Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா?

Featured Replies

புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா?

Page-07777-9f4ebaa742e8507ab57db58da9815831928bfb7a.jpg

 

தேர்தல் மறுசீரமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய அரசியல்யாப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காணப்படுகின்றனர்.

அரசியல் தீர்வைப் பெறும் விடயத்தில் த.தே.கூட்டமைப்பு உள்ளக முறையில் உச்ச அளவிலான சாணக்கியத்தை பயன்படுத்தி வருவதுடன் இராஜதந்திர ரீதியிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் பிரிஸ்டா மார்க் வோல்ட்டா தலைமையிலான தூதுக்குழுவினரிடம் கூட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும்- கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

பூரண அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு என்ற விடயங்களையெல்லாம் தாண்டி எல்லாவற்றுக்கும் மேலாக சவாலாக எழுந்து உச்ச ஆட்டம் ஆடும் ஒரு விவகாரமாக தற்பொழுது மாறியிருப்பது வட கிழக்கு இணைப்பு என்ற விடயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு இணைப்பு பற்றி அவர்கள் மிகவும் ஆழமான முறையில் வலியுறுத்தி வருகின்றார்கள். இந்த கோரிக்கையானது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டு வருகின்ற விடயமும் கூட இது இடையில் முளைத்த விவகாரமல்ல.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் கடுமையான கண்டனங்களையும் ஆட்சேபனைகளையும் பல தரப்பினர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில முஸ்லிம் தலைமைகள் கடுமையான எதிர்ப்பை காட்டி வருவது ஒரு புறமாகவும் இனவாதிகள், பேரினவாதிகள் மறுபுறமாகவும் ஆளும் அரசாங்க தரப்பிலுள்ள மாற்றுக்குழுவினர் இன்னொரு புறமாகவும் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தமிழ்த் தே.கூட்டமைப்பு உறுதியாகவே அறிவித்து வருகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட "எழுக தமிழ்" பேரணியிலுங்கூட இணைந்த வடகிழக்கில் இறைமை கொண்ட சுயாட்சி, சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி முறைமை, தமிழர் அபிலாஷைகளை அங்கீகரிக்காத அரசியல் அமைப்பை ஏற்கோம் என அப்பேரணியில் சூளுரைத்துள்ளனர்.

இவையெல்லாவற்றையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்ப்போமானால் புதிய அரசியல் சாசனத்தில் தமிழ் மக்கள் கோரும் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி முறைமை என்பன சிலவேளைகளில் பேரினவாதிகளாலோ இனவாதிகளாலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சாசனத்தில் அவை உள்ளடக்கப்பட்டு பாராளுமன்றிலும் அடுத்த நிலையான சர்வசன வாக்கெடுப்பிலும் அவை சார்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டாலும் வடகிழக்கு இணைப்பு என்பது ஈடேற்ற முடியாத ஒரு விவகாரமாகப் போய்விடுமோ என்று சந்தேகம் கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

பொதுவாகப் பார்க்கப்போனால் மஹிந்த அணியினராயினும் சரி அல்லது மாற்று அணியினராயினும் சரி எதற்கு உடன்பட்டாலும் எதனை விட்டுக் கொடுத்தாலும் வடகிழக்கு இணைப்பை இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இவர்கள் தயார் இல்லையென்ற நிலையே காணப்படுகிறது.

அண்மையில் வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்த அரசியல் அமைப்பைத் தயாரித்து வரும் பிரதான வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன இதுபற்றிக் கருத்து தெரிவிக்கையில்;

வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பு வெறும் அரசியல் சுயலாபமாக அமையாது மக்களின் பூரண ஆதரவுடன் அமையுமாயின் ஏற்றுக்கொள்ள முடியும். இணைப்பு என்பது த.தே.கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது. மக்கள் இதை விரும்புகின்றார்களா என்பதை அறிய வேண்டும். அதற்கு மக்களின் கருத்து அறியப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அவரின் கருத்துப்படி, த.தே.கூட்டமைப்பு கோருகின்றது என்பதற்காக அதை செய்ய முடியாது. மக்களின் விருப்பு வெறுப்பை அறிய கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட வேண்டும். அதாவது மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்ற கருத்தையே கூறியிருந்தார்.

வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் இறுக்க நிலைகள் மேற்படி விடயத்தை எட்டாக்கனியாக்கிவிடுமோ என்ற சந்தேகங்கள் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் விரவி வருகின்றது. ஏலவே இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக 1978 இல் வடகிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டது. தற்காலிக இணைப்பின் அடிப்படையில் வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு தேர்தலும் நடத்தப்பட்டது. இவ்விணைப்புத் தொடர்பில் அன்றைய அரசு நிபந்தனையொன்றை வைத்திருந்தது.

