தள்ளுங்கள்... வெற்றி மிக அருகில் - ஓர் உற்சாகக் கதை! #MotivationStory

 

கதை

போராடும் குணத்தைக் கைவிட மறுக்கும் மனிதனுக்கு வெற்றி என்பது எப்போதுமே சாத்தியமான ஒன்றுதான்’ என்கிறார் பல சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கும் அமெரிக்க எழுத்தாளர், நெப்போலியன் ஹில் (Napoleon Hill). எது வந்தாலும் மோதிப் பார்த்துவிடத் துணிகிற மனிதர்கள்தான் எந்தத் துறையில் இருந்தாலும் சாதிக்கிறார்கள். அதற்கு மன உறுதி, தைரியம் எல்லாம் வேண்டும். பயிரை வளர்க்கிறீர்களா... அதை அறுவடை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நிலம்தான் பாழாகப் போகும். ஒரு வேலையை ஆரம்பித்தால், அதன் இறுதிக்கட்டம் வரை நின்று பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அதுவரை செய்த முயற்சி, செலவழித்த சக்தி, பொருள் அத்தனையும் வீணாகத்தான் போகும். இந்தக் கதை அந்த உண்மையைத்தான் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகிறது.

 
 

பால்

அவர் பெயர் ஸ்டூவ் லியோனார்டு (Stew Leonard). இருபத்தோரு வயது. வாழ்க்கையின் அத்தனை சந்தோஷங்களையும் கொண்டாடித் தீர்த்துவிடத் துடிக்கும் இளமைப் பருவம். கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. சில வேளைகளில் ஒரு பேரிழப்பு, பெரிய பொறுப்பைத் தலையில் சுமக்கவைத்துவிடும். ஸ்டூவ் விஷயத்தில் நடந்தது அதுதான். அதுவரை குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா இறந்துபோனார். அந்தத் தொழிலைப் பார்க்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஸ்டூவிடம் வந்தது.

ஸ்டூவின் குடும்பத்தினரின் பரம்பரைத் தொழில் பால் வியாபாரம். பண்ணையில் சில மாடுகள் வைத்திருந்தார்கள். பாலைக் கறந்து, வீடு வீடாகக் கொண்டுபோய் விநியோகிக்கும் வேலை ஸ்டூவுக்கு. அவர் திறமைசாலி. துறுதுறுப்பானவர். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவர். அன்றாடம் உலகம் முழுக்க நடக்கும் பல மாற்றங்களை அசைபோடுபவர். பல புதிய நுட்பங்களைத் தன் தொழிலில் புகுத்த வேண்டும் என்கிற ஆர்வம் நிறைந்தவர். அது ஃபிரிட்ஜ் (Refrigerator) அறிமுகமாகியிருந்த காலம். அதைக்கொண்டு என்னென்னவோ செய்யலாம் எனத் திட்டம் போட்டார் ஸ்டூவ். `தயிர், சீஸ், நெய்... எனப் பலவிதமான பால் பொருள்களைப் பதப்படுத்தி வைக்க ஏற்றது. மொத்தமாக நிறைய ஃபிரிட்ஜ்களை வாங்கி, பால் பொருள்களுக்காகவே ஒரு கடையை (Dairy Store) ஆரம்பித்தால் என்ன என நினைத்தார்.

சூப்பர் மார்க்கெட்

கையில் இருந்த பணத்தைக் கொண்டு, லோன் வாங்கி ஒரு கட்டடத்தைக் கட்டவும் ஆரம்பித்துவிட்டார். அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்; அவர் கடையில் பாட்டில்களில் சேமித்துவைத்திருக்கும் பால், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் நெய், சீஸ் முதலான பால் பொருள்களைக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறார்கள்... இப்படியெல்லாம் கனவு கண்டார். ஒரு விஷயத்தை முன்னெடுத்துச் செய்யும்போதுதான் பல இடக்கான வேலைகளும் நடக்கும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவார்கள். `இதெல்லாம் வேலைக்காகாது’, `இவ்வளவு செலவழிச்சுப் பண்ற தொழில் எப்படி நடக்குது பார்க்கலாம்’ என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். ஸ்டூவ் விஷயத்தில் இதுதான் நடந்தது.

கடைக்கான கட்டட வேலை முக்கால்வாசி முடிந்திருந்தபோது, பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். `சூப்பர் மார்க்கெட்டுக்குப் போற ஒருத்தர் பால் பொருள்களை வாங்குறதுக்காக தனியா உங்க கடைக்கு ஒரு ட்ரிப் அடிப்பாரா?’ என்று கேள்வி கேட்டார்கள். ஒரு எதிர்மறையான விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, எப்படிப்பட்ட தைரியசாலியும் தளர்ந்துபோய்விடுவான்; மனமொடிந்து போவான். ஸ்டூவும்கூட ஒரு கட்டத்தில் சோர்ந்துதான் போனார். கடையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒருநாள், இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்... ``இதுவரை ஒரு லட்சம் டாலருக்கு மேல செலவழிச்சிட்டோம். இதுக்கு மேல தாங்க முடியாது. இன்னும் அதிகமா செலவழிச்சு, கடை வியாபாரம் நல்லா நடக்கலைன்னா, திவாலாகிவிடுவோம்.’’

அன்று இரவு ஸ்டூவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். பிறகு எழுந்து, கீழே வந்தார். கெட்டிலில் இருந்த காபியை எடுத்து, சூடுபடுத்திக் குடித்தார். அங்கேயே அமர்ந்து ஆர அமர யோசித்தார். கடை நடத்துவதில் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் இரு அம்சங்களையும் அசைபோட்டார். எதிர்மறை அம்சங்கள் பெரிய பட்டியலாக நீண்டிருந்தன. நேர்மறைக்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்புத்தான் இருந்தது. அந்த நேரத்தில் ஸ்டூவ் இறைவனிடம் வேண்டினார்... `என் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவை ஆண்டவரே’ என்று அல்ல. `பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் சக்தியையும் எனக்குக் கொடு கடவுளே’ என்று பிரார்த்தித்தார். அங்கேயே அமர்ந்திருந்தார்.

பால் நிறுவனம்

அடுத்த நாள் ஸ்டூவின் மனைவி மர்யான் (Maryann) எழுந்து கீழே வந்தார்.

“இங்கே என்ன பண்றீங்க?’’

`எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மர்யான்.’’

``ஏன்?’’

``நம்ம தொழில் நல்லா நடக்காதுனு பல பேர் சொல்றாங்க. அது உண்மையாகிடுச்சுன்னா, நாம நொடிச்சுப் போயிடுவோம்.’’

``நெகட்டிவா பேசறவங்களோட வார்த்தைகளுக்கு மதிப்புக் குடுக்காதீங்க. நாம் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்? ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்தப்போறோம். அவ்வளவுதானே.. தைரியமா இருங்க. ஒரு நிமிஷம்...’’ என்றவர் தன் அறைக்குப் போனார். திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு சின்ன ஹேண்ட் பேக் இருந்தது. அதில் கைவிட்டு எதையோ எடுத்தார்.

``இந்தாங்க... இதுல 3,300 டாலர் பணம் இருக்கு. இது, என் அம்மா எனக்காகச் சேர்த்துவெச்சிருந்த பணம். இதை நம்ம பிள்ளைங்களோட படிப்புக்கு ஆகுமேனு எடுத்துவெச்சிருந்தேன். இந்தப் பணத்தையும்வெச்சுக்கோங்க. ஆனா, நீங்க தொழில் நடத்தி நல்ல லாபம் சம்பாதிச்சதுக்குப் பிறகு, அதை எனக்குத் திருப்பிக் குடுத்துடணும்... சரியா?’’

கடை

ஸ்டூவுக்கு உடம்பில் புது ரத்தம் பாய்ந்ததுபோல் இருந்தது. மனைவியை அன்போடு அணைத்துக்கொண்டார்... நன்றி சொன்னார். என்ன நடந்தாலும் ஒருகை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கித் தள்ளினார். கடையை ஆரம்பித்தார். அவருடைய வியாபாரம் சூடுபிடித்தது. பல கிளைகளுடன் பரந்துவிரிந்தது. உலகின் சக்சஸ்ஃபுல் தொழில்களில் ஸ்டூவ் லியோனார்டின் டெய்ரி ஸ்டோரும் ஒன்று.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

விடைபெறும் 2017: உலக முக்கிய நிகழ்வுகள்

 

 
2017%20final%20logo%20-1

இந்த ஆண்டு சர்வதேச அளவில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஒரு கழுகுப் பார்வை…

பெருங்கொள்ளை ஆவணங்கள் அம்பலம்

         

2016-ல் பனாமா ஆவணங்கள் என்றால் 2017-ல் பாரடைஸ் பேப்பர்ஸ் சர்வதேச அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் செல்வந்தர்கள் வரிச்சலுகையைப் பயன்படுத்தும் ரகசியங்களைப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேசக் கூட்டமைப்பு (ICIJ) நவம்பர் 5 அன்று ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ என்ற ஜெர்மன் நாளிதழில் அம்பலப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலக நாடுகளின் 96 பத்திரிகைகள் இணைந்து நடத்திய இந்த விசாரணையில் கடன் ஒப்பந்தங்கள், நிதி அறிக்கைகள், மின்னஞ்சல் உட்பட 70 லட்சம் ஆவணங்கள் சிக்கின. விஜய் மால்யா, நடிகர் சஞ்சய் தத், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் ரவீந்தர் கிஷோர் சின்ஹா உட்பட 714 இந்தியர்களின் பல்வேறு ஆவணங்கள் இதில் அம்பலமாயின.

