15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?
Published By: Vishnu
13 Mar, 2026 | 01:26 AM
(நெவில் அன்தனி)
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இந்துக்களின் சமர் 14ஆவது அத்தியாயத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து அத் தோல்வியை நிவர்த்திசெய்யும் குறிக்கோளுடன் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் இந்து கல்லூரி கொழும்பு அணியும் தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்து கடந்த வருட நாயகன் எஸ். சுபர்னன் தலைமையில் யாழ். இந்து கல்லூரி அணியும் 15ஆவது அத்தியாயத்தில் களம் இறங்கவுள்ளன.
இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு பி. சரவணமுத்து (சரா) ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் (13ஆம், 14ஆம் திகதிகள்) நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அங்குரார்ப்பண ஒருநாள் கிரிக்கெட் போட்டி 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப் போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிறைவேட் லிமிட்டெட் கம்பனி தொடர்ச்சியாக 4ஆவது வருடமாக அனுசரணை வழங்குவதுடன் இப் போட்டி ஜனசக்தி லைவ் இந்துக்களின் சமர் என அழைக்கப்படுகிறது.
இலங்கை பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்துக்களின் சமர் தனித்துவம் மிக்க போட்டியாக கருதப்படுகிறது.
ஏனெனில் இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றும் ஒரே ஒரு மாபெரும் கிரிக்கெட் இதுவாகும்.
வடக்கு மற்றும் தெற்கு கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இப் போட்டி வழிவகுப்பதுடன் மாகாணங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாமாகவும் இது அமைகின்றது.
இது வெறுமனே கிரிக்கெட் போட்டியுடன் நின்று விடாமல் நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது.
வழமைபோல் இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களுக்கு இடையிலான சொல்லாடல் (விவாதம்) போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த வருடம் இந்து கல்லூரி கொழும்பு தனது 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதால் இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியும் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
75ஆவது ஆண்டு விழாவை இந்துக்களின் சமர் வெற்றியுடன் கொண்டாடும் வகையில், இந்து கல்லூரி கொழும்பு அணி பல்வேறு வியூகங்களைப் பிரயோகிக்க உள்ளதாக அறியக் கிடைக்கிறது.
யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தேசிய அணியில் இடம்பெற்றவருமான தமிழ் யூனியன் அணியின் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரா ஓவல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்து கொழும்பு கல்லூரி அணிக்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.
இந்து கல்லூரி கொழும்பு அணி முகாமைத்துவத்தினரின் அழைப்பின் பேரிலேயே வியாஸ்காந்த் குறிப்புகளை வழங்கி அணி வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இதுவரை நடந்து முடிந்த 14 இந்துக்களின் சமர்களில் யாழ். இந்து கல்லூரி 4 வெற்றிகளையும் இந்து கல்லூரி கொழும்பு 3 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
இந்த வருட போட்டியின் ஆரம்ப விழாவுக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ். அர்ச்சுதன், பிரதம விருந்தினராகவும் 1996 உலக சம்பியன் இலங்கை அணியின் உப தலைவர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கரலியத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அணிகள் விபரம்
யாழ். இந்து கல்லூரி: எஸ். சுபர்னன் (தலைவர்), எஸ். ஹரிகரன் (உப தலைவர்), ரி. பிரேமிகன், ஆர். ஆதித்தியன் (விக்கெட் காப்பாளர்), என். நிருஜன், கே. நிதீஸ், எஸ். அபிவர்னன், எஸ். சிவகஜீசன், எஸ். செல்வஜன், ரி. பிரீதிகன், ஜீ. லக்சிகன், எம். டனிலாஷ், ஜெ. பவானன், எஸ். அஷ்வின், பி. அனிஷ், ஜீ. செந்தூரன். தலைமைப் பயிற்றுநர்: எஸ். அலன்ராஜ். உதவி பயிற்றுநர்கள்: டி. ஜோய் ஆகாஸ், ஆர். நியூட்டன்.
இந்து கல்லூரி கொழும்பு: ஆர். தேஷ்கர் (தலைவர்), எம். அபிஷேக் (உப தலைவர்), எஸ். மிதுஷேகன் (விக்கெட் காப்பாளர்), எஸ். ஹர்ஷ, கே. யஷுராஜன், ரி. சந்தோஷ், ஜீ. தூயவன், ரி. யாதவ், எஸ். சதுர்ஷன், எஸ். சர்விஷ், வி. யுவராஜ், எஸ். ஆகாஷ், ஆர். அகிலேஷ், வி. அபினேஷ், எஸ். சபேஷன், ஆர். தக்ஷேஸ். பயிற்றுநர்: எஸ். கோபிநாத், உதவி பயிற்றுநர்கள்: பி. ஷஷிதரன், சி. ஜேசன்.
https://www.virakesari.lk/article/240832
By
ஏராளன் ·