Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

Featured Replies

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

 

 

 

‘‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்!’ - தேர்தல் மேடைகளில் மட்டுமல்ல.. பொது நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா சொல்லும் தாரக மந்திரம் இது. அந்த வார்த்தையை சொன்ன அம்மா இனி இல்லை என தெரிந்தபோது கதறினார்கள் ஓட்டுப் போட்ட மக்களோ மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓட்டு வாங்கி மக்கள் பிரதிநிதிகளோ இந்த அளவுக்கு கண்ணீர் சிந்தவில்லை. அப்போலோ தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதி வரையில் ஜெயலலிதாவை சுற்றி வளையம் அமைத்தது மன்னார்குடி. இது மக்கள் ஆட்சியா? மன்னார்குடி ஆட்சியா? என ஜெயலலிதாவின் சமாதி ஈரம் காய்வதற்குள் கதறல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.

111111111111_21238.jpg
 

ஜெயலலிதாவை எட்டடி தூரத்தில் நின்று 60 டிகிரி கோணத்தில் உடலை வளைத்து வணக்கம் வைத்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே நின்றபோது பழைய பவ்யம் இல்லை. ஆனால் அவரது உடலை சுற்றி நின்ற சசிகலா உறவுகளிடம் ஏனோ கம்பீரம் தெரிந்தது. ஆட்சிக்கு கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘செயற்குழு உறுப்பினர்’ என்பதால் சசிகலா மட்டும் விதிவிலக்கு. அவரது உறவுகளுக்கு என்ன சம்மந்தம்? ஆனால் அவர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்க... அமைச்சர்கள் படிக்கட்டுகளில் கிடந்தார்கள். ஜெயலலிதாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்வதில் அப்படி என்ன அவர்களுக்கு அக்கறை? பீரங்கி வண்டியில் சசிகலாவும் அவர்களின் உறவுகளும் எந்த புரோட்டோக்காலில் அமர வைக்கப்பட்டார்கள்? இறுதி சடங்கில் கவர்னர், மத்திய அமைச்சர், முதல்வர் என்கிற முன் வரிசையில் சசிகலா உறவுகள் முன் நிறுத்தப்பட்டது எந்த அடிப்படையில்? இப்படி கட்சியினர் கேள்விகளை எழுப்பி கதறிக் கொண்டிருக்கிறார்கள்.  

333333333333_21333.jpg



எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை பீடத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு அவரோடு ஏற்கனவே நெருக்கமாக இருந்த சசிகலா எல்லாமும் ஆனார். 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியை பிடித்தபோது கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் சசிகலா குடும்பத்தினர். உச்சபட்சமாக தன் குடும்பத்தின் வாரிசை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கி அழகு பார்த்தார் சசிகலா. அந்த வளர்ப்பு மகன்  சுதாகரன் திருமணம்தான் அந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. வழக்குகள் குவிந்தது. சிறையையே பார்க்காத ஜெயலலிதாவை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளியது. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா சொன்ன வாசகம் மிக முக்கியமானது. ‘‘கழகம் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்தற்கு காரணம் என்னை சுற்றியிருந்தவர்கள்தான். என்ன நடக்கிறது என்பதை என்னிடம் சொல்லாமல் அவர்கள் மறைத்துவிட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் சசிகலாவோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை’’ என ஜெயலலிதாவிட்ட அறிக்கை அன்றைய செய்தித் தாள்களில் எட்டு காலம் ஆனது. அது எல்லாம் கொஞ்ச காலம்தான். மீண்டும் உறவுகள் கூடின.

இத்தனை வழக்குகள் பாய்ந்தும் இரண்டாவது முறை அல்ல; மூன்றாவது முறையும் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். ஏன்? 2011 மற்றும் 2016 என அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்து சாதனை நிகழ்த்தினார். ஜெயலலிதாவிற்கு இருந்த மக்கள் ஆதரவுதான் இப்படி அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திக் கொண்டே இருந்தது. இந்த செல்வாக்கு சசிகலாவுக்கு இல்லை. அவர் வார்டில் நின்றுகூட தனியாக ஜெயிக்க முடியாது என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்கங்களுக்கு தெரியும். மன்னார்குடி தொகுதியில்கூட அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்க முடியவில்லை மன்னார்குடி குடும்பத்தால் ஆனால் 2011 டிசம்பரில் இரண்டாவது முறையாக சசிகலா குடும்பம் கார்டனைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட பிறகும் மீண்டும் உள்ளே வர மட்டும் முடிகிறது. இந்த மந்திரம் வேறு யாருக்கும் கை கூடுவதில்லை. 

