Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..!

 

236501.jpg

ப்போதெல்லாம் அ.தி.மு.க-காரர்களும் பேசக் கேட்டு இருக்கிறேன்... ’கருணாநிதி மிக புத்திசாலியான ராஜதந்திரி... எவ்வளவு  தந்திரமா கூட்டணி அமைச்சிருக்காரு. அவர்களுக்கு எவ்வளவு அழகா தொகுதியை பிரிச்சுக் கொடுத்திருக்காரு. என்னதான் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு இந்த அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லையே’ என்று உங்கள் எதிரிகளும் உங்களை மெச்சிய காலம் ஒன்று இருந்தது.

எல்லாரும் நம்பினோம், நீங்கள் மிகப் பெரிய ராஜதந்திரி என்று. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, உங்களுக்கு துணை பிரதமர் பதவி தர காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளதாக செய்திகள் பரவிய போது,  மற்ற மாநில தலைவர்கள் எல்லாம் உங்களை ஆச்சர்யத்தோடு உற்று நோக்கிய போது, உங்கள் மீது ஒரு பிரமிப்பே உங்கள் எதிரிகளுக்கும் ஏற்பட்டது. அப்போது சில தவறான முடிவுகளால், அ.தி.மு.க. தமிழக அரசியல் அரங்கில் தன் பிடிமானத்தை இழந்து கொண்டிருந்த காலம். பின்பு வந்த சட்டசபை தேர்தலிலும் உங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. நீங்கள் அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்கள் ஆனீர்கள். 

தோல்விகள் வெற்றிக்கு அருகில் இருக்கிறது!

resize001.jpgமோசமான படுதோல்விக்கு அருகில்தான், மிகப் பெரிய வெற்றி இருக்கிறது என்பது முன்னாள் அமெரிக்க அதிபர் வில்லியமின் பிரபலமான கூற்று. ஆனால், வெற்றி மட்டும் படுதோல்விக்கு அருகில் இல்லை.... படுதோல்விகளும் வெற்றிக்கு மிக அருகில்தான் இருக்கிறது என்பது உங்கள் விஷயத்தில் மிகத் தெளிவாகியது. 

குழந்தைகளுக்கு, ’தோல்வியில் துவண்டு விடாதே, வெற்றியில் அகந்தை கொள்ளாதே’  என்று பாடம் எடுக்க வேண்டுமென்றாலும் உங்கள் வாழ்க்கையைதான் கூற வேண்டும். ஆம். 2006 சட்டமன்ற வெற்றிக்குப் பிறகு அனைத்து அதிகாரங்களும் உங்கள் கையில்தான் இருந்தன. சட்டமன்றம், பாராளுமன்றம் என்று நீங்கள் நினைத்தை எல்லாம் செய்திருக்கக் கூடிய காலம். நீங்கள் நினைத்ததை செய்யவும் செய்தீர்கள். ஆனால், அப்போதுதான் புரிந்தது, உங்கள் நினைப்பில் தமிழ் மக்களின் நலனைவிட, உங்கள் பிள்ளைகளின் நலன்தான் முதன்மையாக இருக்கிறது என்று. ஏனென்றால், அந்த காலட்டத்தில் தமிழ் மக்களுக்குச் செய்ததை விட, உங்கள் மக்களுக்குத்தான் அதிகம் செய்தீர்கள். 

உங்களிடம் குவிந்திருந்த அதிகாரங்களை வைத்து, நீங்கள் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் நீங்கள் சுயபரிசோதனை செய்து பாருங்கள். முக்கிய மத்திய அமைச்சர்களாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதுவும் குறிப்பாக உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இருந்தார்கள். ஆனால், அதை வைத்து நீங்கள் தமிழகத்திற்கு செய்த நலன்களை கொஞ்சம் பட்டியலிடுங்கள்..? அரிசி, தொலைக்காட்சி பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்ததை எல்லாம், உங்கள் சாதனை என்று சொல்லி உங்கள் திறனை நீங்களே சுருக்கிக் கொள்ளாதீர்கள். இதைத்தான் சாதனைகள் என்றால், இதைத்தான் ஜெயலலிதாவும் செய்கிறார் எனும்போது, உங்களுக்கு ஏன் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்...?

நிச்சயம், எந்த தொலை நோக்கு திட்டமும் உங்கள் ஆட்சியில் இல்லை. பொதுவாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்டு. 'ஜெயலலிதாவை பார்க்கவே முடியாது, ஆனால், கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும், போய் பர்க்கலாம், நம் பிரச்னையை சொல்லலாம்' என்று கூறப்படுவது உண்டு. ஆனால், உங்களைச் சுலபமாக சந்தித்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்ற நிலையில்தான் நீங்களும் இருந்தீர்கள், உங்கள் ஆட்சியும் இருந்தது.  எங்கும் கட்டப்பஞ்சாயத்து, எதிலும் கமிஷன், ஊருக்கொரு அதிகார மையம், அதுவும் தனி ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாக மதுரையின் நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது.  இதையெல்லாம் ஆட்சியில் இருந்தபோது தடுக்க என்ன செய்தீர்கள்..? 