5CHParadisepapers
 

மனித உரிமைக்குக் கையெழுத்திட மறுப்பு!

மியான்மர் ரக்ஹைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோஹிங்க்யா சிறுபான்மை இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படும் சம்பவம் உலகை உலுக்கிவருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் செப்டம்பர் 7 அன்று ‘நிலையான வளர்ச்சி’ என்ற தலையில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பாலி பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்தது. காரணம் இனம், மதம் கடந்து ரக்ஹைன் மாகாணத்தைச் சேர்ந்த எல்லாத் தரப்பு மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுடைய வாழ்வாதாரம் வன்முறை இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றது பாலி பிரகடனம். ஆனால், நிலையான வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் கூட்டத்தில் மியான்மரில் நடந்தேறும் வன்முறைக்கு முக்கியத்துவம் தருவது அநாவசியம் என்றார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

5CHRohingya
 

இரண்டாவது வெப்ப ஆண்டு

இதுவரை பதிவான வெப்பமான மூன்று ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வானிலை மையம் நவம்பர் 6 அன்று ஜெர்மனியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தரங்கில் அறிவித்தது. இந்தியாவின் 2017-ம் ஆண்டுக்கான பருவமழைக் காலமும் சராசரியைவிட 5 சதவீதம் குறைந்திருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ‘எல் நினோ’ விளைவால், 2016-ம் ஆண்டுதான் அதிவெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னதாகப் பதிவான உலகின் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் 2017-ம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பருக்குள்ளாகப் பதிவாகி இருக்கிறது.

5CHHotyear
 

ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா!

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 2017 செப்டம்பர் மாதப் பதிப்பில் ‘அப்பா’, ‘அண்ணா’ உள்ளிட்ட தமிழ்ச் சொற்கள், ‘சூரிய நமஸ்கார்’, ‘மாதா’, ‘ஜெய்’ போன்ற இந்திச் சொற்கள் ஆகியவை இடம்பிடித்தன. மொத்தம் 1,000 புதிய சொற்களைச் சேர்த்தது ஆக்ஸ்போர்டு அகராதி. அவற்றில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்களும் சேர்க்கப்பட்டன. அதிலும் வடை, குலாப் ஜாமுன், கீமா, மிர்ச் மசாலா போன்ற இந்திய உணவுப் பண்டங்களின் பெயர்களும் இடம்பெற்றன.

அயர்லாந்தின் பிரதமரான இந்தியர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான மருத்துவர் லியோ வரத்கார் அயர்லாந்து நாட்டின் பிரதமராக ஜூன் 15 அன்று பதவியேற்றார். 24 வயதில் அயர்லாந்தில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘தெயில்’ என்றழைக்கப்படும் அயர்லாந்து நாடாளுமன்றத்துக்குள் 2007-ல் அடியெடுத்துவைத்தார் லியோ. 2011-ல் அந்நாட்டின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை, சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். தற்போது அயர்லாந்தில் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்.

5CHLeo
 

அமெரிக்கக் கனவு கலைகிறதா?

அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா கெடுபிடியாலும் அமெரிக்காவில் நடந்தேறும் நிறவெறிப் பிரச்சினைகளாலும் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 250 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முன்பைக் காட்டிலும் அமெரிக்காவில் இளநிலைப் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 26 சதவீதம், இதர கல்லூரிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் படிக்க முன்வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் படித்துவந்த வெளிநாட்டு மாணவர்களில் 47 சதவீதத்தினர் சீனர்கள் மற்றும் இந்தியர்களாக இருந்தமையால் மார்ச் மாதம் வெளியான ‘ஓபன் டோர்ஸ் 2016’ என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அளித்தது.

உலகின் கடைசி டைனோசர்!

வட மொரக்கோவில் உள்ள பாஸ்பேட் சுரங்கத்தில் ஆப்பிரிக்காவில் வசித்த கடைசி டைனோசரின் புதை படிவம் மே 6 அன்று கண்டெடுக்கப்பட்டது. ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறுங்கோள் பூமியைத் தாக்கியதில் அழிந்துபோன செனானிசாரஸ் பார்பரிகஸ் (Chenanisaurus barbaricus) இனத்தைச் சேர்ந்த டைனோசர் இது. மொரக்கோ நாட்டில் உள்ள பா பல்கலைக்கழகத்தின் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்கூடமான மில்நர் மையத்தில் இந்தப் புதை படிவ ஆராய்ச்சி நடைபெற்றது. கிரிடேஷியஸ் காலகட்டத்தில் கோண்ட்வானா துணைக்கண்டம் தனியாகப் பிரிந்துபோனபோது செனானிசாரஸ் பார்பரிகஸ் வகை டைனோசர் உருவானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள்!

2017 மார்ச் 20 அன்று ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகில் மொத்தம் 2 ஆயிரத்து 43 கோடீஸ்வரர்கள் இருப்பதாக இது தெரிவித்தது. 86 பில்லியன் அமெரிக்க டாலருடன் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவர் வாரன் பஃபே உள்ளார். இதில் 101 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களில் முகேஷ் அம்பானி 23.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

45-வது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார். டிரம்ப் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு, மெக்சிகோ - அமெரிக்கா இடையில் பெருஞ்சுவர், இஸ்லாமிய மக்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றுதல் போன்றவற்றை முன்னிறுத்தி வாக்குகளைச் சேகரித்தார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் 2016 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனை வென்றார்.

மலாலாவுக்கு ஐ.நா.விருது!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு ‘ஐ.நா. அமைதித் தூதர்’ பட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 10 அன்று வழங்கியது. கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவை மூலமாக ஐ.நா.வின் கொள்கைகளைப் பரப்புவோருக்கு இப்பட்டத்தை ஐ.நா. சபை வழங்குகிறது. ஐ.நா.வின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மிக இளையவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது. பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர், “பெண்களின் சிறகுகளைக் கட்டிப்போடாமல் அவர்களை ஆண்கள் சுதந்திரமாகப் பறக்கவிட வேண்டும்” என்றார்.

5CHMalala
 

உலக அளவில் எழுத்தறிவை ஏற்படுத்த தாய்மொழியில் கல்வி கற்பித்தல், கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் தீட்டுதல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஆகஸ்ட் 30 அன்று யுனெஸ்கோ 2017 சர்வதேச எழுத்தறிவு விருது வழங்கியது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பாலினம் கடந்த கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று கனடா நாட்டு அரசு ஆகஸ்ட் 24 அன்று அறிவித்தது. கடவுச்சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட அத்தனை ஆவணங்களிலும் பாலினம் என்ற பகுதியில் ‘X’ என்று மூன்றாம் பாலினத்தவர்கள் பதிவிடலாம் என்றது கனடா அரசு.

உலகின் முதல் அவசர சேவை எண்ணை அறிமுகப்படுத்திய நாடு பிரிட்டன். காவல் நிலையம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தனை அவசர உதவிக்கும் பிரிட்டன் அழைப்பு எண்ணான ‘999’-க்கு 2017 ஜூலை 2 அன்று வயது 80.

‘வாசியுங்கள் – நீங்கள் வசிப்பது ஷார்ஜாவில்!’ என்பதை மந்திர வாசகமாகக் கொண்ட ஐக்கிய அரபு நாடுகளின் நகரமான ஷார்ஜாவை ‘உலகப் புத்தகத் தலைநகரம்’ என்று யுனெஸ்கோ ஜூன் 28 அன்று அறிவித்தது.

வேலையில்லா பின்லாந்து குடிமக்களுக்கு மாதந்தோறும் 560 யூரோ சம்பளமாக ஜனவரி 5 முதல் அளிக்கத் தொடங்கியது பின்லாந்து. 2000 வேலையில்லா மக்களைத் தேர்ந்தெடுத்து இரண்டாண்டு சோதனைத் திட்டமாக இதை முன்னெடுத்துள்ளது பின்லாந்து.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

சென்னையின் இந்தப் புராதன ‘கன்னி’க்கு வயது 120

 
 

சென்னையின் பெருமைகளில் ஒன்று கன்னிமாரா நூலகம். 1896-ல் திறக்கப்பட்ட இந்தியாவின் பெருமைமிகு நூலகமான இந்த நூலகத்துக்கு இன்று 120-வது பிறந்தநாள். 

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1860-ல் கேப்டன் ஜான் மிட்செல் என்பவர், மதராஸ் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஒரு சிறு நூலகத்தை நிறுவினார். இங்கிலாந்தில் உள்ள எயில்பேரி கல்லூரி நூலகத்தில் தேவைக்கு அதிகமாக இருந்த புத்தகங்கள் இந்த அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் ஒரு பெரிய நூலகம் கட்ட வேண்டும் என்று முடிவுசெய்தனர். அப்படி எழுந்ததுதான் கன்னிமாரா நூலகம்.

 
 

கன்னிமாரா - சென்னை

1890-ம் ஆண்டு மார்ச் 22-ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு வருடங்களில் இந்த நூலகம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு அடிக்கல் நாட்டியவர் மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு. எனவே, நூலகத்துக்கும் அவரது பெயரே வைக்கப்பட்டது. கட்டடங்கள் எல்லாம் பர்மா தேக்கால் கட்டப்பட்டவை. கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நூலகத்தின் கட்டடத்தை நம்பெருமாள் செட்டி குழுமம் கட்டித்தந்தது.