தொண்டர்கள் விஷயத்தில் மிகவும் அக்கறையோடு நடந்து கொள்வார் ஜெயலலிதா. ஆனால், கடைசி வரை அவர் விரும்பிய தொண்டர்களோடு அளவாள முடியாமலேயே போனதற்கு யார் காரணம்? அவரின் இறுதிப் பயணம் வரையில் இது தொடர்ந்ததே ஏன்? செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகு அவரோடு இருந்தது சசிகலா குடும்பம் மட்டும்தானே! கவர்னர் வித்தியாசாகர் ராவ், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உட்பட யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரைக்கூட ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று அப்போலோ ஆஸ்பத்திரி முன்பு பல நாட்கள் காத்திருந்தார்களே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், அவர்களுக்கு சிகிச்சை பெறும் தலைவியின் படத்தையாவது காட்ட விட்டார்களா? அப்போலோவை சுற்றி அரண் அமைத்தவர்கள் மன்னார்குடி குடும்பம்தானே? அதை தட்டிக் கேட்டால் பதவிகள் போகும் என்பது கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரியாதா? அதற்கு நடமாடும் உதாரணமாக செங்கோட்டையன் இருக்கிறாரே!

444444444_21254.jpg



‘நீர்சத்து குறைபாடு, காய்ச்சல்தான். ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்’ என சொன்னார்களே... என்ன ஆனது? அதற்கு முந்தைய நாள் வரையில் கோட்டைக்கு சென்று தனது அன்றாட பணிகளை செய்து வந்தார் ஜெயலலிதா. அவரின் உடல்நிலை மீது சுற்றியிருந்தவர்கள் ஏன் அக்கறை காட்டவில்லை என்கிற கடைமட்ட தொண்டனின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஜெயலலிதா திடீரென்று நிலைகுலைந்து இந்த அளவுக்கு சிகிச்சை எடுத்த அவசியம் இதுவரை மர்மமாகவே உள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இதெல்லாம் கடைசி வரை தெரியாமலேயே போய்விட்டது. 

சசிகலாவை பக்கத்திலேயே வைத்துக் கொண்ட ஜெயலலிதா, அவரின் கணவர் நடராஜனை மட்டும் கடைசி வரையில் கார்டன் பக்கமே ஜெயலலிதா சேர்க்கவில்லை. சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு நிலையும் இதுதான். டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி. தினகரன், பாஸ்கரன் என கட்சியில் ஒரு காலத்தில் கோலோச்சியவர்கள் அதன்பிறகு கார்டன் பக்கமே தலை வைக்கவில்லை. ஆனால் அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவிடம்தானே ஆறுதல் சொல்ல முதலில் போனார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்பட்டது யாரால்? அல்லது தன்னையே தாழ்த்திக் கொண்டாரா முதல்வர். முதல்வரால்கூட ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் நிற்கமுடியாமல் ராஜாஜி ஹாலின் நீண்ட படிக்கட்டுகளின் ஓரத்தில் ஒதுங்கி கிடந்தார். ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்!’ என சொன்ன தலைவியை பார்க்க  வந்த தொண்டர்களும் மக்களும் நூறடிக்கு அப்பால் ஜெயலலிதாவின் முகத்தைக்கூட பார்க்க முடியாத தூரத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘‘முதல்வராக இருந்தவரின் இறுதிச் சடங்கு இது. ஒன்னறை கோடி தொண்டர்களின் தலைவிக்கு நடந்த அஞ்சலி இது. சசிகலா வீட்டு குடும்ப நிகழ்ச்சி இல்லை இது’’ - இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்த கட்சியினரின் ஆதங்கம் இன்றோடு ஓயுமா?

http://www.vikatan.com/news/tamilnadu/74332-apollo-to-mgr-memorial-sasikala-and-family-revolves-around-jayalalithaa-in-full-swing.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெ.ஜெயலலிதா அவர்கள் இரும்பு பெண்மணி என பலரால் புகழப்பட்டாலும்.......குடும்பம் மற்றும் இரத்த உறவுகள் விடயத்தில் மதிகெட்டவராகவே இருந்துள்ளார்.