நிச்சயம் எந்தவொரு தகப்பனும், தாம் செய்த தவறுக்காக, தம் மகன் மன்னிப்பு கேட்பதை விரும்ப மாட்டான். ஆனால், உங்களுக்காக உங்கள் மகன் ஸ்டாலின் ‘நமக்கு... நாமே’ என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறார். “ஆம். எங்கள் ஆட்சியில் சில தவறுகள் இருக்கத்தான் செய்தது... மன்னியுங்கள்... மீண்டுமொரு வாய்ப்பு தாருங்கள்’’ என்கிறார். உங்கள் மகனை எவ்வளவு தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்..! 

ஈழப்போரும், கருணாநிதியும்:

fastingdrama.jpg

உங்களை நான் முள்ளிவாய்க்கால் போரில் குற்றம் சொல்ல விரும்பவில்லை. உங்களால் முள்ளிவாய்க்கால் கடைசிக்கட்ட போரை தடுத்து நிறுத்தி இருக்க முடியாது. ஆனால், உங்களைக் குற்றம் சொல்வதற்கு நீங்கள்தான் காரணம்... சொல்லப் போனால், நீங்கள் மட்டும்தான் காரணம். நீங்கள் உங்களைப் பற்றி, தேவதூதன் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினீர்கள். கடைசி முள்ளிவாய்க்கால்போரின் போது, அக்டோபர் 6, 2008 ல் நடந்த மயிலை மாங்கொல்லை மாநாடு நினைவு இருக்கிறதா...?  என்ன பேசினீர்கள்...? ’ஈழப்போரை தடுக்க முடியவில்லையென்றால் எனக்கு ஏன் இந்த பதவி?’ என்று பேசி உங்களால், ஈழப்போரை தடுத்து நிறுத்த முடியும் என்ற பிம்பத்தை கட்டமைத்தவர் யார்...? 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, போர் நின்றுவிட்டது என்று சொன்னது யார்...? அனைத்துக்கும் நீங்கள்தானே காரணம்... பின்  முள்ளிவாய்க்கால் போருக்காக உங்களைக் குற்றம் சுமத்தினால், ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது?


குடும்ப அரசியலும், கருணாநிதியும்:

தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்த பின், இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது..? Kalaignar-family.jpgகட்சிக்காக எந்த அர்ப்பணிப்பும் செய்யாத தயாநிதிக்கு ஏன் பதவி என்று...? அப்போது நீங்கள் சொல்லிய பதில் நினைவிருக்கிறதா...? "அவருக்கு நல்லா இந்தி தெரியும். அதனால்தான் பதவி கொடுத்தேன்...” என்றீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வாரிசுகள் பதறி போனார்கள். ’இந்தி தெரியாததால் என்னால் பெரிய அளவிற்கு வர முடியவில்லை’ என்று எஸ்.வி. சேகர் சொல்லியதற்கும், நீங்கள் சொல்லியதற்கும் என்ன பெரிய வித்தியாசம். சரி ஒரு பேச்சுக்கு, நீங்கள் சொல்லியதையே சரி என்று வைத்துக்கொண்டாலும், அழகிரி என்ன இந்தி பண்டிட்டா அல்லது குறைந்தபட்சம் பிராத்மிக் தேர்விலாவது தேர்ச்சி பெற்றவரா...? 


உங்கள் குடும்பம் உங்களைப் பயன்படுத்தி கொண்டது என்று தயவு செய்து கழிவிரக்கம் தேடாதீர்கள். உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் உங்கள் குடும்பத்தை பயன்படுத்திக் கொண்டு உள்ளீர்கள். ஆம்... எம்.ஜி.ஆரை வீழ்த்த மு.க.முத்து தொடங்கி, அழகிரி வரை உங்கள் நலனிற்காகத்தான்  அனைத்தும் செய்துள்ளீர்கள்.

