Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு மறுசீரமைப்பு அழுத்தங்களுக்குள் இலங்கை அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த 29ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு, கிளஸ்டர் குண்டு தொடர்பான நம்பகமான விசாரணை, இராணுவ மய நீக்கம் உள்ளிட்ட விடயங்கள் பற்றித்தான் ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளியாகின. ஆனால் செய்ட் அல் ஹூசைனின் வாய்மூல அறிக்கையின் 34வது பந்தியில் இராணுவ மறுசீரமைப்பு தொடர்பாக குறிப்பிட்டிருந்த முக்கியமான பகுதிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் அல்லது துஷ்பிரயோகம் அல்லது சர்வதேச மனித உரிமைச்சட்ட மீறல்கள் போன்ற மோசமான குற்றங்களுடன் தொடர்புபட்ட எவரையேனும் பாதுகாப்பு படைகளில் வைத்திருத்தல் மற்றும் ஆட்சேர்ப்பதை தவிர்ப்பதை உறுதிசெய்யும் நியாயமான நிர்வாக முறைகளின் மூலம் நம்பகமான, விரிவான ஆய்வுச் செயல்முறையை உள்ளடக்கிய பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பை எவ்வாறு தொடங்குவது என்பது இலங்கை அரசுக்கு மற்றொரு சவாலாக உள்ளது.

சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பில் மீண்டும் சரியான இடத்தில் அமர்வதற்கு குறிப்பாக ஐநா அமைதிப்படையில் பங்கேற்பதற்கு இது இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு முக்கியமானது.

மாலியில் இலங்கையின் போரிடும் பற்றாலியன் ஒன்றின் பங்களிப்பை பெறுவதற்கான தயார்படுத்தல்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கு முன்னதாக சுதந்திரமான சிவில் மனித உரிமை கூறுகளை உள்ளடக்கிய பொருத்தமான ஆய்வு செயல்முறை ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

இலங்கை நிறுத்த எண்ணியுள்ள எல்லாப் படையினரையும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையாக ஆய்வு செய்யும் இந்த செயல்முறைகளில் அரசாங்கத்துடன் இணைந்து ஐநாவும் பணியாற்றும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு என்ற விடயம் முக்கியமானதொரு பரிந்துரையாக இடம்பெற்றிருந்தது. அதற்கு இலங்கை அரசாங்கமும் இணங்கியிருந்தது.

கடந்த ஒன்பது மாதங்களில் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கு அரசாங்கம் பெரியளவிலான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. இந்தநிலையில் தான் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி புதிதாக ஐநா அமைதிப்படையில் இடம்பெறுவதற்கான ஒரு முன்நிபந்தனையாகவும் கூட ஐநா மனித உரிமை ஆணையாளரால் இந்த விவகாரம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஆபிரிக்க நாடான மாலியில் ஐநா அமைதிப்படையினரின் எண்ணிக்கையை மேலும் 2500 பேரால் அதிகரிக்க கடந்த 29ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபை அனுமதி அளித்திருந்தது.

இந்த ஒப்புதலை பெறுவதற்கு முன்னதாகவே மாலிக்கு மேலதிக அமைதிப்படையினரை அனுப்ப ஐநா அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.

மாலி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஆபத்து நிறைந்த பிரதேசம். அங்கு இதுவரையில் 100ற்கும் அதிகமான ஐநா அமைதிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே போரில் அனுபவம் பெற்ற இலங்கைப் படையினரின் பற்றாலியன் ஒன்றுக்கு வாய்ப்பளிக்க ஐநா திட்டமிட்டுள்ளது. ஆபத்து நிறைந்த மாலிக்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பல்வேறு நாடுகளும் முன்வரவில்லை என்பதும் அதற்கு மற்றுமொரு காரணம்.

இலங்கைப் படையினருக்கு அங்கு வாய்ப்பளிக்க ஐநா தயாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் அகப்படாதவர்களை மாத்திரமே உள்ளீர்க்க முடியும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஐநாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் ஆய்வுகளில் மீறல்களில் ஈடுபடாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே மாலிக்கு அனுப்பப்படும் மேலதிக ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினர் இடம்பெறுவர் என்பதை செய்ட் அல் ஹூசைன் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற மீறல்கள் இராணுவத்தில் முக்கியமான படைப்பிரிவுகளுக்கும் அதிகாரிகளுக்கும் சர்வதேச வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு கிடைத்து வந்த வாய்ப்புகளும் இப்போது கணிசமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத்திற்கு பின்னர் ஐநா அமைதிப்படையில் இடம்பெறும் இலங்கைப் படையினரின் எண்ணிக்கை பாதியை விடவும் குறைவானதாக குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக சுமார் 1250 வரையான இலங்கைப் படையினர் ஐநா அமைதிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் இந்த நிலைமை கடந்த ஒரு ஆண்டில் சடுதியாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

ஐநா அமைதிப்படையில் 2015 ஏப்ரலில் 1286 இலங்கைப் படையினர் இடம்பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 2015 மே மாதம் 765, ஜூன் மாதம் 587, ஜூலை மாதம் 529 என்று குறையத் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் 500 ஆகக் குறைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 498 பேராக கீழிறங்கியிருக்கிறது.

