Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பு பேரவை விடிவு தருமா?

Featured Replies


புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அவதானிக்கப்படுகின்றது.


அந்த வகையில் அரியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டத்தின் போது உபதலைவர்கள் மற்றும் விசேட வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

பதவி வழிவந்தவர் என்ற வகையில் சபாநாயகர் கருஜெயசூரிய இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், எம்.பி.க்களான திலங்க சுமதிபால, செல்வம் அடைக்கலநாதன், கபீர் ஹாசீம், சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, திலக் மாரப்பன, மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிலக்க ஆகியோர் அரசியலமைப்பு சபையின் உபதலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் வழிநடத்தல் குழுக்களாக 21 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குழுக்களுக்கு தலைவராக செயற்படுவார். மேலும் உறுப்பினர்களாக லக்ஷ்மன் கிரியல்ல, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜெயந்த, ரிஷாத் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, இரா.சம்பந்தன், அனுரகுமார திஸாநாயக்க, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்த்தன. ஜயம்பதி விக்கிரமரத்ன, சுமந்திரன், துமிந்த விஜேமான்ன, விமலரட்ணாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை முதலாவது அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சபாநாயகர் கருஜெயசூரிய, அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையாக இடம்பெறும் என்றும் ஊடகங்களுக்கு பகிரங்கமானதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.


அத்துடன் இலங்கை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க தினமாகும். எதிர்வரும் சந்ததியினரின் நன்மை கருதி இன்று நாட்டுக்கு ஏற்புடையதான புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்காக முழுப் பாராளுமன்றமே அரசியலமைப்புச் சபையாக மாற்றம் பெறும் நிகழ்வு இடம்பெறுகின்றது எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.


நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டு நாட்டுக்கு உகந்த புதிய தேர்தல் முறைமையை உள்வாங்கிய புதிய அரசியலமைப்பே உருவாக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் என அனைவரினதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

இந்த வகையில் அனைவரும் கலந்துகொண்டு புதிய அரசியலமைப்புக்கான கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் முதலாவது அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கூறியிருந்தார்.


1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்ட போது இவ்வாறு பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டிருக்கவில்லை. அதன்படி நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவதற்கான பிரேரணை கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும், அதனை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவானதாக அமையவில்லை.


இதுதொடர்பில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட போதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு திருத்தங்களை இந்தப் பிரேரணைக்கு முன்வைத்தது. அந்தத் திருத்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதனையடுத்து திருத்தங்களுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த வகையிலேயே ஏப்ரல் செவ்வாய் 05, 2016 அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டமும் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றன. இது இவ்வாறு இருக்க, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நிலையில் அதன் பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.


அரசியலமைப்புத் தொடர்பில் கருத்தறியும் நிபுணர் குழுவானது, கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுவந்தது. அத்துடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களும் பெறப்பட்டு வந்தன.


அந்த வகையிலேயே, மக்கள் கருத்தறியும் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதனடிப்படையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.


இந்நிலையில் அரசியலமைப்பு பேரவையின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் நல்லதொரு ஆரம்பமாக அமையவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

மேலும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படக் கூடிய வகையிலான தீர்வுத்திட்டம் ஒன்றுக்காக கடந்த காலம் முழுவதுமாக போராடி வந்துள்ளனர்.


அவ்வாறான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களைப் பெற்றபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களில் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத்திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.


அதுமட்டுமன்றி 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டமாக மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த மாகாணசபை முறைமையானது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக அமையவில்லை.

அத்துடன் அந்த மாகாண சபை முறையில் உறுதிப்படுத்தப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தற்போது வரை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.


இதனால் மாகாண சபைகள் எதிர்பார்க்கப்பட்ட வகையில் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றவில்லை என்பதுடன், தேவையான அதிகாரங்ளும் இதுவரை வழங்கப்படவில்லை.

அந்தவகையில் பார்க்கும் போது கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியிலும் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.


இந்நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் சிறந்ததொரு விடிவைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமாகும்.


மேலும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதில் எட்டப்படும் இணக்கப்பாடுகளில் முஸ்லிம் தரப்பும் இணக்கத்தைத் தெரிவித்து கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளும் அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டியது அவசியமாகும்.


அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விரைவில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். அதற்கேற்ற வகையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கருத்தொருமை வாத தேசிய அரசாங்கத்தையும் அமைந்துள்ளனர்.


ஆனால் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் காணப்பட்ட பிரதானமான முட்டுக்கட்டை நீக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீண்டகாலப் பிரச்சினைக்கு விரைந்து நியாயமான தீர்வுத்திட்டத்தை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க அனைத்துத தரப்பினரும் தமது ஆக்க பூர்வமான பங்களிப்பைச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும். அத்துடன் காலத்தின் தேவையுமாகும்.


இந்தியாவின் பங்களிப்பும் இலங்கையிலுள்ள மலையக மக்கள், முஸ்லிம் மக்களுடைய பங்களிப்பும் இந்தப் புதிய அரிசியல் யாப்பை உருவாக்குவதற்கு தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு அவர்களது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.

தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ இந்த இடத்தில் பிரிந்துநிற்க முடியாது. வடக்கு  கிழக்கிற்கு மாத்திரம் ஒரு அரசியல் யாப்பு எழுதப்பட முடியாது. அது முழுநாட்டிற்குமானதாக இருக்க வேண்டும். அத்துடன், இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

தமிழ் மக்களிடமிருந்து ஜனநாயக அமைப்புக்கள் தோற்றம் பெறுதல் தமிழ் மக்களது உரிமை தொடர்பாக, இறைமை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதை எதிர்வாதம் செய்யவேண்டியதில்லை. முழுமூச்சுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

http://www.thinakkural.lk/article.php?article/wbeslobsui429411d867796d9309qkgdm85db8cad5280ac44cec7c1btf3o#sthash.H1Rkh0tQ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.