வடகிழக்கு மாகாணங்களுக்கு ஒரே மாகாணசபை தொடர்ந்தும் இரு மாகாணங்களும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்று 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு முன் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படுமென கூறப்பட்டிருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா தனது அதிகாரத்தைப் பாவித்து மேற்படி சர்வஜன வாக்கெடுப்பை பிற்போட்டிருந்தார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து (29.07.1987) வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் (19.11.1988) நடத்தப்பட்டு மாகாண சபை ஆட்சி முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இத் தேர்தலில் வடக்கு மாகாண மாவட்டங்களிலிருந்து பின்வரும் முறையில் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

யாழ். மாவட்டம் – 19

மன்னார் மாவட்டம் – 05

வவுனியா மாவட்டம் – 04

முல்லைத்தீவு மாவட்டம் – 05

கிளிநொச்சி மாவட்டம் – 03

இதேபோன்றே கிழக்கிலிருந்து மட்டக்களப்பு 11, அம்பாறை மாவட்டம் 14, திருகோணமலை மாவட்டம் 10 என்ற அடிப்படையில் வடகிழக்கு மாகாண சபையில் 62 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்டது என்பதைவிட ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை வடகிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் ஆளுநர் கைக்குக்கொண்டுவரப்பட்டது. சுமார் 18 வருடங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு இணைப்புக்கு ஆப்பு வைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 16 வருடங்கள் செயற்படாது இருந்த வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பினை இரத்துச் செய்ய வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த விஜயசேகர, எல்.கே வசந்த மற்றும் ஏ.எல்.முகமட் வஹாரி ஆகியோரினால் உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய வடகிழக்கு மாகாணத்தின் இணைப்பு செல்லுபடியாகாதென உச்சநீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா தீர்ப்பு வழங்கினார். (16.10.2006)

வடகிழக்கு இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறியே தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் கிழக்கு மாகாணத்துக்கு தனியானதொரு தேர்தல் நடத்தப்படவேண்டு மெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்குக்கு தீர்ப்பளித்த நீதியரசர்கள் தமது தீர்ப்பில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். வடகிழக்கு இணைப்பு செல்லுபடியற்றதாக இருப்பதற்கு காரணம் இணைந்த முறையில் காணப்படும் குறைபாடே யென தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இணைக்கப்பட வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டுள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் பின்வருமாறு வலியுறுத்தி வருகின்றார்கள். வடகிழக்கு பாரம்பரியமாகவும் வரலாற்று மூலாதாரங்களின் படியும் இணைந்த பிரதேசமாகவே இருந்து வந்துள்ளது.

இங்கு வாழும் தமிழ் மக்களின் மொழி, கலாசாரம், வாழ்க்கை முறைகள், சமயப் பின்பற்றல்கள் அனைத்துமே ஒருமித்த பண்புகளையும் தொடர்புகளையும் கொண்டவை. தொடர்ந்தும் இவ்வகை மூலாதாரங்களும் தொடர்புகளும் கட்டிக்காக்கப்பட வேண்டுமாயின் இணைப்பு தவிர்க்க முடியாதவொன்று. பிரதேசங்களின் இணைப்பின் மூலமே பலம் பொருந்திய பிரதேசமாக வடகிழக்குப் பிரதேசம் இருக்க முடியும். இப்பிரதேசங்களின் தனித்துவத்தையும் கலாசாரங்களையும் இல்லாது ஒழிக்கத் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்த, மேற்கொண்டு வருகின்ற பாய்ச்சல்களைத் தடுக்க வேண்டுமாயின் இணைப்பொன்றின் மூலமே அது சாத்தியமாகுமென்ற வலுவான காரணங்களை முன்வைத்தே தமிழ்த் தரப்பினர் போராடி வருகின்றார்கள்.

இதேவேளை, இணைப்பை விரும்பாத தரப்பினர் கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும் தாங்கள் கொண்டிருக்கும் அச்சம் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் வட, கிழக்கு இணைப்பின் மூலம் தாம் அந்நியப்பட்டு விடுவோமென்ற பீதி காரணமாகவும் விருப்பம் கொள்ளா நிலையொன்று காணப்படுவதாகவும் ஊகிக்க முடிகிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல், சமூகங்களுடைய முரண்பாடுகளிலும் உடைவுகளிலும் பிரிவுகளிலும் குளிர்காய நினைக்கும் சூத்திரதாரிகளை அடையாளம் காண வேண்டிய தேவையும் இருக்கிறது.