  • தொடங்கியவர்

எல்லாமே நடிப்பா?.. ஜெ. இருந்தவரை பவ்யம்.. போன பின்னர் குனிய மறந்த ஓ.பி.எஸ் + அமைச்சர்கள்! ஜெயலலிதா மறைவின் போது பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நடந்து கொண்டவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பவ்யம், அடக்கம் என அலப்பறையைக் கொடுத்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் அவர் மறைந்த உடனேயே அத்தனையையும் தூக்கி போட்டுவிட்ட அதிசயத்தை தமிழகம் பார்த்து இன்னும் வியந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவைப் பார்த்தாலே போதும்.. அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் விமானமும் ஹெலிகாப்டரும் வானத்தில் பறந்தாலே போதும்.. அதிமுகவினரின் அத்தனை நாடி நரம்புகளும் பவ்யம் பணிவுகளுக்கு ஷிப்ட் ஆகிவிடும்...

 

அதுவும் ஜெயலலிதாவுக்கு எதிரே நின்றால் போதும்... இடுப்பு எப்படித்தான் அவர்களுக்கு அப்படி வளையுமோ ..அடடே அந்த பவ்யமே இன்னும் சமூக வலைதளங்களில் நாறடிக்கப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டம்தான் ஜெயலலிதா சிறைக்குப் போன சமயத்தில் நடந்தது...

ஓவர் நடிப்பு

ஓவர் நடிப்பு

சொத்து குவித்த ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போகிறார்.. அது நீதிமன்ற நடவடிக்கை. இதற்காக அதிமுக அமைச்சர்கள் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சியை கண்டு தமிழகமே பரிதாபப்பட்டது... அதுவும் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் கண்ணீரும் கம்பலையுமாக பதவியேற்று 'ஓவர்' நடிப்பை உலகத்துக்கு காட்டிக் கொண்டிருந்தனர்..

அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள்

அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் இது தொடர் கதையாக இருந்தது... நாள்தோறும் அப்பல்லோவுக்கு போவது.. கோயில் கோயிலாக ஏறி இறங்குவது.. மண் சோறு சாப்பிடுவது என ஏகத்துக்குமான அட்டகாசங்களை அரங்கேற்றங்கள்... இப்படியான அதிமுகவினர்தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியான போது வெளிப்படுத்திய விதமும் தற்போது நடந்து கொள்வதும் தமிழக மக்களுக்கு 'ஷா'க்காக இருக்கிறது...

பதவியேற்பு..

பதவியேற்பு..

ஜெயலலிதா இறந்துவிட்டாரே என துக்கம் தாளாமல் தொண்டர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள்.. கதறினார்கள்.. கண்ணீரில் மூழ்கினார்கள். ஆனால் எந்த ஒரு சலனமுமே இல்லாமல் அட ஒப்புக்கு பொட்டு கண்ணீரும் விடாமல் பவ்யாமாக போய் அமைச்சர்களாக பதவியேற்றார்கள்... அப்படியே பந்தாவாக அப்பல்லோவுக்கும் வந்தார்கள்...

 

பிக்னிக் ஸ்பாட்டா?

பிக்னிக் ஸ்பாட்டா?

ஒரு கண்ணீர்... விசும்பல்... கதறல்... எதுவுமே இல்லாமல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுபோனார்கள்... ஏதோ பிக்னிக் வந்தது போல ஆங்காங்கே அமைச்சர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்... ஜெயலலிதா சிறைக்குப் போனபோது கத்தி கூப்பாடு போட வளர்மதி கூலாக மலர் மாலைகளை எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருக்கிறார்.

 

இது நாகரிகம்...

அட ஜெயலலிதா உடலை நல்லடக்கம் எடுத்து சென்றபோது கூட ஒரு ஒப்பாரியும் கூப்பாடும் கூட கிஞ்சித்தும் கிடையாது... முன்பின் தெரியாதவர்களானாலும் மறைந்த ஒருவரை அடக்கம் செய்ய கொண்டுபோகும் போது வெளிப்படும் உணர்ச்சிகள் கண்ணீரை தாரை தாரையாக வரவழைக்கும்... இது தமிழர் நாகரிகம்...

