Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீண்டு கொண்டே போகும் இனவாதிகளின் கரங்கள்

Featured Replies

நீண்டு கொண்டே போகும் இனவாதிகளின் கரங்கள்
நீண்டு கொண்டே போகும் இனவாதிகளின் கரங்கள்

ஜ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தீர்மானத்துக்கு எதிராகப் பெரும்பான்மையின மக்களை அணி திரட்டுகின்ற செயற்பாடுகள் தெற்கில் வலுப்பெற்று வருகின்றன. இதன் பின்னணியில் மகிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது. "புதியதொரு சிங்கள தேசத்தை உருவாக்குவோம்'' என்ற தொனிப்பொருளில் பரப்புரை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

போர்க்குற்றங்கள் தமிழர்களுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டுள்ளதால் அவை தொடர்பான நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை இனவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் நீதியானதும், நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முன்னாள் ஆட்சியாளர்களும், படையினரும் குற்றவாளிகளென இனங்காணப்படுவது உறுதி  என்பதால் விசாரணைகள் இடம்பெறுவதைத் தடுப்பதே அவர்களின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.

ஆனால், இனவாதக் கருத்துக்கள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றமைதான் நாட்டில் இன ஐக்கியத்தையும், அமைதியையும் குலைத்துவிடப் போகின்றது. இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் விரோதத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதுதான் அரசியல்வாதிகளின் வாடிக்கையாக மாறிவிட்டது. பண்டாரநாயக்க காலத்திலிருந்து மகிந்த காலம் வரை இனவாதமே அரசியலில் பெரும் மூலதனமாக இடம்பிடித்ததை எவருமே மறுத்துரைக்க முடியாது.

சிங்கள மொழியைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு பண்டாரநாயக்க அன்று ஆட்டம் போட்டதால் பெரும் இனக்கலவரம் உருவாகி இனங்களுக்கிடையில் பிளவுகளும் தோன்றின. அன்றிலிருந்து இன்று வரை இந்த அவல நிலையிலிருந்து நாடு மீட்சி பெறவில்லை. பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகட்டும் அல்லது மகிந்த ராஜபக்ச ஆகட்டும் பெரும்பான்மையின மக்களை மையப்படுத்தியே தமது அரசியலை நடத்திச் சென்றனர். சிறுபான்மை மக்களைச் செல்லாக் காசாகவே இவர்கள் மதித்தனர். இந்த மக்கள் நாட்டுக்குத் தேவையில்லாத சுமையாக இவர்கள் கருதினர். அதிலும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் மீதான வெறுப்பு பன்மடங்கு  அதிகமானது. இதுவே இனவாத நெருப்பாகக் கக்கப்படுகின்றது.

இதைவிட மகிந்த தரப்பினர் பிரதானமான நோக்கமொன்றையும் கொண்டுள்ளதை அறியக் கூடியதாகவுள்ளது. முன்னைய ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஊழல், மோசடிகளில்  மகிந்த தரப்பினர் ஈடுபட்டமை உறுதியாகி அவை தொடர்பான விசாரணைகளும் இடம்பெற ஆரம்பித்துவிட்டன. விசாரணைகளின் போக்கைப் பார்க்கும்போது குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றமை உறுதியாகிவிட்டதெனக் கூறலாம். இந்த நிலையில் இதிலிருந்து விடுபடுவதற்கு எதையாவது செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் மகிந்த தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. சரியான தருணத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பான செய்திகள் வெளிவந்ததால் அதனையே தமது பிரதான ஆயுதமாக அவர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் தான் பெரும்பான்மையின மக்களைத் திசை திருப்பும் பொருட்டு இனவாதக் கருத்துகளை விதைத்து வருகின்றனர். புலிகளை ஒழித்துவிட்டு இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட்டதாக மார்தட்டிய மகிந்த தற்போது சமாதானத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை அவரது பொய் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இதேவேளை நீண்ட காலமாகச் சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டாம் என்ற குரல்களும் தெற்கில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அரசு இந்தச் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகச் சாதகமான முறையில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதனைத் தடுத்துக் குழப்பும் விதமாகச் சிலர் செயற்பட்டு வருகின்றனர். களைந்தெடுத்த இனவாதியான விமல் வீரவன்ச வழமைபோன்று தனது இனவாதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார். இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறும்போது அரசுக்கு எதிராகச் சாட்சியமளித்துவிடுவார்கள் என்ற  புதியதொரு கண்டுபிடிப்பை விமல் வீரவன்ச தமது பங்குக்கு வெளியிட்டுள்ளார்.

இதன் மூலமாக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. இனவாதத்தைப் பரப்புவதன் மூலமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் அது. ஆகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படப் போவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதேவேளை - தமிழர்களின் இனப்பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமெனத் தற்போதைய அரசை எவராவது நம்பினால் அது வீண் கனவாகவே முடியும். ஏனென்றால் எந்த விடயத்தைப் பொறுத்த அளவிலும் தீர்க்கமானதொரு முடிவு எடுக்கக் கூடிய திராணியும், துணிவும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எதிலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதுதான் அரசின்  வாடிக்கையாக மாறிவிட்டது. அதிலும் இனவாதிகளை எதிர்த்துச் செயற்படுகின்ற துணிவு கூட அரசிடம் காணப்படவில்லை. இதேவேளை - அரசில் உள்ள சிலரே இனவாதிகளாகவும் காணப்படுகின்றனர். இனவாதத்தை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் தமிழர்கள் இவர்களிடமிருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக போர் முடிந்தகையோடு அரசின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று புலிகளால் நாடு ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக ஒருசாரார் தெரிவிக்கின்றனர். இதனால் வடக்குக் கிழக்கிலிருந்து படையினரைத் திரும்ப அழைக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அரசும் இதே கொள்கையைத் தான் கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் படையினர் மத்தியிலேயே வாழ வேண்டும் என்றதொரு நிலைதான் தொடரப் போகின்றது.

என்னதான் சமாதானம், நல்லிணக்கம் என வாய்கிழியக் கத்தினாலும் இனவாதிகளின் கரங்கள்தான் இந்த நாட்டில் உயர்ந்து நிற்கப்போகின்றன. இதை மாற்றுவதற்கு அந்த இனவாதிகள் நினைத்தாலும் கூட முடியாது என்பதுதான் உண்மை.


Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.