கன்னிமாரா

இரு கழுகுகள் பாம்பைக் கொத்திப் பறப்பதுபோல இருந்த ஆங்கிலேய அடையாளம்தான் இந்த நூலகத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின் அசோக சிங்கம் பொறிக்கப்பட்டது. தமிழின் மிகப் பழைமையான அச்சு நூலின் பிரதியான 1560-ல் அச்சிடப்பட்ட பைபிள், 1553-ல் வெளியான லத்தீன் மருத்துவ நூல், 1852-ல் எழுதப்பட்ட தேம்பாவணியின் இரண்டாம் பாகம், 1578-ல் வெளியான பிளாட்டோவின் நூல், 1886-ல் வெளியான இந்திய வானிலை அறிக்கையின் தொகுப்பு ஆகியவை இங்குள்ள பழைமையான நூல்கள். 1861-ல்  வெளியான உலக அட்லஸ்தான்  இருப்பதிலேயே பழைய புத்தகம்.

இந்தியப் பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் அனைத்துப் புத்தகங்களின் நகல்களைப் பெறும் நான்கு முக்கியமான நூலகங்களில் இதுவும் ஒன்று. தமிழில் வெளியான முதல் நூலின் நகலைக் கொண்டது, முதல் அட்லஸ் உள்பட பழைமையான நூல்களை உள்ளடக்கியது என, சென்னை கன்னிமாரா நூலகம் பல சிறப்புகளைக் கொண்டது. அதுவும் பழைமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் 'புத்தகக் காப்புப் பிரிவு’  கன்னிமாராவுக்குப் பெருமை சேர்க்கக்கூடியது' ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் இது விளங்கிவருகிறது.

கன்னிமாரா

கன்னிமாராவில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் 'புத்தகக் காப்புப் பிரிவு’ பகுதியில் மட்டும் ஒரு லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள் பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருவார்கள் என்பதால் ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை மாத வாரியாகப் பிரித்துவைத்து பாதுகாக்கிறார்கள். மேலும், தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத பழைமையான நூல்கள் உள்ளன.

 

''கன்னிமாராவில் அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே இல்லை’ என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அதேபோல் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலரும் இங்கு வந்து வாசித்திருக்கிறார்கள். இன்னமும் வாசிக்கிறார்கள்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்!

 
ஜெயலலிதாவின் புகைப்படத் தொகுப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை வழங்குகிறது பிபிசி தமிழ்.

ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா. அப்போது, அவரது வயது 13. 1961ல் அப்படம் வெளியானது.

1965 ஏப்ரல் 9 ஆம் தேதி வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஸ்ரீதர்.

1961 லிருந்து 1980 ஆம் ஆண்டுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 140 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.

அவருடைய திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை' Image caption1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை' 1966ல் வெளியான 'சந்திரோதயம்' Image caption1966ல் வெளியான 'சந்திரோதயம்' jayalalitha 'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது. Image caption'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது. 1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' Image caption1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' 1967ல் வெளியான 'அரச கட்டளை' Image caption1967ல் வெளியான 'அரச கட்டளை' 1972ல் வெளியான 'சக்தி லீலை' Image caption1972ல் வெளியான 'சக்தி லீலை' 1973ல் வெளியான 'வந்தாள் மகராசி' Image caption1973ல் வெளியான 'வந்தாள் மகராசி' 1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்' Image caption1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்' ஜெயலலிதாவின் புகைப்படத் தொகுப்பு

 

http://www.bbc.com/

Link to comment
Share on other sites

மூன்று முச்சதங்கள், ஐ.சி.சி-யில் முதல் இடம்... `ராக் ஸ்டார்' ஜடேஜாவின் சாதனைகள்! #HBDSirJadeja

 
 

மூன்று முச்சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர், ஐ.சி.சி சிறந்த பவுலர் தர வரிசையில் முதல் இடம், கிரிக்கெட்டின் `ராக்ஸ்டார்', குதிரைக் காதலன், `சர்'... எனப் பல அடையாளங்களைக் கொண்டவர்தான் ரவீந்திர சிங் ஜடேஜா. அவரது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றி பலர் அறிந்திராத சில விஷயங்களைப் பார்ப்போம்!

ரவீந்திர சிங் ஜடேஜா

 

டிசம்பர் 6, 1988-ல் அனிருத்-லதா தம்பதிக்குப் பிறந்தவர் ரவீந்திர சிங் ஜடேஜா. ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைபார்த்த அவரது தந்தைக்கு, ஜடேஜாவை ராணுவத்தில் சேர்க்க வேண்டுமென்ற கனவு இருந்தது. ஆனால், சிறு வயதிலிருந்தே, அவரது ஒட்டுமொத்த ஈர்ப்பும், விருப்பமும் கிரிக்கெட்டின் பக்கமே இருந்தது. இது அவரது தந்தையை மிகவும் அச்சுறுத்தியது. ஜடேஜாவின் கிரிக்கெட் கனவை அவரது அம்மா தாங்கிப்பிடித்தார். எதிர்பாராத விதமாக 2005-ல் நடந்த விபத்தில் ஜடேஜா அவரது அம்மாவை இழந்தார். இந்தத் தாக்கத்தால் கிரிக்கெட் கனவை தள்ளி வைத்துவிட்டு, அவரது அப்பாவின் சொல் கேட்டு நடந்துவந்தார். இருப்பினும், அம்மாவுக்குப் பின் அவரது அக்கா, ஜடேஜாவின் கிரிக்கெட் கனவுக்கு உயிர் கொடுத்து ஊக்குவித்தார். மீண்டும் ஜடேஜாவின் ஆர்வம் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பியது. அவரது கிரிக்கெட் கனவை 2005-ல் நடந்த அண்டர்-19 உலகக் கோப்பை நிறைவேற்றியது. 

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜடேஜா. இந்த ஆட்டம் அவரை 2008 அண்டர்-19 உலகக் கோப்பையிலும் விளையாட வைத்தது. விராட் கோலி அந்த ஆட்டத்தின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மலேசியாவில் நடைபெற்ற அந்தத் தொடரின் வெற்றி நாயகர்களாக, இந்திய அணி ஜொலித்தது. விளையாடிய 6 போட்டிகளில் குறைந்தபட்ச ரன்களை மட்டுமே கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை புரிந்தார்.

2006-07-ல் ராஞ்சி டிராபி தொடரில் அடியெடுத்துவைத்தார். 2012-ல் நடந்த ராஞ்சி தொடரின் மூலம், தன் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தார். விளையாடிய முதல் ஆட்டத்திலேயே 300-க்கும் மேல் ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவில்  8-வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முதல் ஆட்டத்திலேயே 300-க்கும் மேல் ரன்களை அடித்தவர்கள் டான் ப்ராட்மேன், பிரெயின் லாரா, க்ரேஸ் போன்ற சாதனையாளர்கள் வரிசையில் ஜடேஜாவும் இடம்பெற்றார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். ஒரிஸாவுக்கு எதிராக 314, குஜராத்துக்கு எதிராக 303 நாட் அவுட், ரயில்வேக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 312 ரன்களை அடித்து மூன்று முச்சதங்களைப் பதிவுசெய்தார். இச்சாதனைகளைப் புரியும்போது இவருக்கு வயது 23. இதுவே இவரை இந்திய அணிக்குள் நுழைய வித்திட்டது. 

ஜடேஜா

2008-09-ல் நடந்த ராஞ்சி சீசன் முடிவில், 42 விக்கெட்டுகளை வீழ்த்தி, 739 ரன்களைக் குவித்து நிலையான வீரராகத் தன்னை அடையாளம் காட்டினார். இதைப் பார்த்த தேர்வாளர்கள், 2009-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுத்தனர். தொடரின் இறுதிப் போட்டியில்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார் ஜடேஜா. இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், ஜடேஜா தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்களைக் குவித்த தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இப்படியே தனது சிறந்த ஆட்டத்தை, கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிக்காட்டி இந்திய அணியின் நிலையான வீரராக முன்னேறினார்.

ஆகஸ்ட் 2013-ல் ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பான பேட்டிங், தக்க நேரத்தில் விக்கெட் வேட்டை, அபாரமான ஃபீல்டிங் என ஜடேஜா தனது பெஸ்ட்டைப் பதிவு செய்துகொண்டே இருந்தார். ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னையின்  ஃபேவரைட் வீரராக ஜொலித்தார். ஐ.பி.எல் மூலம் இவருக்கு `ஜட்டு' என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. சென்னைக்கு முன் ராஜஸ்தானுக்காக மூன்று சீசன்கள் விளையாடியுள்ளார். 14 போட்டிகளில் 135 ரன்களைப் பெற்ற இவரை ‛‛கிரிக்கெட்டின் `ராக்ஸ்டார்' '' என்று செல்லமாக அழைத்தார், ஆஸ்திரேலியாவின் பிரபல சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்னே.

