ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் ஏன்?
பட மூலாதாரம்,Getty Images
59 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் மோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை டொனால்ட் டிரம்புக்கு சிக்கலாக மாறியுள்ளது.
போர்க்கப்பல்களை அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், ஐரோப்பாவும் பிற நாடுகளும் இதுவரை அதிக அக்கறை காட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவாவிட்டால், அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு 'மிகவும் மோசமானதாக' அமையும் என்று அவர் கூறினார்.
பினான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியிலும், புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது செய்தியாளர்களிடம் பேசியபோதும் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த மாதம் சீனாவில் சீன அதிபருடன் நடைபெறவுள்ள சந்திப்பிற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சீனா உதவும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா தனது எண்ணெய் பயன்பாட்டில் "90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாகவே பெறுகிறது" என்று அவர் கூறினார்.
டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் இறுதியில் சீனாவில் நடைபெற உள்ளது.
ஆனால் அதற்கு முன்பே சீனா சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். ஏனெனில் இந்தச் சந்திப்பு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் நடைபெறவுள்ளது, இது 'நீண்ட காலம்' என்று அவர் குறிப்பிட்டார்.
தனது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார், இருப்பினும் இது குறித்து மேலதிக தெளிவான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான "பொதுவான முயற்சியில்" இணையுமாறு சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த மறுநாளே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் நிலையில், இவ்வழியாக செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என இரான் எச்சரித்துள்ளது.
இந்தப் போரினால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் டிரம்புக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல்
ஐரோப்பாவைப் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெயை ஐரோப்பாவும் சீனாவும் பெருமளவில் சார்ந்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.
தனது கோரிக்கைக்கு எந்தப் பதிலும் இல்லையென்றால், அது 'நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக' அமையக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
'இந்த முயற்சியில் எந்த நாடு அமெரிக்காவுக்கு உதவுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்' என்றும் அவர் கூறினார்.
தனது சமீபத்திய கருத்தில் அவர் குறிப்பிட்ட எந்த நாட்டின் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், நேட்டோ கூட்டணி மற்றும் 'தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில்' இருப்பதாக அவர் கருதும் நாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், "முற்றிலும் அழிந்துபோன ஒரு நாட்டினால் ஹோர்முஸ் நீரிணைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
மற்ற நாடுகளிடம் இருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்த டிரம்ப், "அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டுள்ளது" என்றும் கூறினார்.
"நாங்கள் யுக்ரேனுக்கு உதவி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. யுக்ரேன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளது... ஆனால் நாங்கள் அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம். ஏனெனில் நாங்கள் அவர்களுக்காகத் துணை நிற்போம், ஆனால் அவர்கள் எங்களுக்காகத் துணை நிற்க மாட்டார்கள் என்று நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்கள் துணை நிற்பார்களா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்றார் டிரம்ப்.
பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார் (கோப்புப் படம்)
நாடுகள் என்ன கூறின?
டிரம்பின் கருத்துக்கு சில நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன.
பிரிட்டன்: இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்,''சந்தைகளில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும். அது எளிதான வேலை அல்ல. அந்தப் பகுதியில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்லும் நிலையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு வர பிரிட்டன் அதன் கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது'' என்றார்.
சீனா: வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சிஎன்என்-இடம் கூறுகையில், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு சீனா அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.
டிரம்பின் கோரிக்கையைச் சீனா ஏற்குமா என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்ந்து தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஜப்பான்: பிரதமர் சனே தகாய்ச்சி புதன்கிழமை தொடங்கும் தனது அமெரிக்கப் பயணத்தின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க உதவி கோரி தனது நாட்டிற்கு எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்று திங்களன்று தகாய்ச்சி கூறியிருந்தாலும், "தகுந்த முறையில் எவ்வாறு பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,கோப்புப்படம்
பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு, பிரான்ஸ் ஹோர்முஸ் நீரிணைக்குப் போர்க்கப்பல்களை அனுப்புவதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் திங்களன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசியதாகத் தெரிவித்தார்.
"இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இரானுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். பிரான்ஸ் தற்போது தனது நலன்கள், இப்பகுதியில் உள்ள தனது நட்பு நாடுகளின் நலன்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தற்காப்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது என்பதையும், எங்கள் நாட்டிற்கு எதிரான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதையும் நான் நினைவுபடுத்தினேன். ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
தென் கொரியா: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களைத் தாங்கள் "நெருக்கமாகக் கண்காணித்து" வருவதாகத் தென் கொரியா அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம், "கொரிய குடிமக்களைப் பாதுகாக்கவும், எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தென் கொரியா பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறது," என்று தெரிவித்தது.
ஆஸ்திரேலியா: ''ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுவதற்காக போர்க்கப்பல்களை அனுப்பமாட்டோம். ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.உதவிக்காக எங்களை யாரும் கோரவில்லை.நாங்கள் எந்த உதவியும் வழங்கவில்லை," என அமைச்சர் கேத்ரின் கிங் அரசின் ஒளிபரப்பு சேவையான ஏபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/crl4gdr92dro
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.