ரிலாக்ஸா

 

ரிலாக்ஸா

ஆனால் எந்த ஒரு சலனமுமே இல்லாமல் ஜெயலலிதாவை ஏதோ போயஸ் தோட்டத்துக்கு அழைத்து செல்வது போல அமைதியாகவே அதிமுக அமைச்சர்கள் சென்றார்கள்.. சரி அடக்கம் செய்யும்போதாவது பவ்யத்தையும் பணிவையும் அஷ்ட கோணங்களில் காட்டிய அமைச்சர்கள் வீறிட்டு கதறுவார்களோ என எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்... எந்த சலனமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாகத்தான் அனைவரும் காணப்பட்டனர். ஏன் இவர்களுக்கு இப்போது வரவில்லை கண்ணீர்.. இதுதான் அப்பாவி அதிமுகவினர் மற்றும் மக்களின் ஆச்சரியமாக இருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-shocking-over-admk-leaders-new-face-269188.html

  • தொடங்கியவர்

மன்னார்குடி குடும்ப அதிகாரம்..! இனி என்ன ஆகும் அ.தி.மு.க. எதிர்காலம்?

a7_12168.jpg

முதலில் ஒரு ப்ளாஷ் பேக்....

1987-ம் ஆண்டு. இதே டிசம்பர் மாதம். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த போது, அடுத்த முதல்வர் யார்? கட்சியை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்தன. ஜானகியை ஒரு தரப்பினரும், ஜெயலலிதாவை மற்றொரு தரப்பினரும் ஆதரித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் இரண்டு ஆண்டுகள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கட்சி உடைந்து சிதறியது. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, பல ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க காரணமாய் அமைந்தது இந்த குழப்பம்.

அப்போது, அதாவது 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பிளவுபட்டு, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஜெ அணி, ஜானகி தலைமையில் அ.தி.மு.க. ஜா அணி என அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தன. இரட்டை இலை சின்னம் இருவருக்கும் கிடைக்கவில்லை. ஜானகிக்கு இரட்டை புறா, ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. எம்.ஜி.ஆர். வென்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகியே தோற்றார். ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. போடிநாயக்கனூரில் நின்ற ஜெயலலிதா வென்றார்.

இந்த தோல்வியால் ஜானகி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 27 இடங்களில் வென்றதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் என்பதை நிரூபித்த ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. வந்தது. அடுத்த இரு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரானார் ஜெயலலிதா. கட்சியையும், ஆட்சியையும் தனது தலைமையில் கொண்டு வந்தார் ஜெயலலிதா.

a1_12336.jpg

கை மாறுகிறதா அதிகாரம்?

இப்போது இன்றைய சூழலுக்கு வருவோம். 1987-ம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது இல்லை. யார் முதல்வர் என்பதில் போட்டி இருப்பதாய் தெரியவில்லை. எந்த எதிர்ப்பும் இல்லாமல், ஏற்கெனவே பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வர் என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் கட்சியை நிர்வகிக்கப்போவது யார்? கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் சசிகலாவின் குடும்பம் கட்சியில் அதிகாரம் செலுத்த துவங்கியிருப்பதை அனைவராலும் உணர முடிகிறது. ஜெயலலிதா மரணித்த பின்னர், அப்போலோவில் துவங்கி போயஸ் கார்டன், ராஜாஜி ஹால், எம்.ஜி.ஆர் நினைவிடம் என ஜெயலலிதாவின் உடல்  நல்லடக்கம் செய்யும் வரை அத்தனையும் சசிகலாவின் குடும்பத்தினர் கண்ணசைவில் தான் நடந்தது. கட்சி செயல்பாடும் அப்படித்தான்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, சொல்லப்போனால் போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உட்பட சசிகலா குடும்பத்தினர் பலர் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி அரணாக நின்றிருந்தனர். ஆளுநர், மத்திய அமைச்சர், முதல்வரின் வரிசையில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ம.நடராஜன். மறுபுறம் ஜெயலலிதாவின் ரத்த உறவான தன்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழுதபடி புகார் சொல்லிக்கொண்டிருந்தார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூட கொஞ்சம் தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்து வந்தார்.

a3_12519.jpg

மன்னிப்பே கிடையாது என எச்சரிக்கப்பட்டவர்கள்

2011 ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். சசிகலாவின் உறவினர்களான ராவணன், மிடாஸ் மோகன், கலியபெருமாள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து களையெடுக்கப்பட்டனர். சசிகலா குடும்பத்தோடு எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா.

"தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம். ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது”  என பொதுக்குழுவில் ஜெயலலிதா கர்ஜிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை நீண்டது.

சில நாட்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் ஏற்றார் ஜெயலலிதா. ஆனால் நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்களை ஜெயலலிதா சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா யாரை போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடித்தாரோ, யாரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தாரோ அவர்கள் எல்லோரும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடலை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.

a5_12513.jpg

குழப்பத்தில் தொண்டர்கள்

என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவை மட்டுமே அறிந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்களே ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் யார் என தெரியாமல் குழம்பி நின்றதை பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியில் அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்தவர்கள், ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் என்பது தெரியாமல் வாதிட்டுக்கொண்டதை காண முடிந்தது. இவர்கள் எல்லாம் யார், ஏன் இவர்கள் அருகில் நிற்கிறார்கள்? ஓ.பன்னீர்செல்வம் ஏன் ஓரமாக நிற்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளை ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்விகள் எல்லாம் பரவலாக கேட்க முடிந்தது.

இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு புறம் என்றால், மறுபுறம் எம்.ஜி.ஆர். மறைவின் போது எழுந்த மிகப்பெரிய கேள்வி இப்போது மீண்டும் எழுந்துள்ளது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்பது தான் அந்தக் கேள்வி.

யார் முதல்வர் என்பதில் எந்த சர்ச்சையும் எழவில்லை. கட்சியை நிர்வகிக்கப்போவது நான் தான் என யாரும் சண்டையிடவில்லை. வாக்குவாதங்கள், அடி தடி சண்டைகள் என எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அ.தி.மு.க.வில் எழுந்த குழப்பம் இப்போது இல்லை என உறுதியிட்டு சொல்லி விட முடியாது. அத்தனை சிக்கல்கள் கட்சியில் கொட்டிக்கிடக்கின்றன.

அத்துமீறுவதாக சொல்லி ஜெயலலிதாவால் பதவியை பறிக்கப்பட்டவர்கள், கைதானவர்கள், விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இப்போது ஜெயலலிதா இருந்த இடத்தில் இருப்பதை மறுப்பேதும் சொல்லாமல் கட்சி தொண்டர்கள் ஏற்பார்களா என தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கடியான சூழலில், முதல்வர் பதவியை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இதுவும் கூட சசிகலாவின் கண்ணசைவில் தான் நடந்தது. அது ஜெயலலிதாவுக்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. ஜெயலலிதாவின் விசுவாசி யார் என்றால் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை முதலில் சொல்லும் அளவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தார். இப்போதும் இருக்கிறார்.

a2_12061.jpg

கட்சியை வழிநடத்தப்போவது யார்?

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு பின்னால் அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார்? இவர் தான் என உறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதே பன்னீர்செல்வம் தான் இப்போதும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவை சொல்வதை கேட்டார். இப்போதும் யார் சொல்வதையோ கேட்டு நடக்கிறார்.

அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி பரவலாக இருந்தாலும், இந்த கேள்வியை யாரிடம் முன்வைப்பது என யாருக்கும் தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வியை நாம் கேட்டால், நாம் கேட்டது அவருக்கு கேட்டதா இல்லையா என்பதை கூட நம்மால் உறுதி செய்து விட முடியாதபடி கடந்து சென்று விடுவார். இன்னும் பேசும் அதிகாரமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்ததாக தெரியவில்லை. அப்படி இருக்க கேள்விகளுக்கு பதிலை எல்லாம் அவரிடம் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