மிடில் ஆர்டரில் இவர் வெளிக்காட்டிய சிறப்பான ஆட்டம், பல சமயங்களில் இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது. முதல்தர கிரிக்கெட் போட்டியில் மூன்று முச்சதங்களை அடித்து முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தேடிக் கொடுத்த அவருக்குள் இன்னும் அந்த நெருப்பு எறிந்துகொண்டுதான் இருக்கிறதா? ஒரு விளையாட்டு வீரனுக்கு அவன் வெளிப்படுத்தும் ஆட்டத்தில் ஏற்ற இறக்கம் நேரத்தான் செய்யும். அவனுக்கான நேரம் ஒருநாள் கண்டிப்பாக வரும். தக்க நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஜடேஜா. அதுவும் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என மூன்று திறமைகளைக் கொண்ட ஜடேஜாவுக்கு, ஏதாவது ஒன்று கை கொடுத்து, அணியை விட்டு வெளியேறச் செய்யாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டேதான் இருந்தது. அணியில் நுழையும் எண்ணற்ற வீரர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கும்தான். ஆனால், அது எந்நிலையிலும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. அணியில் இடம்பெற்று கிரவுண்டில் விளையாடினாலும் சரி, இடம்பெறாமல் பெவிலியானில் உட்கார்ந்திருந்தாலும் சரி, இவரது காந்தப் பார்வை மைதானத்தை நோக்கியே இருக்கும். இவரின் திறமை மேல் நம்பிக்கை கொண்ட ஒரே ஆள் எம்.எஸ்.தோனி மட்டுமே. இவர் சொதப்பிய பல தருணங்களில், வாய்ப்புகளை வாரி வாரி வழங்கிக்கொண்டே இருந்தார் தோனி. காரணம், அவரின் கணிப்பு தவறியதேயில்லை. அதேபோல் இவரும் அதைப் பயன்படுத்திக்கொள்வார். 

ரவீந்திர ஜடேஜா

 

இந்திய அணியில் நுழைவதற்கு முன் சாதுவான குழந்தை முகத்தோடு நுழைந்த இவர், தற்பொழுது விதவிதமான பல ஸ்டைல்களை அறிமுகப்படுத்தி பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார். முறுக்கு மீசை, சம்மர் கட்டிங் தலை, விதவிதமான தாடியமைப்பு என புதுப்புது ட்ரெண்டுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். இதை டைப் செய்துகொண்டிருக்கும்போதே, இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில், இரு விக்கெட்டுகளை வீழ்த்தி புன்னகையுடன் பெவிலியன் திரும்புகிறார். வாரே வாவ். ஹேப்பி பர்த்டே `ஜட்டு'. தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

பிரிட்டனில் சோதிக்கப்படும் தானியங்கி கார்கள்

பிரிட்டன் சாலைகளில் ஓட்டுநர் இல்லா வாகனங்களை பரிசோதிக்க திட்டம். ஆனால் வீதிகளில் ஏற்கெனவே ரோபோ கார்கள் சோதிக்கப்படுவது அங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

Link to comment
Share on other sites

வர்த்தகம் என்றால் சும்மாவா?  ஆச்சர்யமூட்டுகிறது இந்த இணையவழி நிறுவனத்தின் கதை!

 
 

door2door_c_16075.jpg

இன்றைய நாள்களில் உணவில்லாமல்கூட இருந்து விடலாம்போல. ஆனால், இன்டர்நெட் எனப்படும் இணையம் இல்லாமல் இருப்பது கொஞ்சம் சிரமம்தான். வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உறவை முற்றிலுமாக மாற்றியமைத்த பெருமை இந்த இணையத்துக்குத்தான் சேரும். நமக்குத் தேவையானவற்றை நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவதைத் தவிர்த்து, நாம் இருக்கும் இடத்துக்கே பலவகையான பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன, இணையத்தின் வழியே இயங்கிவரும் இ-காமர்ஸ் தளங்கள். உலகம் முழுவதும் இப்படியிருக்க, நம்ம ஊர் மட்டும் விதிவிலக்கா என்ன? 

 
 

இவ்வாறு நம்மூரிலும் ‘மளிகைப் பொருள்களை’ வீட்டுக்கே டெலிவரி செய்யும் சேவையை ஜோராகச் செய்துகொண்டிருக்கிறது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம், எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதன் கதைதான் இது...

door2door_8_16283.jpg

இப்போது கோயம்புத்தூர்வாசிகளிடையே பிரபலமாக விளங்கும் ‘Door2Door’ சேவை குறுகிய காலகட்டத்தில் எவ்வாறு கொங்கு மக்களின் ஆதரவைப் பெற்றது எனப் பகிர்ந்துகொண்டார், அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜ்குமார் நடேசன். 

“எனக்கு எப்போதும் கொங்கு பகுதியில் குடியேற வேண்டுமென்ற ஆசை இருந்ததால், கோவையைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்து வியாபாரத்தைத் தொடங்கலாம் என எண்ணினேன். இன்டர்நெட் துணையோடு மளிகைப் பொருள்களை மக்களுக்கு வழங்குவது என முடிவு செய்தேன். புதிதாக வியாபாரம் தொடங்குவதற்குமுன், அந்தத் துறை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம். ‘ஆழம் தெரிந்து காலை விடு’ என்பார்கள். அதனால் முதலில் ஆன்லைன் வர்த்தகம் எப்படி நடக்கிறது... அதிலும் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யும் முறை எப்படி சாத்தியம்... தேவையான முதலீடு... என்னென்ன பண்டங்களை விற்பனை செய்யப் போகிறோம் என்பன போன்ற ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.”

“வியாபாரத்தை மேன்மைப்படுத்த 
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் 
பெற்றாலே போதும்”

சிறிய தொடக்கம், நல்ல வரவேற்பு

“வியாபாரத்தைப் பொறுத்தவரை மிகச் சாதாரணமான ஆனால், முக்கியமான ஒரு விதியுண்டு. ‘மக்களுக்கு என்ன தேவை என அறிந்து அதற்கேற்றாற்போல் நம்முடைய தயாரிப்பை விற்பனை செய்ய வேண்டும்’. கோயம்புத்தூர் மக்களுக்கும் இவ்வாறான தேவை ஒன்று இருந்தது. அதாவது, இங்கே பழங்களும் காய்கறிகளும் குளிர்பதனம் செய்யப்பட்டுத்தான் அனைவருக்கும் சென்றடைகின்றன. பல நாள்கள் பதப்படுத்தப்படுவதால் பழங்கள் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்காது. எனவே, டோர் 2 டோர் பெயரில் வீட்டுக்கு வீடு சென்று, முதலில் பழம் மற்றும் காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக வாங்கி வழங்கும் சேவையைச் சிறிய அளவில் ஆரம்பித்தோம். ஆகஸ்ட் 2015 முதல் விற்பனை தொடங்கியது.”

door2door_9_16091.jpg

“அப்பார்ட்மென்ட்டுகளுக்குச் சென்று எங்களுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து, ‘ஃப்ரெஷ்ஷான பழம் மற்றும் காய்கறிகளை வீட்டுக்கு வந்து தருகிறோம்’ எனக் கூறி, பிரசாரம் செய்து வியாபாரத்தை ஆரம்பித்தோம். நாங்கள் வழங்கிய பண்டங்களின் தரம், நியாயமான விலை மற்றும் எங்களின் சேவையைப் பார்த்து, வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் மூலம், வியாபாரம் தலைதூக்க ஆரம்பித்தது.”

“ ‘வியாபாரத்தை மேன்மைப்படுத்த வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றாலே போதும்’. எனவே, காய்கனி விற்பனையை முடிந்தவரை சிறப்பாகச் செய்து வந்தோம். இதேநேரத்தில், www.door2door.co.in தளமும் உருவாகிக்கொண்டிருந்தது. முதலில் இணையதள தொழில்நுட்பச் சேவை வழங்கும் தளங்கள் மூலமாக எங்களுடைய வலைதளத்தை உருவாக்கினாலும், பின்னர் நாங்களே சொந்தமாக கோர் பி.எச்பி. முறையைப் பயன்படுத்தி, தளத்தைக் கட்டமைத்தோம். வாடிக்கையாளர்களிடமிருந்த நம்பிக்கை காரணமாக ஏற்கெனவே எங்களிடம் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குபவர்களிடம் இனி வீட்டுக்குத் தேவையான மொத்த மளிகை பொருள்களையும் ‘டோர் 2 டோர்’ இணையதளம் மூலம் ஒரே இடத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம் எனக் கூறினோம். சிறுகச் சிறுக, டோர் 2 டோர் வரவேற்பைப் பெற்றது. இப்போது நினைத்ததைவிட நல்ல ரெஸ்பான்ஸ்!” என உற்சாகமாகக் கூறுகிறார் ராஜ்குமார் நடேசன்.

டோர் 2 டோர் எப்படி வித்தியாசமாகச் செயல்படுகிறது?

“பிற இ-காமர்ஸ் தளங்கள் ஏதாவதொரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டு, ஆர்டர் வர வர அந்த சூப்பர் மார்க்கெட் மூலம் மளிகைப் பொருள்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும். ஆனால், டோர் 2 டோர் சொந்த சேமிப்புக் கிடங்கு, பிரத்யேக டெலிவரி சேவையாளர்கள் மற்றும் வாகனங்களைக்கொண்டு இயங்கி வருகிறது. இதனால் தரமான மற்றும் இடையறாத சேவையை வழங்க முடிகிறது. வியாபாரத்துக்காக மற்றவரை சார்ந்து இருக்கும் நிலையும் தவிர்க்கப்படுகிறது.”