ஐநா வினால் கடைசியாக வெளியிடப்பட்ட 2016ம் ஆண்டின் ஏப்ரல் மாத ஐநா அமைதிப்படைப் பங்களிப்பு பற்றிய அறிக்கையின்படி மேற்கு சகாரா 03, மத்திய ஆபிரிக்க குடியரசு 121 ஹெயிட்டி 16, கொங்கோ ஜனநாயகக் குடியரசு 04, பெனான் 151, சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடைப்பட்ட அப்ஜே பிராந்தியம் 01, லைபீரியா 01, தென் சூடான் 201 என்று மொத்தம் 498 இலங்கைப் படையினர் மாத்திரமே ஐநா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்தனர்.

ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கைப் படையினருக்கு குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அரசாங்கம் இதுவரை மூடி மறைத்து வந்திருக்கிறது.

இந்தச் சிக்கல் ஏற்பட்ட பின்னர் தான் ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவிடம் பலமுறை வேண்டுகொள் விடுக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கூட இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இலங்கை வந்த அமெரிக்க உயர் இராஜதந்திரிகளிடமும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐநா பொதுச்செயலரிடமும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் அகப்பட்டுள்ளதாலேயே இலங்கைப் படையினருக்கான சர்வதேச வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையைத் தடுக்கவே பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பை ஐநாவும் மேற்குலகமும் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றன.

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பில் மீறல்களில் சம்பந்தப்பட்ட படையினரை வைத்திருக்காமல் வெளியேற்றுவது மற்றும் ஆட்சேர்ப்புகளில் புறக்கணிப்பது ஆகிய விடயங்களை ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த இரண்டையும் அவர் வலியுறுத்தியிருப்பதற்கு காரணம் ஒரேயடியாக மீறல்களில் தொடர்புடைய படையினரை வெளியேற்ற முனைந்தால் அது இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். அது நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் ஆபத்துள்ளது.

அதனால்தான் ஆட்சேர்ப்புகளின் போது அத்தகையவர்களை புறக்கணிக்க ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியிருக்கிறார். ஐநா அமைதிப்படை சர்வதேச பயிற்சி வாய்ப்புகள் போன்றவற்றிற்கு இத்தகையவர்களை புற்க்கணிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் கோரியிருக்கிறார்.

ஐநா அமைதிப்படையில் இடம்பெறும் படையினர் மீறல்களில் ஈடுபடாதவர்கள் என்ற முத்திரை குத்தப்படல் வேண்டும் என்ற நிலை கட்டாயமாகி வருகிறது.

இந்த நிலையால் தான் ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினர் அதிகளவில் உள்ளெடுக்கப்படாத நிலையும் தோன்றியுள்ளது.

அதைவிட இப்போது ஐநா அமைதிப்படைக்கு இலங்கைப் படையினரை தெரிவு செய்யும் முறையும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஏதாவதொரு பற்றாலியனின் ஒன்று அல்லது இரண்டு கொம்பனிகள் ஒட்டுமொத்தமாக பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால் இப்போது அவ்வாறு செய்யப்படுவதில்லை ஏனென்றால் எல்லா பற்றாலியன்களும் போரில் ஈடுபட்டவை என்பதாலும், மீறல்களில் ஈடுபடாதவர்கள் என்று உறுதிப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் அந்த நடைமுறையை ஐநா மாற்றியிருக்கிறது.

இப்போது ஐநா அமைதிப்படைக்கு அனைத்துப் படைப்பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட படையினரை ஒன்றிணைத்து புதிய பற்றாலியன்கள் உருவாக்கப்பட்டு பயளிற்சி அளிக்கப்பட்டே ஐநா அமைதிப்படைக்கு அனுப்பப்படுகிறது.

இதில் காலாட்படை, கவசப்படை, கொமாண்டோ, விசேட படைப்பிரிவு என்று எல்லாப் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

இதுவும் கூட பாதுகாப்பு மறுசீரமைப்பின் ஒரு கட்டம் தான்.

பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு நிபுணத்துவ மற்றும் நிதி உதவிகளை ஏற்கனவே பிரித்தானியா வழங்க முன்வந்திருக்கிறது. ஆனாலும் அரசாங்கம் இந்த விடயத்தை ஆறப்போட்டு வருகிறது.

வெளிநாடுகளின் அழுத்தங்கள், விருப்பங்களுக்கு ஏற்ப பாதுகாப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது என்று அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கூறியிருந்தார்.

ஆனாலும் ஐநா அமைதிப்படையில் அதிகளவு படையினரை இணைத்துக் கொள்ளும் கனவு நிறைவேற வேண்டுமானால், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு விடயத்தில், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/articles/01/109736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.