நிச்சயம் சசிகலா தான், தலைமை ஏற்கப் போகிறார் என்ற கேள்விகள் பரவலாக எழத்துவங்கியுள்ளது. ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் நட்புடன் இருந்த சசிகலா தான் சரியான தீர்வு என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை மேடையில் பேசியதோ, செய்தியாளர்களிடம் பேசியதோ, அறிக்கை விட்டதோ, எந்த கூட்டத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதோ இல்லை. ஆனால் இப்போது அதை செய்யத் துவங்கி இருக்கிறார். 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என சொல்லப்பட்டவர் சோ. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் மூலம் தான் அதிகாரத்துக்கு வந்து விட்டதை உணர்த்தி இருக்கிறார் சசிகலா. ஆனால் கட்சியின் எதிர்காலம் குறித்து தொண்டர்களிடமோ, செய்தியாளர்களிடமோ, எம்.எல்.ஏ.க்களிடமோ சசிகலா வெளிப்படையாக பேசவில்லை.

a6_12316.jpg

இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இந்த சூழலில் தான் ஜெயலலிதா நல்லடக்கம் முடிந்த கையோடு, கட்சியின் எதிர்காலம் குறித்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இவர். 'அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட அவசியம் இல்லை. மிகுந்த பலத்தோடு அ.தி.மு.க. இருக்கிறது' எனச்சொல்லி செய்தியாளர்களிடம் இருக்கிறார் இவர். இவர் அ.தி.மு.க.வின் நிர்வாகி இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அ.தி.மு.க.வின் உறுப்பினர் கூட இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஆம் சசிகலாவின் கணவர் நடராஜன் தான் அது.

உடல் நல்லடக்கத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், "ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏதும் இல்லை. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இருவரது புகழும், உழைப்பும் கட்சியை கொண்டு செல்லும். இதே இடத்தில் எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த போது யார் அடுத்த தலைவர்? கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல தகுதியானவர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருந்த தலைவர்கள், அந்த ஒளி விளக்கை ஏந்தும் தகுதியுடையவர் புரட்சித்தலைவி தான் என்பதை உறுதி செய்தோம். கட்சியை அவர் 25 ஆண்டுகள் வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். 25 ஆண்டுகளை கடந்து 28 ஆண்டுகள் வழிநடத்தி இருக்கிறார். திராவிடர் கழக ஆட்சி 50 ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா இந்த 4 பேரின் சகாப்தம் இன்றும் என்றும் தொடரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா போட்ட விதையை யாராலும் திருடி விட முடியாது. கட்சியை சாதாரண கடைநிலை தொண்டர் கூட கொண்டு செல்ல முடியும். அதற்கான அடித்தளத்தை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் வகுத்து வைத்திருக்கிறார்கள்," எனச்சொல்லி இருக்கிறார்.

கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அதிகாரத்தை கொடுத்தது யார்?. கட்சியில் நடராஜனும், சசிகலா குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகிறது. "கட்சியில் எல்லாம் அவர்கள் கண்ணசைவில் தான் நடக்கிறது. அவர்கள் திட்டப்படியே அனைத்தும் அரங்கேறி வருகின்றன. முதல்வர் தேர்வில் துவங்கி எல்லாம் அவர்களின் திட்டம் தான். யாரிடமும் எதையும் ஆலோசிக்க அவர்கள் தயாராக இல்லை," என எம்.எல்.ஏ.க்களே புலம்ப துவங்கியுள்ளது தான் உச்சம்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னால், அ.தி.மு.க.வில் பெரும்பான்மையானோரால் முன்மொழியப்பட்டு முதல்வரானவர் ஜானகி. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை வழிநடத்தும் தலைவராக ஏற்றுக்கொண்டது ஜெயலலிதாவைத்தான். எம்.ஜி.ஆர் மறைந்த போது ஏற்பட்ட பெரும் குழப்பம், இப்போதும் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் அ.தி.மு.க.வை வழிநடத்தும் அடுத்த தலைவர் யார்? இதற்கான விடையை அறிந்தவர்கள் அல்லது விடையை தேடி கண்டுபிடிப்பவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் தான். ஏனென்றால் தொண்டர்கள் விரும்புபவர்களே தலைவர்கள் ஆகின்றனர்.

http://www.vikatan.com/news/jayalalithaa/74457-what-is-the-future-of-aiadmk--after-jayalalithaa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.