“வாடிக்கையாளர்களுக்கு உதவும் வண்ணம் 
புதுப்புது உத்திகளை வியாபாரத்தில் 
கையாள வேண்டியது மிகவும் முக்கியம்!”

door2door_n_16448.jpg

“குறிப்பாக ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்றால், ஆன்லைனில் ஒவ்வொரு பொருளாக க்ளிக் செய்து ஆர்டர் செய்யும் முறை சற்றுச் சிக்கலாக உள்ளதாக மக்களிடமிருந்து எங்களுக்குக் கருத்துகள் வந்தன. வாடிக்கையாளர்களுக்கு உதவும்வண்ணம் புதுப்புது உத்திகளை வியாபாரத்தில் கையாள வேண்டியது மிகவும் முக்கியம். எனவே, எளிமையான முறை ஒன்றை அறிமுகம் செய்தோம். www.door2door.shop என்ற புதிய தளத்தை உருவாக்கினோம். இதன்மூலம் ஆர்டர் செய்வது இன்னும் சுலபமாகிறது. உங்களுடைய மளிகை லிஸ்ட்டை கைப்பேசியில் படமெடுத்து இந்தத் தளத்தில் பதிவேற்றி உங்கள் முகவரியைக் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். லிஸ்ட்டில் உள்ளவை எல்லாம் டெலிவரி செய்யப்படும். இதை ஒரு மொபைல் செயலி (APP) ஆகவும் வெளியிட்டுள்ளோம். மேலும், ஆர்டர் செய்ய பிரத்யேக வாட்ஸ்அப்/தொலைபேசி மற்றும் டோல்ஃப்ரீ எண்களுமுண்டு!” எனச் சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் ராஜ்குமார் நடேசன்.


வாடிக்கையாளர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து, வியாபாரத்தை எளிமையாக மாற்றியமைத்த இந்தச் சம்பவம் தொழில் பக்திக்குச் சிறந்த சான்றாக அமைகிறது.

door2door_a_16011.jpg

சரி, விலையெல்லாம் எப்படிங்க?

“பிராண்டட் பாக்கெட் பொருள்கள் டோர் டு டோரில் கிடைத்தாலும் அரிசி, பருப்பு, மஞ்சள், மிளகாய், தானியங்கள் போன்றவற்றின் விற்பனையே இங்கு அதிகம். இதற்குக் காரணங்கள் இரண்டு... ஒன்று தரம், மற்றொன்று விலை. எந்த ஊரில் எந்தப் பொருள்கள் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும் என அறிந்து அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்கிறோம். உதாரணத்துக்கு அரிசிக்குக் காங்கேயம், ஆரணி; பருப்புக்குச் சேலம்; மசாலா பொருள்களுக்குக் கம்பம், குமுளி, மூணாறு; முந்திரிக்குக் கன்னியாகுமரி... இப்படி இந்தப் பட்டியல் நீளும். மொத்தமாக அந்தந்த இடங்களில் வாங்குவதால், எப்போதும் மார்க்கெட் விலையைவிட டோர் 2 டோரில் விலை குறைவுதான். ஆனால், தரம் ஒருபோதும் குறைவதில்லை!” என வியப்பில் ஆழ்த்துகிறார்.

தற்போது இவர்களின் சேவை கோயம்புத்தூர் மொத்தமும் கிடைக்கிறது. பொருள்களை ஆர்டர் செய்தால் 15 கிலோமீட்டருக்குள் இருக்கும் வீடுகளுக்கு மூன்று மணி நேரத்தில் இலவசமாக டெலிவரி செய்கின்றனர். ஆர்டர் குறைந்தபட்சம் 500 ரூபாய் அளவு இருக்க வேண்டும்... அவ்வளவுதான். விநியோகத்தின்போது, ரொக்கப் பணம், டெபிட் / கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங், பே பால் என பல வழிமுறைகளில் பொருள்களை வாங்கலாம்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

‘ரோலிலாலா’ என்ற குழந்தை 'நெல்சன் மண்டேலா' ஆன கதை!

 
 

நெல்சன் மண்டேலா, nelson mandela

"நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதுபோல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, ஒரு சுதந்திர பூமி. இங்கு அனைத்து மக்களும் சம அதிகாரத்துடன், சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும்வரை, என்னுடைய போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்" - ஜூன் 12, 1964-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட நெல்சன் ரோலிலாலா மண்டேலா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. எளிமையான தலைவராக இருந்த அவரை உலக அரங்கில் ஒரு மாபெரும் வரலாற்று நாயகனாக உயர்த்திய வரிகள் இவைதான். இன்றோடு அவர் இம்மண்ணை விட்டு நீங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

 
 

பல தொன்மையான வரலாறுகளின் உறைவிடமாக இருந்த ஆப்பிரிக்கக் கண்டம், பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஐரோப்பியர்களின் ஆட்டக்களமாகவும், சோதனைக் கூடமாகவும் மாறியது. தென்னாப்பிரிக்கப் பிள்ளைகள் உருட்டி விளையாடிய கற்கள் எல்லாம் வைரக்கற்கள் என்று அறிந்தால் சும்மாவா இருக்கும் ஐரோப்பியர்களின் மூளை? அவர்களுக்குள்ளேயே ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டார்கள். விளைவு, தங்களின் வளங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் சுரண்டிச் சாப்பிடுவதற்கு ஆப்பிரிக்கர்களே அடிமைகளாக மாறி ஏவல் செய்தார்கள். ஆப்பிரிக்கர்களின் கல்விமுறை ஐரோப்பியமயமாக்கப்பட்டது. ஆப்பிரிக்கக் குழந்தைகள் பள்ளியில் சேரும்போது, அவர்களுக்கு ஐரோப்பியப் பாணியிலான பெயர்கள் சூட்டப்பட்டன. அப்படி வந்ததுதான், மண்டேலாவின் முதல்பெயரான நெல்சன் என்பதும்.

பிறந்தவுடன் மண்டேலாவின் அப்பா வானத்தை நோக்கிக் கூவிய பெயர் ‘ரோலிலாலா’ என்பதுதான். பெயர் என்னும் ஒற்றைச்சொல் வரலாற்றின் எச்சமாக இருப்பது. அந்தப் பெயரையே மாற்றியதால் தன் பிள்ளையைப் பறித்துக்கொண்ட உணர்வு, தந்தை காட்லா ஹென்றிக்கு திடீரென்று, தன்னுடைய பாட்டனாரின் பெயரான மண்டேலாவைச் சேர்க்கின்றார் தந்தை. அன்றுமுதல் இவர், நெல்சன் மண்டேலா என்று வரலாற்றினால் அழைக்கப்பட்டார்.

nelson mandela, நெல்சன் மண்டேலா

சுதந்திரம் நிறைந்த ஒரு குழந்தைப் பருவம் மண்டேலாவிற்குக் கிடைத்தது. ஆனால், தன்னுடைய ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். தாய் நோசெகேனி, மண்டேலாவை தன் கணவரின் தோழரும், சோஸா இனக்குழுவின் பிரதிநிதியுமான ஜோன்ஜின்டேபாவிடம் ஒப்படைக்கின்றார். வாலிபப் பருவத்தை முழுமையாக அந்த அரண்மனையிலேயே கழிக்கின்றார் மண்டேலா. இடையில் ஒரு காதல் தோல்வி. அங்குதான் தன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு அனைத்தையும் அறிந்துகொள்கின்றார். மெல்ல அரசியல் ஆர்வம் பிறக்கின்றது. சட்டம் பயின்றார். கிளார்க் கல்லூரியில் திறமையான மாணவராக வலம் வருகின்றார். வளர்ப்புத் தந்தையிடமிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திலிருந்து தப்பிக்க, உறவினர் கார்லிக் பேகேனியிடம் தஞ்சம் புகுந்தார். அவர் மூலம் தன் அரசியல் குருவான வால்டர் சிசுலுவைச் சந்திக்கின்றார் மண்டேலா. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். பிறகு எவ்லினுடன் திருமணம். அவர்களின் அன்பிற்கு அடையாளமாகத் தெம்பி என்ற ஆண் மகவு பிறக்கின்றது. சிறிது காலத்திற்கு மட்டுமே அவர்களின் திருமண வாழ்க்கை இனிக்கின்றது. மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோரான பிறகு, அவர்களுடைய திருமண வாழ்வு முற்றுப் பெறுகின்றது.

பெரிதும் அறிமுகம் இல்லாத காரணங்களினால் இந்தியர்கள் மீதும், காந்திய வழிப் போராட்டத்தின்மீதும் ஈடுபாடு கொள்ளாத மண்டேலா, இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்திய அறவழிப் போராட்டத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். காந்தியமும், பிறகு கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம், கம்யூனிஸ்ட் அறிக்கையும் அவருக்குள் புதிய பார்வைகளைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு தீர்க்கமான போராட்டத்தை நிகழத்தவேண்டும் என்ற முனைப்பில் மண்டேலா செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, சட்டபூர்வமாகத் தன்னுடைய நிறவெறிக்கு ‘அபார்தெய்ட்’ என்ற பெயர் சூட்டப்படுகின்றது. தென்னாப்பிரிக்க மக்கள் அனைவரையும் இனவாரியாகப் பிரிப்பதுடன், வேற்றுமைப்படுத்துகின்றது. பொது இடங்கள், போக்குவரத்து ஆகிய அனைத்திற்கும் வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

இவை அனைத்தையும் எதிர்த்து 1960-ம் ஆண்டு, கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மக்கள் ஒன்றுகூடினர். அப்போது, அங்கிருந்த காவலர்கள், கிட்டத்தட்ட அறுபத்து ஒன்பது மக்களைச் சுட்டுத்தள்ளினர். உலக நாடுகள் மத்தியில் பெரும் அவப்பெயரைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தென்னாப்பிரிக்க அரசு தள்ளப்பட்டது. இதன் காரணமாக, நெல்சன் மண்டேலா தன் அரசியல் ஆசான் வால்டர் சிசுலு மற்றும் பலரைக் கைது செய்ய தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்தது. ஆனால், மண்டேலா தப்பித்து, எத்தியோப்பியா, சூடான், கானா, அல்ஜீரியா, லண்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து தங்கள் நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துரைத்தார் மண்டேலா. இது உலக நாடுகள் அனைத்திற்கும் அவருடைய ஆளுமையைப் பரப்பியது. மண்டேலாவின் மூலம் தென்னாப்பிரிக்க அரசின் அராஜகப் போக்கினை அறிந்த ஐ.நா சபை, அதனை வன்மையாகக் கண்டித்தது.

நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்த்து, நாட்டிற்குத் திரும்பிய மண்டேலாவிற்குக் காத்திருந்தது நீண்ட நெடிய சிறைவாசம். 1962 அக்டோபர் 2 அன்று புகழ்பெற்ற பிரிட்டோரியா நீதிமன்றத்திற்கு, சைரன் ஒலியுடன் வந்த காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்தார் மண்டேலா.

ஆனால், அவர் இறங்கி நடந்து வந்த தோற்றம், அங்கிருந்த ஐரோப்பிய நீதிபதிகள் உள்பட அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. தன் புராதன உடையில், புலித்தோல் போர்த்தியபடி, ஒரு சிங்கம்போல நடந்து வந்தார் மண்டேலா. பின்பு கூட்டத்தினரை நோக்கி, தன்னுடைய வலக்கரத்தை உயர்த்தி, ‘அமெண்டா’ என்று முழங்கினார். அமெண்டா என்றால் ‘உறுதி’ என்று பொருள். அவருக்கு மரண தண்டனை அளிக்கும் அளவிற்கு அவர்மீது அதிருப்தியில் இருந்த தென்னாப்பிரிக்க அரசு, பிற உலக நாடுகளைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கின்றது. இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அவரின் மன உறுதியில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டுவரவில்லை. அவர் சிறையிலிருந்த காலத்தில் மண்டேலாவின் தாயார் உயிர் நீத்தார். தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குக்கூட மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. அதன்பின் ஓராண்டு கழித்து மண்டேலாவின் மூத்த மகன் தெம்பி ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். 

நெல்சன் மண்டேலா, nelson mandela

தன் மன உறுதி குலைந்தால் தன்னுடைய சக தோழர்களுக்கும் மன உறுதி குலையும் என்பதற்காக, அந்த இழப்பைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும், உடலையும் மனதையும் உறுதி செய்துவந்தார் அவர்.

1990-ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்படுகின்றார். பின்பு அந்நாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்கின்றார்.

அறிவியலைத் தன்னுடைய இனமே சிறந்தது என்று நிரூபிக்கப் பயன்படுத்திய ஐரோப்பியர்களின் செயலுக்கு ஒரு காத்திரமான உதாரணம், சாரா பார்ட்மன். ஆப்பிரிக்கப் பெண்ணான இவருடைய உடல் ஆராய்ச்சி என்ற பெயரில் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளானது. இவருடைய மார்பகங்களும், பின்பகுதியும் வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாக இருந்ததால், மரபணுக்களில் குரங்கினுடைய கலப்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்தார்கள் ஐரோப்பியர்கள். தனக்கு நேர்ந்த உடல் ரீதியான கொடுமைகளாலும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களாலும் அவர் தன்னுடைய 26-ம் வயதில் மரணம் அடைந்தார்.

இறந்த பிறகும் அவருடைய உடல் விவரிக்க இயலாத துன்பத்திற்கு ஆளானது. அவருடைய உடலுறுப்புகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இவற்றோடு அவருடைய உடலின் மாதிரியும் அங்கு வைக்கப்பட்டது.

ஆனால், 1994-ம் ஆண்டு அதிபர் மண்டேலா, "சாராவின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும்" என்று பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்தார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அத்தனை ஆண்டுகளாக ஒரு காட்சிப்பொருளாகப் பார்க்கப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்ணின் உடல், கடைசியாக 2002-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் தேசியப் பெண்கள் தினத்தன்று அடக்கம் செய்யப்பட்டது.

காட்சிப் பொருளாகப் பார்க்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்ணின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று எண்ணிய மண்டேலாவின் உள்ளத்திண்மை, அவர் ஆட்சி புரிந்த ஆண்டுகளில் மிகக்குறைந்த ரத்தச் சேதாரத்துடனும், அதே சமயம், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தமிட்ட முதலீடுகளை வெற்றிகரமாகவும் நிறைவேற்ற உதவியது.

ஒரு தேர்ந்த மேன்மையான தலைவன் பெரும்பான்மைவாதத்தினை ஒருபோதும் கையில் எடுப்பதில்லை. தென்னாப்பிரிக்காவின் பன்மைத்துவத்தினைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்ததால்தான், இன்று மண்டேலா மக்கள் மத்தியில் உத்தமராக உயர்ந்து நிற்கின்றார்.

இன்று பெரும்பான்மைவாதத்தினையும், பிரிவினைவாதத்தையும் முன்னிறுத்தும் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் மண்டேலாவின் வாழ்க்கை ஒரு பாடமாகும்.

அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், மேன்மையான வாழ்க்கை வாழவும் உரிமை உள்ள மக்களுக்கு மண்டேலா ஓர் ஒளிவிளக்கு! 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘கடவுளுக்குச் சவால்’
 

image_cec7cef56a.jpgதங்களுக்குத் தாங்களே பொய்யுரைப்பதில் பலர் சமர்த்தர்களாக இருப்பதுண்டு. 

பாரதூரமான தவறுகளைச் செய்துவிட்டு, ‘நான் செய்தது சரிதான்’ எனத் தமக்குத்தாமே சொல்வது, எவ்வளவு தரக்குறைவானது என்பதை ஏன்தான் உணராமல் இருக்கிறார்கள்? 

ஒருவர் தனக்குத்தானே வஞ்சனை செய்வது, பொய்மையின் உச்சக்கட்டமாகும். தங்கள் வசதிக்காக, எப்படியும் நியாயத்தைப் புரட்ட எத்தனிக்க முடியாது. 

இன்னும் சிலர், தாங்களே துஷ்டகுணங்களின் சொந்தக்காரர்கள் என்று சொல்வதில்கூடச் சந்தோசப்படுகின்றார்கள். இது கடவுளுக்குச் சவால் விடுவதுபோலாகும். 

இன்று கதாநாயகர்களை விட, வில்லன்களின் அங்க அசைவுகளை, நடத்தைகளையே விரும்பி ஏற்கும் இளைஞர்கள் பலருண்டு. 

வாழ்க்கையின் தாற்பரியத்தைப் புரியாமல் வாழ்ந்தால், அசுத்த மனத்துடன் துன்பப்படவேண்டியதே! 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 07

 

கிமு 43: ரோம அர­சி­யல்­வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படு­கொலை செய்­யப்­பட்டான்.

1724 : போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்­பது புரட்­டஸ்­தாந்து மதத்­தி­ன­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது.

varalaru-december-7.jpg1787 : டெல­வெயர் முதலாவது மாநி­ல­மாக ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இணைந்­தது.

1815 : நெப்­போ­லி­ய­னுக்கு ஆத­ர­வாக இருந்த பிரெஞ்சுத் தள­பதி மிக்கேல் நேய் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

1900 : மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்­லத்தில் வைத்து புகழ்­பெற்ற கரும்­பொருள் வெளி­யேற்ற விதியைக் கண்­டு­பி­டித்தார்.

1917 : முதலாம் உலகப் போர்: ஆஸ்­தி­ரி­யா, ஹங்­கேரி மீது ஐக்­கிய அமெ­ரிக்கா போரை அறி­வித்­தது.

1941 : இரண்டாம் உலகப் போர்: பின்­லாந்து, ஹங்­கேரி, போலந்து, ருமே­னியா ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக கனடா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1941 : அமெ­ரிக்­காவின் ஹவாய் தீவி­லுள்ள பேர்ள் துறை­மு­கத்தில் அமெ­ரிக்க கடற்­படை கப்­பல்கள் மீது ஜப்­பா­னிய படை­யினர் அதி­ரடி தாக்­கு­தலை நடத்­தினர்.

1946 : அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜி­யாவின் அட்­லாண்­டாவில் உண­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 119 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1949 : சீனக் குடி­ய­ரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்­வா­னுக்கு மாறி­யது.

1966 : துருக்­கியில் இரா­ணுவ முகாம் ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1971 : பாகிஸ்­தானில் நூருல் அமீன் பிர­த­ம­ரா­கவும் சுல்­பிக்கார் அலி பூட்­டோவை உதவிப் பிர­த­ம­ரா­கவும் கொண்ட கூட்­டணி அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி யஹ்யா கான் அறி­வித்தார்.

1972 : அப்­போலோ திட்­டத்தின் கடைசி விண்­கலம் ‘அப்­போலோ 17’ சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது.

pearl.jpg1975 : கிழக்குத் திமோரை இந்­தோ­னேஷியா முற்­று­கை­யிட்­டது.

1983 : ஸ்பெயின் மட்ரிட் நகரில் இரண்டு விமா­னங்கள் மோதி­யதில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1987 : கலி­போர்­னி­யாவில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணி ஒருவன், தனது முன்னாள் மேல­தி­கா­ரி­யையும், விமான ஓட்­டி­யையும் சுட்டுக் கொன்­றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதி­யதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1988 : ஆர்­மீ­னி­யாவில் 6.9 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்தில் சுமார் 25.000 பேர் கொல்­லப்­பட்டு 3 லட்சம் பேர் காய­ம­டைந்­த­துடன் 400,000 பேர் வீடு­களை இழந்­தனர்.