அரசியல் இழிநிலையும், கருணாநிதியும்:

236833.jpgவழக்கமாக ஒரு வாதம் முன்வைக்கப்படுவது உண்டு. அரசியல் நாகரிகம் தெரிந்தவர் கருணாநிதி. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கூற்றுப்படி வாழ்பவர். அதாவது, மாற்றுக் கட்சிகளையும் மதித்து நடப்பவர் என்று உங்களைப் புகழ்பவர்கள் உண்டு. ஆனால், தமிழக அரசியல் கலாச்சாரம் சீரழிய நீங்களே காரணமாக இருந்தீர்கள். ஆம்.  வயதான காமராஜர், முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா என்று கேட்டது துவங்கி எம்ஜிஆரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மீதான விமர்சனம் என்றெல்லாம் செயல்பட்டிருக்கிறீர்கள்? ஒருவரை மோசமாகப் பேசிவிட்டு, பின்பு நேசக்கரம் நீட்டி... ’பாருங்கள் நான் எவ்வளவு தன்மையாக நடந்து கொள்கிறேன்!” என்று கழிவிரக்கம் தேட உங்கள் அரசியல் வாழ்வின் துவக்க காலத்திலிருந்தே முயற்சித்து வந்து இருக்கிறீர்கள். 

மோசமான நிர்வாகமும்  கருணாநிதியும்:

santiago-martin-his-son-etc-with-karunan

 பல வழக்குகளில் சிக்கியவர் லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டின். அவரைக் காவல் துறையும் தேடுகிறது. ஆனால், அவர் தயாரிக்கும் படத்திற்கு நீங்கள் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தீர்கள். அவர் பட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறீர்கள். இதைவிட மோசமான நிர்வாகத்திற்கு ஒரு சான்றளிக்க முடியுமா...? அதாவது, உங்கள் நலனிற்காக, நீங்கள் எந்த எல்லைக்கும் செல்வீர்கள் என்பதுதானே அர்த்தம்! 

சாதியும்  கருணாநிதியும்:

உங்களை நேரடியாக சாதி அரசியல் செய்பவர் என்று விமர்சிக்க முடியாது. ஆனால், சாதிகள் ஒழிய வேண்டும் என்று சொல்லும் நீங்கள், அதற்காக அரும்பாடுபட்டதாக பீற்றிக் கொள்ளும் நீங்கள், இத்தனை ஆண்டு கால சாதி ஒழிப்பிற்கு என்ன செய்தீர்கள்.... தயவு  செய்து அனைவரும் அர்ச்சகராகும் திட்டத்தை சொல்லாதீர்கள்.  எங்கள் ஊர் வெக்காலி அம்மன் கோவிலில் எந்தக் காலத்திலும், பிராமணர்கள் பூசாரியாக இருந்ததில்லை... உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையாகி இரண்டு நாட்கள் கழித்தே அதைக் கண்டிக்கிறீர்கள். அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலிக்காமல். கடுமையாகக் கண்டித்தால், ஓட்டு வங்கி சிதைந்துவிடும் என்கிற பயம். சரி... நீங்கள் சாதி கட்சி என்று விமர்சிக்கும் பா.ம.க.,  நாளை உங்கள் கூட்டணிக்கு வந்தால், சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று கூற உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா...? அல்லது கோவையிலோ, தேனியிலோ அல்லது பென்னாகரத்திலோ, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிற்க வைக்கும் மன உறுதி இருக்கிறதா....? பின்பு ஏன் உங்களை கொள்கை குன்றாக காட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள்...?

ராஜதந்திரங்கள் என்றும் உதவாது:

அறம் மட்டுமே துணை நிற்கும். ராஜதந்திரங்களும், சூழ்ச்சிகளும் என்றுமே துணை நிற்காது என்பதற்கு நீங்கள் ஒரு சரியான சான்று. தமிழகத்தின்  பிரச்னை காலங்களில் எல்லாம், நீங்கள் உண்மைக்கும், அறத்திற்கும் பக்கத்தில் நின்று இருப்பீர்களாயின், தமிழக மக்கள் உங்கள் பக்கம் நின்று இருப்பார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு பால், பழம் உவமை சொல்ல வேண்டிய நிலை இருந்து இருக்காது. ஆனால், நீங்கள் உங்கள் நலனையே முதன்மையானதாகக் கருதினீர்கள். அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்ற முதுமொழிக்கு ஏற்ப உங்கள் கட்சியினரும் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு பிரச்னை வந்துவிடும் என்று அஞ்சி, கடந்து ஐந்து ஆண்டுகளாக, மாவட்ட அளவில் எந்த பெரிய போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை...இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வாக்கு கேட்கப் போவார்கள்?  

அப்படியானால், ஜெயலலிதா சிறந்த தலைவர், நிர்வாகி, முதல்வர் என்று சொல்கிறேனா என்று இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே கேட்பார்கள்..! இல்லை... எக்காலத்திலும் அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அவருக்கு நீங்கள் மாற்று இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்!  

- மு. நியாஸ் அகமது

-------------------------------------------------------------------

விகடன்.காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.