அரசாங்கத் தரப்பினர் கூறுவது போல் வட, கிழக்கு இணைப்பென்பது கூட்டமைப்பினரின் கோரிக்கையாக இருந்தாலும் அரசாங்கக் காரணங்களுக்காக செயற்பட முடியாது. மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.

புதிய அரசியல் சாசன நிறைவேற்றம் அதன் உள்ளடங்கலாக வரும் அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு என்ற விடயங்களே பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றப்பட்டாலும் அவை, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பான, சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்படுமென அரச தரப்பினர் கூறிவருவதை காண்கின்றோம். 1972, 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் போல் அல்லாது, புதிய அரசியல் சாசனமானது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பதை அரச தரப்பினர் உறுதியாக கூறி வருகின்றார்கள்.

இவ்வாறானதொரு அக்கினிப் பரீட்சை வைக்கப்படுமாக இருந்தால் அரசாங்கம் அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதில் வெற்றி காணுமா என்பது ஒருபுறமிருக்க வட, கிழக்கு இணைப்பு என்பதற்கு சாத்தியமான நிலைபெறப்படுமா என்பது கேள்வியாக மாறலாம்.

வட,கிழக்கு இணைப்புத் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது. இணைப்பை கொண்டுவருவதற்கு முன்பு விதிக்கப்பட்ட நிபந்தனை போல் கிழக்கில் மாத்திரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? அல்லது தேசிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என்பது பற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசு இன்னும் முடிவு கொள்ளவில்லையாயினும், அவ்வாறானதொரு சர்வஜன வாக்கெடுப்பு, கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் நடத்தப்படுமாயின், அதன் சாதக, பாதக நிலைகள், தேசிய அளவில் நடத்தப்படுமாயின் எதிர்கொள்ளக்கூடிய சவால்களையும் தமிழ் தரப்பினர் ஆராயாமலோ அல்லது கவனத்தில் கொள்ளாமலோ இல்லை.

கிழக்கை மட்டும் மட்டுப்படுத்தி வட,கிழக்கு இணைப்புத் தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமாயின் எதிர்கொள்ளக்கூடிய சவால் நிலைகளை உள்வாங்கிப் பார்க்க முனைவோமாயின் மூன்று மாவட்டங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் மூவினத்தவரும் சமத்தன்மையான வாக்குக் கொண்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது கடந்த ஆறு தசாப்த காலமாகத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கின் இம்மாவட்டம் மட்டுமே சுமார் 72 வீதமான தமிழ் மக்கள் வாழும் மாவட்டமாக காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொள்வோமாயின் தமிழர்களின் செறிவு மிகக் குறைந்த மாவட்டமாக இது காணப்படுகிறது.

2012 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின் படி கிழக்கின் இன விகிதாசாரக் குடிப்பரம்பல் பின்வருமாறு காட்டப்படுகிறது.

தமிழர் – 39.29

முஸ்லிம் – 36.69

சிங்களவர் – 23.15

இந்து தமிழர் – 0.50

ஏனையோர் – 0.37

இதன் 2015 ஆம் ஆண்டின் புள்ளி விபர நிலைகள் இன்னும் மாறுபடலாம். இவற்றை மாவட்ட அடிப்படையில் நோக்குவோமாயின் 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி

 மாவட்டம் தமிழர் முஸ்லிம் சிங்களவர்

திருமலை 30.55 40.42 26.97

மட்டக்களப்பு 72.61 25.49 1.17

அம்பாறை 17.40 43.59 38.73

ஏலவே குறிப்பிட்டது போல் 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புக்கள் மாற்றமடைந்திருக்கலாம். புள்ளி விபரங்கள் சாதக, பாதக நிலைகளை தீர்மானிக்க முடியாவிட்டாலும் வாக்காளர்களின் போக்குகளும் மன நிலைகளும் தீர்மானிக்கும் என்ற அடிப்படையில் இவை எம்மை சிந்திக்க வைக்கின்றன.

கிழக்கின் நிலைமைகள் இவ்வாறு இருக்கும்போது தேசிய அளவில் ஓர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் அதன் பரந்த, விரிந்த பெறுமானங்களையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு என்ன உபாயங்களை கையாளப்போகிறது என்பது எதிர்காலத் தைக் கொண்டே மதிப்பிட முடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.