1988 : பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலைவர் யாசர் அரபாத், இஸ்­ரேலை ஒரு நாடாக அங்­கீ­க­ரித்தார்.

1995 : கலி­லியோ விண்­கலம் விண்­ணுக்கு ஏவப்­பட்டு 6 ஆண்­டு­களின் பின்னர் வியா­ழனை அடைந்தது.

2012 : பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க மீதான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­லி­ருந்து எதிர்க்­கட்சி உறுப்பினர்கள் விலகினர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் அப்பாவுக்கு நல்ல பிள்ளையா? #FeelGoodStory

 
 

அப்பா - மகன் கதை

`பிறர் மேல் காட்டும் அக்கறை என்கிற எளிய செயலை வீரம் என்றும் சொல்லலாம்’ - அமெரிக்க நடிகர் எட்வர்டு ஆல்பர்ட் (Edward Albert) தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதைப் போய் யாராவது `வீரம்’, `சூரத்தனம்’ என்று சொல்வார்களா? நிச்சயம் சொல்லலாம். ஏனென்றால், இந்தக் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டே வருகிறது. பிறர் மேல் அக்கறை காட்டுவதற்கு ஆள்களே இல்லை. அப்படிப் பார்த்தால், ஒருவகையில் இது வீரம்தானே! நாம் ஒவ்வொருவருமே இந்த விஷயத்தில் சுயபரிசீலனை செய்துகொள்வது நல்லது. பிறர் மேல் காட்டும் கரிசனம் எவ்வளவு நல்லவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கும் என்று நாம் யோசிப்பதே இல்லை. அக்கறைகொள்ள வேண்டியவர்களை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்; பார்த்துப் பார்த்து கவனிக்கவேண்டியவர்களை பரிதவிக்கவிடுகிறோம். ஆங்கிலத்தில் `Caring' என்று சொல்லப்படும் அக்கறையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். இந்தக் கதை அன்பின் வலிமையை, மனிதர்கள்பால் அக்கறைகொள்ளவேண்டியதன் அவசியத்தை வெகு இயல்பாகச் சொல்கிறது.

 

அந்த வீட்டில் அப்பா, மகன் இருவர் மட்டும்தான் இருந்தார்கள். அப்பாவுக்கு வயதாகிவிட்டது. நடை தளர்ந்துவிட்டது. ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியவில்லை. பதினைந்தடி தூரம் நடந்தால்கூட கால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி. கைகளில் சதா ஒரு நடுக்கம். பேசும்போது வாயிலிருந்து எச்சில் வழிகிறது. அவருக்கு ஒரே மகன். அவர் மேல் மரியாதையும், அக்கறையும், அளவில்லாத அன்பும் கொண்ட மகன். அவன் வேலைக்குப் போகும் நேரங்களில் அவரை கவனித்துக்கொள்ள வீட்டில் ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவனுக்குத் தானே அவரருகில் இருந்து கவனித்துக்கொண்டால்தான் திருப்தி.

நடை தளர்ந்த தந்தை

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவன் வீட்டிலிருந்தான். அப்பா, அவனை அழைத்தார்.

``வீட்டுச் சாப்பாட்டைச் சாபிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சுப்பா. இன்னிக்கி என்னை எங்கேயாவது ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயேன்...’’

``சரிப்பா’’ என்றவன் உடனே தயாரானான். அப்பாவுக்கு அவசியமாகத் தேவை என நினைத்த உடைமைகளை சேகரித்துக்கொண்டான். அவரின் மருந்து, மாத்திரைகள் வைத்திருந்த பெட்டியை சிறு தோள் பையில் போட்டுக்கொண்டான். ஒரு டிராவல்ஸ் ஏஜென்ஸியை அழைத்து, காருக்கு ஏற்பாடு செய்தான். அப்பாவை பத்திரமாக அதில் ஏற்றி, நகரிலேயே அவனுக்குப் பிடித்த, தரமான ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த ரெஸ்டாரன்ட் நிறைந்திருந்தது. அவன் முன்கூட்டியே போன் செய்து ஒரு மேஜையை அப்பாவுக்கும் அவனுக்குமென புக் செய்திருந்தான். உடல் நடுங்க, தட்டுத்தடுமாறி நடந்து வரும் ஒரு முதியவர்... அவரைக் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துவரும் ஓர் இளைஞன். அந்த ஹோட்டலுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், ரெஸ்டாரன்ட் பணியாளர்கள், மற்றவர்கள் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அவன், அவரை பத்திரமாக அழைத்துப்போய் ஒரு நாற்காலியில் உட்காரவைத்தான். அவர் வெகு பலவீனமாக இருந்தார். ஆனால், சாப்பிடும் வேட்கை குறையாமல் இருந்தது. அவருக்குப் பிடித்ததையெல்லாம் கவனமாக ஆர்டர் செய்தான் அவர் மகன். உணவு வந்தது. அப்பா கைநடுங்க, அதே நேரம் ஆசை ஆசையாகச் சாப்பிட ஆரம்பித்தார். வாயில் எச்சில் வழிந்தது. சாப்பிடும் உணவு சட்டை, பேன்ட்டிலெல்லாம் சிதறியது. ஒரு சாஸை எடுத்தபோது அது தவறி, மகனின் சட்டையின் மேல் பட்டது. ஒரு நாப்கினை எடுத்து நாசூக்காக அதைத் துடைத்துக்கொண்டான். சுற்றியிருந்தவர்கள் கொஞ்சம் அருவருப்போடு இவர்கள் இருவரையும் பார்த்தார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. யாரையும் பொருட்படுத்தவும் இல்லை. அப்பாவை கவனித்துக்கொண்டிருந்தான்.

கைகுலுக்கும் அப்பா

ஒரு பெண்மணி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்... ``இந்த வயசுல சாப்பாட்டு மேல ஆசையைப் பாரு...’’

அப்பா சாப்பிட்டு முடித்ததும், அவரை மெள்ள நடக்கச் சொல்லி, கைகழுவும் இடத்துக்கு அழைத்துப் போனான். அவர் சட்டையில் ஒட்டியிருந்த உணவுத் துகள்களை கவனமாக அகற்றினான். அவர் கையையும் முகத்தையும் அழகாகக் கழுவிவிட்டான். ஒரு துண்டால் அவரைத் துடைத்து பளிச்சென்று ஆக்கினான். அதுவரை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திவைத்திருந்த அவருடைய மூக்குக் கண்ணாடியை எடுத்து அவருக்கு மாட்டிவிட்டான். மேஜைக்குத் திரும்பினான். அந்த ரெஸ்டாரன்ட்டே அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தது.

பில் வந்தது. தொகையைச் செலுத்தினான். அப்பாவும் அவனும் எழுந்தார்கள். அவன் வழக்கம்போல அவரைப் பிடித்துக்கொண்டு மெள்ள நடந்தான்.

ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருந்தவர்களில் ஒரு வயதானவர் குரல் கொடுத்தார்... ``தம்பி... ஒரு நிமிஷம்...’’

அவன் திரும்பிப் பார்த்தான். ``என்ன சார்?’’

``தம்பி... நீ இங்கே ஏதோ ஒண்ணை விட்டுட்டுப் போறே... நல்லா கவனிச்சியா?’’

``அப்பிடியா? நான் எதையும் விடலையே சார்... எல்லாம் இருக்கே...’’ அவன், தான் கொண்டு வந்திருந்த பொருள்களை ஒருமுறை சரிபார்த்தான்.

``ஆமாம்... விட்டுட்டுத்தான் போறே... ஒவ்வொரு மகனுக்கும் ஒரு பாடம்... ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு நம்பிக்கை... அதை இங்கே விட்டுட்டுத்தான் போறே...’’

தந்தை - மகன் உறவு

 

ரெஸ்டாரன்ட்டில் இப்போது ஒரு சத்தமில்லை. அவன், அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியேறினான். அப்பா, தன் நடுங்கும் கரங்களால் அவன் கைகளை இறுகப் பற்றியிருந்தார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது

 

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணிலை போலீசார் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

 
கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது
 
நியூஜெர்சி:

குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீசார் தண்டனையும் பெற்றுத் தருகின்றனர்.

ஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.

கைது செய்யும் அளவுக்கு அணில் என்ன குற்றம் செய்தது? அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 
201712071211241997_1_Squirrel._L_styvpf.jpg

இந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது. இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் பல மின் விளக்குகள் எரியவில்லை.

எனவே அந்த அணிலை நியூஜெர்சி போலீசார் தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பெருமையாக வெளியிட்டனர். ஆனால் சில மணி நேரத்திலேயே அது ஜாமீனில் விடப்பட்டது. அதன் பிறகு போலீசார் அந்த அணிலை பார்க்கவில்லை.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த மனிதர்… கின்னஸ் நாயகனின் கதை! #RoySullivan

 

ஏழு என்றவுடன், “அட! செம லக்கி நம்பர்ங்க… நம்ம தோனியோட நம்பர்!” என்று நாம் சிலாகிப்போம். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் பிறந்த ராய் சல்லிவன் அவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். காரணம், மின்னல் அவரை ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு முறை தாக்கி இருக்கிறது. ஏழு முறையும் மனிதர் காயங்களுடன் பிழைத்திருக்கிறார். அவர் பிழைத்த அதிசயக் கதையை பார்க்கும் முன், இடி மற்றும் மின்னலுக்கு உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மின்னல்

 

மின்னல் என்பது மேகங்களுக்கு இடையில் வானில் தோன்றும் ஒளிக்கீற்று. வானில் தோன்றியவுடன், அதற்கு உடனே தரையில் இறங்கி விட வேண்டும். எனவே, பூமியில் உயரமாக எது இருந்தாலும், அதன் வழியாக நிலத்தை அடைய முயற்சி செய்யும். அப்படி முயற்சி செய்யும்போது காற்றை கிழித்துக்கொண்டு கீழே இறங்குவதால் உருவாகும் ஆற்றல், ஒலியாற்றலாக மாறி இடியாக வெளியேறுகிறது. மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், ஒளி, ஒலியை விட வேகமானது என்பதால் மின்னல் நம்மை முதலில் வந்தடைகிறது. இடி பின்னர் இடியாக ஒலிக்கிறது. பொதுவாக, இடி விழுந்தது, இடித் தாக்கியது என்று நாம் கூறுவது உண்டு. ஆனால், உண்மையாக மின்னல்தான் கீழே இறங்குகிறது. மின்னல்தான் ஒருவரைத் தாக்குகிறது.

ராய் சல்லிவன் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஷெனேன்டோ தேசிய பூங்காவில் ரேஞ்சராக பணிபுரிந்து வந்தார். 1936-ம் ஆண்டு, தனது 24-வது வயதில் ராய் அந்தப் பூங்காவில் பணியில் அமர்த்தப்பட்டார்.

தாக்குதல் #1

சரியாக ஆறு வருடங்கள் கழித்து, 1942-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஒரு நாள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பூங்காவில் இருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ராய் ஒதுங்கிக்கொண்டார். அது புதிதாக நிறுவப்பட்ட கோபுரம் என்பதால் இடிதாங்கி எதுவும் நிறுவப்படவில்லை. கோபுரத்தை மின்னல் பயங்கரமாக தாக்க எங்கும் தீ பரவத் தொடங்கியது. தப்பித்தால் போதும் என அடைமழையில், வெட்ட வெளியில் இறங்கி ஓடினார் ராய். எதிர்பாராவிதமாக, அவரை மின்னல் தாக்கியது. வலது காலின் ஒரு பகுதி கருக, கால் பெரு விரலின் நகம் பிய்த்துக்கொண்டு போனது. அவர் ஷூவும் ஓட்டையாகிப் போனது.

ராய் சல்லிவன்

தாக்குதல் #2

1969-ம் வருடம் ஜூலை மாதம் மீண்டும் இவரை மின்னல் தாக்கியது. இந்த முறை பெருமழை, இடி மின்னல் என்று பெய்யத் தொடங்கியவுடன், தனது டிரக்கில் ஏறிப் பதுங்கிக் கொண்டார். வழக்கமாக, இவ்வகை உலோகத்தால் ஆன கனரக வாகனங்கள், ஃபாரடே கூண்டாகச் செயல்பட்டு உள்ளே இருப்பதைக் காக்கும். இதை ராய் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதனால் தனக்கு எதுவும் நேராது என்று தைரியமாகவே இருந்தார். ஆனால், விதி வேறு வகையில் செயல்பட்டது. வேகமாகப் பூமியில் இறங்கிய மின்னல் ஒன்று, டிரக்கின் அருகே இருந்த மரத்தில் இறங்கியது. அங்கிருந்து பிரதிபலிக்கப்பட்ட அது, கண்ணாடி திறந்திருந்த டிரக்கின் உள்ளே புகுந்து ராய் அவர்களைத் தாக்கியது. அவர் தலை தீப்பிடித்து எரிய, புருவங்கள் மொத்தமாக எரிந்துப் போனது. மின்னல் தாக்கிய அதிர்ச்சியில், டிரக்கும் கட்டுப்பாடின்றி முன்னால் நகர்ந்து ஒரு பெரிய பள்ளத்தின் அருகில் வரை சென்று நின்றது.

தாக்குதல் #3

டிரக் சம்பவம் நடந்த அடுத்த வருடமே (1970) மீண்டும் மின்னல் அவரை வருடிக் கொடுத்தது. இந்த முறை தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்தார் ராய். வேகமாக வெட்டிய மின்னல், அவர் வீட்டின் அருகே இருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றைத் தாக்கியது. அதிலிருந்து சிதறிய மின்னல், இவரின் இடது தோளை தாக்கியது. மேல் சதை கிழிந்ததோடு தப்பினர் ராய்.

தாக்குதல் #4

1972-ம் ஆண்டு, ஷெனேன்டோ தேசியப் பூங்காவில் தன் ரேஞ்சர் அலுவலகத்தில் இருந்தார் ராய். அப்போது அவரை மின்னல் தாக்க, வழக்கம்போல அவரது தலை தீப்பிடித்துக்கொண்டது. உள்ளே கழிவறைக்கு ஓடிய ராய் தன் தலையைத் தண்ணீர் குழாயின் அடியே வைக்க முடியவில்லை. எனவே, ஈரத் துண்டு ஒன்றை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். அந்த நிகழ்வுக்குப் பிறகு, இடி, மின்னல், மழை என்றால் ராய் மிகவும் பயப்படத் தொடங்கினார். ஏதோ, துஷ்டச் சக்தி தன்னை அழிக்க நினைப்பதாக நினைத்துக் கவலை கொண்டார். எப்போது மழை வந்தாலும், தனது டிரக்கை நிறுத்திவிட்டு, அதன் சீட்டின் அடியில் ஒளிந்துகொள்ளும் கோழையாக ஆகிப்போனார்.

தாக்குதல் #5

ராய் சல்லிவன்1973-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி, பூங்காவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ராய். மழை பெய்வதுபோல் கருமேகம் சூழ, முன்னெச்சரிக்கையாகத் தனது டிரக்கை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்தார். அப்போது மேலே கருமேகம் ஒன்று அவரையே பின்தொடர்வது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், ஒருவழியாக, மேகத்தின் பிடியில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டோம் எனப் பெருமூச்சு விட்டு, டிரக்கை நிறுத்தி கீழே இறங்கினார். அடுத்த வினாடி, மின்னல் அவர் தலையில் இறங்கியது. இந்த முறை கொஞ்சம் வீரியம் அதிகம் என்று உணர்ந்துகொண்டார். வெள்ளை வெளிச்சத்தை தன் கண்ணுக்கு மிக அருகில் பார்த்ததாக பின்னர் கூறினார் ராய். இறங்கிய மின்னல் அவர் உடலின் வழியாகத் தரையில் இறங்கியது. இறங்கியவுடன், இவர் நின்ற இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தலை தீப்பிடித்து எரிந்தது. நடக்க முடியாத நிலை வேறு ஏற்பட்டது. எனவே, அப்படியே தவழ்ந்து, தனது டிரக்கில் எப்போதும் வைத்திருக்கும் கேன் நீரைத் தலையில் ஊற்றிக் கொண்டார்.

தாக்குதல் #6

அடுத்த தாக்குதல் நடந்தது ஜூன் 5, 1976-ம் வருடம். வழக்கம்போல், தன்னை ஒரு கருமேகம் துரத்தியதாகவும், ஒளிய எங்கேயும் இடம் இல்லாது போனதால், மின்னல் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் விவரித்தார் ராய். இந்த முறை அவரின் கணுக்கால் பலத்த காயம் அடைந்தது.

தாக்குதல் #7

ஜூன் 25, 1977-ம் ஆண்டு, ஒரு குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தார் ராய். மின்னல் அவரின் மேல் இறங்கியது. தலையும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தண்ணீர் எடுக்க ராய் ஓடிய சமயம் கரடி ஒன்று, இவர் பிடித்து வைத்திருந்த மீன்களை எடுக்க வந்தது. அந்த ஆபத்தான நிலையிலும், ஒரு மரக்கிளையை எடுத்து கரடியை ஒரு போடு போட்டுள்ளார் ராய்.

மின்னல்

இந்த ஏழு முறை மின்னல் தாக்கியது பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டாலும், தன்னை எட்டு முறை மின்னல் தாக்கியுள்ளது என்று சொன்னார் ராய். சிறு வயதில், தன் தந்தையுடன், கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தபோது, முதன் முறையாகத் தன்னை மின்னல் தாக்கியதாகவும், ஆனால், அப்போது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார். அதை தன்னால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் அதை மறந்தே போனார்.

நேஷனல் ஜியோக்ராஃபிக் நிறுவனத்தின் ஆய்வின் படி, மின்னல் தாக்கப்பட்டவர்களில், சராசரியாக 10 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இறக்கின்றனர். அதேபோல் அமெரிக்காவில், மூவாயிரத்தில் ஒருவரை தான் மின்னலே தாக்குகிறது. விர்ஜினியா மாகாணமும், வருடத்துக்கு 35ல் இருந்து 45 நாள்கள் புயலைப் பார்க்கிறது. எனவே, மின்னல் ராய் சல்லிவன் அவர்களைச் சற்று அதிகமாகவே தாக்கியது என்றாலும், அவர் இறந்து போகும் அளவுக்குக் கொடூரமான மின்னல் ஒரு போதும் அவரை நெருங்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏழு முறை மின்னல் தாக்கியும் பிழைத்தால், உலகிலேயே அதிக முறை மின்னல் தாக்கிய மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார்.

 

இப்படிச் சாவையே வென்ற ராய் சல்லிவன் எப்படி இறந்தார் தெரியுமா? தனது 71-வது வயதில், துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். காரணம்? காதல் தோல்வி! அது சரி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.